சனி, 24 ஆகஸ்ட், 2019

மேல் நாடுகளில் இல்லாத ஒரு பெருமை நமது புண்ணிய பாரத தேசத்திற்கு உள்ளது. பல மதத்தினரையும் அரவணைத்து ஒற்றுமையுடன் கூடிய ஒரு மனப்பாங்கை ஏற்படுத்தி அந்தந்த மதத்தினர் கொண்டாடும் விசேஷ திருவிழா நாட்களில் அவர்கள் வழங்கும் பிரசாதங்கள் உடலுக்கு ஊட்டமும் மனதிற்கு உற்சாகம் தரும் வகையிலும் அமைத்துள்ளனர். என்பது ஒரு சிறந்த விஷயமாகும்.

இந்துக்கள் தம் மத கலாசாரப்படி பல விதமான பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். அவ்விதம் தயாரிக்கப்பட்ட உணவு பதார்த்தங்கள் சுவாமிக்கு நிவேதனம் செய்த பிறகு தங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுடன் பகிர்ந்து உண்ணுகின்றனர். இவ்வகை பிரசாதங்கள் அனைத்தும் விஞ்ஞான அடிப்படையில் தான் அமைந்துள்ளது என்று தெரிந்தால் அனைவரும் ஆச்சரியப்படுவர். நம் ரிஷிகள் ஏற்படுத்தியுள்ள எந்தவொரு காரியமும் விஞ்ஞான நோக்கில்தான் செய்துள்ளனர். பண்டிகை நாட்களில் செய்யப்படும் உணவை நமது அன்றாட வாழ்வில் செய்து கொள்ள இயலாது என்பதால் அவ்வித விசேஷ நாட்களில் செய்து சாப்பிடுவதால் விசேஷ ஊட்டமும் பலமும் பெறுகிறோம். முன்பெல்லாம் கிராமங்களில் ராமாயணம், பாகவதம், மகாபாரதம் போன்ற உபன்யாஸங்கள் நிறைவடைந்ததும் சுண்டல் பிரசாதம் விநியோகிப்பார்கள். நமக்குத் தேவையான புரதச்சத்தும், சிறிய அளவில் கால்ஸியம், இரும்பு, வைட்டமின் H1, H2, Y, போன்றவைகளும் சுண்டலில் இருப்பதால் நமக்கு உடல் ஆரோக்யமும், அவ்வகை உபன்யாஸங்களால் மன ஆரோக்யத்தையும் ஒரே நேரத்தில் சம்பாதிக்கின்றோம்.

வருடப் பிறப்பு அன்று பஞ்சாங்க படனம் அல்லது சிரவணம் செய்த பிறகு, கடலைச் சுண்டல், பானகம், நீர்மோர் சாப்பிட வேண்டும். கடலைச் சுண்டலுக்கு பதிலாக பயத்தம்பருப்புச் சுண்டலும்ட சாப்பிடலாம். இதிலும் கால்ஸியம், புரதம், இரும்பு, வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனாலும் கடலை சுண்டல் அளவு இராது. கடலையை முதல் நாள் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் pressure cooker ல் வேக வைத்து, சாப்பிட்டால் உடலுக்கு நிரம்ப புரதச்சத்து கிடைக்கிறது. ஆனால் கடலையை எண்ணெய்யில் வறுத்தால், அதிலுள்ள ஊட்டப் பொருள்கள் வீணாகி விடும்.

வெல்லத்தில் புரதசத்து சிறிதளவும், நிரம்ப இரும்பு சத்தும், வைட்டமின் ஏயும் உள்ளது. வெல்லப் பானகம் அருந்துவதால் இரத்த விருத்தி ஏற்படுகிறது. இரத்தத்தில் காணப்படும் ஹீமோகுளோபின் விருத்தி அடைகிறது. அதுதான் பிராணவாயுவை பல்வேறு பாகத்துக்கு எடுத்துச் சென்றும், கரிமில வாயுவை நுரையீரலுக்கு திருப்பி எடுத்தும் செல்கிறது.

நீர்மோர் சுவையானதும், அஜீர்ணத்தை போக்கும் தன்மையுடையது. கோடைக்காலத்தில் ஏற்படும் உப்புச் சத்துக் குறைவை நீர்மோர் நீக்குகிறது. ஸ்ரீராம நவமி, ராதா கல்யாணம் போன்ற பஜனை விழாவிலும் இவையனைத்தும் இடம் பெறுகின்றன.

கடவுளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வழங்கப்படும் பஞ்சாமிர்தம் என்பது பால், நெய், தேன், வெல்லம், பழவகைகள் கொண்டது. பாலில் புரதசத்தும்,

கால்ஸியம், வைட்டமின் ஏ-யும் நிரம்ப இருக்கிறது. நமது உடல் வளர முக்கியமானது. நெய் கொழுப்புப் பொருளாக இருப்பதால் தேவையான சக்தியைத் தருகிறது. வெல்லத்தில் இரும்புச் சத்தும், தேன் சக்தி தருவதிலும், பழங்கள் வைட்டமின் ஏ-யும் நிரம்பியுள்ளதால் பஞ்சாமிர்தம் நமக்குத் தேவையான பல உடல் சக்திகளை அளிக்கிறது.

ஆடி முதல் தேதி தேங்காய்ப்பால் தயாரித்து உண்பது சூட்டைத் தணிக்கும். விநாயக சதுர்த்திக்குக் கொழுக்கட்டையை அரிசி மா, வெல்லத்தினால் தயாரித்து ஆவியில் வேக வைத்து சாப்பிட ஊட்டத்தைத் தருகிறது. கார்த்திகைத் தீபம், மாசியும் பங்குனியும் காரடையான் நோன்பின் போதும் வெல்ல அடை, உப்பு அடை செய்கிறோம். உப்பு அடையில் அரிசிமாவுடன் உப்பு, இஞ்சி, மிளகாய் சேர்த்து ஆவியில் வேக வைத்து சாப்பிடுவதால் உடல் ஊட்டமும், ரத்த விருத்தியும் ஏற்படுகிறது.

மார்கழி மாதத்தில் உஷக்கால பூஜை செய்து பகவானுக்கு அர்ப்பணித்து பிரசாதமாக வழங்கப்படும் பொங்கல், மகர சங்கராந்தியின் பொழுது பலவித பருப்பு வகைகள் கலந்து தயாரிக்கப்படும் பொங்கல் சத்தான உணவு வகைகளாகும். சங்கராந்தியின் பொழுது கரும்பை கடித்து சாப்பிடுவதால் பல்லுக்கு நல்ல பலமும், உடல் சக்தியும் அடைகிறோம்.

ஆந்திராவிலும், மைசூரிலும் சில பண்டிகைகளில் பெண்களை வீட்டிற்கு அழைத்து முளை கட்டிய கொண்டக்கடலையும், ஊறவைத்த பயத்தம்பருப்பு, தேங்காய், மாங்காய், இஞ்சி கலந்து "பாசிப் பருப்பு" தருகிறார்கள். இவையில் புரதசத்து ஏராளம்.

அமாவாசை, மாதப்பிறப்பு, அட்சய FF புண்ய காலங்களில் வீட்டில் பயத்தம்பருப்பு பாயஸம் செய்து சாப்பிடுவதால் Blood Urea குறைவதாக கூறுகிறார்கள். புரதசத்தும் இதில் அதிகம்.

பெண் பருவடையும் போது புட்டு தயாரிக்கிறோம். அரிசி, பொங்கல், வெல்லம், நெய் கலந்து தயாரித்து அப்பெண்ணிற்கு கொடுத்து சாப்பிடச் சொல்வதால் அவர் தளர்ச்சியடையாமல் போதிய சக்தியை பெறுகிறாள்.

மாரியம்மன் கோவில் விழாவில் கஞ்சி காய்ச்சி கூழாக ஊற்றுகிறார்கள். அந்தக் கஞ்சியில் நமக்குத் தேவையான சக்தி தரும் பொருள் இருக்கின்றது. ஆகவே நமது விழாக்கள், பண்டிகைகளில் வழங்கப்படும் பிரசாதங்கள் விஞ்ஞான ரீதியில் நல்ல சத்துள்ள உணவாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிகிறோம்
 
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் 
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் 
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே 
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் 
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உலகு அளந்த 
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடி(ச்) செல்வா பலதேவா 
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.
 
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
      எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
      இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை
      அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
      பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
 
ஸ்ரீ மகாபெரியவாள் அனுக்ரஹம் நம் எல்லோரையும் காக்கட்டும்......
---------------------------------------

கருத்துகள் இல்லை: