வியாழன், 3 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 50 ॐ
    தியாகராஜரும் நடராஜரும்

தில்லையில் நடராஜர் எப்படி முக்கியத்துவமோ மூலவரோ அப்படியே திருவாரூரில் தியாகராஜர் முக்கியத்துவம் வாய்ந்தவரும் மூலவரும் ஆவார். தில்லை நடராஜ சபை பொன்னம்பலம் என்றால் திருவாரூர் தியாகராஜ சபையைப் பூ அம்பலம் என்று குறிப்பிடுவார்கள். இங்கே தான் சுந்தரரைத் தியாகராஜர் தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று துவங்கச் செய்யும் முதலடியை வைத்துத் திருத்தொண்டத் தொகையை எழுதச் செய்து அருளினார். பஞ்சபூதத் தலங்களில் உலகைக் குறிப்பிடும் திருவாரூரை மனதில் இருத்தியே சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தை ஆரம்பிக்கும் போது நடராஜர் உலகெலாம் என்று எடுத்துக் கொடுத்திருக்கிறார். பொன்னம்பலத்தில் ஆனந்தக் கூத்து ஆடும் அம்பலவாணன் முதலில் ஆடியது என்னமோ அறைக்குள்ளே தான். உமையவள் மட்டுமே காணுமாறு அறைக்குள் அவன் ஆடிய ஆட்டம் திரு உத்தரகோச மங்கை என்னும் ஊரில் என்று சொல்லுவார்கள். அன்னையானவள் பரத குலத்தில் பிறந்து ஐயனை மணந்து பின்னர் இங்கே ஐயன் அன்னைக்கு வேதப் பொருளை உபதேசித்து பின்னர் தன் நாட்டியத்தையும் காட்டி அருளியதாய்ச் சொல்லுவார்கள். தேவிக்கு உபதேசத்தை ரகசியமாய்க் கொடுத்து அருளியதால் உத்தர கோச மங்கை எனப் பெயர் பெற்றதாயும் சொல்லுவார்கள். உத்தரம்=உபதேசம், கோசம்=ரகசியம், மங்கை=இங்கே பார்வதியைக் குறிக்கும். இந்த நாட்டிய நடராஜரை ஆதி சிதம்பரேசர் என அழைக்கப் படுவதோடு இங்கே உள்ள மரகத நடராஜர் இருக்கும் இடத்தை ரத்தின சபை என்றும் அழைக்கப்படுகிறது. அக்கினியின் மத்தியில் அன்னை காண மகேசன் இங்கே அறையில் ஆடிய ஆட்டமே சிதம்பரத்தில் பொன்னம்பலத்தில் ஆடப்பட்டதாயும் சொல்லப்படுகிறது. இதைத் தான் அறையில் இருந்தாலும் அம்பலத்துக்கு வரத்தானே வேண்டும் என்ற சொல் வழக்கும் சொல்லுவதாய்க் கூறுவார்கள். ஐந்தரை அடி உயர நடராஜரை உள்ளே வைத்தே சன்னதி எழுப்பப்பட்டிருப்பதாய்ச் சொல்லுகிறார்கள். இந்த ஆதி சிதம்பரம் என அழைக்கப்படும் சன்னதி தனிக்கோயிலாக கோயிலுக்கு உள்ளேயே குளத்துக்கு எதிரில் இருப்பதாயும் சொல்கின்றனர். இவர் வெளியே வருவதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை இவரின் சந்தனக் காப்பு களையப்பட்டு அபிஷேகங்கள் நடந்து திரும்பச் சந்தனக் காப்புக்குள் நுழைந்து விடுவார். அந்த நாள் மார்கழித் திருவாதிரை நன்னாள்.

ஆனால் திருவாரூரிலோ என்றால் அவன் ஆடிய ஆட்டத்தை அஜபா நடனம் என்று சொல்கிறார்கள். வாயால் சொல்லாமல் சூட்சுமமாய் ஒலிப்பதால் இதற்கு அஜபா=ஜபிக்கப்படாதது என்று பொருள். இதை விளக்குவதே தியாகராஜரின் அஜபா, ஹம்ஸ நடனத் தத்துவம். இவர் திருமேனியே இங்கே திருவாரூர் ரகசியம். இதைச் சோமகுல ரகசியம் என்று சொல்வார்கள். இவர் திருமேனியில் ஸ்ரீ சக்ரம் அலங்கரிப்பதால் திருமேனி காணக் கிடைக்காத ஒன்று. தியாகராஜரும் உற்சவ காலங்களில் வெளியே வந்து தன் நடனத்தை ஆடுகிறார். அது போல் நடராஜரும் உற்சவ காலங்களில் மட்டுமே வெளியே வருவார். ஒரு வருஷத்தில் ஆறு முறைகளில் மகா அபிஷேகம் நடராஜருக்கு நடைபெறுகிறது. அவை நம் மானிடக் கணக்கில் கொள்ளாமல் தேவர்களின் கணக்கிலே கணக்கிடப்படுகிறது. தேவர்களின் காலம் நமக்கு மார்கழி மாதம் அவர்களுக்கு உஷத் காலம் என்று கணக்கிடப்படுவதால் மார்கழித் திருவாதிரையின் அபிஷேகம் உஷத் காலப் பூஜையாகக் கணக்கிடப்படுகிறது. மாசி பங்குனியில் செய்யப்படுவது காலசந்தி அல்லது பகலின் ஆரம்பம் எனக் கொண்டால் சித்திரையில் செய்யப்படுவது உச்சிக்காலம் அல்லது நடுப்பகல் என்றும் ஆனி மாதம் நடப்பது பிரதோஷ காலம் அல்லது மாலைப் பூஜை எனவும் ஆவணி மாதம் நடப்பது இரண்டாம் காலம் அல்லது முன் இரவு பூஜையாகவும் புரட்டாசி மாதம் நடப்பது அர்த்தஜாமம் அல்லது நடு இரவு எனவும் அழைக்கப்படுகிறது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம்  ॐ