வெள்ளி, 29 நவம்பர், 2019

கோயிலில் உண்டியலில் காசு போடச் சொன்ன காஞ்சி மஹான்!

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஹா பெரியவாளின் தரிசனத்துக்கு வந்தாலும் தன்னை ஆத்மார்த்தமாக வணங்கும் பக்தர்கள் யார் என்பதை மஹான் இனம் கண்டு கொள்வார். அவர்களிடம் அவர்களின் பூர்வீகத்தைக் கூறி ஆசி வழங்குவதும் அவரது வாடிக்கை. மஹா பெரியவாளின் மனசுக்குப் பிடித்த புண்ணியத்தலமான கலவையில் அவருடைய பரம பக்தரான லட்சுமி நாராயணன் என்பவர் போஸ்ட் மாஸ்டராக இருந்தார். ஆசார்யாள் கலவையில் இருந்த சமயங்களில் அவரை தரிசிக்க வரும் வி. ஐ. பிகள் எல்லாம் சற்று இளைப்பாற உகந்த இடமாக இருந்தது அந்த போஸ்ட் மாஸ்டர் இல்லம்.

ஒரு சமயம் இவரிடம் மஹா பெரியவா தனக்கு கைங்கர்யம் செய்யும் ஓர் அன்பரை அனுப்பினார். போஸ்ட் மாஸ்டரிடம் அவர் வந்து சொன்ன தகவல் இது தான். "உங்களை பெரியவா பெங்களூருக்குப் போகச் சொல்லி உத்தரவாயிருக்கு!" அவ்வளவு தான் அவர் சொன்ன விஷயம். ஏன், எதற்கு, பெங்களூரில் எந்த இடத்துக்கு என்றெல்லாம் ஒரு தகவலும் தெரியவில்லை. சரி விவரம் தெரிந்து கொள்ளலாம் என்று கலவை அதிஷ்டானத்திற்க்குச் சென்றார்.
அங்கே மஹா பெரியவாளின் அணுக்கத் தொண்டர்கள் ஒரு குறிப்பிட்ட விவாக நிகழ்ச்சியைச் சொல்லி "அதற்கு தான் உங்களை பெரியவா அனுப்பச் சொல்றா!" என்று சொல்ல இவருக்குத் தயக்கமும் லேசான பயமும் எழுந்தது. காரணம் ஒரு சின்ன கிராமத்தில் கீழ்மட்ட அதிகாரியான கலவை போஸ்ட் மாஸ்டர் இவர். மஹா பெரியவா அனுக்கிரகத்தோடும் பிரசாதத்தோடும் இவரை அனுப்பும் கல்யாணம். தபால் இலாகாவின் உச்சகட்ட அதிகாரியான போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் வீட்டுக் கல்யாண விசேஷம்! தயங்கினாலும் மஹா பெரியவா உத்தரவு கீழ்ப்படிந்து தான் ஆக வேண்டும் என்று புறப்பட்டுச் சென்றார். தயங்கித் தயங்கிப் போனவருக்கு அங்கே பிரமாதமான வரவேற்பு. உபகாரம் அனைத்தும் தனக்கல்ல அந்த நடமாடும் தெய்வத்தின் பிரதிநிதி என்பதால் தான் என்று அந்த அடக்கமாக இருந்தார். கல்யாணம் முடிந்ததும் மிக தடபுடலான கவனிப்புக்குப் பின் தாம்பூல மரியாதை செய்து அனுப்பும் போது கையில் ஐம்பத்தோரு ரூபாயையும் வைத்துக் கொடுத்தார் அந்த உயர் அதிகாரி. அந்தக் கால கட்டத்தில் அது மிகப் பெரிய தொகை!

ஊருக்கு வந்தவுடன் பெரியவாளை தரிசிக்கச் சென்றவர் கல்யாணத்திற்குச் சென்று வந்த விவரங்களையும் அளித்த ஐம்பத்தோரு ரூபாயைப் பற்றியும் சொல்லி பணத்தை பெரியவாளிடம் சமர்ப்பித்தார். ஆனால் மஹான் அந்த  பணத்தை அவரே எடுத்து வைத்துக் கொள்ளும்படி சொன்னார். அப்பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு டப்பாவில் போட்டு வைத்தார் அவர். அதன் பிறகு பல முறை மஹா பெரியவாளை தரிசனம் செய்ய வரும் தருணங்களில் அவர் கேட்டும் மகானிடமிருந்து எந்த பதிலும் வரவே இல்லை. பல மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் அந்த போஸ்ட் மாஸ்டரின் பெற்றோர் காசி யாத்திரை புறப்படுவதற்கு முன் மஹா பெரியவாளிடம் ஆசி வாங்க அழைத்து வந்தார். அந்த சமயத்தில் மஹா பெரியவா அவர்களை அனுகிரகித்து விட்டு போஸ்ட் மாஸ்டரிடம் "நீ பெங்களூர் கல்யாணத்திலே கொடுத்த பணத்தை என்ன செய்யறதுன்னு கேட்டுண்டே இருந்தியே அதை உன் தகப்பனார் கிட்டே குடு... போற வழியிலேயே இருக்கிற கோவில்களில் எல்லாம் இருக்கிற உண்டியல்லே ஒவ்வொரு ரூபாயா போட்டுட்டு வரட்டும்!" என்றார். அப்படியே தந்தையிடம் அந்தத் தொகையை ஒப்படைத்தார். அத்தம்பதியினரும் இனிதே காசி யாத்திரை சென்று திரும்பினார். போஸ்ட் மாஸ்டரிடம் அப்பா புறப்பட்டது முதல் திரும்பும் வரை எந்தெந்தக் கோயிலில் தரிசித்து, உண்டியலிலும் ஒரு ரூபாய் செலுத்தினார் என்பதை மிகவும் சிரத்தையாக குறித்துக் கொண்டு வந்திருந்தார். ஊருக்கு வந்த மறுநாள் காலை பெரியவாளை தரிசிக்கத் தீர்மானித்தவர் முன் இரவில் தன கடைசி மகனிடம் தான் உண்டியலில் பணம் செலுத்திய கோயில்களின் பட்டியலை ஒரு தாளில் தெளிவாக எழுதிக் கொடுக்கும்படி கேட்டார். அந்த மகன் ரொம்ப அலட்சியமாக "பெரியவாகிட்டே நீங்க சொன்னபடி உண்டியல்லே எல்லா கோயில்லேயும் போட்டுட்டேன்னு சொல்லேன். அவர் உன் கிட்டே என்ன லிஸ்ட்டா கேட்கப் போறா?" என்று சொல்ல அவர் அமைதியாக தானே அதை எழுதி வைத்துக் கொண்டார். மறு நாள் அதிகாலையில் போஸ்ட் மாஸ்டர் குடும்பமே மஹா பெரியவா தரிசனத்திற்குச் சென்றார்கள். அப்போது கூட்டமே இல்லை. காசியாத்திரை பெரியவா அனுக் கிரகத்தினால் நல்லபடியாக நிறை வடிந்தது என்று கூறி கங்கா ஜலத்தை அவரிடம் சமர்ப்பித்து விட்டு கோயில்களில் ஐம்பத்தோரு ரூபாயையும் சேர்த்தாயிற்று என்று போஸ்ட் மாஸ்டர் தன் தந்தையின் சார்பாக ஸ்ரீ பெரியவாளிடம் கூறினார். பெரியவா ஒரு புன்னகையோடு கேட்டு ஆசிர்வதித்து விட்டு விறு விறுவென்று உள்ளே போய்விட்டார். கடைசி மகன் "நான் அப்பவே சொன்னேனே அது போலத்தானே பெரியவா செஞ்சா? ஒவ்வொரு கோவிலா நீங்க விஸ்தாரமா எழுதிப் படிக்க அதை கேட்கிற மாதிரியா மஹா பெரியவாளுக்கு டைம் இருக்கு...? என்று அலுப்பான குரலில் கேட்டான். தந்தை இவன் சொன்னதை காதில் போட்டுக்கொண்ட மாதிரியே தெரியவில்லை.
அடுத்த சில மணி நேரத்தில் மஹா பெரியவா தரிசனம் தர வந்தபோது நிறைய வி.ஐ.பிக்கள் வேறு வந்து விட கூட்டம் திமிறியது. நகர்ந்து நகர்ந்து கிட்டத்தட்ட அங்கே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இவர்கள் நாற்பதடிக்குப் பின்னல் சென்றுதான் நிற்க முடிந்தது. மஹா பெரியவா தரிசனம் தர வெளியே வந்தார். பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு முன்னே வர எல்லோரையும் கையமர்த்தி விட்டு தன் கையை உயர்த்தி போஸ்ட் மாஸ்டர் குடும்பத்தை மட்டும் கூப்பிட்டு பக்கத்தில் வரச் சொன்னார். கூட்டம் வழிவிட பெரியவாளின் அருகே வந்து வணங்கினார்கள். இப்போது மஹா பெரியவா கணீரென்று கேட்டார். "உன் தகப்பனார் அந்த ஐம்பத்தோரு ரூபாயை எந்தெந்த கோயில்லே போட்டார்ன்னு கேளு. அந்தக் கோயில் பேரெல்லாம் எழுதி வந்திருக்காரா? அதை ஒவ்வொண்ணா படி!" சிலிர்த்துப் போனார்கள் அவர்கள். போஸ்ட் மாஸ்டர் நிதானமாகப் பட்டியலைப் படிக்க ஆரம்பித்தார். அதை மிகவும் அமைதியாகக் கேட்ட மஹான் ஒவ்வொரு கோவிலாகக் கேட்டு அங்கே உள்ள சுவாமியின் பெயர் போன்ற விவரங்களைக் கேட்டு சுமார் ஒரு மணி நேரம் நீண்ட அவகாசத்தை அந்த ஒரு ரூபாய் உண்டியல் விவகாரத்திற்காக ஒதுக்கினார். தன் பக்தரின் சிரத்தையை தான் பூரணமாக ஏற்று ஆசி செய்வது போல் ஒரு லீலையை அங்கே மஹான் எல்லோர் முன்பும் அரங்கேற்றினார். இது தன்னை தரிசிக்க வந்திருந்த பக்தர்களுக்கு அந்த ஒரு மணி நேரத்தில் ஐம்பத்தோரு கோயில்களை நேரில் சென்று தரிசித்தது போன்ற புண்ணியம் கிட்ட வேண்டும் என்பதற்காக. போஸ்ட் மாஸ்டரின் தம்பிக்கு அது ஒரு பாடமாகவும் அமைந்தது.

"பெரியவா வாக்கினை சிரமேற்கொண்டு சிரத்தையாகச் செய்து முடித்தால் அவரது அளப்பரிய பெருங்கருணை பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதற்கு இது ஒரு சான்று. இப்பேர்ப்பட்ட பெருங்கருணை கொண்ட தெய்வத்திடம் நாம் கொள்ளும் பூரண சரணாகதம் நமக்கு சகலமும் அருளும் என்பதில் ஐயமில்லை!

ஜய ஜய சங்கர                                                             ஹர ஹர சங்கர