ஞாயிறு, 6 ஜனவரி, 2019

சத்தானந்த பாரதியார்

கவியோகி சுத்தானந்தர் 11.05.1897 அன்று சிவகங்கையில் ஜடாதரர், காமாட்சி அம்மையாரின் நான்காவது மகனாகத் தோன்றினார். இவரது இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன் என்பதாகும். அன்னை மீனாட்சி அம்மனின் பேரருளால் தனது எட்டு வயதில் சுத்தானந்தர் கவிதா சக்தி பெற்றார். சிறிய பாட்டனார் பூர்ணானந்தரிடம் யோகம் பயின்றார். இமாலய மகான் ஞான சித்தர் சுத்தானந்தம் என்ற தீட்சா நாமம் வழங்கி, பராசக்தி மந்திர உபதேசம் அருளினார். சிருங்கேரி நரஸிம்ஹ பாரதி சங்கராசார்ய சுவாமிகள் கவியோகி பாரதி என்றும், சுவாமி சிவானந்தர் மஹரிஷி என்றும் சிறப்புச் செய்தனர். ஷீரடி சாய்பாபா ஓமொலி வழங்கினார். பகவான் ரமணர் தன்னறிவு பெறச் செய்தார். புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருபது ஆண்டுகள் தொடர்ந்து மோனத்தவம் புரிந்து சாதனை படைத்தார். காட்டுப்புத்தூரிலும், தேவகோட்டையிலும் சுத்தானந்தர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். விடுதலைப் போராட்ட காலத்தில் தலைமறைவுத் தொண்டராக பணியாற்றிய போது திலகர், காந்திஜி, நேதாஜி, வ.வே.சு. அய்யர், சிதம்பரனார், சிவா, பாரதியார், செண்பகராமன், ராஜா மகேந்திர பிரதாப் போன்ற தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். காந்திஜி அறிவுரைப்படி கிராமப்பணி, கதர்ப் பணியாற்றியும் மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, உயிர்ப்பலி தடுத்தல் போன்ற சீர்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டார். இயற்கை, சமரஸ போதினி, பாலபாரதி, ஸ்வராஜ்யா (தமிழ்) ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

தமிழ், வடமொழி, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு உள்பட பல மொழிகளில் நூற்றுக்கணக்கான நூல்கள் இயற்றினார். தமது நூல்களில் சுத்தானந்தர் பெரிதும் போற்றியவை பாரதசக்தி மகா காவியம் மற்றும் யோகசித்தி என்ற நூல்களாகும். பாரத சக்தி தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மாமன்னன் ராஜராஜன் விருது பெற்றது. அனைத்து சமய நூல்களையும் கற்று அவை காட்டிய நெறிகளைப் பழகி வாழ்ந்தார். ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே ஆன்ம நேயர் நாம் என்று உலகிற்கு அறிவுறுத்தினார். இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் ஆன்மீக, கலாசாரப் பயணங்கள் மேற்கொண்டார். சுத்தானந்தரின் செய்தி சமயோகம். அகவாழ்வு சிறந்த யோகம்; புறவாழ்வு செழிக்க அறிவியல். யோகமும் அறிவியலும் மனித வாழ்வில் இணைந்து விட்டால் மானுடம் தெய்வ நிலை எய்தும்; மண்ணில் விண்ணரசு தோன்றும். 1977-ஆம் ஆண்டு சிவகங்கையில் சுத்தானந்த யோக சமாஜம் என்ற அமைப்பை சுத்தானந்தர் நிறுவினார். 1979-இல் சுத்தானந்த பாரத தேசிய வித்யாலயம் உயர்நிலைப்பள்ளியை சோழபுரத்தில் நிறுவினார். சோழபுரத்தில் தவக்குடில் அமைத்துக் கொண்டு தமது இறுதி காலம் வரை அனைவரிடமும் அன்பு காட்டி வாழ்ந்த கவியோகி சுத்தானந்தர் 07.03.1990 அன்று மகா சமாதி அடைந்தார்.

சிவானந்த ஜோதி

கங்கையைப் போலத் தெளிந்தநல் உள்ளம்,
கருணைமா முகிலெனத் தோற்றம்;
திங்களைப் போல நிலவிடும் சாந்தம்,
தினகரன் போலொளிர் ஞானம்,
தங்கமே யனைய சாதுக்க ளுடனே
சதானந்தக் குடிலில்வே தாந்தச்
சிங்கமே போன்று ப்ரணவ கர்ஜனைசெய்
சிவானந்த ஜோதியைப் பணிவாம்.

உலகெலாம் புகழும் உத்தமச் சோதி,
ஓம் சிவம் ஓம் சிவம் என்றே
சலசலத்தோடும் சாந்தமாச் சோதி
தற்செருக் கிம்மியும் இன்றி,
நிலவிடும் அன்பு நிறைந்ததற் சோதி
நிமலவே தாந்தமாச் சோதி
இலகிடும் வெள்ளி இமாலயச் சோதி
சிவானந்த ஜோதியைப் பணிவோம்.

1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜ ராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றார் கவியோகி சுத்தானந்த பாரதி. அவர் எழுதிய ஆயிரமாயிரம் நூல்களில், மாபெரும் காவியமான பாரத சக்தி மகாகாவியம் அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய காவியம் ஆகும். இவர் ஜடாதரய்யர் காமாட்சி தம்பதியின் நான்காவது குழந்தையாக பிறந்தார் சுத்தானந்தர் காலம்: 1891-1990 அவரின் பிள்ளை திருநாமம் வேங்கட சுப்பிரமணியன். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது தான் சுத்தானந்தர், ஆயுட்காவியம் என அப்பெரியாரே குறிப்பிட்டுக் கொள்ளும் பாரத சக்தி மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை, ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில், சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று ஒன்பதாம் வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார், 1968 ஆம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் தெய்வநெறி கழகத்தாரால் வெளியிடப்பட்டது.

சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது.