சனி, 24 ஆகஸ்ட், 2019

வைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதியில் விமரிசையான ஏற்பாடுகள்!

திருப்பதி: வரும், 11ம் தேதி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதியில், விமரிசையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருமலையில், வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே, வைகுண்ட வாசல் திறந்திருக்கும். அந்த, இரண்டு நாட்களும், பக்தர்கள் அவ்வழியில், தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர். அதனால், திருமலையில், இவ்விரு நாட்களும், பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். நேற்று காலை முதல், திருமலையில் வாடகை அறையின் முன்பதிவு தொடங்கியது. மாலை நேரத்திற்குள், 5,000 அறைகள், வி.ஐ.பி.,களுக்காக முன்பதிவு செய்யப்பட்டன. இன்று, இந்த முன்பதிவு, 7,000த்தை தொடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். திருமலையில், பக்தர்கள் தங்க, வாடகைக்கு விடப்படும் அறைகளின் எண்ணிக்கை, 8,000. இதில், 7,000 அறைகள், வி.ஐ.பி.,களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும், முன்பதிவு செய்யப்படுகிறது. மீதம் உள்ள, 1,000 அறைகளில், 50, 100 ரூபாய் வாடகை அறைகள் மட்டுமே, சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இதற்கிடையே, வைகுண்ட ஏகாதசிக்கு வரும் பக்தர்களுக்கு, தேவையான அனைத்து ஏற்பாடுகளும், திருமலையில் தயார் நிலையில் உள்ளன. அதிகாலை, 1:45 மணியிலிருந்து, காலை, 7:00 மணி வரை, வி.ஐ.பி., தரிசனம் முடிந்த பின், தர்ம தரிசனமும், பாத யாத்திரை பக்தர்களின் தரிசனமும் தொடங்க உள்ளது. பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, 10ம் தேதி மதியம், 2:00 மணி முதல், வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் வழங்கப்படும். வைகுண்ட ஏகாதசி, துவாதசி இரண்டு நாளுக்கும், 40 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. திருமலைக்கு வரும், பக்தர்கள் அனைவருக்கும், அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை, வி.ஐ.பி.,களுக்காக, 60 டிக்கெட்டுகள் மட்டுமே, அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதாக, தேவஸ்தான செயல் இணை அதிகாரி, சீனிவாசராஜு தெரிவித்தார்.
-----------------------------------------

கருத்துகள் இல்லை: