திங்கள், 13 ஜனவரி, 2014

அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில்

மூலவர்:குற்றாலநாதர்
அம்மன்/தாயார்:குழல்வாய்மொழி, பராசக்தி (இரண்டு அம்மன் சன்னதிகள்)
தல விருட்சம்:குறும்பலா
தீர்த்தம்:சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி
ஆகமம்/பூஜை:மகுடாகமம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திரிகூட மலை
ஊர்:குற்றாலம்
மாவட்டம்:திருநெல்வேலி
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், அருணகிரிநாதர்.

தேவாரப்பதிகம்:திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவிபாகம் பொருந்திப் பொருந்தாத வேடத்தால் காடுறைதல் புரிந்த செல்வர் இருந்த இடம்வினவில் ஏலங்கமழ் சோலையின வண்டுயாழ்செய் குருந்த மணநாறும் குன்றிடஞ்சூழ் தண்சாரல் குறும்பலாவே.-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 13வது தலம்.

திருவிழா:ஆடி அமாவாசையில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. நவராத்திரியில் பராசக்திக்கு 10 நாள் திருவிழா. ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்ஸவம், மார்கழி திருவாதிரை, தை மகத்தில் தெப்போற்ஸவம் பங்குனி உத்திரம். ஆடி அமாவாசையன்று கோயில் முழுதும் 1008 தீபம் ஏற்றும், "பத்ரதீப' விழா இங்கு வெகு விமரிசையாக நடக்கும்.

தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 64 சக்தி பீடத்தில் இது, "பராசக்தி பீடம்' ஆகும். இத்தலத்தில் உள்ள தலமரம் லிங்க வடிவ பலாச்சுளை காய்கிறது இத்தலத்தில் உள்ள தலமரம் பலா மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகள், "லிங்க'த்தின் வடிவில் இருப்பது கலியுக அதிசயம்.

திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி
முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம் - 627 802. திருநெல்வேலி மாவட்டம்.போன்:+91-4633-283 138, 210 138.

பொது தகவல்:இத்தலவிநாயகர் வல்லபகணபதி என்று அழைக்கப்படுகிறார். பிரகாரத்திலுள்ள முருகன், கையில் வில்லேந்தியபடி காட்சி தருகிறார். இவருடன் வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி இருக்கின்றனர். குற்றால அருவி நீர் விழும் பாறையில், பல சிவலிங்க வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. அபிஷேகப் பிரியரான சிவனுக்கு, எப்போதும் அபிஷேகம் நடக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு செதுக்கியிருக்கிறார்கள். சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகக் கருதப்படும் இந்த தீர்த்தத்தில் நீராடுவது மேலான புண்ணியத்தைத் தரும். பிரகாரத்தில் அகத்தியர் சன்னதிக்கு எதிரில் அவரது சீடர், சிவாலய முனிவருக்கு சன்னதி இருக்கிறது.

இந்த சன்னதியில், சிவாலய முனிவர் சிலை, அகத்தியரின் பாதத்திற்கு கீழே இருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது. குருவிற்கு மரியாதை தரும்விதமாக இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

பிரார்த்தனை:புத்தி சுவாதீனம் இல்லாதவர்களும், தோல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களும் குற்றால அருவியில் நீராடி குற்றால நாதரை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும். தீராத தலைவலி உள்ளவர்கள் இங்கு சிவனை வழிபட்டு, தைல பிரசாதம் பெற்றுச் செல்கிறார்கள். இதை தேய்த்துக் கொண்டால் தலைவலி பிரச்னை நீங்குவதாக நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:நான்கு வேதங்கள் 4 வாயிலாகவும், இறைவனின் நடனம் காண பிலவேந்தன் வந்த வழி ஐந்தாவது வாயிலாகவும் அமைந்துள்ளது. இங்குள்ள துவாரபாலகர்களின் அமைப்பு மிகவும் சிறப்பானது. இக்கோயில் வைணவக்கோயிலாக இருந்த போது, அகத்தியர் நேற்று வந்தாரா? என ஒரு துவாரபாலகர் கேட்பதைப்போலவும், இன்னொரு துவார பாலகர் அவர் வரவில்லை என கூறுவதைப்போலவும் உள்ளது.

நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் என பஞ்சபூத லிங்கங்களையும் இங்கு ஒன்றாக தரிசிக்கலாம். பஞ்ச சபைகளான பொற்சபை, வெள்ளி சபை, தாமிர சபை, ரத்ன சபை, சித்ர சபை என்ற 5 சபைகளில் குற்றால நாதர் கோயில் அருகே சித்ர சபை அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் நடராஜர் சித்திரமாக அருளுகிறார்.

மாணிக்க வாசகர், கபிலர், பட்டினத்தார், அருணகிரிநாதர் ஆகியோர் இத்தலம் பற்றி பாடியுள்ளனர். இக்கோயிலுக்கு மொத்தம் 5 வாசல்கள் உள்ளன.

குற்றாலநாதர் லிங்கத்தின் மீது, அகத்தியரின் விரல் பதிந்த தடங்கள் தற்போதும் இருக்கிறது. அகத்தியர், திருமாலின் தலையில் கை வைத்து அழுத்தியதால், சிவனுக்கு தலை வலி உண்டானதாம். எனவே, இவருக்கு தலை வலி நீங்க தினமும் காலையில் 9.30 மணிக்கு நடக்கும் பூஜையில், தலையில் (லிங்க பாணத்தின் மீது) தைலம் தடவுகின்றனர்.

பசும்பால், இளநீர், சந்தனம் மற்றும் 42 விதமான மூலிகைகளைச் சேர்த்து 90 நாட்கள் வேகவைத்து, அந்த கலவையில், செக்கில் ஆட்டி எடுத்த தூய நல்லெண்ணெய் சேர்த்து, இந்த தைலம் தயாரிக்கின்றனர்.

சிவனுக்கு, அபிஷேகம் செய்த தைலம் பிரசாதமாகவும் தருகின்றனர். இதுதவிர, தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, "கடுக்காய் கஷாய' நைவேத்யம் படைக்கின்றனர். அருவி விழும் இடத்தில் இருப்பதால் சிவனுக்கு ஜுரம், குளிர்காய்ச்சல் உண்டாகாமல் இருக்க இந்த கஷாயம் படைக்கின்றனர். சுக்கு, மிளகு, கடுக்காய் உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து தயாரிக்கும் இதை, "குடுனி நைவேத்யம்' என்கிறார்கள். சக்தி பீடங்கள் 64ல் இது, "பராசக்தி பீடம்' ஆகும். இத்தல அம்பிகை, "குழல்வாய்மொழிநாயகி' என்றழைக்கப்படுகிறாள். ஐப்பசி பூரத்தன்று திருக்கல்யாண விழா நடக்கிறது. அன்று குற்றாலநாதர், குழல்வாய்மொழி நாயகி இருவரும் அகத்தியர் சன்னதிக்கு அருகில் எழுந்தருளி, அகத்தியருக்கு திருமணக்காட்சி கொடுக்கின்றனர்.

அகத்தியர் இங்கு திருமால் தலத்தை, சிவத்தலமாக மாற்றிய போது சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி, குழல்வாய்மொழிநாயகியாகவும், பூதேவி, பராசக்தியாகவும் மாற்றினாராம். பராசக்தி, இங்கு ஸ்ரீசக்ர அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவில் காட்சி தருகிறாள். பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் இந்த பீடத்திற்கு, "தரணி பீடம்' (தரணி - பூமி) என்று பெயர். ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த பீடம் இருப்பதாக ஐதீகம். எனவே, பவுர்ணமியன்று இரவில் "நவசக்தி' பூஜை செய்கின்றனர். அப்போது, பால், வடை பிரதானமாக படைக்கப்படும்.

இவள் உக்கிரமாக இருப்பதால், இவளுக்கு எதிரே சிவலிங்க பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், "காமகோடீஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார். பவுர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்திற்கு, பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனை செய்து, விசேஷ பூஜை செய்து வழிபட்டால் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

மணக்கோல நாதர்: கோயில் பிரகாரத்தில் மணக்கோலநாதர் (சிவன்) சன்னதி இருக்கிறது. சிவன், அம்பிகையை மணம் முடித்த கோலத்தில் இங்கு காட்சி தருவதால் இவருக்கு இப்பெயர். இவருடன் திருமணத்தை நடத்தி வைத்த பிரம்மா, தாரை வார்க்கும் கோலத்தில் விஷ்ணு, மகாலட்சுமி, திருமணக்காட்சி பெற்ற அகத்தியர் மற்றும் பிருங்கி மகரிஷி ஆகியோரும் இருக்கின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள் நல்ல வரன் அமைய, இவர்கள் ஏழு பேருக்கும் மஞ்சள், பன்னீர் அபிஷேகம் செய்து, வாசனை புஷ்ப மாலை அணிவித்து, பாயச நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள்.

இக்கோயிலில் பெருமாளுக்கும் சன்னதி இருக்கிறது. இவரை, "நன்னகரப்பெருமாள்' என்று அழைக்கிறார்கள். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நன்மைகள் தருபவர் என்பதால் இவருக்கு இப்பெயர். அருகில் கிருஷ்ணரும் இருக்கிறார்.

ரோகிணி நட்சத்திரத்தன்றும், புரட்டாசி சனிக்கிழமைகளிலும் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. முற்காலத்தில் சிவன் சன்னதியில் இருந்த பெருமாளே, இங்கு எழுந்தருளியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

லிங்க வடிவ பலாச்சுளை: தலவிருட்சம் பலா மரத்தைச் சுற்றி சிறிய சன்னதி எழுப்பப்பட்டிருக்கிறது. இம்மரத்தின் கீழ் "ஆதிகுறும்பலாநாதர்' பீட வடிவில் காட்சி தருகிறார். இந்த மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகள், "லிங்க'த்தின் வடிவில் இருப்பது கலியுக அதிசயம். இதை பழமையான நூலான குற்றாலக்குறவஞ்சி, ""சுளையெலாஞ் சிவலிங்கம்'' என்று குறிப்பிடுகிறது. விசேஷ காலங்களில் சிவனுக்கு, பலா சுளையை பிரதானமாக படைக்கின்றனர். இதுதவிர பல்லாண்டுகள் பழமையான பலா மரம் ஒன்று பிரகாரத்தில் உள்ளது. இதனை சிவனாகவே பாவித்து, நைவேத்யமும் படைத்து தீபாராதனை செய்கின்றனர்.

தொலைந்த பொருள் தரும் சிவன்: அர்ஜுனன், தான் பூஜை செய்த லிங்கம் வைத்திருந்த சம்புடத்தை (பெட்டி), காசியில் தொலைத்துவிட்டான். வருந்திய அர்ஜுனன் இங்கு வந்தபோது, அந்த பெட்டியைக் கண்டெடுத்தான். அதை இங்கேயே வைத்து பூஜித்துவிட்டுச் சென்றான். இந்த லிங்கம் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறது. பொருளை தொலைத்தவர்கள் இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொள்ள, மீண்டும் அவை கிடைக்கும் என்கிறார்கள். பங்குனி உத்திரத்தன்று, அர்ஜுனன் இங்கு லிங்கத்தைக் கண்டான். எனவே, அன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. இவரது சன்னதிக்கு அருகிலிருந்து இந்த லிங்கம், மேற்கு முக விநாயகர், குற்றாலநாதர் விமானம், திரிகூட மலை மற்றும் குற்றால அருவி ஆகிய ஐந்தையும் தரிசிக்கலாம்.

சித்திரசபை: குற்றாலநாதர் கோயிலுக்கு அருகில், சித்திரைசபை தனிக்கோயில் அமைப்பில் இருக்கிறது. தாமிரங்களால் வேயப்பட்ட இந்த சபையில் நடராஜர், திரிபுரதாண்டவமூர்த்தியாக ஓவிய வடிவில் காட்சி தருகிறார். சித்திர சபைக்குள் அகத்தியர், திருமாலின் தலையில் கை வைத்து அழுத்த அவர் லிங்கமாக மாறியது, மதுரையில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள், தெட்சிணாமூர்த்தியின் பல்வேறு வடிவங்கள் என பல சித்திரங்கள் மூலிகைகளால் வரையப்பட்டுள்ளது. நடராஜருக்கு மார்கழி திருவாதிரை விழா, தேரோட்டத்துடன் பத்து நாட்கள் நடக்கும்.

இவ்விழாவின் போது தினமும் காலை, மாலையில் நடராஜருக்கு செய்யப்படும் தீபராதனையை நடராஜரின் நடனத்தைப் போல, மேலும், கீழுமாக ஆட்டுகின்றனர். இதனை, "தாண்டவ தீபாராதனை' என்கின்றனர். இவ்விழாவில் நடராஜருக்கு வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி என இரண்டு விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. பச்சை சாத்தி அலங்காரத்திற்கு மரிக்கொழுந்தினால் பிரத்யேகமாக அலங்காரம் செய்கிறார்கள். சித்திரை பிரம்மோற்ஸவத்தின்போதும் இவருக்கு இந்த தீபாராதனை உண்டு.

பெயர்க்காரணம்: "கு' என்றால் பிறவிப்பிணி. "தாலம்' என்றால் தீர்ப்பது என்று பொருள். இத்தலத்தை வழிபட்டால் இம்மையிலும், மறுமையிலும் உள்ள பிறவிப்பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.

தல வரலாறு:திருக்கயிலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடக்கிறது. இதை தரிசிக்க பிரம்மா, விஷ்ணு, முப்பத்துமுக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் வந்துள்ளனர். இதனால் பூமியின் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர ஆரம்பிக்கிறது. இதை சமப்படுத்த சிவன் அகத்தியரை அழைத்து,""நீ ஒருவன் மட்டும் தென்திசை சென்றால் போதும், உலகம் சமநிலைக்கு வந்துவிடும். அத்துடன் இதுநாள் வரை குற்றாலத்தில் விஷ்ணுவாக அருள்பாலித்து வந்த என்னை, சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூஜை செய்தால் எங்களது திருமணத்தை இங்கிருந்தபடியே தரிசிக்கலாம்,''எனக்கூறி அனுப்பிவைக்கிறார்.

சிவனின் கட்டளைப்படி அகத்தியர் குற்றாலம் வந்து, விஷ்ணு வடிவில் அருள்பாலிக்கும் சிவனை தரிசிக்க செல்கிறார். ஆனால் அங்கிருந்த துவாரபாலகர்கள் சைவ சமயத்தை சேர்ந்த அகத்தியரை கோயிலுக்குள் விடவில்லை. இதனால் வருத்தமடைந்த அவர் இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள இலஞ்சிக்குமாரர் கோயிலுக்குச் சென்றார். அங்கு வெண்மணலில் லிங்கம் பிடித்து, சிவனை வழிபட்டார்.

தான் குற்றாலத்தில், சிவதரிசனம் செய்ய அருளும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த முருகன், ""அகத்தியரே! தாங்கள் சிவக்கோலத்தை கலைத்துவிட்டு, வைணவக்கோலத்துடன் கோயிலுக்குள் சென்று பெருமாளை சிவலிங்கமாக்கி வழிபாடு செய்யுங்கள்,''என யோசனை கூறுகிறார்.

முருகனின் யோசனைப்படி அகத்தியரும் நெற்றியில் திருமண் இட்டு, கழுத்தில் துளசி மாலை அணிந்து கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்கிறார். உடனே திருமாலின் கையில் சங்கு இருந்த இடத்தில் மான், துளசி இருந்த இடத்தில் சந்திரன், பொட்டு இருந்த இடத்தில் நெற்றிக்கண், ரத்தினம் இருந்த இடத்தில் பாம்பு என அனைத்தும் மாறியது.

அத்துடன் உயரமாயிருந்த திருமாலின் தலையில் கைவைத்து, திருமேனி குறுக குறுக என சிவனை வேண்டி பிரார்த்தனை செய்ய, நெடிய திருமால் குறுகிய சிவனாக மாறி விடுகிறார். அந்த இடத்திலேயே அகத்தியருக்கு திருமண காட்சி கிடைக்கிறது. இன்றும் கூட இத்தலத்தில் பகலில் தேவர்களும், இரவில் அகத்தியரும் பூஜை செய்வதாக கூறப்படுகிறது. அகத்தியர் தன் கைவிரல்களால் சிவலிங்கத்தில் தலையில் வைத்து அழுத்தியதால் இன்றும் கூட லிங்கத்தின் மேல்பகுதியில் விரல்களின் தடம் இருப்பதை காணலாம்.

இலஞ்சியில் அகத்தியர் பூஜித்த சிவன், "இருவாலுக நாயகர்' என்ற பெயரில் அருளுகிறார். குற்றாலநாதரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், முதலில் இந்த சிவனை தரிசித்துவிட்டு இங்கு வருவது விசேஷ பலனைத் தரும். இக்கோயில் திருமால் தலமாக இருந்தபோது, சங்கு வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போதும் இக்கோயில் சங்கின் வடிவில் இருப்பதைக் காணலாம். திருக்குற்றால மலையிலுள்ள செண்பகாதேவி, கோயிலுக்குச் செல்லும் வழியில், அருவியின் மேற்பரப்பில் இருந்து இந்த வடிவத்தை பார்க்கலாம்.

மகாலட்சுமியின் அம்சமான சங்கு, ஆற்றலின் வடிவமாகும். இதன் ஒலி, சக்தியைத் தருவதாகும். எனவேதான், சிவபூஜையில் சங்கு ஒலிக்கும் வழக்கம் உண்டு. இதன் அடிப்படையிலும், இக்கோயில் சங்கின் அமைப்பில் அமைந்திருப்பதாகச் சொல்வர். இங்கு 8 கால பூஜையிலும், சிவன் சன்னதியில் சங்கு ஊதுகின்றனர்.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்

மூலவர்:நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் )
அம்மன்/தாயார்:காந்திமதி, வடிவுடையம்மை
தல விருட்சம்:மூங்கில்
தீர்த்தம்:பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி கருமாறித் தீர்த்தம், சிந்துபூந்துறை
ஆகமம்/பூஜை :காரண ஆகமம், காமீக ஆகமம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
ஊர்:திருநெல்வேலி
மாவட்டம்:திருநெல்வேலி
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்:அக்குலா மரையினர் திரையுலா முடியினர் அடிகளன்று தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலும் சோலைத் திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலியுறை செல்வர் தாமே.-திருஞானசம்பந்தர்.

தேவாரப்பாடல்பெற்ற பாண்டிநாட்டுத்தலங்களில் இது 14வது தலம்.

திருவிழா:மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.

தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலம், பஞ்சசபைகளுள் தாமிர சபையாகும். மூலவரான வேண்ட வளர்ந்தநாதர் சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் இருக்கிறார். இவரே நெல்லையப்பர் எனப்படுகிறார். இந்த லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம். இங்குள்ள விநாயகர் முக்குறுணி விநாயகர் என்ற திருநாமத்துடன், வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருப்பது வித்தியாசமான அம்சம்.பொதுவாக, நவக்கிரக சன்னதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கியிருப்பார். இங்கு வடக்கு நோக்கியிருப்பது மிக அரிய கோலம். இங்கு மூலஸ்தானம் அருகில் உள்ள உற்சவர் விஷ்ணு, மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தருகிறார். இங்கு மார்கழிபூஜை கிடையாது. அதற்குப்பதிலாக, கார்த்திகை மாதத்தில் அதிகாலை 4 மணிக்கு கோயில் திறந்து, அனைத்து சுவாமி களுக்கும் பூஜை நடக்கிறது. சிவனும், அம்பிகையும் ஒன்று என்பதன் அடிப்படையில் பிரதோஷத்தின்போது இங்கு அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது. இதேபோல் சிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காந்தி சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 204 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு நெல்லையப்பர்திருக்கோயில், திருநெல்வேலி- 627 001. திருநெல்வேலி மாவட்டம்.போன்:+91- 462 - 233 9910

பொது தகவல்:பிரகாரத்தில் கன்னி விநாயகர், நந்தி தேவர், பாண்டியராஜா சன்னதிகள் உள்ளன. பிட்சாடனர், ரிஷிபத்தினியர் உருவங்கள் கல்லில் வண்ணந்தீட்டப்பட்டுள்ளன. அகத்தியர் பிரதிஷ்டை செய்த சால்வடீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி சற்றுத் தாழ்வில் உள்ளது.

பிரார்த்தனை:கல்விக்கு அதிபதியான புதன், குபேர திசையான வடக்கு நோக்கி திரும்பியிருப்பதன் மூலம், படித்தவர்கள் இவரை வணங்கினால், செல்வாக்கு மிக்க வேலையோ, தொழிலோ செய்யலாம் என்று நம்புகிறார்கள். ஜாதகத்தில் புதன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபடுகிறார்கள்.

கணவனும், மனைவியும் அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த தலத்தில், தம்பதியர் வழிபட்டால், அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒற்றுமையுடன் இருப்பர் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:இங்குள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதியில், 12 துளைகள் கொண்ட கல் ஜன்னல் இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டு, குழந்தைப்பேறு பெற்றவர்கள், குழந்தையை ஜன்னல் வழியாக கொடுத்து வாங்கி வித்தியாசமான நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த நேர்த்திக் கடனால் குழந்தைகள் விநாயகரின் பாதுகாப்பைப் பெற்று தீர்க்காயுளுடன் வாழ்வர் என்பதும், கல்வியில் சிறந்து விளங்குவர் என்பதும் நம்பிக்கை.

தலபெருமை:வெண்ணிற ஆடை அம்பிகை:காந்திமதிக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலையில் விளாபூஜை (7 மணி) நடக்கும் வரையில் அம்பிகை வெண்ணிற புடவையிலேயே காட்சி தருகிறாள். இறுதிக்காலத்தில் உலகம் அனைத்தும் அம்பிகையிடம், ஐக்கியமாவதை உணர்த்தும்விதமாக இவ்வாறு காட்சி தருவதாக ஐதீகம்.

தனித்தனி பூஜை: நெல்லையப்பர் கோயிலில் சுவாமிக்கு தனி ராஜகோபுரமும், அம்பாளுக்கு தனி ராஜகோபுரமும் உண்டு. இரண்டு சன்னதிகளையும் மிக நீளமான சங்கிலி மண்டபம் ஒன்று இணைத்து வைக்கிறது. பார்ப்பதற்கு தனித்தனி கோயில்கள் போன்ற உணர்வு ஏற்படும். பொதுவாக கோயில்களில் சுவாமி, அம்பாள் இருவருக்கும் ஒரே ஆகமப்படிதான் பூஜை நடக்கும். ஆனால், இங்கு காந்திமதி அம்பாள் தனிக்கோயிலில் இருப்பதால் காரண ஆகமப்படியும், நெல்லையப்பருக்கு காமீக ஆகமப்படியும் ஆறு கால பூஜை நடக்கிறது.

காந்திமதி சீர் : பெண்கள், திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சீர் கொண்டு செல்வதுபோல, காந்திமதி அம்பிகையும் தனது திருக்கல்யாணத்தின் போது, சீர் கொண்டு செல்கிறாள். ஐப்பசி பிரம்மோற்ஸவத்தின் முதல் பத்து நாட்கள் அம்பாள், சிவனை மணக்க வேண்டி தவமிருப்பாள்.

பத்தாம் நாளில் கம்பை நதிக்கு எழுந்தருள்வாள். 11ம் நாள் மகாவிஷ்ணு, தன் தங்கையை மணந்து கொள்ளும்படி சிவனை அழைப்பார். சிவனும் அவரது அழைப்பை ஏற்று, அம்பிகையை மணம் செய்வார். அப்போது பக்தர்கள், மணமக்களுக்கு திருமண ஆடைகள் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.

12ம் நாளிலிருந்து இருவரும், 3 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் காண்கின்றனர். 14ம் நாள் இரவில் சுவாமியும், அம்பாளும் மறுவீடு செல்கின்றனர். அப்போது அம்பிகை அப்பம், முறுக்கு, லட்டு என சீர் பலகாரங்கள் கொண்டு செல்கிறாள். இதனை, "காந்திமதி சீர்' என்பார்கள்.

அன்னம் பரிமாறும் அம்பிகை : இக்கோயிலில் காந்திமதி அம்பாள், கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அம்பாள் சன்னதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, பருப்பு, சாம்பார் சாதம், ஊறுகாய் என வகைவகையான நைவேத்யங்களை சிவன் சன்னதிக்கு கொண்டு செல்கின்றனர். அங்குள்ள அர்ச்சகர்கள் அவற்றை சிவனுக்கு படைக்கின்றனர். இப்பூஜை முடிந்தபின், அம்பாளுக்கு அதே நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது.

திருமால் மார்பில் லிங்கம்: மூலஸ்தானம் அருகில் தனி சன்னதியில் திருமால், பள்ளி கொண்ட கோலத்தில், சிவலிங்க பூ ஜை செய்தபடி இருக்கிறார். அருகில் உற்சவர் விஷ்ணு, மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தருகிறார். திருமாலை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது. தன் தங்கையை மணந்த சிவனை, விஷ்ணு மார்பில் தாங்கினார். இதன் அடிப்படையில் இவ்வாறு இருப்பதாக சொல்கிறார்கள். இவரது கையில் தாரை வார்த்துக்கொடுத்த தீர்த்த பாத்திரமும் இருக்கி றது.

அம்பிகைக்கு பிரதோஷம்: பிரதோஷத்தின்போது, சிவன் சன்னதி எதிரேயிருக்கும் நந்திக்கு மட்டுமே பூஜை நடக்கும். ஆனால், இங்கு அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது. அப்போது அம்பிகை ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறாள். சிவனும், அம்பிகையும் ஒன்று என்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர். சிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.

தன்னில் நீராடும் தாமிரபரணி : இக்கோயிலில் நாயன்மார் சன்னதி அருகில் தாமிரபரணி தாய், சிலை வடிவில் இருக்கிறாள். சித்ரா பவுர்ணமி, ஆவணி மூலம், தைப்பூசம் ஆகிய நாட்களில் இவளை தாமிரபரணிக்கு பவனியாகஎடுத்துச் சென்று தீர்த்தமாடச் செய்வர். தாமிரபரணியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். இதன் முக்கியத்து வத்தை உணர்த்துவதற்காக தாமிரபரணியே, தனது உண்மை வடிவத்தில் நீராடுவதாக சொல்வதுண்டு. அம்பிகை சன்னதி முன்பாக கங்கை, யமுனை இருவரையும் துவாரபாலகிகளாகவும் காணலாம். கங்கையும், யமுனை யும் தாமிரபரணி நகர் நாயகிக்கு பாதுகாவல் செய்வதில் இருந்தே, காந்திமதியம்மையின் மகிமையும், தாமிரபரணி நதியின் பெருமையும் தெரிய வரும்.

மார்கழி பூஜை இல்லாத கோயில்: தை மாதத்தில் உத்ராயணம் துவங்குவதால், மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை நேரமாக கருதப்படுகிறது. ஆகவே, கோயில்களில் மார்கழி அதிகாலையில் திருவனந்தல் பூஜை நடக்கும். ஆனால், இங்கு மார்கழி பூஜை கிடையாது. அதற்குப்பதிலாக, கார்த்திகை மாதத்தில் அதிகாலை 4 மணிக்கு கோயில் திறந்து, அனைத்து சுவாமி களுக்கும் பூஜை நடக்கிறது. இந்த 30 நாட்களும் சுவாமி தங்கப்பல்லக்கில் எழுந்தருளுகிறார். இங்கு கந்தசஷ்டி ஐப்பசி அமாவாசையில் துவங்கி பவுர்ணமி வரையில் 15 நாட்கள் நடக்கிறது. அப்போது ஆறுமுக நாயனாருக்கு லட்சார்ச்சனை செய்யப்படுகிறது.

மான் வாகன துர்க்கை: இங்குள்ள துர்க்கை தெற்கு நோக்கியபடி, சிங்கம் மற்றும் மான் வாகனத்துடன் இருக்கிறாள். சிங்கமும், மானும் ஒரு சேர இருப்பதால், எதிரிகளையும் அன்பால் அடக்கும் சக்தியை அவள் தருகிறாள். அருகில் அவளது தோழி இருக்கிறாள். அம்பாள் சன்னதியில் பண்டாசுரனை வதம் செய்த அம்பாளின் சிலை உள்ளது. இவளை "மஞ்சன வடிவாம்பிகை' என்பர். இவளையும் துர்க்கையின் அம்சமாக கருதி வழிபடுகின்றனர்.

புதனின் மாறுபட்ட திசை: பொதுவாக, நவக்கிரக சன்னதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கியிருப்பார். இங்குள்ள புதனோ, வடக்கு நோக்கியிருக்கிறார். இது மிக அரிய கோலம். தமிழகத்தில் வேறு எந்தக் கோயிலிலும் புதனின் திசையில் மாற்றமில்லை.

முக்குறுணி விநாயகர்: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகர் இருக்கிறார். அதுபோல, இங்குள்ள விநாயகரும் இதே திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். ஆனால், வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருப்பது வித்தியாசமான அம்சம்.

தாமிரபரணியில் தண்ணீர் வற்றாதது ஏன்? : திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர் வற்றுவதில்லை. இந்நதியை அகத்தியர் உண்டாக்கியது ஒரு காரணம் என்றாலும், நதி செழிப்புடன் இருப்பதற்கு நெல்லையப்பரே மூலகாரணம் என்கிறார்கள். ஆம்! இக்கோயிலின் அமைப்பை பார்த்தால் இவ்விஷயம் புலப்படும்.

கோயில்களில் சுவாமி அபிஷேக தீர்த்தம் வட பகுதியில் விழும்படியாகத்தான் கோமுகி இருக்கும். ஆனால், இங்கு வருணனின் திசையான மேற்கில் இருக்கிறது. இந்த புனித நீர், தன் திசையில் விழுவதால் மகிழும் வருணபகவான் எப்போதும் இப்பகுதியில் மழை பொழிவித்து, தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலையில் வைத்திருக்கிறார் என்பது ஐதீகம்.

தல வரலாறு:வேதபட்டர் என்பவர் இறைவனுக்கு தினமும் நைவேத்யம் படைப்பதற்காக உலரப் போட்டிருந்த நெல் மழையினால் நனையாதவாறு இறைவன் வேலியிட்டு காப்பாற்றியதால் இறைவனுக்கு நெல்வேலிநாதர் என்று பெயர் ஏற்பட்டது. இத்தலமும் நெல்வேலி (திருநெல்வேலி) என பெயர்பெற்றது.

தமிழகத்தில் மூன்று மூலவர்களைக் கொண்ட கோயில் நெல்லையப்பர் கோயில் மட்டுமே. மூலவரான "வேண்ட வளர்ந்தநாதர்' சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் பெரிய லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரே "நெல்லையப்பர்' எனப்படுகிறார். இவருக்கு மூங்கில் வேணுவனேஸ்வரர், வெய்முத்தீசர் ஆகிய திருநாமங்கள் உள்ளன.

இந்த லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம். சிவனுக்குள் சக்தி அடக்கம் என்பதை இக்கோலம் உணர்த்துவதாக சொல்கிறார்கள். எனவே, சுவாமிக்கு "சக்தி லிங்கம்' என்ற பெயரும் உண்டு.

இது தவிர, மகாவிஷ்ணு பூஜித்த லிங்கம் ஒன்றும், மூலவர் சன்னதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னதியும் இருக்கிறது. பாதாள லிங்கத்தில் உள்ள உள்ள சிவனையே ஆதிமூலவர் என்கின்றனர். இவருக்கு தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு சாலி வாடீஸ்வரன், (சாலி என்பது நெல்லி), விருகி விடுதீஸ்வரன், ஸ்ரீதான மூர்த்தி போன்ற திருநாமங்கள் உள்ளன.இவரே இக்கோயிலின் முதல் லிங்கம் எனக் கருதப்படுவதால், இவருக்குத் தான் முதல் பூஜை நடக்கிறது. வருமே மூலவராகவே வணங்கப் படுகின்றனர். இங்கு பஞ்ச தெட்சிணாமூர்த்தி களையும் தரிசிக்கலாம்

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரான "வேண்ட வளர்ந்தநாதர்' சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் இருக்கிறார். இவரே "நெல்லையப்பர்' எனப்படுகிறார். இந்த லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம்.
 
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்

மூலவர்:அண்ணாமலையார், அருணாச்சலேசுவரர்
அம்மன்/தாயார்:அபித குஜாம்பாள், உண்ணாமுலையாள்
தல விருட்சம்:மகிழமரம்
தீர்த்தம்:பிரம்மதீர்த்தம், சிவகங்கை
ஆகமம்/பூஜை :காரண, காமீகம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருண்ணாமலை
ஊர்:திருவண்ணாமலை
மாவட்டம்:திருவண்ணாமலை
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்.

தேவாரப்பதிகம்:உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.-திருஞானசம்பந்தர்.

தேவாரப்பதிகம் பெற்ற நடுநாட்டு தலங்களில் 22வது தலம்.

திருவிழா:கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம் கார்த்திகை தீபம் 10 நாட்கள் திருவிழா, மாசி மகா சிவராத்திரி *தை மாதம் மாட்டுப்பொங்கல் திருவூடல் உற்சவம் சுவாமி ஊஞ்சல் ஆடும் உற்சவம் *மாதா மாதம் இத்தலத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும். *இங்கு ஆடிப்பூரம் அன்று தீ மிதி திருவிழா அம்மன் சன்னதி முன்பாக நடக்கும் இது போல் வேறு எந்த சிவ தலத்திலும் தீ மிதி திருவிழா நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. *தினசரி 6 கால பூஜை *மாசி மகத்தன்று பள்ளி கொண்டாபட்டு என்ற ஊருக்கு சுவாமி சென்று ஆற்றில் தீர்த்தவாரி செய்து வருவார்.(சிவபெருமானே வள்ளாள மகராஜனுக்கு பிள்ளையாக பிறந்து அவர் இறந்தவுடன் ஈமக்கிரியை செய்த வரலாற்றைக் குறிப்பது இத்திருவிழா) *தை மாதம் 5 ந் தேதி சுவாமி சுற்றுவட்டாரக் கோயில்களில் காட்சி தருவார். அதன்படி தை மாதம் 5ந்தேதி மணலூர் பேட் என்ற ஊருக்கு சென்று சுவாமி காட்சி தருவார். *தை மாதம் ரதசப்தமி அன்று கலசப்பாக்கம் என்ற ஊரில் அண்ணாமலையார் காட்சி தருவார். *பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம் 6 நாட்கள் *வருடத்தின் அனைத்து மாதங்களிலும் ஏதாவது திருவிழா இத்தலத்தில் நடந்த வண்ணமே இருக்கும். *ஒவ்வொரு மாதமும் பிரதோசம் மிகவும் சிறப்பாக நடைபெறும். *தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களில் விசேச பூஜைகள்

தல சிறப்பு:*லிங்கமே மலையாக அமைந்த மலை *தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக திகழும் சிவ தலம் *பஞ்சபூத தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது. *நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு பெற்ற தலம். *நான் என்ற அகந்தை அழிந்த தலம் *உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம் *பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம். *அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம் *அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்ட தலம் *எல்லா சிவதலத்திலும் மூலவர் பின்புறமுள்ள லிங்கோத்பவர் தோன்றிய தலம். *9 கோபுரம் 7 பிரகாரங்களுடன் 25 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய தலம் *தென்னிந்தியாவிலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம். *தமிழகத்தின் திருப்பதி என்று போற்றப்படுமளவுக்கு லட்சோபலட்சம் பக்தர்கள் தினந்தோறும் வந்து வழிபடும் அதி அற்புத சக்தி வாய்ந்த சிவ தலம். *6 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. சேர சோழ பாண்டிய வைசாள மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப்பழமையான திருக்கோயில் இது. *ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை. *சேஷாத்திரி சுவாமிகள், ரமண மக ரிஷி, விசிறி சாமியார் போன்ற எண்ணற்ற ஞானிகள் வாழ்ந்து முக்தியடைந்த தலம் கிரிவல சிறப்பு : கார்த்திகை மாதம் கிருத்திகை நாளன்றுதான் பார்வதிக்கு சிவன் இடப்பாகம் அளித்தார் என்பதால் அன்றைய தினம் சுற்றுவது சிறப்பு, முனிவர்களும் ஞானிகளும் சித்தர்களும் ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பின்போதும் பிரதோச காலத்திலும் மலை வலம் வந்தார்களாம். எனவே அந்த நாளில் கிரிவலம் சுற்றுவது நல்லது. சந்திரன் பவுர்ணமி அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகஅளவில் பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்சக்திகளை தருகிறார்.இதனால் பவுர்ணமி அன்று கிரிவலம் வருதல் நல்லது. இந்த கோயில் அக்னி கோயில். அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. இந்த கோயிலில் செவ்வாய் கிழமை அன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.அன்றும் கிரிவலம் வரலாம். ஞாயிறு சிவபதவிகள் கிடைக்கும் திங்கள் இந்திர பதவி கிடைக்கும் செவ்வாய் கடன் வறுமை நீங்கும், தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளையும் நீக்கி சுபிட்சம் பெறலாம். புதன் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் பெறலாம் வியாழன் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம் வெள்ளி விஷ்ணு பதம் அடையலாம் சனி நவகிரகங்களை வழிபட்டதன் பயன் கிடைக்கும். அம்மாவாசை மனதில் உள்ள கவலைகள் போகும். மனநிம்மதி கிடைக்கும். 48 நாட்கள் விரதமிருந்து அதிகாலையில் கணவனும் மனைவியும் நீராடி மலை வலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடம் ஆகும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:காலை 5மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்

முகவரி:அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை-606 601. திருவண்ணாமலை மாவட்டம்.
போன்:+91-4175 252 438.

பொது தகவல்:அண்ணாமலை பெயர்க் காரணம்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பெயர். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள் தரும்.பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

மலை : கயிலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால் லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலைதான் இத்தலத்துக்கே மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலம் என்பது புகழ் பெற்றது. இந்த மலையையே சிவலிங்கமாக கருதி சித்தர்கள் முனிவர்கள் ஞானிகள் எல்லோரும் வழிபட்டுள்ளனர்.உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளதாம்.கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும் திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும் துவாரயுகத்தில் பொன்மலையாகவும் இப்போது கலியுகத்தில் கல்மலையாகவும் உள்ளது.

இம்மலைக்கு காந்த சக்தி இருப்பதாக (காந்த மலை)புவியியல் வல்லுனர்களும் ஆராய்ந்து கூறியுள்ளனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக்கூடாது.

கிரிவலப்பாதையில் எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு லிங்கம் இருக்கும். 1.இந்திர லிங்கம் 2.அக்னி லிங்கம் 3. எமலிங்கம் 4. நிருதி லிங்கம் 5. வருண லிங்கம் 6. வாயுலிங்கம் 7.குபேர லிங்கம் 8. ஈசான லிங்கம் ஆகியவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடதுபக்கமாகவே செல்லவேண்டும்.நம்மோடு சித்தர்களும் நடந்து வருவார்களாம்.அவர்கள் தான் நம் மனதில் நினைப்பதை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்களாம்.பேசிக்கொண்டு செல்லக்கூடாது. இறைவனை நினைத்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் நினைத்தபடியே நடக்க வேண்டும்.சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மலையைப்பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். வணங்கி விட்டு வேறு திசை பார்க்காது வானத்து நிலவை ஒருதரம் பார்த்தல் அவசியம். இம்மலையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செய்கின்றனர்.

தமிழகம் முழுவதும்., வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கூட வந்து இந்த கிரிவலம் செய்கின்றனர்.

கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த கோயில் இது. இக்கோயிலில் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த கோயில். கோயிலின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன.

பிரார்த்தனை:இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.கேட்கும் வரங்களை எல்லாம் தரும் மூர்த்தியாக அருணாச்சலேசுவரர் உள்ளார். கல்யாண வரம் வேண்டுவோர் , குழந்தை வரம் வேண்டுவோர், வியாபாரத்தில் விருத்தியடைய விரும்புவோர், உத்தியோக உயர்வு வேண்டுவோர்., வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

உடல் ரீதியாக பலம் குன்றியவர்கள், பிணி கண்டவர்கள், பிரிந்து வாழும் தம்பதிகள், அண்ணன் தம்பிகள் பிரச்னைகள் என்று அனைத்து தரத்து பிரச்சனைகளையும் போக்கும் தலம். மேலும் இந்த ஈசனை வணங்குவோர்க்கு வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கும். குறிப்பாக மன அமைதி வேண்டுவோர் இத்தலத்தல் லட்சக்கணக்கில் பிரார்த்தனை செய்கின்றனர்.இத்தலத்தில் ஈசனை வழிபட்டால் முக்தி கிடைக்கும்.

நேர்த்திக்கடன்:அண்ணாமலையாரிடம் வேண்டிக்கொள்வோர் தங்கள் நேர்த்திகடனாக மொட்டை போட்டு முடிக் காணிக்கை செலுத்துகின்றனர். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி போடுகின்றனர். இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. தானியங்கள், (துலாபாரம்)எடைக்கு எடை நாணயம்,பழங்கள், காய்கனிகள், வெல்லம் ஆகியவையும் பக்தர்களால் நேர்த்திகடனாக தருகின்றனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்துகின்றனர். சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர்,பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ,ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள். உலர்ந்த தூய வஸ்திரம் சாத்துகிறார்கள்.நெய்தீபம் ஏற்றலாம். சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள். சுவாமி அம்பாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைப்பதையும் நேர்த்திகடனாக நிறைய பக்தர்கள் செய்கிறார்கள். பிரசாதம் செய்து சுவாமிக்கு படைத்துவிட்டு பக்தர்களுக்கு தருகிறார்கள் தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து தங்கள் நேர்த்திகடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:ஒருநாள் மட்டும் தரிசனம்: சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ""ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்'' தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார்.

அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை.

பெருமாளும் ஜோதி வடிவில்!: பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமி அவ்வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம். ஆனால், சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். சிவன் சன்னதிக்கு பின்புறம் பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி இருக்கிறது. இவர் அருகில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் இருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில், இவரது சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன்பின்பு, அத்தீபத்தை பெருமாளாகக் கருதி, பிரகாரத்திலுள்ள "வைகுண்ட வாசல்' வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.

செந்தூர விநாயகர்: ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது தெரிந்த விஷயம். ஆனால், இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும்.
இவரைத் தவிர யானை திறைகொண்ட விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார்.

நந்திக்கு பெருமை: மாட்டுப்பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார்.

முதல் வணக்கம் முருகனுக்கே!: கோயில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும். முழுமுதற்கடவுள் என்பதால் இவரை வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்வர். ஆனால், இங்கு முருகன் சன்னதி இருக்கிறது. பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள். சம்பந்தாண்டான் என்னும் புலவன், அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி, அவரது பக்தியை இகழ்ந்தான். அருணகிரியார் முருகனை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால் இவர், "கம்பத்திளையனார்' (கம்பம் தூண், இளையனார் முருகன்) என்று பெயர் பெற்றார். இச்சன்னதிக்கு பின்புறம் மண்டபம் இருக்கிறது. இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார் என்ற பெயரிலும் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாதர் வணங்கியபடி இருக்கிறார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்ற போது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர். இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.

ஆணவம் அடக்கும் பைரவர்: இக்கோயிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் எந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

நான்கு முகத்துடன் லிங்கம்: பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக்கொண்டிருப்பார். இதை உணர்த்தும்விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

பாதாள லிங்கம்: மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டான போது இக்கோயிலில் உள்ள பாதாளத்துக்குள் சென்றார். அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார். பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார். இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், "பாதாள லிங்கம்' இருக்கிறது. கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோயிலில் அருளுகிறார். இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது. மரண பயம் நீங்க இவர் களிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

அருணகிரி யோகீசர்: அருணகிரியார் மீது பகை கொண்ட சம்பந்தாண்டான் என்ற புலவன், அவரை தேவலோகத்திலுள்ள பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி மன்னன் மூலம் பணித்தான். அதன்படி தனது பூதவுடலை இக்கோயில் கோபுரத்தில் கிடத்திய அருணகிரியார், கிளியின் வடிவில் தேவலோகம் சென்றார். இவ்வேளையில் சம்பந்தாண்டான், அவரது உடலை எரித்து விட்டான். எனவே, வருத்தமடைந்த அருணகிரியாரை, அம்பிகை தனது கரத்தில் ஏந்தி அருள் செய்தாள். கிளியாக வந்த அருணகிரியார், இங்குள்ள கோபுரத்தில் காட்சி தருகிறார். "கிளி கோபுரம்' என்றே இதற்கு பெயர். அண்ணாமலையார் சன்னதிக்கு பின்புறமுள்ள பிரகாரத்தில், அருணகிரிநாதர், இரு கால்களையும் மடக்கி யோக நிலையில் காட்சி தருகிறார். இவரை "அருணகிரி யோகேசர்' என்கிறார்கள்.

விநாயகரின் முதல்படைவீடு: முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும்.

இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன. அருணைநாயகி திருவண்ணாமலையில் வாசம் செய்ய வந்த கதை இது. திருப்புகழ் தந்த அருணகிரிநாதர்மேல் சம்பந்தாண்டான் என்னும் மந்திரவாதி வஞ்சம் கொண்டிருந்தான். ஆறுமுகனின் அருளுக்குப் பாத்திரமான அருணகிரிநாதர், முருக தரிசனம் பெற்று வீடுபேறு அடையக்கூடாதென்பதில் குறியாய் இருந்தான் அவன்.

அவன் வழிபட்டுவந்த காளிதேவிதான் அருணை நாயகி. தன் பக்தனின் வேண்டுதலையேற்று, முருகனைத் தன் மடியிலிருத்தி எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டாள் அன்னை. இதைத் தன் ஞானக்கண்ணால் அறிந்த அருணகிரிநாதர், அன்னையை வசப்படுத்த பாடல்களைப் பாடினார். பாடல்களில் அம்பிகை மெய்ம்மறந்திருக்கையில், மடியிறங்கி வந்த முருகன் அருணகிரிநாதருக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இதனால் கோபமடைந்த சம்பந்தாண்டான் அன்னையை நிந்தித்தான். அதுமுதற்கொண்டு சம்பந்தாண்டனின் வழிபாடுகளை ஏற்காமல் திருவண்ணாமலையிலேயே எழுந்தருளி விட்டாள் அருணைநாயகி.

திருவண்ணாமலை கொசமடத் தெருவில் அன்னையின் கோயில் அமைந்துள்ளது. சிறிய கோயில் என்றாலும், எழிலுருவுடன் கருவறையில் காட்சி தருகிறாள் அன்னை நாயகி!

மகாதீபம்:மாலை 6.00 மணிக்கு பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக அண்ணாமலைக்கு அரோஹரா எனக்கூறி தரிசனம் கண்டபின் இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள். ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3000 கிலோ பசுநெய், 1000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் கோயிலில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கவுரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். திருப்புகழ் மண்டபம் கோயிலில் அமைந்துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இக்கோயில் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும். லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!

தல வரலாறு:விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரிவன் என்ற போட்டி ஏற்பட்டது. சிவபெருமானிடம் இருவரும் சென்று கூற அவரோ யார் எனது அடி முடியை க் கண்டு வருகிறீர்களோ அவர்தான் பெரியவர் என்று தெரிவித்து விட்டார்.ஜோதிப் பிளம்பாக சிவபெருமான் காட்சி தந்தார். அந்த ஜோதியே நெருப்பு மலையாக மாறியது. இதுவே கோயிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும்.

சிவனின் அடியை காண்பதற்காக, விஷ்ணு வராக(பன்றி)அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அது போய்க் கொண்டே இருந்தது. திரும்பி வந்து முடியவில்லை என்று சிவபெருமானிடம் ஒப்புக்கொண்டார். அடுத்ததாக பிரம்மா, அன்னப்பறவை உருவெடுத்து சிவபெருமானின் முடியை கண்டு வர கிளம்பிப்போனவர், அது முடியாது எனத் தெரிந்தவுடன் திரும்ப வந்து தாழம்பூவை சாட்சி சொல்ல வைத்து சிவபெருமானிடம் தான் தங்களது முடியைக் கண்டேன் என்றார்.பிரம்மன் பொய் சொன்னது அறிந்து உனக்கு பூமியில் கோயிலோ பூஜையோ கிடையாது என சாபமிட்டார்.விஷ்ணு உண்மையை கூறியதால் தனக்கு சமமாக பூமியில் கோயிலும் பூஜையும் கிடைக்க வரம் அளித்தார்.பொய் சொன்ன தாழம்பூவை தன்னை தீண்டக்கூடாது என்று சபித்தார். அதனால்தான் இன்றும் சிவதலங்கள் எதிலுமே தாழம்பூவை மட்டும் படைக்கவே மாட்டார்கள். அத்துடன் மற்றொரு வரலாறும் இத்தலத்திற்கு உண்டு.

பிருங்கி முனிவர் தியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணைய தவமிருந்தாள்.

அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராக காட்சிகொடுத்தார். பிருங்கி உண்மையை உணர்ந்தார். இந்நிகழ்வு ஒரு சிவராத்திரி நாளில் நிகழ்ந்தது. இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் இது.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கமே மலையாக அமைந்த மலை தென்னிந்தியாவலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம். இந்த மலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும்.இது ஏகத்தை குறிக்கும்.மலை சுற்றும் வழியில் இரண்டாக தெரியும்.இது அர்த்தநாரீசுவரரை குறிக்கும்.மலையின் பின்னால் மேற்கு திசையில் பார்த்தால் மூன்றாக தெரியும்.இது மும்மூர்த்திகளை நினைவு படுத்தும். மலை சுற்றி முடிக்கும்போது ஐந்து முகங்கள் காணப்படும். அது சிவபெருமானின் திருமுகங்களை குறிக்கும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும்.

விஞ்ஞானம் அடிப்படையில்: நாட்களில் நிலவின் ஒளி மலை மீதும், மலையிலுள்ள மூலி‌கை செடிகள் மீதும் பட்டு பிரதிபலிக்கிறது. அந்த நாட்களில் மலையை சுற்றி வந்தால் மலையிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நம்மீது பட்டு உடலும் உள்ளமும் தூய்மையடைகிறது. மலையைச் சுற்றும் போது கைகளை வீசிக் கொண்டு நடக்காமல் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும்.
 
வைகுண்ட ஏகாதசியில் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்?

ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று பரமேஸ்வரனே சொல்லியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒரு பொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும்.
 
கிருஷ்ண பாதம்

உலகினை அளந்திட்ட பாதம்!
உயிர்களுள் இழைந்திட்ட பாதம்!
அலர்மேலு அணைத்திட்ட பாதம்!
அணைத்துயிர் பிணைத்திட்ட பாதம்!
புலர்காலை துயில் எழுப்ப
புவியுயிர் மலரிட்ட பாதம்!
மலர் மங்கை ஆண்டா ளுமே
மகிழ்வுடன் மனம் தொட்ட பாதம்!

கற்பகத் தருமலர் பாதம்!
கண்ணனின் சிறுமலர் பாதம்!
வற்றிடா அருள்மலர் பாதம்!
வண்ணனின் வளர்நிறை பாதம்!
பற்றிடும் பதமலர் பாதம்!
பார்த்தனுக் கருளிய பாதம்!
சுற்றிடும் காந்தனின் பாதம்!
சுகம் தரும் சாந்தனின் பாதம்!

தரையினிற் நடந்திட்ட பாதம்!
தமையுடன் கடந்திட்ட பாதம்!
மறையொலி உரைத்திட்டோன் பாதம்!
மனமொழி நிறைத்திட்டோன் பாதம்!
மறைமுனி அழைத்திட்ட பாதம்!
மகிழ்குரு மலைத்திட்ட பாதம்!
உரை சொல்லும் உன்னத பாதம்!
உயர்ந்திட்ட மன்னவ பாதம்!

ஆழிரேகை உயர்த்திட்ட பாதம்!
அகலிகையை உயிர்த்திட்ட பாதம்!
ஆலிலையும் அணைத்திட்ட பாதம்!
ஆயர்குலம் பிணைத்திட்ட பாதம்!
காளிங்க நர்த்தன பாதம்!
காத்தருளும் வித்தக பாதம்!
மாலெனும் உயர்ந்தவன் பாதம்!
மாதுடை கவர்ந்தவன் பாதம்!

கண்ணனாய் ஓடிய பாதம்!
கால்விரல் தேடிய பாதம்!
வண்ணமாய் மாறிய பாதம்!
வனக்குகன் நாடிய பாதம்!
மண்ணினுள் ஆடிய பாதம்!
மணிப் பொன்னும் சூடிய பாதம்!
வெண்ணுறி விரும்பியோன் பாதம்!
வெள்ளத்தை அருந்தியோன் பாதம்!

உலகினைப் படைத்தவன் பாதம்!
உயிர்களைக் காப்பவன் பாதம்!
அழகினிற் கவர்ந்தவன் பாதம்!
அனைத்திற்கும் பகிர்ந்தவன் பாதம்!
துலங்கிடம் துணைவனின் பாதம்!
துணைவரும் இறைவனின் பாதம்!
வழங்கிடும் வள்ளலின் பாதம்!
வாமன வல்லவன் பாதம்!

ஆயருடன் ஆடிய பாதம்!
ஆழ்கடல் தேடிய பாதம்!
மாயனாம் மன்னவன் பாதம்!
மயக்கிடும் என்னவன் பாதம்!
தாயென நிற்பவன் பாதம்!
தரணியின் கற்பக பாதம்!
தூயனாய் ஆள்பவன் பாதம்!
துளசியுள் வாழ்பவன் பாதம்!

அறவழி காட்டிடும் பாதம்!
அருள்நெறி ஊட்டிடும் பாதம்!
உறவென உணர்த்திடும் பாதம்!
உதவிடும் உத்தமன் பாதம்!
சுரங்களின் நாயகன் பாதம்!
சுகம் தரும் தென்றலின் பாதம்!
வரங்களை வழங்குவோன் பாதம்!
வசந்தமாய் துலங்குவோன் பாதம்!

பரமபத பனிமலர் பாதம்!
பக்தர்கள் அணிமலர் பாதம்!
கரம் தரும் கண்ணனின் பாதம்!
கலியுக மன்னனின் பாதம்!
அரசனாய் ஆள்பவன் பாதம்!
அகத்தினுள் வாழ்பவன் பாதம்!
பரம்பொருள் வேந்தனின் பாதம்!
பரவசம் ஈந்தவன் பாதம்!

பொற்கழல் அணிந்தவன் பாதம்!
பொல்கஜன் அழித்தவன் பாதம்!
வற்றிடா செல்வனின் பாதம்!
வழியுரை சொல்பவன் பாதம்!
முற்றிலா முகுந்தனின் பாதம்!
முழுமதி வதனனின் பாதம்!
ஒற்றுமை விமலனின் பாதம்!
ஒளிர்ந்திடும் நிமலனின் பாதம்!

கீதையைப் பகிர்ந்தவன் பாதம்!
கிளிமலர் குழலவன் பாதம்!
பாதையை உரைத்தவன் பாதம்!
பார்த்திப சாரதி பாதம்!
மாதுடை கொடுத்தவன் பாதம்!
மடிதுயர் தடுத்தவன் பாதம்!
பாதுகை வழங்கிய பாதம்!
பரதனும் வணங்கிய பாதம்!

கூடல் அழகரின் சுந்தர பாதம்!
மதுர வல்லியின் மனமகிழ் பாதம்!
ஆடல் மயில் சோலை அழகரின் பாதம்!
அமுத கள்ளழக காந்தனின் பாதம்!
ஈடிலா சீனிவாச வேங்கடன் பாதம்!
வெங்கடாஜலபதியின் பிரஸன்ன பாதம்!
காடு கஜனருள் காளமேக பாதம்!
மோகன வல்லியின் மோகூரான் பாதம்!

கருடவாகன ஸ்ரீ வத்ஸ பாதம்!
கமலக் கண்ணனின் ஸ்ரீஹரி பாதம்!
தருவென வரம் தரும் ஸ்ரீராமர் பாதம்!
தாமோதரனாம் ஸ்ரீதரன் பாதம்!
புரு÷ஷாத்தமனின் புண்ணிய பாதம்!
பீதாம்பரனின் வைகுந்த பாதம்!
பெரு வினை தீர்க்கும் கிருஷ்ணரின் பாதம்!
விதிதனை மாற்றும் விஸ்வரூப பாதம்!

குவலயம் முறித்திட்ட சதுர்புஜ பாதம்!
குவியலாய் வரமிடும் குருவாயூர் பாதம்!
தவமென கிடைத்திட்ட தயாபரன் பாதம்!
தானென துணைவரும் தசாவதாரன் பாதம்!
நவமணி யொளிதரும் நர்த்தன பாதம்!
நம்பினோர்க் கருளிடும் நாரண பாதம்!
உவகையின் மொழியுடை உச்சித பாதம்!
உண்மையின் தத்துவ அச்சுத பாதம்!

பிரளய வெள்ளத்தில் ஆடிய பாதம்!
பிரகலாதன் வாய் சூடிய பாதம்!
இரணியனை வதம் செய்த வீரத்தின் பாதம்!
இலையினிற் இழைந்திட்ட கோகுல பாதம்!
மரணபயம் மாய்த்திடும் மாதவன் பாதம்!
மது சூதனனின் மலரிதழ் பாதம்!
பரமதயாளனின் பத்ம நற் பாதம்!
பாண்டவ தூதனின் பூரண பாதம்!

சங்கு சக்கரனின் சகஸ்ரம பாதம்!
சத்ய நாராயணனின் திவ்ய பொற்பாதம்!
ரங்க நாதனின் சயன பொற்பாதம்!
ராதா கேசவ ராகவ பாதம்!
தங்க நான்மறை மீட்டவன் பாதம்!
மந்தார மத்தினை நிறுத்தியோன் பாதம்!
எங்கும் நிறைந்திட்ட பலராமர் பாதம்!
எண்ணிய தளத்திடும் பரசுராம பாதம்!

அழகிய மணவாளனின் ஆராவதன் பாதம்!
அப்பக் குடத்தானின் அப்பலரெங்க பாதம்!
அழகிய சிங்கரின் குந்த நாயக பாதம்!
ஆதி கேசவ சியாமளமேனியர் பாதம்!
உலகளந்த பெருமானின் திரிவிக்கிரம பாதம்!
உய்யவந்தானின் அபயப்பிரத பாதம்!
நிலாத்திங்கள் துண்டத்தான் அருமாகடற் பாதம்!
காய்சின வேந்தனின் சுந்தரர் ராஜ பாதம்!

மீனாள் உமையாள் அண்ணன் பெருமாள் பாதம்!
சித்திரரத வல்லப பவளகனிவாய் பாதம்!
தேனாய் வரமிடும் ஹரசாப விமோசனர் பாதம்!
மிதிலை வில்முறித்த சீதா மணவாளர் பாதம்!
மானான மாரீசனை வதைத்திட்ட பாதம்!
மாயச் சகடத்தினை உதைத்திட்ட பாதம்!
தேன் துயிலரங்க ரெங்கநாதர் பாதம்!
ஆண்டளக்கும் ஐயன் மணிக்குன்றன் பாதம்!

விஜயராகவ பிரகதவரத பாதம்!
வீரராகவ மரகத மதுர பாதம்!
கஜேந்திர வரத ரமாமணி நயன பாதம்!
சுகந்தவன நாத வீர சயன பாதம்!
வசந்த வல்வில் வாசுதேவ பாதம்!
வையங் காத்திட்ட புஷ்ப பூரண பாதம்!
திசை யெலாம் நிறைந்திட்ட திருநறையாண் பாதம்!
தீபப் பிரகாச யோக நரசிம்மர் பாதம்!

பக்தவச்சலனின் பரமபத பாதம்!
பத்தராவிப் பெருமாள் திவ்யப் பிரகாச பாதம்!
சக்ரதர சந்திர சூடப்பெருமாள் பாதம்!
சௌந்தர்ய ராஜனின் ஜகதீஸ்வர பாதம்!
அக்கரை வண்ண ஆதிவராஹன் பாதம்!
அம்ருத நாராயண கோலப்பிரான் பாதம்!
அகோபில நரசின் அரவிந்த லோசன பாதம்!
அனந்த பத்மநாப ஆதிகேசவ பாதம்!

திருவாழ் மார்பன் ஒப்பிலியப்ப பாதம்!
தேவாதிராஜன் செங்கண்மால் பாதம்!
திருமூழிக் களத்தான் நின்ற நம்பி பாதம்!
காட்கரையப்பன் கமலநாத பாதம்!
திருக்குறளப்பன் தேவப்பிரான் பாதம்!
யதோத்காரி கருணாகர கண்ணபிரான் பாதம்!
உரக மெல்லணையான் சௌமிய நாராயண பாதம்!
இமய வரப்பனாம் மாயப்பிரான் பாதம்!

மகர நெடுங்குழை ராஜகோபால் பாதம்!
வடிவழகி நம்பி ஜகத்ரட்சக பாதம்!
சகல நலந்தரும் சத்யகிரியான் பாதம்!
பத்ரி நாராயண பாலாஜியின் பாதம்!
பகலவ ஒளிதரும் பாம்பணையப்ப பாதம்!
விஜயாசனன சாரங்கபாணி பாதம்!
சுகநலம் அருளிடும் சாரநாதன் பாதம்!
குடமாடு கூத்தனருள் ஆமருவியப்பன் பாதம்!

பவளவண்ணனின் பரிமளரங்க பாதம்!
தோத்தாத்ரி நாதன் கல்யாண நாராயண பாதம்!
தவமென வரம் தரும் வேங்கட கிருஷ்ண பாதம்!
தர்மத்தின் வழி நின்ற தாடாளன் பாதம்!
நவமணி ஒளிதரும் லட்சுமி வராஹ பாதம்!
சயனப் பெருமாள் சாந்த நரசிம்ம பாதம்!
கவலைகள் களைந்திடும் தெய்வநாயகன் பாதம்!
வெண்சுடர்ப் பெருமாள் பேரருளாளன் பாதம்!

சத்திய மூர்த்தியின் ஜகந் நாத பாதம்!
நீலமுகில் வண்ணன் ஆதிப்பிரான் பாதம்!
நித்திரை அழகுடை பாண்டுரெங்க பாதம்!
நீர் வண்ண நாயக கள்வரின் பாதம்!
வைத்த மாநிதி வடபத்ர சாயீ பாதம்!
கோலவில்லிராமன் புண்டரீகாட்சன் பாதம்!
வித்தக பெரிய பெருமாள் சௌரிராஜ பாதம்!
சொன்ன வண்ணம் செய்த நம்பெருமாள் பாதம்!

தாமரைக் கண்ணுடையன் தேவிப் பெருமாள் பாதம்!
தானென துணைவரும் நந்தாவிளக்கு பாதம்!
தாமரையாள் கேள்வன் வேதராஜ பாதம்!
வயலாளி மணவாள கோபாலகிருஷ்ண பாதம்!
ராமஜெனகை நாராயண சலசயனர் பாதம்!
நம்பிக்கை ஒளியூட்டும் நான்மதியர் பாதம்!
வாமனனாய் உருவெடுத்த உலகளந்தோன் பாதம்!
வளங்கள் பெற வரங்கள் தரும் ஸ்ரீ வாரி பாதம்!

கருடாழ்வார் அன்பாய் சுமந்திட்ட பாதம்!
ஹனுமந்தன் நெஞ்சுள் நிறைந்திட்ட பாதம்!
நறுவாழ்வு நலமளிக்கும் நாவாய்குந்தன் பாதம்!
பெண்மையினால் அமுதுகாத்த மோகினியின் பாதம்!
தரணியெலாம் போற்றுகின்ற தாமரைக் கண்ணன் பாதம்!
தசரதனின் செல்வனான ராமசுப பாதம்!
நரசிங்க வல்லியார்க்கு நெகிழ்வு தந்து பாதம்!
நம்பிக்கை நலன் கொடுக்கும் லட்சுமிபதி பாதம்!

வசுதேவர் தேவகிக்கு தரிசனம் தந்த பாதம்!
யசோதா நந்தரிடம் கிருஷ்ணராய் வந்த பாதம்!
சிசுவதை கம்சனவன் ஆணவம் ஒழித்த பாதம்!
பூதகியை தாடகையை புவியினிலே அழித்த பாதம்!
பசுங்கன்று வற்காசுரனை விளாமரத்தில் வதைத்த பாதம்!
அகாசுரன் பகாசுரனின் ஆற்றலெலாம் சிதைத்த பாதம்!
விசுவாச நந்தரையும் இந்திரனிடம் மீட்டோன் பாதம்!
கோவர்த்தனம் பிடித்து கல்மழையில் காத்தோன் பாதம்!

கதிரோனை சக்கரத்தால் மறைத்திட்டோன் பாதம்!
பாண்டவர்க்கு ஆ(ட்)சி தந்து நிறைத்திட்டோன் பாதம்!
துதியாத துரியோதனை சாய்த்திட்டோன் பாதம்!
மதியாத துச்சாதனனை மாய்த்திட்டோன் பாதம்!
பதிவிரதை திரௌபதிக்கு துகில் கொடுத்தோன் பாதம்!
கர்ணனுக்கும் அருள் வழங்கி தாரை ஏற்றோன் பாதம்!
விதுரநீதி தழைத்திடவே விருந்துண்டோன் பாதம்!
விளையாட்டாய் அத்தனையும் ஆட்டுவிப்போன் பாதம்!

விராதனை புவியுள் அமிழ்த்திட்ட பாதம்!
ஜடாயு சபரியன்புள் அமிழ்ந்திட்ட பாதம்!
மராமர மரத்தினையே சிதைத்திட்ட பாதம்!
வாலியை போரினிலே வதைத்திட்ட பாதம்!
இராவண கர்வத்தினை வீழ்த்திட்டோன் பாதம்!
விபீடணர், சுக்ரீவரை வாழ்த்திட்டோன் பாதம்!
பராபரம் தானெனவே உணர்த்திட்ட பாதம்!
பரம்பொருள் கல்கியாக உயர்ந்திட்ட பாதம்!

நாவடி யமர்ந்தோன் நாயக பாதம்!
நலவளம் பகிர்வோன் நற்றுணை பாதம்!
மூவடி யளந்தோன் சேவடி பாதம்!
பாற்கடல் செல்வ விஷ்ணுவின் பாதம்!
கோவடி இசைந்தோன் கோவிந்த பாதம்!
கோசலை மைந்தனின் கோதண்ட பாதம்!
பாவழி நுழைந்தோன் பரந்தாம பாதம்!
திவ்யப் பிரபந்தத் தீபஒளி பாதம்!

முதலாழ்வார் மூவர் பற்றிட்ட பாதம்!
மழிசையர் மங்கையர் சுற்றிட்ட பாதம்!
பதமலர் ஆண்டாள் தொட்டிட்ட பாதம்!
பெரியாழ்வார் நம்மாழ்வார் கற்றிட்ட பாதம்!
மதுரகவி பாணாழ்வார் மகிழ்ந்திட்ட பாதம்!
குலசேகரர் பொடியாழ்வார் நெகிழ்ந்திட்ட பாதம்!
மதிமா முனியிருவர் மயங்கிட்ட பாதம்!
மகிழ்கூரர் ராமானுஜர் வியந்திட்ட பாதம்!

மூவடி யளந்தோனின் பாதத்தைப் பற்றிடுவோம்!
பரமபத வைகுந்த பேரின்பம் பெற்றிடுவோம்!
சேவடி யழகினையே செவிகுளிர உரைத்திடுவோம்!
செவ்விதழழகனையே செந்தமிழில் நனைத்திடுவோம்!
காவலாய் இருக்கும் வேந்தன் காலடியில் கற்றிடுவோம்!
கருணையினால் கவரும் கண்ணன் திருவடியை சுற்றிடுவோம்!
பூவடி நற்பாதத்தை நாவினிக்க நாமுரைக்க
புண்ணியம் கோடிதரும் பூரணன் ஹரியின் பதமே!



ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம்

வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூர மர்தனம்
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

அதஸு புஷ்பஸங்காசம் ஹாரநூபுர சோபிதம்
ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

குடிலாலக ஸம்யுக்தம் பூர்ணசந்த்ர நிபாநநம்
விலஸத் குண்டலதரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்புஜம்
பர்ஹி பிஞ்சாவசூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீல ஜீ மூத ஸந்நிபம்
யாதவானாம் சிரோரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ருக்மிணீ கேலிசம்யுக்தம் பீதாம்பர ஸூசோபிதம்
அவாப்த துளஸீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

கோபிகாநாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வக்ஷஸம்!
ஸ்ரீநிகேதம் மஹேஸ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வந்மாலா விராஜிதம்
சங்க சக்ர தரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

க்ருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத்
கோடி ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி
இதை படிச்சாலே மோட்சம் தான்!

ஏகாதசி விரதமிருந்தால் மோட்சம் கிடைக்கும். வைகுண்ட ஏகாதசியன்று, மரணம் அடைபவர்கள் எவ்வளவு பாவம் செய்தவராக இருந்தாலும், வைகுண்டத்துக்கு சென்று விடுவார்களாமே... எனக்கு அந்த விரதம் பற்றி எதுவுமே தெரியாதே! சாப்பிடக்கூடாது, தூங்கக்கூடாது என்கின்றனர். இப்படி, கடுமையாக உடலை வருத்திக் கொண்டால் மட்டும் மோட்சம் கிடைத்து விடுமா என்ன... என்று, பலர் புலம்புவதை கேட்டிருக்கிறோம். ஆனால், இதெல்லாம் இல்லாமலே, பரந்தாமனை அடைந்து விட்டது ஒரு தயிர்ப்பானை. கிருஷ்ணன், ஒரு வீட்டில் வெண்ணெய் திருடிக் கொண்டிருந்தான். அவ்வீட்டுப் பெண், கிருஷ்ணனை விரட்டி வந்தாள். அவன் அருகில் இருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த தன் நண்பன், ததிபாண்டனிடம், கெஞ்சிக்கூத்தாடி, ஒரு பானைக்குள் ஒளிந்து கொண்டான். நண்பனும் கிருஷ்ணனை மறைத்துக் கொள்ளும் விதமாக, பானை மீது ஏறி அமர்ந்து கொண்டான். அந்தப்பெண், அங்கு வந்து, கிருஷ்ணனைத் தேடிய போது, இங்கு வரவில்லையே... என்று சொல்லி விட்டான் நண்பன். அவள் போனதும், நண்பா... பானையை விட்டு இறங்கு. நான் வெளியே வர வேண்டும்... என்றான் கிருஷ்ணன்.

முடியாது. எனக்கு மோட்சம் அளிப்பதாக வாக்கு கொடு. அப்போது தான் இறங்குவேன்... என்று நிர்ப்பந்தித்தான் ததிபாண்டன். வேறு வழியில்லாமல், கிருஷ்ணனும், உனக்கு மட்டுமல்ல. இந்த பானைக்கும் சேர்த்தே மோட்சம் தருகிறேன். முதலில் பானையை விட்டு இறங்கு... என்று வாக்குறுதி அளித்தான். ஆபத்து காலத்தில், உதவி செய்த காரணத்தால், இப்படி, ஒரு ஜடப்பொருள் கூட மோட்சத்தை அடைந்திருக்கிறது. இந்தக் கதையை தெரிந்து வைத்திருந்தார், ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகராக இருந்த பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.
அவர், ஒருமுறை, ரங்கநாதரிடம், ரங்கா... எனக்கு மோட்சம் தா... என்றார். திடீரென ஏன் இப்படி கேட்கிறீர்? என்று ஆச்சரியத்துடன் கேட்டார் ரங்கன். அதென்னவோ தெரியவில்லை. எனக்கு இன்றே மோட்சம் வேண்டும்.... மோட்சம் போவதென்றால் சாதாரண விஷயமா... இந்த உலகம் பொய்யானது என்ற ஞானம் உமக்கு வந்து விட்டதா... ஞானயோகம், கர்மயோகம், பக்தியோகம் பற்றியெல்லாம் தெரியுமா? என்று கேட்டார்.

தெரியாது... போகட்டும். யாருக்காவது அன்னதானம் செய்திருக்கிறீரா அல்லது என் பக்தன் தங்க இடவசதியாவது செய்து கொடுத்தீரா?
இல்லை... ரங்கநாதனுக்கு கோபம் வந்து, பாம்பு படுக்கையை விட்டு, எழுந்து விட்டார். ரங்கநாதனை அமர்ந்த கோலத்தில், அநேகமாக பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் மட்டும் தான் தரிசித்திருப்பார். ஏனய்யா பிள்ளை பெருமாள் ஒன்றுமே செய்யாமல், மோட்சம் கேட்கிறீரே... அதெப்படி தர முடியும்? என்று கேட்டார் ரங்கன். ஐயங்காரும் சளைக்காமல், ஏ பெருமாளே... என்னை இத்தனை கேள்விகள் கேட்கிறாயே... ஒரு பானைக்கு, எதை வைத்து மோட்சம் கொடுத்தாய்... அதற்கென்ன பக்தியோகம், கர்மயோகம் எல்லாம் தெரியுமா... ஒரு ஜடப் பொருளுக்கே மோட்சம் தந்த நீ, எனக்கு தர மறுப்பதேன்? என்றார் விடாக்கண்டனாய். ரங்கநாதனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. திரும்பவும் படுத்து விட்டார். இந்தச் சம்பவம் மூலம் நாம் அறிவது, ஆன்மிக விஷயங்களை, தெய்வங்களின் வரலாறை நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம், இவன், உலகியல் வாழ்வில் என்ன தான் நாட்டம் கொண்டவனாக இருந்தாலும், பக்தி சமாசாரங்களையும் காது கொடுத்து கேட்டிருக்கிறான். இவனை மோட்சத்துக்கு அனுப்பலாம் என்று, பரந்தாமன் முடிவு செய்வான். எனவே, ஆன்மிக நூல்களை நிறைய படியுங்கள். உடலை வருத்தி பட்டினி கிடப்பது என்பதெல்லாம், இரண்டாம் பட்சம் தான்!
சத்ய நாராயண விரதமுறையும் பலனும்!

அனுஷ்டிக்க விதிமுறைகள்: ஆந்திராவில் மிகவும் பிரபலமானது சத்ய நாராயண விரதம். சமீப காலமாக தமிழக பக்தர்களும் இதைகடைபிடிக்கின்றனர். மகாவிஷ்ணுவே சத்ய நாராயணர். இந்தவிரதத்தை ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கடைபிடிக்க வேண்டும். (பவுர்ணமியன்று பெண்களுக்கு வசதிப்படாவிட்டால், தமிழ் மாதப்பிறப்பு அல்லது வளர்பிறை ஏகாதசி திதியன்று விரதமிருக்கலாம்) இந்தவிரதம் எளிமையானது. இதைகணவனும், மனைவியும் சேர்ந்து அனுஷ்டிக்க வேண்டும். அன்று பகலில் சாப்பிடக் கூடாது. மாலை 4.30-6.00 மணிக்குள் உறவினர்கள், நண்பர்கள், அயல்வீட்டாரை வீட்டுக்கு வரவழைக்க வேண்டும். சத்ய நாராயணர் படத்தின் முன், நெய் விளக்கேற்ற வேண்டும். பழம், பால், வெல்லம், தேன், கோதுமை நெய் அப்பங்களை சத்திய நாராயணருக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். அந்நாளில், சத்யநாராயணர் விரதக்கதைகளை படிக்க வேண்டும். இந்தவிரதத்தைகடைபிடிக்க இத்தனை வாரம் தான் நியதி இல்லை. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், தொடர்ந்து அனுஷ்டித்தால், நம்மை ஜெயிக்க யாரும் இல்லை என்ற நிலை உருவாகும். பணவசதி பெருகும். புதுமணத்தம்பதிகள், வாழ்வின் துவக்கம் முதலே இதைதகடைபிடித்தால் தீர்க்காயுள் உள்ள புத்திசாலித்தனமான குழந்தைகள் பிறப்பார்கள். வசதி உள்ளவர்கள், கலசம் வைத்து புரோகிதர்களைதகொண்டு இந்தபூஜையை நடத்தலாம்.

ஆந்திராவில் சத்தியநாராயணர்: ஆந்திர மக்கள் சத்யநாராயண விரதத்தை தவறாமல் கடைபிடிக்கின்றனர். செல்வந்ததம்பதிகள், இந்தவிரதம் துவங்குவதற்கு முன்னதாக ஆறுமாதங்கள் வரை, ஏதாவது ஒரு புனிதத்தலத்தில் தங்கி வந்து இந்தவிரதத்தைதுவங்குகிறார்கள். விரதபூஜையை, பவுர்ணமியன்று பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30-6.00) நடத்துகிறார்கள். அன்று, மாலையில் அன்னதானம் செய்யும் நோக்கத்தில் பெருமளவு சமைக்கிறார்கள். சமைத்ததில் கால் பங்கை மட்டும் தங்களுக்கும், தங்கள் உறவினர்களுக்கும் எடுத்துதகொண்டு, மீதியை தானம் செய்து விடுகிறார்கள்.

பணம் வரப்போகுது சொல்பவர் நாரதர்: கலியுகத்தில், மனிதனுக்கு தேவை அதிகம். அவனது தேவைகளை நிறைவேற்ற பணம் வேண்டும். அது கிடைக்க எளிய வழி சத்ய நாராயண விரதம் என்கிறார் நாரதர்.சுதானந்தர் என்பவர் இந்த விரதத்தை முறையாகக் கடைபிடித்ததால், மறுபிறவியில் சுதாமா (குசேலர்) என்னும் பெயரில் பிறந்து, கிருஷ்ண தரிசனத்துடன் பெரும் செல்வத்தைப் பெற்றார். விறகு விற்றுக் கொண்டிருந்த பல்லன் என்ற தொழிலாளி, இந்த விரத மகிமையால், மறுபிறவியில் குகன் என்னும் பெயரில் பிறந்து ராமதரிசனம் பெற்று, அழியாச் செல்வமான முக்தியை அடைந்தான். உல்காமுகன் என்ற அரசரோ, இதை முறையாகச் செய்து, மறுபிறவியில் தசரதராகப் பிறந்து 60ஆயிரம் ஆண்டுகள் சகல செல்வத்துடன் வாழும் பாக்கியம் பெற்றதுடன், ராமனுக்கே தந்தையும் ஆனார். ஸ்காந்த புராணத்தில் (கந்த புராணம்) வரும் ஸ்லோகம் ஒன்றில், இந்த விரதத்தை அனுஷ்டித்தால், கஷ்டங்கள் குறையும். பணமும், தானியமும் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தரும் குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
முருகனுக்குரிய வேறு பெயர்களும் அதன் பொருளும்!

முருகன் -அழகன்.
பிள்ளையார் -சிவனுக்குப் பிள்ளை. தற்போது கணபதிக்குரிய இப்பெயர் முற்காலத்தில் முருகனுக்கும் இருந்தது என்கிறார் நச்சினார்க்கினியர்.
சித்தன் -அன்பர்களுக்கு ஸித்தியை வழங்குபவன்.
சேயோன் -செந்நிறம் உடையவன்.
வேள் -எல்லாரலும் விரும்பப்படுபவன், நீண்ட புகழ் உடையவன்.
வேலன் -வெற்றி தரும் வேலை உடையவன்.
அரன் மகன் -சிவனின் புத்திரன்.
அறுமீன் காதலன் -கார்த்திகை மாதர்களால் வளர்க்கப்பட்டவன்.
அறுமுகன் -ஆறு முகங்களை உடையவன்.
குரு -சிவனுக்கு பிரணவமாகிய ஓம் என்பதன் பொருள் உரைத்தவன்.
கோழிக்கொடியோன்-சேவலைக் கொடியாக உடையவன்.
கங்கை மைந்தன் -தீப்பொறிகளைச் சுமந்த கங்கையின் மகன்.
கடம்பன் -கடம்ப மலர் மாலை உடையவன், நித்ய சுத்தமானவன்.
கந்தன் -வலிமையான தோள்களை உடையவன், பார்வதியால் ஒன்று சேர்க்கப்பட்டவன்.
காங்கேயன் -கங்கை மைந்தன்
கார்த்திகேயன் -கார்த்திகைபெண்களால் வளர்க்கப்பட்டவன்.
குகன் -மலைக்குகைகளில் குடி கொண்டிருப்பவன், பக்தர்களின் மனக்குகையில் இருப்பவன்.
குமரன் -சிவனின் மைந்தன், அருவருப்பை அழிப்பவன், ஆணவத்தைப் போக்குபவன்.
குழகன் -அழகன், இளமையானவன்.
குறிஞ்சி வேந்தன் -மலைகளில் ஆட்சி புரிபவன், மலை போல் உயர்ந்த மனங்களில் இருப்பவன்.
குன்றெறிந்தோன் -கிரவுஞ்ச மலையைத் தகர்த்தவன்.
கவுரி நந்தனன் -உமாதேவியின் மைந்தன்.
சண்முகன் -ஆறு முகம் கொண்டவன்.
சரவணபவன் -நாணற்புல் நிறைந்த பொய்கையில் தோன்றியவன்.
சிலம்பன் -காலில் சிலம்பணிந்தவன், மலைகளில் இருப்பவன்.
சுரேசன் -துன்பம் நீக்குபவன்.
சூர்ப்பகைவன் -எதிரிகளுக்கு அச்சமூட்டுபவன்.
செட்டி - உப்பூரிகுடி கிழார் மகனாய் செட்டி மரபில் தோன்றியவன்.
சேந்தன் -சிவப்பு நிறமுடையவன்
சேவற்கொடியோன்-சேவலைக் கொடியில் தாங்கியவன்.
தெய்வானை காந்தன்-தெய்வானையின் கணவன்.
தேவசேனாபதி -சேனைக்குத் தலைவன்.
பாவகி, பாவகாத்மஜன் -பரிசுத்தம் உடையவன்.
மஞ்ஞையூர்தி -மயிலை வாகனமாகக் கொண்டவன்.
மாயோன் மருகன்-திருமாலின் மருமகன்.
வள்ளி மணாளன் -வள்ளியின் கணவன்.
பாகுலேயன் -கார்த்திகேயன்.
விசாகன் -வைகாசி விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன், மயலில் சஞ்சரிப்பவன்.
சங்கத்தலைவன் -கலைகளை உணர்ந்த புலவன்.
சாமி -செல்வன்.
முத்தையன் -முத்துப்போல் சிறந்தவன், மாபெரும் குரு.
சுப்பிரமணியன் -வேதங்களின் தலைவன், ஆனந்தமயமான சிவனிடமிருந்து பிறந்தவன்.
ராகு வேளையில் துர்க்கை, காளியை வழிபடுவது ஏன்?

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. அதன்படி ராகுவிற்கு துர்க்கை அதிதேவதை. ராகுதோஷம், திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்க காளி, துர்க்கை வழிபாட்டை ராகுகாலத்தில் மேற்கொள்வது நல்லது.
மூன்று வேளை வணங்க வேண்டிய தேவியர் !

காயத்ரி காலை வணக்கத்துக்குரியவள். இவள் ரிக் வேதத்தின் தலைவியாவாள். வீட்டில் வளர்க்கும் ஹோமத் தீக்கு இவளே அதிபதி. நான்கு முகங்கள், எட்டுக் கரங்களுடன் அன்ன வாகனத்தில் காட்சி தருபவள்.

நண்பகல் பிரார்த்தனைக்குரியவள் சாவித்ரி. யஜுர் வேதம் இவளுக்குரியது, இவள் நான்கு முகங்களையும் அதில் பன்னிரு விழிகளையும், நான்கு கரங்களையும் கொண்டவள். இவளது வாகனம் எருது.

அந்தி வேளை வணக்கத்துக்குரியவள் சரஸ்வதி. சாமவேதம் இவளுக்குரியது. ஆஹ்வனீய தீயின் ஒளி இவள். ஒற்றை முகமும் நான்கு கரங்களும் கொண்டு அருள்பாலிப்பவள். இவளது வாகனம் கருடன்.
கிருஷ்ணர் துதி!

கிருஷ்ணாய வாஸுதேவாய தேவகி நந்தநாய
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோநம:

பொருள் : தேவகிக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவனும், வாசுதேவனும், நந்தகோபனின் குமாரனும், கிருஷ்ணனுமாகிய கோவிந்தனை வணங்குகிறேன்.

நம: பங்கஜநாபாய நம: பஞ்சத மாலிநே
நம: பங்கஜ நேத்ராய நமஸ்தே பங்கஜாஸ்ரியே

பொருள் : நாபியில் தாமரையை உடையவரும், தாமரை மாலையைத் தரித்தவரும், தாமரை போன்ற கண்களை உடையவரும், அழகான பத்ம ரேகையைக் கால்களில் உடையவருமான தங்களைப் பலதடவை வணங்குகிறேன்.

மூகம் கரோதி வாசாலம் பங்கும் வங்கதே கிருஹம்
யத்கிருபா பரமம் அஹம் வந்தே பரமானந்த மாதவம்

பொருள் : பேசவே இயலாதவரையும் கூட பேச்சாற்றல் மிக்கவராக மாற்றக் கூடியவரும், குடிசையையே மாளிகையாக்கக் கூடியவருமான அந்தப் பரமானந்த மாதவனின் கருணையை வணங்குகிறேன்.

சங்க சக்ர கதாபாணே த்வாரகா நிலையார்ச்சுத:
கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதம்

பொருள் : சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றைத் தரித்தவரும், த்வாரகாபுரியின் அதிபரும், தாமரை போன்ற கண்களை உடையவரும், பசுக்களைப் பரிபாலிக்கிறவருமான பிரபுவே, தங்களைச் சரணடைந்த என்னைக் காப்பாற்றுங்கள்.

த்வம் ஆதி அந்தோ பூதானாம் த்வமேவ ச பராகதி:
விஸ்வாத்மன் விஸ்வ ஜநக: விஸ்வகர்த்த: பிரபோவ்ய:

பொருள் : உலகத்தை தேகமாகக் கொண்டவரே, உலகத்தைப் படைத்தவரே, உலகத்தை அழிப்பவரே, ஹே பிரபோ, அழிவற்றவரே, பிராணிகளின் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என (ஆக்கல், காத்தல், அழித்தல்) முத்தொழிலையும் செய்பவரே உம்மை வணங்குகிறேன்.

யத்ர யோகேஸ்வர: கிருஷ்ணோ
யத்ர பாத்ரோ தனுர்த்தர:
பத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர்
த்ருத்வா நீதிர் மதிர் நம:

பொருள் : எங்கு யோகேஸ்வரனான ஸ்ரீ கிருஷ்ண பகவான் இருக்கிறாரோ, எங்கு வில்லேந்திய வீரன் அர்ஜுனன் இருக்கிறானோ அங்கெல்லாம் மகாலட்சுமியின் கடாட்சத்தோடு மிகுந்த ஜெயமும், அழியாத ஐஸ்வர்யமும், நீதியும் நிச்சயம் இருக்கும்.

தேவகி ஸூத கோவிந்த வாஸுதேவ ஜெகத்பதே
தேஹிமே தநயம் கிருஷ்ணா த்வாம் அஹம் சரணம் கத:

பொருள் : தேவகியின் மகனான கோவிந்தனே வாசுதேவனே, உலகத்தின் தலைவனே எனக்கு ஒரு மகனைத் தந்து அருள்வீர்.

பகவான் கூறியது

நாகம் வஸாமி வைகுண்டே நயோகி ஹ்ருதயே
தத்ர நிதஸ்யாமி யத்ர காயந்தி மத் பக்தா ! நிருத்யே !!

பொருள் : நான் எனது இருப்பிடமான வைகுண்டத்தில் வெகுகாலம் வசிப்பதில்லை. யோகிகளின் இதயத்திலும், வசிப்பதில்லை. எந்த இடத்தில் என் பக்தர்கள் பாடியும் ஆடியும் களிப்படைகிறார்களோ அந்த இடத்தில் நான் வசிப்பேன். அவர்கள் மனதில் நிறைந்திருந்து அவர்கள் வேண்டுவதை அருள்வேன். இது நிச்சயம் !
பாவம் போக்கும் 12 ஜோதிர்லிங்க துதி!

புனிதமும் அழகும் நிறைந்த சவுராஷ்டிர தேசத்தில் ஜோதிமயமாக இருப்பவரும்; தலையில் பிறைச் சந்திரனைச் சூடியவரும்; எல்லையற்ற கருணை காரணமாக எல்லாருக்கும் பக்தியை அளிப்பதற்காகவே அவதாரம் செய்தவருமாகிய சோமநாதர் என்ற சிவலிங்கத்தைச் சரணடைகிறேன். மேலான இமயமலையின் தாழ்வுப் பிரதேசத்தில், கேதாரம் என்ற இடத்தில் ஆனந்தமாகக் குடிகொண்டிருப்பவரும்; சிறந்த முனிவர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் யட்சர்களாலும் நாகர்களாலும் எப்போதும் பூஜிக்கப்படுபவரும்; இரண்டற்றவருமான கேதாரேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைத் துதிக்கிறேன்.

மிக உயர்ந்த ஸ்ரீசைலம் என்ற மலையில், அறிஞர்களின் சத்சங்கத்தில் மிகவும் மகிழ்ச்சியோடு வசிப்பவரும்; சம்சாரம் என்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு உதவும் தோணி போன்றவருமாகிய மல்லிகார்ஜுனர் என்ற சிவலிங்கத்தை வணங்குகிறேன். நல்லவர்களுக்கு முக்தி அளிப்பதற்காக அவந்திகா (உஜ்ஜயினி) நகரத்தில் அவதாரம் செய்தவரும்; தேவர்களுக்குத் தலைவனுமாகிய மகாகாலேஸ்வரர் என்ற சிவலிங்கத்தை எனக்கு அகால மரணம் நேராமல் இருக்கும் பொருட்டு வணங்குகிறேன். நர்மதை நதி பாயும் தூய்மையான இடத்தில், நல்லவர்களைக் காக்க எப்போதும் மாந்தாத்ரு என்ற ஊரில் வசிப்பவரும்; ஓங்காரேஸ்வரர் என்ற அத்விதீயருமான (இரண்டற்ற) சிவபெருமானை வணங்குகிறேன்.

வடகிழக்கு திசையில் கொழுந்துவிட்டு எரியும் தீ ஜ்வாலை உள்ள மயானத்தில் வசிப்பவரும்; கிரிஜா என்ற பார்வதிதேவியுடன் எப்போதும் சேர்ந்திருப்பவரும்; தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவருமாகிய வைத்தியநாதர் என்ற சிவலிங்கத்தை வணங்குகிறேன். தென்திசையில் மிகவும் அழகிய ஸதங்கம் என்ற நகரத்தில், நன்கு அலங்கரிக்கப்பட்ட அங்கங்களோடு நிகரற்ற செல்வங்கள் நிறைந்தவரும்; உயர்ந்த பக்தியையும் முக்தியையும் வழங்கும் ஒரே தெய்வமாகத் திகழ்பவருமாகிய நாகேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைச் சரணடைகிறேன்.

தாமிரபரணி நதி கடலில் கலக்கும் இடத்தில், எண்ணற்ற அம்புகளைக் கொண்டு அணையைக் கட்டிய ஸ்ரீராமராவ் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட ராமேஸ்வரர் என்ற சிவலிங்கத்தை முறைப்படி வணங்குகிறேன்.

அழகாகவும் விசாலமாகவும் இருக்கும் இளாபுரம் என்ற இடத்தில் விளங்குபவரும்; பெருங்கருணையைத் தமது இயல்பாகக் கொண்டவரும்; கிருஷ்ணேஸ்வரர் (குசுருணேஸ்வரர்) என்ற பெயர் பெற்ற வருமாகிய பரமேஸ்வரனைச் சரணடைகிறேன்.

புனிதமான ஸஹ்ய மலையில், பவித்ரமான கோதாவரி நதிக்கரையில் எழுந்தருளியிருப்பவரும்; எவருடைய தரிசனத்தால் எல்லாப் பாவங்களும் விலகி விடுகின்றனவோ, அந்த த்ரியம்பகேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைத் துதிக்கிறேன்.

டாகினீ, சாகினீ முதலிய பூதகணங்கள் வசிக்கும் இடத்தில், அரக்கர்களால் வணங்கப்படுபவரும்; என்றும் பீமேஸ்வரர் என்று புகழப்படுபவரும்; பக்தர்களுக்கு நன்மை செய்பவருமாகிய சங்கர பகவானுக்கு நமஸ்காரம் செய்கிறேன்.

காசியில் ஆனந்தபவனத்தில் பேரானந்தத்துடன் வசிப்பவரும், மகிழ்ச்சிக் குவியலாக விளங்குபவரும்; பாவம் அகற்றுபவரும்; வாரணாசியின் தலைவரும்; ஆதரவற்ற அநாதைகளுக்கு நாதனுமாகிய விஸ்வநாதரைச் சரணடைகிறேன்.
Temples of the Angkor Complex inCambodia

The temples of the Angkor complex, near the Cambodian city of Siem Reap, were abandoned and left to decay for nearly 500 years after the fall of the Khmer empire in the 15th century. The indigenous jungle plants of Cambodia quickly began to invadeand destroy the structures. When efforts to conserve and restore the temples of Angkor began in the early 20th century, archeologists decided to leave one temple, Ta Prohm, largely as ithad been found except for clearing a path for visitors and strengthening the buildings to prevent further deterioration. The spung trees (Tetrameles nudiflora) growing out of the ruins and the dense jungle surroundings make it possible forvisitors today to experience Ta Prohm very much as the early explorers did when they first came upon the temples of Angkor,in the middle of the 19th century.

Ta Prohm is one of the largest andmost picturesque temples in the Angkor complex. Constructed as a Buddhist monastery, from the mid-12th to early 13th century, the temple was home to more than 12,500 people (including high priests, officials, assistants and dancers), all of whom were supported by a population of nearly 80,000 people who worked in nearby villages to provide food and supplies. Ta Prohm was also the headquarters of a vast hospital network, providing supplies for over 100 hospitals located throughout the Khmer empire.
சப்தத்திற்கும், வேத சப்தத்திற்கும் உள்ள மதிப்பு"

நத்தத்தில் காஞ்சி பரமாசார்யாள் ஒரு சமயம் இருந்தபோது நடந்த சம்பவம். பெரியவாள் தங்கியிருந்த இடத்தில் ஒரு வேதபாராயண கோஷ்டி வேதத்தில் ஒரு அனுவாகம் கூறிக்கொண்டிருந்தார்கள்.அந்த இடத்திற்கு ஒர் ச்ரத்தையில்லாத பிராம்மணன் வந்திருந்தான். அவனுக்கு வேதம் தெரியாது. ’என்னவோ அர்த்தமில்லாமல் முணமுணக்கிறதே இந்த கோஷ்டி. இதனால் உலகத்திற்கு என்ன ப்ரயோஜனம்? ஏழை எளியவர்களுக்கு ஏதாவது திட்டமிட்டு செலவழித்தாலும் புண்யமாவது கிடைக்குமே’ என்று கூறினானாம். இது எப்படியோ பெரியவாள் காதுகளையும் எட்டிவிட்டது.

நமக்கும் பெரியவாளுக்கும் அதுதான் வித்யாசம். வால்மீகி மகரிஷி தனது ராமாயணத்தில் ராமரைப்பற்றிக் கூறும்போது, "நூறு குற்றங்கள் செய்தாலும் கொஞ்சம் கூட ஞாபகம் கொள்ள மாட்டார். ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதைக்கொண்டே பூரண திருப்தி அடைந்து விடுவார்" என்று வர்ணித்திருப்பதை நடந்து காட்டியவர் நமது காஞ்சி பரமாச்சார்யாள்

அன்று மாலை பூஜாகாலத்திற்குப் பிறகு பெரியவாள் அருள்வாக்கு கூற அமர்ந்தார். காலையில் கம்ப்ளெய்ன்ட் செய்த ஆசாமியும் அங்கு, மாலை, கூட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவனருகில் சென்று மடத்து சமையல்காரனைக் கூப்பிட்டார். ’இந்த ப்ராம்மணனுக்குப் பகல் சாப்பாடு நன்றாக இல்லையாம். ராத்திரி கொஞ்சம் ஸ்பெஷலாக கவனித்துக்கொள்" என்று கூறினார். அந்த சமையல்காரன் இந்த ப்ராம்மணனைப் பார்த்து முணமுணத்துக் கொண்டே போனான். இந்த பிராம்மணனுக்கு படுகோபம் வந்து விட்டது. "ஸ்வாமி! பார்த்தேளா! என்னமோ முணமுணத்துக் கொண்டே போகிறானே பார்த்தேளா?" என்றான் அந்த பிராம்மணன்.

நம் நடமாடும் தெய்வம் புன்முறுவலுடன் கேட்கிறார். "அவன் என்ன முணமுணத்தான் என்று தெரியுமா?" என்று. "அது காதில் விழவில்லை. ஆனால் முணமுணத்ததுகாதில் நன்றாக விழுந்தது" என்றான் பிராம்மணன். "அவன் என்ன சொன்னான் என்று புரியாத முணமுணப்புக்கு, அது என்ன வார்த்தை, யாரைப்பற்றி என்று தெரியாமல் இருக்கும்போது, அந்த முணமுணப்பு சப்தம் உன்னிடம் ஒரு ரியாக்ஷன் ஏற்படுத்துமானால், வழிவழியாக பரம்பரையாக வந்த வேத முணமுணப்பு, அந்த அட்மாஸ்ஃபியரில் எத்தகய உயர்ந்த ரியாக்ஷன் ஏற்படுத்தும் என்பது உனக்குக் காலையில் ஞாபகமில்லை போலிருக்கு" என்று சொன்னார்.

சப்தத்திற்கு, வேத சப்தத்திற்கு உள்ள மதிப்பை, ஆசார்யாள் சொல்லுகிறமாதிரி யார் நமக்கு மனதில் பதியும்படி சொல்லமுடியப்போகிறது!

அந்த ப்ராம்மணன் வேத அத்யயனகோஷ்டியை இகழ்ந்தற்கு ஆசார்யாள் அஸூயைப்படவில்லை. ஸ்ரீ மடத்தில் தனது சன்னிதானம் இருக்கும் இடத்தில், காலையில் காலை வைத்துவிட்ட அந்த ஒரு புண்ணியத்திற்காக (कृतेनैकेन तुष्यति) அவன் வேத கோஷ்டியை இகழ்ந்த பாபத்தை மறந்துவிட்டு, ஒரு சிறிதும் கோபமோ, வெறுப்போ கொள்ளாமல், அவனுக்கும், அவனை வ்யாஜமாக, லோகத்தினருக்கும் ஞானம் அனுக்ரஹம் பண்ணுவது இருக்கிறதே, அதுதான் "தெய்வீகம்" என்பதற்கு லக்ஷணம்.

அந்த பரமாசார்யாளின் பாததூளி பாக்யம் எத்துணை உயர்ந்ததாக இருக்கும் என்று கூறவும் வேண்டுமோ?

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்.

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.
பொது அறிவு

1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்
2) உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி
3) உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை
4) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன் (6.750 கிலோமீற்றர்)
5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)
6) உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி(11.522மீற்றர்)
7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன்
உலகிலேயே பெரிய பாலைவனம் யாது?
சஹாராப்பாலைவனம்
9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது?
வத்திக்கான்
10) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? பசுபிக்
சமுத்திரம்
11) உலகிலேயே பெரிய தீவு எது? கிறீன்லாந்து
12) உலகிலேயே பெரிய கண்டம் எது?
ஆசியாக்கண்டம்
13) உலகிலேயே சிறிய கண்டம் எது?
அவுஸ்ரேலியா
14) உலகிலேயே பெரிய நாடு எது?
கனடா(ரஷ்யா சிதறிய பிறகு)
15) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள
நாடு எது? இந்தோனேஷியா
16) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது?
சீராப்புஞ்சி
17) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது?
சுப்பீரியர் ஏரி
18) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர
எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6
மணி 9நிமிடம். 9.54 செக்கன்
19) உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது?
எவரெஸ்ட்
20) உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார்
(சிலி) 5.990 மீற்றர்
21) உலகிலேயே மிக நீளமான மலை எது?
அந்தீஸ்மலை
22) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது?
தென்சீனக்கடல்
23) உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன்
(ரஷ்யா-ஈரான்)
24) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979மீற்றர்
25) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள
நாடு எது? சீனா
26) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள
நாடு எது? வத்திக்கான்
27) உலகிலேயே மிக நீளமான
ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்புர்
28) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால்
ஏரி
29) உலகிலேயே மிக நீளமான குகை எது? மாமத்
குகை
30) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது?
நேபாளம்
31) உலகிலேயே மிகப்பெரிய பு எது?
ரவல்சியாஆர்ணல்டி
32) உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள
இடம் எது? அலாஸ்கா
33) உலகிலேயே மிகப் பழைமையான
தேசப்படத்தை வரைந்தவர் யார்? தொலமி
34) உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான
சஞ்சிகை எது? நேச்சர் 35) ஆசியாவில் உள்ள
கிறிஸ்தவ நாடு எது? பிலிப்பைன்ஸ்
36) உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது?
அவுஸ்ரேலியா
37) உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது?
டிடிக்காகா
38) உலகில் மிக உயரமான அணை எது? போல்டர்
அணை
39) உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ
நாடு எது? சீனா
40) உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக
நாடு எது? இந்தியா
41) உலகில் அதிக மக்களால் பேசப்படும்
மொழி எது? மாண்டரின்(சீனா)
42) உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது?
பைபிள்
43) கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது?
நெதர்லாந்து
44) உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது?
சவுதி அரேபியா
45) உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது?
இந்தோனோசியா
விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் (பகுதி-2)

51. தர்மகுப் தர்மக்ருத் தர்மீ ஸதஸத் க்ஷர மக்ஷரம்
அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்ஸுர் விதாதா க்ருத லக்ஷண:

476. தர்மகுப் - தர்மத்தைப் பாதுகாப்பவன்.
477. தர்மக்ருத் - தர்மத்தைக் கடைப்பிடிப்பவன்.
478. தர்மீ - தர்மமே வடிவானவன்.
479. ஸத் - நல்லதாகவே உள்ளவன்.
480. ஸதக்ஷரம் - அக்ஷரம் - ஸத்- எல்லாக் காலத்தும் நிறைவோடு இருப்பவன். (கல்யாண குணங்கள் நிறைந்திருப்பவன்.)
481. அஸத்: அபரப்பிரம்மம்.
482. க்ஷரம்: சத்தல்லாதவர்களுக்கு (பாபிகளுக்கு) துக்கத்தைக் கொடுப்பவன்.
483. அவிஜ்ஞாதா (அடியார்களிடம் தவறுகளை) அறியாதவன்.
484. ஸஹஸ்ராம்சு: எல்லையில் ஞானத்தன்.
485. விதாதா - விதிப்பவன். (கட்டளையிடுபவன்)
486. க்ருத லக்ஷண: அடையாளங்களை உடையவன். (சங்கு சக்கரம் முதலான அடையாளங்கள்)

52. கபஸ்தி நேமிஸ் ஸத்வஸ்தஸ் ஸிம்ஹோ பூத மஹேஸ்வர:
ஆதி தேவோ மஹாதேவோ தேவேஸோ தேவப்ருத் குரு:

487. கபஸ்தி நேமி: விளங்குகின்ற சக்கராயுதம் உடையவன்.
488. ஸத்வஸ்த: அடியவர் நெஞ்சில் குடியிருப்பவன்.
489. ஸிஹ்ம: தண்டிப்பவன்.
490. பூதமஹேச்வர: எல்லா உயிரினங்களுக்கும் மேலானவன்.
491. ஆதிதேவ: ஆதிப்பிரான்.
492. மஹாதேவ: விளையாட்டாக எதனையும் செய்யும் மகாதேவன்.
493. தேவேச: தேவர்களுக்கு ஈசன்.
494. தேவப்ருத்: தேவர்களைத் தாங்குபவன்.
495. குரு: தேவர்களின் ஆசாரியன்.

53. உத்தரோ கோபதிர் கோப்தா ஞாந கம்ய : புராதந:
ஸரீரபூத ப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரி தக்ஷிண:

496. உத்தர: கரை ஏற்றுபவன்.
497. கோபதி: சொற்களுக்குத் தலைவன்.
498. கோப்தா: கலைகளைக் காப்பாற்றுபவன்.
499. ஜ்ஞாநகம்ய: அறிவினால் அடையப்படுபவன்.
500. புராதந: மிகப் பழமையானவன்.

(ஐந்தாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)
501. சரீரபூதப்ருத்: தத்துவங்களைச் சரீரமாகக் கொண்டு தாங்குபவன்.
502. போக்தா: உண்பவன் (அநுபவிப்பவன்)
503. கபீந்த்ர: வானரங்களுக்குத் தலைவன்.
504. பூரிதக்ஷிண: மிகுந்த தட்சணைகளை வாரி வழங்குபவன்.

54. ஸோமபோ அம்ருதபஸ் ஸோம : புருஜித் புருஸத்தம :
விநயோ ஜயஸ் ஸத்ய ஸந்தோ தாஸார்ஹஸ் ஸாத்வதாம் பதி

505. ஸோமப: ஸோமரசபானம் பண்ணுபவன்.
506. அம்ருதப: அமிருதத்தை அருந்துபவன்.
507. ஸோம: அமுதிலும் இனியவன்.
508. புருஜித்- யாவரையும் வெற்றிகொண்டு வசப்படுத்துபவன்.
509. புருஸத்தம: சான்றோர்களிடம் நிலைத்திருப்பவன்.
510. விநய: தண்டித்துத் திருத்துபவன்.
511. ஜய: தன்னை அண்டியவர்களிடம் தோற்று, அவர்களுக்கு வெற்றியை அளிப்பவன்.
512. ஸத்யஸந்த: வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதி உடையவன்.
513. தாசார்ஹ: அடியவர்கள் இவனிடம் தமது ஆத்மாவைச் சமர்ப்பிப்பதற்கு உரியவன்.
514. ஸாத்வதாம் பதி: சாத்வீக குணமுடைய பாகவதர்களுக்குத் தலைவன்.

55. ஜீவோ விநயிதா ஸாக்ஷீ முகுந்தோ அமித விக்ரம:
அம்போநிதிர் அநந்தாத்மா மஹோ ததிஸயோ அந்தக:

515. ஜீவ: வாழவைப்பவன்.
516. விநயிதா: காப்பவன்.
517. ஸாக்ஷீ: பார்த்துக் கொண்டிருப்பவன்.
518. முகுந்த: முக்தி அளிப்பவன்.
519. அமித விக்ரம: அளவற்ற ஆற்றலை உடையவன்.
520. அம்போநிதி: நீருக்குள் (ஆமையாய்) இருப்பவன்.
521. அநந்தாத்மா: பாம்பு வடிவமாக இருந்து, அதன் ஆத்மாவாக உலகங்களைத் தலைமேல் தாங்குபவன்.
522. மஹோததிசய: பரந்து காணப்படும் மகா சமுத்திரத்தின் மேல் உறங்கிக் கொண்டிருப்பவன்.
523. அந்தக: அழிப்பவன்.

56. அஜோ மஹார்ஹ ஸ்வாபாவ்யோ ஜிதா மித்ர: ப்ரமோதந:
ஆநந்தோ நந்தநோ நந்தஸ் ஸத்ய தர்மா த்ரிவிக்ரம :

524. அஜ: அ எனும் அகாரத்தால் பேசப்படும் நாராயணன்.
525. மஹர்ஹ: வழிபாட்டுக்கு மிக உரியவன்.
526. ஸவாபாவ்ய: தியானிக்கத்தக்கவன்.
527. ஜிதாமித்ர: பகைவர்களை வென்றவன்.
528. ப்ரமோதந: மகிழ்பவன், மகிழ்ச்சி அளிப்பவன்.
529. ஆநந்த: ஆனந்தமே வடிவானவன்.
530. நந்தந: ஆனந்தம் அளித்து நிரப்புபவன்.
531. நந்த: எல்லாம் நிரம்பியிருப்பவன்.
532. ஸத்யதர்மா: தர்மத்தை உண்மையுடன் நடத்திச் செல்பவன்.
533. த்ரிவிக்ரம: மூவுலங்களையும் அளந்து கொண்டவன்.

57. மஹர்ஷி : கபிலாசார்ய : க்ருதஜ்ஞோ மேதிநீ பதி:
த்ரிபதஸ் த்ரிதஸாத் ய÷க்ஷõ மஹா ஸ்ருங்க : க்ருதாந்த க்ருத்

534. மஹர்ஷி: பெரிய ஞானி.
535. கபிலாசார்ய: கபில நிறமுடையவன்.
536. க்ருதஜ்ஞ: நன்மையை அறிபவன்.
537. மேதிநீபதி: பூமிக்குத் தலைவன்.
538. த்ரிபதி: ப்ரக்ருதி, புருஷன், ஈஸ்வரன் ஆகிய மூன்று தத்துவங்களை வெளிப்படுத்துபவன்.
539. த்ரிதசாத்யக்ஷ: தேவர்களைக் காப்பாற்றியவன்.
540. மஹாச்ருங்க: பெரிய கொம்பை உடையவன்.
541. க்ருதாந்தக்ருத் - யமன் போல் தோன்றிய இரணியனை முடித்தவன்.

58. மஹா வராஹோ கோவிந்தஸ் சுஷேண : கநகாங் கதீ
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர:

542. மஹாவராஹ: மகாவராக மூர்த்தி (பெருங்கேழலர்)
543. கோவிந்த: பூமியை உடையவன்.
544. ஸுஷேண: சதுரங்க பலமுடையவன்.
545. கநகாங்கநீ: தங்கத்தாலான திருஆபரணம் அணிந்தவன்.
546. குஹ்ய: மறைக்கப்பட்டவன்.
547. கபீர: கம்பீரமான வடிவமுடையவன்.
548. கஹந: (அறியமுடியாத) ஆழமானவன்.
549. குப்த: (விசுவாமித்திரர், அநந்தன், கருடன் போன்றவர்களால்) காப்பாற்றப்பட்டவன் (பாதுகாக்கப்பட்டவன்.)
550. சக்ரகதாதர: சக்ரம், கதை முதலான பல திவ்ய ஆயுதங்களை உடையவன்.

59. வேதாஸ்ஸ்வாங்கோ ஜித: க்ருஷ்ணோத்ருடஸ் ஸங்கர்ஷணோ அச்யுத:
வருணோ வாருணோ வ்ருக்ஷ :புஷ்கரா÷க்ஷõ மஹாமநா :

551. வேதா: மங்களகரமானவன்.
552. ஸ்வாங்க: ஆளுகின்ற அரசாங்கத்தைப் பெற்றவன்:
553. அஜித: வெற்றி கொள்ள முடியாதவன்.
554. கிருஷ்ண: கண்ணன் என்னும் கருநிறத்தோன்.
555. த்ருட: திடமானவன்.
556. ஸங்கர்ஷண: சித், அசித் ஆகியவற்றை ஒரே அடியாகத் தன்னிடம் ஈர்ப்பவன் (வியூக வாசுதேவன்)
557. அச்யுத: தனது நிலையிலிருந்து நழுவாதவன்.
558. வருண: எல்லாவற்றையும் மூடி மறைந்திருப்பவன்.
559. வாருண: பக்தர்களிடம் எப்போதும் இருப்பவன்.
560. வ்ருக்ஷ: மரம் போல் நிழல் தந்து காப்பவன்.
561. புஷ்கராக்ஷ: வலிமையான கண்ணோக் குடையவன், (கருணை பொழியும் கண்களை யுடையவன்)
562. மஹாமநா: பரந்த மனம் படைத்தவன்.

60. பகவாந் பகஹா நந்தீ வநமாலீ ஹலாயுத:
ஆதித்யோ ஜ்யோதி ராதித்யஸ் ஸ்ஹிஷ்ணுர் கதி ஸத்தம:

563. பகவான்: வழிபாட்டுக்குரியவன்.
564. பகஹா: நற்குணவான்.
565. நந்தீ: நந்த கோபன் குமரன்.
566. வநமாலீ: வனமாலை என்னும் திருவாபரணம் அணிந்தவன்.
567. ஹலாயுத: கலப்பையை ஆயுதமாக உடையவன்.
568. ஆதித்ய: தேவகியின் (அதிதி) புதல்வன்.
569. ஜ்யோதிராதித்ய: ஒளி வடிவினன்.
570. ஸஹிஷ்ணு: பொறுத்துக் கொள்பவன்.
571. கதிஸத்தம: தரும வழியைக் காட்டுபவன்.

61. சுதந்வா கண்ட பரசுர் தாருணோ த்ரவிண ப்ரத:
திவஸ்ப்ருக் க்ருச்சமஸ் வ்யாஸோ வாசஸ்பதி ரயோநிஜ:

572. ஸுதந்வா: சிறந்த வில்லினை ஏந்தியவன்.
573. கண்டபரசு: கோடரியை ஆயுதமாக உடையவன்.
574. தாருண: பகைவர்களைப் பிளப்பவன்.
575. த்ரவிணப்ரத: செல்வங்களைக் கொடுப்பவன்.
576. த்விஸ்ப்ருக்: பரமபதத்தைத் தொட்டவன், (நன்கறிந்தவன்)
577. ஸர்வத்ருக்: அனைத்தையும் நேரில் கண்டறிந்தவன்.
578. வ்யாஸ: வியாசன்.
579. வாஸஸ்பதி: வாக்குக்குத் தலைவன். (இங்கு மகாபாரதத்தை உரைத்தவன் என்பது பொருள்.)
580. அயோநிஜ: கருவில் தங்கிப் பிறக்காதவன்.

62. த்ரிஸாமா ஸாமகஸ் ஸாம நிர்வாணம் பேஷஜம் பிஷக்:
ஸந்யாஸ க்ருச்சமஸ் ஸாந்தோ நிஷ்டா ஸாந்தி : பராயணம்

581. த்ரிஸாமா: சாமங்களினால் பாடப்படுபவன்.
582. ஸாமக: ஸாமத்தை (சாமகானத்தைப்) பாடுபவன்.
583. ஸாம: பாபத்தை ஒழிப்பவன்.
584. நிர்வாணம்: முக்தி வடிவானவன்.
585. பேஷஜம்: (பிறவிப்பிணிக்கு) மருந்தானவன்.
586. பிஷக்: மருத்துவன்.
587. ஸந்யாஸக்ருத்: தியாகம் செய்பவன்.
588. ஸம: உபதேசிப்பவன்.
589. சாந்த: அமைதியானவன்.
590. நிஷ்டா: தியானத்துக்குப் பொருளாயிருப்பவன்.
591. சாந்தி: சாந்தியுடையவன்.
592. பராயணம்: பரமபக்தியைத்தானே அளிப்பவன்.

63. சுபாங்கஸ் ஸாந்திதஸ் ஸ்ரஷ்டா குமுத : குவலேஸய :
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபா÷க்ஷõ வ்ருஷ ப்ரிய:

593. சுபாங்க: யோகத்தின் எட்டு அங்கங்களையும் நிறைவேற்றித் தரும் மங்களகரமானவன்.
594. சாந்தித: முழு சாந்தியைத் தருபவன்.
595. ஸ்ரஷ்டா: படைப்பவன்.
596. குமுத: மகிழ்பவன்.
597. குவலேசய: ஜீவர்களை அடக்கி ஆள்பவன்.
598. கோஹித: இதத்தை உண்டு பண்ணுபவன்.
599. கோபதி: போக பூமிக்குத் தலைவன்.
600. கோப்தா: காப்பாற்று பவன்.

(ஆறாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)

601. வ்ருஷபாக்ஷ: தரும சக்கரத்துக்கு அச்சாக இருப்பவன்.
602. வ்ருஷப்ரிய: தருமத்தில் அன்புள்ளவன்.

64. அநிவர்த்தீ நிவ்ருத் தாத்மா ஸம்÷க்ஷப்தா ÷க்ஷம க்ருச்சிவ:
ஸ்ரீ வத்ஸ வக்ஷõஸ் ஸ்ரீவாஸ :
ஸ்ரீபதிஸ் ஸ்ரீமதாம்வர:

603. அநிவர்த்தீ: பிறவி தோன்றுவதற்கான செயல்களைச் செய்யாதவன்.
604. நிவ்ருத்தாத்மா: பலன் கருதாமல் பகவத் கைங்கர்யம் செய்பவனுக்குத் தலைவன்.
605. ஸம்÷க்ஷப்தா: (பிறவி எடுத்துக்கொண்டே இருப்பவனுக்கு) ஞானத்தைச் சுருங்கச் செய்பவன்.
606. ÷க்ஷமக்ருத்: மோட்சமாகிய ÷க்ஷமத்தைச் செய்பவன்.
607. சிவ: மங்களத்தைச் செய்பவன்.
608. ஸ்ரீவத்ஸ வக்ஷõ: ஸ்ரீவத்ஸம் என்னும் வட்ட வடிவமான மறுவைத் திருமார்பில் உடையவன்.
609. ஸ்ரீவாஸ: திருமகளுக்கு உறைவிடமானவன்.
610. ஸ்ரீபதி: திருமகளின் தலைவன்.
611. ஸ்ரீமதாம்வர: செல்வர்களுக்கெல்லாம் செல்வன்.

65. ஸ்ரீதஸ் ஸ்ரீஸஸ் ஸ்ரீநிவாஸஸ் ஸ்ரீ நிதிஸ் ஸ்ரீவிபாவந:
ஸ்ரீதரஸ் ஸ்ரீகரஸ் ஸ்ரேயஸ் ஸ்ரீமாந் லோக த்ரயாஸ்ரய:

612. ஸ்ரீத: செல்வம், புகழ், அழகு முதலான அனைத்தும் கொடுப்பவன்.
613. ஸ்ரீச: திருவுக்கும் திருவாகியவன்.
614. ஸ்ரீநிவாஸ: பிராட்டி உறையும் திருமார்பினன்.
615. ஸ்ரீநிதி: பிராட்டியை நிதியாக உடையவன்.
616. ஸ்ரீவிபாவந: பிராட்டியினால் புகழ் பெருகியவன்.
617. ஸ்ரீதர: பிராட்டியைத் தரித்திருப்பவன்.
618. ஸ்ரீகர: தன்னைப் பின்பற்றுமாறு பிராட்டியைச் செய்பவன்.
619. ச்ரேய: எல்லாராலும் வழிபடப்பெறும் பிராட்டியை உடையவன்.
620. லோகத்ரயாச்ரய: மூவுலகத்தாருக்கும் அடைக் கலப் பொருளாக இருப்பவன்.

66. ஸ்வக்ஷஸ் ஸ்வங்கஸ் ஸதாநந்தோ நந்திர் ஜ்யோதிர் கணேஸ்வர:
விஜிதாத்மா விதேயாத்மா ஸத்கீர்த்திஸ் சிந்ந ஸம்ஸய:

621. ஸ்வக்ஷ: அழகிய கண்களை உடையவன்.
622. ஸ்வங்க: மங்களமான திருமேனியை யுடையவன்.
623. சதாநந்த: எப்பொழுதும் அளவற்ற ஆனந்தம் உடையவன்.
624. நந்தி: ஆனந்திப்பவன்.
625. ஜ்யோதிர் கணேச்வர: ஒளிநிறைந்தவர்களும், குற்றமற்றவர்களுமாகிய நித்ய சூரிகளுக்குத் தலைவன்.
626. விஜிதாத்மா: பக்தர்களால் வெல்லப்பட்ட ஆத்மவடிவினன்.
627. விதேயாத்மா: பக்தர்களுக்குக் கட்டுப்பட்டவன்.
628. ஸத்கீர்த்தி: நிகரில் புகழாளன்.
629. சிந்நஸம்சாய: ஐயத்துக்கிடமின்றி அணுகுதற்கெளியன்.

67. உதீர்ணஸ் ஸர்வதஸ் சக்ஷúர் அநீஸஸ் ஸாஸ்வத ஸ்திர:
பூஷயோ பூஷணோ பூதி ரசோகஸ் சோகநாஸந :

630. உதீர்ண: (தன் திருமேனியை) நன்றாக வெளிப்படுத்துபவன்.
631. ஸர்வதச்சக்ஷú: யாவரும் தன் கண்ணால் காணும் படியானவன்.
632. அநீச: தலைவனாயில்லாதவன். (பரதந்த்ரன்)
633. சாச்வதஸ்திர: எப்பொழுதும் நிலையாய் இருப்பவன்.
634. பூசய: பூமியில் சயனித்து அருள் புரிபவன்.
635, 636. பூதி: நிதியாக உள்ளவன்.
637. விசோக: (அசோக)- சோகமில்லாதவன்.
638. சோகநாசந: சோகத்தை ஒழிப்பவன்.

68. அர்ச்சிஷ்மா நர்ச்சித : கும்போ விசுத்தாத்மா விஸோதந:
அநிருத்தோ அப்ரதிரத : ப்ரத்யும்நோ அமித விக்ரம :

639. அர்ச்சிஷ்மாந்: பேரொளியை உடையவன்.
640. அர்ச்சித: அர்ச்சிக்கப் படுபவன் (அர்ச்சாரூபி)
641. கும்ப: திவ்ய தேசங்களில் விளங்குபவன்.
642. விசுத்தாத்மா: தன்னையே அருள்புரியும் இயல்பினன்.
643. விசோதந: அமலன், (சுத்தியைத் தருபவன்)
644. அநிருத்த: வியூஹமூர்த்தி. (பாற்கடலில் பள்ளி கொள்பவன்.)
645. அப்ரதிரத: ஒப்பற்றவன்.
646. ப்ரத்யும்ந: எல்லாவற்றையும் ஒளிரச் செய்பவன்.
647. அமித விக்ரம: அளவற்ற திருவடிகளை உடையவன். (அளவற்ற ஆற்றல், ஒளி உடையவன்.)

69. கால நேமிநிஹா வீர ஸெளரிஸ் ஸுர ஜநேஸ்வர:
த்ரிலோகாத்மா த்ரிலோகேஸ : கேஸவ : கேஸிஹா ஹரி:

648. காலநேமிநிஹா: கலியுகக் கொடுமைகளை அழிப்பவன்.
649. சௌரி: சௌரி பெருமாள்.
650. சூர: எதிரிகளை அழிப்பவன்.
651. சூரஜநேச்வர: சூரர்களுக்குத் தலைவன்.
652. த்ரிலோகாத்மா: மூவுலங்களிலும் சஞ்சரிப்பவன்.
653. த்ரிலோகேச: மூவுலகங்களுக்கும் ஈசன்.
654. கேசவ: துக்கங்களை அழிப்பவன்.
655. கேசிஹா: கேசி என்னும் அசுரனைக் கொன்றவன்.
656. ஹரி: பச்சை வண்ணன்.

70. காமதேவ : காமபால : காமீ காந்த: க்ருதாகம :
அநிர் தேஸ்ய வபுர் விஷ்ணுர் வீரோ அநந்தோ தநஞ்ஜய :

657. காமதேவ: விரும்பினவற்றை யெல்லாம் அளிப்பவன்.
658. காமபால: கொடுத்ததைக் காப்பவன்.
659. காமீ: விரும்பத்தக்கன யாவும் நிறைந்துள்ளவன்.
660. காந்த: யாவராலும் விரும்பத்தக்கவன்.
661. க்ருதாகம: ஆகமங்களைத் தோற்றுவிப்பவன்.
662. அநிர்தேச்யவபு: சொல்லித் தலைக்கட்ட முடியாத திருமேனிகளை உடையவன்.
663. விஷ்ணு: எங்கும் நிறைந்திருப்பவன்.
664. வீர: வீரன்.
665. அநந்த: எல்லையற்றவன்: முடிவில்லாதவன்.
666. தநஞ்ஜய: உலக ஐஸ்வர்யங்களைவிட மேலானவன்.

71. ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா
ப்ரஹ்ம ப்ரஹ்ம விவர்த்தந :
பரஹ்மவித் ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ
ப்ரஹ்மஞோ ப்ராஹ்மண ப்ரிய:

668. ப்ரஹ்மக்ருதப்ரஹ்மா: பிரமனைப் படைக்கும் பெரியவன்.
669. ப்ரஹ்ம: பரமாத்மா. (மேலானவன்)
670. ப்ரஹ்மவிவர்த்தந: தருமத்தை வளரச் செய்பவன்.
671. ப்ரஹ்மவித்: வேதங்களை உள்ளபடி அறிந்த வித்தகன்.
672. ப்ராஹ்மண: வேதங்களைக் கற்பிப்பவன்.
673. ப்ரஹ்மீ: பிரம்மாவை (பிரமாண, பிரமேயங்களை) உடையவன்.
674. ப்ரஹ்மஜ்ஞ: வேதங்களை உணர்ந்தவன்.
675. ப்ராஹ்மணப்ரிய: வேதம் வல்ல பிராமணர்களை நேசிப்பவன்.

72. மஹா க்ரமோ மஹா கர்மா மஹா தேஜா மஹோரக:
மஹா க்ரதுர் மஹா யஜ்வா மஹா யஜ்ஞோ மஹா ஹவி:

676. மஹாக்ரம: அறிவுடையாரைப் படிப்படியாக வாழ்விப்பவன்.
677. மஹாகர்மா: சிறந்த செயலை உடையவன்.
678. மஹாதேஜ: மேலான சிறந்த ஒளியை உடையவன்.
679. மஹாரக: உட்புகும் பெரியோன்.
680. மஹாக்ரது: வழிபாட்டிற்கு எளியவன்.
681. மஹாயஜ்வா: பகவானை மட்டுமே வழிபடுவோரைச் சிறப்பு செய்பவன்.
682. மஹாயஜ்ஞ: உயர்ந்த வழிபாட்டுக்கு உரியவன்.
683. மஹாஹவி: சிறந்த அவியுணவைப் பெறுபவன்.

73. ஸ்தவ்யஸ் ஸ்தவப்ரியஸ் ஸ்தோத்ரம் ஸ்துதிஸ் ஸ்தோதா ரணப்ரிய:
பூர்ண: பூரயிதா புண்ய: புண்ய கீர்த்தி ரநாமய:

684. ஸ்தவ்ய: வணங்கத் தகுந்தவன்.
685. ஸ்தவப்ரிய: வணக்கத்தை (வழிபாட்டை) அன்புடன் ஏற்பவன்.
686. ஸ்தோத்ரம்: வழிபாடாக (துதியாக) இருப்பவன்.
687. ஸ்துத: வழிபடப்படுபவன். (துதிக்கப்படுபவன்)
688. ஸ்தோதா: தன்னைப் துதிப்பவரைப் புகழ்பவன்.
689. ரணப்ரிய: போர் செய்வதில் ஆர்வமுடையவன்.
690. பூர்ண: நிறைவானவன்.
691. பூரயிதா: நிறைவிப்பவன்.
692. புண்ய: புண்ணியன் (புனிதன் ஆக்குபவன்)
693. புண்யகீர்த்தி: புண்ணியமான கீர்த்தனத்துக்குரியவன்.
694. அநாமய: பெரும் பிணியைப் (பிறவிப் பிணியைப்) போக்குபவன்.

74. மநோ ஜவஸ் தீர்த்த கரோ வசு ரேதா வசு ப்ரத:
வசுப்ரதோ வாஸுதேவோ வஸுர் வசுமநாஹவி:

695. மநோஜவ: மனோபாவத்தில் செயல்படுபவன்.
696. தீர்த்தகர: தூய்மைப் படுத்துபவன்.
697. வஸுரேதா: ஒளியையே கருவாகப் பெற்றிருப்பவன்.
698. வஸுப்ரத: நிதியாக உள்ள தன்னையே தருபவன்.
699. வஸுப்ரத: பெருமதிப்பை அளிப்பவன்.
700. வாஸுதேவ: வசுதேவனுடைய மகன்.

(ஏழாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)
701. வாஸு: வசிப்பவன்.
702. வஸுமநா: வசுதேவரிடத்தில் மனம் வைத்தவன்.
703. ஹவி: பெற்றுக் கொள்ளப்பட்டவன்.

75. ஸத்கதிஸ் ஸத் க்ருதிஸ் ஸத்தா ஸத் பூதிஸ் ஸத் பராயண:
ஸூர ஸேநோ யது ஸ்ரேஷ்டஸ் ஸந்நிவாஸஸ் கயாமுந :

704. ஸத்கதி: சாதுகளுக்குப் புகலிடமாயிருந்து காப்பவன்.
705. ஸத்க்ருதி: விந்தையான செயல்களைச் செய்பவன்.
706. ஸத்தா: உலகம் உளதாவதற்குக் காரணமானவன்.
707. ஸத்பூதி: சாதுக்களுக்கு ஐஸ்வர்யமாக உள்ளவன்.
708. ஸத்பராயண: சாதுக்களைத் தனக்கு உயிராக உள்ளவன்.
709. ஸூரஸேந: சூரர்களைச் சேனையாக உடையவன்.
710. யதுஸ்ரேஷ்ட: யதுகுலதிலகன்.
711. ஸந்நிவாஸ: சாதுக்களுக்கு இருப்பிடமாக உள்ளவன்.
712. ஸுயாமுந: யமுனைத் துறைவன்.

76. பூதா வாஸோ வாசுதேவஸ் ஸர்வாசு நிலயோ அநல :
தர்ப்பஹா தர்ப்பதோ அத்ருப்தோ துர்தரோ அதா அபராஜித:

713. பூதாவாஸ: எல்லா உயிரினங்களுக்கும் இருப்பிடமானவன்.
714. வாஸுதேவ: வியூஹ வாசுதேவன்.
715. ஸர்வாஸுநிலய: எல்லாப் பொருள்களும் இருக்கும் இடமாக உள்ளவன்.
716. அநல: (அடியார்கட்கு அருள்புரிவதில்) மனநிறைவு பெறாதவன்.
717. தர்ப்பஹா: ஆணவத்தை அடக்குபவன்.
718. தர்ப்பத: மதத்தைத் (ஆணவத்தை) தருபவன்.
719. அத்ருப்த: கர்வமற்றவன்.
720. துர்த்தர: அடக்கமுடியாத ஆற்றலுடையவன்.
721. அபராஜித: வெல்ல முடியாதவன்.

77. விஸ்வ மூர்த்திர் மஹா மூர்த்திர் தீப்த மூர்த்திர் அமூர்த்திமாந்
அநேக மூர்த்தி ரவ்யக்தஸ் ஸத மூர்த்திஸ் ஸதாநந:

722. விச்வமூர்த்தி: உலகத்தைச் சரீரமாக உடையவன்.
723. மஹாமூர்த்தி: பெரிய உருவம் படைத்தவன்.
724. தீப்த மூர்த்தி: ஒளிமயமான உருவம் படைத்தவன்.
725. அமூர்த்திமாந்: நுட்பமான உருவம் உடையவன்.
726. அநேக மூர்த்தி: பல உருவங்களை உடையவன்.
727. அவ்யக்த: காணமுடியாதவன்.
728. சதமூர்த்தி: நூற்றுக்கணக்கான உருவத்தை உடையவன்.
729. சதாநந: அநேக முகங்களை உடையவன்.

78. ஏகோ நைகஸ் ஸவ : க : கிம் யத்தத் பத மநுத்தமம்
லோக பந்துர் லோக நாதோ மாதவோ பக்த வத்ஸல:

730. ஏக: ஒருவன் (தனிப்பெருமை உடையவன்)
731. நைக: பலராக இருப்பவன்.
732. ஸ: அவன். (அறிவைப் பரப்புபவன்)
733. வ: வசிப்பவன்.
734. க: ஒளிர்பவன்.
735. கிம்: எது பரம்பொருள் என்று ஆராயத்தக்கவனாய் இருப்பவன்.
736. யத்: (நம்மைக் காப்பதில்) முயற்சியை உடையவன்.
737. தத்: தூண்டிவிடுபவன்.
738. பதம் அநுத்தமம்: மேலான அடையத்தக்க பொருளாக இருப்பவன்.
739. லோக பந்து: உலகினர் அனைவர்க்கும் உறவினன்.
740. லோகநாத: உலகத்துக்குத் தலைவன்.
741. மாதவ: இலட்சுமிக்கு அன்பன்.
742. பக்தவத்ஸல: அடியார்களிடம் அன்புடையவன்.

79. ஸுவர்ண வர்ணோ ஹேமாங்கோ வராங்கஸ் சந்தநாங் கதீ
வீரஹா விஷமஸ் ஸுந்யோ த்ருதாஸீரஸ் சலஸ்சல:

743. ஸுவர்ணவர்ண: பொன் வண்ணன்.
744. ஹேமாங்க: பொன் மேனியன்.
745. வராங்க: சிறந்த அழகான திருமேனியை உடையவன்.
746. சந்தநாங்கதீ: அழகிய சிறந்த திவ்யாபரணங்களை அணிந்தவன்.
747. வீரஹா: வீரர்களை மாய்த்த பெருவீரன்.
748. விஷம: வேறுபட்ட செயல்களைச் செய்பவன்.
749. சூந்ய: தோஷமில்லாதவன்.
750. க்ருதாசி: எல்லாரையும் செழிப்புறச் செய்பவன்.
751. அசல: அசைக்க முடியாதவன்.
752. சல: மாறுபவன்.

80. அமாநீ மாநதோ மாந்யோ லோகஸ்வாமீ த்ரிலோக த்ருத்
சுமேதா மேதஜோ தந்யஸ் ஸத்ய மேதா தராதர:

753. அமாநீ: மானமில்லாதவன்.
754. மாநத: கௌரவம் அளிப்பவன்.
755. மாந்ய: பரிசளிக்கத் தக்கவன். (பக்தர்களிடம் பரிவுள்ளவன்.)
756. லோகஸ்வாமீ: உலகங்களுக்கெல்லாம் தலைவன்.
757. த்ரிலோகத்ருத்: மூவுலகங்களையும் தரிப்பவன்.
758. ஸூமேதா: நல்ல எண்ணம் உடையவன்.
759. மேதஜ: நோன்பு இருப்பதன் பயனாகப் பிறப்பவன்.
760. தந்ய: பாக்கியவான்.
761. ஸத்யமேதா: உண்மையான எண்ணமுடையவன்.
762. தராதர: குன்றம் ஏந்தியவன்.

81. தேஜோ வ்ரு÷ஷா த்யுதி தரஸ் ஸர்வ ஸஸ்த்ர ப்ருதாம் வர:
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைக ஸ்ருங்கோ கதாக்ரஜ

763. தேஜோவ்ருஷ: ஒளியைப் பொழிபவன்.
764. த்யுதிதர: ஒளிவீசும் அங்கங்களை உடையவன்.
765. ஸர்வச் ஸ்த்ரப்ருதாம்வர: ஆயுத பாணிகளில் மிகவும் சிறந்தவன்.
766. பரக்ரஹ: அடக்கி நடத்துபவன்.
767. நிக்ரஹ: எதிரிகளை மாளச்செய்பவன்.
768. வ்யக்ர: பகைவரை அழிப்பதில் பரபரப்புள்ளவன்.
769. நைகச்ருங்க: பல்வேறு உபாயங்களால் பகைவரை அழித்தவன்.
770. கதாக்ரஜன்: கதன் என்பவனுக்கு முன் பிறந்தவன்.

82. சதுர் மூர்த்திஸ் சதுர் பாஹுஸ் சதுர் வ்யூஹஸ் சதுர் கதி:
சதுராத்மா சதுர் பாவஸ் சதுர் வேத விதேகபாத்

771. சதுர்மூர்த்தி: மூர்த்திகள் நான்காக விளங்குபவன்.
772. சதுர்பாஹு: தோள்கள் நான்கினை உடையவன்.
773. சதுர்வ்யூஹ: வியூஹங்கள் நான்கினையுடையவன்.
774. சதுர்கதி: பலன்கள் நான்கினைத் தருபவன்.
775. சதுர் ஆத்மா: ஜாக்ரத, ஸ்வப்ந, ஸுஷுப்தி, துரியம் ஆகிய நான்கு விதமாகத் தன்னைக் காட்டுபவன்.
776. சதுர்பாவ: நான்கு பயன்களை (படைத்தல், இருத்தல், காத்தல், நெறி வழங்குதல்) வெளிப்படுத்துபவன்.
777. சதுர்வேதவித்: நான்கு வேதங்களையும் அறிந்தவர்களுக்கு ஞானப் பொருளாய் இருப்பவன்.
778. ஏகபாத்: ஒரு பகுதியாக அவதரித்தவன்.

83. ஸமா வர்த்தோ நிவ்ருத் தாத்மா துர்ஜயோ துரதி க்ரம:
துர்லபோ துர்கமோ துர்கோ துரா வாஸோ துராரிஹா

779. ஸமாவர்த்த: திரும்பத்திரும்ப அவதரிப்பவன்.
780. நிவ்ருத்தாத்மா: ஒன்றிலும் சேராத தனித்த (திருப்பப்பட்ட) மனதையுடையவன்.
781. துர்ஜய: வெற்றி கொள்ள முடியாதவன்.
782. துரதிக்ரம: மீற முடியாதவன்.
783. துர்லப: அடைவதற்கு அரியவன்.
784. துர்கம: நெருங்க முடியாத ஒளியையுடையவன்.
785. துர்க: அடைய முடியாதவன்.
786. துராவாஸ: நெருங்க முடியாத இருப்பிடத்தை உடையவன்.
787. துராரிஹா: தன்னை அடைய ஓட்டாமல் தீயவரை விலக்கி வைப்பவன்.

84. சுபாங்கோ லோக ஸாரங்க: சுதந்துஸ் தந்து வாத்தந:
இந்த்ர கர்மா மஹா கர்மா க்ருத கர்மா க்ருதாகம:

788. சுபாங்க: மங்களகரமான அழகிய உடலை உடையவன்.
789. லோக ஸாரங்க: உலகுக்கு வேண்டிய சாரமான பொருளைப் பேசுபவன்.
790. ஸுதந்து: கெட்டியான நூல்வலையை உடையவன்.
791. தந்து வர்த்தந: நூல்களான கயிற்றைப் பலப்படுத்தியவன். (பிரபஞ்சத்தை விருத்தி செய்பவர்.)
792. இந்த்ர கர்மா: இந்திரனுக்காகச் செயல்பட்டவன்.
793. மஹாகர்மா: பெருமைக்குரிய சிறப்பான செயல்களைச் செய்பவன்.
794. க்ருதகர்மா: செயல்பட்டவன்.
795. க்ருதாகம: ஆகம நூல்களை வெளியிட்டவன்.

85. உத்பவஸ் சுந்தரஸ் சுந்தோ ரத்ந நாபஸ் சுலோசந:
அர்க்கோ வாஜஸநஸ் ஸ்ருங்கீ ஜயந்தஸ் ஸர்வ விஜ்ஜயீ

796. உத்பவ: உயர்ந்தவன்.
797. ஸுந்தர: அழகியவன்.
798. ஸுந்த: உருகச் செய்பவன்.
799. ரத்நநாப: மணிபோலும் அழகிய நாபியை உடையவன்.
800. ஸுலோசந: அழகிய பார்வையை உடையவன்..

(எட்டாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)
801. அர்க்க: துதிக்கப்படுபவன்.
802. வாஜஸந: நிறைந்த அளவில் அன்னம் உண்ணச் சொல்பவன்.
803. ச்ருங்கீ: கொம்புடையவன்.
804. ஜயந்த: வென்றவன்.
805. ஸர்வ: விஜ்ஜயீ: சிறந்த அறிவாளிகளையும் வென்றவன்.

86. சுவர்ண பிந்து ர÷க்ஷõப்யஸ் ஸர்வ வாகீஸ் வரேஸ்வர:
மஹா ஹ்ரதோ மஹா கர்த்தோ மஹா பூதோ மஹாநிதி:

806. ஸுவர்ணபிந்து: கேட்பவர் மயங்கும்படி மிகவும் இனிமையாகப் பேசுபவன்.
807. அ÷க்ஷõப்ய: கலக்க முடியாதவன்.
808. ஸர்வவாகீச்வரேச்வர: வல்லமையாகப் பேசுபவர்கள்-அனைவருக்கும் மேலானவன்.
809. மஹாஹ்ரத: ஆழ்ந்த மடுவாக இருப்பவன்.
810. மஹாகர்த்த: படுகுழியாக இருப்பவன்.
811. மஹாபூத: மகான்களைத் தன் உறவினராகக் கொண்டவன்.
812. மஹாநிதி: மகான்களைப் பெருஞ்செல்பவமாக உடையவன்.

87. குமுத : குந்தர : குந்த : பர்ஜந்ய : பாவநோ நில :
அம்ருதாஸோ அம்ருத வபுஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வதோ முக :

813. குமுத: பூமண்டலத்தின் ஆனந்தமாக இருப்பவன்.
814. குந்தர: பரதத்துவத்தைப் பற்றிய ஞானத்தை அளிப்பவன்.
815. குந்த: பாபத்தைப் போக்கிப் படிப்படியாக ஞானமளிப்பவன்.
816. பர்ஜந்ய: தாபத்தைப் போக்கும் மேகமாக இருப்பவன்.
817. பவந: தானே பக்தர்களிடம் செல்பவன்.
818. அநில: (தூண்டுதலின்றி) தானே பக்தர்களுக்கு அருள் புரிபவன்.
819. அம்ருதாச: அமுதூட்டுபவன்.
820. அம்ருதவபு: அமுதம் போன்ற திருமேனியை உடையவன்.
821. ஸர்வஜ்ஞ: முற்றும் உணர்ந்தவன்.
822. ஸர்வதோமுக: எளிதில் வசீகரிக்கக் கூடியவன்.

88. கலபஸ் சுவ்ரதஸ் ஸித்தஸ் ஸத்ருஜிச் சத்ரு தாபந:
ந்யக்ரோதோ தும்பரோ அஸ்வத்தஸ் சாணூராந்த்ர நிஷூதந:

823. ஸுலப: அடியவர்க்கெளியவன்.
824. ஸுவ்ரத: (சரணம் என்று வந்தவரைக் கட்டாயம் காப்பேன் என்னும்) விரதம் உடையவன்.
825. ஸித்த: (முயற்சியின்றியே) தானாகவே அடையக்கூடியவனாக இருப்பவன்.
826. சத்ருஜித்சத்ருதாபந: பகைவரை வென்றவர் மூலம் பகைவர்க்குத் துன்பம் தருபவன்.
827. ந்யக் ரோதாதும்பர: தான் உயர்ந்தவனாயினும், தாழ்ந்த நிலையிலுள்ள அடியார்கட்குக் கட்டுப்படுபவன்.
828. அச்வத்த: தேவர்கள் மூலமாக உலகங்களை நியமித்து ஆள்பவன்.
829. சாணூராந்த்ர நிஷூதந: (இந்திரனுக்குப் பகைவனான) சாணூரன் என்னும் பெயருடைய மல் லனைக் கொன்றவன்.

89. ஸஹஸ்ரார்ச்சிஸ் ஸப்த ஜிஹ்வஸ் ஸப்தைதாஸ் ஸப்த வாஹந:
அமூர்த்தி ரநகோ அசிந்த்யோ : ப்ராக்வம்ஸோ வம்ஸவர்த்தந:

830. ஸஹஸ்ரார்ச்சி: ஆயிரக் கணக்கான கிரணங்களை உடையவன்.
831. ஸப்தஜிஹ்வ: ஏழு நாக்குகளை உடைய அக்னி வடிவமாக இருப்பவன்.
832. ஸப்தைதா: ஏழுவகை சமித்துகளால் ஒளிவிடுபவன்.
833. ஸப்தவாஹந: ஏழுவாகனங்களை உடையவன்.
834. அமூர்த்தி: பருவடிவம் அல்லாதவன் (நுட்பமான உருவினன்)
835. அநக: பாபம் அற்றவன். (தூயவன்)
836. அசிந்த்ய: சிந்தனைக்கு எட்டாதவன்.
837. பயக்ருத்: பயத்தை உண்டு பண்ணுபவன்.
838. பயநாசந: பயத்தைப் போக்குபவன்.

90. அணுர்ப்ருஹத் க்ருஸஸ் ஸ்தூலோ
குணப்ருந்நிர் குணோ மஹாந்
அத்ருதஸ் ஸ்வத்ருதஸ் ஸ்வாஸ்ய:
ப்ராக்வம்ஸோ வம்ஸவர்த்தந:

839. அணு: மிகவும் நுண்ணியன்.
840. ப்ருஹத்: பெரியதிலும் பெரியவன்.
841. க்ருச: இலேசானவன்.
842. ஸ்தூல: பருத்தவன்.
843. குணப்ருத்: எல்லாப் பொருள்களையும் தன்னுடைய குணம் போலத்தரிப்பவன்.
844. நிர்க்குண: முக்குணக் கலப்பற்றவன். (குணமே இல்லாதவன் என்று பொருள் கொள்ளக்கூடாது.)
845. மஹான்: மிகச்சிறந்தவன். (தடையின்றிச் செய்யும் ஆற்றலான்.)
846. அத்ருத: அடக்கமுடியாத ஆற்றலான்.
847. ஸ்வத்ருத: தன்னைத் தானே அடக்கிக் கொள்பவன்.
848. ஸ்வாஸ்ய: இயல்பாகவே மேலான நிலையை உடையவன்.
849. ப்ராக்வம்ச: நித்ய சூரிகளுக்கு வம்ச மூலமாக உள்ளவன்.
850. வம்சவர்த்தந: நித்ய சூரிகளைப் பெருகச் செய்பவன்.

91. பாரப்ருத் கதிதோ யோகீ யோகீஸஸ் ஸர்வ காமத:
ஆஸ்ரமஸ் ஸ்ரமண: க்ஷõமஸ் சுபர்ணோ வாயு வாஹந:

851. பாரப்ருத்: பாரத்தைத் (சுமையைத்) தாங்குபவன்.
852. கதித: (வேதங்களால்) சொல்லப்பட்டவன்.
853. யோகீ: சாமர்த்தியம் படைத்தவன்.
854. யோகீச: யோகியர் தலைவன்.
855. ஸர்வகாமத: எல்லா விருப்பங்களையும் தருபவன்.
856. ஆச்ரம: (அடியார்களின் நினைவு பிறவிதோறும்) தொடர்ந்து இருந்து வருமாறு செய்பவன்.
857. ச்ரமண: (யோகத்தின் நினைவு பிறவிதோறும்) தொடர்ந்து இருந்து வருமாறு செய்பவன்.
858. க்ஷõம: திறமையுள்ளவனாகச் செய்பவன்.
859. சுபர்ண: தாண்ட உதவுபவன்.
860. வாயுவாஹந: மேல் எழச்செய்பவன். (வாயுவை இயக்குவிப்பவன்)

92. தநுர்த் தரோ தநுர் வேதோ தண்டோ தமயிதா அதம:
அபராஜிதஸ் ஸர்வ ஸஹோ நியந்தா நியமோயம:

861. தநுர்த்தர: சாரங்கம் என்னும் வில்லைத் தரித்திருப்பவன்.
862. தநுர்வேத: வில்வித்தையைக் கற்பிப்பவன்.
863. தண்ட: துஷ்டர்களைத் தண்டிப்பவன்.
864. தமயிதா: (நேராக அவதரித்துத் தீயவர்களை) அடக்குபவன்.
865. அதம: யாராலும் அடக்க முடியாதவன்.
866. அபராஜித: வெல்ல முடியாதவன், (எல்லாம் வல்லவன்.)
867. ஸர்வஸஹ: அனைவரையும் தாங்குபவன்.
868. நியந்த: நியமித்து நடத்துபவன்.
869. நியம: நியமிப்பவன் (நிச்சயிப்பவன்.)
870. யம: (தேவதை பலரை நியமித்து) நடத்துபவன்.

93. ஸத்வவாந் ஸாத்விகஸ் ஸத்யஸ் ஸத்ய தர்ம பராயண:
அபிப்ராய : ப்ரியார்ஹோஹ ப்ரியக்ருத் ப்ரீதி வர்த்தந:

871. ஸத்வவாந்: சுத்த சத்வ மயமாய் இருப்பவன்.
872. ஸாத்விக: சத்வ குணம் உடையவன்.
873. ஸத்ய: மெய்யனாய் இருப்பவன்.
874. ஸத்யதர்ம பராயண: உண்மையான தர்மங்களைக் கடைப்பிடிப்பதனால் மகிழ்பவன்.
875. அபிப்ராய: மேலான உபேயமாக நினைக்கப்படுகிறவன்.
876, 877. அர்ஹ: அன்பு செய்யத்தகுந்தவன்.
878. ப்ரியக்ருத்: அன்புக்குரியவன்.
879. ப்ரீத வர்த்தந: பக்தியை மேலும் மேலும் வளர்ப்பவன்.

94. விஹாய ஸகதிர் ஜ்யோதிஸ் சுருசிர் ஹுதபுக் விபு:
ரவிர் விரோசநஸ் ஸூர்யஸ் ஸவிதா ரவி லோசந:

880. விஹாயஸகதி: பரம பதத்தை அடைவிப்பவன்.
881. ஜ்யோதி: ஒளி மயமாய் இருப்பவன்.
882. ஸுருசி: அழகாக ஒளிர்பவன்.
883. ஸுதபுக்விபு: சுக்கில பட்சமாய் இருப்பவன். (அக்னியில் அவியாகச் சேர்க்கப்பட்டதை உண்பவன்.)
884. ரவி: (உத்தராயணமாகக் கொண்டாடப்படும்) சூரியன்.
885. விரோசந: ஒளி தருபவன்.
886. ஸூர்ய: வாயு லோகமாக இருப்பவன் (சூரியன் - வாயு லோகம்)
887. ஸவிதா: உண்டாக்குபவன்.
888. ரவிலோசந: (சூரிய கிரணங்களின் மூலம் சந்திரன் முதலானோரை ஒளிரச் செய்பவன்.)

95. அநந்தோ ஹுதபுக் போக்தா
சுகதோ நைகதோ அக்ரஜ:
அநிர் விண்ணஸ் ஸதா மர்ஷீ
லோகாதிஷ்டாந மத்புத:

889. அநந்தஹுத புக்போக்தா: மிகவும் மகிமையுள்ள இந்திரனையும், பிரமனையும் உடையவன்.
890. ஸுகத: சுகத்தை அளிப்பவன்.
891. நைகத: ஒன்று மட்டும் கொடாதவன் (பலவும் தருபவன்.)
892. அக்ரஜ: (அடியார்க்கு) முன்பாக விளங்குபவன்.
893. அநிர்விண்ண: துயர் அற்றவன்.
894. ஸதமர்ஷீ: பொறுமையுள்ளவன்.
895. லோகாதிஷ்டாந: உலகங்களைத் தாங்குபவனாய் இருப்பவன்.
896. அத்புத: அற்புதமாய் உள்ளவன்.

96. ஸநாத் ஸநாதந தம: கபில : கபிரவ்யய :
ஸ்வஸ்திதஸ் ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண:

897. ஸநாத்: அநுபவிக்கப்படுபவன்.
898. ஸநாதநதம: மிகப் பழமையானவன்.
899. கபில: விளக்கம் உற்றவன்.
900. கபிரவ்யய: அழிவில்லா ஆனந்தத்தை அனுபவிப்பவன்.

(ஒன்பதாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)
901. ஸ்வஸ்தித: மகத்தான மங்களத்தைக் கொடுப்பவன்.
902. ஸ்வஸ்திக்ருத்: மகத்தான மங்களத்தைச் செய்பவன்.
903. ஸ்வஸ்தி: தானே மங்கள வடிவமாயிருப்பவன்.
904. ஸ்வஸ்திபுக்: மங்களத்தைப் பரிபாலிப்பவன்.
905. ஸ்வஸ்திதக்ஷிண: இந்த மங்களத்தை யாக தக்ஷிணையாகத் தருபவன்.

97. அரௌத்ர : குண்டலீ சக்ரீ விக்ரம் யூர்ஜித ஸாஸந:
ஸப்தாதிகஸ் ஸப்த ஸஹ : ஸிஸிரஸ் ஸர்வரீ கர:

906. அரௌத்ர: கடுமையில்லாமல் குளிர்ந்திருப்பவன்.
907. குண்டலீ: காதணிகளை அணிந்திருப்பவன்.
908. சக்ரீ: சக்ராயுதத்தைத் தரித்திருப்பவன்.
909. விக்ரமீ: பராக்ரமம் உள்ளவன்.
910. ஊர்ஜிதசாஸந: பிறரால் கடக்க முடியாத கட்டளையைப் பிறப்பிப்பவன்.
911. ஸப்தாதிக: சொல்லுக்கெட்டாதவன்.
912. ஸ்ப்தஸஹ: அடியார்களின் கூப்பீட்டைச் சுமப்பவன்.
913. சிசிர: வேகமாகச் செல்பவன்.
914. ஸர்வரீகர: பிளக்கும் ஆயுதங்களைக் கையில் ஏந்தியவன்.

98. அக்ரூர: பேஸலோ த÷க்ஷõ தக்ஷிண க்ஷமிணாம் வர:
வித்வத்தமோ வீதபய: புண்ய ஸ்வரண கீர்த்தந:

915. அக்ரூர: குரூரம் இல்லாதவன்.
916. பேசல: அழகன்.
917. தக்ஷ: வேகம் உள்ளவன்.
918. தக்ஷிண: இனிய இயல்புடையவன்.
919. க்ஷமினாம்வர: பொறுமையுள்ளவரில் சிறந்தவன்.
920. வித்வத்தம: செயல் அறிவில் சிறந்தவன்.
921. வீதபய: யானையின் பயத்தைப் போக்கியவன்.
922. புண்யச்ரவண கீர்த்தந: (கஜேந்திரனின் சரிதத்தைக் கேட்பது) மிகவும் புண்ணியம் என்று அருளியவன்.

99. உத்தாரணோ துஷ் க்ருதிஹா புண்யோ துஸ்வப்ந நாஸந:
வீரஹா ரக்ஷணஸ் ஸந்தோ ஜீவந: பர்ய வஸ்தித:

923. உத்தாரண: கரை ஏற்றுபவன்.
924. துஷ்க்ருதிஹா: தீமை செய்பவரைத் தொலைப்பவன்.
925. புண்ய: பாபங்களைப் போக்குபவன். (புண்ணியவன்)
926. துஸ்ஸ்வப்நநாசந: கெட்ட கனவுகளைப் போக்குபவன்.
927. வீரஹா: பாசங்களை (தளைகளை) விடுவிப்பவன்.
928. ரக்ஷண: காப்பாற்றுபவன்.
929. ஸந்த: வளரச் செய்பவன்.
930. ஜீவந: உயிரைக் கொடுப்பவன்.
931. பர்யவஸ்தித: சூழ நின்றவன்.

100. அநந்த ருபோ அநந்தஸ்ரீ: ஜிதமந்யுர் பயாபஹ:
சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிஸோ திஸ:

932. அநந்தரூப: எண்ணிறந்த உருவங்களை உடையவன்.
933. அநந்தஸ்ரீ: அளவற்ற செல்வமுள்ளவன்.
934. ஜிதமந்யு: கோபத்தை வென்றவன்.
935. பயாபஹ: அடியவர் பயத்தைப் போக்குபவன்.
936. சதுரச்ர: அடியவர் வேண்டுதல்களை உடனே செய்து வைப்பதில் சமர்த்தன்.
937. கபீராத்மா: ஆழங்காண முடியாதவன்.
938. விதிச: அனைவருக்கும் மேலானவன்.
939. வ்யாதிச: பதவிகளைத் தருபவன்.
940. திச: நியமிப்பவன்.

101. அநாதிர் பூர்புவோ லக்ஷ்மீஸ் சுவீரோ ருசிராங்கத:
ஜநநோ ஜந ஜந்மாதிர் பீமோ பீம பராக்ரம:

941. அநாதி: (பிரமன், ருத்ரன் முதலானோரால்) பகவான் அறியப்படாதவர்.
942. பூர்புவ: உண்மையாக வாழ்பவர் உள்ளத்து இருப்பிடமாக உள்ளவன்.
943. லக்ஷ்மீ: தானே எல்லாவிதச் செல்வமாக உள்ளவன்.
944. ஸுவீர: சிறந்த வீரம் உள்ளவன்.
945. ருசிராங்கத: தனது அழகான திருமேனியை அநுபவிக்குமாறு அடியார்களுக்குத் தருபவன்.
946. ஜநந: பிறப்பிப்பவன்.
947. ஜநஜந்மாதி: பிறவிப்பயனாக உள்ளவன்.
948. பீம: பயங்கரன்.
949. பீமபராக்ரம: பயங்கரமான பராக்ரமம் உடையவன்.

102. ஆதார நிலயோ தாதா புஷ்ப ஹாஸ: ப்ரஜாகர:
ஊர்த்வகஸ் ஸத்பதாசார: ப்ராணத: ப்ரணவ: பண:

950. ஆதாரநிலய: சாதுக்களுக்கு இருப்பிடமானவன்.
951. தாதா: தர்மத்தை உபதேசிப்பவன்.
952. புஷ்பஹாஸ: மலர்கின்ற மலரைப் போலும் இனியவன்.
953. ப்ரஜாகர: விழித்திருப்பவன்.
954. ஊர்த்வக: மிகவும் உயர்ந்தவன்.
955. ஸத்பதாசார: பிறரை நல்வழிப்படுத்துபவன்.
956. ப்ராணத: உயிரளிப்பவன்.
957. ப்ரணவ: தனது திருவடிகளைத் தொழுது எழச் செய்பவன்.
958. பண: நிலை மாற்றம் செய்பவன். (தலைவனாக உள்ள தான் அடியவனாக இருந்து மகிழ்பவன்.)

103. ப்ரமாணம் ப்ராண நிலய:
ப்ராண த்ருத் ப்ராண ஜீவந:
தத்வம் தத்வ விதேகாத்மா
ஜந்ம ம்ருத்யு ஜராதிக:

959. ப்ரமாணம்: பிரமாணமாய் இருப்பவன்.
960. ப்ராணநிலய: அனைத்து ஆன்மாக்களுக்கும் வாழ்விடமானவன்.
961. ப்ராணத்ருத்: உயிரினங்களைத் தரிப்பவன்.
962. ப்ராண ஜீவந: உயிரினங்களுக்கு வாழ்வாக இருப்பவன்.
963. தத்வம்: சாரமாக (தத்துவமாக) உள்ளவன்.
964. தத்வவித்: தத்துவத்தை அறிந்தவன்.
965. ஏகாத்மா: உலகங்கட்கெல்லாம் ஓருயிராய் இருப்பவன்.
966. ஜந்மம் ருத் ருஜராதிக: பிறப்பு, இறப்பு, மூப்புகட்கு அப்பாற்பட்டவன்.

104. பூர்புவ: ஸ்வஸ்த ருஸ்தாரஸ் ஸவிதா ப்ரபிதா மஹ:
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா
யஜ்ஞாங்கோ யஞ்ஞ வாஹந:

967. பூர்புவஸ்வஸ்தரு: மூவுலக உயிரினங்களும் தங்குவதற்குரிய மரமாக உள்ளவன்.
968. தார: (உலக வாழ்க்கை என்னும் கடலைத் தாண்டுவதற்குரிய) கப்பலாக இருப்பவன்.
969. ஸ்விதா: உண்டாக்குபவன்.
970. ப்ரபிதாமஹ: பிரமனைப் படைத்த தந்தையாய் இருப்பவன்.
971. யஜ்ஞ: தானே வேள்வியாக இருப்பவன்.
972. யஜ்ஞபதி: வேள்விகளுக்குத் தலைவன்.
973. யஜ்வா: பிறர் செய்யும் வேள்விகளைத் தான் செய்வதற்கு அங்கமாக உள்ளவன்.
974. யஜ்ஞாங்க: பிறர் செய்யும் வேள்விகளைத் தனதாக உள்ளவன்.
975. யஜ்ஞவாஹந: வேள்வியை நடத்தித் தருபவன்.

105. யஜ்ஞ ப்ருத் யஜ்ஞ க்ருத் யஜ்ஞி
யஜ்ஞ புக் யஜ்ஞ ஸாத ந:
யஜ்ஞாந்த க்ருத் யஜ்ஞ குஹ்யம்
அந்ந மந்நாத ஏவ ச

976. யஜ்ஞப்ருத்: யாகங்களை நிறைவிப்பவன்.
977. யஜ்ஞக்ருத்: யாகங்களை உண்டாக்கியவன்.
978. யஜ்ஞீ: வேள்விகளால் ஆராதிக்கப்படுபவன்.
979. யஜ்ஞபுக்: வேள்விகளை அநுபவிப்பவன்.
980. யஜ்ஞஸாதந: வேள்விகளை உபாயமாக்குபவன்.
981. யஜ்ஞாந்தக்ருத்: வேள்வியின் பலனை உண்டாக்குபவன்.
982. யஜ்ஞகுஹ்யம்: வேள்விகளின் அடிப்படை ரகசியமாக உள்ளவன்.
983. அந்நம்: உண்ணும் சுவை அமுதாக உள்ளவன்.
984. அந்நாத: தன்னை அநுபவிப்பவனைத்தான் இனிதாக அநுபவிப்பவன்.

106. ஆத்ம யோநிஸ் ஸ்வயஞ் ஜாதோ
வைகாநஸ் ஸாம காயந:
தேவகீ நந்தநஸ் ஸ்ரஷ்டா க்ஷிதீஸ:
பாப நாஸந:

985. ஆத்மயோநி: (அடியார்களைத் தன்னுடன்) ஒரே தன்மையாகக் கலக்கச் செய்பவன்.
986. ஸ்வயம் ஜாத: தான்தோன்றி (தானே அவதாரம் செய்பவன்.)
987. வைகாந: வேரோடு பெயர்ப்பவன். (துக்கங்களைக் களைபவன்.)
988. ஸாமகாயந: சாமகானம் செய்யக் கேட்டிருப்பவன்.
989. தேவகீநந்தந: தேவகியின் மைந்தன்.
990. ஸ்ரஷ்டா: படைப்பவன்.
991. க்ஷிதீச: பூமியை ஆள்பவன்.
992. பாபநாசந: பாபங்களை அழிப்பவன்.

107. ஸங்கப்ருந் நந்தகீ சக்ரீ ஸார்ங்க தந்வா கதாதர:
ரதாங்க பாணி ர÷க்ஷõப்யஸ் ஸர்வ ப்ரஹரணாயுத:

ஸ்ரீ ஸர்வ ப்ரஹரணாயுத ஓம் நம இதி

993. சங்கப்ருத்: வனமாலையைத் தரிப்பவன்.
994. நந்தகீ: நந்தகம் என்னும் வாளைத் திவ்ய ஆயுதமாக உடையவன்.
995. சக்ரீ: திருவாழியை (சக்ராயுதத்தை) உடையவன்.
996. ஸார்ங்கதந்வா: ஸ்ரீசார்ங்கம் என்னும் வில்லை ஏந்தியவன்.
997. கதாதர: கௌமேதகீ என்றழைக்கப்படும் கதாயுதத்தை உடையவன்.
998. ரதாங்கபாணி: சக்கரத்தைக் கையில் கொண்டவன்.
999. அ÷க்ஷõப்ய: அசைக்க முடியாதவன்.
1000. ஸர்வப்ரஹரணாயுத: எல்லாத் திவ்ய ஆயுதங்களையும் உடையவன்.

ஓம் நம இதி ஸர்வப் ரஹரணாயுத என்பதுடன் 1000 திருநாமங்கள் நிறைவுறும். மூலத்தில் இதுவரை உள்ளது.

ஸர்வப்ரஹரணாயுத என்னும் திருநாமத்தை இருமுறை ஓதி ஓம் நம என்று முடிப்பது முறை.

108. வநமாலீ கதீ ஸார்ங்கீ ஸங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீமாந் நாரயணோ விஷ்ணுர் வாசுதேவோ பிரக்ஷது

வைஜயந்தி எனப்படும் வாடாத வநமாலையை அணிந்தவரும், சங்கு சக்கரம் சாரங்கம் கதை நந்தகம் ஆகியவற்றைத் திவ்யாயுதங்களாக உடையவரும், விஷ்ணு என்றும், வாசுதேவன் என்றும் பெயர் கொண்டவரும், பிராட்டியாரோடு கூடியவருமான நாராயணன் நம்மைக் காப்பாராக!

(இந்தச் சுலோகம் மகாபாரதத்தில் இல்லை. எனினும் காலங்காலமாக நடைமுறையில் பாராயணம் செய்யப்படுகிறது. இந்தச் சுலோகத்தை மூன்று முறை சொல்வது வழக்கம்.)

********

உத்தரபாகம்
(பிற்பகுதி) பலச்ருதி: (பயன் கூறுவது)

1. இதீதம் கீர்த்த நீயஸ்ய கேஸவஸ்ய
மஹாத்மந:
நாம் நாம் ஸஹஸ்ரம் திவ்யாநாம்
அஸேஷேண ப்ரகீர்த்திதம்

மகிமை பொருந்தியவரும் போற்றத்தக்கவருமான கேசவருடைய திவ்ய நாமங்கள் ஆயிரமும் ஒன்று விடாமல் (சந்தந மகாராஜாவின் குமாரரான பீஷ்மரால், குந்தி மகனான தருமபுத்திரருக்கு) கூறப்பட்டன.

2. ய இதம் ஸ்ருணுயாந் நித்யம் யஸ்சாபி
பரி கீர்த்தயேத்
நாசுபம் ப்ராப்நுயாத் கிஞ்சித்
ஸோஅமுத்ரேஹ ச மாநவ:

இதைத் தினந்தோறும் கேட்பவனும், கீர்த்தனம் செய்பவனும் இம்மையிலும் மறுமையிலும் யாதொரு கெடுதலையும் அடையான்.

3. வேதாந்தகோ ப்ராஹ்மணஸ் ஸ்யாத்
க்ஷத்ரியோ விஜயீ பவேத்
வைஸ்யோ தநஸம்ருத்தஸ் ஸ்யாத்
ஸுத்ரஸ் சுக மவாப்நுயாத்

(இதைப் பாராயணம் செய்வதால்) பிராமணன் வேதாந்த ஞானம் பெறுவான். க்ஷத்திரியன் வெற்றி பெறுவான். வைசியன் செல்வம் நிரம்பப் பெறுவான். சூத்திரன் சுகம் பெறுவான்.

4. தர்மார்த்தீ ப்ராப்நுயாத் தர்மம்
அர்த்தார்த்தீ சார்த்த மாப்நுயாத்
காமா நவாப் நுயாத் காமீ ப்ரஜார்தீ
ப்ராப்நுயாத் ப்ரஜா:

தருமத்தை விரும்புபவன் தருமத்தை அடைவான். பொருளை விரும்புபவன் பொருளை அடைவான். இன்பங்களை விரும்புகிறவன் இன்பங்களை அடைவான். மக்களை விரும்புகிறவன் மக்களை அடைவான்.

(112 முதல் 115 வரையான சுலோகங்கள் ஆயிரம் திருநாமங்களைப் பக்தியுன் இசைப்பவனுக்கு எல்லாச் செல்வங்களும் வரும், எல்லாத் துக்கங்களும் விலகும் என்கிறது.)

5. பக்திமாந் யஸ் ஸதோத்தாய சுசிஸ்
தத்கத மாநஸ:
ஸஹஸ்ரம் வாசுதேவஸ்ய
நாம்நா மேதத் ப்ரகீர்த்தயேத்

6. யஸ: ப்ராப்நோதி விபுலம் யாதி
ப்ராதாந்ய மேவ ச
அசலாம் ஸ்ரிய மாப்நோதி ஸ்ரேய:
ப்ராப்நோத் யநுத்தமம்

7. ந பயம் க்வசி தாப்நோதி வீர்யம்
தேஜஸ்ச விந்ததி
பவத்ய ரோகோ த்யுதிமாந்
பலரூப குணாந்வித:

8. ரோகார்த்தோ முச்யதே ரோகாத்
பத்தோ முச்யேத பந்தநாத்
பயாந் முச்யேத பீதஸ்து
முச்யே தாபந்ந ஆபத:

எவன் ஒருவன் நாள்தோறும் காலையில் எழுந்ததும் கடன்களை முடித்து விட்டுத் தூய மனதுடன் வாசுதேவரிடத்தில் மனதைச் செலுத்தி, ஆயிரம் திருநாமங்களையும் இசைக்கிறானோ, அவன் பெரும் புகழைப் பெறுவான்; சுற்றத்தாரிடையே நன்மதிப்பைப் பெறுவான்; அழிவற்ற செல்வத்தை அடைவான்; மேலுலக இன்பத்தையும் (முத்தியையும்) பெறுவான்.

அவன் எங்கும் அச்சத்தை அடையான்; சிறந்த அதிகாரங்களையும் உற்சாகத்தையும் அடைவான்; நோய் அணுகப்பெறான்; ஒளி, வல்லமை, அழகு, குணநலன்கள் ஆகியவை பெறுவான்.

பிணியால் பீடிக்கப்பட்டவன் பிணியிலிருந்தும் விடுபடுவான்; பந்தங்களில் சிக்கியவன் பந்தங்களிலிருந்தும் விடுபடுவான்; பயந்தவன் பயத்தினின்றும் விடுபடுவான்; ஆபத்தில் அகப்பட்டவன் அந்த ஆபத்திலிருந்து நீங்கப் பெறுவான். (கஷ்டங்கள் நீங்கப் பெறுவான்.) (5-8)

9. துர்காண் யதிதரத்யாசு புருஷ :
புரு÷ஷாத்தமம்
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண நித்யம்
பக்தி ஸமந்வித:

இந்த ஆயிரம் திருநாமங்களையும் எவனொருவன் பக்தியுடன் புரு÷ஷாத்தமனைக் குறித்துத் துதிக்கின்றானோ, அவன் கடத்தற்கரிய கஷ்டங்களையும் வெகு விரைவில் கடந்து விடுவான்.

(பகவத் ப்ராப்தி)
இரண்டு சுலோகங்கள்.

10. வாஸுதேவா ஸ்ரயோ மர்த்யோ
வாஸுதேவ பராயண:
ஸர்வ பாப விசுத் தாத்மா யாதி ப்ரஹ்ம
ஸநாதநம்:

11. ந வாஸுதேவ பக்தாநாம் அசுபம்
வித்யதே க்வசித்
ஜந்ம ம்ருத்யு ஜரா வ்யாதி பயம்
நைவோப ஜாயதே

(117,118 ஸ்லோகங்கள் பகவானை அடையத்தக்க பொருளாக நம்பிப் பற்றுபவன் பெறும் பலன்களைச் சொல்லும்.)

வாசுதேவனை அடையப் பெற்றவன், அவரையே புகலிடமாகப் பெற்றதால், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டுத் தூயவனாய், எப்பொழுதும் நிலைத்திருக்கும் தன்மையுடைய பிரம்மத்தை அடைகிறான். மேலும், வாசுதேவ பக்தர்களுக்கு எல்லாக்காலத்தும் அசுபங்கள் நேர்வதில்லை. இறப்பு முதலானவற்றிலிருந்து விடுபடுகிறான். (10-11)

(வழிபடுபவன் பெறும் பலன்கள்)

12. இமம் ஸ்தவ மதீயாந: ஸ்ரத்தா பக்தி
ஸமந்வித:
யுஜ்யே தாத்ம ஸுகக்ஷõந்தி ஸ்ரீ த்ருதி
ஸ்ம்ருதி கீர்த்திபி:

பக்தியுடன் கூடிய ஆவலுடன் இந்த ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்பவன் ஆத்ம சுகம், பொறுமை, செல்வம், நிலையான மனநிலை, நல்ல நினைவாற்றல், மிகுந்த புகழ் ஆகியவற்றை அடைவான்.

(பக்தியின் பயன்)

13. ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம்
ந லோபோ நாசுபா மதி:
பவந்தி க்ருத புண்யாநாம் பக்தாநாம்
புரு÷ஷாத்தமே

புரு÷ஷாத்தமனிடம் பக்தி செய்பவனுக்குக் கோபம், பொறாமை, பேராசை, கெட்ட எண்ணம் ஆகிய எதுவும் இராது. இவை தாமாகவே விலகிப் போகும்.

(பகவானுடைய பெருமை)

14. த்யௌஸ் ஸசந்த்ரார்க்க நக்ஷத்ரா
கம் திஸோ பூர் மஹோததி
வாஸுதேவஸ்ய வீர்யேண
வித்ருதாநி மஹாத்மந:

15. ஸசுராசு ரகந்தர்வம்
ஸய÷க்ஷõரக ராக்ஷஸம்
ஜகத் வஸே வர்த்ததேதம்
க்ருஷ்ணஸ்ய ஸசராசரம்

சந்திரன், சூரியன், நட்சத்திரங்களுடன் கூடிய ஆகாயமும், திசைகளும், பூமியும், கடல்களும் ஆகிய அனைத்தும் அளவற்ற பெருமை படைத்த வாசுதேவனுடைய திவ்ய சக்தியால் தாங்கப்படுகின்றன. எல்லாமே பகவானின் வசத்தில் உள்ளன.

தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யட்சர்கள், நாகர்கள், அரக்கர்கள் மற்றுமுள்ள சராசரங்கள் ஆகிய யாவுமே பகவான் கிருஷ்ணனின் வசத்திலேயே உள்ளன. (14-15)

(சரீர ஆத்ம சம்பந்தத்தின் விளைவு)

16. இந்த்ரியாணி மநோ புத்திஸ்
ஸத்வம் தேஜோ பலம் த்ருதி:
வாஸுதேவாத் மகாந்யாஹு :
÷க்ஷத்ரம் ÷க்ஷத்ரஜ்ஞ ஏவ ச

இந்திரியங்கள், மனம், புத்தி, சித்தம், கூர்மை, பலம், தைரியம், தேகம், ஆத்மா ஆகிய யாவுமே வாசுதேவனை ஆத்மாவாக உடையன. அனைத்தும் வாசுதேவமயமே!

(தர்மத்திற்குப் பிரபு அச்சுதனே!

17. ஸர்வா கமாநாமாசார : ப்ரதமம் பரிகல்பதே :
ஆசார ப்ரதமோ தர்மோ தர்மஸ்ய ப்ரபுரச்யுத :

ஆசாரமே சாத்திரங்கள் அனைத்துக்கும் முதன்மையானது. ஆசாரமே அகத்தூய்மையும், புறத்தூய்மையும் தரும். ஆசாரத்திலிருந்து உண்டானதே தருமம். இந்தத் தருமத்திற்குப் பிரபு அச்சுதன் ஒருவனே!

(அனைத்தும் பகவானிடத்திலிருந்தே உண்டாகும்.)

18. ரிஷய : பிதரோ தேவா மஹா பூதாநி தாதவ :
ஜங்கமா ஜங்கமஞ் சேதம் ஜகந் நாராயணோத்பவம்

ரிஷிகள், பிதிரர்கள், தேவர்கள், ஐம்பெரும் பூதங்கள், போக போக்கியங்கள், நிலையான பொருள்கள், தாவரங்கள் ஆகிய இவை அனைத்தும் பகவானிடமிருந்தே உண்டாயின.

(ஞானத்திற்குக் காரணம் பகவானே)

19. யோகோ ஞாநம் ததா ஸாங்க்யம்
வித்யாஸ் ஸில்பாதிகர்ம ச
வேதாஸ் ஸாஸ்த்ராணி விஞ்ஞாநம்
ஏதத் ஸர்வம் ஜநார்தநாத்

கர்மயோகம்; பக்தியோகம்; ஞானம், ஸாங்க்யம் எனப்படும் ஞானயோகம்; தர்க்கம், வியாகரணம் முதலான வித்தைகள்; சிற்பம் முதலான தொழில்கள் (கலைகள்); வேதங்கள்; சாத்திரங்கள்; இதிகாச புராணங்கள்; விஞ்ஞானம் ஆகிய அனைத்துமே பகவான் ஜனார்த்தனனிடமிருந்தே தோன்றின.

(நிர்வாகச் சிறப்பு)

20. ஏகோ விஷணுர் மஹத்பூதம் ப்ருதக்
பூதாந் யநேகஸ:
த்ரீந் லோகாந் வ்யாப்ய பூதாத்மா
புங்க்தே விஸ்வ புகவ்யய:

பெரிய பொருளாக இருப்பவர் விஷ்ணு. அவர், ஒருவரே! அவரே பலப்பல விதங்களாகப் பார்க்கப்படுகிற ஐம்பெரும் பூதங்கள், மூன்று வித சேதநர்கள் (பக்தர், முக்தர், நித்யர்), மூவுலகங்கள் ஆகியவற்றில் வியாபித்து நிற்கிறார். அந்தராத்மாவாகவும், காப்பவராகவும் இருக்கிறார். அழிவும், மாறுபடும் இல்லாதவராக இருந்து ஆனந்தத்தை அநுபவித்து நிர்வகித்து வருகிறார்.

(மணியான துதி)

21. இமம் ஸ்தவம் பகவதோ
விஷ்ணோர் வ்யாஸேந கீர்த்திதம்
படேத்ய இச்சேத் புருஷ : ஸ்ரேய :
ப்ராப்தும் சுகாநி ச

(இந்த தோத்திரத்துக்குப் பொருள் அளவற்ற பெருமைக்குரிய பகவான் மகாவிஷ்ணு. விஷ்ணுவின் அவதாரமான சொல்லின் செல்வர், மஹாஞானி வியாச பகவான் இத்தோத்திரத்தை அருளினார். இவ்விருவரின் மங்களமான மகிமைகள் இத்தோத்திரத்தில் உள்ளன. எனவே, இது இம்மை மறுமை நலன் கருதுவோர் அனைவர்க்கும் ஏற்ற மணியான துதி.)

உயர்வையும் சுகத்தையும் அடைய விரும்பும் எந்த மனிதனும் வியாசபகவானால் கீர்த்தநம் செய்யப்பெற்ற விஷ்ணுவினுடைய இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பானாக.

(மேலான தெய்வத்தை வணங்குகிறேன்)

22. விஸ்வேஸ்வர மஜம் தேவம் ஜகத : ப்ரபுமவ்யயம்
பஜந்தி யே புஷ்கராக்ஷம் ந தே யாந்தி பராபவம்
ந தே யாந்தி பராபவம் ஓம் நம இதி

ஸ்ரீ விஷ்ணு திவ்யநாம ஸ்தோத்ரம் உத்தர பாகம் சம்பூர்ணம்.

அனைத்துலகுக்கும் ஆண்டவனும், பிறப்பற்றவரும், மேலான ஆனந்த வடிவினரும் உலகின் தலைவரும், மாறுபாடு இல்லாதவருமாகிய தாமரைக் கண்ணனை வழிபடுகிறவர்கள் நிச்சயமாக எந்நாளும் தோல்வி அடையமாட்டார்கள்; தோல்வி அடையவே மாட்டார்கள்.

ஓம் நம: என்று கூறி, எல்லா நன்மைகளும் உண்டாகப் பரம புருஷனை மனம் மொழி மெய்களால் வணங்கி நிற்கிறேன்.

ஸ்ரீஸஹஸ்ர நாம அத்யாயம் முடிவுற்றது.

********

அர்ஜுந உவாச -

23. பத்மபத்ர விஸாலாக்ஷ பத்மநாப ஸுரோத்தம
உவாச - பக்தாநா மநுரக்தாநாம் த்ராதா பவ ஜநார்தந

ஸ்ரீ பகவாநுவாச -

24. யோ மாம் நாம ஸஹஸ்ரேண ஸ்தோது மிச்சதி பாண்டவ
ஸோஹ மேகேந ஸ்லோகேந ஸ்துத ஏவ ந ஸம்ஸய:
ஸ்துத ஏவ ந ஸம்ஸய ஓம் நம இதி

வ்யாஸ உவாச -

25. வாஸாநாத் வாஸுதேவஸ்ய வாஸிதம் புவனத்ரயம்
உவாச - ஸர்வபூத நிவாஸோ அஸி வாஸுதேவ நமோஸது தே

ஸ்ரீ வாஸுதேவ நாமேஅஸ்து த ஓம் நம இதி

பார்வத்யுவாச -

26. கேநோ பாயேந லகுநா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்
பட்யதே பண்டிதைர் நித்யம் ஸ்ரோது மிச்சாம் யஹம் ப்ரபோ

ஈஸ்வர உவாச -

27. ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநநே

ஸ்ரீ ராமநாம வராநந ஓம் நம இதி

ப்ரஹ்மோவாச -

28. நமோஸ்த் வநந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே
ஸஹஸ்ர பாதா க்ஷிஸிரோரு பாஹவே
ஸஹஸ்ர நாம்நே புருஷாய ஸாஸ்வதே
ஸஹஸ்ர கோடி யுகதாரிணே நம:

ஸ்ரீ ஸஹஸ்ரகோடி யுகதாரிண ஓம் நம இதி

ஸஞ்ஜய உவாச -

29. யத்ர யோகேஸ்வர : க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தநுர்தர:
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதி : த்ருவா நீதிர் மதிர் மம

ஸ்ரீ பகவாந் உவாச -

30. அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா : பர்யு பாஸதே
தேஷாம் நித்யாபி யுக்தாநாம் யோக ÷க்ஷமம் வஹாம் பஹம்

31. பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே

32. ஆர்த்தா விஷண்ணாஸ் ஸிதிலாஸ்ச பீதா :
கோரேஷுச வ்யாதிஷு வர்த்தமாநா :
ஸங்கீர்த்ய நாராயண ஸப்த மாத்ரம்
விமுக்த துக்காஸ் சுகிநோ பவந்து

33. காயேனவாசாமனஸேந்த்ரியைர்வா
புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
ஸ்ரீமந்நாராயணாயேதி சமர்ப்பயாமி.

34. இதி ஸ்ரீ மஹாபாரதே ஸதஸாஹஸ்ரிகாயாம் ஸம்ஹிதாயாம்
வையாஸிக்யாம் ஆநுஸாஸநிக பர்வாந்தர்கத தாநதர்ம
பர்வணி ஸ்ரீபீஷ்மயுதிஷ்டிரஸம்வாதே

ஸ்ரீவிஷ்ணோர் திவ்யஸஹஸ்ரநாம
ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.