புதன், 22 ஜூலை, 2020

அமாவாஸ்யையை கணிக்கும் முறை.ஶ்ராத்த திதிக்கும் இதேதான் கணக்கு.

பஞ்சாங்கத்தில் பகற்பொழுதை "அஹஸ்"என்ற சொல்லால் குறிப்பிட்டு இருப்பார்கள்.அஹஸ்ஸானது முப்பது நாழிகைக்கு வெயில் காலங்களில் கூடுதலாகவும் பனி காலங்களில் குறைவாகவும் இருக்கும். ஆந்த அஹஸ்ஸை ஐந்தாக பிரித்துக்கொள்ளவேண்டும்.
அவை
1)ப்ராத:காலம்
2)ஸங்கவகாலம்
3)மாத்யாஹ்னகாலம்
4)அபராஹ்ன காலம்
5)சாயாஹ்ண காலம்
என்பனவாகும்.

இவற்றில் ஜன்மநக்ஷத்ரம், ஷஷ்ட்ப்த பூர்த்தி, வ்ரதங்கள் ஆகியவை ப்ராத:காலத்தை வைத்து கணிக்கப்படும்.

காயத்ரி ஜபம்,தீட்டின் நிவ்ருத்தி ஆகியவை ப்ராயஶ்சித்தங்களை  ஸங்கவ காலத்தை வைத்து.

நாந்தி முதலியவை மத்யாஹ்ன காலத்தை வைத்து

அமாவாசை ,சிராத்ததிதி நிர்ணயத்திற்கு அபராஹ்ன எனப்படும்  பிற்பகல் 01:12 மணிமுதல் 03:36 வரையில் திதி இருப்பதை கொண்டு நிர்ணயிக்கவேண்டும்.இரண்டு நாளும் அபராஹ்ன வ்யாப்தி இருந்தால் அதிகவ்யாப்தி என்றைக்கு அன்றைக்குதான் அமாவாஸ்யை பித்ருதர்ப்பணதினம்,சிராத்ததிதி.

*அயல் நாடுகளில் உள்ளவர்கள் ஸங்கல்பங்கள் செய்யும் பொழுது _"பாரத வருஷே"_ என்ற இடத்தில் என்ன சொல்வது என்ற சிறு தடுமாற்றத்தை போக்கவே இந்த பதிவு.......*

01. இந்தியா — *பாரத வர்ஷம்*.,

02. அட்லாண்டிக் பெருங்கடல் — *கேதுமாலா வர்ஷம்*.,

03. ஐரோப்பா — *ஹரி வர்ஷம்*.,

04. வடதுருவம் — *இலாவ்ருத வர்ஷம்*.,

05. தென் அமெரிக்கா — *குரு வர்ஷம்*.,

06. வட அமெரிக்கா — *ஹிரண்யக வர்ஷம்*.,

07. Green Land — *ரம்யக வர்ஷம்*.,

08. ஆசியா — *கிம்புருஷ வர்ஷம்*.,

09. பஸிபிக் சமுத்திரம் — *பத்ராஸ்வ வர்ஷம்*.

அயல் நாடுகளில் ஸங்கல்பங்களுக்கு இவற்றை கையாளலாம்.

ருதுக்கள்

சித்திரை, வைகாசி - வஸந்த ருது
ஆனி, ஆடி - க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது
மார்கழி, தை - ஹேமந்த ருது
மாசி, பங்குனி - சிசிர ருது

கிழமைகளைச் சொல்லும் முறை

ஞாயிறு - பானு வாஸர
திங்கள் - இந்து வாஸர
செவ்வாய் - பவும வாஸர
புதன் - சவும்ய வாஸர
வியாழன் - குரு வாஸர
வெள்ளி - ப்ருகு வாஸர
சனி - ஸ்திர வாஸர

பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை

சித்திரை - மேஷ மாஸே
வைகாசி - ரிஷப மாஸே
ஆனி - மிதுன மாஸே
ஆடி - கடக மாஸே
ஆவணி - ஸிம்ம மாஸே
புரட்டாசி - கன்யா மாஸே
ஐப்பசி - துலா மாஸே
கார்த்திகை - வ்ருச்சிக மாஸே
மார்கழி - தனுர் மாஸே
தை - மகர மாஸே
மாசி - கும்ப மாஸே
பங்குனி - மீன மாஸே.
தெய்வத்துக்கு பிடித்த எட்டு புஷ்பங்கள் : --
அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம் – இறைவனுக்கு பிடித்த எட்டு புஷ்பங்களில் முதன்மையாக அஹிம்சையே சொல்லப்பட்டிருக்கிறது. கொசுவாக இருக்கட்டும். மனிதனாக இருக்கட்டும்… எல்லாமே ஜந்துதான்.இன்னொரு ஜீவனை அழிக்க உரிமை கிடையாது. அஹிம்சை என்பது ரொம்ப முக்கியம்.
புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ – கடைபிடிப்பதிலேயே கஷ்டமானது இதுதான். ஐம்புலன்களையும் அடக்கிவிட்டு உள்ளன்போடு புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ: என்று சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கும் இறையருளே உதவும்.

சர்வ பூத தயா புஷ்பம் – பூத தயை என்றால் எல்லா விலங்குகளிடமும் தாவரங்களிடமும் அன்புடன் இருத்தல்என்று பொருள். மரங்களை வெட்டுவது பாவம் என்கிறது வேதம். தாவரங்களிடத்தும் நமக்கு தயை இருக்கவேண்டும் என்று பகவான் எதிர்பார்க்கிறார்.

க்ஷமா புஷ்பம் விசேஷத: – க்ஷமை என்றால் இரட்டையை பொறுத்துக்கொள்ளும் குணம். இரட்டை என்றால்?இரண்டு எல்லைகள் என்று பொருள். உஷ்ணம் – குளுமை; சுகம் – துக்கம்; லாபம் நஷ்டம்; எல்லாவற்றையும்சமமாக பாவிப்பது. பூமி மாதாவுக்கு க்ஷமா என்றொரு பெயர். ராமனுக்கு க்ஷமயா தரித்ரி என்று ஒரு வர்ணனை – பூமியைப்போல் பொறுமை காப்பவன் என்ற பொருள்.

சாந்தி புஷ்பம் – மனமது அடங்கி உள்ளம் பகவானிடம் கரைந்த நிலையில் எழும் அமைதியே புஷ்பம்.

தவம் புஷ்பம் – எம்பெருமானை எப்போதும் நினைத்து தவம் பண்ணுவதும் ஒரு புஷ்பம். தவம் என்றால் ஒன்றையேநினைத்து உருகுதல். அந்தியும் பகலும் நிரறாத கண்களால் பகவானுடைய திருக்கல்யாண குணத்தை நினைத்துநினைத்து உருகுவதே தவம்.

ஞானம் புஷ்பம் – நல்ல ஞானம் – ஐயம் திரிபற்ற முறையில் மஹான்களிடத்தில் கேட்டு பெற்ற ஞானம் புஷ்பம்.தெளிந்த ஞானத்தை பெறுவதோடல்லாமல் மற்றவரை தெளிவிக்கவும் வேண்டும்.

த்யானம் புஷ்பம் – காற்றில்லாத இடத்திலே ஏற்றி வைக்கப்பட்ட தீப ஜ்வாலையைப்போல் ஒரே ரீதியாக ஆடாமல் அசையாமல் இருப்பது. மனம் சஞ்சலமடையாமல் எம்பெருமானை த்யானம் செய்வது.

சத்யம் அஷ்டவிதம் புஷ்பம்
விஷ்ணோ: ப்ரீதி கரம்பவேத்:

விஷ்ணுவுக்கு உகந்த புஷ்பம் சத்யம். உள்ளதை உள்ளவாறு சொல்வதல்ல சத்யம். அதை மனதுக்கு இதமான முறையில், சுயநலமாகவோ முகஸ்துதியாகவோ இல்லாமல், பிறருடைய துன்பம் குறையும் வகையில் சொல்லப்படும் உண்மையின் வடிவமே சத்யம். சத்யமே எல்லாவற்றுக்கும் முதன்மையானது. இவ்வாறு சத்யம் உள்ளிட்ட எட்டு புஷ்பங்கள் பகவான் விஷ்ணுவுக்கு ரொம்ப ப்ரீதியானவை.

अहिंसाप प्रथमं पुष्पं । पुष्पंमिन्द्रिय निग्र: ॥
सर्वभूतदया पुष्पं । क्षमा पुष्पं विशेषत: ॥
शान्ति पुष्पं: तप: पुष्पं । ध्यान पुष्पं तथैवच: ॥
सत्यं अष्दमिदं पुष्पं । विष्णोर् प्रितिकरं भवेत् ॥

சர்வம் விஷ்ணுமயம் ஜகத்:

(முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் உபதேசங்களிலிருந்து)
#சிவ_சிவ

அருள்மிகு விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில், விருத்தாசலம்.

ஆராய்சியாளர்களால்
3 1/2 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என கணிக்கப்பட்ட தலம்.
3000 ஆண்டுகள் பழமையான வன்னிமரத்தை தலவிருட்சமாக கொண்ட தலம்.
பிரளயகாலத்திலும் அழியாத தலம்.
நடுநாட்டின் 22 சிவதிருத்தலங்களில் 9வது தலம்.
சைவ சமயத்தின் 28 ஆகமங்களுக்கும் 28 லிங்கங்களை முருகபெருமானே நிலைநிறுத்தியதாக அறியப்படும் ஒரே தலம்.
இல்லற வாழ்விலும் ஈசனை இடைவிடாது வழிபட்ட நாதசர்மாவும் அனவர்த்தியும் சிவகணங்களாகவே ஆன தலம்.
சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை வேண்டி பெற்ற பன்னீராயிரம் பொற்காசுகளை மணிமுத்தாற்றில் இட்ட தலம். (பின்னர், திருஆரூர் கமலாயகுளத்தில் எடுத்தார்).
உலகபடைப்பில் சிவபெருமானே மலையாக தோன்றியதால் பழமலைநாதர் என பெயர் பெற்ற தலம்.


பஞ்சாட்சர ஐந்தெழுத்து மந்திரத்தின்படி இத்திருகோவிலில் அனைத்தும் ஐந்து ஐந்தாக இருப்பது வேறெங்கும் காண இயலாத சிறப்பாகும்.

பதிவின் முடிவில் நமக்கு மிகவும் தேவையான ஐந்தும் உள்ளது ஐயா.....

ஐந்து மூர்த்தங்கள்: 
விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர்

ஈசனின் ஐந்து திருநாமங்கள்: விருத்தகிரீஸ்வரர்
பழமலைநாதர்
விருத்தாசலேஸ்வரர்
முதுகுன்றீஸ்வரர்
விருத்தகிரிநாதர்

ஐந்து விநாயகர்கள்:
ஆழத்து விநாயகர்
மாற்றுரைத்த விநாயகர் முப்பிள்ளையார்
தசபுஜ கணபதி
வல்லப கணபதி

இறைவனை தரிசனம் கண்ட ஐவர்:
உரோமச முனிவர்
விபசித்து முனிவர்
குமார தேவர்
நாத சர்மா
அனவர்த்தினி

ஐந்து கோபுரங்கள்:
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்

ஐந்து பிரகாரங்கள்(திருச்சுற்று):
தேரோடும் திருச்சுற்று
கைலாய திருச்சுற்று
வன்னியடித் திருச்சுற்று
அறுபத்து மூவர் திருச்சுற்று பஞ்சவர்ணத் திருச்சுற்று

ஐந்து நந்திகள்: 
இந்திரநந்தி
வேதநந்தி
ஆத்மநந்தி
மால்விடைநந்தி
தர்மநந்தி

ஐந்து உள் மண்டபங்கள்:
அர்த்த மண்டபம்
இடைகழி மண்டபம்
தபன மண்டபம்
மகா மண்டபம்
இசை மண்டபம்.

ஐந்து வெளி மண்டபங்கள்: 
இருபது கால் மண்டபம் தீபாராதனை மண்டபம் நூற்றுக்கால் மண்டபம்
விபசித்து மண்டபம்
சித்திர மண்டபம்

ஐந்து வழிபாடுகள்: 
திருவனந்தல்
காலசந்தி
உச்சிகாலம்
சாயரட்சை
அர்த்த ஜாமம்

ஐந்து திருவிழாக்கள்:
வைகாசி வசந்த உற்சவம்
ஆனி திருமஞ்சனம்
ஆடிப்பூரம் திருக்கல்யாணம்
மார்கழி திருவாதிரை
மாசிமகம் 10நாள் பிரம்மோற்ஸவம்.

ஐந்து தேர்கள்:
விநாயகர் தேர்
முருகன் தேர்
பழமலை நாதர் தேர்
பெரியநாயகி தேர்
சண்டிகேஸ்வரர் தேர்

தலத்தின் ஐந்து பெயர்கள்: திருமுதுகுன்றம்
விருத்தகாசி
விருத்தாசலம்
நெற்குப்பை
முதுகிரி

பெருமானின் பம்பர் பரிசு:
இத்தலத்தில் பிறந்தால்,
வாழ்ந்தால், வழிபட்டால்,
நினைத்தால், இறந்தால் என இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட நமக்கு முக்தி நிச்சயமாம்.

எம்பெருமான் அருளால் தங்களை இத்தலத்தை நினைக்க வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
பெரும் பேறு பெற்றீர்கள் ஐயா !

கடைசியாக.......
இத்தலத்தை தரிசித்ததால் அடியேனுக்கு ஏதேனும் பலன் இருப்பின் அவை அனைத்தையும்  இப்பதிவை  படித்தோருக்கு பழமலைநாதர் மீது ஆணையாக மனதார அளிக்கிறேன்.

நன்றி

திருச்சிற்றம்பலம்
இன்றைய கோபுர தரிசனம்...

அருள்மிகு ஶ்ரீ மஹாகணபதி கோவில், கோகர்ணா, கர்நாடகா

இது சாலையின் அருகில் ஒரு சிறிய கோவில் போல் தெரிகிறது… இருப்பினும், இது சாதாரண கோவில் அல்ல, ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு (சுமார்  5000ம் வருடங்கள்) முந்தைய வரலாற்றைக் கொண்டுள்ளது. இது கோகர்ணாவில் உள்ள மஹாகணபதி கோவில்.

ராமாயணத்தின் நிகழ்வுகள் நடைபெறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ராவணன், சிவபெருமானின் வசிப்பிடமான கைலாயத்திலிருந்து சென்று ஒரு லிங்கத்தைக் இலங்கைக்கு  கொண்டு செல்ல விருப்பம் தெரிவித்தார். ராவணணன் தான் இலங்கையிலேயே சிவனை வழிபடவும், தனது தாய் வழிபடவும், கடும் தவமிருமிருந்து வரங்களை பெற்றான், அதன் அடிப்படையில் ராவணனுக்கு சிவ பெருமான் தனது ஆத்மாவின் பிரதியான ஒரு ஆத்ம லிங்கத்தை ராவணனுக்கு தருகிறார்.

இந்த ஆத்ம லிங்கம் ஶ்ரீலங்காவிற்க்கு எடுத்துச்செல்லப்பட்டால், ராவணன் யாராலும் கொல்ல முடியாத பராக்ரமசாலியாக மாறிவிடுவான் என்று சிவபெருமான் அறிந்திருந்தார்.

இதை அறிந்த தேவர்கள் அனைவரும், இது ஆபத்தின் அடையாளம் என்று அஞ்சிய அவர்கள், ராவணன் ஆத்ம லிங்கத்தை
ஶ்ரீ லங்காவுக்கு எடுத்துச் செல்வதைத் தடுக்க கணேசரிடம் உதவி கேட்டார்கள். விநாயகர் ஒரு சிறுவனின் வடிவில் இராவணனை அணுகினார், அதே நேரத்தில் தேவர்கள் வானத்தை இருட்டடித்து சூரிய அஸ்தமனத்தின் மாயையை உருவாக்கினர். நித்ய கர்மாவான ஸந்த்யாவந்தனத்தை விடாது செய்யும்  பக்தியுள்ள விசுவாசியாக இருந்த ராவணன், சூரியன் மறையும் முன் தனது மாலை ஸந்த்யாவந்தனத்தை செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தான். ஶ்ரீ லங்காவை அடைவதற்கு முன்பு ஆத்மலிங்கத்தை தரையில் வைக்க கூடாது என்று சிவனால்  கூறப்பட்டிருந்ததால், ராவணன் மிகவும் தெய்வாம்சத்துடன் தோன்றிய சிறுவனிடம்,
ஸந்த்யாவந்தனத்தை
செய்யும்போது லிங்கத்தைப் கையிலேயே பிடித்து இருக்க சொன்னான்

அந்த சிறுவன் சம்மதித்தான், ஆனால் ஒரு நிபந்தனையை வைத்தான் - தன்னால் முடிந்தவரை மட்டுமே அதை வைத்திருப்பான். பின்னர் அவர் மூன்று முறை கூப்பிடுவேன். அதற்குள் ராவணன் திரும்பி வரவில்லை என்றால், அவன் லிங்கத்தை தரையில் வைத்துவிட்டு போய்விடுவேன் என்று கூறினான். ராவணன் ஒரு குழப்பத்தில் இருந்தான், ஆனால் சம்மதித்து, தனது ஸந்த்யாவந்தனத்தை தொடங்கினான். குறிப்பைப் போல, சிறுவன் கூப்பிட்டான் “லிங்கம் கனம் மிகவும் அதிகரிக்கிறது. இனி என்னால் அதை கையில் வைத்திருக்க முடியாது. வந்து அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்என்று கூச்சலிட்டான்.! ”ராவணன் சிறுவனைப்பார்த்து சற்று பொறு வந்துவிடுகிறேன் என்று சைகை செய்தான். ஆனால் ஆத்மலிங்கத்தை சிறுவன் தரையில் வைத்துவிட்டு ஓடிவிட்டான்.

அவசர அவசரமாக வந்த ராவணணன் சிறுவன் தரையில் லிங்கத்தை வைத்துவிட்டு போனதற்க்கு கோபப்பட்டான். அப்போதைக்கு சிறுவனை விட்டுவிட்டு, ராவணன் தனது கவனத்தை லிங்கத்தின் பக்கம் திருப்பி, அதை தரையில் இருந்து எடுக்க முயன்றான், ஆனால் அவனுடைய முயற்சிகள் அனைத்தும் வீணாகின. ஆத்மலிங்கத்தை தரையில் இருந்து எடுக்க முடியவில்லை. அவன் முறுக்கித் திருப்பி இழுத்தாலும், அது அங்கேயே அப்படியே இருந்தது. அவரது செயல்களின் பயனற்ற தன்மையை உணர்ந்தபோதுதான், ராவணன் தனது கவனத்தை பிரச்சினைக்கு  காரணமான சிறுவன் மீது திருப்பினான் - சிறுவன், ஆபத்தை உணர்ந்து ஓட ஆரம்பித்திருந்தான், ஆனால் ராவணன் பிடித்து, தலையில் குட்டினான். சிறுவன் தனது உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்திய போது தான் தேவர்கள் தன் மீது இத்தகைய தந்திரத்தை விளையாடினார்கள் என்று ராவணன் அதிர்ச்சியடைந்தான். பின்பு ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்ந்து, ஆத்மலிங்கம் இல்லாமல் ஶ்ரீலங்கா சென்றான்.

தரையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஆத்ம லிங்கத்தின் மீது இங்கு முதன்முதலில் ஒரு கோவிலைக் கட்டியது ராவணன் என்று கூறப்படுகிறது. அது ‘மகாபலேஸ்வரர்’ - சக்திவாய்ந்த லிங்கம் என்று அறியப்பட்டது. பின்னர், அடுத்தடுத்து வந்த மன்னர்கள் கோவிலைக் புனரமைத்தனர், இங்கு கோவில் கொண்டிருக்கும் லிங்கத்திற்கு பொறுப்பானவர் - விநாயகர். அவர் ‘மஹாகணபதி’ என்று அழைக்கப்படுகிறார், மேலும் அவர் இங்கு நிற்கும் தோரணையில் காணப்படுகிறார்,  மேலும், அவரது தலையில் ஒரு சிறிய குழி உள்ளது, இது இராவணனின் குட்டியதால் வந்தது என்று கூறப்படுகிறது.

இந்த கோவிலின் துவாரபாலகர்கள் கூட விநாயகராகவே இருக்கின்றனர்.

கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை,

மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த கடற்கரையோரத்தில் 6 விநாயகர் கோவில்கள் உள்ளன, அவை விநாயகரை ஒரே வடிவத்தில் காட்டுகின்றன. 

கரையோர கர்நாடக சுற்றுப்பயணத்தில் இந்த கோவில்களைப் தரிசிக்கலாம். அவற்றைப் பற்றி இங்கே எழுதியுள்ளோம்.

மற்ற 5 கோவில்களும் இடகுஞ்சி, ஆனேகுடே, ஹட்டியங்கடி, மங்களூர் மற்றும் காசர்கோடு ஆகிய இடங்களில் அமைந்துள்ளன, நீங்கள் எப்போதாவது இப்பகுதியில் இருந்தால், சென்று தரிசிக்கவும் உங்கள் பயணத்தைத் திட்டமிட உதவும் சில விவரங்கள் இங்கே:

கோவில்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மீண்டும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

ௐ ஶ்ரீ மஹா கணபதயே நம:
ஒரு அம்மா சொன்னார் " நான் நிறைய ஸ்லோகங்க‌ள் பாராயணம் செய்கிறேன் ! மத்தியானம் சாப்பிடவே ஒரு மணியாகின்றது ! ஆனாலும் என் பிரச்சினைகள் தீரவில்லை ! பகவான் கண் பார்க்கவே இல்லை ! "

“ஸ்லோகம் சொல்லும் பொழுது ஸ்வாமியின் முன்னால் அம‌ர்ந்து கொண்டு ஸ்வாமியை மனதில் நிலை நிறுத்திக் கொண்டுதானே பாராயணம் ?” என்றேன் !

“அதெப்படி முடியும் ? குளித்துக் கொண்டும் பிற‌ வேலைக‌ளைப் பார்த்துக் கொண்டும்தான் சொல்லுகின்றேன் ! எல்லாம் என‌க்கு மனப்பாடம் ! தவ‌றுத‌லே வராது ! ” என்றார் அம்மையார்.

காய் நறுக்க வேண்டுமானால் அரிவாள் மணை அல்ல‌து கத்தியைக் அருகில் வைத்துக் கொள்கிறோம் !? சமைக்க வேண்டுமென்றால் அடுப்பிற்குக் கிட்டே போகிறோம் !? குளிக்க, துவைக்க என்றால் தண்ணீரின் பக்கத்திலே போகிறோம் !? ஸ்கூட்டர், கார் எதுவானாலும் அத‌னிட‌ம் சென்று ஓட்டினால்தான் ஓடுகிற‌து !?

ஆனால் ஸ்வாமிக்கு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்றால் ந‌ம் மனது ஸ்வாமிக்குக் கிட்டே போக வேண்டாமா? “ஸர்வாந்தர்யாமி” யாக‌ எங்கும் இருப்ப‌வ‌ன்தான் அவன் ! ஆனாலும், முக்கிய‌மான‌ பிரச்சினை ந‌ம‌க்குத் தீர‌ வேண்டும் என்றால் நாம்தானே ம‌ன‌தை ஒருநிலைப் ப‌டுத்தி அவ‌ன் பக்கத்தில் சென்று உட்கார்ந்து அனுசரணையாக‌ சிரத்தையாக‌ சொல்ல‌ வேண்டும் !? அப்ப‌டிச் சொன்னால் நிச்சயம் கேட்பான் !

வேறு வேலைக‌ளைக் கவனம் இல்லாமல் செய்தால் விபத்து நடக்கும் என‌ அறிந்து கொள்ளும் நாம் ப‌க‌வானுக்கு ம‌ட்டும் முழு க‌வ‌ன‌ம் இல்லாமல் ஸ்லோகங்க‌ளை முணுமுணுத்தால் போதும் என்று நினைக்கலாமா ?

ம‌ல‌ர்ந்த‌ புது பூவைப் பார்த்தால் பகவானுக்குத் தரவேண்டும் என்று ஆசை வரவேண்டும் ! ந‌ல்ல‌ வாச‌மிகு சந்தனத்தை பகவானுக்கு பூசிப் பார்க்க வேண்டுமென்று எண்ண‌ம் வரவேண்டும் ! அம்பாளின் அல‌ங்கார‌ ரூப‌ம் எண்ணி ஒருநிலையாக‌ தியானம் செய்தால் கருணை செய்கின்றவ‌ள் அல்ல‌வா !?

கல்லைத் தூக்கி சமுத்திரத்திலே போட்டால் மூழ்கி விடும் ! ஆனால் மரத்தால் கப்பல் செய்து அதிலே எத்தனை கற்க‌ளை ஏற்றினாலும் மூழ்குவ‌து இல்லை !

கவலைகள் கற்க‌ளைப் போன்ற‌வை ! பகவான் தெப்பத்தைப் போன்ற‌வ‌ர் ! மனது என்கிற சமுத்திரத்தில் பகவானைத் தெப்பமாக்க‌ வேண்டும் ! தெய்வ‌த்தை இணைக்கின்ற ஆணிகள்தான் பூஜை மந்திரங்கள் எல்லாம் !

பிற‌கு, கவலைக‌ள் எனும் க‌ற்களைத் தூக்கி தெப்பத்தில் இறக்கலாம் ! சம்சார சாகரத்தில் மூழ்கடிக்கப்படாமல் நாம் சுல‌ப‌மாக‌க் கரை சேர்ந்து விடலாம் !

                            - காஞ்சி ஸ்ரீ ம‌ஹா பெரிய‌வ‌ர்
நான் ஒரு இந்து ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தவன், ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்தவன்.

எப்படி எங்கள் குடும்பம் இருந்திருக்கும் என்று சொல்ல தேவையில்லை.

ஆனால், நான் இன்று நெற்றியில் குங்குமமும், விபூதியும் பூசுகிறேன். இது என் வாழ் நாள் முழுவதும் இருக்கும்.

காரணம், நான் ஸ்ரீரங்கத்தில் இருந்த போது, சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டு, கடன்கள் பட்டு பல வருடங்களாக வாழ்ந்த நேரம் அது.

ஒருநாள் மதியம் திருவானைகா சிவன் கோவிலில் ( ஸ்ரீரங்கத்துக்கு நேர் எதிரே உள்ளது.) கொடுக்கும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட நடந்தே சென்றுவிட்டேன்.

சாப்பிட்டுவிட்டு அகிலாண்டேஸ்வரி சன்னதியில் வெளியே உள்ள மண்டபத்தில் "அம்மா நீ ஒருத்தி தான் எனக்கு உதவ முடியும்" என்று மனதில் கூறி அவளை வெளியில் இருந்தவாறே வேண்டி கும்பிட்டுவிட்டு களைப்பாற அமர்ந்தவன் எப்படியோ படுத்து உறங்கிவிட்டேன்.

அன்னையின் மடியில் படுத்து உறங்கியது போன்ற உணர்வு அன்று எனக்கு ஏற்பட்டது.

கனவிலே முருகன் வந்து 'என்னைப் பற்றி பாடு' என்றான்.

அன்னையின் எச்சில் என் உதட்டிலும், நாவிலும் பட்டு தெறித்தது.

'திடுக்'கிட்டு விழித்துக்கொண்டேன்.

'அம்மா, முருகா' என்று சொல்லி வணங்கிவிட்டு நடையாகவே வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டில் அனைவரும் 'எங்கே சென்றுவிட்டாய்? சாப்பிட்டாயா?' என்று கேட்டார்கள்.

'நண்பன் வீட்டில் அம்மா சாப்பாடு கொடுத்தார்கள்' என்று சமாளித்து விட்டேன்.

வீட்டில் சொல்ல முடியாது.

'அதுவும் சிவன் கோவிலுக்கு போனியா?' என்று வேற கேள்வி வரும். நண்பர்களிடம் மெதுவாக சொன்னேன்.

அங்கு கொடுத்ததோ ஒரு கையளவு பிரசாதம் தான், ஆனால் எனக்கு வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வு,

பிறகு சாப்பிட்ட களைப்பு போல அங்கேயே தூங்கியதையும் சொன்னேன். கிண்டல் அடித்தார்கள், கற்பனை, கற்சிலை என்று எல்லாம் என்னிடம் நகையாடினார்கள்.

ஆனால் என் உள்ளுணர்வு சொல்லியது இது உண்மை என்று.
.
எனக்கு TMS அவர்களின் குரல் மிகவும் பிடிக்கும். அவரின் விலாசத்தை கஷ்டப்பட்டு வாங்கிவிட்டேன். நண்பர்கள் சொன்ன வரிகள் என்னை உறுத்தியது.

அதன் வரியில் முருகன் மேல் பாடல் புனைந்து TMS க்கு போஸ்ட் கார்டு லே எழுதி அனுப்பிவிட்டேன். அகிலாண்டேஸ்வரி தாயே நீயும் உன் மகனும் தான் இனி எனக்கு துணை என்று வேண்டிக்கொண்டேன்.
.
TMS இருக்கும் பிஸியில் என் போஸ்ட் கார்டை எங்கு பார்ப்பார் என்று நினைத்து மறந்துவிட்டேன்.

ஆனால் என் தாயின் அருள், முருகனின் கருணை TMS என் கார்டை பார்த்து, அவரே அதற்க்கு மெட்டும் போட்டு பாடிவிட்டார்.

பிறகு எனக்கு அவரிடம் இருந்து கடிதம் வந்தது, 'என் முருகன் பாடலை நீ எழுதி கொடுத்தாய், மிகவும் நன்றாக இருந்தது, நானே இசை அமைத்து பாடி உள்ளேன், வரும்
திங்கள் அன்று வானொலியில் காலை 06.30 மணிக்கு ஒளிபரப்பாகும், கேட்டுவிட்டு உன் கருத்தை அனுப்பு, மெட்ராஸ் க்கு வா, உனக்கு நான் சன்மானம் தரணும், இது போன்று பாடல்கள் நிறைய நீ எழுது' என்று போட்டு இருந்தார்.

எனக்கு நம்ப முடியவில்லை, சந்தோசத்தில் 'தாயே, முருகா' என்று வீட்டிலேயே உரக்க கூவிவிட்டேன். வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரே ஆச்சர்யம், கோபம், என்னது என்று கோபமாக கேட்டார்கள்.

நான் பதில் பேசவில்லை, கடிதத்தை கொடுத்தேன். அனைவரும் வாங்கி படித்தார்கள்.

அவர்களுக்கும் சந்தோசம் தான்.

முகத்தில் தெரிந்தது, ஆனால் வெளியில் காட்டி கொள்ளாது இருந்துவிட்டார்கள்.

அப்பா மட்டும் என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.

பதில் சொல்லவில்லை.

ஆனால் எனக்கு உற்ச்சாகம் அளித்தார், அப்போதும் அவர்
ரெங்கநாதனை பற்றி ஒரு பாட்டு எழுதி TMS பாடணும்
என்றார்.

எனக்கு உள்ளூர சிரிப்பு, இதுவரை சாப்பாடு போடாத ரெங்கநாதனை பற்றி நான் என்ன எழுதணும் என்று நினைத்தேன்.

அப்பா மெட்ராசுக்கு செல்ல உத்தரவு கொடுத்துவிட்டார்.

நண்பர்கள் தான் அதிக அளவு சந்தோஷப்பட்டார். மெட்ராஸ் சென்றேன், TMS சை பார்த்தேன், பாடலுக்குண்டான அன்பளிப்பாக சின்ன தொகையை கொடுத்து என்னை 'நீ ஏன் சீனிமாவுக்கு பாடல் எழுத கூடாது?' என்று கேட்டார்.

'நான் என்ன வர மாட்டேன் என்றா சொன்னேன்? கூப்பிடுங்கள் உடனே உங்கள் பின்னால் ஓடி வருகிறேன்' என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.
.
ஒருநாள் அவர் என்னை விஸ்வநாதனிடம் அறிமுகப்படுத்தி இவனை சரியாக பயன்படுத்து, நன்றா எழுதுகிறான் என்று சொல்லி வைத்தார்.

என் மனதில் தோன்றியது காசி விஸ்வநாதர் தான். அம்மையும் அப்பனும் எனக்கு கருணை புரிந்து விட்டார்கள் என்றே நினைத்தேன்.

ஆம் விஸ்வநாதன் உதவியால் நான் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்த நான், சாப்பாட்டில் கை வைக்க நேரமில்லாமல் எழுதி கொடுத்துக் கொண்டே இருந்தேன்.''

- கவிஞர் வாலி.

வாலியின் முதல் முருகன் பாடல்:-
.
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன் - நீ
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்

அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
.
- கற்பனை என்றாலும்
.
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே

கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
.
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்
கவிஞர் வாலி
அண்ணாமலையாா் திருவடிகளை அன்புடன் வணங்குகின்றேன்.  "கேதார்நாத் ஏன் விழித்திருக்கும் மஹாதேவ் ' என்று அழைக்கப்படுகிறது..?

ஒரு முறை சிவ பக்தர் ஒருவர் தனது கிராமத்திலிருந்து கேதார்நாத் சிவனை தரிசிக்க புறப்பட்டார். அங்கு போக்குவரத்து வசதிகள் இல்லை,
அவர் நடை பயணமாக . கேதார்நாத் வழி கேட்டபடி மனதில் சிவனை பார்த்துக்கொண்டே சென்றார்.

நடைபயணம் துவங்கி பல மாதங்கள் கடந்துவிட்டன. இறுதியாக ஒரு நாள் அவர் கேதார்நாத்தை அடைந்தார். .!

கேதார்நாத்தில் கோவிலின் கதவுகள் 6 மாதங்கள் திறந்திருக்கும் 6 மாதங்கள் மூடப்பட்டிருக்கும்.

அவர் அங்கு சென்று சேரும் நேரம் கோவிலின் கதவுகள் மூடப்பட்டன.
அவர் பண்டிட் ஜி அவர்களிடம், நான் தொலைவிலிருந்து மாதக்கணக்கில் வந்துள்ளேன் பண்டிட் ஜியிடம்  பிரார்த்திக்கிறேன், தயவு செய்து கோவில்  கதவுகளைத் திறந்து கடவுளை தரிசிக்க அனுமதியுங்கள் என கெஞ்சுகிறார்.
ஆனால் பண்டிட்ஜியோ கோவிலுக்கென்று  ஒரு விதி உள்ளது, ஒரு முறை மூடப்பட்டது பின்னர் மூடப்பட்டது தான். மீண்டும் திறக்க இயலாது என்கிறார்.

பக்தன் நிறைய அழுதான். மீண்டும் மீண்டும் சிவபெருமான் இறைவனை மனதினுள்ளே வேண்டினார். எல்லோரையும் பிரார்த்தித்தார், ஆனால் யாரும் கேட்கவில்லை.

பக்தரே தாங்கள் இப்போது சென்று மீண்டும் 6 மாதம் கழித்து வாருங்கள், 6 மாதம் கழித்து, இங்கு கதவு திறக்கப்படும் என்றார் பண்டிட்ஜி.

6 மாதங்கள் பனிக்கட்டி மற்றும் குளிர் மக்கள் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

பக்தர் அழுதார். இரவு அழத்தொடங்கியது. இரவு இருட்டாக இருந்தது. ஆனால் பக்தர் சிவனை  சுவாசிப்பதை நிறுத்தவில்லை. நிச்சயம் அருள் புரிவான் என்று நம்பினார். மிகவும் பசியாகவும் தாகமாகவும் உணர்ந்தார். அப்போது யாரோ வரும் சத்தம் அவருக்கு கேட்டது.

ஒரு சன்யாசி  அவரிடம் வருவதை பார்த்தார். அந்த சன்யாசி  அவரிடம் வந்து அமர்ந்தார்.
அவர் பக்தரிடம் கேட்டார் - எங்கிருந்து வந்தாய் மகனே..? எல்லா நிலைகளையும் விளக்கிய பக்தர், என் வருகை இங்கே வீணாகிவிட்டது என அழுது புலம்பினார்.!

சன்யாசி அவருக்கு ஆறுதல் சொன்னார், அவருக்கு உணவும் கொடுத்தார். பிறகு  அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்தார்.

சன்யாசி  பக்தரிடம் கருணையாக  காலைல கோவில் திறக்கும்னு நினைக்கிறேன் மகனே என்றான். நீ கண்டிப்பாக சிவனை தரிசிக்கலாம் என்கிறார்.

பக்தனுக்கு தூக்கம் வந்ததே  தெரியவில்லை. அயர்ந்து தூங்கினார்.
திடீரென  பேச்சுக்குரலாலும் சூரிய ஒளியால் பக்தனின் கண்கள் திறந்தன.

அவர் சன்யாசியை தேடினார், ஆனால் அவர் எங்கும் இல்லை.பக்தர்  புரிந்துகொள்ள முற்படுகிறார்.

பண்டிட் ஜி தனது முழு சபையுடன் கோவில் திறக்க வருவதை பக்தர் காண்கிறார்.

பண்டிதரை வணங்கி ஐயா நேற்று 6 மாதம் கழித்து தான் கோவில் திறக்கும் என்று சொன்னீர்களே..?
இடைப்பட்ட காலத்தில் யாரும் இங்கு வரப்போவதில்லை என்றீர்களே, ஆனால் நீங்கள் காலையில் வந்து விட்டீர்களே  என்கிறார் பக்தர்.

பண்டிட் ஜி அவரை கவனமாகப் பார்த்தார், அடையாளம் காண முயற்சித்தார். அடையாளம் தெரியவில்லை.
நீங்கள் நேற்று கோவில் வாசலுக்கு வந்தீர்களா..?  என்னை சந்தித்தீர்களா.? என கேட்டார்.

நாங்கள் 6 மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் திரும்பி வருகிறோம்..! என்ன ஆச்சரியம் என்கிறார்.!

பக்தரோ..இல்லை, நான் எங்கும் போகவில்லை. நேற்று நான் உங்களை சந்தித்தேன், இரவில் நான் இங்கேயே தூங்கிவிட்டேன். நான் எங்கும் போகவில்லை என்கிறார்.

பண்டிட் ஜிக்கு ஆச்சரியத்தின் அளவு எல்லை கடந்தது..!

ஆனால் நான் 6 மாதம் முன்பு கோவிலை பூட்டிவிட்டு 6 மாதம் கழித்து இன்று வந்தேன். ஆறு மாதங்கள் நீங்கள் எப்படி இங்கு வாழ முடியும்..?

பண்டிட் ஜி மற்றும் அனைத்து சபைகளும் ஆச்சரியமடைந்தனர். இப்படி ஒரு குளிர்காலத்தில் தனி ஒருவன் எப்படி ஆறு மாதம் வாழ முடியும்.?

அப்போது அந்த பக்தர் சன்யாசி  மற்றும் அவருடன் சேர்ந்து சாப்பிட்டு, பேசிய அனைத்து காரியங்களையும் பண்டிட்ஜி மற்றும் குழுவினரிடம்  கூறினார்.

நடந்த அனைத்தையும் அவர்கள் மகாதேவனின் சக்தி லீலைகள் என புரிந்து கொண்டனர்.!

பண்டிட் ஜி மற்றும் அனைவரும் அவரது கால்களில் விழுந்தனர்.
இறைவன் தரிசனம் கண்ட நீங்கள் தான் உண்மையான பக்தன். சிவனை நேரில் தரிசனம் செய்தது நீங்களே என்றனர்.

அவர் உங்கள் 6 மாதங்களை தனது யோகா மூலம் இரவாக மாற்றினார். அது
மாயா எனப்படும். காலத்தை சுருக்கிவிட்டார். இது எல்லாம் உங்கள் புனித மனதின் காரணமாக, உங்கள் நம்பிக்கை காரணமாக. உங்கள் பக்தியை வணங்குகிறோம் என்று பக்தரை வணங்கினர். வாழ்க மெய்அன்பர்கள் வளர்க சிவம் புகழ். அன்பே சிவம். சிவாயநம அருணாச்சலம்
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவில் இருந்து
“கடவுளைக் கண்ணால் காண முடியுமா….?” என்று ஒருவர் கேள்வி கேட்க வாரியார் சுவாமிகள்
“உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் …., ஒரு கேள்வி, தம்பீ……! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா…?”
“எனக்கென்ன கண் இல்லையா…….? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்…!!”
“தம்பீ……! கண் இருந்தால் மட்டும் போதாது……!! கண்ணில் ஒளியிருக்க வேண்டும்……!!
காது இருந்தால் மட்டும் போதுமா…..? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும்…..!!
அறிவு இருந்தால் மட்டும் போதாது…….!! அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருக்க வேண்டும்…!!
உடம்பை நீ பார்க்கின்றாய்….!! இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா….?”
“ஆம். நன்றாகத் தெரிகின்றது.”
“அப்பா…! அவசரப்படாதே…..!! எல்லாம் தெரிகின்றதா….?”
“என்ன ஐயா….! தெரிகின்றது…, தெரிகின்றது…, என்று எத்தனை முறை கூறுவது….? எல்லாம்தான் தெரிகின்றது….?”
“அப்பா….! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா…?”
“ஆம்! தெரிகின்றன.”…..!!
“முழுவதும் தெரிகின்றதா…?”
அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில்,
“முழுவதும் தெரிகின்றது” என்றான்….!!
“தம்பீ…! உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா….?”
மாணவன் விழித்தான்.
“ஐயா…! பின்புறம் தெரியவில்லை.” என்றான்.
“தம்பீ…! முதலில் தெரிகின்றது.. தெரிகின்றது.. என்று பலமுறை சொன்னாய்….!! இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே….!! சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா…?”
“முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.’…!! நிதானித்துக் கூறு….!!.”
“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன்….!! எல்லாம் தெரிகின்றது.’…!!’
“தம்பீ…! முன்புறத்தின் முக்கியமான, ” முகம் தெரிகின்றதா”…..?
மாணவன் துணுக்குற்றான்.
பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன்,
“ஐயனே…! முகம் தெரியவில்லை….!” என்றான்.
“குழந்தாய்…! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை…..!! முன்புறம் முகம் தெரியவில்லை……!!
நீ இந்த உடம்பில் சிறிது தான் கண்டிருக்கிறாய்…..!! இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்….!!
அன்பனே…!
இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால்,
இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.”
இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு, இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல்,
ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.
ஒன்று திருவருள்….!!
மற்றொன்று….
குருவருள்…….!!
திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால், ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்….!!
தம்பீ…..! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும்……, அதனைக் குருவருள் மூலமே பெறமுடியும்…..!!
திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை...!!
அந்த மனிதன் தன் தவறை உணர்ந்து அவரின் காலில் விழுந்தான்…..!!
சித்தர்கள் அருளிய கற்ப வகைகளின் வரிசையில்  "கருநெல்லி கற்பம்" இந்த கற்ப வகையினைப் பற்றிய குறிப்பு அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்ற நூலில் காணக்கிடைக்கிறது.

அகத்தியர் அருளிய கருநெல்லி கற்பம் பற்றி பார்ப்போம்..

காணவே சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
கருநெல்லிப் பழமைந்தின் சாருவாங்கி
பேணவே அதுக்குநிகர் தேனுங்கூட்டி
பிரியமுடன் அந்திசந்தி மண்டலங்கொள்ளு
பூணவே வாசியது பொருந்திநின்று
பூரணமாய்த் தேகமது சித்தியாகும்
ஊணவே தேகமது சித்தியானால்
ஒருதீங்கு மில்லையடா சோதியாச்சே.

- அகத்தியர்.

ஐந்து கருநெல்லிப் பழங்களில் இருந்து சாறு எடுத்து, அதன் எடைக்கு சம அளவில் சுத்தமான தேன் கலந்து உண்ண வேண்டுமாம்.. இப்படி தினமும் இரு தடவை அந்தி சந்தி வேளைகளில் உண்ண வேண்டுமாம்.. அதாவது ஒரு நாளைக்கு காலையில் ஐந்து பழம், மாலையில் ஐந்து பழமென இரண்டு தடவை சாறெடுத்து தேன் கலந்து சாப்பிட கூறுகிறார்..

இப்படி ஒரு மண்டலம், அதாவது நாற்பத்து எட்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டுமாம்.. ஒரு நாளைக்கு பத்துக் கரு நெல்லி பழங்கள் வீதம், நாற்பத்தி எட்டு நாட்களுக்கும் நானூற்றி எண்பது பழங்கள் தேவைப்படும்.. எனவே இந்த பழங்கள் கிடைக்கும் காலத்தில் இந்த கற்பத்தினை முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு ஒருமண்டல காலம் தொடர்ந்து உண்டால், சுவாசம் சீரடைந்து தேக சித்தியும் கிட்டுமாம்.. தேக சித்தி கிடைத்த பின் உடலுக்கு எந்த தீங்கும் உண்டாகாது என்றும் சொல்கிறார்.. இந்த கற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை..
#ஃ

காஞ்சி காமாக்ஷி வரலாறு

காஞ்சி காமாட்சி வரலாறு

மாயை அகற்றி ஞானம் அருளும் காஞ்சி காமாட்சி!
தேவியின் சக்தி பீடங்களாக சிறப்புற்று விளங்கும் 51 சக்தி பீடங்களில், காஞ்சி காமாட்சி அம்மனின் காமகோடி பீடமும் ஒன்று. காஞ்சி என்றாலே காமாட்சிதான் என்று சொல்லும்படி காமாட்சி அம்மனால் மகிமை பெற்ற தலம் காஞ்சி. `கா' என்றால் விருப்பம் என்று பொருள். மனிதர்களின் விருப்பங்களை ஆள்பவள் என்பதாலும், நிறைவேற்றுபவள் என்பதாலும், அம்பிகைக்கு காமாட்சி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு மகான் அம்பிகையைப் போற்றி ஸ்லோகங்களை இயற்றி இருக்கிறார்கள். கிருதயுகத்தில் துர்வாசரரால் 2,000 ஸ்லோகங்களாலும், திரேதாயுகத்தில் பரசுராமரால் 1,500 ஸ்லோகங்களாலும், துவாபரயுகத்தில் தௌமியாசார்யரால் 1,000 ஸ்லோகங்களாலும், கலியுகத்தில் ஆதிசங்கரரால் 500 ஸ்லோகங்களாலும் போற்றி வழிபடப் பெற்றவள் காஞ்சி காமாட்சி அம்மன்.

காஞ்சியில் காமாட்சி ஒன்பது வயது சிறுமியாகத் தோன்றி, பண்டாசுரன் என்னும் அசுரனை வதம் செய்தாள். பண்டாசுர வதம் முடிந்ததும், அம்பிகை ஆகாயத்தில் மறைந்திருந்தாள். பண்டாசுரனை வதம் செய்தது யார் என்று தெரியாமல், தேவர்கள் அனைவரும் திகைத்து நின்ற வேளையில், காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை 24 தூண்களாகவும், நான்கு வேதங்களை நான்கு சுவர்களாகவும் கொண்டு ஒரு மண்டபம் எழுப்பும்படி கூறியதுடன், `அந்த இடத்தில் சுமங்கலிப் பெண், கன்றுடன் கூடிய பசு, கண்ணாடி, தீபம் ஆகியவை இருக்கட்டும். அப்போது நான் யார் என்று காட்டுகிறேன்’ என்றும் அசரீரியாக தேவியின் குரல் ஒலித்தது. தேவர்களும் அப்படியே செய்ய, அன்னை சிறுமியாக அவர்களுக்குக் காட்சி தந்தாள். அன்னையின் உத்தரவின்படி கதவுகளை மூடிவிட்டு, வெளியில் இருந்தபடியே தேவர்கள் அம்பிகையை ஸ்தோத்திரம் செய்தனர். மறுநாள் காலையில் கதவுகளைத் திறந்தபோது, அன்னை காமாட்சியாக அவர்களுக்கு தரிசனம் தந்தாள். இப்படி அன்னை காமாட்சியாக காட்சி தந்த நாள், சுவயம்புவ மன்வந்த்ரம், பங்குனி மாதம், கிருஷ்ணபட்ச, பிரதமை திதியுடன் கூடிய பூரம் நட்சத்திரம் ஆகும்.

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி, மூக கவியின் மூக பஞ்சசதீ, துர்வாசரின் ஆர்யா த்விசதி ஆகிய ஸ்தோத்திரங்கள் மிகவும் ப்ரீதியானவை.

கருவறையில் அம்பிகை பத்மாசன கோலத்தில் கரும்பு வில்லும், புஷ்ப பாணமும் கொண்டு எழிலார்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பிகை பத்மாசன கோலத்தில் வீற்றிருப்பது மிகவும் விசேஷமாகும்.

கருவறையில், அம்பிகையின் வலப் புறத்தில் ஒற்றைக் காலில் பஞ்சாக்னி நடுவில் நின்றபடி காட்சி தரும் அம்மனையும் நாம் தரிசிக்கலாம்.

பண்டாசுரன் என்ற அசுரனை அழிப்பதற்காகவே அவதரித்தவள் காமாட்சி அம்மன். பண்டாசுரனை வதம் செய்த உக்கிரத்துடன் திகழ்ந்த அம்மனின் திருவுருவத்தின் முன்பாக ஆதிசங்கரர் ஶ்ரீசக்ர பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்தினார்.

அம்பிகையின் முன்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஶ்ரீசக்ரத்தில், `ஶ்ரீ ‘ என்பது லட்சுமியின் அம்சம் ஆகும். எனவே, காமாட்சி அம்மனை வழிபட்டால், அனைத்து ஐஸ்வர்யங்களும் உண்டாகும் என்பதுடன், மற்றவர்களுக்குக் கொடுத்து வராமல் போன கடன்களும் வந்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.

அம்பிகையின் அருட்பிரசாதமாக நமக்கு வழங்கும் குங்குமப் பிரசாதத்தை அப்படியே நெற்றியில் அணிந்துகொள்ளாமல், கருவறைக்கு வெளியில் அம்பிகையின் இடப்புறத்தில் உள்ள மாடத்தில் காட்சி தரும் திருவடிகளில் வைத்து எடுத்த பிறகே அணிந்துகொள்ள வேண்டும்.

காமாட்சி அம்மன் ஆலயத்தில் அரூபமாக லட்சுமி அருள்வதுடன், அன்னபூரணியும் சரஸ்வதியும் சந்நிதிகொண்டிருக்கின்றனர். காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றால், அனைத்து அம்மன் ஆலயங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும்.

மகா பெரியவா தம்முடைய அருளுரையில், 'மாயைக்குக் காரணமான பிரம்ம சக்தி காமாட்சி தேவி. அவளே ஞானமும் அருள்பவள். அனைத்துக்கும் அவளுடைய கருணைதான் காரணம். மாயைகள் பலவற்றை அவள் நம்முடைய வாழ்க்கையில் நிகழ்த்தினாலும், அவற்றில் இருந்து விடுவிக்கிற கருணையும் அவளிடம் பூரணமாக உள்ளது. மாயையினால் நாம் உண்டாக்கிக்கொள்கிற கஷ்டங்களுக்கும் துக்கங்களுக்கும் காரணம் நம்முடைய இந்திரியங்களும் மனசும்தான். இந்திரிய சுகங்களின் வழியில் நம்முடைய மனதைச் செலுத்தி, நம்முடைய ஸ்வபாவமான ஆத்ம சுகத்தை மறந்துவிடுகிறோம். பஞ்சேந்திரியங்களும், மனமும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இவற்றுக்குக் காரணம் மாயை. அந்த மாயையே இவற்றைச் சுத்தப்படுத்தி, இந்திரிய விகாரங்களில் இருந்தும், மன சஞ்சலங்களில் இருந்தும் ஜீவனை விடுவிப்பதற்காகவே அம்பிகை காமாக்ஷியாக வருகிறாள்'' என்று அருளி உள்ளார்.

சமயபுரம் மாரியம்மன் வரலாறு

சமயபுரம் மாரியம்மன் வரலாறு
சமயபுரத்தில் வீற்றிருக்கும் மாரியம்மன், சுகாசினியாகக் காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் இருக்கிறது.

சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தைப் பற்றி சில தகவல்களை அறிந்து கொள்வோம்.

வசுதேவர்-தேவகி தம்பதியரின் 8-வது குழந்தையாக கிருஷ்ணர் பிறந்தார். அவரை நந்தகோபர்- யசோதையிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்தார் வசுதேவர். அந்தக் குழந்தையை கம்சன் கொல்ல முயன்றபோது, அது வானில் பறந்து மறைந்தது. அந்தக் குழந்தையே சமயபுரம் மாரியம்மன் என்கிறது தலவரலாறு.


இங்கு வீற்றிருக்கும் மாரியம்மன், சுகாசினியாகக் காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் இருக்கிறது. நெற்றி நிறைய திருநீறு, குங்குமம் அணிந்துள்ளாள்.

அன்னை இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்டு அமர்ந்துள்ளாள். பாதத்தில் மூன்று அசுரர்கள் தலை காணப்படுகின்றன. இவை ஆணவம், கன்மம், மாயைக் குறிக்கின்றன.

எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி அணிந்துள்ளாள்.

இங்கு ஒரே சன்னிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அம்மனின் உக்கிரத்தை தணிக்க காஞ்சி பெரியவரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அவர் கூறியபடி ஆலயத்திற்கு வலதுபுறம் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி வடிவம் கொண்ட மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அதன் மூலம் அம்மனின் மூல விக்கிரகத்தில் இருந்த கோரை பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக அன்னை மாற்றப்பட்டாள்.

அம்மனின் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டது. தங்கத்தின் எடை 71 கிலோ 127 கிராம். செம்பின் எடை 3 கிலோ 288 கிராம். இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய்.

ரூபாய் 20 லட்சம் செலவில் தங்க ரதம் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. காணிக்கையாக ரூ.700 கட்டினால், தங்க ரதத்தை இழுக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சமயபுரம் மாரியம்மனை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து, பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.

பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள். இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது. மாசி மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்த விரதம் தொடங்குகிறது. விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட்களும் அம்பாளுக்கு ஒரு வேளை மட்டுமே நைவேத்தியம் செய்யப்படும். சாயரட்சை பூஜையின் போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவையே அந்த நைவேத்தியம்.

சமயபுரத்தாள் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு - மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும், தெற்கு - வடக்காக 150 அடி அகலத்துடனும் ஆலயம் அமைந்துள்ளது.

சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன.

கொள்ளிடம் தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. தைப்பூசத்தின் போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள். அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் இருக்கிறது. இதை ‘தீர்த்தவாரி விழா’ என்பார்கள்
*தீர்க்க சுமங்கலி பவா என்றல் என்ன ? அறிந்துகொள்வோம்* .

தீர்க்க சுமங்கலி பவா ! என்ற ஆசிக்கு *மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.*

திருமணத்தில் ஒன்று,
 *60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று* .
 *70 வயது பீமரத சாந்தியில் ஒன்று* .
 *80 வயது சதாபிஷேகத்தில்ஒன்று* .
 *96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று* !

#இவைகள் பற்றி ஒரு சிறு விளக்கம்:

ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.

இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.

சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.

உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.

நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.

பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு

சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும்,
சந்திரனுக்கு ஒரு மாதமும்,
புதனுக்கு ஒரு வருடமும்,
வியாழனுக்கு 12 வருடங்களும்,
வெள்ளிக்கு ஒரு வருடமும்,
சனி பகவானுக்கு 30 வருடங்களும்,
ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும்,
கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.

இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.

மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.

ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.

பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.

அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.

பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.

 *அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84  கலசங்கள் எதைக் குறிக்கின்றன* ?

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.

இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...

அக்னி,
சூரியன்,
சந்திரன், 
வாயு,
வருணன்,
அஷ்ட திக் பாலகர்கள்,
பாலாம்பிகை,
அமிர்த கடேஸ்வரர்,
நவநாயகர்கள்..
சேர்த்து குறிப்பதற்காகத்தான்
84 கலசங்கள் என்பது ஐதீகம்.

பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,

சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,

ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,

பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..
அதிபதிகள் ஆவார்கள்.

தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.

தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.

தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.

காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.

70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.

ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.

அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.

இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்.

இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.
*கர்மபலன்* இதுதான்...!

*ப்ரத்யக்ஷ தெய்வம்* என்று நாமெல்லாம் கொண்டாடும் நம் *பெரியவாளும்* இதைப் பலமுறை கூறியிருக்கிறார்.

நாம் பேசும் பேச்சுக்கூட கணக்காயிருக்கணும் என்று பெரியவா உபதேஸிப்பார். நம் ஆத்திரம், கோபத்தை தீர்த்துக் கொள்ள, அடுத்தவர்களை தூற்றுவது, உருவத்தை வைத்து கேலி செய்வது, நம் குழந்தைகள் மட்டுமில்லை, நம் சுற்றம்-நட்பு, ஏன்? முன்பின் தெரியாதவர்களானாலும், அவர்களை நோக்கி வீசப்படும் வசவுகள், நிந்தனைகள் எல்லாமே..... அப்படி நிந்திப்பவர், அதை தூண்டுபவர், ஆமோதிப்பவர், அதைத் தடுக்காமல் அமைதி காத்து வேடிக்கை பார்ப்பவர் இப்படியாக இத்தனை பேர் கணக்கிலும் debit side-ல் வரவு வைக்கப்படுகிறது.

நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும், இது அத்தனைபேருக்கும் பொதுவான இயற்கையின் விதி! நியதி!

இந்த ஜன்மத்தில் நமக்கு வாய்த்திருக்கும் _அம்மா, அப்பா, ஸஹோதர-ஸஹோதரிகள், நண்பர்கள், கணவன்-மனைவி, சுற்றம்_, அத்தனையுமே... நாம் பூர்வ ஜன்மங்களில் ஆசைப்பட்டதுதான்! ஆனாலும், நம்முடைய பூர்வ ஜன்ம கர்மவினைகளால், இவை அநுகூலமாகவோ, ப்ரதிகூலமாகவோ இருக்கும்.

நல்ல அன்பான பெற்றோர்கள், கணவன்-மனைவி, ஸொந்தங்கள் இருந்தும், நாம் அவர்களை மதிக்காமல், கரித்துக்கொட்டி வெறுத்து ஒதுக்கினால், இந்த ஜன்மத்தில் நாம் ஏதோ அவர்களை பழி வாங்கியதாக நினைத்து ஸந்தோஷப்படலாம். ஆனால், இந்த அன்பான நன்மை, அடுத்தடுத்த ஜன்மங்களில், நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும் என்பதே ஸத்யம்!

அதோடு, இந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமுமே கிடைக்காது! இல்லாத ஒன்றுக்காக அலைவதை விட்டுவிட்டு, நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பு காட்டி, பகவானுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

*ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்...*

🙂🙏
அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் இல்லத்திற்கு வந்தார் முனிவர் ஒருவர். அப்போது அபிமன்யு வீட்டில் இல்லாததால், அவனது மனைவி உத்தரையைச் சந்தித்து ஆசியளித்த அவர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை பரிசளித்தார்.

அதன் முன் நிற்பவருக்கு பிரியமானவர் யாரோ அவரது முகமே கண்ணாடியில் தெரியும். உத்தரை உற்றுப் பார்த்தாள். அவளது கணவர் அபிமன்யு தெரிந்தார். சற்று நேரத்தில் வீடு திரும்பிய அபிமன்யு கண்ணாடியைப் பற்றிய விபரம் அறிந்து வியந்தான். அவன் பார்த்த போது அதில் மனைவியான உத்தரை தெரிந்தாள். அன்புக்கயிறால் இருவரும் கட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். அப்போது அபிமன்யுவின் தாய்மாமன் கிருஷ்ணர் அங்கு வந்த போது, ”கண்ணாடியைப் பார்த்து ஆச்சரியப்படுகிறீர்களே! என்ன விஷயம்?” என்றார்.

”மாமா! இந்த கண்ணாடியில் நீங்கள் தெரிய மாட்டீர்கள். உங்களுக்கு அன்புக்குரியவர் யாரோ அவரே தெரிவார். உங்கள் மனதைக் கவர்ந்தவர் அத்தை ருக்மணியா, பாமாவா” என்றான் அபிமன்யு. யாராவது ஒரு மனைவியை அடையாளம் காட்டி, இன்னொருத்தியிடம் சிக்குவானா அந்த மாயக்கிருஷ்ணன்! அவன் கண்ணாடி யைப் பார்த்த போது அதில் சகுனி தெரிந்தான்.

”இதென்ன விந்தை” என்றான் அபிமன்யு. ”அபிமன்யு! பக்தர்கள் கூட காரியம் ஆக வேண்டுமென்றால் தான் என்னை நினைப்பார்கள். ஆனால் துாக்கத்திலும் கூட என்னைக் கொல்லத் துடிக்கிறான் சகுனி. எப்போதும் அவனுக்கு என் நினைவு தான். அதனால் எனக்கும் அவன் நினைவு” என்றார். நிந்தனை செய்தாலும் நாத்திகர்கள் தான் கடவுளை அதிகம் சிந்திக்கிறார்கள் என்பதற்கு சகுனியே சாட்சி.