வியாழன், 24 செப்டம்பர், 2020

நமஸ்காரம்

ஓம் சிவாய நம: (நமஸ்காரம் பதிவு)
========================================
" நம: என்றால் நமஸ்காரம், என்று பொருள் நமஸ்காரம் என்பவை எல்லாம் பணிவைக் குறிக்கும் வார்த்தைகள்.

 இவற்றில் "நமஸ்காரம்' என்ற சொல்லுக்கு " வணங்குதல் என்று பொருள். "

குரு நமஸ்காரம்
============
நமாமி சத்குரும் சாந்தம் ப்ரத்யக்ஷம் சிவரூபினம் சிரஸா யோகபீடஸ்த்தம்  முக்தி காமார்த்த ஸித்திதம் = குரு கீதை சாந்தமானவரும் ப்ரத்யக்ஷ சிவரூபியும், யோகபீடத்தி லிருப்பவரும், முக்தி காமமாகிய செல்வத்தைத் சித்திக்க செய்பவரும் ஆகிய ஸத்குருவைத் தலையால் வணங்குகிறேன்.

சிலர்  ஸ்ரீருத்ரத்தை பற்றி சந்தேகத்திலிருந்து தெளிவு பெற ஸ்ரீ பரத முனிவரிடம் சென்றனர்.
அதற்கு ஸ்ரீ ருத்ரம் சாக்ஷாத் பரமேஸ்வரனுடையது. ஏனென்றால்
இதில் நம: என்ற பதம் அதிகம் வந்திருப்பதால் ஸ்ரீ பரமேஸ்வரனுடையது, என்றார். அதற்கு விளக்கம் அளிக்கையில்
தைத்திரியம்  “பரப்ரம்மத்தை  நமஸ்காரம் பண்ணத்தகுந்தவர்   “என்று உபாஸிக்க வேண்டும்,
அவ்வாறு செய்தால் நமது விருப்பங்கள் நம்மை நமஸ்கரித்து தானாகவே வந்தடையும் என்கிறது
நமஸ்காரம் நைவேதிகும்.
 

சமயதி" = ஸ்ருதி தெய்வம், ரொம்ப  உயர்ந்தவர், பெரியவர்களை கண்டால் உடனே நமஸ்காரம் பண்ணவேண்டும். அதனால் சுலபமாக அவர்களது அன்பும் அருளும் கிட்டும் எந்த ஒரு இடத்தில் இருக்கும் போதும் ஒருவன் எல்லா நேரங்களிலும், எப்பொழுதுமே
“ருத்ரருக்கு நமஸ்காரம்” என்று ஜபித்துக் கொண்டே இருக்கட்டும். ஏனெனில் “ஸர்வமும் ருத்ரனே” என்று முழங்குகிறது ஸ்ருதி
யஜுர்வேதத்தின் தைத்திரீய சம்ஹிதை, “ஏகம்” - இரண்டற்ற ஒரே பரம் பொருள் ருத்ரனே என்றுரைக்கிறது :
“ஏக ஏவ ருத்ரோ நத்விதீயாய தஷ்டே”“ந  தத் ஸமச்சாப்யதிகச்ச த்ருஸ்யதே" = ஸ்வேதாஸ்வரோபனிஷத்”
அவருக்கு சமமானவரோ மேலானவரோ காணப்படவில்லை

ஸ்ரீருத்ரத்தில் ஏகதோ, உபயதோ நமஸ்காரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது
ஸ்ரீ ருத்ரத்தில் மந்த்ரங்களுக்கு ஆதியிலும் ,அந்தத்திலும் நம:
சொல்லை உடைய மந்திரங்கள்  உபயதோ நமஸ்கார மந்திரங்கள் எனப்படும். அதாவது ஒரு வாக்யத்தில் முன்னும் பின்னும் நமஸ்கார பதங்கள் உள்ளன. மற்றும் ஒரு வாக்யத்தின் கடைசியில் நமஸ்கா பதம் சொல்லபடுகின்றது.  “நமோ ஹிரண்ய பாகவே ஸே நான்யே திஸாஞ்ச பதயே நம “ என்று இரண்டு நமஸ்கார பதங்கள் – “ நமோ பாவயச ருத்ராயச “  வாக்யத்தின் கடைசியில் ஒரு நமஸ்கார பதம் உள்ளது.

பரத சாஸ்திரத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கு ஒவ்வொரு முத்திரை உள்ளது. அதில் நமஸ்கார முத்திரை ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு மட்டும் கூறப்பட்டுள்ளது. அதனால் பரமேஸ்வரனுடையது ஸ்ரீ ருத்ரம் எனத்தெளிவுபடுத்தினார்.

=ஸ்ரீ பட்டபாஸ்கர் ஸ்ரீருத்ர பாஷ்யத்திலிருந்து நாம் ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அடிமை, பக்தன், குழந்தைகள் அதனால் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து சரணாகதி அடைதலை குறிப்பது ஆகும். ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் நம் நித்யம் செய்யும் பூஜையின் அங்கமாக உள்ளது வீட்டிலும், ஆலயங்களிலும், பூஜையின் முடிவு தரிசனம் செய்த பின் நமஸ்காரம் அவசியம் செய்ய வேண்டும்.

ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் ( சாஷ்டாங்க நமஸ்காரமும்),
பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். ஆலயத்தில் வாஹனமாகிய நந்தி, பலி பீடத்திற்கு பின் அல்லது கொடிமரம் இருந்தால்  அதனடியிலேயே  நமஸ்காரம் செய்ய வேண்டும்.

தெற்கு நோக்கியும், நமது கால்களை மற்ற தெயவங்களுக்கு நேரே தெரியாமல் நமஸ்கரிக்க வேண்டும்.
ஆலயத்தில் இறைவனைத்தவிர யாருக்கும் நமஸ்காரம் பண்ணக்கூடாது.

நாம் பூமியில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும் போது நம் உடம்பில் உள்ள ஸ்டாடிக் எனர்ஜி வெளியேறி கைடனிக் எனர்ஜி ஏற்படுகிறது விஞ்ஞானம்.

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை.
     

சிவபெருமானைப் போன்ற தெய்வம் இல்லை! சிவபெருமானோடு ஒப்பாகவுள்ள கடவுள் புறத்தே உலகில் எங்குத் தேடினும் இல்லை.
 

திருமந்திரம் அப்பேற்பட்ட ஆதி அந்தமில்லாத ஸ்ரீபரமேஸ்வரனை தினமும் நமஸ்கரிக்கிற பாக்யம்  கிட்டுமேயாகில் நாம் மட்டுமின்றி நம் பரம்பரையே புண்யசாலிகள். அதில் சந்தேகம் வேண்டாம்.
 


மூதேவி என்பதின் முழு பெயர் மூத்த தேவி என்று பெயர்

மூதேவி என வழங்கும் மூத்த தேவி
மூத்ததேவி அதாவது ஜேஷ்டா தேவியின் கொடி காக்கை, வாகனம் கழுதை. மூதேவியை வெயிலுடனும், சீதேவியை மழையுடனும் தொடர்பு படுத்துகிறார்கள். மூதேவிக்கு மற்றொரு பெயர் ஜேஷ்டாதேவி.
இவளின் கைக்கருவி விளக்கமாறு.
மூதேவி தெய்வத்தின் மகன் பெயர் குளிகன் மகள் பெயர் மாந்தி. நாகை மாவட்டம் மயிலாடுதுறை வழூவூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் மேற்கு திருச்சுற்றிலுள்ள மேடையில் மூத்த தேவி உருவம் வைக்கப்பட்டுள்ளது. மூத்த தேவியானவள் தனது வலது பக்கத்தில் மகன் மாந்தனுடனும், இடது பக்கத்தில் மகள் மாந்தியுடனும் அமர்ந்த கோலத்தில் ஒரே பீடத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. தேவியை குழந்தைப் பேறு வேண்டி மக்கள் வழிபாடு செய்கிறார்கள்.        
சமணர்கள் மூதேவியை வழிபட்டுள்ளனர். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம்.
பிற்காலத்தில் மூதேவி  (மூத்ததேவி) சிவாலயங்களில் இருந்து எடுக்க பட்டதாக தெரிகிறது. இந்த அம்பாளை ஜேஷ்டாதேவி தூம்ரவாராஹி தூமாவதி மகாநித்ரா மகாமாயா மகாராத்திரி மோஹராத்திரி காளராத்திரி என்றும் அழைப்பர். தேவிமகாத்மியத்திலும் இவள் வருகிறாள். இவள் இயற்க்கையான உறக்கமும் மன அமதியையும் தருபவள் நரம்பு தளர்ச்சி நோய்கள் சித்த பிரமையை தீர்ப்பவள். செங்கற்பட்டு ஆத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமத் தர்ம சம்வர்தினி சமேத முக்தீஸ்வரர் ஆலயத்தில் ஜேஷ்டாதேவி தனி சன்னதி கொண்டு அமர்ந்திருக்கிறார். பிரதி சனிக்கிழமை தோறும் ராகு காலத்தில் விசேஷ பூஜை வழிபாடுகள் நடைபெறுகிறது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.



குருவாயூர்

பூந்தானம் நம்பூதிரி என்பவர் சிறந்த பக்தர். அவர் தினமும் தனது ஊரிலிருந்து காட்டு வழியே தொலைதூரம் நடந்து குருவாயூருக்குச் சென்று அப்பனைத் தரிசனம் செய்வார்.

அவ்வாறு செல்கையில் ஒரு நாள் வழியில் சில கொள்ளைக்காரர்கள் அவரைத் தடுத்துத் தாக்கினர். அவரிடம் என்ன பொருள் இருக்கிறது என்று ஆராயத் தொடங்கினார்கள். அவர் மனமோ, தன் விரல்களில் உள்ள மோதிரத்தை அவர்கள் பார்த்துவிடக் கூடாது என்று பயந்தது. ஆபத்தினை உணர்ந்த அவர், கண்களை மூடி “குருவாயூரப்பா குருவாயூரப்பா,” என்று உரத்துக் கூறினார்.

சிறிது நேரத்தில் புதியதான மலரின் மணம் காற்றில் வீசியது. கண் திறந்து பார்த்தபொழுது மாங்காட்டச்சன் என்ற திவான் குதிரைமேல் வேகமாக வாளைச் சுழற்றிக் கொண்டு வந்தார்.

அவரைக் கண்டதும் கொள்ளையர்கள் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். மனம் நெகிழ்ந்த பூந்தானம் உமக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் என்று வினவ, அவரும் உன்னுடைய கையில் இருக்கும் மோதிரத்தை எனக்குக் கொடு என்று கூறினார். மோதிரம் களவு போய்விடக் கூடாது என்று பயந்த பூந்தானம் இப்போது தயங்கி, திகைத்து, செய்வதறியாது அந்த மோதிரத்தை திவானுக்குப் பரிசாக அளித்தார். திவான் அவரைத் தன் குதிரையில் ஏற்றிக் கொண்டு குருவாயூர் எல்லையில் விட்டுவிட்டுச் சென்றார்.

அதே நேரம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அப்பன், “அர்ச்சகரே! என் கையில் ஒரு மோதிரம் இருக்கும், அதைப் பூந்தானத்திடம் கொடுத்துவிடுங்கள், கொள்ளையர்களிடம் இருந்து அவரைக் காப்பாற்ற மாங்காட்டச்சன் உருவில் சென்று அவரிடம் இருந்து விளையாட்டாக மோதிரத்தைப் பெற்றேன்” என்று கூறினார்.

பூந்தானம் குருவாயூர்க் கோயிலை நெருங்கும்போது, அர்ச்சகர் ஓடி வந்து பூந்தானத்தின் காலில் விழுந்தார். தன் கனவில் அப்பன் சொன்னதைக் கூறி மோதிரத்தை அவரிடம் கொடுத்தார். மோதிரத்தைப் பார்த்த பூந்தானத்திற்குப் புல்லரித்தது. முந்தைய இரவு மாங்காட்டச்சனிடம் கொடுத்த அதே மோதிரம்தான் அது!! தன்னைக் காப்பாற்ற குருவாயூரப்பனே மாங்காட்டச்சனாக வந்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்.


நவராத்திரி மூன்றாம் நாள்

நவராத்திரி மூன்றாம் நாள்: எவ்வாறு வழிபட வேண்டும்?

நவராத்திரி மூன்றாம் நாளில் அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும். பன்றிமுகத்துடன் கூடியவளாக விளங்கும் இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். மதுரை மீனாட்சியம்மன் நாளை தட்சிணாமூர்த்தி கோலத்தில் காட்சியளிக்கிறாள். தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி சிவன் கோயில்களில், கல்லால மரத்தின் கீழ் இருப்பார். இவர் முன்னால் சனகர்,சனந்தனர், சனதானர், சனத்குமாரர் என்னும் நான்கு சீடர்கள் இருப்பர். அவர்களுக்கு உபதேசம் செய்கிறார் தட்சிணாமூர்த்தி.

இவருடைய வலக்கை சின்முத்திரை காட்டியபடி இருக்கும். வலக்கைப் பெருவிரல் பரமாத்மாவாகிய கடவுளையும், ஆள்காட்டிவிரல் ஜீவாத்மாவாகிய உயிரையும் குறிக்கும். மற்ற விரல்களான நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவை ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் குறிக்கும். ஆணவம் என்பது அகங்காரம். கன்மம் என்பது உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப்பயன்கள். மாயை என்பது இவ்வுலக வாழ்வு உண்மை என எண்ணும் நிலை. இம்மூன்றையும் விட்டு, ஒருவன் நீங்கினால் மட்டுமே கடவுளோடு ஐக்கியமாக முடியும் என்பதே சின்முத்திரை தத்துவம். அம்பாளைத் தட்சிணாமூர்த்தியாக உபதேசிக்கும் கோலத்தை காண்பவர்களுக்கு அஞ்ஞானம் அகலும். கடவுளின் திருவடியே நிலையானது என்ற மெய்ஞானம் உண்டாகும்.
 


நைவேத்யம்: எலுமிச்சை சாதம்
தூவவேண்டிய மலர்கள்: மல்லிகை, செவ்வந்தி.

பாட வேண்டிய பாடல்:

என்குறை தீர நின்று ஏத்துகின்றேன், இனியான் பிறக்கின்
நின்குறை யேயன்றி யார்குறை காண்! இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎங் கோன்சடை மேல் வைத்த தாமரையே.

நவராத்திரி இரண்டாம் நாள்

நவராத்திரி இரண்டாம் நாள்: வழிபடும் முறை!

அம்பிகையை நாளை மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை "கவுமாரி என்றும், "குமார கண நாதம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, தைரியத்தை அருள்பவள் இவள். நாளை மதுரை மீனாட்சி முருகனுக்கு வேல் வழங்குதல் கோலத்தில் காட்சி தருகிறாள். சூரபத்மன் தேவர்களுக்கு பல கொடுமைகளைச் செய்தான். அவர்கள், சிவபெருமானின் உதவியை நாடினர். அவருடைய நெற்றிக்கண்களில் ஆறுதீப் பொறிகள் தோன்றின. அவை சரவணப்பொய்கையில் ஆறுதாமரைப் பூக்களில், ஆறு குழந்தைகளாக மாறியது. கார்த்திகைப் பெண்கள் அவர்களை வளர்த்தனர். பார்வதி அறுவரையும் ஒருவராக்கி "கந்தன் என்று பெயரிட்டாள். ஜகன்மாதாவான பராசக்தி தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி வேல் ஆக்கினாள். "வேல் என்றால் "வெற்றி. அந்த சக்தி வேலாயுதத்தை முருகனுக்கு வழங்கினாள். முருகனுக்குரிய அடையாளமாகத் திகழும் வெற்றிவேலை, அன்னை மீனாட்சி வழங்குவதைக் கண்டால் வாழ்வில் வெற்றி வந்து சேரும்.
 


நைவேத்யம்: தயிர்சாதம்
தூவவேண்டிய மலர்: முல்லை

பாட வேண்டிய பாடல்:

இல்லாமை சொல்லி ஒருவர் தம் பால்சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம் கல்லாமை கற்ற கயவர் தம் பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

15:ஸ்ரீ கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1 {கி. பி. 317 -கி.பி . 329 வரை}

நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி தெரிந்து கொள்வோம்!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

15:ஸ்ரீ கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1
{கி. பி. 317  -கி.பி . 329 வரை}




ஸ்ரீ கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1
ஸ்வாமிகள் ஆந்திராவைச் சேர்ந்தவர். இவரது தந்தையின் பெயர் "ஸ்ரீகாஞ்சிபத்ரகிரி". இவருக்கு பெற்றோர் இட்ட நாமதேயம் சுபத்ரர். இவர் ஸ்ரீ அகஸ்திய முனிவரை தரிசித்து அவரிடமே" பஞ்சதசாக்ஷரி" என்ற மந்திர உபதேசத்தை வாங்கிக் கொண்டார். இவர் காமகோடி பீடாதிபதியாகும் போது இவரது வயது பன்னிரண்டு. அப்போதே பெரும் புலமையும், ஞானமும் பெற்றிருந்தார். இவர் கி. பி. 329 ஆம் ஆண்டு சர்வதாரி வருடம், சித்திரை மாதம், சுக்லப்பிரதமையன்று அகஸ்தியமலை அருகில் சித்தியடைந்தார்.

பராசரர்

பராசரர்!

இருமாமுனிவர்கள் வசிஷ்டரும், கோசிகரும். இவர்கள் இருவருக்கிடையில் ஒற்றுமை இருந்ததே இல்லை. பகையுணர்வின் காரணமாக கோசிகன், வசிஷ்டரை பழி வாங்க முயன்று தவவலிமை இழந்து மீண்டும் தபோதனராகப் பலமுறை முயன்று தன் தவ வலிமை பெற்று வந்தார். உதிரன் என்ற அரக்கன் மூலம் தனது தவ வலிமைகளைத் தந்து வசிட்டரின் புதல்வர்களை அழிக்க ஏற்பாடு செய்தார் கோசிகன். வசிட்டரும் அருந்ததியும் இல்லாத சமயம் அவர்களது பிள்ளைகளை மாய்த்து விட்டான். வசிட்டரும், அருந்ததியும் மனமுடைந்து இருந்தனர். வசிட்டரின் மகன் சக்தி என்பவனின் மனைவி திரிசந்தி கருவுற்றிருந்த காரணத்தால் அவளது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தாள். தகவலறிந்து வந்து தானும் உயிர் துறக்க முற்பட்டாள். வசிட்டரும், அருந்ததியும் தங்களது வாரிசு அவளது வயிற்றில் வளர்வதனால் சாந்தப்படுத்தி கண்ணும் கருத்துமாக திரிசந்தியைப் பாதுகாத்தனர். தக்கதோர் நன்னாளில் திரிசந்தி ஆண் மகவொன்று ஈன்றெடுத்தாள்.

பேரனுக்கு பராசரன் என்று பெயரிட்டு கல்வியறிவூட்டினர். நற்குணம் நற்செயல்களோடு வேத நூல்யாவும் அறிந்தான். அவனது மனத்தில் இருந்த குறையை தாயிடம் கேட்டான். பாட்டி சுமங்கலியாக, தாய் அமங்கலியாக இருப்பதன் காரணம் பற்றி கேள்விகளாகக் கேட்டு துளைத்தெடுக்கும் நிலையில் உண்மையில் நடந்தவற்றை திரிசந்தி உரைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தாத்தா, பாட்டி, தாயின் மனமுவந்த ஆசிகள் பெற்று மனத்தை ஒருநிலைப்படுத்தி சிவபெருமானை நோக்கிக் கடுமையாக தவமேற் கொண்டான். நேரில் காட்சி தரும் நிலையும் ஏற்பட்டது. தன் தந்தையைக் காணவும், அரக்கர்களை அழிக்க ஆற்றலும் வேண்டிக் கோரினான். அவனது பக்தியின் வலிமையால் பராசரரின் தந்தையான சக்தி அங்கு தோன்றுமாறு ஈசன் கருணை புரிந்தான். தந்தையைக் கண்டு வணங்கி ஆசிகள் பெற்றான். அரக்கர்களை அழிப்பது எளிதல்ல என்பதால் வேள்வி செய்யுமாறு ஈசன் பணித்தார். ஈசன் உபதேசித்தப்படி சிறந்ததொரு யாகம் மேற்கொண்டான். யாகத்தில் ஏற்படும் புகை முழுவதும் அரக்கர்கள் இருக்குமிடத்தில் பரவி அரக்கர் கூட்டம் அழிந்து விட்டது.

யாரோ செய்த தவறுக்குப் பலர் அழிவதை உணர்ந்த வசிட்டர் தனது பேரன் பராசரரிடம் பலர் அழியக் காரணமாகி பலரைக் கொன்ற பாபம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. நாம் இறைவனை வேண்டி வழிபடுவதே தக்க செயலாகும் என்று கூறி வேள்வியை நிறுத்துமாறு உபதேசித்தார். அச்சமயம் அங்கு வந்த புலஸ்திய முனிவரும் பராசரரிடம் பிற உயிர்கள் அழியாத நிலையில் தவமேற் கொண்டோர் வாழ்வதே சிறப்பு என விளக்கினார். பாட்டனாரும், புலஸ்தியரும் கூறிய வார்த்தைகட்கு இணங்கி பராசரர் இறைவழிபாட்டில் தன் வாழ்க்கைப் பணி ஏற்றார்.  மூத்தோர் சொல் அமுதமாகும் என்பதை உணர்ந்த காரணத்தால் பராசரர் தனது அறிவை ஞானத்தின் பால் மாற்றி மெய் ஞானம் உணர்ந்திட்ட மஹானாக விளங்கினார் என்றும், அழியாப்புகழுடன் சிறந்த நூல்களை எழுதி வரும் சந்ததிகட்கு வழிகாட்டிய மஹானாகத் திகழ்ந்தார்.


நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்

நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!

நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன் நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள் மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.

மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி போர்க்கோலம் பூண்டு சும்ப நிசும்பர்களையும் அவர்களது படைத்தளபதிகளான மது கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும் மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.


நவராத்திரி முதல் நாள் வழிபாடு

நவராத்திரி முதல் நாள் வழிபாடு

நவராத்திரியின் முதல் நாளில்  அம்பாளுக்கு “மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். “அண்டம் என்றால் “உலகம். “சரம் என்றால் “அசைகின்ற பொருட்கள். “அசரம் என்றால் “அசையாத பொருட்கள். ஆம்… அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.

நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்
தூவ வேண்டிய மலர்கள்: மல்லிகை, வில்வம்

சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

அம்பா சாம்பவி சந்திரமவுலிரமலா அபர்ணா உமா பார்வதீ காளீ ஹமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயினீ பைரவீ! ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி....


திருமாலின் தசாவதாரம்

திருமாலின் தசாவதாரம்!

வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம் பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்பிடுவர்.

மச்சாவதாரம் : திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். இந்த அவதாரத்தில் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்று அழித்தார்.

கூர்மாவதாரம் : தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக்கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக்களித்ததாகச் சொல்வர்.

வராக அவதாரம் : பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.

நரசிம்ம அவதாரம் : அசுரன் இரண்யகசிபு நாராயணனே பரம் பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார்.

வாமன அவதாரம் : பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.

பரசுராம அவதாரம் : ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.

ராமாவதாரம் : ரகுகுலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும் அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும் தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.

பலராம அவதாரம் : கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.

கிருஷ்ணாவதாரம் : வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும் பஞ்சபாண்ட வரைக்காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.

கல்கி அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் ஒரு அவதாரம் எடுப்பார். கல்கி அவதாரமாக கலியுகத்தில் எடுத்து உலகை அழித்து நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் என எதிர் பார்த்து காத்திருப்போம்.


ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 11

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 11
 


திருக்கச்சிநம்பிகள் & இளையாழ்வான்

இளையாழ்வான் தாய் சொன்னது போல் திருக்கச்சி நம்பிகளைத் தரிசிக்கச் சென்றார். திருக்கச்சி நம்பிகள் காஞ்சி பேரருளானனுக்கு ஆலவட்டம் வீசும் பணியைச் செய்து கொண்டிருந்தார். பின்னர், திருக்கச்சி நம்பிகளிடம் கங்கை யாத்திரை சென்றதையும், அங்கு நடந்த சம்பவங்களையும் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அனைத்தையும் சொல்லி தனக்கு தாங்கள் தான் குருவாக இருந்து "காலட்சேபம்" பண்ணியருள வேண்டும் என்று வேண்டினார்.

திருக்கச்சி நம்பிகளோ தன்னுடைய குலத்தினைக் காரணம் காட்டி, "நான் அந்தணர் குலத்தில் பிறக்காத காரணத்தால், நான் உனக்கு காலட்சேபம் பண்ணுவது வர்ணாசிரமத்திற்கு எதிரானது" என்று மறுத்துவிட்டார். காஞ்சி பேரருளானனுக்கு சாலக்கிணற்றிலிருந்து அபிசேகத்திற்கு நீர் எடுத்து வரும் பணியை செய்து வருமாறு கூறினார். இளையாழ்வானும் அவ்வாறே செய்தார்.

ஒரு முறை திருக்கச்சி நம்பிகள் ஆலவட்டம் வீசும் பணி செய்து முடித்தபின், ஆலயத்திலேயே அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட இளையாழ்வான் திருக்கச்சி நம்பிகளின் கால்களை அமுக்கி, குருவிற்கு செய்யும் பணியாக எண்ணி செய்தார்.

உறங்கி எழுந்த திருக்கச்சி நம்பிகள் இளையாழ்வானிடம், "நீர் என்ன செய்தாலும் நான் உன்னை சிஷ்யானாக ஏற்கப்போவது இல்லை" என்றார். இளையாழ்வானுக்கு எப்போதாவது திருக்கச்சி நம்பிகள் தம்மை சிஷ்யனாக ஏற்றுக் கொள்வார் என்று, நம்பிக்கையுடன் பேரருளானுக்கு நீர் எடுத்துவரும் பணியைச் செய்து வந்தார்.

 மீண்டும் யாதவப்பிரகாசரிடம் காலட்சேபம்

சில தினங்கள் கழித்து, வடநாட்டிற்கு கங்கை யாத்திரை பயணம் மேற்கொண்ட யாதவப் பிரகாசர் தன் சிஷ்யர்களுடன் திருப்புட்குழி வந்தார். இளையாழ்வான் காஞ்சிபுரத்தில் சாலக்கிணற்றிலிருந்து நீர் எடுத்துவரும் கைங்கரியம் செய்வதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தார். 'இளையாழ்வானை கரடி, புலி, விஷ ஜந்துகள் கொன்று விட்டதாகத் தானே நினைத்தோம், இவன் எப்படி இங்கு வந்தான்?' என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

இருந்தாலும், தன் சிஷ்யர்களிடம் சொல்லி இளையாழ்வானை காலட்சேபத்திற்கு அழைத்து வருமாறு சொல்ல, இளையாழ்வானும் காலட்சேபம் நடக்கும் திருப்புட்குழிக்கு வந்து சேர்ந்தார். இன்றும் திருப்புட்குழி விஜயாசனப் பெருமாள் திவ்யதேசத்திற்குச் சென்றால், இளையாழ்வான் யாதவப் பிரகாசரிடம் காலட்சேபம் பண்ண இடத்தினை காணலாம்.

இளையாழ்வான் காலட்சேபம் கேட்க வந்ததும் வழக்கம்போல் காலட்சேபம் நடந்து கொண்டிருந்தது. இதனிடையே இளையாழ்வானின் அன்னை காந்திமதி இறைவனடி சேர்ந்தார். இளையாழ்வானுக்கு மிகுந்த துயரம். தாய் இறந்த பின்பும் காலட்சேபம் சென்று கொண்டிருந்தார்.

திருக்கச்சி நம்பிகளின் குரு ஆளவந்தார் என்ற யமுனாச்சாரியார் காஞ்சிக்கு வருவதை நாளைய பதிவில் அறிந்திடலாம்..

எம்பெருமானார் வாழித்திருநாமங்கள்

எம்பெருமானார் (சித்திரை – திருவாதிரை)

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே!
அருட்கச்சி நம்பியுரை ஆறு பெற்றோன் வாழியே!
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே!
பதின்மர் கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே!
சுத்த மகிழ்மாறன் அடி தொழுது உய்ந்தோன் வாழியே!
தொல் பெரியநம்பி சரண் தோன்றினான் வாழியே!
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே!
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே!

எண்திசை யெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே!
எழுபத்து நால்வருக்கும் எண்ணான்கு உரைத்தான் வாழியே!
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே!
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே!
தண்தமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே!
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே!
தெண்திரை சூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே!
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே!.

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையிற் சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல் வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனி திருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே!.

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே!
அடர்ந்து வரும் குதிட்டிகளை அறத் துறந்தான் வாழியே!
செறு கலியைச் சிறிதும் அறத் தீர்த்துவிட்டான் வாழியே!
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே!
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே!
மாறன் உரை செய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே!
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே!
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே!

(திருநாள்பாட்டு – திருநக்ஷத்ர தினங்களில் சேவிக்கப்படுவது)
சங்கர பாற்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடு நாள்
வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்
மேதினி நம் சுமை ஆறும் எனத் துயர்விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே.
[
 *உபதேச ரத்தினமாலை*

27,★இன்றுலகீர்! சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள்*
என்றையினும் இன்றி இதனுக்கு ஏற்றம் என்தான்?*
என்றவர்க்குச் சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர்தம் பிறப்பால்*
 நாற்திசையும் கொண்டாடும் நாள்.

28, ★ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்*
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர்!*
ஏழ்பாரும் உய்ய எதிராசர் உதித்தருளும்*
சித்திரையில் செய்ய திருவாதிரை.

29, ★எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா*
வந்துதித்த நாள் என்னும் வாசியினால்*
இந்தத் திருவாதிரை தன்னின் சீர்மைதனை நெஞ்சே!*
ஒருவாமல் எப்பொழுதும் ஓர்.

இன்னும் அனுபவிப்போம்...


உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏