புதன், 16 அக்டோபர், 2013

பெண்கள் மஞ்சள் கயிறு அணியாமல் தங்கச் சங்கிலியில் திருமாங்கல்யம் அணிவது சரியா?

மாங்கல்ய தந்துனா என்று திருமணத்தில் மந்திரம் சொல்லி தாலி கட்டப்படுகிறது. தந்து என்றால் மஞ்சள் கயிறு என்று பொருள். திருமாங்கல்ய சரடு என்றும் இதனைச் சொல்வார்கள். கணவன் இல்லாதவரை விதந்துஎன்று குறிப்பிடுவார்கள். அதாவது மாங்கல்ய கயிறு இல்லாதவள் என்று பொருள். மந்திர உச்சரிப்போடு கட்டப்படுகிற மஞ்சள்கயிறைத் தான் பெண்கள் அணிய வேண்டும். விருப்பமுள்ளவர்கள் திருமாங்கல்யத்தைக் கயிற்றிலும், மற்றவற்றை சங்கிலியிலும் அணிவதும் வழக்கம். எப்படியோ மஞ்சள் கயிறு அணிந்து தான் ஆக வேண்டும்.
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?

இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர்மூச்சுடன் உறுதியான மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறிந்து கற்பு நெறியுடன் வாழ்பவள் என்ற பொருளும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வஸ்து என்றால் பஞ்சபூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்சபூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள் உண்டு. திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப்பெண்ணானவள் தன்னையும் தன் உடலையும் காமக்கண்ணுடன் பிறர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள்வதுடன், தன்னைத் திருமணம் செய்துகொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்; கணவனிடம் சரணாகதி அடைகிறாள். பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன் மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மிமீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான். மணப்பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்தப்படுத்திக்கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரியாகத் திகழ்கின்றாள்.
ஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெண்ணெய் சார்த்துவது ஏன்?

நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்துவடை சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு.

வெண்ணெய் சாத்துதல்: ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார், அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை, அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,
பூஜையில் சுண்டலின் முக்கியத்துவம் தெரியுமா!

பூஜையின் போது சுண்டலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பொதுவாக  இறைவனை நினைத்து உபவாசம் இருப்பதே மேலானது. இந்நேரத்தில் புரதச்சத்து மிகுந்த சமச்சீர் உணவான சுண்டலை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம். நீராவியில் வேக வைப்பதால் சத்து குறையாது. நோயாளிகளுக்கும் கருவுற்ற பெண்களுக்கும் சுண்டல் அற்புதமான உணவு. மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான தானிய வகை சுண்டல் சமைத்தால், நவக்கிரகங்களையும் திருப்திபடுத்தலாம்.

ஞாயிறு (சூரியன்)- அவித்த கோதுமை கலந்த சுண்டல், திங்கள் (சந்திரன்)- பாசிப்பயிறு, அப்பளம் கலந்த புட்டு, செவ்வாய்- துவரை சுண்டல், புதன்- பயறு சுண்டல், வியாழன்- கொண்டைக்கடலை சுண்டல், வெள்ளி- மொச்சை சுண்டல், சனி- எள் சேர்த்த சுண்டல், ராகு- உளுந்து சுண்டல், கேது- கொள்ளு சுண்டல்.
பக்தி என்றால் என்ன?

இறைவனிடம் அதைக்கொடு, இதைக்கொடு என்று கேட்கிறார்கள். காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக் கொள்கிறதோ, பதிவிரதையின் மனமானது பர்த்தாவினிடத்தில் போய் கவிந்து கொள்கிறதோ, நதியானது மகாசமுத்திரத்தில் கலந்து விடுகிறதோ... அதுபோல், கடவுளுடன் நமது மனமும் கலந்து விட வேண்டும். நமக்கு அனுக்கிரஹம் செய்கிற, பரமாத்வினிடத்தில், தன்னை அறியாமல் போய் நிற்க வேண்டும். அதற்கு காரணமே இருக்கக்கூடாது. காரணம் என்று வந்தால் அது வியாபாராமாகி விடும். இறைவனிடம் எதைக் கேட்டாலும் அது வியாபாரம் தான்! ஏதோ ஒன்றுக்கொன்று கொடுப்பது போல,செல்வத்தைக் கொடு, பக்தி செய்கிறேன், என்று இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால் வியாபாரமாகிவிடும். அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, ஈஸ்வரனிடத்தில் போய் சேருவதையே நினைத்து தன்னை அறியாமல் ஓடுகிற சித்த விருத்தி இருக்கிறதே, அதற்கு தான் பக்தி என்று பெயர்.
கோயில்களில் மணியடிப்பது எதற்காக?

மணிச்சத்தம் அதிரும் போது ஓம் என்ற பிரணவம் எழும். ஆத்மார்த்த சிந்தனையுடன், இறைவனுடன் கருத்தொமிருத்து கேட்டால் இந்த நாதத்தைக் கேட்கலாம். இதற்கு எல்லாம் நானே என்பது பொருள். இருப்பதெல்லாம் இறைவனே என்ற பொருளை உணர்த்துவதே மணிச்சத்தம்.
கோகுலாஷ்டமி அன்று கிருஷ்ணனை எவ்வாறு வழிபட வேண்டும்?

எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் பூமியில் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் நான் தோன்றுவேன். கொடியவர்களை அழித்து பக்தர்களைக் காப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் யுகம்தோறும் அவதரிப்பேன், என்பது கீதைநாயகன் கிருஷ்ணரின் அருள்வாக்கு. இப்படியொரு நிலையைச் சீர்படுத்துவதற்காக துவாபரயுகத்தில் அவர் அவதரித்தார். தர்மநெறிதவறி நடந்த கொடிய அரசர்களிடம் இருந்து உலகைக் காப்பதற்காக குரு÷க்ஷத்திர யுத்தத்தை நடத்தினார். மகாபாரதம் என்னும் மகத்தான இதிகாசத்தில் இவருடைய வரலாறு இடம்பெற்றுள்ளது. முழுமுதற்கடவுளாகிய மகாவிஷ்ணுவே கிருஷ்ணராக வசுதேவரின் மகனாகப் பிறந்தார். யதுகுலத்தின் தலை வனான சூரசேனன் மதுராநகரை ஆட்சி செய்து வந்தார். அவரது மகனான வசுதேவர், தேவகர் என்பவரின் மகளான தேவகியை திருமணம் செய்து மகிழ்ச்சியில் திளைத்தார். தேவகியின் ஒன்று விட்ட சகோதரன் கம்சன். அவன் மகாகெட்டவன். உக்கிரசேனன் என்பவரின் மகன். தந்தையையே கொடுமைப்படுத்தியவன். ஆனால், தங்கை தேவகி மீது அன்பு கொண்டவன். அவன் புதுமணத்தம்பதியரை தேரில் அழைத்துக் கொண்டு வீதியில் வந்து கொண்டிருந்தான். அப்போது, ஆகாயத்தில் அசரீரி ஒலித்தது.

மூடனே கம்சா! உன் சகோதரிக்கு தேரோட்டிச் செல்கிறாயே! அந்தத்தங்கையின் எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்லப் போகிறான்! என்றது. கோபமடைந்த கம்சன், தங்கை என்றும் பாராமல் தேவகியைக் கொல்ல வாளை எடுத்தான்.  வசுதேவர் அவனிடம், கம்சா! உன் தங்கையால் உனக்கு ஒரு கெடுதலும் நேராது. அவளுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளை உன்னிடமே ஒப்படைத்து  விடுகிறேன். அவர்களை நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்!, என்று வாக்களித்தார். சமாதானமடைந்த கம்சன் அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தான். அவர்களுக்குப் பிறந்த ஆறு குழந்தைகளை கம்சன் தன் கையாலே கொன்றழித்தான். பரம்பொருளான மகாவிஷ்ணு, ஏழாவது கர்ப்பத்தை வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோகிணியின் வயிற்றில் வளரச் செய்தார். அவரே, பலராமராக ஆயர்பாடியில் பிறந்தார். மகாவிஷ்ணு, எட்டாவது குழந்தையாக ஆவணி மாதம் அஷ்டமி நாள் நள்ளிரவில் வசுதேவர், தேவகி தம்பதியருக்கு குழந்தையாகப் பிறந்தார். அதே நேரத்தில் விஷ்ணுவின் மாயசக்தியான அம்பிகை, ஆயர்பாடியில் வசித்த நந்தகோபனுக்கும், யசோதைக்கும் மகளாகப் பிறந்தாள். வசுதேவரின் ஆத்ம நண்பராக விளங்கியவர் நந்தகோபன். குழந்தை பிறந்ததும், விஸ்வரூபம் எடுத்து தேவகி, வசுதேவர் தம்பதியருக்கு தெய்வீக வடிவத்தைக் காட்டியது. நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை மலர் ஒளிவீசின.

மஞ்சள்நிறப் பட்டாடை, ஸ்ரீவத்சம், கவுஸ்துபமணி ஆகியவையும் அவருக்கு அழகு செய்தன. சிறையில் இருந்த தேவகியும், வசு தேவரும் பரம்பொருளே தங்களுக்குப் பிள்ளை யாகப் பிறந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தனர். அவர் வசுதேவரிடம், தந்தையே! என்னை ஆயர்பாடிக்கு எடுத்துச் செல்லுங்கள். உங்கள் நண்பர் நந்தகோபரின் மனைவி யசோதைக்குப் பிறந்த யோக மாயா என்னும் பெண் குழந் தையை இங்கு கொண்டு வந்து விடுங்கள், என்று கட்டளையிட்டு,தன் தெய்வீகக்கோலத்தை மறைத்து,சாதாரணக் குழந்தையாக மாறினார். அப்போது சிறையின் கதவுகள் தானாகத் திறந்தன. காவலர்கள் தூக்கத்தில் ஆழ்ந்தனர். தனக்கு பிறந்த கண்ணுக்கு கண்ணான கண்ணனைத் தூக்கிக் கொண்டு வசுதேவர் ஆயர்பாடிக்குக் கிளம்பினார். அப்போது பலத்த மழை பொழிந்தது. ஆதிசேஷன், குழந்தை நனையாதபடி குடையாக வந்து நின்றார். யமுனை ஆறு இரண்டாகப் பிளந்து வழி விட்டது. அதை எளிதில் கடந்த வசுதேவர், நந்தகோபன்மாளிகையில் கண்ணனை ஒப்படைத்து விட்டு, யோகமாயாவை எடுத்துக் கொண்டு மதுரா வந்து சேர்ந்தார். கம்சன் குழந்தையைக் கொல்ல உள்ளே வந்தான். பெண் குழந்தை பிறந்துள்ளதை எண்ணி ஏமாந்தான். ஏனெனில், ஆண் குழந்தையால் மட்டுமே அவனுக்கு அழிவு ஏற்படும் என்பது அசரீரி வாக்கு. இருப்பினும், சந்தேகத்துடன் அந்தப் பெண் குழந்தையின் கால்களைப் பிடித்து சுழற்றி வானில் வீசினான். அவள் காளியாய் மாறி, உன்னைக் கொல்லப்பிறந்த கண்ணன் ஆயர்பாடிக்கு சென்று விட்டான், என்று எச்சரித்து மறைந்தாள். இவ்வாறு அநியாயத்தை ஒழிக்க அவதரித்த கண்ணன் பிறந்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுகிறோம். இந்நாளில் பாகவதம், பகவத்கீதை ஆகியவற்றை பாராயணம் செய்து பூரண அருள் பெறுவோம்.

எவ்வாறு வழிபட வேண்டும்: பொதுவாக குழந்தை கிருஷ்ணனுக்கு விருப்பமான பட்சணங்கள், வெண்ணெய், பால், திரட்டுப்பால், பழங்கள் ஆகியற்றை வைத்து, கிருஷ்ணன் காலடி வரைந்து வழிபடுவதே எங்கும் சகஜமாக இருக்கிறது. அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயோஜித புத்தி ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதை வழி நடக்க முயற்சிப்பதே இப்பண்டிகையின் தத்துவார்த்தம்.
உங்களுக்கு பிடித்த சொல் பயமா? அபயமா?

அ என்ற முதலெழுத்துக்கு அபார சக்தி உண்டு. ஒரு வேலையைச் செய்கிறோம். திருப்தி என்றால் கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது. அந்த வார்த்தையின் முன்னால் அ சேர்த்து விட்டால் முகத்தை சுளிக்க வைத்து விடுகிறது. இதுபோல பயம் என்ற சொல் மற்றவர்களிடம் நம்மைத் தலை குனிய வைக்கிறது. பயப்படுபவனை கோழை, நம்பிக்கையில்லாதவன் என்றெல்லாம் திட்டுகின்றனர். இவர்கள் இறைவனைச் சரணடைந்து விட்டால் அவன் பயம் என்ற சொல்லுடன் அ  வை சேர்த்து அபயம் அளித்து விடுகிறான். அதாவது, படைத்தவன் இருக்கான் பார்த்துக் கொள்வான் என்று செயல்பாட்டில் இறங்குபவர்களுக்கு பயமே இருப்பதில்லை. ஆக, அ என்ற எழுத்து செய்யும் வேலையைக் கவனித்தீர்களா! அதனால் தான் வள்ளுவர் திருக்குறளை அகர முதல எழுத்தெல்லாம் என்று ஆரம்பித்திருக்கிறார் போலும்!
கடவுளின் ஆயுதங்களை பூஜிப்பது சரியா?

ஆயுதங்களை தனித்து பூஜிப்பது இந்து மதத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த கலாசாரம். தீயசக்திகளை ஆயுதங்களைக் கொண்டே தெய்வங்கள் அழித்திருப்பதாக புராணங்கள் வாயிலாக அறிகிறோம். இந்த ஆயுதங்களை தெய்வமாக வழிபடுவதும், அரசனின் போர்வாளை அவ்வரசனாக எண்ணுவதும் மரபு. ராஜஸ்தான் பகுதி அரச பரம்பரையினர் மணமகன் இல்லாத போதும் கூட அவனது போர்வாளை மணமகனாக எண்ணி, மணமகளை மாலையிடச் செய்வர். இதுபோலவே முருகப்பெருமானின் வேலாயுதமும், பெருமாளின் சங்கு, சக்கரமும், சிவசக்தியின் சூலாயுதமும், இன்னும் பிற தெய்வங்களின் ஆயுதங்களும் பூஜைக்குரியவனாக அமைந்துள்ளது. இந்த அடிப்படையில் தான் ஆயுதபூஜை கொண்டாடுகிறோம்.
கோயிலுக்கு செல்ல இயலாதவர்களுக்கு மட்டும்!

வீடுகளில் விரதம் இருப்பவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கோயிலுக்கு செல்ல நேரம் கிடைக்காமல் இருக்கலாம். சிலருக்கு உடல்நிலை ஒத்துழைக்காது. இதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. குத்துவிளக்கில் ஒரு முகம் அல்லது ஐந்து முகம் ஏற்றிவைத்து அதை மூன்று முறை வலம் வந்தாலே கோயிலுக்கு சென்று வந்ததாக பொருளாகும். ஆனால் இந்த சடங்கை கோயிலுக்கு செல்ல முடியாத பட்சத்தில் மட்டுமே செய்ய வேண்டும். கோயிலுக்கு செல்ல நேரமிருந்தும் வீட்டில் இந்த வழிபாட்டை செய்யக்கூடாது.
பாலுக்குள் இவ்ளோ இருக்கா?

பசுகள்  ஒன்றும் அறியாத ஜீவன்கள். அவற்றை பராமரித்து, அவற்றிடம் உள்ள பாலை பயன்படுத்தி, நல்ல பலனைப் பெறுவது எப்படி என்று உபதேசிப்பவன் கோபாலன். பால் என்றால் உள்ளம் என்று பொருள். முதலில் உள்ளத்தை பால் போல் சுத்தமானதாக்க வேண்டும். கோபாலனை அண்டி பக்தி என்னும் தீயில் அதை பதமாக காய்ச்ச வேண்டும். சாந்தத்தைக் கொண்டு உறை ஊற்றி தயிராக்க வேண்டும். இதயம் என்னும் குடத்தில் தயிர் ஊற்றி அது உறைந்ததும், பக்தியென்ற மத்தைக் கொண்டு கடைந்து, பூத்துவரும் வெண்ணெயைப் போன்ற அனந்தசயனனான பரமபுருஷனைக் காண வேண்டும். தயிரில் பால், வெண்ணெய், நெய் ஆகிய முப்பொருளும் அடங்கியிருந்தாலும், அவற்றை தக்க முறைகள் கொண்டே தனித்தனியாக்க முடியும் என்பது உண்மை. அதைப்போலவே நம் இதயத்தில் உறைந்திருக்கும் கடவுளை நாம் காண வேண்டுமானால், தக்க முயற்சிகள் எடுத்தால் தான் இயலும்.

-காஞ்சிப்பெரியவர்
வாழைப்பழத்தின் மகிமை தெரியுமா?

வாரம் ஒரு நாள் முழுவதும் வாழைப்பழங்களாகவே உண்டு வேறு எந்த உணவுகளையும் பானங்களும் அருந்தாமல் உபவாசம் போல் இருக்கலாம். நம் உடலில் சேர்ந்துவிடும் அமிலங்களை அழித்து வெளியேற்றுவதில் வாழைப்பழம் ஈடு இணைஇல்லாமல் செயல் புரிகிறது, இதர உணவுகளுடன் உண்ணப்படும் வாழைப்பழம் முழுமையாக செயல்பட இயலுவதில்லை. ஒருநாள் முழுவதும் வாழைப்பழம் மட்டும் உண்டால், மிக விரைவில் ரத்தம் சுத்த மடையும் இதேபோல், சாத்துக்குடி மட்டும் ஒருநாள் முழுவதும், ஆரஞ்சுப் பழம் மட்டுமே உண்டாலும் இதே பலன் கிடைக்கும். பழங்கள் எதுவானாலும் பழங்களுடன் தண்ணீர் அல்லது வேறு உணவுகளை உண்ணுதல் கூடாது. பழம் சாப்பிடுவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்னாலும், 30 நிமிடங்களுக்குப் பின்னாலும் தண்ணீர் போன்றவை அருந்தலாம். எந்த வகை பழமானாலும் அதனுடன் வேறு பானங்களோ தண்ணீரோ சேர்ப்பதினால் பழங்களின் தன்மை கெட்டு விடுகிறது. அதனால் பழங்களின் பயன்களை நாம் அடைய முடியாது. தனியாக பழங்களை மட்டுமே உண்டால் முழுப்பயனும் கிடைக்கும்.
கோயிலில் மற்றவர் ஏற்றிய விளக்கில் நாம் விளக்கு ஏற்றலாமா?

பிறர் ஏற்றிய தீபம் என்பதால் அதற்கு ஏதாவது தோஷம் ஏற்படாது. அதுபோல, நாம் தீபம் ஏற்றினால் நமக்கு கிடைக்கவேண்டிய பலன் பிறருக்கும் போய்விடாது. சிவன் கோயில் சந்நிதியில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. ஒரு எலி அந்த விளக்கில் இருந்த நெய்யைக் குடிக்க வாயை வைத்தது. எதிர்பாராமல் எலியின் வாய்பட்டு அணைய இருந்த திரியில் சுடர், தூண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது. இந்நிகழ்ச்சி பெரிய புண்ணியச் செயலாக அமைந்து, மறுபிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது. சுவாமி சந்நிதியில் விளக்கேற்றுவது தான் முக்கியமே தவிர மற்ற சந்தேகம் எதுவும் வேண்டாம்.
கோபத்தை இறைவன் ஏன் படைத்தான்?

வேண்டாத குணம் என்று கோபத்தைச் சொல்கிறோம். தீ போன்ற கோபம் நம்மிடம் மறைந்து போகட்டும் என்ற பொருளில், அவ்வை ஆறுவது சினம் என்று நமக்கு வழிகாட்டுகிறாள். ஆனால், அக்கோபத்தையும் துதிக்கிறது ரிக்வேதம். கோபத்தை தேவதையாக்கி இரு சூக்த மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் சூக்தத்தில், பலசாலிகள் எல்லாரையும் விட மிகுந்த பலசாலியான கோபமே! இங்கு வருவாயாக! நண்பனுக்காகத் தவத்தினால் எங்களுடைய எதிரிகளை விரட்டி விடுவாயாக. எல்லா எதிரிகளையும், அரக்கர்களையும் கொல்லும் கோபமே! எங்களுக்கு எல்லாச் செல்வங்களையும் கொண்டு வரவேண்டும் என்கிறது. மற்றொரு சூக்தம், எல்லாவற்றையும் வெல்லும் கோபமே! தீயைப் போல ஜொலித்துக் கொண்டிருக்கும் உன்னை எங்களுடைய படைத்தலைவனாக இருக்கும்படி அழைக்கிறோம். எங்களுடைய எதிரிகளைக் கொன்று வீழ்த்த வேண்டும். அவர்களுடைய செல்வங்களை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுப்பாயாக. உன்னுடைய வலிமையால் எங்களின் எதிரிகளை விரட்ட வேண்டும், என கோபத்தைப் துதிக்கிறது. கடவுள் ஏன் கோபத்தை தந்திருக்கிறான் தெரியுமா? எந்த உணர்வும் நன்மைக்குப் பயன்படுமானால், அது அருளின் வடிவமே! அதனால் தான் கோப தேவதையிடம் நல்லவர்கள் வாழவும், தீயவர்கள் அழியவும் ரிக் வேதம் வேண்டுகிறது. பிறர் நன்மைக்காக கோபப்பட்டால் அதில் தவறில்லை.
மாலையில் விளக்கேற்றிய பிறகு தண்ணீர், உப்பு பிறருக்கு தரலாமா?

விளக்கேற்றிய பிறகு, நம் வீட்டு வாசலில் ஒருவர் மயங்கிக்கிடக்கிறார் என்றால் தண்ணீர் கொடுக்க வேண்டும். உப்பெல்லாம் இப்போது யார் கேட்டு வருகிறார்கள்! உப்பு லட்சுமியின் அம்சம் என்பதால் இப்படி சொல்வதுண்டு. பகலிலேயே யாரும் கேட்டு வந்தாலும் கூட, கடையில் போய் வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்லி விடுங்கள். உதவுவது என்பது வேறு, கடன் கொடுப்பது என்பது வேறு.
பொறாமைக்காரர்களால் தொல்லையா?

வீட்டிலோ, பணியிடத்திலோ, தொழிலிலோ, உறவிலோ நாம் அறிந்தோ அறியாமலோ பொறாமைக்காரர்கள் முளைத்து விடுகின்றனர். காலப்போக்கில் இவர்கள் எதிரிகளாகக் கூட மாறி விடுகின்றனர்.  நான் யாருக்கும் ஒரு கெடுதலும் நினைக்கலே! ஏன் எனக்கு மட்டும் எதிரிகள் முளைக்கிறார்கள்! என்று சொல்லி வருத்தப்படுவர்கள் ஏராளம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர் வழிபாடு உகந்தது. சனிக்கிழமைகளில் 12 முறை சக்கரத்தாழ்வார் சந்நிதியை வலம் வந்து வணங்கலாம். துளசிமாலை சாத்தி, கல்கண்டு பிரசாதத்தை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு கொடுங்கள். யோகநரசிம்மர் படத்தை கிழக்கு முகமாக வைத்து மாலையில் தீபமேற்றுங்கள். யோக நரசிம்மம் சரணம் பிரபத்யே என்று 108 முறை உள்ளம் உருகிச் சொல்லுங்கள். பொறாமைக்காரர்களின் துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவீர்கள்.
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!

காசேதான் கடவுளடா…

இந்தக்காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது பணம். பணம் இல்லாவிட்டால் பிணம் என்ற பழமொழி கூட உண்டு. காசையே கூட கடவுள் என்று சொல்பவர்கள் கூட உண்டு. என்ன தான் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, பணம் சம்பாதித்தாலும், அதை மிச்சப்படுத்த முடியவில்லை. தேவையில்லாமல் வீண் செலவு அதிகமாகிறது என்று கவலைப்படுபவர்கள்: கீழ்த்திருப்பதியிலுள்ள கோவிந்தராஜப்பெருமாளையும், அலர்மேல்மங்கை தாயாரையும் வழிபாடு செய்யவேண்டும். பின்னர் திருப்பதி வெங்கடாஜலபதியை மனமார வேண்டினால் பணப்பிரச்சனை நீங்கி, வரவு அதிகமாகி, செலவு குறையும். அத்துடன் பணத்தை மிச்சமும் படுத்தலாம். மேலும் பெருமாளுக்குரிய சனிக்கிழமைகளில் விரதமிருந்து இயலாதவர்களுக்கு உதவுவது நல்லது.  அடிக்கடி பெருமாளுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதும், பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருவது சிறப்பு.  அத்துடன் விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 4 கி.மீ. தூரத்திலுள்ள திருநகர் மகாலட்சுமி கோயிலுக்கு சென்று திருமஞ்சனம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். இது தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற தனி மகாலட்சுமி கோயிலாகும். இனி மகாலட்சுமி உங்கள் வீட்டு கதவை தட்ட ஆரம்பித்து விடுவாள்.

கலாட்டா கல்யாணம்

நம் பிள்ளைகளுக்கு சமமான வயதுடையவர்கள் எல்லோருக்கும் கல்யாணமாகி குழந்தை குட்டிகளுடன் வாழ்கிறார்கள். ஆனால் நம் பிள்ளைக்கோ ஒரு நல்ல வரன் அமைய மாட்டேங்குது. நிறைய வரன் பார்த்துட்டோம். அதில் எந்த வரனும் அமையவில்லை. எந்த வரன் வந்தாலும்  தடைபட்டுக் கொண்டே செல்கிறது என்று வருத்தப்படுபவர்கள்; ஏதாவது ஒரு செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஓரையில் குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். தங்கம், வெள்ளியால் தாலி செய்து அல்லது மஞ்சள் கிழங்கை குலதெய்வத்திற்கு காணிக்கையாக செலுத்துங்கள். வெற்றிலை, பாக்கு, பூ, பழம் வைத்து உங்களுக்கு இஷ்டப்பட்ட அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மன் பெயரில் அர்ச்சனை செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். திருமணம் நிச்சயம் ஆனவுடன் அந்த அம்மனுக்கு நன்றிகூறும் வகையில் சிறப்பு அர்ச்சனை செய்து விட்டு, ஏழை எளியவர் குறைந்தது ஏழு பேருக்கு அன்னதானம் செய்யுங்கள். அத்துடன் திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலத்திலுள்ள மாங்கல்யேஸ்வரர் கோயிலில் உள்ள மாங்கல்ய மகரிஷியை வழிபாடு செய்து, திருமணம் நிச்சயம் ஆனவுடன் முதல் பத்திரிக்கை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று வேண்டிக்கொண்டால், உங்கள் வீட்டு கல்யாணம் கலாட்டா கல்யாணமாக சிறப்பாக நடக்கும்.

படித்தால் மட்டும் போதுமா?

எவ்வளவு தான் கஷ்டப்பட்டு படித்தாலும் அது மனதில் நிற்காமல்  மறந்து  விடுகிறது. அப்படியே ஞாபகம் இருந்தாலும், அதை சரியாக தேர்வில்  எழுத முடியவில்லை. பெற்றோரும், ஆசிரியர்களும் படித்தால் மட்டும் போதாது. நிறைய மதிப்பெண் பெற வேண்டும் என திட்டுகிறார்கள். படிக்க வசதியில்லாமல் படிப்பு பாதியிலேயே நின்று போய்விடுகிறது என்றெல்லாம் கவலைப்படுபவர்கள்; முருகனின் அறுபடைவீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூருக்குச் செல்லுங்கள். அங்குள்ள நாழிக்கிணறு தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு செந்திலாண்டவனை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். நான்முகனான பிரம்மனுக்கே உபதேசம் செய்தவர் முருகப்பெருமான் என்பதன் அடிப்படையில் 40 லட்டுக்கும் குறையாமல் பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். திருச்செந்தூருக்கு சென்று வழிபட இயலாதவர்கள் முருகனின் உருவப்படத்தை வீட்டில் வைத்து அவரவர் பிறந்த கிழமைகளில் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். மேலும் கல்விக்கு அதிபதிகளான குருபகவான், சரஸ்வதி, ஹயக்ரீவர் போன்றோரின் காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரியுங்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள்.  அத்துடன் நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மணல்மேடு குற்றம் பொறுத்த நாதருக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யுங்கள், அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். உங்களது கல்விக்கான தடைகள் அனைத்தும் நீங்கி, அதிக மதிப்பெண் பெற்று சிறப்பான வாழ்வு பெறுவீர்கள்.

வேலை கிடைச்சாச்சு

நான் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள், ஏதாவது ஒரு வேலை கிடைச்சா போதும் என வருத்தப்படுவர்கள்; திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்துக்கு சென்று அங்குள்ள அக்னீஸ்வரரையும், பொங்கு சனியையும் மனதார வழிபடுங்கள். உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் இங்குள்ள சனிபகவான் கையில் கலப்பையை ஏந்தியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. திருவாரூர் செல்ல இயலாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று அங்குள்ள சனிபகவானுக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் நீங்கள் பிறந்த கிழமைகளில் சிவன் கோயிலுக்கு சென்று சிவன் காயத்ரி மந்திரத்தை மனதாரக் கூறுங்கள். வேலை கிடைத்ததும், வாங்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழை நோயாளிகளின் மருத்துவத்திற்கு செலவு செய்யுங்கள். அத்துடன் மயிலாடுதுறைக்கு வடக்கே 15 கி.மீ. தூரத்திலுள்ள திருப்புன்கூர் சிவலோகநாதருக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டால் உங்கள் தகுதிக்கேற்றபடி வேலை கிடைச்சாச்சு என்பதில் சந்தேகமில்லை.

நூறாண்டு காலம் வாழ்க

உடலில் சளி, இருமல் போன்ற ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்படுபவர்கள்; முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடான பழநி ஆண்டவனை தரிசனம் செய்யுங்கள். சித்தர்களும், யோகிகளும் இவரை வழிபட்டுப் பயனடைந்துள்ளனர். பிரசாதத்தினை ஏழை எளியோருக்கு தானம் செய்யுங்கள். முருகனின் ராஜஅலங்காரப் படத்தினை வீட்டில் வைத்து தினமும் வணங்குங்கள். செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஓரையில் 5 அகல் தீபங்களை ஏற்றி முருகனின் துதிகளைப் பாடி பக்தியடையுங்கள். நவகிரகசன்னதியில் முதலாவதான சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபடுங்கள். அத்துடன் 4448 நோய்களை குணப்படுத்தும் தலைமை இடமான வைத்தீஸ்வரன்கோவிலுக்கு சென்று, வைத்தியநாதரையும், அங்குள்ள தன்வந்திரியையும் வழிபடுங்கள்.  நோய் நொடிகளின்றி நூறாண்டு காலம் வளமோடு வாழ நல்லருள் கிடைக்கும்.

அடுத்த வாரிசு

தங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லை என்று வருத்தப்படுகிறவர்கள்; தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள கோயிலில் உள்ள துர்கை அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். 9 உதிரி எலுமிச்சம் பழத்தை அம்மன் காலடியில் வைக்க சொல்லி வழிபட்டு விட்டு அந்த பழங்களை திருப்பி வாங்கக் கூடாது. அர்ச்சனை செய்த குங்குமத்தை வீட்டில் வைத்து குழந்தைகளுக்கு தினமும் பூசிவிடுங்கள். கதிராமங்கலம் வனதுர்கை ஆலயத்துக்குச் சென்று அம்மனுக்கு அரக்கு அல்லது சிவப்புப் புடவை சாற்றி, அபிஷேக ஆராதனை செய்து அம்மனை வழிபடுங்கள். உங்கள் வாரிசுகள் பிறந்த கிழமைகளில் அருகிலுள்ள கோயில் நரசிம்மரை வழிபட்டு கல்கண்டு பிரசாதத்தை பக்தர்களுக்கு கொடுங்கள். துர்கை, நரசிம்மர் காயத்ரி மந்திரங்களை தினமும் உச்சரியுங்கள். திருக்கடையூர் காலசம்ஹார மூர்த்தியிடம் சென்று உங்களக்கு அடுத்த வாரிசுக்கு ஆயுஷ் ஹோம் செய்யுங்கள்.உங்கள் வாரிசுகளின் உடல் நலம் சீராக அமையும்.

ஆனந்தம்...ஆனந்தம்... ஆனந்தமே

வியாபாரத்தில் லாபம், நஷ்டம் இருப்பது சகஜம். தொழிலில் எப்பொழுதுமே நஷ்டமாக உள்ளது என வருத்தப்படுகிறவர்கள்; குபேரனுக்கே செல்வ வளம் கொடுத்தவர் சிவபெருமான், எனவே ஸ்ரீசைலம் சென்று அபிஷேக ஆராதனை செய்து சிவபெருமானை வழிபடுங்கள். அங்குள்ள விபூதி பிரசாதத்தை வாங்கி வந்து வீட்டிலும், வியாபாரம் நடக்கும் இடத்திலும் வைத்தால் நஷ்டம் குறைந்து லாபம் பெருகும். வியாபாரம் தொடங்கிய நாட்களில், திங்கட்கிழமைகளில் அருகிலுள்ள சிவாலயங்களுக்குப் போய் நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள். அங்கு நடைபெறும் அன்னதானத்திற்கு இயன்ற உதவி செய்யுங்கள். தினமும் சிவன் காயத்ரி மந்திரந்தை உச்சரியுங்கள். பிரதோஷ நாட்களில் பிராணிகளுக்கு உணவு கொடுங்கள். திருப்பட்டூர் பிரம்மா கோயிலுக்கு சென்று உங்கள் வயதுக்கேற்றபடி நெய்தீபம் ஏற்ற வழிபாடு செய்யுங்கள். (இக்கோயில் திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வழியில் 32 கி.மீ. தூரத்தில் உள்ள சிறுகனூரிலிருந்து மேற்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. ) உங்கள் வாழ்க்கையில் நஷ்டமும், துன்பமும் விலகி லாபமும், மகிழ்ச்சியும் பெருகி, இனி எப்போதும் ஆனந்தம்...ஆனந்தம்... ஆனந்தமே...

கண்ணன் வருவான்

திருமணமாகி நீண்ட நாட்களாகியும் தனக்கு ஒரு வாரிசு இல்லை என வருத்தப்படுபவர்கள் திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயிலுக்குச் சென்று முல்லைவனநாதரையும், கர்ப்பரட்சாம்பிகை அம்மைனையும் வழிபடுங்கள். அம்மனின் பாதத்தில் வைத்து அபிஷேகம் செய்த நெய்யை கணவன், மனைவி இருவரும் 48 நாட்கள் சாப்பிட்டுவர குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள பெருமாள் கோயிலில் உள்ள சந்தான கோபால கிருஷ்ணரை மடியில் வைத்து மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் பிறந்த கிழமைகளில் வீட்டிலுள்ள இஷ்டதெய்வத்தின் முன் நெய் தீபம் ஏற்றி அபிராமி அந்தாதியில் தாமம் கடம்பு எனத் தொடங்கும் 73வது பாடலை தினமும் மனதார படியுங்கள். அரசமரத்தடி நாகர் மற்றும் விநாயகரை திங்கட்கிழமைகளில் வழிபடுங்கள். படிக்க வசதியில்லாத ஏழைச் சிறுவர்களின் படிப்புக்கு உதவுங்கள். விரைவிலேயே உங்கள் வீட்டில் சின்னக் கண்ணன் துள்ளி விளையாட வருவான்.

எதிரி தொந்தரவு நீங்க

உங்கள் வளர்ச்சியில் பொறாமைப்படுபவர்கள், உங்களை விரோதியாக நினைப்பவர்கள் போன்றவர்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமா; கும்பகோணம் அய்யாவாடி பிரத்யங்கிரா ஆலயத்தில் நடைபெறும் நிகும்பலா யாக பூஜையில் கலந்து கொண்டு அம்மனை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோயில் சக்கரத்தாழ்வாரை மனதாரப் பிரார்த்தியுங்கள். அங்கு நடைபெறும் சுதர்சன ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள். சனிக்கிழமைகளில் உங்களுக்கு இஷ்டமான அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள். இயலாதவர்களுக்கு பிரசாதத்தை தானம் செய்யுங்கள். உங்களைப் பார்த்துப் பொறாமைப்படுபவர்கள், விரோதிகள் என யாராலும் எந்த பாதிப்புமின்றி இரும்பு கோட்டை போல் பாதுகாப்புடன் நிம்மதியாக வாழலாம்.

நல்லதொரு குடும்பம்

உங்கள் குடும்பங்களில் உள்ள உறவுகளுடன் சிறு சிறு சண்டைகளும், பிரச்சனைகளும் ஏற்படுகிறதா; அவைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ ஆசைப்படுபவர்கள்; பிள்ளையார்பட்டிக்கு சென்று அங்குள்ள கற்பக விநாயகருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து மனதார வழிபடுங்கள். அங்கு தரும் விபூதி பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டு வந்து சிறுதுணியில் கட்டி வீட்டு வாசல்படி முன் வைத்துவிடுங்கள். மேலும் குடும்பத் தலைவன், தலைவி என அவரவர் பிறந்த கிழமைகளில் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று அருகம்புல் மாலை சாற்றி, சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யுங்கள். வசதி படைத்தவர்கள் வீட்டில் கணபதி ஹோமம் நடத்தலாம். அல்லது வெள்ளிக்கிழமைகளில் பசுவின் கோமியத்தை வீடு முழுவதும் தெளித்து, சாம்பிராணி புகை போட்டு இஷ்ட தெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் குடும்பங்களில் அவ்வப்போது நிகழும் சிறு சிறு பிரச்சனைகள் நீங்கி சந்தோஷமாக ஒற்றுமையுடன் நல்லதொரு குடும்பம் அமையும்.

வழக்குப் பிரச்சனைகள் தீர

உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கோர்டில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது முடிவடையாமல் இழுத்துக்கொண்டே செல்கிறது. உங்களுக்கு சாதகமாக நல்லதொரு தீர்ப்பு அமைய விரும்புபவர்கள்; விழுப்புரம் பஞ்சவடிக்கு சென்று ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபாடு செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வெற்றிலைமாலை, வடைமாலை அல்லது வெண்ணெய் காப்பு சாற்றியும் வழிபடுங்கள். மேலும் அஷ்டமி தினத்தில் பைரவருக்கு தயிர்சாதம் நிவேதனம் செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்குங்கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ள வழக்கு சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து உங்களுக்கு சாதகமாக நல்லதொரு தீர்ப்பு கிடைக்கும்.

எங்கும் பயம்...எதிலும் பயம் நீங்க

பயம்.. பயம்.. பயம் என எதைப்பார்த்தாலும் பயமாக, நடுக்கமாக உள்ளது. என்னால் எந்த வேலையையும் நிம்மதியாக செய்து முடிக்க முடியவில்லை என வருத்தப்படுகிறவர்கள்; சிவகங்கை வைரவன்பட்டி பைரவரை வழிபடுங்கள். அவருக்கு உகந்த பிரசாதத்தை குறைந்தது 9 பேருக்காவது தானம் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள பெருமாள் கோயில் நரசிம்மரை வழிபட்டு பானகம் நிவேதனம் செய்து வணங்குங்கள். அவருடைய தீர்த்தத்தை முகத்தில் தெளித்துக் கொண்டு பயமெல்லாம் போனதும் அவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் சன்னதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து தயிர்சாதம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்குங்கள். நரசிம்மர் வழிபாட்டினால் உங்களுடைய பயம் அனைத்தும் விலகி வெற்றியே உங்களுக்கு கிடைக்கும்.

இருமலர்கள்

கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக மலரும் மணமும் போல் வாழ ஆசைப்படுபவர்கள்; சிவனும், சக்தியும் சரிபாதியாக இணைந்து அர்த்தநாரீஸ்வரராக விளங்கும் தலம் நாமக்கல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம். இங்குள்ள மூலவருக்கு மாலை வாங்கி சாற்றி அபிஷேகம் செய்து மனதார வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானின் சாபத்தால் பூமிக்கு வந்த பார்வதி, மீண்டும் ஈசனை அடைய பஞ்சாக்னியில் நின்று தவம் செய்த தலம் காஞ்சி மாங்காடு வெள்ளீஸ்வரர் ஆலயம். இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேக ஆராதனை செய்து வழிபடுங்கள். காஞ்சி காமாட்சியம்மன் படத்தை வீட்டு பூஜையறையில் வைத்து அவரவர் பிறந்த கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். கணவன் மனைவி இருவருக்கிடையேயும் எந்தவித பிரச்சனையுமின்றி இரு மலர்களாக மணம்வீசி மனம் போல வாழ்வு சிறக்கும்.

கனவோ...நிஜமோ...

இரவில் தூங்கும் போது கெட்ட கனவுகள் வந்து தொல்லை செய்கின்றன. எங்கே கனவில் கண்டது நிஜத்தில் பலித்து விடுமோ என்று பயமாக உள்ளது என வருத்தப்படுபவர்கள்; உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலுக்குச் சென்று 9 எலுமிச்சம் பழங்களை வாங்கிக் கொடுத்து குங்கும அர்ச்சனை செய்து வழிபடுங்கள். அதில் 3 எலுமிச்சம் பழத்தை மட்டும் திருப்பி வாங்கிட்டு வந்து ஒன்றை உங்கள் படுக்கை அறை அலமாரியில் வைத்து விடுங்கள். மீதி இரண்டை பூஜையறையில் வைத்தால் கெட்ட கனவுகள் வராது. மேலும் ராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள தேவிபட்டணத்திற்கு சென்று அங்குள்ள நவகிரகங்களை மனதார வழிபாடு செய்யுங்கள். நல்ல செயல்களை நினைத்துக் கொண்டு நல்ல சிந்தனையோடு உறங்கச் செல்லுங்கள். தீய கனவுத்தொல்லைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியாக உறங்குங்கள்.

ஞாபம் வருதே... ஞாபகம் வருதே...

மறதி பிரச்சனை இயல்பாகவே எல்லோருக்குமே இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை. ஒருசிலர் தாங்கள் அன்றாடம் செய்யும் பணிகளை மறந்து விடுவார்கள், கேட்டால் எனக்கு ஞாபக மறதி என்று சொல்வார்கள். மறதிவிலகி ஞாபக சக்தி அதிகரிக்க ஆசைப்படுபவர்கள்; உங்களுக்கு இஷ்டமான அம்மன் ஆலயத்துக்குச் சென்று 5 அகல் தீபம் ஏற்றி அம்பிகையை மனதார வழிபடுங்கள். ஏழைப் பெண்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி,

யாதேவி சர்வ பூதேஷு ஸ்ம்ருதி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எல்லா உயிர்களிடமும் ஞாபக சக்தியாக விளங்கும் தேவியைத் துதிக்கிறேன் என்பதே இதன் பொருள். இந்த ஸ்லோகத்தையும், பொருளையும் தினமும் 11 முறை கூறுங்கள். ஞாபக மறதியிலிருந்து விடுபட்டு எந்த காரியத்தையும் மனதில் ஞாபகம் வைத்துக் கொண்டு செயலாற்றும் சக்தி கிடைக்கும்.

பயணப் பாதையில் ஆபத்து வராமல் இருக்க

நீங்கள் அடிக்கடி வெளியூர், வெளிநாடு பயணம் செய்பவராக இருக்கலாம். அலுவலகப் பணி அல்லது பள்ளி, கல்லூரிகளுக்கு நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் பயணத்தின் போது விபத்து மற்றும் ஆபத்துகள் ஏற்படாமல் இருக்க

ஓம் நமோ அங்காரகாய
ஓம் நமோ அங்காரகாய
ஓம் நமோ அங்காரகாய
ஓம் நமோ குஜாய
ஓம் நமோ குஜாய
ஓம் நமோ குஜாய
ஓம் நமோ மங்களாய
ஓம் நமோ மங்களாய
ஓம் நமோ மங்களாய
ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ ராகுவே
ஓம் நமோ ராகுவே
ஓம் நமோ ராகுவே

என்ற இந்த மந்திரத்தை வீட்டை விட்டுக் கிளம்பும் முன் உங்கள் வீட்டுப்பூஜையறையில் நின்று மனதார ஒருமுறை கூறிவிட்டு புறப்படுங்கள். அல்லது சுலபமாக,

சம்போ மகாதேவ தேவா - சிவ சம்போ மகாதேவ
தேவாதி தேவா நமோ மார்க்க பந்தோ

என்ற இந்தத் துதியை உங்க பயணம் ஆரம்பிக்கும் முன் குறைந்தது 11 முறை சொல்லுங்கள். நீங்கள் எந்தத் தடையுமின்றி பத்திரமாக உங்கள் பயணத்தை முடித்து விடுவீர்கள்.

வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணம் பண்ணிப்பார்!

சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்; வீட்டைக் கட்ட ஆரம்பிக்கும் முன்னே பலவிதமான தடைகள் ஏற்படும். இதில் ஒரு வீட்டைக் கட்டி முடிப்பது என்றால் அப்பப்பா சொல்லி முடிக்க இயலாது. வீடு கட்ட ஆரம்பிக்கும் முன்பு காளஹஸ்தி சென்று காளத்திநாதரையும், ஞான பிரசுன்னாம்பிகையையும் மனதார வழிபட்டு வாருங்கள். உங்களால் இயன்ற அளவு பச்சரிசியை கோயிலுக்கு தானமாகக் கொடுங்கள். ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்யுங்கள். கோயிலில் தரும் விபூதியை தண்ணீரில் கலந்து பூமி பூஜை ஆரம்பிக்கும் முன்  பூஜை செய்யும் இடத்தில் ஊற்றுங்கள். வீடு கட்டத் தொடங்கிய பின்பு புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று புற்றுக்கு பால் வாங்கி ஊற்றிவிட்டு அம்மனை மனதார வழிபட்டு வாருங்கள். அங்கு தரும் குங்குமத்தை சிறிதளவு தண்ணீரில் கலந்து வீடு கட்டும் இடத்தில் தெளியுங்கள். தடைகளைத் தாண்டி சொந்த வீட்டில் நீங்கள் சந்தோஷமாக வசிக்கலாம்.

திருட்டுப் பயம் போக...

உங்கள் வீட்டிலோ அல்லது வெளியூர் செல்லும் போதோ ஏதாவது பொருள், நகை, பணம் திருடு போகிவிட்டதா, இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்ததை திருடி விட்டார்களே என வருத்தப்படுகிறவர்கள்; காரைக்குடி வைரவன்பட்டி பைரவர் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து பைரவரை மனதார வேண்டுங்கள். தயிர்சாதம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுங்கள். பைரவரின் வாகனமான நாய்களுக்கு இயன்ற உணவு வாங்கிக் கொடுங்கள். கோயிலில் தரும் விபூதியை வீட்டு பூஜை அறையில் வையுங்கள். தேய்பிறை அஷ்டமி தினத்தில் உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கோயிலில் உள்ள பைரவருக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுங்கள். தினமும் பைரவர் காயத்ரி மந்திரத்தைக் கூறுங்கள்.

கடன்கள் அடைந்திட...

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கைவேந்தன் என்ற பழமொழிக்கேற்ப கடன் வாங்கி விட்டு அதைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என வருத்தப்படுகிறீர்களா; தஞ்சாவூர் திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயிலில் உள்ள ரிண விமோசன லிங்கேஸ்வரரை வழிபடுங்கள். 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, 11 வாரம் அபிஷேகத்தில் கலந்து கொண்டால் உங்களது கடன் சுமை குறையும். மேலும் சுவர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வீட்டு பூஜையறையில் வைத்து தீபம் ஏற்றி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமைகளில் பசுமாட்டுக்கு தீவனம் வாங்கிக் கொடுங்கள். அபிராமி அந்தாதியை தவறாமல் தினமும் கூறுங்கள். உங்களது கடன் பிரச்சனைகள் அனைத்தும் மறைந்து செல்வ வளம் பெருகும்.

பயணத் தடைப் பிரச்சனை விலக

வெகுநாட்களாக சுற்றுலா, தூர தேசப்பயணம் மேற்கொள்ள ஆசைப்பட்டு அது நடைபெறாமல் தடைபட்டுக் கொண்டே செல்கிறதா, எங்கே நாம் ஆசைப்பட்ட இடத்திற்கு போகமுடியாமல் கனவாக இருந்து விடுமோ என நினைப்பவர்கள்; உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோயில் கருடனுக்கும், சிவன் கோயில் நந்திக்கும் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். கருடன், நந்திக்கு செய்ய வேண்டிய சரியான வழிபாட்டை செய்யுங்கள். வெளிநாடு செல்ல வேண்டிய பயணத்தடை விலக காரைக்கால் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்துக்கு சென்று அங்குள்ள நளதீர்த்தத்தில் நீராடுங்கள். 8 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தர்ப்பாரண்யேஸ்வரரை மனதார வழிபாடு செய்யுங்கள். ஏதாவது ஒரு விநாயகர் கோயிலில் 3 சிதறுதேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்புங்கள். நீங்கள் விரும்பியபடியே உங்களது பயணம் எவ்விதத் தடையுமின்றி சிறப்பாக அமையும்.

அரசுப்பணி தடைகள் அதிரடிப்படையுடன் விரட்ட...

அரசுப்பணியில் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் தடைகள் விலகவும், அரசின் மூலம் கிடைக்க இருக்கும் அனுமதிக்கு காலதாமதம் ஏற்படுவதால் வருத்தப்படுபவர்கள்: அருகிலுள்ள ராகவேந்தர் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு. முடிந்தால் மந்திராலயம் சென்று, தீபமேற்ற பசு நெய் வாங்கிகொடுத்து வழிபட்டு வருவது சிறந்த பலனைத்தரும். அத்துடன் அங்கு கிடைக்கும் இனிப்பான கோயில் பிரசாதத்தை குறைந்தது நாற்பது பேருக்கு கொடுக்கவும். மேலும்  தங்கள் காரியம்  விரைவில் நிறைவேற தினமும்  ராகவேந்திரர் படத்திற்கு பூபோட்டு வணங்கி வருவதால் காரியசித்தி விரைவில் கூடும். அடிக்கடி உங்கள் வீட்டின் அருகேஉள்ள ஏதேனும் ஒரு மகானின் பிருந்தாவனத்திற்கு, நீங்கள் பிறந்த கிழமையில் அவசியம் சென்று நெய்தீபமேற்றி மனதார வணங்குங்கள். சனிக்கிழமைகளில் சனிபகவான் சன்னதி முன்பு 9 நல்லெண்ணை தீபமேற்றி 9 சுற்றுக்கள் வந்து வணங்கினால் கிரக தோஷம் நீங்கும். இப்படியெல்லாம் செய்து வந்தால் அரசுப்பணி தடைகள், பகவானின் அருள் எனும் அதிரடிப்படை துணை கொண்டு விரட்டலாம்.

தேடும்....உன் பார்வை....

ஞாபகமறதி உள்ள நபர்கள் அடிக்கடி ஏதேனும் ஒரு பொருளை எங்கேயாவது வைத்துவிட்டு தேடுவர்.  சில சமயம் அவை கிடைத்துவிடும். சில சமயம் கிடைக்காமல் போனாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. ஏனெனில் அது சாதாரணப்பொருளாக இருக்கும். எப்போதும் உஷாராக இருப்பவர்கள் கூட,  சில நேரங்களில்,  ஏதேனும் ஒரு பொருளை தொலைத்து விடுவார்கள். மிகவும் விலை உயர்ந்த, அல்லது மதிப்பு மிக்க அந்தப்பொருளை தேடித்தேடி அலுத்துவிடுவார்கள். அத்துடன் எப்போதும் அவர்களது பார்வை அந்தப்பொருளை தேடிக்கொண்டிருக்கும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.  புதுக்கோட்டையிலுள்ள அரைக்காசு அம்மனை இருந்த இடத்திலிருந்து, தொலைந்த பொருள் விரைவில் கிடைத்தவுடன் நேரில் வந்து அர்ச்சனை செய்வதாக வேண்டிக்கொண்டால் உடனடி பலன் கிடைக்கும். இது தவிர திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன்பூண்டி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதும், சென்னை வண்டலூர் அருகிலுள்ள லட்சுமி குபேரர் கோயிலில் உள்ள அரைக்காசு அம்மனுக்கு சர்க்கரை வாங்கி வைத்து வேண்டிக்கொள்வதும் சிறந்த பலனைத்தரும்.

கவலைப்படாதே சகோதரா...

தான் ஆடாவிட்டாலும்...தன் சதை ஆடும் என்பார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால். நமக்கு ஒரு பிரச்சனை என்றால், அதுபற்றி நாம் கவலைப்படாவிட்டாலும், நம் உடன் பிறந்தவர்கள் கவலைப்பட்டு, உண்மையான ஆறுதல் கூறி, பிரச்னை தீர வழி தேடுவார்கள் என்பதாகும். என்னதான் நண்பர்கள், பிற உறவினர்கள் இருந்தாலும், உடன்பிறந்தவர்கள் என்பதே தனி சுகம் தான். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால் சகோதர, சகோதரிகளுக்குள் இடைவெளி உண்டாகி பெரும் வருத்தம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மன வருத்தங்களால் பிரியாமல் இருக்கவும், பிரிந்தவர்கள் ஒன்று சேரவும் நினைப்பவர்கள்:  அருகிலுள்ள ராமர்கோயிலுக்கு சென்று ராம, லட்சுமண சகோதரர்களுக்கு பானகம் வைத்து வழிபாடு செய்வது சிறப்பு. ஏனென்றால் இவர்கள் தான் சகோதர உறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள். அத்துடன் பூஜையின் போதெல்லாம் ஸ்ரீராம ராம ராமேதி,ரமே ராமே மனோரமே, சகஸ்ரநாம தஸ்த்துல்யம், ராமநாம வராணனேஎன்ற ராம மந்திரத்தை மூன்று முறை ஜபித்து வணங்குங்கள். அத்துடன் ராமதூதனான அனுமனை வழிபட்டாலும் உடன்பிறந்தவர்களின் உறவுக்கு கை கொடுக்கும். உங்களது பிரார்த்தனையின் போதெல்லாம், ராமர் காயத்ரி, அனுமன் காயத்ரி மந்திரத்தை கூறி வணங்கவும். உங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் ராமருக்கு திருமஞ்சனம் செய்தும், அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றியும் நன்றி சொல்லுங்க.

அபிராமி... அபிராமி...

எந்த ஒரு பயத்திற்கும் எளிதில் நிவாரணம் கிடைத்து விடும்.  ஆனால் மரணபயத்திற்கு நிவாரணம் இறைவனை சரணடைவதை தவிர வேறில்லை. மரணபயம் வந்துவிட்டால் ...அந்த பயமே ஆளை கொன்றுவிடும். அதற்கு முன் இறைவனை சரணடைந்து விடுவோம். சரி ....எந்த கடவுளை சரணடைவது..... இதற்கெல்லாம் ஒருத்தர் தான் இருக்கிறார். அவர் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில் உள்ள காலசம்ஹார மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அவரை சரணடைவதை தவிர வேறு வழியில்லை. அங்கு போய் அவருக்கும், அபிராமி அம்மனுக்கும்  அர்ச்சனை செய்து விட்டு, அங்கு தரும் விபூதியை நாள் தோறும் பூசி வந்தால் மரண பயம் விலகும். முடிந்தால் அங்கேயே  மிருத்தஞ்ய ஹோமம் செய்வது சிறப்பு. ஏழை எளியவர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கும், வாயில்லா ஜீவன்களுக்கும்  உதவுவது சிறந்த பலன் தரும்.  சிவனைத்தவிர எவருமில்லை என்பதால், பிரதோஷத்தன்று சிவ அர்ச்சனை செய்யுங்கள். தினமும் மகா மிருத்தஞ்ஜய மந்திரத்தை 11 தடவை ஜபியுங்கள்.இதனால் உங்களுக்கு மரண பயம் நீங்கி, மன அமைதி கிடைக்கும்.

என்னதான் நடக்கும்...நடக்கட்டுமே...

பிரச்சனை...அலுவலகத்தில் பிரச்சனை...சொந்த பிசினஸில் பிரச்சனை...இதில் நாம் உண்டு என இருந்தாலும், பிரச்சனை நம்மை தேடி வந்து கதவை தட்டும். இதிலிருந்து தப்பிக்க. ஒரு சிலர் காக்காய் பிடிப்பார்கள். இதனால் பிரச்சனை நிரந்தரமாக தீர வாய்ப்பில்லை.  ஆனால் நீங்களோ பெருமாள் காலை பிடித்துக்கொள்ளுங்கள். அதிலும் பள்ளி கொண்ட பெருமாள் என்றால் இன்னும் விசேஷம். அவரிடம் சென்று நடந்தவற்றை கூறி காப்பாற்றும்படி கெஞ்சுங்கள். துளசியால் அர்ச்சனை செய்யுங்கள். அலுவலகத்திற்கு வந்தவுடன் ரங்கநாதரை மனதில் நினைத்து, அவரது காயத்திரி மந்திரத்தை கூறி விட்டு பணியை தொடங்கவும்.  முடிந்தால் ஸ்ரீரங்கம் சென்று அங்குள்ள ரங்கநாதரையும், நரசிம்மரையும் வணங்கி, அர்ச்சனை செய்து வழிபடுங்கள். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு 10 பேருக்கு மேல் பிரசாதம் வழங்குங்கள். அத்துடன் உங்களது பிறந்த கிழமையில் பக்கத்து பெருமாள் கோயிலுக்கு சென்று தாயாருக்கும், பெருமாளுக்கும் துளசி அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். இதனால் நீங்கள் என்னதான் நடக்கும். நடக்கட்டுமே.. பெருமாள் பார்த்து கொள்வார் என தைரியமாக பணியை செய்யலாம்.

தூள்...

என்னன்னு தெரியல்ல...எனக்கு மட்டும் எதை தொட்டாலும் தோல்வி... எதைசெய்தாலும் நஷ்டம்... என்ன செய்றதுன்னு தெரியல்ல... என புலம்புவர்கள், முழு முதற்கடவுளான விநாயகரிடம் சென்று அருகம்புல் மாலை சாற்றி அர்சசனை செய்து வணங்கி வாருங்கள். அடிக்கடி மிகப்பிரபலமான விநாயகர் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி குறைகளை சொல்லுங்கள். எதை செய்தாலும், விக்ன விநாயகனை வணங்கி விட்டு செய்யுங்கள். வினை தீர்க்கும் விநாயகர் உங்கள் வினைகளை எல்லாம் தூள் தூளாக்கி விடுவார். கடல் தீர்த்தம், மற்றும் புனித தீர்த்தங்களை வீட்டில் வைத்துக்கொண்டு அடிக்கடி வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். நடப்பது நன்மையாகவே முடியும்.
புதுவீடுகளில் திருஷ்டி பூசணிக்காய் தொங்கவிடுவதன் நோக்கம் தெரியுமா?

கண்ணேறு கழித்தல் என்பது பண்டைய காலந்தொட்டே கடைபிடிக்கப்படும் மரபு. ஒருவர் நம்மைப் பொறாமையோடு பார்த்தால் நமது மனநிலையும், உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது என்பதை இன்றைய விஞ்ஞான உலகமும் ஒப்புக் கொண்டிருக்கின்றது. இதனை நம் முன்னோர்கள் திருஷ்டி தோஷம் எனக் குறிப்பிட்டார்கள். இவ்வளவு அழகாக வீடுகட்டி விட்டார்களே என்று பொறாமையுடன் யாராவது பார்த்தால், இந்த திருஷ்டி தோஷம் ஏற்படும். இதனால் நமக்கும் பாதிப்புகள் வராமல் இருக்க பூசணிக்காய் தொங்கவிடுவர். புதுவீட்டை பார்ப்பவர் கண்களில் பூசணிக்காயும் அதில் வரைந்துள்ள வடிவமும் சிறிது நேரம் படும். புதுவீட்டை முழுமையாகப் பார்ப்பதில் இருந்து அவரது கவனம் சிதறும். இதன் காரணமாக திருஷ்டிதோஷம் குறையும் என்றனர்.
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்!

ஒரு மனிதனுக்கு கடவுளைக் காண வேண்டும் என்று ஆசை அவரை எப்படி சந்திப்பது ? கோவிலுக்குப் போ ! என்றார்கள். உடனே புறப்பட்டான். போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். அவர் கேட்டார். எங்கே போகிறாய் ? கடவுளைக் காண போகிறேன் ! எங்கே ? கோவிலில் ! அங்கே போய்... ? அவரை வழிபடப் போகிறேன் ! அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ? தெரியாது ! எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ அவரை வழிபட முடியும் ? அப்படியென்றால் ... ? உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காகத்தான் இருக்க முடியும் ! மனிதன் குழம்பிப் போனான். ஞானி தெளிவுபடுத்தினார். ஏ, மனிதனே... நீ செய்யப் போவது உண்மையான வழிபாடு அல்ல. இன்றைக்கு மனிதர்கள் வழிபாடு என்கிற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது கோரிக்கைகளைக் குரல் மூலம் பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது புகார்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன். நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ? அப்படியானால்... ஆண்டவனை சந்திக்க என்னதான் வழி ? அவரை நீ சந்திக்க முடியாது. உணர முடியும் ! அதற்கு வழி ?

தியானம்.  தியானத்துக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ? இல்லை ! மனிதன் வியப்போடு நிமிர்ந்தான். அவர் சொன்னார் : தியானம் உன் மனத்தோடு சம்பந்தப்பட்டது. அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும், அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில், கடவுள் இருப்பதை நீ உணரத் தொடங்குவாய். உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும். தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும். அந்த மனிதனும் ஞானியும் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே வந்தார். ஞானியின் முன்னால் வந்து பணிபோடு நின்றார். தன்னுடைய தேவையைச் சொன்னார். நான் விரும்புவது அமைதி ஞானி சொன்னார். முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு. மூன்றாவது வார்த்தையை நெருங்கலாம் எனக் கூற வந்தவர் யோசித்தார். நான் என்கிற அகங்காரத்தை விலக்குங்கள். நான், என்னுடையது என்கிற ஆசைகளை விலக்குங்கள். அமைதி என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள். வெளிநாட்டுக்காரருக்கு விளக்கம் கிடைத்தது. மனநிறைவோடு திரும்பிச் சென்றார். கொஞ்ச அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது!

ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமா போய் சந்நிதியிலே கொஞ்சநேரம் உட்கார முடிஞ்சிது ! அவன் முகத்திலே கடவுளை நெருங்கிவிட்ட பெருமிதம் ! ஞானி கேட்டார் : அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ? ஒரு பத்தடி தூரம் இருக்கும் அவ்வளவுதான் ! உன் அளவுக்கு வேற யாரும் நெருங்கலையா ? இல்லை ! அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவர் வேறொருவர் உண்டு ! யார் அவர் ? அங்கே இருக்கிற அர்ச்சகர் ! வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம். சரி சுவாமி, நான் வர்றேன் ! சோர்வோடு நடந்து போனான். அதன் பிறகும் விவாதம் தொடர்ந்தது. இறுதியில் மனிதன் எழுந்தான். திரும்பி நடந்தான். ஞானி கேட்டார். எங்கே போகிறாய் ? வீட்டுக்கு ! கோவிலுக்குப் போகவில்லையா ? இல்லை ! அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ? ஆண்டவனை உணர்ந்தபிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்து கொண்டேன். நான், என்னிடம் இருந்து விலகினால் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன். ஞானி கைகளை உயர்த்தினார். ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல, விலகுவது ! எவ்வளவு தூரம் நம்மிடமிருந்து விலகியிருக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் கடவுளை நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் !
புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்!

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

இந்தப் பழமொழியின் உண்மையான விளக்கத்தை வாரியார் அவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று கூறுகிறார்.

பெண் புத்தி பின் புத்தி

நெற்றிக்கண் எனும் ஞானக்கண், முதன்முதலில் பார்வதிதேவிக்குத்தான் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பார்வதிதேவி சிவபெருமானுடன் சேர்ந்தபோது, தன் ஞானம் எனும் மூன்றாம் கண்ணை சிவபெருமானுக்குக் கொடுத்துவிட்டார் என்றும், சிவபெருமான் பார்வதிதேவியின் நெற்றிக் கண்ணை நினைவுகூரும் வகையில் செந்நிறத் திலகமிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே இன்றும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு நெற்றியில் திலகம் இடப்படுகின்றது. அப்படி திலகம் பார்வதிதேவியின் நெற்றியில் இடப்படுவதற்கு முன், சிவபெருமான் தன்னை முழுமையாக பார்வதிதேவியின் கையில் கொடுத்துவிட்டார். இதை நினைவுகூறும் வகையில் இன்றும் திருமணங்களில் பெண்ணின் கையில் முக்கண்ணுடைய தேங்காய் கொடுக்கப்பட்டு திலகம் இடப்படுகின்றது. ஞானத்தை புத்தி என்றும் கூறுவர். ஞானமாகிய புத்தியை சிவபெருமானுக்கு  பார்வதிதேவி தன் மூன்றாம் கண்ணாக அன்பின் வழியாகக் கொடுத்து, அவரின் பின்னால் சக்தியாகத் தாங்கி நிற்கின்றாள். அக்னி எனும் ஞானத்தை சிவபெருமானுக்குக் கொடுத்து அவரின் பின்னால் இருந்து புத்தியாக - சக்தியாக இருந்து செயல்படுகின்றார். இதுவே பெண்புத்தி பின்புத்தி என்று சொல்லப்படுகின்றது, பெண் சகோதரியாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும், சக்தியைக் கொடுத்துப் பாதுகாக்கின்றாள்.  பெண் எனும் சகோதரி, முருகன் கை வேல் போன்று காப்பவள், மனைவி எனும் பெண் ஆனந்தம், கருணை, அன்பு எனும் நித்யானந்த நிலைக்கு நம்மை வழி நடத்துபவள்.

ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா?

பொதுவாக நகரத்தார் சிக்கனவாதிகள் என்று சொல்லப்படுவதுண்டு. பெரும்பாலும் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் தான் தான தர்மத்திலும் சிறந்து விளங்குகிறார்கள். இன்றைக்கு இருக்கும் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளைகளில் கணிசமானவை நகரத்தார்களின் நன்கொடையில் விளைந்தது. அந்தக் காலத்திலிருந்தே பல வகையான தான, தர்மங்கள் செய்து வந்தனர் நகரத்தார்கள். தானங்களில் சிறந்தது பசு தானம். எந்த ஒரு மங்கல நிகழ்ச்சி நடந்தாலும், பசுவைத் தானம் கொடுப்பது தலையாய தானமாய்க் கருதப்படுகிறது. அதற்குக் காரணம் எந்தவித பலனும் எதிர்பாராமல் தன் பாலை மக்களுக்குக் கொடையாக வழங்குவது பசு. அத்தகைய கொடை தரும் பசுவைக் கொடையாகத் தருவது புண்ணியம்தானே!.

ஆ-தானம் அதாவது பசு தானம் செய்வது வழக்கம். நகரத்தார்(செட்டியார்) எவரும் ஆ தானம் செய்யாது போனால், தன் வாழ்வில் செய்யத் தவறினால், அவன் தன் கடமையை ஆற்றாது போகிறான் என்பதாக வந்தது. ஆ தானம் செய்யாத செட்டி ஆற்றாது போகிறான் என்ற நகரத்தாரின் குணத்தைப் போற்றிய உண்மையான பழமொழி நாளடைவில் திரிந்து ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா என்று தவறுதலாக பேச்சுவழக்கில் கூறப்பட்டு வருகிறது.

பந்திக்கு முந்து படைக்கு பிந்து

வீரம் விளைந்த பூமி என்று போற்றப்படும் நமது பூமியில் வீரர்களை படைக்கு பிந்து என்று கூறியிருக்க மாட்டார்கள். பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்திக் கொண்டு உணவு பரிமாற வேண்டும். விருந்து படைக்கிறவர்கள், விருந்தினர்கள் சாப்பிட்ட பின்பே (பிந்து) சாப்பிட வேண்டும் என்பதே இதன் உண்மையான அர்த்தம். இதுவே பேச்சுவழக்கில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று மாறிவிட்டது.

குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம்

நம்முடைய தகுதிக்கும், வசதிக்கும் தகுந்தது தான் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் இந்த பழமொழி உபயோகப்படுத்தப்படுகிறது. அதென்ன குருவிக்கு தக்கன ராமேஸ்வரம், குருவிக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன சம்பந்தம். குறி வைக்கத் தப்பாது ராமசரம் என்பதே உண்மையான பழமொழி. ராமனின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால் தப்பாது இலக்கை அடையும் என்பதே இதன் அர்த்தம். இதுவே நாளடைவில் பேச்சுவழக்கில் குருவிக்கு தக்கன ராமேஸ்வரம் என்று கூறப்படுகிறது.

சோழியன் குடுமி சும்மா ஆடாது!

சோழியன் என்பது பிராமண குலத்தில் ஒரு பிரிவு. பொதுவாக பிராமணர்கள் தலைக்குப் பின்பக்கம் அடர்த்தியாக குடுமி வைத்திருப்பர். ஆனால் சோழியன் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் மலையாள நம்பூதிரிகளைப் போல தலையின் முன்பக்கத்தில் முடியும் வண்ணம் முன் குடுமி வைத்திருப்பார்கள். சோழியர்களின் குடுமி தலையின் முன்பக்கத்திலேயே அடர்த்தியாக முடியப்பட்டாலும் அது சும்மாட்டுக்கு இணையாக ஆக முடியாது. அதாவது சும்மாடு என்பது சுமை தூக்குபவர்கள் தலையில் துணியைச் சுருட்டி வசதிக்காக வைத்துக் கொள்வது. முன்குடுமி எவ்வளவு கட்டையாக இருந்தாலும் சும்மாடாகாது. அவர்களும் சுமை தூக்கும் போது சும்மாடு வைக்கத்தான் வேண்டும். சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பது தான் உண்மையான பழமொழி. இதுவே தற்போது சோழியன் குடுமி சும்மா ஆடாது என உச்சரிக்கப்படுகிறது.

பசி வந்திட பத்தும் பறந்து போகும்

அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை. இந்தப் பத்தும் இளகியிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது மற்றொரு பழமொழி. அதை சித்த வைத்தியர்கள் பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என மிளகின் பெருமைகளை விளக்கும் சொல்லாக மாற்றி விட்டனர்.

கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்

பைரவரின் வாகனமாக நாயைப் பார்க்கும் போது, அதை இறைவனின் அம்சமாக நினைத்து வணங்க வேண்டும். நாயின் வடிவத்தில் இருக்கும் கற்சிலையை பார்க்கும் போது அதை நாய் என்று நினைத்தால் நாயாகவும், வெறும் கல் என்று நினைத்தால் கல்லாகவே தெரியும். ஒரு பொருளின் அல்லது ஒரு விஷயத்தின் அழகும் பெருமையும் காண்பவர்களின் பார்வையைப் பொருத்தே உள்ளது என்பதே இதன் உண்மையான அர்த்தம். ஆனால் இப்போது நாயைக் கண்டால் கல்லைக் கொண்டு எறிய வேண்டும் என்பது போல் இந்தப் பழமொழி அமைந்து விட்டது.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்!

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் தென்னைக்குத் தானே நெறி கட்ட வேண்டும்? பனைமரத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என யோசிக்கிறீர்களா. இந்தப் பழமொழியை அப்படியே படித்தால் அர்த்தம் சரியாக இருக்காது. எங்கோ ஒரு செயல் நடந்தால், அதன் விளைவு வேறு எங்கோ தெரியும் என்றுதான் நமக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதன் உள்ளர்த்தம் வேறு. தென்னை மரத்தில் ஏறுபவர்கள் பூச்சிக்கடிகளால் பாதிப்பு வராமலிருக்க ஒருவிதமான எண்ணெய் அல்லது சாந்தை உடலில் பூசிக்கொண்டு மரமேறுவார்கள். அப்படி ஏறும்போது மரத்தில் இருக்கும் தேள் கொட்டினால், அவர்களுக்கு அந்த எண்ணெயின் மருத்துவ குணத்தால் வலி தெரியாது! ஆனால் தேளின் விஷம் தோலினுள் ஊடுருவி இருந்தால், சிறிது நேரத்துக்குப் பிறகு கொட்டிய இடத்தில் நெறிகட்டிக் கொள்ளும். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மற்றொரு மரத்தில் ஏறும்போது தான் அதன் உண்மையான வலி தெரியும். அதன் பின் மருத்துவ சிகிச்சை எடுப்பர். தென்னை மரத்தில் ஏறும் போது தேள் கொட்டினால் பனை மரத்தில் ஏறும் போது நெறிகட்டும் என்ற உண்மையான பழமொழியே இப்போது தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும் என்று கூறப்படுகிறது.

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு

மகாபாரதத்தில் கர்ணன் ஐந்து பாண்டவர்களோடு ஆறாவதாகப் பிறந்திருந்தாலும் அவனுக்கு சாவு தான்; நூறு கௌரவர்களோடு இருந்திருந்தாலும் கர்ணனுக்கு சாவு தான்; எனவே சாவு என்பது நாம் நிச்சயிக்க முடியாத ஒன்று. விதிப்படியே நடக்கும். இதைத் தான் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.

கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்

இந்தப் பழமொழியைப் படிக்கும் போது ஒரு பெண் தன் கணவனை கல்லுக்கும், புல்லுக்கும் ஒப்பிடுவது போல் உள்ளது. ஆனால் கள்வன் ஆனாலும் கணவன்; புலையன் (தீயவன்) ஆனாலும் புருஷன் என்பதுதான் உண்மையான பழமொழி. தனக்கு வாய்த்த கணவன், தீயபழக்கங்கள் மற்றும் தீயசேர்க்கையினால் கள்வனாகவும், தீயவனாகவும் இருந்தாலும் அவனை ஒதுக்கிவிடாமல் தன் அன்பினால் அவனைத் திருத்த வேண்டும் என்று அறிவுரை கூறுவதே இந்தப் பழமொழி. பெண்ணுக்கு பெருமை சேர்ப்பது போல் உள்ள இந்தப் பழமொழியே நாளடைவில் இப்படி மாறிவிட்டது.

மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்

ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்பது தான் இதன் அர்த்தம். ஆனால் மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயிகள் வீட்டில் ஆண், பெண், குழந்தைகள் என அத்தனை பேரும் தங்கள் விளைநிலத்தில் உழைக்கின்றனர். இதில் ஆணுக்கு இணையாக பெண்கள் ஈடுபடும் போது வெளிமனிதர்களுக்குக் கொடுக்கும் கூலி மிச்சமாகிறது. அதோடு ஒற்றுமையின் விளைவாக உழைப்பினவ பலன் பெருகுகிறது. மாமியார் தங்கள் குடும்ப நிலத்தில் உழைத்தால், அது மண்ணுக்கு உரம். அதாவது அந்த வீட்டுத் தலைவனின் கரங்களைப் பலப்படுத்துவதின் மூலம் அவர்கள் சொந்த மண்ணுக்கு உரமாகும். வீட்டுக்கு வந்த மருமகளும் சேர்ந்து உழைத்தால் மண் பொன்னாகும். பொன்னுக்கே உரம் என்றார்கள். இவ்வளவு அருமையான கருத்துடைய பழமொழியே நாளடைவில் மாமியார்களைப் பற்றி ஒரு தவறான கருத்தைக் கூறுவது போல் அமைந்து விட்டது.

அடி உதவுகிறார் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்

இங்கு அடி என்பது நிலத்தடியைக் குறிக்கிறது. அந்தக் காலத்தில் பொதுவாக மாதம் மும்மாரி பொழிந்த காலம். ஆறு, குளம், ஏரி என்று எப்போதும் நிறைந்திருக்கும். உறவுகள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பி சோம்பலாக இருக்காதே! நிலத்தை நம்பு, உன் உழைப்பை நம்பு என்பதை விளக்கும் இந்தப் பழமொழியே இப்போது தலைகீழாக மாறி விட்டது.
பரதனுக்கு இராமர் சொன்ன அழியா உண்மைகள்!

அயோத்திக்குத் திரும்பி ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ராமரை பரதன் மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறான். அவனுக்கு ராமர் சில அழகான கருத்துக்களைக் கூறுகிறார். ராமகீதை என்று அழைக்கப்படும் இக் கருத்துகள் வருமாறு:

ஈஸ்வரனுக்கு உள்ள சுதந்திரம் இந்த ஜீவனுக்குக் கிடையாது. ஆகவே இங்கு யாரும் அவர்கள் இஷ்டப்படி நடக்க முடியாது. காலம் மனிதனை அங்கும் இங்கும் இழுத்துச் செல்லுகிறது. சேர்த்து வைக்கப்படும் பொருளுக்கு முடிவு அழிவுதான். லௌகிக உன்னதத்தின் முடிவு வீழ்ச்சிதான். கூடுவதின் முடிவு பிரிவு தான். எப்படி பழுத்த பழம் கீழே விழுந்துதான் ஆக வேண்டுமோ, அதேமாதிரி, பிறந்த மனிதன் இறந்துதான் ஆகவேண்டும். மூப்பு, மரணம் இவற்றுக்கு உட்பட்டு அழிந்துதான் ஆக வேண்டும். கழிந்த இரவு திரும்ப வராது. யமுனை நீர் கடலை நோக்கிச் செல்லும், ஆனால் திரும்பாது. பகலும், இரவும் மாறி மாறி கழிகின்றன. கூடவே மனிதனுடைய ஆயுள் வேகமாக அழிந்து கொண்டிருக்கிறது. மரணம் எப்பொழுதும் மனிதன் கூடவே இருக்கிறது. மனிதன் கூடவே செல்கிறது. சூரியோதயத்தைக் கண்டு மனிதன் மகிழ்கிறான். ஆனால் ஒவ்வொரு சூரியோதயத்தோடும் தன் ஆயுள் கழிந்து கொண்டிருக்கிறது என்பதை மறக்கிறான்.  கடலில் மிதக்கும் இரண்டு கட்டைகள் ஒன்றோடொன்று சிறிது காலம் சேர்ந்து இருக்கின்றன. பிறகு பிரிந்து ஒவ்வொன்றும் ஒரு பக்கம் செல்கிறது. அதே மாதிரி மனிதனோடு, மனைவி, மக்கள், குடும்பம், பணம் எல்லாம் சேர்கின்றன. பிறகு பிரிந்து விடுகின்றன. அதனால் நாமெல்லோரும் நம் ஆத்மாவின் நன்மையைக் கோர வேண்டும். அதற்கு எப்பொழுதும் தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பூஜையின் போது என்ன உடை அணிய வேண்டும்?

நாம் நம்முடைய பல்வேறு ஆசைகள் ஈடேறுவதற்கு இறைவனைத் தொழுகிறோம். இதை நாம் தூய மனமும், சுத்தமான உடலும், உண்மையான வாக்கும் கொண்டு செய்யவேண்டும். உடம்பைப் பொறுத்தவரை, தூய்மையை அடைய நன்கு அழுக்கு நீங்கத் தேய்த்துக் குளித்தால் போதும். சாதாரணமாக நீரில் மூழ்கிக் குளித்தாலோ, எண்ணெய் தேய்த்துக் குளித்தாலோ, இந்தத் தூய்மையை உடல் பெற்றுவிடும். இந்த நீராடுதல் நைமித்திக ஸ்நானம், காம்ய ஸ்நானம், நித்ய ஸ்நானம் என்று மூன்று விதமாக அமையலாம். நதியில் மூழ்கி நீராடும் போது, நமது மனத்தில் வேண்டிக் கொண்டது நிறைவேற, இத்தனை தடவைகள் மூழ்கி எழுந்திருக்க வேண்டும் என்ற நியதி உண்டு. இதை வேண்டிக்கொண்டபடி உரிய அளவில் செய்து முடிக்க வேண்டும். இது காம்ய ஸ்நானம். நைமித்திக ஸ்நானம் என்பது குடும்பத்தில் நெருங்கிய உறவினர் இறந்துவிடும்போது செய்யும் ஸ்நானம். இது வீட்டிலும், உடம்பிலும் உள்ள கிருமிகளின் பாதிப்பு, நீங்க செய்யப்படுவதாகும். சூரிய அல்லது சந்திர கிரகண காலங்களிலும் பீடை நீங்க இவ்வாறு செய்வதுண்டு. நித்ய ஸ்நானம் என்பது அன்றாடம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள நீரில் மூழ்கிச் செய்வதாகும். இதைக் குளம் குட்டைகளிலும் பீடை நீங்க இவ்வாறு செய்வதுண்டு.

நித்ய ஸ்நானம் என்பது தூய்மைப்படுத்திக் கொள்ள நீரில் மூழ்கிச் செய்வதாகும். இதைக் குளம் குட்டைகளிலோ, கிணற்றிலோ, நீரைப் பயன்படுத்திச் செய்து முடிக்கலாம். இதில் ஓடும் நதியில் நீரில் ஸ்நானம் செய்வது சிலாக்கியமானது. குட்டையில் நீராடுவது அடுத்த ரகம். கடைசி ரகத்தைச் சேர்ந்தது கிணற்றில் நீராடுவது. சில சமயம் உடம்பு முழுவதும் விபூதி பூசிக்கொண்டு ஸ்நானம் செய்த உணர்வை பெறுவது உண்டு. இதற்கு விபூதி ஸ்நானம், பஸ்ம ஸ்நானம் என்ற பெயர்களும் உண்டு. உடல் நலம் சரியாக இல்லாத நிலையில் இதைச் செய்யலாம். தூய்மை பெற, ஆண்கள் தலைமுடி நனைய மூழ்கி ஸ்நானம் செய்வதுதான் உத்தமம். பெண்கள் கழுத்துக்குக் கீழே ஸ்நானம் செய்தால் போதுமானது.  ஸ்நானம் செய்யும் போது கடவுளை நினைத்துக் கொண்டு கங்கை, யமுனா, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி ஆகிய புண்ணிய நதிகளை நினைவு கூர்ந்து நீராட வேண்டும். இதனால் உடலும் புனிதம் அடையும் புண்ணியமும் கிடைக்கும். இவ்வாறு ஸ்நானம் செய்தபிறகு கடவுளை வணங்கிப் பிரார்த்தனை செய்ய,  தூய்மையான உள்ளம் தேவை. அத்துடன் உடல்மீது அணிந்த உடையும், தூய்மையாக இருக்க வேண்டும். பூஜை செய்யும்போது ஈரத்துணியை உடுத்தி இருப்பது தவறானதாகும். உடுத்த உடை காய்ந்து உலர்ந்து இருக்க வேண்டும். பூஜை செய்யும் நேரத்தில், அன்று நனைத்து உலர்த்தி, காயவைத்த உடையை அறிவதே சிறப்பு. முந்தைய நாள் இவ்வாறு உலர்த்திக் காயவைத்த உடைகள் இரண்டாம் பட்சமானதுதான். மழையினால் காற்றில் சிலசமயம் துணிகள் உலருவது சிரமமாக இருக்கும். அப்போது துணியை ஏழு தடவைகள் நன்கு உதறிவிட்டால் காயவைத்ததற்குச் சமானம் ஆகும்.

முதல்நாள் உலர்த்திக் காயவைத்த உடைகளைக் கையில் எடுத்துக் கொண்டுபோய் குளியல் அறையில் வைத்துக்கொண்டு, பின் ஸ்நானம் செய்தபின் உடுத்திக் கொள்கிறார்கள். இவற்றைத் தூய்மையான மடி வஸ்திரத்துக்கு ஒப்பிட முடியாது. வர்ண உடைகளை பூஜை செய்யும் போது அணியக் கூடாது. வேஷ்டியின் இரண்டு முனைகளையும் சேர்த்துத் தைத்த கைலி போன்றவற்றையும் வஸ்திரமாக அணியக் கூடாது. புண்ணியதினங்களிலும் பண்டிகை நாட்களிலும் பட்டு வஸ்திரம் அணியலாம். பூஜாவஸ்திரம் அணிவதும் ஒன்றல்ல. பூஜைக்கேற்ப உரிய முறையில் அது பாங்காக அமைவது தான் உத்தமம். நாம் பூஜை செய்யும்போதும், கோயிலுக்குச் செல்லும்போதும் முறையான உடைகளை அறிந்து செல்ல வேண்டும். அது நம்முடைய பண்பாட்டை எடுத்துக் காட்டுவதாக இருக்க வேண்டும். இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். பூஜை அல்லது பிரார்த்தனையில் ஈடுபடும்போது கடவுளைப் பற்றிய சிந்தனையின்றி வேறு எதுவுமே மனத்தில் இருக்கக் கூடாது. இதற்கு மனத்தூய்மை மிகவும் முக்கியம். எந்த காரியத்தை எடுத்துக் கொண்டாலும் வெற்றி அடைவதற்கு உள்ளத் தூய்மை மிகவும் அவசியமானது, கோபம், வெறுப்பு, கர்வம், பொறாமை ஆகிய உணர்வுகளுடன் பூஜையை மேற்கொண்டால், நாம் செய்வது பயனற்றதாக ஆகிவிடும். மனம் அமைதியாகவும், கட்டுப்பாடுடனும், நல்ல எண்ணங்களுடன் அமைவது மிக முக்கியம் எந்தக் காரியத்தை மேற்கொண்டாலும், அதில் வெற்றி கிடைக்க இவை முக்கியம். பூஜையைப் பொறுத்தவரை இது மிகவும் அவசியம். பூஜைக்கு அமரும்போது உள்ளம் அமைதியாக இருக்க வேண்டும். மற்ற விஷயங்கள் அப்போது நினைவில் வரவே கூடாது. பூஜை முடியும்வரையில் இவ்வாறு நிச்சலனமான மனத்துடன் ஆழ்ந்து ஈடுபடவேண்டும். பூஜையின் போதோ, பிரார்த்தனையின் போதோ கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைக் கணக்கிடவே கூடாது. இது அபசாரம் ஆகும். வீட்டில் பூஜையில் ஈடுபடும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மட்டுமன்றி, ஆலயங்களில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கும் இது மிகமுக்கியம். பகவானின் அருகில் இருக்கும்போது அதற்கு அருகதை உள்ளவர்களாக நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை!

படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். ஆறுவகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற்றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதிகையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலாறுகள் அனைத்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன.

சோதனைக்குழாய் குழந்தை

உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது. அவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.

தொலைக்காட்சி பார்த்தவர்

முதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே ! பார்வதி - பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே ? என்று வினவினார். அகத்தியர், இமயத்தில் நடைபெறும் எமது திருமண நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் ஈசன். அவ்வாறே, அகத்தியர் பார்வதி - பரமசிவன் திருமணக் காட்சியைப் பொதிகையில் கண்டு களித்தார். ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காணக்கூடிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது. அகத்தியர் கண்டது நேரடி ஒளிபரப்பு ! (லைவ் டெலிகாஸ்ட்). ஈசன் திருமணம் நடந்து பலநாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார். திருமால் ! சீர்காழியை அடுத்த ஒரு தலத்தில் சிவ பெருமான், திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியருளினான் ! திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு!.

அணுவுருவில் நதிகள்

அகத்தியர் தென்னாட்டிற்குப் புறப்பட்டபொழுது, காவிரியை, அணுவுருவாக்கிக் கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்தார் என்பது வரலாறு. மனிதன் தண்ணீர் இல்லாத வேறு கோள்களில் குடியேறும் காலத்தில், தண்ணீரை அணுவுருவாக்கி எடுத்துச் சென்று அங்கு, மீண்டும் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பது நவீன அறிவியல். நானோ - டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, இந்த சம்பவம் புராண ஆதாரம்.

எதையெடுத்தாலும் தடங்கலா? இதற்கும் இருக்கு பரிகாரம்!

சிலருக்கு வாழ்வில் எதைச் செய்ய முயன்றாலும் ஏதாவது ஒருவிதத்தில் தடங்கல் உண்டாகும். அப்படி செய்து முடித்தாலும் அதை அனுபவிக்கும் பாக்கியம் கிடைப்பது இல்லை. இவ்வாறு காரியத்தடங்கல் ஏற்படுவதற்கு முற்பிறவியில் செய்த பாவங்களே காரணம். இவர்களை யோகக்கட்டைகள் என்று கேலி செய்வார்கள். முற்பிறவியில் நல்வினைப்பயன் இருக்குமானால், இப்பிறவியில் செய்யும் எல்லாச் செயல்களும் வெற்றியைத் தரும். அதுவே எதிர் மறையான செயல்களை சம்பந்தப் பட்டவர்களோ அல்லது அவர்களின் முன்னோரோ செய்திருந்தால், தடங்கல் ஏற்பட்டு விடும். இதை ஒரு எளிய ஸ்லோகத்தின் மூலம் சரி செய்யலாம். ராமாயணத்தை இந்தியில் ராமசரிதமானஸ் துளசிதாசர் எழுதியுள்ளார். அதில் பாலகாண்டத்தில் வரும்,

பந்தௌ நாம ராம் ரகுபர் கோ!
ஹேது க்ருஸானு பானு ஹிமகர் கோ!!
பிதி ஹரி ஹர்மய பேத் ப்ரான் ஸோ!
அகுண அனூபம் குண நிதான் ஸோ!!
என்ற ஸ்லோகம் இந்த தடங்கலை சீர்செய்யும். இதைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லலாம். ரகுநாதா! உன் நாமத்தை வணங்குகிறேன். அக்னி, சூரியன், சந்திரன் எல்லாமே அந்நாமத்தில் அடங்கி உள்ளன. ராமநாமத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியின் அம்சங்களும் உள்ளன. வேதத்தின் உயிர்நாடியும், நிர்குணமானவனும், நற்குணங்களின் இருப்பிடமாகவும் இருக்கும் ராமநாமத்தை போற்றுகின்றேன்  இந்த ஸ்லோகத்தைச் சொல்ல எவ்வித விரதமும் இருக்க வேண்டியதில்லை. நேரம் காலமும் இல்லை. தினம் 3 முறை தொடர்ந்து ஜெபித்து வருவோருக்கு முன்வினைப் பாவம் நீங்கி அனுகூலம் உண்டாகும்.
ஏழையாய் பிறக்க காரணம் என்ன?

சிலர் பணக்காரர்களாகவும் பலர் வறுமையில் வாடுவதுமே உலகில் நாம் காணும் உண்மை. இந்த நிலை ஏன் ஏற்படுகிறது என்பதற்கு சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று பதில் சொல்கிறது. அக்ஷர-த்வய-மப்யஸ்தம் நாஸ்தி நாஸ்தி யத் புரா! ததவே தேஹி தேஹீதி விபரீத-முபஸ்திதம்!! என்ற ஸ்லோகத்தில் நாஸ்தி நாஸ்தி என்றால் இல்லை இல்லை என்று பொருள். தேஹி தேஹி என்றால் கொடு கொடு என்று பொருள். யாரொருவன் முற்பிறவியில் இல்லை இல்லை என்று தன்னிடம் பிச்சை கேட்டவனை விரட்டினானோ, அவன்  இப்பிறவியில் கொடு கொடு என்று பிச்சை கேட்பவனாக பிறக்கிறான். அதற்காக, கையை நீட்டும் சோம்பேறிக்கெல்லாம் பிச்சை போடக்கூடாது. உண்மையிலேயே முடியாதவர்களுக்கு, ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு, ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதே நிஜமான பிச்சை. திருமால் கூட பிச்சையெடுக்கப் போகிறோமே என எண்ணி மகாபலி முன் உடலை குறுக்கிக்கொண்டு வந்தார். ஏனெனில், பிச்சை எடுப்பதைக் கேவலம் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. எனவே நிஜமான ஏழைகளுக்கு தானம் கொடுத்து அடுத்த பிறவியிலாவது பணத்தை வாரிக் குவிப்பவராகப் பிறக்க வழி செய்து கொள்ளலாம்.
கோயில்களில் பாக்கெட் பாலால் அபிஷேகம் செய்வது சரியா?

ஆயிரம் வருஷங்களுக்கு முன், ஐந்நூறு வருஷங்களுக்கு முன், நூறு வருஷங்களுக்கு முன், ஐம்பது வருஷங்களுக்கு முன் என்று காலப்போக்கில் நமது வாழ்க்கை முறையில் எத்தனையோ மாறுபாடுகளைச் சந்தித்துக் கொண்டே வந்திருக்கிறோம். அவற்றை எல்லாம் தேவையோ, இல்லையா என்று சிந்திக்காமலேயே ஏற்றுக் கொண்டிருக்கிறோம். பொட்டணப் (பாக்கெட்) பால் என்பது கிராமங்களில் வராது. நகரங்களில்தான் வரும். நகரங்களில் பொட்டணப் பாலை அன்றாட வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு விட்டோம் என்பதால், தப்பி எதுவும் வராது. இதுவே கிராமம் என்றால், வீட்டில் மாட்டையும் வைத்துக் கொண்டு எங்கோ போய் பால் பொட்டணத்தை வாங்கிக் கொண்டு வந்து அபிஷேகம் செய்தால்தான் தப்பு!
ஸ்படிகமாலை எப்போது அணிய கூடாது?

அழகை எடுத்துக் காட்டுவதற்காகவே நகைகள் அணிகின்றோம். உடலில் பதிநான்கு இடங்களில் அணியும் நகைகளுக்கு ஆறு முக்கிய நன்மைகள் உண்டு. அழகு, தெய்வப்பிரியம்,ஆத்தும தரிசனம்,ஆரோக்கிய இரட்சை,ஸதானக் குறிப்பு,தோஷ  நிவாரணம் என்ற நன்மைகளுக்காகவே நகைகள் அணிகின்றோம். பதிநான்கு உலோகங்களின் சின்னமாக தலையிலும், நெற்றியிலும்,காதிலும், மூக்கிலும் உதட்டிலும் கழுத்திலும், தோளிலும், புஜத்திலும்,  கையிலும், மார்ப்பிலும், இடுப்பிலும், பாதங்களிலும், கால்விரலிலும், கைவிரலிலும், நகைகள் அணிவதுண்டு. தங்கமும் வெள்ளியும் அணியும் போது கைக் கொள்ளும் நம்பிக்கைகள் போலவே ஸ்படிக மாலை அணிவதன் பின்னும் சில நம்பிக்கைகள் உண்டு. இதை அணிய உத்தமமான நட்சத்திரம் கார்த்திகையாம். ஒரு நாள் பசுவின் சாணத்தில் மூழ்கவைத்து ஸ்படிக மாலையை தண்ணீர் பாலில் கழுவி குருவின் உதவியால் அணிய வேண்டும் என்பது ஆசாரவிதி. எந்த காலமானாலும் வெப்பத்தை தடையும் சக்தி இம்மாலைக்குண்டு. கிரகங்கள் மனிதரில் செலுத்தும் செல்வாக்கைக் கட்டுபடுத்த இம் மாலைக்கு இயலும். இரவு வேளை இம்மாலையை தண்ணீரில் இட்டுவைத்து மறுநாள் அத்தண்ணீரைக் குடித்தால் ஆண்மை விருத்தியடையும் என்று நம்புகின்றனர். பௌர்ணமி நாள் ஸ்படிகமாலை அணிந்தால் உடல் சக்தி கூடும் என்றும் தம்பதிகள் இம்மாலை அணிந்து தூங்கக் கூடாதென்றும் விதிக்கப்பட்டுள்ளன. ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்ற வர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத் தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும் தான்.
பூஜையறையை மூடும் போது தீபங்களை அணைத்துவிட வேண்டுமா? அணையா தீபம் ஏற்றி வழிபடலாமா?

பூஜையறையை மூடும்போது தீபங்களை அணைத்துவிட வேண்டும். அணைத்தால் தான் மறு நாள் காலையில் தீபம் ஏற்ற இயலும், இல்லையெனில், தினம் தினம் காலையில் தீபம் ஏற்றும் சம்பிரதாயம் அற்றுப்போகும். அனுதினமும் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றவேண்டும் என்று இருக்கும்போது, நிரந்தர தீபவொளிக்கு இடமில்லாமல் போவதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பக்தி மேலீட்டால்... நந்தா தீபம் அணையா விளக்கு ஏற்றுகிறேன் என்ற தனிப்பட்டவரின் சிந்தனையை விதியாக மாற்றக்கூடாது. விளக்கைச் சுத்தம் செய்து புதுத் திரி போட்டு விளக்கேற்றுவது சிறப்பு. அணையா விளக்கு வீட்டுக்கு நல்லது என்பது தங்கள் கணிப்பு. எல்லோரது சிந்தனையும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்றில்லை. சாஸ்திரத்தை மீறி நமது சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியில்லை. கோயில்களில்கூட கர்ப்பகிருஹத்தின் கதவைத் திறக்க ஒரு மந்திரம், தீபம் ஏற்ற ஒரு மந்திரம், நிர்மால்யத்தை விலக்க ஒரு மந்திரம், அபிஷேகத்துக்கு ஒரு மந்திரம் என்ற நடைமுறை உண்டு. கர்ப்பகிருஹத்திலும் அணையா விளக்கு இருந்தால் கோயிலுக்கு நல்லதுதானே... என்று சொல்லலாமா! ஸ்வயம்ப்ரகாசனுக்கு விளக்கு எதற்கு? நாம் அவனை தரிசிக்க விளக்கு வேண்டும். மேலும் அணையாவிளக்கு எதிர்பாராமல் அணைந்துவிட்டால், வீணாக மனநெருடலைச் சந்திக்கவேண்டி வரும். எதிர்பாராமல் விளக்கு தீபம் பற்றிக்கொண்டு பூஜையறையும் பாதிப்புக்குள்ளானால், அதுவும் அபசகுனம். ஆகையால், நமது ஆசையை நிறைவேற்ற எண்ணும்போது, ஆராய்ந்து செயல்பட வேண்டும். சாஸ்திரத்தைக் கடைப் பிடித்தால் அபசாரம் இருக்காது.
கோயிலுக்குச் சென்று வந்தால் நேராக வீட்டுக்குத்தான் வர வேண்டும் என்பது சரியா?

நாம் ஆலயத்துக்குச் சென்று நமது மனதின் மாசுகளைப் போக்கி மாசற்றவராகத் திரும்பி வருவதால், நமது புனிதத்தன்மை பாதிக்காவகையில் விளங்கக்கூடிய இடங்களுக்குச் செல்வதால் தவறில்லை. ஆலயத்துக்குச் செல்லும் முன் ஆண்டவனுக்குப் படைக்கப்படகூடியவற்றை நாம் ஏந்திச் செல்வதால் அப்போதும் இதே போன்ற ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது நன்மையைகொடுக்கும். ஆலயம் செல்வதற்கு முன்னரோ பின்னரோ துக்க நிகழ்ச்சிகள் நடந்த இடங்கள், மற்றும் தீண்டுதல் உள்ள இடங்களுக்கு கண்டிப்பாகச் செல்லக்கூடாது.
திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்?

திருமணத்திற்கு முன் பொறுப்பில்லாமல் மற்றும் ஆண்கள் வீணாகச் செலவழித்து திரிவார்கள். திருமணத்துக்குப் பின் தறிகெட்டு அலையும் கணவனை மனைவி திருத்தி விடுகிறாள். அவள் கணவனின் வரம்பற்ற செலவுகளைக் குறைத்து வீட்டில் செல்வம் நிறைய முயற்சி செய்கிறாள். இதற்காக தனது மதிநுட்பத்தை (புத்திசாலித்தனம்) பயன்படுத்துகிறாள். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படுகிறது. திருவையும் மதியையும் இணைத்தே திருமணமான பெண்களுக்கு திருமதி என்ற பட்டம் தரப்பட்டது. திரு என்றால் லட்சுமி, மதி என்றால் அறிவு.
வாங்க பழகலாம் ...எளிய முறையில் யோகாசனம்!

யோகாசனம் செய்வதால் பெரு, சிறு நோய்கள் வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம். உற்சாகம் பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும். உடலின் மண்டலங்கள் அனைத்தும் (நரம்பு, இரத்த ஓட்டம், ஜீரணம்) போன்ற மண்டலங்கள் சீரடையும். இளமையாய் இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வளர்சிதை மாற்றம் சீராகும். மனவலிமை கிட்டும். மனஅழுத்தம் குறையும். மூளை இதயத்திற்கு நல்ல ஓய்வு கிடைத்து, அதன் திறனை மேம்படுத்தலாம். ஆயுளை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஞாபக சக்தி பெருகும். உடலை வனப்பாக வைத்துக் கொள்ளலாம்.  சோம்பல், சோர்வு, கோபம், பயம் நீக்கலாம். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய்கள், ஆஸ்துமா, சைனஸ் ஸ்பாண்டிலோடிஸ், தூக்கமின்மை, அதிக உடல் எடை, முதுகு வலி, வலிப்பு நோய் தலைவலி மற்றும் கழுத்து வலி, முதுகு மற்றும் மூட்டுவலி, மாதவிடாய் பிரச்சனைகள், கருப்பை பிரச்சனைகள், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மற்றும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

யோகாசனம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
ஆடியில் அம்பிகை நேரில் வருவாள்: அருளினை அள்ளித் தருவாள்!

தெய்வீகமான ஆடி : சூரியன் தெற்கு நோக்கி, தன் பயணத்தைத் துவக்கும் தட்சிணாயனத்தின் தொடக்க மாதமான ஆடியில், மாதம் முழுக்க தெய்வீக விழாக்கள் சிறப்பாக இருக்கும். ஆடி விருந்து என்று புதுமணத்தம்பதியருக்கு ஆடிச்சீர் அளித்து விருந்து கொடுப்பர். முதல் ஆடி, நடுஆடி, கடைசிஆடி ஆகிய மூன்று நாட்களும் விருந்துக்குரிய நாளாக உள்ளது. ஆடிசெவ்வாய், ஆடிவெள்ளி ஆகிய நாட்கள் அம்பிகை, முருகப்பெருமானுக்கு உகந்தவை. ஆடிப்பூரம் ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரம். இவைதவிர, ஆடிவெள்ளி, செவ்வாய், ஆடிஅமாவாசை, ஆடிப்பெருக்கு, கருடபஞ்சமி, வரலட்சுமி விரதம், மகாசங்கடஹர சதுர்த்தி ஆகிய விழாக்கள் வருகின்றன. மொத்தத்தில் வழிபாட்டுக்குரிய தெய்வீக மாதம் ஆடி என்றால் மிகையில்லை.

அம்பிகைக்குரிய மாதம் : ஆடிமாதத்தை அம்பிகை மாதம் என்பர். சுவாமியும், அம்பாளுமாக வீற்றிருக்கும் கோயில்களில் முளைகொட்டுத்திருவிழா இந்த மாதம் தான் நடைபெறும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா பத்துநாட்கள் நடக்கிறது. இவ்விழா மீனாட்சியம்மனுக்குரிய தனி விழாவாகும். அம்மன் கோயிலுக்குள் இருக்கும் ஆடிவீதியில் வாகனத்தில் பவனி வருவதை தரிசிக்கலாம். விழா நடக்கும் மாதத்தின் பெயரையே இந்த வீதிக்கும் சூட்டியுள்ளனர் முன்னோர். ஆடிப்பூரத்தன்று மீனாட்சியம்மன் உற்சவர் கருவறைக்கு எழுந்தருள்வார். அங்கு மீனாட்சிக்கும், உற்சவருக்கும் ஒரே சமயத்தில் சடங்கு உற்சவம் (பூப்புனித நீராட்டு) நடத்துவர்.

தட்சிணாயன விழாக்கள் : ஆடிமுதல் மார்கழி வரை ஆறு மாதம் தேவலோகத்தில் இரவுப்பொழுது. தை முதல் ஆனி வரை பகல்பொழுது. ஆடியிலிருந்து சூரியன் தன் சுற்றுப்பாதையை தெற்கு நோக்கிச் செலுத்துவதால் இக்காலத்தை தட்சிணாயனம் என்று சொல்வர். "தட்சிணாயனம் என்பதற்கு "தெற்கு நோக்கிய பயணம் என்று பொருள். இதில் ஆடியில் மாரி, காளி, பேச்சி போன்ற பெண் தெய்வ வழிபாடுகள் கிராமப்புறங்களில் சிறப்பாக நடக்கும். அம்பாளுக்குய தனிவிழாவான நவராத்திரி புரட்டாசியில் கொண்டாடப்படுகிறது. நாடு வளம் பெற மழைவளமும், நல்ல மணவாழ்வு பெற கணவன் அமையவும் கன்னிப்பெண்கள் மேற்கொள்ளும் பாவைநோன்பும் தட்சிணாயனத்தில் வரும் மார்கழியில் இடம்பெறுகிறது.

மனசுக்கு புடிச்ச மாப்பிள்ளை அமைய... : கன்னிப்பெண்களும், சுமங்கலிப்பெண்களும் கடைபிடிக்கும் விரதம் அவ்வையார் விரதம். இவ்விரதமிருக்கும் பெண்களைப் பார்க்க ஆண்களை அனுமதிப்பதில்லை. மாவை உப்பில்லாமல் பிசைந்து கொழுக்கட்டை செய்து வேப்பிலை, புளிய இலை, புங்கஇலைகளைப் பரப்பி அதில் கொழுக்கட்டையைப் படைப்பர். நள்ளிரவில் நடத்தப்படும் இவ்வழிபாடு வயதான சுமங்கலியின் தலைமையில் நடக்கும். அப்போது அப்பெண் அவ்வையாரின் வரலாற்றை மற்ற பெண்களுக்கு எடுத்துச் சொல்வார். ஆடிச் செவ்வாயன்று இந்த விரதத்தை அனுஷ்டிப்பது மரபு. தை, மாசி செவ்வாய்க்கிழமைகளிலும் அவ்வையார் விரதம் மேற்கொள்வதுண்டு. இதனை சுலவடையாக" மறந்தா மாசி, தப்பினா தை, அசந்தா ஆடி என்பர். இவ்விரதம் மேற்கொள்ளும் கன்னியருக்கு மனதிற்கு பிடித்த மாப்பிள்ளை கிடைப்பார் என்பது ஐதீகம்.

மாங்கல்ய பலத்திற்கான விரதம் : ஆடி அல்லது ஆவணிமாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் மேற்கொள்ளும் விரதம் வரலட்சுமி விரதம். ஸ்கந்த புராணத்தில், இவ்விரதத்தின் மகிமை பற்றி சிவபெருமான் விளக்குகிறார். இந்த ஆண்டு ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட்11) இவ்விரதம் அனுசரிக்கப்படுகிறது. பூஜையறையில் பசுஞ்சாணத்தால் மெழுகி மாக்கோலமிட வேண்டும். அரிசியைப் பரப்பி பூரணகும்பம் வைத்து லட்சுமியை ஆவாஹனம் செய்யவேண்டும். இயலாதவர்கள் லட்சுமி படம் வைத்து மலர் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். நெய் விளக்கேற்றி சர்க்கரைப்பொங்கல், இனிப்புவகைகளை நைவேத்யம் செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் நோன்புக்கயிறு கட்டுவது அவசியம். வீட்டுக்கு வந்த சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்க வேண்டும். பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால், கணவருக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும். இந்நாள் புதுநகை, புதுப்பொருட்கள் வாங்க உகந்தது.

முருகனுக்கு ஆடிக்கிருத்திகை : ஆடியில் வரும் கார்த்திகை முருகப்பெருமானுக்கு உகந்த சிறப்பான நாளாகப் போற்றப்படுகிறது. இதை "ஆடிக்கிருத்திகை என்பர். இந்நாளில் குன்றில் குடியிருக்கும் குமரப்பெருமானை வேண்டி கிரிவலம் வருதல் சிறப்பு. முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரம் விசாகம் என்றாலும், இவருக்குரிய விரதமாக கார்த்திகை நட்சத்திரம் அமைந்துள்ளது. தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு நன்றி தெரிவிக்கும் அடிப்படையில், இந்நாளில் முருகப்பெருமான், தன்னை வழிபடுவோருக்கு வேண்டிய வரங்களைத் தந்தருள்வார். சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், கார்த்திகைப்பெண்கள் சிலைவடிவில் காட்சியளிக்கின்றனர். ஆடிக்கிருத்திகை நாளில் இவர்களையும் வழிபட்டு வரலாம். இவ்வாண்டு, ஜூலை25ல் ஆடிக் கிருத்திகை நிகழ்கிறது.

நகை வாங்க நல்லநாள் : தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக்கூடாது என்பார்கள். தண்ணீர் வாழ்விற்கு ஆதாரமாக இருக்கிறது. நீர்நிலைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆடி மாதத்தில் "ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. காவிரியை பெண்ணாக பாவித்து மஞ்சள், குங்குமம், மலர்களால் பூஜிப்பர். புதுமணத்தம்பதியர் ஆற்றங்கரையில் நீராடி மாங்கல்யத்தைப் புதுகயிற்றில் கட்டிக் கொள்ளும் சடங்கு நடைபெறும். காவிரிக்கரையோரத்தில் மட்டுமில்லாமல், தீர்த்தம், ஆறு இருக்குமிடமெல்லாம் ஆடி18ல் (ஆக. 3ல்) நீராடி நதிகளை காவிரி அன்னையாக கருதி வழிபடும் வழக்கமும் உண்டு. நதி, குளக்கரைகளில் தீபம் மிதக்க விடும் வழக்கம் அந்நாளில் இருந்தது. நதித்தாயை வணங்கினால் இயற்கைச்சூழல் பாதுகாப்பும், விவசாயத்தில் நல்ல லாபமும் கிடைக்கும். ஆடியில் நகை, புதுப்பொருட்கள் வாங்க நன்னாள். தொழில்களும் பெருகி வளரும் என்ற அடிப்படையில், இந்நாளில் தொழிலும் துவங்குவதுண்டு.

ஆடியில் திருக்கல்யாணம் : ராமபிரான் வழிபட்ட சிவபெருமான் அருள்புரியும் ராமேஸ்வரம் சிறந்த பாவநிவர்த்தி தலமாகத் திகழ்கிறது. சைவமும், வைணவமும் சங்கமிக்கும் இத்தலத்தில், பர்வதவர்த்தினி அம்மனுக்கும், ராமநாதசுவாமிக்கும் ஆடியில் திருக்கல்யாண விழா(ஆக.4) சிறப்பாக நடக்கிறது. காசியாத்திரை சென்று வந்த பக்தர்கள் ராமேஸ்வரத்தில் தீர்த்தமாடுவதை பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர். மற்ற மாதங்களைக் காட்டிலும் ஆடிமாதம் முழுவதும் இங்கு தீர்த்த நீராடுதல் சிறப்பானதாகும். பிதுர்வழிபாட்டுக்குரிய தலமாக ராமேஸ்வரம் திகழ்வதால், ஆடி அமாவாசையன்று இங்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு.

ஆடியே வருக .... ஆனந்தம் தருக!

ஆடி மாதப் பிறப்பு- தட்சிணாயண புண்ணிய காலம், ஆடிப் பண்டிகை என்று தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. மார்கழியைப் போல ஆடி மாதமும் தெய்வீக மாதமாகும். சுப காரியங்கள் செய்வது தவிர்க்கப்பட்டு, இறைவழிபாட்டில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் மாதம். தட்சிணாயண சமயத்தில் சூரியன் பூமத்திய ரேகையின் தெற்குப் பக்கத்தில் சஞ்சரிக்கும்போது, வட பாகத்தில் வெயில் கடுமையாக இருக்காது. காற்று, மழை, பனி என்று பருவநிலை காணப்படும். ஆடி மாதம் அம்மனின் மாதமாகவும் கருதப்படுகிறது. இம்மாதத்தில் அம்மனின் அருள் பூரணமாக வெளிப்படும். அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, அம்மனுக்குப் பொங்கல் இடுதல், கூழ் காய்ச்சி ஊற்றுதல் என நிவேதனம் செய்து அவற்றை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்து அவர்கள் பசி நீக்கும் மாதமும் இதுவே! ஆடி மாதத்தில்தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிப் பாத்திகளுக்கு நடுவே பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தருக்கு அரங்கனையே ஆளப்போகும் ஆண்டாள் கிடைத்தாள்.

ஆடி என்பது ஒரு அசுரனின் பெயர். ஒருமுறை உமையம்மை, சிவபெருமானை விட்டு விலகி இருந்தபோது, சிவபெருமானது தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு இந்த அசுரன் பாம்புருவில் உள்ளே நுழைந்து பார்வதி தேவியாக உருமாறி, சிவபெருமான் அருகில் சென்றான். தன்னோடு மகிழ்ந்திருக்க வந்திருப்பது அசுரன் என்பதை உணர்ந்த இறைவன், அவனோடு களித்திருப்பது போல் உறவாடி அவனைக் கொன்றார். இந்த நிகழ்வின் நினைவாகவே இந்த மாதம் ஆடி எனப் பெயர் பெற்றது. ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியர் ஒன்றாக இருக்கக்கூடாது என்ற மரபு பின்பற்றப்பட்டு வருகிறது. ஏனெனில், ஆடி மாதத்தில் கர்ப்பம் தரித்தால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். அது கடுமையான வெயில் காலம். ஆகையால் தாய், குழந்தை இருவருக்குமே ஆரோக்கியக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கயிலையில் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராய் இருந்த சுந்தரர் பூவுலகில் நம்பியாரூரார் என்ற பெயருடன் சிவபெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட நாள் ஆடி மாத மூல நட்சத்திர நாளில்தான் ! இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட ஆடி மாதத்தில், அனைவரையும் வணங்கி வாழ்வில் வளம் பல பெறுவோம்.

கோமதிக்கு ஆடித்தபசு : அம்பிகை தவமிருந்த அற்புத தலம் சங்கரன்கோவில். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இக்கோயிலில், அம்பாளின் தவத்தை மெச்சிய இறைவன் அரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில் சங்கரநாராயணராக காட்சி அளித்தார். இந்நிகழ்ச்சி ஆடிபவுர்ணமியில் நிகழ்ந்ததாக ஐதீகம். ஆடித்திருவிழாவின் 12ம் நாளில் "ஆடித்தபசு என்னும் பெயரில் இவ்விழா நடைபெறும். அன்று கோமதி அம்பாளுக்காக ரிஷபவாகனத்தில் சங்கநாராயணர் எழுந்தருள்வார். இவ்வாண்டு ஆகஸ்ட்11ல் இவ்விழா நடக்கிறது.

ஆண்டாளின் ஆடிப்பூரம் : பன்னிரு ஆழ்வார்களில் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகத் திருமாலைப் பூமாலையாலும், பாமாலையாலும் துதிக்கும் பேறு பெற்றவள் ஆண்டாள். இவள் அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம். உயிர்கள் மீது கொண்ட கருணையால் அவர்களுக்கு அருள்பாலிக்க பூமாதேவி, ஆண்டாள் நாச்சியாராக பிறப்பெடுத்தாள். வேதங்களின் வித்தாக விளங்கும் திருப்பாவையை நமக்கு வழங்கினாள். திருப்பாவையில் முப்பது பாசுரங்கள் உள்ளன. "" ஏழேழு பிறவிக்கும் கண்ணா நீயே எனக்கு உற்ற உறவு என பாவைப்பாடலில் வலியுறுத்துகிறாள். ஆயிரமாயிரம் ஆபரணம் இருந்தாலும், கழுத்துக்கு அணிகலனான மாங்கல்யம் தான் உயர்ந்த ஆபரணம். இளம் பெண்களுக்கு மனதிற்கேற்ற நல்ல கணவன் வாய்க்க, ஆடிப்பூர நன்னாளில் ஆண்டாளை அவசியம் வணங்க வேண்டும். இவ்வாண்டு ஆகஸ்ட்2ல் ஆடிப்பூரம் நிகழ்கிறது.

மகா சங்கடஹர சதுர்த்தி : விநாயகருக்கு தேய்பிறை சதுர்த்தியும் உகந்ததாகும். இதனைச் சங்கடஹரசதுர்த்தி என்று சொல்வர். ஆவணியில் விநாயகர் சதுர்த்திக்கு முன்வரும் பெரிய சதுர்த்தியே மகா சங்கடஹர சதுர்த்தியாகும். இந்த ஆண்டு இச் சதுர்த்தி ஆடியின் கடைசி நாளான ஆக., 17ல் வருகிறது. ஆற்றல், அறிவின் அடையாளமாக விநாயகர் திகழ்வதால், இவரை "மேலான தலைவர் என்னும் பொருளில் "விநாயகர் என்று குறிப்பிடுகிறோம். செய்யும் செயல்கள் தடையின்றி நிறைவேற விநாயருக்கு உகந்த சங்கடஹரசதுர்த்தி வழிபாடு அவசியம்.
யார் இறையருள் பெற்றவன்?

ஒருவர் இல்லாதபோது, அவரைப் பற்றிப் பிறரிடம் அவதூறாகவோ அல்லது எதிர்மறையாகவோ சொல்வது புறங்கூறுதல், கோள்சொல்லுதல். இதிலும் கோள் என்றும் குறளை என்றும் இரண்டு வகை உண்டு. ஒருவரது துர்க்குணங்களைப் பற்றி, அவர் இல்லாதபோது அடுத்தவரிடம் சொல்வது கோள், கற்பனையாக.. இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக்கட்டிக் கூறுவது, குறளை, முன்னதைவிட அடுத்தது மிகவும் தீயது! ஆண்டாள் தனது திருப்பாவையில் பாவை நோன்பு பற்றிக் குறிப்பிடுகிறாள். உணவில் நெய்யும் பாலும் சேர்க்காமல், மலர் சூடிக் கூந்தல் முடிக்காமல், மையிடாத கண்ணுடன் நோன்பு இருப்பார்களாம். செய்யக்கூடாதன என்று சொல்லப்பட்டவைகளையும் செய்யமாட்டார்களாம். குறிப்பாக, தீக்குறளைச் சென்றோதோம் என்கிறாள். இங்கே, தீக்குறளை என்பது தீய செயலான புறங்கூறுதலையே குறிக்கிறது.

மனிதனின் ஐம்புலன்களில், வாய் மூலம் இழைக்கிற பாவப் பட்டியலில், புறங்கூறுதலையும் சேர்த்திருக்கிறது புத்த மதம். வள்ளுவர்கூட, புறங்கூறாமை பற்றித் தனி அதிகாரமே இயற்றியுள்ளார். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் புறங்கூறுதல் முக்கிய இடம் வகிக்கிறது. கைகேயியிடம் கூனி மூட்டிய புறங்கூறுதல் எனும் தீ, ராமாயணத்தில முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்தியது. அதேபோல், சகுனி கௌரவர்களிடம் புறங்கூறி, பற்ற வைத்த தீவினையே மகாபாரதப் போருக்கு முக்கியக் காரணம் ! குரு÷க்ஷத்திரப் போர்க்களத்தில் உறவினர்கள் மீதே அம்பு விட மனம் கலங்கிய அர்ஜுனன், பலவிதமான சந்தேகங்களை, கீதாசார்யனான ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்டான். இறையருள் பெற்றவனின் லட்சணங்கள் என்ன? என்பது அர்ஜுனனின் கேள்விகளுள் ஒன்று. அதற்கு 26 நற்குணங்களைக் கொண்டவன் இறையருள் பெற்றவனாகிறான் என, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறி, பட்டியலிடுகிறார். அவற்றில், கோள் சொல்லாதிருத்தலும் ஒன்று! ஒருவர் அருகில் இல்லாதபோது, அந்த நபரின் எதிர்மறைக் குணங்களே நினைவுக்கு வருவது, பலருக்கும் வழக்கமாகிவிட்டது. இன்னும் சிலர் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், மேலதிகாரிகளிடம் தங்களது அலுவலக சகாக்களைப் பற்றி எதிர்மறையாகச் சொல்லி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். உயரதிகாரியிடம் தான் கொண்டுள்ள விசுவாசத்தைக் காண்பிக்கும் ஓர் உத்தி இது என்ற நம்பிக்கை ஒரு காரணம்; தான் செய்யும் தவறுகளில் இருந்து அதிகாரியின் கவனத்தைச் திசை திருப்பும் நோக்கமும் இதில் உண்டு.

மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் உத்தியாகவும், பிறரை விடத் தாங்கள் சிறந்தவர்கள் எனக் காட்டிக்கொள்ளும் சாதனமாகவும் சிலர் புறங்கூறுதலைக் கையாளுகின்றனர். இன்னும் சிலருக்கு மற்றவர்களின் ரகசியங்களை அம்பலமாக்குவதில் அற்ப மகிழ்ச்சி ! பிறர் துன்பப்படுவதில் மகிழ்ச்சி காணும் சாடிஸ்ட் மனப்பான்மை உள்ளவர்களும் புறங்கூறுதலில் ஈடுபடுவார்கள். தங்கள் பிரச்சனயைத் தாங்களாகவே தீர்த்துக்கொள்ள இயலாதவர்கள், மற்றவர்களிடம் உதவி நாடும்போது புறங்கூருகிறார்கள் என்பது உளவியலாளர்கள் கருத்து. அதேநேரம் , தீமை விளைவிப் போரைப் பற்றி உரியவர்களுக்குத் தகவல்கள் அளிப்பது. உண்மைகளை சாட்சியமாக அளிப்பது போன்றவை கோள் சொல்லுதலின் கீழ் வராது.

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யும் ஆறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்

- என்பது ஆண்டாள் வாக்கு.
வழிபாடு மற்றும் பண்டிகைகளில் வெற்றிலை முக்கிய இடம் வகிப்பது ஏன்?

இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. துப்பிதழ்க்கேற்ற வாசனைத் தாம்பூலங்கள். இப்போது கொண்டு வைத்தேன் ஏற்றுக் கொண்டருள் தாயே என்று மானஸ பூஜையில் வரும் வரிகள் நெகிழச் செய்பவை. வெற்றிலையின் காம்பைக்கிள்ளி நீர் வார்த்து, கற்பூர தாம்பூலம் நிவேதன முடிவில் சமர்ப்பிக்கப்படுகிறது. தேவியின் நிறம் பச்சை; சிவனின் நிறம் வெண்மை ! இரண்டும் சேர்ந்து சிகப்பாகும்போது அதுவே சக்தியின் வடிவம். பச்சை இலையின்றி வெறும் சுண்ணாம்பின் வெண்மையால் பயன் இல்லை. சக்தி இல்லாமல் சிவம் இல்லாததுபோல் வெற்றிலையின்றி வழிபாடு இல்லை.

திருமணம் நிச்சயமாவதை நிச்சயதாம்பூலம் என்கிறார்கள். வெற்றிலைபாக்கு கொடுத்துவிட்டால் அது தாம்பூல சத்தியம். பிறகு அதை யாரும் மீறத் துணிய மாட்டார்கள், முற்காலத்தில். சிரார்த்தம் செய்யும் போதும் மற்ற சடங்குகளின் போதும் தானம் கொடுப்பவர்கள் வெற்றிலை பாக்கின் மீது உத்திரணியால் நீர் வார்த்துக் கொடுப்பது வழக்கம். வடஇந்தியாவிலும் இந்த வழக்கம் பரவலாக இருக்கிறது. வடநாட்டவர்கள், தீபாவளியன்று லக்ஷ்மி பூஜை செய்யும் போது மூன்று வெற்றிலையையும், மூன்று பாக்கையும் பூசாரி எடுத்துவைப்பார். லக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்காவை இது குறிக்குமாம். மாங்கல்யதாரணம் முடிந்ததும் வந்தோரனைவரும் வாழ்த்திவிட்டு விருத்துண்டு விட்டுப் புறப்படுகையில் முகூர்த்த வெற்றிலைபாக்கு கொடுக்காமல் அனுப்பமாட்டார்கள். திருமணத்தின்போது கணவன் மனைவி இருவருக்கும் பெண்ணின் சகோதரன் தாம்பூலம் மடித்துக் கொடுப்பது ஒரு சம்பிரதாயம். நலங்கின்போதும், முதல் இரவின் போதும் வெற்றிலை பாக்குக்கு முக்கிய இடம் உண்டு.

கம்பராமாயணத்தில் ஒரு உருக்கமானகட்டம். ராவணனால் சிறை எடுக்கப்பட்ட சீதை. இளம் வெற்றிலையையார் மடித்து வாயில் போட ராமன் உண்பான் என்று வருந்தினாளாம். தருமன் ராஜசூய யாகம் நடத்திய போது முதல் தாம் பூலத்தை கண்ணன் பெற்றுக் கொண்டான் என்று மகாபாரதம் சொல்கிறது. திவ்ய பிரபந்தத்தில் உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் எம்பெருமான் என்றென்றே கண்களில் நீர்மல்கி என்று மனம் உருகிப்பாடுகிறார் நம்மாழ்வார். காளமேகப்புலவர் ஆதி நாளில் திருவானைக்கா கோயிலில் பரிசாரகராக இருந்தாராம். அங்கே தாசியாக இருந்த மோகனாங்கி என்பவளின் அழகில் மயங்கி ஒருநாள், கோயில் பிரகாரத்திலேயே அவள் வருகைக்காக காத்திருந்த நிலையில் கண்ணயர்ந்தார். நள்ளிரவில் அகிலாண்டநாயகி அம்மன் அவர் முன் தோன்றி, தன் வாயில் இருந்த தாம்பூலத்தை அவர் வாயில் உமிழ்ந்தாளாம், அவர் அதைச் சுவைக்க, தெய்வப் பிரசாதமான தாம்பூலம் நாவில் பட்டதும் நாவன்மை பெற்ற காளமேகம், ஆசுகவி பாடுவதில் வல்லவரானாராம். இதுபோன்றே, கூத்தனூரில் தேவி சரஸ்வதி தன் வாய்த்தாம் பூலத்தின் சாறை அளித்து ஒட்டக்கூத்தரை கவி வித்தகர் ஆக்கியதாகவும் ஒரு வரலாறு உண்டு. வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும். மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, சுபிட்சத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது.
பூக்களில் 99 வகைகளா! இறைவனை வணங்க சிறந்த பூ எது?

குறிஞ்சிப்பாட்டு பாடியவர் கபிலர்.  இது 261 அடிகளைக் கொண்டது. காதலித்தவனை ஒரு பெண் திருமணம் செய்து இல்லறம் நடத்துவது குறித்து இதில் கூறப்படுகிறது. ஆரிய மன்னன் பிரகத்தனுக்கு தமிழின் மேன்மையை உணர்த்துவதற்காகக் கபிலர் இப்பாடலைப் பாடினார். பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு. குறிஞ்சிப்பாட்டின் தலைவி, தனது தோழியுடன் நீராடி மகிழ்கிறாள். பலபூக்களைப் பறித்துப் பாறையில் குவிக்கிறாள். அதில் 99 மலர்கள் இடம்பெறுகின்றன. இம்மலர்கள் 34 அடிகளில் தொடர்ச்சியாக வர்ணிக்கப்படுகின்றன. அப்பூக்களின் பெயர்கள் இதோ! காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை(செங்கழுநீர்ப்பூ), குறிஞ்சி, வெட்சி, செங்கோடுவேரி, தேமா, மணிச்சிகை(செம்மணிப்பூ), உந்தூழ்(பெருமூங்கில்), கூவிளம்(வில்வம்), எறுழம், கள்ளி(மராமரப்பூ), கூவிரம், வடவனம், வாகை, குடசம்(வெட்பாலைப்பூ), எருவை(பஞ்சாய்க்கோரை), செருவிளை(வெண்காக்கனம்), கருவிளை(கருவிளம்பூ), பயினி, வானி, குரவம், பசும்பிடி (பச்சிலைப்பூ), வகுளம்(மகிழம்பூ), காயா(காயாம்பூ), ஆவிரை, வேரல்(சிறுமுங்கில் பூ), சூரல்(சூரைப்பூ), குரீஇப்பூளை (சிறுபூளை, கண்ணுப்பிள்ளை என்னும் கூரைப்பூ), குறுநறுங்கண்ணி(குன்றிப்பூ), குருகிலை(முருக்கிலை), மருதம், கோங்கம், போங்கம்(மஞ்சாடிப்பூ), திலகம், பாதிரி, செருந்தி, அதிரல்(புனலிப்பூ), சண்பகம், கரந்தை(நாறுகரந்தை), குளவி(காட்டுமல்லி), மாம்பூ, தில்லை, பாலை, முல்லை, குல்லை (கஞ்சங்கொல்லை), பிடவம், சிறுமாரோடம்(செங்கருங்காலிப்பூ), வாழை, வள்ளி, நெய்தல், தாழை(தெங்கிற்பாளை), தளவம்(செம்முல்லைப்பூ), தாமரை, ஞாழல், மௌவல், கொகுடி, சேடல்(பவளக்கான் மல்லி), செம்மல்(சாதிப்பூ), சிறுசெங்குரலி(கருந்தாமக்கொடிப்பூ), கோடல்(வெண்கோடற்பூ), கைதை(தாழம்பூ),வழை(சுரபுன்னை), காஞ்சி, நெய்தல்(கருங்குவளை), பாங்கர்(ஓமை), மராஅம்(மரவம்பூ, வெண்கடம்பு), தணக்கம், ஈங்கை(இண்டம்பூ), இலவம், கொன்றை, அடும்பு(அடும்பம்பூ), ஆத்தி, அவரை, பகன்றை, பலாசம், பிண்டி(அசோகம்பூ), வஞ்சி, பித்திகம்(பிச்சிப்பூ), சிந்துவாரம்(கருநொச்சிப் பூ), தும்பை, துழாஅய்(துளசி), தோன்றி, நந்தி(ந்நதியாவட்டைப்பூ), நறவம்(நறைக்கொடி), புன்னாகம், பாரம்(பருத்திப்பூ), பீரம்(பீர்க்கம்பூ), பைங்குருக்கத்தி(பசிய குருக்கத்திப்பூ), ஆரம்(சந்தனம்), காழ்வை(அகில்), புன்னை, நரந்தம்(நாரத்தம்பூ), நாகம், நள்ளிருள்நாறி(இருவாட்சிப்பூ), குருந்தம், வேங்கை, புழுகு(செம்பூ) என்பவை.

இத்தனை பூக்கள் இந்த மண்ணில் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன. இப்போது ஒரு சிலவே உள்ளன. இவற்றின் பெயர்களைத் தொகுத்துத் தந்த கபிலரை இயற்கையை வர்ணிப்பதில் கபிலரே சிறந்தவர் என்று தமிழறிஞர் தனிநாயக அடிகளார் போற்றுகிறார். இவற்றிற்கெல்லாம் மேலாக சிறந்த பூ அன்பு என்கிறார் விவேகானந்தர். இந்த அன்பினால்,  அள்ளிக்கொடுக்கும் வள்ளலான இறைவனை பூஜித்தால் நமக்கு வேண்டியதைப் பெறலாம்.
நாம் அளிக்கும் நிவேதனத்தை சுவாமி சாப்பிடுவாரா?

தீபாவளி வந்தால் பலகாரங்களை சுவாமியின் முன் படைக்கிறோம். பொங்கல் வந்தால் வெண்பொங்கல், சர்க்கரைப்பொங்கலை நிவேதனம் செய்கிறோம். கிருஷ்ணஜெயந்தி வந்தால் சீடை, லட்டு, முறுக்கு என வைக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும் சிலர் கேலியாக, சுவாமியா சாப்பிடுகிறார், அவர் பெயரைச் சொல்லி நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என கேலி செய்வர். இவ்வாறு கேலி செய்பவர்களிடம் சற்றும் கோபப்பட நமக்கு உரிமையில்லை. ஏனெனில், அவர்கள் உண்மையைச் சொல்கிறார்கள். அவர்கள், நிவேதனம் என்பதன் பொருள் அறியாமல் பேசினாலும் நிஜம் அது தான். நிவேதனம் என்றால் சுவாமியை சாப்பிட வைத்தல் என்பது பொருள் அல்ல. அதற்கு அறிவித்தல் என்று அர்த்தம். இறைவா! இந்த சமயத்தில் எனக்கு இந்த உணவை உண்ணத்தந்து உயிர் காத்த உனக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று அறிவிப்பதே நிவேதனமாகும். சுவாமியின் முன்னால் இலையைப் போட்டு பத்தி, சாம்பிராணி காட்டி நிவேதனம் செய்வது விசேஷநாட்களுக்கு மட்டும் தான் கருதுகிறார்கள். இந்த நிவேதனத்தை தினமும் செய்யலாம். நம் வீட்டில் அன்றாடம் சமைக்கும் வெள்ளை அன்னத்தை சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு, அவரது நினைவோடு சாப்பிட்டால் உடலும் சுத்தமாகும், உள்ளமும் சுத்தமாகும். நோய் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
அம்மனுக்கு என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

இந்த உலகை படைத்து, காத்து வரும் ஜகன்மாதாவுக்கு  கீழ்கண்ட முறைப்படி  அபிஷேகங்களைச் செய்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம்

சந்தனாதித் தைலங்களால் அபிஷேகம் செய்பவர் சுகம் பெறுவர்.
அரிசி மாவு - மல நாசம் மலம் என்பது தீவினைகள்
மஞ்சள் பொடி - ராஜ வசியம், அரசாங்க அலுவல்களை விரைவில் சாதகமாக்கிக் கொள்ளலாம்.
பஞ்ச கவ்யம் - ஆத்ம சுத்தி, தெய்வீக சாதனைக்கு உதவுவது.
ரசபஞ்சாம்ருதம் - கார்யஸித்தி, எல்லாக் காரியங்களிலும் வெற்றி
பல(பழ)பஞ்சாமிர்தம் - தனவிருத்தி குறைவற்ற செல்வம் தரும்
பால் - தீர்க்காயுள், நீண்ட ஆயுள்தரும்
தயிர் - குழந்தைப்பேறு உண்டாகும்.
நெய் - மோக்ஷம் மோட்சத்தைத் தரும். ஞான விருத்தி, ஞானத்தை அளிப்பது.
தேன் - வாக்ஸித்தி, இனிமையான குரலையும், சங்கீதத்தில் திறமையையும் அளிக்கும்.
கருப்பஞ்சாறு - நித்ய சுகம், அளவற்ற இன்பங்களைக் கொடுக்கும்.
சர்க்கரை - சத்ரு நாசம், எதிரிகளை விரட்டி வெற்றி தரும்.
வாழைப்பழம் - தான்யவிருத்தி, பயிர் விருத்தி அமோக விளைச்சல் செழிப்பு.
பலாப்பழம் - எவரையும் வசப்படுத்தும் வசீகரத் தன்மை.
எலுமிச்சம்பழம் - ம்ருத்யு நிவாரணம், அகால மரணத்தை நிவிருத்தி செய்து வியாதிகளைத் தீர்த்து நலம் தரும்.
அன்னம் - ராஜகௌரவம், அரசுரிமை, அரசனுக்குச் சமமான போக போக்கியங்கள் தரும்.
இளநீர் - அபமிருத்யு நாசம். சத்புத்திரப்பேறு. கோரோசனை, தீர்க்காயுள், நீண்ட ஆயுள்.
பச்சைக்கற்பூரம் - பயத்திலிருந்து விடுவித்து மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரும்.
கஸ்தூரி - ஜயம் வெற்றி தரும்.
பன்னீர் - சாலோக்யம், தெய்வ உலகில் வாழும் பேறு கிட்டும்.
சந்தனக்குழம்பு - சாயுஜ்யம், சிறந்த ஞானம் பெற்று இறையுணர்வு பெற்று இறைவனோடு ஐக்கியமாகும் நிலை. சாயுஜ்ய நிலையளிக்கும்.

சுத்தமான குளிர்ந்த நீராலும், கங்கை முதலான புண்ணிய நதிகளின் தீர்த்தங்களால் அபிஷேகம் செய்பவர் அன்னையின் அருளுக்குப் பாத்திரமாகி அனைத்து வினைகளும் ஒழிந்து இவ்வுலக நலன்களும் மேலுகப் பேறும் ஒருங்கே பெறுவர்.
நவகிரக தோஷத்தால் என்ன பாதிப்பு ஏற்படும்? இதோ அதற்கான பரிகாரம்!

சூரியன் தோஷம் விலக ...

உங்களுக்கு சூரியதோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தைவழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவன். அரசு, அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்யம் இதற்கெல்லாமும் சூரியனோட அமைப்பே காரணம். உங்க ஜாதகப்படியோ அல்லது தசாபுக்திப்படியோ சூரியனோட அமைப்பு கெட்டிருந்தால், தந்தை வழி உறவுகளோடான ஒற்றுமை பாதிக்கப்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் தலை, கண்கள், வயிறு, ரத்த மாறுபாடு, பித்தம் அதிகரிப்பு இப்படிப்பட்ட உபாதைகள் மாறி வரும். சட்டப்புறம்பான நபர்களால் மிரட்டல், அரசுவழி அனுமதிகள் கிடைப்பதில் தாமதம், சிலருக்குத் திருமண தாமதம் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சூரியன் அமைப்பு சரியில்லையாதலால், அதாவது சூரியதோஷத்தால் வரும்.

சூரியதோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? உங்களுக்கு சூரியதோஷம் இருந்தால், அடிக்கடி அனுமன் கோயிலுக்குப் போய் வழிபடுங்கள். தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் பசுநெய்தீபம்  5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள். பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள். சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் கேளுங்கள். முடியாதவர் மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள். அல்லது மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள். அடிக்கடி பிரசித்தி பெற்ற அனுமன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு சூரியனுக்குரிய தானியமான கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள். சூரியனார் கோயிலுக்குப் போவதும் நல்லது. தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து உங்களது பணிகளை செய்ய ஆரம்பியுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சூரியதோஷம் சுலபமாக விலகும்.

சூரிய துதி

காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி

சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்

ஞாலம் காக்கும் ஞாயிறே போற்றி
நாளும் நன்றே நல்குவாய் போற்றி
சீலம் எல்லாம் சேர்ப்பாய் போற்றி
காலம் முழுவதும் அருள்வாய் போற்றி

சந்திரன் தோஷம் விலக ...

உங்களுக்கு சந்திரதோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சந்திரன் மாத்ரு காரகன். அதாவது தாய்வழி உறவுகளால் ஏற்படும் பிரச்சனைகள், உறவுகளுக்கிடையே ஏற்படும் ஒற்றுமைக் குறைவு, தாயின் ஆரோக்யம் அடிக்கடி பாதிக்கப்படுதல், தாய்வழி சொத்துக்களில் இழுபறி, பதவி, புகழ், கல்வி உயர்வுகளில் தடை போன்ற பாதிப்புகள் தோன்றலாம்.

சந்திர தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? ஜனனகால ஜாதக ரீதியாகவோ, தசாபுக்திப்படியோ உங்களுக்கு சந்திரதோஷம் இருந்தால் திங்கட்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில்  5 அகல்தீபம் பசுநெய் விட்டு ஏற்றி வையுங்கள். அடிக்கடி பக்கத்தில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று அங்கு நடைபெறும் அன்னதானம் அல்லது நிவேதனத்திற்கு இயன்ற அளவு பச்சரிசி வாங்கிக் கொடுங்கள். ஈயத்தினால் செய்யப்பட்ட காப்பு அல்லது டாலரை அணிந்து கொள்ளுங்கள். பசுமாட்டிற்கு பச்சரிசியும் வெல்லமும் கலந்து கொடுப்பதும் சிறப்பான பரிகாரமே. திங்களூர் கைலாசநாதர் ஆலயத்திற்குச் சென்று கைலாசநாதரையும், நவகிரக சந்திரனையும் வழிபட்டு வாருங்கள். இயன்ற அளவு பால், இனிப்புகளை பிரசாதமாக விநியோகம் செய்யுங்கள்.

உங்களால் முடிந்தால் மூன்ஸ்டோன் கணபதியை வாங்கிவைத்து வழிபடுங்கள். எப்போதும் சந்திரனை தலையில் சூடியிருக்கும் சிவனது துதிகளையும், சந்திர காயத்ரியையும் சொல்லுங்கள். இதில் உங்களால் இயன்ற பரிகாரத்தைச் செய்தாலே, சந்திரதோஷம் உங்களை சங்கடப்படுத்தாமல் ஓடும். பவுர்ணமி நாளில் சந்திர ஒளி படும்படி கிரிவலம் செல்லுங்கள். அன்றை தினம் அருகிலுள்ள சிவாலயத்தில் உள்ள அம்பிகைக்கு அர்ச்சனை, அபிஷேகம் என இயன்றதைச் செய்து வழிபடுவது சிறப்பான பலன் தரும். குறைந்தது 3 நெய் தீபங்களையாவது ஏற்றி வழிபட்டால் வாழ்க்கை பிறையாகக் குறையாமல் முழுநிலவாக ஒளிரும்.

தஞ்சாவூர் நாதன்கோயில் நந்திபுர விண்ணகரப் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளையும், தாயாரையும் தரிசித்துவிட்டு, வெண்பொங்கல் பிரசாதம் விநியோகம் செய்துவிட்டு வருவது நல்லது. முத்து பதித்த டாலர் அல்லது முத்து மாலை அணிவது சந்திரதோஷத்தின் கடுமையைக் குறைக்கும்.

சந்திர துதி

அலைகடல் அதனினின்று மதியும் வந்து உதித்தபோது
கலை வளர் திங்களாகக் கடவுளர் எவருமேத்தும்
சிலைநுதல் உமையாள்பங்கன் செஞ்சடைபிறையாம் மேரு
மலை வலமாகவந்த மதியமே போற்றி! போற்றி!

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவரும் புரிவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடம் தீர்க்கும் சதுரா போற்றி

பிங்கலன் அணிந்த திங்களே போற்றி
எங்குலம் தழைத்திட எழுவாய் போற்றி
கங்குலில் ஒளியினைப் பொழிவாய் போற்றி
மங்களம் நிறைந்திட அருள்வாய் போற்றி

செவ்வாய் தோஷம் விலக .....

உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சகோதர உறவுகளுடன் ஒற்றுமை குறையும். அவர்களின் ஆரோக்யம் அடிக்கடி சீர்கெடும். பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு சம்பந்தப்பட்ட வழக்குகள் இழுபறியாகும். சிற்றின்பநாட்டம் அதிகரிக்கும். கடன்கள் அடையாமல் அதிகரித்துக் கொண்டே போகும். ரத்த அழுத்த மாறுபாடு, ரத்தத்தொற்று நோய்கள், அடிக்கடி காயம் ஏற்படுதல், கழிவுப்பாதை உபாதைகள், தலைசுற்றல், பெண்களுக்கு மாதாந்திர உபாதைகளில் சிரமம் இப்படிப்பட்ட உடல்நலப் பிரச்சனைகளுள் ஏதாவது ஒன்று மாறி மாறி கஷ்டப்படுத்தக்கூடும்.

செவ்வாய் தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? செவ்வாய்க்கிழமைகளில் சூரியோதயத்தில் 6.15 முதல் 6.45க்குள் 5 அகல் தீபத்தினை பசுநெய்விட்டு உங்கள் விட்டு பூஜையறையில் ஏற்றி வையுங்கள். செம்பு உலோகத்தாலான டாலர் அல்லது காப்பை அணிந்து கொள்வது நல்லது. முருகன் (அ) துர்கை டாலரானால் கூடுதல் சிறப்பு. அடிக்கடி அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை வழிபட்டும், அங்குள்ள நவகிரக சன்னதி செவ்வாயையும் வழிபட்டு வாருங்கள். முடிந்தால் பழநிக்குச் சென்று அங்குள்ள முறைப்படி முருகப்பெருமானை தரிசனம் செய்யுங்கள். வைத்தீஸ்வரன் கோயில் சென்று அங்குள்ள அங்காரகனுக்கு அர்ச்சனை செய்வதும் நல்ல பலன் தரும். ரெட்கார்னெட் டாலர் அணிவதும், ரெட்கார்னெட் கணபதியை பூஜிப்பதும் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்யலாம். வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கிக் கொடுங்கள்.

அடிக்கடி நவகிரக செவ்வாய்க்கு அர்ச்சனை செய்யுங்கள். உங்கள் பிறந்ததேதி அல்லது கிழமையில் செய்வது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். செவ்வாய் தோஷம் விலகி வாழ்க்கை செழிப்பாகும்.

செவ்வாய் துதி

சிறுப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு

வசனம்நல் தைரியத்தோடு மன்னதம் சபையில் வார்த்தை
புசபல பராக்கிரமங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீள் நிலம்தனில் அளிக்கும்
குசன்நில மகனாம் செவ்வாய் குறைகழல் போற்றி போற்றி.

செவ்விய நிறத்து செவ்வாய் போற்றி
திவ்விய சுகமதை தருவாய் போற்றி
கவ்விய வினைகளைக் களைவாய் போற்றி
அவ்வியம் அகன்றிட அருள்வாய் போற்றி.

புதன் தோஷம் விலக:

உங்களுக்கு புதன் தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். புதன் வித்யாகாரகன். அதாவது கல்வி, கலை போன்றவற்றுக்குக் காரணமானவன். புதன் அமைப்புப் பாதகமாக இருந்தால் படிப்பு தடைபடுதல், பாட்டு, இசை, ஓவியம் போன்ற கலை ஆர்வம் தடைப்படுதல், உயர்வுகள் தடைப்பட்டு தாழ்நிலை ஏற்படுதல் போன்ற பொதுவான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

அடிக்கடி விபத்து, உடல் சம்பந்தமான குறைபாடுகள் மாறி மாறி வரலாம். தோல் நிறமாற்றம், முக அழகு குறைதல் புத தோஷத்தால் ஏற்படும். புதன் தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? புதன் அமைதியான கிரகம், எனவே அமைதியாக, மென்மையாக இருக்கப் பழகுங்கள். பித்தளையால் செய்யப்பட்ட டாலர் அல்லது காப்பினை அணிந்து கொள்ளுங்கள். அடிக்கடி பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி வாங்கி சாற்றி வழிபடுங்கள். பக்தர்களுக்கு பச்சைப்பருப்பு பாயாசம் அல்லது பால்பாயாசம் பிரசாதமாக விநியோகம் செய்யுங்கள். புதன்கிழமைகளில் சூரியோதயத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல்தீபம் பசுநெய் ஏற்றி இஷ்ட தெய்வத்தைக் கும்பிடுங்கள். புதன் காயத்ரி, பெருமாள் காயத்ரி மனதாரக் கூறுங்கள்.

பச்சை கார்னெட் கல் டாலர் அல்லது கணபதியை பூஜை செய்யலாம். அடிக்கடி நவகிரக புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். முடிந்தால் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடுவது நல்லது. நாகப்பட்டினம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள முறைப்படி வழிபட்டு வாருங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். புதன் தோஷம் விலகி உங்கள் வாழ்வில் புதுமலர்ச்சி ஏற்படும்.

புதன் துதி

இதமுற வாழ இன்னல்கள் நீக்கும்
புதபகவானே பொன்னடி போற்றி
பதம் தந்தருள்வாய் பண்ணொளியானே
உதவியே அருள்வாய் உத்தமா போற்றி

மதனநூல் முதலாய நான்கு மறை புகல் கல்வி ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்ஞைகள் அருள்வோன் திங்கள் சுதன் பல சுபாசுபங்கள் சுகம்பல கொடுக்க வல்லான்
புதன்கவிப் புலவன் சீர்சால் பூங்கழல் போற்றி போற்றி.

புண்ணிய திருமக புதனே போற்றி
நுண்ணிய கலைகளை அளிப்பாய் போற்றி
எண்ணிய பணிகளை முடிப்பாய் போற்றி
திண்ணிய பயன்களை அருள்வாய் போற்றி.

குரு தோஷம் விலக:

நமக்கு கிரகங்களினால் தோஷம் ஏற்பட்டால் குருவிடம் (வியாழன்) போய் முறையிடுவோம். ஆனால் அந்த குருவே நமக்கு தோஷமாக அமைந்து விட்டால்.... அதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. அதே சமயம் குரு என்ற முறையில் நமக்கு நல்ல பாடங்களையும் கற்று தருவார். வியாழன், புத்திரகாரகன். அதாவது குழந்தைகளின் ஆரோக்யம் சீர்கெடுவது, வாரிசுகளுடன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுவது, வாரிசுகள் உங்களைப் பிரிந்து போக நேரிடுவது இப்படிப்பட்ட பிரச்னைகள், வியாழ தோஷத்தால் ஏற்படலாம். ஞாபக மறதி, பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், வயிறு உபாதை, தலைசுற்றல், ரத்த அழுத்த மாறுபாடு, பரம்பரை நோய் பாதிப்பு, படபடப்பு, மனஅழுத்தம் போன்ற உபாதைகள் மாறி மாறி வரலாம். செலவு இரட்டிப்பாகும்.

வியாழன் தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?  வியாழக்கிழமைகளில் சூரியோதயத்தில் வீட்டு பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி தட்சிணாமூர்த்தியை மனதார வழிபடுங்கள். ஆலங்குடி, திருச்செந்தூர், மந்திராலயம், தூத்துக்குடி ஆழ்வார் திருநகரி ஆகிய தலங்கள் ஏதாவது ஒன்றுக்குச் சென்று மனதார வழிபட்டு வாருங்கள். அந்தக் கோயிலுக்குப் போகும் முன் 40 லட்டுக்கும் குறையாமல் ஏழைகள் அல்லது பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தட்சிணாமூர்த்தியை அடிக்கடி சென்று வழிபட்டு வாருங்கள்.

தங்கத்தாலான ஏதாவது ஒரு ஆபரணத்தை உடலில் அணிவது நல்லது. அவரவர் வசதியைப் பொறுத்து மஞ்சள் டோபாஸ் கல்லால் ஆன டாலர் அணிவது அல்லது கணபதியை பூஜிப்பது நன்மைதரும். யானையைப் பார்க்கும் போது அல்லது கோயில் யானைக்கு மஞ்சள் வாழைப்பழம் இயன்ற அளவு வாங்கிக் கொடுங்கள். குரு காயத்ரி, தட்சிணாமூர்த்தி துதிகளையும் எப்போதும் சொல்லுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். குருதோஷம் நிச்சயம் விலகி, குருவருள் பரிபூரணமாகக் கிட்டும்.

வியாழன் துதி

குணமிகு வியாழ குருபகவானே!
மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்!
பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா!
கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்!

மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்ப கப்பொன் நாட்டினுக் கதிபனாக்கி
நிறைதனம் சிவிகை மன்றல நீடுபோ கத்தை நல்கும்
இறையவன் குருவி யாழன் இணையடி போற்றி போற்றி.

வளமெலாம் அளித்திடும் வியாழா போற்றி
குலமெலாம் தழைத்திட வருவாய் போற்றி
புலமெலாம் மலர்ந்திட முனைவாய் போற்றி
உலகெலாம் உவந்திட அருள்வாய் போற்றி!

சுக்ர தோஷம் விலக:

உங்களுக்கு புதன் தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சுக்ரன், களத்திரகாரகன் அதாவது கணவன் மனைவி அமைப்புக்கு காரணமானவன். சுக்ரனின் அமைப்பு சரியில்லாமல் தோஷம் ஏற்பட்டால், குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை குறையும், கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்பு உண்டாகும். வாகன அமைப்பிற்கும் இவரே காரகன் என்பதால், புது வாகன யோகமோ அல்லது வாகன யோகத்தடையோ ஏற்படும்.

உடலில் முதுகுத்தண்டுவட உபாதை, கழிவுப்பாதை உறுப்புகள், கல்லீரல், சிறுநீரகக்கல், பிரசவகால பிரச்னைகள், இப்படி ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். கணவன் வழி அல்லது மனைவி வழி உறவுகளுடன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும். சுக்ர தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? வெள்ளிக்கிழமைகளில் சூரியோதயத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள். உங்கள் குலதெய்வத்தையோ அல்லது ஸ்ரீரங்கநாதரையோ வழிபடுவது சிறப்பு. பக்கத்து பெருமாள் கோயிலில் உள்ள தாயாரை தாமரை மலர் அல்து மல்லிகைப்பூ கொடுத்து வழிபடுங்கள். முயன்ற அளவு தானம் செய்யுங்கள். நேரம் கிடைக்கும் போது சுக்ர காயத்ரி, மகாலட்சுமி துதிகளை மனதார கூறுங்கள். பசுமாட்டிற்கு தயிர்சாதம் அல்லது பச்சரிசி, வெல்லம் கலந்து கொடுங்கள்.

வசதி உள்ளவர்கள் வைரம் அல்லது க்ரீன் கார்னெட் கல்லையோ அல்லது அக்கல்லாலான விநாயகரை வாங்கி பூஜியுங்கள். அடிக்கடி ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கருகிலுள்ள நவகிரக சன்னதி சுக்ரனுக்கு இயன்ற அர்ச்சனை ஆராதனை செய்யுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சுக்ரதோஷம் நீங்கி வாழ்க்கையில் சுபயோக பலன்கள் கூடும்.

சுக்ர துதி

சுக்கிரமூர்த்தி சுபம்மிக ஈவாய்
வக்கிரம் இன்றி வரம் மிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே!
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கு அருளே!

மூர்க்காவன் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம்
காக்கவான் மழைபெய் விக்கும் கவிமான் கனகம் ஈவோன்
தீர்க்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பும்
பார்க்கவன் சுக்ராச் சாரி பாதபங் கயமே போற்றி.

துணைநலம் அருளும் சுக்ரா போற்றி
மனையறம் தழைத்திட வருவாய் போற்றி
இணையிலா பொருளை கொடுப்பாய் போற்றி
வினையெலாம் விலகிட அருள்வாய் போற்றி.

சனி தோஷம் விலக:

சனீஸ்வரன் வர்றான்...தொல்லை கொடுக்கப்போறான்... என சிவன் உட்பட அனைவரும் பயப்படக்கூடிய ஒரே கிரகம் சனீஸ்வரன் தான். ஆனால் இவரைக்கண்டு யாரும் பயப்பட தேவையில்லை.  இவருக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. அவரவர் செய்யக்கூடிய செயல்களுக்கேற்றாற் போல் பாதிப்புகளை கொடுக்க கூடியவர். எனவே இவரை நீதிபதி என்று அழைப்பது மிகப்பொருத்தமாக அமையும். . அதிலும் தலைமை நீதிபதி என்றால் கண கச்சிதாமாகப் பொருந்தக்கூடியவர் இவர் ஒருத்தர் தான். எம தர்மருக்கு கூட மன்னிக்கும் தன்மை உண்டு. ஆனால் இவர் நீதிபதி  என்பதால் இவரிடம் மன்னிப்பு கிடையாது. மன்னிப்பு இவருக்கு பிடிக்காத வார்த்தை.  இவருக்கு ஒருவரை பிடித்து விட்டால்,(ஏழரை, அஷ்டமத்து சனி, கண்டச்சனி, மங்கு சனி) அந்த காலகட்டத்தில் சனி தோஷம் பிடித்தவர்கள் நன்மைகள் பல செய்து, இறைவனை மனம் உருகி வழிபாடு செய்தால், பாதிப்பை குறைப்பார். அத்துடன் அவரை விட்டு விலகும் போது நன்மைகள் பல செய்வார்.

சனி தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் தேக்கம், அதீத அலைச்சல், பணிச்சுமை, சோம்பல், விளைச்சல் பாதிப்பு, உடல் உறுப்புகளில் கோளாறு என பலவிதமான பிரச்னைகள் ஏற்படலாம். நரம்பு பிரச்னை, வாதநோய், வயிற்று உபாதை, எலும்பு தேய்மானம்  போன்ற உபாதைகள் ஏற்படலாம். சனிதோஷம் போக செய்யக் கூடிய பரிகாரங்கள்; தினமும் ஒருகைப்பிடி அன்னம் எள்சேர்த்து காகத்திற்கு வைப்பது நன்மை தரும். சனிக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது 5 அகல் தீபம் நல்லெண்ணெய் விட்டு ஏற்றுவதும், சிவதுதி, அனுமன் துதிகளைச் சொல்வதும் நல்லது. தினமும் சிவன், லட்சுமி நரசிம்மர், அனுமன், சனிபகவான் காயத்ரி மந்திரங்களை மனதாரக் கூறுங்கள். சனி பிரதோஷ தினங்களில் நந்தி தரிசனம் செய்வதும், சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதும் சிறப்பானது.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள நளதீர்த்தத்தில் நீராடி அங்குள்ள சனிபகவானை வழிபட்டும், திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்திற்கு சென்று அங்குள்ள பொங்கு சனிபகவானையும் வழிபடலாம். இரும்பு சட்டியில் 8 ஒரு ரூபாய் நாணயங்கள் போட்டு, நல்லெண்ணெய் நிரப்பி அதில் உங்கள் முகம் பார்த்த பின் தானம் அளிப்பது சனிதோஷம் நீங்கும். இரும்பு அல்லது ஸ்டீல் டாலர், காப்பு அணிவதும், அதை கருப்பு கயிறில் கட்டிக் கொள்வதும் நல்லது. வசதி உள்ளவர்கள் நீலக்கல் எனும் ப்ளூடோபாஸ் கல்லை டாலரில் பதித்து அணியலாம். அல்லது அந்தக் கல்லால் செய்த கணபதி சிலையை வாங்கி பூஜிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். அடிக்கடி சிவாலயம் சென்று அங்குள்ள பார்வதியை வழிபட்டபின், நிறைவாக நவகிரக சனிபகவானை வணங்கி விட்டு அனுமனை தரிசித்து விட்டு வருவது நல்லது. அனுமன் இல்லாவிடில் வழியில் ஏதாவது ஒரு பிள்ளையாரை தரிசிப்பது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்தால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் வராது.

சனி துதி

சங்கடம் தீர்க்கும் சனிபகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வரத் தேவா
இச்செகம் வாழ இன்னருள் தா! தா!

முனிவர்கள் தேவர்கள் ஏழு மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வும் உன் மகிமை அல்லால்வே றுண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகம் ஏறும்
சனிபக வானே போற்றி தமியனேற் கருள்செய் வாயே.

சகலரும் துதித்திடும் சனியே போற்றி
புகலரும் துயரம் துடைப்பாய் போற்றி
நிகரில்லாப் புகழினைத் தருவாய் போற்றி
செகமெலாம் நலம் பெற அருள்வாய் போற்றி!

ராகு தோஷம் விலக:

உங்களுக்கு ராகு தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். ராகுவின் அமைப்பு சரியாக இருந்தால் தந்தைவழி சொத்துக்கள் கைகூடி வரும். இல்லாவிட்டால் இழுபறியாகும். திருமணத் தடை, குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை, பெயர் புகழுக்கு களங்கம் ஏற்படுவது, எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி, அடிக்கடி இடமாற்றம், வீண்பழி சுமத்தல், குடும்பப் பிரிவு என பொதுவான பிரச்னைகள் வரும். உடல் நலக் கோளாறுகள் மாறி மாறி ஏற்படும்.

ராகு தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? ராகுவுக்கு தனியாக ஓரைகாலம் இல்லை. அதனால், சனிக்கிழமை சூரியோதயத்தில் 5 அகல் தீபம் ஏற்றி வையுங்கள். தினமும் துர்கை காயத்ரி கூறுங்கள். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்கையை உதிரி 5 எலுமிச்சம்பழம் கொடுத்து, 5 அகலில் நெய்தீபம் ஏற்றி கும்பிடுங்கள். (எலுமிச்சை தீபம் கூடாது). 3 பழம் திரும்பி வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள், அடிக்கடி பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள துர்கையையும், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயிலுக்குச் சென்று ராகுவையும், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று நாகரையும் தரிசித்துவிட்டு வாருங்கள். முடிந்தால் பக்தர்களுக்கு உளுந்துசாதம் தானமாக கொடுங்கள். பசுவுக்கு கடலைப்பொட்டு அல்லது அகத்திக்கீரை தீவனம் வாங்கிக் கொடுங்கள்.

அடிக்கடி உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கோயிலில் துர்கை, ராகு சன்னதியில் வழிபாடு செய்யுங்கள். வசதியானவர்கள் கோமேதகக் கல் பதித்த டாலர் அல்லது கோமேதக கணபதியை வணங்குங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்தால் ராகுதோஷ பாதிப்பு குறைந்து வாழ்க்கை ரம்மியமாகும்.

ராகு துதி

வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க் கமுதம் ஈய
ஏகிநீ நடுவி ருக்க எழில்சிரம் அற்றுப் பின்னர்
நாகத்தின் உடலோ டுன்றன் நற்சிரம் வாய்க்கப் பெற்ற
ராகுவே போற்றி போற்றி ரட்சிப்பாய் ரட்சிப் பாயே.

தண்மதி விழுங்கிய ராகுவே போற்றி
துன்மதி நினைப்பினை அறுப்பாய் போற்றி
என்மதி துலங்கிட முயல்வாய் போற்றி
நிம்மதி நிலவிட அருள்வாய் போற்றி

கேது தோஷம் விலக:

உங்களுக்கு கேது தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். படிப்பு தடைபடுதல், சொத்துப் பிரச்னை, மன விரக்தி, லட்சியத்தில் சோர்வு, ஏமாற்றம், கூடா நட்பு, வீண் சண்டை சச்சரவுகள் இப்படிப் பொதுவான பிரச்னைகள் வரலாம். உடல்நலக் குறைபாடு, மறதி, விஷ ஜுரம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கேது தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? செவ்வாய்க் கிழமைகளில் சூரியோதயத்தில் 5 அகல் தீபங்களை நெய்விட்டு ஏற்றி வைத்து இஷ்ட தெய்வததை வழிபடுங்கள். அடிக்கடி அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று அறுகு சாற்றி வழிபாடு செய்யுங்கள். முடிந்த அளவு கதம்ப சாதத்தை தானம் செய்யுங்கள்.

துருக்கல் எனப்படும் உலோகத்தாலான டாலரை அணிந்து கொள்வது சிறப்பு. அடிக்கடி பிள்ளையார்பட்டி சென்று அங்குள்ள விநாயகரை அர்ச்சனை செய்து வழிபடுங்கள். அபிஷேக விபூதியை வாங்கி வந்து தினமும் இட்டுக் கொள்ளுங்கள். விநாயகர் காரிய சித்திமாலை துதியை எப்போதும் கூறுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கோயில் நவகிரக கேது பகவானை வழிபடுங்கள். வசதியானவர்கள் கோமேதகக் கல் பதித்த டாலர் அல்லது கோமேதக கணபதியை வாங்கி பூஜை செய்யுங்கள்.

காளஹஸ்தி காளத்தியப்பர், கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள கேது பகவானை வணங்குங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்தால் கேதுதோஷ பாதிப்பு குறைந்து வாழ்க்கை கோலாகலமாகும்.

கேது துதி

பொன்னையின் உரத்தில் கொண்டோன் புலவர்தம் பொருட்டால் ஆழி
தன்னையே கடைந்து முன்னத் தண்ணமுது அளிக்கலுற்ற
பின்னநின் சுரவாலுண்ட பெட்பினிற் சிரம்பெற்றூ உய்ந்தாய்
என்னையாள் கேதுவே இவ்விரு நிலம் போற்றத்தானே

நிறைமதி குறைத்த கேதுவே போற்றி
தலைவிதி எழுத்தை கலைப்பாய் போற்றி
பிறைபோல் சூழ்நலம் வளர்ப்பாய் போற்றி
குறையெலாம் மறைந்திட அருள்வாய் போற்றி.