திங்கள், 16 நவம்பர், 2020

வள்ளல்கள் இருவர்!

வள்ளல்கள் இருவர்!

கொடை வள்ளல் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கர்ணன்தான். ஆனால், அவன் வள்ளல் தன்மைக்கே சவால் விடும்படியாக செயற்கரிய செயல்புரிந்த இரு அடியவர்களைப் பற்றி அறியும்போது வியப்பாகத்தான் உள்ளது. யாருமே  செய்வதற்கு அஞ்சுகின்ற அச்செயலை, இறைவன் மீதும் இறை அடியார்கள் மீதும் கொண்ட தூய பக்தியின் நிமித்தம் செய்த அருளாளர்கள் இயற்பகை நாயனார் மற்றும் ஜலராம் பாபா.

இயற்பகை நாயனார்: சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தில், வணிகர் குலத்தில் இயற்பகையார் அவதரித்தார். சிவபெருமானுக்கு அடிமை செய்தும், சிவனடியார்களுக்கு இல்லை என்னாது இனிது வழங்கியும், அடியார்கள் பணியை நிறைவேற்றுவதையே கொள்கையாகக் கொண்டு சிவப்பணி செய்து, இல்லாளோடு இனிதே இல்லறம் நடத்தி வந்தார். இயற்பகையாரின் கொடைச்சிறப்பை உலகிற்குக் காட்ட திருவுள்ளம் கொண்டான். திருச்சிற்றம்பலக் கூத்தன், பால் வெண்ணீறணிந்து, அந்தனர் வேடந்தாங்கி, பார்வதி மணாளன் இயற்பகையார் இல்லத்துக்கு வருகை புரிந்தான். அகமும், முகமும் மலர அவரை ஓடிச்சென்று வரவேற்றார் இயற்பகையார். அந்தணராக வந்த அரனார், சிவனடியார் வேண்டிய பொருள் எதுவாயினும் இல்லை என்னாது நீ கொடுப்பதை அறிந்து நாம் இங்கு வந்துள்ளோம். நாம் ஒரு பொருளை விரும்புகிறோம். நீ கொடுக்க உடன் பட்டால் நான் சொல்கிறேன் என்று கூறினார். என்னிடம் இருப்பவை அனைத்தும் இறைவனின் உடைமையே. அடியவர் பெருமானே! நீங்கள் கேட்கும் பொருள் என்னிடம் இருக்குமானால், உங்களுக்கு உடனே கொடுப்பேன். இது உறுதி என்று இயற்பகையார் கூற, வந்திருந்த வேதியர், அப்படியானால் உன் மனைவியை எனக்குக் கொடு என்று கேட்டார். இதைக் கேட்டதும் சீறி எழுந்தாரா நமது தொண்டர்? இல்லை. மாறாக, சிரித்த முகத்துடன், நீர் கேட்ட பொருள் என்னிடம் இருக்கிறது. இது இறைவன் தந்த பேறு. என்று மகிழ்ந்து, மனைவியிடம் சென்று நடந்ததைக் கூறினார். அம்மையாரும் முதலில் கலங்கினாலும், பின்பு தெளிவு பெற்றார். இயற்பகையாரின் சுற்றத்தாரால் தனக்குத் துன்பம் நேராவண்ணம் வழித்துணையாய் வரவும் தொண்டருக்கு ஆணையிட்டார் அந்õணர். என்ன விபரீதம்? மனைவியுடன் மாற்றான் செல்ல, பாதுகாப்பிற்குச் சென்றார் இந்த விநோத சிவத் தொண்டர். கேட்கக் கூடாததை வாய்கூசாமல் கேட்டு வேதியர் வேடம் தரித்த இறைவன் பெற்றுக்கொண்டது வேடிக்கையாய் உள்ளதென்றால், துறவி வேடம் பூண்டு மற்றொரு தொண்டனிடமும் இதையே யாசகமாய்  கேட்டுப் பெற்றான் இறைவன் என்று அறியும்போது வியப்பு இரட்டிப்பாகிறது.      

ஜலராம் பாபா: குஜராத்திலுள்ள வீர்பூர் கிராமத்தில் பிரதான் தாக்கர் என்ற வணிகருக்கு ராஜ்பாய் என்ற அம்மையாருக்கும் இரண்டாவது மகனாக அவதரித்தார் ஜலராம். குழந்தைப் பருவத்திலிருந்தே ஜலராமுக்கு தெய்வபக்தி அதிகம். அவருக்குப் பத்து வயது ஆனபோது அவர்கள் இல்லத்துக்கு ஒரு துறவி வந்தார். இரண்டாவது மகனைப் பார்க்க வேண்டும் என்று கூறினார். வீட்டுக் குள்ளிலிருந்து வெளியே வந்த ஜலராம், துறவியைக் கண்டான். உள்ளத்தில் ஒளிவெள்ளம் பாய, பரவச நிலையை அடைந்தான். புன்னகையுடன் துறவி, அவனை ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். அன்றிலிருந்து சீதாராம், சீதாராம் என்று இடைவிடாமல் உச்சரிக்கத் தொடங்கினான் ஜலராம். என்னைப் பார்க்க வந்தவர் ராமதூதனான ஆஞ்சநேயர்தான் என்று பின்னாளில் ஜலாராம் குறிப்பிட்டுள்ளார். இல்லறத்தில் அவருக்கு விருப்பமில்லா விட்டாலும், பதினாறு வயதிலேயே அவருக்குத் திருமணம் செய்து வைத்து, வியாபாரத்தைக் கவனித்துக் கொள்ள கடைசியில் உட்கார வைத்தார்கள். ஆனால், அவர் மனம் வியாபாரத்தில் ஈடுபடவில்லை. எந்நேரமும் எதையோ பறிகொடுத்தவர் போல் காணப்பட்டார். சித்தப்பாவின் அறிவுரைப்படி பல புனிதத் தலங்களுக்கு மனைவியுடன் சென்று வந்ந்தார். ஃபதேபூர் என்ற இடத்தில் போஜலராம் என்ற மகானிடம் உபதேசம் பெற்றார். இருபது வயதில், அன்னதானத்தை ஏற்றுக்கொள்ள வந்த ஒரு துறவி, ஜலராமுக்கு தன்னிடமிருந்த ஒரு விக்ரகத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார். சிரத்தையாக அந்த விக்ரகத்தைப் பூஜை செய்து வந்த ஜலராம், அந்த விக்ரகத்தில் ஆஞ்சநேயர் பிரதிஷ்டை ஆன காட்சியைக் காணும் பேறு பெற்றார். ஒரு மாலை நேரம். ஜலாராமும் அவர் மனைவியும் ஆஞ்சநேயர் ஆராதனையில் ஈடுபட்டிருந்தனர். வாசலில் அம்மா என்ற குரல் ஒலித்தது. கணவனும் மனைவியும் வெளியே வந்து பார்த்ததுபோது, திண்ணையில் ஒரு துறவி, தோளில் துணிப்பை, கையில் தண்டத்துடன் இருந்தார்; மூச்சுவிடவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். பசியாற உள்ளே அழைத்தனர் தம்பதியர். மறுத்த துறவி ஜலாராமைப் பார்த்து,
வயதானதால் என் வேலைகளைச் செய்துகொள்ள எனக்குச் சிரமமாக உள்ளது. உன் மனைவியை எனக்கு சேவை செய்ய என்னுடன் அனுப்புவாயா? என்று கேட்டார். ஜலராம் அதிர்ச்சியுறவில்லை. அவரது மனைவியோ, கணவனிடம் அனுமதிகூட கேட்காமல் அவருடன் புறப்பட்டாள். துறவி தோள் பை, தண்டம் சகிதம் அந்த இளம்பெண்ணுடன் புறப்பட்டுச் சென்றார்.ஜலாராம் சோகம் சற்றுமின்றி ஆஞ்சநேய பூஜையைத் தொடர்ந்தார். மாதவருக்கு மனைவியை தாரை வார்த்துக் கொடுத்த மகிழ்ச்சி ஒருபுறம் தம்மைப் பாதுகாப்பாக உடன்வர ஆணையிட்ட சந்தோஷம் மறுபுறம்.

இயற்பகையார் களிப்புடன் இல்லத்துக்குள் சென்று பொன்னாடை தரித்து ஆயுதம் தாங்கினார்.அக்னி சாட்சியாய் மணமுடித்த அன்பு மனைவி அன்னிய ஆடவனுடன் முன்செல்ல அவர்களுக்குப் பாதுகாவலனாய் அருமைக் கணவன் பின்செல்ல பயணம் தொடர்ந்தது.ஊர் முழுவதும் செய்தி பரவியது.தன் மனைவியை மாற்றனுடன் அனுப்பி வைக்கும் இயற்பகையாரை பித்தன் என்று ஏசியும் பிறன்மனை விழைந்த வேதியர் மீது ஆயுதங்கள் வீசியும் சுற்றத்தார்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.அஞ்சி நின்ற அந்தணருக்கு அபயம் அளித்து, சுற்றி நின்று எதிர்த்தவர்களைத் தாக்கினார் இயற்பகையார்.அந்தத் தாக்குதலில் பலர் மாண்டனர்.திருச்சாய்க்காடு என்னும் ஊருக்கு அருகில் வந்தவுடன் சிவனடியார் இயற்பகையாரை நோக்கி இனி நீ திரும்பிச் செல்லலாம்!என்று கூறி விடை கொடுத்தார். விடைகொடுத்துச் செல்வது விடையேறும் பரமன் என்று அறியவில்லை அந்த பரமபக்தர்.மிக்க மகிழ்ச்சியுடன் திரும்பிக்கூட பார்க்காமல் தனது இல்லம் திரும்பினார்.அவரது அச்செயலைக் கண்டு நெகிழ்ந்த இறைவன் இயற்பகையானே! என்னை எப்போதும் மறவாதவனே! அன்புடையவனே! செயற்கரிய செயல் செய்தவனே! ஓலம்! என்று பலமுறை ஓலமிட்டு அழைத்தார். மறுக்கறு மறைஓலிட்டு மாலயன் தேட நின்றான் குரல் கேட்டு ஓடோடியும் வந்தார் இயற்பகையார். இறையடியார்க்கு இன்னல் ஏதேனும் வந்துவிட்டதோ என்றெண்ணி விரைந்து வந்தார்.தொண்டரை மேலும் சோதிக்க எண்ணாத தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அவ்விடத்திலிருந்து மறைந்தருளினார். தம் மனைவியார் மட்டும் அங்கு நிற்பதை நாயனார் கண்டார்.அப்போது, வானத்தின் மீது உமையம்மையுடன் சிவபெருமான் காளையூர்தியின் மீதமர்ந்து காட்சியளித்தார். இயற்பகையார் உணர்ச்சி மேலிட தரையில் வீழ்ந்து வணங்கினார். இவ்வுலகில் நீ செலுத்திய அன்புகண்டு மகிழ்ந்தோம்.நீரும் உம் மனைவியும் நம்மிடம் வருக!என்று அருள் செய்ததோடு இறந்த இயற்பகையாரின் சுற்றத்தார்க்கு வீரசுவர்க்கமும் அளித்தார் மறைபோற்றும் இறைவன்.

கணவனின் கட்டளைப்படி முனிவர் பின் சென்றார் இயற்பகையாரின் மனைவி என்றால் ஜலாராமின் துணைவியோ வந்திருந்த துறவியுடன்பதியின் ஆணைக்குக்கூட காத்திராமல் புறப்பட்டாள்.இருவரும் ஊரைக்கடந்து அருகில் இருந்த ஒரு வனத்தை அடைந்தனர்.ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் துறவி வீர்பாயிடம் தனது தோளில் தொங்கிய பையையும் தண்டத்தையும் கொடுத்து விட்டு, இதை பாதுகாப்பாக வைத்திரு. நான் வரும் வரை இந்த இடத்தைவிட்டு நகரக் கூடாது என்று கூறிச் சென்றார்.இரவு வந்தது. இருள் சூழ்ந்தது.ஆனால் துறவி வரவில்லை.வீர்பாய் பொறுமையாய் அமர்ந்திருந்தாள்.அப்போது வானிலிருந்து மகளே! தணடத்தையும் பையையும் எடுத்துக்கொண்டு போய் உன் கணவனுடன் சேர்ந்து வாழ்வாயாக! உங்களைச் சோதிக்கவே இவ்வாறு செய்தேன் என்று அசரீரி ஒலித்தது. மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினாள் வீர்பாய். அன்று முதல் ஜலாராமும் வீர்பாயும் இறைவனின் பரிசான அந்தப் பையையும் தண்டத்தையும் ஆராதித்து வந்ததோடு அவர்கள் இல்லத்துக்கு வந்தவர்க்கெல்லாம் வயிறாற அன்னமிட்டு நிறைவாழ்வு வாழ்ந்து இறைவனடி சேர்ந்தனர்.இன்றும் ராஜ்கோட் மாவட்டத்திலிருக்கும் வீர்பூர் கிராமத்து ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஜலராம் வணங்கிய ஆஞ்சநேயரையும் இறைவன் வீர்பாய்க்கு அளித்த தோள்பை மற்றும் தண்டத்தையும் தரிசித்துச் செல்கின்றனர். பூஜ்யத்துக்குள்ளிலிருந்து ராஜ்யம் நடத்துபவனைப் புரிந்து கொள்வது கடினம். புரிந்துகொண்டால்? அவன்தான் இறைவன்!

அருள் மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்

அருள் மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்
 



மூலவர் :  பசுபதீஸ்வரர்
அம்மன்:  திரிபுரசுந்தரி
தல விருட்சம் :  கொன்றை
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :  திருஆமூர்
ஊர் :  திருவாமூர்
மாவட்டம் :  கடலூர்
மாநிலம் :  தமிழ்நாடு
 
பாடியவர்கள்:தனித் தேவாரத்திருப்பதிகம் இக்கோயிலுக்கு இல்லை என்றாலும் அப்பர் சுவாமிகள் பாடியருளிய பசுபதி திருவிருத்தம் இத்தலத்து இறைவரைக் குறித்தே அருளிச் செய்யப் பெற்றது எனலாம்.

இத்தலத்தின் சிறப்பை பெருமையை சேக்கிழார் பெரிய புராணத்தில் சிறப்பித்து கூறுகின்றார்.
 
திருவிழா:அப்பர் குருபூஜை சித்திரை சதயத்திலும், அவதார நாள் பங்குனி மாதம் ரோகிணியிலும் நடக்கிறது.   
       
தல சிறப்பு:சிவனது தேவாரப் பாடல் பாடிய அப்பர் என்ற அழைக்கப்படும் திருநாவுக்கரசர் அவதரித்த தலம்.   
       
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருவாமூர் - 607106, கடலூர் மாவட்டம்.போன்:+91 4142- 239 6333.  
      
பொது தகவல்:இந்த பசுபதீசுவரர் ஆலயம் மிகவும் பழமையானது. சுவாமி சன்னதிக்கு எதிரில் அப்பர் சுவாமிகள் திருவுருவம் நின்ற திருக்கோலத்துடன் மூலாதாரமாக விளங்குகிறது. அதில் உழவாரப்படை இடது தோளில் சார்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமான் குறித்து திருப்புகழ் பாடியுள்ளார். அப்பரின் அக்காள் திலகவதியாருக்கு தனி சன்னதி உள்ளது. அப்பரின் தாயார் மாதினியார் தகப்பனார் புகழனார் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. திருவாமூர் நாற்புறமும் கழனிகள் சூழ்ந்த மிக அழகிய சிறிய கிராமம்.தெற்கு பிரகாரத்திலும் அப்பர் திருவுருவம் உள்ளது.
 
பிரார்த்தனை:இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது சைவ சமயத்தின்பால் அதீத பற்றும் அக்கறையும் கொண்ட அன்பர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய அருமையான சிறப்பு பெற்ற கோயில் இது. இத்தலத்து ஈசுவரனைத்தான் அப்பரின் தாய் தகப்பனார் வழிபட்டுள்ளனர். ஈசுவரன் மீது மாறாத பக்தியும் சிரத்தையும் கொண்டோர் இத்தலத்து பசுபதீசுவரனை வணங்கினால் அத்தனை பேறுகளும் கிடைக்கும்.மேலும் நின்ற நிலையில் உள்ள அப்பர் பெருமானை வணங்கினால் மனதுக்கு நிம்மதியும், வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் , ஈசனின் அருளும் கிடைக்கும்.
 
நேர்த்திக்கடன்:சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மாப் பொடி, பால், தயிர், பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.தவிர சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.  
      
தலபெருமை:இங்கே பசுபதீஸ்வரரும், திரிபுரசுந்தரி அம்மனும் அருள்பாலிக்கிறார்கள். சைவ சமயத்தின்மீது பற்றுக்கொண்டவர்கள் வணங்க வேண்டிய தலம் இது. இங்கே அப்பர் பெருமான் நின்ற நிலையில் காட்சி தருகிறார். அவரை வணங்கினால் மனதிற்கு நிம்மதியும், வாக்கு வன்மையும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும், ஈசனின் அருளும் கிடைக்கும். இங்கே பசுபதீஸ்வருரம் திரிபுர சுந்தரியும் அருள்பாலித்தாலும் அப்பர் பெருமானுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. திலகவதியாரை மணம் பேசிய கலிப்பகையார் போரில் இறந்துவிட்டதால் இவ்வூரில் திருமணத்துக்கு முதல் நாளிலோ அல்லது திருமணத்தன்றோ தான் நிச்சயதார்த்தம் செய்கிறார்கள்.திலகவதியாருக்கும், அப்பரின் தாய் தந்தைக்கும் இங்கு தனி சன்னதிகள் உள்ளன. ஊரைச்சுற்றிலும் கழனிகள் அதிகம். நாவுக்கரசர் பாடிய ஒரு பாடல் குழந்தைகளும் கற்றுக்கொள்ள கூடிய வகையில் மிகவும் எளிமையாக உள்ளது.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே.

நாவுக்கரசர் அவதாரம் செய்த களரி வாகை மரத்தடியில் சுவாமிக்கு அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த மரத்தை ஒரு அதிசய மரமாக கருதி மக்கள் பூஜிக்கின்றனர். இது செடியாகவும் இல்லாமல் கொடியாகவும் இல்லாமல் மரமாகவும் இல்லாமல் ஒரு புதுவகை அம்சமாக உள்ளது. இதன் இலையை சுவைத்தால் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு என்ற அறுசுவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கி.பி.7ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இந்த மரம் இங்கு உள்ளது.

3 ம் குலோத்துக்க சோழன் திருப்பணி செய்த தலம், 11 ம் நூற்றாண்டில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.

அப்பர் குருபூஜை தினமான சித்திரைச் சதயத்தில் பெருவிழாவும் திருமுறை மாநாடும் நிகழ்ந்து வருகின்றன. திருநாவுக்கரசர் நினைவாக ஆண்டுதோறும் இவ்விழாவில் மூத்த திருமுறை இசைவாணர் (சிறந்த ஓதுவாமூர்த்தி) ஒருவருக்குத் திருமுறைக் கலாநிதி என்ற பட்டம் பொறித்த பொற்பதக்கமும் பொன்னாடையும் இரண்டாயிரம் பணமுடிப்பும் ஸ்ரீ லஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களால் வழங்கப்பெற்று வருகின்றன.

அப்பர் சுவாமிகள் பரம்பரையினர் பக்கத்து ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். அப்பர் சுவாமிகள் பங்குனிமாதம் ரோகினியில் அவதரித்ததாகக் கொண்டு அன்றைய நாளிலும், அவர் இறைவனடி கூடிய சித்திரைச் சதயத் திருநாளிலும் அப்பருக்கு வழிபாடுகள் நிகழ்த்தி வருகின்றனர். தவிர விசேஷ நாட்களின் போது கோயிலில் பக்தர்கள் நிரம்ப அளவில் வருகின்றனர்.
 
தல வரலாறு:திருவாமூர் என்ற இந்த தலத்தில்தான் தேவாரம் பாடிய நால்வருள் முக்கியமானவரான அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர் அவதரித்தார். இவரது தந்தை புகழனார்; தாயார் மாதினியார்; சகோதரி திலகவதியார். பெற்றோர் அப்பருக்கு மருள்நீக்கியார் என பெயர் வைத்தனர். இளமையிலேயே அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். சகோதரியின் பாதுகாப்பில் மருள்நீக்கியார் வளர்ந்தார். உறவினர்கள் திலகவதியாருக்கு அவ்வூரில் சேனைத் தலைவராக இருந்த கலிப்பகையாரை திருமணம் செய்துவைக்க நிச்சயித்தனர். மன்னனால் போருக்கு அனுப்பப்பட்ட கலிப்பகையார் போரில் கொல்லப்பட்டார். திருமணம் நின்றுபோனதால், மனம் உடைந்த திலகவதி திருவதிகை என்ற தலத்திற்கு சென்று சிவத்தொண்டு செய்துவந்தார். திருநாவுக்கரசரோ சமண சமயத்தை சார்ந்து, தர்மசேனர் என்ற பெயரை சூட்டிக்கொண்டார்.திலகவதியார் தனது தம்பியை நம் தாய் சமயமான  சைவ சமயத்திற்கு மீட்டுத்  தரவேண்டும் என சிவபெருமானிடம்  வேண்டிக் கொண்டார். இதையடுத்து நாவுக்கரசரை சூலைநோய் தாக்கியது. திருவதிகை சென்று இறைவனின் திருநீறை வயிற்றில் பூசியதும் வலி குணமானது. இதனால் மெய்சிலிர்த்த அவர் திருப்பதிகம் பாடி வழிபட்டார். எனவே இறைவனே அவர் முன்பு தோன்றி நாவுக்கரசு என பெயர்சூட்டினார். பல தலங்களுக்கும் சென்று தேவாரம் பாடிய அப்பர் பெருமான் திருப்புகலூரில் சித்திரை சதய நாளில் இறைவனடி சேர்ந்தார். இவரது காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.
 
சிறப்பம்சம்: சிவனது தேவாரப் பாடல் பாடிய அப்பர் என்ற அழைக்கப்படும் திருநாவுக்கரசர் அவதரித்த தலம்.

அருள் மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில்

அருள் மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில்
 



மூலவர் :  ரேணுகாம்பாள்
தல விருட்சம் :  மாமரம்
தீர்த்தம் :  கமண்டலநதி
பழமை :2000 வருடங்களுக்கு முன்
ஊர் :  படவேடு
மாவட்டம் :  திருவண்ணாமலை
மாநிலம் :  தமிழ்நாடு
 
திருவிழா:ஆடி மாதம் - ஏழு வெள்ளிக் கிழமைகளும் இத்தலத்தில் மிகவும் விசேசமாக இருக்கும். இந்த விசேச நாட்களின் போது மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடுகிறார்கள். புரட்டாசி மாதம் - நவராத்திரி கொலு ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் போதும் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருக்கும். மார்கழி பூஜை, தைமாதம் வெள்ளிக்கிழமைகள் ஆகியவை இத்தலத்தில் சிறப்பான விழா நாட்கள் ஆகும். வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள், தீபாவளி, பொங்கல் ஆகிய தினங்களிலும் கோயிலில் சுவாமிக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.அப்போது கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவார்கள்.   
       
தல சிறப்பு:இங்கு அம்மன் (சிரசு மட்டும்) சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சக்தி பீடங்களில் இத்தலம் மிகவும் முக்கியமானது. மற்ற அம்மன் சன்னதிகளில் குங்குமம்தான் பிரசாதமாக தரப்படும். ஆனால் இங்கு குங்குமத்திற்கு பதில் வெட்டி எடுக்கப்பட்ட மண் பிரசாதமாக தரப்படுகிறது. இக்கோயில் அம்மன் கோயில் என்றாலும் சுற்றுச் சுவர்களில் சிங்க வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதில் இங்கு பசுவே உள்ளது. பொதுவாக அம்மன் சன்னதிகளில் பலிபீடம் முன்பு யாழி அல்லது சிங்கம் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் எருது உள்ளது.   
       
திறக்கும் நேரம்:காலை 6.40 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் , படவேடு. திருவண்ணாமலை மாவட்டம்.போன்:+91- 4181 - 248 224, 248 424.  

பொது தகவல்:சக்திக்குள் அனைத்தும் அடக்கம் என்பதற்கேற்ப இங்குள்ள மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் அரூபமாக அருள்பாலிக்கின்றனர். எனவே, அம்பிகையை வழிபட்டால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.   
       
பிரார்த்தனை:அம்மை கண்டவர்கள் இத்தலத்தில் வந்து வேண்டிக் கொள்கின்றனர். விரதமிருந்து இத்தலத்துக்கு வந்து தங்கி அம்மனுக்கு சேவை செய்து வந்து அதிக பட்சம் 3 அல்லது 5 நாட்களுக்குள் அம்மை இறங்கி விடுகிறது. தலத்தில் தரும் தீர்த்தத்தை உடல் மேல் தெளித்துக் கொள்கின்றனர். வேப்பிலை தண்ணீரை தீர்த்தமாக வாங்கிக் குடித்துவிட்டு அம்மனை வணங்கிச் செல்கிறார்கள். மேலும் திருமண வரம், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர்.எந்த வகை நோயானாலும் இங்கு வந்து வழிபட்டால் அம்மனின் அருளால் உடனே குணமடைவதாக இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர். குறிப்பாக கண் நோய், கண்பார்வை இல்லாதவர்கள் இங்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர்.
 
நேர்த்திக்கடன்:பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் நேர்த்திகடன்களாக எடைக்கு எடை நாணயம் செலுத்துகிறார்கள்(துலாபாரம்) , நெய்தீபம் ஏற்றுகின்றனர். சிலை கண்ணடக்கம், உருவ வகையறா, மற்றும் புடவை ஆகியவற்றையும் செலுத்துகிறார்கள். வேப்பிலையை மட்டும் உடையாக உடுத்திக் கொண்டு கோயிலை வலம் வருதல், அங்கபிரதட்சணம் செய்தல், மொட்டை அடித்தல், காதுகுத்தல், தொட்டில் கட்டுதல், ஆடு மாடு கோழி காணிக்கை செலுத்தல் ஆகியவை இத்தலத்தில் பக்தர்கள் செலுத்தும் முக்கியமான நேர்த்திகடன்களாகும். முகத்தில் உள்ள மருக்கள், பருக்கள் ஆகியன நீங்குவதற்காக வெல்லம் மிளகு ஆகியவற்றை செலுத்துகிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர் பரசுராமருக்கு தொட்டில் கட்டுகின்றனர். கோடிதீபம் ஏற்றுதல் இத்தலத்தில் மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.  
      
தலபெருமை: பொதுவாக அம்மன் தலங்களில் குங்குமம் தான் பிரசாதமாக தரப்படும். ஆனால் இங்கு மட்டும் வித்தியாசமாக மண்ணே திருநீராக தரப்படுகிறது. இத்தலத்தில் தரப்படும் மண் விசேசமானது. தானாக தோன்றியாதாகும். பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும். இந்த மண் இத்தலத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஜமதக்னி முனிவர் (அதாவத ரேணுகாதேவியின் கணவர்)வாழ்ந்ததாக கருதப்படும் ஆசிரமத்தில் அவர் யாகம் செய்த இடத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.

வருடாவருடம் ஆனித்திருமஞ்சனம் அன்று அந்த இடத்தில் பூமியில் பூத்திருக்கும் மண்ணை வெட்டி எடுத்து வந்து பக்தர்களுக்கு தரப்படுகிறது. பிணி, வயிற்றுவலி ஆகியவை குணமடையவும் குழந்தைவரம் கிடைக்கவும் இந்த மண்ணை தண்ணீரில் கலந்து பக்தர்கள் அருந்துகிறார்கள்.இவ்வாறு அருந்திய சிலதினங்களில் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

கருவறைச் சிறப்பு : இத்திருக்கோயிலின் கருவறையில் வேறெங்குமில்லாத வகையில் சிறப்பு அம்சமாக அன்னை ரேணுகாதேவி (சிரசு மட்டும்) சுயம்பு உருவமாகவும், பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அரூபங்களுடன் எழுந்தருளியுள்ளார்கள். மேலும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கமும், சிலா சிரசும், சுதையிலான அம்மன் முழு திருவுருவமும் கருவறையில் அமையப் பெற்றுள்ளது. மும்மூர்த்திகளுடன் எழுந்தருளியுள்ள அன்னை ரேணுகா தேவியை வழிபட மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் உண்டு.பரசுராமரின் சிலையும் கருவறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மன் இங்கு சுயம்புவாய் எழுந்தருளியிருப்பது முக்கிய சிறப்பம்சம். அதோடு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் உடன் கொண்டு பேருருக் கொண்டு உலகில் சக்தியே எல்லாமென எடுத்துக்காட்டி அருள்புரிந்து வருகிறாள். ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கமும் ஜனாகர்ஷண சக்கரமும் அமைந்துள்ளது சிறப்பாகும். ஞானியர் பலர் தவமிருந்து சித்திகள் பல பெற்றதும்இத்திருத்தலத்தில்தான். தொண்டை மண்டலத்து சக்தி தலங்களில் இத்தலம் முக்கியமான ஒன்றாகும்.

ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாம்பாளுக்கும் பிறந்த பரசுராமர் அவதரித்த தலம் இது. இது பரசுராமர் பிறந்த ஷேத்திரம் என்பதால் பரசுராம ஷேத்திரம் என்று இத்தலத்துக்கு பெயர். ஸ்தானத்தில் பரசுராமரின் சிலை தனியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் அம்மன் கோயில் என்றாலும் சுற்றுச் சுவர்களில் சிங்க வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதற்கு பதில் இங்கு பசுவே உள்ளது.

பொதுவாக அம்மன் சன்னதிகளில் பலிபீடம் முன்பு யாழி அல்லது சிங்கம் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் எருது உள்ளது. கணபதி முனிவர் இங்கு யாகம் செய்துள்ளார். அவர்தான் அம்பாளின் சிறப்பை வெளிக்கொணர்ந்தவர். அழகிய சிற்பங்கள் உள்ள அற்புதமான கோயில் இது.
 
தல வரலாறு:ரேணுகாதேவி இரைவத மகாராஜனின் மகளாக பிறந்து ஜமதக்னி முனிவரை மணம் முடித்து பரசுராமரை பெற்றெடுக்கிறாள். கணவரின் பூஜைக்கு கமண்டல நதியில் நீர் முகந்திடும்போது வானவீதியில் சென்ற கந்தர்வன் சாயையை நீரிலே கண்டு அவன் அழகில் மயங்கி ஆச்சர்யப்பட்டதால் மண்குடம் உடைந்து நீர் உடம்பெல்லாம் நனைந்ததை முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார். மகன் பரசுராமரை அழைத்து தாயின் தலையை வெட்டிக் கொண்டு வரும் படி கூற, அவ்வாறே அன்னையின் தலையை பரசுராமர் கொண்டுவந்தார். இருப்பினும் "பெற்ற தாயை வெட்டிய கையை வெட்டி விட்டேன்,' என்று கூற முனிவரும், "வரம் கேள்; தருகிறேன்,' என்று பரசுராமரிடம் கூறினார்.தன் தாயை உயிர்ப்பித்து கொடுக்கும்படி கேட்டார்.

முனிவர் கமண்டல நீரை மந்திரம் ஓதி தந்தார். அதைபெற்றுக் கொண்டு வெட்டுப்பட்டுக் கிடக்கும் தன் தாய் சடலம் அருகே சென்று தவறுதலாக தாயின் தலையை வேறொரு பெண்ணின் உடம்போடு ஒட்ட வைத்து தண்ணீரை தெளிக்க உயிர் பெற்றார். இதற்கிடையில் கார்த்தவீரிய அர்ச்சுனன் முனிவரிடம் இருந்த காமதேனுவை கேட்டும் தர மறுத்ததால் அவரைக் கொன்று காமதேனுவை கவர்ந்து செல்கிறான். கணவர் இறந்ததால் ரேணுகாதேவி உடன்கட்டை ஏறுகிறாள். அப்போது மழை பெய்ய கொப்புளங்களுடன் ஆடை இன்றி வேப்பிலை கட்டி மகன் பரசுராமனை சந்தித்தாள். பரசுராமன் வந்து கோபத்துடன் சென்று கார்த்தவீரியனை கொன்று சினத்துடன் திரும்ப,சத்திரிய குலம் முழுவதும் அழிக்க சபதமிடுகிறான்.

பின் சிவபெருமான் வந்து நடந்திருப்பது விதிச் செயல் என்று சமாதானம் செய்தார். பின் ஜமதக்னி முனிவரை உயிரத்தெழ செய்கிறார். அன்னை ரேணுகாதேவி சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டபடி சிரசு மட்டும் பிரதானமாகக் கொண்டு இப்பூலகில் பூஜைக் கருவாய் விளங்குவதோடு, உடலின் மற்ற பிரிவு முனிவருடன் சொர்க்கத்துக்கு சென்றது. இவ்வாறே அன்னை ரேணுகை இப்பூவுலகில் சிரசை மட்டுமே பிரதானமாக கொண்டு படவேட்டில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
 
சிறப்பம்சம்: இங்கு அம்மன்(சிரசு மட்டும்)சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

ஆழ்வார்களும் அவதாரமும் 8.திருமங்கையாழ்வார்

ஆழ்வார்களும் அவதாரமும்
8.திருமங்கையாழ்வார்

பிறந்த இடம் : திருக்குறையலூர் ( நாகப்பட்டினம் மாவட்டமசீர்காழி அருகில்)
தந்தை : ஆலிநாடுடையார்
தாய் : வல்லித்திரு அம்மையார்
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு நளஆண்டு கார்த்திகை மாதம்
நட்சத்திரம் : கார்த்திகை க்ருத்திகை (பவுர்ணமி திதி)
கிழமை : வியாழன்
எழுதிய நூல் : பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை,  பெரிய திருமடல், சிறிய   திருமடல்.
பாடிய பாடல் : 1253
சிறப்பு : திருமாலின் சார்ங்கம் என்ற வில்லின் அம்சமாக பிறந்தவர், மன்னனாகப் பிறந்து பக்தி மார்க்கத்தில் திளைத்தவர்.
பிற பெயர்கள் : ஆலிநாடன், கலியன், நாலுகவிப்பெருமாள், அருள்மாரி, மங்கையர்கோன், பரகாலன்

பெற்றோர்கள் இவருக்கு நீலன் என்று பெயரிட்டனர். இவரது வீரத்தில் மகிழ்ந்த மன்னன் நீலனை தன் படைத்தளபதி ஆக்கியதுடன் திருவாலி நாட்டின் மன்னனாகவும் ஆக்கினான். அமங்கலை என்ற தேலோக கன்னி கபில முனிவரின் சாபத்தால் பூமியில் குமுதவல்லி நாச்சியார் என்ற பெயரில் வளர்ந்து வந்தாள். இவளது புகழையும் அறிவையும் கேள்விப்பட்ட திருமங்கை ஆழ்வார் இவளை திருமணம் செய்ய விரும்பினார். விஷ்ணுவின் பக்தையான குமுதவல்லியோ தன்னை திருமணம் செய்ய வேண்டுமானால் தினமும் ஆயிரத்தெட்டு வைணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தாள். நிபந்தனையின் பேரில் அமுது படைத்து படைத்து அரண்மனையின் நிதி நிலை சரிந்தது. வழக்கமாக சோழமன்னனுக்கு கப்பம் கேட்டு வந்த ஏவலர்களிடம் தன் நிலையை கூறி அனுப்பி விட்டார். கோபமடைந்த மன்னன் அமைச்சர்களுடன் தன் படையை அனுப்பி ஆழ்வாரை பிடித்து வரும்படி கூறினான். ஆனால் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர். எனவே மன்னனே பெரும் படையுடன் சென்றான். ஆனாலும் ஆழ்வார் அவர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்தார். ஆழ்வாரின் வீரத்தில் மகிழ்ந்த மன்னன் அவரிடம் நேரில் சென்று பேச்சுப்படி கப்பம் கட்டுவதே சிறந்தது. அதுவரை என் கைதியாக கோயிலில் தங்கியிரு என்றார். மன்னன் கூறியபடி ஆழ்வாரும் மூன்று நாட்கள் எதுவும் சாப்பிடாமல் கோயிலில் தங்கியிருந்தார். பசி மயக்கத்தில் தூங்கிய ஆழ்வாரின் கனவில் தோன்றிய காஞ்சிபுரத்து பெருமாள். தன் சேவைக்கு வந்தால் அவரது கடன் தீர்க்கும் வகையில் பொருளுதவி செய்வதாக கூறினார். மன்னனின் அனுமதி பெற்று படையினருடன் காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார். பெருமாள் கூறிய இடத்தில் தோண்டவும் பெரும் புதையல் இருந்தது. அதை எடுத்து மன்னனுக்குரிய கடனை அடைத்து விட்டு மீதியை அமுது படைக்க வைத்துக்கொண்டார். இதையறிந்த மன்னன் ஆழ்வாரைப் பணிந்து பணத்தை திருப்பிக்கொடுத்து அமுது படைக்கவைத்துக் கொள்ள கூறினார். இந்தப்பணமும் தீர்ந்து போகவே ஆழ்வார் தன் அமைச்சர்களுடன் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து அமுதுபடைத்து வந்தார். ஒரு முறை நாராயணன் லட்சுமி தேவியுடன் மணக்கோலத்தில் வந்தார். ஆழ்வார் தன் படையினருடன் அவர்களை மிரட்டி அவர்களது நகைகளை பெற்றுக்கொண்டார். ஆனால் தன் கால் விரல் மோதிரத்தை மட்டும் நாராயணன் கழட்டவில்லை. ஆழ்வாரும் மோதிரத்தை கழட்டும் படி கூறியதற்கு என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள் என்றார் நாராயணன். அதேபோல் ஆழ்வாரும் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து மோதிரத்தை இழுத்தார். அப்போது நாராயணன் ஆழ்வாரின் காதுகளில் நாராயண மந்திரத்தை உபதேசித்தார். வந்திருப்பது நாராயணன் என்பதை அறிந்த ஆழ்வார் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். ஆழ்வார் திருடனாக இருந்தாலும் தன் உணவுக்கு கூட அதை எடுக்காமல் யாசித்து சாப்பிட்டார். பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று 46 கோயில்களையும் மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து 36 கோயில்களையும் என மொத்தம் 82 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.  12 ஆழ்வார்களில் இவர் தான் அதிக பெருமாள் திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வரலாற்றில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவர் மொத்தம் 82 பெருமாள் கோயில்களை மங்களாசாசனம் செய்திருந்தாலும் தான் பிறந்த சொந்த ஊரான திருக்குறையலூரில் உள்ள பெருமாள் கோயிலை மங்களாசாசனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில்

அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில்


 
மூலவர்    :     குமாரர்சுவாமி
உற்சவர்    :     இலஞ்சிக்குமாரர்
தல விருட்சம்    :     மகிழம்
தீர்த்தம்    :     சித்ராநதி
ஆகமம்/பூஜை     :     மகுட ஆகமம்
பழமை    : 2000 வருடங்களுக்கு முன்
ஊர்    :     இலஞ்சி
மாவட்டம்    :     திருநெல்வேலி
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள்:அருணகிரியார்
திருவிழா:சித்திரையில் 10 நாள், கந்தசஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, ஆவணி பவித்ரஉற்சவம், நவராத்திரி, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி.      
             
தல சிறப்பு:அகத்தியரால் வெண்மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இங்கு இருவாலுக நாயகராக அருள்பாலிக்கிறார்      
             
திறக்கும் நேரம்:காலை 6.15 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.     
முகவரி:அருள்மிகு திருஇலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி -627805 திருநெல்வேலி.போன்:+91-4633-283201,226400,223029     

பொது தகவல்:இங்கு சுவாமிக்கு செய்யப்படும் அபிஷேகத்திற்கு தேவையான பால் அப்பகுதியில் வசிக்கும் பக்தர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டே செய்யப்படுகிறது. குமாரரின்  வாகனமான மயில் அவருக்கு இடது புறத்தில் வடக்கு நோக்கியபடி உள்ளது.குமாரருக்கு இடப்புறம் அகத்தியரால் மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இருவாலுக நாயகராகவும், அவரது உமையாள் இருவாலுக ஈசர்க்கினியாளாகவும் இருந்து அருள் புரிகின்றனர்.      
             
பிரார்த்தனை:திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் சிறக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக இங்கு வேண்டிக்கொள்ளப்படுகிறது.

நேர்த்திக்கடன்:வேண்டிக்கொண்ட செயல்கள் நிறைவேறிட சுவாமிக்கு முடிக்காணிக்கை செலுத்தி பால் அபிஷேகம் மற்றும் விசேஷ அர்ச்சனை, ஆராதனைகள் செய்யப்பட்டு காவடி எடுக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் கிடைத்தவர்கள் குழந்தைகளை தத்து கொடுத்து வாங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.     
            
தலபெருமை:சிவபெருமானின் திருமணம் காண யாவரும் கைலாயம் சென்றதால் பூமி வடக்கே உயர்ந்து தெற்கே தாழ்ந்திட அதனைச்சமப்படுத்த அகத்தியர் தெற்கே வந்தார். சிவனின் திருமணத்தைக்காண அவர் விரும்பிடவே திருக்குற்றாலநகரில் இருக்கும் தம்மை பூஜிக்க திருமணமும், நடனக்காட்சியும் அவருக்கு கிட்டும் எனக்கூறி  அருள்புரிந்தார். அதன்படி, அகத்தியமுனிவர் திருக்குற்றாலம் வந்தார். அங்கோ சங்குவடிவிலான பெருமாள் கோயில் இருந்தது. சிவனடியாரான அவர் அக்கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எனவே இவர் இலஞ்சி வந்து சிவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க அருளும்படியாக குமாரரை வேண்டினார். குமரப் பெருமானும் அருள் வழங்க, அகத்தியர் சிற்றாற்றின் கரையில் குமாரருக்கு அருகிலேயே வெண்மணலை குவித்து பூஜை செய்தார். அவ்வாறு, மணலைக்குவித்து அகத்தியர் பூஜை செய்த லிங்கம், இருவாலுக நாயகர்  ( பெருமை பொருந்திய அகத்தியரால் வெண்மணல் கொண்டு செய்யப்பட்டவர்) எனும் திருப்பெயரால் அழைக்கப்படுகிறார். அதன்பின், அவர் திருக்குற்றாலம் சென்று வைணவ வேடம் பூண்டு அரியை, அரனாக மாற்றி வணங்கினார். இவ்வாறு சிவபெருமானை வழிபட அகத்தியருக்கு அருளியவராக இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் திகழ்கிறார். இத்தலத்தில் இருக்கும் விநாயகர் செண்பகவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

இலஞ்சியில் வீற்றிருக்கும் குமாரர்,  கட்டிளமைக் கோலத்தில் அருள்புரிகிறார். இவருக்கு தோசை, அப்பம், வடை நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. பிரமதேவரும், இந்திரனின் குமாரரை வணங்கி அருள்பெற்றுச்சென்ற பெருமை பெற்ற தலம். இவரை அருணகிரியார் தனது திருப்புகழில் "வரதராஜப்பெருமாள்' என்ற சிறப்புப்பெயர் கொண்டு அழைத்து சிறப்பித்துள்ளார்.      
             
தல வரலாறு:பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரம்மபுத்திரரான காசிப முனிவர், திருமாலின் அம்சம் பொருந்திய கபிலமுனிவர் சீகண்ட பரமசிவத்தினின்று தோன்றிய துர்வாசமுனிவர் ஆகியோர் திரிகூடாசலமலையின் வடகீழ்திசையில் ஒன்று கூடி உலகின் பல்வேறு தத்துவப்பொருளையும், அதன் நுணுக்கங்களையும் பற்றி கூடிப்பேசி  ஆராய்ந்தனர். அப்போது, அவர்களுக்குள் இவ்வுலகம் உள் பொருளா? அல்லது இல்பொருளா? என்ற வினா எழுந்தது. கபிலர், உலகம் இல்பொருளே எனக்கூறி தனது கருத்தை வலியுறுத்தினார். ஆனால் காசிபரும், துர்வாசரும் உலகம் முத்தொழில் செய்யும் கடவுளர் இல்லாது இல்பொருள் தோன்றாது. ஆகவே, உலகம் உள்பொருளே என்றனர். அவர்களின் கருத்தை கபிலர் ஏற்றுக்கொண்டார். பின் அவர்கள் உள்பொருளான உலகின் உண்மைப்பொருள் யார் ? என ஆராய்ந்தனர். அப்போது, கபிலர் உண்மையான உள்பொருள் திருமால் என்றார். அதனை மறுத்த காசிபர் உள்பொருள் பிரம்மனே என்றும், உருத்திரனே என்று துர்வாசரும் வாதிட அவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. அப்போது, உண்மை விளங்கிட முடிவு கூறும்படி துர்வாசர் முருகக்கடவுளை வேண்டினார்.  

அவரது வேண்டுகோளை ஏற்ற முருகப்பெருமான், இளமைப்பருவமுடையோனாய் அவர்கள் முன் தோன்றினார் அவர் "யாமே விதியாக நின்று படைப்போம், அரியாக நின்று காப்போம், மற்றையோராக நின்று அழிப்போம் என மூவினையும் செய்யும் மும்மூர்த்தியாக அவர்களிடம் தன்னை அவதரித்துக் காட்டி தானே முக்காலமும் செய்பவன் என அவர்களுக்கு உணர்த்தினார். அதன்பின், அவரை வணங்கிய மும்முனிவர்கள் இவ்விடத்தில் எழுந்தருளி தமக்கு அருள் புரிந்தது போல, இவ்விடத்திலேயே இருந்து வழிபடுவோருக்கு ஞானம் கொடுத்து, விரும்பும் வரம் தருதல் வேண்டும் என்று வேண்டினர். அவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த குமாரர், இவ்விடத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார்      
             
சிறப்பம்சம்:    அதிசயத்தின் அடிப்படையில்: அகத்தியரால் வெண்மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இங்கு இருவாலுக நாயகராக அருள்பாலிக்கிறார்.

கவிராஜ காளமேகம்!

கவிராஜ காளமேகம்!

கல்வி இருக்குமிடத்தில் செல்வம் இருக்காது. செல்வம் இருக்கும் இடத்தில் கல்வி இருக்காது. அதாவது... கலைமகள் இருக்கும் இடத்தில் அலைமகள் இருக்கமாட்டாள் அலைமகள் இருக்கும் இடத்தில் கலைமகள் இருக்கமாட்டாள்! பெரும் தமிழ்க்கவிஞர்கள் எல்லாம் சாப்பாட்டுக்கே திண்டாடிய கதையை அறிந்தால் இது உண்மை என்பது புலப்படும். தமிழ் வளர்த்த அந்த புலவர்களில், பலரது பெயர்கள்கூடத் தெரியாமல் போய் விட்டன. தெரிந்த புலவர்களின் பாடல்களும் அர்த்தம் தெரியாததால், அநாதைகளாகிப் போய்விட்டன. அப்படி அந்த புலவர்கள் எல்லாம், தாம் வறுøயில் நாடி உருக்குலைந்து போனாலும், தங்கள் தமிழைத் துருப்பிடிக்க விடவில்லை. அவர்களில் ஒருவர் தன்னுடைய நிலையை வெளிப்படுத்திய பாடல் இது. இந்திரனில் ஆரம்பித்து, குபேரனில் முடித்திருக்கிறார் பாடலை!

இந்திரன் கலையாய் என் மருங்கு இருந்தான். அதாவது, இந்திரன் என் இடுப்பில் ஆடையாக இருந்தான் என்கிறார் புலவர். இந்திரன் இவ்வாறு ஆடையாக மாறி அடுத்தவரை அலங்கரித்ததாக இதிகாச புராணங்கள் எதிலும் இல்லை. பிறகு புலவர் ஏன் அவ்வாறு சொல்ல வேண்டும். கவுதம முனிவரின் சாபத்தின் காரணமாக இந்திரனுக்கு உடம்பில் ஆயிரக்கணக்கான கண்கள் இருந்தன. அதனாலேயே அவனுக்கு ஸகஸ்ராட்சன் என்ற பெயரும் உண்டு. அவன் வந்து எனக்கு ஆடை (வேட்டி)யாக இருந்தான் என்றால்... எனது வேட்டியிலும் ஆயிரம் கண்கள் (ஓட்டைகள்) உள்ளன. அதாவது பீற்றல் வேட்டி என்கிறார் புலவர்! அடுத்து... துணிக்கே வழியில்லாதபோது, சோற்றுக்கு எங்கே போவது? ஜீரணம் செய்வதற்கு ஏதுமில்லாததால், அக்னி பகவான் என் வயிற்றில் எரிந்து கொண்டிருக்கிறான் என்கிறார்.

தொடர்ந்து அவர், இவ்வாறு துணிக்கும் சோற்றுக்கும் வழியில்லாமல் திரியும் என்னிடம் யமன் கூடப் பக்கத்தில் வர மாட்டான் என்கிறார். அந்த புலவரைப் பார்த்ததும், சிவபெருமான் பிட்சாடன மூர்த்தியாக வருவதைப் போல இருக்கும். ஏற்கனவே மார்க்கண்டேயனைப் பிடிக்கப் போய், சிவபெருமானிடம் உதைபட்டது அவனுக்கு நினைவுக்கு வராதா என்ன? அந்த எண்ணத்தில்தான் யமன் கூட அருகில் வரமாட்டான் இந்த நிலையில் நிருதி - வாயு பகவான்தான் (தென்மேற்கு திசைக்கு அதிபதி) என்னிடம் வந்து, என்ன செய்யப் போகிறான்? வரமாட்டான்! உடல்மெலிந்து உள்ளம் உடைந்து இருக்கும் தன் பக்கம் காற்று கூட வீசாது என்கிறார் புலவர். வருணனோ என் இருக் கண்களையும் விட்டு அகலாமல் இருக்கிறான் என்கிறார். அதாவது அவர் கண்களில் இருந்து எப்போதும் கண்ணீர் வழிந்துகொண்டிருக்கிறது என்பது பொருள். இப்படிக் கண்ணீர் விட்டுக்கொண்டே இருந்தால், கட்டிய மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பசிக்காதா என்றால்... நானும் என் மனைவி- மக்களும் காற்றையே உணவாகக் கொள்கிறோம் என்கிறார் புலவர். அதாவது, உண்ண ஏதுமில்லை என்பது பொருள்.

இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் எனக்கு இணையாக, இந்த உலகில் யார் இருக்கிறார்கள்? என்று கேட்பவர், எப்போதும், இப்படி பெருமைகளை வரிசையாகப் பெற்று தரித்திர ராஜனைத் தலை வணங்கி நிற்கும் என்னைக் காப்பாற்றவேண்டியது, மன்னா... உனது பொறுப்பு. அதைச் செய்தால், உன்னை ஈசனாகவே நினைப்பேன் என்று பாடலை முடிக்கிறார் புலவர். திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியை நேருக்கு நேராகத் தரிசித்தவர், தமிழ் புலவர்களில் எமகண்டம் பாடிய ஒரே புலவர்... கவிராஜ காளமேகம்!

அவர் எழுதிய அந்தப் பாடல்...

இந்திரன் கலையாய் என் மருங்கு இருந்தான்
அக்கினி உதரம் விட்டு அகலான்
எமன் எனைக்கருதான் அரன் எனக் கருதி
நிருதிவந்து என்னை என் செய்வான்
அந்தமாம் வருணன் இருகண் விட்டு அகலான்
அகத்துறு மக்களும் யானும்
அனிலமதாகும் அமுதினைக் கொள்வோம்
யார் எனை உலகினில் ஒப்பார்
சந்ததம் இந்த வரிசையைப் பெற்றுத்
தரித்திர ராசனை வணங்கித்
தலை செயும் என்னை நிலை செய் கல்யாணிச்
சாளுவத் திருமலைராயன்
மந்தர புயனாங் கோப்பய னுதவு
மகிபதி விதரண ராமன்
வாக்கினால் குபேரனாக்கினால் அவனே
மாசிலா ஈசனாவானே

இந்தப் பாடலில், அஷ்டதிக்குப் பாலகர்கள் எண்டிசைக் காவலர்கள் எனப்படும் எட்டு பேர்களின் பெயர்களைச் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. அறிஞர்களை, அறிவாளிகளை, கல்விமான்களை ஆதரிக்காத நாடு, எந்த வகையில் முன்னேறியிருந்தாலும் அது முன்னேற்றம் ஆகாது. ஆதரிக்க வேண்டியது அரசனின் கடமை. இந்தக் காலத்தில் அரசர்கள் ஏது? எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதற்கு ஏற்ப, நல்லோரை ஆதரிப்பது, நம் எல்லோரது கடமையும் ஆகும்.

அருள் மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில்


அருள் மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில்
 
மூலவர்: காலடியப்பன் (ஸ்ரீ கண்ணன்)
தல விருட்சம் : பவளமல்லி
தீர்த்தம் : பூர்ணாநதி
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : சசலம்
ஊர் : காலடி
மாவட்டம் : எர்ணாகுளம்
மாநிலம் : கேரளா
 
திருவிழா: அட்சய திரிதியை, ஆண்டு தோறும் கண்ணன் பிரதிஷ்டை திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழாவின்போது, தினமும் அபிஷேகம், கலசாபிஷேகம், நவதானிய பூஜை நடக்கும். திருவோணம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, மகரசங்கராந்தி ஆகிய விழாக்களும் கொண்டாடப்படுகிறது. வியாழக்கிழமை இங்கு விசேஷ நாள்.   
       

சிறப்பு: இந்துக்களின் புனித பூமியான இங்கு இந்துக்கள் அனைவரும் சென்று தரிசிக்க வேண்டும். இங்குள்ள கண்ணன் விக்ரகம் 3.5 அடி உயரத்தில் "அஞ்சனா' எனும் கல்லால் ஆனது. இந்தக்கல்லில் இரும்பு, தாமிரம் அதிக அளவில் கலந்திருப்பதால் இதற்கு சக்தி அதிகம். பெருமாள் தலங்களிலேயே குருவாயூரில் உள்ள கண்ணன் சிலையும், இங்கும் மட்டுமே "அஞ்சனா' கல்லில் ஆன விக்ரகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.   
       
திறக்கும் நேரம்:காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:நிர்வாக அறங்காவலர், அருள்மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில் காலடி தேவஸ்தானம், ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், காலடி, - 638 574. எர்ணாகுளம் மாவட்டம். கேரளா மாநிலம்.   
போன்: +91- 93888 62321.  
      
பொது தகவல்:கண்ணனின் வலது பக்கம் சிவன்,பார்வதி,கணபதி அருள்பாலிக் கின்றனர்.நமஸ்கார மண்டபத்தில் பரசுராமர் ஆதிசங்கரர் இருவரது சன்னதிகள் உள்ளன. இங்கு தொடர்ந்து தீபம் எரிந்து கொண்டிருக்கிறது.சுற்றுப்பகுதியில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார்.
 
பிரார்த்தனை:குழந்தைபாக்கியம் வேண்டுபவர்கள் நமஸ்கார மண்டபம் அருகே நின்று கண்ணனை வேண்டிக்கொள்கிறார்கள்.இங்குள்ள சின்னக்கண்ணனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் திருமணத்தில் தடை உள்ளவர்கள் குழந்தைபாக்கியம் வேண்டுபவர்கள் வியாபார விருத்தி, கல்வி நடனத்தில் மேன்மை அடைய விரும்புபவர்கள் இங்கு நடக்கும் நவதானிய பூஜையில் கலந்து கொள்வார்கள்.
 
 நேர்த்திக்கடன்:பிரார்த்தனை நிறைவேறியவுடன் குழந்தையுடன் வந்து தொட்டில் கட்டுகிறார்கள். அத்துடன் குழந்தையை சன்னதி படிக்கட்டில் வைத்து காணிக்கை செலுத்தி எடுத்து செல்கிறார்கள்.  
      
தலபெருமை:தர்மத்தையும் நீதியையும் விட கருணையே பெரியது என நிலைநாட்டியவர் ஆதிசங்கரர்.இவரது குலதெய்வம்தான் கேரள மாநிலம் காலடியில் வீற்றிருக்கும் "திருக்காலடியப்பன்'. கண்ணபரமாத்மா தான் திருக்காலடியப்பனாக இங்கு அருள்பாலிக்கிறார்.தீவினைகளை கருணையால் மாய்த்த ஆதிசங்கரர் உலகுக்கே உபதேசம் செய்து "ஜகத்குரு' ஆனார்.அவரது குலதெய்வமான திருக்காலடியப்பன் இத்தலத்தில் உன்னி கிருஷ்ணனாக (சின்னக் கண்ணன்) அருள்பாலிக்கிறார்.இங்குள்ள கண்ணன் விக்ரகம் 3.5 அடி உயரத்தில் "அஞ்சனா'எனும் கல்லால் ஆனது. இந்தக்கல்லில் இரும்பு தாமிரம் அதிக அளவில் கலந்திருப்பதால் இதற்கு சக்தி அதிகம்.பெருமாள் தலங்களிலேயே குருவாயூரில் உள்ள கண்ணன் சிலையும் இங்கும் மட்டுமே "அஞ்சனா' கல்லில் ஆன விக்ரகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோயில் அமைப்பு : மூலவரான திருக்காலடியப்பன் வலது கையில் வெண்ணெய் வைத்துள்ளார்.இடதுகை இடுப்பில் இருக்கிறது.வலது மேல்கையில் சக்கரம் இடது மேல்கையில் சங்கு வைத்திருக்கிறார்.  பெருமாள் கோயில்களில் கண்ணனின் அருகில் சிவ பார்வதி அருள்பாலிப்பது இங்கு மட்டும் தான் என்கின்றனர். இதன் அருகே தலவிருட்சமான பவளமல்லி உள்ளது.நுழைவு வாயில் முழுவதும் பித்தளை தகடு பதிக்கப்பட்டுள்ளது.இதில் குழலூதும் கண்ணனும் அமர்ந்த நிலையில் ஆதிசங்கரரும் அருளுகின்றனர். கோயிலின் எதிரில் சங்கரரின் தாய் ஆரியாம்பாள் சமாதி உள்ளது.

ஒரு அட்சய திரிதியை நாளில் தான் மகாலட்சுமி இங்கு தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தாள்.அதன் காரணமாக ஆண்டு தோறும் அட்சய திரிதியை நாளில் இங்கு கனகதாரா யாகம் சிறப்பாக நடக்கிறது.சங்கரர் வாழ்ந்த 32 ஆண்டை நினைவுபடுத்தும் வகையில் 32 நம்பூதிரிகள் இந்த யாகத்தை நடத்துகின்றனர்.யாகத்தின் முடிவில் பணம் செலுத்தியவர்களுக்கு பிரசாதமாக  தங்கநெல்லிக்கனியும் வெள்ளி நெல்லிக்கனியும் யந்திரமும் வழங்குகிறார்கள்.ஐயப்பன் சன்னிதானத்தின் முன்னால் "தத்வமஸி'என்று எழுதப்பட்டிருக்கும். "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் இருக்கிறார்'என்பது இதன் பொருள்.தத்வமஸி கொள்கையை அத்வைதமாக உலகிற்கு வழங்கியவர் ஆதிசங்கரர்.அவர் அவதரித்த காலடி தலத்தையும் அங்குள்ள திருக்காலடியப்பன் கோயிலையும் ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டும்.
 
தல வரலாறு:இவர் சிவனின் அம்சமாக அவதரித்தவர்.கேரள மாநிலம் காலடியில் வசித்து வந்த சிவகுரு ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு வெகு  நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.இவர்கள் திருச்சூர் வடக்குநாதரிடம் குழந்தை வேண்டி வழிபட்டனர்.சிவனின் கருணையால் கி.பி.788ல் இந்த தம்பதியினருக்கு ஆதிசங்கரர் அவதரித்தார்.சங்கரரின் 3வது வயதில் அவரது தந்தை காலமானார். உறவினர்கள் உதவியுடன் சங்கரர் 5 வயதிற்குள் சாஸ்திரங்களை பயின்றார்.7 வயதிற்குள் வேதங்களை பயின்ற சங்கரர் திருமணம் செய்யாமல் தன் தாய்க்கு பணிவிடை செய்து வந்தார்.பின்னர் தாயின் அனுமதியை சமயோசிதமாகப் பெற்று, துறவு மேற்கொண்டார்.

பொன் மழை : சங்கரர் தனது குருகுல வாசத்தின் போது தினமும் பிட்சை எடுத்து குருவிற்கு அர்ப்பணித்த பிறகு, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த சங்கரர் மறுநாள் துவாதசி திதியில் பிட்சை கேட்டு அயாசகன் என்ற ஏழை வீட்டு வாசலில் நின்று"பவதி பிட்சாம்ம் தேஹி' என்றார்.வெளியே வந்த பெண்மணியிடம் உணவேதும் இல்லை. ஆயினும் தன்னிடம் உணவு கேட்டு வந்த பாலகனை வெறும் கையுடன் அனுப்ப மனமில்லாமல் காய்ந்து போன நெல்லிக்கனியை தானமாக வழங்கினாள்.சங்கரரின் கண்கள் குளமாகின.பிஞ்சு பாலகனின் நெஞ்சை உலுக்கிய இந்த செயல் உணர்ச்சி பிழம்பாக உருவெடுத்தது. உடனே சங்கரர் அந்த பெண்ணின் வறுமையை போக்க நினைத்து தன் குலதெய்வம் மகாவிஷ்ணுவின் மனைவி மகாலட்சுமியை குறித்து ஸ்தோத்திரம் பாடி துதித்தார்.19வது ஸ்தோத்திரம் பாடி முடித்தபோது, மகாலட்சுமியின் கருணையால் ஏழை பெண்மணி வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தது.அதுவே "கனகதாரா ஸ்தோத்திரம்' என பெயர் பெற்றது.

காலடி பெயர்க்காரணம் : சங்கரரின் தாய் தினமும் நீண்ட தூரம் நடந்துசென்று பெரியாறு ஆற்றில் குளித்து அங்கிருந்த கண்ணனை தரிசனம் செய்து வந்தார். வயதாகிவிட்டதால் அவரால் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை.ஆனால் பெரியாற்றில் குளிக் காமல் இருக்கவும் முடியவில்லை.அம்மாவின் நிலை குறித்து சங்கரருக்கு வருத்தம் உண்டானது.அவரது ஆசையை நிறைவேற்ற கண்ணனை பிரார்த்தனைசெய்தார்.அப்போது அசரீரி தோன்றி"குழந்தாய்! நீ உனது காலால் அடி வைக்கும் இடத்தில் பெரியாறு உன்னைத்தேடி வரும்''என ஒலித்தது.என்ன ஆச்சரியம்? சங்கரர் காலால் அடி வைத்த உடனேயே ஆறு ஊருக்குள் புகுந்தது.அப்பழுக்கற்ற பெரியாறு நதி சங்கரரின் தாய் இருக்கும் இடம் தேடி ஓடி வந்தது. அதுவரை "சசலம்' என்ற பெயருடன் விளங்கிய கிராமம் இந்த நிகழ்ச்சிக்கு பின் "காலடி' என பெயர் பெற்றது.தன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றிய தன் குலதெய்வத்திற்காக, கி.பி 795ல் தானே ஒரு கோயில் கட்டி அதில் திருக்காலடியப்பனை பிரதிஷ்டை செய்தார் சங்கரர்.புதிய வழியில் ஓட ஆரம்பித்த பெரியாறு"பூர்ணா'என பெயர் பெற்றது.இதில் தான் முதன் முதலில் திருக்காலடியப்பனுக்கு ஆறாட்டு விழா நடந்தது.அன்று முதல் சங்கரரின் தாய் இங்கேயே குளித்து கண்ணனை வணங்கினார்.

முதலைக்கு முக்தி : ஒருநாள் சங்கரர் பூர்ணா நதியில் குளித்துக்கொண்டிருந்தார்.அவரது தாய் கரையில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு முதலை சங்கரரின் காலை கவ்வியது.தாயின் கண்முன்னே இந்த சம்பவம் நடந்ததும் அலறிவிட்டார். கிராமமே திரண்டது.கொஞ்சம் கொஞ்சமாக முதலையின் வாய்க்குள் சங்கரரின் உடல் செல்ல தொடங்கியது.என்ன நடக்க போகிறது என்பதை அறிந்தார் சங்கரர். சந்நியாசம் வாங்கினால் தான் முதலை விடும்.இல்லாவிட்டால் விழுங்கிவிடும் என்பதை தாயிடம் கூறினார்.மகன் உயிர்பிழைத்தால் போதும் என்பதால் சந்நியாசத்திற்கு அனுமதி அளித்தார். உடனே முதலை சங்கரரை விடுவித்தது. முன்காலத்தில் துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான ஒரு கந்தர்வனே முதலையாக மாறி அந்த ஆற்றில் கிடந்தான்.ஆதிசங்கரரின் ஸ்பரிசம் கிடைத்ததும் சாபவிமோசனம் பெற்றான்.இந்த ஆற்றில் குளித்து கண்ணனை வணங்கினால் சகல பாவங்களும் விலகும் என்பது நம்பிக்கை.
 
அடிப்படையில்: இங்குள்ள கண்ணன் விக்ரகம் 3.5 அடி உயரத்தில்"அஞ்சனா' எனும் கல்லால் ஆனது. இந்தக்கல்லில் இரும்பு தாமிரம் அதிக அளவில் கலந்திருப்பதால் இதற்கு சக்தி அதிகம். பெருமாள் தலங்களிலேயே குருவாயூரில் உள்ள கண்ணன் சிலையும் இங்கும் மட்டுமே"அஞ்சனா' கல்லில் ஆன விக்ரகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கந்தசஷ்டி விரதமும் அதன் சிறப்பும்

கந்தசஷ்டி விரதமும் அதன் சிறப்பும்
 
முருகன் துணை

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
"அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி"

சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்/ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும்.

அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம். முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம் என்பனவாம். வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.

 

அனாதியாகவே "செம்பில் களிம்பு போன்று" ஆன்மாக்கள் ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து, இறுதியில் பிறப்பு, இறப்பு அற்ற மோட்ச நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தற்கேயாகும். எனவே முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்ம வினைகளை மிக விரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம்.

ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால் "ஒப்பரும் விரதம்" எனஸ்கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசுகின்றது.

கந்தசஷ்டி விரதம்; எல்லா முருகன் ஆலயங்களிலும் அதிவிஷேச அபிஷேக ஆராதனைகள், பூசைகள் நிறைந்த பக்தியான விரதமாக அனுஸ்டிக்கப் பெறுவதுடன் சூரன்போர் காட்சியும் வெகுசிறப்பாக நிகழ்தப்பெறுகின்றன.

முருகன் ஆலயத்தில் பக்தர்கள் உண்ணா நோன்பிருந்து; பக்திசிரத்தையுடன் முருகனை நினைந்துருகி வழிபட்டு, தியானத்திலும், பஜனை செய்வதிலும், கந்தரனுபூதி, கந்தசஷ்டிகவசம், கந்தரலங்காரம் ஓதுவதிலும், கந்தபுராணம்-பயன் கேட்பதிலும் தம்மை ஈடுபடுத்தி முருகனருள் வேண்டி நிற்பர்.

அத்துடன்; விரத முடிவு தினமான சஷ்டிதினம் (சூரன்போரில்) முருகன் வீசும் வேல் குறிதவறாது சூரனின் சகோதரர்களான; யானை முகம் கொண்ட தாரகன், சிங்க முகம் கொண்ட சிங்கன் கழுத்தில் வீழ்ந்து தலைகள் சாய்வதும்; பல மாயைகள் செய்து போர்புரிந்து கடைசியாக, நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரன்-பதுமனை சங்காரம் "சங்கரன் மகன் சட்டியில் மாவறுப்பதை" (சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாகதோன்றிய சூரனை, இரண்டாக பிளந்து சாங்காரம் செய்யும் காட்சியை கண்டு) தரிசித்து தம் வினை போக்க பக்தர்கள் காதலாகி கசிந்துருகி நிற்கும் காட்சியும், கண்கொள்ளாக் காட்சிகளாகும்.

கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்துஇருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது.

கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப் போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.

சகல செல்வங்களையும், சுகபோகங்களையும் தரவல்ல இந்த விரதம் புத்திரலாபத்துக்குரிய சிறப்பான விரதமுமாகும்."சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பதற்கேற்ப; ஸ்கந்தஷஷ்டியில் விரதமிருந்தால் ”அகப் பையாகிய"கருப்பையில்" கரு உண்டாகும் என்பதும்; கந்தர் சஷ்டி விரதத்தை முறையாகக் கைக்கொள்வதால் அகப்"பை" எனும்"உள்ளத்தில்" நல்ல எண்ணங்களும் பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் என்பதும் மறை பொருள்களாகும்.

அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானம் உதவுவதைப் போன்று மன வளர்ச்சிக்கு சமயம் அடிகோலுகின்றது. இறைவன் ஒருவன், அவன் மக்களின் தந்தை என்றெல்லாம் போதிப்பதன் மூலம் அன்பு, சகோதரத்துவம் போன்ற ஜீவ ஊற்றுகளை அருளி மக்களின் வாழ்வு நலம் பெறச் சமயம் உதவுகின்றது. நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அடக்கவும் தர்மத்தை நிலை நாட்டவும் யுகந்தோறும் இறைவன் அவதாரம் செய்தருளுகின்றான்.

தனு, கரண, புவன, போகங்கள் அனைத்தையும் படைத்தலும், காத்தலும், அழித்தலும் இறைவனது இடையறாத திருவிளையாடல்கள். இறைவனை உணர்ந்து அவனைச் சரணடைந்தால் அழிவில்லாத பேரின்பம் அடையலாம் என்பது சமயங்கள் காட்டும் பேருண்மை. இறைவனது திவ்ய அவதாரத்தையும் செயலையும் யாரொருவர் உள்ளபடி அறிகின்றார்களோ அவர்கள் மீண்டும் பிறவாமல் இறைவனையே அடைந்து விடுகிறார்கள் என்று கீதையில் கிருஷ்ணபகவான் கூறியுள்ளார்.

தெய்வ அவதாரங்களில் தீய சக்திகளை அடக்கி நல்லவர்களைக் காத்தார்கள் என்றால் இச்செயல்கள் தீமைகளை நீக்கி நன்மைகளையே செய்து மக்கள் உய்ய வேண்டும் என்று போதிப்பதற்கே நிகழ்ந்தன என உணர்ந்து பக்தியுடன் வாழ்ந்து இகபர நலன்களை அடைய முயலவேண்டும். இத்தகைய அவதார இரகசியத்தை விளக்கி மக்கள் உய்வதற்கு உகந்த பெருவழிகளை விளக்கிக் காட்டுவதே ஆறுமுகப்பெருமானின் அவதாரம்.

வசிட்ட மாமுனிவர் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு சஷ்டி விரத மகிமையையும் வரலாற்றையும் விதிமுறைகளையும் உபதேசித்த பெருமையையுடையது. அரசர்கள், தேவர்கள், முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து வேண்டிய வரங்களைப் பெற்றதோடு, இம்மை இன்பம், மறுமை இன்பம் ஆகியவற்றை பெற்றனர்.


ஐயப்பன் வரலாறு

சபரிமலை ஐயப்பன் வரலாறு

ஓம் அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும் செய்த
ஸகல குற்றங்களையும் பிழைகளையும்
பொறுத்துக்காத்து ரட்சிக்க வேண்டும்
ஓம் ஸ்ரீ ஸத்யமான பொன்னு பதினெட்டாம்படி
மேல் வாழும் வில்லாளி வீரன் வீரமணி கண்டன்
காசி இராமேஸ்வரம் பாண்டி மலையாளம்
அடக்கி ஆளும் ஓம் ஸ்ரீ ஹரிஹரசுதன்
ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா..

 ஐயப்பன் வரலாறு : ஐயப்பன் அருள் பல அருள்பவன். புலியை வாகனமாகக் கொண்டவன். தவக் கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன்.

ஐயப்பன் வரலாறு பற்றி கூறப்படுவதாவது: கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார் அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார். குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும் தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம்உண்டல்லவா? பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொரளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர். வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும்தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா என மகிழ்ந்து அந்த குழந்தையை அரண்மனை கொண்டு சென்றான். அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள். ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால் குழந்தைக்கு மணிகண்டன் என்றுபெயரிட்டு ன பெயரிடலாம் என்று முடிவு செய்து மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர். இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும்குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.

குருகுல வாசம்: தன்னிடம் கல்வி பயில வந்திருக்கும் மணிகண்டன் சாதாரணச் சிறுவனல்ல ஓர் அவதார புருஷன் என்பதை முனிவர் தனது தபோ பலத்தால் உணர்ந்து கொண்டார். இந்தச் சிறுவனுக்கு தான் குருவாக இருந்து கல்வி கற்றுத் தருவது தனது பூர்வஜென்ம புண்ணியம் தான் என்பதும் அவருக்குப் புரிந்தது. மணிகண்டன் சூட்டிகையாய் இருந்தான் கல்வி கேள்வியுடனான அறுபத்து நான்கு கலைகளையும் விரைவிலேயே கற்றுத் தேர்ந்தான். அரசகுமாரர்களுக்குத் தேவையான அனைத்து ஆயுதப் பயிற்சிகளையும் அஸ்திர வித்தைகளையும் வெகு விரைவாகவும் சிறப்பாகவும் கற்றுக் கொண்டான். குருகுல வாசம் சிறப்புற முடிந்தது மணிகண்டன் அரண்மனைக்குச் செல்ல விடைபெறும் நேரம் வந்தது. குருவுக்கு தகுந்த மரியாதை செய்வதற்காக எண்ணற்ற பரிசுகளையும் பொன்னையும் பொருளையும் அனுப்பி வைத்திருந்தார் மன்னர். அனைத்தையும் குருவின் பாதங்களில் சமர்ப்பித்த மணிகண்டன் குருவே தங்களின் திருவருளால் நான் நிறைந்த கல்வியைப் பெற்றேன். இந்த பொன்னையும் பொருளையும் தவிர இன்னும் வேறு ஏதேனும் வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றான். முனிவர் தயக்கத்துடன் மணிகண்டா மனிதர்களின் சக்திக்கு மீறிய ஒன்றை உன்னிடம் கேட்கப் போகிறேன் முடியுமானால் நிறைவேற்று இல்லாவிட்டால் மனம் வருந்த வேண்டாம் என்றார். உங்களின் விருப்பத்தை நிறை வேற்றுவது எனது பாக்யம். நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் என்று பணிவாகக் கேட்டான் மணிகண்டன். குருபத்தினி கண்களில் நீருடன் மணிகண்டனிடம் ஐயனே எங்களுக்கு ஒரு மகன் இருப்பதும் அவன் பிறவியிலிருந்தே ஊமை என்பதும் உனக்கு தெரியாததா என்ன அவனை நினைத்துத்தான் நாங்கள் மிகுந்த கவலையுடன் இருக்கிறோம். நீதான் அந்த ஊமைப் பிள்ளையின் குறை தீர்த்து அருள் புரிய வேண்டும் என்று வேண்டினாள். பெற்றவர்களது தவிப்பைப் புரிந்து கொண்ட மணிகண்டன் அப்படியே ஆகட்டும் அம்மா என்றான். குருவின் மகனை அருகில் அழைத்தான் பழத் தட்டிலிருந்த கனி ஒன்றை கொடுத்து உண்ணச் சொன்னான். பின் அந்த சிறுவனிடம் கண்ணா இங்கே என்னையே பார் நான் சொல்வதை நம்பிக்கையுடன் திரும்பச் சொல் என்று கூறி பஞ்சாட்சர மந்திரத்தையும் அஷ்டாக்ஷர மந்திரத்தையும் ஓதினான் மணிகண்டன். ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய எங்கே சொல் அங்கே ஒரு அற்புதம் நடந்தது மணிகண்டன் சொல்லச்சொல்ல குரு மைந்தனும் அந்த மந்திரத்தைச் சேர்த்து சொன்னான் தெளிவாக உச்சரித்தான் ஊமைச் சிறுவன் பேசத் தொடங்கி விட்டான். குரு தம்பதியினர் மெய் சிலிர்த்துப் போயினர். கை குவித்து வணங்கினர் மணிகண்டா உலகில் எந்த சீடனும் குருவுக்கு செய்ய முடியாத ஒன்றை எனக்கு நீ தந்தருளினாய். இந்த அற்புதத்தை நிகழ்த்திய நீ சாதாரண மானிடன் இல்லை என்பதை அறிவோம் நீ யார் ஐயனே என்று குரு வேண்டினார். மணிகண்டன் தனது அவதார ரகசியத்தை குருவிடம் கூறினான். பின் குருவே இது தங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கட்டும். எனது அவதார நோக்கம் முடிந்ததும் ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தில் நான் தங்களுக்கு ஜோதிஸ்வரூபனாக காட்சி தருவேன். இதுவே நான் தங்களுக்கு அளிக்கும் குருதட்சணை என்று சொல்லி வணங்கி விடை பெற்றுக் கொண்டான். குருகுலத்திலிருந்து மணிகண்டன் அரண்மனைக்குத் திரும்பி விட்டான் இப்போது மணிகண்டன் பன்னிரெண்டு வயதுச் சிறுவன். மன்னனும் மக்களும் மற்ற மந்திரி பிரதானிகளும் சேவகர்களும் மணிகண்டனை வரவேற்று மகிழ்ந்தார்கள்.

ராணி கோப்பெருந்தேவியின் மன மாற்றம்: ராஜ்ஜியத்திலோ அரண்மனையிலோ எந்த மாற்றமும் இல்லை, எல்லாம் அப்படியப்படியே இருந்தன. ஆனால் கண்ணே மணியே மணிகண்டா எப்படியடா உன்னைப் பிரிந்திருப்பேன் என்றெல்லாம் வருத்தப்பட்டுக் கொஞ்சிச் சீராட்டி குரு குலத்திற்கு அனுப்பி வைத்த ராணி கோப்பெருந்தேவியின் மனத்தில் மட்டும் இந்த சில வருடங்களில் பெரும் மாற்றம் நிகழ்ந்திருந்தது. அவள் இப்போது மணிகண்டனை வேம்பாக வெறுக்கும் நிலைக்கு வந்திருந்தாள். காரணம் அரசுரிமை பந்தள நாட்டின் மந்திரி அந்த அளவுக்கு மகாராணியின் மனதை விஷமாக்கி இருந்தான். மணிகண்டன் வருவதற்கு முன்பு தங்களுக்கு குழந்தையில்லை இப்போதுதான் உங்களுக்கென்று மகன் ராஜராஜன் பிறந்து விட்டானே இனி இந்த ராஜ்ஜியத்திற்கு அவன்தானே உண்மையான வாரிசு அதை விடுத்து காட்டிலிருந்து எடுத்துவளர்த்த குழந்தையை அரச வாரிசு என்று சொல்லித் திரிவது என்ன நியாயம் அரசி. எக்காரணம் கொண்டும் அரசுரிமையை வேறு யாருக்கும் விட்டுத் தராதீர்கள் என்று உபதேசம் செய்து, அவளை கைப்பாவை போலவே மாற்றி வைத்திருந்தான். பேருக்கு மணிகண்டன் மேல் பாசம் பொழிந்து உள்ளுக்குள் மனத்தில் வஞ்சம் வைத்துக் காத்திருந்தான். இம்மாதிரியான சூழ்நிலையில்தான் மன்னன் ராஜசேகரன் மணிகண்டனுக்கு இளவரசுப் பட்டம் கட்டத் தீர்மானித்தான். அரண்மனை புரோகிதரிடம் முகூர்த்தநாள் கணிக்கச் சொன்னான். ராணி கோப்பெருந்தேவி பதறிப் போனாள். இனியும் காலம் கடத்தக்கூடாது உடனடியாக மணிகண்டனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தாள். அமைச்சனும் அவளும் சேர்ந்து திட்டம் தீட்டினார்கள். அரண்மனை வைத்தியரையும் தங்கள் சதிக்கு கூட்டுச் சேர்த்துக் கொண்டார்கள். அன்றைய தினமே ராணிக்குத் தாளமுடியாத பொய்த் தலைவலி உண்டானது. ஐயோ தலைவலி தாங்க முடியவில்லையே செத்துப் போய்விடலாம் போல் இருக்கிறதே. நான் என்ன செய்வேன் என்று துடித்தாள். கண்ணீர் விட்டாள் திறமையாக நடித்தாள். ராணியின் வலியை நிஜமென்று நம்பிய மன்னன் வைத்தியரிடம் சினந்தான். என்ன வைத்தியரே ஒரு தலைவலியை உங்களால் சரிப்படுத்த முடியவில்லையா இதற்கு உங்களிடம் மருந்தே இல்லையா? ராணி வலியால் துடிப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை ஏதாவது செய்யுங்கள் வைத்தியரே என்றார். வைத்தியர் ஏற்கனவே தாங்கள் பேசிக்கொண்ட சதித் திட்டத்தின்படி விபரீதமான ஒரு விஷயத்தைக் கூறினார். மன்னா இது சாதாரண தலைவலி இல்லை. இந்தக் கொடுமையான தலைவலிக்கு ஒரேயொரு மருந்துதான் உண்டு. அந்த மருந்தைத் தயாரிக்கத் தேவையான மூலிகைகள் எல்லாம் என்னிடம் உள்ளன. ஆனால் என்று அரண்மனை வைத்தியர் தான் சொல்ல வந்ததைச் சொல்லாமல் தயங்கினார். என்ன ஆனால் என்ன வேண்டும்? அந்த மூலிகையை அரைத்துக் கலக்கி பற்றுப்போட பால் வேண்டும் அதுவும் குட்டி போட்ட புலியின் பால். என்ன குட்டி போட்ட புலியின் பாலா விளையாடுகிறீர்களா? வைத்தியரே காட்டுக்குப் போய் பெண் புலியை வேட்டையாடி அதுவும் அதன் மடியில் பால் கறப்பதெல்லாம் முடிகிற காரியமா? குட்டி போட்ட புலி எவ்வளவு உக்கிரமாக இருக்கும் தெரியுமா என்று கோபப்பட்டார். ஐயோ வலி தாள முடியவில்லையை உயிர் போகிறதே. மன்னர் சொல்வது சரிதான் புலிப்பால் கொண்டு வருவதெல்லாம் சாத்தியமா என்ன விடுங்கள். நான் செத்துப் போகிறேன் இந்த வலியோடு என்னால் வாழமுடியாது என்று மகாராணி நடிப்பின் உச்சம் தொட்டாள்.

மணிகண்டன் அவதார நோக்கம்: மணிகண்டன் அனைத்தையும் உணர்ந்திருந்தான். ஆனாலும் தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான காலம் நெருங்கி விட்டதால் அந்த நிகழ்வுக்கு ராணியின் இந்த நாடகத்தை பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தான். மன்னன் ராஜசேகரன் முன்பு வந்து தந்தையே கவலைப்பட வேண்டாம் அன்னையின் துன்பத்தைப் போக்க வேண்டியது எனது கடமை. அனுமதி கொடுங்கள் நான் சென்று புலிப்பால் கொண்டு வருகிறேன் என்றான் ராணியும் மந்திரியும் மகிழ்ந்தார்கள் அவர்கள் எதிர்பார்த்தது நடந்து விட்டது. மன்னனோ பதறினான். மணிகண்டா நீ பாலகன் இது மிகவும் ஆபத்தான காரியம் நான் வேறு ஆட்களின் மூலம் முயற்சிக்கிறேன் இந்த விபரீதத்தில் நீ இறங்கவேண்டாம் என்றான். அப்பா என்னை நம்புங்கள் என் திறமையின் மீது உங்களுக்கே நம்பிக்கையில்லையா? தயவுசெய்து என்னைச் செல்ல அனுமதியுங்கள். வெற்றியோடு திரும்புகிறேன் என்று வேண்டினான். மணிகண்டனின் உறுதியும் கட்டளைக் குரலும் மன்னனை மறுக்க முடியாமல் செய்தன. துணைக்கு நமது படையை அழைத்துச் செல் மணிகண்டா. வேண்டாம் அப்பா கூட்டமாக சென்றால் புலிகள் மிரண்டு ஓடி ஒளிந்து கொள்ளும். நான் ஒருவனாகவே சென்று முடித்து வருகிறேன். தைரியமாக விடை கொடுங்கள். போய் வெற்றியுடன் வா மணிகண்டா என்று வாழ்த்திய மன்னன் ராஜசேகரன் தனது குலதெய்வமான சிவபெருமானுக்கு பூஜித்த முக்கண்ணனின் தேங்காய் ஒன்றையும் கூடவே பயணத்தில் உண்பதற்கான உணவுப் பொருள்களுமாக ஒரு துணியில் இருபுறமும் முடிச்சுகளாகக் கட்டி மணிகண்டனிடம் கொடுத்து வழியனுப்பி வைத்தான். இந்த நிகழ்வின் காரணமாகத்தான் சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடி சுமந்து செல்லும் வழக்கம் உண்டானது. பந்தள நாட்டின் எல்லையைக் கடந்து மணிகண்டன் காட்டுக்குள் பிரவேசித்த போது, இந்திரன் முதலான தேவாதி தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பூதகணங்களும் மணிகண்டனை எதிர்கொண்டு வரவேற்றனர்.

மகிஷியின் வதம்: மகிஷியின் வதத்துக்கான நேரம் நெருங்கிவிட்ட மகிழ்ச்சியுடன் மணிகண்டனைப் போற்றித் துதித்து அவனை அழைத்துச் சென்று மலையுச்சியின் உயர்ந்த சிம்மாசனத்தில் அமர வைத்துப் பூஜித்தனர். தேவர்கள் அன்று மணிகண்டனை அமர வைத்துத் தொழுத அந்த இடமே "பொன்னம்பலமேடு" எனவும், அந்த மலையே "காந்தமலை" எனவும் அழைக்கப்படுகிறது. இதை "தக்ஷிண கைலாயம்" எனவும் இங்கிருந்து உற்பத்தி ஆகும் நதி " தக்ஷிண கங்கை" என்றும் அழைப்பதுண்டு. தன்னை அழிப்பதற்காக ஒரு பாலகன் தலைமையில் தேவர்கள் படை திரட்டியிருக்கிறார்கள் என்கிற தகவல் அதற்குள் மகிஷியின் காதுகளை எட்டியிருந்தது. மணிகண்டனை தேவர்கள் தொழுது கொண்டிருந்த சமயத்தில் அரக்கி மகிஷி அங்கே வந்து குதித்தாள். அவளது அசுரர் படை கூப்பாடு போட்டபடி பின் தொடர்ந்து வந்தது. யாரடா அவன் பொடியன் என்னைக் கொல்ல வந்திருப்பவன் என்று கர்ஜித்தவள். பாலகனான மணிகண்டனைப் பார்த்ததும் வியந்து போனாள். அடுத்த நொடி வயிறு குலுங்கச் சிரித்தவள், கோபம் கொப்பளிக்க அடேய் சிறுவா பிள்ளைப்பூச்சி போலிருக்கும் நீயா என்னை எதிர்க்க வந்திருக்கிறாய். இன்றோடு உன் ஆயுள் முடிந்தது என் சுண்டுவிரலால் உன்னை நசுக்கி விடுகிறேன் பார் என்றபடி மணிகண்டனை நோக்கிப் பாய்ந்தாள். அடுத்த நொடி போர் தொடங்கியது. மகிஷியின் அசுரர் படைகளும் தேவேந்திரனும் படைகளும் அவர்களுக்கு துணையாக பூதகணங்களும் மோதின. தேவர்களும் பூதகணங்களும் ஆக்ரோஷமாகப் போர் புரிந்து ஆயிரக்கணக்கான அசுரர்களைக் கொன்று குவித்தார்கள். மகிஷமுகி தன்னுடைய மாயா சக்தியினால் பல்லாயிரக்கணக்கான பாணங்களை எய்தாள். மகிஷியின் அத்தனை பாணங்களையும் அஸ்திரப் பிரயோகங்களையும் மணிகண்டன் அநாயசமாகத் தடுத்து தவிடுபொடியாக்கினான். இறுதிக் கட்டம் நெருங்கிக் கொண்டிருந்தது. மணிகண்டனின் பாணங்களால் அடிபட்டு மகிஷியின் உடலெல்லாம் ரத்தம் பீறிட்டுச் சிதறியது. பலம் குன்றிப் போனாள் மகிஷமுகிக்குத் தனது முடிவு தெரிந்து விட்டது. அவள் புரிந்து கொண்டாள் தெய்வாம்சம் பொருந்திய இந்தச் சிறுவன் நிச்சயம் ஹரிஹரனின் புத்திரனாகத்தான் இருக்கவேண்டும். வயதும் பன்னிரெண்டுதான் இருக்கும் தேஜஸ் அவனை பிரம்மச்சாரி என்றே உணர்த்துகிறது. அப்படியானால் நான் பிரம்மாவிடம் கோரிய வரம் பலிக்கப் போகிறதா என் விதி முடியும் தருணமா இது. மகிஷி தனது மரணத்தை உணர்ந்த தருணமே மணிகண்டன் அவளை நெருங்கி தலையின் இரு கொம்புகளைப்பற்றிப் பிடித்துத் தூக்கி கரகரவென்று சுழற்றித் தூக்கியெறிந்தான். மகிஷியின் உடல் " அழுதா" நதிக்கரையில் வந்து விழுந்தது. அவள் மீண்டும் எழும் முன் ஸ்ரீ தர்மசாஸ்தாவாகிய மணிகண்டன் அவள் உடல் மீது ஏறி நின்று நர்த்தனமாடினார். மகிஷியின் உயிர் மெல்லப் பிரிந்தது. மகிஷியின் உடலின் மீது மணிகண்டன் நர்த்தனமாடி சம்ஹாரம் செய்ததைக் கண்டு மகிழ மேலுலகில் இருந்து முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள், கந்தவர்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள், அஷ்டதிக் பாலகர்கள், யட்சர்களுடன், சிவபெருமானும் விஷ்ணுவும் கூட வந்திருந்தனர். அப்போது அங்கே ரிஷப வாகனத்தில் வந்த சிவபெருமான் மணிகண்டன் நடனத்தைக் காண்பதற்காக தனது காளையைப் பக்கத்தில் உள்ள ஆசிரமத்தில் கட்டி வைத்தாராம். அந்த புனிதமான இடமே சபரிமலையில் செல்லும் வழியில் உள்ள " காளை கட்டி " ஆசிரமம் ஆகும். தேவர்கள் பூமாரி பொழிந்து வெற்றி முழக்கமிட்டனர். அப்போது அங்கே ஓர் ஆச்சர்யம் நிகழ்ந்தது மண்ணில் மலை போல வீழ்ந்து கிடந்த மகிஷியின் உடலிலிருந்து விடுதலையாகி சாப விமோசனம் பெற்று எழுந்தாள் லீலாவதி அவள். மணிகண்டனை நெருங்கி அவனது பாதத்தில் வீழ்ந்து பணிந்தாள். ஐயனே தங்களின் புனிதக் கரங்கள் என் மீது பட்டதால் சாப விமோசனம் பெற்றேன். இனி நான் தங்களுக்கே சொந்தம் என்னைத் திருமணம் செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும் ஸ்வாமி என்று வேண்டினாள். மணிகண்டன் புன்முறுவல் பூத்தான். லீலாவதி இந்த அவதாரத்தில் நான் நித்ய பிரம்மச்சாரியாகவே இருப்பதென்று தீர்மானித்திருக்கிறேன். எனவே என்னை அடைய வேண்டுமென்ற உன் எண்ணம் நிறைவேறாது. ஐயனே தாங்கள் இப்படி என்னை ஒரேயடியாக நிராகரிக்கக்கூடாது, கருணை காட்டுங்கள் ஸ்வாமி என்று லீலாவதி தழுதழுத்தாள். அப்படியெனில் ஒரேயொரு வாய்ப்பை உனக்கு அளிக்கிறேன். இங்கே மலையில் எனக்கென்று அமைக்கப்படும் கோவிலில்தான் நான் வீற்றிருக்கப் போகிறேன். என்னை தரிசிக்க வருடந்தோறும் கோடானுகோடி பக்தர்கள் வருவார்கள் அப்படி இங்கே வரும் ஒவ்வொரு பக்தரும் அடுத்தமுறை வரும்போது மற்றொரு பக்தரைத் தன்னுடன் அழைத்து வருவர். இதனால் ஆண்டுக்காண்டு என் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகும். ஒவ்வொரு வருடமும் புதிதுபுதிதாகப் பக்தர்கள் கன்னிச்சாமி என்ற பெயரோடு என்னை தரிசிக்க வருவார்கள். இந்த நியதி எப்போதாவது மாறி ஏதாவது ஒரு வருடத்தில் கன்னிச்சாமிகள் யாரும் வரவில்லை என்றால், அப்போது கண்டிப்பாக உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் அதுவரைக் காத்திரு என்று பதிலுரைத்தவன் மேலும் தொடர்ந்து சொன்னான். என்னுடைய கோவிலுக்கருகிலேயே உனக்கும் ஒரு கோவிலை எழுப்பச் செய்கிறேன். நீ எனது இடப்பக்கத்தில் மாளிகைபுரத்து அம்மன் என்ற பெயரோடு கோவில் கொண்டு வீற்றிரு. மக்கள் உன்னை மஞ்சமாதா என்று வழிபடுவார்கள். என்னை தரிசனம் செய்ய வரும் எல்லா பக்தர்களும் உன்னையும் தரிசித்து விட்டுத்தான் செல்வார்கள் என்று அருள் புரிந்தான். தர்மசாஸ்தா அருகிலேயே இருப்பது சாதாரண பாக்கியமா என்ன மஹா பாக்யம் ஆயிற்றே. மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டாள் லீலாவதி இவ்வாறாக மஞ்சமாதா ஐயப்பனின் அருகில் இடம் பிடித்தாள். மணிகண்டனின் அவதாரநோக்கம் நிறைவடைந்தது. ஆனால் காட்டுக்கு வந்த காரியம் முடிவடையவில்லேயே தாயின் தலைவலிக்குப் புலிப்பால் கொண்டு செல்ல வேண்டுமே. தேவேந்திரன் ஒரு பெண் புலியாகவும், மற்ற தேவர்கள் அனைவரும் புலிக் கூட்டங்களாக உருமாறினார்கள் மணிகண்டன் கம்பீரமாக அந்த வேங்கையின் மீது அமர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கான புலிகள் கொண்ட புலிக்கூட்டம் அவனைப் பின் தொடர்ந்தது. அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பாக இன்னொரு காரியம் செய்ய வேண்டியிருந்தது. வதம் செய்த மகிஷியின் உடலைக் கற்களைப் போட்டு மூடும் வேலை. இறந்த மகிஷியின் உடல் உயிரற்றதாக இருந்தாலும் அரக்க உடல் என்பதால் மலை போல் வளரத் தொடங்கி விடும். எனவே மணிகண்டன் மகிஷியின் உடலைப் பாதாளத்தில் தள்ளிக் கற்களால் மூடினான். மற்றவர்களும் ஐயனுடன் சேர்ந்து ஆளுக்கொரு கல் எடுத்து வீசி கற்குவியலுக்குள் மகிஷியின் உடலைப் புதைத்தனர்.
அப்படிக் கற்களால் மூடப்பட்டு மகிஷி அடக்கம் செய்யப்பட்ட இடம்தான் " கல்லிடும் குன்று" என்று வழங்கப்படுகிறது. மணிகண்டன் பெண்புலியின் மீது கம்பீரமாக அமர்ந்து புலிக்கூட்டம் பின் தொடர பந்தள ராஜ்ஜியத்துக்குள் நுழைந்தான். நகர மக்கள் உறுமியபடி வந்த ஆயிரக்கணக்கான புலிகளையும் பிரம்மாண்ட வேங்கையின் மீது கோடி சூர்ய பிரகாசத்துடன் அழகுற ஆரோகணித்து வந்த மணிகண்டன் திருவுருவத்தையும் கண்டு திகைத்தனர் வியந்தனர் பயந்தனர் ஒளிந்திருந்து கண்குளிர தரிசித்தனர்.
அரண்மனையிலோ மன்னன் ராஜசேகரன் கண்களில் தாரை தாரையாக ஆனந்தக்கண்ணீர், அரசி கோப்பெருந்தேவியோ திடுக்கிட்டுப் போனாள். புலிப்பால் கொண்டு வர கானகம் போனவன் கொடிய மிருகங்களால் தாக்கப்பட்டு சின்னாபின்னமாகி விடுவான் என்று நினைத்திருந்தவளுக்கு மணிகண்டன் ஒட்டுமொத்த புலிக் கூட்டத்துடனே வந்தது அதிர்ச்சியாக இருந்தது. அம்மா தங்களது தலைவலியைப் போக்க இதோ புலியுடனேயே வந்துவிட்டேன் தாயே. தாங்கள் வேண்டிய அளவு பாலைக் கறந்து கொள்ளலாம் என்று அன்னையிடம் புன்னகையுடன் கூறிய மணிகண்டன் தந்தையிடம் திரும்பி அப்பா வைத்தியரை அழைத்து வரச் சொல்லுங்கள். உடனே சிகிச்சையை தொடங்கட்டும் என்றான்.
மன்னன் ராஜசேகரன் மணிகண்டனை மார்புறத் தழுவினான். மணிகண்டா இது நிச்சயமாக மானிடர் செய்யக்கூடிய காரியமே இல்லை. நீ புலிப்பால் கொண்டுவர கானகம் சென்றதுமே, உன் அன்னைக்கு தலைவலி தீர்ந்துவிட்டது உண்மையைச் சொல் நீ யார் என்று தழுதழுத்த குரலில் கேட்டார்.
கோப்பெருந்தேவியோ மணிகண்டனின் காலடியில் சரிந்தாள் அவள் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. மணிகண்டா என்னை மன்னித்து விடப்பா. நீ தாய் என்றழைக்கத் தகுதியில்லாதவள், நான் என் வயிற்றில் பிறந்த பிள்ளை ராஜ்ஜியத்தை ஆளவேண்டும் என்ற ஆசையில் கடவுள் எனக்களித்த தெய்வமகனான உன்னைக் காட்டுக்கு அனுப்பிவைத்த பாவி நான். போலியாக நடித்து புலிப்பால் கேட்ட எனது ஈனச் செயலை மன்னித்துவிடு மகனே என்று கதறினாள். மன்னன் ராஜசேகர பாண்டியன் உண்மையை உணர்ந்தான் கோபம் கொண்டான். வீரர்களே அந்த அயோக்கிய மந்திரியையும் சதிக்கு உடந்தையாக இருந்த அரண்மனை வைத்தியரையும் உடனடியாக கட்டி இழுத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். வேண்டாம் தந்தையே எல்லோரையும் மன்னித்து விடுங்கள். விதி இழுத்துப் போன பாதையில் தங்களையுமறியாமல் தவறிழைத்தவர்கள் அவர்கள்.
நான் இந்த பூமிக்கு வந்த அவதார நோக்கத்தை நிறைவேற்ற அவர்களும் இவ்வாறாக எனக்கு உதவியிருக்கிறார்கள் என்று தடுத்துப் பேசினான் மணிகண்டன். பின்னர் புலிகளிடம் திரும்பி இந்திரனே தேவர்களே நீங்கள் செய்த உதவிக்கு நன்றி இனி நீங்கள் தேவலோகம் செல்லலாம் என்று சொல்ல அடுத்த நொடியே புலிக்கூட்டங்கள் மறைந்தது. மன்னன் ராஜசேகர பாண்டியன் ஏதும் விளங்காதவனாய் மணிகண்டா யாரப்பா நீ என்ன இந்தத் திருவிளையாடல் என்று கேட்டான்.
அதை நான் சொல்கிறேன் மன்னா என்றபடி உள்ளே வந்தார் அகத்திய மாமுனிவர். மன்னன் ராஜசேகர பாண்டியனுக்கும் அரசி கோப்பெருந்தேவிக்கும் மணிகண்டனின் அவதார நோக்கத்தின் மகிமையை ஆதி முதல் அந்தம் வரை விளக்கிக் கூறினார். மன்னரும் அரசியும் மெய் சிலிர்த்துப் போனார்கள்.
ஹரிஹர புத்ரனா இத்தனை நாட்கள் தங்கள் வீட்டில் வளர்ந்து தங்கள் மடியில் தவழ்ந்து விளையாடியது. ஆஹா நாங்கள் எத்தனை பாக்யசாலிகள். மகனே மணிகண்டா உன் அவதார நோக்கம் முடிந்து விட்டாலும் எங்களுக்கு செய்யவேண்டிய இன்னொரு கடமை மிச்சம் உள்ளது. நாளையே உனக்கு பட்டாபிஷேகம் செய்வித்து விடுகிறேன் பந்தள தேசத்திற்கு மன்னனாகி இனி நீதான் நாட்டைப் பரிபாலிக்க வேண்டும் என்றான் ராஜசேகரன். ஆம் கண்ணே அப்பா சொல்படி உடனே ராஜ்ஜியத்தை ஏற்றுக்கொள் என்றாள் கோப்பெருந்தேவி. தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள் மகிஷியை அழிக்கும் அவதார நோக்கத்திற்குப் பிறகு இந்தக் கலியுகத்தில் மக்களை நல்வழிப்படுத்தி அவர்களைக் காக்க வேண்டியது என் கடமை. அதுவே எனது அவதாரத்தின் நோக்கமாகும். அதற்காகவே எனக்கென்று ஓரிடத்தை அமைத்துக் கொண்டு அங்கிருந்தே என்னை நாடி வரும் பக்தர்கள் துயர் தீர்த்து அவர்களுக்கு அருள்பாலிக்க விரும்புகிறேன். தாங்கள் எனக்களிப்பதாகச் சொல்லும் சிம்மாசனத்தை விட என்னைத் தேடி வரும் பக்தர்களின் இதய சிம்மாசனமே எனக்கு விருப்பமானது என்று முடிவாகச் சொன்னான் மணிகண்டன். மன்னன் ராஜசேகரன் மனம் வருந்தினாலும் எல்லோருக்குமான இறைவனை தன் சுயநலத்திற்காகப் பிடித்து வைத்துக்கொள்வது சரியல்ல என்று உணர்ந்தான். அவன் மணிகண்டனிடம் ஒரு விண்ணப்பம் செய்து கொண்டான். மகனே உனது பட்டாபிஷேகத்திற்காகவே நான் ஆசை ஆசையாக ஆடை ஆபரணங்களைச் சேகரித்திருக்கிறேன் அவற்றை எனக்காக ஒருநாளாவது அணிந்து சிம்மாசனத்தில் அமர்ந்து எங்களுக்கு காட்சி தர வேண்டும் பகவானே என்று இறைஞ்சினான். ஐயனும் மன்னன் ராஜசேகரின் அன்புக்கு கட்டுப்பட்டு ஆகட்டும் தந்தையே நான் கோயில் கொண்ட பிறகு அந்த ஆடை ஆபரணங்களை மகர சங்கராந்தி தினத்தன்று அணிந்து தங்களுக்குக் காட்சி தருவேன் என்று உறுதியளித்ததோடு அந்த திருவாபரணப் பெட்டி எவ்வாறு யாரால் சபரிமலைக்கு எடுத்து வரப்பட வேண்டும் எந்தெந்த ஆலயங்களில் இறக்கி பூஜை செய்து ஆசீர்வாதம் பெற வேண்டும் என்பதையும் மன்னனுக்கு எடுத்துரைத்தான்.

சபரிமலை ஆலயம்: மணிகண்டன் மன்னனிடம் தந்தையே தங்களது ராஜ்ஜியத்தில் எனக்கென்று கொஞ்சம் நிலத்தை தர முடியுமா என வினவினான். உனக்கு எவ்வளவு இடம் வேண்டுமோ எடுத்துக் கொள் மகனே என்றான் மன்னன். மறுகணம் ஐயன் தந்தையே நான் இப்போது வில்லில் அம்பு பூட்டித் தொடுக்கப் போகிறேன். அந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அந்த இடத்தை எனக்களித்தால் போதும். அங்கே எனக்கு ஆலயம் எழுப்புங்கள். அங்கிருந்து நான் அருள்பாலிக்கிறேன் என்றான் மணிகண்டன் பின் வில்லெடுத்து அம்பு தொடுத்தான் அம்பு சென்று விழுந்த இடம் சபரிமலை. அக்கணமே ஐயன் அனைவரின் கண்ணெதிரே ஜோதிப் பிழம்பானான். விண்ணுக்கும் மண்ணுக்குமாக விஸ்வரூபம் எடுத்து ஒளிர்ந்தான். அந்த ஜோதியானது சபரிமலையில் சென்று இறங்கியது. கோடி சூரியப் பிரகாசத்துடன் அந்தப்பகுதி ஜொலித்தது கலியுகத்தின் மனித மனங்களின் இருளைக் கிழித்தெறியத் தொடங்கியது. ஐயன் சொற்படி ஆலயத்தை உருவாக்க முனைந்தான் மன்னன். அவனுக்கு பக்கபலமாக நின்று ஆலோசனைகளை அள்ளி வழங்கினார் அகத்திய மாமுனிவர். கோயிலின் ஒவ்வொரு அமைப்பையும் அகத்தியருடன் கலந்தாலோசித்து அவரது ஆலோசனைப்படியே கிழக்கு நோக்கி பதினெட்டுப் படிகளுடன் கூடிய கோயிலைக் கட்டி முடித்தான் ராஜசேகர பாண்டியன்.

பதினெட்டுப்படிகள்: பதினெட்டுப்படிகள் தாத்பர்யம் என்ன அகத்திய மாமுனிவர் மன்னன் ராஜசேகரனுக்கு விளக்கினார். இந்தப் பதினெட்டுத் திருப்படிகளும் பதினெட்டுத் தத்துவங்களைக் குறிக்கின்றன. மெய் ; வாய் ; கண் ; மூக்கு ; செவி ஆகிய ஐந்து இந்திரியங்களும்
காமம் ; குரோதம் ; லோபம் ; மோகம் ; மதம் ; மாச்சர்யங்கள் ; திதிஷை ; டம்பம் ; ஆகிய அஷ்ட ராகங்களும்
சத்வ ; இராஜஸ ; தாமஸ குணங்களும் வித்யையும் அவித்யையும் சேர்த்து தத்துவங்கள் பதினெட்டாகும்.
தத்வாதீனாகப் பகவான் இருக்கிறான் என்பதை உணர்த்தும் விதம்தான் இந்த பதினெட்டுப்படிகள்.
அகத்திய மாமுனிவரின் இந்த விளக்கம் கேட்டு மனம் மகிழ்ந்தான் மன்னன் ராஜசேகரன்.
கோயில் கட்டி முடித்ததும் சாஸ்தாவுக்கு எந்த வகையிலான விக்ரஹம் அமைப்பது என்ற கேள்வி எழுந்தது? கேரளப் பிரதேசத்தை உருவாக்கியவரான பரசுராமரே அதைத் தீர்மானித்தார்.
சாஸ்தாவின் பலவித ரூபங்களில் இரு கால்களையும் குத்திட்டு யோக பட்டத்துடன் பந்தனம் செய்த வண்ணம் தத்வமஸி என்னும் சின் முத்திரையுடன் கூடிய பகவானின் திருவுருவமே ஏற்றது என்று சொன்னார் பரசுராமர். ஒரு மார்கழி மாதக் கடைசி நாளில் சபரிமலையில் ஆலயத் திருப்பணிகள் இனிதே முடிந்தது. மகா சங்கராந்தி தினமான தை மாதப்பிறப்பு நன்னாளில் ( கிருஷ்ண பக்ஷம் ; பஞ்சமி திதி ; உத்திரம் நக்ஷத்திரம் கூடிய சுப யோக சுப தினத்தில் ) பரசுராமர் ஸ்ரீ தர்மசாஸ்தாவைப் பிரதிஷ்டை செய்தார்.

இனி ஸ்வாமியை எப்படி அழைப்பது : ஐயனை அன்னையாகவும் அப்பனை தந்தையாகவும் கொண்டதனால் அவன் ஐயப்பன் ஆகிறான். மேலும் ஐயன் என்றால் உயர்ந்தவன் பெரியவன் என்றெல்லாம் பொருள் உண்டு. மேலும் பரசுராம க்ஷேத்ரமான கேரளாவில் எல்லாமே அப்பன்தான். உதாரணமாக குருவாயூரப்பன், ஏற்றுமானூரப்பன் வைக்கத்தப்பன், காக்கரையப்பன் அந்த வகையில் ஐயனுடன் அப்பனைச் சேர்த்து ஐயப்பன் என்று அழைக்கிறார்கள். குலகுருவாம் அகத்திய மாமுனிவர் துணையிருந்து பூஜை விதிகளை கிரமமாக நிறைவேற்றி வைத்தார். அன்றிலிருந்து ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி ஸ்வரூபத்தில் காட்சியளித்து அருள் பாலித்து வருகிறார். அதே போல் தனது குருவுக்கு வாக்களித்தபடி மணிகண்டன் குரு தட்சணையாக ஆண்டுதோறும் மகரஜோதியாக காட்சி தருகிறார்.

இவ்வாறாக கலியுகத்தின் உன்னத புனிதத் தலமாக பூலோக சொர்க்கம் சபரிமலை ஆலயம் உருவானது.

ஐயனே வேதம்
ஐயனே யாகம்
ஐயனே மோக்ஷம்
ஐயனே ப்ராணம்
ஐயனே தத்வம்
ஐயனே நித்யம்
ஐயனே ஜீவணம்
ஐயனே லோகம்
ஐயனே ஸகலம்
ஐயனே ஸ்மரணம்
ஐயனே சரணம்
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா


சாஸ்தா வழிபாடு

சாஸ்தா வழிபாடு!

அஷ்டசாஸ்தா வழிபாடு

யுகம் கடந்த புருஷனாக விளங்குபவர் சாஸ்தா. கிருதயுகத்தில் கந்த புராணக் கூற்றுப்படி சூரபதுமனுக்காகவும் அசுரர் குலத்துக்காகவும் பயந்து பூமியில் பாரத தேசத்தில் தமிழ்நாட்டில் குடகு முதல் காவிரி பாயும் தீர்த்தக்கரைவழியே வந்து வேணுபுரம் என்று வடமொழியில் கூறப்படும் சீர்காழிப் பகுதியில் தேவேந்திரன் தன் மனைவி சசிதேவியுடன் மறைந்து வாழ்ந்திருந்த போது தேவர்கள் அவனைத் தேடிக் கண்டுப்பிடித்து சூரபதுமன் அழிய வேண்டுமானால் முருகப் பெருமான் அவதாரம் ஆக வேண்டும் என்று சிவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கோரி இந்திரனையும் கயிலாயம் அழைத்துச் சென்றனர். தனித்துவிடப்பட்ட இந்திராணியை சூரபதுமன் சகோதரி அஜமுகி என்ற அரக்கியிடமிருந்து சாஸ்தா காத்தருளினார். (இடம் தென்பாதிகிராமம், சீர்காழி) என்று கந்தபுராணம் கூறுகிறது. எனவே முருகனுக்கும் மூத்தோன் என்று சாஸ்தா கூறப்படுகிறார். அதேபோல, சிவபுராணத்தில் சிவனை மதியாது யாகம் நடத்திய ரிஷிகளுக்கும், ரிஷி பத்னிகளுக்கும் சிவன் மகிமையை வெளிப்படுத்த சிவன் பிக்ஷாடனராகவும், திருமால் மோகினியாவும் உருமாறி அவர்களை மாயையிலிருந்து விடுபடச் செய்து நல்வழிப்படுத்திய பின் சிவ-விஷ்ணு சேர்க்கையில் அயோனிஜனாக சாஸ்தா அவதரித்ததாக வழுவூர் மகாத்மியம் கூறுகிறது. (இடம் கழினிவாசல், வழுவூர்) பத்மாசுரன் தலையில் கைவைத்து மோகினி மாலும் சிவனும் கூடி சாஸ்தா அவதாரமானது மரக்காணம் பாண்டிச்சேரி அருகில் உள்ள புத்துப்பட்டு என்னும் கிராமம் என்று கூறப்படுகிறது. (பத்மபுராணம்)
லலிதோ பாக்யானத்திலும் கந்த புராணத்திலும் பாற்கடல் கடைந்த சமயத்தில் மோகினி அவதாரம் எடுத்த திருமாலுக்கும் சிவனுக்கும் ஹரிஹரபுத்திரர் அவதரித்தார் என்று கூறப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் கிருதயுகத்தைச் சார்ந்தவையாகும். த்ரேதாயுகத்தில் இராமவதாரம் நடைபெற்றுது. புத்ரகாமேஷ்டி யாகத்தை தசரதன் நடத்திய போது யாககுண்டத்திலிருந்து கையில் பாயச பாத்திரத்துடன் ஓர் யுகபுருஷன் வெளிவந்தான் எனவும் மஹத்பூதம் என்றும் வால்மீகி வர்ணிப்பது சந்தானப்ராப்தி யருளும் மாணிக்க பாத்திரம் கையிலேந்தி இருக்கும் சாஸ்தாவையே குறிப்பதாகும். இராமன் தரிசனம் பெற்ற சபரி முக்தி அடைந்தது சாஸ்தாவின் அருளினால் என்பதால் தான் மதங்கமலை என்று வழங்கப்பட்ட இடம் இன்று சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இராமர் முறித்த சிவதனுசு வில் சாஸ்தாவின் ஆவேச சக்தி ஆவிர்பாகம் ஆகியிருந்ததாகவும் சாந்த மூர்த்தியான இராமன் அந்த வில்லைத் தொட்டவுடன் சாஸ்தாவின் ஆவேச சக்தி இராமரிடம் குடி புகுந்து பிற்காலத்தில் இராவணனை அழிக்க உதவியது என்று சமூக வரலாறு நூல் ஒன்று தெரிவிக்கிறது.
துவாபர யுகத்தில் (மஹாபாரத காலம்) அரக்குமாளிகையிலிருந்து பாண்டவரைக் கைப்பற்றினார் சாஸ்தா என்று ஓர் செவி வழிக்காதை உண்டு. அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் கொடுக்கும் முன்பு அவனது வீரத்தைப் பரிட்சிக்க பரமேச்வரன் வேடுவனாகத் தோன்றி ஒரு பன்றியை வில்லால் அடித்துக் கொன்றது யார் என்று பிரச்சினை எழுப்பி போர் தொடுத்து முடிவில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் கொடுத்தார் பரமேச்வரன். அந்த பிரச்சினைக்குக் காரணமாயிருந்த முள்ளம் பன்றியை உசுப்பி விட்டவர் சாஸ்தா என்று கூறுகிறார்கள் (ஆதாரம் : சிதம்பரம் அருகே உசுப்பூர் சாஸ்தா கோயில்) கலியுகத்தில் பம்பையில் தவழ்ந்து பந்தள பாலகனாக வளர்ந்து மகிஷி ஸம்ஹாரம் செய்து வன்புலி வாகனனாகத் தோன்றி பூதநாத கீதை உபதேசம் செய்தருளி சபரிமலையில் கோயில் கொண்டான் சாஸ்தா என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இந்தியா முழுவதும் ஐயப்பன் வழிபாடு தற்போது பிரபலமாகி வருகிறது. இதில் ஐயப்பன், சாஸ்தா, ஐயனார் என பல உருவங்களில் ஐயப்பன் வழிபாடு நடைபெறுகிறது. இது தவிர ஆதிபூத நாதர், கல்யாண வரதர், மஹா சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, சந்தான பிராப்தி சாஸ்தா, வீர சாஸ்தா, ஞான சாஸ்தா, வேத சாஸ்தா என எட்டு வகையான சாஸ்தா இருப்பது பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி அனைவரும் தெரிந்து கொள்வதற்காக இந்த அஷ்ட சாஸ்தா வழிபாடு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நடமாடும் தெய்வமாம் காஞ்சி மஹா முனியின் அருளானையின்படியும், சிருங்கேரி ஆச்சார்யாளின் அனுக்ரஹதினாலும் ஐயப்ப வழிபாட்டில்  பல்வேறு  ஆராய்ச்சிகள் செய்து கலிகாலத்திற்கு உகந்தவாறு எட்டு வித அவதாரங்களை வடிவமைத்து கொடுத்து  ஐயப்பனின் பதமலர்களை அடைந்தவர் குருசாமி பிரம்மஸ்ரீ விஸ்வநாத சர்மா. அவரது முயற்சியின் பலனாக திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம், பாலாஜி நகர்-சாய் நகரில்  அஷ்டசாஸ்தா திருக்கோயில் விரைவில் கட்டப்பட இருக்கிறது. கோயில் திருப்பணிக்கு நன்கொடை தர விருப்பமுள்ளவர்கள், பொருளாகவோ, பணமாகவோ வழங்கலாம்.

தொடர்புக்கு:வில்லிவாக்கம் ஸ்ரீ விஸ்வநாத சர்மா அஷ்டசாஸ்தா ட்ரஸ்ட்
29, வடக்கு மாட வீதி, ஐயப்பன் கோயில் அருகில்,
வில்லிவாக்கம், சென்னை-600 049.
போன் : +91-44-2617 3963, 99625 62067, 99625 62068.
email: sasthakalyan@gmail.com


அஷ்டசாஸ்தா வழிபாடு - 1

ஸ்வாமியே சரணம் ஐயப்பா சபரிமலை யாத்திரை பகுதி ஒன்பது. சாஸ்தா வழிபாடு!

அஷ்டசாஸ்தா வழிபாடு - 1

யுகம் கடந்த புருஷனாக விளங்குபவர் சாஸ்தா. கிருதயுகத்தில் கந்த புராணக் கூற்றுப்படி சூரபதுமனுக்காகவும் அசுரர் குலத்துக்காகவும் பயந்து பூமியில் பாரத தேசத்தில் தமிழ்நாட்டில், குடகு முதல் காவிரி பாயும் தீர்த்தக்கரைவழியே வந்து வேணுபுரம் என்று வடமொழியில் கூறப்படும் சீர்காழிப் பகுதியில் தேவேந்திரன் தன் மனைவி சசிதேவியுடன் மறைந்து வாழ்ந்திருந்த போது தேவர்கள் அவனைத் தேடிக் கண்டுப்பிடித்து சூரபதுமன் அழிய வேண்டுமானால் முருகப் பெருமான் அவதாரம் ஆக வேண்டும் என்று சிவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கோரி இந்திரனையும் கயிலாயம் அழைத்துச் சென்றனர். தனித்து விடப்பட்ட இந்திராணியை சூரபதுமன் சகோதரி அஜமுகி என்ற அரக்கியிடமிருந்து சாஸ்தா காத்தருளினார். {இடம் தென்பாதிகிராமம், சீர்காழி} என்று கந்தபுராணம் கூறுகிறது. எனவே முருகனுக்கும் மூத்தோன் என்று சாஸ்தா கூறப்படுகிறார். அதேபோல சிவபுராணத்தில் சிவனை மதியாது யாகம் நடத்திய ரிஷிகளுக்கும் ரிஷி பத்னிகளுக்கும் சிவன் மகிமையை வெளிப்படுத்த சிவன் பிக்ஷாடனராகவும், திருமால் மோகினியாவும் உருமாறி அவர்களை மாயையிலிருந்து விடுபடச் செய்து நல்வழிப்படுத்திய பின் சிவ விஷ்ணு சேர்க்கையில் அயோனிஜனாக சாஸ்தா அவதரித்ததாக வழுவூர் மகாத்மியம் கூறுகிறது. {இடம் கழினிவாசல், வழுவூர்}

பத்மாசுரன் தலையில் கைவைத்து மோகினி மாலும் சிவனும் கூடி சாஸ்தா அவதாரமானது மரக்காணம் பாண்டிச்சேரி அருகில் உள்ள புத்துப்பட்டு என்னும் கிராமம் என்று கூறப்படுகிறது. {பத்மபுராணம்} லலிதோ பாக்யானத்திலும் கந்த புராணத்திலும் பாற்கடல் கடைந்த சமயத்தில் மோகினி அவதாரம் எடுத்த திருமாலுக்கும் சிவனுக்கும் ஹரிஹரபுத்திரர் அவதரித்தார் என்று கூறப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் கிருதயுகத்தைச் சார்ந்தவையாகும்.

த்ரேதாயுகத்தில் இராமவதாரம் நடைபெற்றுது. புத்ரகாமேஷ்டி யாகத்தை தசரதன் நடத்திய போது யாககுண்டத்திலிருந்து கையில் பாயச பாத்திரத்துடன் ஓர் யுகபுருஷன் வெளிவந்தான் எனவும் மஹத்பூதம் என்றும் வால்மீகி வர்ணிப்பது சந்தானப்ராப்தி யருளும் மாணிக்க பாத்திரம் கையிலேந்தி இருக்கும் சாஸ்தாவையே குறிப்பதாகும். இராமன் தரிசனம் பெற்ற சபரி முக்தி அடைந்தது சாஸ்தாவின் அருளினால் என்பதால் தான் மதங்க மலை என்று வழங்கப்பட்ட இடம் இன்று சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இராமர் முறித்த சிவதனுசு வில் சாஸ்தாவின் ஆவேச சக்தி ஆவிர்பாகம் ஆகியிருந்ததாகவும் சாந்த மூர்த்தியான இராமன் அந்த வில்லைத் தொட்டவுடன் சாஸ்தாவின் ஆவேச சக்தி இராமரிடம் குடி புகுந்து பிற்காலத்தில் இராவணனை அழிக்க உதவியது என்று சமூக வரலாறு நூல் ஒன்று தெரிவிக்கிறது.

துவாபர யுகத்தில் {மஹாபாரத காலம்} அரக்குமாளிகையிலிருந்து பாண்டவரைக் கைப்பற்றினார் சாஸ்தா என்று ஓர் செவி வழிக்காதை உண்டு. அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் கொடுக்கும் முன்பு அவனது வீரத்தைப் பரிட்சிக்க பரமேச்வரன் வேடுவனாகத் தோன்றி ஒரு பன்றியை வில்லால் அடித்துக் கொன்றது யார் என்று பிரச்சினை எழுப்பி போர் தொடுத்து முடிவில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் கொடுத்தார் பரமேச்வரன். அந்த பிரச்சினைக்குக் காரணமாயிருந்த முள்ளம் பன்றியை உசுப்பி விட்டவர் சாஸ்தா என்று கூறுகிறார்கள் {ஆதாரம் : சிதம்பரம் அருகே உசுப்பூர் சாஸ்தா கோயில்}

கலியுகத்தில் பம்பையில் தவழ்ந்து பந்தள பாலகனாக வளர்ந்து மகிஷி ஸம்ஹாரம் செய்து வன்புலி வாகனனாகத் தோன்றி பூதநாத கீதை உபதேசம் செய்தருளி சபரிமலையில் கோயில் கொண்டான் சாஸ்தா என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்தியா முழுவதும் ஐயப்பன் வழிபாடு தற்போது பிரபலமாகி வருகிறது. இதில் ஐயப்பன், சாஸ்தா, ஐயனார் என பல உருவங்களில் ஐயப்பன் வழிபாடு நடைபெறுகிறது. இது தவிர ஆதிபூத நாதர், கல்யாண வரதர், மஹா சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, சந்தான பிராப்தி சாஸ்தா, வீர சாஸ்தா, ஞான சாஸ்தா, வேத சாஸ்தா என எட்டு வகையான சாஸ்தா இருப்பது பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி அனைவரும் தெரிந்து கொள்வதற்காக இந்த அஷ்ட சாஸ்தா வழிபாடு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

நடமாடும் தெய்வமாம் காஞ்சி மஹா முனியின் அருளானையின் படியும், சிருங்கேரி ஆச்சார்யாளின் அனுக்ரஹதினாலும் ஐயப்ப வழிபாட்டில்  பல்வேறு  ஆராய்ச்சிகள் செய்து கலிகாலத்திற்கு உகந்தவாறு எட்டு வித அவதாரங்களை வடிவமைத்து கொடுத்தார்கள். [தொடர்ச்சி நாளை]
_________________________________________________________________


கார்த்திகை மாதம் சபரிமலை போகிறவர்களுக்கு

கார்த்திகை மாதம் ஆரம்பம் சபரிமலை போறீங்களா... முதல்ல இதப்படிங்க!

கார்த்திகை மாதம் துவங்கியதும் இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்;கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டு தோறும் இருமுடி ஏந்தி சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன் சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால் பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்!

1. சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளே மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள் மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.

2. மாலை துளசி மணி 108 கொண்டதாகவோ உருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும்.

3. தாய் தந்தையின் நல்லாசியுடன் குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று கடவுள் பாதத்தில் மாலையை வைத்து அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம். இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்ளலாம்.

4. இவ்வாறு மாலை அணிந்த பின்பு  கோபதாபம் குரோதம் விரோதம் கொள்ளக்கூடாது. அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து சிநேகம் பாராட்டி பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.

5. காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும் மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி கோவில்களிலோ வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வணங்க வேண்டும்.

6. கருப்பு, நீலம், காவி, பச்சை நிற வேட்டி, சட்டை அணிய வேண்டும்.

7. பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

8. மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.

9. ரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

10. ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது.

11. பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.

12. மது மாமிசம் புகைபிடித்தலை விட்டுவிட வேண்டும்.

13. மாலை அணிந்த பக்தர்களின் வீட்டில் சாப்பிடலாம்.மற்றவர்கள் வீட்டில் பால் பழம் சாப்பிடலாம்.

14. வீட்டுப்பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால் ஏழுநாட்கள் கழித்த பின்னர் தான் அவர்கள் சமைத்த உணவை உண்ணவேண்டும்.

15. காலணிகள் பயன் படுத்தக்கூடாது.

16. கன்னிச் சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்விக்கலாம்.

17. எதிர்ப்படும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும் பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதிப் பழக வேண்டும்.

18. மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் எனத் தொடங்கி விடைபெறும் பொழுது சாமி சரணம் எனக் கூற வேண்டும்.

19. இருமுடிக்கட்டு பூஜையை வீட்டிலோ குருசாமி இடத்திலோ கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.

20. சபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.

21. பம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக்கடன்களைச் செய்து நீராட வேண்டும்.

22. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்திய படியே வீட்டு வாசல் படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.

23. வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து கட்டினைப் பிரித்து பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும்.

24. யாத்திரை இனிய முறையில் நிறைவுற்ற பின் குருநாதர் அல்லது தாயார் மூலம் மாலை கழற்ற வேண்டும்.  ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு முன்னால் வைத்து விட்டு தீபாராதனை காட்டி விரதம் முடிக்க வேண்டும்.

தெரிந்து கொள்ள வேண்டியவை:

1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை முடிவெட்டுதல் சவரம் செய்துகொள்ளுதல் கூடாது.

 2.மெத்தை தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல் தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும்.

3. பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம்.

4. மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும்.பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது.

5. விரத நாட்களில் பெண்களை சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும்.

6. வீட்டிலிருக்கும் பெண்கள் மாதவிலக்கானால் அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருத்தல் வேண்டும்.அப்படி வசதி இல்லாவிடில் மாலை அணிந்தவர்கள் வெளியில் எங்காவது தங்கியிருத்தல் நல்லது.

7. விரத சமயத்தில் மாலை அணிந்தவர்களுக்கு மிகவும் துன்பங்கள் ஏற்படும் என்பதும் சோதனைகளுக்கு உள்ளாவார்கள் என்பதும் தவறான கருத்துகளாகும்.

8. ஒருவேளை அணிந்திருக்கின்ற ஒரே மாலை தவறுதலாக அறுந்துபோக நேரிட்டால் அதைச் செப்பனிட்டு அணிந்துகொள்ளலாம்.இதில் தவறு ஏதுமில்லை.எந்தவிதமான தவறும் செய்யாமல் விரதத்தைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில் இப்படி மாலை அறுந்துவிட்டதே என்ற வீண் மன சஞ்சலமும் அடைய வேண்டியதில்லை.

9. மாலை போடும் சமயத்தில் எந்தவிதமான பயமோ சந்தேகமோ குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது.அப்படி மனசஞ்சலம் ஏதாவது இருந்தால் மாலை போடுவதை தள்ளிப்போடுதல் நல்லது.

10. ஐயப்ப விரதத்தில் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் பிற பெண்களின் தொண்டும் அப்பழுக்கற்ற பக்தியும் மிகவும் உயர்வானதும் போற்றத்தக்கதும் ஆகும்.

11. இருமுடி கட்டும் வைபவத்தை தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது.வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும்.

12. மாலையணிந்து சபரிமலைக்குச் செல்லும் நோக்கங்கள் மூன்று : தன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்; தன் புலன்களை எல்லாவகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம் உடல் இவற்றைத் தூய்மைப்படுத்துதல் தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல் வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்கவைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்.

13. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து முழு சரணாகதி அடைந்து ஒருமுகமாக வழிபட்டால் இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும்.படிகள் ஏற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்!