சனி, 24 ஆகஸ்ட், 2019

09.பாம்பாட்டி சித்தர்

மருதமலை காட்டிலுள்ள எல்லா பாம்புகளும் ஒன்று கூடின. பாம்புகளின் தலைவன் கவலையுடன் பேசியது. பாம்புகளே! நம்மைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழியையே பொய்யாக்கி விட்டான் அந்த இளைஞன். நம் தோழர்கள் எத்தனை பேர் இறந்திருப்பார்கள். அவனைக் கடிக்க மறைந்திருந்து தாக்கினாலும், எப்படியோ நாம் இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்து, நம்மைத் தூக்கி வீசி எறிந்து விடுகிறான். புற்றுகளையெல்லாம் இடித்து தள்ளுகிறான். அதனுள் இருக்கும் குஞ்சுகளை நசுக்கி விடுகிறான். நம்மிலுள்ள விஷப்பைகளை எடுத்து மருந்து தயாரிப்பதாகச் சொல்கிறான். இப்போது, நம் பாம்பினத்திற்கே பெருமை தரும் வகையில் ஒளிவீசும் நவரத்தினங்களை உள்ளடக்கிய ரத்தினப் பாம்பைப் பிடிக்க வருகிறான். அது மட்டும் அவனிடம் சிக்கி விட்டால், அவன் இந்த உலகத்திலேயே பெரிய செல்வந்தனாகி விடுவான். மன்னாதி மன்னரெல்லாம் கூட அவனிடம் சரணடைந்து விடுவார்கள், என்றது. எல்லாப்பாம்புகளும் வருத்தப் பட்டதே ஒழிய, அந்த இளைஞனுக்கு எதிராக கருத்துச் சொல்லக்கூடத் தயங்கின. இவை இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே, காலடி ஓசை கேட்டது. தங்கள் உணர்வலைகளால், வருபவன் அந்த இளைஞனே என்பதை உணர்ந்து கொண்ட பாம்புகள் திசைக்கு ஒன்றாக ஓடின. பாம்புகளின் தலைவனும் உயிருக்கு அஞ்சி எங்கோ சென்று மறைந்து கொண்டது. இப்படி பாம்புகளையே கலங்கடித்த அந்த இளைஞனுக்கென பெயர் ஏதும் இல்லை. பாம்புகளைப் பிடித்து மகுடி ஊதி ஆடச்செய்பவன் என்பதால், பாம்பாட்டி என்றே அவனை மருதமலை பகுதி மக்கள் அழைத்தனர். அந்த இளைஞனே பாம்பாட்டி சித்தர் என்ற பெயரில் பிற்காலத்தில் மக்களால் வணங்கப்பட்டார்.

அவர் திருக்கோகர்ணம் என்னும் புண்ணிய தலத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. இந்தத்தலம் கர்நாடக மாநிலத்தின் உட்பகுதியில் இருப்பதாகவும், ஒரு சாரார், அவர் அங்கே பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தமிழகத்தில் புதுக்கோட்டை நகர எல்லையிலுள்ள திருக்கோகர்ணத்தில் பிறந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இவர் பிறந்த ஊர் பற்றிய ஆதாரம் சரியாக இல்லை.இவர் இளைஞராக இருந்த காலத்தில் தான் பாம்புகளைப் பிடித்து அவற்றின் நாக ரத்தினங்களை எடுப்பதையும், விஷத்தைக் கொண்டு மருந்து தயாரிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்போது, நவரத்தின பாம்பு பற்றிக் கேள்விப் பட்டு, அதைப் பிடித்து அதனுள் இருக்கும் ரத்தினங்களை எடுத்து விற்றால், உலகத்தின் முதல் பணக் காரராகி விடலாம் என்ற எண்ணம் கொண்டார்.அவர் தான் இப்போது காட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறார்.பாம்புகள் மறைந்து ஓடின. அப்போது ஓரிடத்தில் ஒளிவெள்ளம் பாய்ந்தது. ஆஹா....நவரத்தின பாம்பு தான் அவ்விடத்தில் மறைந்திருக்கிறது. அது தன் உடலை முழுமையாக மறைக்க முடியாததால், அதன் உடல் ஒளிவீசுகிறது என பாம்பாட்டி சித்தர் நினைத்துக் கொண்டார். ஆனால், ஒளி வெள்ளம் சற்று மங்கி, அவர் முன்னால் ஒரு மனிதர் நின்றார். அவரிடம், மகானே! தாங்கள் யார்? தங்கள் உடல் பொன் போல் பிரகாசிக்கிறதே. ஒருவேளை நான் தேடி வந்த பாம்பாக இருந்த நீங்கள், என்னிடம் சிக்காமல் இருக்க மனித உருவம் கொண்டீர்களோ! என்றவர், அவரது தேஜஸைப் பார்த்து, தன்னையும் அறியாமல் அவரது பாதங்களில் விழுந்து வணங்கினார். அந்த மகான் பாம்பாட்டி சித்தரை ஆசிர்வதித்தார். இளைஞனே! நீ இந்த சாதாரண பாம்புகளைப் பிடிப்பதற்காகவா இந்த உலகத்தில் பிறந்தாய். உன் பிறப்பின் ரகசியமே வேறு. நீ தேடி வந்த செல்வத்தின் அளவு பெரியது தான்.

செல்வமே உலகத்தை ஆட்டிவைக்கும் கருவி என நீ நினைக்கிறாய். எல்லா மக்களுமே இப்படி நினைப்பதால், நீயும் நினைப்பது இயற்கையே. எனவே, சாதாரண செல்வத்தை தேடி இங்கு வந்திருக்கிறாய், என்றவரை இடைமறித்த பாம்பாட்டி சித்தர், சுவாமி! தாங்கள் யார்? தங்கள் உடலே பொன்போல் மின்னுகிறதே, என்றார்.மகனே! உடலைக்கூட பொன்னாகக் கருதி பார்க்கும் அளவுக்கு, உன் மூளையில் செல்வம் தேடுவதின் தாக்கம் தெரிகிறது. சரி...இந்த உடல் என்றாவது அழியத்தானே போகிறது. அப்போது அது தீயில் கருகியோ, மண்ணில் நைந்தோ உருத்தெரியாமல் போய்விடுமே. அப்போது பொன்னை எங்கே தேடுவாய், என்றார்.அவரது அந்த வார்த்தைகள் இளைஞனின் மனதைத் தொட்டன.சுவாமி! இந்த அரிய உபதேசத்தை செய்த தாங்கள் யார் என்பதை நான் அறிந்து கொள்ளும் தகுதியுடையவனா? என பாம்பாட்டியார் பணிவுடன் கேட்டதும், அவனது மனம் செல்வத்தில் இருந்து விடுபட்டுவிட்டது என்பதை வந்தவர் உணர்ந்து கொண்டார்.மகனே! நான் தான் சட்டைமுனி சித்தர்.

கருத்துகள் இல்லை: