சனி, 5 செப்டம்பர், 2020

யுகங்களின் கணக்கு


 யுகங்களின் கணக்கு  
 ------------------------------------

 இந்து மத சாஸ்திரங்களில் காலத்தை மிக சிறிய அளவாகிய பரம மகா காலம் முதல் மிகப்பெரிய அளவாகிய பிரம்மாவின் ஆயுள் ஆன இரு பரார்தங்கள் வரை கணக்கிட்டுள்ளனர்.

இதற்கிடையே உள்ள காலத்தை பல்வேறு யுகங்களாகவும் , மன்வந்திரங்களாகவும் பிரித்துள்ளனர். அவற்றின் கால அளவு பற்றிய விவரங்கள் கீழே..  

 
 பரம மகா காலம் முதல் வருடம் வரை :
 
 பிரபஞ்சத்தில் சிறுதுளி அவத்தையின் காலமே ஒரு பரமாணு அல்லது ஒரு பரம மகா காலமாகும்.

மூன்று பரமாணுக்களின் காலமே ஒரு திரேசிரேணு ஆகும்.

மூன்று திரேசிரேணுகளின் காலம் ஒரு துருடி ஆகும்.

நூறு துருடிகளின் காலம் ஒரு வேதகாலம் எனப்படும்.

மூன்று வேதகாலம் கூடினால் ஒரு லவம் ஆகும்.

மூன்று லவ காலம் ஒரு நிமிஷம் .

மூன்று நிமிஷம் ஒரு ஷணம் ஆகும்.

ஐந்து ஷணம் ஒரு காஷ்ட்டை .

பதினைந்து காஷ்ட்டை ஒரு இலகு.

பதினைந்து லகுக்கள் ஒருநாழிகை .

இரண்டு நாழிகை ஒரு முகூர்த்தம்
.
ஏழு நாழிகை ஒரு ஜாமம் .

மனிதருக்கு இரவு நாலு ஜாமம் ஆகும்.

எட்டு ஜாமம் ஒரு நாள் ஆகும்.

பதினைந்து நாள் ஒரு பஷம் ஆகும்.

இரண்டு பஷம் ஒரு மாதம் ஆகும்.

இது பிதுர்களின் ஒரு நாளாகும்.

இரண்டு மாதங்கள் ஒரு ருது.

ஆறு மாதங்கள் ஒரு அயனம் ஆகும்.

தட்சிணாயனம், உத்திராயணம் என்ற இரு அயனங்கள் சேர்ந்தது ஒரு வருடம் ஆகும்.

இது தேவர்களின் ஒரு நாளாகும்.

 
 யுகங்கள், மன்வந்திரம், கல்பம், பரார்த்தம்  
 
1728000 ஆண்டுகள் கிருத யுகத்தின் காலமாகும்.

1296000 ஆண்டுகள் த்ரேதா யுகத்தின் காலமாகும்.

864000 ஆண்டுகள் துவாபர யுகத்தின் காலமாகும்.

432000 ஆண்டுகள் கலி யுகத்தின் காலமாகும்.

இந்த நான்கு யுகங்களும் சேர்த்து ஒரு
 மகா யுகம்(சதுர் யுகம்) எனப்படும்.

இது போல 71 சதுர் யுகங்கள் சேர்ந்தது
 ஒரு மன்வந்திரம் எனப்படும்.

ஒவ்வொரு மன்வந்திரத்திலும் ஒரு இந்திரன்  ஆட்சியை செய்து கொண்டிருப்பார்.

அந்த மன்வந்திரம் முடிந்ததும் அடுத்த இந்திரன் ஆட்சிக்கு வருவார்.

மன்வந்திரம் பற்றிய சிறு குறிப்பு இடையில்..

[ இந்து மத சாஸ்திரங்களில் ஆயிரம் சதுர் யுகங்கள் சேர்ந்த காலம் ஒரு கல்பம் என்று கூறப்படுகிறது.
இந்த ஒரு கல்ப காலத்தில் 14 மனுக்கள்
 தங்கள் ஆட்சியை நடத்துவர் என்று கூறப்படுகிறது.
ஒரு மனு தன் ஆட்சியை நடத்தும் காலம் ஒரு
 மன்வந்திரம் ஆகும்.
ஒரு மன்வந்திர காலம் முடிந்தவுடன் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழிந்து விடும்
 என்றும் பின் புதிய மனு(மனு என்பவர் மனித குலத்தின் முதல் மனிதர் ஆவார்.)
 தோன்றி மானிட குலம் மீண்டும் உதயமாகும் என்றும் கூறப்படுகிறது.

இப்போது நடைபெறும் கல்பத்தில் 6 மன்வந்திரங்கள் ஏற்கனவே முடிந்து விட்டதாகவும் இப்போது நடைபெறும் ஏழாவது மன்வந்திரத்தில் வைவஸ்த மனு மனுவாகவும் புரந்தரன் இந்திரனாகவும் இருப்பதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

இப்போது நடைபெறும் கல்பத்தில் ஆட்சி செய்யும் மனுக்கள் மற்றும் இந்திரர்கள் பெயர்கள் பாகவத புராணத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 
 மன்வந்திரம் / மனு இந்திரர்
 
1 சுயம்பு / இந்திரன்
 
2 . ச்வாரோசிஷன் / ரோசன்
 
3 . உத்தமன்/ சத்யஜித்
 
4 . தபாசன்/ திரிசிகன்
 
5 . ரைவதன், விபு
 
6. சாசூசன்/ மந்திரதுருமன்
 
7 . வைவஸ்த மனு/ புரந்தரன்
 
8 . சாவர்ணி/ மகா பலி
 
9 . தசாசாவர்ணி/ சுரதன்
 
10 . பிரம்மா சாவர்ணி / சம்பு
 
11 . தர்மசாவர்ணி / வைதிருதி
 
12 . ருத்ர சாவர்ணி / ருது சாமவே
 
13 . தேவ சாவர்ணி / திவஸ்பதி
 
14 . இந்திரசாவர்ணி / சுகி ]

இவ்வாறு 14 மன்வந்திரங்களும் அதன் சந்திகளும் சேர்ந்தது ஒரு கல்பம் ஆகும்.

ஒரு கல்பம் ஆயிரம் சதுர் யுகங்கள் கால அளவை கொண்டிருக்கும்.

இந்த ஒரு கல்பம் பிரம்மாவின் ஒரு பகல் ஆகும். அதே கால அளவு அவரின் இரவாகும்.

இது போல 720 கல்பங்கள் அவரின் ஒரு ஆண்டாகும்.

பிரம்மாவின் 50 ஆண்டுகள் ஒரு பரார்த்தம் ஆகும்.

பிரம்மாவின் வயது நூறு ஆண்டுகள் ஆகும்

இந்த நூறு ஆண்டுகள் முடிந்ததும் மகா பிரளயம் ஏற்பட்டு பிரம்மா முதல் அனைத்து தேவர்கள், உயிரினங்களும் பரமாத்மாவில் கலந்து விடுவர்.

இதே கால அளவு பரமாத்மா சயனத்தில் இருப்பார். பின் புதிய பிரம்மாவை தோற்றுவித்து படைப்புகளை தொடர்வார்.
 
 ஒரு சதுர் யுகம் 4320000 வருடங்கள்
71 சதுர் யுகம் 306720000 வருடங்கள்
 
 சந்தி 1728000 வருடங்கள்
 சந்தியுடன் ஒரு மன்வந்திரம் 308448000 வருடங்கள்
 
 ஒரு கல்பம் 4320000000 வருடங்கள்
 
 பிரம்மாவின் ஒரு வருடம் 3110400000000 வருடங்கள்
 பிரம்மாவின் ஆயுள் 311040000000000 வருடங்கள்

என்ன தலை சுற்றுகிறதா..?

இணையத்தில் படித்தது..

நீங்களும் அறிந்திருக்க இங்கே பதிகிறேன்..