சனி, 27 ஜூலை, 2019

சீதா(சீதை)

காலம் காலமாக தலைமுறை தலைமுறையாகக் கேட்கப்பட்டும் படிக்கப்பட்டும் பழக்கப்பட்ட இதிகாசம் ராமாயணம். மூல ராமாயணமான வால்மீகி ராமாயணத்தைத் தழுவி 12க்கும் மேற்பட்ட ராமாயணங்கள் பல்வேறு மொழிகளில் ஸ்ரீராமனின் புகழ்பாடும் காவியங்களாகத் திகழ்கின்றன. இது பலருக்கும் தெரியும் ஆனால் சீதாயணம் என்ற காவியம் பற்றி தெரியுமா? அயணம் என்பது வழிநடந்த பாதையைக் குறிக்கும். ஸ்ரீராமன் நடந்து சென்ற பாதையும் அவன் காட்டிய தர்மநெறிகளும் ராமாயணமாகத் திகழ்கின்றன என்றால் ராமாயணத்தின் தெய்வீகக் கதாநாயகி சீதை வாழ்ந்து காட்டிய வரலாறு சீதாயணம் எனப்படுகிறது. இதை ராமாயணத்தின் ஒரு பகுதியாக நாம் எடுத்துக்கொள்ளலாம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த 10 அவதாரங்களில் ராமாவதாரமும் ஒன்று. இந்த அவதாரத்தில் ஸ்ரீராமனுக்கு உறுதுணையாக நின்று அவன் அவதாரப் பணி நிறை வேற விஷ்ணு பத்தினி மகாலட்சுமி எடுத்த அவதாரமே சீதாதேவி. தசரதனுக்கும் கோசலைக்கும் மகனாகப் பிறந்த ஸ்ரீராமனின் பிறப்பு பற்றியோ அவதார ரகசியம் பற்றியோ பல்வேறு பரிமாணங்களில் ராமாயணத்தில் பேசப்படவில்லை. ஆனால் சீதாதேவியின் பிறப்பு தோற்றம் பற்றிய விவரங்கள் வித்தியாசமான பரிமாணத்தில் காணப்படுகின்றன. சீதையின் ஒரு அவதாரத்துக்குள் மூன்று நான்கு அவதாரப் பரிமாணங்கள் காணப்படுகின்றன.

சரி யார் இந்த சீதை?

வால்மீகி ராமாயணத்தின் படி மிதிலை நகர் மன்னர் ஜனகர் ஒரு யாகத்தைச் செய்து முடித்து தங்கத்தால் ஆன உழுகருவியை ஏர்கொண்டு பூட்டி நிலத்தை உழுதார் அப்போது பூமியில் புதைந்து கிடந்த ஒரு வண்ணப்பெட்டகம் தட்டுப்பட்டு அதனுள் இருந்து ஓர் அழகான பெண் குழந்தை அவருக்குக் கிடைத்தது பூமித்தாய் தந்த புத்திரியாக ஏற்று அவளுக்கு ஜானகி என்று பெயரிட்டார் ஜனகர். சீராட்டி வளர்த்த அந்த மகள் பெரியவள் ஆனதும் அவளுக்காக சுயம்வரம் நடத்தினார். யாராலும் தூக்க முடியாத சிவ தனுஸை தசரதன் மைந்தன் ஸ்ரீராமன் வளைத்து முறித்து ஜானகியின் கரம் பற்றினான். இந்த சீதாராம கல்யாணக் கதை அனைவருக்கும் தெரிந்ததே! அதே நேரம் சீதையின் பிறப்பு ரகசியம் பற்றி அத்புத ராமாயணம் என்ற காவியத்திலும் ராவணனால் எழுதப்பட்ட இராவணீயம் என்ற நூலிலும் வித்தியாசமாகக் குறிப்பிட்பட்டுள்ளது.

ராவணனுக்கும் மண்டோதரிக்கும் பிறந்த முதல் பெண் குழந்தைதான் சீதை. தான் அன்றாடம் வணங்கும் சிவபெருமானின் இடப்பாகமாகத் திகழும் அன்னை பார்வதியே தனக்கு மகளாகப் பிறந்திருப்பதாக எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைந்தான் ராவணன். ஆனால் குழந்தையின் ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள் அந்தக் குழந்தை விஷ்ணுவின் அம்சமுடையது என்றும்  ராவணனை அழிக்கும் பொருட்டு விஷ்ணுவுக்கு உதவவே அந்தக் குழந்தை பிறந்திருக்கிறது என்றும் கூற அதிர்ச்சியானான் ராவணன் அந்தக் குழந்தையைக் கொன்று விட உத்தரவிட்டான் ஆனால் அவன் மனைவி மண்டோதரி சிசுஹத்தி பெரும் பாவம் என்றும் அதனால் தங்களுக்குச் சந்ததியே இல்லாமல் போய்விடும் என்றும் எடுத்துக் கூறி மன்றாடினாள். இதில் கொஞ்சம் மனம் இரங்கிய ராவணன் அந்தக் குழந்தையை சிவபெருமான் வீற்றிருக்கும் இமயத்திலேயே விட்டுவிடத் தீர்மானித்து கங்கையின் உற்பத்தி ஸ்தானத்தில் பனிபடர்ந்த ஒரு பகுதியில் பனிப்பாறைகளுக்கு நடுவில் பேழை ஒன்றில் வைத்து விட்டு விடுகிறான் . இப்படிச் செய்தால் பனியில் உறைந்து அந்தக் குழந்தை மடிந்து விடும் என நம்பினான்.

ஆனால் அதற்கு மாறாக பனி உருகி கங்கையின் பிரவாகத்தில் இழுத்துச் செல்லப்பட்டது அந்தப் பேழை. அது மிதிலை நகரை அடைந்து பூமிக்கடியில் புதைந்தது. அந்தக் தருணத்தில் தான் மன்னர் ஜனகர் ஏர் பூட்டி உழுதார். குழந்தையும் கிடைத்தது. பூமியை உழும் போது கிடைத்த குழந்தை என்பதால் ஏரின் கூரான பகுதிக்கு வழங்கப்பட்ட சீதா என்பதையே குழந்தைக்குப் பெயராகச் சூட்டினான். ஜனகர் மகள் என்பதால் ஜானகி என்றும் மிதிலை நகரில் கண்டெடுக்கப்பட்டதால் மைதிலி என்றும் அழைக்கப்பட்டாள் சீதை. அவளுக்கு வைதேஹி என்றும் ஒரு பெயர் உண்டு. தேவி மஹாத்மிய புராணத்திலோ சீதையின் அவதாரம் பற்றி முற்றிலும் வேறு விதமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதில் நாரதரிடம் பகவான் விஷ்ணுவே மகாலட்சுமி துளசி தேவியாகவும் வேதவதியாகவும் சீதையாகவும் அவதரிப்பாள் என்று கூறுவதாக வருகிறது. இந்தக் கதையை இன்னும் விளக்கமாகப் பார்ப்போம்.

த்ரேதா யுகத்தில் தர்மத்வஜன் குஜத்வஜன் என்னும் இரண்டு பேர் விஷ்ணுவை நோக்கிக் கடும் தவமிருந்து மகாலட்சுமியே தங்களுக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என வரம் கேட்டுப் பெற்றனர். அதன் படி தர்மத்வஜனுக்கு மகாலட்சுமியே பெண்ணாகப் பிறந்து பிருந்தா எனப் புகழ் பெற்றாள். தன் பதிவிரதா தர்மத்தால் பிருந்தாவே துளசி எனும் செடியாகி விஷ்ணு சேவை செய்து நம்மால் வழிபடப்பட்டு வருகிறாள். இதே போல் குஜத்வஜனுக்கும் மகாலட்சுமி பெண் குழந்தையாகப் பிறந்தாள். பிறந்த சில மணி நேரங்களிலேயே அந்தக் குழந்தையின் வாயிலிருந்து வேதங்கள் ஒலிக்க ஆரம்பித்தன. அதனால் அவள் வேதவதி என்று பெயர் பெற்றாள். ஒரு கானகத்தில் தபஸ்வினி போல தனிமையில் வாழ்ந்துகொண்டிருந்த அவள் விஷ்ணுவையே பதியாக அடைய வேண்டும் என்று கடும் தவம் புரிந்தாள். தர்மத்தைக் காக்க ஸ்ரீராமனாக அவதாரம் செய்யும் விஷ்ணுவுக்குப் பத்தினியாகி சேவை செய்ய வேண்டும் என்பது அவளின் ஆசை.

ஒரு நாள் வேதாவதி வாழ்ந்து வந்த கானகத்தின் வழியே ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருந்தான் ராவணன். யதார்த்தமாக வேதவல்லியை அவன்  கவனித்துவிட அக்கணமே அவள் அழகில்மயங்கினான். அவள் அருகில் சென்று அவள் கரத்தைப் பற்றினான். அதிர்ச்சியும் கோபமும் அடைந்த வேதவதி எந்த ஒரு பெண்ணையும் அவளுக்கு விருப்பமில்லாத நிலையில் ராவணன் தொட்டால் அக்கணமே அவனது தலை வெடித்துச் சிதறிவிடும் என்று சாபம் கொடுத்து விட்டு அங்கே எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீயில் அக்னிப் பிரவேசம் செய்தாள். அப்போது நான் மீண்டும் பிறந்து வந்து உன்னை அழிப்பேன்  என்று சபதமிட்டு அக்னியில் பஸ்பமாகி விடுகிறாள் அவள். அக்னிதேவனேச வேதவதியாகத் தோன்றிய மகாலட்சுமியைப் பாதுகாத்து வைத்துக்கொள்கிறான். பஞ்சவடியில் சீதா, லட்சுமணனுடன் ஸ்ரீராமன் வனவாசம் கழித்துக் கொண்டிருந்த நாளில் ஒரு நாள் மாலையில் சந்தியாவந்தனம் செய்யும் வேளையில் அக்னி பகவான் ஸ்ரீராமன் முன் தோன்றினான்.

ராமா! உன்னிடம் ஒரு பரமரகசியம் சொல்லவே வந்தேன். சில நாட்களில் ராவணன் தன் மாயா சக்தியால் உன் மனைவி சீதாதேவியை சிறையெடுத்துச் செல்வான். அப்போது நான் உன் மனைவி சீதைக்குப் பதில் என்னுள் மறைந்திருக்கும் வேதவதியை மாயா சீதையாக்கி ராவணனுடன் அனுப்பிவிடுவேன் நிஜ சீதாதேவியை நான் பவித்ரமாகப் பாதுகாத்து வைத்திருப்பேன். ராவண சம்ஹாரம் முடிந்த பிறகு மாயா சீதை உன்னை அடைவாள். அது வரை இந்த ரகசியத்தை நீ யாரிடமும் வெளியிடக் கூடாது ! என்றான் அக்னிதேவன். ஸ்ரீராமனும் அந்த ரகசியத்தைக் காப்பாற்றுவதாக சத்தியம் செய்து கொடுத்தான். இதன் படி ராவணன் பர்ணசாலையில் இருந்து சீதையைத் தூக்கிச் செல்லத் திட்டமிட்ட போது நிஜ சீதைக்கு பதில் மாயா சீதையே (வேதவதி) ராவணனுடன் செல்கிறாள். அசோகவனத்தில் இருந்து கொண்டு சீதையின் கடமைகளையே அவள் செய்கிறாள் சாபத்தின் காரணமாக ராவணனால் அவளை நெருங்க முடிய வில்லை. அதே நேரம் நிஜ சீதை அக்னிதேவன் பாதுகாப்பில் பத்திரமாக இருந்தாள்.

ராவண வதம் முடிந்ததும் ஸ்ரீராமன் சீதைக்கு அக்னிப் பரீட்சை நடத்தினான். லட்சுமணன், ஹனுமன், விபீஷணன், சுக்ரீவன் போன்றவர்கள் சீதைக்கா அக்னிப் பரீட்சை என்று கலங்கிக் கண்ணீர் வடித்தனர். ஆனால் அதற்கான காரணம் ஸ்ரீராமனுக்கும் அக்னிதேவனுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. தீக்குளித்த மாயா சீதை (வேதவதி) அக்னி தேவனை அடைகிறாள். தன்னிடம் அடைக்கலத்தில் இருந்த நிஜ சீதையை ஸ்ரீராமனிடம் சேர்க்கிறான்  அக்னிதேவன். ஏகபத்தினி விரதனான ஸ்ரீராமன் ராமாவதாரத்தில் வேதவதியை மனைவியாக ஏற்க முடிய வில்லை. ஆனால் கலியுகத்தில் அவளை ஏற்பதாக வாக்களிக்கிறான் திருமலையில் ஸ்ரீநிவாசப் பெருமாளாக அருள் பாளிக்கும் வேங்கடாசலபதியின் தேவியாகத் திகழும் பத்மாவதி வேதவதியின் அவதாரமே! தேவி மஹாத்மியம் மட்டுமின்றி வெங்கடேஸ்வர மஹாத்மியம் எனும் திருமலை ஸ்தல புராணத்திலும் வேதவதி என்கிற வேதவல்லியின் வரலாறு காணப்படுகிறது. இன்னொரு கதையில் பூமித்தாயின் புத்ரிதான் சீதை என்கிற தகவல் நமக்கக் கிடைக்கிறது. இந்தக் கதையையும் பார்த்துவிடுவோமே! இந்தத் தகவலைச் சொல்வது உத்தர ராமாயணம் இதில் சீதாதேவி இரண்டாவது வனவாசம் ஏற்றுக்கொள்வது பற்றி விரிவாக விளக்கப்படுகிறது.

கர்ப்பிணியான சீதை வால்மீகி மஹரிஷி ஆஸ்ரமத்தில் வாழ்ந்து லவ குசர்களைப் பெற்றெடுத்தாள். உலக அபவாதத்துக்கு கூட நியாயம் வழங்க நினைத்து மனைவி சீதையைக் காட்டுக்கு அனுப்பி இருந்தான் ஸ்ரீராமன். ராஜாராமனாக வாழ்வதா சீதாராமனாக வாழ்வதா என்ற பிரச்சனையில் ராஜாராமனாகவே வாழ முடிவு செய்து சீதையைத் தியாகம் செய்தான் ஸ்ரீராமன். நிந்தித்தவர்களே தவறுகளை நினைத்துத் திருந்தி மன்னிப்புக் கோரியபோதும் சீதை அயோத்திக்கு திரும்ப விரும்பவில்லை. ராமாவதாரம் முடியப் போகிறது என்பதை முன் கூட்டியே அறிந்து ஸ்ரீராமன் பாற்கடல் விஷ்ணுவோடு ஐக்கியமாகும் முன்பே சீதாதேவி தன் தாயான பூமா தேவியை வேண்டி வரவழைத்து அவள் மடியில் சரணடைந்து விடுகிறாள். ஆக அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு எடுத்த ராமாவதாரத்தில் அவருக்குச் சரிசமமாகத் தன் பணியைச் செய்து துன்பங்களை ஏற்று தியாகங்களை விரும்பிச் செய்து சூரியவம்சத்தின் புகழ் மறையாதிருக்க லவ குசர்கள் எனும் இரு வாரிசுகளையும் தந்து ராமாயணத்தை ஒரு தொடர் கதையாக்கிய தெய்வீக வடிவம் தான் மகாலட்சுமியின் அம்சமான சீதை!
------------------------------------------------------------------------------------------------------------
2ம் நூற்றாண்டு சிவலிங்கம்!

கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிவலிங்கத்தை ஆந்திரா மாநிலத்திலுள்ள ரேணிகுண்டாவிற்கு அருகிலுள்ள குடிமல்லம் தலத்தில் தரிசிக்கலாம். 5 அடி உயரம் கொண்ட இச் சிவலிங்கத்திற்கு ஆவுடையார் கிடையாது. பாணத்திலேயே சிவபெருமானின் உருவம் உள்ளது. அதில் கைகளும், காலடியில் ஒரு அரக்கன் மிதிபட்டுக் கிடக்கும் காட்சியையும் காணலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
அனுமன் பூஜித்த ஆதி ராமர்!

மந்திராலயம் திருத்தலத்தில் ஆதிராமர் விக்ரகம் உள்ளது. இந்த விக்ரகத்தை முதலில் அனுமன் பூஜித்தாராம். பின்னர் பீமன் மற்றும் பலரால் பூஜிக்கப்பட்டு மத்வாச்சாரியாரிடம் வந்தது. அதன்பின் ஸ்ரீராகவேந்திரரால் பூஜிக்கப்பட்டது. அது முதல் இந்த விக்ரகம் மந்திராலயத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
பூரியில் மெத்தைக்கு பூஜை!

பூரியில் ஆதி சங்கரர் நிறுவியது,  கோவர்த்தன பீடம். சொர்க்கத்தின் நுழைவாயில் என்று பொருள்படும் ஸ்வர்க்கதுவார் என்ற கடற்கரைப்பகுதியில் இப்பீடம் உள்ளது. இங்குள்ள உமாதேவி கோயிலிற்கு எதிரில் உள்ள கோயிலில் மிகவும் நைந்துபோன ஒரு பழைய மெத்தையை பட்டாடை போர்த்தி மலர்களைத் தூவி வைத்திருக்கின்றனர். இந்த மெத்தை மிகவும் புனிதம் வாய்ந்தது. காரணம், ஆதிசங்கரர் கோவர்த்தன பீடத்தை நிறுவியபோது இதில் அமர்ந்துதான் பக்தர்களுக்கு ஆசி வழங்கி, உபதேசமும் செய்தாராம். எனவே இப்படுக்கைக்கு இப்போதும் தினசரி பூஜையும் தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
கல்யாணம் நடக்க மாங்கல்ய காணிக்கை!

உத்திரமேரூரில் உள்ள அனந்தவல்லித் தாயாரை வழிபட்டால் கல்யாணம் விரைவில் நடக்கும் என்பதுநம்பிக்கை.இக்கோயிலில் அதிக அளவில் பக்தர்கள் திருமாங்கல்யம் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
------------------------------------------------------------------------------------------------------------
பெரிய சப்தமாதர்கள் சிலை

ஒடிஸா,ஜாஜ்பூர் நகரில் வைதரணி நதிக்கரையில் பல கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஓர் கோயிலில் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வாராஹி, இந்திராணி, காளி எனப்படும் சப்த மாதர்களின் கரங்களில் தவழும் அழகிய குழந்தைகளுடன் சுமார் ஆறடி உயரத்தில் உருவச்சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய சப்தமாதர் சிலைகள் வேறெங்கும் இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------
பஞ்ச கங்கைகள் எவை?

காவேரி,துங்க பத்ரா,கிருஷ்ணவேணி,கோதாவரி,கங்கை ஆகிய ஐந்தையும் பஞ்ச கங்கைகள் என்று தர்மசாஸ்திர நூல்கள்
கூறுகின்றன.
------------------------------------------------------------------------------------------------------------
கம்பத்தடியான் வழிபாடு!

திருநெல்வேலி சந்திப்பிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மேலத் திருவேங்கட புரம் திருவேங்கடநாதன் கோயிலின் வெளியே கொடி மரம் இருப்பது விசேஷம். இதில் கம்பத்தடியன் என்ற தெய்வம் இருக்கிறது. உயரமான கட்டடங்களில் வேலை செய்பவர்கள் இந்த கம்பத் தடியனை வழிபட்டால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்பது நம்பிக்கை.
------------------------------------------------------------------------------------------------------------
புரி ஜகந்நாதருக்கு அலங்காரம்!

புரி ஜகந்நாதருக்கு ஒரே நாளில் பலமுறை உடைகள் மாற்றப்படுகின்றன. மங்கள ஆரத்தி வேஷம் என்பது காலை உடை. அவகாச வேஷம் என்பது ஓய்வின் போது உடுத்தப்படும் உடை. பிரப வேஷம் என்பது பகல் உடை, படாசிருங்கார் வேஷம் என்பது, தர்பார் உடை. தாமோதர் வேஷம் என்பது, குழந்தை உடை. வாமன வேஷம் என்பது சிறிய உடை- - இப்படி நாள் முழுவதும் அவருக்குப் பலவித அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
------------------------------------------------------------------------------------------------------------
வடசாவித்ரி விரதம்

இங்கு காரடையான் நோன்பினை வடசாவித்ரி விரதம் என்ற பெயரில் வடநாட்டுப் பெண்கள் கடைப்பிடிக்கின்றனர். அன்றைய தினம் அரச மரத்தினை சுற்றி வந்து நூல்  சுற்றி வணங்குகின்றனர். காட்டில் மரம்வெட்டும்போது சத்தியவானின் உயிர் காப்பாற்றப்பட்டதால் அந்த மரத்தையே புனிதமாகக்கருதி வழிபடுகிறார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
ஆனைக்கல்லுப்பாறை!

ராஜபாளையம் அருகே சஞ்சீவி மலையடிவாரம் உள்ளது. இங்குள்ள பாறை மிகப் பெரிய உருண்டை வடிவில், விரிசல் ஏற்பட்டு தனியாக உள்ளது. இதனை ஆனைக்கல்லு என்றழைப்பர். பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பாறையை உடைக்க ஆங்கிலேய அதிகாரி உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது; இந்தப் பாறையை உடைக்கும்போது அதிலிருந்து ரத்தம், பால் வந்ததாகவும்;  இதனால் இதனை உடைக்கும் முயற்சியை கைவிட்டதாகவும் செவி வழிச் செய்தியாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தற்போது ஆனைக்கல்லுப் பாறையை மக்கள் வழிபாட்டுத் தலமாகக் கொண்டு, திருவிழா நடத்தி வருகின்றனர். சாதி, மத, இன வேறுபாடின்றி, இப்பாறையை மக்கள் இன்னமும் வழிபட்டு வருகின்றனர்.
------------------------------------------------------------------------------------------------------------
நவநந்தி தரிசனம்!

பத்ம நந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, கருட நந்தி, சிவநந்தி, விஷ்ணு நந்தி, சோம நந்தி, மகா நந்தி, சூரியநந்தி இவற்றையே நவநந்திகள் என்று அழைக்கிறோம். இந்த நவநந்திகள் ஆந்திர மாநிலம் நந்தியால் எனும் ஊருக்கு பத்து கி.மீ தூரத்தில் உள்ளன.
------------------------------------------------------------------------------------------------------------
உண்மையின் கதவுகள் திறக்கட்டும்!

* சில இடங்களில் கடல் அமைதியாய் ஆர்ப்பரிக்காமல் இருக்கிறது. அதற்காக அலை இல்லாமலா போய்விட்டது? அதுபோலஉழைத்துக் கொண்டும், இயங்கிக் கொண்டும்
இருங்கள்.

* காலைப் பொழுதில் தளிர்களும், இலைகளும் சூரியனின் ஒளியில் தலையசைப்பதுபோல, புத்துணர்ச்சியுடன் செயல்படத் தொடங்குங்கள்.

* அழகுணர்வும்,ஒழுக்கத்தின் மேன்மையும் நிறைந்த வாழ்வில் துயரம் என்பதற்கு சிறிதும் இடமில்லை. அமைதியும், மகிழ்ச்சியும் அப்போது ஆனந்தம் நர்த்தனமாடத் துவங்கிவிடும்.

* உண்மையை அடைய அன்பு ஒன்றே சிறந்த வழி. ஆனால், அவ்வழி அதிக விலை உடையதாய் இருக்கிறது. தவறுகளை நாம் எப்போதும் மறைத்துவிட முயலக்கூடாது. அதனால், உண்மையின் கதவுகள் அடைபட்டுப் போய்விடும்.

* நாம் உண்மையாய்உழைக்கத் தொடங்கினால் இறைவன் வாழ்வளிப்பான். நாம் உள்ளம் கசிந்து பாடித் துதித்தால் இறைவன் நம்மை விரும்பத் தொடங்குவான்.

* அன்பு நம் அறிவை செம்மைப்படுத்தி விடுதலை அளிக்கும் ஆற்றல் கொண்டது. நாம் அனைவரும் அன்பினால் மட்டும் ஒற்றுமையுடன் வாழ முடியும்.

* உண்மைக்கு அப்பாற்பட்டு எவன் ஒருவனுடைய புகழ் பளிச்சிடுகிறதோ, அவனே பெருமைக்குரிய மனிதனாவான்.

* அடக்கத்தோடு இருக்கும் மனிதர்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மையை பலரும் புரிந்து
கொள்வதில்லை.
* இந்த உலகம் அழகுமயமாகவும், மகிழ்ச்சிமிக்கதாகவும் விளங்குவதற்கான முயற்சிகள் அனைத்தையும் செயல்படுத்துதல் அவசியமானதாகும்.

* நேர்மை உள்ள மனிதன் தோல்வியைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை பெற்றிருப்பான். ஆனால், நேர்மையில்லாமல் வாழ்வில் தவறு செய்வது மட்டுமே வாழ்க்கை என்று இருப்பவர்கள்தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிப்பார்கள்.வேண்டுகோள் விடுக்கிறார் தாகூர்.
------------------------------------------------------------------------------------------------------------
இரவு முழுவது திறந்திருக்கும் கோயில்!

மதுரை, சிலார்பட்டி கிராமத்தில் உள்ள காலதேவியம்மன் கோயில் கோபுரத்தில் நேரமே உலகம் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த காலதேவியம்மனால் கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்ற முடியுமாம். 51 அடி உயரத்தில் முறம் போன்ற அமைப்பில் பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது கோயில் கோபுரம். அரிசியைப் புடைக்கும் போது, எப்படி தேவையில்லாத கல், குப்பை எல்லாம் வெளியே போகுதோ, அதேபோல் நம் கெட்ட நேரமும் வெளியே போகத்தான் இந்த வடிவமாம். மாலை 6 மணி முதல் விடியற்காலை 6 மணி வரை (இரவு நேரம் முழுவதும்) நடை திறந்தே உள்ள அபூர்வமாகக் கோயில் இது!
------------------------------------------------------------------------------------------------------------
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி!

கண்ணனுக்கு பல மனைவியர். இருந்தாலும், அவர் தன்னை பிரம்மச்சாரி என்கிறார். எப்படி? யமுனைக்கரையில் இருந்த ஒரு மாளிகையில் கண்ணனும், ருக்மிணியும் தங்கியிருந்தனர். நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மறுகரையில், கண்ணனின் பக்தரான துர்வாச முனிவர் நல்ல பசியுடன் காத்திருந்தார். பக்தனின் பசி பொறுக்காத கண்ணன், ருக்மிணி! என் பக்தர் துர்வாசர் கடும்பசியுடன் அக்கரையில் காத்திருக்கிறார். நீ போய் உணவு பரிமாறி விட்டுவா, என்று உத்தரவிட்டார்.சுவாமி! ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருக்கிறதே! எப்படி கடந்து செல்வது? என்றாள் அவள். நீ யமுனையின் அருகில் போய், நித்ய பிரம்மச்சாரியான கிருஷ்ணர், துர்வாச முனிவருக்கு உணவளிக்க என்னை அனுப்பியுள்ளார். எனவே நீ வழிவிடு என்று சொல். ஆறு இரண்டாகப் பிரிந்து வழிவிடும், என்று பதிலளித்தார் கண்ணன். என்ன சொல்கிறார் இவர்! பல மனைவியருடன் வாழும் இவரா பிரம்மச்சாரி! எதற்காக இப்படி சொல்கிறார்? அவள் குழம்பியபடியே, கிருஷ்ணர் சொன்னதைச் செய்தாள்.  யமுனையும் வழிவிட்டது. அவள் போய் வந்ததும், அவளது முகக்குறிப்பைக் கொண்டே அவளது சந்தேகத்தைப் புரிந்து கொண்ட கண்ணன்,யார் ஒருவன் உலகமக்களைப் பக்தி வழியில் திருப்ப முயற்சிக் கிறானோ அவன் பிரம்மச்சாரியாவான். அந்தப் பணியை நானும் செய்கிறேன். எனவே, நானும் பிரம்மச்சாரி தான். இதை யமுனை புரிந்து கொண்டு வழிவிட்டது, என்றார். பக்தி நெறியில் உங்கள் மனதைச் செலுத்துவதுடன், பிறருக்கும் வழிகாட்டுங்கள். புரிகிறதா!
------------------------------------------------------------------------------------------------------------
மாணவர்களுக்கு ஞாபகசக்தி தேவை!

* பகுத்தறிவு இல்லாத விலங்குகள் கூட தங்கள் வாழ்க்கை முறைகளை இஷ்டம் போல மாற்றிக் கொள்வதில்லை. ஆனால், மனிதன் மனம் போன போக்கில் நடந்து அமைதியை இழந்து வாழ்கிறான்.

* நவீன வாழ்க்கை முறை மனிதனை நாகரிகம் என்றபெயரில் கட்டுப்பாடில்லாமல் வாழ வகுத்துவிட்டது. பண்பாடு என்பது காலத்திற்கு காலம் மாறுவதில்லை.

* வாழ்க்கையில் வெற்றி பெற நினைவாற்றல் மிகவும் அவசியம். ஞாபகமறதி குணம் கொண்டவர்கள் நிறைய தவறுகளைச் செய்வார்கள். ஞாபகத்திறனை வளர்த்துக் கொண்டால் ஆன்மிக வாழ்விலும் சாதிக்க முடியும்.

* நம்முடைய உள்மனம் தான் ஞாபகசக்திக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது. பள்ளியில் படிக்கும்போதே மாணவர்களின் ஞாபகசக்தியை வளர்த்துக் கொள்ள
வேண்டும்.

* புலனடக்கத்தையும், உணவில் கட்டுப்பாட்டையும் பின் பற்றினால் நினைவாற்றல் பெருகும். ஆற்றலை வீணாக்கும் வேண்டாத பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பது அவசியம்.

* நாம் செய்யும் செயல் எதுவாக இருந்தாலும் ஆர்வமுடன் பணியாற்றவேண்டும். தியானப்பயிற்சி, மவுனவிரதம் ஆகியவை ஞாபகத்திறனை மேம்படுத்தும்.

* நல்லவிஷயங்கள் எங்கிருந்தாலும் நாடிச் செல்லுங்கள். அவற்றை மனதில் நிலைநிறுத்துங்கள். இறையுணர்வில் ஈடுபாடு கொண்டு வாழ்வை அர்த்தமுள்ளதாக்குங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
காயசித்தி என்றால் என்ன?

காயம் என்பது உடலையும், சித்தி என்பது வெற்றியையும் குறிக்கும். காயம் எனும் உடலைப் பேணி உயிரைப் பாதுகாத்து அறிவை வளர்த்து வாழ்க்கையில் வெற்றி பெறுவதையே காயசித்தி என்பர்.உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று கூறும் திருமந்திர ஆசிரியர் திருமூலர், இம்மண்ணில் காயசித்தி மூலமே மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தார்.
------------------------------------------------------------------------------------------------------------
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?

பெரியவாளுடைய இந்த அறிவுரை நம் எல்லோருக்கும் ஒரு சம்மட்டி அடி !
சிமிழி பிரஹ்மஸ்ரீ வெங்கட்ராம சாஸ்த்ரிகள் பெரியவாளுடைய அன்புக்கும் அபிமானத்துக்கும் ரொம்ப அருகதை உடையவர். அப்படியொரு அனுஷ்டானம் ! பெரியவாளிடம் பக்தி!அவர் மறைந்ததும் அவருடைய பிள்ளைக்கு பால்யத்திலேயே ரெண்டு சன்யாசிகள் மூலமாக தேவி உபாசனை உபதேசிக்கப்பட்டது. பல ஆண்டுகள் உபாசித்தும் உபாசனையில் வாக்கு சரீரம் ரெண்டும் ஈடுபடர அளவு மனஸ் ஈடுபட மாட்டேங்கறது. அதனால மனசுக்கு சாந்தி கெடைக்கவேயில்லை என்ற இந்த உண்மையான எண்ணம் ரொம்ப வலுத்துக் கொண்டே போனது. பல வழிகளை கையாண்டும் ஒன்றும் பிரயோஜனமில்லை. பெரியவா மட்டுமே இதற்கு வழி காட்டமுடியும் என்ற நம்பிக்கையில் பெரியவாளிடம் வந்தார்.கார்வேட் நகரில் ஒரு குளக்கரையில் அழகாக வேய்ந்திருந்த ஒரு சிறு கொட்டகையின் வாசலில் அமர்ந்திருந்தார். எத்தனைதான் அறிமுகம் இருந்தாலும் பூர்வர்கள் யார் யார் என்பதெல்லாம் தெரியாதது மாதிரி கேட்டுக் கொள்வார். நாம் இன்னாரது வம்சத்தில் வந்திருக்கிறோம் என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வதை அவர் மிகவும் விரும்புவதாக இருக்கும். இந்த உபாசகரும் தான் சிமிழி சாஸ்த்ரிகள் பிள்ளை என்று சொல்லிவிட்டு தன் மனஸ் படும் கஷ்டத்தை சொல்லி வழிகாட்ட வேண்டும் என்று வேண்டினார். அப்போது நடந்த சம்பாஷணை…தேவி உபாசனை பல வர்ஷங்களா பண்ணிண்டு இருக்கேன். ஆனா மனஸ் துளிகூட ஈடுபடலை. ரொம்ப உறுத்தறது. எனக்கு ஒரு வழி காட்டணும் பெரியவா

என்ன சொல்றே? அதனால என்ன தப்பு?மனஸ் தனி வஸ்துவா இருக்கறதால பூஜை முழுமையாகாத மாதிரி இருக்கு அதுக்கு நா என்ன பண்ணறது?மனஸ் ஈடுபட ஒரு வழி காட்டணும் என்ன படிச்சிருக்கே?…சொன்னார்.இத்தனை படிச்சும் ஒனக்கு விவேகமில்லே! ஒன் மனஸை நா திருத்த முடியாது

என்னாலேயே என்னை திருத்திக்க முடியலை. அதான் பெரியவாட்ட வந்தேன் என்னை என்ன செய்ய சொல்றே?மனஸ் சாந்தி அடையணும்
நீ என்ன பூஜை பண்றே?
அம்பாளை படத்துலேயும் விக்ரஹத்துலேயும் யந்த்ரத்துலேயும் பூஜை பண்ணறேன்

ரொம்ப சரி. படத்ல அம்பாள் இருக்கறதா நெனச்சுதான பூஜை பண்றே?ஆமாம் அப்போ...இந்த கொறையைக் கூட அவகிட்டயே சொல்லியிருக்கலாமே? நெறைய படிச்சிருக்கே. படம் விக்ரஹம் யந்த்ரம்….ன்னு எல்லா எடத்துலேயும் அவ இருக்கறதா பூஜையும் பண்றே. ஆனா ஒண்ணுலயும் ஒனக்கு பிடிப்போ நம்பிக்கையோ இல்லை. அம்பாள் ஓங்காத்துலேயே ஒன் பக்கத்துலேயே இருக்கறச்சே ஒன் கொறையை அவட்ட சொல்லி அழத் தெரியலையே! இனிமே அவகிட்டயே சொல்லி அழு! இங்க வராதே. நான் என்ன பண்ண முடியும்?மிகவும் சூடாக பதில் வந்ததும் உபாசகர் விக்கித்து நின்றார். மனஸ் இந்த பேரிடியை தாங்கமாட்டாமல், கண்களில் ஜலம் முட்டி நின்றது. நமஸ்காரம் பண்ணிவிட்டு உத்தரவு வாங்கிக் கொள்ள யத்தனித்தார். அம்பாள் மனஸ் இறங்கினாள்………..

ரொம்ப கோவிச்சுண்டுட்டேன.! நீயே ரொம்ப ஆசையா அம்பாளை உபாசனை பண்றே! மனஸ் ஈடுபடலை..ன்னு ஒனக்கே தெரியறது. உபாசனை…ன்னா சமீபத்ல இருக்கறதுன்னு அர்த்தம். ஒனக்கு எப்பவுமே பக்கத்ல இருக்கறவள் கிட்டே ஒன்னோட கொறையை சொல்லாம நீட்டி மொழக்கிண்டு எங்கிட்ட வந்தியே!…ங்கறதாலதா கொஞ்சம் அப்பிடி ஒரைக்கறா மாதிரி சொன்னேன்.

இனிமே… என்ன கொறையானாலும் எதுக்கும் அவளைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்லக் கூடாது ! நீ பூஜை பண்ற தெய்வத்துகிட்ட அது அம்பாளோ சிவனோ விஷ்ணுவோ பிள்ளையாரோ….யாரா இருந்தாலும் சரி அவா கிட்டேயே கேட்டாத்தான் ஒன்னோட நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி அனுக்ரகமும் கெடைக்கும். உன் உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?...நம்பிக்கை தான் எல்லாம். அவளோட அனுக்கிரகம் ஒனக்கு நிச்சயமா உண்டு! கவலைப்படாதே…க்ஷேமமா இரு! என்று அபயஹஸ்தம் கொடுத்தாள். இனி ?……எனக்கென்ன மனக்கவலை? என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை.
------------------------------------------------------------------------------------------------------------
சுந்தர ஸ்வாமிகள், கோடகநல்லூர்

1831 ஆம் வருடம் டிசம்பர் 3 ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனுஷ நட்சத்திரம், ரிஷப லக்னத்தில் அமாவாசை நாளில் திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் அவதரித்தார். ஸ்ரீ சுந்தர சுவாமிகள். ஸ்ரீவத்ஸ கோத்ரத்தைச் சேர்ந்த யக்ஞேஸ்வர சாஸ்திரிகள் காமாட்சி அம்மாள் தம்பதியின் 2வது மகனாகப் பிறந்தார். மூத்தவன் குப்பாணி சிவம்.

அப்பய்ய தீட்சிதரின் பரம்பரையில் அவதரித்தவர் சுந்தர ஸ்வாமிகள். இவர் பிறந்த ஒண்ணரை ஆண்டிலேயே இவரின் பெற்றோர் இறந்தனர். எனவே தாய்மாமனான வேங்கடசுப்பய்யர்தான் சுந்தரத்தை வளர்த்து வந்தார். சிறுவர்களான குப்பாணி சிவம் மற்றும் சுந்தரம் இருவரும் கல்வி பயிலுவதற்காக கங்கை கொண்டானில் இருந்து பக்தமடைக்கு இடம் பெயர்ந்தனர். சுந்தரத்துக்கு 5 வயதில் அட்ச அப்பியாசமும் ஏழு வயதில் உபநயனமும் நடைபெற்றது. பத்தடையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ண கனபாடிகளிடம் வேத அத்யயனம் பயின்ற சுந்தரம். கல்விகேள்விகளில் சிறந்து விளங்கினான். இவனது திறனைக் கண்டு வியந்த ஊர்க்காரர்கள் தெய்வீகப் பிறவியப்பா சுந்தரம். இப்படியொரு புள்ள நம்ம ஊர்ல வளர்றதுக்கு நாமெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும் என்று பெருமிதம் கொண்டனர்.

சிவபூஜை செய்வதில் ஈடுபாடு கொண்ட சுந்தரம் தினமும் ஒரு லட்சம் முறை பஞ்சாட்ர மந்திரத்தை ஜபித்து வந்தான். மேலும் யாகம், தவம் ஆகியவற்றிலும் கரை கண்டிருந்தான் சுந்தரம். நெல்லை மாவட்டம் அடைச்சாணி எனும் கிராமத்தைச் சேர்ந்த ராமசுப்பய்யரின் மகள் ஜானிக்கும் சுந்தரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது சுந்தரத்துக்கு வயது பதினாறு. தன்னுடைய மாப்பிள்ளையின் சிவபக்தியைக் கண்டு வியந்த ராமசுப்பய்யர். சிவ பூஜைக்கான நியமங்கள் சிலவற்றை அவருக்கு போதித்தார். அத்துடன் நெடுநாளாக தான் பூஜித்து வந்த பாணலிங்கம், ஸ்ரீநடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் ஆகிய விக்கிரகங்களையும் வழங்கினார்.



இந்த நிலையில் அடைச்சாணியில் உள்ள விஸ்வேஸ்வர சாஸ்திரிகள் என்பவரிடம் மந்திர உபதேசம் பெற்ற சுந்தரம். இவரை தமது குருவாகவும் ஏற்றார். இதையடுத்து பத்தமடைக்கு திரும்பிய சுந்தரம் ஸ்வாமிகள் தன் வாழ்க்கை முறையை மாற்றலானார். கணவரின் எண்ணத்துக்கு தக்கபடி சுவாமிகளின் துணைவியார் ஜானகியும் தியாகங்கள் சிலவற்றைச் செய்தார். பின்னர் தனது குருவின் ஆணைப்படி துணைவியார் ஜானகிக்கு மந்திரங்கள் உபதேசித்து அவரை தனது முதல் சீடராக ஏற்றார். துணைவியாரின் விருப்பமும் இதுவே, இதையெடுத்து சில ஆண்டுகளில் சுவாமிகளை அறிந்த அன்பர்கள் பலர் இவருக்கு சீடர்களானார்கள்.

ஒருமுறை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கோயில்கள் தரிசிக்க யாத்திரை மேற்கொண்டார் சுவாமிகள். பயணத்தின்போது சூத சமஹிதை குறித்து உரை நிகழ்த்தினார். (சிவபக்தி, சிவபூஜை, ஆசனங்கள் அஷ்டமாஸித்தி அஷ்டமாயோகம் ஆகியவை குறித்து சூத புவராணிகர் அருளியதே சூத சம்ஹிதை) சிவபூஜை செய்தார்.

புனித பூமியாம் காசிக்குச் சென்று கங்கையில் நீராடி காசி விஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் அன்னபூரணியை தரிசிக்க விரும்பிய சுவாமிகள் யாத்திரை புறப்பட்டார். மதுரை, திருச்சி, திருவையாறு, மாயவரம், சீர்காழி, சிதம்பரம், வேதாரண்யம், விருத்தாசலம் முதலான தலங்களை தரிசித்து அங்கு உள்ள பக்தர்களுக்கு ஆசி வழங்கி பின்னர் காசியை அடைந்தார். கங்கையில் நீராடினார். கோயில்கள் பலவற்றையும் தரிசித்தார். காசியில் உள்ள யோகிகள் பலரிடமும் உரையாடினார். அப்போது இறை பலமும் எண்ணற்ற கலைகளும் கைவரப்பெற்ற மகா கணபதி சுவாமிகளை சந்திக்க நேர்ந்தது. அதுவும் எப்படி?

தொடர்ந்து ஆறு மாத காலம் நீருக்கு அடியிலேயே வசிக்கும் யோகப் பயிற்சியை அறிந்த மகா கணபதி சுவாமிகளை அவர் கங்கை நதிக்குள் தவம் இருப்பதை அறிந்து தானும் அங்கு சென்று சந்தித்தார் சுந்தர ஸ்வாமிகளை இருவரும் பல அரிய தகவல்களை பரிமாறிக் கொண்டனர். மணிகர்ணிகா கட்ட படித்துறையில் இந்த இரண்டு துறவிகளது கல் விக்கிரகங்களை இன்றைக்கும் தரிசிக்கலாம்.

காசியிலிருந்து நெல்லைச் சீமைக்கு திரும்பிய சுந்தர ஸ்வாமிகள் பத்தமடை, கோடகநல்லூர் சுத்தமல்லி, கடையம் முதலான தலங்களுக்குச் சென்றார். (தனது குரு திருச்சமாதி அடைந்த அடைச்சாணிக்கும் சென்று தரிசித்தார்) கடையத்தில் சேஷாசல தீட்சிதர் என்பவரை சந்தித்த பின் சன்னியாசத்தைப் பெற்றார். அப்போது சுவாமிகளுக்கு வயது 21.

சுவாமிகள் ஒருமுறை சுத்தமல்லியில் தங்கி இருந்தபடி தினமும் சொற்பொழிவாற்றி செய்து வந்தார். திரளென குவிந்திருந்த பக்தர்கள் இடையே வடமொழியில் ஸ்லோகங்கள் சொல்லி அதற்கு தமிழில் விளக்கமும் அளித்தார். கட்டுக்குடுமியும் பூணூலையும் சுவாமிகள் உபந்யாசித்து வந்தபோது ஒருவர் திடீரென எழுந்து உள்ளே சென்றார். சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி வந்தார்.

அவரைக் கண்டு பலரும் அதிசயித்தனர். காரணம் சுவாமிகளது தலையில் கட்டுக்குடுமி இல்லை. திருமேனியில் பூணூலும் இல்லை. சட்டென அனைத்தையும் துறந்துவிட்டு தன் உபந்யாசத்தை தொடர்ந்தார். இதன், பின்னர் சுவாமிகளின் துறவு வாழ்க்கை முழுமை அடைந்ததாகக் கருதினர் அவரது சீடர்கள்.

தனது 23 ஆம் வயதில் நெல்லை சங்கர மடத்தில் சில காலம் வசித்த சுவாமிகள் அங்கு எதிர்பார்த்த அமைதி நிலை கிடைக்கப் பெறாததால் நெல்லையை அடுத்த கோடக நல்லூரை அடைந்தார். இவர் தாமிரபரணிக் கரையோரத்தில் நெடுநெடுவென வளர்ந்திருக்கும் நாணல் மற்றும் மூங்கில் புதர்களுக்குள் சென்று எவரும் தன்னை அணுக முடியாத நிஷ்டையில் ஆழ்ந்திருப்பார். சில தருணங்களில் அப்படியே சமாதி நிலையை எய்தி விடுவார் சுவாமிகள். அப்போது சுவாமிகளுக்கு உணவு எடுத்து வரும் சீடர்கள் சுவாமிகளை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க இயலாமல் உணவுடன் திரும்பிச் செல்வார்கள். ஆனால் பக்தனின் பசியை பரமன் பொறுப்பாரா? அன்ன ஆகாரம் எதுவுமின்றி சுவாமிகள் நிஷ்டையில் இருக்கும்போது ஆதிசிவனே அந்தணர் வடிவில் அன்னப் பாத்திரத்துடன் தோன்றியதுடன் சுந்தர ஸ்வாமிகளுக்கு தரிசனமும் அருளியுள்ளாராம்.

கோடகநல்லூரில் உள்ள சங்கர மடத்தில் தங்கி சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார் யோகிகளுக்கே உரித்தான பரிபக்குவ நிலையை அடைவதற்கு கோடகநல்லூர் வாசம் உதவியதால் பின்னாளில் ஸ்ரீ கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகள் ஆனார்.

ஒரு தீபாவளி தினம். காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் உபந்யாசம் செய்தார் சுந்தர ஸ்வாமிகள். ராமச்சந்திர மேத்தா உள்ளிட்ட அடியார்கள் பலரும் திரளான பக்தர்களும் அங்கு இருந்தனர். இரவு, சாஸ்திரம் குறித்த விளக்கங்களை தெளிவுற அறிந்த சுவாமிகள் பரிசுத்தமான ஒவ்வொருவரது உள்ளங்கையிலும் அக்னி பகவான் ஆட்சி செலுத்துகிறார். எனவே நெருப்பின் தாக்கம் உள்ளங்கையில் எப்போதும் குடிகொண்டிருக்கும். ஆகவே உள்ளங்கையில் படாமல் உணவைச் சாப்பிடுவதே உத்தமம் என்றார். இதை ராமச்சந்திர மேத்தா கூர்ந்து கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் காமாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரான சுப்ரமண்ய பட்டர் தெய்வ அலங்காரம் மற்றும் நைவேத்திய தயாரிப்புக்காக புஷ்பங்கள், அரிசி மற்றும் ஒரு  கொட்டாங்கச்சியில் நெருப்புத் துண்டுகள் ஆகியவற்றுடன் அங்கு வந்தார். திடீரென மழை பெய்யவே கொட்டாங்கச்சியில் இருந்த நெருப்புத் துண்டங்கள் மழையில் நனைந்து அணைந்தது. இது சுவாமிகளது திருவிளையாடல் என்பதை அப்போது எவரும் உணரவில்லை.

சுவாமிகளை வணங்கிய சுப்ரமண்ய பட்டர் பக்தர் எவரையேனும் அனுப்பி நெருப்புத் துண்டங்கள் கிடைக்க உதவும்படி வேண்டினார். உடனே சுவாமிகளும் அங்கு இருந்த ஆவுடையப்ப பிள்ளை என்பவரை அழைத்து அடுக்களைக்குச் சென்று நெருப்புத் துண்டங்களை எடுத்து வரும்படி உத்தரவிட்டார். அப்போது ராமச்சந்திர மேத்தாவுக்கு வந்தது ஒரு யோசனை. மெள்ள சுவாமிகளை நெருங்கி பூஜைக்கு தேவையான நெருப்பை தங்களது உள்ளங்கையில் இருந்து எடுத்துத் தர முடியாதா சுவாமி? என்று பவ்யமாகக் கேட்டார். அங்கு இருந்தவர்கள் அதிர்ந்தனர். சுவாமிகளையா சோதிப்பது? என்று முணுமுணுத்தனர்.

ராமச்சந்திர மேத்தாவைப் பார்த்துப் புன்னகைத்த சுவாமிகள் தாங்கள் மேலே அணிந்திருக்கும் வஸ்திரத்தைத் தாருங்கள் என்று வாங்கிக் கொண்டார். வஸ்திரத்தைத் தனது உள்ளங்கையில் பரபரவென தேய்த்தார். அவ்வளவுதான் தகித்து எழுந்தது நெருப்பு இதைக்கொண்டுபூஜைக்கு தேவையான அக்னி தயார் செய்யப்பட்டது. இதைக் கண்டு விதிர்த்துப் போன மேத்தா சுவாமிகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அவரை ஆசிர்வதித்த சுவாமிகள் இது இறைவனின் விளையாடலப்பா! கலங்க வேண்டாம் என்றார்.

சிருங்கேரி ஜகத்குரு மகாசன்னிதானம் ஒருமுறை திருநெல்வேலிக்கு விஜயம் செய்திருந்தார். சுந்தர ஸ்வாமிகளைப் பற்றி அறிந்திருந்ததால் அவரை தான் தங்கியிருந்த இடத்துக்கு அழைத்து அவருடன் பேசி மகிழ்ந்தார் சிருங்கேரி சன்னிதானம். அத்துடன் தன்னைச் சந்திக்கக்கூடி இருந்த மக்கள் இடையே சுந்தர சுவாமிகள் ஓர் அவதார புருஷர் என்று கூறி அவரது பெருமைகளை விவரித்தார்.

சுந்தர ஸ்வாமிகளது காலத்துக்குப் பிறகு வந்தவர்தான் எனினும் காஞ்சி மகா ஸ்வாமிகள் சுந்தர சுவாமிகள் குறித்து தன் பக்தர்களிடம் விவரித்துள்ளனார். அப்போது கோயில் திருப்பணிகளுக்கு அள்ளிக் கொடுத்து இறைப் பணியில் தங்களை பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள். இந்த கைங்கர்யத்தைத் தொன்று தொட்டு செய்து வந்தாலும் சமீப காலத்தில் இவர்களை அதிக அளவில் இறைப்பணியில் ஈடுபடச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுந்தர சுவாமிகள். இவரது காலத்தில் திருமேனியில் திருநீறும் கழுத்தில் ருத்ராட்சமும் அணியாத நாட்டுக் கோட்டை செட்டியாரைப் பார்ப்பதே அரிது. அந்த அளவுக்கு இவர்களுக்கு சிவபக்தியை புகட்டியவர் சுந்தர சுவாமிகள். இவரது உத்தரவை ஏற்று சிவன்கோயில்கள் பலவற்றுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளனார் என்று கூறி உள்ளார் காஞ்சி மகா சுவாமிகள். இந்தத் தகவல் சுந்தர சுவாமிகளது வரலாற்றுத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.

செட்டி நாட்டுப் பகுதிகளுக்குச் சென்று உபந்யாசம் செய்யும்போது ஏகமூக ருத்ராட்சத்தின் மகிமையை எடுத்துரைப்பார் சுந்தர சுவாமிகள். இதைக்கேட்ட நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் பலரும் ஏகமுக ருத்ராட்சத்தை அணியத் துவங்கினர். சுவாமிகளை குருவாக ஏற்று வணங்கி வரும் எண்ணற்ற அன்பர்கள் ஏகமுக ருத்ராட்சத்தை அணிந்திருப்பதைக் காணலாம்.

திருவையாறு பகுதியில் உள்ள ஸப்த கோயில்களுக்கு (திருவையாறு, திருச்சோற்றுத்துறை திருநெய்த்தானம், திருவேதிக்குடி, திருக்கணிகை, திருப்பழனம், திருப்பூந்துருத்தி) 1872ல் கும்பாபிஷேகம் செய்துவைத்தார் சுவாமிகள்.

வைகாசி மாதத்தில் ஒரே நாளில் நேரத்தில் ஏழு கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆச்சரியம் என்னவெனில் எல்லா கோயில்களிலும் ஒரே நேரத்தில் அங்கு இருந்தார் சுவாமிகள். இதை அறிந்த அவரின் சீடர்களும் எண்ணற்ற பக்தர்களும் மெய்சிலிர்த்தனர்.

இந்தக் கும்பாபிஷேகத்தில் பங்கெடுத்த அந்தணர்கள் மதிய உணவுக்காக அமர்ந்திருந்தனர். அப்போது சயைலில் ஈடுபட்டிருந்த அன்பர் ஒருவர் ஓடிவந்து உணவில் சேர்ப்பதற்கும் அந்தணர்களுக்கு பரிமாறுவதற்கும் நெய் இன்னும் வந்தபாடில்லை என்ன செய்வது? என தவித்தபடி கேட்டார். உடனே சுவாமிகள் அவ்வளவுதானே கோயில் குளத்தில் நான்கு குடங்கள் தண்ணீர் எடுத்து வாருங்கள் என்றார்.

நெய் கேட்டதற்கு நீரை எடுத்து வரச் சொல்கிறாரே என்று அந்த அந்தணர் குழம்பியபடி அடி சீக்கிரமா எடுத்துட்டு வாங்க. அந்தணர்கள் பசியுடன் இருக்காங்க அவரை விரட்டினார் சுவாமிகள். உடனே அவர்கள் நான்கு குடங்களிலும் குளத்து நீரை எடுத்துவந்து சுவாமிகள் முன்னே வைத்தார்.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அறியும் ஆவலுடன் அனைவரும் காத்திருந்தனர். கையில் கொஞ்சமாக திருநீரை எடுத்த சுவாமிகள் ஸ்ரீஐயாரப்பரை பிரார்த்தித்து திருநீறை நான்கு குடங்களிலும் மெள்ள தூவினார். மறுகணம் குடங்கள் அனைத்திலும் கமகமவென நெய் வாசனை அனைவரும் அதிசயித்துப் போனார்கள். இந்த நெய்தான் அன்னதானத்துக்குப் பயன்படுத்தப்பட்டது.

இதையடுத்து சில நிமிடங்களில் நெய் எடுத்து வந்து இறங்கினார் வியாபாரி. உடனே அன்பர் ஒருவரை அழைத்த சுவாமிகள் ஒரு குடநெய்யை மட்டும் கோயில் குளத்தில் விட்டுவிடுங்கள். இறைவன் கொடுத்ததை அவனுக்குத் திருப்பித் தருவதுதான் மரியாதை என்றார். அதன்படியே குட நெய் குளத்தில் விடப்பட்டது.

இந்த திருவையாறு கும்பாபிஷேகத்தில் இன்னொரு சம்பவமும் நடந்தது. சுந்தர ஸ்வாமிகளை எப்படியேனும் அவமானப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்துடன் அந்நிய மதத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு வந்தார். சுவாமிகளுக்கு என் அன்பு காணிக்கை என்று சொல்லி பொட்டலம் ஒன்றை சுவாமிகளுக்கு முன்பு வைத்தார்.

மெள்ள புன்னகைத்த சுவாமிகள் தனது திருக்கரத்தால் அந்தப் பொட்டலத்தைத் தொட்டார். பிறகு அந்த ஆசாமியிடம் பொட்டலத்தைப் பிரிக்கும்படி கூறினார். சுவாமிகளுக்கு அவமானம் நேரப் போவதாக மகிழ்ந்த அந்த ஆசாமி பொட்டலத்தைத் திறந்தார். அதில் சுவையான பழங்கள் இருந்தது கண்டு அதிர்ந்தார். ஏனெனில் பொட்டலத்தில் வைத்திருந்தது மாமிசமாயிற்றே. தை அமாவாசையின் போது 1884 ஆம் ஆண்டு நெல்லை காந்திமதி அம்மன் கோயிலில் லட்சதீபம் ஏற்றுதல், பொதிகை மலை தரிசனம், குறுக்குத்துறை முருகப் பெருமானின் கோயில் விஜயம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டார் சுவாமிகள். இதையடுத்து புதுக்கோட்டை ஓட்டுத் திண்ணை பரதேசி சுவாமிகளது விருப்பத்துக்கு இணங்க புதுகைக்குச் சென்றார் சுவாமிகள்.

அப்போதுதான் அந்தணர் அல்லாதோருக்கும் பெண்களுக்கும் முறைப்படி தீட்சை வழங்கினார். இங்கு தங்கியிருந்த வேளையில் அரிமளம் சிவராமன் செட்டியார் மற்றும் புதுவயல் அழகப்பா செட்டியார் ஆகிய பக்தர்கள் இருவரும் சுவாமிகளைப் பெரிதும் கவர்ந்தனர்.

இதையடுத்து பல தலங்களுக்கும் சென்றவர் மீண்டும் புதுக்கோட்டைக்கு வந்தார். அங்கிருந்து ராமேஸ்வரத்துக்கு சென்றபோது அரிமளம் சிவராமன் செட்டியார் உட்பட பக்தர்கள் பலரும் உடன் சென்றனர். ரெட்டை மாட்டு வண்டிகளில் பயணம் செய்தவர்கள் திருமயத்தை அடைந்தபோது அந்த அற்புதம் நிகழ்ந்தது.

எதிரே சாலையில் நின்றபடி வண்டியை புதுக்கோட்டைக்குத் திருப்பு என்று சொல்லி மறைந்தார் சுந்தர ஸ்வாமிகள். வண்டிக்காரனுக்கோ குழப்பம், என்னடா இது? வண்டியில் அசந்து தூங்கிக்கிட்டிருந்த சாமீ திடீர்னு கீழே இறங்கி புதுக்கோட்டைக்குத் திருப்பச் சொல்றாரு என்று. பிறகு வண்டியைத் திருப்பி மீண்டும் புதுக்கோட்டை நோக்கிச் செலுத்தினான். சிறிது நேரத்தில் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட சுவாமிகள் இப்ப நாம எங்கேப்பா இருக்கோம் என்று கேட்க, புதுக்கோட்டையை நெருங்கிவிட்டு இருக்கோம். சாமீ என்று பதில் சொன்னான் வண்டிக்காரன். சுவாமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னது புதுக்கோட்டைக்கா? ராமேஸ்வரம் போகலையா? என்று கேட்டார். உடனே வண்டிக்காரன் என்ன சாமீ. நீங்கதானே வண்டிக்கு எதிரில் நின்னு புதுக்கோட்டைக்கே போடானு சொன்னீங்க? என்றான். ஆச்சரியப்பட்ட சுவாமிகள் வண்டியிலேருந்து நான் இறங்கவே இல்லியேப்பா என்று உறுதிபட தெரிவித்தார்.

பின்னர் திருமயத்தில் வண்டி எந்த இடத்தில் புதுகைக்குத் திரும்பியதோ அந்த இடத்துக்கு வெகு அருகில் பெரும் புயல் வீசியது. மரங்கள் விழுந்து வீடுகள் சரிந்து சாலையில் சென்ற வண்டிகள் அனைத்தும் நிலை தடுமாறி கவிழ்ந்துவிட்டன. ஆடுமாடுகள் கூட நாசமாகி விட்டன. மறுநாள் விடிந்ததும் இந்த தகவல் தெரிந்தது. அப்போதுதான் சுவாமிகளது உருவத்தில் வந்து இறைவனே தங்களை காப்பாற்றி உள்ளான் எனும் உண்மையை அறிந்து அனைவரும் சிலிர்த்தனர். பின்னர் சுவாமிகளை அரிமளத்துக்கு அழைத்துச் சென்ற சிவராமன் செட்டியார் சிவன்கோயிலுக்கு கும்பாபிஷேகம் மற்றும் அன்னதான சத்திரம் முதலான பணிகளை செய்து முடித்தார். மதுரையில் உள்ள விபூதி மடத்தில் பக்தர்கள் மற்றும் சிஷ்யர்களுடன் சில நாட்கள் தங்கினார் சுவாமிகள். இவரின் சீடரான நாராயணசிவம் என்பவர் தண்ணீரில் அமர்நது யோக நிஷ்டை இருப்பதில் தேர்ந்தவர். எனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ள பொற்றாமரைக் குளத்துக்கு வந்து நீரின் மேல் யோகநிஷ்டையில் இருந்தார். நாராயணசிவம். இதைக்கண்ட அன்பர்கள் பலரும் அவரது யோக முறையை வியந்து அதிசயித்தனர். அதுவரை குளத்து நீரில் அமர்ந்தபடி யோகத்தில் இருந்த நாராயணசிவம் திடீரென மெள்ள மெள்ள நீருக்குள் மூழ்கினார். கரையில் நின்றவர்களுக்கு இவரது உடல் தெரியவே இல்லை. அங்கு இருந்த சுவாமிகளின் பக்தரான சுப்ரமண்ய குருக்கள் என்பவர் உடனே காவல்நிலையத்துக்கு ஓடோடிச் சென்று பொற்றாமரைக் குளத்துக்குள் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினர். இரண்டு நாளாகியும் உடல் கிடைக்கவே இல்லை.

மூன்றாம் நாள், அங்கு வந்தார் சுந்தர சுவாமிகள். நாராயண சிவத்தின் உடலை எப்படியேனும் தென்கரையிலுள்ள விபூதி விநாயகர் சிலைக்கு அருகே கொண்டு வந்து வைத்துவிடுங்கள் என்று காவல்துறையினரிடம் தெரிவித்தார் சுவாமிகள்.

இறந்த நாராயண சிவத்தை உயிர்ப்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் சுவாமிகள் என்பதை அறிந்து கொண்ட போலீசாரும் கோயில் ஊழியர்களும் சுவாமிகளை கேலி செய்தனர். தண்ணீரில் இறந்து மூணு நாளாச்சு. உடலையே இன்னும் கண்டுபிடிக்க முடியலை. இவர் உயிர்ப்பிக்க போறாராமா! என்று கிண்டல் செய்தனர். இருப்பினும் நடப்பதைத்தான் பார்ப்போம் என்று குளத்தில் இறங்கி தேட எத்தனித்தர். அப்போது திடீரென நீரில் உடல் மிதந்தது. அனைவரும் அதிர்ந்து போனார்கள். பின்னர் நாராயண சிவத்தின் உடலை விபூதி விநாயகர் சன்னிதிக்கு அருகே கொண்டு வந்து கிடந்தனர்.

சுவாமிகளை இறைவனை பிரார்த்தித்து நாராயண சிவத்தின் உடல் முழுவதும் திருநீறை அள்ளி பூசினார். சடலத்தின் வலது காதில் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதினார். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மெள்ள தடவி கொடுத்தார். அவ்வளவுதான், மூன்று நாட்கள் சடலமாகக் கிடந்த நாராயண சிவம் உயரித்தெழுந்தார். பின்னர் சுவாமிகளின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். சுவாமிகளின் அற்புதத்தை அறிந்து அங்கு இருந்தவர்கள் அவரை வணங்கினார்கள்.

இதையடுத்து மதுரையில் இருந்து திருச்சி, திருவையாறு, தஞ்சை, சென்னை முதலிய தலங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்த சுவாமிகள் பின்னர் கங்கைகொண்டான் ஆனந்தவல்லி சமேத கயிலாசநாதர் கோயிலின் கும்பாபிஷேகத்தை 1873 ஆம் ஆண்டு நடத்திக் கொடுத்தார்.

தம் வாழ்நாளில் 22 கும்பாபிஷேகங்களை நடத்தி வைத்திருக்கிறார் சுவாமிகள். அவர் நடத்திய முதல் கும்பாபிஷேகம் தான் ஸித்தி அடைந்த அரிமளத்தில் உள்ள கோயில். இறுதியில் நடத்திய கும்பாபிஷேகம் இவர் அவதரித்த கங்கைகொண்டானில் உள்ள கோயில்.

தான் சமாதி அடையும் நாள் நெருங்கி விட்டதை தமது சீடர்களிடம் தெரிவித்தார். சுந்தர ஸ்வாமிகள் அதன்படி 1878 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (ஐப்பசி 6) கிருஷ்ண பட்ச தசமி அன்று ஸித்தி அடைந்தார். அரிமளம் சிவராமன் செட்டியாரும் மற்ற சீடர்களும் சுவாமிகளது இறுதி காரியங்களை செய்து முடித்து சுவாமிகளது சமாதியின் மேல் அவர் பூஜித்து வழிபட்ட பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர்.

*அரிமளத்தில் உள்ள ஸ்ரீ சுந்தர சுவாமிகளின் அதிஷ்டானம்

இந்து சமய அறநிலையை ஆட்சித் துறைக்கு உட்பட்ட பொன்னமராவதி கொன்னையூர் முத்துமாரி அம்மன் கோயில் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இந்த அதிஷ்டானம்.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து தேனிப்பட்டி மற்றும் ஏம்பல் செல்லும் பேருந்துகள் அரிமளம் வழியாகச் செல்லும். தவிர அரிமளத்துக்கு நகரப் பேருந்து வசதியும் உள்ளது. அரிமளம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்றுத் தொலைவு நடந்தால் சுவாமிகளின் அதிஷ்டானத்தை அடையலாம். முகப்பில் ஒரு இரும்பு கேட். உள்ளே நுழைந்தால் நந்தவனம். கருவறை, உள்பிராகாரம், அர்த்தமண்டபம், வெளிப்பிரகாரம் என முழுவதும் கருங்கல் திருப்பணியாய் அமைந்து விஸ்தாராமாகவும் உள்ளது. கருவறையில் சுவாமிகளின் அதிஷ்டானம். சிலா வடிவில் உள்ள ஆவுடையாரின் மேல் சுவாமிகள் வழிபட்ட பாணலிங்கத்தை தரிசிக்கிறோம். இங்கு விபூதி அபிஷேகம் அடிக்கடி நடைபெறும். அதிஷ்டானத்தில் விநாயகர், பின்பக்க கோஷ்டத்தில் லிங்கோத்பவர், வெளியே நாகர் ஆகிய சன்னிதிகளும் உண்டு.

தினமும் காலையில் சுமார் எட்டரை மணியளவில் அபிஷேகம் நடைபெறும். தவிர பவுர்ணமி அன்று மாலை 4 மணிக்கும் ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு மற்றும் தேய்பிறை தசமி ஆகிய நாட்களில் பகல் 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஐப்பசி மாதம் தேய்பிறை தசமி அன்று (பூச நட்சத்திரம்) குருபூஜை சிறப்பாக நடைபெறுகிறது. அன்று மாலை சுவாமிகளின் உற்ஸவர் விக்கிரகம் வீதியுலா வரும். சுந்தர ஸ்வாமிகள் இங்கு இருந்தபடி உலகமெங்கும் உள்ள பக்தர்களை இன்றைக்கும் காத்து வருகிறார் என்பது நாட்டுக்கோட்டை செட்டியார் இனத்தவர் மட்டுமின்றி ஏனைய பக்தர்களது நம்பிக்கை.

தகவல் பலகை

ஸ்தலம்  : அரிமளம்

சிறப்பு  : ஸ்ரீ சுந்தர சுவாமிகள் அதிஷ்டானம்.

எப்படி செல்ல வேண்டும்?: புதுக்கோட்டையில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது அரிமளம். அறந்தாங்கி மற்றும் திருமயத்தில் இருந்தும் சுமார் 22 கி.மீ. தொலைவு.

எப்படிப் போவது?: புதுக்கோட்டையில் இருந்து 22, 27, 27ஏ மற்றும் ஜான்ஸி ஆகிய பேருந்துகளும் அறந்தாங்கியிலிருந்து 6, லதா, எஸ்.எம்.ஆர். ரங்கநாதன், பி.எல்.ஏ ஆகிய பேருந்துகளும் திருமயத்தில் இருந்து 9டி மற்றும் ராஜா ஆகிய பேருந்துகளும் அரிமளம் செல்கின்றன.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 12.00 மாலை 4.00-7.30
சம்பாத்தியத்தில் எத்தனை பங்கை கடவுளுக்காக செலவழிக்க வேண்டும்?

சம்பாத்தியத்தை மூன்று பங்காகப் பிரிக்க வேண்டும். ஒரு பங்கை அன்றாடச் செலவுக்கும், இரண்டாவது பங்கை கடவுள் வழிபாடு, தானதர்மம் ஆகியவற்றுக்கும், மூன்றாவது பங்கை எதிர்கால சேமிப்புக்காகவும் சேர்த்து வைப்பதே முறையானதாகும்.
------------------------------------------------------------------------------------------------------------
பவுர்ணமி நாளில் மட்டும் கிரிவலம் வந்தால் கடவுள் அருள்  கிடைக்குமா?

திதியில் பவுர்ணமியும், கிழமையில் திங்களும் (சோமவாரம்) நட்சத்திரத்தில் கார்த்திகையும் கிரிவலம் வருவது சிறப்பு. பவுர்ணமி நாளில் மனோகாரகனாகிய சந்திரன், பூரணக் கலைகளுடன் இருக்கிறார். அதன் கிரணங்கள்(ஒளிக் கதிர்கள்) நம் மேனி மீது படரும் விதத்தில் மாலைப் பொழுதில் வலம் வருவது நல்லது. பவுர்ணமி மட்டுமில்லாமல் எந்த நாளில் வேண்டுமானாலும் கிரிவலம் வந்தாலும் கடவுளின் அருள் நிச்சயமாக கிடைக்கும்.
------------------------------------------------------------------------------------------------------------
தீர்த்தத்தில் நீராடுபவர்கள் அணிந்திருக்கும் துணிகளை அங்கேயே விட்டு வருவது ஏன்?

அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி போன்றவற்றால் சிரமப்படுபவர்கள் சிலரது வழிகாட்டுதலால் இந்த தவறைச் செய்கிறார்கள். உடுத்தியிருக்கும் துணிமணியில் சனிபகவான் இருப்பது போல தவறாக நினைக்கிறார்கள். நளதீர்த்தத்தில் நீராடி சனீஸ்வரர் சந்நிதியில் எள்தீபம் ஏற்றி வைத்து ""நீலாஞ்சன ஸமா பாஸம் ரவிபுத்ரம் யமாக் ரஜம் சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம் என்ற ஸ்லோகத்தை 16 முறை சொன்னாலே போதும். வியாசர் அருளிய இந்த ஸ்லோகத்தை, சனி தோஷம் உள்ளவர்கள் தினமும் சொல்லி வரலாம். துணிகளைக் கழற்றிப்போட்டு நீர் நிலைகளை நாசமாக்குவதே ஒருவகையில் பாவம் தான்!
------------------------------------------------------------------------------------------------------------
சக்கரத்தாழ்வாருக்கு பின் நரசிம்மர் இருப்பது ஏன்?

பெருமாளின் கையில் இருக்கும் சக்கரத்தையே "சுதர்சன ஆழ்வார் என்று வழிபடுகிறோம். விஷ்ணுவின் கையிலுள்ள சக்கராயுதம் விரைந்து வந்து அடியவர் துன்பம் போக்கும் என்பது ஐதீகம். அதிலும், பிரகலாதனுக்காக ஓடோடி வந்த விஷ்ணுவின் அவசரத்திருக்கோலம் நரசிம்மர். "நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை என்பார்கள். அதனால், உடனடியாக அருள் வேண்டி நிற்போர் சுதர்சன மூர்த்தியையும், நரசிம்மரையும் ஒரு சேர வழிபடுகின்றனர்.

முதுமையில் வாடுபவர்களுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா?

முறையான மருத்துவம், இறைவனிடம் பிரார்த்தனை இவற்றைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது.
------------------------------------------------------------------------------------------------------------
உயிர் கொடுத்த நன்னாள்!

சென்னை மயிலாப்பூரில் சிவநேசர் என்னும் சிவபக்தர் வசித்தார். இவர் தன் மகள் பூம்பாவையை, பார்வதியிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார். ஒருநாள் தோட்டத்தில் மலர் பறிக்கச் சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிரிழந்தாள். அவளுக்கு இறுதி காரியங்களைச் செய்து முடித்த சிவநேசர் சாம்பலை ஒரு கலசத்தில் வைத்திருந்தார். இந்த சம்பவம் அறிந்த சம்பந்தர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்தார். அப்போது சிவனுக்கு திருமண உற்ஸவம் நடந்து கொண்டிருந்தது. சாம்பல் கலசத்தை கோயில்முன் கொண்டு வரச் செய்தார் சம்பந்தர். அப்போது, அவர் பாவைப்பதிகம் பாடினார். சிவனின் திருக்கல்யாணத்தை காணாமலே போகிறாயே என்ற பொருளில் பாடல் ஒன்று அமைந்தது. பலிவிழாப் பாடல் செய் பங்குனி யுத்திரநாள், ஒலிவிழா காணாதே போதியோ பூம்பாவாய், என்ற வரிகள் அதில் அமைந்தன. இதுபோல், கபாலீஸ்வரர் கோயிலில் நடக்கும் பலவிழாக்கள் இந்தப்பாடலில் குறிப்பிடப்பட்டன. இதையடுத்து பூம்பாவை உயிர் பெற்றாள்.
------------------------------------------------------------------------------------------------------------
பங்குனி உத்திரத்தன்று என்னென்ன நடந்தது?

பங்குனி உத்திரத்தன்று மகாலட்சுமி பாற்கடலில் இருந்து அவதரித்தாள். அதேநாளில், மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம்பிடித்தாள். சிவபார்வதி திருமணம் கயிலாயத்தில் இந்த நாளில் தான் நிகழ்ந்தது. ராமபிரான் சீதையையும், அவரது சகோதரர்களான லட்சுமணன், பரதன், சத்ருகனன் ஆகியோர் தங்கள் வாழ்க்கைத் துணைவியராக ஊர்மிளா, மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரை அடைந்தததும் இந்த நாளில் தான். முருகப்பெருமானின் துணைவியான தெய்வானை, இந்திரனுக்கு வளர்ப்பு மகளான நாள் இன்று தான். இதேநாளில் தான் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நிகழ்ந்தது. பிரம்மா தன் மனைவி சரஸ்வதியை நாக்கில் வைத்துக் கொள்ளும் படியான வரத்தை இந்த நாளில் பெற்றார். தன் மனைவி இந்திராணியைப் பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்தது இதே நாளில் தான். இதன் காரணமாக, இந்த நாளை தம்பதியர் தினம் என்று கூட சொல்லலாம். இந்த நாளில் தான் சிவனுக்கும் திருமாலின் அவதாரமான மோகினிக்கும் சாஸ்தா (ஐயப்பன்) அவதரித்தார்.
------------------------------------------------------------------------------------------------------------
பங்குனி உத்திரம் கொண்டாட காரணம்!

குழந்தைகளுக்குச் சோறூட்டக் கூட சந்திரனைத் தான் தாய்மார்கள் துணைக்கு அழைப்பர். அந்த சந்திரன், பவுர்ணமிநாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாத பவுர்ணமியன்று, மீனராசியில் பூமியிருப்பதால் உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து ஏழாம் இடமான கன்னியில் நின்று முழுகலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான். இத்தகைய களங்கம் இல்லாத ஒளி உடலுக்கும் மனதிற்கும் சுகத்தையும், நிம்மதியையும் தரும். பல நற்பலன்களைக் கொடுக்கும். இதன் காரணமாகத்தான், சாஸ்தா கோயில்களில் விடிய விடிய பக்தர்கள் வெட்டவெளியில் காத்திருந்து தரிசனம் செய்வார்கள்.  சந்திரன் இந்த நாளில் மட்டும் ஏன் களங்கமற்று ஒளிர்கிறான் என்ற ரகசியத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். தெய்வத் திருமணங்கள் இந்த நாளில் தான் நிகழ்ந்தது. அது மட்டுமின்றி சந்திரன் 27 மனைவியரை இந்த நாளில் அடைந்தான். அந்த மகிழ்ச்சியில் அவன் களங்கமற்று ஒளிர்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
------------------------------------------------------------------------------------------------------------
சாப்பிடும் போது எந்த திசை நோக்கி சாப்பிடுவது நன்மை தரும்?

வடக்கு தவிர்த்த மற்ற திசைகளில் சாப்பிடலாம் என்கிறார் வாரியார். அதற்குரிய பலன்களாக, கிழக்கு- ஆயுள், மேற்கு- செல்வம், தெற்கு- புகழ், வடக்கு- நோய் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------
சரணாகதி, சமர்ப்பணம்... இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

என் செயலால் ஆவது ஒன்றுமில்லை. எல்லாம் உன் செயலே என்று அடைக்கலமாவது சரணாகதி.  செய்யும் செயலின் பலன் அனைத்தையும் உன்னிடமே ஒப்படைத்து விட்டேன் என்று கடவுளிடம் ஒப்புவிப்பது சமர்ப்பணம். இந்த இரண்டும் கடவுளை முழுமையாகச் சார்ந்திருப்பதையே குறிக்கிறது. வார்த்தை வேறானாலும், நிலை என்னவோ ஒன்று தான்.
------------------------------------------------------------------------------------------------------------
கோயிலில் வெளியே தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாமா?

கதவு சாத்தியிருக்கும் போது வழிபாடு செய்வது கூடாது. கோயில் திறந்திருந்தாலும் திரை போட்டிருக்கும் நேரத்திலும் வழிபடக் கூடாது.
------------------------------------------------------------------------------------------------------------
சுவாமி பவனி வரும் போது, மாடியில் இருந்து தரிசனம் செய்யலாமா?

பக்திக்கு அடிப்படை பணிவு. சுவாமியை விட உயரமானஇடத்தில் இருந்து தரிசனம் செய்யக் கூடாது.
------------------------------------------------------------------------------------------------------------
நமது தர்மம் நான்கு வித புருஷார்த்தத்தில்(சதுர் விதபுருஷாரத்தம்) ஊன்றியது.

தர்மம் அதாவது அறம், அர்த்தம் அதாவது பொருள், காமம் அதாவது இன்பம், மோக்ஷம் என நான்கு வித புருஷார்த்தத்தை அறிந்து கொள்ளுதல் ஆகும். அறத்து வழியில் பொருள் ஈட்டி, மற்றவரிடம் (பொருள் இல்லாதவர்கள்) பகிரந்து இன்பம் அடைவது, கடைசியில் ஆசையை துறப்பது மோக்‌ஷத்திற்கு வழி என்கிற உண்மையை உணரந்தவர்களே நாலும் தெரிந்தவர்கள்.

சிலர் நான்கு வேதங்களையும் கற்றவர்களை நான்கும் தெரிந்தவர்கள் என்று கூறுவர். ஆனால் எல்லோராலும் எல்லா வேதங்களையும் பயில முடியாது. அது ஒரு சில சாராருக்கே சாத்தியமாகும். பெரும்பாலோருக்கு சாத்தியமாகாது. ஒருவன் வேதம் பயிலாவிட்டாலும் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றினாலும் நான்கும் தெரிந்தவன் என்று கொள்ளவேண்டும் என்பது என் அபிப்பிராயம்.
--------------------------------------------------------------------------------------------------------------
அஷ்ட வசுக்கள்

இந்திரனின் எட்டு ஏவலர்களே அஷ்ட வசுக்கள் எனப்படுகின்றனர். வசு என்ற சொல்லுக்கு வெளி என்று பொருள். இயற்கையையும் இயற்கைக் கோட்பாடுகளையும் உருவகிப்பவர்கள் இவர்கள். இவர்களில் தரா புவியையும்; அனலன் நெருப்பையும்; ஆப் நீரையும்; அனிலன் காற்றையும்; துருவன் துருவ நட்சத்திரத்தையும்; சோமன் சந்திரனையும்; பிரபாசன் வைகறையையும்; பிரத்யூஷன் ஒளியையும் குறிப்பவர்கள் ஆவர்.
--------------------------------------------------------------------------------------------------------------
குரு & சிஷ்ய உறவின் பெருமை

அன்னை-தந்தை, கணவன்-மனைவி, அண்ணன்-தங்கை, மாமன்-மாமி, போன்ற மனித உறவுகள் யாவும் ஒரு பிறவியோடு முடிந்து போகிறவை. மாறாக குரு, சிஷ்யனுக்கு இடையேயான உறவு பிறவிகள் தோறும் தொடரும் களங்கமில்லாத உறவாகும். குருவானவர் சிஷ்யனுக்கு அனைத்துமாகி, இறுதியில் பிரம்மமாகவும் ஆகிறார். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் குரு-சிஷ்ய உறவு மட்டும் மாறுவதேயில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------
மூன்றாம் பிறை

முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரியார்

மூன்றாம் பிறையைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்றும் நான்காம் பிறையைப் பார்க்கக் கூடாது என்றும் சாஸ்திரம் சொல்கிறது. எதைப் பார்க்கக் கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறதோ அது கட்டாயம் கண்ணுக்குத் தெரியும்! அதைப் பார்த்து விட்டு ‘பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டு வா’ என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை! கண்ணுக்குத் தெரிந்து விட்டால் அது நாலாம் பிறை தான்!

மூன்றாம் பிறை என்பது மிக மெல்லிய கோடு போட்டது மாதிரி இருக்கும். சிரமப்பட்டுத்தான் பார்க்க வேண்டும் அதை. சாஸ்திரம் சொல்கிறதையெல்லாம் சுலபமாகச் செய்து விட முடியுமா? அதனால் மூன்றாம் பிறைச் சந்திரன் அவ்வளவு சுலபமாகக் காணக் கிடைக்காது.

ஆகையினாலேதான் சீதாபிராட்டியை வால்மீகி வர்ணிக்கிற போது ரொம்ப மெலிந்திருக்கிறாள் அவள் ராமனைப் பிரிந்த பிரிவாற்றாமையினாலே துவண்டிருக்கிறாள் மூன்றாம் பிறைச் சந்திரனைப் போல் அவ்வளவு மெல்லிய திருமேனியை உடையவளாக இருக்கிறாள்’ என்கிறார்.

நான்காம் பிறை நன்கு தெரியும். ஆனால் அதைப் பார்த்தால் அபவாதம் வந்து சேரும். பண்ணாத குற்றம் வந்து சேரும்! பகவான் வாசுதேவன்  கிருஷ்ணன் நான்காம் பிறையைப் பார்த்து விட்டான். அதனால் ஸ்யமந்தக மணியை வாசுதேவன் திருடியதாக அபக்யாதி வந்து விட்டது. அதைப் போக்கிக் கொள்ள காட்டுக்குப் போய் ஜாம்பவனோடு போராடி அதைக் கொண்டு வந்தான். ஸ்யமந்தக மணியை பகவான் மீட்டு வந்தான்.
ஒருவேளை நாம் நான்காம் பிறையைப் பார்த்து விட்டோமேயானால் அப்போது அவனை தியானம் பண்ணிக் கொள்ளலாம். பண்ணினால் அந்த தோஷம் போய் விடும். அந்த சரித்திரத்தை விருத்தாந்தத்தை நினைத்தால் அந்த தோஷம் போய் விடும். இந்த மாதிரி மூன்றாம் பிறையைப் பார்த்தால் நல்லது என்று சின்ன வயதிலே ஒரு பெண் கேட்டாள். இப்போது அந்தப் பெண்ணுக்கு 90 வயது! அப்படியும் அந்த தர்மத்தை அவள் விடவில்லை.
இப்போது வயதான பிறகு ஆகாசத்தில் பார்த்தால் சந்திரன் தெரிய வில்லை. சின்ன வயதில் பளிச்சென்று தெரிந்த மூன்றாம் பிறைச் சந்திரன் வயதான பிறகு பார்த்தால் தெரியவில்லை.

பேர குழந்தை கோவிந்தன் என்பவனைக் கூப்பிட்டுக் பாட்டி கேட்கிறாள்.

“சந்திரன் தெரியலைடா! நீ கொஞ்சம் காட்டேன்” என்கிறாள்.

“அதோ தெரிகிறதே பாரேன்..”

“தெரியலையேடா”

பேரன் ரொம்ப கெட்டிக்காரன். பாட்டிக்குப் பேரனல்லவா!

“கோடி வீட்டு பாதாம் மரம் உனக்குத் தெரிகிறதா பாட்டி? என்று கேட்கிறான்.

‘நன்றாகத் தெரிகிறதே!” என்கிறாள் பாட்டி.

“அந்தக் கிளை நுனியிலே ஒட்டிக் கொண்டிருக்கிறதே சந்திரன்!”

இப்படிச் சொன்னதும் பாட்டி சந்திரனைப் பார்த்து விட்டாள். பரம சந்தோஷம் அவளுக்கு. பேரனைக் கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்தாள்.

குழந்தை என்ன சொல்கிறது..?

‘கிளை நுனியிலே சந்திரன்!’

கேட்டுக் கொண்டிருக்கிற நாமெல்லாம் கொஞ்சம் கவனிக்க வேண்டும். கோடி வீட்டு பாதாம் மரக்கிளையிலே ஒட்டிக் கொண்டிருக்கிற சந்திரனுக்கும் சந்திரலோகத்திலே பிரகாசிக்கிற சந்திரனுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு சம்பந்தமும் இல்லை! அப்படியிருந்தும் இந்தக் குழந்தை காட்டினான்; அதை அவளும் பார்த்தாள். இது எப்படி சம்பவித்தது என்றால் இங்கேயிருந்து பார்க்கிற பொழுது அந்தக் கிளை நுனியிலே ஒட்டிக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. அதைப் பார்த்து அதோ இருக்கிறதே’ என்று காட்டப்படுகிறதேயொழிய இதை வைத்து அது இல்லை என்பதை நாம் நன்கு உணர வேண்டும். அதைப் போன்று பகவான் சர்வ வியாபியாக இருந்தாலும் எதனுடனும் சம்பந்தமில்லாமல் அவன் இருக்கிறான் என்பதை நாம் உணரவேண்டும். அவனுக்குக் கிலேசாதிகள், கஷ்டங்கள், ஆனந்தாதிகள் எதுவும் கிடையாது. தனித்து நிற்கக் கூடியவன்.
--------------------------------------------------------------------------------------------------------------
அனுமன் மகிமை!

அனுமன் சன்னதிக்கு மேல் கூரை கிடையாது. இங்கே என்றில்லை... பெரும்பாலான இடங்களில்  அனுமன் சிரத்துக்குமேல் கோபுரக்கூரைக்கு இடமில்லை. அதற்கு அவன் அனுமதி அளிக்கவில்லை என்று கூறுவார்கள். என்ன காரணம் என்று சிந்தித்துப்பார்த்தால், அங்கெல்லாம் அவன் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான் என்பது ஐதீகம்.
--------------------------------------------------------------------------------------------------------------
யக்ஞரின் தோற்றம்!

யக்ஞரின் தோற்றம் குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட ஐதீகங்கள் நிலவுகின்றன. ருசி-ஆகுதி ஆகியோருக்குப் பிறந்தவரே யக்ஞேசுவரர் என்றும்; வராக அவதாரமெடுத்துவந்த நாராயணனே யக்ஞவராகமூர்த்தி என்றும் நம்பப்படுகிறது. வேத காலத்து வேள்வியே யக்ஞனாக உருவெடுத்து வந்ததாகவும் கூறுவர். இயற்கை நிகழ்ச்சிகள் யாவுமே யாகமாகவும், யக்ஞேசுவரர் அதன் அதிபதியாகவும் கூறப்படுகிறார். இரண்டு முகங்கள், ஏழு கைகள், மூன்று கால்கள், தலையில் நான்கு கொம்புகள் கொண்டவர். கைகளில் வேள்விக்கு வேண்டிய யக்ஞ பாத்திரங்கள், நெய் ஊற்றுவதற்கான சிறிய கரண்டி, சங்கு, சக்கரம் ஆகியவற்றுடன் காட்சி தருபவர்.
--------------------------------------------------------------------------------------------------------------
 கருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்

இந்து புராணங்களில் முக்கிய ஒன்றாக கருதப்படும் கருட புராணத்தில் மரணத்திற்கு பின்னான வாழ்வு, மறு ஜென்மம், சொர்க்கம் நரகம் போன்றவற்றை பற்றி பல்வேறு விளக்கங்கள் இருக்கிறது.

பதினெட்டு இந்து சமய புராணங்களில் ஒன்றான இதில் வாழ்வின் மேன்மைகளை பற்றி பத்தொன்பதாயிரம் ஸ்லோகங்களும் மனித வாழ்வில் செய்யும் தவறுகளுக்கு இருபத்திஎட்டு விதமான கொடூர தண்டணைகளை பற்றி விஷ்ணு கருடனுக்கு (பறவைகளின் அரசன்) விவரிப்பது போல எழுதப்பட்டிருக்கும்.

வாழும் போது மனிதர்கள் செய்யும் அவசெயல்களுக்காக மிருகத்தனமான தண்டணைகளை அவர்கள் அடைவார்கள். கருட புராணத்தை படிப்பவர்கள் தவறு செய்ய அஞ்சும் படியாக இருக்கும். விஷ்ணு இதனை ‘எமனின் சித்திரவதைகள்’ என்பார்.

இனி உங்கள் தண்டணைகளை அறிய துவங்குவோம்.

1. பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.

2. அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

3. அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

4. வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

5. தாமிஸிர நரகம்:பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.

6. அநித்தாமிஸ்ர  நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

7. ரௌரவ  நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

8. மகா ரெளரவ  நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

9. கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.

10. காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.

11. அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.
பெரியவாளின் நகைச்சுவை.

ஒரு நாள் மடத்தில் உள்ளவர்களிடம் "மஹா விஷ்ணுவும்
கொசுவும் ஒண்ணு உனக்குத் தெரியுமா?" என்றார் பெரியவா.
வழக்கம் போல் தானே அந்தப் புதிரையும் விடுவிக்கிறார்.

"விஷ்ணுவின் கையில் சக்கரம் சுற்றிக்கொண்டிருக்கு கொசுவும் சக்கரமாய் சுற்றிக்கொண்டு தான் இருக்கு. கெட்டவர்கள்
விஷ்ணுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கிக் கொள்வார்கள்.
கண் வலிக்காரர்கள் கொசுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கி
விடுவார்கள். ச்ருதியிடம் விளையாடுபவர் விஷ்ணு.
[ச்ருதி=வேதம்] ச்ருதி முனையில் ஙொய் என்று கத்திக்கொண்டு
விளையாடும் கொசு [ச்ருதி=காது]!"
இந்த சிலேடை சொன்னதுக்குக் காரணம் மடத்தோடு
அவர்கள் இருந்த முகாமில் கொசுத்தொல்லை தாங்க முடியாது.
"அனந்தசயனம் பண்ணும் பெருமாள் தான் கொசுன்னு
நினைச்சுண்டேன்னா பகவத் ஸ்மரணையோடு தூங்கலாம்!"
என்று எல்லோரையும் சமாதானம் செய்வாராம். இப்படி
எந்தக் கஷ்டத்தையும் நகைச்சுவை ததும்ப சரி செய்து விடும்
அழகையும் பெரியவாளிடம் அனுபவிக்க முடியும்.
ஒரு நீண்ட உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது. பெரியவாளும்
கேட்டார். ஒரு வழியாக உபன்யாசம் முடிந்தது. உடனே பெரியவா
"சாக்கு கிடைச்சுதுன்னு நன்னா ரொம்ப நேரம் சொன்னயா?"
என்றார்? "நீ ஒக்காந்துண்டிருந்தது ஒரு சாக்குமேலே...
அந்த சாக்கைச் சொன்னேன்!" என்று தமாஷ் பண்ணினாராம்.


திவ்ய தேசம் அருள் மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில்

மூலவர் : திருநறையூர் நம்பி
உற்சவர் : இடர்கடுத்த திருவாளன்
தாயார் : வஞ்சுளவல்லி
தல விருட்சம் :  வகுளம் (மகிழம்)
தீர்த்தம் : மணிமுத்தா, சங்கர்ஷணம்,பிரத்யும்னம், அனிருத்தம்,சாம்பதீர்த்தம்
ஆகமம் : வைகானஸம்
பழமை : 2000 வருடங்களுக்கு மேல்
புராண பெயர் : சுகந்தகிரி க்ஷேத்ரம்
ஊர் : நாச்சியார்கோயில்
மாவட்டம் : தஞ்சாவூர்
பாடியவர்கள் : அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன் கொம்பமரும் வடமரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடுகிற்பீர் வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.(திருமங்கையாழ்வார்) 
      
விழா :  மார்கழி, பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், இவ்விழாவின் போது கருடசேவை உற்சவம் நடக்கிறது.  


    
திறக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். விலாசம் :  அருள்மிகு நறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோவில் - 612 602. தஞ்சாவூர் மாவட்டம். போன் :  +91- 435 - 246 7017, 94435 - 97388. 
     
தகவல் : இங்குள்ளமூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஹேம விமானம் எனப்படுகிறது. பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார் கீழே நவக்கிரகங்கள் மேலே தசாவதாரங்கள் பொறிக்கப்பட்டிருக்க அதன் மத்தியில் பிரயோக கோலத்தில் இருக்க, அருகில் மேதாவி அவரை வணங்கியபடி உள்ளார். கருட சன்னதிக்கு அருகில் 108 திருப்பதிகளின் உற்சவர் சிலைகள் இருக்கிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் சிரவண நட்சத்திரத்தில் விசேஷ திருமஞ்சனங்கள் நடக்கிறது.
 
ஸ்தலபெருமை : திருமங்கையாழ்வாருக்கு அருளிய பெருமாள்  நீலன் எனும் குறுநிலமன்னனாக இருந்த திருமங்கையாழ்வார் பெருமாள் மீது பக்தி கொண்டு தான் வைத்திருந்த பணத்தையெல்லாம் இறைப்பணிக்கே செலவிட்டார். அவர் வைணவர் அல்லாததால் யாரும் அவரை ஏற்றுக்கொள்ள வில்லை. இதனால் மனம் கலங்கிய அவர் இத்தலம் வந்தபோது மகாவிஷ்ணுவிடம் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவருக்காக மனம் இரங்கிய பெருமாள் ஆச்சார்யனாக வந்து "முத்ராதானம்' செய்து வைத்தார். (முத்ராதானம் என்பது ஒருவரை பரிபூரண வைணவராக ஏற்றுக்கொள்வதற்காக அவரது இரு கைகளில் சங்கு, சக்கர அச்சு இடப்படும் அடையாளம்). ஆச்சார்யனாக வந்ததால் இத்தலத்து பெருமாள் 2 கைகளுடன் இருக்கிறார். கையில் சங்கும் சக்கரமும் முத்ராதானம் செய்த கோலத்தில் முன்புறம் தள்ளியும்  சங்கு திரும்பிய நிலையிலும் இருக்கிறது. தன்னை ஏற்றுக்கொண்டதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தில் 100 பாசுரங்களுக்கு மேல் பதிகங்கள் பாடி சுவாமியை "நம்பி' என்று சொல்லி மங்களாசாசனம் செய்தார். நம்பி என்றால் பரிபூரணமான நற்குணங்களால் நிறையப்பெற்றவர் என்று பொருள். திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே பெருமாள் ஆச்சார்யனாக வந்து முத்ராதானம் செய்துள்ளார்.




சாவிக்கொத்துடன் தாயார் : ஸ்ரீரங்கம் கோயில் ஆண்டாளால் பெயர் பெற்றிருப்பது போல இத்தலமும் தாயாரால் பெயர் பெற்றிருக்கிறது. இங்கு தாயாரை மையப்படுத்தியே கருவறையும் அமைக்கப்பட்டிருக்கிறது. பெருமாளை விட சற்று முன்புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. வீதியுலா செல்லும் போதும் இவளே முன்பு செல்ல அதற்கு பின்பே சுவாமி எழுந்தருளுகிறார். இவளுக்கே முதலில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது.

கல் கருடசேவை : இங்கு கருடாழ்வார் தனிச்சன்னதியில் உடலில் ஒன்பது நாகங்களுடன் அருளுகிறார். இவருக்கு ஆறுகாலமும் மோதக நைவேத்யம் படைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகிறது என்பது சிறப்பிலும் சிறப்பு. உற்சவ காலங்களில் மரத்தால் அல்லது பிற உலோகங்களால் செய்யப்பட்ட கருடன்தான் வீதியுலா செல்வார். ஆனால் இங்கு கருடசேவையின் போது கற் சிலையாக இருக்கும் மூலவரே வீதியுலா செல்கிறார். இவரை கருவறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும்போது முதலில் நான்கு பேர் இவரை சுமந்து வருவர். பின் அப்படியே 16, 32 எனப்பெருகி இறுதியில் பலர் இவரைச் சுமக்கிறார்கள். இவர் வெளியிலிருந்து மீண்டும் கருவறை நோக்கி வரும் போது அதே எண்ணிக்கையில் ஆட்கள் குறைந்து பின் கருவறையில் வைக்கின்றனர். கருடரால் சிறப்பு பெற்ற இத்தலத்தில் சில வருடங்களுக்கு முன்புவரையில் உச்சிகால பூஜையில் இரண்டு கருடன்கள் வந்து நைவேத்ய பொருட்களை உண்டு வந்ததாம். அவற்றின் மறைவிற்கு பிறகு பிரகாரத்தில் அதற்கென தனிச்சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

நாயனார் வணங்கிய பெருமாள் : கோச்செங்கணர் எனும் சோழ மன்னர் சிவன் மீது கொண்டிருந்த பக்தியால் நாயன்மார்களில் ஒருவராக இடம்பிடித்தவர். 70 சிவாலயங்கள் கட்டி சிவனை வழிபட்ட இவருக்கு வைகுண்டம் செல்ல ஆசை ஏற்பட்டது. எனவே அவர் பெருமாளை வேண்டினார். அவருக்கு இரண்டு கரங்களுடன் காட்சி தந்த பெருமாள் தனக்கு கோயில் கட்டும்படி பணித்தார். அவருக்காக இத்தலத்தில் சிவன் கோயில் அமைப்பில் யாளிகளுடன் கோபுரத்திற்கு அருகில் இருந்து பார்த்தாலும் சுவாமி தெரியும்படி மாடக்கோயில் போல இக்கோயிலைக் கட்டினான் கோச்செங்கட்சோழன். திருமங்கையாழ்வார் தனது பாசுரத்தில் இக்கோயிலை "மணிமாடக்கோயில்' என்று பாடியுள்ளார். பஞ்சகிருஷ்ண கோயில்களில் முதலாவதான இத்தலம் முக்தி தரும் பன்னிரெண்டு தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. விமானம் ராஜகோபுரம் போன்ற அமைப்பிலேயே இருக்கிறது.
 
ஸ்தல வரலாறு : மேதாவி எனும் மகரிஷி மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி உடையவராக இருந்தார். அவரையே தனது மருமகனாகப் பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இங்கு வஞ்சுள மரத்தின் கீழ் தவம் இருந்தார். மேதாவியின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவர் தவம் செய்த மரத்தின் அடியில் சிறுமியாக அவதரித்தாள். சிறுமியைக் கண்ட மகரிஷி அவளுக்கு "வஞ்சுளாதேவி' எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமண வயதை அடைந்த அவள் தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷாத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளை தேடி வந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று தேடினர். அவருடன் வந்த கருடாழ்வார் இத்தலத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரைக் கண்டு, மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைக் கூறினார். அவர் இங்கு வந்து வஞ்சுளா தேவியை பெண் கேட்டார். மேதாவி மகாவிஷ்ணுவிடம் தாங்கள் என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென விரும்பினால் எப்போதும் நீங்கள் அவள் சொல் கேட்டுத்தான் நடக்க வேண்டும், அவளே அனைத்திலும் பிரதானமானவளாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். மகாவிஷ்ணுவும் ஏற்றுக் கொண்டார். கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது மகாவிஷ்ணு கருடாழ்வாரிடம் நான் இங்கு என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே நீயே இங்கிருந்து நான் பக்தர்களுக்கு அருளுவதைப் போல அருள் வழங்க வேண்டும்'' என்றார். கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம்பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில் என்ற பெயரும் பெற்றது.


திவ்ய தேசங்கள் -50

அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில்
மூலவர் :  முகுந்த நாயகன், அழகிய சிங்கர்
தாயார் :  வேளுக்கை வல்லி
தீர்த்தம் :  கனக சரஸ், ஹேமசரஸ்
பழமை : 1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :  திருவேளுக்கை, வேளுக்கை
ஊர் :  காஞ்சிபுரம்
மாவட்டம் :  காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : பேயாழ்வார்

விண்ணகரம் வெஃகா விரிதிரை நீர் வேங்கடம் மண்ணகரம் மாமாட வேளுக்கை மண்ணகத்த தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு.
விழா : வைகுண்டா ஏகாதசி
            
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.    
          
முகவரி : அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் கோயில், காஞ்சிபுரம்-631501 காஞ்சிபுரம் மாவட்டம், போன்:+91- 44-6727 1692    
           
தகவல் : நரசிம்மரின் மேல் உள்ள விமானம் கனக விமானம். இந்த பெருமாளை பிருகு முனிவர் தரிசனம் செய்துள்ளார். கோயில் சுற்றுப்பிரகாரத்தில் சுதர்சன சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். நரசிம்மருக்கு எதிரில் உள்ள கருடாழ்வார் நரசிம்மரின் உக்கிரம் தாளாது சற்றே தலை சாய்த்து பயத்துடன் இருப்பது மிகவும் அதிசய அமைப்பாகும்.     
     
ஸ்தல பெருமை : பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்று. புராண வரலாற்றின் படி பிருகு முனிவருக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததாக ஐதீகம். பேயாழ்வார் இத்தலத்தினை உப்பிலியப்பன் கோயில், கும்பகோணம், திருப்பதி போன்ற தலங்களுக்கு இணையாகப் பாடியுள்ளார். இதிலிருந்து இத்தலத்தின் சிறப்பை அறியலாம். ஆழ்வார்களைத் தவிர சுவாமி தேசிகனும் இப்பெருமாளை "காமாஸீகாஷ்டகம்' என்ற ஸ்லோகத்தால் போற்றியுள்ளார். இதை தினமும் பாராயணம் செய்தால் நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும். இதனை "காமாஷிகா நரசிம்ம சன்னதி' என்றும் அழைப்பார்கள்.     
            
ஸ்தல வரலாறு : திருமாலின் அவதாரங்களில் மிகவும் போற்றப்படுகிற அவதாரம் நரசிம்ம அவதாரம். பெருமாளின் காக்கும் குணம் உடனே வெளிப்பட்ட அவதாரம். பக்தனின் வார்த்தையை பகவான் உடனே காப்பாற்றிய அவதாரம். "வேள்' என்ற சொல்லுக்கு "ஆசை' என்று பொருள். இரணியனை வதம் செய்த பின் பகவான் நரசிம்மர் அமைதியை விரும்பினார். அவர் இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் "வேளிருக்கை' என்றாகி, காலப்போக்கில் "வேளுக்கை' என்றாகி விட்டது. ஒருமுறை பிரம்மா யாகம் செய்த போது யாகத்தை அழிக்க அரக்கர்கள் வந்தனர். பிரம்மா பெருமாளிடம் இந்த யாகம் சிறப்பாக நடக்க அருள்புரியுமாறு வேண்டினார். பிரம்மாவின் வேண்டுதலை ஏற்றார் பெருமாள். முன்பு பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்த அதே திருக்கோலத்துடன் "ஹஸ்திசைலம்' என்ற குகையிலிருந்து புறப்பட்டு வேள்வியை அழிக்க வந்த அசுரர்களை விரட்டினார். அவர்கள் காஞ்சியில் இந்த இடத்தில் காணாமல் போய்விட்டார்கள். அங்கேயே மேற்கு நோக்கி அமர்ந்து யோக நரசிம்மராகி விட்டார். இவருக்கு ஆள் அரி, முகுந்த நாயகன் என்ற திருநாமங்களும் உண்டு.
-------------------------------------------------------

தண்டம் உள்ள, தண்டம் இல்லாத ஸந்யாஸிகள், ஸ்வாமிகள் என்பவர் யார்?

தண்டம் உள்ள, தண்டம் இல்லாத ஸந்யாஸிகள், ஸ்வாமிகள் என்பவர் யார் என்பதை பற்றி நண்பர்கள் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

க்ரமமாக  வைதீக முறைப்படி விரஜா ஹோமம் செய்து குரு முகமாக உபதேசம் பெற்று ஸ்வீகரிப்பதே க்ரம ஸந்யாஸம். இது ஸ்மார்த்த, வைஷ்ணவ, மத்வ ஸம்ப்ரதாய ஸந்யாஸிகளுக்கு பொதுவானது.

ஸ்மார்த்த முறையில் ஸந்யாஸிகள் 10 வகையில் பிரிக்கப்படுகிறார்கள். இது ஆதிசங்கரர் உருவாக்கிய வகைப்படுத்தல். தசநாமி என்பார்கள். தீர்த்த, ஆசிரம, வன, ஆரண்ய, கிரி, பர்வத, ஸாகர, புரி, பாரதி, ஸரஸ்வதி எனும் பத்து பெயர்கள் கொண்ட சந்நியாசிகள். (உதாரணம் : ஞானானந்த கிரி, சந்த்ரசேகர ஸரஸ்வதி, பாரதி தீர்த்தர், தோதாபுரி, சந்த்ரசேகர பாரதி - போன்றவை). இவர்கள் எல்லோருமே ஏக தண்டம் கொண்டவர்கள்.

இதே போல மத்வ ஸம்ப்ரதாயத்திலும் ஸந்யாஸ தீக்ஷை உண்டு. அவர்களும் ஏக தண்டம் கொண்டவர்களே ! அவர்களுக்கு பெரும்பாலும் “தீர்த்தர்” என்ற பட்டமே அமைந்திருக்க காண்கிறோம். (உதாரணம் : ராகவேந்த்ர தீர்த்தர், வ்யாஸராஜ தீர்த்தர் போன்றவை)

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் த்ரிதண்டம் கொண்ட பீடாதிபதிகளைப் பார்க்கிறோம். இவர்கள் பொதுவாக ஜீயர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள்.

மத்வ, வைஷ்ணவ, ஸ்மார்த்த ஸந்யாஸிகள் அத்தனை பேருக்குமே (அதாவது குருமுகமாக உபதேசம் பெற்றவர்கள்) பீடாதிபதியாக இருந்தாலும் இல்லா விட்டாலும் இவர்களுக்கு தண்டம் கட்டாயம் உண்டு. தண்ட வந்தனம், தண்ட நமஸ்காரம் எல்லாமே உண்டு.

சுருக்கமாக சொல்லப்போனால், தண்டம் இல்லாதவர் (technically) ஸந்யாஸி இல்லை.

எளிய பாஷையில் சொல்வதானால், சந்யாஸி வேறு சாமியார் வேறு

நான் அறிந்த வரை வைஷ்ணவத்தில் பீடாதிபதிகள் மட்டுமே தண்டம் தரித்த சந்யாஸிகளாக பார்த்து இருக்கிறேன். மடாதிபதி அல்லாத தனி சந்யாஸிகள் ஸ்ரீ வைஷ்ணவத்தில் உண்டா என்பதை அந்த ஸப்ரதாயத்தை அனுசரிப்பவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.

மத்வ ஸம்ப்ரதாயத்தில் ஸந்யாஸிகள் எக்காலத்திலும் தண்டத்தை விட்டுப் பிரிவதில்லை. பூஜாகாலத்திலும், ஆராதனை காலத்திலும் தண்டம் கட்டாயம் கையில் இருக்கத்தான் செய்கிறது. வந்தன காலத்தில் அருகே இருக்கும் சிஷ்யரிடம் கொடுப்பது வழக்கம். ச்ருங்கேரி போன்ற மடங்களில் பூஜா காலங்களிலும் யாத்ரையின் போதும் ஆசார்யாள் தண்டத்தை கையில் வைத்தும் மற்ற நேரங்கள் அறையில் வைத்து விட்டு தரிசனம் தரும் வழக்கமும் காணப்படுகிறது.

அதேசமயம் ஸ்மார்த்த ஸம்ப்ரதாயத்தில் இதற்கு இன்னும் அடுத்த படி நிலை என்று ஒன்று உண்டு. அவதூத பரமஹம்ஸ நிலை. இந்த நிலையை அடைந்தவர்கள் தண்ட கமண்டலங்களையும் மந்த்ரபூர்வமாக திரஸ்கரணம் செய்து விடுவது வழக்கம். முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் இவர்கள் சந்யாஸம் பெற்று, சந்யாஸ ஆச்ரமத்தை அனுசரித்து, அதன் பின்னரே தண்டத்தை திரஸ்கரணம் செய்திருக்கிறார்கள்.

ஞானானந்தர், சேஷாத்ரி ஸ்வாமிகள், ஜட்ச் ஸ்வாமிகள், சதாசிவ ப்ரம்மேந்த்ரர், சேந்தமங்கலம் ஸ்வாமிகள், சாந்தானந்தர் எல்லோரும் எல்லோரும் இந்த வரிசையில் வந்தவர்களே. இவர்கள் அத்தனை பேருக்கும் தண்ட கமண்டலம் உண்டு. ஆனால் அவர்கள் அதை எப்போதும் கையில் எடுத்துக் கொண்டு நடப்பது இல்லை.

ஸதாசிவ ப்ரம்மேந்த்ரர், காஞ்சி மடத்தின் 57வது பீடாதிபதி பரசிவேந்த்ர ஸரஸ்வதியின் சிஷ்யர். அவரிடம் முறையாக சந்யாஸம் பெற்றவர். காஞ்சி மடத்து பீடாதிபதியாக வந்திருக்க வேண்டியவர். தன் உடம்பு எனும் ப்ரக்ஞையை மறந்து அவதூத நிலையை எட்டிய பின் தண்ட கமண்டலங்களை திரஸ்க்ரணம் செய்து விட்டார்.

ஞானானந்தரின் குரு சிவரத்ன கிரி ஸ்வாமிகள் - ஜோஷி மடத்தின் சங்கராசார்யாராக இருந்தவர். அவரிடம் க்ரம சந்யாஸம் பெற்றவர் ஞானாந்தர். ஒரு முறை ஞானானந்தரை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர் "தண்டம் இல்லாத சன்யாசியை வணங்காதே" என்று சாஸ்திரம் சொல்லுகிறதே இவரை வணங்குவதா வேண்டாமா என்று யோசித்தார்.

அடுத்த நொடி ஞானானந்தர் "தன்னைத் தான் கண்டவர்க்கு கோல்தடியும் ஏதுக்கடி" என்ரு வேடிக்கையாக பாடினார். வந்த பக்தரும் தன் தவறை உணர்ந்தார். ஞானாந்தரின் சந்யாஸ தண்டம் அவரது அறையில் இருக்கும். குருபூர்ணிமை போன்ற நாட்களில் ஞானானந்தரும் கூட தண்டம் கமண்டலம் ஏந்தி விதிவத்தாக தரிசனம் கொடுப்பதுண்டு.

அதே போல குருநாதர் ஸ்ரீ  சேஷாத்ரி ஸ்வாமிகள், ஹரித்வாரத்தைச் சேர்ந்த ஸ்ரீ பாலாஜி ஸ்வாமிகள் என்ற கௌட தேசத்து ஸந்யாஸியிடம் ஸந்யாஸ தீக்ஷை பெற்றவர். காஞ்சிபுரத்து ஸர்வதீர்த்தக் கரையிலேயே சேஷாத்ரி ஸ்வாமிகள் ஸந்யாஸம் பெற்றார். பரமஹம்ஸ நிலையை அடைந்த காரணத்தால் குருநாதரி உத்தரவின் பேரில் தண்ட கமண்டலங்களை "பூ ஸ்வாஹா" என்று ஜலத்தில் விட்டு ஜாதரூபனாக ஸஞ்சரிக்கத் துவங்கினார்.

ஜட்ஜ் ஸ்வாமிகளின் தீக்ஷா நாமமும் ஸதாசிவ ப்ரம்மேந்த்ர ஸரஸ்வதி தான். அவரும் முறையாக சந்யாஸம் பெற்றவர் தான். (ராமக்ருஷ்ண அவதூத மஹராஜ் என்று குரு காஸஹஸ்தியில் அவருக்கு ஸந்யாஸம் கொடுத்தார்.)  ஜட்ஜ் ஸ்வாமிகளின் நேரடி சிஷ்யர் தான் ஸ்வயம்ப்ரகாச அவதூத ஸ்வாமிகள்(சேந்தமங்கலம் ஸ்வாமிகள்) அவர் சிஷ்யர் சாந்தானந்தர். இவர்கள் எல்லோருமே சந்யாஸத்திலிருந்து அவதூத நிலைக்கு சென்றவர்கள். அதனால் தண்டத்தை ஸ்வீகரித்து, பின்னர் விட்டவர்கள்.

ரமண மஹரிஷி க்ரமமாக சந்யாஸம் பெறவே இல்லை ! அதனால் தான் அவர் காவி கட்டவே இல்லை அவர் ஜீவன்முக்த ஞானி ! சந்யாஸியல்ல.

சின்மயானந்தா, தயானந்த ஸரஸ்வதி, விவேகானந்தர் போன்றவர்கள் துறவு வாழ்கை மேற்கொண்டவர்களேயன்றி வைதீக ஸந்யாஸ விதி என்ற கணக்கில் வருவதில்லை.

அதே போல் மிஷனரியைச் சேர்ந்தவர்கள், வைதீகமான, விதிவத்தான க்ரம ஸந்யாஸம் என்ற கணக்கில் வருவதில்லை. அதனால் அவர்களுக்கும் தண்டம் கிடையாது.

அதனால் திடீர் அம்மாக்கள், அப்பாக்கள், அண்ணாக்கள், தம்பிகள், ஸ்ரீ, ராம்ரஹீம் போன்றோர் இந்த வரிசையிலேயே கிடையாது.

முறையான குரும்பரம்பரையை சேர்ந்தவர்களே வணங்கத்தக்கவர்கள்.

அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

சுருதி ஸூக்தி மாலா : சுலோகம்-21-30
|| ஓம் நம: சிவாய ||
சுருதி ஸூக்தி மாலா அல்லது சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம்
சிவலிங்க பூபதியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி
தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும்

சுலோகம் 21

ச்ரைஷ்ட ப்ரயுக்தமபி நாம நமஸ் த்வதீயம்
ச்ரேஷ்டோஸி ய: க்ரதுபுஜாம் பதிரக்ரியானாம் |
ச்ரேஷ்ட ச்ருதோஸி பகவந்நவிசேஷதஸ்த்வம்
மந்த்ரேஷு க்ருச்ச்ர படிதேஷு ச ஸாம கானாம் ||
“தூஷ்யது துர்ஜன :” என்பது ஒர் ந்யாயம், துஷ்டன் ஸந்தோடஷப்படட்டும் என்று அவன் சொல்லும் கக்ஷியை அங்கீகரித்தே நமது கொள்கைக்குப் பாதகமில்லை என்று ஸாதிப்பது சாஸ்திரக்காரர்கள் வழக்கம். அந்த ந்யாயப்படி மேற்கொண்ட நமஸ்க்ருத்ய ஹி வஸீயாம்ஸம் என்ற வேதப்படி, சிறந்த நிலை தான் நமஸ்கரிக்கப்படுவதற்குக் காரணம் என்று அங்கீகரித்தாலும் நம் கக்ஷிக்கு பாதகமில்லை என்று சொல்லப்படுகிறது.
பதவுரை
ச்ரைஷ்ட ப்ரயுக்தமபி நம: – சிறந்த மேன்மையால் ஏற்படும் நமஸ்காரமும், த்வதீயம் நாம – உம்மைச் சேர்ந்தது தான். அக்ரியானாம்பதி: – பசுபதியாகிய, ய: – த்வம் – யாதொரு நீர், க்ரது புஜாம் – தேவர்களுக்குள், ச்ரேஷ்டோஸி – சிறந்தவராக இருக்கிறீரோ, பகவன் – பகவானே! ஸாமகானாம் – சாமவேதிகளினுடைய, கிருச்ச்ரபடி தேஷு – க்ருச்ச்ர க்ரந்தத்தில் சொல்லப்படுகிற மந்த்ரேஷு – மந்த்ரங்களில், அவிசேஷத: – பொதுவாக (அபேக்ஷிகமன்னியில்) த்வம் – நீர், ச்ரேஷ்ட:- சிறந்தவர் என்று, ச்ருதோஸி – சொல்லப்பட்டிருக்கிறீர். “நமோ ஜ்யேஷ்டாய ச்ரேஷ்டாய என்பது ஸாமவேதிகளின் க்ருச்ச்ர க்ரந்தத்தில் படிக்கப்பட்டிருக்கும் மந்த்ரமாகும். நக்ஷத்ரேஷ்டியில் திருவாதிரை நக்ஷத்திர ப்ரகரணத்தில் சொல்லப்படும் ஆர்த்ரயா ருத்ர: ப்ரதமான ஏதி ச்ரேஷ்டோ தேவானாம் பதிரக்னியானாம் என்ற மந்த்ரம். பசுபதி ஸர்வ தேவர்களுக்குள் சிறந்தவர் என்பதை விளக்குவது இங்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டும்.

சுலோகம் 22

தேவாந்தரைஸ் ஸஹ நமஸ்துதி ஹூதய ஸ்தே
தோஷாய நால மலமேவ விபர்யயாய |
புத்ரார்த்தின: சருவிதெள ஸஹ சந்த்ர மெளளே
ஸோமேன ஹூத மனுசுஸ்ரீஉம ருத்ரமக்னிம் ||
இவ்விதம் 9 முதல் 21 முடிய 13 ச்லோகங்களால் வேத, புராண வசனங்களைக் கொண்டும், சுருதி, ஸ்ம்ருதி லோக (புராணம்) ந்யாய ரீத்யா, நம: சேஷித்வம் என்ற லக்ஷணம் அதிவ்யாபதி, அவ்யாப்தி, அஸம்பவ ரூப தோஷ த்ரயமில்லாமல் பரமசிவனைக் குறிக்கும் என்பதை விளக்கி விட்டு,
இப்போது உத்தேச க்ரமமாக வந்த இரண்டாவது லக்ஷணமாகிய பகவத் பத வாச்யத்வம் என்பதை 29 முதல் 34½ வரை 6½ ச்லோகங்களால் உபபாதனம் பண்ணும் நோக்கத்துடன்
நடுவில் 22 முதல் 28 முடிய 7 ச்லோகங்களால் சிவபெருமான் வேதங்களில் பிறதேவதையுடன் சேர்க்கப்பட்டு துதிக்கப்படுவதோ நமஸ்கரிக்கப்படுவதோ, கூப்பிடப்படுவதோ கிடையாது, தனியாகத்தான் துதி, நமஸ்காரம், ஆஹ்வானம் செய்யப்படுகிறார். ஏனெனில் ஸமாஸமாப்யாம் விஷமே பூஜாத: என்ற கெளதமாதி வசனப்படி, சிறந்தவரைத் தாழ்ந்தவர்களோடு ஒன்று கூட்டி மரியாதை செய்வது தகாது என்ற முறையுள்ளதல்லவா என்ற விஷயத்தை ப்ரதிபாதிப்பதால், சிவபெருமான் நம: சேஷித்வ லக்ஷணத்தையும் சிறப்பையும், ஸ்தாணா நிக்ந ந்யாயப்படி த்ருடப்படுத்துவதற்கு, இந்த ச்லோகம் ஆரம்பம்.
பதவுரை
தேவாந்தரை: ஸஹ – மற்ற தேவதைகளோடு கூட, நம : ஸ்துதி ஹூதய : – நமஸ்காரம், ஸ்துதி, ஆஹ்வானங்கள், தே – உம்முடைய, தோஷாய – சந்தோஷம் பொருட்டு, நாலம் – சக்தியுள்ளவை அல்ல. விபர்யயாயைவ அலம் – கோபத்தின் பொருட்டேயாகும். சந்திரமெளளே – சந்திரனை சிரசில் தரித்திருப்பவரே! புத்ரார்த்தின: – ஸந்ததியை விரும்புகிறவனுக்கு, சருவிதெள – விதிக்கப்பட்ட சருவை த்ரவ்யமாகக் கொண்டயாகத்தில், ஸோமேன ஸஹ – ஸோமதேவதையோடு கூட, ஹூதம் – கூப்பிடப்படுகிற, ருத்ரம – ருத்ரனை, அக்னிம் – அக்னி தேவதையாக, அனுசுச்ரும – நாங்கள் வேதங்கள் வாயிலாக அறிகிறோம். ஆதலால் ஸோமாரெளத்ர சருவில், தாங்கள் ஸோமனோடு சேர்ந்து பூஜிக்கப்படவில்லை. ஸோமனும் அக்னியும் சேர்ந்து பூஜிக்கப்படுகிறார்கள்.
விரிவுரை
மாத்வா ருத்ர சுக்ருதாமா நமோபி: – ருத்ரதேவதையே! உம்மைப் பிறருடன் சேர்த்து நமஸ்கரிப்பதால் கோபிக்கச் செய்ய மாட்டோம். வ்ருஷப – வேண்டியதை வர்ஷிக்கும் ஸ்வதந்த்ர தெய்வமே! துஷ்டுதீ – மற்றதேவதைகளுக்கு சமமாகச் செய்யும் ஸ்துதியாலும், மா சுக்ருதாம – கோபமூட்ட மாட்டோம்; மா சுக்ருதாம ஸஹூதீ – வேறு தெய்வங்களோடு சேர்த்துக் கூப்பிடுவதாலும், (யாஜ்யா புரோனுவாக்யா – மந்த்ரங்களால் சேர்த்து யக்ஞத்துக்கழைப்பதாலும்) கோபிக்கச் செய்யமாட்டோம். இந்த மந்த்ரத்தின் அர்த்தம் நிருக்தத்தில் சொல்லப்பட்டிருப்பதாவது.
கிம் ச துல்ய நமஸ்காரை: தேவாந்தரகாமிபி: |
துஷ்டுத்யா ஸத்ருச ஸ்துத்யா ஸமானாஹ்வான
கர்மணா ந வயம் சுக்ருதாம த்வாம் ஸர்வதேவ நமஸ்க்ருதம் ||
சிவபெருமானையும் விஷ்ணுவையும் கூடச்சேர்த்து ஸமமாக பாவிப்பவன் சண்டாள துவ்யனாகிறான். அவன் ஸங்கர ஜாதியைச் சேர்ந்தவனென்பது அனுமானம் செய்யப்படலாம். சூர்யனுக்கும் மினுமினுப் பூச்சிக்கும் போல, சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் வித்தியாசமுளது என்றெல்லாம், தத்வம், சிவதத்வ நிரூபணம், ஆதித்ய புராணம், பராசர புராணம், ஸ்காந்தம் ஹூத ஸம்ஹிதை முதலிய க்ரந்தங்களில் விவரிக்கப்பட்டிருப்பதை காண்க. ஸ்ரீமத் பாகவத்தின் 3, 4, 8-வது ஸ்கந்தத்தில் விஷமுண்டு உலகனைத்தையும் காத்த சிவபெருமானுக்கு நிகரான தெய்வம் கிடையாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருப்பதை, வைஷ்ணவர்களும் (முக்யமாக வைஷ்ணவப் பற்றுதல் உள்ள ஸ்மார்த்த ப்ராம்மணர்களும் தி.வி.அ) நன்கு கவனித்து தத்துவறிய வேண்டிய விஷயமாகும்.
ஸோமா ரெளத்ரம் சரும் நிர்வபேத் ப்ரஜாகாம:
என்பது சந்தானத்துக்காக விதிக்கப்பட்ட யக்ஞத்தைத் தெரிவிக்கும் வேதவாக்யமாகும்.

சுலோகம் 23

அக்னிம் ப்ரக்ருத்யகலு ருத்ரபதம் ப்ரயுங்க்தே
தத் ப்ராமஹணம் பவதி யத்ர தயோஸ் ஸஹூதி: |
ஆஹ்வானமத்ர பவத: ப்ருதகேவ த்ருஷ்டம்
யத் ப்ராதரக்னிமிதி ஸூக்த வித: படந்தி ||
ஸோமா ரெளத்ர சரு விதியில் ஸோமனோடு சேர்த்துக் குறிக்கப்படும் ருத்ரன் தாங்கள் அல்ல அக்னிதான் என்பது அடுத்த இரண்டு அர்த்தவாத வாக்கியங்களால் தெளிவாகிறது.
“ஸந்திக்தேஷு வாக்யசேஷாத்” என்றல்லவா, ஜைமினியின் மீமாம்ஸ வாக்ய ந்யாயம்?
அக்தா சர்க்கரா உபதம் தாதி என்ற விதியில் பொதுவாக நனைத்த கல்லை மேடைகட்ட உபயோகிக்க விதியிருந்தாலும், நெய்யில் நனைக்கப்பட்ட கல்லை மேடைகட்ட உபயோகிக்க வேண்டுமென்று விசேஷமான பொருள். தேஜோவை க்ருதம் என்ற துதி, பர அர்த்தவாதத்தினால் கொள்ளப்படுவது வழக்கமல்லவா என்ற நோக்கத்துடன், அந்த சந்தேகத்தைத் தெளிய வைக்கும் அர்த்தவாதங்களை எடுத்துக் கூறுகிறார்.
பதவுரை
யத்ர தயோ: ஸஹூதி: – எந்த ஸோமாரெளத்ர சருவில் ஸோமனுக்கும் ருத்ரனுக்கும் சேர்ந்து ஆஹ்வானம் காணப்படுகிறதோ, தத் – அந்த, ப்ராம்மணம் பவதி – அர்த்தத்தை நிர்ணயித்துக் கொடுக்கக் கூடிய அர்த்த வாக்யம் இருக்கிறது, இங்கு ப்ராம்மணபதம் விதி வாக்யத்தைக் குறிக்காது. அர்த்தவாத வாக்கியத்தைக் குறிக்கும். சேஷே ப்ராம்மண சப்த: என்று ஜைமினி விதிவாக்யத்திற்குப் போல, அர்ந்தவாத வாக்கியத்திற்கும் பிராம்மண பதம் வாசகம் என்பதை நிலை நாட்டியிருக்கிறார். அக்னிம் ப்ரக்ருத்யகலு – அக்னியைச் சொல்லியல்லவா, ருத்ரபதம் – ருத்ரன் என்ற பதத்தை. ப்ரயுங்க்தே – ப்ரயோகம் செய்கிறார். அத்ர – தங்களைக் கூப்பிடுமிடத்தில், பவத : – ஆஹ் வானம், – தங்களைக் கூப்பிடுவது, ப்ருதகேவ – தனியாகத்தான், த்ருஷ்டம் – காணப்படுகிறது, ஹூக்தவித: – ஹூக்தங்களை கண்டு பிடித்தவர்கள், யத் – எந்த ஹூக்தத்தை, ப்ராதரக்னி மிதி – ப்ராதரக்னிம் ப்ராதரிந்திரம் ஹவாமஹே என்பது முதலாக, படந்தி – படிக்கிறார்களோ, அங்கு உம்மைத் தனியாக அல்லவா கூப்பிடுவது தெளிவாகக் காணப்படுகிறது.

சுலோகம் 24

அக்ன்யாதிபிஸ்தவ மஹேச்வர! ஹூதிசங்கா
மாபூத் இதி ப்ரக்ருதமப் யனுஷங்க யோக்யம் |
மந்த்ர: க்ரியா பத மபாஸ்ய பதாந்தரேண
த்வாமா ஹ்வயந் நுதபதேன பினத்தி ரீ திம் ||
பதவுரை
மந்த்ர – ப்ராரதரக்னிம், ப்ராதரிந்திரம் ஹவாமஹே
என்ற மந்த்ரம், அக்ன்யாதிபி: அக்னி முதலிய தேவதைகளோடு, தவ – உம்மை, ஹூதிசங்கா கூப்பிடப்படும் ஸந்தேஹம். மாபூத் இதி – (ஜனங்களுக்கு) ஏற்படக்கூடாது என்ற நோக்கத்துடன், ப்ரக்குதம் – முன்பு சொல்லப்பட்ட, அனுஷங்க யோக்யம் – பின் வாக்கியத்தில், ஸம்பந்தப் படுத்தத் தகுத்ததாயிருந்த போதிலும் க்ரியாபதம் – ஹவாமஹே என்ற வினைச்சொல்லை, அபாஸ்ய – விட்டுவிட்டு, உமது வாக்கியத்தில் அனுஷங்க ந்யாயப்படி, மற்றதேவதை வாக்யத்தில் போல சேர்த்து ஸம்பந்தப்படுத்தாமல் விட்டு, பதாந்தரேண – உத ருத்ரம் ஹவேம் என்றபடி, ஹவேம என்று மற்றொரு தனி வினைச் சொல்லால், த்வாம – உம்மை, ஆஹ்வயந் – கூப்பிடுகிறதாய் இருந்து கொண்டு, உத – பதேன – உத என்ற பதத்தினால், அபி – என்ற சப்தத்திற்கு ஸமானமான அர்த்தத்தைக் கொடுக்கும் சக்திவாய்ந்ததினால், ரீதிம் – உமக்கு தேவதாந்தர ஸாத் ருச்யத்தை, மஹேச்வரா! பினத்தி – அடியோடு விலக்குகிறது. ருத்ரம் உத – ருத்ரனைக்கூட, ஹவேம் – தனியாகக் கூப்பிடுவதற்கு அவகாசம் அடைகிறோம் என்பது தாத்பர்யம்.
உத பதத்தால் பிரித்து, மற்றவர்களுக்கு அனுஷங்க ந்யாயப்படி, ஸம்பந்தப் படுத்தப்பட்ட க்ரியா பதத்தைக் தங்களுக்குச் சேர்க்காமல், தனியாக வினைச்சொல் கூறி உம்மைக் கூப்பிட்டது, எங்கும் எப்பொழுதும் உம்மைத் தனியாகவே கூப்பிட வேண்டும், மற்ற தாழ்ந்த சிறு தேவதையுடன் சேர்த்துக் கூப்பிட்டு ஸ்துதி நமஸ்காரம் செய்வது தவறு; உமக்கு ப்ரதீயாகாது என்ற தத்வத்தை நன்கு விளக்குகிறது.

சுலோகம் 25

ந்யாஸீ க்ருதம் வஸு பலா தமரை ரவாப்தும்
அன்வாகதோ ருதிதவானிதி ருத்ரமக்னிம் |
ருத்ராம்ஸ்த்வதுத்பவதயா மருதோ கணான்வா
ருத்ராவணேன ச பவந்த மவைமி ருத்ரம் ||
அக்னியை ருத்ர சப்தத்தால் சொல்வதற்கு காரணம் விளக்குகிறார்.
பதவுரை
அமரை: – தேவர்களால், ந்யாஸீ க்ருதம் – நியாஸமாக ஒப்படைக்கப்பட்ட, வஸு – ஸொத்தை, பலாத் – பலாத்காரமாக, அவாப்தும் – அடைவதற்கு, அன்வாகத: – பின் தொடர்ந்து வரப்பட்டவன், ருதித வான் – அழுதான் அல்லது அழச்செய்தான், இதி – என்ற காரணத்தால், அக்னிம் – அக்னி தேவதையை, ருத்ரம் – ருத்ர சப்தத்தால் சொல்லப்படுவதாக, அவைமி – அறிகிறேன். மருத: – ஸப்த மருத்துக்களையும், கணான்வா – உமது சபையோர்களான பார்ஷதர்களையும், த்வதுத்பவதயா – உம்மிடமிருந்து உண்டான காரணத்தால், “கார்ய காரணமோ ரபேத ந்யாயேன” குடத்தை மண் என்பதுபோல, ருத்ரான் – ருத்ர சப்தவாச்யர்களாகவும், பவந்தம் – உம்மை, ருத் த்ராவணேன – துக்கத்தையும் பாபத்தையும் நசிக்கச் செய்வதால், ருதி என்ற வேதஸ்வரூபமான சப்தத்தைக் கலப்பத்தின் முதலில் பிரம்மாவிற்கு ததாதி கொடுப்பதாலும், ருத்ரம் –ருத்ர சப்தவாச்யனாக, அவைமி – அறிகிறேன்.

சுலோகம் 26

யக்ஞேபி ருத்ரபதமாருண கேதுகோக்தம்
தத் சப்த மீச்வர ! ததீயமபி ஸ்மரந்தி |
யத்தத் ப்ரதேசகத ருத்ர பதாவகாசே
யக்ஞஸ்ய சப்த மனுசுச்ரும ஸாமகேப்ய: ||
யக்ஞே அபி – யாகம் என்ற அர்த்தத்திலும், ருத்ர பதம் – ருத்ரம் என்ற பதமானது, ஆருண கேது கோக்தம் – ஆருண கேதுகம் என்ற சயனத்திலும், சூர்ய நமஸ்காரத்திலும் உபயோகிக்கப்படும் மந்த்ரங்கள் அடங்கிய தைத்ரீய ஆரண்யகம் முதல் ப்ரச்னத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஈச்வர – பரமேச்வரனே! ததீயமபி – அவனுடைய பொருளையும், தத்சப்தம் – அவன் பெயரால் சொல்லப்படுவதாக, ஸ்மரந்தி – பெரியவர்கள் கருதுகிறார்கள். ஸ்வஸ்வாமி பாவ ஸம்பந்தந்தால், ராஜாவைச் சேர்ந்தவர், ராஜாவென்று சொல்லப்படுவது ஸஹஜமே. அது போல ருத்ரனை ஸ்வாமியாகக் கொண்ட யக்ஞம் ருத்ர சப்தத்தால் சொல்லப்படுகிறது. ஸாமவேத ச்ருதி பர்யாலோசனாயாம் யக்ஞம் ருத்ர சப்தவாச்யமாக விருப்பது, ருத்ரஸ்வாமிகம் என்பதால் என்ற அர்த்தம் தெளிவாகிறது. யத் – எத்தக் காரணத்தால், தத்ப்ரதேசகத ருத்ரபதாவகாசே – அந்த ஆருண கேதுகம் என்ற பெயருள்ள யஜுர்வேத ஆரண்ய பாகத்திலுள்ள ருத்ரத்தின் ஸ்தானத்தில், ஸாமகேப்ய: – ஸாமவேதம் கரை கண்டவர்களிடமிருந்து, யக்ஞஸ்ய சப்தம் – யக்ஞஸ்ய என்ற சப்தத்தை, அனுசுச்ரும – கேட்கின்றோம்.
ஒரே அர்த்தத்தைத் தெரிவிக்கும் சுருதிகளில், பதபேதமாக ஓரிடத்தில் யக்ஞ சப்தமும், மற்றோரிடத்தில் ருத்ரபதமும் கூறப்படுவதால், கதிஸாமன்ய ந்யாயத்தால் இரண்டு பதங்களும் ஒரே பொருளை குறிக்கின்றன என்பது ஏற்படுமாதலால், யக்ஞத்தை ருத்ர சப்தம் யஜுர் வேதத்தில் குறிப்பிடுவது திண்ணம்.

சுலோகம் 28

ஸந்த்யேவ தத்திதபத ப்ரதிரூபகாணி
பூரிணி பாகவத ஸாத்வத ஸந்நிபாநி |
ஸ்யாத் தாத்ருகேவ பகவானிதி சப்தரூபம்
ஷாட்குண்யஹேதுகமபி த்வதுபைதி நாந்யம் ||
பதவுரை
தத்திதபத ப்ரதிரூபகாணி – தத்திதாந்தம் போலத் தோன்றும் அகண்ட பதங்கள், பாகவத ஸாத்வதஸந்நிபாநி – பாகவதஸாத்வத, மைத்ர முதலிய, பூரிணி – பலபதங்கள், ஸந்த்யேவ – இருக்கின்றன. பகவானிடி சப்த ரூபம் – பகவான் என்கிற சப்த ரூபமும், தாத்ருகேவ ஸ்யாத் – அப்படியே தத்திதாந்த ப்ரதிரூபகம் அகண்ட பதம் என்றே இருக்க வேண்டும். பவான் என்பதுபோல பகவான் என்பது பூஜ்ய பதம் ஆனதால், ரூட பதமாகக் கொள்ளவேண்டும் தனவான் என்பதில் போல மது பூ ப்ரத்யயம் வரவேண்டிய ஆவச்யகமில்லை. உம்மிடமே ஈச்வர சப்தம் ரூடமென்று நிரூபிக்கப் பட்டதால், பூஜ்யதையும் ஈச்வரனாகிய உமக்காகையால், பகவான் சப்தம் முக்கியமாக உமக்குத் தான் பொருந்தும்.அப்படி தனவான் என்பது போல, பக: அஸ்யாஸ்தீதி பகவான் என்று வ்யுத்பத்தி செய்து, தத்திதாந்தமாகக் கொண்டு, ஆறுகுணங்கள் உடையவரைக் குறிக்கும் யெளகிக சப்தமாகக் கொண்டாலும், ஷாட்குண்யஹேதுகமபி, அந்த பகவான் என்ற சப்தரூபம், த்வத் – உம்மைத் தவிர, அன்யம் – மற்றவரை, ந உபைதி – அடையத்தக்கதில்லை குறிக்கத்தல்ல.
(1) தேவாஸுரர்கள் யுத்தம் நேர்ந்ததும் தேவர்கள் தம் ஸொந்த த்ரவ்யங்களை அக்னியிடம் கொடுத்து, ந்யாஸமாகச் செய்து விட்டுச் சென்றதாகவும், பிறகு ஜயம் பெற்றுவத்து கேட்க, அக்னி கொடுக்கமனமில்லாமல் ஓட, பின்பற்றப்பட்டு அழுததாகவும் தேவர்களை அழச் செய்ததாகவும், வரலாறு யஜுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அதனால் அக்னி சில இடங்களில் ருத்ர பதத்தால் குறிக்கப் படுகிறார்.
(2) ருத்ரனிடமிருந்து உண்டானதால், மருத்துக்கள், பார்ஷதர்கள் தந்தைபெயரால் கூறப்படுகிறார்கள்.
(ஆத்மாவை புத்ர நாமாஸி என்ற ந்யாயப்படி)
(3) துக்கத்தையும் பாபத்தையும் அழிப்பதால்,
(4) ப்ரம்மாவிற்கு வேதத்தை உபதேசிப்பதால், நாதத்தால் ஸகல உலகத்தை ஸந்தோஷப்படுத்துவதால் நாதஸ்வரூபி என்பதால் ஓங்காரத்தால், வேதசப்தத்தால், ஜபிப்பவர்களுக்கு இஷ்டத்தைக் கொடுப்பதால், கஷ்டப்படும் ஜனங்களைப் பார்த்து, தந்தைபோல தயையால் தான் கஷ்டப் படுவது போல் அழுவதால், ப்ரளய காலத்தில் ஸம்ஹார மூர்த்தியைப் பார்த்து உஅலக்ம் அழுவதால் மகாதேவோ மர்த்யான் ஆவிவேச என்றபடி கத்திக் கொண்டு, ஜனங்கள் உட்ப்ரவேசித்து ஆயுளை முடிப்பவர் என்றதால் மோகாத்மக மாயையை நீக்குவதால் பக்தர்களின் ஸம்ஸார துக்கத்தை விலக்குவதால் என்ற 9 விதமான வ்யுத் பத்தியும் ஒருங்கே பொருந்துவதால் ருத்ரசப்தத்திற்குப் பரமேச்வரன் முக்கிய பொருளாவார்.
(5) ருத்ராஸ்ய ஸ சிர: ப்ரதிததாதி என்று யக்ஞத்தில் ருத்ர சப்தப்ரயோகம்.
(6) ருத்ர ஏனம் பூத்வா ஹந்யாத் என்று வாஸ்தோஷ்பதி ஹோமம் செய்யாதவனுக்குக் கடுமையான ஜ்வரம் ஸம்பவிக்கும் என்ற இடத்தில் ருத்ரசப்தம் ஜ்வரவாசகம். ரெளத்ர சப்தம் கடுமை என்ற அர்த்தத்தைக் குறிப்பது இதிலிருந்து தான் தத்திதாத்த சப்தமான தென்று, ஆறு அர்த்தங்கள் ருத்ர சப்தத்துக் கூறப்பட்டன.

சுலோகம் 29

ஐச்வர்ய மக்ர்ய மனுபாதி மதீ ச லக்ஷ்மீ:
ஞானம் ச வீர்ய யசஸீ ச விராகதா ச |
ஏதே குணா: ஷடபி தே பகஸம்க்ஞ யோக்தா:
ஸந்தீத்யனேன பகவந் ! பகவா நஸி த்வம் ||
இவ்விதம் முதல் சுலோகத்தில் குறிக்கப்பட்ட ஐந்து லக்ஷணங்களில், நம : சேஷித்வம் என்ற முதல் லக்ஷணத்தை அதிவ்யாப்தி இல்லாததாக நிரூபணம் செய்து, அஸாதாரணமாக நிலை நாட்டிய பிறகு, இரண்டாவது லக்ஷணமான பகவத் பதவாச்யத்வம் என்றதை, அஸாதாரணமாக சிவபெருமானுக்கே உரித்து என்று இது முதல் 6½ சுலோகங்களால் விளக்குகிறார். (29 – 34½).
பதவுரை
அக்ர்யம் – சிறந்த, ஐச்வர்யம் – ஈசத்தன்மையும் அநுபாதி மதீ – காரணத்தால் ஏற்படாத, ஸ்வபாவகமாள, லக்ஷ்மீ: ச ஸம்பத்தும், ஞானம் ச – அறிவும், வீர்ய யசஸீ ச – பலமும் புகழும், விராகதா ச – வைராக்யமும், இந்த உலகிலுள்ள பயன்களில் ஆசையற்றிருத்தல், ஏதே – இந்த ஷடபிகுணா: – ஆறு குணங்களும், பக ஸம்க்ஞா – பக என்ற பதத்தால் உக்தா: சொல்லப்படுகின்றன தே – அவைகள், ஸந்தி – உம்மிடத்தில் இருக்கின்றன இத்யனேன – என்ற காரணத்தால், பகவந் – பெரியவரே, த்வம் – நீர், பகவானஸி – பகவத் சப்த வாச்யராக இருக்கிறீர்.

சுலோகம் 30

ஐச்வர்ய மீசவரபத ச்ருதி ருக்ர சப்தோ
வீர்யம் யச : சிவபதம் ச தவாபிதத்தே |
ஸர்வக்ஞ காம ரிபு சப்த ஸமர்த்திதெள ச
ஸார்வக்ஞ ராக விரஹெள பவத: புராரே ||
மேற்கூறிய ஈசத்வம் முதலிய ஆறு குணங்கள் சிவபிரானிடத்து உள்ளதற்கு ப்ரமாணம் சொல்லப்படுகிறது.
பதவுரை
ஈச்வரபத ச்ருதி : ஈச்வரன் என்ற பதமாகிய சுருதியானது, (இங்கு சுருதியென்றால் வேதமென்பது பொருள் அல்ல, பூர்வமீமாம்ஸையில் விநியோஜக ப்ரமாணங்கள் ஆறில் முதலாவதாகக் கூறப்பட்ட ஜைமினி பரிபாஷைப்படி, நிரபேக்ஷோ.. சப்த : ச்ருதி : – எந்த சப்தத்தால் கேட்டவுடனே பிறர் ஸந்தர்ப்பாதிகள் உதவியில்லாமல் அர்த்தம் அறியப்படுகிறதோ, அது சுருதி என்பது கருத்து) ஈச்வரன் கோயில் என்றால் ஸந்தர்ப்பம் தேவையில்லாமல் சிவபெருமான் ஆலயம் தான் அர்த்தமாகுமல்லவா).
தவ ஐச்வர்யம் – உம்மிடமிருக்கும் ஈசத்வத்தை அபிதத்தே – சொல்லுகிறது. உக்ரசப்த : – உக்ர என்ற சப்தம் (லிங்கவிதமாக), வீர்யம் – பலத்தையும் சிவபதம். யச : ச – புகழையும், அபிதத்தே – சொல்லுகிறது. புராரே – த்ரிபுரஸம்ஹாரக் கடவுளே, (ஸ்தூல ஸூக்ஷ்ம, காரண சரீரங்களை எரித்து, ஞானத்தால் முக்தியளிப்பவரே !) ஸார்வக்ஞராக விரஹெள – ஸகல அறிவும், ஆசையற்றலும், ஸர்வக்ஞ சப்த – ஸர்வக்ஞ சப்தத்தாலும், காமரிபு சப்த – காமரிபு – (காமனை எரித்தவர்) என்ற சப்தத்தாலும், ஸமர்த்திதெள பவத : – நிலைநாட்டப்பட்டவைகளாக இருக்கின்றன.
உக்ர என்ற பதம் குரூரன் என்ற பொருளைத் தராது பலமுள்ளவன், பிறரால் அவமதிக்கப்படாதவன் என்ற பொருளைத்தான் குறிக்கும்.
உக்ரோஸ்யுக்ரோஹம் ஸ ஜாதேஷுபூயாஸம்
என்ற பிரார்த்தனை காணப்படுகிறது. அங்கு நீங்கள் பிறரால் அவமதிக்கப்படாமல் பலவானாக இருக்கிறீர். நானும் அவ்வண்ணமே, பந்துக்களால் அவமதிக்கப்படாமல் பலவானாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்பது தான் பொருத்தமானது.
“உக்ரேப்ய: கச்சித் ஓஜீயாந்”
என்ற மற்ற ச்ருதியும், ஓ ஜீயாந் – பலமுள்ளவர்களுக்குள் மிகுந்த பலமுள்ளவர் என்ற பொருளைத்தான் கொடுக்கிறது.
அதவா, அசேஷ கல்யாண குணைக கன ஈச்வர : |
சிவ இத்யுச்யதே ஸத்பி : சிவதத்வார்த்த வேதிபி : ||
என்ற புராண வசனப்படி, ஸமஸ்த கல்யாணகுண கூட்டத்தைச் சொல்லும் பதம் சிவபதம் என்பது திண்ணம். அக்கூட்டத்தில் புகழும் அடங்கியபடியால், சிவபதம் புகழைச் சொல்வதாக மூலத்தில் கூறப்படுகிறது. இந்த்ரியம் முதலிய உதவி அபேக்ஷையில்லாமல் எல்லா விஷயத்தையும் அறியும் சக்தியுடைமை ஸர்வக்ஞ்யத்வம் எனப்படும். நமக்குக் கண் அபேக்ஷை இல்லாமல், ரூபஞானம் வருவதில்லை. ஸாதன அபேக்ஷையில்லாமல், ஸகல ஞானமும் இருக்க வேண்டும் அது தான் ஸார்வஞ்யம் என்பது வாயவீயஸம்ஹிதையில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. ஈச்வரனை நிலைநாட்ட எழுதப்பட்ட ந்யாய குஸுமாஞ்சலி என்ற கிரந்தத்தில் ஸ்ரீமான் உதயனாசார்யார் அவர்களும் ஈச்வரனுடைய ஸார்வஞ்யத்தை இவ்விதமே வர்ணித்துள்ளார்.
ஸாக்ஷாத் காரிணி, நித்ய யோகினி பாத்வார அனபேக்ஷ்ய ஸ்திதெள பூதார்த்தானுபவே என்று ஆரம்பித்து, தன்மே ப்ரமாணம் சிவ : என்று, சிவனே ஸர்வக்ஞர் என்று அபிப்பிராயத்துடன் முடித்திருக்கிறார்.