செவ்வாய், 31 மே, 2022

குழந்தை சித்தர் பகுதி இரண்டு

[ஆஜானுபாகுவாக இருந்த சுவாமிகளுக்கு குழந்தை ஒன்று மாலைபோட விரும்பியதால் தன் உருவத்தைக் குறுக்கி குழந்தை எளிதில் மாலை போடும்படியாக ஒன்றே முக்கால் அடி உயரம் உள்ளவரானார். அது முதற்கொண்டு குழந்தையானந்த சுவாமிகள் என்று அழைக்கப்படலானார்.]

குழந்தையானந்தர் சித்தர்-2
***** **** ****  **** ***  **** ***   **
(இறுதி பகுதி)

இந்த நிலையில் குழந்தையை எங்கே விடுவது? என்று அவர்கள் யோசித்தனர்.  அடுத்த நொடியில் கோயிலுக்குள்ளே இருந்து பலமான மணியோசை கேட்டது.  வாயில் கதவுகள் தானே திறந்து கொண்டன. மூவரும் கோயிலுக்குள் நுழைந்தனர்.  கர்ப்பக் கிருகத்தின் அருகில் மீனாட்சியின் காலடியில் குழந்தையை விட்டாள் திரிபுரசுந்தரி.  ‘’தாயே! நாங்கள் வேண்டிக் கொண்டபடியே இந்தக் குழந்தையை உன்னிடத்தில் ஒப்படைத்து விட்டோம்.  இதைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு’’ என்று கண்ணீர் மல்க வேண்டினாள்.

அர்ச்சகர் வரும் வரையில் காத்திருந்து, குழந்தையை அவரிடம் ஒப்படைத்து விட்டு வரும்படியாக காத்தவராயனிடம் சொல்லிவிட்டு, பெற்றோர் அங்கிருந்து புறப்பட்டு வீடு திரும்பினர்.  

மாலை நேரத்தில் தினப்படி கோயில் பூஜைக்காக வந்த அர்ச்சகர், கோயில் கதவுகள் விரியத் திறந்து கிடப்பதைப் பார்த்துப் பதறிக்கொண்டே உள்ளே வந்தார்.   அம்மனின் காலடியில் குழந்தை இருப்பதையும்,  குழந்தையுடன் காத்தவராயன் இருப்பதையும் கண்டார். காத்தவராயன் நடந்தவைகளை விவரமாக எடுத்துக் கூறினார்.  கோயிலின் கதவுகளைப் பூட்டிய சாவி தன்னிடம் இருக்கும் போது,  அவைகள் தாமாகத் திறந்து கொண்ட அதிசயம், மதுரை மீனாட்சி அம்மனின் அருளைத் தவிர வேறு எதனால் இருக்க முடியும்? என்று முடிவுக்கு வந்தார் அர்ச்சகர்.  அம்பிகையைத் தொழுதார், இது அம்மனின் குழந்தை என்று சொல்லிவிட்டு,  குழந்தையை அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டார்.   அன்று முதல் குழந்தையானந்தர் அந்தக் கோயிலிலேயே அம்மன் குழந்தையாக, அவளது சொந்தப் பிள்ளையாகவே வளர ஆரம்பித்தார்.  

ஒவ்வொரு நாள் மாலையிலும், அர்ச்சகர் தனது கோயில் வேலைகளை முடித்துக் கொண்டு கதவுகளைப் பூட்டிக் கொண்டு கிளம்புவார். குழந்தை அங்கேயே இருக்கும்.  இரவு நேரங்களில் மீனாட்சியம்மன் மனித உருவில் வந்து குழந்தையுடன் கொஞ்சுவாள்.  அவர்கள் இருவரும் பேசும் பேச்சொலியை அர்ச்சகர் பல சமயங்களில் கேட்டிருக்கிறார்.

தெய்வத்தின் குழந்தையாக அவர் வளருகின்ற  காலத்தில், அவருக்கு உபநயனமும் செய்யப்பட்டது. ராஜகோபாலன் என்று தீக்ஷா நாமமும் சூட்டப்பட்டது.  குழந்தை ராஜகோபாலனுக்கு மனிதர்களின் கர்ம விணைகளைப் போக்கும் மகா சக்தி வந்து குவிந்தது.  அவருக்கு பறவைகளைப் போல பறக்கின்ற சக்தியும் கிடைத்தது.  அஷ்டமா சித்துகளில் ஒன்றான லகிமா எனப்படும் சித்தின் துணையினால், அவர் தனது உடலை லேசாக்கிக் கொண்டு, எடையற்ற நிலையில் ஒரு பறவையைப் போலப் பறந்தார்.  அவரது முகத்தைப் பார்த்தாலே கர்ம வினைகள் மறையும். மனதில் குதூகலம் உண்டாகும்.  அமைதி ஏற்படும்.   சிலர் அந்தக் குழந்தை சித்தரின் முகத்தைக் காண்கிற போது, பேரானந்தப் பரவச நிலையை அடைந்துவிட்டனர்.

இறைவன் அவருக்கு நந்தி வித்தையை அருளிச் செய்தான்.  அவர் தன்னிடம் வந்து தங்களது குறைகளை சொல்லி அழுது குமுறும் ஏழை எளிய மக்களின் பிரச்சனைகளை, காது கொடுத்து கருணையோடு கேட்பார்.  அவர்களது நெற்றியில் தன்னுடைய விரலை பதிப்பார்.  அடுத்த நொடியில் அவர்களுடைய பிரச்சனைகள் விலகி துயரங்கள் தீர்ந்துவிடும்.

மனஉளைச்சலாலும், உடல் நோய்களினாலும், வறுமையாலும் பீடிக்கப் பட்ட மனிதர்கள் அவரை அனுகி, தங்கள் துன்பங்களைப் போக்கிக் கொண்டனர். குழந்தையானந்த சித்தரின் ஸ்பரிசத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் நோய் நீங்கி குணமடைந்தனர்.  தோல்வி கண்டு துவண்டவர்கள் வெற்றி நடை போட்டனர்.

அவருடைய புகழ் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து பரவ ஆரம்பித்தது. இதைக் கேள்விப்பட்ட மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள்,  என்ன காரணத்தினாலோ, அவளுக்கு குழந்தையானந்தரை பிடிக்கவில்லை.  அவரது புகழையும், மக்களிடம் அவருக்கு உள்ள செல்வாக்கையும் அவள் வெறுத்தாள்.

கர்மவினையின் காரணமாக, அவள் குழந்தையானந்தருக்கு தொல்லைகள் தர ஆரம்பித்தாள்.  பலப்பல சூழ்ச்சிகள் செய்து அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டாள்.   அவளுடைய பொறாமைத்தீ காட்டுத் தீ போல பரவியதால்,  என்ன செய்கிறோம் என்பதை அறியாதவளாக, குழந்தையானந்தரின் பெற்றோருக்கு சொல்ல முடியாத துன்பங்களையும்,  வேதனைகளையும் ஏற்படுத்தினாள்.  இதன் உச்சகட்டமாக சித்தரின் தந்தையார் கொலை செய்யப்பட்டார்.

தன் கணவன் கொலையுண்டதைக் கண்ட மனைவி திரிபுர சுந்தரி,  அவருடன் உடன் கட்டை ஏறினாள்.  ஒருவழியாக ராணி மங்கம்மாவின் ஆட்சி முடிந்து, சொக்கநாத நாயக்கர் அரியணை ஏறினார்.  

அந்த சமயத்தில் தென்னகத்தில்(காசி) இருந்து, கணபதி பாபா என்கிற சித்தர் மகான் ஒருவர் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக மதுரைக்கு வந்திருந்தார். அம்மனை தரிசித்த சித்தருக்கு, அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கண்ணில் பட்டான்.  அவனுடைய அழகும், தேஜஸும் அவரைப் பெரிதும் கவர்ந்தன.  ஒரு நிமிடம் கண்களை மூடி தியானித்தார்.  உண்மை பளிச்சென்று புரிந்தது.

‘ஒ! இங்கே இருப்பவன் என்னுடைய சீடன் ‘ என்று அம்பாள் மூலம் உணர்ந்து கொண்டார் பாபா.  சிறுவனை தன் அருகில் வரச் சொல்லி அழைத்தார்.

குழந்தையானந்தரும் அவர் அருகில் வந்தார்.  ‘ஐயா! நானும் உங்களைத் தான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.  வாங்க போகலாம்’ என்று அழைத்ததோடு,  பாபாவின் வலது கரத்தைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

பாபா அவருக்கு பல ஆன்ம விசயங்களைப் போதித்தார்.  பலவிதமான ஆன்ம சக்திகளை வழங்கினார்.  குழந்தையானந்தரும்,  பாபாவும் தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று மக்களுக்கு சேவை செய்தனர்.

வியாதியினால் வாடி வாழ்க்கையைத் தொலைத்த மக்களுக்கு, மருந்தாக இருந்து நோய் நீக்கினர்.  மனதில் ஏற்படும் குழப்பம், பயம், எண்ணற்ற குடும்பச் சிக்கல்கள், துன்பங்கள் ஆகியவற்றையும் தீர்த்து வைத்து, ஏழைகளின் குடும்பத்திலும், மனங்களிலும் மகிழ்ச்சி விதைகளைத் தூவி இறைப்பணி செய்து வந்தனர்.

தமிழகத்துக்கு மட்டும் அல்லாமல்,  அவர்கள் அங்கிருந்து விஜயநகரம் சென்றும் மக்கள் சேவை செய்தனர்.  பிறகு விதர்ப்ப நாடு சென்று, அங்கேயும் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தினர்.  அங்கிருந்து காசிக்குச் சென்றனர்.  காசியில் பல அற்புதங்களை நிகழ்த்திய குழந்தையானந்தர் அங்கேயே சமாதி அடைந்தார்.

காசியில் சமாதி நிலை அடைந்த மகா சித்தர் குழந்தையானந்தர், தமிழகத்தில் மீண்டும் அவதரித்து,  திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆனால்’ அது தான் உண்மை! சிலகாலம் திருவண்ணாமலையில் தங்கி சித்தாடல்களை நிகழ்த்தினார்.  அவரது கருணையினால் மக்கள் குறைகள் நீங்கினர். வளவாழ்வு பெற்றனர்.  நோயிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.  இவ்வாறு மக்களுக்குத் தொண்டு செய்த அந்த அற்புதச் சித்தர் ஒரு நல்ல நாளில் ஜோதி வடிவத்தில் அண்ணாமலையாருடன் கலந்து விட்டார்.  இது இரண்டாவது சமாதி நிலை.

இந்த இரண்டாவது சமாதியிலும் அவர் முழுமையாக அடங்கிவிடவில்லை.  அவர் செய்ய வேண்டிய பணிகள் மீதமிருந்தன போலும்,  எனவே இரண்டாவது சமாதியில் இருந்தும் அவர் மீண்டார். உயிர்த்தெழுந்து காஞ்சிபுரம் சேர்ந்தார்.   

இரண்டு முறை சமாதியிலிருந்து உயிர்த்தெழுந்த அதிசய சித்தர் என்று கேள்விப் பட்டதும், மக்கள் பெரும் ஆர்வத்தோடு அவரை தரிசிக்க வந்தனர்.  பிறவிப்பயனை பெற்றிட அவரது கருணையை யாசித்தனர்.  வேண்டியவர்களுக்கு வேண்டியவற்றை தடையின்றி வழங்கிய வள்ளல் குழந்தையானந்த சித்தர், சில காலம் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்து,  பின் அங்கிருந்து மதுரைக்கும், தென்காசிக்கும் பயணம் செய்தார்.

தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு நன்மைகளை அளித்தார்.  மேன்மைகளை உருவாக்கினார்.  அவரை தரிசித்தவர்கள் தாங்கள் விரும்பியவற்றை அடைந்தனர். பல புதிய திருப்பங்களைப்  பெற்று வாழ்வில் உயர்ந்தனர்.  இந்த நிலையில் தென்காசியில் குழந்தை சித்தர் சமாதி அடைந்தார்.

பிறகு தென்காசி சமாதியில் இருந்து உயிர்த்தெழுந்து, மதுரையை அடுத்த சித்தாலங்குடிக்கு  வந்து பல சித்தாடல்களை நிகழ்த்தி மக்களை வியப்பில் ஆழ்த்தினார்.

ஆஜானுபாகுவாக இருந்த சுவாமிகளுக்கு, குழந்தை ஒன்று மாலைபோட விரும்பியதால், தன் உருவத்தைக் குறுக்கி குழந்தை எளிதில் மாலை போடும்படியாக ஒன்றே முக்கால் அடி உயரம் உள்ளவரானார்.

1919ம் ஆண்டு மதுரையிலிருந்து வத்தலகுண்டு சென்றார்.  அங்கு தனக்கு தன் சீடர்கள் மூலம் ஒரு கோயிலை நிர்மானித்தார். அதேபோல் மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் சமாதி அடைந்தார். பின்னர்’ அங்கிருந்து வத்தலகுண்டில் தனக்காக எழுப்பப்பட்ட கோயிலில் எழுந்தருளினார். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதார புருஷராக அவதாரம் எடுத்து சமாதி நிலை அடைந்தாலும், சூட்சும ரீதியாக பக்தர்களுக்கு இன்றும் அருள்பாலித்து வருகிறார் குழந்தையானந்த சுவாமிகள்.



குழந்தை சித்தர் பகுதி ஒன்று

குழந்தையானந்தர் சித்தர்.
--------------------------------------

மதுரையில் அன்னை மீனாட்சியின் தீவிர பக்தர்களாக வாழ்ந்த தம்பதியர் ராமசாமி ஐயரும், அவரது தர்மபத்தினி திரிபுரசுந்தரி அம்மாளும்.  இவர்களுக்கு பல வருடங்களாக குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை.  அவர்கள் எல்லா விரதங்களும் அனுஷ்டித்தனர்.  கோயில் குளங்களுக்குச் சென்று வந்தனர்.  புண்ணிய தீர்த்தமாடினர். ஆனாலும் திரிபுர சுந்தரிக்கு புத்திர பாக்கியம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் அவர்களது பெற்றோரும், உற்றோரும் சொன்னதன் பேரில்,  அவர்கள் அன்னை மதுரை மீனாட்சியை மனமுருகி வேண்டியதோடு, உருக்கமான ஒரு வேண்டுகோளையும் தெரிவித்தனர்.  ‘’அம்மா உனது அருளால் எனக்குக் குழந்தை பாக்கியம் உண்டானால்,  அந்தக் குழந்தையை உன் கோயிலிலேயே விட்டு விடுகிறோம்’’ என்பதுதான்  அந்த விநோதமான வேண்டுதல்.

இப்படி இவர்கள் வேண்டிக் கொண்டு கோயிலில் இருந்து வீடு திரும்பிய போது, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.  அவர்களது வீட்டில் அழகான இரண்டு ஆண் குழந்தைகள் மரப்பாச்சி பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த இரண்டு அழகான குழந்தைகளும் தம்பதியரைப் பார்த்ததும், ‘’இந்தப் பொம்மைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள், நாங்கள் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறோம்’’ என்று சொல்லி விட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டனர்.

அவர்கள் இருவரும் தாங்கள் காண்பது கனவா? அல்லது நனவா? என்பதே விளங்கவில்லை.  மிக அழகான அந்த இரண்டு குழந்தைகள் யார்?  அவர்கள் யார் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்?,  சுற்றுப் பக்கத்து வீடுகளில் இதுவரையில் அந்தக் குழந்தைகளை தாங்கள் பார்த்தது இல்லையே?  என்று இது போன்ற ஏராளமான கேள்விகளை தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.

திரிபுரசுந்தரி குழந்தைகள் கொடுத்த பொம்மைகளை திருப்பிப் பார்த்தார்,  அவருக்கு ஆச்சரியமும் திகைப்பும் ஏற்பட்டது.  காரணம் அந்தப் பொம்மையின் அடிப்பாதங்களில் சங்கும் சக்கரமும் வரையப்பட்டு இருந்தது.  அதை அவர் சந்தோஷத்தோடு தனது கணவரிடம் காண்பித்தார்.

‘’ஆஹா!, அம்பாள் கண் திறந்து அனுக்கிரகம் செய்துவிட்டாள்.  நமக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கப் போகிறது.  அதில் ஒரு குழந்தையின் கால்களில் சங்கு, சக்கர ரேகைகள் இருக்கும்,  அதைத்தான் இந்தப் பொம்மை உணர்த்துகிறது.  உடனே இதை பூஜை அறையில் கொண்டு போய் வைத்துக் கொள்’’ என்றார்.

கணவரின் வார்த்தைகளினாலும், நடந்த அதிசயமான நிகழ்ச்சிகளினாலும் பிரமித்துப்போன திரிபுரசுந்தரி பரபரப்பாகிவிட்டார். உடனே லலிதா  சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தை முனுமுனுத்தபடி அந்த மரப்பாச்சி பொம்மைகளை எடுத்துச் சென்று பூஜையில் வைத்து,  வீட்டில் இருந்த பொரியை நைவேத்தியம் செய்தாள்.

சற்று நேரத்தில், முன்பு வந்த குழந்தைகள் இரண்டு பேரும் தன் வீட்டு வாசலில் வந்து நிற்பதைப் பார்த்து மகிழ்ச்சியோடு அவர்களை உள்ளே வரச்சொல்லி அழைத்தாள்.  அவர்கள் இரண்டு பேரும்,  ‘’அந்தப் பொம்மையைக் கொடுங்கள்,  எங்களுக்கு நேரமாகிறது. நாங்கள் போக வேண்டும்’’ என்று ஒரே தொனியில் பரபரப்போடு கேட்டனர்.

இது என்ன? இந்தக் குழந்தைகள் ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் வந்து பொம்மைகளை கொடுத்துவிட்டு, இப்போது கேட்கிறார்களே?  ஓ அதுதான் குழந்தை குணம் என்பது என்று நினைத்துக் கொண்டே,  ‘’கொஞ்சம் இருங்கள்,  பூசை அறையிலே வெச்சிருக்கேன்,  கொண்டு வந்து தரேன்’’என்று சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்த திரிபுரசுந்தரி திடுக்கிட்டுப் போனார். காரணம் சற்று நேரத்துக்கு முன்னால் அங்கே வைத்து பொரி நைவேத்தியம் செய்த போது இருந்த இரண்டு பொம்மைகளும் இப்போது காணவில்லை.  அவைகள் மாயமாக மறைந்து விட்டிருந்தன.  குழந்தைகளிடம் வந்து பொம்மை காணவில்லை என்று எப்படி சொல்லுவது? அவர்கள் தான் திருடிவிட்டதாக எண்ண மாட்டார்களா? ஐயோ ஜகதாம்பிகே, இது என்ன சோதனை என்று மனதுக்குள் உருகியபடி கண்களை மூடி உட்கார்ந்தாள்.  மதுரை மீனாட்சியை மனமுருகி வேண்டினாள்.

அடுத்த நொடியில் அவள் அருகே அந்த இரண்டு பொம்மைகளும் வந்தன.  மிகவும் மகிழ்ச்சியோடு அவைகளை கையில் எடுத்தாள்.  அந்தப் பொம்மைகளில் இருந்து தெய்வீக மணம் வீசியது.  இதுநாள் வரையில் அதுபோன்ற வாசனையை அவள் அனுபவித்ததே இல்லை.  அது இந்த உலகத்தின் வாசனையே அல்ல என்பது திரிபுரசுந்தரிக்குப் புரிந்தது.

அடுத்தடுத்து நடக்கும் ஆச்சரியத்தினால் உணர்ச்சிக் கொந்தளிப்பில்  இருந்த அவள்,  கையில் பொம்மைகளை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.  அங்கே இதுவரையில் குழந்தைகளின் பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டிருந்து.  இப்போது சட்டென்று அமைதி ஏற்பட்டு விட்டது.  கூடத்தில் நின்ற குழந்தைகளைக் காணவில்லை.

திரிபுரசுந்தரி தன் கணவனை அழைத்து,  குழந்தைகள் எங்கே? என்று கேட்டாள்.  அவர் அங்கு வருகின்ற நேரத்தில் அதிசயப்படும் விதமாக அவள் கையில் இருந்த பொம்மைகளும் திடீரென்று காற்றில் மறைந்துவிட்டது  ஆனால்’ அந்தத் தெய்வீக மணம் மட்டும் பொம்மைகள் இருந்தது உண்மைதான்,  நடந்த அத்தனை நிகழ்ச்சிகளும் உண்மைதான் என்று சொல்வதைப் போல சாட்சியமாக கூடத்தில் சுற்றி வந்தது.

மூச்சு வாங்க நடந்தவைகளை தன் கணவனிடம் சொல்லி முடித்தாள் திரிபுரசுந்தரி.

அதைக் கேட்ட ராமசாமி ஐயர், ‘’நம் வீட்டுக்கு வந்திருந்த குழந்தைகள் வேறு யாருமல்ல,  சாட்சாத் மீனாட்சி அம்மனும்,  சோமசுந்தரப் பெருமானும் தான்.  அவர்கள் உன் வயிற்றில் உருவாகப் போகும் ஒரு சக்தி மிக்க பேரொளியைப் பற்றிச் சொல்வதற்காக மானுட வடிவத்தில் குழந்தைகளாக வந்திருக்கிறார்கள்.  பயம் வேண்டாம்,  சந்தோஷமாக இரு’’ என்று சொல்லிவிட்டு பூஜை அறைக்குள் சென்று அம்மனின் சிலைக்கு முன்பாக அமர்ந்து மனமுருகி வேண்ட ஆரம்பித்தார்.    

இந்த அதிசய நிகழ்ச்சி நடந்த பிறகு, இறைவியின் கட்டளைப்படியே கி.பி 1607 ஆம் வருடம், புஷ்ய மாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில் திரிபுரசுந்தரிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  அவர் தான் குழந்தையானந்த சித்தர்.  

அடுத்த நொடியில் அந்த இடத்தில் உலகையே மயக்கும் விதமாக மிக அற்புதமான வாசனை வீசுவதை மருத்துவப் பெண்களும்,  உறவினர்களும்,  ராமசாமி ஐயரும் உணர்ந்தனர். தெய்வக் குழந்தையான குழந்தையானந்தா சுயம்புவாக அவதாரம் செய்தார் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.  தெய்வீக வாசனையின் காரணமாக தன்னிலை மறந்த அனைவரும் சுயநினைவு அடைந்த போது, அந்தக் குழந்தைக்குப் பக்கத்தில் மற்றொரு குழந்தையும் இருப்பதைப் பார்த்துப் பரவசம் அடைந்தனர்.

இரண்டு மரப்பாச்சி பொம்மைகளை இரண்டு குழந்தைகள் வந்து கொடுத்தனர் அல்லவா?  அதனால் தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதை அறிந்த தம்பதியர் பெருமகிழ்ச்சி கொண்டனர்.  இரண்டு குழந்தைகளில் குழந்தையானந்த சித்தரின் பாதங்களில் மட்டும் சங்கு சக்கர ரேகைகள் இருப்பதைப் பெற்றோரும், மற்றோரும் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்து மகிழ்ந்தனர்.

குழந்தையானந்தருக்கு ராமன் என்று பெயர் வைத்தனர்.  மற்றொரு குழந்தைக்கு லட்சுமணன் என்று பெயரிட்டு அழைத்தனர்.  தெய்வீகக் குழந்தையான சித்தரின் சிரிப்பு காண்பவர் அத்தனை பேரையும் மயக்கியது.  அவருடைய சிரிப்பில் மகிழாதவர்களே இல்லை என்றே சொல்லலாம்.  மற்றவர்களுக்கே இத்தனை மகிழ்ச்சியும்,  பூரிப்பும் இருக்குமானால், பெற்றவர்களின் ஆனந்தத்தை வார்த்தைகளினால் விளக்க முடியுமா?

அவர்கள் இருவரும் அடைந்த மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் அளவேயில்லை.  ஆனாலும், அவர்களுடைய மனத்தில் துயரத்தின் ரேகைகள் மிக அழுத்தமாக விழுந்தன.  காரணம் குழந்தை பிறந்த பத்தாவது நாள் மதுரை மீனாட்சியம்மனிடம் அவனை விட்டு விடுவதாக வேண்டிக் கொண்டிருந்தனர் அல்லவா?  அந்த வேண்டுதல் நினைவுக்கு வந்தவுடன் அவர்களுடைய மகிழ்ச்சியும்,  பூரிப்பும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது.  மனத்தை சோகமயமான மேகங்கள் சூழ்ந்து கொண்டன.

குழந்தை பிறக்கும்  வரையில் பிறந்தால் போதும்,  அதைப் பார்த்துவிட்டு கோயிலுக்கே நேர்ந்து விட்டு விடலாம் என்று தோன்றியது.  ஆனால்’ இப்போது குழந்தை பிறந்ததும், அதை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் துடித்தாள் திரிபுரசுந்தரி.  அவளது நிலைமை இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைமையில் இருந்தது.  வேண்டுதலை நிறைவேற்றாமல் இருக்கவும் கூடாது,  குழந்தையைப் பிரியவும் கூடாது,  இது எப்படி சாத்தியம்?  பெற்ற தாயின் துயரம் யாராலும் போக்க முடியாததாக இருந்தது.  இந்த நிலையில் ராமசாமி ஐயர் ஒரு முடிவுக்கு வந்தார்.    

இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றன.  தாங்கள் வேண்டிக் கொண்டபடி குழந்தையானந்த சித்தரை கோயிலில் விட்டு விடலாம்.  ஒரு குழந்தை தங்களிடம் வளரட்டும் என்று தீர்மானம் செய்தார்.  இதன்படிச் செய்தால் நேர்த்திக் கடனையும் நிறைவேற்றிய திருப்தி கிடைக்கும்,  ஒரு குழந்தையும் பெற்றோரிடம் வளரும் என்று அவர் எண்ணமிட்டார்.  இதைச் செயல்படுத்த அவர் காத்தவராயன் என்பவரோடு மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

அப்போது’ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் கோயில் கதவு சாத்தப்பட்டு விட்டது.  பூஜைகள் முடிந்து அர்ச்சகர் கோயிலை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டிருந்தார்.

தொடரும்,.....