செவ்வாய், 8 செப்டம்பர், 2020

ஒரு மன்னனின் கதை



ஒரு மன்னன் தினமும் கிருஷ்ணரை வணங்காமல் எந்த வேலையையும் தொடங்க மாட்டான். காலையில் எழுந்ததும் "ஹரி ஹரி' என்று ஏழு தடவை சொல்லுவான். அரண்மனைக்கு கிளம்பும் முன் கேசவா கேசவா என்பான். சாப்பிடும் முன் கோவிந்தா என்பான். தூங்கச்செல்லும் முன் மாதவா என்பான். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒன்று வீதம் பரந்தாமனின் பதினாறு திருநாமங்களையும் ஏழு தடவை சொல்வது அவனது வழக்கம்.

என்ன தான் கடவுள் நாமம் சொன்னாலும் முன் வினைப் பாவங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டால் அதை யாரானாலும்
அனுபவித்து தான் தீர வேண்டும். பாவத்திற்குரிய தண்டனையை கடவுள் தந்தே தீருவான். மன்னனுக்கும் அந்த நேரம் வந்தது. அவன் பல நோய்களால் அவதிப்பட்டான். மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு படுத்த படுக்கையாக கிடந்தான். அந்நிலையிலும் அவனுக்கு கிருஷ்ணரின் பெயர் மட்டும் மறக்கவில்லை.

கிருஷ்ணா கிருஷ்ணா... என் வாழ்வை முடித்து விடு. உன்னோடு சேர்த்துக் கொள் என புலம்பிக் கொண்டிருந்தான். ஒருநாள் ஒரு முனிவர் அரண்மனைக்கு வந்தார். அவரிடம் ஸ்வாமி நோயின் கொடுமையை சகிக்க முடியவில்லை. என் வாழ்வை முடிக்க விரும்புகிறேன். உயிர் பிரிய மறுக்கிறதே என அழுதான். முனிவர் அவனைத் தேற்றி மன்னா! நீ அன்னதானம் செய்தாயா? என்றார். ஆமாம் சுவாமி! இப்போது கூட தினமும் என் நாட்டு சத்திரங்களில் அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் வயிறார உணவு படைக்கிறேன் என்றான். இனிமேல் அப்படி செய்யாதே! அரை வயிற்றுக்கு உணவிடு. உன் உயிர் பிரிந்து விடும் என்றார். ஏன் இப்படி சொல்கிறீர்கள் ஸ்வாமி! இது மேலும் எனக்கு பாவத்தை சேர்த்து நோய் தீவிரமாகுமே! என்று கேட்டான் மன்னன்.

மன்னா! அரைகுறை உணவிட்டால் சாப்பிடுவோர் உனக்கு சாபமிடுவர். சாபத்தின் கடுமையால் இறந்து போவாய் என்றார் முனிவர். அவர் சொன்ன படி பிடிக்காவிட்டாலும் பெரியவர் சொல்கிறாரே என ஏற்றுக் கொண்ட மன்னன் அரை சாப்பாடு போட உத்தரவு போட்டான். சாப்பிட்டவர்கள் சபித்தார்கள். ஆனாலும் மன்னனின் உயிர் பிரியவில்லை. இதென்ன ஆச்சரியம் என வியாதியின் கொடுமையையும், சாபத்தையும் சேர்த்து அனுபவித்த சூழ்நிலையில் முனிவர் மீண்டும் வந்தார். ஸ்வாமி! நீங்கள் சொன்னது போல செய்தும் உயிர் பிரியவில்லையே என்றான் மன்னன். மன்னா! வரும் வழியில் தான் கவனித்தேன். உன் ஏவலர்கள் தானமிடும் போது அச்சுதா அச்சுதா' என கிருஷ்ணரின் இன்னொரு பெயரைச் சொல்லி அன்னம் இடுகின்றனர். அச்சுதன்' என்று பெயர் சொன்னால் உயிர் பிரியாது. பரந்தாமன் அவர்களைக் கை விடுவதில்லை. இனி நீ இறைவன் பெயரைச் சொல்வதையும் நிறுத்து என்றார். ஆனால் மன்னன் மறுத்து விட்டான்..என் கிருஷ்ணரின் பெயரைச் சொல்வதால், எனக்கு இன்னும் அவஸ்தை அதிகரிக்குமானாலும் பரவாயில்லை. இந்த நோய் நீடித்து விட்டு போகட்டும். அவர் பெயர் சொல்வதை மட்டும் நிறுத்தவே மாட்டேன் என சொல்லி விட்டான் மன்னன்.

அவனது மன உறுதி கண்ட கிருஷ்ணர் அவனுக்கு காட்சியளித்து
சுகமடையச் செய்தார். பார்த்தீர்களா! கிருஷ்ண நாமத்துக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது என்பதை! இனி உங்கள் குழந்தைகளுக்கும் கிருஷ்ணா, கண்ணா, அச்சுதா என்று பெயர் வைத்து அழையுங்கள். புண்ணியத்தை தேடிக் கொள்ளுங்கள்...!!

நான்காவது ஆச்சார்யர் ஸ்ரீ சத்ய போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்! கி.மு.364 - 268


4 : ஸ்ரீ சத்ய போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்!

கி.மு.364 - 268
காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடம் குரு ரத்தினமான ஸ்ரீ சத்ய போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கேரளத்தில் அமராவதி நதிக்கரையில் வாழ்தவர். இவர் தந்தையின் பெயர் தண்டவசர்மன். வேதமோதும் அந்தண மரபினர். பெற்றோர் இவருக்கிட்ட பெயர் 'பலிந்யாசர்'. ஸ்ரீ சங்கர பாஷ்யங்களுக்கு வார்த்திகங்கள் இயற்றிய இவர் பதகசதகம் என்னும் நூலையும் அருளியிருக்கிறார். கால வெள்ளத்தில் இவற்றைப் பாதுகாக்க முடியாமல் போய் விட்டது.

இவர் கி.மு.268 ல் நந்தன ஆண்டு வைகாசி மாதம் க்ருஷ்ண பக்ஷம் அஷ்டமியன்று காஞ்சியில் சித்தியடைந்தார்.