வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

274 சிவாலயங்கள் : அருள் மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : அமிர்தகடேஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன் : வித்யூஜோதிநாயகி
தல விருட்சம் : கடம்பமரம்
தீர்த்தம் : சக்தி தீர்த்தம்
ஆகமம் பூஜை  :  காமிகம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்கடம்பூர்
ஊர் : மேலக்கடம்பூர்
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : சம்பந்தர், அப்பர்

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன் கடன் அடியேனைத் தாங்குதல் என் கடன்பணி செய்து கிடப்பதே. திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 34வது தலம்.

விழா : சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், புரட்டாசியில் சம்பந்தர் ஞானப்பால் அருந்திய உற்சவம்.  
      
சிறப்பு : இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும். ஐப்பசி அன்னாபிஷேகத்தின் போது இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பு. சனீஸ்வரருக்கு ஆரம்ப காலத்தில் கழுகு தான் வாகனமாக இருந்தது. ராமரின் தந்தையான தசரதர், அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை கொடுத்தார். இங்குள்ள சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் என்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.  
      
திறக்கும் நேரம் : காலை 07:30 மணி முதல் 10:00 மணி வரை, மாலை 05:30 மணி முதல் இரவு 07:30 மணி வரை திறந்திருக்கும். பிற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துச் சென்று சிவனை தரிசிக்கலாம். அருள் மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலக்கடம்பூர்- 608 304. கடலூர் மாவட்டம். போன் : +91- 264 638, 93456 56982. 
     
தகவல் : தேர் வடிவில் அமைந்த கோயில் இது. விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது. குஞ்சிதபாத நடராஜர் சற்றே பின்புறமாக சாய்ந்தபடி சிவகாமியுடன் இருக்கிறார். கோஷ்ட சுவரில் அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு சிற்பமாக உள்ளது. வலப்பக்க சுவரில் அர்த்த நாரீஸ்வரர் நந்தியுடன் இருக்க அவருக்கு கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது சிறப்பு. வைகுண்ட ஏகாதசியன்று இவருக்கு பூஜைகள் நடக்கிறது. பின்புற சுவரில் மகா விஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது சிறப்பு. இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருக்கின்றனர். இவருக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார். கோஷ்டசுவரிலேயே கங்காதரர் ஆலிங்கன மூர்த்தி ஆகியோரும் இருக்கின்றனர். விமானத்தில் தெட்சிணாமூர்த்தி புல்லாங்குழல் வீணையுடன் இருக்கும் காட்சியை தரிசிக்கலாம். இத்தலவிநாயகரின் திருநாமம் ஆரவார விநாயகர்.

பிரார்த்தனை : செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய தலம். இங்கு சஷ்டியப்த பூர்த்தி, ஆயுள் விருத்தி ஹோமம் அதிகளவில் செய்து கொள்கிறார்கள்.
     
ஸ்தல பெருமை : நவக்கிரகங்கள் ஒவ்வொருநாளும் தங்களுக்கான நாளில் இங்கு சிவனை வழிபடுவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் சிவன் ஒவ்வொரு நாளும் அந்தந்த கிரகங்களுக்கு உகந்த நிறங்களில் வஸ்திரம் அணிந்து தரிசனம் தருகிறார். எனவே இத்தலம் கிரகதோஷ பரிகார தலமாகவும் இருக்கிறது. அம்பாள் சன்னதிக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது.
அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும், உச்சிக்காலத்தில் யானையுடன் லட்சுமியாகவும், மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சி தருகிறாள். இதனால் இவளை வித்யஜோதிநாயகி (வித்யா - சரஸ்வதி, ஜோதி - லட்சுமி, நாயகி - துர்க்கை) என்று அழைக்கின்றனர். இவளுக்கு ஜோதிமின்னம்மை என்றும் பெயர் உண்டு. திருமண புத்திர தோஷம் உள்ளவர்கள் அம்பாளுக்கு மஞ்சள் கிழங்கு வளையல் வைத்து  வழிபடுகிறார்கள். திருநாவுக்கரசர் என் கடன் பணிசெய்து கிடப்பதே என்று இத்தலத்தில் தான் பதிகம் பாடினார். ரிஷபதாண்டவர் இத்தலத்தில் ரிஷபதாண்டவமூர்த்தி நந்தி மீது நடனமாடிய கோலத்தில் பத்து கைகளுடன் உற்சவராக இருக்கிறார். இவருக்கு பிரதோஷத்தின் போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒரு நாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும். இவருக்கு கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன. பிரகாரத்தில் உள்ள தெட்சிணா மூர்த்தி நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.

ஆரவார விநாயகர் : இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு ஆரவார விநாயகர் என்று பெயர். அமிர்த கலசத்தை தூக்கிச்சென்றும் தேர் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்ததாம். இவர் தலையை இடது புறமாக சாய்த்த படி கோப முகத்துடன் காட்சி தருகிறார்.

செவ்வாய்தோஷ தலம்: சூரனை அழிக்க செல்லும் முன் முருகன் இங்கு அம்பாளை வணங்கி வில் வாங்கிச்சென்றார். எனவே இங்குள்ள உற்சவர் முருகன் கையில் வில்லுடன் இருக்கிறார். செவ்வாய் கிரகம் தனக்கு அதிபதியான முருகனை இத்தலத்தில் வழிபட்டுள்ளார். இதன் அடிப்படையில் இங்கு செவ்வாய் கிரகம் உற்சவராக இருக்கிறார். கோஷ்ட சுவரில் உள்ள பிரம்மா, சிவனை பூஜித்த படி இருக்கிறார். இவருக்கு இருபுறமும் எமதர்மன், சித்திரகுப்தர் ஆகியோர் இருக்கின்றனர். அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. நடராஜரின் நடனத்தை கண்ட மகிழ்ச்சியில் அவரை தன் தலை மீது வைத்து கொண்டாடினாராம் பதஞ்சலி. இதனை இச்சிற்பம் விளக்குவதாக சொல்கிறார்கள். அருகிலுள்ள துர்க்கை கட்டை விரல் இல்லாமல் சிம்ம வாகனத்துடன் இருக்கிறாள். இவளுக்கு கீழே மேரு மலை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் இருக்கிறது.  
      
ஸ்தல வரலாறு : பாற்கடலில் அமுதம் கடைந்த தேவர்கள் விநாயகரை வணங்காமல் அதனை பருக சென்றனர். இதைக்கண்ட விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி அமுதகலசத்தை எடுத்து சென்று விட்டார். அவர் கடம்பவனமாக இருந்த இத்தலத்தின் வழியாக சென்றபோது கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். தன் தவறை உணர்ந்த இந்திரனும், தேவர்களும் இங்கு வந்து விநாயகரிடம் தங்களது செயலை மன்னித்து அமுதத்தை தரும் படி வேண்டினர். அவர் சிவனிடம் வேண்டும் படி கூறினார். அதன் படி இந்திரன் சிவனை வேண்டினான். அவர் இந்திரனுக்கு அமுத கலசத்தை கொடுத்து அருள் புரிந்தார். இங்கேயே தங்கி அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரும் பெற்றார். தேவர்களின் தாயான அதிதி தன் மக்களுக்கு அமிர்தம் கொடுத்து அருள் செய்த அமிர்தகடேஸ்வரரை தொடர்ந்து வணங்கி வந்தார். அவர் இதற்காக தினசரி தேவலோகத்திலிருந்து இங்கு வருவதை இந்திரன் விரும்பவில்லை. எனவே இங்குள்ள சிவனை கோயிலோடு இந்திரலோகத்திற்கு எடுத்து செல்ல எண்ணி கோயிலை தேர் வடிவில் மாற்றினான். கோயிலை இழுத்துச் செல்ல முயன்றான். அப்போது விநாயகர் தேர்ச்சக்கரத்தை தன் காலால் மிதித்துக் கொண்டார். இந்திரன் எவ்வளவோ முயன்றும் ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை.
விநாயகரின் செயலை அறிந்த அவன் அவரிடம் தான் தேரை எடுத்து செல்ல வழிவிடும் படி வேண்டினார். விநாயகர் அவனிடம் கோடி லிங்கங்களை பிரதிஷ்டை செய்தால் தேரை கொண்டு செல்லலாம் என்றார். இந்திரன் ஆணவத்துடன் லிங்கம் செய்தான். ஆனால் எல்லா லிங்கங்களும் பின்னப்பட்டன. தவறை உணர்ந்த இந்திரன் அமிர்தகடேஸ்வரரை வணங்கினான். அவர் ஆயிரம் முறை தன் நாமம் சொல்லி ஒரு லிங்கத்தை செய்யும் படி கூறினார். அதன் படி இந்திரன் ருத்ரகோடீஸ்வர லிங்கத்தை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தான் இங்கேயே இருக்க விரும்புவதாக சொல்லி அதிதிக்கு பதிலாக நீயே இங்கு வந்து என்னை தரிசிக்கலாம் என்றார். இந்திரனும் ஏற்று கொண்டு தன் தவறுக்கு மன்னிப்பு பெற்றான். தற்போதும் தினசரியாக இங்கு இந்திரன் பூஜை செய்வதாக ஐதீகம்.
----------------------
274 சிவாலயங்கள் : அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : சவுந்தர்யேஸ்வரர்
அம்மன் : திரிபுரசுந்தரி
தல விருட்சம் :  புன்னை
தீர்த்தம் : செங்கழுநீர்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருநாரையூர்
ஊர் : திருநாரையூர்
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர்
      
தீவினை யாயின தீர்க்கநின்றான் திருநாரை யூர்மேயான் பூவினை மேவு சடைமுடியான் புடைசூழப் பலபூதம் ஆவினில் ஐந்துங்கொண் டாட்டு கந்தான் அடங்கார் மதில்மூன்றும் ஏவினை யெய்தழித் தான்கழலே பரவா எழுவாமே. திருஞானசம்பந்தர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 33வது தலம்.  
      
விழா : வைகாசி திருவாதிரை, ராஜராஜனுக்கு பதிமூன்று நாள் திருவிழா, விநாயகர் சதுர்த்தி.  
      
சிறப்பு : முருகப்பெருமானுக்கு ஆறு படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் ஆறு படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதி விநாயகரின் ஆறாவது படை வீடாகும். பொல்லாப்பிள்ளையார் சுயம்பு விநாயகராக அருள் பாலிக்கிறார்.  
      
திறக்கும் நேரம் : காலை மணி 06:00 முதல் 12:00 மணி வரை, மாலை 04:30 மணி முதல் இரவு 08:30 மணி வரை திறந்திருக்கும். 
அருள் மிகு சவுந்தர்யேஸ்வரர் கோயில், திருநாரையூர் : 608 303, காட்டு மன்னார் கோவில் வட்டம், கடலூர் மாவட்டம். போன்:+91- 94425 71039 
     
தகவல் : மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவகிரகம், சனி பகவான், பைரவர், சூரியன் ஆகியோர் உள்ளனர்.  
      
பெருமை : நம்பியாண்டார் நம்பியின் தந்தை இங்குள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். அவருடன் தினமும் வரும் நம்பியாண்டார் நம்ப இதைப் பார்ப்பார். அப்பா வைக்கும் நைவேத்தியத்தை பிள்ளையார் சாப்பிடுவாரா? என அவருக்கு திடீரென சந்தேகம் வந்தது. தன் தந்தைக்கு பின் நம்பி கோயிலுக்கு பூஜை செய்யும் காலம் வந்தது. அப்போது தன் தந்தையை போல் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து பிள்ளையாரை சாப்பிடும் படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் சாப்பிட்டார்.
இதை நம்பாத மன்னன் ராஜராஜ சோழன் பலவகையான பலகாரத்துடன் நேரில் இக்கோயிலுக்கு வந்து பிள்ளையாருக்கு நம்பி மூலம் நைவேத்தியம் வைக்க கூறினான் . ஆனால் பிள்ளையார் சாப்பிடவில்லை. அப்போது நம்பி பிள்ளையார் மீது இரட்டை மணிமாலை பாசுரங்களை மனமுருகப் பாடினார். மனமிரங்கிய பிள்ளையார் ராஜராஜனின் நைவேத்தியத்தை அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டார். மூவர் பாடிய தேவாரப்பாடல்களைத் தொகுத்தவரும் இவரே. இவரது சிலை கையில் கலசம் ஏந்திய நிலையில் உள்ளது. தேவாரத்தை தொகுக்க பாடுபட்ட ராஜராஜ சோழனின் சிலையும் உள்ளது.
முருகப்பெருமானுக்கு ஆறு படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் ஆறு படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதி  விநாயகரின் ஆறாவது படை வீடாகும்.  
      
ஸ்தல வரலாறு : கோபக்காரரான துர்வாச முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் செய்து கொண்டிருந்தார். தனது தவத்திற்கு இடையூறு செய்த கந்தர்வன் ஒருவனை நாரையாகும் படி சாபமிட்டார். கந்தர்வன் தவறை மன்னிக்கும் படி வேண்டினான். முனிவர் மறுத்து விட்டார். எனவே இத்தல சிவனிடம் முறையிட்டு கதறினான். சிவன் அவனிடம் தினமும் காசியிலிருந்து இத்தலத்துக்கு தீர்த்தம் கொண்டு வந்து தன்னை வழிபட்டால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். நாரை வடிவிலிருந்த கந்தர்வனும் தன் சக்தியால் அதிவேகத்தில் பறந்து சென்று தீர்த்தத்தை அலகில் சுமந்து வந்து அபிஷேகம் செய்தான். இதன் பிறகு சிவன் நாரைக்கு முக்தி கொடுத்தார்.  
274 சிவாலயங்கள் : அருள் மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : பதஞ்சலீஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன் : கோல் வளைக்கையம்பிகை
தல விருட்சம் : எருக்கு
தீர்த்தம் : சூர்யபுஷ்கரிணி
ஆகமம் பூஜை  : சிவாகமம்
பழமை : 1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :  திருக்கானாட்டுமுள்ளூர்
ஊர் :  கானாட்டம்புலியூர்
மாவட்டம் :  கடலூர்
மாநிலம் :  தமிழ்நாடு
பாடியவர்கள் : சுந்தரர்
      
விடை அரவக்கொடி ஏந்தும் விண்ணவர்தம் கோனை வெள்ளத்து மாலவனும் வேத முதலானும் அடியிணையும் திருமுடியும் காண அரிதாய சங்கரனைத் தத்துவனைத் தையல் மடவார்கள் உடைஅவிழக் குழல்அவிழக் கோதை குடைந்தாடக் குங்குடங்கள் உந்திவரும் கொள்ளிடத்தின் கரைமேல் கடைகள் விடுவார் குவளை களைவாருங் கழனிக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே. சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 32வது தலம்.
 
விழா : சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.  
      
சிறப்பு : இத்தலத்தில் அம்பாள் கோல்வளைக்கையம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். இவளை அம்புஜாட்சி கானார்குழலி என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். சுந்தரர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியுள்ளார். இவளது சன்னதிக்கு வலப்புறத்தில் சனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனைகள் செய்து கொள்கின்றனர்.  
      
திறக்கும் நேரம் : காலை 06:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 07:00 மணி வரை திறந்திருக்கும். பிற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துக்கொண்டு சுவாமியை தரிசனம் செய்யலாம். அருள் மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கானாட்டம்புலியூர் : 608 306, கடலூர் மாவட்டம். போன் : +91& 4144 & 208 508, 208091, 93457 78863. 
     
தகவல் : கோயில் அமைப்பு கோஷ்டத்தின் பின்புறம் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் இருக்கிறார். இவருக்கு நேரே இருக்கும் முருகன், வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். தன் மாமாவிற்கு மரியாதை செய்யும் விதமாக முருகன் நின்ற கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். இதில் வள்ளி காதில் மூதாட்டிகள் அணியும் பாம்படம் (தண்டட்டி) அணிந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இங்குள்ள தெட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர், கஜலட்சுமிக்கு சன்னதிகள் உள்ளது. முன் மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும், அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது.
 
பிரார்த்தனை : நன்றாக பணி செய்தும் சரியான மரியாதை கிடைக்காமல் இருப்பவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பணி உயர்வு, இடமாற்றம் வேண்டுபவர்களும் சுவாமியை வழிபடலாம்.
     
பெருமை : கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள இக்கோயிலுக்கு மதூகவனம் என்றும் பெயருண்டு. கருவறையில் சிவன் சிறிய லிங்கமாக இருக்கிறார். தமிழ் வருடப்பிறப்பின் போது மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளியை சூரியன் மீது பரப்பி பூஜிக்கிறார். தண்டகாரண்ய முனிவர்கள் இங்கு சிவனை வழிபட வந்த போது மணல்கள் எல்லாம் லிங்கங்களாக அவர்களுக்கு தெரிந்ததால் வெளியில் இருந்தே சிவனை தரிசித்து விட்டு சென்றார்களாம். எனவே இத்தலத்து மண்ணை மிகவும் விசேஷமானதாக கருதுகிறார்கள். மண்ணை எடுத்து சென்றால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள நடராஜர் தனது இடது காலை முன்புறமாக தள்ளி தூக்கி நிறுத்தி உடலை பின் புறமாக சாய்த்த படி இருக்கிறார். பதஞ்சலிக்காக சிவன் மகிழ்ந்து நடனமாடியதால் இவ்வாறு காட்சியளிப்பதாக சொல்கிறார்கள். பதஞ்சலி நடராஜர் சன்னதிக்கு எதிரே நால்வருடன் சேர்ந்து இருக்கிறார். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு சுவாமி மற்றும் பதஞ்சலியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. இத்தலத்திற்கு அருகிலேயே வியாக்ரபாதர் வழிபட்ட ஓமாம்புலியூர் தலம் இருக்கிறது. ஒரே வரிசையில் சிதம்பரம், கானாட்டம்புலியூர், ஓமாம்புலியூர் ஆகிய மூன்று தலங்கள் அமைந்திருப்பது சிறப்பு. வரப்பிரசாதியான இந்த அம்பாளுக்கு புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி வளையல்கள் அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால் குழந்தை பேறு கிடைப்பதாக நம்புகிறார்கள்.
 
ஸ்தல வரலாறு : பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகா விஷ்ணுவை தாங்கும் ஆதிசேஷன் சிவனின் நடன தரிசனம் காண விரும்பி பதஞ்சலி முனிவராக அவதாரம் செய்தார். சிவன் அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக்காட்சி காட்டியருளினார். ஒரு சமயம் பதஞ்சலி நடராஜரை தரிசித்த போது அவரை இத்தலத்திற்கு வரும் படி கூறவே இத்தலத்திற்கு வந்தார் பதஞ்சலி. சிவனை வேண்டி தவம் செய்தார். அவருக்கு சிவன் தன் நடனத்தை காட்டி அருள் செய்தார். அப்போது சிவன் பதஞ்சலியிடம் என் தாண்டவங்களை கண்டு மகிழ்ந்தீரா? இப்போது திருப்திதானே! என்றார். தங்கள் நடனம் என்றும் எனக்கு சலிக்காதது. அந்நடனத்தை நான் என்றும் தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் பதஞ்சலி. சிவன் அவர் விரும்பிய படியே பல தலங்களில் தான் தரிசனம் தருவதாக கூறினார். மேலும் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக அவரது பெயரையே தனக்கும் சூட்டி பதஞ்சலீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.
அருள் மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : அமிர்தகடேஸ்வரர்
அம்மன் : அபிராமி
தீர்த்தம் : அபிராமி அமிர்த புஷ்கரிணி
பழமை : 50 வருடங்களுக்குள்
ஊர் : சேலையூர் கேம்ப்
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா : மாசி மகம், சிவராத்திரி, அமாவாசை, ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம்.  
      
தல சிறப்பு : இங்கு சுவாமியும், அம்பாள் இருவருமே சுயம்பு என்பது சிறப்பு  
      
திறக்கும் நேரம் : காலை 08:00 மணி முதல் 01:00 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும்.  
அருள் மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சேலையூர் கேம்ப், சென்னை.
     
தகவல் : கோயிலுக்குள்ளாகவே அபிராமி அமிர்த புஷ்கரிணி(திருக்குளம்) அமைந்துள்ளது. சுற்றுச்சுவர்களில் கங்கை முதல் காவிரி வரை 18 நதிகளின் பெயர்களுடன் சிலைகளை அமைத்து, அந்த நதிச் சிலைகளிலிருந்து நீர் கொட்டுவது போல அமைத்துள்ளார்கள். வருடந்தோறும் மாசி மகத்தன்று இந்த நதிகளுக்கு சிறப்பாக விழாவும் கொண்டாடுகிறார்கள்.  
     
பெருமை : மாசி மகத்தன்று பதினெட்டு நதிகளின் புனித நீர் கொணரப்பட்டு, ஹோமங்கள் வளர்த்து, பதினெட்டு குடங்களில் உள்ள தீர்த்தத்தால் பதினெட்டு நதி தேவதைகளுக்கும் தனித்தனியாக பூஜை செய்து, பின்னர் இந்த பதினெட்டு நதி நீரை திருக்குளத்தில் கலக்கிறார்கள். இதன்பின்னரே பக்தர்கள் பதினெட்டு நதிகளிலும் தனித்தனியாக கொட்டும்  தீர்த்தத்தில், வரிசையாக குளத்தைச் சுற்றி நீராடுகிறார்கள். நிறைவாக பதினெட்டு நதி நீரும் கலந்துள்ள இந்தத் திருக்குளத்தில் நீராடுகிறார்கள். பின்னர் சிவனையும் அம்பாளையும் வணங்கி அர்ச்சனை செய்தல் சிறப்பு. ஸ்நானம் செய்ய இயலாத பக்தர்கள் தலையில் இந்த நதி நீரை ப்ரோக்ஷித்துக் கொள்ளலாம். திருக்கடையூரில் நடைபெறும் சஷ்டியப்த பூர்த்தி ஹோமம் போன்று இங்கும் மாதத்துக்கு நான்கு ஐந்து சஷ்டியப்த பூர்த்தி ஹோமங்களை அவரவர் வசதிக் கேற்ப எளிமையாக நடத்துகிறார்கள்.

அபிராமிக்குச் சிறப்பானது தை அமாவாசை. அன்று மாலை 04:30 முதல் 05:00 க்குள் அபிராமி அந்தாதி பாட ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் கூடை புஷ்பம் அம்பாளுக்கு அபிஷேகமாகச் சமர்ப்பிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். பாராயண நிறைவில் அம்மனுக்கு ஒன்பது வகையான பதார்த்தங்கள் நைவேத்யம் செய்விக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அன்னை மிகச்சிறந்த வரப்பிரசாதி. இங்குள்ள அம்பாள் ஒரு அடியை முன்னே எடுத்து வைத்து நமக்கு அருள்வது போல் இருக்கும் காட்சி ஒரு சிறப்பம்சம். அம்பாளை ஒருதரம் பிரதக்ஷிணம் வந்தாலே ஷோடச மண்டபத்தில் அமைத்திருக்கும் ஷோடச லக்ஷ்மிகளையும் வலம் வந்த பலன் உண்டு. வெள்ளிக் கிழமைகளில் இந்த ஷோடச லக்ஷ்மிக்கு சிறப்பு அர்ச்சனையும் உண்டு.
 
ஸ்தல வரலாறு : 1970-ல் காஞ்சி மஹா பெரியவர் சென்னை விஜயம் செய்த போது இவ்வூரில் பழங்காலச் சிலைகள் புதைந்துள்ளன. அவற்றைக்கண்டு பிடித்துக் கோயில் கட்டுங்கள் என்று அருளாசி வழங்கக் கிடைத்தது தான் இந்த கோயில். இக்கோயில் இருந்த இடம் முன்னர் மண்மேடாக இருந்தது. அதை அகற்றும் போது அமிர்தகடேஸ்வரர் மூல விக்கிரகம் கிடைத்தது. அருகில் இருக்கும் முத்தாலம்மன் கோயிலிலும் அச்சமயம் பல சிலைகள் கிடைத்தன. அதில் அன்னை அபிராமியின் விக்கிரகமும் கிடைத்தது. சிலைகள் பல கிடைத்தமையால் சிலையூர் என வழங்கப்பட்டுவந்த இந்த ஊர். நாளடைவில் சேலையூராக மாறிவிட்டது. 1972 ஆண் ஆண்டு கிராமப் பெரியோர்களால் முதலில் அபிராமி அம்மன் கோயிலும், அமிர்தகடேஸ்வரர் கோயிலும் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில்
 
மூலவர் : திரியம்பகேஸ்வரர்
அம்மன் :கருமாரி திரிபுரசுந்தரி
தல விருட்சம் : இலந்தை மரம்
பழமை: 500 வருடங்களுக்குள்
ஊர் : சாமியார்தோட்டம்
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு
 
விழா : பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, பகல் பத்து, ராப்பத்து விழாக்கள், அனுமன் ஜெயந்தி, பங்குனி உத்திரம், சிவராத்திரி      
             
சிறப்பு : இங்கு கையில் திருச்சாத்துருண்டையை ஏந்திய கோலத்தில் முத்துக்குமார சுவாமி அருள்பாலிப்பது சிறப்பு. திறக்கும் நேரம் காலை 05:00 மணி முதல் 08:00 மணி வரை, மாலை 06:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில், அசோக்நகர்- சாமியார் தோட்டம், சென்னை.
           
பொது தகவல் : இங்கு செல்வ விநாயகர், வைத்தீஸ்வரன், முத்துக்குமார சுவாமி, துர்கை, ஸ்ரீநிவாச பெருமாள் ஆகிய தெய்வங்களும் தனிச் சன்னதிகளில் அருள்கின்றனர்.      
             
ஸ்தல பெருமை : சில வருடங்களுக்கு முன் கால பைரவர் மற்றும் மனைவி லோபா முத்திரையுடன் அகத்தியர் ஆகியோரின் விக்கிரகத் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பிரதோஷ வழிபாடும், இறைத் திருமேனிகளுக்குச் செய்யப்படுகிற அலங்காரங்களும் இந்த ஆலயத்தின் சிறப்பம்சங்கள்! புதன் மற்றும் சனிக்கிழமைகளில், பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ நிவாசப் பெருமாள், லட்சுமி ஹயக்ரீவர், சுதர்சனர் ஆகியோரைத் தரிசித்துப் பலன் பெறுகின்றனர் பக்தர்கள். ஸ்ரீ நிவாசப் பெருமாளுக்கு துளசி மாலையும் பத்மாவதி தாயாருக்கு தாமரைப் பூவும் சார்த்தி வழிபட... விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை! கருமாரி திரிபுரசுந்தரி அம்பிகைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி, புடவை சார்த்தி வணங்கினால் விரைவில் குழந்தை பாக்கியம் பெறலாம் சகல சவுபாக்கியங்களுடன் வாழலாம் என்பது ஐதீகம். சரபேஸ்வரருக்கும் அனுமனுக்கும் இங்கே தனித் தனிச் சன்னதிகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் சரபேஸ்வரருக்கும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறுகின்றன. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, துர்கைக்கு ராகு கால பூஜை என மாதம் முழுவதும் வழிபாடுகள் குறையற நடைபெற்று வரும் இந்தக் கோயிலில், மார்கழி மாதத்தில்... ஸ்ரீநிவாச பெருமாளுக்கும் பத்மாவதி தாயாருக்கும் பகல் பத்து ராப்பத்து விழாக்கள் உத்ஸவங்கள் எனக் களை கட்டியிருக்கும்! அதே போல் அனுமத் ஜயந்தி நாளில்.. ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சார்த்தி, விசேஷ அலங்காரத்தில் அற்புதமாகக் காட்சி தருவார் அனுமன். முக்கியமாக... மூலவர் திரியம்பகேஸ்வரர், அம்பாள் கருமாரி திரிபுர சுந்தரி ஆகியோருக்கு பங்குனி உத்திர நன்னாளில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தைக் காணக் கண்கோடி வேண்டும். கருமாரி திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரியம்பகேஸ்வரரையும் பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாச பெருமாளையும் வழிபட வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.      
             
ஸ்தல வரலாறு : சுமார் ஐநூறு  வருடங்களுக்கு முன் இலந்தை மர நிழலில் சூல வடிவினளாக அருள் பாலித்து வந்தாளாம் கருமாரி திரிபுரசுந்தரி. பிறகு பக்தர் சக்தி சுந்தரேசன் மற்றும் அந்தப் பகுதி மக்களின் பெரு முயற்சியால் அழகிய கோயில் கட்டப்பட்டு, அங்கே விக்கிரகத் திரு மேனியளாக குடியேறினாள் என்கிறார்கள். நான்கு திருக்கரங்களில் அபய வரத முத்திரைகளும், சூலமும், உடுக்கையும் கொண்டு ஒரு காலை தரையில் தொங்கவிட்டு, இன்னொரு காலை மடித்து, வீராசனத்தில் காட்சி தருகிறாள் கருமாரி திரிபுரசுந்தரி. தேவியின் சிரசுக்கு மேல் ஐந்துதலை நாகம் படமெடுத்து நிற்பது போன்ற அமைப்பு சிலிர்க்கச் செய்கிறது