வெள்ளி, 22 ஜூன், 2018

பல்லாங்குழி {மனதை தொட்டுவிடும் கதை}

அப்போல்லாம் எல்லாராத்துலேயும் தாயக்கட்டை, பரமபதம், பல்லாங்குழி இருக்கும். விதவிதமா சோழியும். சின்ன வயசில் ஆண் பெண் பேதமின்றி எல்லோரும் விளையாடுவா. கொஞ்சம் விவரம் தெரிஞ்சதும் இதெல்லாம் பொண்கள் விளையாடர விளையாட்டுன்னு பசங்க விலகிப்போயிடுவா. இன்னிவரைக்கும் எனக்கு இது ஏன் அப்படின்னு புரியலை.

இப்போவும், 2018இல் ஆண்கள் விளையாடர எல்லா கேம்ஸும் பெண்கள் விளையாடி சிறப்பு சேர்க்கரா. ஆனால் யாராவது ஆண்பிள்ளையை பல்லாங்குழியோ சோழியை தூக்கிப்போட்டு லாவகமா பிடிச்சு விளையாட சொல்லிப்பாருங்கோ! யோசிச்சுப்பாத்தா பல்லாங்குழியை பெண்களும் இப்போ விளையாடரதா தெரியலை. இந்தக்கதைக்கும் பல்லாங்குழிக்கும் என்ன சம்பந்தம்? அதுவாவே விளங்கும். விளங்கலேன்னாலும் பரவாயில்லை.

என் 8 வயசிலேந்து 16 வயசு வரைக்கும் எல்லா விளையாட்டும் விளையாடுவேன். ரோடில் கட்டம் போட்டு அக்கம் பக்கம் இருக்கும் பசங்களுடன் {ஆதில் பெண்களும் அடக்கம்} பாண்டி விளையாடியிருக்கேன். பம்பரம், தீப்பெட்டி படம் {சீட்டுக்கட்டை தொடவிடமாட்டா}, பல்லாங்குழி, எல்லாம் கைப்பட்ட பாடு. நான் சோழியை லாவகமா போட்டு பிடித்து, தரையில் சிதற அதை அடுத்தவா எடுப்பதற்குள் அள்ளி எல்லாத்துலேயும் முதலா வந்துடணும்னு ஆசை. ஜெயகுமார் கேரம் ஆட வந்தா நான் வரலைன்னு சில பெண்கள் கிளம்பிப்போயிடுவா. ஏன்னா ஒரு முழு ரவுண்ட் நானே ஆடி ஆட்டம் முடிஞ்சுடும். இவாள்லாம் தேமென்னு பாத்திண்டிருக்கணும்.

எங்க தெருவில், ராஜீ, கீதா, சித்ரா, கோமதி, புஷ்பான்னு என் வயசுக்கொத்த பெண்கள். சில ரெண்டு வயசு கம்மி அவ்ளோதான். நாங்கள் ராமன், கண்ணன், கோவிந்து அப்புரம் ஹரி, அவன் தம்பி லக்ஷ்மணன் என்னையும் சேர்த்து 6 பசங்க. சரியா பேலன்ஸ் ஆகலையேன்னு தோண்ரதா? செட்டு செக்கிரச்சே பாண்டீ ஆட்டம்னா பாப்பாவும், ராஜீயும்தான் டீமில் வேணும்னு அடம்பிடிப்பா. வேரன்னா அதில் யார் சாமர்த்தியமா விளையாடுவான்னு பாத்து அவாளுக்காக சண்டை போட்டுப்போம்.

ராமன் எப்பவுமே உப்புக்கு சப்பாணி. சிலசமயம் லக்ஷ்மணன் “நான் விளையாட வரலை, எனக்கு வயித்து வலி”ம்பான். ஒண்ணும் இருக்காது ஆனா நிழல்லெ உக்காந்துண்டு ரெஃப்ரீ அல்லது ஏதாவது மத்யஸ்தம் பண்ண அவனை வச்சுப்போம். நானும் கண்ணணும் எப்போவுமே லீடர். கண்ணணுக்கு கோமதிமேல சாஃப்ட் கார்னெர். எல்லோருக்கும் தெரியும். ரெண்டு பேரும் தூரத்து சொந்தமாம். பீத்திக்குவான்.

ஒரே தெருவில் நாங்க எல்லோரும் பல வருஷத்துக்கு முன்னாடியே குடி வந்து பக்கத்தில் உள்ள நோய்ஸ் பற்றும் OCPM ஸ்கூலில் படிச்சு ஒண்ணா வளர்ந்தவா. மதுரை தல்லாகுளம் காமராஜ் நகர் 4ஆவது தெருன்னா நாங்கதான் பிரதானம். சம்மர் லீவில் நாங்க போட்ர ஆட்டம், செய்யர அட்ராசிடி பிரபலம். கார்த்தாலே ஏதாவது வயத்துக்கு போட்டுண்டு தெருவில் சந்திப்போம். பிளான் பன்ணுவோம். நடுவுலே சாப்பிடக்கூப்பிட்டா கலைஞ்சு போவோம், திரும்ப வந்து தொடர்வோம். கோமதியோட அம்மா எல்லாருக்கும் பக்ஷணம் செஞ்சு தருவா. எல்லாராத்துலேந்தும் சாப்பிடரத்துக்கு வரும். சாயங்காலம் 6 மணி அடிச்சா எல்லோரும் அவாவாத்துக்கு போயிடணும்.

ஒருதடவை விளையாட்டு மும்முரத்தில் அதைப்பண்ணலை.  சித்ராவோட அம்மா அவளை தொடையில் வலிக்கரா மாதிரி கிள்ளிட்டா. அப்புரம் அவ எல்லொருக்கும் சிவந்துபோன இடத்தை காண்பிச்சா. ஆர்வமா பாத்துட்டு “துத்ஸு” கொட்டினோம்.

அப்போல்லாம் லீவுன்னு விட்டா 70- நாள் கொண்டாட்டம் தான். யாராவது அப்பா அம்மா வெளியூர் போரான்னு அவாளும் போனா மத்தவாளுக்கு அழுகை வந்துடும். என்னவோ தலையில் இடி விழுந்தா மாதிரி ரெண்டுநாள் சோகமா இருந்துட்டு அப்புரம் திரும்பவும் விளையாட்டு களை கட்டும் பாருங்கோ! ஒரு வாரம் பத்து நாள் கழிச்சு போனவா திரும்பி வந்ததும் அப்படி ஒரு சிரிப்பும் மகிழ்ச்சியும் விட்ட இடத்துலேந்து நட்பை தொடருவது மாதிரி, பிரிந்திருந்த நாட்களுக்கு ஈடு செய்யரா மாதிரி.

எங்கள் அப்பா அம்மாக்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஆச்சர்யமா இருக்கும். பெருமையாவும் இருக்கும். சாயங்காலம் 530க்கு அம்மாக்கள் எல்லாரும் ஒரு திண்ணையில் கூடுவார்கள். அவா வம்பு பேசரத்துக்கு. அந்தத்திண்னையில்தான் வருஷாந்திர ஊறுகாய் என்ன பண்ரது, வடகம் எப்போ யாராத்து மாடியில் போட்ரதுன்னு ஸ்ட்ரெடிஜிக் முடிவுகள் எடுப்பா.
நாங்க விளையாட எடுத்துக்கொண்ட ஆட்டங்களை இதுவரை சொன்னதை படிச்சிட்டு நீங்க அவசரமா ஒரு முடிவுக்கு வரப்பிடாது. என்னெல்லாம் விளையாடுவோம்னு சொன்னா மலைச்சுப்போவேள்.

கிரிக்கெட், ஃபுட்பால், பேட்மின்டன், ஹாக்கி. டென்னிஸ் பந்தில் கிரிக்கேட். ஃபோர் அடிச்சால் அடிச்ச பேட்ஸ்மேன்தான் போய் பந்தை பொறுக்கிண்டு வரணும். ஹாக்கிக்கு ஒரு கல்லில் துணி சுத்தி அதை சணலால் கட்டி விளையாடுவோம். அப்புரம் செஸ், காரொம், பல்லாங்குழி, சோழி, தாயக்கட்டம், பரமபதம் இப்படி. சில இப்போ ஞாபகம் இல்லை. எறிபந்துன்னு ஒண்ணு, டென்னிஸ் பந்தில் ஓங்கி இன்னொருத்தர் மேல குறிபாத்து எறியணும். அதில் நான் சுத்த சோப்ளாங்கி. இந்த பெண்டுகள் என்னை கட்டம் கட்டி முதுகில் டின் அடிப்பா.

ஒவ்வொரு சமையம் மாறுதலுக்கு எல்லோரும் யாராத்து மாடிப்படிக்கடீலேயாவது நெறுக்கிண்டு உக்காந்து கதை சொல்லிப்போம். அதில் நான் கில்லாடி. எட்டுக்கட்டி எதையாவது சொல்லிண்டிருப்பேன். சாதாரணமா போயிண்டிருந்த கதையில் துப்பறியும் சங்கர் வருவான். கொலை நடக்கும். ரத்தம் கொட்டும். 6 ஆச்சுன்னா திடீர்னு கதையை முடிக்கணுமே, நினெச்சபோது வேகமாக நகரும். யாராவது “உஹும்” கொட்டலைன்னா சொல்ரதை நிருத்திடுவேன்னு எல்லோரும் கவனமா கேப்பா. ராஜா ராணி கதையில் சினிமா ஸ்டார் ஜெய்சங்கர் வருவான். சில பாத்திரங்களுக்கு ஜோடி யார்னு சொல்லலைன்னா ராஜீ ஞாபகப்படுத்துவா. அப்படி ஒரு காலம்.

இப்போ நினெச்சு பாத்தா மலைப்பாவும் சந்தோஷமாவும் இருக்கும்.

இப்படியே 7ஆவது, 8ஆவது வரை இருந்த எங்க காங்க் கொஞ்சமா மாற ஆரம்பிச்சது. இதுக்கு முக்கிய காரணம் பாடச்சுமை அதிகம் ஆனதே. இன்னொரு முக்கிய காரணம் நாங்க இப்படி பறவைக்கூட்டம்போல் சிறகடிச்சிண்டு சுத்தரது கண்டிப்புக்குள் வர ஆரம்பிச்சது. இன்னொரு காரணமும். முதலில் பெரியவள் ஆனது புஷ்பா.

அப்போல்லாம் அது என்ன மாயம்னு எங்களுக்கு தெரியாது. அக்கம் பக்கத்தில் இப்படி நடக்கிரது தெரியும், புஷ்பாவுக்கு அவ அம்மா சொல்லிகொடுத்துட்டா, அதுனாலெ அரையும் குறையுமா மத்ததுக்கும் தெரிஞ்சது. அதில் ஒருத்தி லக்ஷ்மணனிடம் சொல்ல அவன் எங்ககிட்டே சொல்லிட்டான் என்ன வேடிக்கைன்னா, இன்ஃபர்மேஷன் ட்ரான்ஸ்ஃபெர்னு பிற்காலத்தில் படிச்சது அன்னைக்கு சரியா நடக்கலை. மூணு பேர் மாறி வாய்மொழியா வந்த விவரம் திரிஞ்சு போய் அதைப்பத்தின க்யூரியாசிடியை அதிகப்படுத்திடுத்து. ராமன் மட்டும் புஷ்பாவாத்துக்கு போய் ஜன்னல் வழியா அவளை உக்காத்திவச்சிருக்கிரதை பாத்துட்டு வந்துட்டான். எங்களுக்கெல்லாம் அவள் சௌக்கியமாத்தான் இருக்கான்னு தெரிஞ்சு சந்தோஷப்பட்டோம்.

அப்புரம் சிலநாள் கழிச்சு எல்லோருக்கும் அவாத்துலே ஸ்வீட் கொடுத்தா. இப்போ பிராப்ளம் என்னன்னா அவள் இனிமேல் முன்னெ மாதிரி எங்களோட விளையாட வரமாட்டாளாம். அவள் வரலைன்னுட்டு அவாத்து போர்ஷனில் குடியிருந்த ராஜீயையும் அனுப்பமாட்டேனுட்டா. கொஞ்சநாள் கூட உக்காந்து பேசிண்டிருந்துட்டு, கொஞ்சமா விளையாடிட்டு மத்த பெண் உருப்படிகளும் கழண்டுண்டுட்டா. எங்களுக்கெல்லாம் எங்க உலகத்தை யாரோ பிளான் பன்ணி சிதைச்சுட்டா மாதிரி ஃபீல். அதுக்கேத்தாபுலே ஒண்ணு மாத்தி ஒண்ணா உக்காந்துடுத்துகள்.

எனக்கு மட்டும் இல்லை எங்க எல்லொருக்கும் இது ரொம்பவும் வருத்தத்தை கொடுத்தது. புஸ்தகம் வாங்க, அல்லது ஸ்கூலுக்கு போர வழியில் பாத்தா நின்னுண்டு பேசிப்போம். அல்லது இன்னொருத்தராத்துக்கு போய் அவா அப்பா அம்மா இருக்கும்போது வம்பளக்க விடுவா. ஆனா எனக்குத்தெரியும் ரூமில் இருந்துண்டு அவாளும் காதை கூர்மையா வச்சிண்டு கேட்டிண்டிருக்கான்னு.

நான் படிப்பில் படு சுட்டி. எல்லா சப்ஜெக்டிலேயும் முதல் ராங்க். அதனால் என்னை பாடம் சொல்லிக்கொடுக்க கூப்பிடுவா. அதில் மத்தவாளுக்கு கிடைக்காத ப்ரெவிலெஜ் கிடைக்கும். அதிலும் அந்த புஷ்பா, “ஜெயகுமார் சொல்லிக்கொடுத்தாதான் புரியரது அவனை கூப்பிடு இல்லைன்ன நான் அவாத்துக்கு போயிட்டு வரேன்”னு வந்துடுவா. அவ வந்தா எனக்கு என்னமோ செய்யும். அம்மா அவளுக்கு ஹார்லிக்ஸ் போட்டு கொடுப்பா, இவளும் அதை குடிக்கர சாக்கில் அதிக நேரம் இருந்துட்டு போவா.

ஒருதடவை அவ வந்தப்போ அம்மா மாடீலே துணி உலத்தப்போயிருந்தா, அப்பா ஆபீஸில். இவள் மெல்ல கிட்டக்க வந்து பல்லாங்குழி விளையாடலாமான்னு கேக்கரா. “ஏண்டி, படிக்க வந்தியா இல்லை விளையாடவா”ன்னு கேக்கரேன். அப்புரம் திட்டு வாங்கப்போரது நான்தானே? “ஒண்ணும் பரவாயில்லை ஒரே ஒரு ஆட்டம் போடலாம், விளையாடி எத்தனை மாசம் ஆச்சுடா”ங்கிரா. சரீன்னு, நான் “அம்மா, புஷ்பாவும் நானும் பல்லாங்குழி விளையாடரோம்”னு ஒரு சௌண்ட் விட்டேன். ஒரு அலிபி க்ரியேட் ஆயிடுத்து. விளையாட்டு என்னமோ கொஞ்சம் சோழியும் கொஞ்சம் புளியங்கொட்டையும் நிரவி பழைய பல்லாங்குழியில் ஆடினோம். ஒவ்வொரு ரவுண்ட் போரச்சேயும் அவள் கையை இடையே கொண்டுவரதும் வேணும்னு என் கையை பிடிச்சிண்டு நீ தப்பாட்டம் ஆடராய்னு தள்ளிவிடரதுமா போச்சு. இவ விளையாட வந்தாப்புலே தெரியலை,

ஆனாலும் இந்த விளையாட்டு இன்னும் நீடிக்கணும்னும் அவள் என் கையை பிடிச்சு கொஞ்சநாழி வச்சுக்கணும்னும் தோணித்து.

அப்புரம் எங்கம்மா கீழே வந்தா, புஷ்பாவோட அம்மா இவளைக்காணோம்னு தேடிண்டு “வாடி சமையல் ஆறிப்போரது”ன்னு இவளை அழைச்சிண்டு போனதும் நடந்தது. போரச்சே ஒரு லூக் விட்டா பாருங்கோ!

அடுத்த வருடங்களில் நான் SSLC முடிச்சேன். அப்பாவுக்கு சேலத்துக்கு மாத்தல் ஆகி கிளம்பினோம். என்னைப்போலவே லக்ஷ்மணன், கோவிந்து, ஹரி, அப்புரம் ராஜீ, கீதான்னு சிதறிப்போனோம்னு தெரிஞ்சுண்டேன். அப்போல்லாம் லெட்டர்தான். போன் கூட கிடையாது. அப்புரம் அவா அவா எங்கேயொ வேலையில் அமர்ந்து, கல்யாணம் பண்ணிண்டு குழந்தையை பெத்துண்டு. என்னோட அதிக காலம் தொடர்பில் இருந்தது ராமனும், சித்ராவும் மட்டும். அவன்கிட்டேந்து சில தகவல்கள் வரும். ஒண்ணும் முழுசா வராது.

அன்னைக்கு வேலை நிமித்தமா என்னோட பெயின்ட் கம்பேனியின் மதுரை கிளையில் சிலரை சந்திச்சு பேசவேண்டியிருந்தது. இது சமீபத்தில் நான் மாறின வேலை. கடந்த 35 வருஷமா மதுரைக்கு வரவேண்டிய சூழலே ஏற்படலை. லேடி டோக் காலேஜ் கிட்டேயே JC ரெசிடென்ஸியில் ரூம் போட்டுண்டு தங்கினேன். கூப்பிடு தூரத்தில் காமராஜ் நகர். நாளைக்கு தில்லி திரும்பணும் அதனால் ஒரு எட்டு போய் அந்த பழைய இடங்களெல்லாம் எப்படி இருக்குன்னு பாத்துடணும்னு ஆசை. போனேன்.

அப்படியே சில, சுத்தமா அடையாளம் தெரியாம மாறிப்போனது பல. எங்க அம்மாக்கள் உக்காந்துண்டு வம்பளத்த திண்ணையும் அந்த வீடும் அப்படியே, முகப்பு மட்டும் மாறினாப்புலே இருக்கவே அங்கேயே போரேன். அங்கே இப்போ யார் இருக்காளோ? அந்தாத்துக்கு எதுக்க நாங்கள் இருந்தோம், அங்கே அபார்ட்மென்ட் வந்தாச்சு. மரம் செடியெல்லாம் காணோம். கேட்டை தொறந்துண்டு உள்ளே போய் காலிங்க் பெல்லை அழுத்தரேன்.

ஒரு வயசான மாமி வரா, என் ஒத்த வயது. நெத்தியில் பொட்டில்லை. கண் பார்வை கொஞ்சம் தீக்ஷண்யம் குறைஞ்சாப்புலெ இடுக்கிண்டு “யார் வேணும்”கிரா. “நான் ஜெயகுமார், தில்லிலெந்து வரேன், முன்னாடி இங்கேத்தான் குடியிருந்தோம் இங்கேந்து மாத்திபோய் ரொம்ப வருஷம் ஆச்சு, அதுதான் ஏதோ ஒரு உந்துதலில் கிளம்பி எப்படி இருக்குன்னு பாக்கலாம்னு வந்தேன். இங்கே புஷ்பான்னு ஒரு பொண் குடியிருந்தா. அவள் அப்பா பேர் கூட ராமச்சந்திரன், பாகவதர். அவாளெல்லாம் இப்போ எங்கேன்னு உங்களுக்கு தெரியுமா”ன்னு கேக்கரேன்.

உத்துப்பாத்த அவள், “உங்களுக்கு பல்லாங்குழி விளையாட வருமா”ன்னு கேக்க என் தலை முழுசா ஒரு சுத்து சுத்திட்டு நின்னது. “புஷ்பாவா நீங்க?” “ஆமாண்டா, உள்ளே வா, என் பொண்ணு மாப்பிள்ளையை அறிமுகப்படுத்தரேன். பேத்தி ஸ்கூலுக்கு போயிருக்கா, வரத்துக்குள்ளே ஒரு ஆட்டம் போடலாம்”கிரா.
 வாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடுகள்

அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்கு உரிய வடிவங்களை தினமும் பார்த்து வந்தாலோ அல்லது பயன் படுத்தி வந்தாலோ வாழ்க்கையில் எளிதில் வெற்றியடையலாம். ராமன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான வில்லேந்தி ராவணனை வென்றான். கிருஷ்ணன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான தேரை ஓட்டி பாண்டவர்களுக்கு வெற்றி தேடி தந்தான்.

நட்சத்திரவடிவம்:-

 அஸ்வினி - குதிரைத்தலை

 பரணி - யோனி,அடுப்பு,முக்கோணம்

 கிருத்திகை - கத்தி,கற்றை,வாள்,தீஜ்வாலை

ரோஹிணி - தேர்,வண்டி,கோயில்,ஆலமரம்,ஊற்றால்,சகடம்

மிருகசீரிடம் - மான்தலை,தேங்கைக்கண்

திருவாதிரை - மனிததலை,வைரம்,கண்ணீர்துளி

புனர்பூசம் - வில்

பூசம் - புடலம்பூ,அம்புக்கூடு,பசுவின்மடி

ஆயில்யம் - சர்ப்பம்,அம்மி

மகம் - வீடு,பல்லக்கு,நுகம்

பூரம் - கட்டில்கால்,கண்கள்,அத்திமரம்,சதுரம்,மெத்தை

உத்திரம் - கட்டில்கால்,கம்பு,குச்சி,மெத்தை

ஹஸ்தம் - கை

சித்திரை - முத்து,புலிக்கண்

ஸ்வாதி - பவளம்,தீபம்

விசாகம் - முறம்,தோரணம்,குயவன்சக்கரம்

அனுசம் - குடை,முடப்பனை,தாமரை,வில்வளசல்

கேட்டை - குடை,குண்டலம்,ஈட்டி

மூலம் - அங்குசம்,சிங்கத்தின்வால்,பொற்காளம்,யானையின்துதிக்கை

பூராடம் - கட்டில்கால்

உத்திராடம் - கட்டில்கால்

திருவோணம் - முழக்கோல்,மூன்றுபாதச்சுவடு,அம்பு

அவிட்டம் - மிருதங்கம்,உடுக்கை

 சதயம் - பூங்கொத்து,மூலிகைகொத்து

பூரட்டாதி - கட்டில்கால்

உத்திரட்டாதி - கட்டில்கால்

ரேவதி - மீன், படகு.

வெற்றிதரும் நட்சத்திர குறியீடுகள்:- ஜோதிட சாஸ்திரத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் உருவம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளை நாம் வெற்றி சின்னங்களாகப்பயன்படுத்திக்கொள்ளலாம். எப்படியென்றால், நாம் வசிக்கும் வீடு,பணிபுரியும் இடம்,அணியும் ஆடை,அறிமுக முகவரி அட்டை(visiting card),கடித முகவரி ஏடு (Letter pad) இவைகளில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை சின்னங்களாக பயன்படுத்திவந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்.

இதற்கு ஆதாரம் ஏதாவது கிடைக்குமா என்பதை ஆய்வு செய்தபோது ,புராண இதிஹாசங்களில் ஆதாரம் இருப்பதை அறிய முடிந்தது. அவைகளை பார்ப்போம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரம் ரோஹிணியாகும். ரோஹிணி நட்சத்திரத்தின் உருவம் தேராகும். ஸ்ரீகிருஷ்ணர் தேரோட்டியாக இருந்து பாண்டவர்களுக்கு மஹாபாரதப்போரில் வெற்றி தேடித்தந்தார். பகவான் ஸ்ரீராமரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசமாகும். புனர்பூசம் நட்சத்திரத்தின் உருவம் வில்லாகும். ஸ்ரீராமர் வில்லேந்தி ராவணனை வெற்றி கொண்டார். 

 பகவான் ஸ்ரீவாமனரின் ஜென்ம நட்சத்திரம் திருவோணமாகும். திருவோணம் நட்சத்திரத்தின் உருவம் மூன்று பாதச்சுவடுகள் என கூறப்படுகிறது. ஸ்ரீவாமனர் ஈரேழு உலகையும் ஈரடியாய் அளந்து மூன்றாவது அடியை மஹாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவன் கர்வத்தை அடக்கினார்.எனவே ஸ்ரீவாமனருக்கு உலகளந்த பெருமாள் என்னும் நாமம் உண்டு.

ஸ்ரீஅனுமனின் ஜென்ம நட்சத்திரம் மூலமாகும். மூலம் நட்சத்திரத்தின் உருவம் சிங்கத்தின் வால் என ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.அனுமன் கையிலிருக்கும் ஆயுதம் சிங்கத்தின் வால் போன்ற வடிவத்தில்தான் இருக்கும்.

 ஸ்ரீருத்திரனின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரையாகும். திருவாதிரை நட்சத்திரத்தின் உருவம் மண்டையோடு என ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீருத்திரன் மண்டையோடுகளை மாலையாக அணிந்திருப்பவன்.

மேற்கண்ட புராண, இதிஹாச தகவல்களின் மூலமாக நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் நட்சத்திர உருவங்கள் அல்லது சின்னங்கள் நமக்கு வெற்றிதரும் சின்னங்களாகும். அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை,தன்னோடு வைத்திருந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்.