சனி, 7 நவம்பர், 2020

திருமழிசையாழ்வார்

4. திருமழிசையாழ்வார்

பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : தை மகம் (தேய்பிறை பிரதமை திதி)
கிழமை : ஞாயிறு
தந்தை : பார்க்கவ முனிவர்
தாய் : கனகாங்கி
எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்
பாடல்கள் : 216
சிறப்பு : திருமாலின்ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம்,
பிற பெயர்கள் : மழிசைப்பிரான், மஹீஸாபுரீஸ்வரர், பக்திஸாரர், பார்க்கவர்.

சக்கரத்தாழ்வாரின் அம்சமான திருமழிசை ஆழ்வார் பார்க்கவ மகரிஷியின் மகனாக திருமழிசை என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர். பிரம்பறுக்க வந்த திருவாளன் என்பவர் இவரை எடுத்துச்சென்று வளர்த்தார். ஆனால் ஆழ்வார் பிறந்தது முதல் பால் கூட குடிக்கவில்லை. இதைக்கேள்விப்பட்ட வேளாளர் ஒருவர் தன் மனைவியுடன் பசும்பாலை காய்ச்சி எடுத்து வந்து இவருக்கு கொடுத்து அருந்தக் கூறினார். இப்படியே தினமும் வேளாளர் கொடுத்த பாலை குடித்து வந்த ஆழ்வார். ஒரு நாள் சிறிது பாலை மட்டும் அருந்தி விட்டு மீதியை அவர்களிடமே அருந்தக் கூறினார். மனைவியுடன் அந்த பாலை அருந்திய வேளாளர் தன் முதுமை நீங்கி இளமை பெற்றார். பாலின் மகிமையால் இவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு கனிக்கண்ணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். களிக்கண்ணனும் திருமழிசை சீடர் ஆனார். பல சமயங்களில் உள்ள குறைபாடுகளை அறிந்த ஆழ்வார் கடைசியில் சைவ சமயத்தை சார்ந்திருந்தார். ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார், திருமழிசை ஆழ்வாரை வைணவ சமயத்தை ஏற்கச் செய்ததுடன் திருமந்திர உபதேசம் செய்தார். ஒருமுறை காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார் அங்குள்ள திருவெங்குடி திருத்தல பெருமாளுக்கு பல ஆண்டுகள் தொண்டாற்றி வந்தார். அங்கு ஆசிரமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டியின் விருப்பப்படி அவளுக்கு இளமை வரம் கொடுத்தார். இவளின் அழகில் மயங்கிய பல்லவ மன்னன் இவளை தன் மனைவியாக்கினான். தனக்கும் இளமை வரம் வேண்டும் என்று விருப்பப்பட்ட மன்னன். ஆழ்வாரின் சீடனான களிகண்ணனிடம் தனக்கும் இளமை வரம் கேட்டான். ஆனால் எல்லோருக்கும் ஆழ்வார் வரம் தர மாட்டார் என களிக்கண்ணன் கூறியதால் அவனை நாடு கடத்த மன்னன் உத்தரவிட்டார். இதையறிந்த ஆழ்வார் சீடனுடன் தானும் வெளிறே முடிவு செய்து காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் நாங்கள் இல்லாத இடத்தில் உனக்கும் வேலை இல்லை எனவே நீயும் எங்களுடன் வந்து விடு என அழைத்தார். பெருமாளும் தன் பாம்பணையை சுருட்டிகொண்டு ஆழ்வாருடன் சென்றார். இதனால் இந்த பெருமாளுக்கு சொல் வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் வழங்கப்படுகிறது. அதன் பின் கும்பகோணம் வந்த ஆழ்வார் நீண்ட காலம் அங்கிருந்து பெருமாளுக்கு சேவை செய்து திருவடியை அடைந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமழிசை ஆழ்வார் தனியாக சென்று 2 கோயில்களையும் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 11 கோயில்களையும் என மொத்தம் 13 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்


பேயாழ்வார்


 3. பேயாழ்வார்

பிறந்த ஊர் :  மயிலாப்பூர்
பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு
நட்சத்திரம் : ஐப்பசி சதயம் (வளர்பிறை தசமி திதி)
கிழமை : வியாழன்
எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
பாடல்கள் : 100
சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சம் (நந்தகாம்சம்)
பிற பெயர்கள் : கைரவமுநி, மஹதாஹ்வயர்

இவர் சென்னையிலுள்ள ஆதிகேசவப்பெருமாள் கோயில் அருகிலுள்ள குளத்தில் அதிசயமாக மலர்ந்த செவ்வரளிப்பூவில்  பிறந்தவர். சிறுவயது முதல் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அவர் மனம் எப்போதும் பரமனின் திருவடியையே நாடி நின்றது. திருமாலின் திருப்புகழை பாமாலையாக்கி நாள்தோறும் தொடுப்பார் இவர். அப்பொழுது இவர் கண்களில் ஆனந்த வெள்ளம் கரை புரண்டோடும். திருமாலின் திருப்பாதம் பணியுங்கள். உங்கள் வினைகள் ஓடிப்போகும். அத்துடன் மீண்டும் உங்களை தொடாது. இதையே

அகநன்று, இது தீது என்று ஐயப்படாதே
மது நன்று தண் துழாய் மார்வன்-பொது நின்ற
பொன்அம் கழலே தொழுமின் ! முழு வினைகள்
முன்னம் கழலும் முடிந்து

என்ற பாடலால் உணர்த்தியுள்ளார். இவர் நூறு பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதியை அருளினார். முதலாழ்வார்கள் எனப்பட்ட பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரில் இவர் தான் அதிகமான ஸ்தலங்களைப்பாடியுள்ளார். அத்துடன் பதினைந்து திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். திருக்கோவிலூரில் உள்ள ஒரு வைணவரின் வீட்டில் விளக்கு வெளிச்சத்தில் நாராயணன் நிற்பது முதலில் பேயாழ்வாருக்கு தான் தெரிந்தது. இப்படி பரமனைக் கண்ட பரவசத்தில் திருக்கண்டேன். பொன்மேனி கண்டேன் என்று துவங்கி நூறு பாடல்களை பாடினார். மேலும் திருவேங்கடம் சென்ற இவர் பெருமானை சிவனும், விஷ்ணுவும் கலந்த உருவாக கண்டார். பெருமாள் மேல் ஆராக்காதல் கொண்டு வேறு எதையும் நினைக்காமல் வாழ்ந்தார். பேயனாயொழிந்தே ஏனம்பிரானுக்கே என்று பாடியருளினார். பக்தி பரவசத்தில் அதுவே ஒரு வெறிபோல் தோன்றும்படி அவர் அழுவார். தொழுவார். ஆடிக் காண்பார் இறை பக்தியில் தன்னை முழுதும் மறந்து போனதால் இவர் பேயர் போலும் பித்தர் போலும் திரிந்தார். இதனாலேயே இவர் பேயாழ்வார் என் அழைக்கப்பட்டார். பெருமாளின் 108 திருப்பதிகளில் பேயாழ்வார் தனியாக சென்று 1 கோயிலையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 11 கோயில்களையும் என மொத்தம் 12 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

சுவாமிநாத தேசிகர்

சுவாமிநாத தேசிகர்

செஞ்சொற் புலவர்க்கு அன்புற்ற திருச்செந்திற் குமரப் பெருமானே! என்று புகழ்வார் திருப்புகழ் அருணை முனிவர். அப்படி, செந்தமிழ்ப் புலவர்கள் செந்திற் கந்தனை இன்புற்றுப் பாடிப்பரவிய எத்தனையோ  அருட்பனுவல்கள் உள்ளன. அந்தப் பாமாலைகளில் ஒப்பற்ற ஓர் அருட்பிரபந்தம்தான் திருச்செந்திற் கலம்பகம். செந்தமிழ் மொழியில் பலவிதமான பாவகைகளைக் கொண்டு தொகுக்கப்பெற்றது இது. கற்பவர் மனத்தைக் கவரும் அம் சொற்களும், செம்பொருளும், பல சந்தநயங்களும் அமைந்த பக்திச்சுவை பழுத்துத் தித்திக்கப்பெறும் கற்பகம் போன்றது திருச்செந்திற் கலம்பகம். இதை இயற்றிய சுவாமிநாத தேசிகர் யார்?

பாண்டிய நாட்டில், சைவ வேளாளர் குலத்தில் தோன்றியவர் சுவாமிநாதர், இளமையிலேயே திருக்கயிலாயப் பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின் தொடர்பு கிடைத்தது. அங்கு ஞானதேசிகராக இருந்த அன்பலவான பண்டார சந்நிதிகள், சுவாமிநாதருக்கு சைவ சமய விசேஷ தீøக்ஷகளை அளித்தார். அவரிடம் துறவறம் பெற்று, நித்திய நியமங்களை வழுவாமல் செய்து, அறநூல்களைக் கற்றுணர்ந்தார். ஆதீன தேசிகரிடம் சிறந்த தொண்டராய்த் திகழ்ந்தார். திருநெல்வேலியில் வாழ்ந்த மயிலேறும் பெருமாள்பிள்ளை என்பவர் கல்லாடம் என்னும் உயர் செந்தமிழ் நூலுக்கு உரை எழுதியவர். அவர் ஒருமுறை சுவாமிநாத தேசிகரைச் சந்தித்தார். இவருடைய அறிவின் மிகுதியையும், ஒழுக்கம், அன்பு முதலான நற்குணங்களையும் கண்டு வியந்தார். இளமைப் பருவத்தில் இத்தகைய உயர்ந்த பண்புடையவருக்குத் தாம்கற்ற நூல்களைப் போதிக்க விருப்பம் கொண்டார். ஆதீன கர்த்தரிடம் அனுமதி பெற்று, இவரை அழைத்துச்சென்று தமது இல்லத்தில் தங்கவைத்து, பல அறநூல்களைக் கற்பித்தார். செப்பறை என்ற ஊரில் வாழ்ந்த கனகசபாபதி சிவாச்சாரியர் சிறந்த வடமொழி வல்லுநர். அவரிடம் தேசிகரை அழைத்துச் சென்று வியாகரண நூல்களை அறிந்துகொள்ள வழிசெய்தார் பிள்ளையவர்கள். இவ்வாறு தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் சிறந்த புலமைபெற்ற சுவாமிநாத தேசிகர், மீண்டும் திருவாவடுதுறையை அடைந்து, தம்பிரானை வணங்கினார் இவரது கல்வித்திறமையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார் தம்பிரான். அக்காலத்தில் இலக்கண இலக்கியங்களில் உள்ள பல அரிய செய்திகளைத் திரட்டி இலக்கணக் கொத்து என்ற நூலையும், தசகாரியம் என்ற ஞான நூலையும் செய்தருளினார்.

பெரும்புலவர் வைத்தியநாத நாவலர் என்பவர், இலக்கண விளக்கம் என்ற நூலை இயற்றியவர். திருவாரூரைச் சேர்ந்தவர். அவர் ஒருநாள் ஆதீனத்தில் சுவாமிநாதரைச் சந்தித்தபோது அவரது கல்வி கேள்வி ஞானத்தை உணர்ந்து தொல்காப்பியம் முதலான நூல்களை எழுத்தெண்ணிப் படித்த சுவாமிநாத மூர்த்தியா தாங்கள்? என்று மிகவும் வியந்து பாராட்டினார். அப்போது ஆதீன கர்த்தர் சுவாமிநாத தேசிகருக்கு ஆசார்ய அபிஷேகம் செய்வித்து, ஈசான தேசிகர் என்னும் அபிஷேகப் பெயர் சூட்டினார். அதோடு அவரை திருநெல்வேலியில் தமது ஆதீனத்தைச் சார்ந்த மடாலயத்தில் இருக்கும்படி பணித்தார். சுவாமிநாத தேசிகரும் அந்த மடத்தில் ஈசான தேசிகர் மடம் என்ற பெயர் அமைந்தது. நன்னூலுக்கு விருத்தியுரை செய்த சங்கர நமசிவாய புலவர் தேசிகரது சீடர் ஆவார். திருச்செந்தூரில் நடைபெறும் விசேஷ நாட்கள் மற்றும் உத்ஸவங்களில் கந்தவேளை தவறாமல் தரிசித்து வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் சுவாமிநாத தேசிகர். அவ்வாறு ஒருமுறை செந்திலாண்டவர் சந்நிதியில் நின்று தன் மனம், மொழி, மெய்களால் அலைவாய் அழகனைத் தரிசித்தபோது கலம்பகம் பாடலாமே என்று ஒரு குரல் ஒலித்தது. தேசிகர் சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தபோது, அருகில் யாரையும் காணவில்லை. இது செந்தில்முருகன் ஆணை போலும்! என்று உணர்ந்து, திருச்செந்திற் கலம்பகம் என்னும் பாமாலையைப் பாடத் தொடங்கினார். முருகப் பெருமான் தமிழாகிய தென்கடலைக் கடக்கும் தோணி போல உள்ளான். சந்திரன், சூரியன் ஆகியோருக்கும் தன் பன்னிரு விழிகளால் அருள்பாலிக்கிறான். அத்தகைய முருகனுக்கு உரியதாகிய திருச்செந்திற் கலம்பகம் என்ற நூலை துறைசை நகர் சுவாமிநாத தேசிகன் துதி செய்து சமர்ப்பிப்பதாக இந்த நூலின் பாயிரச் செய்யுளில் பாடுகிறார் தேசிகர்.

கலம் என்பது பன்னிரண்டையும், பகம் என்பது ஆறு என்பதையும் குறிக்கும். அதாவது பதினெட்டு உறுப்புகளைக் கொண்ட சிற்றிலக்கியம் கலம்பகம், புயவகுப்பு, மதங்கு, அம்மானை, களி, சிந்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தாழை, ஊசல், காலம் சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண் ஆகிய பதினெட்டு உறுப்புகள் உடையது. ஆயினும், சில நூல்களில் இருபத்தாறு உறுப்புகளும் உண்டு. கலம்பகம் கவிதைச்சுவையில் சிறந்தது. தமிழில் பல கலம்பகங்கள் இருப்பினும், கலம்பகத்துக்கு இரட்டையர் என்று இரட்டைப் புலவர்களைக் குறிப்பிடுவர் கலம்பகம் விருந்து எனப்படும் வனப்புடையது. செந்திற்கந்தன் விரும்பியபடி கலம்பகம் பாடி, அதனை அவன் அருள்மழை பொழியும் கோயிலில் அரங்கேற்றம் செய்தார் தேசிகர், இதனைச் செவிமடுத்த அறிஞர்களும் அடியார்களும், இதன் பக்திச்சுவையையும் இலக்கியச் சுவையையும் நன்கு ரசித்துப் பாராட்டினர். இதில் முப்பது பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து, செந்திலாண்டவர் இரவு பள்ளியறைக்கு எழுந்தருளும்போது, ஓதுவார்கள் அதனைத் தோத்திரம் செய்யும் வழக்கமும் பின்னாளில் ஏற்பட்டது. இதிலிருந்தே இந்தக் கலம்பகத்தின் அருமை பெருமைகளை நாம் உணர முடியும். இந்த நூலின் ஒவ்வொரு செய்யுளும் தித்திக்கும். கருத்தாழமும் சொல் அமைதியும் சிந்தனைக்கு விருந்தாகும். திருச்செந்தூருக்கு நீ அன்புடன் சென்று முருகனைத் தொழுது. மயிலும் வேலும் எனத் தொழு. ஏழ்வகைப் பிறப்பிலும் நீ பிறந்து உழல மாட்டாய்! என நெஞ்சுக்கு அறிவுறுத்தி இந்த நூலை நிறைவு செய்கிறார் சுவாமிநாத தேசிகர். இந்த அரிய நூலை சென்னை குரோம்பேட்டை குமரன்குன்றம் திருப்புகழ் மன்றத்தினர் 2008 ஆம் ஆண்டில் உரையுடன் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லையிலா நலம் பெருகும் இயற்றமிழ் நாவலர் பலரும்
அல்லலுறா வகையினிலே அவிரும் உயர் இலக்கணமும்
கல்வியருள் நூல்பலவும் கலம்பகமும் எளிதில் அருள்
நல்லபுகழ் பெறுசாமி நாதர்சேர் பதம் போற்றி