புதன், 27 மே, 2020

மரப்பாச்சி பொம்மை மகிமை

அந்தக்காலத்தில் வீட்டில் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் ஆகவில்லை திருமணதடை உள்ளது என்றால் இந்த மரப்பாச்சி பொம்மையை வைத்து பொம்மை கல்யாணம் என்றுசெய்து தெரிந்தவர்களை அழைத்து சாப்பாடு போடுவார்கள் அன்னதானத்தை விட சிறந்த தானம் இல்லை.ஆகையால் பொம்மைக்கல்யாணம் மூலம் அன்னதானம் செய்வதன் பலன் உடனே திருமணம் கை கூடும். அதை அடியேன் பார்த்திருக்கிறேன். சரி திருமணம் ஆகிவிட்டது.பெண்னுக்கு சீர் கொடுக்கும்போது  மரப்பாச்சி பொம்மைகள் வைப்பார்கள். காரணம்
அந்தப்பெண் அந்த பொம்மைகளையே தன் தாய் தந்தையாக நினைத்து அவர்கள் கூட இருப்பதாக உணர்வாள் காரணம் அந்தக்காலத்தில் போட்டோக்கள் கிடையாது. சரி குழந்தை பிறந்துவிட்டது அந்த குழந்தைக்கு ஜலதோஷம் பிடித்தால் மரப்பாச்சி பொம்மையை சந்தணக்கல்லில் வைத்து தேய்த்து அதை தாய்ப்பாலில் குழைத்து விளக்கில் சூடு காட்டி அதை நெற்றியில் பத்து போட்டால் ஜலதோஷம் நீங்கி குழந்தை அயர்ந்து தூங்கும்.பெரியவர்களுக்கு கட்டி வந்தால் கூட இது போல் தேய்த்து கட்டி மேல் தடவுவார்கள். சரி குழந்தை வளர்ந்து பல்லால் கடிக்கும்நிலை வரும் போது பல மருத்துவ குணங்கள் உள்ள பல்வேறு மரங்களால் ஆன மரப்பாச்சியை குழந்தையிடம் விளையாடக்கொடுப்பார்கள்.அதை குழந்தை கடிக்கும் போது அதன் மருத்துவகுணம் உள்ளே சென்று நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.
சரி அடுத்தது இனிமரப்பாச்சி பொம்மையை மற்றவர்களுக்கு பரிசாக
வாங்கிக்கொடுங்கள்.வீட்டில் அலங்காரப்பொருளாக அலமாரியில் வாங்கி வையுங்கள்.


லலிதா ஸகஸ்ரநாமத்தில் கூறும் அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்....

சக்திதேவிக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அந்தப் பெயர்களால் அவளை அர்ச்சிக்கும் மந்திரங்கள் அடங்கிய நூலே லலிதா சகஸ்ரநாமம். இந்த நூலிலேயே தேவிக்கு பிடித்த நைவேத்ய வகைகள் சொல்லப்பட்டுள்ளன.

இந்த நூல் தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது.

பெருமாளின் அவதாரமாகக் கருதப்படுபவர் ஹயக்கிரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். கல்விக்கு அதிபதி. இவரது தரிசனம் ஒருமுறை அகத்திய முனிவருக்கு கிடைத்தது. கல்விக்கதிபதியான அவரை தன் குருவாகவே பார்த்தார் அகத்தியர். அதன் காரணமாக சக்தியின் வரலாற்றை அறிந்தார். சக்திக்கு "லலிதா' என்ற திருநாமம் சூட்டி, அவளது கதையைக் கூறினார் ஹயக்கீரிவர்.

அதைக் கருத்துடன் கேட்டு மகிழ்ந்த அகத்தியர், "குருவே! தாங்கள் எனக்கு லலிதா தேவியின் சரித்திரத்தை மட்டும் கூறினீர்கள். அவளுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே! அதையும் சொல்லுங்கள்!' என்றார்.

"அது மிக, மிக ரகசியம். தேவியின் அனுமதியின்றி யாருக்கும் சொல்லக் கூடாது. இருந்தாலும் தேவியின் அதிதீவிர இறைபக்தர்களுக்கு இதைச் சொல்வதில் தவறில்லை!' என்று கூறிய ஹயக்கிரீவர், ஆயிரம் நாமங்களையும் கற்றுக் கொடுத்தார். அதில் வரும் 480வது ஸ்லோகமான, "பாயஸான்ன ப்ரியாயை' என்பதற்கு, "பால் பாயசத்தை விரும்புபவள்' எனப் பொருள்.

501வது ஸ்லோகமான, "குடான்ன ப்ரீத மானஸாயை' என்பதற்கு, "அம்பிகை சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள்' என்று அர்த்தம்.

526வது ஸ்லோகமான, "ஹரித் ரான்னைக ரஸியை' என்ற ஸ்லோகத்திற்கு, "மஞ்சள் பொடி கலந்த எலுமிச்சை சாதத்தை ரசித்து உண்பவள்' என பொருள் வருகிறது.

அம்பிகை குறித்த இன்னொரு ஸ்லோகமான, "தத்யான்ன ஸக்த ஹ்ருதயாயை' என்ற ஸ்லோகத்திற்கு, "இவள் தயிர் சாதம் என்றால் இதயத்தையே கொடுப்பவள்!' என்று பொருள்.

"முத் கௌத நாஸக்த...' என்ற ஸ்லோகத்திற்கு, "பாசிப்பருப்பு, அரிசியில் சமைத்த வெண்பொங்கலை விரும்புபவள்!' என்று அர்த்தம்.

"ஸர்வெளதன ப்ரீதசித்தா' என்ற ஸ்லோகத்திற்கு, "அம்பிகை கதம்ப சாதம், தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றை உண்ணும் மனதைக் கொண்டவள்!' எனப் பொருள்.

இதையெல்லாம் முடித்த பிறகு 559வது ஸ்லோகத்தில், "தாம்பூல பூரிதமுகிச்யை' என்ற ஸ்லோகம் வருகிறது. இதற்கு, "தாம்பூலம் தரித்ததால் லட்சணமாக இருக்கும் முகத்தைக் கொண்டவள்!' எனப் பொருள்.

"தாம்பூலம்' என்பது வெற்றிலை, பாக்கைக் குறிக்கும். எனவே தான் கடவுளுக்கு நாம் நிவேதனம் படைத்து வழிபடுகிறோம்.

இதைத்தவிர அவரவருக்கு என்ன நைவேத்யமாக வைத்து பூஜிக்க முடியோமோ அதை வைத்து வணங்கலாம். அம்பாள் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான, ஆத்மார்த்தமான பக்தியே!

நாமும் நமக்கு தெரிந்த முறையில் அம்பாளை மனதார நினைத்து, துதித்து, தாயின்  அருளை  பெறுவோம்....
#படித்ததில்_நெகிழ்ந்தது

நான் சந்தித்த வித்தியாசமான மனிதர்கள், சம்பவங்கள் ..........

ஒரு நாள், பார்த்த சாரதி கோவிலுக்கு போனேன்.

பக்தி ரசத்தில் அல்ல; ரசம் வைக்க ஈயச்சொம்பும், வத்தக் குழம்புக்கு கல் சட்டியும் வாங்க

கோவிலை ஒட்டிய ஒரு சிறிய சந்தில், வரிசையான, ஸ்ட்ரீட் ஹவுசஸ். எல்லாம் பழைய வீடுகள்.

அந்த தெருவில் ஒரே ஒரு வீட்டில் தான் கல் சட்டி வியாபாரம்.

அந்த தெருவிற்கு போனதும், என்னை முதலில் கவர்ந்தது, ஒரு திண்ணை வைத்த வீடு.

அந்த திண்ணையில் ஒரு மிக வயதான பாட்டி -

உட்கார்ந்த வாக்கில் கை பம்ப் அடிக்கிறார்.

அவர்களை விட சற்றே சிறிய மாமி, குடத்தில் அதை பிடித்து, நாலு படி ஏறி உள்ளே கொண்டு நிரப்புகிறார்.

கல் சட்டி வியாபாரத்தை சட்டென்று முடித்து, சுவாதீன மாக அந்த திண்ணையில் போய் உக்கார்ந்தேன்.

பேச்சுக் கொடுத்தேன்.

இனி எங்கள் உரையாடல் :-

நான்... "பாட்டி, இந்த வயதில், நடமாட்டம் கூட இல்லாத நீங்கள், தண்ணீர் அடிக்கிறீர்கள்?"

பாட்டி : "அதனால் என்னம்மா? நம் வீட்டு வேலை தானே. இதோ எதிர்த்தார்ப் போல் நாராயணன்.. அவன் பார்த்துப்பான். நானா அடிக்கிறேன்; அவன் ன்னா என் கையில் புகுந்து அடிக்கிறான்"

நான் - "பாட்டி, தண்ணீர் பிடித்து நடையாய் நடந்து ரொப்புவது யார்?"

பாட்டி - "அவள் என் சின்ன ஒர்ப்பிடி. அவள் மூலமாகத்தான் நாராயணன் எனக்கு பிடி சாதம் தினமும் தருகிறான்"

நான் - "வேறு யார் யார் இருக்கிறார்கள்?"

பாட்டி - எனக்கு ரொம்ப சின்ன வயதில் கல்யாணமாகி, இந்தாத்துக்கு வந்தேன்.

என் ஆத்துக்காரர், பெருமாளுக்கு சேவை செய்த குருக்கள். இந்த வீடு அப்போ, வாடகை இல்லாமல் கொடுத்தார்கள்.

எனக்கு குழந்தை பிறக்க வில்லை. அதைப் பற்றி எனக்கு வருத்தம் இல்லை.

இவருக்கு கீழ் கடையில் மூன்று தம்பி, மூன்று தங்கைகள்.

எல்லாரும் என் குழந்தைகளாக வளர்த்தேன்.

நிறைய கஷ்டம் தான். ஆனால், அந்த பெருமாள் கோவில் கோபுரத்தை பார்த்தால் எதுவுமே கஷ்டமாக தெரியாது.

எல்லாரும் கல்யாணம் பண்ணி, விட்டுச் சென்றார்கள்.

என் கணவரும் சீக்கிரமே இறக்க, நான் தனித்து விடப்பட்டேன்...

இல்லை இல்லை... நாராயணன் துணை என்னிக்கும் உண்டு.

"எனக்கு இப்போது 87 வயது.

ஒருவருமே என்னை வைத்துக்கொள்ளத பொது, என் கடைசி ஓர்ப்படி, என்னை பார்த்துக் கொள்கிறாள்.

அவளுக்கு ஒரே பெண். காலில் ஊனம். கஷ்டப்பட்டு வேலைக்குப் போய் சம்பாதித்து வருகிறாள்;

கல்யாணம் வேண்டாம் என்று தீர்மானமாக இருக்கிறாள்.

என் ஒர்ப்படிக்கு (சுமார் 20 குடம் உள்ளே கொண்டு கொட்டியவருக்கு) 77 வயது.

நான் திண்ணையிலே தான் வாசம்.

என்னால் முடிந்தது, பகவான் தெம்பு கொடுத்திருக்கும் கையால் தண்ணி அடிப்பது.

சமையல் எல்லாம் ஒர்ப்படிதான்.

எனக்கு ஒரே வேளை, 12 மணிக்கு கொஞ்சம் மோர் சாதம். அவ்வளவு தான் என்னால் சாப்பிட முடியும்.

ராத்திரி ஒண்ணும் சாப்பிட மாட்டேன்"

"எனக்கு என்ன குடுப்பினை பாரும்மா...

நாள் முழுதும், கோவில் தரிசனம். அவன் வந்து அழைத்துப் போவான். அது வரை இப்படியே என் காலம் ஓடும்"

நான் ... "பாட்டி, உங்களுக்கு ஒருத்தரும் செய்ய வில்லை என்ற வருத்தம் இல்லையா ?"

பாட்டி... "கண்ணம்மா.. யார் செய்தா, யார் செய்யாட்டா என்ன.

பெருமாள் என்னை இங்கு அனுப்பிய காரணம் , இந்த வீட்டை சேர்ந்தவர்களுக்கு செய்ய வேண்டும் என்பது.

எல்லாம் செய்து விட்டேன்.

திருப்தி தான்; குறை இல்லை.

அதே பெருமாள், என்னை பாத்துக்க ஒரு ஒர்ப்படியையும், ஒரு பெண்ணையும் கொடுத்திருக்கான்.

நீயும், வாழ்க்கையில் எந்த நேரத்திலும் குறை, கவலை படாதே.

எல்லாம் பெருமாள் பாத்துப்பான்.

நீ செய்யும் செயல் அத்தனையும் நீ செய்ய வில்லை. கோவிந்தன் செய்ய வைக்கிறான்.

இதில் பிற மனுஷாளை எப்படி குத்தம் சொல்ல முடியும்?" நிம்மதியாக இரு.

பாட்டி இன்னும் ஏதேதோ... பாசிடிவாக பேசினாள் -

இத்தனைக்கும் பள்ளிக்குப் போய் படித்தவள் இல்லை. அனுபவப்பாடம்;

புரிந்து கொண்ட வாழ்க்கை தத்துவம்.

கடைசியாக நான், "பாட்டி பணம் தரேன்; வாங்கிக்கறேளா" என்றேன்...

பாட்டி சிரித்தாள். அர்த்தம் பொதிந்த சிரிப்பு.

"பணமா, எனக்கா, எதுக்கு; நான் என்ன பண்ணப் போறேன்"

"பாட்டி, உங்களுக்கு வேண்டியது ஏதாவது, அல்லது சாப்பிட... " என்று இழுத்தேன். அதற்கும் சிரிப்பு.

"கோவிந்தன் என் பெண் மூலமாக என்னை பார்த்துப்பான். இதே திண்ணையில், அவனை பார்த்துக்கொண்டே ஒரு நாள் போய் சேருவேன்.

அந்த நாளைக்காக நான் நொந்து போய் காத்திருக்க வில்லை.

அதுவும் பெருமாளுக்கு தெரியும் என்னும் போது, நான் எதுவுமே யோசனை செய்ய அவசியம் என்ன.

எனக்கு பணமெல்லாம் வேண்டாம்"

என் புத்தி...உள்ளே போய், (ரொம்ப சிறிய போர்ஷன்) ... ஒரே ரூம்; கொஞ்சம் தடுத்து சமையல் அறை.

"மாமி, உங்க கிட்ட பழைய நாள் பாத்திரம் எல்லாம் இருக்கா ? எனக்கு ஆசை " என்றேன்.

மாமி சிரித்துக் கொண்டே, "நானே பாத்திரம் தேய்ப்பதால், அதெல்லாம் கட்டி ஆளமுடியாமல் எல்லா வற்றையும் போட்டு விட்டேன். தேவைக்கு வேண்டியது மட்டும் இருக்கு"

பாட்டியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன்; கிளம்ப மனமே வரல்ல;

"பாட்டி, உங்க கிட்ட பேசினா, மனது லேசாகிறது !!"

"முடிந்தால் வாயேன்; எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசு" என்று வழி அனுப்பினாள்.

ஒரு சலிப்பு, அலுப்பு கிடையாது;

ஆசைகள் கிடையாது;

அந்த திண்ணையில் ஒரு தவம் மாதிரி இருக்கிறாள்.🙏🙏🙏
யார் சொன்னது ரிஷிகள் காட்டில் தான் வாழ்கிறார்கள் என்று. 🙏🙏
கும்பகோணம் திருநாகேஸ்வரம் திருவிண்ணகரம் ஸ்ரீ ஒப்பிலியப்பன் பெருமாள் திருவடிகளே சரணம் ... !!!

பெருமாளுக்கு பக்தர்களை சோதித்து தடுத்தாட் கொள்வதில் அலாதி விருப்பம்.
துளசிவனத்தில் தோன்றிய குழந்தையை பூதேவி என்ற திருநாமமிட்டு வளர்த்துவந்தார் மார்க்கண்டேய முனிவர்.
பெண் சற்று வளர்ந்ததும் பெருமாள் கிழவர் வேடத்தில் வந்தார்.
மார்கண்டேயரிடம் " உங்கள் பெண் அழகாக இருக்கிறாள் . அவளை எனக்கு மனம் முடித்து வையுங்கள் " என்கிறார்.

என்னடா இது கிழவர் வந்து பெண் கேட்கிறாரே என்று திடுக்கிட்டார். சமாளித்து கொண்டு " பெரியவரே ! என் பொண்ணுக்கு உப்பு போட்டுக்கூட சமைக்க தெரியாது ... அவளை எப்படி திருமணம் செய்வீர்கள் ? " என்கிறார் .

" பரவாயில்லை ... நான் உப்பில்லாமல் சாப்பிடுகிறேன் சீக்கிரம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் " என்கிறார் கிழவர் ஆகிய பெருமாள்..

இவரை எப்படி சமாளிப்பது என்று மார்கண்டேயே முழித்தபோது ஸ்ரீ நிவாஸர் தம் திரு உருவத்தை காண்பித்து தான் சாட்ஷாத் மகாவிஷ்ணுவே என்று அருளி முன்பு வாக்கு கொடுத்தபடி திருமகளை திருமணம் செய்யவே எழுந்தருளியதாக கூறினார்.

மகா சந்தோஷத்துடன் மார்க்கண்டேயர் சம்மதித்தார். பெருமாளுக்கு வலது புறம் கீழே மண்டியிட்டு வணங்கும் திருக்கல்யாண கோலத்துடன் அருளும் (தனி சன்னதி கிடையாது) தாயார் பூமா தேவி பூமி நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர்களுக்கு இடது புறம் பெருமாளுக்கு கன்னிகாதானம் செய்து வைத்த மார்க்கண்டேய மகரிஷி அமர்ந்த நிலையில் வணங்கும் நிலையில் உள்ளார்.

இத்தலத்தில் இன்றும் பிரசாதங்களில் உப்பு சேர்ப்பதில்லை. எனவே உப்பு சுவையை நீக்கிய பெருமாள் என்ப தால் " லவண வர்ஜித வேங்கடேசன்" (உப்பினை விலக்கிய பெருமாள் ) என்கிறது புராணம். உப்பு இல்லாத பெருமாள் - உப்பில்லா அப்பன் - உப்பிலியப்பன் என்று அழைக்கப்படுகிறார்.
108 திவ்ய தேசங்களில் இந்த திவ்ய தேசத்தில் மட்டும் தான் உப்பில்லாத பிரசாதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#கைகேயி கொடியவளா?

ராமாயணம், நம் எல்லோருக்கும் தெரிந்த பக்தி கதை. அதில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் நமக்கு மிகப் பரிச்சயமானவர்கள்தான். ஆனால், அந்தக் கதையில் இடம்பெறும் சம்பவங்கள், அவற்றில் பொதிந்து கிடக்கும் அர்த்தங்கள், கதாபாத்திரங்களின் உண்மைப் பரிமாணம் ஆகியவை பல்வேறு காலங்களில், பல்வேறு காவிய கர்த்தாக்களாலும் உபன்யாசகர்களாலும் நமக்குப் பலவிதமான முறைகளில் விவரித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு புதிய கோணத்தில் சொல்லப்பட்ட கைகேயியின் கதையைப் பார்ப்போமா?

தசரதனின் மூன்று மனைவியரில் இளையவள், கைகேயி. #அழகே உருவானவள். வீரமும் #விவேகமும் கொண்டவள். தன் அன்பாலும் பாசத்தாலும் தசரதன் உள்ளத்தில் மட்டும் அல்லாமல், அனைவரின் உள்ளத்திலும் இடம்பெற்றவள். எல்லாவற்றுக்கும் மேலாக, தன் மகன் பரதனிடத்தில் காட்டும் அன்பையும், பரிவையும்விட, #ஸ்ரீராமனிடம் அவள் அதிக அளவு அன்பும் #பாசமும் கொண்டிருப்பதை நினைத்துப் பெரிதும் மகிழ்ந்தான் தசரதன். ஆகவே, அவளிடம் அதிக மதிப்பு வைத்திருந்தான் தசரதன்.

இத்தனை உண்மைகளுக்கு நடுவில், ஒரே இரவில் அவள் மனம் மாறி, 'ராமனுக்குப் பதிலாக என் மகன் பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும்’ என்றும், '14 வருடங்கள் ஸ்ரீராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும்’ என்றும் தசரதனிடம் இரண்டு வரங்களைக் கேட்டுப் பெற்றாள் கைகேயி. ராமனுக்கு மட்டுமின்றி, தன் மகன் பரதனுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு கொடிய செயலை கைகேயி செய்திருப்பாளா என நினைத்துப் பார்த்தால், அதனை அப்படியே ஏற்க மனம் வரவில்லை.

மந்தரை என்றொரு #கூனி. கைகேயியின் தாதியாக இருந்தவள். அவளிடம் அரை மணி நேரம் பேசியதன் விளைவு... விவேகம் மிக்க கைகேயி மனம் மாறி, ஸ்ரீராமனைக் காட்டுக்கு அனுப்ப விரும்பினாள் என்பது உண்மையானால், அவளது தாய்மையின் உயர்வே அழிந்துவிடுகிறதே!

ஏதோ பேராசையின் காரணமாகத் தன் மகனுக்கு அரசு பதவி தேடித் தரவேண்டும் என்று விரும்பி, அதன் பொருட்டு, கைகேயி தசரதனிடம் வரம் கேட்டிருக்கலாம்; வாதாடி, பரதனுக்கு முடிசூட்ட நினைத்திருக்கலாம் என்பதையாவது ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளலாம். ஆனால், பிரியத்துக்குகந்த ராமனைக் காட்டுக்கு அனுப்பும்படி சொல்ல, அந்தத் தாய்க்கு எப்படி மனம் வந்திருக்கும்? சற்றே சிந்தித்துப் பார்க்க, கைகேயி எத்தகையவள் என்பதை விளக்கும் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

சம்பராசுரன் என்ற அசுரனுடன் தசரதன் ஒருமுறை போர் புரிந்தான். அப்போது, அவனுடைய தேருக்குச் சாரதியாக இருந்தாள் வீராங்கனை கைகேயி. தேரின் அச்சு முறிந்த நிலையில், தன் விரலையே அச்சாணியாகக் கொடுத்து, தன்னுயிரைப் பணயம் வைத்து, தசரதன் உயிரைக் காத்தாள். அவளின் #பதிபக்தி மற்றும் தியாகத்தில் சிலிர்த்த தசரதன், இரண்டு வரங்களை அவளுக்கு அளித்தான். பேராசைக்காரியாக அவள் இருந்திருந்தால்... 'தானே பட்ட மகிஷியாக வேண்டும்’ என்றும், 'தனக்குப் பிறக்கும் குழந்தைக்கே முடிசூட்ட வேண்டும்’ என்றும் அப்போதே வரம் கேட்டிருக்கலாம். ஆனால், அவள் அப்படிச் செய்யவில்லை. கணவனுக்குச் செய்த சேவை, தன் #கடமைதானே என்று உணர்ந்து, 'வரங்கள் இப்போது வேண்டாம். தேவைப்பட்டால் பின்பு எப்போதாவது கேட்டுப் பெற்றுக்கொள்கிறேன்’ என்று பெருந்தன்மையாகக் கூறிவிட்டாள். அப்படிப்பட்டவளா இந்தக் கொடிய வரங்களைக் கேட்டிருப்பாள்?

ஆராய்ந்து பார்த்தால், இதற்கு ஏதோவொரு மூல காரணம் இருந்திருக்க வேண்டும், அதற்குப் பின்னே எவரும் அறியாத சம்பவங்கள் சில புதைந்து கிடக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஒரு முறை தசரதன் வேட்டையாடச் சென்றபோது, தடாகம் ஒன்றில் தண்ணீர் முகந்து செல்ல வந்திருந்த சிறுவன் சிரவணகுமாரன் என்பவன் மீது, தெரியாமல் அம்பு எய்திவிட்டான். கமண்டலத்தில் தண்ணீர் முகந்த சப்தம், யானை தண்ணீர் குடிப்பது போலக் கேட்டது. அதனால் தூரத்திலிருந்து தசரதன் எய்த 'சப்தவேதி’ என்ற பாணம், ஒலி வந்த திக்கை நோக்கிச் சென்று, சிறுவன் உயிரைப் போக்கிவிட்டது. உயிர் துறக்குமுன் அந்தச் சிறுவன் வேண்டிக்கொண்டது போல, அவன் சடலத்தை எடுத்துக்கொண்டு, கண்ணில்லாத அவனுடைய வயோதிகத் தாய்- தந்தையிடம் சென்று, நடந்ததைக் கூறினான் தசரதன். மகனை இழந்த துயரத்தில் அந்தப் பெற்றோர் தசரதனுக்குக் கடும் #சாபமிட்டுவிட்டு, உயிர் துறந்தனர். 'எங்களைப் போலவே புத்திரனைப் #பிரிந்து, அந்தச் சோகத்தில் நீ உயிர் துறப்பாய்’ என்பதே அந்தச் சாபம். தசரதன் உள்ளத்தைக் கரையான் போல் அரித்துக் கொண்டிருந்த சம்பவம் இது.

வேட்டைக்குச் சென்று திரும்பிய தசரதன், சொல்லவும் மெல்லவும் முடியாமல், கலங்கித் தவித்ததை தனது விவேகத்தால் ஊகித்த கைகேயி, தசரதனின் தேர்ப் பாகன், அந்தரங்கக் காவலன் ஆகியோரைக் கூப்பிட்டு, சாமர்த்தியமாக விசாரித்து, நடந்த உண்மைகளை ஓரளவு தெரிந்து கொண்டாள்; சாபம் பற்றிய உண்மை தெரிந்து, கைகேயி பதறினாள்; #துடித்தாள்.

புத்திரன் எனப் பொதுப்படையாகவே குறிப்பிட்டதால், அது தசரதன் பெற்ற புதல்வர்களில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், அல்லவா? இதன் உண்மைகளை இன்னும் ஆராய்ந்து அறிய விரும்பினாள் கைகேயி. அந்தரங்கமாக, ஆஸ்தான ஜோதிடர்களை அழைத்தாள். தசரதனின் ஜாதகத்தையும், குழந்தைகளின் ஜாதகத்தையும் கொடுத்து ஆராயச் சொன்னாள். பொதுவாக, விண்ணில் உள்ள கிரகங்களது அமைப்பின்படி, நாட்டின் நிலை குறித்தும் விளக்கப் பணித்தாள். அந்தக் கால கட்டத்தின்படி, கிரக நிலைப்படி, அயோத்தி சிம்மாசனத்தில் எவர் அமர்ந்தாலும், அவர்கள் சில நாட்களில் மரணம் அடைய நேரும் என ஜோதிடர்கள் கூறினார்கள்.

'புத்திரனைப் பிரிந்து’ என்கிற சாபம் 'புத்திரன் இறந்து’ என்கிற அர்த்தத்தில் இடப்பட்டாலும், இது குறித்து சாஸ்திர விற்பன்னர்கள் மற்றொரு விளக்கமும் பரிகாரமும் சொன்னார்கள். ஒருவேளை, புத்திரன் தந்தையை விட்டு வெகுதூரம் பிரிந்து சென்றுவிட்டால், அதனால் புத்திரன் உயிர் பிழைத்துவிடுவான்; தந்தை மட்டும் அந்தப் பிரிவால் உயிர் துறக்க நேரிடும் எனும் விளக்கம், ஜோதிட பண்டிதர்களால் தரப்பட்டது. ஆக, தசரதன் உயிர் துறப்பது சாபத்தால் ஏற்பட்ட, தவிர்க்க முடியாத நியதி எனும் உண்மையை உணர்ந்தாள் கைகேயி. அதே நேரம், மைந்தன் ஸ்ரீராமனையாவது #காப்பாற்றியாக வேண்டும் என நினைத்தாள்.

மனைவியின் கடமையைவிட, #தாய்மையின் அன்புதான் அங்கே தலை தூக்கி நின்றது. ஸ்ரீராமனை மட்டும் தசரதனிடமிருந்து பிரிக்க நினைத்தால், அதற்குச் சரியான காரணம் காட்ட வேண்டுமே? அதற்காகத் தியாகமும் அன்பும் உருவான அந்தத் தாய், தன்னை இந்த உலகம் 'பேராசைப் பேய்’ என்று நிந்தித்தாலும் பரவாயில்லை என மனத்தை திடப்படுத்திக் கொண்டு, ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தாள். பரதனுக்கு முடிசூட்ட வேண்டினாள்; அதற்குத் தடையில்லாதபடி, ஸ்ரீராமனை காட்டுக்கு அனுப்பச் சொல்வது போல் இருக்கட்டும் என முடிவு செய்தாள். அப்படியே வரமும் கேட்டாள். அது மட்டுமா? ஒருவேளை, சக்கரவர்த்தியாக தசரதனே தொடர்ந்து நீடித்தால், ஜோதிடப்படி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மன்னன் உயிர் துறக்க நேரிடுமே?! அதையும் எப்படியாவது தடுத்துவிட முடியாதா என ஏங்கினாள். எனவே, கணவனையும் ஸ்ரீராமனையும் காப்பதற்குத் தன் மகனைத் தியாகம் செய்யத் துணிந்தாள். ஆகவே, பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வலியுறுத்தினாள்.

'பரதனுக்கு முடிசூட்டிவிடுகிறேன். ஆனால், ஸ்ரீராமனை #காட்டுக்கு அனுப்ப வேண்டாமே’ எனக் கெஞ்சினான் தசரதன். ஆனால், கைகேயியோ பிடிவாதமாக இருந்தாள். ஸ்ரீராமன், அவளுக்கு மட்டும் குழந்தை அல்ல; அயோத்தியின் குழந்தை. அவன் அவதாரப் பணி நிறைவேற வேண்டும். ராவணனைப் போன்ற அரக்கர்களை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட அவதரித்தவன் அல்லவா ஸ்ரீராமன்! ஆகவே, அவன் காக்கப்பட வேண்டும். எனவே, #விதிப்படி தனக்கு இடப்பட்ட பணியைச் செய்தாள் கைகேயி.

'பாவி கைகேயி சதி செய்து விட்டாளே!’ என்று எல்லோரும் அவளை நிந்தித்தனர். சீதையும் லட்சுமணனும் பின் தொடர, மரவுரி தரித்து, அயோத்தியை விட்டு ஸ்ரீராமன் தவக் கோலத்தில் கானகம் புறப்பட்டான். அவனைக் காட்டில் விட்டுவர, ஒரு ரதம் புறப்பட்டது. அந்த ரதம், வீதியில் நகர முடியாதபடி மக்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டு, அழுது புலம்பியது. ஊரே அழுது கொண்டிருந்தது. ஒருத்தியின் மனதில் மட்டும் ஸ்ரீராமனைக் #காப்பாற்றிவிட்ட பெருமிதம் நிலைத்திருந்தது. அவள் கண்களிலிருந்தும் #கண்ணீர் சிந்தியது. அது ராமனுக்காக அல்ல; புத்திர சோகத்தால் உயிர் நீத்து, தன்னை நிரந்தரமாகப் பிரியப் போகும் கணவன் தசரதனுக்காக!

ஸ்ரீராமன், அவதாரப் பணியைத் தொடங்கி விட்டான்; ராவணன் #அழிவான்; துயர் தீரும் நேரம் வந்துவிட்டது என தேவர்களெல்லாம் பூமாரிப் பொழிந்தனர். அரக்கர்கள் அழிந்து, ராமனால் நல்லோர் காக்கப்படுவர் என்பதால், அவனைக் காட்டுக்கு அனுப்பிய கைகேயியை அவர்கள் மனதார, மானசிகமாக #வாழ்த்தினர்.

ஊரார் பழித்தனர்; உலகோர் நிந்தித்தனர்; பெற்ற மகன் பரதனோ, தாயின் தியாகம் தெரியாமல், அவளை வெறுத்தான். ஏசினான். ஆனால், ஸ்ரீராமனுக்கு மட்டும் தன் அன்புத் தாய் கைகேயி செய்த தியாகம் #தெரியும். ஆரண்ய முனிவர்களுக்கெல்லாம் அவள் பெருமை தெரியும். தேவர்களுக்கெல்லாம் அவள் செய்த உதவி புரியும்!

இப்போது சிந்தியுங்கள்... கைகேயி #கொடியவளா..?
*அரிச்சந்திரன்* *முற்பிறவி ...*

உண்மையின் உறைவிடமாக இருந்தவன் அரிச்சந்திரன் ஆனால் அவனை விஸ்வாமித்திர மகரிஷி எண்ணிலடங்கா தொல்லைகளுக்கு உட்படுத்தினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஏன் அப்படி செய்தார் என்பதை இங்கு காண்போம் .

காசி நகரை காசிராஜன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான் காசிவிஸ்வநாதரிடத்தில் மிகுந்த பக்திகொண்டவன் . அவனுடைய மகள்  மதிவானி அழகும் , அறிவும் ஒருங்கே பெற்றவள் . பருவ வயதை அடைந்த மகளுக்கு  சுயம்வரம்  செய்ய முடிவு செய்து மன்னர்களுக்கு சுயம்வர ஓலை அனுப்பினான் . அதனை ஏற்று வந்த மன்னர்களில் மகத நாட்டு மன்னன் திரிலோசனனும் ஒருவன் மிகுந்த அழகும் கம்பீரமும் உடையவன் .

சுயம்வரநாளும் வந்தது வந்திருந்த அனைவரையும் வரவேற்று தன்னுடைய நிபந்தனையை கூறினான் , கூண்டினுள் அடைக்கப்பட்ட சிங்கத்தைக் காட்டி இதை யார் வெற்றி கொள்வாரோ அவருக்கு என் மகள் மாலையிடுவாள் என்று கூறினான் . அந்த சிங்கத்தின் தோற்றம் பார்ப்பவரை அச்சப்பட வைத்தது யாவரும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் திரிலோசனன் சிறுத்தும் அச்சமின்றி கூண்டுக்குள் சென்றான் காண்பவரையும் திகைக்க செய்யும் அளவுக்கு பலமான சண்டை சிங்கத்துக்கும் அவனுக்கும் நடந்தது முடிவில் சிங்கத்தை வென்றான் திரிலோசனன் .

 அறிவித்தபடி மதிவானி , மங்கள வாத்தியங்கள் ஒலிக்க வேதங்கள் முழங்க ஆன்றோர் ஆசிகளுடன் திரிலோசனனை மணம் புரிந்தாள் . அனைவரும் ஆனந்தத்துடன் இருந்த அதே நாளில் திரிலோசனன் மாலை வேளையில் கங்கையில் நீராடி விசுவநாதரை வழிபட்டு கொண்டிருக்கும் வேளையில் அவன் மீது பொறாமை கொண்ட மன்னன் ஒருவன் பின்புறமாக வந்து வாளால் அவனை வெட்டிக் கொன்று விட்டான் . இந்த துயரத்தைக் கேள்விப்பட்ட மன்னனும் மக்களும் மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்தனர் , மதிவானி மயக்கம் அடைந்தாள் , மயக்கம் தெளிந்த பின் எழுந்தவள் துக்கம் தாளாது இனியும் நாம் உயிரோடு இருத்தல் ஆகாது என முடிவெடுத்து தன்னை மாய்த்துக் கொள்ள கங்கையில் குதித்தாள்  .

 அப்போது அங்கு நீராட வந்த கௌதம முனிவர் நீரில் தத்தளிக்கும் மதிவானியை காப்பாற்றி கரை சேர்த்தார் . மதிவானி முனிவரின் காலில் விழுந்து வணங்கினாள் . கௌதம முனிவர் தீர்க்க சுமங்கலியாக இருப்பாய் என ஆசிர்வதித்தார் . இதைக் கேட்ட மதிவானி முனிவரிடம் நடந்ததைக் கூற அவரும் என் வாக்கு பொய்க்காது மகளே , நடந்ததை மறந்து தவத்தில் ஈடுபடு உன் இந்த பிறவி முடிந்து அடுத்த பிறவியில் இதே மாங்கல்யத்துடன் நீ பிறப்பெடுப்பாய் இந்த மாங்கல்யம் யார் கண்களுக்கும் புலப்படாது . உன் கணவன் திரிலோசனன் அடுத்த பிறவியில் சூரிய குளத்தில் பிறப்பான் , உன் சுயம்வர நேரத்தில் அவன் கட்டிய மாங்கல்யம் அவனுக்கு புலப்படும் . நீங்கள் திருமணம் புரிந்து பல்லாண்டு காலம் வாழ்வீர்கள் என்று அருளாசி செய்தார் .
                 
கௌதம முனிவரின் ஆலோசனையின் படி அவரின் ஆசியோடு அவரின் ஆசிரமத்திலேயே தன தவத்தை மேற்கொண்டாள் . சில காலத்தில் அவளுடைய இந்த பிறவிக்கு முடிவுக்கு வந்தது . அடுத்த பிறவியில் மதிவானி , சந்திரமதியாகவும் , திரிலோசனன் அரிச்சந்திரனாகவும் பிறந்தனர் . சந்திரமதி சுயம்வர நாளில் யார் கண்ணுக்கும் புலப்படாத மாங்கல்யம் அரிச்சந்திரனுக்கு தெரிய அரிச்சந்திரன் சந்திரமதியை மனம் புரிந்தான் . இனிதான இல்லறத்தின் பொருட்டு ஒரு ஆன் மகவை ஈன்றெடுத்தாள் சந்திரமதி அக்குழந்தைக்கு லோகிதாசன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள் .

 இப்படி இருக்கும் பொழுது ஒரு நாள் தேவலோகத்தில் இந்திரன் தன்னுடைய சபையினால் பூமியில் உள்ள மன்னர்களில் யார் சிறந்தவன் என்று கேட்க அங்கு இருந்த வசிஷ்ட முனிவர் , சந்தேகமென்ன என் சிஷ்யன் அரிச்சந்திரன் சிறந்தவன் தன தலையே போனாலும் சத்தியத்தை விடாதவன் அவனே சிறந்தவன் என்றார் . அதை மறுத்த விஸ்வாமித்திரர் , சந்தர்ப்பங்கள் வந்தால் அரிச்சந்திரன் சத்தியத்தை மீறுவான் அதை நான் நடத்திக் காட்டுகிறேன் என்று கூறினார் .

 கூறியதைப்போல அரிச்சந்திரன் வாழ்க்கையில் பெரும் புயலென துன்பங்களைத் தந்தார்.  அவனுடைய ஆட்சி இழந்து மனைவி , மகனை பிரிந்து மயானத்தில் பிணம் எரிக்கும் நிலைக்கும் சென்றான் அப்படி இருந்த போதிலும் தன்னுடைய சத்தியத்தை அவன் காத்து நின்றான் . மகிழ்ந்த விசுவாமித்திர மகரிஷி அவனுக்கு அருள் செய்து இழந்த அனைத்தையும் அவனுக்கு வழங்கி ஆசி புரிந்தார் . அவனும் நல்லாட்சி புரிந்து நற்கதியை அடைந்தான் . அது சரி எதற்காக தவத்தில் சிறந்த விஸ்வாமித்திரர் அரிச்சந்திரனை இவ்வளவு துன்பத்திற்கு ஆளாக்க வேண்டும் .

முற்பிறவியில் திரிலோசனனான அரிச்சந்திரன் , விசுவாமித்திர மகரிஷியிடம் தனக்கு பிறவா நிலையை அருள வேண்டும் சுவாமி என்று பணிந்து நின்றான் . அதற்கு அவர் , திரிலோசனா ! உன் ஊழ்வினையின்கண் நீ பல பிறப்பெடுக்க வேண்டி உள்ளது அவை அனைத்தையும் ஒரே பிறவியில் நீ அனுபவித்து சத்தியம் தவறாமல் வாழ வேண்டும் முடியுமா ? என்று கேட்டார் சம்மதித்த திரிலோசனன் , அரிச்சந்திரனாக பிறப்பெடுத்து தன்னுடைய வினைகளையெல்லாம் ஒரே பிறவியில் அனுபவித்து பிறவாத பெரும் பேரை அடைந்தான் . அவனை துன்புறுத்த அவனுக்கு சோதனைகள் இல்லை அவன் வினைகளை கழிக்கவே சோதனைகளை தந்தார் விசுவாமித்திர மகரிஷி .

 அரிச்சந்திரன் அளவுக்கு துன்பபட்டவர் யாரும் இல்லை , அவனும் தன்னுடைய வினையை கழிக்க துன்பத்தை மகிழ்சசியாய் ஏற்று கொண்டதைப்போல நாமும் நம் துன்பங்களை எல்லாம் வினைகளை ஒழிக்க ஈசன் தந்தது என்று மகிழ்வுடன் ஏற்று அவன் பாதமே தஞ்சம் என்று இருந்தால் எந்த துன்பமும் , தீவினையும் நம்பால் அணுகாது சத்தியம் .
*அருகம்புல் விநாயகருக்கு உரியது*

மழை இல்லா விட்டாலும் கடுமையான கோடையைக் கூட தாங்கி நிற்கும். வெயிலில் காய்ந்து போகுமே தவிர அழிந்து போகாது. சின்னதாக மழை பெய்தால்கூட போதும் பசுமையாக துளிர்விடும்.  சாலையோரங்களில் கூட எளிதாக முளைக்கும். எல்லா காலங்களிலும் காணப்படும்.

சரி இப்போது எதற்கு அருகம்புல் புராணம் என்கிறீர்களா?

எத்தனை துன்பங்கள் வந்தாலும் நல்லவர்கள் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருப்பார்கள். அவர்களை இறைவனின் கருணை என்னும் மழை வந்து காப்பாற்றி விடும் என்று ஆன்றோர்கள். அருகம்புல்லை வைத்து நம்மை தேற்றுவார்கள். காட்சிக்கு எளிமையாகவும், மருத்துவ குணங்கள் அதிகமும் கொண்ட அருகம்புல் குளிர்ந்த தன்மை கொண்டது. உடல் சூட்டை  அகற்றும், சிறுநீர் கடுத்தால் பெருக்கி குணமாக்கும், நாள்பட்ட குடல் புண்களைக்கூட ஆற்றிவிடும், ரத்தத்தை தூய்மையாக்கும், கண்பார்வையை தெளிவாக்கி குளுமை தரும். ஆற்றல்கள் பல கொண்ட இந்த அருகம்புல்லைத்தான் கணபதி தனக்கு விருப்பமான மாலையாக ஏற்றுக்கொண்டார். எங்கும் எப்போதும் கிடைக்கும் அருகம்புல்லை  அர்ப்பணித்தால் போதும் கணபதி மகிழ்ந்து கேட்கும் வரங்களை கொடுத்துவிடுவார் என்கிறது புராணம். அது சரி எத்தனையோ மலர்களும், இலைகளும் இருக்க கணபதி ஏன் அருகம்புல்லை சூட்டிக்கொண்டார். அதற்கும் ஒரு புராண வரலாறு உண்டு அதை காண்போம்.. வாருங்கள்..

அனலாசுரன் என்பவன் யமனுடைய மகன். வேண்டாத சேர்க்கையினால் தீயவனாகி சாபம் பெற்றான். இதனால் மூர்க்கனாக மாறி தேவர்களை இம்சித்து வந்தான். வரங்கள் பல பெற்றதாலும், பிறப்பிலேயே அவனது உடல் பெரும் அனலைக் கக்கியதாதால் அவனுக்கு அருகில் கூட யாரும் செல்ல முடியவில்லை.  செல்பவர்களை எல்லாம்  சாம்பலாக்கினான் அனலாசுரன். என்ன செய்வது என்று புரியாத  தேவர்கள் பிள்ளையாரை வேண்டி அவரது உதவியை நாடினர். கணநாதரும் அவனை ஒழித்து தேவர்களை காக்க அவனிருக்கும் இடம்  சென்றார். அங்கு கணபதியின் கணங்கள் எல்லாம் வெம்மை தாங்காமல் ஓலமிட்டன.  இதனால் கணபதியின் கோபம் எல்லை கடந்தது.

அனலாசுரனை பெரும் அனல் வடிவம் கொண்டு கணபதி தாக்கினார். அந்த அசுரன் ஓய்ந்துபோன தருணத்தில் அவனைப் பிடித்து விழுங்கி விட்டார் கணபதி. காரணம் அவனது பூத உடல் கூட பெரும் வெப்பம் கொடுத்தது உயிர்களை வாட்டும் என்பதுதான். அனலோடு அவன் விழுங்கப்பட்டதால், கணபதியின் வயிறு எரிந்துகொண்டிருந்தது. உஷ்ணம் தாங்காத கணநாதர் சக்தியை எண்ணி வணங்கினார். தேவர்கள் யாவரும் கணநாதரை குளிர்விக்கும் வகையில் என்ன என்னவோ செய்துபார்த்தார்கள். கங்கை நீரை ஊற்றினார்கள். பனிப்பாறையைப் பெயர்த்தெடுத்து கணபதியின் தலையில் வைத்தார்கள். எதிலுமே தீ தணியவில்லை. இதனிடையே, சப்த ரிஷிகள் எனப்படும் அத்திரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் ஆகிய எழுவரும் சேர்ந்து ஒரு சாண் அளவுள்ள இருபத்தொரு அருகம்புற்களைக் கொண்டு வந்து கணபதியின் தலையில் வைத்தனர். இதனால் கணபதியின் உடல் குளிர்ந்து,  வயிற்றில் இருந்த அனல் தணிந்தது. இதனால் விநாயகர் மகிழ்ந்தார். தனக்கான பூஜைப்பொருள் அருகம்புல்லே என்று மனம் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார். 'இனி தன்னை பூஜிக்க இருப்பவர், வரத்தைப் பெற விரும்புவோர் அனைவரும்  அருகம்புல் கொண்டு வணங்கினால் மகிழ்வேன்' என்று வரமளித்தார் பிள்ளையார். அன்று முதல் கணபதியின் பூஜைக்கு உரியதானது அருகம்புல். தூர்வை, மேகாரி, பதம், மூதண்டம் என பல பெயர்களால் சிறப்பிக்கப்படும் அருகம்புல் கணநாதருக்கு மட்டும் அல்ல, மூலிகையாக எடுத்துக்கொண்டால் நமக்கும் நலம் பயப்பவை தான்.
*நமசிவாய.*
இராத் தங்கார்

மதுரையில் பிறந்த பெண்களும், மதுரைப் பெண்ணைக் கட்டிக்கொண்ட மாப்பிள்ளைகளும் மதுரையிலிருந்து வேறு ஊர்களுக்குச் சென்றால், இரவில் அந்த ஊர்களில் தங்கமாட்டார்கள்.  எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, இரவு தூங்குவதற்கு மதுரைக்கு வந்து சேர்ந்துவிடுவர்.  இந்தப் பழக்கம் மதுரையில் தொண்டுதொட்டு இருந்து வருகிறது.  இதற்குக் காரணம் என்னவென்று கேட்டால், எங்களது அன்னை அருள்மிகு மீனாட்சியம்மனும், அப்பன் சொக்கநாதனும் எந்த ஊருக்குச் சென்றாலும், அந்த ஊரில் இராத் தங்கமாட்டார்கள்.  இரவுவோடு இரவாகப் புறப்பட்டு மதுரை வந்து சேர்ந்துவிடுவர்.  எனவே நாங்களும் எந்த ஊருக்குப் பயணமானாலும் அந்த ஊரில் இரவு தங்காமல் மதுரைக்குத் திரும்பிவிடுவோம் என்று விளக்கம் கூறுகின்றனர். மதுரை அருள்மிகு மீனாட்சியம்மையும், அப்பன் சொக்கனாதனும் எந்த ஊருக்குச் சென்றனர்?  ஏன் இரவோடு இரவாக மதுரைக்குத் திரும்பினர்?  என்ற வரலாற்றை அறிவோம்.மதுரைக்குத் தென்கிழக்கே 18கி.மீ. தூரத்தில் மதுரை-இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது ‘திருப்பூவணம்‘ என்னும் ஊர்.  இவ்வூர் இப்போது ‘திருப்புவனம்‘ என்று தவறாக அழைக்கப்படுகிறது.  மதுரையை மன்னர்கள் ஆட்சிசெய்த காலத்தில் திருப்பூவணமானது மதுரைமாநகரின் கிழக்கு எல்லையாக விளங்கியது.  இந்த ஊரில் பொன்னனையாள் என்ற நடனமாது வசித்து வந்தாள்.  திருப்பூவணம் கோயிலில் நாட்டிய இலக்கணப்படி சிவனது சந்நிதியின் முன்பு தினமும் நடனமாடுவாள்.  சிவனடியார்க்கு எல்லாம் நித்தமும் அன்னதானம் செய்து வந்தாள்.  அடியார் உணவருந்தி எஞ்சியதைத் தான் உண்டு வாழ்ந்து வந்தாள்.  இவ்வாறு வாழ்ந்து வரும் அவளது தூய பக்தியை உலகத்தோருக்கு எடுத்துக் காட்டவேண்டும் என விரும்பம் கொண்டான் அருள்மிகு திருப்பூவணன்.  “தேரில் எழுந்தருளுவதற்காகத் தங்கத்தினால் ஆன திருமேனியைச் செய்திட வேண்டும்“ என்ற எண்ணத்தை பொன்னனையாளின் உள்ளத்திலே விதைத்தான்.

“திருப்பூவணம் உற்சவமூர்த்தியைத் தங்கத்தில் செய்து கொடுக்க வேண்டும்“ என்ற எண்ணம் பொன்னனையாளின் உள்ளத்திலே ஊன்றி வளரத் துவங்கியது.  அவள், உற்சவமூர்த்தியின் வடிவத்தை மெழுகில் செய்து, அதன் வடிவத்தைத் தங்கத்தில் வார்த்து எடுக்கும் வகையில் “கரு“ செய்து வைத்திருந்தாள்.  ஆனால், நாள்தோறும் அவள் கையில் வரும் பொருள் எல்லாம் அடியார்க்கு அன்னதானம் செய்வதிலேயே செலவாகிக்கொண்டிருந்தது.  தங்கம் வாங்கும் அளவிற்கு அவளிடம் பணம் சேரவில்லை.

மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரர், குலபூடண பாண்டிய மன்னனுக்கு பொற்கிழி வழங்கிய கதையைப் பொன்னனையாள் படித்திருந்தாள்.  எனவே அவள் மதுரை சென்று அன்னை மீனாட்சியையும் சோமசுந்தரேசுவரரையும் வணங்கித் தனக்குத் தேவையான தங்கத்தைத் தந்து அருளுமாறு வேண்டிக் கொண்டாள்.  “எல்லாமே எனக்கு வேண்டும்“ என்று எல்லோரும் வேண்டிக் கொள்ளும் இக்கலிகாலத்தில், இவளோ, திருப்பூவணம் உற்சவமூர்த்திக்காக வேண்டிக்கொள்கிறாளே!, இவளுக்கு அருள வேண்டும் என்று அம்மையும் அப்பனும் திருவுள்ளம் கொண்டனர்.

பங்குனிமாதம் உத்திர நட்சத்திரம் முழுமதி (பௌர்ணமி) நாளன்று, திருப்பூவணத்தில் பொன்னனையாள் நடத்தும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அடியார் எல்லாம் திருவமுது செய்து கொண்டிருந்தனர்.  அங்கே சித்தர் வடிவில் சிவபெருமான் எழுந்தருளினார்.  ஓர் அடியார் வந்து அமர்ந்திருப்பதை அறிந்து கொண்ட பொன்னனையாள் அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி அன்னம் உண்ண வருமாறு அழைத்தாள்.  அவளது அழைப்பினை ஏற்றுக் கொண்ட சித்தரும், “நீ ஏன் மெலிந்து உள்ளாய்?“ என்று அன்போடு கேட்டார்.  “சாமி, நாள்தோறும் வரும் பொருள் எல்லாம் அன்னதானத்திற்கே செலவாகிவிடுகிறது.  உற்சவமூர்த்தியைத் தங்கத்தில் செய்ய வேண்டும் என்ற எனது ஆவல் ஒன்றே எனது உள்ளத்தின் உள்ளே இருந்து எனது உடலினை உருக்கிவருகிறது. வேறு எந்தவிதமான கவலையும் இல்லை, சாமி“ என்றாள். 

“தானத்துள் சிறந்த அன்னதானத்தைச் செய்து வருகிறாய்,  எனவே உன் பெயருக்கு ஏற்றபடி பொன்னால் ஆன உற்சவமூர்த்தியை நீ செய்திடுவாய்“ என ஆசி வழங்கினார்.   சித்தர் பெருமான் பொன்னனையாளை நோக்கி, “நீ உனது வீட்டில் உள்ள உலோகப் பாத்திரங்களை எல்லாம் இங்கே எடுத்துவா“ என்று கூறினார். சித்தரது  அணைப்படியே, பொன்னனையாளும் அவளது வீட்டிலிருந்து அனைத்து உலோகப் பாத்திரங்களையும் எடுத்துச் சென்று சித்தர் முன் வைத்தாள்.  சித்தரும் அப்பாத்திரங்களின் மேல் திருநீற்றைத் தூவி, “இத்தை  நீ இரா  எரியில் இட்டு எடுக்கின்  பொன்னாம்“ என்று அருளிச் செய்தார்.  அதாவது, இவற்றை நீ இன்று இரவு எரியும் உலையிலே இட்டால் பொன் கிடைக்கும் என்று கூறினார்.

சித்தரது வார்த்தைகளைக் கேட்ட பொன்னனையாளும், வந்திருப்பது மதுரையம்பதி முதல்வனே என்பதை உணராதவளாய்,  “சாமி தாங்களே இன்று இரவு இங்கே தங்கி, இவற்றையெல்லாம் உருக்கிப் பொன்னாக மாற்றித் தரவேண்டும்“ என விண்ணப்பித்தாள்.  அர்த்தசாம பூசைக்கு மதுரை சென்று விடவேண்டும் என்று விருப்பம் கொண்ட சிவபெருமான், பொன்னனையாளின் கோரிக்கைக்கு இசையவில்லை. அர்த்தசாம பூசைக்கு மதுரைக்கு சென்றுவிட வேண்டும் என்றே விருப்பம் கொண்டு, நான் சொன்னதுபடிச் செய்வாய் எனக்கூறி மறைந்துவிட்டார்.  சித்தர் வடிவில் வந்தவர் அருளிச்செய்த விதத்தைக்கொண்டு வந்தவர் மதுரையம்பதி முதல்வனே என அறிந்து கொண்டாள்.  சித்தர் சொன்னபடிய எல்லா உலோகங்களையும் தீயிலிட்டு உருக்கத் தங்கம் உருகி வந்தது.  உருகி வந்த தங்கத்தைக் கொண்டு தான் ஏற்கனவே கருக்கட்டி வைத்திருந்த வார்ப்பில் ஊற்றி எடுத்தாள்.  வார்ப்பினை உடைத்து எடுக்கும்போது உற்சவமூர்த்தியின் அழகைக்கண்டு வியந்து “அச்சோ, அழகியபிரானோ“ என்று அன்பினால் அழைத்து கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள்.  இதனால் உற்சவமூர்த்தியின் கன்னத்தில் வடு உண்டானது.  இதனை இன்றும்  நேரில் தரிசித்து வணங்கலாம். 

பங்குனிமாதம் உத்திரநட்சத்திர நாளன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சி 36ஆவது திருவிளையாடலாகும்.  இத் திருவிளையாடலின்போது ஒவ்வொரு வருடமும் மதுரையிலிருந்து அருள்மிகு சோமசுந்தரேசுவரரையும் அன்னை மீனாட்சியையும் திருப்பூவணத்திற்கு எழுந்தருளச் செய்து, இராத் தங்காமல் அர்த்தசாம பூசைக்கு மதுரைக்குத் திருப்பித் தூக்கி வந்து விடுவர். 

மதுரையைத் திருமலைநாயக்க மன்னன் ஆண்ட போது, இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.  ஒருவருடம், பங்குனி உத்திரநாளன்று இவ்வாறு அன்னை மீனாட்சியையும் அப்பன் சொக்கநாதனையும் திருப்பூவணத்திலிருந்து மதுரைக்குத் திரும்பித் தூக்கி வரும்போது வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருந்தது.  இதனால் சிலைமான் என்ற ஊரின் அருகே பெரும் வெள்ளம் பாதையைக் கடந்து ஓடியது.  எனவே சுவாமியையும் அம்மனையும் வெள்ளத்தைக் கடந்து தூக்கிச் செல்ல முடியவில்லை.  சிலைமானுக்கு அருகில் உள்ள கீழடி என்ற ஊரின் வழியாகத் தூக்கிச் செல்ல முயன்றனர்.  கால்வாயிலும் வைகையாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், மனித முயற்சிகள் பயனளிக்க வில்லை.  நிலைமையை உணர்ந்து கொண்ட திருமலைநாயக்க மன்னன் அருகில் உள்ள ஊர்களில் எல்லாம் பறையறிவிக்கச் செய்தார்.  அர்த்த சாமத்தில் ‘மதுரையம்பதியின் முதல்வன்‘ ஆற்று வெள்ளத்தைக் கடக்க முடியாமல் இருப்பதை அறிந்து ஓடிவந்த உதவினர். தோன்றாத்துணையாய் ஈசனும் வந்து திருவருள் புரிந்தான்.  அன்னை மீனாட்சியும் அப்பன் சொக்கனும் நல்லபடியாக மதுரைக்குத் திரும்பிச் சென்று அர்த்தசாம பூசையில் கலந்துகொண்டனர்.  மன்னன் திருமலை நாயக்கனும் நிம்மதியாக உறங்கி எழுந்தான்.  எழுந்தவுடன் அமைச்சரை அழைத்து, தங்களது உயிரையும் பொருட்டாக மதியாமல் அர்த்த சாமத்தில் வந்து உதவியி அனைவரையும் அழைத்து வருமாறு ஆணையிட்டான்.  உதவியோர் அவனைவருக்கும் ஒரு கிராமத்தையே தானமாக வழங்கினான்.  சாமத்தில் வந்து உதவியோருக்குச் சன்மானமாக வழங்கப்பட்டதால், அந்தக் கிராமத்திற்குப் பெயர் ‘சாம நத்தம்‘ என்ற பெயர் உண்டானது. 

இத்திருவிளையாடல் நடைபெற்ற காலந் தொட்டு, அருள்மிக மீனாட்சியம்மைக்கும் அப்பன் சொக்கநாதனுக்கும் “இராத் தங்கார்“ என்ற காரணப் பெயர் உண்டானது.  அன்றைய நாளிலிருந்து அன்னை மீனாட்சி பிறந்த மதுரையம்பதியில் பிறந்த பெண்கள் யாரும் இராத் தங்கார்.  அதுபோல், மதுரையில் திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளைகள் யாரும் இராத்தங்கார்.  எப்பாடு பட்டேனும் இரவுக்குள் மதுரை வந்து சேர்ந்துவிடுவர். 

மன்னன் திருமலை நாயக்கருக்குப் பின்னர் பல்வேறு ஆட்சிமாற்றங்கள் உண்டாகி, ஆங்கிலேயேர் ஆட்சி செய்த காலத்தில் இந்த விழாவானது திருப்பூவணத்தில் நடைபெறுவது நின்றுபோய், மதுரையின் வடகரையில் உள்ள திருவாப்புடையார் கோயிலில் நடைபெறலானது.

Thanks sri Krishnamurthy Krishnamurthy
*"சதுரகிரி பிறப்பின் ரகசியம் " - சதுரகிரி.*
*ஸ்ரீ* *சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவில்!!*

*நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.*

*திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.*

*தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்*

*மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.*

*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.*
*ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.*

*பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.*

*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.*

*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது.*
*சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.*

*ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.*

*சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.*

*இருப்பிடம்:*

*மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.*

*அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள்.* *ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.*

*அங்கிருந்து தாணிப் பாறைக்கு -  மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.*

*மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் '   உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம்.  மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.*

*சதுரகிரி தல வரலாறு :சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான்.* *இவனது பெற்றோர் தில்லைக்கோன்-* *திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள்.* *ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார்.* *சடைமங்கையும்* *கொடுக்கவே, தினமும் தனக்கு பால்*
 *தரும்படி கேட்டார்.* *சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.*

*வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த* *சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார்.* *பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று* *பெயரிட்டு காக்கும்* *தேவியாக சிலையாக்கி*
*விட்டு மறைந்தார்.* *மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.*

*சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.*

*சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.*

*தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து  மலையேற வேண்டும்.*

*மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.*

*இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.*

*இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.*

*கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.*

*இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம்.*
*மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.*

*இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.*

*""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.*

*பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.*

*வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.*

*பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்'* *என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது.* *சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.*

*தவசிப்பாறை:* *மகாலிங்கம்* *கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு* *பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை* *(தபசுப்பாறை)* *அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில்* *"மஞ்சள் ஊத்து' தீர்த்தம்*
 *உள்ளது.*

*தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில்"வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.*

*சுந்தரமூர்த்தி :*

*கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.*

*பார்வதி பூஜித்த லிங்கம் : சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள்.*

 *மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்.*

*இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.*

*இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.*

*லிங்க வடிவ அம்பிகை :*

*சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள்.* *சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும்.* *விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.*

*சதுரகிரியில் தீர்த்தங்கள் :*
*சந்திர தீர்த்தம் :*

*சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர  தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம்  பெறலாம்.*

*கெளண்டின்னிய தீர்த்தம் :*

*சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.*

*கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய  புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும்  உண்டு.*

*சந்தன மகாலிங்க தீர்த்தம் :*

*இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற  இருண்டவனம் ஒன்றுள்ளது.* *அவ்வனத்திலிருந்து  வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள்*

*பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின்  காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்க பிரதிஷ்டை செய்து* *அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.*

*இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.*

*இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.*

*காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட* *'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக்*
*காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட* *'பொய்கைத் தீர்த்தம்'',  ''பசுக்கிடைத் தீர்த்தம்'',  'குளிராட்டித் தீர்த்தம்'* *போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில்* *உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி* *பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால்*
*கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.*

*மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.*

*பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.*

*அபூர்வ மூலிகைகள் :*

*இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.*

*பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.*

*தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம்,* *செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.*

*இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர்.* *பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது.* *இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.*

*விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக*
*பயன்படுத்த வேண்டும்.*

*சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.*

*இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து* *விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.*

*அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு.*

*இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய்  ஒட்டிக்கொள்ளும்.* *இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்*
*வந்து* *ஒட்டிக்கொள்ளும்.*

*இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.*

*சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய்  நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.*

*இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.*

*இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர்  ஒருவர்  வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும்  கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.*

*இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் " கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும்  , சந்தன மகா லிங்கத்தையும்  - மனமுருக  பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.*

*உங்கள் தேடல், பக்தி உண்மை எனில் - நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால், இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை.*
"அது யார், ஜகத்குரு?"-ஒரு பண்டிதர்

("கை-கால் இல்லாத குருவிகள் கூடு கட்டுகின்றன நமக்குக் கைகால் உண்டு. .என்றாலும்,பறவைகள் மாதிரி கூடுகட்டமுடியவில்லை.குருவிகளிடம் ஒரு கிரியா சக்தி இருக்கிறது. அது,என்னிடம் இல்லை. அதனால், குருவி, என்னுடைய குரு..." என்று சொல்லி, கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகூப்பி வணங்கின-பெரியவா)

"நீங்கள் தான் ஜகத்குரு" என்று மனமாரப் போற்றிப் பணிந்தார்கள்.-பண்டிதர்கள்

சொன்னவர்; ப்ரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்,காஞ்சிபுரம்.

1933ம் வருஷம் காசி யாத்திரையின் போது நடந்த நிகழ்ச்சி. பனாரஸ் ஹிந்து யூனிவர்ஸிடிக்கு, ஒரு மாலைப்போதில்ஸ்ரீ  பெரியவாள் 'விசிட்'.

பெரியவாள் போனபோது, மண்டக்குளத்தூர் பிரம்மஸ்ரீ சின்னசாமி சாஸ்திரிகள், பாடம் சொல்லிக்கொண்டிருந்தார். அப்பைய தீட்சிதர் எழுதிய 'விதிரஸாயனம்' என்ற மீமாம்ஸாசாஸ்திரம். ஸ்ரீ தீட்சிதரின் நடையழகில் ஸ்ரீ பெரியவாள் சொக்கிப் போனார். உடன் வந்திருந்த 'ஆத்ம வித்யா பூஷணம் 'இஞ்சிக்கொல்லை  பிரும்மஸ்ரீ  ஜகதீஸ்வர  சாஸ்திரிகளிடம்சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டார். (பின்னர்தான்,அப்பைய தீட்சிதரின் எல்லாக் கிரந்தங்களையும் ஸ்ரீ பெரியவாள் படித்தார்.

காசிமன்னர்அரண்மனையில்,பெரியவாளுக்குவரவேற்பு.நகரத்தின்முக்கியப்பிரமுகர்கள்வந்திருந்தார்கள்.ஏராளமான பண்டிதர்கள்.

அவர்கள் மனத்தில் ஓர் இளக்காரம்; இனம் புரியாத அசூயை. 'இவர் என்ன ஜகத்குரு என்று பட்டம் போட்டுக்கொள்வது?... ரெண்டு கேள்வி கேட்டு, மடக்கி விடலாம் !...'

பெரியவாள் வந்து அமர்ந்ததும், ஒரு பண்டிதர், ஆவேசமாகக்கே ட்டார், "அது யார், ஜகத்குரு?"

"நான் தான் !..." என்றார், பெரியவாள்.

"ஓஹோ?..நீங்க ஜகத்துக்கே குருவோ?"

"இல்லை. ஜகதாம் குரு: ந (நான் ஜகத்துக்கெல்லாம் குரு- என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.

ஜகதிபத்யமானா: ஸர்வே மம குரவ:"

(உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும், எனக்குக் குருக்கள்- என்ற பொருளில், நான் ஜகத்குரு)

வடநாட்டுப் பண்டிதர்கள் திகைத்துப் போனார்கள்.

இவ்வளவு அருமையான, எளிமையான விளக்கத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

பெரியவாள்,அந்தப்பெரியஅறையின்சுவர்களின்மேற்பகுதியில் ,புறாக்களுக்காக அமைக்கப்பட்டிரூந்த சிறு சிறு பொந்துகளில் கட்டப்பட்டிருந்த குருவிக்  கூடுகளைப் பார்த்தார்.

பண்டதர்களிடம் காட்டி, "கிமிதம்"? (இது என்ன?) என்று கேட்டார்.

"நீட:" (கூடு)

"கேன நிர்மிதம்?" (யாரால் கட்டப்பட்டது?)

"சடகே.." (குருவிகள்)

"கை-கால் இல்லாத குருவிகள் கூடு கட்டுகின்றன நமக்குக் கைகால் உண்டு. .என்றாலும்,பறவைகள் மாதிரி கூடுகட்டமுடியவில்லை.குருவிகளிடம் ஒரு கிரியா சக்தி இருக்கிறது. அது,என்னிடம் இல்லை. அதனால், குருவி, என்னுடைய குரு..." என்று சொல்லி, கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகூப்பி வணங்கினார்.

இதை நேரில் கண்ட வடநாட்டுப் பண்டிதர்கள் பிரமித்துப் போய்விட்டார்கள்

. "நீங்கள் தான் ஜகத்குரு" என்று மனமாரப் போற்றிப் பணிந்தார்கள்.

பெரியவாள் காசியில் இருந்த கடைசி நாள் வரை, அவர்கள் எல்லாரும் தினமும் முகாமுக்கு வந்து நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார்கள்
வேதத்தில் உள்ள அதி சூட்சும ரகஸ்ய ஸ்ரீ மஹாலட்சுமி அஷ்டோத்திரம்!

தீப மஹாலட்சுமி அர்ச்சனை

அர்சுத்தியான தியானந்தீம் த்ரீலோதனம்
ஹாரந்தீம் லக்ஷ்மீம் தேவி விதிந்தேம்

ஸ்ரீ மஹாலட்சுமி அஸ்டோத்திர மந்திரங்கள் :--

ஓம் ஸ்ரீ பார்வதி சரஸ்வதி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ விஷ்ணு ப்ரியே மஹாமாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ கமலே விமலேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காருண்ய நிலையேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தாரித்திர துக்க சமனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸ்ரீதேவி நித்ய கல்யாணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சமுத்திரா தனயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ராஜலக்ஷ்மி, ராஜ்யலக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வீர லக்ஷ்மி, விஸ்வ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மோக மந்த்ரீ மந்த்ர ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மஹிசாசுர சம்கர்த்தீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மதுகைடப நித்ராவே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வைகுண்ட ஹிருதய வாசே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பக்ஷ்சேந்திர வாகனே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தான்ய ரூபே, தான்ய லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸ்வர்ண ரூபே ஸ்வர்ண லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வித்ய ரூபே வித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஹரிப்ரியே வேத ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பல ரூபே பல ஹாத்திரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ நிஷ் குல்லே நிர்மலே நித்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ரத்ன ரூபே ரத்ன லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சீதரூபே சீதா லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வேத ரூபியே நாத ரூபியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பிராண ரூபே பிராண மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பிராணமானந்த மகஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பிரம்ம ரூபியே பிரம்ம தாத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஜாத வேத சொரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆதார ஹர்ஸ நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸூஸ்மாந்த்ரா சுசிலாந்தஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ யோகானந்த பிரதாயின்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ செளந்தரியே ரூபிணி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சித்த லக்ஷ்மி சித்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சர்வ சந்தோஷ சத் ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ துசிதே புசிதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ராஜ ராஜார்த்திய பதயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சார சொரூபே திவ் யாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தாரித்திர திவ்ய சுத்தாக்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வேத குஹே சுபே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தர்மார்த்த காம ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மோட்ச சாம்ராஜ்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சர்வகமே சர்வ ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மோகினி மோக ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பஞ்ச பூதாந்திரஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ நாராயண ப்யதமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காருணி கார்ய ரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆனந்த சர்ப்ப சயனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ லோகைக ஜனனீ வந்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சம்பு ரூபே சம்பு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்ம ரூபே ப்ரம்ம முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ விஷ்ணு ரூபே விஷ்ணு மாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆக்ஞ்யா சக்ராப்த்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆகார ரேக சக்ராம்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஹிருதய பூஜ தீபாத்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆதார மூல நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்ம கிரந்தி பிரகாசாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ குண்டலினி சயனா நந்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஜீவாத்மா ரூபிணி மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸ்தூல சூசும பிரகாஸ் சித்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்மாண்ட பாண்ட ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஸ்வத்தா ப்ரஷ சந்துஷ்டே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காரிண்ய பூர்ணே ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மூர்த்தித்தியே சொருபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பானு மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சூர்ய ப்ரகாச ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சந்திர மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வஹி மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பீதாம்பர தர தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ திவ்ய ஆபரண சோபாடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ராமண ஆராதனா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ நரசிம்ஹக்ரவா சிந்தோ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வரதே மங்களே மன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பட் மாடவி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வியாசாதி திவ்ய சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஜெய லக்ஷ்மி சித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ராஜ்ய முத்ரே விஷ்ணு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சர்வார்த்த சாதகி நித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஹனுமன் பக்தி சந்துஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மகநீ கீத நாதஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ரதி ரூபே ரம்ய ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காமத்மி காம ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சுதா பூர்ணே சுதா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ இந்திர வன்யே தேவ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தர்ம ராஜ சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ரட்சோவர புரி லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ரத்னாகர ப்ரபாகரமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மருது புர மஹானந்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ குபேர லக்ஷ்மி மாதாங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஈசான லக்ஷ்மி சர்வேசி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்ம பீடே மஹா பீடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மாயா பீடஸ்திதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சக்ர வாசினி கன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஷ்ட பைரவ சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஸ்திதானந்த பூரி நாதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சித்த லட்சுமி மஹா வித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ புத்தீந்திராதி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ லோக தாரித்ர சமனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மிருத்யூ சந்தாப நாசினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பதி ப்ரியே பதி விரதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சதுர் புஜே கோமாளங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பட்ச ரூபே முக்தி தாத்நீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஜனா நந்த மயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பக்தி ப்ரியே பக்தி கமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸ்தோத்ரப்ரியே ரமே ராமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ராம நாம ப்ரிய தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ கங்காப்ரியே சுத்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ விஷ்வ பர்த்தி விஷ்வ மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ க்ருஷ்ணப்ரியே க்ருஷ்ணரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ கீத ரூபியே ராக மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சாவித்ரீ பூத சாவித்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காயத்ரீ ப்ரம்ம காயத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்மே சரஸ்வதி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சுகாலினி சுத்தாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வீணாதர ஸ்தோத்ர ஹமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஃஞாதரி ப்ருக்ஞானே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வேதாந்த வன சாராங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ நாதாந்த ரஷ புயஸ்ஸே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ திவ்ய சக்தி மஹாசக்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ந்ருத்த புரியே நிருத்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சதுர் சஷ்டி கலா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ திவ்ய சுந்தாகரங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ முக்திதே முக்தி தேகஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ யக்ஞ சாரார்த்த சுத்தாக்னீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஷ்ட லஷ்மியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள சம்பூர்ணே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி.
நாம ரஸம்

கலியுக தர்மமான பகவன் நாமத்தை எப்போதெல்லாம் சொல்லலாம்?

நியமங்களே இல்லையாம். எப்போது வேண்டுமானாலும் சொல்லலாமாம்.
நாமம் சொல்வதற்காகத் தனியாக ஒரு நேரம் ஒதுக்க வேண்டியதில்லையாம்.
 நேரமில்லை என்று சாக்கு போக்கு சொல்லவே முடியாதாம்.

அதெப்படி?

புரந்தரதாஸர் சொல்கிறார்.

நரஜன்ம பந்தாக நாலிகேயிருவாக
கிருஷ்ணா என பாரதே

பாரதே! என்று பாரத தேசத்தில் பிறந்த நம்மைத் தான் விளிக்கிறார். அதற்காக மீதி தேசத்திலுள்ளவர்களுக்கெல்லாம் நாமம் கிடையாதா? அவர்களுக்கும் உண்டு. கண்ணெதிரே இருப்பவரைத்தானே அழைத்துச் சொல்லமுடியும்? அதனால் நம்மைக் கூப்பிடுகிறார்.

அரிதிலும் அரிதான மனிதப் பிறவி எடுத்துவிட்டாயல்லவா? அதிலும் பேசும் சக்தி கொண்ட நாக்கு இடுக்கிறதல்லவா? ஒரு முறை க்ருஷ்ணா என்று சொல்லலாமே என்று கெஞ்சுகிறார்.

எதற்காகச் சொல்லவேண்டும்?

கிருஷ்ணா எந்தரே ஸகல கஷ்டவு பரிஹார
கிருஷ்ணா என பாரதே

உனக்குத்தான் நிறைய கஷ்டங்கள் வரிசையாக வந்துகொண்டிருக்கிறதே. ஒவ்வொரு கஷ்டத்திற்கும் ஒவ்வொரு பரிஹாரம், ஒவ்வொரு தெய்வம் என்று எதற்காக அலைகிறாய்?
உன்னால்  அலையமுடியவில்லையா? அதற்காக நீ கஷ்டப்படவும் வேண்டாமே. க்ருஷ்ணா என்று சொல்லிப்பாரேன். எல்லாக் கஷ்டங்களும் தீர்ந்துவிடுமே என்கிறார்.

எப்போது சொல்வது?

மலகித்து மைமுரி தேளுத்தலொம்மே க்ருஷ்ணா என பாரதே..

 காலையில் உறக்கத்திலிருந்து  விழிக்கிறாயல்லவா? நீ படுக்கையிலிருந்து எழக்கூட வேண்டாம். அப்போது க்ருஷ்ணா என்று சொல்லலாமே. எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டே கூட க்ருஷ்ணா என்று சொல்லலாம்.

ஸூளி தாடுத மனே, யொளகா தருவொம்மே க்ருஷ்ணா என பாரதே

வீட்டிற்குள் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு எத்தனை நடை நடக்கிறாய்? அப்போது ஒரு முறை க்ருஷ்ணா என்று சொல்லலாமே.

ஸ்நான பான ஜப தபகள மாடுதே
கிருஷ்ணா என பாரதே

குளிக்கும்போது, நீர் குடிக்கும்போது, க்ருஷ்ணா என்று சொல்லலாம். ஒரு கணம் இறைவனை நினைக்கும்போதும் உனக்கு பெரிய ஸ்லோகங்கள் தெரியவில்லை, ப்ரார்த்தனை செய்யத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. க்ருஷ்ணா என்று சொல்லலாம். அதுவே பெரிய உபாசனையாகிவிடுமே.

ஷால்யான்ன ஷட்ரச திந்து த்ருப்தவனாகி
கிருஷ்ணா என பாரதே

சாப்பிடத் துவங்குமுன் க்ருஷ்ணா என்று சொல்லிவிட்டு உண்டாயானால், உண்ணும் பொருளில் உள்ள தோஷமெல்லாம் நீங்கி அமுதமாகிவிடும்.

 இல்லையென்றால் நன்றாக விருந்து சாப்பிட்டபின், திருப்தியாக ஏப்பம் விடும்போதாவது க்ருஷ்ணா என்று சொல்லலாம்.
உண்ட சோறு உடலுக்கு நன்மை பயக்குமாறு ஜீரணமாகிவிடுமே.

கந்தவ பூசி தாம்பூலவ மெலுவாக க்ருஷ்ணா என பாரதே

கமகமவென்ற வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளும்போதும், தாம்பூலத்தை மெல்லும்போதும்கூட  க்ருஷ்ணா என்று சொல்லலாமே.

செந்துள்ள ஹாஸிகெயொளு குளிதொம்மெ க்ருஷ்ணா என பாரதே

சுகமான பட்டு மெத்தையில் ஓய்வாக  அமர்ந்திருக்கும் வேளையிலும்கூட க்ருஷ்ணா என்று சொல்லலாமே.

கந்தன்ன பிகிபிகி தப்பி முத்தாடுத
கிருஷ்ணா என பாரதே

உன் குழந்தையைக் கொஞ்சும்போதும், கன்னத்தைக் கிள்ளி முத்தமிடும்போதும்  க்ருஷ்ணா என்று கொஞ்சலாமே.

மந்தகாமினியொளு சரசவாடுத்தலொம்மே
கிருஷ்ணா என பாரதே

உன் மனைவியுடன் தனிமையில் இனிமை காணும் நேரத்திலும் அவளைக் க்ருஷ்ணா என்றே அழைக்கலாம். க்ருஷ்ணனை விடவும் ச்ருங்கார ரஸத்தில் சிறந்தவர் யார்? இல்லறம் இனிமையாக இதை விடச் சிறந்த வழி உண்டா?

பரிஹாஸ்யத மாதலாடுத லொம்மே
கிருஷ்ணா என பாரதே

யாரையாவது கேலி செய்து பேசும்போது கூட க்ருஷ்ணா என்று சொல்லி கேலி செய்யலாம். கண்ணன் மகிழ்ச்சியடைவான். இப்போதெல்லாம் கேலி செய்ய கோவிந்த நாமத்தைப் பயன்படுத்துகிறார்களே. அதைப் போல.

பரிபரி கெலசதொளு ஒந்து கெலசவெந்து
கிருஷ்ணா என பாரதே

எவ்வளவோ பேசுகிறோம். பேச்சு வாக்கில் அவ்வபோது க்ருஷ்ணா என்று ஒரு வார்த்தை என்று சொல்லக்கூடாதா?

துரித ராசிகளன்னு தரிது பிடிசுவ
கிருஷ்ணா என பாரதே

நம்மைப் பீடித்த துஷ்ட கிரஹங்களெல்லாம் விலகி அனுக்ரஹம் நம்மைப் பிடிக்க க்ருஷ்ணா என்று சொல்ல மாட்டாயா?

கருடகமன நம்ம புரந்தர விட்டலன
கிருஷ்ணா என பாரதே (நரஜன்ம பந்தாக)

கருடனின் மேல் ஏறி விரைந்து வந்து காக்கும் விட்டல க்ருஷ்ணனின் பெயரை எப்படியாவது சொல்வதை உன் வழக்கமாக்கிக் கொள்ளமாட்டாயா என்று புரந்தரதாஸர் கெஞ்சுகிறார்.

நம்மைக் கரையேற்றுவதில், மஹான்களுக்குத்தான் எவ்வளவு அக்கறை?

ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
கோமாதாவும் குலமகளிரின் கண்ணாடி மோதிரமும்!

மஹாராஜா ரஞ்சித் சிங்கின் ஆட்சி

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெண்மணிகளின் கையில் உள்ள மோதிரத்தில் ஒரு கண்ணாடி பளபளக்கும். அதில் அவர்களுடைய முகங்களின் மங்களகரமான பிரதிபிம்பம் பளிச்செனத் தெரியும். இதற்குப் பின்னால் ஹிந்து பாரம்பரியத்தைப் போற்றும் ஒரு அதிசயமான சுவையான உண்மைச் சம்பவம் இருப்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்!

சீக்கிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த மஹாராஜா ரஞ்சித் சிங் (தோற்றம் 13-11-1780; மறைவு:27-6-1839) பஞ்சாபை அரசாண்ட காலம்.லாகூரில் சுறுசுறுப்பாக எப்போதும் உயிர்த்துடிப்புடன் இயங்கும் ஒரு வீதியின் மூலையில் உள்ள கிணற்றிலிருந்து பஞ்சாபிய மங்கையர் நீரை எடுத்துக் கொண்டிருந்தனர். அங்கு நீரைக் குடித்துத் தாகத்தைத் தணிக்க பசுக்கள் உள்ளிட்ட மிருகங்களும் கூடி இருந்தன.

கொம்புகளை விடுவிக்க முடியாத பசு

அந்தப் பசுக்களில் ஒன்று அருகில் இருந்த சுவர் ஒன்றின் கீழே குனிந்து அங்கிருந்த குழியில் இருந்த தானியங்களை உண்ண முயன்றது. துரதிர்ஷ்டவசமாக அந்தக் குழியில் பசு மாட்டின் கொம்புகள் மாட்டிக் கொண்டன. அதை எடுக்க முயன்ற போது அதன் தலை இன்னும் அதிக ஆழத்தில் மாட்டிக் கொண்டது. அதன் அம்மா என்ற ஓலச் சத்தம் கேட்டுப் பெண்கள் அனைவரும் அங்கு ஓடினர். யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆடவரின் துணையை அவர்கள் நாடவே ஏராளமானோர் வந்து பசுவிற்கு உதவ முயன்றனர்.

அங்கிருந்த பலரும் சுவரை ஜாக்கிரதையாக இடித்துப் பசுவைக் காப்பாற்றி விடலாம் என்றனர். ஆனால் குழுமியிருந்தோரில் ஒருவன் மட்டும் பசுவின் கொம்புகளை வெட்டிப் பசுவை குழியிலிருந்து அகற்றி விடலாம் என்றான். அவனை அனைவரும் வெகுவாகத் திட்டினர்.இறுதியில் சுவர் ஜாக்கிரதையாக இடிக்கப்பட்டது. பசு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் கொம்புகளுடன் வெளியே மீண்டது. கூட்டத்தினர் ஆரவாரம் செய்து கோமாதாவுக்கு ஜே எனக் கூவியவாறே கலைந்தனர்.

இந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அரசவை ஒற்றர்களுள் ஒருவன் நடந்த சம்பவத்தை அப்படியே மஹாராஜா ரஞ்சித் சிங்கிடம் கூறினான்.

மறுநாள் கொம்புகளை வெட்டலாம் என்று சொன்னவன் தர்பாருக்கு அழைக்கப்பட்டான்.

ராஜ விசாரணை

மஹாராஜா ரஞ்சித் சிங் அவனை கூர்மையாக நோக்கினார்.

“நீ தான் நேற்று பசுவின் கொம்புகளை வெட்டலாம் என்று கூறியவனா?”

பயந்தவாறே, அவன், “ஆமாம், மஹாராஜா!” என்றான்.

“நீ ஒரு ஹிந்துவா?”

“ஆமாம், மஹாராஜா!”

“எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஒரு ஹிந்துவால் எப்படி பசுக்களின் கொம்புகளை வெட்டலாம் என்று கூற முடியும்?”

நடுநடுங்கிய அவன் கம்மிய குரலில், “தப்பு தான், மஹாராஜா” என்றான்.

“அது ஒரு இயல்பான தப்பாக எனக்குத் தெரியவில்லை.” உறுதியான குரலில் கூறிய கூரிய அறிவு படைத்த மஹாராஜா ரஞ்சித் சிங் அவனுடைய தாயாரை அரசவைக்கு உடனே அழைத்து வருமாறு பணித்தார்.

அவனுடைய வயதான தாயார் அரசவைக்கு வந்தார். அனைவரும் அந்தப் பெண்மணி என்ன கூறப் போகிறாள் என்பதை ஆவலுடன் எதிர்நோக்கினர்.

அந்தப் பெண்மணியிடம் ராஜா கேட்டார்:”நீ ஒரு ஹிந்துப் பெண்மணி தானா!”

“ஆமாம், மஹாராஜா” அவள் உறுதி படத் தெரிவித்தாள்.

“அப்படியானால் நிஜத்தைச் சொல். இப்படிப்பட்ட மகா மோசமான ஒரு பிள்ளையை நீ எப்படிப் பெற்றாய். கோமாதாவின் கொம்புகளை வெட்டு என்று சொல்லும் பிள்ளையை நீ பெற்ற காரணம் என்ன?”

தர்பாரே அமைதியாக அவளது பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தது.

மெதுவாக யோசித்த பின்னர் அவள் கூறலானாள்:-“மஹாராஜா! அதற்கு என்னால் ஒரு காரணத்தை மட்டுமே யூகிக்க முடிகிறது. இவனைக் கர்ப்பமுற்ற அந்த நாளில் முதன் முதலாகக் காலையில் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். அப்போது   காலணி தைக்கும் ஒருவன் செத்த மிருகத்தின் தோலை உரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அது ஒரு பசுவின் தோலாக இருந்திருக்கக்கூடும். அது காரணமாக இருக்கலாமோ, என்னவோ”

மஹாராஜா கூவினார்: ”அது தான் சரி! இப்போது எனக்குப் புரிகிறது, இவன் ஏன் அப்படிச் சொன்னான் என்று!”

சரியான தீர்வு: கண்ணாடி பதித்த மோதிரம்

சற்று யோசித்த மஹாராஜா கூடியிருந்த அனைவரின் முன்னிலையிலும் மந்திரியிடம் கூறினார்:” தற்செயலாக இந்தப் பெண்மணி வெளியில் எட்டிப் பார்த்த போது நடந்த சம்பவம் போல எனது ராஜ்யத்தில் இப்படிப்பட்ட சம்பவம் இன்னும் ஒன்று நடக்கவே கூடாது. கர்ப்ப ஸ்தீரிகள் நல்லனவற்றைப் பார்க்க வேண்டும். நல்லனவற்றை பிரார்த்தனையாக உச்சரிக்க வேண்டும். நல்லனவற்றையே கேட்பதுடன் பழைய பாரம்பரியத்தை மதிக்க வேண்டும். ஆகவே அவர்கள் எழுந்தவுடன் தங்கள் முகத்தையே பார்க்கும் படி கைகளில் ஒரு சிறிய கண்ணாடியை எப்போதும் அணிய வேண்டும். இது எனது ஆணை என்று இன்றே பறை சாற்றுங்கள்.”

அன்று உருவானது தான்  சிறிய கண்ணாடி பதித்த மோதிரங்கள்.  அவற்றில் அழகிய தங்கள் முகங்களை விழித்தவுடன் பஞ்சாபிய மங்கையர் பார்க்க ஆரம்பித்தனர்.

காலம் காலமாக வரும் இந்தப் பழக்கத்தினாலேயே பஞ்சாபிய மங்கையரிடன் கண்ணாடி பதித்த மோதிரம் இன்றும் காணப்படுகிறது.

கோமாதாவின் மீது பக்தி, கர்ப்ப காலத்தில் இறை சிந்தனை, காலையில் ‘கராக்ரே வஸதே லக்ஷ்மி கர மத்யே சரஸ்வதி கர மூலேது கோவிந்த: ப்ரபாதே கர தர்சனம்’ என்று ப்ராத ஸ்மரண ஸ்லோகம் சொல்லும் போது குல மங்கையர்கள் தங்கள் திரு முகங்களைப் பார்க்க உதவும் மோதிரம் ஆகிய அனைத்தையும் ஹிந்து பாரம்பரியத்தைக் காக்கும் உணர்வில் இணைக்கும் உண்மை வரலாறு தான் எவ்வளவு சுவையானது?! உலகில் கோ மாதாவை உள்ளார்ந்து அனைத்து விதத்திலும் போற்றும் நாடு பாரதம் ஒன்றே!

************