ஞாயிறு, 26 ஜூலை, 2020

குரு பூர்ணிமா & வியாச பூஜை


குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா விரதம்

ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமா அல்லது வியாச பூஜை என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளை எப்படி விரதமிருந்து அனுசரிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

குரு பூர்ணிமா அல்லது வியாச பூஜா விரதம் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் சன்னியாச ஆசிரமத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாசரை ஆராதிப்பார்கள்.

வாழ்க்கை முழுவதும் சன்னியாசிகள் ஒவ்வொருவரும் வேதாந்தத்தில் ஈடுபட்டு, குரு மற்றும் ஈஸ்வரனை வழிபட வேண்டும். சன்னியாசி தான் ஞானத்தை பெற்றதற்கு நன்றியை வெளிபடுத்தும் வகையிலும் தான் துவங்க விருக்கும் வேதாந்த உபதேசம் தடையில்லாமல் முடிவடையவும் வியாச பகவானை ஆராதித்துப் பூஜை செய்யும் இந்நாள் குரு பவுர்ணமி என்றும் வியாச பவுர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் துறவிகள் மட்டுமில்லாமல் ஞான மற்றும் மோட்ச சாஸ்திரத்தை அறிய முற்படும் அனைவரும் தங்களது குருவையும், வியாச பகவானையும் ஆராதிக்க வேண்டும். வியாச பகவானை நிமித்தமாக வைத்து ஆதிகுருவில் (சிவபெருமான் அல்லது ஸ்ரீமன் நாராயணன்) தொடங்கி தங்களுடைய இப்பொழுதைய குரு வரை குரு பரம்பரையில் உள்ள அனைவரையும் இந்நாளில் வழிபட வேண்டும். வேதத்தை நான்காக வகுத்தவர் வியாசர். பகவான் கிருஷ்ணன் அருளிய கீதையைத் தொகுத்தவர் அவர் தான். பிரம்ம சூத்திரத்தை (வேதங்களின் சாரம்) எழுதியவர் வியாசர். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ப்ரஸ்தான த்ரயம் எனப்படும் மூன்று நூல்களிலுமே வியாச முனிவரின் பங்குள்ளது.

எனவே வியாச பகவானை முன் வைத்து ஆடி மாதப் பவுர்ணமியன்று குரு பூர்ணிமா அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் ஆங்கில தேதியான இன்று ஜூலை 27 ஆம் தேதி குருப் பூர்ணிமா அனுசரிக்கப்படும். பொதுவாக குரு பூர்ணிமா ஆனியில் தான் வரும் இந்த ஆண்டு ஆடியில் வந்தால் பதிவை மாற்றி அமைத்துள்ளேன்.