வியாழன், 13 ஆகஸ்ட், 2020

வால்மீகி ராமாயணம்

வால்மீகி வரலாறு தேவலோகத்தில் வருண பகவான் தன்னுடைய குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நாராயண நாமத்தை சொல்லிக்கொண்டு நாரதர் அங்கு வந்தார். வருண பகவானோ நாரதர் வருவதைக் கவனிக்காமல் குழந்தையுடனே விளையாடிக் கொண்டிருந்தார். நாராயண நாமத்தை கவனிக்காத வருணன் மேல் கோவம் கொண்ட நாரதர் நீ உன் குழந்தையை பிரிவாயாக என்று சாபமிட்டார். நாரதரிடம் தன்னை மன்னிக்கும் படியும் சாப விமோசனம் கொடுக்கும் படியும் கேட்டுக்கொண்டான் வருணன். அதற்கு நாரதர் இந்தச் சாபம் ஒரு வரம் இக்குழந்தை பூலோகத்தில் பிறந்து பிற்காலத்தில் விஷ்ணுவின் அவதாரப் புராணத்தை ஒரு இதிகாசமாகப் படைக்கும் என்று வாழ்த்திவிட்டு சென்றார். அக்குழந்தையே பிற்காலத்தில் வால்மீகி என்ற பெயர் பெற்று ராமாயணத்தை படைத்தார். மகரிஷி கஷ்யப அதிதி தம்பதியருக்கு ஒன்பதாவது குழந்தையாக வருண் பிரசேதாஸ் என்பவர் பிறந்தார். அந்த வருண் பிரசேதாஸிற்கு ரிக்சன் என்கிற ரத்னாகர் பத்தாவது குழந்தையாகப் பிறந்தார். ரத்னாகர் தனது மிகவும் ஏழ்மையான குடும்பத்தைக் காப்பாற்ற வழி தெரியாமல் திருட ஆரம்பித்தான். காட்டு வழியில் வருபவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளை அடித்துக் கொண்டு தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய ஜென்ம காரணத்தினால் நாரதர் ரத்னாகர் இருந்த காட்டு வழியே வந்தார். அவர் வருவதைப் பார்த்துவிட்டு கத்தியை எடுத்துக் கொண்டு அவர் அருகில் சென்றான். அவரை அருகில் சென்று பார்ததுமே அவன் மனதில் சிறிது சாந்தம் ஏற்பட்டது. அவரிடம் யார் நீங்கள்? எங்கு வந்தீர்கள்? இருப்பதையெல்லாம் கீழே வைத்துவிட்டு பேசாமல் ஓடிப்போங்கள் என்றான். அதற்கு அவர் என்னிடம் ஒன்றுமே இல்லை நான் நாராயண மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு பகவானை வணங்கிக் கொண்டு இருக்கின்றேன். எனக்கு எதுவும் தேவை இல்லை. சதா பகவத் தியானத்திலேயே ஆனந்தமாக இருக்கின்றேன் என்றார். அதற்கு ரத்னாகர் பார்த்தாலே தெரிகிறது நீங்கள் சாந்தமாக ஆனந்தமாக இருக்கின்றீர்கள். ஆனால் உங்களிடம் ஒன்றும் இல்லை என்கின்றீர்கள். நான் நிறைய கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கிறேன் என்றான். நீ இப்படி சேர்த்து வைத்த பணமெல்லாம் பண மூட்டை இல்லையப்பா இதெல்லாம் பாவ மூட்டை. இதற்காக நரகத்தில் கஷ்டப்படுவாய். இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு சொர்க்கம் நரகம் என்று உள்ளது. இங்கே நல்ல வாழ்க்கை வாழ்ந்து புண்ணிய காரியங்கள் செய்தால் சொர்க்கம் செல்வார்கள். பாவச் செயல்கள் செய்தால் நரகத்திற்கு செல்வார்கள். நரகத்தில் பலவிதமான தண்டனைகளைப் பெற்று அவதிப் படவேண்டியிருக்கும் என்றார் நாரதர். நான் செய்யும் செயல்கள் அனைத்தும் என் மனைவி குழந்தைகளுக்காகத் தானே செய்கிறேன். அவர்கள் எல்லோரும் என்னுடைய பாவத்தைப் பகிர்ந்து கொள்வார்கள் என்றான் ரத்னாகர். அப்படியானால் நீ அவர்களைப் போய் கேட்டுக் கொண்டு வா என்றார் நாரதர். முனிவரே தப்பித்துப் போக முயல்கிறீரா இதெல்லாம் என்னிடம் முடியாது என்றான். இல்லையப்பா நீ வேண்டுமானால் என்னைக் கயிற்றால் கட்டிப் போட்டுவிட்டுச் செல். அவர்களிடம் கேள். அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்வதாய்க் கூறிவிட்டால் என்னிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொள். அவர்கள் இல்லையென்று சொல்லிவிட்டால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும் என்றார் நாரதர். ரத்னாகர் யோசித்துப் பார்த்தான். இந்த முனிவர் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. நாம் கேட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து நாரத முனிவரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு சென்றான். 

ரத்னாகர் அவனின் வீட்டுக்கு வந்து தன் அப்பா அம்மா மனைவி மற்றும் குழந்தைகளிடம் நான் நிறைய பாவம் செய்துவிட்டதாக ஒரு முனிவர் சொல்கிறார். அந்த பாவங்களை எல்லாம் நீங்கள் என்னோடு பகிர்ந்து கொள்கிறீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள் நாங்கள் எதற்காக உன் பாவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்? நீ நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியதுதானே? நீ ஏன் பாவ வழியில் சம்பாதிக்கின்றாய்? குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியது உன்னுடைய கடமை. அதற்கு நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியது உன்னுடைய தர்மம். அதை விட்டு விட்டு தவறான வழியில் சம்பாதிப்பது உன் தவறு. அதனால் உன்னுடைய பாவத்தை நாங்கள் வாங்கிக் கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டனர்.

இதைக் கேட்டவுடன் ரத்னாகருக்கு அகக்கண் திறந்துவிட்டது. திரும்பி வரும்போது முற்றிலும் மாறியிருந்தான் ரத்னாகர். ஓடி வந்து நாரதரின் காலில் விழுந்து சுவாமி நீங்கள் சொன்னது சரிதான் என்று கண் கலங்கியபடியே நாரதரின் கட்டுகளை அவிழ்த்து விட்டான். சுவாமி நீங்கள் சொன்னபடி என் மனைவி குழந்தைகள் பெற்றோர் என எல்லோரிடமும் என் பாவத்தில் பங்கு கொள்வீர்களா என்று கேட்டேன். எல்லோரும் ஒரே விதமாய் எங்களைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை. நீ எப்படிப் பொருள் கொண்டு வருகிறாய் என்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த பாவங்களை நீதான் அனுபவிக்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறிவிட்டார்கள் என்றான். அதற்கு நாரதர் அவர்கள் சொன்னதில் தவறில்லையே? மனைவி மக்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதை நல்வழியில் செய்கிறாயா இல்லையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை என்றார் நாரதர். ஆமாம் சுவாமி அதை நான் இப்போது உணர்கிறேன். நீங்கள் தான் நான் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டும் என்றான். நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த பிராயச்சித்தம் இராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு இருப்பதே. இராம நாமத்தை ஜபம் செய்வது எல்லாப் பாவத்தையும் போக்கும் என்றார் நாரதர்.

ரத்னாகருக்கு ராம என்ற சொல் வாயில் நுழையவில்லை. இதனை பார்த்த நாரதர் அங்கிருக்கும் மரத்தை காட்டி இது என்ன மரம் என்று கேட்டார். இது மரா மரம் என்றான். நீ இந்த மரத்தின் பெயரான மரா என்பதைச் சொல்லிக் கொண்டிரு அது போதும் என்றார். நீங்கள் சொன்னபடியே இந்த மரா மரத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று வணங்கி நின்றான். நாரதரும் அவனை ஆசீர்வசித்து விட்டுத் தன் வழியே சென்றார். அவர் போனபின் ரத்னாகர் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்து மரா மரா மரா என்று ஜபிக்க ஆரம்பித்தான். நாளடைவில் அது ராம ராம ராம என்று மறுவி ஒலித்தது. ரத்னாகர் இரவு பகலாய் பசி தாகத்தை மறந்து ராம ராம ராம என்று ஜபம் செய்து கொண்டே சமாதி எனும் நிஷ்டையில் இருந்தான். அசையாமல் அவன் இருந்ததால் நாளடைவில் அவன் மேல் புற்று வளர்ந்தது. ராம நாம ஜபத்தால் அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றான்.

சில காலம் கழித்து சப்தரிஷிகள் அந்தப் பக்கம் வந்தார்கள். அங்கே ராம நாம ஜபம் ஒரு புற்றுக்குள்ளிருந்து ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேட்டு அதற்குள் இருப்பவரை தங்களின் ஞானக்கண்ணால் பார்த்து வால்மீகி என்று அழைத்தனர். சமஸ்கிருதத்தில் வால்மீகி என்றால் புற்றுக்குள்ளிருப்பவன் என்று பெயர். அவர்களின் அழைப்பினால் தவம் கலைந்து புற்றிலிருந்து ரத்னாகர் வால்மீகியாக வெளியே வந்தார். இடைவிடாத ராம நாம ஜெபத்தின் பயனால் நீங்கள் ஒரு மகரிஷியாகிவிட்டீர்கள். இன்றிலிருந்து உமக்கு வால்மீகி என்று பெயரே நிலைக்கும். ராம நாமத்தின் மகிமையை உங்கள் மூலமாக இந்த உலகம் தெரிந்துக் கொள்ளும் என்று கூறி ஆசீர்வதித்தனர். அவரும் ரிஷிகளை நமஸ்கரித்து விட்டு பின் ராம நாமத்தையே ஜபித்துக் கொண்டு ஒரு ஆசிரமத்தை தமஸா நதிக் கரையில் கட்டிக் கொண்டார். அவரிடம் சிஷ்யர்கள் எல்லாம் வந்து சேர்கிறார்கள். வால்மீகி தன்னுடைய தவத்தினால் ராமனின் வரலாற்றை தனது ஞானதிருஷ்டியில் கண்டார். இப்படிப்பட்ட குணாதிசயங்களோடு ஒரு மனிதன் இந்த உலகத்தில் இருப்பானா என்று அவருக்கு சந்தேகம் வந்தது.

ஒரு நாள் நாரதர் அவரது ஆசிரமத்திற்கு வருகிறார். அவரை வரவேற்ற வால்மீகி தன்னுடைய ஞான திருஷ்டியில் கண்ட மனிதனை பற்றி நாரதரிடம் கேட்கின்றார். இந்த உலகில் சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லா நல்ல குணங்கள் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா என்று நாரதரிடம் கேட்டார். அதற்கு நாரதர் உண்டு அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த தசரத மன்னனின் குமாரர் ஸ்ரீராமர் என்று கூறி வால்மீகி முனிவருக்கு ராம சரித்திரத்தை சுருக்கமாக நூறு சுலோகங்களில் உபதேசித்தார். இது ஸங்க்ஷேப இராமாயணம் எனப்படும். இதுவே வால்மீகி ராமாயணத்தின் முதல் சர்கம் ஆகும்.

ஒரு நாள் வால்மீகி முனிவர் தமஸா நதியில் குளிக்க செல்கிறார். அப்போது அங்கு இரண்டு அன்றில் பறவைகள் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டு இருக்கின்றன. அப்போது வேடன் ஒருவன் அம்பால் ஒரு அன்றில் பறவையை அடித்துவிடுகிறான். ஒரு பறவை இறந்தவுடன் இன்னொரு பறவை தன்னுடைய ஜோடி பறவை இறந்த துக்கத்தில் ஓலமிட்டது. பறவையின் துக்கத்தை கண்ட வால்மீகி தன் ஞான திருஷ்டியில் கண்ட ராமனும் இப்படி தானே சீதையை பிரிந்து துக்கப்பட்டிருப்பான் என்று எண்ணி திரேதாயுக விஷ்ணுவின் அவதாரமான ராமாயண இதிகாசத்தை 24000 சுலோகங்கள் கொண்டதாக முழுமையாக இயற்றினார். யோக வாசிஷ்டம், அத்புத ராமாயணம், கங்காஷ்டகம் ஆகிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டவையே.

வால்மீகி இயற்றிய ராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவர் இயற்றிய ராமாயணமும் அதன் பாத்திரங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகள் விவரிக்கப் பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள் அரசுகள் போன்றவற்றை ஆய்வு நோக்கில் பார்க்கும் போது வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது என்று தெரிந்து கொள்ளலாம். நான்கு வரிகள் கொண்ட சுலோகங்களால் எழுதப்பட்டுள்ள வால்மீகியின் ராமாயணத்திலிருந்து ஒரு வரியைக் கூட மாற்ற முடியாது அல்லது புதிதாக இடைச் செருகல் என்று சேர்க்க முடியாது என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு.

பல முனிவர்கள் வால்மீகி என்கிற இதே பெயரில் இருந்து சித்தி அடைந்திருக்கிறார்கள். எட்டுகுடியில் ஒரு வால்மீகியின் சமாதி இருக்கிறது. அவர் எழுதிய பாடல்கள் மூலம் அவர் பிற்காலத்தவர் என்று தெரிந்து கொள்ளலாம். திருவாரூர், சங்கரன்கோவில், குடவாசல், திருவெற்றியூர், காஞ்சீபுரம் இப்படிப் பல கோவில்களில் வால்மீகநாதர் சந்நிதியும் வேறுபாடான திரு உருவங்களும் உண்டு. இவை எல்லாம் வால்மீகி என்ற பெயரில் பல முனிவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதற்குச் சான்றாகும்.

கர்மாவின் கதை

கர்மாவின் கதை:-

ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் என்றார்.! பின் சித்திரக்குப்தனை யமன் ரிஷியுடன் செல்ல பணிந்தார்.! சித்திரக்குப்தன் யமன் ஆணைக்கு இணங்க ரிஷியுடன் சென்றார்.

யமலோகம் விசித்திர லோகம். அங்கே நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் உண்டான காரணம், பாகுபாடற்ற-பாரபட்சமற்ற நீதி, நிலை நிறுத்தப்படும் தர்மம் அத்தனையையும் பார்க்கப் பார்க்க, அந்த ரிஷியே ஆடிப்போனார். தண்டனைகளுக்கான காரணங்களில் அத்தனை துல்லியம். ‘இப்படி நரகம் என்று ஒன்று இருப்பது தெரிந்தும், தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்தும் ஏன் இந்த மனிதர்கள் பாவங்களைச் செய்கிறார்கள்?’ நினைக்க நினைக்க அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.  

மனிதர்கள் தங்கள் பாவங்களுக்காக அனுபவிக்கும் கொடூர தண்டனைகள் அவரை சஞ்சலம்கொள்ள வைக்கவில்லை. பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்ட, அனைத்தையும் கடந்த, சித்தி பல பெற்ற முனிவர் அல்லவா?! சந்தேகம் எழும் இடங்களில் எல்லாம் சித்ரகுப்தனைத் திரும்பிப் பார்ப்பார். அவரின் குறிப்பை உணர்ந்தவனாக, சித்ரகுப்தனே அவருக்கு அனைத்தையும் விளக்குவார்.

இருவரும் நடந்துவரும் வழியில், ஓர் இடத்தில் ஐந்தடி உயரத்துக்கு கற்பாறை ஒன்றைக் கண்டார் முனிவர்.

“இது என்ன... கற்பாறை?”

“ஒன்றுமில்லை மகாமுனி! ஒரு சிறுவனின் பாவம்... இப்படி வளர்ந்து நிற்கிறது!’’

“சிறுவன் செய்த பாவமா? அது என்ன பாவம்?’’

''பூலோகத்தில் ஒரு முனிவரின் ஆசிரமத்துக்கு தினமும் பல அதிதிகள் வருவது வழக்கம். முனிவரும் வருபவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்து உணவு அளிப்பார். அந்த முனிவருக்கு ஒரு பிள்ளை. அந்தப் பிள்ளை மிகவும் சேட்டைக்காரன். எப்போதும் ஏதாவது குறும்புகள் செய்துகொண்டே இருப்பான். அதிதியாக வருபவர்களுக்கு முனிவர் பரிமாறும் உணவில் சிறு சிறு கற்களைப் போட்டு, அவர்கள் சாப்பிடும்போது படும் கஷ்டத்தை ரசித்துப் பார்ப்பான். அப்படி அவன் அதிதிகளுக்கு செய்த பாவமான அந்தக் கற்கள்தான் சிறுவன் வளர வளர சிறு பாறையாக இப்படி வளர்ந்து நிற்கிறது. விதி முடியும் நேரத்தில் அவன் யமலோகத்துக்கு வரும்போது இந்தப் பாறையை அவன் உண்ண வேண்டும். இதுதான் அவனுக்கான தண்டனை'' என்றான் சித்ரகுப்தன்.

அசந்துபோனார் முனிவர். இருவரும் நடந்தார்கள். முனிவருக்கு அந்தச் சிறுவன் யார் என அறிந்துகொள்ள ஆர்வம். இது எங்கோ நடந்ததை தான் அறிந்ததாக அவருக்குள் ஒரு நினைவு நிழலாட்டம். ஆனால், சித்ரகுப்தனிடம் கேட்கத் தயக்கம். அவன் வேறுபுறம் சென்றதும், ரிஷி தன் ஞான திருஷ்டியில் அந்தச் சிறுவன் யார் எனப் பார்த்தார். அது வேறு யாரும் அல்ல... சாட்சாத் அவரேதான்.  

தன் தவறை உணர்ந்தார், யமதர்மனிடம் போனார். நடந்ததைச் சொன்னார்.

யமதர்மா... நான் முக்தி பெற்று இறைவனடி சேர விரும்புகிறேன். அதற்குத் தடையாக நிச்சயம் இந்தக் கல் இருக்கும். எனவே, இந்த ஜன்மத்திலேயே அந்தப் பாவத்தைப் போக்க விரும்புகிறேன். நானே கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கல்லை தின்று செரித்துவிடுகிறேனே...’’

முனிவரின் கோரிக்கையை யமதர்மன் ஏற்றான். கல்லைச் சிறிது சிறிதாக அரைத்து உண்டார் முனிவர். `சிலா’ என்றால் கல் என்று பொருள். கல்லை உண்டவர் என்பதால் அந்த முனிவர், `சிலாதர்’ ஆனார்.

எத்தனை சக்தி பெற்றவராக இருப்பினும், எண்ணற்ற தவம், ஞானம் பெற்றவராக இருந்தாலும், ஒருவர் பிறருக்கு செய்யும் தீமை அவரைச் சும்மா விடாது. பெரும் கர்ம வினையாக வளர்ந்துகொண்டே போகும். ஒருநாள் மொத்தமாகத் திரும்பக் கிடைக்கும். அப்போது நாம் அந்த கர்ம வினையை அனுபவித்தே தீர்க்க வேண்டும்.! இதை உணர்ந்தவர்கள் எறும்புக்குக்கூட இன்னல் விளைவிக்க நினைக்க மாட்டார்கள். சிலாதரின் கதை எத்தனை யாகம் ஹோமம் தவம் பரிகாரம் இறைவழிபாடு செய்தாலும் நம் கர்மவினை நம்மை விட்டு அகலாது அதை கல் போல் மனம் இல்லாமல் உண்டு அனுபவித்து கழிக்க வேண்டும் இந்த நீதியைத்தான் அழுத்தமாக உணர்த்துகிறது.

அயோத்தி ராமர் கோவில்

161 அடி உயரம், 318 தூண்கள், 300 கோடி... பிரமாண்டமாகத் தயாராக இருக்கும் அயோத்தி ராம் மந்திர்!


சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் உலகின் மூன்றாவது பெரிய இந்துக் கோயிலாக அயோத்தி ராம் மந்திர் அமைய உள்ளது.

உலகில் மிகப்பெரிய கோயில்களில் பெரியது கம்போடியா, அங்கூர்வாட்டில் சுமார் 401 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள விஷ்ணு ஆலயம். இரண்டாவதாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் 155 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிந்து காணப்படுகிறது. இந்த இரண்டு கோயில்களுக்கும் அடுத்த பெரிய கோயிலாகத் திகழப்போகிறது அயோத்தியில் உருவாகும் ராம் மந்திர். சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் வளாகம் அமைய இருக்கிறது.

நாகர் கட்டடக் கலை வடிவில் அமைய இருக்கும் இந்தத் திருக்கோயில் சுமார் 84,000 சதுர அடி பரப்பளவில் அமைய இருக்கிறது. 5 குவி மாடங்களோடும் மூன்று தளங்களோடும் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோயிலின் நீளம் 300 அடியாகவும் அகலம் 280 அடியாகவும் உயரம் 161 அடியாகவும் இருக்கும். 20 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட வரைபடத்தில் உயரம் 141 அடியாக இருந்தது. தற்போது அது 20 அடிகள் உயர்த்தப்பட்டு 161 அடியாக மாற்றப்பட்டுள்ளது.

மூன்று தளங்களாக அமையவிருக்கும் இந்தக் கோயிலில் ஒவ்வொரு தளத்திலும் 106 தூண்கள் வீதம் மொத்தம் 318 தூண்கள் அமைய உள்ளன.

பூமி பூஜை செய்யப்படும் நிலத்தில் சேர்ப்பதற்காக நாடு முழுவதும் உள்ள புனிதத் தலங்களிலிருந்து மண் மற்றும் புனித நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி ஆகியவற்றிலிருந்து தீர்த்தம் அயோத்திக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கோயில் கட்டிமுடிக்க 300 கோடி ரூபாயும் கோயிலைச் சுற்றியிருக்கும் 20 ஏக்கர் நிலப்பரப்பில் தேவையான வசதிகளை உருவாக்க 1,000 கோடி ரூபாய் வரையிலும் செலவாகும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, விமான நிலையம், சாலை வசதி விரிவாக்கம் போன்ற பல்வேறு நலத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.

கோயில் கட்டிமுடிக்க சுமார் 3.5 ஆண்டுகள்வரை ஆகலாம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோயிலின் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நாளை நடைபெற உள்ளது. இதில் 135 சாதுக்கள் உட்பட மொத்தம் 170 முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான முகூர்த்தமாக 32 நொடிகள் குறிக்கப்பட்டுள்ளது. நாளை (5.8.2020) பிற்பகல் 12.44.08 முதல் 12.44.40 வரை இந்த முகூர்த்தம் அமைகிறது.

அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படும் என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பூமி பூஜை அன்று விநியோகம் செய்வதற்காக 1.25 லட்சம் லட்டுகள் தயாராக உள்ளன. இதற்கு ரகுபதி லட்டு என்று பெயரிட்டுள்ளனர். இவற்றில் 50,000 லட்டுகள் ராம் ஜன்ம பூமி டிரஸ்ட் மூலம் சீதையின் ஜன்ம பூமி என்று கருதப்படும் சீதாமர்கி எனப்படும் பீகாரில் இருக்கும் ஆலயத்துக்கும் அதைச் சுற்றியுள்ள புனிதத் தலங்களுக்கும் அனுப்பப்பட இருக்கிறது.

நிகழ்வையொட்டி அயோத்தி மின் ஒளியில் ஜொலிக்கிறது. எனவே, நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

1989-ம் ஆண்டு இந்த ஆலயம் நிர்மாணிக்கப் பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதைய விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவராக விளங்கிய எஸ்.சி.தீக்‌ஷித், நாடுமுழுவதும் உள்ள மக்களின் உதவியை நாடினார். ஸ்ரீராம் என்று பொறிக்கப்பட்ட செங்கல்களை அயோத்திக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் செங்கல்கள் அயோத்திக்கு அனுப்பப்பட்டன. 31 ஆண்டுகளுக்குப் பிறகு, பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு தற்போதுதான் கோயில்கட்டும் பணி தொடங்க உள்ளது.

நாளை நடைபெற இருக்கும் பூமி பூஜை நிகழ்வு தூர்தர்ஷன் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று ராம் ஜன்ம பூமி டிரஸ்ட் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் உலகெங்கும் உள்ள ராம பக்தர்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தோடு பஜனை செய்து வழிபடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

ஒரே ஸ்லோகத்தில் ஒட்டுமொத்த ராமாயணம்

ராமாயண பாராயணம் என்பது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப்படுவது. ராமாயணத்தின் ஒரு பகுதியைப் பாராயணம் செய்தாலே புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், ஒரு ஸ்லோகம் சொன்னால் முழு ராமாயணமும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள் சான்றோர்கள். அந்த ஸ்லோகம் இதோ...

பூர்வம் ராம தபோவனாதி கமனம் ஹத்வா ம்ருகம் காஞ்சனம்

வைதேஹி ஹரணம் ஜடாயுமரணம் சுக்ரீவ ஸம்பாஷணம்

வாலி நிர்தலனம் ஸமுத்ர தரணம் லங்காபுரி தாஹனம்

பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத் ஹி ராமாயணம்

நாளை பூமி பூஜை நடக்கும் நேரத்தில் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து ராமபிரானின் அருளுக்குப் பாத்திரர் ஆவோம்.

கபீர் தாசர்

ஸ்ரீ கபீர் தாசர்

ஸ்ரீ ராமரை கண்ட கபீர் தாசர்.

சமத்துவத்தின் அடையாளமாகவும், மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் திகழ்ந்தவர் இவர்.

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் ஆணைப்படி
ஸ்ரீ சுகப்பிரம்மரே கபீராக பிறந்தார்.

இவர் பிறப்பு பற்றி இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

நெசவுத் தொழில் செய்யும் ஒரு முகமதிய குடும்பத்தில் இவர் பிறந்தார் என்றும் 

ஒரு பிராமண விதவைக்கு இவர் பிள்ளையாய்ப் பிறந்து ஊர் அவச்சொல்லுக்குப் பயந்து அவளால் கைவிடப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

1440ம் வருடம் காசிக்கருகே ‘லகர்டேலோ’ என்ற ஏரியில் தாமரை மலரில் ஒரு குழந்தை இருந்தது.

அந்த குழந்தையை தமால் என்ற முஸ்லிம் நெசவாளர் ஒருவர் எடுத்து வளர்த்தார்.
அவரின் மனைவி பெயர் ஜீஜா பீபீ

அவருக்கு கபீர் என பெயரை சூட்டினர்.

திருக்குரானை திறந்து பார்த்ததும்
தென்பட்ட கபீர் என்ற சொல்லை பெயராக வைத்தனர்.

கபீர் என்றால் பெரியது என அர்த்தம்.

இறைவனை அழகாக பாடுவதில் திறமை பெற்று இருந்தார்.
ஆதலால் நெசவுத் தொழிலில் அதிக ஆர்வம் இல்லாமல் இருப்பார்.

பாடியபட இரவு நேரங்களில் இவர் ஒரு முழம் நெய்தால் இறைவன் பாட்டை கேட்டபடி இரண்டு முழம் நெய்து கொடுப்பாராம்.

இஸ்லாமியராக இருந்தாலும் ஸ்ரீ ராமரின் மேல் அதீத பிரியம் கொண்டவராக இருந்தார்.

கபீருக்கு தன்யாவுடன் திருமணம் நடந்து, கமல், கமலி என மகனும் மகளும் பிறந்தனர்.

எழுதப் படிக்க தெரியாதவராகவே இருந்தார்.

இராமாநந்தரின் சீடர் இவர்.

பக்திமானான இராமாநந்தர், ஒவ்வொருவருக்குள்ளும், ஒவ்வொன்றுக்குள்ளும் பரம்பொருள் இருப்பதாகக் கூறும் அத்வைதத் தத்துவத்தைப் பின்பற்றிய வைணவக் கவிஞராவார்.

முதலில் கபீரை முறையாகச் சீடராக ஏற்க இராமாநந்தர் திட்டவட்டமாக மறுத்து விட்டார்

இராமநந்தர் கங்கைக்குக் குளிக்கச் செல்லும் வழியிலிருந்த படிகளில் இருள்பிரியாத விடிகாலையில், சாக்கால் தன்னை மூடிக்கொண்டு கிடக்க, கீழேகிடந்த கபீரைத் தெரியாமல் மிதித்துவிட்ட இராமாநந்தர் "இராமா இராமா!" என்று சொல்லிவிட்டதால், வேறுவழியின்றி இராமாநந்தர் கபீரைத் தன் சீடராக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஒருமுறை கோரக்கர் இராமநந்தரை வாதத்திற்கு அழைத்தார்.
கோரக்கரை கபீர்தாசர் எதிர்கொண்டு வாதத்தில் வென்றார்.

நெய்த துணிகளை விற்று குடும்பத்தை நடத்தி வந்தார் கபீர்தாசர்.

தான் நெய்த துணியை விற்கச் சென்றபோது மாயக் கண்ணனின் லீலையால் ஒரு பெரியவர் அவரிடம் வந்து துணியை விலைக்குக் கொடுக்கும்படி கேட்டார்.

விலை பேசிக்கொண்டிருந்தபோதே, அந்தப் பெரியவர் துணியைப் பிடுங்கிக்கொண்டு செல்ல, அவரைத் தொடர்ந்து ஓடிய கபீர், ''ஐயா, துணிக்கு விலை கொடுங்கள்'' என்று கேட்டார்.

பெரியவர் பணம் கொடுக்க மறுத்ததும், கபீர் பெரியவரிடமிருந்த துணியைப் பிடுங்கினார்.

துணி இரண்டாகக் கிழிந்து ஒரு பாதி பெரியவரின் கையிலும், மறு பாதி கபீரின் கையிலும் வந்துவிட்டது.

பெரியவரின் கையில் இருக்கும் துணிக்கான விலையை மட்டுமாவது கொடுக்கும்படி கபீர் கேட்டார்.

அந்தப் பெரியவரோ, ''நான் இந்த வஸ்திரத்தை கண்ணனுக்காகக் கேட்கிறேன். இதற்குப் பணம் கேட்காதே'' என்ற பெரியவர், கண்ணனின் பெருமைகளை விளக்கிக் கூறியதுடன், ''இனி யார் வந்து கண்ணனின் பெயரைச் சொல்லிக் கேட்டாலும் அவர்களுக்குத் துணியைக் கொடுத்துவிடு'' என்று கூறினார்.

கபீர் நெய்த துணிகளை விற்கச் செல்லும்போதெல்லாம், கண்ணனின் லீலையின் காரணமாக யாரேனும் ஒருவர் வந்து கண்ணனின் பெயரைச் சொல்லி, துணியை வாங்கிச் செல்வது வழக்கமாகிவிட்டது.

இதனால் கபீருக்கு வருமானம் இல்லாமல் குடும்பம் வறுமையில் தவித்தது.

ஒருமுறை கபீரின் வீட்டுக்கு இறைவனடியார்கள் 100 பேர் உணவு வேண்டி வந்தனர்.

வறுமையில் வாடிய கபீர், அவர்களின் பசியை எப்படியும் போக்க வேண்டும் என்று எண்ணினார்.

தன் மனைவியை ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்வதற்கு ஒப்படைத்துவிட்டு, அதன் மூலம் பெற்ற பணத்தைக்கொண்டு இறைவனடியார்களுக்கு உணவிட்டார்.

அன்று இரவே ஓர் அரசு அதிகாரி, அந்தச் செல்வந்தரின் வீட்டுக்குச் சென்று கபீரின் மனைவியை மீட்டு வந்து வீட்டில் சேர்ப்பித்தார்.

மனைவி திரும்பி வந்ததைக் கண்டு கோபம் கொண்ட கபீர், மனைவியை அடிக்கக் கையை ஓங்கினார்.

அப்போது அந்த அதிகாரி, ''நான்தான் உன் மனைவியை மீட்டு வந்தேன். வேண்டுமானால் என்னை அடி'' என்று கூறினார்.

கபீர் அவரை அடிக்கக் கையை ஓங்கியபோது, அங்கே அந்த அதிகாரி காணவில்லை.

மாறாக ஶ்ரீராமர் காட்சி தந்தார்.

இறைவனின் தரிசனம் கண்ட கபீர் கலங்கிப்போய் ராமனைத் தொழுது பாடல்கள் புனைந்தார்.

ஸ்ரீகபீர்தாசரின் மகன் கமால் மஹானாக திகழ்ந்தார்.

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய கமால் ஏழு வயதிலேயே தீர்த்த யாத்திரை செல்ல விரும்பினான்.

அவனைப் பிரிய மனமின்றி ஸ்ரீகபீர் முதலில் மறுத்தாலும் பின்னர் போய் வர சொன்னார்.

செல்லும் இடமெல்லாம் இறைவனது நாமத்தின் பெருமைகளைக் கமால் பரப்பினார்.

கூட்டம் கூட்டமாக வந்து அவரைத் தரிசித்த மக்கள் அவரை ஸ்ரீகிருஷ்ணரின் உருவாகவே கண்டனர்.

ஒரு ரத்ன வியாபாரியின் இல்லத்தில் சிலர் கமாலைப்பற்றி இகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

தீராத வயிற்று நோயினால் துன்புற்ற அந்த வியாபாரி, "இந்த நோயைத் தீர்க்க முடிந்தால் கமால் ஒரு மஹான் என நம்பலாம்" என்றான்.

மறுநாள் காலையில் வலியினால் துடித்தபோது முன்தினம் தான் கமாலைப்பற்றிப் பேசியது நினைவுக்கு வந்தது.

கமாலைப் பற்றி நினைத்தவுடனேயே அவனது வயிற்றுவலி மறைந்தது.

உடனே அவர் கமாலைத் தனது வீட்டுக்கு அழைத்து வணங்கி பொற்காசுகள் நிறைந்த ஒரு பையை அளிக்க, கமால் "இதைக் கட்டிக் காத்து வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் திறமை சிறுவனான எனக்கில்லை" என ஏற்க மறுத்தார்.

வியாபாரி அவரே அறியாது அவரது உத்தரீயத்தில் விலையுயர்ந்த மரகதம் ஒன்றை முடித்துவைத்தான்.

வீடு திரும்பி கமால் பெற்றோரை வணங்கும்போதுதான் மரகதம் அவர்கள் கண்ணில் பட்டது.

அதே சமயம் பக்தனுடன் விளையாட விரும்பிய ஸ்ரீஇராமர் ஓர் முதியவராக அங்கு தோன்றி கமால் அந்தப் பச்சைக்கல்லைத் தன்னிடமிருந்து திருடிவிட்டதாகக் கூற ஸ்ரீகபீர்தாசர் தன் மகனை அடிக்கக் கை ஓங்கிவிட்டார்.

இறைவனோ சீதா, லக்ஷ்மண, பரத, சத்ருக்ன, ஹனுமத் சமேதராக அங்கு தோன்றி அந்த சமயத்தில் அங்கு வந்து சேர்ந்த ஸ்ரீஇராமானந்தருக்கும் திவ்ய தரிசனம் தந்தார்.

ஒரு நாள் இரவு களைத்தவர்களாகவும், பசித்தவர்களாகவும் நூற்றுக்கணக்கான சாதுக்கள் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றிருந்த ஸ்ரீகபீர்தாசரின் இல்லத்தைத் தேடி வந்தனர்.

வீட்டிலோ வறுமை. வேறு வழியின்று தந்தையும் மகனுமாக மளிகைக் கடையில் திருடவும் துணிந்தனர்.

சிறுவன் கமால் சுவரிலுள்ள பிளவு மூலம் சென்று பொருட்களை ஸ்ரீகபீரிடம் தந்துவிட்டு அந்தப் பிளவு மூலமாகவே வெளியேறிவிடுவதெனத் திட்டமிட்டுப் பொருள்களை எடுத்துத் தந்தையிடம் தந்துவிட்டுக் கமால் வெளியேறுமுன் கடைக்காரன் வந்துவிட்டான்.

பாதி வெளியேறிய நிலையில் கமாலின் கால்கள் கடைக்காரனின் கைப்பிடியில் சிக்கிக் கொண்டன.

சற்றும் தயங்காது கமால் தந்தையின் இடையில் இருந்த தறிவேலை செய்யும் கூரிய கத்தியை அவர் கையில் தந்து, "என் தலையை வெட்டி எடுத்துச் சென்று விடுங்கள். தலையின்றி அவர்களால் என்னை அடையாளம் காண முடியாது" என கூறி
தலையை வெட்டுங்க என்றான்.

தயக்கத்துடன் ஸ்ரீகபீரும் அவ்வாறே செய்யக் கடைக்காரர் உடலை மட்டும் கொத்தவாலிடம் ஒப்படைத்தான்.

மற்ற திருடர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கட்டும் என நாற்சந்தியில் அந்த உடல் தொங்கவிடப்பட்டது.

விருந்து முடிந்த நிலையில் மறுநாள் சாதுக்கள் பஜனை செய்தவாறே அவ்வழி வர தலையற்ற அந்த உடல் அவர்களைத் தொழுது நின்றது.

சாதுக்களும், கண்ட ஊர்மக்களும், திகைக்க, இறைவன் அசரீரியாக "கபீர்!
உலகிலே மனைவி மக்களிடம் கொண்ட பாசம்தான் வெல்ல முடியாதது.

அவ்விரண்டையும் சாதுக்களுக்குச் செய்யும் சேவைக்காகத் துறந்த உன் பக்தியே உயர்ந்தது.

"அன்பனே! கமால்! எழுந்திரு!" எனக்கூற அடுத்த கணம் கபீரிடம் இருந்த கமாலின் தலையானது வந்து உடலில் சேரக் கமால் சிரித்த முகத்துடன் நாராயண ஸ்மரணத்துடன் எழுந்து சாதுக்களையும், பெற்றோரையும் வணங்கினார்.

ஸ்ரீ கபீரின் தோஹாக்களின் ஆழமான ஆன்மிகக் கருத்துக்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

”கபீரான நான் மிக ஆழ்ந்து சிந்தித்து சொல்கிறேன்: நான் அது (இறைவன்) ஒன்றெனச் சொன்னால், அது இல்லை (தவறாகிப் போகும்), நான் இரண்டு எனச் சொன்னாலும் அதுவும் நிந்தனையாகப் போகும், அது எப்போதும் எப்படி இருக்கிறதோ அது அப்படியே இருக்கட்டும்.” இறைவன் பற்றிய விவாதங்கள் அனாவசியம் என்கிற தொனியில் இருக்கிறது இந்த தோஹா.

”எதுவரை, “நான்” “என்” என்று (அகந்தை என்னுள்) இருந்ததோ, “ஹரி” அங்கு வரவில்லை, எப்போது “ஹரி” அங்கு வந்துவிட்டாரோ, அப்போது, “நான்” “என்” என்று என்னுள் இருந்த அகந்தையைக் காண முடியவில்லை.” கடவுள் இருக்கும் இடத்தில் கர்வம் இருக்க முடியாது என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்கள்.

கபீரின் நேர்மையான ஆணித்தரமான போதனைகள் மக்களை சிந்திக்க வைப்பதாகவும் கவர்வதாகவும் இருந்தன. அவர் தெள்ளத் தெளிவாகச் சொன்னார்.  ”நமது கர்ம வினைகளுக்கானப் பலனை நாமே தான் தீர்த்தாக வேண்டும். நமது நோக்கம் நேர்மையாக இருக்கும் போது பிறருடைய ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் எண்ணி வருந்த வேண்டியதில்லை. அவர்களுடைய பயனற்ற செயல்களின்  விளைவுகளை அவர்களே சந்திப்பர்.”

மிக எளிமையான வாழ்க்கை நடத்தி வந்த கபீரிடம் இருந்த உண்மையான ஞான சக்தி இந்துக்கள், முஸ்லீம்கள் இருபாலாரையும் அவரிடம் ஈர்த்தது. இரண்டு மதங்களிலும் அறிவுக்குப் பொருந்தியவற்றை அவர் ஆதரித்தும், அறிவுக்குப் பொருத்தமற்றதாய் தோன்றியதை மறுத்தும் அவர் வெளிப்படையாகப் பேசினார்.

அதனால் இரு மதங்களில் இருந்தும் எதிர்ப்பு அவருக்கு இருந்த போதும் அவர் போதனைகளைக் கேட்க அவர் குடிசைக்குப் பலர் வந்த வண்ணம் இருந்தனர்.

கபீரின் போதனைகள் இந்து, இஸ்லாமிய மதங்களைக் கடந்து சீக்கிய மதத்திலும் இடம் பெற்றன.

சீக்கியர்களின் தெய்வமும் புனித நூலுமான 'குருகிரந்த சாஹிப்'பில் இடம்பெற்றிருக்கின்றன.

ஆக, மூன்று மதங்களும் போற்றும் மகத்தான ஞானியாக அருள்புரிகிறார்.

இவரது பாடல்கள் இன்றும் இந்திய தேசமெங்கும் பாடப்படுகின்றன.

எளிமையான ஆன்மிக கருத்துகளைக் கொண்ட இவருடைய பாடல்கள் ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி போன்ற பலரையும் கவர்ந்திழுத்தது.

"நெசவு என்ன; பாவு என்ன?
போர்வை நெய்யும் நூல்கள்தான் என்ன?
எட்டு கமலங்கள், ஈரைந்து ராட்டினங்கள்!
ஐந்து மூலப் பொருள்கள். மூன்று போர்வை குணங்கள்.
எல்லாம் சேர்த்து பரமன் போர்வை செய்ய பத்து மாதங்கள்"

இந்த மகானைப் போற்றும் வகையில், மத்திய அரசின் ஜவுளித்துறை சிறந்த நெசவாளருக்கான 'சந்த் கபீர்' விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

கபீரின் பக்தி இயக்கம் கபீர் பந்த் என்றழைக்கப்படுகிறது. அவரது சீடர்களும், பின்பற்றுவோரும் அந்த இயக்கத்தின் மூலம் அவர் போதனைகளைப் பரப்பினார்கள்.

மத ஒற்றுமையை வலியுறுத்தி வாழ்ந்த கபீர் தாசரின் மறைவுக்குப் பின் அவர் உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற சண்டை அவர் உடலுக்கு உரிமை கொண்டாடிய இந்து முஸ்லீம்களிடம் ஏற்பட்டது

கடைசியில் அவர் பிணத்தின் மீதிருந்த துணியை விலக்கிப் பார்த்த போது மலர்கள் மட்டுமே இருந்ததாகவும், அவற்றை அவர்கள் பாதியாகப் பிரித்துக் கொண்டு அவரவர் முறைப்படி அந்திமக் கிரியைகள் செய்தார்கள்.

இன்றும் காசியில் அவருடைய கோயிலும்,
அவர் சமாதியில் மசூதியும் இடம் பெற்று அவர் போதித்த மத ஒற்றுமைக்கு சான்றாய் விளங்குகின்றன.

வாரணாசியில் கபீர் சௌரா என்ற இடத்தில் கபீரின் குடும்பம் வசித்ததாம்.

கபீர் சௌராவிலுள்ள கபீர் மடத்தில் கபீர் தொடர்பான கொண்டாட்ட நிகழ்வுகள் இன்றும் நடத்தப்படுகின்றன.

எங்கே தேடுவாய் என்னை?

நீ செல்லும்
புனித யாத்திரையிலா? இல்லை.

நீ வணங்கும்
உருவங்களிலா? இல்லை.

நீ செல்லும்
கோயில் அல்லது மசூதியிலா? இல்லை.

கபாவிலா அல்லது கைலாசத்திலா? இல்லை.

நான் உன்னுடன் தான் இருக்கிறேன், மனிதா,
உன்னுடன் தான்.

எங்கே தேடுவாய் என்னை?
நீ முணுமுணுக்கும்
பிராத்தனைகளிலா? இல்லை.

நீ கண்முடி அமர்ந்திருக்கும்
த்யானத்திலா? இல்லை.

நீ அனுதினம் அனுசரிக்கும்
நோன்புகளிலா? இல்லை.

கால்மடித்து, கைமடித்து செய்யும்
யோகாசனங்களிலா? இல்லை.

எதுவும் வேண்டாம் என்று
சொல்லும் துறவிலா? இல்லை.

உடலிலா அல்லது அதில்
உறையும் உயிர் சக்தியிலா? இல்லை.

எங்கும் வியாபித்திருக்கும்
அண்ட வெளியிலா? இல்லை.

விதையிலிருந்து விருட்சம் வரச்
செய்யும் இயற்கையிலா? இல்லை.

எங்கே தேடுவாய் என்னை?

தேடு – தேடி என்னைக் கண்டெடு.
தேடும் அந்த தருணத்தில் –
கபீர் சொல்கிறான் தம்பி,
கவனமாகக் கேள்,
உன் நம்பிக்கை எங்கிருக்கிறதோ
அங்குதான் நான் இருக்கிறேன்!

ராமர் பட்டாபிஷேகம்

ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர்  அயோத்திக்கு வருகை புரிந்தார். அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும்  ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும்.

அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீர செயல் என்றார் அகஸ்தியர்.

அதை கேட்டு அனைவரும் ஆச்சரியமாக அகஸ்தியரை பார்க்க ஸ்ரீராமர் ஏதும் அறியா தவர் போல் ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள். மேகநாதன் அவ்வளவு சக்தியுள் ளவனா என்று கேட்க,

அகஸ்தியர் ராமா எல்லாம் அறிந்தவன் நீ  ஆனால் ஏதும் அறியாதவன் போல் லக்ஷ்மண னின் பெருமையை என் வாயாலே கூறவேண் டும் என்றுதானே இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய்,  சரி நானே கூறுகிறேன்.

சபையோர்களே  ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே.

நான் முக கடவுளான பிரம்மா இந்திரனை விடுவிக்க மேகநாதனிடம் கோரிக்கை வைக்க மேகநாதன் இந்திரனை விடுவிக்க வேண்டு மென்றால் தாங்கள் மூன்று அறிய வரங்கள் தர வேண்டும் என நிபந்தனை வைத்தான்.

அவை
1.பதினான்கு ஆண்டுகள் உணவு உண்ணாதவனும்,
2.அதே பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடி கூட உறங்காது இருப்பவனும், 
3.அதே பதினான்கு ஆண்டுகள் எந்த ஒரு பெண் முகத்தையும் ஏறெடுத்து பார்க்காது இருப்பவன் எவனோ அவனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும்..

என்று பிரம்மாவிடம் மூன்று அறியவரங்களை பெற்று இந்திரனை விடுவித்தான். அதனால் மேகநாதனை யாவரும் இந்திரஜித் என்று அழைத்தனர். இப்படி பட்ட மேகநாதனை வதம் செய்த பெருமை லக்ஷ்மணனையே சேரும் என்று கூறி முடிக்க,

ராமர் ஸ்வாமி லக்ஷ்மணன் என்னுடன் பதினா ன்கு ஆண்டுகள் வனவாசம் இருந்த போது அவன் எந்த ஒரு மாதையும் (பெண்ணையும்) ஏறெடுத்து பார்த்ததில்லை என்பதை நான் அறிவேன்.

ஆனால் உணவும் உறக்கமும் இல்லாமல் எப்படி இருந்திருப்பான் என்று கேள்வி எழுப்ப அகஸ்தியர் அனைத்தும் அறிந்து வைத்து கொண்டே கேட்கிறாயே சரி சற்று பொறு உன் கேள்விக்கான விடையை லக்ஷ்மணனிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என கூறி லக்ஷ் மணனை அழைத்து வர ஏற்பாடு செய்தார்.

அகஸ்தியர் சபைக்கு வந்த லக்ஷ்மணன் அண்ணன் ராமரையும் குரு அகஸ்தியரையும் சபையோரையும் வணங்கிய பின் ராமர் தன் சந்தேகத்தை கேட்டார் லக்ஷ்மணா என்னோடு வனவாசம் இருந்தபோது எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமையும் உணவு உண்ணா மையும் உறக்கம் கொள்ளாமையும் இருந்தாய் என அகஸ்தியர் கூறுகிறாரே எப்படி என சபை யோர் முன் விளக்கமுடியுமா.?

லக்ஷ்மணர், " அண்ணா உங்களுக்கு நினைவு இருக்கலாம் ரிஷிமுக பர்வதத்தில் மாதா சீதையை தேடி அலைந்த போது மாதாவால் வீசப்பட்ட அணிகலன்களை சுக்ரீவன் நம்மிடம் காட்டும்போது அன்னையின் பாத அணிகலன் களை தவிர வேறு எதுவும் என்னால் அடையா ளம் காண முடியவில்லை காரணம் அன்னை யின் பாதத்தை மட்டுமே பார்த்து நான் தினமு ம் வணங்குவேன். அதனால் பாத அணிகலன் களை மட்டுமே என்னால் அடையாளம் காண முடிந்தது..."

"அடுத்து வனவாசத்தின் போது நீங்களும் மா தாவும் இரவில் உறங்கும்போது நான் காவல் புரியும் நேரம் நித்ராதேவி என்னை ஆட்கொ ள்ள வரும் நேரம் நான் நித்ராதேவியிடம் ஒரு வரம் கேட்டேன்.."

அம்மா அண்ணன் ராமரையும் என் அண்ணி யான மாதா சீதா தேவியையும் பாதுகாக்கவே நானும் அண்ண னோடு வனவாசம் வந்துள் ளேன். அதனால் எங்கள் வனவாசம் முடியும் வரை என்னை நீ ஆட்கொள்ளவே கூடாது. இந்த வனவாசம் முடியும் வரை  உறக்கமே வரக்கூடாது என வேண்டிக்கொண்டேன்.." நித்ராதேவியும் என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து என்னை பதினான்கு ஆண்டுகள் ஆட்கொள்ள மாட்டேன் என வரமளித்தாள். அதனால் எனக்கு உறக்கம் என்பதே இல்லா மல் இருந்தது வனவாசத்தின் போது.

"மூன்றாவது நம் குருநாதராகிய விஸ்வாமித் திரர் நம் உடல்சோர்வு அடையாமல் இருக்கவும் பசியே எடுக்காமல் இருக்கவும் பலா அதிபலா என்னும் மிகவும் சக்தி வாய்ந்த காயத்திரி மந்திரத்தை நம் இருவருக்கும் அவரது யாகம் வெற்றி பெற காவல் புரிந்ததற்காக உபதேசி த்தார். அந்த பலா அதிபலா மந்திரத்தை தினமும் உச்சரித்தே எனக்கு பசி ஏற்படாமலும் சோர்வு அடையாமலும் பார்த்து கொண்டேன்.." என்று கூற சபையினர் எல்லோருமே லக்ஷ்ம ணனை ஆச்சிரியமாக பார்க்க ஆஞ்சநேயர் அயர்ந்தே போனார். 

லக்ஷ்மணின் ராம பக்தியை நினைத்து ராமர் அரியணையை விட்டு இறங்கி வந்து லக்ஷ்மணனை கண்ணீருடன் ஆரத்தழுவி கொண்டார்.

 *ஜெகம் புகழும்... புண்ணிய கதை ராமனின் கதை மட்டும் அல்ல, லக்ஷ்மணின் கதையும்.*

ஆலங்காட்டு ரகசியம்

ஆலங்காட்டு ரகசியம்

*அது என்ன?.., ஆலங்காட்டு ரகசியம்.....?*

*சிதம்பர ரகசியம் னு ஒன்னு இருப்பது எல்லோருக்குத் தெரியும்.*

*அதுபோல ஆலங்காட்டு ரகசியம்னு ஒன்னும் இருக்கு.*

*நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர்.*

*நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும்.*

*இங்கு சிவபெருமான் வடாரண்யேஸ்வரராககோயில் கொண்டருளுகிறார்.*

*இதை, ரத்தின சபைஎன்று போற்றப்படுகிறது.*

*சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, சிதம்பர ரகசியம் என்பார்கள்.*

*அதுபோல, ஆலங்காடு எனப்படும் இந்த திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. நிறையவர்க்குத் தெரியுமோ?, தெரியாதோ!, தெரியாது.*

*சிவபெருமானைத் தரிசிக்க, காரைக்கால் அம்மையார் கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்று கொண்டிருந்தார்.*

*இப்படி வருவதைக் கண்ட பார்வதி, சிவபெருமானிடம், இவர் யார்? கேட்டாள்.*

*அதற்கு பதிலளித்த சிவபெருமான், இவர்கள் என் அம்மை என்றார்.*

*வெகு அருகே வந்துவிட்ட காரைக்காலம்மையாரை, என்ன வரம் வேண்டும்?என  சிவபெருமான் கேட்டபோது.....*

*அதற்கு காரைக்காலம்மை, எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.*

*அம்மை கேட்ட வரத்தை, அப்படியே ஆகட்டும் என்று அருளினார் சிவபெருமான்.*

*அந்தசமயத்தில், திருவாலங்காடு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னனின் கனவில் அன்றே தோன்றினார் சிவபெருமான்.*

*காரைக்கால் அம்மையார் இங்குள்ள எம் கோயிலில் தங்கப் போகிறார், எனவே எனக்கு பின்புறத்தில், அவருக்காக ஒரு சன்னிதியை நீ எழுப்பும்படி கூறிவிட்டு மறைந்தருளினார்.*

*அதன்படியே அம்மன்னனும், நடராஜருக்கு பின்புறம் உள்ள இடத்தில், சன்னிதியில் பாதியை மறைத்து, சுவர் எழுப்பி கட்டிவித்தான்.*

*சிவபெருமான் அருள் கிடைத்த காரைக்காலம்மையாரும், அதனுள் ஐக்கியமானார்.*

*இன்றுவரை இந்த நிமிட அளவிலும், இங்கு சிவனின் ஆனந்த தாண்டவத்தை காரைக்கால் அம்மையார் தரிசித்துக்* *கொண்டிருப்பதாக ஐதீகம்.*

*இதுவே, ஆலங்காட்டு ரகசியம்*.

*இந்த திருத்தலம் சிவன் கோயிலாக இருந்தாலும், இங்கு பெருமாள் கோவில்களைப் போல பக்தர்களுக்குத் தீர்த்தத்தையே இங்கு வழங்குகின்றனர்.*

*ஆச்சரிய அம்பிகை:*
*நடராஜரின் அருகிலுள்ள சிவகாமியை ஆச்சரிய அம்பிகை என்கின்றனர்.*

*சிவனுக்கு ஈடு கொடுத்து, காளி நடனம் ஆடியதைக் கண்ட அம்பிகை ஆச்சரியப்பட்டாள்.*

*இதனால் அவளுக்கு சமிசீனாம்பிகை என்று பெயர் ஏற்ப்பட்டது.*

 *இதற்கு ஆச்சரியம் அடைந்தவள் என்று பொருள்.*

*இடது கை நடுவிரலை மடக்கி, கன்னத்தில் கை வைக்கப் போகும் விதத்தில் முகத்தில் வியப்பை வெளிப்படுத்தும் இந்த சிலையின் அமைப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.*

*நடராஜர் ஆடிய போது, அவரது உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்கத்திற்கு ஆளாயினர்.*

*சுவாமி அவர்களைத் தன் தலையிலிருந்த கங்கை நீரைத் தெளித்து எழுப்பினார்.*

*இதனடிப்படையில் இங்கு பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படுகிறது.*

*நடுவர்களாக இருவர்:*

*சுனந்தரிஷி என்பவர் சிவநடனம் காண விரும்பி தவமிருந்தார்.*

*இவரைச் சுற்றி புற்று வளர்ந்து நாணல் புல் வளர்ந்து மூடியது.*

*இதனால் இவருக்கு முஞ்சிகேசர் (முஞ்சி நாணல்)என பெயர் வந்தது.*

*அதே சமயம், கார்கோடகன் என்ற நாகமும், செய்த தவற்றுக்கு மன்னிப்பு வேண்டி இங்கு தவமிருந்தது.*

*இருவருக்கும் அருளிய சிவன், நடன போட்டிக்கு அவர்களை நடுவராக இருக்கச் செய்தார்.*

*சிவநடனத்தைக் காணும் பேறு இருவருக்கும் கிடைத்தது.*

*நாட்டிய காளி:*

*நடராஜருடன் போட்டியிட்ட காளிதேவிக்கு தனிக்கோயில்இங்கு உள்ளது.*

*இவள் காலை தூக்க முயன்ற நிலையில் நாட்டிய காளியாக சாந்தமாக வீற்றிருக்கிறாள்.*

*இக்கலிகால வாழ்வு, மிக அபரீத ஆசைகளை உள்ளடக்கிக் கொண்டவை.*

*இதில் வாழ்ந்து வரும்போது, நிறைய வினைப் பெருக்கங்களை பெருக்கி அதன் இயல்பாகவே வாழ்கிறோம்.*

*வாழ்வில் எது கிடைத்தாலும், சேமித்து வைத்தாலும், அது நமக்காக அது சொந்தமாகாது.*

*இறுதியில், நம் இறப்புக்கு அப்புறம், அது நம் உறவுகளுக்கோ, அடுத்தவர்க்கோ போய் விடும், அவர்களுக்கும் இதே நிலைதான்.*

*என்றும் இறுதி வரையும் ஒன்று மட்டுமே நம்மோடு இருக்கும், அது தானம் தர்மம் புண்ணியம் மட்டுமே.*

*இதைச் செய்யாது விட்டோர், பின் விளைவு கண்டு வருந்துவர்.*

*இருப்பினும்,*

 *பிறவாமையைப் பெற்றுக் கொள்வதுதான், கடைசி வழி.*

*நம் செயலும், சிந்தனையும் நல்லதாக இருக்க வேண்டுமென்றால், நாம் சிவநெறிக்குள்ளாக பயணிக்க வேண்டும்.*

*பிறந்தோம், வாழ்கிறோம் என இருந்திடல் கூடாது.*

*இனி இறப்பென்று ஒன்று நமக்கு வருமே?*

*நமக்கு, பிறவா நிலையொன்று ஒன்று வேண்டுமே!, அது முக்கியமல்லவா?*

*இந்த எண்ணம் ஒவ்வொரு ஆன்மாவுக்கும் உயிருக்கும் வர வேண்டும்.*

*இப்பிறப்பில், கர்ம வினைப் பயன்கள் இனி தொடராதிருந்து, பிறவிப்பயனை முடித்து, மீண்டும் பிறவாமையை பெற வேண்டுமே?*

*அதனால்தான்,*

 *பிறப்பை வெறுத்து, பிறவாமைக்கு முற்பட வேண்டுவது.*

*சிவன் இல்லையேல் இப்  புவனம் இல்லை*

*சிவன் இல்லையேல் சலனம் இல்லை!*

*சிவன் இல்லையேல் பயணம் இல்லை!*

*சிவன் இல்லையேல் எதுவும் இல்லை!*

*சிவன் இல்லையேல் சக்தி இல்லை!*

*அந்தச் சிவன் இல்லையேல் எந்த  ஜீவன் இல்லை!*

*சிவனின்றி ஓர்  அணுவும் அசைவதில்லை!*

*என்றும் எதற்கும், எல்லையே இல்லாதவை சிவனே!!*

*ஓம் நமசிவாய*
*அவனருளால் அவன்தாள் வணங்குவோம்!*

 *பகிர்தல் ஒரு மிகச் சிறந்த பண்பாடு மட்டுமல்ல வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்*

ஸ்ரீ ராமரை பற்றிய சந்தேகங்களுக்கான கேள்வியும் பதிலும்.

ஸ்ரீ ராமரை பற்றிய சந்தேகங்களுக்கான கேள்வியும் பதிலும்.

கேள்வி: ஸ்த்ரிஹத்யா (பெண்களைக் கொல்லுதல்), பிரம்மஹத்யா (பிராமணர்களைக் கொல்லுதல்), நிரபராதிகளைக் கொல்லுதல், மாத்ருத்யாக, பித்ருத்யாக, சகோதரத்யாக (தாய்,தந்தை, சகோதரர்களைத் துறத்தல்) - இப்படி அனைத்து வித தோஷங்களும் உள்ளவே ஸ்ரீராமனிடம்?

பதில்:  ‘நற்குணங்களை மட்டுமே கொண்டவன், தோஷங்களே இல்லாதவன் - ஸ்ரீராமன்’ என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

கே: ‘அவத்யா: ஸ்த்ரி ஈத்யாஹு: தர்மஞா: தர்மனிஸ்சயே’ (மகாபாரதம் 1-147-29). பெண்களைக் கொல்லக்கூடாதென்று மகாபாரதம் சொல்கிறது. ஆனால் ஸ்ரீராமன் முதன்முதலில் கொன்றதே தாடகி என்ற பெண்ணைத்தான். இது தப்பில்லையா?

ப: நீங்கள் சொன்ன மகாபாரதத்தின் வசனம், துஷ்ட பெண்களைக் கொல்லக்கூடாதென்று சொல்லவில்லை. சமூகத்திற்கு ஆபத்து விளைவிப்பவராகவும், பற்பல சஜ்ஜனர்களை துன்புறுத்துபவராகவுமாக இருந்தால், அத்தகைய பெண்ணைக் கொல்வது தப்பல்ல.

கே: ஆனாலும், முதலில் பெண்ணையே கொல்ல வேண்டியிருந்ததா?

ப: இதற்குப் பின்னால் ஒரு உத்தமமான தத்துவம் உள்ளது. இன்றைய சமூகத்திற்கு இதில் ஒரு நீதிக்கதை இருக்கிறது. ஒரு பெண், தன் வீட்டினை கட்டிக் காப்பாற்றிக்கொண்டு, கணவனை / மக்களை நன்கு பார்த்துக் கொண்டு, ஸ்ரீஹரி மகிழ்ச்சியடையும்படி இருக்கவேண்டும். இதற்கு எதிராக நடந்துகொள்பவள், நல்ல மனைவியாக இல்லாமல், வீட்டை நாசம் செய்பவளாக ஆகிறாள். மேலும் இவளால், ஊர், நாடு ஆகியவையும் நாசமாகின்றன. இப்படிப்பவர்களை, பெண் என்று கருதி, திருத்தாமல் விடுவது தப்பாகும். ஸ்ரீராமன் தன் அவதாரத்தின் துவக்கக் காலத்தில் இதையே சுட்டிக் காட்டியிருக்கிறார்.

கே: அப்படியென்றால், சூர்ப்பணகையை ஏன் கொல்லவில்லை?

ப: கொல்லக்கூடாது என்றில்லை. ஆனால் அவளின் பின் இருக்கும் அனைத்து துஷ்டர்களையும் ஒருசேர கொல்லவேண்டும் என்பதால், ஸ்ரீராமன் செய்த தந்திரமே அது.

கே: ‘என்னைத் திருமணம் செய்துகொள்’ என்று சொன்னதற்காக, சூர்ப்பணகையின் மூக்கு, காதுகளை கத்தரித்து விடலாமா?

ப: சூர்ப்பனகை ஒரு விதவை. காமுகள். பொய் பேசுபவள். மோசடி செய்பவள். சீதையை கொன்று தின்பதற்கு வந்தவள். பற்பல ரிஷி முனிவர்களின் தவத்திற்கு இடையூறு செய்தவள். இப்படி எல்லாவற்றிற்கும் சேர்த்து ஸ்ரீராமன் அவளுக்கு தண்டனை கொடுத்தார்.

கே: வேடர்குல சபரியின் எச்சிலை ஸ்ரீராமன் எதற்கு தின்றார்?

ப: வால்மிகி ராமாயணத்தில் இப்படி சொல்லப்படவில்லை. ஆசார்யரின் தாத்பர்ய நிர்ணயத்திலும் இந்த விஷயம் இல்லை.

கே: தசரதருக்கு இஷ்டமில்லாதபோதும் ஸ்ரீராமன் ஏன் காட்டிற்குப் போக வேண்டியதாயிற்று?

ப: இப்படி கேட்பதே தவறு. இரு வரங்களைக் கொடுக்கிறேன் என்று தசரதன், கைகேயிக்கு வாக்கு கொடுத்திருந்தார். ஆகையால், தசரதனுக்கு இஷ்டமிருந்ததோ இல்லையோ, ஸ்ரீராமனை காட்டிற்கு அனுப்பவேண்டியதே ஆயிற்று. தந்தையின் வாக்கிக்கேற்ப ஸ்ரீராமனும் காட்டிற்குக் கிளம்பினார். தாய் தந்தையரிடம் எப்படிப்பட்ட பக்தியை காட்டவேண்டும் என்பதை ஸ்ரீராமன் செய்து காட்டினார்.

கே: தங்க மான் இருப்பதற்கு சாத்தியமே இல்லை என்று ஸ்ரீராமனுக்கு தெரிந்திருக்கவில்லையா? அற்பப் பொருளின் மேல் ஆசைகொண்டு ஏன் அந்த மானுக்குப் பின்னால் ஓடினார்?

ப: மாரீசன் என்னும் அரக்கனை கொல்வதற்காக ஓடினாரே தவிர, தங்க மானுக்காக அல்ல. மற்றும் மாயா-சீதையை ராவணன் கடத்தவேண்டும் என்பதற்காக ஓடினார்.

கே: ஸ்ரீராமனின் நற்குணங்களைப் பற்றி மாரீசன், ராவணனிடம் எடுத்துக் கூறினான். ஆகையால், மாரீசன் சாத்வீகன்தானே?

ப: சாத்வீகன் என்றிருந்தால், ராவணனை விட்டு ஓடிவந்து ராமனிடம் சரணாகதி அடைந்திருக்கவேண்டும். அதுமட்டுமல்லாமல், உயிர் விடும்போது ‘ஹே சீதா, ஹே லட்சுமணா’ என்று ராமனின் குரலில் கூவினான். இவற்றினாலேயே மாரீசன் சாத்வீகன் இல்லை என்று நிரூபணமாகின்றது.

கே: ராவணன் சீதையை அபகரித்தான். அந்த சந்தர்ப்பத்தில், சீதை பரபுருஷனை (கணவன் அல்லாத பிற ஆண்களை) தொடுவதுபோல் ஆயிற்றா?

ப: ராமனின் மனைவியான சீதை, மாயாசீதை என்னும் பொம்மையை அக்னிதேவரிடமிருந்து செய்வித்து, வேதவதி என்ற பெயருடன் தனக்கு பதிலாக வைத்து, தான் கைலாசத்திற்குப் புறப்பட்டாள். ராவணன் அபகரித்தது சீதாதேவியை அல்ல. மாயாசீதையை.

கே: எப்படியிருந்தாலும், சீதை ராவணனிடம் இருந்தபோது ராவணன் சீதையை தொட முயற்சிக்கவில்லையா?

ப: இதற்கு புராணங்களில் சுவாரசியமான கதை உண்டு. ராவணன் மற்ற பெண்களை தொட்ட மாத்திரத்தில் மரணம் அடைவான் என்று சாபம் பெற்றிருந்தான். ஆகவே ராவணன் உயிரோடு இருந்த காரணத்தில், அவன் மாயாசீதையைக்கூட தொட்டிருக்கவில்லை என்று தெரிகிறது.

கே: அண்ணன் தம்பியான வாலி சுக்ரீவருக்கு நடுவில் ராமன் ஏன் மூக்கை நுழைக்கவேண்டும்?

ப: சுக்ரீவன் ராமனிடம் சரணடைந்தான். வாலியைக் கொல்லவேண்டும் என்று வேண்டினான். சரணாகதி அடைந்தவரின் வேண்டுதலை நிறைவேற்றுவது ஸ்ரீராமனின் இயல்பாகும்.

கே: நிரபராதியான வாலியை ஏன் ராமன் மறைந்திருந்து கொன்றார்?

ப: தேவைதைகள் தங்களின் அவதார நோக்கத்தை முடித்து, மறுபடி மூலரூபத்தை அடைவதற்கு ஆவலுடன் இருப்பார்கள். வாலியின் அவதார நோக்கம் முடிந்திருந்தது. ராமனின் சேவை மிச்சம் இருக்கவில்லை. ஆகையால், வாலியின் மகிழ்ச்சிக்காகவே ராமன் இப்படி மறைந்திருந்து கொன்று வாலிக்கு அருளினார்.

கே: உங்கள் பதில் மனதிற்கு திருப்தி அளிக்கவில்லை. வாலி-சுக்ரீவன் கதையை பார்க்கும்போது, ராமன் சுக்ரீவனை மட்டும் ஏன் ஆதரித்தார்?

ப: இதற்கு ஸ்ரீபுரந்தரதாசர் பதில் அளிக்கிறார். ‘அனுமன நம்பித சுக்ரீவ கெத்த, அனுமன நம்பத வாலியு பித்த’. எந்த பக்தன் ஜீவோத்தமரான வாயுதேவரை நம்புகிறாரோ, அவரை ஸ்ரீஹரி என்றும் கைவிடுவதில்லை. உத்தம ஜீவியாக இருந்தாலும், வாயுதேவரை வணங்கவில்லை என்றால், அவரை ஸ்ரீஹரி கைவிடுகிறான் என்று வாலி - சுக்ரீவன் கதையின் மூலம் ஸ்ரீராமன் தெரிவிக்கிறார்.

கே: அண்ணனுக்கு துரோகம் செய்த விபீஷணனை ஸ்ரீராமன் தன் பக்கம் சேர்த்துக்கொண்டது சரியா?

ப: விபீஷணன் அண்ணனை துறந்தான் என்பதைவிட ராவணனே விபீஷணனை துரத்தினான் என்பதே சரி. அந்த சமயத்தில் விபீஷணன் ராமனிடம் சரணடைந்தான். அனுமனை கலந்தாலோசித்துவிட்டு, ராமன் விபீஷணனை சேர்த்துக் கொண்டார். இதன்மூலம் ஒரு மிகப்பெரிய தத்துவத்தை எடுத்துக் காட்டினான். விஷ்ணுபக்தி யாரிடம் இருந்தாலும் அவர் வெல்வர். விஷ்ணுத்வேஷம் யாரிடம் இருந்தாலும் அவர் தோற்பர்.

கே: ராவணன் ஒரு பிராமணன். இவனைக் கொன்றதால் ராமனுக்கு பிரம்மஹத்யா தோஷம் வரவில்லையா?

ப: வர்ணம், தர்மம் எதுவும் முக்கியமில்லை. ஸ்ரீஹரி பார்ப்பது நல்ல நடத்தையை மட்டுமே. துஷ்டனான ராவணனிடத்தில் எந்தவித பிராமணத்வமும் இருந்திருக்கவில்லை. அவனைக் கொன்றதன் மூலம் ஸ்ரீராமனுக்கு கடுகளவு தோஷமும் வரவில்லை.

கே: மகாபதிவிரதையான சீதையை, ஸ்ரீராமன் ஏன் அக்னி பிரவேசம் செய்யுமாறு கூறினார்?

ப: அன்றைய காலத்தில் இது நடைமுறையிலிருந்த தண்டனையே ஆகும். யாராவது திருடிய குற்றத்தில் பிடிபட்டால், காய்ச்சிய இரும்புக் கம்பியை பிடிக்கச் செய்வது ஒரு தண்டனை. அப்படி அவன் திருடியிருக்கவில்லையெனில், நெருப்பு அவனை சுட்டிருக்காது. குற்றம் செய்திருந்தால் மட்டுமே சுட்டிருந்தது. ஸ்ரீராமனுக்கு சீதை ஒரு பதிவிரதை என்று தெரிந்திருந்தது. தோஷமற்றவளான சீதையை நெருப்பு சுடாது என்றும் தெரிந்திருந்தது. இதனை உலகிற்கு தெரியப்படுத்தவே, அக்னிப் பிரவேசம் செய்யுமாறு பணித்தார்.

கே: சீதை தோஷமற்றவள் என்று தெரிவிப்பதற்கு வேறெதுவும் வழி இருக்கவில்லையா?

ப: அக்னிபிரவேசம் செய்யச் சொன்னதற்குப் பின் இன்னொரு காரணமும் இருந்தது. அக்னிப் பிரவேசம் செய்ததும், மாயாசீதையின் உருவிலிருந்த வேதவதி, தன் தந்தையான அக்னி தேவனின் வீட்டிற்குச் சென்றாள். கைலாசத்தில் சிவன் பார்வதியிடம் பூஜை / மரியாதை பெற்றுக்கொண்டிருந்த சீதாதேவி அக்னியிலிருந்து வெளிவந்தாள். இதற்காக நடைபெற்றதே அக்னிப் பிரவேசம்.

கே: அனைவரும் ராம ராஜ்யத்தைப் புகழ்கின்றனர். ஆனால், சூத்ரரான சம்பூகனை கொன்று ஸ்ரீராமன், சூத்ரரிடம் விரோதம் கொண்டார். இது எப்படி சரியாகும்?

ப: ஆம். ஸ்ரீராமன் சம்பூகனை கொன்றார். ஆனால் சம்பூகனை சூத்திரன் என்பதற்காக கொல்லவில்லை. ராவணனை பிராமணன் என்பதற்காக கொல்லவில்லை. சம்பூகனிடமிருந்த கெட்ட நோக்கத்தைக் கண்ட ராமன் அவனைக் கொன்றார்.

கே: சூத்திரன் தவம் செய்யக்கூடாது என்பதற்காகவே அவனைக் கொன்றார். சரிதானே?

ப: சம்பூகன் தவம் செய்தது சரியே. பார்வதியின் வரத்தின் மூலம் ஒரு கல்பத்திற்கான ஆயுளை பெற்றிருந்தான். மறுபடி, தான் பார்வதியின் கணவன் ஆகவேண்டுமென்ற கெட்ட நோக்கத்துடன் தவத்தை செய்யத் துவங்கினான். அதற்காகவே ராமன் அவனைக் கொன்றார்.

கே: யாரோ ஒரு சலவைத் தொழிலாளியின் பேச்சைக் கேட்டு ஸ்ரீராமன் சீதையை ஏன் தியாகம் செய்தார்?

ப: ‘ஏவம் பஹுவிதா வாசோ வதந்தி புரவாஸின: | நகரேஷு ச சர்வேஷு ராஜன் ஜனபரேஷு ச’ என்று வால்மிகி ராமாயணம் சொல்வதைப் போல் அனைத்து வீடு, சாலை, நகரங்களிலும் அனைவரும் சீதையின் பதிவிரதத்தைப் பற்றி சந்தேகப்பட்டு பேசத் துவங்கினர். மக்களுக்கு இருந்த சந்தேகத்தைப் போக்க வேண்டியது அரசனின் கடமை என்பதால், ஸ்ரீராமன் சீதையை உலகத்தின் பார்வைக்காக தியாகம் செய்தார். ஒரு அரசனுக்கு மனைவியின் நலனைவிட நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்பதை நிரூபித்தார்.

கே: தன் வாழ்க்கை முழுவதும் அண்ணனின் சேவை செய்த லட்சுமணனைக் கூட ஸ்ரீராமன் இறுதியில் விலக்கினார். இது தப்பில்லையா?

ப: ஸ்ரீராமன் சிவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, வேறு யார் வந்தாலும் உள்ளே விடாதே என்று லட்சுமணனிடம் சொல்லியிருந்தார். ஆனால், துர்வாசர் வந்தபோது லட்சுமணன் அவரை உள்ளே விட்டான். என் பேச்சை மீறினாய் என்று கூறி ஸ்ரீராமன் லட்சுமணனை விலக்கினான். இது உண்மையே. ஆனால், லட்சுமணனின் அவதார காலம் முடிவடைந்திருந்தது. லட்சுமணன் சாக்‌ஷாத் ஆதிசேஷன். ராமன் பரந்தாமத்திற்கு செல்வதற்கு முன் தன் படுக்கையான சேஷதேவரை தன்னிடத்திற்கு அனுப்பினார். அதற்காக செய்யப்பட்ட நாடகமே இதுவாகும்.

கே: இதுவரை கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் வந்த பதில்கள் திருப்திகரமாகவே இருந்தன. ஆனால், ராமனைப் பற்றிய பதில்களினால், ஸ்ரீராமன் ஒரு சிறந்த அரசன் என்று மட்டுமே தெரிகிறது. ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீராமன் என்கிற எண்ணம் வருவதில்லை. இதற்கு உங்கள் பதில் என்ன?

ப: ‘மர்த்யாவதாரஸ்தி ஹமர்த்யாசிக்‌ஷணம்’ என்கிற வாக்கியத்தின்படி ஸ்ரீஹரி அவதாரம் எடுக்கும்போது சாதாரண மனிதனைப் போலவே நடமாடுகிறார். ஆனாலும், அவ்வப்போது தன் பற்பல நற்குணங்களை நிருபிக்கிறார்.

கே: ராமாயணத்தைப் பற்றி அந்த காலத்தில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தன. லட்சுமணன் சீதையின் மேல் மோகம் கொண்டிருந்தான். சேதுவை ராமன் கட்டவில்லை. ராவணன் மற்றும் சீதைக்கு சம்பந்தம் இருந்தது - ஆகியன. இந்த கருத்துகளின் மேல் பல புத்தகங்களையும் எழுதியிருக்கின்றனர். இதற்கு உங்கள் பதில் என்ன?

ப: தம்மிடம் இருக்கும் தோஷங்களை ஸ்ரீஹரியின் மேல் போடுவது துஷ்டர்களின் லட்சணமாகும். ஆதாரமே இல்லாமல் சொந்த கற்பனையில் உருவான கட்டுக்கதைகள் ஆகையால் அவை நிரூபிக்கப்பட முடியாமல் தோற்றுப் போகின்றன. இவற்றிற்கு பதில் சொல்லவே தேவையில்லை. மற்றும் முன்னரே திரு. ஹயவதன புராணிகர் ‘சீதாயன’ என்னும் தனது புத்தகத்தில் இத்தகைய கட்டுக்கதைகளுக்கு பதில் அளித்திருக்கிறார். இன்னொரு வாரப் பத்திரிக்கையில் வந்திருந்த சில கெட்ட விமர்சனங்களுக்கு, நம் குருவான திரு. விஷ்வேச தீர்த்த ஸ்ரீபாதங்களவர் தம் ஒரு கட்டுரையில் பதில் அளித்து, கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

கே: ராமனை எப்படி வணங்கவேண்டும்?

ப: ஸ்ரீராமனை நம் இதயக் கமலத்தில் நினைத்து, சரணாகதி அடைய வேண்டும். ‘ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே, சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே’, என்று ருத்ரதேவர் பார்வதிக்கு உபதேசித்த இந்த மந்திரத்தை தினமும், எந்நேரமும் ஜபித்தவாறே இருக்கவேண்டும்.

கே: நம் வாழ்க்கைக்கான பாடங்களாக ராமாயணத்தில் காணப்படும் பல்வேறு சம்பவங்களில் ஒரு உதாரணத்தை சொல்லுங்களேன்.

ப: நானும் காட்டிற்கு வருகிறேன் என்று சீதாதேவி ராமனிடம் அடம் பிடிக்கிறாள். ஸ்ரீராமன் திரும்பத்திரும்ப காட்டிற்கு வரவேண்டாம் என்றாலும், அவள் ஒப்புக்கொள்வதில்லை. நான் ஒரு பதிவிரதை. பதிவிரதைகளுக்கு கணவனை விட்டு வேறு யாரும் கதியில்லை.

ந பிதா ந ஆத்மஜோ ந ஆத்மான மாதா ந சகேஜன: |

இஹ ப்ரேத்ய ச நாரீணாம் பதிரேகோ கதி: சதா ||

தந்தை, மகன், தாய், உறவினர் இப்படி யாருமே ஒரு பெண்ணிற்கு ஆதரவளிப்பர் இல்லை. இந்த உலகத்திலும், பர உலகத்திலும் கணவன் ஒருவனே ஒரு பெண்ணிற்கு கதி. இந்த ஸ்லோகத்தைச் சொல்லி சீதை காட்டிற்குப் புறப்பட்டாள்.

இதே சமயத்தில், லட்சுமணனின் மனைவியான ஊர்மிளையும், தானும் வனவாசத்திற்கு காட்டிற்கு வருகிறேன் என்று லட்சுமணனிடம் அடம் பிடிக்கிறாள். சீதை சொன்னதைப் போல் எனக்கும் கணவனே கதி. என்னை விட்டு தனியே காட்டிற்குப் போகாதீர்கள் என்றாள். அப்போது லட்சுமணன், ஊர்மிளைக்குச் செய்த உபதேசம் மிகவும் அருமையானது.

ஹே ஊர்மிளா. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை இருக்கின்றது. நீ என்னுடன் வனவாசத்திற்கு வந்தால், நான் உன் சேவை செய்யவோ? அல்லது அண்ணன் / அண்ணிக்கு சேவை செய்யவோ? வீட்டில் இருப்பதே உன் போன்ற பதிவிரதைக்கு அழகு. சீதைக்கு அண்ணனுடன் காட்டிற்குச் செல்வதே பதிவிரதம். அனைவரின் பதிவிரதமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. புரிந்துகொள். நான் ஸ்ரீராமனின் தாசன். நீ தாசனின் மனைவி. தாசியாக இருந்து, கணவனின் தாஸ்யத்திற்கு விரோதம் வராமல் நடந்துகொள்ளவேண்டியது உன் கடமை.

இந்த கதையிலிருந்து தெரிவது என்னவென்றால் - அவரவர் கடமைகளை சரிவர செய்து வாழ்க்கையை நடத்தவேண்டும் என்பதே.

கே: எல்லாவற்றையும் ஏன் சரியாகத் தெரிந்து கொள்ளவேண்டும்?

ப: சாக்‌ஷாத் மகாவிஷ்ணுவே ஸ்ரீராமனாக அவதரித்தார். இவர் பற்பல நற்குணங்களால் நிரம்பியவர். எந்தவித தோஷங்களும் அற்றவர். இவரது அவதாரத்தைப் பற்றி, அதன் கதைகளைப் பற்றி முழுவதுமாக அறியும் சாமர்த்தியம் சாமான்ய மனிதர்களுக்கு இருப்பதில்லை. ஆகவே எந்தவித களங்கங்களையும், தோஷங்களையும், பொறுப்பில்லாமல் ஸ்ரீஹரியின்மேல் செலுத்தக்கூடாது. ராமாயணம் முதலான புனிதமான கிரந்தங்களை சரியாகப் படித்து புரிந்துகொண்டால், மோட்சம் கிடைக்கும். இதையே தவறாகப் புரிந்துகொண்டால் தமஸ் (கெட்டது) கிடைக்கும்.

கே: ராமாயணத்திலிருந்து நமக்கான முக்கிய செய்தி என்ன?

ப: அனுமன் மூலமாக தன் மோதிரத்தை ஸ்ரீராமன் சீதைக்கு அனுப்பினார். தனது அபய ஹஸ்தம்(ஆசி) எப்போதும் இருக்கிறது என்னும் செய்தியை அனுப்பினார். சீதை அதே அனுமனின் மூலமாக சூடாமணியை கொடுத்து அனுப்பினாள். இதன் மூலம், தான் ராமனுக்கு எப்போதும் தலை வணங்குகிறேன் என்ற செய்தியை அனுப்பினாள். அதைபோல், நாமும் அனுமன் மூலமாக அனைத்தையும் ஸ்ரீஹரிக்கு சமர்ப்பணம் செய்தால், ஸ்ரீஹரி தனது அபய ஹஸ்தத்தை நமக்குக் காட்டி அருளுவார் என்பதே முக்கியமான செய்தியாகும்.

கே: தந்திரசார சங்க்ரஹத்தின்படி ஸ்ரீராமசந்திரனை எப்படி வணங்கவேண்டும்?

ப: ஷ்யாமம் ரவீந்திரமித தீதிதிகாந்தியுக்தம்

ஞானம் ஷரஞ்ச தததம் ப்ரியயா சமேதம் |

ஸ்வாத்மஸ்வ ரூபமமிதம் ஹனுமன்முகேஷு

சந்தர்ஷயந்தமஜிதம் ஸ்மரதோருகீர்பி: || 26 ||

பற்பல சூரியர்களைக் காட்டிலும் அதிகமாகப் பிரகாசிப்பவரும், பற்பல சந்திரர்களைக் காட்டிலும் அதிக ஒளி தருபவரும், ஞான முத்திரை, அம்புகளை கைகளில் தரித்திருப்பவரும், உயர்வான வேதவசனங்களால் அனுமன் முதலானோர்க்கு தன் ஸ்வரூபத்தை உபதேசித்துக் கொண்டிருப்பவரும், மற்றவர்களால் வெற்றி கொள்ளப்படாதவரும், ஸ்யாம வண்ணத்தவரும், சீதாதேவியுடன் கூடியவரான ஸ்ரீராமசந்திரனை தியானியுங்கள்.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

சாலிவாகனன்

சாலிவாகனன்

விக்கிரம சகாப்தம் சாலிவாகன சகாப்தம் என இரண்டு பெயர்களைப் பஞ்சாங்கங்களில் பார்த்திருப்போம்.

இவற்றில் விக்கிரம சகாப்தம் என்பது விக்கிரமாதித்தன் பெயரால் வழங்கப்படுகிறது.

சாலிவாகன சகாப்தம் என்று தன் பெயரில் ஒரு சகாப்தத்தையே உருவாக்கிய அந்த மாவீரர்
சாலிவாகனன்
அச்வ சாஸ்திரம், அலங்கார சாஸ்திரம், நவரத்தின சாஸ்திரம் எனும் நூல்களை உருவாக்கிய அறிவாளி.

தென்னிந்தியாவில் மட்பாண்டங்கள் செய்யும் குலால சமூகத்தினர்,

சாதவாகனனை தங்கள் குலத்த்தின் முன்னவர் எனப் போற்றி கொண்டாடுகிறார்கள்.

சாலிவாகனன் குறித்த செய்திகள் பவிஷ்ய புராணத்தில் குறிப்புகள் உள்ளது.

சாலிவாகன வரலாறு

பைடணபுரியில் சுலோசனன் என்பவர் வாழ்ந்து வந்தார்.

மனைவியை இழந்த அவர்,
தன் மகள் சுமித்ரையை தாயன்போடு வளர்த்து வந்தார்.

நாட்டியமாடுவதில் வல்லவளான சுமித்ரையின் பேரழகிலும், கலைத்திறமையிலும் மோகம் கொண்ட ஆதிசேஷனான நாகராஜா, அவள் மீது காதல் கொண்டான்.

அவளை காந்தர்வ விவாகமும் செய்துகொண்டான்.

இருவரும் நெருங்கிப்பழகியதால் சுமித்ரை கருவுற்றாள்.

இவ்விஷயம் ஊரில் பரவியது. அரண்மனைக்கும் விஷயம் சென்றது.

அரசன் சுலோசனனையும், சுமித்ரையையும் ஊரை விட்டு விலக்கி வைக்க உத்தரவிட்டான். தந்தையும், மகளும் செய்வதறியாது திகைத்தனர்.

சுமித்ரை தன் நிலைக்கு காரணமான ஆதிசேஷனை நினைத்து வணங்கினாள்.

ஆதிசேஷன் அவள் முன்தோன்றி, “”பெண்ணே! உன் வயிற்றில் இருக்கும் குழந்தை சாதாரண குழந்தை அல்ல! தெய்வீகம் நிறைந்த அப்பிள்ளை அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்குவான். இந் நாட்டை ஆளப்பிறந்தவன் அவன். பெரும் புலவன் என்றும் புகழ் பெறுவான். மன்னனின் ஆணையை ஏற்று வெளியூருக்குச் செல். எல்லாம் நலமாய் நடக்கும்,” என்று ஆசி அளித்துவிட்டு மறைந்தான்.

சுலோசனன் சுமித்ரையை அழைத்துக் கொண்டு புரந்தரபுரம் என்னும் ஊருக்குச் சென்று ஒரு குயவர் வீட்டில் தங்கினான்.

அங்கு சுமித்ரை ஆண்குழந்தை பெற்றெடுத்தாள்.

பிள்ளைக்கு “சாலிவாஹனன்’ என்று பெயரிட்டனர்.

பிள்ளையிடம் அவனுடைய தந்தை ஆதிசேஷன் என்பதை தெரிவித்து நல்லமுறையில் சுமித்ரை வளர்த்து வந்தாள்.

சாலிவாஹனன் மண் பொம்மைகளைச் செய்ய கற்றுக் கொண்டான்.

சாலிவாகனனுக்கு ஐந்து வயது. அங்குள்ள மற்ற குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போதே, அதிகாரமும் கட்டளையும் கொடிகட்டிப் பறந்தது. “நான்தான் ராஜா, நீ மந்திரி, நீ சேவகன், நீதான் படை தளபதி...ம்! ராஜாங்கம் நடக்கட்டும்...’’ என்றுதான் அவன் விளையாட்டு இருக்கும்.

சுமத்திரையையும், சாலிவாகனனையும் பராமரித்து வந்த மண்பாண்ட கலைஞர்களுக்கு அந்த விளையாட்டைப் பார்த்து ஆச்சரியம் தாங்கவில்லை.

“பானை, சட்டியோடு விளையாடாமல், இப்படி ராஜாவைப்போல் விளையாடி ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறானே! இவன் எப்போது ராஜா , மந்திரியை எல்லாம் பார்த்தான்?” என்று சொல்லி வியந்தார்கள்.

அவனுடைய விளையாட்டை மேலும் அங்கீகரிக்கும் வகையில் அரசர், மந்திரி, தளபதி, சேவகர், படைகள் என மண் பொம்மைகள் செய்து சாலிவாகனனுக்கு விளையாடக் கொடுத்தனர்.

சாலிவாகனன் தன் வழக்கப்படி அரச பரிபாலன விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கையில், வேதியர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார்.

“ஆஹா! சிறு குழந்தை, என்ன அழகாக அரச பரிபாலனத்தை, பொம்மை விளையாட்டாகச் செய்து கொண்டிருக்கிறது! ராஜ சபையென்றால், தினந்தோறும் பஞ்சாங்கம் படிப்பார்களே... இந்த பொம்மை ராஜசபையில் இன்று நாம் பஞ்சாங்கம் படித்து விடுவோம்” என்று தீர்மானித்து, சாலிவாகனனின் விளையாட்டில் நுழைந்து பஞ்சாங்கம் படித்தார்.

சாலிவாகனன் மனம் மகிழ்ந்தான். தன்னருகில் இருந்தவனை நோக்கி, “மந்திரி! நம் ராஜசபையில் பஞ்சாங்கம் படித்த இந்த அந்தணருக்கு, ஒரு பொன்குடம் கொடுங்கள்!’’ என உத்தரவிட்டான்.

அந்தப் பையனும் மெல்ல சிரித்துக் கொண்டு சிறு மண்குடம் ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தான்.

குடத்தை வாங்கிக்கொண்டு அந்தணர் வீடு திரும்பினார்.

மறுநாள் பொழுது விடிந்ததும் அவர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.

அவர் பெற்ற மண்குடம், தங்கக்குடமாக மாறியிருந்தது! மகிழ்ச்சி தாங்கவில்லை. நடந்த சம்பவங்களை அவர் பிறரிடம் விரிவாக சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.

சாலிவாகனனை பார்க்காதவர் இதயங்களில் கூட சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் அவன்.

சாலிவாகனனை பற்றிய தகவல்கள் எல்லாம் மன்னன் விக்கிரமாதித்தனுக்குத் தெரிவிக்கப்பட்டன.

அவனுக்கும் சாலிவாகனனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

புரந்தபுரத்தில் இருந்த தனஞ்ஜயன் எனும் வியாபாரி படுத்த படுக்கையாய் இருந்தார்.

கடைசி காலம் நெருங்குவது அவருக்குத் தெரிந்தது. தன் பிள்ளைகள் நால்வரையும் அழைத்தார். “பிள்ளைகளா! இந்தக் கட்டில் கால்கள் நான்கிற்கும் கீழே வைத்திருக்கும் பொருட்களை, நீங்கள் நால்வரும் பங்கிட்டுக்கொண்டு சுகமாய் வாழுங்கள்!’’ என்று சொல்லிவிட்டு இறந்தார்.

பிள்ளைகள் நால்வரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளையெல்லாம் செய்தார்கள்.

அதன்பிறகு, தந்தை சொன்னபடியே கட்டில் கால்களின் கீழே தோண்டிப் பார்த்தார்கள். ஒன்றில் மண், ஒன்றில் உமி, ஒன்றிலே மிகச்சிறு தங்க மணி, ஒன்றில் சாணம் என இருந்தன.

நால்வரும் திகைத்தார்கள்.

“இவை எப்படி பொருட்களாகும்? இவற்றை எப்படிப் பங்கு போடுவது?’’ அவற்றை தனித்தனி பைகளில் போட்டுக் கொண்டுபோய் ஊரில் இருந்த அறிவாளிகளிடம் காட்டி, தந்தை சொன்னதையும் சொல்லி விளக்கம் கேட்டார்கள்.

ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை.

வேறுவழியில்லாமல் நால்வரும் அரசர் விக்கிரமாதித்தனிடம் போய் நடந்ததையெல்லாம் சொல்லி, பைகளில் இருந்த பொருட்களையும் காட்டினார்கள்.

விக்கிரமாதித்தன் தன் மந்திரிகளோடு சேர்ந்து, அப்பொருட்களை ஆராய்ந்து பார்த்தான். ஒன்றும் புரியவில்லை.

“விக்கிரமாதித்த மகாராஜாவாலேயே முடியவில்லை எனும்போது, என்ன செய்வது?’’ என்று மனம் வருந்திய பிள்ளைகள் நால்வரும் பைகளோடும் ஏமாற்றத்தோடும் திரும்பினார்கள்.

அவர்கள் சாலிவாகனன் இருந்த இடத்தின் வழியாகப் போனார்கள். குழப்ப முகங்கள், கவலைக் கண்களுடன் நால்வரும் வந்து கொண்டிருந்ததை சாலிவாகனன் பார்த்தான்.

 கவலைக்கான காரணத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டான்.

பிறகு, “இதற்காகவா இவ்வளவு அலைச்சல் பட்டீர்கள்! நான் விளக்கம் கூறுகிறேன்,’’ என்ற அவன் அந்தப்  பைகளில் இருந்த பொருட்களை, ஒருசில விநாடி பார்த்தான்.

உடனே தீர்ப்பைச் சொன்னான்:

“மண் பையில் இருப்பது நிலங்களைக் குறிக்கும். ஒருவன் நிலங்களை எடுத்துக்கொள்ளட்டும்.

உமி, தானியங்களைக் குறிக்கும்; இரண்டாமவர் தானியங்களை எடுத்துக்கொள்ளலாம்.

தங்கம் இருக்கும் பை ஆபரணங்களைக் குறிக்கும். ஆகவே மூன்றாமவனுக்கு ஆபரணங்கள்.

நான்காவது பையில் சாணம்; ஆடு, மாடுகளைக் குறிக்கும். அதனால் நான்காமவன் கால்நடைகளை பெறட்டும்.

உங்கள் தகப்பனார் சூட்சுமமாகப் பங்கீடு செய்து இருக்கிறார். அதன்படியே பங்கிட்டுக் கொண்டு நலமாக வாழுங்கள்!’’ என்றான் சாலிவாகனன்.

நால்வரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். “ஆஹா! விக்கிரமாதித்தனால் கூடச் சொல்ல முடியாத தீர்ப்பு. என்ன புத்திக் கூர்மை!’’ என்று சாலிவாகனனைப் புகழ்ந்தார்கள்.

சாலிவாகனனின் புகழ் பரவியது. விக்கிரமாதித்தனுக்கும் தகவல் எட்டியது.

உள்ளம் குமைந்தான். “நம் புகழுக்குப் பங்கம் வந்து விட்டதே! சிறுவன் ஒருவனால் நம் சிறப்பு சிதைந்து விட்டது. ஊஹும், சாலிவாகனனை விட்டு வைக்கக்கூடாது” என்று கறுவினான்.

பொறாமை கொண்ட மன்னன் விக்கிரமாதித்தன் சாலிவாகனனை அழிக்கப் படைகளுடன் புறப்பட்டான்.

விக்கிரமாதித்தன் வருவதையும் சாலிவாகனன் அறிந்தான்.

அவனுக்கும் அவன் அன்னைக்கும் ஆதரவு தந்து வளர்த்து வந்த குயவர் தலைவர் உட்பட அனைவரும் பயந்தார்கள்.

ஆனால், சாலிவாகனன் பயப்படாமல் அனைவருக்கும் ஆறுதல் சொன்னான்,
“பயப்படாதீர்கள். என்னால் விளைந்த இதை, நானே நீக்குவேன்.’’  உடனடியாக நடவடிக்கைகளிலும் இறங்கினான்.

ஆதிசேஷனை வணங்கிவிட்டு
தன்னிடம் இருந்த நால்வகை பொம்மைப் படைகளுக்கும் உயிரூட்டி, தானே தலைமை தாங்கிப் போர்க்களம் புகுந்தான்.

கடும் போர் மூண்டது. சாலிவாகனனிடம் தோற்றுப்போய், விக்கிரமாதித்தன் ஓடினான். சாலிவாகனன் வெற்றி வீரனாகத் திரும்பினான்.

சற்று காலம் கழித்து, விக்கிரமாதித்தனிடமிருந்து தான் கைப்பற்றிய பகுதிக்கு, சாலிவாகன சகாப்தம் என்று பெயரிட்டான்.

விக்கிரமாதித்தனை தேடிப் பிடித்து போரிட்டு அவனைக் கொன்றான் சாலிவாகனன்.

நர்மதைக்கு அந்தப் பக்கமாக உள்ள பகுதி ‘விக்கிரம சகாப்தம்’ என்றும் நர்மதைக்கு இந்தப்பக்கமாக உள்ள பகுதி ‘சாலிவாகன சகாப்தம்’ எனவும் வழங்கப்படலாயிற்று.

மைசூர் மன்னர் பரம்பரையினர், சாலிவாகனன் பரம்பரையில் வந்தவர்கள்.

பஞ்சாங்கங்களில் நாம் பார்க்கும் சாலிவாகன சகாப்தம் என்பதை உருவாக்கியவனின் வரலாறு இது.

சாலிவாகனன் விக்கிரமாதித்தியனை வென்றதை கொண்டாடும் வகையில், அந்த ஆண்டு முதல் சாலிவாகன ஆண்டு
கி பி 78 முதல் தொடங்குவதாக கருதப்படுகிறது.

மரங்களின் அரசன் அரசமரம்

மரங்களின் அரசன் அரசமரம்

அரசமரத்தைக் கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரை மட்டும் பிடித்துக் கொண்டோம். காரணம் போய் காரியம் மட்டும் மிஞ்சி நிற்கிறது இப்போது...."

"ஒரு ஊரில் ஏழு அரசமரங்கள் இருந்தால் அங்கே மழை பெய்தே தீரும்" எனப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்....

நமது மண்ணின் மரங்களைப் பற்றி வரிசையாக எழுதினால் முதலில் அரச மரத்திலிருந்தே துவங்க வேண்டும். அதுதான் நல்ல ஆரம்பமாக இருக்கும். எனவே அரசமரத்திலிருந்தே துவங்குவோம்...

மரங்களுக்கெல்லாம் அரசன் அரசமரம். நன்கு வளர்ந்த அரசமரம், அதிகபட்சமாக சுமார் நூறு அடி உயரமும் பத்தடி குறுக்களவும் கொண்டவையாக வளரும் பெரியமரம் இது. இவற்றின் பலனும் மிகப்பெரியது. அதனால் தான் நமது முன்னோர்கள் அவர்களின் வாழ்க்கையில்  இம்மரத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர்...

எந்தச் சூழ்நிலையிலும் யாரும் இதை வெட்டி விடவே கூடாது என்பதற்காகவே இதை வணக்கத்திற்குரிய கடவுள் நிலையில் வைத்திருந்தது தமிழ்ச்சமூகம். வேறு எந்தக் காரணத்தைச் சொன்னாலும் வெட்டி விடுவார்களோ என்கிற அக்கறை கூட அதன் கீழே சாமி சிலைகளை நட வைத்திருக்கலாம். அவ்வளவு முக்கியத்துவமும் சிறப்பும் பெற்றதே இந்த அரசமரம்...

புத்தர்க்கு போதிமரத்தின் கீழ் ஞானம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது அந்த போதிமரம் வேறெதுவுமில்லை அரசமரம் தான். ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயு தான் மூளைக்கான உணவு. வளர்சிதை மாற்றத்தில் சிதைகிற உடலை சரிக்கட்டுவதில்  பிராணவாயுவின் பங்கே மிகமிக அதிகம். பிராணன் என்கிற உயிர்வளியை நன்கு வளர்ந்த ஒரு மரம் நாளொன்றிற்கு சுமார் இரண்டாயிரத்து நானூறு கிலோ வரை வெளியிடுகிறதாம்.ஒரு மனிதனுக்குத் தேவையான உயிர்வளியின் அளவு நாளொன்றிற்கு எண்ணூறு கிராம். அப்படியானால் ஒரு மரம் எத்தனை பேருக்கு உதவுகிறது எனக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதை அரசமரம் என்பதில் தவறே இல்லை. மற்றொரு சிறப்பாக அரசமரமானது இரவு நேரத்திலும் பிராணவாயுவை வெளியிடுவதாகச் சொல்கிறார்கள்.

இவ்வளவு பெரியளவு உள்ள, உயிராற்றலின் கீழ் யார் தொடர்ந்து அமர்ந்திருந்தாலும் ஆரோக்கியமும், சிந்தனைத் தெளிவும் (ஞானம்) பெற்று புத்தனாகலாம் என்பதில் சந்தேகமில்லை !!!...

சும்மா மரத்தினடியில் இரு உடலின் ஆரோக்கியக் குறைபாடு நீங்கும் எனச் சொன்னால் யாரும் பின்பற்ற மாட்டார்கள் என்பதாலோ என்னவோ அதைக் கடவுளாக்கி அதன் வேரினடியில் நீரை ஊற்றிச் சுற்றி வா... என அதன் கீழே ஒரு சிலையையும் வைத்திருக்கின்றனர். நாமோ இன்று காரணத்தை மறந்து காரியத்தை மட்டும் செய்து கொண்டிருக்கும் போலி நாகரீகச் சமூகத்தில் இருக்கிறோம். மரத்தின் வேரைச் சுற்றிலும் கான்கிரீட் தளத்தைப் போட்டு அதன் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த இடத்தில் கொண்டாடப்பட வேண்டிய பொருள் காணாமல் போய் விட்டது.

அரசமரத்தைக் கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரை மட்டும் பிடித்துக் கொண்டோம் காரணம் போய் காரியம் மட்டும் மிஞ்சி நிற்கிறது இப்போது....

இந்தக் கோடையின் துவக்கத்திலேயே மிகுவெப்பத்தால் படுகிற வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அருகில் ஏதாவது அரசமரம் இருந்தால் அதனடியில் சிறிது நேரம் அமர்ந்து பாருங்கள்.... அந்த சுகத்தை அனுபவிக்காதவர்கள் அனுபவித்து விட்டுச் செல்லுங்கள். இயற்கையும் கோடைக்குத் தகுந்தபடி புதிய தளிர் இலைகளுடன் தயார்படுத்தியிருக்கும் அழகையும் கவனியுங்கள்....

அஸ்வத்தம்,
அச்சுவத்தம்,
திருமரம்,
போதி,
கவலை,
பேதி,
கணவம்,
சராசனம்,
மிப்பலம்...
இதுவெல்லாம் அரச மரத்தின் பெயர்கள்....

எல்லாப் பறவைகளும் இரவு அடைவதற்கு எல்லா மரங்களையும் தேர்ந்தெடுக்காது, ஆனால் பெரும்பாலான பல பறவைகள் இரவு இருப்பிடமாக பெரும்பாலும் அரசமரத்தை விரும்புகின்றன. பல்லுயிர்ச் சூழல் பெருக்கத்தில் உதவுவதில் பெரும் பங்கைக் கொடுப்பது, அரச மரங்களே. இதன் பழங்களை பறவைகள் விரும்பி உண்ணும் என்பது இன்னும் சிறப்பு....

இனியாவது இதன் மகத்துவத்தை உணர்ந்து வேறு அன்னிய மரங்களைத் தவிர்த்து, வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நமது மண்ணின் மரமான அரசமரத்தினை நட்டு இந்த பூமியை குளிர்வித்து, மழையை ஈர்த்து சுகமாக நல்ல காற்றினை வரும் தலைமுறையை சுவாசிக்கச் செய்வோம். நீரைப் போல் காற்றையாவது காசு கொடுத்து வாங்காமல் இருப்போம்...

கோரகும்பர்

கோரகும்பர்

பண்டரிபுரத்திற்கு அருகே உள்ள தோடகியில் பிறந்தவர் கோரகும்பார் மண்பாண்டம் செய்யும் குயவர் குடியில் பிறந்தவர்.

இவரின் சகோதரர் எற்றண்ணா.

கோரகும்பர் தாய் தந்தையர் எப்போதும் பண்டரிநாதனின் மேல் பக்தி கொண்டு இருந்தனர். வேலையின் போது பண்டரிநாதனின் மேல் பாடல்கள் பாடி வந்தனர். இதனால் கோரக்கும்பரும்
எற்றண்ணாவும் பக்திமானாக திகழ்ந்தனர். கோரக்கும்பருக்கு பத்மாவதி என்பவரை திருமணம் செய்வித்தனர்.

இருவரும் மிக்க அன்யோன்யமாக வாழ்ந்தனர். பத்மாவதியும் சிறந்த
பக்திமானாக இருந்தார். திருமணம் நடந்த சில வருடங்களிலேயே கோரக்கும்பரின் பெற்றோர் இறந்து போயினர்.

கோரகும்பாரின் தம்பி எற்றண்ணா
அண்ணனுக்கு தொழிலில் உதவியாக இருந்தார்.

எற்றண்ணா திருமண வாழ்வில் அதிக ஈடுபாடு இல்லாமல் இருந்தார்

ஓர் நாள் சூளையில் அடுக்கி வைத்திருந்த மண்பானைகளுக்கு எரியூட்டுவதற்காக ராட்டிகளை அடிக்கி அதற்கு தீயை வைத்தார் எற்றண்ணா.

சில பானைகளில் குட்டி பூனைகள் இருந்ததை கவனிக்கவில்லை.
சில நாட்கள் சென்று பானைகளை எடுக்கும் போது அதில் பூனை குட்டிகள் கருகி இருந்தது.

எற்றண்ணாவுக்கு மனது வலித்தது
பாவம் செய்து விட்டேன் என புலம்பினான்.

திடீரென ஓர் நாள் கங்கையில் மூழ்கி என் பாவத்தை போக்கி கொள்கிறேன் என கூறி காசி கிளம்பினான்.

தம்பி நடந்தே கங்கைக்கு செல்வதால்
கோரகும்பர் சோகத்தில் மூழ்கினார்.

கர்ப்பமான மனைவியை கூட அவர் அதிகம் கவனித்து கொள்ளவில்லை.

ஆனால் நாளுக்கு நாள் அவர் பாண்டுரெங்கனிடம் கொண்ட பக்தி அதிகமாகவே ஆகியது.

பத்மாவதி ஓர் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

கோரகும்பர் எப்போதும் மண்ணை காலால் குழைத்த வண்ணம்
பாண்டுரெங்கனை பாடிய வண்ணம் மண்பாண்டம் நிறைய செய்தார்.

வீட்டின் வரவான குழந்தையை அதிகமாக நேசிக்காத தந்தையாக சதா பாண்டுரங்கன் மேல் பித்தாகவே போனார்.

குழந்தையும் வளர்ந்து தவழ்ந்தது.

இவர் வழக்கம் போல மண்ணை காலால் குழைத்த வண்ணம் கைகள்
இரண்டையும் மேலே தூக்கி பாண்டுரங்கனை கண்களை
மூடியபடி
நினைத்து ஆடியபடி, பாடியபடி
மண்ணை மிதித்த போது
வீட்டில் இருந்து குழந்தை தவழ்ந்து சேற்றில் ஏறியதை வீட்டில் வேலையாக இருந்த பத்மாவதியும்
கவனிக்கவில்லை.

கோரகும்பரும் கவனிக்க வில்லை.

மண்ணை குழைத்த கால்கள்
குழைந்தையையும் சேற்றில் அமுக்கி மிதித்து
கூழாக ஆக்கியது.

குழந்தையை காணோமே என தேடிய பத்மாவதி கணவரின் கால்களில் கூழாகி போன குழந்தையை பார்த்து
அழுதபடி வந்த போதே கோரகும்பருக்கு நினைவு வந்தது.

பத்மாவதி "ஏன் இப்படி குழந்தையை பார்க்காமல் இப்படி செய்துவிட்டீர்களே" என கேட்ட மனைவியை "நீ தானே கவனித்துகொள்ள வேண்டும்"
என கூற,

குழந்தை வருவது கூட தெரியாமல் அப்படி என்ன தெவ்வ பக்தி வேண்டி கிடக்கு, பாண்டுரெங்கன் இப்படியா செய்ய சொன்னார் என சொன்னவுடன் கோரகும்பர் தன்னுடைய கடவுளையே தவறாக சொல்லிவிட்டாளே என சொல்லி கம்பால் அடிக்க ஆரம்பிக்கிறார்.

பத்மாவதி கோபமாய்
இனி என்னை அடிக்கவும் கூடாது
தொடவும் கூடாது இது பாண்டுரங்கனின் மேல் ஆணை என்கிறாள்.

அன்று முதல் மனைவியை தொடுவதில்லை
மனைவி தொட்டததையும் தொடுவதில்லை என சபதம் எடுத்து
தனியாக சமைத்து சாப்பிட்டார்.

கணவரை இப்படி திட்டிவிட்டோமே என வருந்திய பத்மாவதி
கோரகும்பரிடம் மன்னிப்பு கேட்டும்
அலர் மாறாததை கண்டு வருத்தப்பட்டாள்.

பத்மாவதி தன் தந்தையிடம் நடந்ததை கூறி,
அவளது தங்கையை கோரகும்பருக்கு திருமணம் செய்விக்க தந்தையோடும் தங்கையோடும் பேசி சம்மதிக்க வைத்தார்.

பத்மாவதியின் தந்தை கோரகும்பரை பார்த்து திருமணத்திற்கு சம்மதமா என கேட்டவுடன் கோரகும்பர்
அதற்கு சம்மதிக்க மறுக்கிறார்.

உறவினர்களின் வற்புறுத்தலில் திருமணம் நடக்கிறது.

திருமணம் முடிந்து ஊருக்கு கிளம்பிய கும்பாரிடம் அவர் மாமனார் எனது இரு பெண்களையும் சமமாக பாவித்து நடங்கள் என்றார்.

கோரகும்பர் சரி என சொல்லி இரண்டு மனைவியோடு ஊர் திரும்பினார்.

அக்காவை தொடுவது இல்லை அவள் தொட்ட எதையும் தொடுவது இல்லை போலவே இரண்டாவது மனைவியிடமும் இருந்தார்.

மாமனாருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றி கொண்டு வந்தார்.

சகோதரிகளுக்குள் சண்டை ஆரம்பித்தது.

இரவு பாண்டுரங்கனை பாடிவிட்டு அயர்ந்து தூங்கும் போது கோரகும்பரின் இருபக்கமும் இருவரும் படுக்க வேண்டியது என முடிவு செய்தனர்.

அது போலவே ஓர் நாள் அயர்ந்து தூங்கும் போது இருவரும் படுத்தனர்.
தூக்கத்தில் இருந்து எழுந்த கோரகும்பர் கத்தியால் ஓர் கையை துண்டித்து கொண்டார்.
அதே கத்தியை நிறுத்தி மறு கையையும் வெட்டி கொண்டார்.

மனைவிகள் இருவரும் அழுது புலம்பினர்.

அந்த நேரம்,
காசிக்கு சென்று திரும்பிய எற்றண்ணா வீட்டு கதவை தட்டி உள்ளே வந்தவுடன் கையில்லாமல் நிற்கும் அண்ணனையும்
அழும் அவரின் மனைவிகளையும்
பார்த்து வருத்தமுற்று நடந்தவைகளை கேட்டறிந்தார்.

அண்ணனின் கைகளை எடுத்து ஒட்டி
சிகிச்சை அளித்தார் எற்றண்னா.

கைகள் ஒட்டியதே தவிர வேலைகளை செய்ய முடியவில்லை. கைகள் வளைந்திருந்தது.
எற்றண்ணாவின் உழைப்பில்
அவர்கள் வாழ்ந்தனர்.

பாண்டுரங்கனின் கோவில் விழாகோலம் பூண்டது
ஸ்ரீ நாமதேவர் அவ் விழாவிற்கு வந்தார்.

நாமதேவரின் மனதிற்கு
பண்டரிநாதனின் கோவிலில் பண்டரிநாதன் இல்லாமல் இருப்பது போலும்,
களையிளந்தும் கோவில் காணப்பட்டது.

பண்டரிநாதா
நீ இங்கில்லையா என கேட்பது போல பாடல் இயற்றி பாடினார்.

அன்றிரவு நாமதேவரின் கனவில்
நான் கோரகும்பரின் வீட்டில் அவர் தம்பி எற்றண்ணாவாக இருக்கிறேன் என்றார்.

மறுநாள் காலை நாமதேவர்
வந்து பார்த்த போது
சேற்றை மிதித்தபடியும்
மண்பாண்டங்கள் செய்தபடியும்
எற்றண்ணாவாக பண்டரிநாதன்
இருந்தார். காசிக்கு சென்ற எள்றண்ணாவுக்கு பதில் பாண்டுரங்கனே எற்றண்ணாவாக.

கையிழந்த தன் பக்தனின் குடும்பம் ஏழ்மையின் பிடியில் வருத்தப்படக்கூடாதே என எண்ணிய
பாண்டுரங்கனே மண் பானை செய்து விற்று இந்த குடும்பத்தை காப்பாற்றியதை கண்ட நாமதேவருக்கு கண்களில் கண்ணீராய் வந்தது.

கோரகும்பரின் பக்தியை மனதால் மெச்சிய வண்ணம்
கோரகும்பர் அவரது மனைவிகளோடும் எற்றண்ணாவோடும் பண்டரிபுரம் வந்தார் நாமதேவர்.
பாண்டுரெங்கன் இருந்தால்தானே திருவிழா நடக்கும்.

நாமதேவர் கோரகும்பர் அவரது மனைவி இருவரும் அமர்ந்து இருக்க
எற்றண்னா கோவில் கருவறைக்குள் சென்று மறைந்துவிடுகிறார்.

நாமதேவர் நடப்பதை பார்த்து மனதுக்குள் சிரித்து கொண்டார்.

அப்போது கோவிலுக்குள் பஜனை கோஷ்டி ஒன்று உள் நுழைந்து கைகளை தட்டிய வண்ணம் பாண்டுரெங்கனை பாடுகின்றனர்.

கோரகும்பர் தன் கைகளை தூக்க முயற்சிக்கிறார். செயலற்று
வளைந்து இருந்த கைகளை தூக்க முடியாமல் துக்க மேலீட்டில் அழுதவண்ணம் பாண்டுரங்கா விட்டலா என கண்ணீரோடு பாடுகிறார்.

வளைந்த கைகள் நேராகிறது
விரல்கள் இயங்குகிறது
கைகள் நன்றாக இயங்க ஆரம்பிக்கவே பண்டரிநாதா
விட்டலா என கத்தியபடி ஆனந்த கண்ணீர் விட்டார்.

அருகில் இருந்த அனைவரும் பாண்டுரெங்கா பாண்டுரெங்கா என கோஷமிட்டனர்.

அனைவரும் மகிழ்ச்சியோடு சன்னதியில் விழுந்து வணங்கினர்

பத்மாவதி அழுதவளாய் பாண்டுரெங்கா என் கணவரின் கையை கொடுத்தது போலவே என் குழந்தையை தாருங்கள் என்னை மன்னித்துவிடு பாண்டுரங்கா என்னை மன்னித்து என் குழந்தையை தாருங்கள் என கேட்க, கருவரையில் இருந்து பத்மாவதியின் குழந்தை தவழ்ந்து வந்தது. நாமதேவர் பாண்டுரங்கனின் திருவிளையாடலை எண்ணி மகிழ்ந்தார்.

ஸ்ரீமத்யார்ஜுனேசாஷ்டகம்

ராம ராம ராம
திருவிடைமருதூர் ஸ்ரீமஹாலிங்க ஸ்வாமியை நன்கு த்யானம் செய்து கொண்டு இந்த ஸ்தோத்ரத்தை கேட்டு மன : சாந்தி, நல்ல தேஹ ஆரோக்யம் மற்றும் ஸகல பாக்யங்களையும் அடைய ப்ரார்த்திக்கிறேன்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 ஸ்ரீமத்யார்ஜுனேசாஷ்டகம்      ***********************
மஹனீயர்களான நமது ஸத்குருக்கள் சேங்காலிபுரம் ப்ரும்ஹஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் அவர்கள் திருவிடைமருதூரில் விளங்கும் ஸ்ரீமஹாலிங்க ஸ்வாமி  பேரில் மனமுருகி எழுதிய ஸ்தோத்ரம் ஸ்ரீமத்யார்ஜுனேசாஷ்டகம்.

ஸ்ரீமஹாலிங்கஸ்வாமி தர்சனம் மற்றும் ஸ்மரணம் ப்ரம்ஹஹத்யாதி பாபங்களை போக்கி பக்தர்களுக்கு ஏற்படும் மஹாபயம், சித்தப்ரமம் மற்றும் ஸகல வ்யாதிகளையும் போக்கி ஸமஸ்த பாக்யங்களையும் தரும்.

சேங்காலிபுரம் ஸ்ரீதீக்ஷிதர்வாளின் இந்த உயர்ந்த ஸ்ரீமத்யார்ஜுனேசாஷ்டகத்தை நித்யம் கேட்டு பாராயணம் செய்து ஸகல ச்ரேயஸ்ஸையும் அடைய ப்ரார்த்திக்கிறோம்!!! திப்பிராஜபுரம் மோஹன்ராமதீக்ஷிதர் 🌸🌸🌸🌸🌸🌸🌸
அனைவருக்கும் இந்த Youtube link ஐ Share செய்யப்ரார்த்திக்கிறோம் 🌸🌸🌸🌸🌸🌸🌸
மத்யார்ஜுனேசம் பஜேஹம்   - ஸாம்ப மத்யார்ஜுனேசம் மஹாலிங்கமாத்யம்  மத்யார்ஜுனேசம் பஜேஹம். 
                           1.ஜ்யோதிர்மஹாலிங்க ரூபம் -      க்லுப்தபூஷம் புஜங்கேன க்ருத்தாரிப்ருந்தம்  பக்தார்த்தி ஸம்ஹார்யபாங்கம் ப்ரும்ஹவிஷ்ண்வாதி ப்ருந்தைர்முதா பூஜிதாங்க்ரிம் (மத்யார்ஜுனேசம் பஜேஹம்) 

2.ருத்ராக்ஷமாலாம் தரந்தம் ப்ரும்ஹஹத்யாதி பாபாநி ஸந்நாசயந்தம் ரக்ஷந்தமாபத்ஸுபக்தான் ப்ராந்தசித்தஸ்த தோஷான் ஸமுன்மூலயந்தம் (மத்யார்ஜுனேசம் பஜேஹம்)

 3.புண்யாச்வமேத  ப்ரசாரை :  பூதபாதாதி சோரை : பவாம்போதிதாரை : குர்வந்தி பக்தா : ப்ரஸன்னம் புத்ரபௌத்ராத்யபீஷ்டான் ஸதாபூரயந்தம்     (மத்யார்ஜுனேசம் பஜேஹம்) 

4.பஸ்மாதிபூஷா விசேஷம் புஷ்பபில்வாதி பத்ரைர்ஜுஷாணம் ஸுதோஷம் ஸர்வார்த்ததாயி ப்ரதோஷம் விப்ரவர்யௌக ஸம்ப்ரோக்த ஸாமாதி கோஷம் (மத்யார்ஜுனேசம் பஜேஹம்)

5.ஸஹ்யாத்ரிஜா தீர பாக்யம் ஸாதுபோக்யம் ஸுரேந்த்ரைர்ஸதா ஸாதும்ருக்யம் ப்ராப்யம் க்ருதானேக புண்யை : தீனரக்ஷைக தீக்ஷம் க்ருபாபூர்ண வீக்ஷம் (மத்யார்ஜுனேசம் பஜேஹம்)

6.புஷ்யோத்ஸவே புண்யகோஷ்ட்யாம்  ஸாமவேதாதி கோஷை : ப்ரமோதேன பாந்தம்  ஜ்யோதிர்மயானந்த கந்தம் ஸ்வர்ஜுனாக்யஸ்ய வ்ருக்ஷஸ்ய மூலேவஸந்தம்     (மத்யார்ஜுனேசம் பஜேஹம்)

7.புஷ்யேரதே காலதௌதே திவ்யபுஷ்பாபிராமே வ்ருஷைருஹ்யமானே பச்யந்தமத்யந்த பக்தாம் ஸுந்தராப்யாம் ப்ருஹத்ப்யாம் குசாப்யாம் யுதாம்தாம் (மத்யார்ஜுனேசம் பஜேஹம்)

 8.ஸ்தோத்ரம் க்ருதம் பக்தி பூர்வம் தீக்ஷிதானந்தராமேண பாபௌக சாந்த்யை நித்யம் படேத்யஸ்து பக்த்யா |                   தஸ்ய ஸர்வார்த்த லாபோ பவேதாசுதோஷாத் ।। (மத்யார்ஜுனேசம் பஜேஹம்)
ஸாம்ப மத்யார்ஜுனேசம் மஹாலிங்கமாத்யம்
மத்யார்ஜுனேசம் பஜேஹம்

ஸ்ரீமத்யார்ஜுனேசாஷ்டகம் ஸம்பூர்ணம்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
தங்களது நண்பர்களுக்கும்,முகநூல் மற்றும் வாட்ஸ்அப் க்ரூப்களிலும் பகிர ப்ரார்த்திக்கிறோம்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
We present you Shri Madhyārjuneshāshtakam written by Brahmasri Sengalipuram Anantarama Deekshitar.
From
Tippirajapuram
Mohan Rama Dikshitar

Sanskrit lyrics:

श्री मध्यार्जुनेशाष्टकम्

 मध्यार्जुनेशं भजेहम्- साम्ब मध्यार्जुनेशं  महालिड़्गमाद्यं मध्यार्जुनेशं भजेहं ||

1.ज्योतिर्महालिड़्गरूपं  क्लुप्त
          भूषं भुजड़ंगेन कृत्तारिबृन्दम्  
भक्तार्ति संहार्यपाड़्गम्  ब्रम्हविष्ण्वादि
          बृन्दैर्मुदा पूजिताड़्घ्रिम्   ।।
             (  मध्यार्जुनेशं भजेहम् )   
                            
2.रुद्राक्षमालां धरन्तम्
         ब्रम्हहत्यादि पापानि संनाशयन्तम्  ।
    रक्षन्तमापत्सुभक्तान्
          भ्रान्तचित्तस्थ दोषान् समुन्मूलयन्तम् ।।
              ( मध्यार्जुनेशं भजेहम्)    

3.पुण्याश्वमेधप्रचारै :
          भूतबाधादि चोरैर्भवाम्भोधितारै : ।         
    कुर्वन्ति भक्ता : प्रसन्नम्
           पुत्रपौत्राद्यभीष्ठान् सदापूरयन्तम्  ।।
              ( मध्यार्जुनेशं भजेहम्)

4.भस्मादिभूषाविशेषं
            पुष्पबिल्वादि पत्रैर्जुषाणम् सुतोषम् ।
    सर्वार्थदायिप्रदोषं विप्रवर्यौघ
            संप्रोक्त सामादि घोषम्  ।।                             
             (मध्यार्जुनेशं भजेहम्)

5.सह्याद्रिजा तीर भाग्यं
            साधुभोग्यं सुरेन्द्रैर्सदासाधुमृग्यम्  ।
    प्राप्यं कृतानेकपुण्यै :
            दीनरक्षैक दीक्षं कृपापूर्णवीक्षम्  ।।
                (मध्यार्जुनेशं भजेहम्)

6.पुष्योत्सवे पुण्यगोष्ट्यां
          सामवेदादिघोषै :   प्रमोदेन भान्तम्  ।
    ज्योतिर्मयानन्दकन्दं
           स्वर्जुनाख्यस्य वृक्षस्य मूलेवसन्तम्  ।।
              (मध्यार्जुनेशं भजेहम्)

7.पुष्येरथे कालधौते  -  दिव्य  
            पुष्पाभिरामे वृषैरुह्यमाने ।
    पश्यन्तमत्यन्त भक्तां
            सुन्दराभ्याम् ब्रृहद्भ्यां कुचाभ्यां युतांताम् ।।
              (मध्यार्जुनेशं भजेहम्)

8.स्तोत्रं कृतं भक्तिपूर्वम्
              दीक्षितानन्तरामेण पापौघ शान्त्यै । 
    नित्यम् पठेद्यस्तु भक्त्या  तस्य
              सर्वार्थलाभो भवेदाशुतोषात्  ।।
                (मध्यार्जुनेशं भजेहम्)

ஊத்துக்காடு வேங்கடகவி

ஊத்துக்காடு வேங்கடகவி

காலங்கள் உருண்டோடின. கண்ணனைப் பார்க்காமல் அன்னம் உண்ணமாட்டேன் என்று சில காலங்களாகவே ஆகாரம் உண்பதையே அவர் முற்றுலுமாக தவிர்த்து வந்தார். இதன் காரணமாக உடல் மெலிந்து கண்கள் சொருகி பார்வை மங்க ஆரம்பித்தது. பிரதிக்க்ஷனம் செய்யக் கூட அவரால் முடியவில்லை. தன் முழங்கால் வாயிலாகவே மிகவும் சிரமப்பட்டு ஒரு பிரதிக் பிரதிக்க்ஷனம் செய்து முடித்தார். அடுத்த பிரதிக்க்ஷனம் செய்ய முடியவில்லை. தன் பிராணன் இன்றுடன் பிரியப் போவதை உணர்ந்தார். இன்று எப்படியாவது பாடி கண்ணனை வரவழைத்துவிடலாம் என்றெண்ணி என்ன பாடலாம் என சிறிது யோசித்து பின் தாமதமில்லாமல் 'அலைபாயுதே கண்ணா!' என்று பாட ஆரம்பித்துவிட்டார். அந்த பாடல் முழுநிறைவு தருவாயை நெருங்கிவிட்டது. (நீங்கள் இனி எப்பொழுது இந்த பாடலைக் கேட்டாலும் இந்த உணர்வுடனே அந்த பாட்டில் வரும் வார்த்தைகளைக் கேளுங்கள். உயிர் பிரியும் தருவாயில் தான் பாடினார் என்று உங்களுக்கு புரிய வரும்.)

ஆனாலும் கண்ணன் வரவில்லை. மெய்மறந்து தன் தொடைகளில் தாளம் போட்டுக்கொண்டே பாடிக் கொண்டிருந்தார் வேங்கடகவி. திடீரென்று ஜவ்வாது மனமும், நாகலிங்க பூ வாசனையும், குளிர்ந்த காற்றும் அவர் மேனியில் பட ஆரம்பித்தது. அச்சமயத்தில் அவர் பார்வை முற்றிலுமாக பறிபோய்விட்டது. ஆனாலும் தான் பாடுவதை நிறுத்தவில்லை. முழு பலத்தைக் கூட்டி சங்கீதத்தைக் கூட பாட முடியவில்லை. தொடையில் தாளம் போட முடியாதபடி கை இடறியது. எதோ ஒரு குழந்தை மடியில் படுத்திருப்பது போன்று உணர்வு தோன்றியது. அப்பா யாரது? நான் கண்ணனைக் காண வேண்டுமென்று வேகத்துடன் பாடிக் கொண்டிருக்கின்றேன். அந்தக் குழந்தையிடமிருந்து பதில் இல்லை, மீண்டும் மீண்டும் கேட்டார், பதில் இல்லாத காரணத்தினால் சற்றே சினம் வந்து அந்தக் குழந்தையைக் கீழே தள்ளிவிட்டார். உடனே அந்தக் குழந்தை இதழ்களை பிரித்து பேசத் தொடங்கியது. வேங்கடசுப்பையரே! யாரைக் காண வேண்டுமென இத்துணைக் காலம் பாடினாயோ! அவன் நான் தான் என்னை நன்றாகப் பார்! என்றார். கண்ணா! என்று விழவும் சக்தியில்லாமல் கண்ணனைப் பார்த்து, என்னுடைய உடலுறுப்புகள் அனைத்தும் சரியாக இயங்கக் கூடிய காலகட்டத்தில் நீ காட்சி தரவில்லை. இப்பொழுது என் பலமும் மனபலமும் சோர்ந்தபிறகு வந்திருக்கிறாயே கண்ணா! உன்னை கையெடுத்துக் கூட வணங்க முடியவில்லை என்று கூறிக் கொண்டிருக்கும் போது வேங்கடகவியின் உடலிலிருந்து உயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிந்து கொண்டிருந்தது.

அந்த உயிரை முழுவதும் பிரியவிடாமல் கிருஷ்ணன் அனுக்கிரகித்து, பக்தா! உன் வாழ்நாள் முழுவதையும் நான் வருவேன் என்று என் பொருட்டு உன் காலங்களைக் கழித்தாய். அப்படிப்பட்ட உயர்ந்த பக்தனாகிய உன்னை பூலோகத்தில் இறக்கவிடமட்டேன் என்று தன்னுடன் வேங்கடகவியை அழைத்து தன் இருப்பிடமான பிருந்தாவனத்திற்கு சென்றார். அங்கே குசேலருக்கு நடந்ததை விட பன்மடங்கு உபசாரம் செய்தார் கிருஷ்ணர். எப்பொழுதும் இவன் என் பக்தன் என் பக்தன் என்று கூறிக் கொண்டே இருந்தார் கிருஷ்ணபரமாத்மா. பக்தா உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார் கண்ணன், அதற்கு வேங்கடகவி மறுபடியும் ஊத்துக்காட்டில் 'நான் பாடி நீ ஆடவேண்டுமடா கண்ணா' என்று கேட்டார். அவ்வாறாகவே மீண்டும் இருவரும் ஊத்துக்காட்டிற்கு வந்தார்கள். பக்தா உனக்கு நான் எப்படிக் காட்சி தர வேண்டும் எனக் கேட்டார். அதற்கு வேங்கடகவியும், காளிங்க நர்த்தனாகவே வா என்றார். அவ்வாறாகவே வந்து உன்னால் உன் வாயால் என் நர்த்தனத்திற்கு ஏற்றாற்போல் எப்பொழுது பாட முடியவில்லையோ அப்பொழுதே நான் இதே இடத்தில் மீண்டும் விக்கிரகமாக மாறிவிடுவேன் என்று கூறினார்.

வேங்கடகவி அப்பொழுது 'தாம்தீம் தரநதாம்............' என்று தொடங்கும் பாட்டை பாடினார்.

பாடல் முடியும் வரை பாடலுக்கு ஏற்றாற் போல் கிருஷ்ணனும் நர்த்தனம் செய்தார். நர்த்தனத்திற்கேற்றாற்போல் வேங்கடகவியும் பாடினார். இருப்பினும், சில நர்த்தன பாவனைகளுக்கு ஏற்றாற்போல் வேங்கடகவி பாட முடியாமல் தடுமாறினார். உடனே, கிருஷ்ணன் சொன்னது போல் அதே இடத்தில் மீண்டும் விக்ரகமாக மாறினார். வேங்கடகவி தன் தோல்வியை ஒப்பு கொண்ட பிறகு, அவர் அவதார நோக்கத்தை கூறி நீங்கள் நாரதராக சஞ்சரிக்கலாம் என்று கிருஷ்ணன் அனுக்கிரகம் பண்ணினார். பதிலுக்கு வேங்கடசுப்பையர், சுவாமி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று வெங்கட சுப்பையரிடம் கேட்க நான் என் பக்தர்களாகிய நந்தினி பட்டிக்கு கொடுத்த வரத்தில் கலியுகம் முழுவதும் இங்கயே இருக்க போகிறேன் என்றார். அதற்கு நாரதர் வைகுண்ட வாசனே வைகுண்டத்தில் இல்லாத போது பக்தனாகிய எனக்கு வைகுண்டத்தில் என்ன வேலை என்று கேட்டு கலியுகம் முழுவதும் நானும் உங்களுடன் இருந்து நான் தற்போது செய்து கொண்டிருக்கும் கைங்கரியத்தையே தொடர்ந்து செய்வேன் மற்றும் அல்லாது கலியுகத்தில் தேடி கிடைக்காத பக்தியுடன் யார் வந்து உங்களிடம் பிராத்திக்க வருகிறாரோ அவர்களின் குறைகளை நான் கேட்டு உங்களிடம் கூறும் பெறும் பாக்கியத்தை தாருங்கள் என கூறினார். இனி நான் தேவலோகத்துக்கோ வைகுண்டதுக்கோ சென்றால் உம்மிடம் தான் செல்வேன் என்று பிராத்தித்தார். அவ்வாறாகவே கிருஷ்ணன் அனுகிரகம் செய்தார். தொடர்ந்து இன்னும் கூட இரவு நேரங்களில் கண்ணனின் மீது பாடல்களை பாடிகொண்டிருக்கிறார். பாடல்களுக்கு ஏற்றார் போல் கோபிகா ஸ்திரிகளுடன் கிருஷ்ணன் நர்த்தனம் செய்து கொண்டிருக்கிறார். கிருஷ்ணனின் சலங்கை (கொலுசு) சத்தம் இன்னும் இரவு நேரங்களில் கேட்டு கொண்டிருக்கிறது. அதை இந்த ஊரில் பலரும் கேட்டுக் கொண்டிருகின்றனர். நாரதர் இங்கயே இருப்பதை கண்டு அத்தனை தேவர்களும் நாங்களும் கலியுகம் முழுவதும் நாங்களும் இங்கயே இருப்பதாக இறங்கி வந்தனர். கிருஷ்ணனும் இங்கயே இருக்கும் படி அனுகிரகித்தார். திரு கோவிலின் பிரகாரத்தை சுற்றி இன்னும் அத்தனை தேவர்களும் காவல் காத்து கொண்டிருகின்றனர்.

"இன்று நான் பிறந்தேன்" என்று வெங்கடகவி ஒரு பாடல் பாடியுள்ளார். கண்ணனால் அவர் பெருமை பெற்றதும் அவரால் ஊத்துக்காடு பெருமை பெற்றதும் உலகறிந்த செய்தியாகும்.

நாள் தோறும் கோவில் அர்ச்சகர், வெங்கட கவி துளசி மாடத்தருகே அமர்ந்து கண்ணனிடம் பாடங்கேட்டு வந்ததை நேரில் கண்டு வியப்பில் ஆழ்ந்து நிற்க நேரிட்டது. இறையருள் பெற்று வேங்கடகவி பாடிய பாடல்களைப் பக்தியோடு கேட்டு இன்புற்று மகிழ்ந்தார் அர்ச்சகர். தன் சுகனுபாவங்களைப் பிறர்க்கும் கூறி அவர்களும் அந்த பேரின்பம் பெற உதவி செய்தார். இவரால், பிறரும் வேங்கடகவியின் செயல்களைக் கண்டு வியந்து பாராட்டினார். அவர் பாடிய பாடல்களைக் கேட்டு எல்லோரும் இன்புறும் நிலையும் ஏற்பட்டது. வேங்கடகவி 65 ஆண்டு காலம் வாழ்ந்தார். வெங்கடகவியின் அமர பாடல்கள்

இசை மூவருக்கும் முற்பட்ட வேங்கடகவியின் பாடல்கள் அமரத்தன்மை கொண்டவை. கண்ணன் ஆடலை நேரில் தரிசித்த கவியின் வாக்கில் வெளிப்படும் பாடல்கள் கண்ணன் ஆடும் நடனத்தின் தாளத்திற்கு ஏற்ப அமைபவை. "பால் வடியும் முகம்" எனத் தொடங்கும் பாடலுக்கு பொருள் புரியவேண்டுமா? நேரே வாருங்கள் ஊதுக்காடுக்கு. காளிங்க நர்த்தன பெருமாளை கண்டு களியுங்கள். அப்பாடல் முழுவதும் உண்மையே என்பது அப்போது புரியும். அவரது அற்புதக் கீர்த்தனைகள் மேலும் சில. (பாடல்களின் தொடக்கம் மட்டும் தரப்படுகின்றன)

1. ஸ்ரீவிக்ன ராஜம் பஜே (கம்பீர நாட்டை)
2. நீரதஸமா நீல கிருஷ்ணா (ஜயந்தஸ்ரீ)
3. அசைந்தாடும் மயில் ஒன்று (சிம்மேந்த்ர மத்திமம்)
4. அலை பாயுதே கண்ணா (கானடா)
5. ஆடாது அசங்காது வா கண்ணா (மத்யமாவதி) 6. பார்வை ஒன்றே போதுமே (சுருட்டி)
7. நீல வானம் தனில் (புன்னாகவராளி)
8. யாரென்ன சொன்னாலும் (மணிரங்கு)
9. நீதான் மெச்சிக்கொள்ள வேண்டு (ஸ்ரீரஞ்சனி)
10. தாயே யசோதே உந்தன் (தோடி)
11. பால் வடியும் முகம் (நாட்டைக்குறிஞ்சி)
12. ஸ்வாகதம் கிருஷ்ணா (மோகனம்)
13. குழலூதி மனமெல்லாம் (காம்போதி)

எனவே, பக்தர்களே! வாழ்வில் ஒரு முறையாவது ஊத்துக்காடு சென்று கண்ணனைத் தரிசிக்க வேண்டும். கட்டாயம் சென்று பாருங்கள்.

கிருஷ்ணம் சரணம்
ஷர்வம் கிருஷ்ணாய சரணம்

மூக்கிரட்டை கீரை

மூக்கிரட்டை கீரை!!

இதை புல் என்று வெறுத்து ஒதுக்குகிறார்கள் அனால் இது ஒரு மூலிகை வெளிப்பட்டது: இதை பார்த்தால் வீட்டுக்கு தூக்கிட்டு போயிடுங்க

மூக்கிரட்டை கீரையை தனியாகவோ, மற்ற கீரைகளுடன் சேர்த்தோ சமைத்து சாப்பிடலாம். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, புளி, உப்பு சேர்த்து வதக்கி, துவையலாக செய்தும் சாப்பிடலாம்.
இதயநோய், சைனஸ், ஆஸ்துமா, சளித் தொல்லை, ரத்த சோகையால் ஏற்படும் உடல்வீக்கம், தொப்பை, வாதக்கோளாறு, மஞ்சள்காமாலை, மலச்சிக்கல், மூலக்கோளாறு உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
மூக்கிரட்டை கீரை உடம்பில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கும். மூக்கிரட்டை கீரையானது கல்லீரலின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட உதவுகிறது.

மூக்கிரட்டை வேருடன் சிறிது பெருஞ்சீரகம் சேர்த்து, நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அதை தினமும் அருந்தினால், சிறுநீர் அடைப்பு விலகுவதுடன் சிறுநீரகக்கற்கள் கரைந்து வெளியேறும்.
கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை முழுமையாக வெளியேற்றும் தன்மை கொண்டது. மூளைக்கு ஆற்றல் அளித்து மனதுக்கு உற்சாகத்தையும், உடலுக்கு சுறுசுறுப்பையும் தரக்கூடியது.
மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி இலைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, மோரில் கலந்து குடிக்கலாம். தொடர்ந்து இதை குடித்துவந்தால் மங்கலான பார்வை, வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்

இயற்கைவாழ்வியலைபின்பற்றுவோம்.