புதன், 18 நவம்பர், 2020

தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம்

👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் –  ஒட்டகப்பால்

👉ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் –கங்காரு,எலி.

👉துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

👉பின்புறமாக மரம் ஏறும் விலங்கு கரடி.

👉ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

👉சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

👉ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

👉குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

👉சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.

👉சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.

👉பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

👉நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.

👉நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க…ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

👉தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.

👉காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.

👉மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.

👉“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

👉தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.

👉இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.

👉காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.

👉குளிர் காலத்தில் குயில் கூவாது.

👉எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.

👉லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

👉கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும்.ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

👉கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.

👉யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.

👉கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு–இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு–இதயம்.

👉1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.

👉ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு.

👉வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

👉ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

👉பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

👉ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

👉தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்
கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.

👉சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.

👉விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

👉சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.

👉யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.

👉நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.

👉டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்.

👉புழுக்களுக்கு தூக்கம கிடையாது.

👉நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

பரமாச்சாரியார்


நடைமுறையில் நாம் தவராக பயன்படுத்தும் விவாகத்தில் தவிர்க்க வேண்டியவை {1966 இல் பரமாச்சார்யாள் உத்தரவு}

1. மாப்பிள்ளை அழைப்பு : முன் காலத்தில் மாப்பிள்ளை வெளியூரிலிருந்து வரும் போது ஊரின் எல்லையில் சென்று மேளத்தாளத்துடன் குதூகலமாக அழைத்து வருவது வழக்கம் தற்போது முதல் நாள் அன்றே மாப்பிள்ளை சத்திரத்திற்கு வந்து விடுகிறார். தங்கி டிபன் முதலியன சாப்பிட்டு இளைப்பாறுகிறார். பிறகு இரவு {ஏற்கனவே வந்து விட்ட வரை} வெளியில் அனுப்பி ஓரிடத்திலிருந்து அழைப்பது அர்த்தமற்றது. இது சத்தியத்திற்குப் புறம்பானது. தவிர்க்கப்பட வேண்டும்.

2. காசியாத்திரை : முன் காலத்தில் பிரம்மச்சாரிகள் காசிக்குப் படிக்கச் செல்வார்கள். வழியில் பெண் வீட்டார். தங்கள் பெண்ணை ஏற்றுக்கொண்டு கிரஹஸ்தாஸ்ரமம் நடத்தச் சொல்வார்கள். சரி என்று பையனும் சம்மதித்துத் திரும்புகிறான். இது தான் தற்போது நடக்கிறது. ஆனால் முதல் நாளே நிச்சயதார்த்தம் செய்து லக்னப் பத்திரிகை படித்து ஏற்பாடாகிறது. பிறகு காசிக்குப் போவது முரண்பாடான ஏற்பாடு தவிர்க்க வேண்டும் {நம்பிக்கை மோசடி என்றுகூடச் சொல்லலாம்}

3. ஊஞ்சல் : சாஸ்திரப்படி கல்யாணம் ஆனபிறகு தம்பதிகளாய்ச் சேர்ந்த பிறகு தான் அவர்களை ஊஞ்சலில் வைத்துக்கொண்டாட வேண்டும். பகவான் கல்யாண உற்சவங்களில் விவாஹம் ஆன பிறகு தான் திவ்ய தம்பதிகளை ஊஞ்சலில் வைத்து பூஜிக்கிறோம். கல்யாணத்திற்கு முன்னால் தம்பதிகளைச் சேர்த்து வைப்பது நல்லது இல்லை. ஏதாவது ஏற்பட்டு விவாஹம் தடைபட்டால் அவர்கள் வாழ்வு பாதிக்கப்படும்.

4. பாணிக்ரஹணம் : சுபமுகூர்த்தம் வைத்து நல்ல லக்னத்தில் மாப்பிள்ளை பெண்ணின் கரத்தை க்ரஹிக்க வேண்டும். இப்பொழுது முதலிலேயே {ஊஞ்சல் பிறகு} கையைப் பிடித்து அழைத்து மணமேடைக்கு வருகிறார்கள். கைப் பிடிக்கும் வேளை ராகு காலம் எமகண்டமாய் இருக்கலாம். சுப லக்னத்தில்தான் கைப் பிடிக்க வேண்டும்.

5. கைகுலுக்குதல் : மாப்பிள்ளை பெண் இருவரும் விரதம் செய்து, கையில் ரக்ஷா பந்தனம் செய்து கொள்கிறார்கள். கைகள் புனிதமாகி இருவரும் விவாதச் சடங்குகள். ஹோமம், சப்தபதி முதலியன செய்யத் தகுதி அடைகின்றன. இந்தப் புனிதத்வத்தைக் கெடுத்து எல்லாரும் வந்து பெண், மாப்பிள்ளை இருவரும் சடங்குகள் முடியும் முன் கைகுலுக்குகிறார்கள். கைகள் சுத்தம் இழக்கின்றன. ஆகையால் விவாஹச் சடங்கு, சப்தபதி முடியும் முன் யாரும் தம்பதிகளைக் கை குலுக்கக் கூடாது. இதைப் பத்திரிகைகளில் (NB) என்று போட்டுக் குறிப்பிட்டுவிட்டால். விவாஹத்திற்கு வருபவர்கள் தக்கபடி நடந்துகொள்வார்கள்.

6. பட்டுப்புடவை : விவாஹம் செய்யும் போது பாவம் சேரக் கூடாது. ஆயிரக்கணக்கான பூச்சிகளைக் கொன்று பட்டு இழை எடுக்கிறார்கள். ஆகையால் பாவம் சேர்ந்த இந்த பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டால் விவாஹம் பாவத்திற்கு உட்படுகிறது. தம்பதிகள் க்ஷேமத்திற்கு உதந்ததல்ல இதற்காகத்தான் பரமாச்சார்யாள் இதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். அஹிம்ஸா பட்டு உடுக்கலாம்.

7. விவாஹப் பணம் {Dowry} : மாப்பிள்ளை வீட்டார் எதிர் ஜாமின் வகையறா வாங்குவது சாஸ்திர விரோதம். மேலும் விரதங்களை தங்கள் வீட்டில் செய்துகொண்டுதான் கல்யாணத்திற்கு வர வேண்டும். அவர்கள் பொறுப்பு. இப்படிச் செய்தால் சத்திரத்திற்கு காலையில் வந்தால் போதும். நேரே விவாஹம் மந்தர பூர்வமான சடங்குகளைப் பிரதானமாகச் செய்யலாம். நிறைய வேத வித்துகளுக்கு தக்ஷிணைக் கொடுத்து அக்னி சாக்ஷியான விவாகத்தைச் சிறப்பாக நடத்தலாம். சிலவும் குறையும். நகை ஆடம்பரம் தவிர்த்து ஒருவேளை ஆகாரத்துடன் முடித்து மிச்சமாகும் பணத்தை ஒரு ஏழைக் குடும்ப கல்யாணத்திற்கு உதவலாம் அல்லது சேமிக்கலாம்.

8. வரவேற்பு : முதல் நாள் வரவேற்பு கொடுப்பது தவறு. தம்பதிகளாகச் சேரும் முன் இருவரையும் ஒன்றாய் உட்காரவைப்பது தவறு. நமது கலாசாரத்திற்கு முரண்பட்டது. கோவில்களில் கல்யாணம் செய்தால் வரவேற்பு ஏதாவது சத்திரத்தில் காலியாயிருக்கும் தினத்தில் {கிழமை பார்க்க வேண்டாம்} செய்யலாம். சிலவு குறையும்.

9. திருமங்கல்ய தாரணம் : விவாகம் என்பது திருமங்கல்ய தாரணம் மட்டும் அல்ல. வேத பூர்வமான மந்த்ரம் திருமங்கல்ய தாரணத்திற்கு இல்லை. ஸ்லோகம் தான். மந்த்ர பூர்வமான விவாகம் தான் முக்கியம் உதாரணமாக 9 -10:30 முகூர்த்தம் என்றால் 10:30க்குள் திருமங்கல்ய தாரணம் செய்து விடுகிறார்கள். எல்லாரும் எழுந்து போய் விடுகிறார்கள். உண்மையான விவாகச் சடங்குகள் பிறகு தான் நடக்கின்றன. சாட்சிக்கு யாரும் இருப்பதில்லை. மேலும் முகூர்த்த காலத்திற்குப் பின் ராகுகாலம், எம கண்டம் இருக்கலாம். ஆகையால் எல்லாம் சப்தபதி உள்பட முகூர்த்த காலத்திற்குள் முடித்து விட வேண்டும். சுபகாலத்தில் தான் சடங்குகள் செய்ய வேண்டும். அப்போதுதான் தம்பதிகளுக்கு க்ஷேமம் உண்டாகும்.

10. கூரைப்புடவை : மாயவரத்திற்கு அருகில் கொறை நாடு என்ற ஊரில் தான் முகூர்த்தப் புடவை செய்வது வழக்கம். கொறை நாடு புடவை என்பதைக் கூரப்புடவை என்கிறோம். நூலில் சிவப்புக் கட்டம் போட்டு அழகாக நெய்வார்கள். உண்மையான கூரப்புடவை என்றால் நூல் புடவை என்று அர்த்தம். நாம் தற்போது பணவசதியால் பெருமைக்கு ஆசைப்பட்டுப் பட்டு ஜரிகையை, ஆயிரக்கணக்கில் செலவு செய்து பாவத்தைத் தேடிக்கொள்கிறோம்.

NB : 1966 இல் பரமாச்சார்யாள் உத்தரவு : ?என் நிபந்தனைகளுக்கு
உட்படாமல் செய்யப்படும் விவாஹப்
பத்திரிகைகளில் என் பெயரைப் போடுவது தவிர்க்கப்பட வேண்டும்?

சட்டம்பி

சட்டம்பி

கேரளத்தில் வாழ்ந்த சட்டம்பி சுவாமிகள் பெரும் மஹான். இவரது மேன்மைகளைப்பற்றி அறிந்த ஓர் அரசு அதிகாரி அவரைத் தனது இல்லத்திற்கு விருந்துண்ண அழைத்தார். அந்த அதிகாரி லஞ்ச லாவண்யத்துக்குப் பெயர் போனவர். அவரைப் பற்றி சட்டம்பி சுவாமிகள் நன்கு அறிந்திருந்தார். இருந்தாலும் அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டார். விருந்துக்கு அவரது சீடர்களும் வருவார்கள் என்ற ஒரு நிபந்தனையுடன். அதிகாரி சம்மதித்தார். குறிப்பிட்ட நாளன்று சட்டம்பி சுவாமிகள் தனியாக அந்த அதிகாரியின் வீட்டிற்குச் சென்றார்.

அதிகாரி சஸ்வாமி ஜி, சீடர்கள் எங்கே? என விசாரித்தார். அவர்கள் வெளியே உள்ளார்கள், உணவு பரிமாறியதும் வருவார்கள். உணவு பரிமாறப்பட்டதும் சுவாமிகள், அருமைச் சீடர்களே உள்ளே வாருங்கள் என்று உரக்க அழைத்தார். உடனே அந்த அதிகாரிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், பல தெருநாய்கள் வரிசையாக வந்து ஒவ்வோர் இலையிலும் அமர்ந்து பரிமாறப்பட்டிருந்த உணவுகளை உண்டன. அந்த நாய்கள் சத்தம் ஒன்றும் செய்யாமல், உண்டு விட்டு வந்தது போலவே வரிசையாகத் திரும்பிச் சென்றன. வீட்டிலிருந்த யாவரும் ஆச்சரியப்பட்டுப் போயினர். அட நாய்களுக்கு இவ்வளவு அடக்கமும், அமைதியுமா! சிரித்தவாறே ஸ்வாமிகள் அவர்களிடம், இவை இப்போது சாதாரண நாய்களாக இருக்கலாம்; ஆனால் போன ஜன்மாவில் ஊழல் பேர்வழிகளாக இருந்தவர்கள். செய்த ஊழல்களின் பயனாக இந்த நாய்ப் பிறவியைப் பெற்று அவை செய்த தீயவினைகளை அனுபவிக்கின்றனர். என்றார். இதைக் கேட்டதும் அந்த அதிகாரி கலங்கினார். அவரது அகக்கண் திறந்தது. அன்று முதல் தனது ஊழல் செயல்களை விட்டு நல்ல வாழ்க்கையை மேற்கொண்டார். ஸ்ரீநாராயண குருவின் குருவான சட்டம்பி சுவாமிகள் சுவாமி விவேகானந்தரின் பாரத யாத்திரையின் கேரள பகுதி பயணத்தில் சுவாமிஜியைச் சந்தித்து உரையாடி உள்ளார்.


யமதர்மன்

யமதருமன்!

உலகில் பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீரவேண்டும் என்பது வாழ்க்கை நியதி. ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டார் திரும்பி வரமாட்டார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். மரணம் எனும் நிகழ்வைக் கட்டுப்படுத்துகிற தேவன் எமன். அவனுக்கு எமதருமன் என்றும் தர்மராஜன் என்றும் பெயருண்டு. காலம்  தவறாமல் உயிர்களைக் கவர்வதால் அவனுக்குக் காலன் என்ற பெயரும் உண்டு. அஷ்டதிக் பாலகர்களில் தென்திசைக் காவலன் எமன். இவன் மகாவிஷ்ணுவின் பாரம்பரியத்தில் தோன்றியவன். மகாவிஷ்ணுவிடமிருந்து தோன்றியவர் பிரம்மதேவன். அவரிடமிருந்து தோன்றியவர்கள் மரிசி, காஸ்யபர், சூரியதேவன் ஆகியோர். சூரியனிடமிருந்து தோன்றியவன் எமதருமன். அவனுக்கு சூரியபுத்திரன் என்ற பெயரும் உண்டு.

விஸ்வகர்மா எனும் தேவலோகச் சிற்பியின் மகள் (சஞ்ஞாதேவி) சம்ப்ஜனா. இவளை சூரியதேவன் மணந்தார். அவர்களுக்கு மனு, எமன் என இரண்டு புத்திரர்களும், எமி என்ற மகளும் தோன்றினர். சூரியனின் கடும் வெப்பத்தைத் தாங்கமுடியாத சம்ப்ஜனா, தனது நிழலான சாயாவை சூரியனிடம் விட்டுவிட்டு, தவம்புரிய வெகுதூரம் சென்றுவிட்டாள். சாயாவையே சம்ப்ஜனா என எண்ணிக் கொண்டிருந்த சூரியதேவனுக்கு அவள் மூலம் மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் சனி, மனு, தப்தி ஆகியோர். எமனும் சனியும் சூரிய புத்திரர்கள். எனவே, சகோதரர்கள். எமன் இயற்கையிலேயே நியாயஸ்தன். நீதி, நேர்மை தவறாதவன். சத்தியத்தின் பிரதிநிதி. சம்ப்ஜனாவின் நிழல்தான் சாயா என்ற உருவத்தில் சூரியனின் பத்தினியாக வாழ்ந்துகொண்டிருந்ததை அறிந்த எமன், சாயாவைக் குற்றம் சாட்டினான். அவள் சூரியனை ஏமாற்றுவதாகக் குறை கூறி, கோபத்தில் காலால் உதைத்தான். இதனால் கோபமடைந்த சாயா, எமனுக்குக் கால்களில் ஆறாத புண் ஏற்பட்டுத் துன்பப்படுமாறு சாபம் அளித்துவிடுகிறாள்.

பின்னர் சூரியனின் ஆணைப்படி எமன் சிவனைக் குறித்துக் கடும் தவம் இயற்றினான். சிவபெருமான் தோன்றி, அவனைத் தென் திசைக்குக் காவலனாக்கி, மனித உயிர்களின் ஆயுள் முடியும்போது, அவற்றைக் கவர்ந்து பாவங்களுக்கேற்ப தண்டனை அளிக்கவும், புண்ணிய பலன்கள் அளித்து வாழ வழி செய்வதற்கும் அதிகாரத்தை வழங்கி, அவனை நரகலோகம் எனும் எமலோகத்துக்கு அதிபதியாக்கினார். இரண்டு கூரிய சிகரங்களிடையே அதலபாதாளத்தில் அக்னி ஆறு.  சிகரங்களை இணைத்துக் கட்டப்பட்ட ஒரு தலைமுடியில் ஒரு சிம்மாசனம் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்க, அதில் அமர்ந்துதான் எமதருமன் நீதி வழங்குகிறான். அவனது நீதியின் தன்மை எள்ளளவு மாறினாலும் அந்த சிம்மாசனம் அறுந்து, அதனுடன் எமனும் அக்னி ஆற்றில் விழுந்துவிடுவான். இத்தகைய சூழ்நிலையில்தான் எமன் நியாயம் வழங்கிக் கொண்டிருக்கிறான்.

சிவபெருமான், தனது வாகனத்துக்குச் சமமான ஒரு வாகனத்தை எமனுக்குத் தர விரும்பினார். ரிஷபத்தைப் போலவே தோற்றமுடைய, கரிய எருமைமாடு ஒன்றை உருவாக்கி, எமனுக்கு வாகனமாக அருளினார். விஷ்ணுவின் அம்சமான எமனுக்கு ஜீவன்களின் பாபபுண்ணியங்களை அனுசரித்து நீதி வழங்கும் அதிகாரத்தையும் அளித்தார். இந்தப் பணியைத் தவறின்றிச் செய்ய எமனுக்கு பல தடவை அக்னிப் பரீட்சை நிகழ்ந்தது. அவற்றிலெல்லாம் தவறாமல் தனது கடமையைச் செய்தவன் எமதருமன். ஆனால், ஸ்ரீராம அவதார முடிவில் எமனுக்கு ஒரு பெரும் சோதனை ஏற்பட்டது. ராவண சம்ஹாரத்துக்குப் பிறகு ஸ்ரீராமன் அயோத்தி திரும்பி முடி சூட்டிக்கொண்டான். இருந்தாலும் யாரோ ஒருவன் சொன்ன அபவாதத்துக்காகச் சீதையைக் காட்டுக்கு அனுப்ப நேர்ந்தது. வால்மீகி மகரிஷியின் ஆசிரமத்தில் ராமனின் புதல்வர்கள் லவ- குசர்கள் தோன்றினர். ஸ்ரீராமன் அனுப்பிய அஸ்வமேத யாகக் குதிரையை லவ- குசர்கள் தடுத்து, அதனால் ராமனே தன் புதல்வர்களை எதிர்த்துப் போரிடும் நிலைமை உருவாயிற்று.

பின்னர், லவ-குசர்கள் யாரென்று அறிந்து மனமகிழ்ந்தார் ஸ்ரீராமன். அவர்களுக்கு முறைப்படி பட்டம் சூட்டப்பட்டது. ஸ்ரீராமன், தனது அவதாரத்தின் கடமைகளை முடித்து மீண்டும் வைகுண்டம் செல்ல வேண்டிய தருணமும் வந்தது. இந்தப் பணி நிறைவேற எமனுடைய கடமை முக்கியமாக இருந்தது. மகாவிஷ்ணுவின் சக்தியை ஸ்ரீராமனின் ஸ்தூல சரீரத்தில் இருந்து எடுத்து, மீண்டும் வைகுண்டம் சேர்க்க வேண்டியது எமனின் கடமையானது. அப்போது, எமதருமன் பிரம்ம தேவனை வேண்டினான். பிரம்மன் தோன்றி, இதற்கான வழிமுறையை அவனுக்கு எடுத்துரைத்தார். அதன்படி எமதருமன் அதிபலா மகரிஷியின் சீடன் போல் வடிவெடுத்து, அயோத்திக்கு வந்தான். அங்கே ஸ்ரீராமனைச் சந்தித்தவன், தான் ராமனுடன் தனியாக சில தேவ ரகசியங்கள் பற்றி பேசவிருப்பதால், யாரும் தங்கள் அறைக்குள் வரக்கூடாது என்று நிபந்தனை விதித்தான் அவனது விருப்பப்படியே ஸ்ரீராமனும் தன் சகோதரனான லட்சுமணனை அழைத்து, அறைக்கு வெளியே காவலுக்கு நிறுத்தினார். தாங்கள் பேசி முடிக்கும் வரையிலும் எவராக இருந்தாலும் உள்ளே விடக்கூடாது என உத்தரவிட்டார்.

எமனும் ஸ்ரீராமனும் அறைக்குள் பேசிக்கொண்டிருந்த போது துர்வாச முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். ஸ்ரீராமனைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார். லட்சுமணன் அனுமதிக்க வில்லை. ஆனால், துர்வாசர் அவனை அலட்சியம் செய்யாமல், கோபத்துடன் ராமன் இருந்த அறைக்குள் சென்றுவிட்டார். (வேறு விதமாகவும் சொல்வதுண்டு.) இதனால், தன் கடமையைச் சரியாகச் செய்ய முடியவில்லையே என்று கலங்கினான் லட்சுமணன். சரயு நதிக்கரைக்கு ஓடோடிச் சென்று, ஸ்ரீராம் ஸ்ரீராம் என்று ஜபித்தபடியே ஆற்றுக்குள் இறங்கி பிராணத் தியாகம் செய்தான். தகவல் அறிந்த ஸ்ரீராமன், யார் தடுத்தும் கேளாமல் லட்சுமணனைத் தேடி சரயு நதியில் குதித்து, அதன் வெள்ளத்தில் மூழ்கினார். ராமாவதாரம் முடிந்தது. எமதருமன் தனது கடமையை முடித்துக் கொண்டு ராம- லட்சுமணர்களின் ஆத்மாக்கள் வைகுண்டத்தை அடையவழி செய்தான்.

நசிகேதஸ் என்பவன் எமதரும ராஜனை சந்தித்து, அவனோடு பேசி தனது சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டதாக உபநிடதம் கூறுகிறது. அதுபோலவே, ஸ்ரீராமனும் எமனுடன் உரையாடி, பிறப்பு- இறப்பு, ஆத்ம விடுதலை பற்றிய பல தத்துவங்களைத் தெரிந்துகொண்டார். அடுத்ததாக விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்தில் வேதங்கள், உபநிடதங்கள், சாஸ்திரங்கள் ஆகிய அனைத்து தத்துவங்களையும் அனைவருக்கும் கண்ணன் உபதேசமாக வழங்குவதற்கு, ராமாவதாரத்தில் எமதரும ராஜனோடு உரையாடிய சம்பவமும் உதவியிருக்கலாம். அவதார புருஷர்களுக்கே உபதேசம் செய்யும் அளவுக்கு ஞானம் பெற்றவன் எமதருமன். இதற்கான வரலாறும் ஒன்று உண்டு. பதினாறு வயது நிரம்பிய மார்க்கண்டேயனின் உயிரைக்கவர எமதருமன் சென்றபோது, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிக் கொள்கிறான். மார்க்கண்டேயன் மீது எமன் வீசிய பாசக்கயிறு சிவபெருமான் மீதும் விழுந்தது. சிவன் கோபத்துடன் எமனைத் தண்டித்து தடுத்தத்துடன், மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு வயது என்று அருள்புரிந்தார்.

அந்த தருணத்தில் சிவபெருமான் கோபத்தில் காலனை காலால் உதைத்தார் என்ற வரலாறு உண்டு. இதற்கும் ஒரு உட்பொருள் இருந்தது.. நீதியும் நேர்மையும் தவறாமல் சத்தியத்தைக் காக்கும் பொறுப்பேற்ற எமதருமன், அதற்கான மனோபலம் பெறுவதற்காக, ஆதிபராசக்தியைக் குறித்து கடும்தவம் செய்தான். அம்பிகை தோன்றி அருள்புரிந்து அளப்பரிய ஞானத்தை நல்கினாள். ஆதிசக்தியின் திருவடிகள் தன் மார்பின் மீது பட வேண்டும் என்று விரும்பினான் எமன். காலம் வரும்போது அது கைகூடும் எனக்கூறி மறைந்தாள் ஆதிசக்தி. மார்க்கண்டேயனைக் காப்பாற்றியபோது சிவபெருமான், தன் இடது காலால் காலனை உதைத்தார்.  அர்த்தநாரீஸ்வரரான சிவபெருமானின் இடது கால், அன்னை ஆதிபராசக்தியின் காலல்லவா? ஆக, எமன் வேண்டிக்கொண்டபடியே அன்னையின் திருப்பாதங்கள் அவன் மார்பில் பட்டது. ஞானம் வேண்டி எமன் செய்த தவம் பூர்த்தியானது.

பல்வேறு யுகங்களில் எமனும் சில அவதாரங்கள் எடுத்து அருள்புரிந்ததாக புராண வரலாறுகள் உண்டு. மகாபாரத காலத்தில் எமதருமனின் அம்சத்தில் தோன்றியவர்தான் விதுரர். அவர் கூறிய நீதிகளும் வழிகாட்டிய சன்மார்க்க வழிகளும் விதுரநீதி என்ற நூலாக நமக்குக் கிடைத்துள்ளது. பாண்டவர்களில் மூத்தவரான தருமமும் குந்திதேவிக்கு எமதருமனின் அனுக்ரஹத்தால் பிறந்தவர். எந்த நிலையிலும் தருமம் தவறாது அரசு புரிந்த யுதிஷ்டிரர், எமதருமனின் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. எமன் என்றதுமே மரணம் என்று பலர் சிந்திக்கின்றனர். பாசக் கயிற்றைப் போட்டு உயிரை எடுத்து நரகத்தில் தள்ளும் கொடிய தேவதையாக நினைத்து பயப்படுகின்றனர். ஆசையிலும் பேராசையிலும் மூழ்கி பொன், பொருள், புகழ் ஆகியவற்றை நம்பியே வாழ்பவர்கள் மரணத்துக்கு பயப்படுவார்கள். மரணமில்லாப் பெருவாழ்வு பெறுவதற்கு தவம் செய்பவர்கள், மரணத்துக்கு பயப்படுவதில்லை. எமன் எனும் தர்மராஜனை அவர்கள் தரிசிக்க விரும்புகிறார்கள். சத்தியத்தைக் கடைப்பிடித்து நீதியும் நேர்மையும் தவறாமல் வாழ்பவர்களுக்கு மரண பயம் இருக்காது.


நாழிக்கிணறு

நாழிக்கிணறு


திருச்செந்தூரின் அதிசயமாக திகழ்வது நாழிக்கிணறு ஆகும். நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றின் தண்ணீர், நல்ல தண்ணீராக உள்ளது. திருச்செந்தூருக்கு வரும் அனைத்து பக்தர்களும் கடலில் நீராடிவிட்டு, பின்பு இந்த கிணற்று நீரில் நீராடிய பிறகே முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால் உள்ள புராண வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.
அசுர இனத்தைச் சார்ந்தவர்களான தாரகாசூரனும், சூரபத்மனும் இறையருள் பெற்று தேவர்களை அடிமைப்படுத்தினர். வடக்கே தாரகாசூரனும், தெற்கே சூரபத்மனும் மக்களைக் கொடுமைப்படுத்தி ஆட்சி செய்தனர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க முருகன் தாரகாசூரனை வீழ்த்திவிட்டார். தெற்கே சூரபத்மனை வீழ்த்த திருச்செந்தூருக்கு வருகை புரிந்தார். முருகனின் மயில் வாகனமாக இந்திரன் விளங்கினார்.

சூரபத்மனோடு ஐந்து நாட்கள் கடும் போர் நடந்தது. இந்தப் போரில் சூரபத்மனின் படைகளும், அவனது சகோதரர்களும் அழிக்கப்பட்டனர். போரின் ஆறாம் நாள் அன்று சூரபத்மன் மட்டும் தனியாக போருக்கு வந்தான். தனது சக்திகள் முழுவதையும் பயன்படுத்திப் போர் புரிந்தான். ஆனால், முருகனின் சக்திக்கு முன்னால், அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் கடலுக்கடியில் உள்ள தனது அரண்மனையில் ஒளிந்து கொண்டான். பின்பு மாமரமாக உருமாறித் தாக்கினான். கார்த்திகேயன் தனது வேலால் மரத்தை இரண்டாகப் பிளந்தார். பத்மாசூரன் உருமாறிய மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன்,சேவல் கொடியுடனும், மயில் வாகனத்தோடும் காட்சி புரிந்தார்.
போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு ஆகும். 14 அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான கிணறு அதிசயத்தினுள் ஓர் அதிசயம். இந்த கிணற்றின் நீர் உப்பாகவும் கருகிய நிறத்தில் இருக்கும். இந்த கிணற்றின் உள்ளேயே மற்றொரு கிணறு உள்ளது. ஒரு அடி மட்டுமே உள்ள இந்த கிணற்றின் நீர் தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒரே கிணற்றுப் பகுதியில் இருவேறு சுவை கொண்ட கிணறு அமைந்தது அதிசயத்தினுள் அதிசயம் ஆகும்.

இந்த அதிசயத்தை நேரில் காண திருச்செந்தூர் வாருங்களேன்.


ஆறுபடை வீடு

ஆறுபடை வீடுகள். 

 


இரண்டாவதுபடை வீடு  திருச்செந்தூர். சுக்குக்கு மிஞ்சிய    வைத்தியமில்லை;
சுப்பிரமணியருக்கு மிஞ்சிய
தெய்வமில்லை. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில்,   திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோயில் இரணடாவது படை  வீடு. தேவ குருவாகிய வியாழ பகவான் இங்கு  தங்கி, முருகனுக்கு அசுரன் பற்றி எடுத்துரைத்ததுடன், தேவதச்சனான விஸ்வகர்மாவை கொண்டு இங்கு  கோவில் எழுப்பினர். தேவ குருவுக்கு   மிக முக்கியமான ஸ்தலம். ஆகவே  ஐப்பசி 30 ம்  நாள் குருபெயர்ச்சி   தினத்தில் திருச்செந்தூர் முருகனை வணங்கி தேவ குருவை   வணங்கினால், குருவினால் சிறப்பான நற்பலன்கள்  உண்டாகும் .
முருகப்பெருமான் சூரபத்மன் மீது படையெடுத்துப் போரிட வரும்போது, வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், கிரௌஞ்ச மலையையும் அழித்துவிட்டுத் தன் படைகளுடன் வந்து திருச்செந்தூரில் தங்கி வீரவாகுத் தேவரின் தூது    சூரபத்மனால் ஏற்கப்படாமல் போன பிறகு முருகப்பெருமான் அன்னை பார்வதியிடம் வேல் பெற்று, சூரபத்மன் மீது போர் தொடுத்து,   போரின் முடிவில் கடலுக்கடியில்  மாமரமாக நின்ற சூரபத்மனை முருகப் பெருமான் தன்னுடைய வேலாயுதத்தால் இரு கூறாகப் பிளந்து அவனை சேவல் கொடியாகவும், மயில்  வாகனமாகவும் ஆட்கொண்டார்.  கடலுக்கு அடியில் மாமரமாய்க் காட்சியளித்த சூரபத்மனைக் கொல்வதற்காக, முருகப் பெருமான் வேலாயுதத்தை ஏவியபோது அதன் கொடூரம் தாங்காமல் கடலும் பின் வாங்கியதாக அருணகிரிநாதர் தனது திருப்புகழில் குறிப்பிடுகின்றார்.
திருச்செந்தூர் கடற்கரையில் போர்  நடந்த போது படை வீரர்களின்   தாகம் தீர்க்க கடற்கரையை ஒட்டி  உப்பில்லாத நன்னீர் கொண்ட   நாழிக்கிணறை முருக பெருமான்   உருவாக்கினார். இன்று பக்தர்கள்   கடல் தீர்த்தத்தில் நீராடி பின்பு  நாழிக்கிணறு நன்னீர் தீர்த்தத்தில்   நீராடி பிறகு ஸ்வாமி தரிசனத்துக்கு   செல்கிறார்கள். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோயிலே ஆகும். இக்கோயில் கடற்கரையில் இருக்கும் 'சந்தனமலை’யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, 'கந்தமாதன பர்வதம்’ என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் பெருமாள் சந்நதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம். சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிராகாரம் கிடையாது. இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு இலிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும்.
இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிராகாரம் இருக்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகளே இவருக்கு செய்யப்படுகிறது. சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் இலிங்கம் இருக்கிறது. இவ்விரு இலிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். பஞ்சலிங்க தரிசனம்
இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.
வெளியிலிருந்தபடி முருகரை தரிசனம் செய்யும் போதே பஞ்சலிங்க தரிசனம் செய்ய இயலாது. மூலவர் முருகரின் இடதுபுறம் உள்ள சிறு வாயில் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலது புறம் வந்து பாதாள பஞ்சலிங்க தரிசனம் செய்ய வாரநாட்களில் இயலும்.இதற்கு கோயில் சார்பில் ஐந்து ரூபாய் கட்டண நுழைவுச்சீட்டு உண்டு. கூட்டநெரிசல் அதிகம் உள்ள சமயம் இந்த நுழைவுச்சீட்டு வழங்கப்படுவதில்லை. ராஜகோபுரம்
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் 157 அடி உயரம் கொண்ட ஒன்பது தளங்களைக் கொண்ட   இராஜகோபுரம் அமைந்துள்ளது.  முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
பூஜை நேரம் பூஜை விபரம்
காலை 5.10 சுப்ரபாதம் திருப்பள்ளி எழுச்சி 5.30 விசுவரூப தரிசனம்
5.45 கொடிமர நமஸ்காரம்.
6.15 உதயமார்த்தாண்ட அபிஷேகம்
7.00 உதயமார்த்தாண்ட தீபாராதனை
8.00 காலசந்தி தீபாராதனை
10.00 கலச பூசை
10.30 உச்சிக்கால அபிஷேகம்
பகல் 12.00 உச்சிக்கால தீபாராதனை
மாலை 5.00 சாயரட்சை பூசை
இரவு 7.15 அர்த்தசாம அபிஷேகம்
8.15 அர்த்தசாம பூசை
8.30 ஏகாந்த சேவை
8.45 இரகசிய தீபாராதனை, பள்ளியறை பூஜை
9.00 நடைதிருக்காப்பிடுதல்
மார்கழி மாதம் மற்றும் திருவிழா காலங்களில் பூஜை நேரம் மாற்றம் இருக்கும்.


திருவிழா: பங்குனி உத்திரம், திருகார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி. திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் திருச்செந்தூர் தலத்தில் தீர்த்தமாக உள்ளது.   இவற்றில், கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக் கிணற்றில்  மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள். கடற்கரையில் அமைந்திருந்த சில தீர்த்த கிணறுகள் மணல் மூடி தூர்ந்துவிட்டன. அந்தத் தீர்த்தக் கட்டங்களைக்  குறிப்பிடும் கல்வெட்டுகளும் காணாமல் போய்விட்டன. மற்ற தீர்த்தங்கள்   ஊருக்குள் இருக்கிறது; ஆங்காங்கே  வழிகாட்டி பலகைகள் உண்டு.
 

1. முகாரம்ப தீர்த்தம்: இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப் பருகுவர்.
2. தெய்வானை தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.
3. வள்ளி தீர்த்தம்: இந்தத் தீர்த்தம் ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும்.
4. லட்சுமி தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர், குபேரனும் அடைவதற்குரிய செல்வங்களைப்பெறுவர்.
5. சித்தர் தீர்த்தம்: காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத் தடையாகிய உடல், உலக, பைசாசு என்கிற பகைகளை விலக்கி முக்தி வழியை நாடச் செய்யும்.
6. திக்கு பாலகர் தீர்த்தம்: கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்கள் கொடுக்கும் பலனைத் தரும்.
7. காயத்ரீ தீர்த்தம்: அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப் அருளும்.
8. சாவித்ரி தீர்த்தம்: பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.
9. சரஸ்வதி தீர்த்தம்: சகல ஆகம புராணங்க ளையும் அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.
10. அயிராவத தீர்த்தம்: சந்திர பதாகை முதலிய நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம்.
11. வயிரவ தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் பல புண்ணிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.
12. துர்கை தீர்த்தம்: சகல துன்பங்களும் நீங்கி நன்மைகிட்டும்.
13. ஞானதீர்த்தம்: இறைவனைப் பரவுவோருக்கும் பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும்.
14. சத்திய தீர்த்தம்: களவு, கள்ளுண்டல், குரு நிந்தை, அகங்காரம், காமம்,பகை, சோம்பல், பாதகம், அதிபாதகம், மகா பாதகம் ஆகியவற்றினின்றும் நீக்கி,  சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.
15. தரும தீர்த்தம்: தேவாமிர்தமாகிய மங்கள கரத்தைக் கொடுத்தருளும்.
16. முனிவர் தீர்த்தம்: மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக் கண்ட பலனைப் பெறுவர்.
17. தேவர் தீர்த்தம்: காமம், குரோதம், லோபம் மோகம் போன்ற ஆறு குற்றங்களை நீக்கி, ஞான அமுதத்தை நல்கும்.
18. பாவநாச தீர்த்தம்: சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த்தங்களையும் அளிக்கவல்லது.
19. கந்தபுட்கரணி தீர்த்தம்: சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசை சூடும் மேன்மையைப் பெறுவர்.
20. கங்கா தீர்த்தம்: இத்தீர்த்தம் முக்திக்கு ஏதுவாய் பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் தெப்பம் போன்றிருக்கும்.
21. சேது தீர்த்தம்: சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருள வல்லது.
22. கந்தமாதன தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.
23. மாதுரு தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.
24. தென்புலத்தார் தீர்த்தம்: இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளும் தண்ணீரும் இறைத்தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க செந்திலாண்டவன் திருவருட் கரந்து வாழும் பதத்தைத் கொடுத்தருளுவார்.
அமைவிடம் :
தூத்துக்குடி மாவட்டத்தின்   திருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில்  மன்னார் வளைகுடாவை அண்டி  கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு நேரடியாக மதுரை, திருச்சி, சென்னை, கோவை முதலிய பெருநகரங்களிலிருந்து அரசு விரைவுப் பேருந்துகள் வழியாகச் செல்லலாம். சென்னை-திருநெல்வேலி செல்லும் ரயில் மூலமும் செல்லாம்.  இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது.
திறக்கும் நேரம்
காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

தெரிந்து கொள்வோம் சாஸ்திரம்

கொஞ்சம் சாஸ்திரம் தெரிந்து கொள்வோமா !!

1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது

2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம் .அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது.

3. அன்னத்தால் பிராணனையும் பிராணனால் பலத்தையும் பலத்தால் தவத்தையும் தவத்தால் சிரத்தையையும் சிரத்தையால் புத்தியையும் மனத்தால் சாந்தியால் சித்தத்தையும் சித்தத்தால் நினைவால் ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னத்தைக் கொடுப்பது இவை எல்லாவற்றையும் கொடுத்தாகிறது. ஏன தைத்ரீயோபநிஷ்த் கூறுகிறது. எனவே முடிந்த போது முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள்.

4. அளவிற்து அதிகமாக உண்டால் நோய்வரும் . ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.

5. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.

6. மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.

7. உணவில் சீரகம் (சீர் அகம்) சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.

8. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.

9. கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.

10. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம் தலை சுற்றல் வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.

11. உணவு உண்பதற்கு முன்பு கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.

12. காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.

13. உணவு உண்ணும் போது பேசக் கூடாது. படிக்கக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது

14. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.

15. காலணி அணிந்துக் கொண்டு உண்ணக் கூடாது.

16. சூரிய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.

17. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

18. நிலவின் ஒளியில் உண்ணக் கூடாது. பௌர்ணமியில் நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடக் கூடாது. பலருடன் சேர்ந்து சாப்பிடலாம்.

19. இருட்டிலோ நிழற்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.

20. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது.

21. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.

22. சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.

23. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்;.

24. வெங்கலம் அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.

25. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.

26. வெள்ளித் தட்டில் இலையில் சாப்பிட்டால் நல்ல அழகு அறிவு மன ஒருமைப்பாடு குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.

27. நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவுப் பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.

28. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ;ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.

29. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ அப்பளமோ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.

30. அதே போல் முதலில் கீரையோ  வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.

  வாழ்வில் நாம் செய்யக் கூடாதவை

1. நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது.

2. செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது.

3. தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறியலாகாது.

4. நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது.

5. செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. காளானைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது.

6. பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது.

7. கர்பிணி பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது.

8. மருந்து மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது.

9. பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும்.

10. இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது.

11. நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது.

12. வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது.

13. விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது.

14. விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.

15. வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது கூடாது.
மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது.

இதெல்லாம் ஒரு 80 வருடங்களுக்கு முன்பு மிகச் சரியாக கடைபிடித்து வந்தார்கள்.

அதனால் தான் அவர்களின் ஆயுள் 120 வயது வரை திட காத்திரமாக இருந்தது.‌

ஆனால் இப்போது பல வகையான நோய்கள் சிறுவயதிலேயே தொற்றிக் கொள்கிறது.

முடிந்த வரை வெளி உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

இப்போது தான் யூடியூப் இருக்கிறதே நீங்களே அழகாக சமைக்கலாமே !!

ஆரோக்கியம் உங்கள் கையில் இருக்கிறது.

இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்யமாக அமைதியாயக அமோகமாக அமைய வாழ்த்துகள்.

வியாசர்

வியாசர் மகாபாரதத்திற்கு முதலில் வைத்த பெயர் ஜயம் என்பது ஏன் தெரியுமா?


மகாபாரதம் என்பது நம் நாட்டின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றாகும். பாரதம் என்பது பரதன் ஆண்ட பூமி என்றும், மகாபாரதம் என்பது, பரதன் முதல் ஜனமேஜயன் வரை அவனது நீண்ட வம்சாவளி ஆண்ட நாடு என்றும் பொருள்படும். பிற்காலத்தில், அந்த‌ நீண்ட வம்சாவளியின் வரலாறு (இதிகாசம்) அப்பெயரால் அழைக்கப்பட்டது.

வியாசமுனிவர் தமது பாரதத்தை 100008 சுலோகங்களைக் கொண்ட மிகப் பெரும் காப்பியமாக உருவாக்கினார். கோர்வையாக ஒரு வரலாற்றை, சற்றும் சுவை குன்றாமல் யாப்பது அவ்வளவு எளிய செயலா என்ன? இக்காப்பியத்தை, வியாசர் இயற்ற, இயற்ற, விநாயகர் உடனுக்குடன் தம் தந்தத்தால் மேரு மலையில் எழுதினார் என்று நூன்முகம் கூறும்.

இந்நூலுக்கு வியாசர் ஆரம்பத்தில் வைத்த பெயர் ஜயம் என்பதாகும்:

நாராயணம் நமஸ்க்ருத்ய
நரம் சைவ நரோத்தமம் |
தேவீம் ஸரஸ்வதீம் வ்யாஸம்
ததோ ஜயம் உதீரயேத் ||

'ஜயம்' என்பதை அப்படியே வெற்றி எனப் பொருள் கொள்ளல் தவறு. இது உண்மையில், க ட ப யா தி சங்க்யை என்ற (எண்ணை, எழுத்தாக மாற்றி எழுதும்) அக்கால மரபுப்படி, 18 (பதினெட்டு) என்ற எண்ணைக் குறிப்பதாகும். என்றால் இக்காப்பியத்தில் அந்த எண்ணின் ஆதிக்கம் அத்தனை அதிகமா? ஆம். மேலும் விரிவாகப் பார்ப்போம்.
 


சமரேஷு துர்கா என்ற வழக்கில் கொற்றவை (துர்க்கை) போர்க்கடவுளாக வணங்கப் படுகிறாள். உக்ரமான துர்க்கையின் உருவம் 18 கைகளைக் கொண்ட அஷ்டாதச புஜ துர்கா என்றழைக்கப்படுகிறது. என்றால் 18 என்ற எண் போருடன் தொடர்புடையதா என்றால், ஆம் என்றே சொல்லவேண்டும்.
தேவ அசுர யுத்தம் 18 ஆண்டுகளும், ராம ராவண யுத்தம் 18 மாதங்களும், மகாபாரத யுத்தம் 18 நாட்களும், கலிங்கப் போர் 18 நாழிகைகளும் நடந்ததாக, செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி கூறுகிறது:
தேவாசுர ராமாயண மாபாரதம் உளவென்றுஓவா உரை ஓயும்படி உளதப் பொருகளமே..

மகாபாரதத்திலுள்ள 100008 சுலோகங்களிலும் 18 எண்ணின் தாக்கத்தைக் காணலாம். இந்தக் காவியம் ஆதி பர்வம் முதல் ஆனுசாசனீக பர்வம் ஈறாக மொத்தம் 18 பர்வங்களை (Cantos) உள்ளடக்கியுள்ளதாகும்.  

இதில் இடம்பெறும் பகவத்கீதை எப்படி? அதற்கும் 18 அத்தியாயங்கள் என்பது கவனிக்கத்தக்கது.

மகாபாரதப் போர் நடைபெற்ற நாட்கள் மட்டும் 18 அல்ல. அதில் இடம்பெற்ற படைப்பிரிவுகள் (அட்சரோணிகள்) எண்ணிக்கையும் 18 ஆகும். 18 தளகர்த்தர்கள் அவற்றை வழி நடத்தினர்.

பகவத்கீதை நம் நாட்டின் தலைசிறந்த தத்துவ நூல் என்ற போதிலும், அதன் நோக்கம், போரில் முனைப்பில்லாத அர்ஜுனனைப் போரில் ஈடுபடுத்துவதாகவே இருந்ததைக் கருத்தில் கொள்ளவேண்டும். கர்மண்யேவ அதிகார ஸ்தே மா பலேஷு கதாசன (கடமையைச் செய்; பலனைக் கருதாதே) என்ற தாரக மந்திரமே அதன் உந்து சக்தி. இப் போரால் நீ எதை இழக்கப் போகிறாய்? தோல்வி அடைந்தால், வீர சொர்க்கம் போவாய்; வெற்றி பெற்றால் நீங்கள் இழந்த ஆட்சி அதிகாரத்தைத் திரும்பப் பெறுவாய். மொத்தத்தில் இப்போரால் உனக்கென்ன நஷ்டம்? கிருஷ்ணனின் இந்த முரண் தர்க்கம் (dialectics) எப்படிப்பட்டது?
 

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம் || (2 : 37)

பாண்டவர்கள், தங்கள் மூத்த உறவினர்களை/ ஆசிரியர்களைக் கொல்ல நேர்ந்தது எவ்வளவு பெரிய கொடுமை? எத்தனை இளைஞர்கள் பலி ஆயினர்? எத்தனை அழிவுகள்? எத்தனை இழப்புகள்? எல்லாவற்றையும் உள்வாங்கிய அந்த ஒற்றைச் சொல்தான் ஜயம் (18) என்பது.

திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள்

திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?

சம்ஸ்கிருதத்தில் இதை 'சப்தபதி' என்று கூறுவார்கள். அதாவது ஏழு அடிகள் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதாகும். அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்கண்டவாறு த‌னது பிரார்த்தனையைச்சொல்கிறான்!
"முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்"
"இரண்டாம் அடியில்: ஆரொக்கியமாக வாழ வேண்டும்"
"மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்"
"நான்காவது அடியில்: சுகத்தையும் , செல்வத்தையும் அளிக்க வேண்டும்"
"ஐந்தாவது அடியில் : லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்"
"ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள்நிலையாக தொடர வேண்டும்"
"ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்"

என்று பிராப்திப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூக்ஷமமான மனோவியல் விசயத்தை இந்து தர்மத்தில் உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள். இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சினேகிதம் உண்டாகும் என்பது சாஸ்திரம். உதாரணமாக நாம் சாலையில் நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள். ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களைமுன்னே போகவிட்டுவிடுவோம்.முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம். இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குளாக நடந்து விடும் என்பது ஒரு சூக்ஷமமான விஷயம். இதை மிகவும் நுணுக்கமாக ஆரய்ந்து நம் இந்து தர்மத்தில்" அதை ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதை நாம் அனுபவித்து உணர வேண்டும். இந்து தர்மத்தில் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. பல நுணுக்கமான அறிவியல் மற்றும்மனோவியல்விஷயங்கள் நிறைந்தது இந்து தர்மம்.
இதை வாழ்ந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் முயற்சிப்போம்....

ஸ்ரீரங்கம்

ஸ்ரீ ரங்கம் பெரிய பெருமாளுக்கு உடம்பு சரியில்லாமல் போன கதை தெரியுமா!

ஒரு சுவையான சம்பவம் ஸ்ரீ ராமானுஜர் அவதார சமயத்தில் நடந்தது. ஸ்ரீ ராமானுஜர், பெரிய பெருமாளை பார்க்க சென்றார்.

அப்பொழுது தைல காப்பு சாத்தி இருந்தார் பெரிய பெருமாள். என்ன காரணத்தாலோ, துணியால் போர்த்திக்கொண்டு படுத்து இருந்தார் பெரிய பெருமாள்.

இதை பார்த்த ஸ்ரீ ராமானுஜருக்கு பெரிய பெருமாளுக்கு உடம்புக்கு ஏதோ சௌகரியம் இல்லையோ என்று மனதில் தோன்றியது.

அர்ச்ச அவதாரம் தானே, கல் தானே என்று நினைக்கும் அஞானிக்கு, ஸ்ரீ ராமானுஜரின் நிலை எப்படி புரியும்?

பெரிய பெருமாளை பார்த்து "ஏன், திருமேனி பாங்கு இல்லையோ?" என்று கேட்டே விட்டார் ஸ்ரீ ராமானுஜர்.

ஸ்ரீ ராமானுஜரை பார்த்தார் பெரிய பெருமாள். பக்தன் மனோபாவத்துக்கு ஏற்று, பெருமாள் பழகுவார்.

அர்ச்ச அவதாரமாகவே பேசினார்,
"ஆமாம். கொஞ்சம் சரியாக இல்லை." என்று சொன்னார் பெரிய பெருமாள்.

"ஏன் இப்படி ஆனது?" என்று ஸ்ரீ ராமானுஜர் கேட்க,

எனக்கு தயிர் சாதத்துடன், நெல்லிக்காயை வைத்து நிவேதனம் செய்து விட்டனர். நாமும் பக்தன் கொடுப்பதால் சாப்பிட்டு விட்டோம்.
இதனால் கொஞ்சம் உடலுக்கு ஒத்துக்காமல் ஆகி விட்டது. ஜுரம் வந்து விட்டது" என்றாராம் பெரிய பெருமாள்.

தன் பக்தனிடம், பக்தனின் மனோ நிலைக்கு ஏற்றாற்போல லீலை செய்வார் பகவான்.

அதுவரை ஸ்ரீ ரங்கராஜ்யம் நடத்தும் பெரிய பெருமாளுக்கு, தன் ரங்க ராஜ்யத்தில் அரச மருத்துவன்  இல்லையாம்.
இதற்காக ஸ்ரீ ராமானுஜரின் மனதில் இப்படி ஒரு எண்ணம் தோன்ற சங்கல்பம் செய்தார், பெரிய பெருமாள்.

பெரிய பெருமாளோ அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார்.
ஸ்ரீ ராமானுஜர் 'பெருமாளுக்கு ஜுரம்' என்று கேட்டவுடன், கண்ணீர் விட்டார்.

ஸ்ரீ ராமானுஜர், பெரிய பெருமாளை பார்த்து,
"ஒரு மாமிச சரீரமாக இருந்தால், ஒரு மருத்துவரை கூட்டிக்கொண்டு வந்து காட்டலாம்.
உங்களுடைய அப்ராக்ருத திவ்ய சரீரத்துக்கு எந்த மருத்துவரை (டாக்டரை) கொண்டு வந்து காட்டுவேன்?"
என்று கண்ணீர் விட்டார்.

"நமக்கு தான் டாக்டர் இருக்கிறாரே"
என்றாராம் பெரிய பெருமாள்.

"அதை தேவரீர் தான் சொல்ல வேண்டும்" என்று ராமானுஜர் பிரார்த்திக்க,
"நம் சன்னதியில், 'தன்வந்திரி'யை பிரதிஷ்டை செய்யும். அவர் என்னை அடிக்கடி பார்த்துக்கொள்வார்"
என்று பெரிய பெருமாள் சொன்னார்.

அன்று முதல்,
பெரிய பெருமாளுக்கு எந்த பதார்த்தங்கள் தயார் செய்தாலும், அந்த பதார்த்தங்கள் பெரிய பெருமாளுக்கு உகக்குமா? என்று தன்வந்திரி எதிரில் வைத்து, அவர் அனுமதித்த பின் தான், பெரிய பெருமாள் நிவேதனம் செய்வாராம்.

பெரிய பெருமாளும், தன்வந்திரி அனுமதித்த பதார்த்தங்களை மட்டும் தான், அன்று முதல் தொடுவாராம்.
அப்படி ஒரு ப்ராதான்யம் (முக்கியத்துவம்) பெரிய பெருமாள், தன்வந்திரிக்கு கொடுத்துவிட்டார்.

தன்வந்திரியின் பெருமையை காட்ட, ஸ்ரீ ராமானுஜரின் பக்தி பாவத்தை காட்ட பெரிய பெருமாள் செய்த ரசிக்கதக்க லீலை இது.

இப்படி பெரிய பெருமாளே தனக்கு மருத்துவன் என்று வைத்து இருக்கும் தன்வந்திரியும் அவரே தான்.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

சரணம் சரணம் ஸ்ரீரங்கா!
திருவடி சரணம் ஸ்ரீரெங்கா!!


ஸ்படிக மாலை

ஸ்படிக மாலை

1950-களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீமஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்துகொண்டிருந்தார். திடீரென்று பெரியவா அவரிடமும்,அங்கு இருந்தவர்களிடமும்,”மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை.

பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார்,”விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?”

யாரோ ஒருவர்,”விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்” என்றார். அனைவரும் “ஆம்” என்று ஒப்புக்கொண்டனர். பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்துவிட்டு, மற்றொரு கேள்வியை வீசினார்,”குருக்ஷேத்திரத்தில் அனைவரும் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தபோது, அதனை குறிப்பெடுத்ததோ, எழுதிக்கொண்டதோ யார்?” மீண்டும் அமைதி.

ஸ்ரீசரணர் புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தார...

“பீஷ்மர், ஸ்ரீகிருஷணரின் புகழையும், பெருமைகளையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தால் விளக்கிக் கொண்டிருந்தபோது, ஸ்ரீகிருஷணரும், வியாசரும் உட்பட அனைவரும் வேறு எந்த நினைப்புமின்றி அவரையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். பிதாமகர் பீஷ்மர் ஆயிரம் நாமங்களையும் சொல்லி முடித்தபின்பு அனைவரும் விழிப்படைந்தனர்.

முதலில் யுதிஷ்ட்டிரர் பேசினார்,”பிதாமகர், ஸ்ரீவாசுதேவரின் ஒப்பற்ற பெருமை வாய்ந்த ஆயிரம் புனித நாமாக்களை சொன்னார். அவற்றைக் கேட்பதில் கவனமாக இருந்த நாம் அனைவரும் அவற்றை குறிப்பெடுக்கவோ, எழுதிக்கொள்ளவோ தவறிவிட்டோம். நாம் அற்புதமான விஷயத்தை இழந்து நிற்கின்றோம்” என்றார். அப்போதுதான் அனைவரும் எப்படிப்பட்ட தவறு நேர்ந்துவிட்டதென்று உணர்ந்து திகைத்தனர்.
பிறகு யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷணரிடம் திரும்பி,”ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர தாங்களாவது உதவக்கூடாதா” என்று கேட்டார். ஸ்ரீகிருஷ்ணர் வழக்கம்போல், “என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்? உங்கள் எல்லோரையும் போல நானும் ஆச்சார்யர் பீஷ்மரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன் என்றார்.

அனைவரும் சேர்ந்து ஸ்ரீகிருஷ்ணரிடம், “ஹே.. வாசுதேவா, நீ ஆனைத்தும் அறிந்தவர். உம்மால் இயலாததென்பது எதுவுமே இல்லை. தாங்கள் தயைகூர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும். அந்த ஒப்புயர்வற்ற பெருமைவாய்ந்த பரந்தாமனின் ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர வேணடும். அது தங்களால் மட்டுமே முடியும்” என்று வேண்டினர்.

அதற்கு ஸ்ரீகிருஷ்ணர்,”இதனை செய்ய முடிந்த ஒருவர் உங்களுக்குள்ளேயே இருக்கின்றார்” என்றார். எவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஸ்ரீவாசுதேவர் தொடர்ந்தார்,”சகாதேவன் அதனை மீட்டு சொல்ல, வியாசர் எழுதுவார்” என்றார். அனைவரும் சகாதேவனால் எப்படி சஹஸ்ரநாமத்தை மீட்க முடியும் என்பதை அறிய ஆவலாக இருந்தனர். ஸ்ரீவாசுதேவர் கூறினார்,”உங்கள் அனைவருள்ளும் சகாதேவன் மட்டுமே ‘சுத்த ஸ்படிக‘ மாலை அணிந்திருந்தான். சகாதேவன் சிவபெருமானை பிரார்த்தனை செய்து தியானித்து ‘சுத்த ஸ்படிகம்‘ உள்வாங்கியுள்ள சஹஸ்ரநாமத்தை சப்த அலைகளாக மாற்ற, அதனை வியாசர் எழுதிக்கொள்ளுவார்” என்றார்.

‘சுத்த ஸ்படிகம்‘ அமைதியான சூழ்நிலையில் எழும் சப்தங்களை கிரகித்துக்கொள்ளும். இது ஸ்படிகத்தின் குணம், தன்மை. ‘ஸ்வேதம்பரராகவும்‘ ‘ஸ்படிகமாகவும்‘ இருக்கும் சிவபெருமானை தியானித்து அந்த சப்தங்களை மீட்க முடியும்.

உடனே சகாதேவனும் வியாசரும், பீஷ்மர் சஹஸ்ரநாமம் சொல்லிய அதே இடத்தில் அமர்ந்தனர். சகாதேவன் மஹாதேவரை பிரார்த்தித்து, தியானம் செய்து சஹஸ்ரநாமத்தை மீட்கத் துவங்கினர்.

அந்த ‘சுத்த ஸ்படிக‘ மாலையே உலகின் முதல் ‘வாய்ஸ் ரிகார்டராக‘, அற்புதமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நமக்குத் தந்தது… என்று சொல்லி குழந்தைபோல சிரித்தார் ஸ்ரீசரணர்.

ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்...


இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல் எண்
வேதங்கள் பூஜித்து பரவியதால் ஈசனுக்கு வேதாரண்யேஸ்வரர் என்றும், தலத்தை வேதாரண்யம் என்றும் புகழப்படும் இத்தலத்தை நான்கு மறைகளும் இறைவளை வணங்கிய பின்னர், கதவை பூட்டி தாழிட்டுவிட்டன. நான்மறை பூட்டிய கதவை  திறப்பார் யார் என காத்திருந்தார் மறைநாதர். திருநாவுக்கரசரும் குழந்தை சம்பந்தரும் நெடிய கதவு முன் வந்து நின்று ஈசனை கதவு திறக்க வேண்டினர். அமைதி காத்தார் ஈசன். "அப்பரே! கதவைத் திறக்கும் பதிகத்தை பாடுங்களேன்" என சம்பந்தர் வேண்ட, ஈசன் தன் செவிகளை கூர்மையாக்கி தேன் வந்து பாயாதோ என ஏக்கம் நிறைய காத்து இருந்தான். *பண்ணின் நேர் மொழியாளுமை பங்கரோ* என முதல் பதிகம் பாடினார். கதவு இன்னும் சில பதிகம் பாடேன்" என்பது போல் திறக்காமல் இருந்தது.தொடர்ந்து 10 தேன் சொட்டும் பதிகங்கள் பாடியும் கதவு திறக்கவில்லை. கதவினருகில் நெருங்கிச் சென்று *அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்* எனத் தொடங்கி, *சரக்க விக் கதவந் திறப்பிம்மினே* எனக் கேட்டபோது கதவு அதிர்ந்தது. அதிலுள்ள மணிகள்
தானாக ஒலித்து பெருத்த சப்தத்துடன்
நான்மறைகளும் விடுபட அவர்களை வரவேற்கும் விதமாக கதவுகள் அகல திறந்தன. *மறைக்காடனே யாழைப் பழிக்கும் மொழியம்மையே* என்று அப்பரும் சுந்தரரும் இரு கைகளைத் தூக்கி தொழுது கொண்டே கோவில் உள்ளே நுழைந்தனர். உலகாளும் அம்மையையும் அப்பனையும் கண்டு ஆனந்தக் கடலில் மூழ்கினர். அப்பரும் சம்பந்தரும் பாக்களால் பரமனைத் துதித்து பாடினர். *வேதாரண்யம் விளக்கழகு* என்று போற்றப்படும் இத்தலம் சென்று வணங்கி வர நமது ஞானக்கதவு திறக்கும் என்பதில் ஐயமில்லை. *திருச்சிற்றம்பலம்*

சுவாமிமலை திருவேரகம்

சுவாமிமலை திருவேரகம்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 4-வதாக திகழ்வது சுவாமிமலை.

கும்பகோணம்- திருவையாறு பேருந்து தடத்தில் கும்பகோணத்துக்கு மேற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் சுவாமிமலை அமைந்துள்ளது. கும்பகோணம்- தஞ்சாவூர் பேருந்து வழியில் திருவலஞ்சுழியில் இறங்கி, வடக்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவு பயணித்தால், சுவாமிமலையை அடையலாம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரயில்பாதையில் சுவாமிமலை ரயில் நிலையத்தில் இறங்கி வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

சுவாமிமலையை புராணங்களும் இலக்கியங்களும் திருவேரகம் என்று குறிப்பிடுகின்றன. 'ஏர்' என்றால் அழகு; 'அகம்' என்றால் வீடு என்பர். அழகு மிக்க படைவீடு ஆதலால் இதற்கு திருவேரகம் (திரு+ ஏர் + அகம்) என்று பெயர் வந்ததாம். ஏர்த் தொழிலான விவசாயம் சிறக்கும் பகுதியில் உள்ள படைவீடு ஆதலால் திருவேரகம் ஆனது என்பாரும் உண்டு. அடியவர்களின் மனதை 'அருள்' எனும் ஏர் கொண்டு உழுது, 'அன்பு' எனும் பயிரை வளர்ப்பவர் முருகப் பெருமான். இவர் அருள் பாலிக்கும் தலம் ஆதலால் இந்தப் பெயர் வந்தது என்றும் கூறுவார்கள்.

தவிர... சிரகிரி, சிவகிரி, முருகப் பெருமான் இங்கு குரு அம்சமாக அருள் பாலிப்பதால் குருமலை, குரு கிரி, ஸ்வாமிநாத ஸ்வாமியின் கோயில் கட்டுமலை அமைப்புடன் அழகுற காட்சி தருவதால் சுந்தராசலம், நெல்லி (தாத்ரி) மரத்தைத் தல மரமாகப் பெற்றதால் தாத்ரிகிரி ஆகிய பெயர்களும் இந்தத் தலத்துக்கு வழங்கப்படுகிறது.

முருகப் பெருமான், குரு அம்சமாகத் திகழும் இரண்டு தலங்களில் ஒன்று சுவாமிமலை. மற்றொன்று திருச்செந்தூர்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளும் ஆறு ஆதார மையங்களைக் குறிப்பன என்பர். அதாவது, திருப்பரங்குன்றம்- மூலாதாரம்; திருச்செந்தூர்- சுவாதிஷ்டானம், திருவாவினன்குடி (பழநி)- மணிபூரகம், திருத்தணி- விசுத்தி, பழமுதிர்ச்சோலை- ஆக்ஞை. இந்த வரிசையில் சுவாமிமலை- அனாகதம் என்பர்.

'குரோசம்' என்பது, கூப்பிடு தூரத்தில் உள்ள அளவு. இப்படி, கும்பகோணத்தில் இருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள ஐந்து தலங்களை பஞ்ச குரோசத் தலங்கள் என்பர். அவற்றில் சுவாமிமலையும் ஒன்று. மற்றவை திருவிடைமருதூர், திருப்பாடலவனம், தாராசுரம், திருநாகேஸ்வரம்.

சுவாமிமலைக்குத் தெற்கே காவிரியும், அதன் கிளை நதியான அரசலாறும் ஓடுகின்றன.

மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில், சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி கட்டு மலை (செயற்கையான குன்று) கோயிலைக் கொண்டிருப்பது, இந்தத் தலத்தின் தனிச் சிறப்பாகும்.

சோழ நாட்டை சிவாலயமாக பாவித்து, வழிபடும் ஒருமுறை உண்டு. அதில், திருவலஞ்சுழி மற்றும் சுவாமிமலை திருத்தலங்களை முறையே விநாயகர் மற்றும் முருகன் சந்நிதிகளாகக் கொள்வர்.

திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் திருவிடைமருதூர் தல புராணம், திருவிடைமருதூர் மகாலிங்க பெருமானை மையமாக வைத்து திருவலஞ்சுழி (விநாயகர் தலம்), சுவாமிமலை (முருகன் தலம்), திருச்சேய்ஞலூர் (சண்டேசர் தலம்), சீர்காழி (சட்டநாதர் தலம்), சிதம்பரம் (நட ராஜர் தலம்), திருவாவடுதுறை (நந்தி தேவர் தலம்), சூரியனார்கோயில் (நவக்கிரக தலம்), ஆலங்குடி (தட்சிணாமூர்த்தி தலம்) என்று வரிசைப்படுத்துகிறது.

சிற்ப வல்லுனர்களை தன்னகத்தே கொண்ட தலம் என்பது சுவாமிமலையின் தனிச் சிறப்பு. இங்கு வடிக்கப்படும் இறை மூர்த்தங்கள் (பஞ்சலோகம்) உலகெங்கும் உள்ள ஆலயங்களை அடைகின்றன. செய்குன்று (செயற்கை மலை) ஆகிய சுவாமிமலையை கயிலைமலையின் கொடுமுடி என்கிறார் அருணகிரிநாதர். இதை, 'கொடுமுடியாய் வளர்ந்து புயல் நிலையாய் உயர்ந்த திருமலை' என்ற அவரது பாடல் வரிகளால் அறியலாம்.

அருணகிரிநாதரின் 38 திருப்புகழ்ப் பாடல்கள் பெற்ற தலம் சுவாமிமலை. அவரால், 'திருவேரகம்' என்றும், 'சுவாமிமலை' என்றும் தனித்தனியே குறிப்பிடப்பட்டு, திருப்புகழ் பாடல்கள் பாடப் பெற்றிருந்தாலும் இரண்டும் ஒன்றே என்பதைக் குறிக்கும் பாடல்களும் திருப்புகழில் உண்டு. உதாரணமாக, 'ஏரக வெற்பெனும் அற்புதம் மிக்க சுவாமிமலைப் பதி' என்ற பாடல் வரிகளைச் சொல்லலாம்.

சிலப்பதிகாரத்தில், 'சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண் குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்' என்று ஸ்வாமிநாத ஸ்வாமியைப் போற்றுகிறார் இளங்கோவடிகள்.

நக்கீரரது 'திருமுருகாற்றுப் படை'யில் 177 முதல் 190-வரையுள்ள பாடல் வரிகள் சுவாமி மலையைக் குறிப்பன.

சுவாமிமலையில் வாழ்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர், 'திருஏரக நவரத்தின மாலை' என்ற நூலை இயற்றியுள்ளார். 'ஒரு தரம் சரவணபவா...' எனத் துவங்கும் நவரத்தின மாலையின் 3-வது பாடல் பிரபலமானது.

ஸ்வாமிநாத ஸ்வாமியைப் போற்றும் சுவாமிநாத ஷட்பதீ ஸ்தோத்ரம் மகிமை வாய்ந்ததாகும். இதை இயற்றியவர் ராம கிருஷ்ணானந்தர் என்ற யதீந்த்ரரின் சீடரான ராமச் சந்திரன் என்ற முருக பக்தர் ஆவார். இதைப் பாராயணம் செய்து, முருகப் பெருமானை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும்.

முத்துசுவாமி தீட்சிதரும் சுவாமி மலை முருகனை போற்றியுள்ளார். இவரது, 'சுவாமிநாத பரிபாலயதுமாம்' என்ற நாட்டை ராகக் கீர்த்தனை பிரபலமானது.

இந்தத் தலத்தையும், ஸ்வாமிநாதனையும் போற்றும் இன்னும் பல நூல்களும் உண்டு. அவை திரிசிரபுரம் சுப்பராய பிள்ளையின் திருஏரக நான் மணிமாலை, கபிஸ்தலம் வேலையரின் திருஏரக யமக அந்தாதி, மற்றும் திருஏரக மாலை, எவ்வளூர் ராமசாமி செட்டியாரின் துதி மஞ்சரி, வித்துவான் நடேசக் கவுண்டரின் சுவாமிமலை பிள்ளைத்தமிழ், சுவாமிமலை அப்பாவு சிவாச்சார்யாரின் சுவாமிமலை தலபுராணம், சாம்பமூர்த்தி பாகவதரின் சுவாமிமலை மகாத்மியம் (வடமொழி நூல்) ஆகியன.

ஸ்வாமிநாத ஸ்வாமியைப் போற்றும் வேறு சில வடமொழி நூல்களும் உண்டு. அவை ஸ்வாமிநாத புஜங்கம், ஸ்வாமிநாத பஞ்சரத்னம், ஸ்வாமிநாத கரா வலம்ப ஸ்தோத்திரம், ஸ்வாமிநாத ஸ்வாமி சுப்ரபாதம், ஸ்வாமிநாத அஷ்டோத்திரம்.

பிரம்மன், பூமாதேவி, இந்திரன், சுகபிரம்ம மகரிஷி, பிரகதீஸ்வரர் என்ற அந்தணர், யக்ஞமித்திரன், ரவிமித்திரன், கார்த்தவீரியன், வசு, சரவணன், சுமதி, சோழ மன்னன் ஒருவன் மற்றும் வரகுணபாண்டியன் ஆகியோர் இங்கு வந்துஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர்.

அருணகிரிநாதருக்கு, முருகப் பெருமான் பாத தரிசனம் தந்த திருத்தலம் இது என்பதை,

முதுமறைக்குளரு மா பொருட்டுள்

மொழியே யுரைத்த

தகையா தெனக்குனடி காணவைத்த

தனியேரகத்தின் முருகோனே! என்ற

பாடல் வரிகளால் அறியலாம்.

ஜய வருடம் வைகாசி மாதம் 8-ஆம் தேதியன்று, (20.5.1894) விழுப்புரம் நகரில் மான் சுப்ரமண்ய சாஸ்திரிகள் - மகாலட்சுமி தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக உதித்த காஞ்சி மகா பெரியவாளுக்கு தங்கள் குலதெய்வமான சுவாமிமலையில் குடிகொண்ட சுவாமிநாதனின் திருநாமத்தையே சூட்டினர் பெற்றோர்.

ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோயிலின் தல புராணம் 'படைப்புக்கு தானே காரணகர்த்தா!' என்ற கர்வத்துடன் திரிந்தார் பிரம்மன். ஒரு முறை அவர், திருக்கயிலைக்கு வந்தார். அங்கிருந்த முருகப் பெரு மானை, ஆணவம் மிகுந்த பிரம்மன் கவனிக்காது சென்றார்.

உடனே பிரம்மனை அழைத்த முருகப் பெருமான், பிரணவத்தின் பொருளைக் கூறுமாறு பிரம்மனிடம் கேட்டார். பொருள் தெரியாத பிரம்மன் திகைக்க... அவருடைய தலையில் குட்டி சிறையில் அடைத்தார் முருகன். அத்துடன் படைப்புத் தொழிலையும் தானே ஏற்றார். இறுதியில் சிவபெருமான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரம்மனை விடுவித்ததுடன் தந்தைக்கும் பிரவணப் பொருளை உபதேசித்தார்.

முருகப் பெருமானின் உபதேசத்தைக் கேட்ட சிவனார், தம் உள்ளத்தில் உவகை பொங்கிட... தன் மகனை 'நீயே சுவாமி!' என்று கூறினாராம். இதனால் இந்தத் தலம் சுவாமிமலை எனும் பெயர் பெற்றது. முருகப் பெருமான் ஸ்வாமிநாத ஸ்வாமி மற்றும் தகப்பன் ஸ்வாமி ஆகிய திருநாமங்களுடன் இங்கு கோயில் கொண்டார்.

ஒரு முறை 'பிருகு' மகரிஷி தீவிர தவத்தில் ஆழ்ந்தார். தனது தவத்துக்குத் தடை ஏற்படுத்து பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தம் சிறப்பை இழப்பார்கள் என்று ஆணையிட்டிருந்தார். அவரது தவ வலிமையால் அகில உலகமும் தகித்தது. தேவர்கள் அனைவரும் சிவனாரை வேண்ட... அவர் பிருகு முனிவரின் தலையில் கை வைத்து தகிப்பை கட்டுப்படுத்தினார். இதனால் தவம் கலைந்தது. முனிவரது ஆணைப்படி சிவனார் பிரணவ மந்திரத்தை மறந்தார்.

இதன் பிறகு, பிரம்மனுடன் முருகப் பெருமான் நிகழ்த்திய அருளாடலின்போது, அவரிடமே பிரண வப் பொருள் உபதேசம் பெற்றார் ஈசன். இந்தப் பெருமை சுவாமிமலை திருத்தலத்தையே சாரும். தந்தைக்கு வலக் காதில் பிரணவப் பொருள் உப தேசித்த வேலவன், தன் தாயாகிய பராசக்தியும் அதன் அர்த்தத்தை அறிய வேண்டும் என்பதற்காக சிவனாரின் இடக் காதிலும் உபதேசம் செய்தார் என்கிறது புராணம்.

இந்தத் தலத்தின் தல விருட்சம் நெல்லி மரம். இதன் பின்னணியை சுவாரஸ்யமாக விளக்குகிறது தல புராணம். 'சிவபெருமானின் நெற்றிக் கண்களில் இருந்து தீப்பொறிகளாக அவதரித்த ஆறுமுகன் தன் மடியில் தவழாமல் பூமாதேவியின் மடியில் (சரவணக் காட்டில்) தவழ நேர்ந்ததே!' என்று கோபம் கொண்ட பார்வதிதேவி, பூமா தேவியை சபித்து விட்டாள். சாப விமோசனம் தேடி அலைந்த பூமாதேவி, இறுதியில் சுவாமிமலை தலத்தை அடைந்து, ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு நலம் பெற்றாள். பிறகு, இங்கிருந்து பிரிய மனமின்றி நெல்லி (தாத்ரி) மரமாகி நின்று, இன்றும் தன் வழிபாட்டைத் தொடர்கிறாள் என்கிறது தல புராணம்.

தல விருட்சத்துக்கு மட்டுமின்றி இங் குள்ள தீர்த்தங்களுக்கும் தனித் தனி சிறப்புகள் உண்டு.

வஜ்ர தீர்த்தம் கீழக் கோயிலான மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்கு அருகில் கிணறாகக் காணப்படுகிறது இந்தத் தீர்த்தம். இதில் இருந்தே ஸ்வாமி அபிஷேகத்துக்கு நீர் எடுக்கிறார்கள். இதை சுவாமி கூபம், «க்ஷத்திர கூபம் என்றும் அழைப்பர். இந்த நீரை தெளித்துக் கொண்டால் எல்லா வித நோய்களும் பிரம்மஹத்தி தோஷமும் அகலும்;

குமாரதாரை இங்கு பாயும் காவிரியின் கிளை நதியையே குமாரதாரை என்பர். எல்லோரும் தன்னிடம் வந்து பாவத்தைக் கழுவிச் செல்ல... அதை, தான் எங்கு போய் போக்குவது என்று கலங்கிய கங்காதேவி, ஈசன் அறிவுரைப்படி இங்கு வந்து, காவிரியுடன் கலந்து குமாரக் கடவுளை வழிபட்டு புனிதம் பெற்றாளாம். இப்படி கங்கை, தாரையாக (நீர்ப் பெருக்காக) வந்து காவிரியில் கலந்ததால், இங்குள்ள காவிரிக்கு குமாரதாரை என்று பெயர்.

சரவண தீர்த்தம் திருக்கோயிலின் வடகிழக்கில் உள்ள தீர்த்தம். ஜமதக்னி முனிவரது சாபத்தால் கரடி உருப் பெற்ற தன் தந்தை உய்வடையும் பொருட்டு... சரவணன் என்ற சிறுவனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம் இது. அவன் தந்தை இதில் நீராடி,ஸ்வாமி நாதரை வழிபட்டு சுயரூபம் பெற்றாராம்.

நேத்திர தீர்த்தம் (சுவாமி தீர்த்தம்) இது, திருக்கோயிலின் கிழக்கே உள்ளது. கந்தவேளின் வேலாயுதத்தால் உருவாக்கப்பட்டது. இதன் மகிமையை 'சப்த ரிஷி வாக்கியம்' என்ற சோதிட நூல் விவரிக்கிறது.

'பார்க்கக் கூடாததை பார்க்கக் கூடாது!' என்ற பெரியோரது ஆணையை மீறிய சுமதி என்பவன் பார்வை இழந்தான். பிறகு, பரத்வாஜ முனிவரது அறிவுரைப்படி இதில் நீராடி, கண்பார்வை பெற்றான். இதனால் இதற்கு நேத்திர (கண்) தீர்த்தம் என்று பெயர். கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில்,ஸ்வாமிநாத ஸ்வாமி இதில் தீர்த்தவாரி கொண்டருள்கிறார்.

சுக்லபட்ச அஷ்டமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடிய நாளில் இதில் நீராடி, ஸ்வாமி நாதரை வழிபட்டால் பிரம்ம ஹத்தி பாபம் நீங்கும்.

சுக்லபட்ச அஷ்டமியும் பரணி நட்சத்திரமும் கூடிய நாளில் நீராடி சுவாமி தரிசனம் செய்பவர்களுக்கு கோ தோஷம் நீங்கும்.

ஆடி மாதம் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் நீராடி வழிபட்டால், பிறரது பொருளைக் கவர்ந்ததால் ஏற்படும் பாவங்கள் நீங்கும்.

ஆவணி மாதம் பூரட்டாதி, உத்திரட்டாதி கூடிய ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடி, வழிபடுபவர்கள் உயர் பதவியை அடைவார்கள்.

புரட்டாசி மாதம் அஷ்டமியில் நீராடி வழிபடு பவர்கள், அன்னத்தை வீண் செய்ததால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கப் பெறுவர்.

ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் கூடிய ஞாயிற்றுக் கிழமை அன்று இதில் நீராடி, கோயிலை(கிரி) வலம் வந்து அன்னதானம் செய்தால், தீவினைகள் நீங்கப் பெறுவர்.

கார்த்திகை மாதம் நீராடி வழிபட்டால், ஏழு பிறவி களில் செய்த பாவங்கள் அகலும்.

மார்கழி மாதம் மிருகசீரிஷ நட்சத்திரம் கூடிய நாளில் நீராடி வழிபட்டால் பெரிய பதவிகள் கிடைக்கும்.

தை மாதம் அஸ்த நட்சத்திரத்தில் நீராடி இறை வனை வழிபட்டால் யாகங்கள் செய்த பலன் கிடைக்கும்.

மாசி மாதம் மக நட்சத்திர நாளில் நீராடி இறைவனை வழிபடுவோருக்கு வீடுபேறு கிடைக்கும்.

பங்குனி மாதம் உத்திர நாளில் நீராடி வழிபடுபவர்களுக்கு எல்லா இன்பங்களும் கிடைக்கும்.

பிரம்ம தீர்த்தம் பிரணவப் பொருளை அறிய விரும்பிய பிரம்மன், முருக வழிபாட்டுக்காக ஏற்படுத்திய தீர்த்தம் இது. புராணங்களில் இந்தத் தீர்த்தம் பற்றிய தகவல்கள் உள்ளன. தற்காலத்தில் இது எங்குள்ளது என்பது தெரியவில்லை. சிலர், சுவாமிமலையின் ஈசான திக்கில் உள்ள பெரமட்டான் குளத்தை, 'பிரம்ம தீர்த்தம்' என்கிறார்கள். ஆனால், இதற்கு ஆதாரங்கள் இல்லை.

சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமியின் திருக்கோயில் நில மட்டத்தில் இருந்து, சுமார் 60 அடி உயரத்துடன் திகழும் கட்டுமலை (செயற்கைக் குன்று) மீது அமைந்துள்ளது.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த வரகுண பாண்டியனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் மேலும் விஸ்தாரமாக்கப்பட்டது என்கிறார்கள்.

கட்டுமலை மீது எழுந்தருளி உள்ள ஸ்வாமி நாத ஸ்வாமியின் கோயிலை மேலக் கோயில் என்றும், மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆலயத்தை கீழக் கோயில் என்றும் அழைப்பர். ஸ்வாமிநாத ஸ்வாமி குருவாக அமர்ந்து தந்தைக்கு உபதேசித்த தலம் ஆதலால் இங்கு, முருகப் பெருமான் கட்டுமலையின் மேலும், ஈசன் அடிவாரத்திலும் குடிகொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம்.

இந்தக் கோயிலுக்கு ஏழு கோபுரங்கள் இருந்த தாகச் சொல்கிறது தலபுராணம். யாத்ரீகர்கள் சுவாமி மலையை அடைந்ததும் கோபுர வாசல் நடுவில் இருக்கும் தெய்வ பெண்கள் இருவரை வணங்கி வலம் வர வேண்டும் என்பது ஐதீகம்.

கட்டுமலையில் ஸ்வாமிநாத ஸ்வாமியின் சந்நிதானத்தை அடைய 60 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். 60 அதிதேவதைகள் இந்தப் படிகளில் உறைவதாக திருக்குடந்தை புராணம் குறிப்பிடுகிறது. இந்தப் படிகள் ஒவ்வொன்றுக்கும் தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தேங்காய் உடைத்து வழிபட்ட பிறகே படியேற வேண்டும்.

இந்தக் கோயிலுக்கு மூன்று திருவாயில்கள் உண்டு. கிழக்கு மற்றும் மேற்கு வாயில்களில் மொட் டைக் கோபுரங்கள் அணி செய்கின்றன. பிரதான ராஜ கோபுரம் தெற்கு வாயிலில் அமைந்துள்ளது. 5 நிலைகளுடன் அழகிய சுதைச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகிறது இது.

மூன்று பிராகாரங்களைக் கொண்டுள்ளது கோயில். கட்டுமலையின் அடிவாரத்தில் உள்ள 3-ஆம் பிராகாரத்தை வலம் வந்து 28 படிகள் ஏறிச் சென்றால் 2-ஆம் பிராகாரத்தை அடையலாம். அங்கிருந்து 32 படிகள் ஏறிச் சென்று கருவறையைச் சுற்றியுள்ள முதல் பிராகாரத்தை அடையலாம்.

தெற்குக் கோபுர வாயில் முகப்பு மண்டபத்தின் மேற்கே திருக்கோயில் அலுவலகம். கோபுர வாயிலில் நுழைந்தால் இடப் புறம் விசாலமான திருமண மண்டபம். இதன் மேற்புறம் திருக்கோயில் அலுவலகம் உள்ளது. திருமண மண்டபத்தைக் கடந்து சென்றால் பெரிய சுற்று மண்டபம். அதில் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் சந்நிதி (கீழக் கோயில்) தனிக் கோயிலாக திகழ்கிறது.

மதுரையை ஆட்சி செய்த வரகுண பாண்டியன், பிரம்மஹத்தி தோஷத்தால் அல்லலுற்றான். நிவர்த்தி வேண்டி அவன், திருவிடைமருதூருக்குச் செல்லும் வழியில் இந்தத் தலத்தில் தங்கி இளைப்பாறினான். தினமும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடாமல் உண்பதில்லை என்று விரதம் கடைப் பிடித்த வரகுண பாண்டியன், இங்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஸ்தாபித்து வழிபட்டானாம்.

மீனாட்சி சுந்தரேஸ்வரரை வலம் வரும்போது,தட்சிணாமூர்த்தி, விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமணியர், துர்கை, சண்டீகேஸ்வரர் மற்றும் நவக்கிரகங்களை தரிசிக்கலாம்.

இந்தக் கோயிலை தரிசித்த பிறகு (28) படிகள் ஏறி 2-ஆம் பிராகாரத்தை அடைய வேண்டும். இதன் கிழக்குச் சுற்றில் முருகப் பெருமான், சிவபெருமானுக்குப் பிரணவ உபதேசம் செய்வதை விளக்கும் அழகிய சுதைச் சிற்பம் உள்ளது. சிவ பெருமானின் மடி மீது சுவாமிநாதன் எழுந்தருளி யிருக்க... இடப் பக்கத்தில் அகத்தியர், பிரம்மன், வீர பாகு ஆகியோரும், வலப் பக்கத்தில் திருமால், நாரதர் ஆகியோரும் சிவபெருமானின் திருவடியருகில் நந்தியம் பெருமானும் உள்ளனர்.

2-ஆம் பிராகாரத்தின் தெற்கு சுற்றுச் சுவரில், கந்தரனுபூதி இடம்பெற்றுள்ளது. மேலும் அருணகிரி நாதரது 'திருஎழு கூற்றிருக்கை' பாடலையும் தேர் வடிவ சித்திரகவியாக சலவைக்கல்லில் பொறித்து வைத்துள்ளனர். இதை ரதபந்தம் என்றும் கூறுவர்..

2-ஆம் பிராகாரத்தில் இருந்து 32 படிகள் ஏறிச் சென்றால் உச்சி (முதல்) பிராகாரம். இங்கு முதலில் தல விநாயகர் தெற்கு நோக்கி அமைந்துள்ளார். கொங்கு நாட்டில் இருந்து இங்கு வந்த பிறவிக் குருடன் ஒருவன், உணவில்லாமல் பட்டினி கிடந்து இந்த விநாயகரை வழிபட்டு, பார்வை பெற்றானாம். இதனால், இவருக்கு நேத்திர விநாயகர் என்று பெயர் (நேத்திரம்- கண்).

கருவறை மூலவர் தரிசனத்துக்கு முன் மகா மண்டபம். இதன் வாயிலின் வலப் புறத்தில் இடும்பனின் உருவமிருக்க, இடப்புறத்தில் அகத்தியர், அருணகிரியார் ஆகியோர் வடிவங்கள் உள்ளன.

இந்த மண்டபத்தில் உள்ள கருங்கல் தூண் மற்றும் சிற்ப வேலைப்பாடுகளும், வளைவான கொடுங்கைகளும், கல்லால் ஆன தொங்கும் தாமரை மொட்டும், யாளி உருவங்களும் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. மகா மண்டபத்தில் தங்கக் கொடி மரத்தையும் தரிசிக்கலாம்.

மற்ற படைவீடுகளில் இல்லாத, சுவாமி மலையின் தனி சிறப்பம்சம்... இங்குள்ள பாகுலேய சுப்பிரமணியர் திருமேனி! மகா மண்டபத்தின் வடக்குச் சுவர் பக்கம் தெற்கு நோக்கி காட்சி தருகிறார் இவர். இரண்டு திருக்கரங்களை நீட்டியாவாறும், மேலும் இரு கரங்களை மேல் நோக்கி திகழ... நடராஜப் பெருமானைப் போன்று காட்சி தரும் இவரை சபாபதி என்றும் அழைப்பர். தெய்வானை யுடன் திகழும் இவர், மார்கழி மாதம் திருவாதிரை உற்சவத்தின்போது மட்டுமே வீதியுலா வருகிறார்.

உச்சி பிராகாரமாகிய முதல் பிராகாரத்தில் மகா மண்டபம் தவிர... வலத்தின்போது, பாலசுப்பிரமணியர், திருமகள், கலைமகள், அருணகிரிநாதர், ஸ்கந்த சண்டீசர், விசாலாட்சி- விஸ்வநாதர், நடராஜர், சண்முகர், பைரவர், சாஸ்தா, சூரியன், நவவீரர்கள், அகத்தியர், இடும்பன், கார்த்தவீரியன் முதலானோரையும் உற்சவ விக்கிரகங்களையும் தரிசிக்கலாம். இந்த ஆலயத்தில் வள்ளி- தெய்வானை தேவியருக்கு தனிச் சந்நிதிகள் இல்லை.

இந்த பிராகாரத்தில், தண்டபாணி மூர்த்தியின் விக்கிரகம் ஒன்றையும் தரிசிக்கலாம். இவரின் மேனியில் இடது பாகம் பின்னம் அடைந்துள்ளது. அந்நியர்கள் படையெடுப்பின்போது, ஸ்வாமிநாத ஸ்வாமி கோயிலைப் பாதுகாக்கும் பொருட்டு, கோயிலை மறைத்து பெரும் சுவர் ஒன்று எழுப்பி சிறிய சந்நிதி ஒன்றில், மயில் வாகனத்துடன் கூடிய இந்த தண்டபாணியை பிரதிஷ்டை செய்தார்கள்.

படையெடுத்து வந்த அந்நியர்கள் இதுதான் கோயில் என்று எண்ணி இதை மட்டுமே தாக்கினர். இதனால் தண்டபாணியின் திருமேனி பின்னம் அடைந்தது. பின்னம் அடைந்த உருவத்தை கோயிலில் வைக்கக் கூடாது என்றாலும், அழகான இந்த மூர்த்தியை அகற்ற விருப்பமில்லாமல் இந்தக் கோயிலிலேயே இடம்பெறச் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

ஸ்வாமிநாத ஸ்வாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. கருவறையில், அகரம்- உகரம்- மகரம்- நாதம்- பிந்து... என ஐவகையான ஓங்காரத்தின் உருவினனாக, மெய்ஞான குருவாக அருள்பாலிக்கிறார் ஸ்வாமிநாத ஸ்வாமி. இவர், தம் இடது திருக்கரத்தை இடுப்பில் அமர்த்தி, வலக் கரத்தில்- திருத்தண்டம் (தண்டாயுதம்), தலையில்- ஊர்த்துவ சிகாமுடி (கிரீடம்), திருமார்பில்- முப்புரி நூல் மற்றும் ருத்திராட்சம் ஆகியன திகழ (சுமார் 6 அடி உயரத்துடன்) காட்சி தருகிறார்.

ஸ்வாமிநாத ஸ்வாமியை உன்னிப்பாகக் கவனித்தால், அவர் எழுந்தருளியுள்ள பீடம், சிவ லிங்கத்தின் ஆவுடையாராகவும் ஸ்வாமிநாதர், லிங்கத்தின் பாணமாகவும் காட்சியளிப்பதைக் காணலாம். இது, 'ஈசனே முருகன்; முருகனே ஈசன்!' என்ற தத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

செவ்வாய்க் கிழமைகளில் மாலை வேளையில், நான்கு சரங்கள் கொண்ட சகஸ்ரார மாலை, வைரத்தா லான ஷட்கோணப் பதக்கம் முதலியனவும், வியாழக் கிழமைகளில் தங்கக் கவசம், வைர வேல் மற்றும் பல அணிகலன்களும் அணிவிக்கப் பெற்று காட்சி தரும் ஸ்வாமியைக் காண கண்கோடி வேண்டும்!

ஆபரண அலங்காரத்தின் போது, ராஜ கோலத் தினராகவும், சந்தன அபிஷேகத்தின்போது பால குமாரனாகவும், விபூதி அபிஷேகத்தின்போது முதியவர் கோலத்திலும் காட்சி தருகிறார் ஸ்வாமிநாதர்.

பழநியில் பால பருவத்தினனாகக் காட்சி தரும் முருகப் பெருமான் இந்தத் தலத்தில் இளங்காளை (வாலிப) பருவத்தினனாகக் காட்சி தருவதாக ஐதீகம்.

இவருக்கு ஸ்வாமிநாதன், தகப்பன்சாமி, சுவாமி, குருநாதன், புத்ரக குருக்கள் ஆகிய திருநாமங்களும் உண்டு. வடமொழியில் ஞானஸ்கந்தன் என்பர். இவரின் கொடி- சேவற்கொடி; ஆயுதம்- வேல்; மாலை- நீபம்; வாகனம் யானை!

அரிகேசன் எனும் அரக்கனை அழிக்க எண்ணிய இந்திரன், இந்தத் தலத்துக்கு வந்து ஸ்வாமிநாதரை வழிபட்டு வல்லமை பெற்று அசுரனை அழித்தான். இதற்கு நன்றிக்கடனாக ஐராவதம் எனும் வெள்ளை யானையை ஸ்வாமிநாதருக்கு வாகனமாக அளித் தான். எனவே, இந்தத் தலத்தில், கருவறைக்கு முன் மயிலுக்குப் பதிலாக யானை வாகனம் காட்சி தருகிறது.

மூலவரை பூஜிக்கும்போது, 'நமோ குமாராய நம' என்று மந்திரம் உச்சாடனம் செய்யப்படுகிறது. இந்த மந்திரத்தை முதன் முதலில் ஓதி, முருகனை குருவாக ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான். இதை

'நாதாகுமரா நம' என்று அரனார்

ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்

வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்

பாதா! குறமின் பதசேகரனே' என்ற

அருணகிரி நாதரது கந்தரனுபூதி பாடல், விளக்குகிறது.

உற்சவர் திருநாமம் சந்திரசேகரர். இவரின் மற்றொரு பெயர் சேனாபதி. திருவிழாவின்போது 10-ஆம் நாளன்று தெய்வானையுடன் தீர்த்தம் தர எழுந்தருள்கிறார். இந்த மூர்த்தியை 'சேனாபதி' என்றும் அழைப்பர். இங்குள்ள ஆறுமுகப் பெருமான் தேவியர் இருவருடன் காட்சி தருகிறார்.

சிவபெருமான் 'ஞானோபதேசம்' பெற்ற திருத் தலம் ஆதலால் இங்கு 'யக்ஞோபவீதம்' நடத்துவது சிறப்பு என்கிறார்கள்.

ஸ்வாமிநாத ஸ்வாமி புத்திர பாக்கியம் அருள்பவர் ஆதலால், இங்கு வந்து திருமணம் செய்து கொள்ளும் பக்தர்கள் ஏராளம்!

திருவலஞ்சுழி பிள்ளையாரை வழிபட்ட பிறகே சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட வேண்டும் என்பது மரபு.

தமிழகத்தின் சுவாமிமலை திருத்தலத்தைப் போற்றும் விதம் புதுடில்லியில் உத்தர சுவாமிமலையும், அமெரிக்காவில் ஒரு ஸ்வாமிநாதன் ஆலயமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலயத்தில் பிரம்மா வழிபட்ட சிவலிங்கம் முன்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. பிரணவப் பொருள் உபதேசம் பெற வேண்டி இங்கு வந்த பிரம்மன் ஸ்தாபித்த லிங்கம் அது என்கிறார்கள்.

இங்கு காரணாகமம் முறைப்படி யும் குமாரதந்திர முறைப்படியும் பூஜைகள் நடைபெறுகின்றன. ஆதி சைவ மரபினரே பூஜைகள் செய்து வருகிறார்கள்.

ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோயிலின் திருவிழாக்கள் சித்திரை மாதம் - பிரம்மோற்சவம் (10 நாட்கள்), வைகாசி - வைகாசி விசாகப் பெருவிழா, ஆவணி- பவித்ரோற்சவம் (10 நாட்கள்), புரட்டாசி- நவராத்திரி விழா (10 நாட்கள்), ஐப்பசி - கந்த சஷ்டிப் பெருவிழா (10 நாட்கள்), கார்த்திகை- திருக்கார்த்திகைப் பெருவிழா (10 நாட்கள்), மார்கழி- திருவாதிரைத் திருநாள்; தனுர்மாத பூஜை (10 நாட்கள்) தை- தைப்பூசப் பெருவிழா, பங்குனி-வள்ளிதேவி திருக்கல்யாண திருவிழா.

இவற்றுள் சித்திரை, கார்த்திகை, தை ஆகிய மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் துவஜாரோஹணத்துடன் (கொடியேற்றத்துடன்) நடைபெறுகின்றன.

இங்கு, வருடம்தோறும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1) நடைபெறும் திருப்படி திருவிழாவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவின்போது, ஆன்மிக அடியார்கள் இங்கு ஆன்மிகக் கூட்டங்கள் நிகழ்த்தி விழாவை சிறப்பிக்கிறார்கள்.

பிரார்த்தனையாக நாள்தோறும் காவடி கள், பாற்குடங்கள் எடுத்து வந்து ஸ்வாமிநாத ஸ்வாமியை அபிஷேகித்து வழிபடுகிறார்கள். நேர்த்திக் கடன் செய்தவர்கள் உரிய கட்டணம் கட்டி தங்கத் தேர் இழுப்பதும் உண்டு.

இந்தக் கோயிலில், அரசு ஆணைப்படி 'அன்பு இல்லம்' ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட அனாதைச் சிறுவர்களுக்கு உணவு- உடை- இருப்பிட வசதிகள் இலவசமாகத் தருவதுடன், அவர்கள் கல்வி பயிலவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தவிர, சுவாமி மலையின் தெருக்களைப் பராமரித்தல், மின் வசதி செய்தல் ஆகிய பணிகளிலும் திருக்கோயிலின் பங்கு, போற்றுதலுக்கு உரியதாகும்.

ஸ்வாமிநாத ஸ்வாமியின் திருவருள் பெற்ற அடியார்கள் ஏராளம். யக்ஞமித்திரன் என்பவன் தன் மகன் பேச்சுத் திறன் பெறும் பொருட்டு, சிவனாரின் ஆணைப்படி இங்கு வந்து, தினமும் குமாரதாரையில் நீராடி (தொடர்ந்து 12 ஆண்டுகள்) முருகப் பெருமானை வழிபட்டானாம். இதன் பலனாக அவனின் மகன் பேச்சாற்றலுடன் ஞானமும் கைவரப் பெற்று சிறந்த கல்விமானாகத் திகழ்ந்தானாம்.

பிரகதகலர் (பிரகத்கலர் என்றும் கூறுவர்) என்பவர் பெரும் ஞானி. ஒரு முறை இவர், இறைவனை நேரில் கண்டு தரிசிக்கப் போவதாகக் கூறினார். 'இது இயலாத காரியம்' என்று எல்லோரும் பரிகாசம் செய்தனர். ஆனால், பிரகதகலர் கலங்கவில்லை.

தனது நோக்கம் நிறைவேறும் பொருட்டு, தல யாத்திரை புறப்பட்டார். பல தலங்களுக்குச் சென்று தரிசித்தும் எண்ணம் ஈடேறாமல் போகவே, சுவாமிமலை திருத்தலத்துக்குப் போய்ப் பார்ப்போம் எனப் புறப்பட்டார். இந்த ஊரின் எல்லைக்குள் வந்ததும் அவருக்கு ஒரு புது உணர்வு ஏற்பட்டு முருகப் பெருமான் மயில் வாகனத்தில் புறக்கண்களுக்குக் காட்சியளிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாம். அதனால், அவர் இங்கு வஜ்ர தீர்த்தக் கரையிலேயே மடம் அமைத்து தங்கி விட்டார்.

ஒரு நாள் இவரைச் சந்தித்த அந்தணர் ஒருவர், தன்னைப் பற்றியுள்ள பிரமஹத்தி தோஷம் நீங்க வழி கூறுமாறு வேண்டினார். அவரிடம், ''முற்பிறவி களில் செய்த புண்ணியத்தால், இந்தத் தலத்துக்கு வந்துள்ளீர். இங்கே உமக்கு நன்மையே ஏற்படும்!'' என்ற பிரகதகலர், இந்தத் தலம் பற்றிய புராணச் சம்பவம் ஒன்றையும் விளக்கினார் ''ஆடைகளைத் திருடி விற்றுப் பிழைக்கும் கொடியவன் ஒருவன், தனது பாவத்தின் காரணமாக வெண்குஷ்ட நோயால் அவதியுற்றான்.

ஒரு நாள் உணவு கிடைக்காமல் அலைந்து வருந்தியவன் சுவாமி மலையை அடைந்தான். இரவில் ஒரு வீட்டுக்குள் புகுந்தவன், அங்கிருந்த ஆடை- ஆபரணங்களைத் திருட ஆரம்பித்தான். ஆனால், சத்தம் கேட்டு விழித்த அந்த வீட்டுக்காரர்கள் அவனை விரட்ட ஆரம்பித்தனர். தப்பியோடிய திருடன், இங்குள்ள வஜ்ர தீர்த்தம் அருகில் வரும்போது கால்தவறி உள்ளே விழுந்து விட்டான். இரவு முழுவதும் அந்தக் கிணற்றுக்குள்ளேயே இருக்க நேரிட்டது.

விடிந்ததும் ஊர்க்காரர்கள் அவனை வெளியே எடுத்தனர். அப்போது, வெண் குஷ்டம் நீங்கி அவன் உடல் பொலிவுடன் திகழ்ந்தது. அவன் மகிழ்ந்தான். வஜ்ர தீர்த்தத்தின் பெருமையைக் கண்டு அனைவரும் வியந்து போற்றினர். தாங்களும் வஜ்ர தீர்த்தத்தில் மூழ்கி ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கி நலம் பெறலாம்!'' என்றார். அதன்படி வஜ்ர தீர்த்தத்தில் நீராடி ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு நலம் பெற்றார் அந்தணர்.

மிகச் சிறந்த சங்கீத மேதை துரைமாரியப்ப சுவாமிகள். இவர் ஒரு முறை, தனக்கு பாட்டுப் புலமை வாய்க்கவில்லையே என்று வருந்தி, ஸ்வாமிநாத ஸ்வாமிடம் முறையிட்டதுடன், சந்நிதியிலேயே தனது நாவை அறுத்துக் கொண்டாராம். பிறகு, முருகப் பெருமானின் அருளால் துரை மாரியப்ப சுவாமிகளின் அறுபட்ட நாக்கு வளர்ந்ததுடன், அவர் கவிபாடும் திறனும் பெற்றாராம்!

இந்த ஆலய ஓதுவராக இருந்தவர் ஏ.என். பஞ்சநாத தேசிகர். சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரே நேரத்தில் ப்ளு, நிமோனியா ஜுரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார் இவர்.

மருத்துவர்கள் கைவிட்டு விட்ட நிலையில், ஓர் இரவில் கோயிலில் தங்கி நிந்தா ஸ்துதி செய்ய ஆரம்பித்ததார். சற்று நேரத்தில் தூக்கம் மேலிட உறக்கத்தில் ஆழ்ந்தார் ஓதுவார்.

அதிகாலையில், எவரோ ஒருவர் தன் முதுகில் மூன்று முறை தடவுவதாக உணர்ந்த ஓதுவார் கண் விழித்தார். அப்போது அழகிய குழந்தை ஒன்று அங்கிருந்து விலகி ஓடுவதைக் கண்டு மெய்சிலிர்த்தார்!

அத்துடன் அவரது நோய் முற்றிலும் நீங்கி நலம் அடைந்தாராம். (இந்தத் தகவலை சுவாமிமலை தேவஸ்தானம் வெளியிட்டிருக்கும் தல வரலாறு புத்த கத்தில் இருந்து அறிய முடிகிறது)

வள்ளிமலை சுவாமிகள் ஒரு முறை, 'அருணகிரிநாதர் முக்தி பெற்ற நாள் எது?' என்று ஸ்வாமிநாத ஸ்வாமியை வேண்ட... 'கார்த்திகை மாதம் மூல நட்சத்திரம்!' என்று அசரீரியாக பதிலளித்தாராம் ஸ்வாமிநாத ஸ்வாமி!

என்பவன் பார்வை இழந்தான். பிறகு, பரத்வாஜ முனிவரது அறிவுரைப்படி இதில் நீராடி, கண்பார்வை பெற்றான். இதனால் இதற்கு நேத்திர (கண்) தீர்த்தம் என்று பெயர். கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில்,ஸ்வாமிநாத ஸ்வாமி இதில் தீர்த்தவாரி கொண்டருள்கிறார்.

சுக்லபட்ச அஷ்டமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடிய நாளில் இதில் நீராடி, ஸ்வாமி நாதரை வழிபட்டால் பிரம்ம ஹத்தி பாபம் நீங்கும்.

சுக்லபட்ச அஷ்டமியும் பரணி நட்சத்திரமும் கூடிய நாளில் நீராடி சுவாமி தரிசனம் செய்பவர்களுக்கு கோ தோஷம் நீங்கும்.

ஆடி மாதம் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் நீராடி வழிபட்டால், பிறரது பொருளைக் கவர்ந்ததால் ஏற்படும் பாவங்கள் நீங்கும்.

ஆவணி மாதம் பூரட்டாதி, உத்திரட்டாதி கூடிய ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடி, வழிபடுபவர்கள் உயர் பதவியை அடைவார்கள்.

புரட்டாசி மாதம் அஷ்டமியில் நீராடி வழிபடு பவர்கள், அன்னத்தை வீண் செய்ததால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கப் பெறுவர்.

ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் கூடிய ஞாயிற்றுக் கிழமை அன்று இதில் நீராடி, கோயிலை(கிரி) வலம் வந்து அன்னதானம் செய்தால், தீவினைகள் நீங்கப் பெறுவர்.

கார்த்திகை மாதம் நீராடி வழிபட்டால், ஏழு பிறவி களில் செய்த பாவங்கள் அகலும்.

மார்கழி மாதம் மிருகசீரிஷ நட்சத்திரம் கூடிய நாளில் நீராடி வழிபட்டால் பெரிய பதவிகள் கிடைக்கும்.

தை மாதம் அஸ்த நட்சத்திரத்தில் நீராடி இறை வனை வழிபட்டால் யாகங்கள் செய்த பலன் கிடைக்கும்.

மாசி மாதம் மக நட்சத்திர நாளில் நீராடி இறைவனை வழிபடுவோருக்கு வீடுபேறு கிடைக்கும்.

பங்குனி மாதம் உத்திர நாளில் நீராடி வழிபடுபவர்களுக்கு எல்லா இன்பங்களும் கிடைக்கும்.

பிரம்ம தீர்த்தம் பிரணவப் பொருளை அறிய விரும்பிய பிரம்மன், முருக வழிபாட்டுக்காக ஏற்படுத்திய தீர்த்தம் இது. புராணங்களில் இந்தத் தீர்த்தம் பற்றிய தகவல்கள் உள்ளன. தற்காலத்தில் இது எங்குள்ளது என்பது தெரியவில்லை. சிலர், சுவாமிமலையின் ஈசான திக்கில் உள்ள பெரமட்டான் குளத்தை, 'பிரம்ம தீர்த்தம்' என்கிறார்கள். ஆனால், இதற்கு ஆதாரங்கள் இல்லை.

சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமியின் திருக்கோயில் நில மட்டத்தில் இருந்து, சுமார் 60 அடி உயரத்துடன் திகழும் கட்டுமலை (செயற்கைக் குன்று) மீது அமைந்துள்ளது.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த வரகுண பாண்டியனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் மேலும் விஸ்தாரமாக்கப்பட்டது என்கிறார்கள்.

கட்டுமலை மீது எழுந்தருளி உள்ள ஸ்வாமி நாத ஸ்வாமியின் கோயிலை மேலக் கோயில் என்றும், மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆலயத்தை கீழக் கோயில் என்றும் அழைப்பர். ஸ்வாமிநாத ஸ்வாமி குருவாக அமர்ந்து தந்தைக்கு உபதேசித்த தலம் ஆதலால் இங்கு, முருகப் பெருமான் கட்டுமலையின் மேலும், ஈசன் அடிவாரத்திலும் குடிகொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம்.

இந்தக் கோயிலுக்கு ஏழு கோபுரங்கள் இருந்த தாகச் சொல்கிறது தலபுராணம். யாத்ரீகர்கள் சுவாமி மலையை அடைந்ததும் கோபுர வாசல் நடுவில் இருக்கும் தெய்வ பெண்கள் இருவரை வணங்கி வலம் வர வேண்டும் என்பது ஐதீகம்.

கட்டுமலையில் ஸ்வாமிநாத ஸ்வாமியின் சந்நிதானத்தை அடைய 60 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். 60 அதிதேவதைகள் இந்தப் படிகளில் உறைவதாக திருக்குடந்தை புராணம் குறிப்பிடுகிறது. இந்தப் படிகள் ஒவ்வொன்றுக்கும் தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தேங்காய் உடைத்து வழிபட்ட பிறகே படியேற வேண்டும்.

இந்தக் கோயிலுக்கு மூன்று திருவாயில்கள் உண்டு. கிழக்கு மற்றும் மேற்கு வாயில்களில் மொட் டைக் கோபுரங்கள் அணி செய்கின்றன. பிரதான ராஜ கோபுரம் தெற்கு வாயிலில் அமைந்துள்ளது. 5 நிலைகளுடன் அழகிய சுதைச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகிறது இது.

மூன்று பிராகாரங்களைக் கொண்டுள்ளது கோயில். கட்டுமலையின் அடிவாரத்தில் உள்ள 3-ஆம் பிராகாரத்தை வலம் வந்து 28 படிகள் ஏறிச் சென்றால் 2-ஆம் பிராகாரத்தை அடையலாம். அங்கிருந்து 32 படிகள் ஏறிச் சென்று கருவறையைச் சுற்றியுள்ள முதல் பிராகாரத்தை அடையலாம்.

தெற்குக் கோபுர வாயில் முகப்பு மண்டபத்தின் மேற்கே திருக்கோயில் அலுவலகம். கோபுர வாயிலில் நுழைந்தால் இடப் புறம் விசாலமான திருமண மண்டபம். இதன் மேற்புறம் திருக்கோயில் அலுவலகம் உள்ளது. திருமண மண்டபத்தைக் கடந்து சென்றால் பெரிய சுற்று மண்டபம். அதில் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் சந்நிதி (கீழக் கோயில்) தனிக் கோயிலாக திகழ்கிறது.

மதுரையை ஆட்சி செய்த வரகுண பாண்டியன், பிரம்மஹத்தி தோஷத்தால் அல்லலுற்றான். நிவர்த்தி வேண்டி அவன், திருவிடைமருதூருக்குச் செல்லும் வழியில் இந்தத் தலத்தில் தங்கி இளைப்பாறினான். தினமும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடாமல் உண்பதில்லை என்று விரதம் கடைப் பிடித்த வரகுண பாண்டியன், இங்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஸ்தாபித்து வழிபட்டானாம்.

மீனாட்சி சுந்தரேஸ்வரரை வலம் வரும்போது,தட்சிணாமூர்த்தி, விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமணியர், துர்கை, சண்டீகேஸ்வரர் மற்றும் நவக்கிரகங்களை தரிசிக்கலாம்.

இந்தக் கோயிலை தரிசித்த பிறகு (28) படிகள் ஏறி 2-ஆம் பிராகாரத்தை அடைய வேண்டும். இதன் கிழக்குச் சுற்றில் முருகப் பெருமான், சிவபெருமானுக்குப் பிரணவ உபதேசம் செய்வதை விளக்கும் அழகிய சுதைச் சிற்பம் உள்ளது. சிவ பெருமானின் மடி மீது சுவாமிநாதன் எழுந்தருளி யிருக்க... இடப் பக்கத்தில் அகத்தியர், பிரம்மன், வீர பாகு ஆகியோரும், வலப் பக்கத்தில் திருமால், நாரதர் ஆகியோரும் சிவபெருமானின் திருவடியருகில் நந்தியம் பெருமானும் உள்ளனர்.

2-ஆம் பிராகாரத்தின் தெற்கு சுற்றுச் சுவரில், கந்தரனுபூதி இடம்பெற்றுள்ளது. மேலும் அருணகிரி நாதரது 'திருஎழு கூற்றிருக்கை' பாடலையும் தேர் வடிவ சித்திரகவியாக சலவைக்கல்லில் பொறித்து வைத்துள்ளனர். இதை ரதபந்தம் என்றும் கூறுவர்..

2-ஆம் பிராகாரத்தில் இருந்து 32 படிகள் ஏறிச் சென்றால் உச்சி (முதல்) பிராகாரம். இங்கு முதலில் தல விநாயகர் தெற்கு நோக்கி அமைந்துள்ளார். கொங்கு நாட்டில் இருந்து இங்கு வந்த பிறவிக் குருடன் ஒருவன், உணவில்லாமல் பட்டினி கிடந்து இந்த விநாயகரை வழிபட்டு, பார்வை பெற்றானாம். இதனால், இவருக்கு நேத்திர விநாயகர் என்று பெயர் (நேத்திரம்- கண்).

கருவறை மூலவர் தரிசனத்துக்கு முன் மகா மண்டபம். இதன் வாயிலின் வலப் புறத்தில் இடும்பனின் உருவமிருக்க, இடப்புறத்தில் அகத்தியர், அருணகிரியார் ஆகியோர் வடிவங்கள் உள்ளன.

இந்த மண்டபத்தில் உள்ள கருங்கல் தூண் மற்றும் சிற்ப வேலைப்பாடுகளும், வளைவான கொடுங்கைகளும், கல்லால் ஆன தொங்கும் தாமரை மொட்டும், யாளி உருவங்களும் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. மகா மண்டபத்தில் தங்கக் கொடி மரத்தையும் தரிசிக்கலாம்.

மற்ற படைவீடுகளில் இல்லாத, சுவாமி மலையின் தனி சிறப்பம்சம்... இங்குள்ள பாகுலேய சுப்பிரமணியர் திருமேனி! மகா மண்டபத்தின் வடக்குச் சுவர் பக்கம் தெற்கு நோக்கி காட்சி தருகிறார் இவர். இரண்டு திருக்கரங்களை நீட்டியாவாறும், மேலும் இரு கரங்களை மேல் நோக்கி திகழ... நடராஜப் பெருமானைப் போன்று காட்சி தரும் இவரை சபாபதி என்றும் அழைப்பர். தெய்வானை யுடன் திகழும் இவர், மார்கழி மாதம் திருவாதிரை உற்சவத்தின்போது மட்டுமே வீதியுலா வருகிறார்.

உச்சி பிராகாரமாகிய முதல் பிராகாரத்தில் மகா மண்டபம் தவிர... வலத்தின்போது, பாலசுப்பிரமணியர், திருமகள், கலைமகள், அருணகிரிநாதர், ஸ்கந்த சண்டீசர், விசாலாட்சி- விஸ்வநாதர், நடராஜர், சண்முகர், பைரவர், சாஸ்தா, சூரியன், நவவீரர்கள், அகத்தியர், இடும்பன், கார்த்தவீரியன் முதலானோரையும் உற்சவ விக்கிரகங்களையும் தரிசிக்கலாம். இந்த ஆலயத்தில் வள்ளி- தெய்வானை தேவியருக்கு தனிச் சந்நிதிகள் இல்லை.

இந்த பிராகாரத்தில், தண்டபாணி மூர்த்தியின் விக்கிரகம் ஒன்றையும் தரிசிக்கலாம். இவரின் மேனியில் இடது பாகம் பின்னம் அடைந்துள்ளது. அந்நியர்கள் படையெடுப்பின்போது, ஸ்வாமிநாத ஸ்வாமி கோயிலைப் பாதுகாக்கும் பொருட்டு, கோயிலை மறைத்து பெரும் சுவர் ஒன்று எழுப்பி சிறிய சந்நிதி ஒன்றில், மயில் வாகனத்துடன் கூடிய இந்த தண்டபாணியை பிரதிஷ்டை செய்தார்கள்.

படையெடுத்து வந்த அந்நியர்கள் இதுதான் கோயில் என்று எண்ணி இதை மட்டுமே தாக்கினர். இதனால் தண்டபாணியின் திருமேனி பின்னம் அடைந்தது. பின்னம் அடைந்த உருவத்தை கோயிலில் வைக்கக் கூடாது என்றாலும், அழகான இந்த மூர்த்தியை அகற்ற விருப்பமில்லாமல் இந்தக் கோயிலிலேயே இடம்பெறச் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

ஸ்வாமிநாத ஸ்வாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. கருவறையில், அகரம்- உகரம்- மகரம்- நாதம்- பிந்து... என ஐவகையான ஓங்காரத்தின் உருவினனாக, மெய்ஞான குருவாக அருள்பாலிக்கிறார் ஸ்வாமிநாத ஸ்வாமி. இவர், தம் இடது திருக்கரத்தை இடுப்பில் அமர்த்தி, வலக் கரத்தில்- திருத்தண்டம் (தண்டாயுதம்), தலையில்- ஊர்த்துவ சிகாமுடி (கிரீடம்), திருமார்பில்- முப்புரி நூல் மற்றும் ருத்திராட்சம் ஆகியன திகழ (சுமார் 6 அடி உயரத்துடன்) காட்சி தருகிறார்.

ஸ்வாமிநாத ஸ்வாமியை உன்னிப்பாகக் கவனித்தால், அவர் எழுந்தருளியுள்ள பீடம், சிவ லிங்கத்தின் ஆவுடையாராகவும் ஸ்வாமிநாதர், லிங்கத்தின் பாணமாகவும் காட்சியளிப்பதைக் காணலாம். இது, 'ஈசனே முருகன்; முருகனே ஈசன்!' என்ற தத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

செவ்வாய்க் கிழமைகளில் மாலை வேளையில், நான்கு சரங்கள் கொண்ட சகஸ்ரார மாலை, வைரத்தா லான ஷட்கோணப் பதக்கம் முதலியனவும், வியாழக் கிழமைகளில் தங்கக் கவசம், வைர வேல் மற்றும் பல அணிகலன்களும் அணிவிக்கப் பெற்று காட்சி தரும் ஸ்வாமியைக் காண கண்கோடி வேண்டும்!

ஆபரண அலங்காரத்தின் போது, ராஜ கோலத் தினராகவும், சந்தன அபிஷேகத்தின்போது பால குமாரனாகவும், விபூதி அபிஷேகத்தின்போது முதியவர் கோலத்திலும் காட்சி தருகிறார் ஸ்வாமிநாதர்.

பழநியில் பால பருவத்தினனாகக் காட்சி தரும் முருகப் பெருமான் இந்தத் தலத்தில் இளங்காளை (வாலிப) பருவத்தினனாகக் காட்சி தருவதாக ஐதீகம்.

இவருக்கு ஸ்வாமிநாதன், தகப்பன்சாமி, சுவாமி, குருநாதன், புத்ரக குருக்கள் ஆகிய திருநாமங்களும் உண்டு. வடமொழியில் ஞானஸ்கந்தன் என்பர். இவரின் கொடி- சேவற்கொடி; ஆயுதம்- வேல்; மாலை- நீபம்; வாகனம் யானை!

அரிகேசன் எனும் அரக்கனை அழிக்க எண்ணிய இந்திரன், இந்தத் தலத்துக்கு வந்து ஸ்வாமிநாதரை வழிபட்டு வல்லமை பெற்று அசுரனை அழித்தான். இதற்கு நன்றிக்கடனாக ஐராவதம் எனும் வெள்ளை யானையை ஸ்வாமிநாதருக்கு வாகனமாக அளித் தான். எனவே, இந்தத் தலத்தில், கருவறைக்கு முன் மயிலுக்குப் பதிலாக யானை வாகனம் காட்சி தருகிறது.

மூலவரை பூஜிக்கும்போது, 'நமோ குமாராய நம' என்று மந்திரம் உச்சாடனம் செய்யப்படுகிறது. இந்த மந்திரத்தை முதன் முதலில் ஓதி, முருகனை குருவாக ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான். இதை

'நாதாகுமரா நம' என்று அரனார்

ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்

வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்

பாதா! குறமின் பதசேகரனே' என்ற

அருணகிரி நாதரது கந்தரனுபூதி பாடல், விளக்குகிறது.

உற்சவர் திருநாமம் சந்திரசேகரர். இவரின் மற்றொரு பெயர் சேனாபதி. திருவிழாவின்போது 10-ஆம் நாளன்று தெய்வானையுடன் தீர்த்தம் தர எழுந்தருள்கிறார். இந்த மூர்த்தியை 'சேனாபதி' என்றும் அழைப்பர். இங்குள்ள ஆறுமுகப் பெருமான் தேவியர் இருவருடன் காட்சி தருகிறார்.

சிவபெருமான் 'ஞானோபதேசம்' பெற்ற திருத் தலம் ஆதலால் இங்கு 'யக்ஞோபவீதம்' நடத்துவது சிறப்பு என்கிறார்கள்.

ஸ்வாமிநாத ஸ்வாமி புத்திர பாக்கியம் அருள்பவர் ஆதலால், இங்கு வந்து திருமணம் செய்து கொள்ளும் பக்தர்கள் ஏராளம்!

திருவலஞ்சுழி பிள்ளையாரை வழிபட்ட பிறகே சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட வேண்டும் என்பது மரபு.

தமிழகத்தின் சுவாமிமலை திருத்தலத்தைப் போற்றும் விதம் புதுடில்லியில் உத்தர சுவாமிமலையும், அமெரிக்காவில் ஒரு ஸ்வாமிநாதன் ஆலயமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலயத்தில் பிரம்மா வழிபட்ட சிவலிங்கம் முன்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. பிரணவப் பொருள் உபதேசம் பெற வேண்டி இங்கு வந்த பிரம்மன் ஸ்தாபித்த லிங்கம் அது என்கிறார்கள்.

இங்கு காரணாகமம் முறைப்படி யும் குமாரதந்திர முறைப்படியும் பூஜைகள் நடைபெறுகின்றன. ஆதி சைவ மரபினரே பூஜைகள் செய்து வருகிறார்கள்.

ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோயிலின் திருவிழாக்கள் சித்திரை மாதம் - பிரம்மோற்சவம் (10 நாட்கள்), வைகாசி - வைகாசி விசாகப் பெருவிழா, ஆவணி- பவித்ரோற்சவம் (10 நாட்கள்), புரட்டாசி- நவராத்திரி விழா (10 நாட்கள்), ஐப்பசி - கந்த சஷ்டிப் பெருவிழா (10 நாட்கள்), கார்த்திகை- திருக்கார்த்திகைப் பெருவிழா (10 நாட்கள்), மார்கழி- திருவாதிரைத் திருநாள்; தனுர்மாத பூஜை (10 நாட்கள்) தை- தைப்பூசப் பெருவிழா, பங்குனி-வள்ளிதேவி திருக்கல்யாண திருவிழா.

இவற்றுள் சித்திரை, கார்த்திகை, தை ஆகிய மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் துவஜாரோஹணத்துடன் (கொடியேற்றத்துடன்) நடைபெறுகின்றன.

இங்கு, வருடம்தோறும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1) நடைபெறும் திருப்படி திருவிழாவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவின்போது, ஆன்மிக அடியார்கள் இங்கு ஆன்மிகக் கூட்டங்கள் நிகழ்த்தி விழாவை சிறப்பிக்கிறார்கள்.

பிரார்த்தனையாக நாள்தோறும் காவடி கள், பாற்குடங்கள் எடுத்து வந்து ஸ்வாமிநாத ஸ்வாமியை அபிஷேகித்து வழிபடுகிறார்கள். நேர்த்திக் கடன் செய்தவர்கள் உரிய கட்டணம் கட்டி தங்கத் தேர் இழுப்பதும் உண்டு.

இந்தக் கோயிலில், அரசு ஆணைப்படி 'அன்பு இல்லம்' ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட அனாதைச் சிறுவர்களுக்கு உணவு- உடை- இருப்பிட வசதிகள் இலவசமாகத் தருவதுடன், அவர்கள் கல்வி பயிலவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தவிர, சுவாமி மலையின் தெருக்களைப் பராமரித்தல், மின் வசதி செய்தல் ஆகிய பணிகளிலும் திருக்கோயிலின் பங்கு, போற்றுதலுக்கு உரியதாகும்.

ஸ்வாமிநாத ஸ்வாமியின் திருவருள் பெற்ற அடியார்கள் ஏராளம். யக்ஞமித்திரன் என்பவன் தன் மகன் பேச்சுத் திறன் பெறும் பொருட்டு, சிவனாரின் ஆணைப்படி இங்கு வந்து, தினமும் குமாரதாரையில் நீராடி (தொடர்ந்து 12 ஆண்டுகள்) முருகப் பெருமானை வழிபட்டானாம். இதன் பலனாக அவனின் மகன் பேச்சாற்றலுடன் ஞானமும் கைவரப் பெற்று சிறந்த கல்விமானாகத் திகழ்ந்தானாம்.

பிரகதகலர் (பிரகத்கலர் என்றும் கூறுவர்) என்பவர் பெரும் ஞானி. ஒரு முறை இவர், இறைவனை நேரில் கண்டு தரிசிக்கப் போவதாகக் கூறினார். 'இது இயலாத காரியம்' என்று எல்லோரும் பரிகாசம் செய்தனர். ஆனால், பிரகதகலர் கலங்கவில்லை.

தனது நோக்கம் நிறைவேறும் பொருட்டு, தல யாத்திரை புறப்பட்டார். பல தலங்களுக்குச் சென்று தரிசித்தும் எண்ணம் ஈடேறாமல் போகவே, சுவாமிமலை திருத்தலத்துக்குப் போய்ப் பார்ப்போம் எனப் புறப்பட்டார். இந்த ஊரின் எல்லைக்குள் வந்ததும் அவருக்கு ஒரு புது உணர்வு ஏற்பட்டு முருகப் பெருமான் மயில் வாகனத்தில் புறக்கண்களுக்குக் காட்சியளிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாம். அதனால், அவர் இங்கு வஜ்ர தீர்த்தக் கரையிலேயே மடம் அமைத்து தங்கி விட்டார்.

ஒரு நாள் இவரைச் சந்தித்த அந்தணர் ஒருவர், தன்னைப் பற்றியுள்ள பிரமஹத்தி தோஷம் நீங்க வழி கூறுமாறு வேண்டினார். அவரிடம், ''முற்பிறவி களில் செய்த புண்ணியத்தால், இந்தத் தலத்துக்கு வந்துள்ளீர். இங்கே உமக்கு நன்மையே ஏற்படும்!'' என்ற பிரகதகலர், இந்தத் தலம் பற்றிய புராணச் சம்பவம் ஒன்றையும் விளக்கினார் ''ஆடைகளைத் திருடி விற்றுப் பிழைக்கும் கொடியவன் ஒருவன், தனது பாவத்தின் காரணமாக வெண்குஷ்ட நோயால் அவதியுற்றான்.

ஒரு நாள் உணவு கிடைக்காமல் அலைந்து வருந்தியவன் சுவாமி மலையை அடைந்தான். இரவில் ஒரு வீட்டுக்குள் புகுந்தவன், அங்கிருந்த ஆடை- ஆபரணங்களைத் திருட ஆரம்பித்தான். ஆனால், சத்தம் கேட்டு விழித்த அந்த வீட்டுக்காரர்கள் அவனை விரட்ட ஆரம்பித்தனர். தப்பியோடிய திருடன், இங்குள்ள வஜ்ர தீர்த்தம் அருகில் வரும்போது கால்தவறி உள்ளே விழுந்து விட்டான். இரவு முழுவதும் அந்தக் கிணற்றுக்குள்ளேயே இருக்க நேரிட்டது.

விடிந்ததும் ஊர்க்காரர்கள் அவனை வெளியே எடுத்தனர். அப்போது, வெண் குஷ்டம் நீங்கி அவன் உடல் பொலிவுடன் திகழ்ந்தது. அவன் மகிழ்ந்தான். வஜ்ர தீர்த்தத்தின் பெருமையைக் கண்டு அனைவரும் வியந்து போற்றினர். தாங்களும் வஜ்ர தீர்த்தத்தில் மூழ்கி ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கி நலம் பெறலாம்!'' என்றார். அதன்படி வஜ்ர தீர்த்தத்தில் நீராடி ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு நலம் பெற்றார் அந்தணர்.

மிகச் சிறந்த சங்கீத மேதை துரைமாரியப்ப சுவாமிகள். இவர் ஒரு முறை, தனக்கு பாட்டுப் புலமை வாய்க்கவில்லையே என்று வருந்தி, ஸ்வாமிநாத ஸ்வாமிடம் முறையிட்டதுடன், சந்நிதியிலேயே தனது நாவை அறுத்துக் கொண்டாராம். பிறகு, முருகப் பெருமானின் அருளால் துரை மாரியப்ப சுவாமிகளின் அறுபட்ட நாக்கு வளர்ந்ததுடன், அவர் கவிபாடும் திறனும் பெற்றாராம்!

இந்த ஆலய ஓதுவராக இருந்தவர் ஏ.என். பஞ்சநாத தேசிகர். சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரே நேரத்தில் ப்ளு, நிமோனியா ஜுரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார் இவர்.

மருத்துவர்கள் கைவிட்டு விட்ட நிலையில், ஓர் இரவில் கோயிலில் தங்கி நிந்தா ஸ்துதி செய்ய ஆரம்பித்ததார். சற்று நேரத்தில் தூக்கம் மேலிட உறக்கத்தில் ஆழ்ந்தார் ஓதுவார்.

அதிகாலையில், எவரோ ஒருவர் தன் முதுகில் மூன்று முறை தடவுவதாக உணர்ந்த ஓதுவார் கண் விழித்தார். அப்போது அழகிய குழந்தை ஒன்று அங்கிருந்து விலகி ஓடுவதைக் கண்டு மெய்சிலிர்த்தார்!

அத்துடன் அவரது நோய் முற்றிலும் நீங்கி நலம் அடைந்தாராம். (இந்தத் தகவலை சுவாமிமலை தேவஸ்தானம் வெளியிட்டிருக்கும் தல வரலாறு புத்த கத்தில் இருந்து அறிய முடிகிறது)

வள்ளிமலை சுவாமிகள் ஒரு முறை, 'அருணகிரிநாதர் முக்தி பெற்ற நாள் எது?' என்று ஸ்வாமிநாத ஸ்வாமியை வேண்ட... 'கார்த்திகை மாதம் மூல நட்சத்திரம்!' என்று அசரீரியாக பதிலளித்தாராம் ஸ்வாமிநாத ஸ்வாமி!


தந்தைக்கு உபதேசித்த ஸ்வாமிநாதன்!

தந்தைக்கு உபதேசித்த ஸ்வாமிநாதன்!

கைலாய மலை. ‘‘சர்வேஸ்வரா... அபயம்...’’ ‘‘நீங்கள்தான் எங்களைக் காத்தருள வேண்டும்...’’ என்று பலவிதமாகக் கூக்குரலிட்டபடி கூப்பிய கரங்களுடன் எதிர்வந்து நின்றனர் தேவர்கள். கண் மூடியிருந்த பரமசிவன் கண்களைத் திறந்து புன்னகை புரிந்தார். ‘‘‌தேவேந்திரா! ஏனிந்தப் பதட்டம்? என்ன நடந்தது?’’

தேவேந்திரன் முன்னால் வந்தான். ‘‘பிரபு! பூலோகத்தில் பிருகு முனிவர் கடுந்தவம் புரிந்து வருகிறார். அவரது தவத்தின் எண்ண அலைகள் தேவலோகத்தையும் எட்டி விட்டது. அவரது தவ அலைகளைத் தடுப்பவர் எவராயினும் தன் அறிவு முழுவதையும் இழந்துவிட வேண்டும் என்று வரமும் பெற்றிருக்கிறார். அகில உலகங்களுக்கும் நாயகனாகிய தாங்கள்தான் இதைத் தடுத்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று வேண்டினான்.

சிவபெருமான் புன்னகைத்தார். தன் இரு கரங்களையும் நீ்ட்டி முனிவரின் சிரசை மூடினார். முனிவரின் எண்ண அலைகள் தடை பட்டதன் காரணமாக, சிவன் தன் நினைவி லிருந்த வேத மந்திரங்கள் அனைத்தையும் மறந்தார். பிருகு முனிவர் கண் விழித்தார். கைலாயபதியைக் கண்டதும் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்து வருந்தினார். “பரமேஸ்வரா... தாங்களே ஆனாலும் நான் பெற்ற வரத்திற்கு விதிவிலக்கல்ல. என் தவத்தைக் கெடுத்ததின் விளைவை அனுப வித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், உங்களின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றும் புதல்வனிடம் நீங்கள் பிரணவ மந்திரத்தைக் கேட்டறிந்தால் இழந்ததை திரும்பப் பெறுவீர்கள்’’ என்றார்.

பின்னாளில் சூரபத்மனை அழிப்பதற்காக பரமேஸ்வரன் தன் நெற்றிக் கண்ணி லிருந்து உருவாக்கிய குழந்தை முருகன், அளவில்லாத சுட்டித்தனமும், அளப்பரிய வீரமும் பெற்றிருந்தான். ஒருமுறை பிரம்ம தேவன், சிவபெருமானைத் தரிசிக்க வேண்டி கைலாயம் வந்திருந்தார். சிறுவன் குமரன் அவரிடம் ஓடி வந்தான்.

‘‘ஓ... பிரம்ம‌ தேவரே! நில்லுங்கள்... நில்லுங்கள்...’’

‘‘என்ன வேலவா! எதற்கு இவ்வளவு வேகமாக ஓடி வருகிறீர்கள்? என்ன வேண்டும்?’’

‘‘பிரம்ம தேவரே... ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் உட்பொருளை நீங்கள் எனக்கு விளக்கமாகக் கூறியருள வேண்டும். கணபதிக்கும் இது தெரியாதென்கிறார்...’’

பிரணவ மந்திரத்தை மறந்து விட்டிருந்த பிரம்மன் திருதிருவென்று விழித்தார். தன் இயலாமையை வேலவனிடம் தெரிவித்தார். கடுஞ்சினம் கொண்டான் கார்த்திகேயன். ‘‘பிரணவ மந்திரத்திற்குப் பொருள்கூறத் தெரியாத நீர் படைக்கும் உயிர்கள் ஞான சூன்யங்களாக அல்லவோ விளங்கும்? நீர் படைப்புத் தொழிலைத் தொடர்வது நியாயமில்லை. இனி படைப்புத் தொழிலை யாமே மேற் கொள்வோம்...’’ என்று அவரை பூவுலகில் ஓர் உயர்ந்த மலையில் சிறை யிலிட்டான். சரஸ்வதி தேவியும், தேவர்களும் ஈஸ்வரனை அணுகி, பிரம்மனைக் காப்பாற்றும்படி வேண்டினர்.

‘‘கந்தா... பிரம்ம தேவனை விடுவித்து படைப்புத் தொழில் செம்மையாக நடைபெற வழி செய்..’’’ என்று மகனிடம் ஆணையிட்டார் சர்வேஸ்வரன். ‘‘முடியாது தந்தையே. பிரணவ மந்திரத்தின் பொருளையே மறந்துவிட்ட அவரை எப்படி விட்டுவிட இயலும்?’’ என்றான்.

‘‘குமரா... பிரணவ மந்திரத்தின் உட்‌பொருள் இன்னதென்று நீ அறிவாயா?’’ என்று வினவினார் வெள்ளியங்கிரிவாசன்.

‘‘நன்றாக அறிவேன் தந் தையே...’’ என்று வேலவன் கூற, ‘‘அப்படியானால் அதை எனக்கு உபதேசம் செய்...’’ என்று வேண்டுகோள் விடுத் தார் சிவபெருமான். குறும்புக் கடவுளான சிவகுமரன் புன்முறு வல் பூத்தான். ‘‘தந்தையே... உபதேசம் என்று வந்துவிட்ட பின்னர் நான் குரு. நீங்கள் சிஷ்யன். இதுதான் உறவு. நீங்கள் கை கட்டி, வாய் புதைத்துக் கேட்டால் நான் சொல்லித் தருகிறேன்’’ என்றான்.

சிவபெருமான் கை கட்டியபடி குமரனைத் தன் மடியில் வைத்துக் கொள்ள, சிவனின் காதில் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தான் குமரன். பிருகு முனிவரின் சாபத்தால் சிவன் இழந்திருந்த மந்திர சக்திகள் அனைத்தும் அந்த உபதேசத்தின் மூலம் பரமேஸ்வரனுக்குத் திரும்பக் கிடைத்தன. தன் சக்திகள் முழுவதையும் திரும்பப் பெற்ற ஈசன், மகனை உவப்புடன் அணைத்து, ‘‘தந்தைக்கு உபதேசம் செய்த நீ இன்று முதல் ‘ஸ்வாமிநாதன்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவாய். நீ உபதேசம் செய்த இந்த மலையும் இன்று முதல் ‘ஸ்வாமி மலை’ என்ற பெயரில் வழங்கப்படும்’’ என்று வரம் அளித்தருளினார்.

ஸ்வாமி மலை திருத்தலம் கும்பகோணத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. முருகனின் ஆறு படை வீடுகளில் நான்காவது படை வீடாகச் சொல்லப்படுகிறது இத்தலம். ஏனைய முருகனுறை மலைக்கோவில் களைப் போலன்றி, இந்த ஆலயம் செயற்கையான உருவமைக்கப்பட்ட ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. அறுபது அடி உயரமுள்ள இந்த மலையில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள அறுபது படிக்கட்டுகளையும் ஏறிச் சென்றால் தமிழ்க் கடவுளான ஸ்வாமிநாதனைத் தரிசித்து அவனருள் பெறலாம். மலைக்குக் கீழே சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சி அம்மைக்கும் தனி சன்னிதிகள் அமைந்துள்ளன.

அருணகிரிநாதரால் திருப்புக ழிலும், நக்கீரரால் திருமுருகாற் றுப் படையிலும் பாடல் பெற்ற ஸ்தலம் இது. தினம் ஆறுகால பூஜைகள் நடக்கின்றன. 7 கிலோ தங்கத்திலும், 85 கிலோ வெள் ளியிலும் அழகுற வடிவமைக் கப்பட்ட தங்கத் தேரில் வலம் வரும் முருகப் பெருமானைத் தரிசிப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும்.

பக்தர்கள் ஸ்வாமி மலையில் தங்கி இறைவனைத் தரிசிப்பதற்கு வசதியாக அறநிலையத் துறையினரால் பராமரிக்கப்படும் தங்கும் விடுதிகளில் அறைகள் மிகக் குறைந்த வாடகையில் கிடைக்கின்றன. மாதந்தோறும் கிருத்திகை, ஏப்ரல் மாதத்தில் தேர்த் திருவிழா, மே மாதத்தில் விசாகத் திருவிழா மற்றும் நவராத்திரி விழா, அக்‌டோபர் மாதத்தில் கந்தசஷ்டிப் பெருவிழா, நவம்பர், டிசம்பர் மாதங்களில் கார்த்திகைத் திருவிழா, ஜனவரி மாதம் தைப்பூசத் திருவிழா, மாதத்தில் பங்குனி உத்திரத் திருவிழா என்று இங்கே ஆண்டு முழுவதும் விழாக்கள் நடப்பதால் குமரனைத் தரிசித்து அருள் பெறுவதற்கு உகந்த இடமாக விளங்குகிறது.

சுவாமிமலைக்கு திருவேரகம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. கவிகாளமேகம் எழுதிய...

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை-மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியாரே

-என்ற தனிப்பாடல் கூட இந்தத் திருவேரகத்தை (ஏரகத்துச் செட்டியாரே) குறிப்பதுதான் எனச் சொல்வார்கள். குமரக் கடவுள் அருள் மழை பொழியும் ஆலயமான ஸ்வாமி மலையை நீங்களும் ஒருமுறை சென்று தரிசித்து அவனருளுக்குப் பாத்திரமாகுங்கள்..!


பழனி

பழநி


ஆறுபடை வீடுகளுள் மூன்றாம் வீடு. சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால் வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். 12 ஆண்டுகளுக்கு தொடர்ந்து காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் அனைத்தும் ஒன்றே என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறுவதுடன், வாழ்க்கை என்றால் இன்னதென்று உணரும் ஞானஒளியையும் பெறலாம்.

அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய் தீரும். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள மூர்த்தி (சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகியவை. பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது சிலை. போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.பழநி செல்லும் பக்தர்கள் முதலில் தரிசிக்க வேண்டிய இடம்!

பழநி: பொதுவாக நமக்கு கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள், நல்அறிவுரைகள் வழங்கும் ஆன்மிகபெரியோர்கள், பெற்றோர்களை கடவுளாக பாவித்தும் இன்றளவும், அவர்களின் பாதங்களை தொட்டு வணங்கி நல்ஆசிபெறுகிறோம்.

சாதாரண மனிதர்களின் பாதத்திற்கு இந்த அளவு முக்கியத்துவம் என்றால், கடவுளின் திருப்பாதம் தரிசன வழிபாடு ஜென்ம பாவ விமோசனம். மறுபிறப்பில்லா முக்தியை அளிக்கும் என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது. அந்தவகையில் தனது தந்தை சிவபெருமானுக்கு (இறைவன்) பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த, காரணத்தால் முருகப்பெருமானை இறைவனுக்கே இறைவன் தந்தைக்கு பாடம் சொன்ன குருபரன், குமரன் என ஆன்மிக பெரியோர்கள் போற்றி புகழ்ந்து பாடி வழிபடுகின்றனர்.

ஒரு சமயம் கைலாய மலையில் சிவபெருமான் ஞானபழத் திற்காக நடத்திய நாடகத்தின் போது முருகப்பெருமான் கோபித்துகொண்டு மலைமீது ஏறிநின்ற இடம் தான் மூன்றாம் படை வீடு (பழம்+நீ) பழநி என அழைக்கப்படுகிறது. அவ்வாறு முருகப்பெருமான் நின்ற பழநிமலையில் போகர் சித்தரால் நவபாஷன மூலிகையால் வடிவமைக்கப்பட்ட ஞான தண்டாயுதபாணி தெய்வத்தை, நம் நாட்டவர்கள் (இந்தியா) மட்டு மில்லாமல் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பக்தர்களும் அதிகளவில் தரிசனம் செய்கின்றனர். இதன் காரணமாக தமிழகத்தின் அதிகவருமானமுள்ள ஆன்மிக சுற்றுலா ஸ்தலமாக பழநிகோயில் விளங்குகிறது

. சுவாமி திருப்பாத தரிசனம்: கைலாயமலையில் முருகப் பெருமான் ஞானபழத்திற்காக கோவித்துகொண்டு மலையில் மயிலுடன் வந்து நின்ற இடம் ரோப்கார்மேல்தளத்தின் அருகே உள்ளது. அங்கு பக்தர்கள் ஞானதண்டாயுதபாணியின் திருப்பாதம், மயிலையும் ஒருசேர தரிசனம் செய்யமுடியும்.

பழநி முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் முதலில் முருகன் பழநி மலையில் மயிலுடன் வந்து நின்ற இடத்தை தரிசித்து விட்டு பின் முருகனை தரிசித்தால் தான் முழு பலன் கிடைக்கும் என தலபுராணங்கள் கூறுகின்றன. இறைவனுக்கே இறைவன் (பழநியாண்டவர்) திருப்பாதத்தை தரிசனம்செய்தால், ஜென்ம பாவ விமோசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான பக்தர்கள் சுவாமியின் பாதத்தை வழிபட்டு, பின் நவபாஷன மூர்த்தி ஞானதண்டாயுத சுவாமியை தரிசனம் செய்து வாழ்வில் எல்லா நலனும் பெறுகின்றனர்.