புதன், 28 அக்டோபர், 2020

வீணை


வாத்தியங்களில் வீணையின் சிறப்பு தெரியுமா?

மற்ற இசைக்கருவிகளுக்கு இல்லாத சில தனிச் சிறப்புகள் வீணைக்கு உண்டு. அது, தோற்றத்துக்கு இனிய உருவத்தை உடையது. பெரு முழக்கம் செய்யாமல் தார ஸ்தாயியிலும் மந்தர ஸ்தாயியிலும் இனிதாக இசைப்பது. வீணையை மீட்டி நிறுத்தி விட்டால், அதன் இன்னொலி உடனே நின்றுவிடுவதில்லை. அதன் ஒலி அலைகள் பின்னும் நீண்டு ஒலித்து மெல்லிய அலைகளைப் போல அடுத்தடுத்துப் பரவி நிற்கும். வலது கையிலே மீட்டிய ஒலி இடக்கையில் வாசிக்கும் போதும் இடையறாது ஒலித்து இன்பத்தை உண்டாக்குகிறது. மற்ற வாத்தியங்களில் அப்படியல்ல; வாத்தியத்திலிருந்து கையை எடுத்தவுடன் ஒலியும் நின்றுவிடும். பிடி கருவியில் வில்லை எடுத்துவிட்டால் உடனே ஒலி நிற்பதைக் காணலாம். வீணை அத்தகையதல்ல. அதனுடைய கமகம் வேறு எதற்கும் வராது. பிரணவ நாதம் வாத்தியத்தின் அமைப்புக்கேற்றபடி நீண்டு ஒலிக்கும். சரியானபடி அமைக்கப்பட்ட வீணையில் இந்த நாதம் நெடுநேரம் நிற்கும். இதனால் மனிதக் குரலைப் போலவே தோன்றும்படி வாசிக்க முடிகிறது. ஸ்வரங்களையும் கமகங்களையும் தக்கபடி இசைக்க முடிகிறது.

சக்தி அம்சமும் சிவ அம்சமும் உடைய வீணையில் நயமும் கம்பீரமும் ஒருங்கே திகழ்கின்றன. ஆத்மானுபூதிக்குத் துணை நிற்கும் வாத்தியம் வீணை. அதனால் இதைத் தேவவாத்தியம் என்பார்கள். தெய்வத் திருவருளைப் பெறுவதற்கும், ஆத்மாவின் பக்திப் பெருக்கை வெளியிடுவதற்கும் ஏற்றதாக விளங்குகிறது வீணை. யாக்ஞவல்கியர் தம்முடைய மனைவியருள் கார்கியை மட்டும் தம்முடன் மோட்சத்துக்கு அழைத்துச் சென்றாராம். மைத்ரேயியை அழைத்துச் செல்லவில்லை. அவளிடம், நீ உன் வீணைத் திறனால் மோட்ச லோகத்துக்குத் துணை இன்றியே வரலாம் என்று அவர் கூறினார். வீணையின் நாதம் மோட்ச இன்பத்தையும் கூட்ட வல்லது என்கிற தத்துவத்தையே இது குறிக்கிறது.

வீணை வகைகள்: வீணையை சிவபெருமானே உருவாக்கினார். அதனால் அதற்கு ருத்திர வீணை என்றும் பெயர். உருவ வேறுபாட்டினால் வீணையின் பெயர்களும் வேறுபடும். வட நாட்டில் ருத்திர வீணை, விசித்திர வீணை, கச்ச வீணை, சிதார், ஸூர் பஹார், ஸூர் சிங்கார் என்ற வகை வீணைகள் உள்ளன. தமிழ்நாட்டில் வீணையும், கோட்டு வாத்தியம் என வழங்கும் மகா நாடக வீணையும் வழக்கத்தில் உள்ளன. தென்னாட்டில் இசைக்கப்படும் வீணைக்கு சரஸ்வதி வீணை என்ற பெயரும் உண்டு.

வேம்பு தோன்றிய கதை தெரியுமா?

வேம்பு தோன்றிய கதை தெரியுமா?

நம் அன்றாட வாழ்வில் நமக்குப் பயன்படும் தாவர வகைகளில் வேம்பும் ஒன்று. சிறந்து கிருமிநாசினியாக பயன்படுகிறது. இத்தகைய வேம்பு எவ்வாறு தோன்றியது தெரியுமா? பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் கிடைத்தது. அந்த அமிர்தத்தை திருமால் மோகினி வடிவம் கொண்டு தேவர்களுக்கு அகப்பையினால் பகிர்ந்து கொண்டு இருக்கும்போது, அசுரர்கள் மோகினியின் அழகில் மயங்கியிருக்கையில், அசுரர்களில் ஒருவன் தேவர்களின் பந்தியில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்து விடுகிறான். திருமாலும் தேவர்களின் வரிசையில் தேவர்களைப் போல இருந்த அசுரனுக்கு மூன்று அகப்பை அமிர்தத்தைக் கொடுத்து விடுகிறார். அமிர்தத்தைக் கொடுத்த திருமாலுக்கு அவன் அசுரன் என்பதை அருகில் இருந்த சூரியனும் சந்திரனும் ஜாடை காட்டிச் சொல்ல, அமிர்தத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த அசுரனின் தலையை திருமால் அகப்பையால் வெட்டி விடுகிறார். இதனால் தலை (ராகு) வேறு உடல் (கேது) வேறு என வெட்டுண்ட அசுரன், தனது வாயில் மீதமிருந்த அமிர்தத்தைக் கக்கி விடுகிறான். தன்னைக் காட்டிக் கொடுத்ததால் சூரியனும் சந்திரனும் ராகு கேதுவுக்கு பகை கிரகங்களாக ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

கக்கிய அமிர்தமானது பூமியில் விழுந்து வேப்பமரமானது. வேம்புக்கு கசப்புச் சுவை ஏனென்றால், அது அசுரனின் (பாம்பின்) வாயிலிருந்து வெளிப்பட்டதால்தான். இப்படி பாம்பின் நஞ்சும் அமிர்தமும் கலந்து உருவானதே வேம்பு. வேம்பின் இலை, பட்டை, வேர், பிசின், காய், எண்ணெய், முதலியன உண்ணும் மருந்தாகவும், புற மருந்தாகவும் பலவிதமான நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட வேம்பை உண்டு வந்தால் மனிதனுக்கு நோய் என்பதே கிடையாது.

வேம்பின் மருத்துவ குணங்கள்: வேம்பு வீக்கம், கட்டிகளைக் கரைத்தல்,சிறுநீர் பெருக்குதல், வாதம், மஞ்சள் காமாலை, காய்ச்சல், பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது. வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும். வேப்பங்கொழுந்து 20 கிராம், 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும். வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.

வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும். 5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். 3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும். 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும்.  வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும்.


லிங்கோத்பவர் வழிபாட்டின் சிறப்பு தெரியுமா?

லிங்கோத்பவர் வழிபாட்டின் சிறப்பு தெரியுமா?

அவசியத்தின் போதெல்லாம் அவதரிக்கின்ற பரம்பொருளின் அவதாரங்கள் எண்ணிலடங்காது. என்றாலும், ஒரு சில மிக முக்கியமானதாக போற்றப்பட்டு வந்திருக்கின்றன. இவற்றுள் மகாவிஷ்ணுவினுடைய பத்து அவதாரங்கள் பரவலாக வணங்கப்படுவது போல, சிவபெருமானுடையவற்றில் 25 முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் ஒன்று தான் லிங்கோத்பவர். லிங்கமே சிவபெருமான் தான் என்றாலும், அந்த லிங்கத்துக்குள்ளேயே, தலை, கால், கை என்று எல்லா அங்கங்களோடும் இருக்கும் திருவுருவைத் தான் லிங்கோத்பவ மூர்த்தி என்று போற்றுகிறோம். அர்ஜுனனின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக கண்ணபிரான் கீதையை அருளவில்லை. நாம் ஒவ்வொருவரும், நமக்கு வாய்த்த பணியை ஆற்றிட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே. இது போன்ற நிலையைத் தான் லிங்கோத்பவர் கதையிலும் காண்கிறோம். பரம்பொருள் ஒன்றே ஆயினும், நாம், அதைப் பெரும்பாலும், பலவாகவே கருதி அறியாமையில் உழல்வதால், கடவுளின் ஒருமையை அடிக்கடி நினைவுபடுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். அப்போதெல்லாம் இறைவன் வெவ்வேறு, புதுமையான ஐக்கிய வடிவங்களின் மூலம் நம்மை ஆட்கொண்டு வந்திருக்கிறான். உதாரணமாக,

சிவனும் சக்தியும்: அர்த்தநாரீஸ்வரராகவும், சிவனும் மாலும் ஒன்றி சங்கரநாராயணராகவும், இப்படிப் பல திருவுருவங்களையும் ஏற்றிருக்கிறான். இது போலவே மும்மூர்த்திகளும் சேர்ந்து நடத்திய திருவிளையாடலால் உருவான புதிய மூர்த்தியே லிங்கோத்பவமூர்த்தி ஆகும். இந்த மூர்த்தியை சிவாலயத்தில் மட்டுமின்றி, பிற ஆலயங்களிலும், மூலக் கருவறையின் பின்னுள்ள கோஷ்டத்தில் (திருப்பிறையில்) காணலாம். ஆலய நிர்மாண நூல்களை உற்று நோக்கினால், எந்த ஆலயமுமே ஒரு குறிப்பிட்ட தெய்வத்துக்கு மட்டுமே அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.

எல்லா தெய்வங்களையும் ஒரே கருவறையில் வைக்க இயலாது என்பதால் தான் ஏதாவது ஒரு மூர்த்தியை கருவறைக்குள்ளும், பிற பலவற்றை கோபுரம் முதல் கோஷ்டம் வரையும், விமானம் முதல் திருவலச் சுற்றிலும் வைத்திருக்கின்றனர். இதனால் தான் மாலும், பிரமனும் இல்லாத சிவாலயமுமில்லை. ஆண் தெய்வமில்லாத பெண் சக்தி ஆலயமுமில்லை. மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்குவதாக அமைந்துள்ள லிங்கோத்பவர் வழிபாடு அளப்பரிய சிறப்புடையது. அகண்டாகார ஜோதி நமக்காக தன்னைச் சுருக்கிக்கொண்டு இருக்கின்ற லிங்கோத்பவர் சன்னதியில் விளக்கு ஏற்றிடுவதும், சூடம் ஏற்றிடுதலுமே மிக முக்கியமான வழிபாடாகும். அன்றாடமும், மாலையில் இருட்டத் துவங்கும் நேரத்திலும்; பவுர்ணமி தினங்களில் கூடுதலான நேரமும் வழிபடுதல் விசேஷம். ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து நாம் ஏதோ சாதித்து விட்டதாக எண்ணுகின்ற கர்வம் அழியும்.

இரண்யகசிபுவின் அறியாமையைப் போக்குவதற்காக, தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மமூர்த்தியைப் போல, நம் அறியாமையையும் அகந்தையையும் நீக்குவதற்காக லிங்கத்துள்ளிலிருந்து வெளிப்பட்ட லிங்கோத்பவமூர்த்தியை அனுதினமும் வணங்கிடுவோம்.


உலகின் முதல் இரட்டை குழந்தைகள் யார் தெரியுமா?

உலகின் முதல் இரட்டை குழந்தைகள் யார் தெரியுமா?

ஒருமுறை தேவலோகத்தில் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரும் வியாழ பகவானைக் கவனியாமல் ஆடிக்கொண்டிருந்தனர். இதனால் கோபம் அடைந்த தேவகுரு ""பூந்துறை நாட்டில் முத்தி என்ற தாசி வயிற்றில் இரட்டை குழந்தைகளாக பிறப்பீர்கள் என சபித்தார். தாங்கள் அறியாமல் செய்த தவறை மன்னித்தருளுமாறு குருபகவானை இருவரும் வேண்டினார்கள். சாப விமோசனம் வேண்டிய அவர்களை மன்னித்த தேவகுரு, ""தாசியின் வயிற்றில் பிறந்து 12 ஆண்டுகள் பார்வதி தேவியை வணங்கி வந்தால், ஐராவதம் ஏறிய இந்திரன் நீங்கள் வாழும் பூந்துறை நாட்டில் பொன்மாரி பெய்வான். அப்போது உங்கள் சாபம் நீங்கும் என்றார்.

தேவகுருவின் சாபத்தால் ரம்பை, ஊர்வசி இருவரும் அழகாலும் குணத்தாலும் சிறந்த தாசி முத்தியின் வயிற்றில் பிறந்தனர். அவர்கள் சிறுநல்லாள், பெருநல்லாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். தேவகுருவின் வாக்கின்படியே சிறுநல்லாள், பெருநல்லாள் இருவரும் ஈரோட்டில் குடி கொண்டுள்ள ஆருத்ரா கபாலீஸ்வரரையும், வருணாம்பிகையையும் மனமுருக வழிபாடு செய்தனர். அவர்களது அன்புக்கு இறங்கிய சிவன், இந்திரன் மூலம் பூந்துறை (தற்போதைய ஈரோடு) நாட்டில் பொன்மாரி பொழிய வைத்து ரம்பை, ஊர்வசியின் பாவம் போக்கினார். இந்த ரம்பை, ஊர்வசி தான் உலகின் முதல் இரட்டை குழந்தைகள்!..


சித்தர்களில் இடைக்காடரின் சிறப்பு!

சித்தர்களில் இடைக்காடரின் சிறப்பு!

சித்தர்கள் என்பவர் சிவத்தை கண்டவர்கள் சுத்த, அசுத்த மாயைகளால் தீண்டப் பட்டாலும், எதனாலும் கரைபடாமல் முக்தி அடைந்தவர்கள் எனப் போற்றப்பட்டனர்.

சித்தர்கள் யார்?

அகத்திய மகரிஷியின் கூற்றுப்படி சித்தன் என்பவன், மூலமதை யறிந்தக்கால் யோகமச்சு முறைமையுடன் கண்டக்கால் வாத மச்சு சாலமுடன் கண்டவர் முன் வசியமாய் நிற்பார் சாத்திரத்தைச் சுட்டெரித்தால் அவனே சித்தன். (நூல் - அகத்தியர் பரிபாஷை)

தமிழ்நாட்டில் வாழ்ந்த பல கோடி சித்தர்களில் பதினெட்டு சித்தர்கள் மிக முக்கியமாக போற்றப்படுகின்றனர். அதில் இடைக்காட்டுச் சித்தர் மிகக் குறிப்பிடத்தக்கவர். ஏனென்றால் அவர் அகத்திய மகரிஷியை மகா சித்தர் என்றும் பெரும் சித்தர் என்றும் அவருடைய குரு போக மகரிஷியால் அழைக்கப்பட்டார். ஏனெனில் ஏனைய சித்தர்கள் கலியுகத்தில் மனிதன் படும் துன்பங்கள் நீங்க வழிகளை அறிந்து அதற்குரிய வழிமுறைகளை கூறினார்கள். ஆனால் இடைக்காட்டூர் சித்தர் மட்டும் உலக ஜீவன்கள் அனைத்தும் உய்ய வழிமுறைகள் கண்டறிந்து உபாயம் கூறினார்.

இடைக்காடர் வாழ்க்கை - அவதாரம் தலம்: இடைக்காடர் தொண்டை மண்டலத்தில் இடையன் திட்டு என்னும் ஊரில் இடையர் குலத்தில் நந்த கோனார் மற்றும் யசோதா தம்பதியினர்க்கு மகனாக பிறந்தார். இந்த ஊரானது தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடையன் மேடு என்று அழைக்கப்படுகிறது. இடைக்காடரின் பிறப்பைப் பற்றி போகர் மகரிஷி தனது சிஷ்யர் புலிப்பாணி சித்தரிடம் பாடிய பாடல்.

மட்டான இடைக்காடர் ஜாதி பேதம்
மகத்தான கோனாரே என்னலாகும்
திட்டமுள்ள கோத்திரங்கள் பதினெட்டாகும்
திகழான நூலதனில் கண்ட மட்டும்
காலமுடன் இடைக்காடர் பிறந்த நேர்மை
சட்டமுடன் சொல்லுகிறேன் தன்மை பாரே
தன்மையாம் புரட்டாசி மாதமப்பா
தாழ்வாக இரணியனைக் கொன்ற
வன்மையாம் திருவாதிரை இரண்டாம் காலம்
வளப்பமுடன் அவதரித்த சிசுபாலன் தானே

- போக முனிவர் 7000 நூல்

இடைக்காடர் ஞானஸ்தலம்: தற்பொழுது சிவகங்கை மாவட்டத்திலுள்ள இடைக்காட்டூராகும். பழங்காலத்தில் இவ்வூர் அழகிய பாண்டிய நல்லூர் என்று அழைக்கப்பட்டது. இடைக்காடரின் சித்துகளாலும், அற்புதங்களாலும் இவ்வூரை பொது மக்களாலும், சிஷ்யர்களாலும் இவ்வூரை இடைக்காட்டூர் என்று அவர் பெயரில் அழைக்கப்பட்டது.

இடைக்காடர் பிறவியிலேயே ஞானம் கைவரப் பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தினார். இடைக்காடர் தனது குல தொழிலான ஆடு மேய்க்கும் தொழிலை செய்தாலும் அவரது சிந்தனைகள் அனைத்தும் ஆத்மாவை நோக்கி விண்வெளியில் ஒன்றர கலந்திருப்பார். இவ்வாறு இவரின் தவக்கோலத்தில் விண்நோக்கி அமர்ந்திருப்பை வான்வெளியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த போக மகரிஷி இவரை காணும் ஆர்வத்துடன் இவர் முன்வந்து காட்சியளித்தார். இதனையும் வந்திருப்பவர் போகர் என்பதை அறியாமல் இடைக்காடர் அவரை வணங்கி அங்கிருந்த தர்ப்பை புல்லை சேகரித்து ஆசனமாக செய்து அவரை அமரச் செய்து ஆட்டின் பாலை கறந்து கொடுத்து உபசரித்தார். இவரின் விருந்தோம்பல் பண்பைக் கண்டு மகிழ்ந்து போகர் இவரை தனது சீடனாக்கி அவருக்கு ஞானம், மருத்துவம் மற்றும் வானசாஸ்திரம் ஆகியவற்றை பல நாட்கள் அங்கு தங்கிருந்து உபதேசித்து அருள்பாலித்தார்.

சில காலம் பின்பு போகர் அவரை விட்டு விடைபெறும் நேரம் வந்த பொழுது இடைக்காடர் கண் கலங்கினார். அப்பொழுது இடைக்காடருக்கு கலங்காதே உனக்கு அருளிய ஞானத்தை வைத்து உலகம் உய்ய வாழ்விக்க அருள்வாயாக என்று கூறி மறைந்தார். இவ்வாறு போகரின் அருளால் ஞானம் பெற்ற இடைக்காடர் தனது தவத்தாலும், ஞானத்தாலும் முக்காலத்தை உணர்ந்தார். தனது குருவின் சொல்படி மக்களுக்கு சேவை செய்ய உறுதி பூண்டார். அதன் பொருட்டு பல ஞானநூல்கள் எழுதினார். மனிதனின் துயரங்கள் அடிப்படையாக விளங்குவது மற்றும் நிலைக்களுக்கும் காலம் செயல்படுவதை கண்டறிந்து அதனை விளக்கு விதமான வருஷாதி என்னும் நூலை இயற்றினார். இப்பொழுது பஞ்சாங்கம் என அழைக்கப்படுகிறது.

இவர் தனது ஞான சிருஷ்டியால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் கொடுமையான பருவ மாற்றத்தையும், அதனால் ஏற்படப் போகும் பஞ்சம், பசி மற்றும் பட்டினியை உணர்ந்து தனது சீடர்களுக்கும் மக்களுக்கும் எச்சரித்தார். ஆனால், அவர்களோ அதனை பொருட்படுத்தவில்லை. இருப்பினும், அவர் தன் பொருட்டு பட்டினியிலிருந்து தனது ஆடுகளை காக்க, எந்த பருவ மாற்றத்திலும் பாதிப்படையாமல் வளரும் எருக்கஞ் செடியை உணவாக கொடுத்தார். இதனை கண்ட மக்கள் இவருக்கு சித்தம் கலங்கிவிட்டது என்று எள்ளி நகையாடினர். ஆனால் இடைக்காடரோ தனக்கும் உணவு கிடைக்க, குறுந்தானியமான குருவரகு எடுத்து வந்து அதனை மண்ணில் சேற்றோடு கலந்து அவர் குடிலில் மண்சுவர் எழுப்பினார். இதன்மூலம், எருக்கஞ் செடியை உண்ணும் ஆடுகளுக்கு உடலில் தினமும் ஏற்படும் அரிப்பை போக்க மண் சுவர்களில் உடம்பை தேய்க்கும். அதன் மூலம் பஞ்ச காலகட்டத்தில் அதனை உணவாக வைத்து கொள்ளலாம் என எண்ணினார். அவர் எண்ணியபடியே, மக்களும் பஞ்சத்தினாலும், பட்டினியாலும் இறக்கத் தொடங்கினர். ஆனால் இடைக்காடரும் அவரது ஆடுகளுடன் எப்பொழுது போல் எவ்வித பாதிப்பின்றி நன்றாக உயிர் வாழ்ந்து வந்தனர். இதனை அறிந்த நவக்கிரக நாயகர்கள் ஆச்சர்யம் அடைந்து அதனை கண்ணூற காண விரும்பி இடைக்காடரின் மண்குடிலுக்கு வந்து சேர்ந்தனர்.

உலகையே ஆட்சி செய்கின்ற நவக்கிரக நாயகர்கள் தனது குடிசைக்கு வந்தமைக்கு இடைக்காடர் பெரும் மகிழ்ச்சியுடன் திகைத்து நின்று அவர்களை வரவேற்றார். அவர்களுக்கு ஆட்டுப் பாலுடன், குருவரகு கஞ்சியும் கொடுத்து உபசரித்தார். அவரின் உபசரிப்புக்கு மகிழ்ந்த நவக்கிரக நாயகர்கள் அவருக்காக உண்டனர். பின்னர் எருக்கஞ்செடிகளை தின்ற ஆடுகளின் பாலின் காரணமாக அதனை உண்ட அவர்கள் மயக்கமுற்று படுத்துறங்கினர். இதனை கண்ட இடைக்காடருக்கு சற்று ஒரு யோசனை தோன்றியது. நவக்கிரகங்களின் வேறுபட்ட நிலைகளால் தானே பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் உறங்கி கொண்டிருந்த நவக்கிரக நாயகர்களை பஞ்சம் நீக்குகின்ற ஒரு நிலையில் இடமாற்றி படுக்க வைத்தார். இதன்மூலம், அடுத்த கணமே, பூமியில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. மேகங்கள் சூழ்ந்தது பெரும் மழை பெய்தது பூமி குளிர்ந்தது வறட்சி நீங்க நீர் நிலைகள் மற்றும் குளங்கள் நிரம்பின. அனைத்து ஜீவராசிகளும், மனிதர்களும் மலர்ச்சியுடன் உயிர் பெற்றன. பஞ்சம் நீங்கியது.

பூமியில் ஏற்பட்ட திடீர் குளிர்ச்சியையும் மாற்றத்தையும் உணர்ந்த நவக்கிரக நாயகர்கள் உறக்கத்திலிருந்து கண் விழித்து எழுந்தனர். இது அனைத்தும் இடைக்காடரின் செயலாகத்தான் இருக்கும் என்று உணர்ந்து அவர்கள் அவரின் நுட்பத்தினையும், சகல உயிர்கள் மேல் அவர் கொண்ட அன்பையும் நினைத்து நெகிழ்ந்தனர். அதே நேரத்தில் இடைக்காடரோ கடுந்தவத்தில் ஆழ்ந்திருப்பதை பார்த்த அவர்கள் அவரை தொந்தரவு செய்ய மனமின்றி வாழ்த்தி இவரால் பூலோக மக்களுக்கு நன்மைகள் நிகழட்டும் என்று ஆசி வழங்கி மறைந்தனர்.

முக்திஸ்தலம்: இடைக்காடர் சித்தர் திருவண்ணாமலையில் ஜீவசமாதி நிலை அடைந்தார்.

ஆன்மீக பணி : சிவகங்கை மாவட்டத்திலுள்ள இடைக்காட்டூரில் சித்தரின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை அன்று அபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னதானம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரன்று சித்தருக்கு குரு பூஜையும் மாபெரும் அன்னதானமும் சீரும் சிறப்பாக ஸ்ரீ இடைக்காடர் சித்தர் ஞான புண்ணிய ஷேத்திரம் மூலம் நடைபெறுகிறது.

இருப்பிடம்: மதுரை டூ பரமக்குடி சாலையில் முத்தணேந்தல் என்ற ஊரின் அருகே உள்ளது. (மதுரையிலிருந்து 39 கிலோ மீட்டர்)

வழித்தடம் : மதுரையில் பெரியார் நிலையம் டூ இடைக்காட்டூர். பேருந்து எண் : 99 எப்

குரு வணக்கம்:

ஆதியாம் சப்தரிஷி மார்களோடு அருள் பூண்ட
பதினென்பேர் பாதம் போற்றி!
சேதியாம் மூத்ததொரு முனிவர் மூதோர்
செப்பரிய பெரியோர்கள் சுகந்தாள் போற்றி!
நீதியாம் ரவியோடு மதியும் தேவர் நிலையான
மூவருடன் இணைகள் போற்றி!
ஜோதியென சென்னிமீது உரையும் கலைகள்
ஓதுவித்த குருவடிகள் போற்றி! போற்றி!

ஸ்ரீ இடைக்காடர் சித்தர் தியானச் செய்யுள்:

ஆயனராய் அவதரித்து ஆண்டியாய் உருத்தரித்து
அபலைக்களுக்கருளிய கோனார் பெருமானே!
ஓடுகின்ற கிரகங்களை கோடு போட்டு படுக்க வைத்த
பரந்தாமனின் அவதாரமே! மண்சிறக்க விண்சிறக்க
கடைக்கண் திறந்து காப்பீர் இடைக்காடர் ஸ்வாமியே!

பாடல் : மனம் என்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே - முக்தி
வாய்த்தது என்று எண்ணோடா தாண்டவக்கோனே

விளக்கம் : கட்டுக்கடங்காமல் இருக்கும் மனம் என்ற மாட்டை கட்டுப்படுத்தி விட்டால் முக்தி கிடைக்கும் என அறிவுறுத்துகிறார்.

பாடல் : சினம் என்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும்
சித்தி என்றே நினையேடா தாண்டவக்கோனே

விளக்கம் : கோபம், வெகுளி, ஆத்திரம் என்று சொல்லப்படும் நச்சும்பாம்பை அடக்கி உள்ளத்திலிருந்து விரட்டி அடித்து விட்டால் சித்தி கிடைக்கும்.

பாடல் : தேவன் உதவியின்றி பசுவே! தேர்ந்திடில் வேறொன்றில்லை
ஆவிக்கும் ஆவியதாம் பசுவே அத்தன் திருவடியே

விளக்கம் : உயிரே ! பரம்பொருளின் துணையின்றி நீ வாழ்ந்து காட்ட முடியாது. உயிருக்கு உயிராய் இருப்பது பரம்பொருளின் அருள்தான் என்பதை மறவாதே!


இறைவழிபாட்டில் சங்கு முக்கிய இடம் பெறுவது ஏன்?

இறைவழிபாட்டில் சங்கு முக்கிய இடம் பெறுவது ஏன்?

பிறப்பு, இறப்பு என அனைத்திலும் சங்கு முக்கியம் இடம் வகிக்கிறது. இதன் ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் செய்து பூஜைகள் செய்யப்படும். பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால் பருக்குவதற்கும் அந்நாளில் பயன்படுத்தினர்.

மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது. வலம்புரிசங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து புஸ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது. ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும்.  சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும். பாற்கடலைக் கடைந்த போது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று. இந்தச் சங்கு உதயம் ஆனதும் மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு சங்கு சக்ரதாரி ஆனார். சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள். இதை வைத்துப் பூஜை செய்ய, சுபீடசம் பெருகும். வியாதிகள் நீங்கும்.

ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது. அதிலும் கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோமடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர். கார்த்திகை மாதத்தில், பவுர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருகிறார். அதனால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்), சிவன் கோவில்களில் இறைவனை குளிர்விக்க, சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சிவ பூஜையில் சிறப்பானதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சங்கை வழிபட்டு ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் பெறுவோம்.

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.


குழந்தை அழுகையின் குவா குவாவிற்கு என்ன அர்த்தம்?

குழந்தை அழுகையின் குவா குவாவிற்கு என்ன அர்த்தம்?

ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்திலே உருவானது. அதன் மனதில் பெருமாள் மறைந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டது. உடனே ஓவென்று அழுதபடியே,பெருமாளே! ரங்கா! ஏன் என்னை மீண்டும் பூமியில் பிறக்கச்செய்யப் போகிறாய்? இதுவரை எடுத்த பிறவிகளில் நான் பட்டது போதாதா? என்றது.பட்டேன்.. பட்டேன் என்கிறாயே? அந்த பாடுகளை எல்லாம் நானா தந்தேன்! நீயே இழுத்துக்கொண்டது தானே! போபோ! நீ துவங்கியதை நீதான் முடித்து வைக்க வேண்டும்! என்று பெருமாள் பதில் சொல்லவும், தாய்க்கு பிரசவவலி ஏற்பட குழந்தை பூமிக்கு வந்து விட்டது. அதுவரை, அதன் கண்களுக்கு தெரிந்த பெருமாள் இப்போது தெரியவில்லை. க்வா க்வா என்று அழ ஆரம்பித்து விட்டது. க்வா க்வா என்றால், எங்கே எங்கே என்று அர்த்தம். இவ்வளவு நேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தவனை எங்கே? என்று அழ ஆரம்பித்து விட்டதாம் குழந்தை. க்வா க்வா என்பது தான் இப்போது குவா குவா ஆகியிருக்கிறது. மீண்டும் க்வா க்வா போடாமல், பரமபதத்திலேயே தங்க வேண்டுமானால், நம் கண்களில் நல்லது மட்டுமே படட்டும். சரி தானே!

மார்கழி வழிபாடும் அதன் சிறப்பும்!

மார்கழி வழிபாடும் அதன் சிறப்பும்!

மார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது. மார்க்க என்றால் வழி. சீர்ஷம் என்றால் மேலான. ஆக, மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள். பக்தியே மேலான வழி. அதிலும், இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி. ஆண்டாள், பெருமாளைச் சரணடைந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். அதற்காக, முப்பது நாள் நோன்பிருந்தாள். தான் மட்டுமின்றி, மற்றவர்களும் இறைவனை அடைய வேண்டும் என்ற மேலான நோக்கில், தோழியரையும் நோன்பிருக்கும்படி வற்புறுத்தினாள். பக்தி மட்டுமின்றி பொதுநலமும் மேலான வழி என்பதை இம்மாதம் நமக்கு எடுத்துரைக்கிறது.

பிரம்ம புராணம் பகுதி - 1

பிரம்ம புராணம் பகுதி - 1

1. தோற்றுவாய்

புராணங்கள் என்பவை பண்டைய இலக்கியங்கள் ஆகும். அவை மகா புராணங்கள் 18, உப புராணங்கள் 18. மகா புராணங்கள் பதினெட்டின் வரிசையில் சிலர் நான்காவது வாயு புராணம் என்றும், சிலர் சிவபுராணம் என்றும் கூறுவர். மகா புராணங்களில் முதலில் தோன்றியது பிரம்ம புராணம் என்பதில் எத்தகைய கருத்து வேறுபாடும் இல்லை. எனவே இதனை ஆதிபுராணம் என்றும் கூறுவர். இது 10,000 ஸ்லோகங்கள் கொண்டது.

புராண லக்ஷணங்கள் ஐந்து. 1. இந்தப் பேரண்டப் படைப்பு, 2. பிரளயம் மூலம் உலக அழிவும், மறுபடி தோற்றமும் 3. வெவ்வேறு மன்வந்தரங்கள் 4. சூரிய வமிச, சந்திர வமிச வரலாறு 5. அரச பரம்பரைகள் சரிதம். இந்த ஐந்தும் பிரம்ம புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக எல்லாப் புராணங்களும் அரி, அரன், அயன் என்ற மும்மூர்த்திகளைப் பற்றி கூறினும் சிவபுராணங்களில் சிவனை உயர்த்தியும், சிலவற்றில் விஷ்ணுவை உயர்த்தியும் பேசப்பட்டுள்ளன. பிரம்ம புராணம் ஒரு ராஜசிக புராணம். புராணங்களை வேதவியாசர் எழுதினார் எனப்படுகிறது. இவருக்குக் கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயரும் உண்டு. தவிர கருப்பு நிறத்துடன் தீயில் தோன்றியவர் என்று அந்த சொல்லுக்குப் பொருள். வேதவியாசர் என்பது தனி ஒருவர் பெயரா? அல்லது ஒரு பீடத்தின் பெயரா என்பது தெரியவில்லை. ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வொரு வியாசர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மகாபாரதத்தை இயற்றிய பின்னும் மன அமைதி ஏற்படாததால் வியாசர் புராணங்களை எழுத முற்பட்டார் என அறியலாகிறது. பிரம்ம புராணத்தின் முதல் நூல் கிடைக்கப் பெறவில்லை என்றும், எனவே மகாபாரதம், ஹரிவம்சம், வாயுபுராணம், மார்க்கண்டேய புராணம், விஷ்ணு புராணம் ஆகியவற்றிலிருந்து செய்திகளைத் தொகுத்து தற்போது கிடைத்துள்ள பிரம்ம புராணம் உருவாக்கப்பட்டது என்பர். இது மிகப்பெரியதோ மிகச் சிறியதோ இன்றி நடுத்தரமாக உள்ளது.

2. உலக சிருஷ்டி

நைமிசாரணியத்தில் சனகாதி முனிவர்களுக்கு சூதமுனிவர் பிரம்ம புராணத்தைப் பற்றிக் கூறலானார். (வியாசரின் சீடன் ரோமஹர்ஷணர் கூறியதாகவும் சொல்லப்படும்)

எங்கும் நீர் சூழ்ந்திருக்க, பிரம்மனாகிய பகவான் விஷ்ணு யோகதுயில் கொண்டிருந்தார். நீருக்கு நர என்றும், அயன என்றால் படுக்கை என்றும் பொருள். எனவே விஷ்ணுமூர்த்தி நாராயணன் என்று பெயர் பெற்றார். நீரிலிருந்து ஓர் அண்டம் (முட்டை) வெளித்தோன்றியது. அதனுள் பிரம்மா இருந்தார். அவர் சுயம்பு ஆவார். அவர் முட்டையின் இருபகுதியிலிருந்து சுவர்க்கத்தையும், பூமியையும் ஆக்கினார். அவ்விரண்டிலும் ஆகாயம், திக்குகள், காலம், மொழி, உணர்வுகள் உற்பத்தி செய்யப்பட்டன. பிரம்மாவின் மனதிலிருந்து மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர் என்ற சப்தரிஷிகளைத் தோற்றுவித்தார். பின்னர் ருத்திரனையும், சனத் குமாரரையும் தோற்றுவித்தார்.

மேலும் சில படைப்புகள்: பிரம்மா ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் படைத்து அவர்கள் மூலம் மக்கள் பெருக்கத்துக்கு வித்திட்டார். ஆணின் பெயர் சுவயம்புமனு; பெண்ணின் பெயர் சதரூபை. இவர்களின் புத்திரன் மனு. மனுவிலிருந்து வளர்ந்த மக்கள் மானிடர்(அ) மானவர் எனப்பட்டனர். அத்தம்பதியருக்கு வீரன், பிரியவிரதன், உத்தானபாதன் என்று மூவர் பிறந்தனர். உத்தானபாதனின் மகன் துருவன், துருவ நக்ஷத்திரமாக விளங்குகிறார். துருவன் பரம்பரையில் தோன்றிய பிராசீனபர்ஹிக்கு பிரசேதனர்கள் எனப்படும் பதின்மர் பிறந்தனர். அவர்களுக்கு உலக வாழ்க்கையில் விருப்பமின்றித் தவம் செய்யப் புறப்பட்டனர். உலகைப் பராமரிக்க ஆள் இல்லாததால் எங்கும் காடுகள் பெருகி விட்டன. பிரசேதனர்கள் கோபம் கொண்டு வாயுவையும், அக்கினியையும் தோற்றுவித்துக் காடுகளை அழித்தனர். அப்போது சோமன், ஓர் அழகிய பெண் மரீஷையுடன் பிரசேதனர்களை அணுகி, அவர்கள் கோபத்தை சாந்தமாக்கி மரீஷையை மனம் செய்வித்தார். அவர்களுடைய மகனே தக்ஷபிரஜாபதி.

3. தக்ஷன் சந்ததியினர்

தக்ஷனுடைய ஆயிரம் புத்திரர்களை நாரதர் அறவுரை கூறி தவம் செய்ய அனுப்பிவிட்டார். மறுபடியும் தோன்றிய ஆயிரம் பேர்களையும் அவ்வாறே அனுப்பி விட்டார். இவர்கள் ஹர்யக்ஷ்வர்கள், ஷவலஷ்வர்கள் என்பவர்கள் ஆவர். தக்ஷனுக்குப் பிறந்த அறுபது பெண்களில் பத்த பேரைத் தருமனுக்கும், பதின்மூன்று பேரை காசியப முனிவருக்கும், இருபத்தேழு பெண்களை சோமன் எனும் சந்திரனுக்கும், மீதிப் பெண்களை அரிஷ்டநேமி, வாஹுபுத்திரர், ஆங்கீஸர், கிரிஷஷ்வர் ஆகியோருக்கும் மணம் செய்வித்தான். தர்மனுக்கு மணம் செய்வித்த பத்து புத்திரிகளில் அருந்ததியின் மக்கள் உலகிற்கு விஷயமானவர்கள். வாசுவின் மக்கள் வசுக்கள் என்பர். அவர்களில் அனலனின் மகன் குமரன். கிருத்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட குமரன் கார்த்திகேயன் எனப்பட்டான். பிரபசாவின் மகன் விசுவகர்மா; தேவலோக சிற்பி. சாத்யாவின் மக்கள் சாத்திய தேவர்கள். விஸ்வாவின் மக்கள் விச்வதேவர்கள். சந்திரன் மனைவிகள் 27 பெண்கள், நக்ஷத்திரங்கள். காசியபரின் மனைவியரில் அதிதியின் மக்கள் ஆதித்தியர்கள் ஆவர். திதி மக்கள் தைத்தியர்கள். ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு அவள் புத்திரர்கள். தனுவின் புத்திரர்கள் தானவர்கள். அவர்கள் வம்சத்தில் பௌலமர்கள், காலகேயர்கள் தோன்றினர். அரிஷ்டாவின் புத்திரர்கள் கந்தர்வர்கள். காசாவின் மக்கள் யக்ஷர்கள். சுரபிக்கு பசுக்கள், எருமைகள் தோன்றின. வினிதாவுக்கு அருணன், கருடன் மக்கள். தாம்ராவின் ஆறு பெண்களுக்கு ஆந்தைகள், கழுகுகள், ராஜாளிகள், காக்கைகள், நீர்ப்பறவைகள் குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள் தோன்றின. குரோதவஷையின் ஆயிரக்கணக்கான மக்கள் நாகர்கள். இளைக்கு மரம், கொடி, புதர் போன்றவை தோன்றின. கத்ருவின் மக்களாகிய நாகர்களில் அனந்தன், வாசுகி, தக்ஷகன், நஹுஷன் ஆகியோர் முக்கியமானவர். முனிக்கு அப்ரஸுகள் தோன்றினர்.

திதி, காசியபரிடம் இந்திரனை வெல்லக்கூடிய ஒரு மகனை அருள வேண்டினாள். குழந்தை கருவுற்ற நாளிலிருந்து நியம நிஷ்டைகளுடன் இருக்க வேண்டும் என்று காசியபர் கூறினார். அதற்குப் பங்கம் ஏற்பட்டால் நினைத்தது நிறைவேறாது என்றார். கருவுற்ற திதி ஒருநாள் கால்களைக் கழுவாமல் தூங்கச் செல்ல, இந்திரன் அணு அளவில் அவளது கருவறையுள் நுழைந்து கருவை வஜ்ராயுதத்தால் ஏழு பகுதிகளாக்கிட, மறுபடியும் அந்த ஒவ்வொன்றும் ஏழாக மொத்தம் நாற்பத்தொன்பது துண்டுகளாயின. கரு அழ, இந்திரன், மா ருத (அழாதே) என்று கூற அவை மருத்துக்கள் எனப்பட்டன. திதிக்கு விரத பங்கம் ஏற்பட அவள் எண்ணம் ஈடேறவில்லை. மாறாக, அக்குழந்தைகள் அதாவது மருத்துக்கள் இந்திரனுக்கு உதவியாளராயினர். (சிருஷ்டியைப் பற்றி எல்லாப் புராணங்களும் கூறும் செய்திகள் ஒன்றே போல் காணப்படுகின்றன.)

4. பிருதுவும், பிருத்வியும்

துருவன் குலத் தோன்றல்களில் அங்கன் தரும நெறியில் நின்று வாழ்ந்தான். அவன் மனைவி மிருதியுவின் மகள் சுனிதை. மிருதியுவி தீய வழி செல்பவள். அவள் மூலம் அங்கனின் மகன் வேனன் தீயநெறிகளைப் பெற்றான். அவன் அதர்மசாலி.  அவன் தொல்லைகள் அதிகமாக, முனிவர்கள் அவனை அழைத்து முறையிட அவன் திருந்தவில்லை. மமதையுடன் நடந்து கொண்டான். எனவே, அவனைப்பற்றி அவனுடைய வலது தொடையைக் கடைய ஓர் அசிங்கமான குள்ள உருவம் தோன்றிற்று. அதைக் கண்ட அத்திரி முனிவர் அதனை நிஷித (உட்கார்) என்றார். அவன் பெயர் நிஷாதன் என்று ஆயிற்று. அவன் வம்சத்தினர் நிஷாதர்கள் எனப்பட்டனர். அந்தப் பரம்பரையிலேயே துஷாரர்கள், துண்டுரர்கள் தோன்றினர். வேனனின் வலது கரத்தைக் கடைய பிருது தோன்றினான். பின்னர் வேனன் இறந்தான். பிருதுவைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் காணப்பட்டது. அவன் கைகளில் ஒரு வில்லும், கேடயமும் இருந்தன. தேவர்களும், முனிவர்களும் அவன் முடிசூட்டு விழாவுக்கு வந்தனர். சோமன், கிரகங்கன், வருணன், குபேரன், அக்னி, தக்ஷன், இந்திரன், பிரகலாதன், யமன், சித்திராதன், வாசுகி, தக்ஷகன், கருடன், ஐராவதம், உச்சச்சிரவம் போன்றோர் அவன் ஆட்சியில் அவனுக்கு உதவினர். பிருது நீதி, நெறிமுறை வழியில் தருமம் தவறாமல் ஆண்டு வர அவன் ஆட்சியில் அனைவரும் மகிழ்ந்தனர். பிருதுவைப் பெருமைப்படுத்த முனிவர்கள் யாகம் செய்ய, அதிலிருந்து இரண்டு இனங்கள் தோன்றின. அவை சூதர்கள், மகதர்கள் எனப்பட்டனர். அவர்கள் பிருதுவின் புகழ்பாடி அவன் சிறப்பைப் பரப்பினர். அதைக் கேட்ட மக்கள் அவனிடம் வந்து இருக்க இடமும், உண்ண உணவும் கிடைக்க வழி செய்யுமாறு வேண்டினர். பிருது கையில் வில்லும், அம்பும் ஏந்தி பூமியைக் கொல்ல எண்ண, பூமி பசு வடிவம் கொண்டு அனைத்துலகிலும் ஓட, அவனும் பின் தொடர்ந்தான். அது கண்ட நிலமாது (பசு வடிவ) தான் ஒரு பெண் என்றும், தன்னைக் கொல்வதால் பாவமே மிஞ்சும் என்றும் வேறு வழியில் மக்கள் நன்கு வாழச் செய்யலாம் என்றும் கூறியது. பின்னர் நிலமாது அதற்கான வழிமுறைகளைக் கூற பிருது அதன்படி செய்யலானான். வில்லினால் நிலத்தைச் சமன்படுத்த அதில் மக்கள் வாழும் இடமும், உண்ண உணவுப் பொருள்கள் பயிர் செய்யவும், அதற்கு உதவியாக மாடுகளும் வளர்ந்து மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இவ்வாறு பிருது செய்த நற்காரியங்களால் நிலம் பிருதிவி எனப்பட்டது.

5. மன்வந்தரங்கள்

மன்வந்தரம் என்பது ஒரு கால வரையறை. யுகங்கள் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு. இவை நான்கும் முடிவது ஒரு மகாயுகம். சுமார் எழுபத்தொன்று மஹாயுகங்கள் கொண்டது ஒரு மன்வந்தரம். பதினான்கு மன்வந்தரங்கள் கொண்டது ஒரு கல்பம். பிரம்மனின் நாட்களில் ஒன்று கல்பம். ஒரு கல்பம் முடிந்ததும் உலகம் அழியும். ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வொரு மனு ஆண்டு வந்தான். தற்போதைய கல்பத்தில், ஏழாவது மன்வந்தரத்தில் வைவஸ்வதன் மனு ஆவான். ஒவ்வொரு மன்வந்தரத்திலும் வெவ்வேறு சப்தரிஷிகள், இந்திரன்கள் இருந்தனர். தற்போது நடைபெறுவது வைவஸ்வத மன்வந்தரம். இதில் வசிஷ்டர், காசியபர், கௌதமர், பரத்துவாசர், விசுவாமித்திரர், ஜமதக்கினி ஆகியோர் சப்தரிஷிகள் ஆவர். சரித்யர்கள், ருத்திரர்கள், வாசுதேவர்கள், வசுக்கள், மருத்துக்கள், ஆதித்தியர்கள், இரு அசுவினி தேவர்கள் கடவுளர் ஆவர். அடுத்து ஏழு மனுக்கள் இருப்பர். அதன்பின் உலகம் அழிந்து விடும். இவர்களில் ஐவர் சவர்ணி மனுக்கள் என்றும், மற்ற இருவர் பௌத்தியர், ரௌச்சியர் எனவும் பெயர் கூறுவர்.

6. சூரியனும், சூரிய வம்சமும்

காசியபர், அதிதிகளுக்குப் புத்திரன் விசுவாச்வனன். இவனுக்கு சூரியன், மார்த்தாண்டன் ஆகிய பெயர்களும் உண்டு. இவனே சூரிய பகவான். அவனுக்கு சஞ்ஜனா, சாயா என இரு மனைவியர். சஞ்சனாவுக்கு விசுவஸ்வதமனு, யமன் என்ற புத்திரர்களும் யமுனை என்ற பெண்ணும் உண்டு. சாயாவுக்குப் பிறந்தவர்கள் சவர்ணி மனு.

7. வைவஸ்வத மனுவின் மக்கள்

புத்திரன் இல்லாத வைவஸ்வத மனு ஒரு யாகம் செய்தான். அதன் பயனாக அவனுக்கு இக்ஷ்வாகு, நிருகன், திருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், அரிஷ்டன், கரூஷன், விருஷத்திரன் ஆகிய ஒன்பது புதல்வர்கள் தோன்றினர். மேலும் மனுமித்ரன், வருணன் என்னும் கடவுளர்களை வேண்டி இள என்றும் பெண்ணைப் பெற்றான். இள, சந்திரனின் மகனான புதனை மணந்து புரூரவனைப் பெற்றாள். இளை, சுத்யும்னன் என்ற ஆணாக மாறிவிட, அவனுக்கு உத்கலன், கயா, வினதஷ்வா ஆகிய புத்திரர்கள் பிறந்தனர். உத்கலன் ஒரிஸ்ஸாவை ஆண்டான். கயா, கயாவையும், வினதஷ்வா மேற்குப் பகுதியையும் ஆண்டனர். சுத்யும்னன், இளை என்ற பெண்ணாக இருந்ததால் ஆட்சி செய்ய இயலாததால், அவனது பிரதிஷ்டான நகரை அவருக்குப் பின் புரூரவன் பெற்றான். வைவசுவத மனு இறந்த பிறகு அவனுடைய பத்து புத்திரர்களும் உலகைப் பகிர்ந்து கொண்டனர். இக்ஷ்வாகு மையப் பகுதியை ஆண்டு வந்தான். இக்ஷ்வாகு தான் செய்யப் போகும் யாகத்திற்குப் புதிதாக இறைச்சி கொண்டு வர அவன் மகன் விகுக்ஷியை அனுப்பினான். ஆனால், விகுக்ஷி பசியின் காரணமாக இறைச்சியை அவனே உண்டுவிட வசிஷ்ட முனிவர், மன்னன் இக்ஷ்வாகுவிடம், விகுக்ஷியை தேசப் பிரக்ஷ்டம் செய்யுமாறு கூறினான். விகுக்ஷி உண்டது ஒரு முயலின் இறைச்சி (சசக). எனவே அவன் சசதன் என்று பெயர் பெற்றான். இக்ஷ்வாகு மரணத்திற்குப் பின் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்ட விகுக்ஷி திரும்பி வந்து நாட்டை ஆண்டான். அதுவே அயோத்தி நாடாகும்.

8. குபலஷ்வன்

விகுக்ஷியின் மகன் காகுஸ்தன். இந்த வம்சத்தின் விரிஹதஷ்யன் மகன், குபலஷ்வன். அவனுக்கு முடி சூட்ட விரும்பினான் தந்தை. அவ்வமயம் அங்கு வந்த உதங்க முனிவர் மன்னனைத் தடுத்த, ஒரு செய்தியைக் கூறினார். துந்து என்றோர் அரக்கன் கடற்கரையில் வசிக்கிறான். அவனது மூச்சுக்காற்றினால் எங்கும் மணல் மேடு குவிந்துள்ளத. அவனைத் தேவர்களாலும் வெல்ல முடியவில்லை. எனவே, நான் என்னுடைய தவ வலிமையை உனக்குத் தருகிறேன். நீ அந்த அரக்கனைக் கொல்ல வேண்டும் என்று கூறினார். அதற்கு மன்னன் தன் மகன் குபலஷ்வன் அரக்கனைக் கொல்வான் என்று கூறி வனம் சென்று விட்டார். குபலஷ்வன், தனது நூறு புத்திரர்களுடன் உதங்கனை அழைத்துக் கொண்டு துந்துவை அழிக்கச் சென்றான். துந்துபியின் திரிதஷ்வன், சந்திரஷ்வன், கபிலக்ஷ்வன் என்ற மூன்று மகன்களைத் தவிர மற்றவரைக் கொன்றான். துந்து அரக்கனும் கொல்லப்பட்டான். இதனால் குபலஷ்வன் துந்து மாறன் எனப்பட்டான். முனிவனின் ஆசியால் இறந்த மக்கள் மோட்சம் அடைந்தனர்.

9. திரிசங்கு

திரிதஷ்வனுக்குப் பின் ஆண்ட திரியருனி என்ற மன்னன் நீதி நெறி வழுவாமல் தர்மவானாக நாட்டை ஆண்டு வந்தான். ஆனால், அவனது புத்திரன் சத்திய விரதன் அவனுக்கு நேர்மாறாக அதர்மவானாய் இருக்க வசிஷ்டர் அவனைத் தேசப்பிரஷ்டம் செய்யச் செய்தார். சத்தியவிரதன் காட்டில் சண்டாளர்களுடன் வாழ்ந்து வந்தான். சில நாட்கள் கழித்து மன்னன் திரியருனி தவம் செய்ய காடு செல்ல, நாட்டை ஆள அரசன் இல்லாததால் நாட்டில் அராஜகம், பஞ்சம் பன்னிரண்டு ஆண்டுகள் தாண்டவமாடின. அந்நாட்டில் வசித்து வந்த விசுவாமித்திர முனிவர் காட்டில் தவம் செய்து கொண்டிருந்ததால் அவருடைய மனைவி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவள் தன் மகனை விற்று தனக்கான உணவைப் பெற அவன் கழுத்தில் கயிறு கட்டி அழைத்துச் சென்று அவனை ஆயிரம் பசுக்களுக்கு விற்று விட்டாள். அவன் கழுத்தில் (கால) கயிறு கட்டப்பட்டதால் அவன் காலவன் எனப்பட்டான். இதையறிந்த சத்தியவிரதன், விசுவாமித்திரரின் மனைவி மக்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்து காலவனை விடுவித்து அவர்களை ஆதரித்து வந்தான். தன்னைத் தேசப்பிரஷ்டம் செய்யக் காரணமான வசிஷ்டர் மீது கோபம் கொண்ட அவன், அம்முனிவருடைய பசுவைக் கொன்று அதன் மாமிசத்தை, விசுவாமித்திரரின் மனைவி மக்களுக்குக் கொடுத்து தானும் உண்டான். இதனால் கோபம் கொண்ட வசிஷ்டர் சத்தியவிரதனைச் சபித்தார். அவன் செய்த மூன்று தவறுகனைச் சுட்டிக் காட்டினார். 1) உன் தகப்பனார் கோபத்துக்கு ஆளானாய், 2) பசுவைக் கொன்றாய், 3) பசு இறைச்சியை உண்டாய் என்று கூறி இனி அவன் திரிசங்கு என்ற பெயர் பெறுவான் என்று சபித்தார். தவம் முடிந்து திரும்பிய விஸ்வாமித்திரர், சத்தியவிரதன் தன் குடும்பத்துக்குச் செய்த உதவிக்காக மகிழ்ந்து அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, திரிசங்கு மானிட உடலுடனேயே சுவர்க்கம் போக விரும்ப, அவ்வாறே விஸ்வாமித்திரர் அருளினார். திரிசங்கு மன்னனாக விஸ்வாமித்திரர் அவருக்கு முக்கிய குருவானார்.

10. சகரன்

திரிசங்குவின் மகன் ஹரிச்சந்திரன். இவர்கள் வம்சத் தோன்றல் பாகு. அவன் இல்லற சுகத்தில் ஈடுபட்டு மகிழ்ந்திருக்க பகைவர்கள் படை எடுத்து வர, அவன் மனைவி யாதவியுடன் காட்டிற்குச் சென்று வசிக்கலானான். பாகுவை விரட்டியவர்கள் ஹதயர்களும், தலஜங்கா மன்னர்களும். அவர்களுக்கு சகர்கள், யவனர்கள், பரதர்கள், காம்போஜர்கள், பஹ்லவர்கள் உதவினர். காட்டில் மன்னன் பாகு மரிக்க, அவன் மனைவி யாதவி உடன்கட்டை ஏற விரும்பினாள். அவள் கருவுற்றிருந்ததால் அவளை அவுர முனிவர் தடுத்து நிறுத்தி தன் குடிலுக்கு அழைத்துச் சென்று ரக்ஷித்து வந்தார். பாகுவின் மற்றொரு மனைவி யாதவிக்கு விஷமூட்டிக் கொல்ல முயன்றாள். ஆனால், விஷம் அவளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. எனினும் குழந்தை நச்சுடனே பிறக்க அது சகரன் எனப்பட்டது. அவுர முனிவர் சகரனுக்கு சகல கல்விகளையும், வித்தைகளையும் கற்பித்தார். புனித ஆக்னேய அஸ்திரத்தை உபயோகிக்கும் முறையையும் அவன் கற்றான். சகரன் பெரியவனானவுடன் தன் தந்தையை விரட்டிய பகைவர்களை ஆக்கினேய அஸ்திரத்தின் உதவியால் வென்று அவர்களைக் கொல்ல யத்தனிக்கையில், வசிஷ்டர் அவர்களை முடி நீக்கிடுதுல் போன்றவை செய்து அவமானப்படுத்துமாறும், கொல்ல வேண்டாம் என்றும், அவர்கள் வேதங்களைப் பின்பற்றக்கூடாது என்றும் கூறினார். சகரன் தோற்கடித்த மன்னர்கள் கோனசர்ப்பர்கள், மஹிஷகர்கள், தார்வர்கள், சோழர்கள், கேரளர்கள் ஆகியோர்.

சசுர மன்னனுக்கு கேசினி, சுமதி என்று இரண்டு மனைவியர். அவுர முனிவர் அருளால் கேசினிக்கு ஒரு மகனும், சுமதிக்கு அறுபதினாயிரம் புத்திரர்களும் பிறந்தனர். கேசினியின் மகனின் பெயர் பஞ்சஜனன். சுமதிக்கு ஒரு பூசணிக்காய் தோன்ற அதனுள் ஒரு மாமிச பிண்டம் இருந்தது. அதை ஒரு பெரிய நெய் பானையில் வைத்தனர். அதில் நெய் நிரம்பி இருந்தது. அந்த பிண்டத்திலிருந்து அறுபதாயிரம் மக்கள் பிறந்தனர். சகரன் உலகை ஒரு குடைக்கீழ் ஆள திக் விஜய யாத்திரை தொடங்கினான். அதற்காக ஓர் அசுவமேத யாகம் செய்ய யாகக் குதிரையை உலகெங்கும் திரியவிட, அறுபதினாயிரம் மக்களும் அதனைப் பின் தொடர்ந்திட, குதிரை தென்கிழக்குக் கடற்கரையை அடைந்தது. சகர புத்திரர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது குதிரை களவாடப்பட்டது. குதிரையைத் தேடிச் சென்ற அவர்கள் தவம் செய்து கொண்டிருந்த முனிவரைக் கண்டனர். அவர்கள் வருகையால் தவம் கலைந்த முனிவர் அவர்களைக் கோபத்துடன் உற்று நோக்க, அவர்கள் எரிந்து சாம்பலாயினர். அவர்களில் வர்ஹிகேது, சுகேது, தர்மகேது, பஞ்சஜனன் நால்வர் மட்டும் தப்பிப் பிழைத்தனர். சாகரத்திலிருந்து யாகக்குதிரை சகரனால் பெறப்பட்டதால் அது சாகரம் எனப்பட்டது. பஞ்சஜனனின் மகன் அமஷுமனன். அவன் மகன் திலீபன். திலீபன் மகன் பகீரதன் தவம் செய்து கங்கையை உலகுக்குக் கொண்டுவர, வரும் வழியில் சாம்பலான சகர புத்திரர்களைக் காத்து மோக்ஷம் கிடைக்கச் செய்தான். பகீரதனால் புவிக்குக் கொண்டு வரப்பட்ட கங்கை பாகீரதி என்று பெயர் பெற்றது. பகீரதனின் பின் வந்தோர்களில் ரகு, ரகுவின் மகன் அஜன். அவன் மகன் தசரதன். தசரத குமாரன் ஸ்ரீராமச்சந்திரன் அனைவரும் சூரிய வம்சத்தினரே.

11. சந்திரனும் சந்திர வம்சமும்

அத்திரி முனிவரின் மகன் சோமன் என்ற சந்திரன் ஆவான். பிரம்மன் சந்திரனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு உலகை இருபத்தொன்று முறை சுற்றி வந்தார். பிறகு மீதியிருந்த சக்தியிலிருந்து மூலிகைகள் உற்பத்தி ஆயின. சந்திரன் ஒரு பத்ம ஆண்டு (பல மினியன் ஆண்டுகள்) தவம் செய்ய பிரம்மன் தோன்றி அவனை விதைகள், மூலிகைகள், சமுத்திரங்களுக்கு அதிபதி ஆக்கினான். அதனால் சந்திரன் ஒரு ராஜசூய யாகம் செய்தான். இது அவனுக்குப் புகழ், கீர்த்தி, செல்வம், மரியாதை ஆகியவற்றைக் கொடுத்தது. இதனால் மமதை கொண்ட சந்திரன், பிரகஸ்பதியின் மனைவியைக் கடத்திட, மற்ற தேவர்கள், அவளை விட்டு விடுமாறு கூற, தேவர்களுக்கும் சந்திரனுக்கும் இடையே கடும் போர் ஏற்பட்டது. பிரகஸ்பதி பக்கம் தேவர்களும், சிவனும் சேர்ந்திட, சந்திரன் பக்கம் அசுரர்களும், சுக்கிராச்சாரியாரும் சேர்ந்திட நடந்த இந்தப் போருக்கு தாரகாமய சங்கிராமம் என்று பெயர். இறுதியில் பிரம்மன் இருதரப்பினரையும் சமாதானம் செய்தார். இந்நிலையில் சந்திரனுக்கும், தாராவுக்கும் புதன் பிறந்தான். இந்த புதன் இளையை மணந்தான் என்று முன்பே கூறப்பட்டது.

12. சந்திர வம்ச மன்னர்கள்

யயாதி: சந்திர குலத்தில் தோன்றிய வலிமை மிக்க மன்னன் நகுஷன். அவன் விரஜா என்பவளை மணந்து யதி, யயாதி, சம்யாதி, ஆயாதி, வியாதி, கிருதி என்ற ஆறு புத்திரர்களைப் பெற்றான். நகுஷனுக்குப் பிறகு யயாதி அரசனானான். யயாதி சுக்கிராச்சாரியார் மகளான தேவயானையையும், தானவ மன்னன் மகளான சர்மிஷ்டையையும் மணந்தான். தேவயானிக்கு யது, துர்வசு என்று இரண்டு மகன்களும், சர்மிஷ்டைக்கு துருஹ்யு, அனு, பூரு என்ற மூன்று மகன்களும் பிறந்தனர். யயாதி பேரும், புகழுடனும் வாழ்ந்து, முதுமை வர தன் ராஜ்யத்தை தன் மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்தான். அவன் உலகம் முழுவதும் யாத்திரை செய்ய விரும்பினான். எனவே, அவன் யதுவை அழைத்து தன் முதுமையை ஏற்று அவனது இளமையைத் தரவும் வேண்டினான். அவன் மறுத்துவிட கோபம் கொண்ட யயாதி அவனும், அவன் மக்களும் அரசாள மாட்டார்கள் என்று சாபம் தந்தான். அவன் மற்ற புத்திரர்களையும் அவ்வாறே வேண்டிட அனைவரும் மறுக்க அனைவரையும் அவ்விதமே சபித்தான். ஆனால் பூரு மட்டும் தந்தை வேண்டுகோளை ஏற்று, தனது இளமையை யயாதிக்கு கொடுக்க, தந்தை மகனை வாழ்த்தினான். பல ஆண்டுகள் கழித்து யயாதி உலக இச்சையை வெறுத்து தன் இளமையை மறுபடியும் பூருவுக்குக் கொடுத்து முதுமையைப் பெற்றுக் கொண்டான். பின்னர் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றான். பூருவுக்குப் பின் பரதன் என்பவன் நாட்டை ஆண்டதால் நாடு பாரத வர்ஷம் எனப் பெயர் பெற்றது. இந்தக் குலத்தில் தோன்றிய மன்னன் குருவுக்குப் பின் வந்தவர்கள் கௌரவர்கள் எனப்பட்டனர். குருவின் பெயராலேயே குரு÷க்ஷத்திரம் அப்பெயரைக் கொண்டது. துர்வசுவின் சந்ததியில் பாண்டியர், கேரளர், கோலர், சோழர்கள் தோன்றினர். துருஹ்யனின் குலத்தில் காந்தார மன்னர்கள் தோன்றினர். யதுவுக்கு சகஸ்ரதன், பயோதன், குரோஷ்டு, நீலன், அஞ்சிகன் என்று ஐந்து புத்திரர்கள். சகஸ்ரதனின் குலத்தோர் ஹதயர்கள் எனப்பட்டனர். இவர்களில் சிறந்த மன்னன் கார்த்தவீர்யாச்சுனன். குரோஷ்குக்குப் பின் வந்தவர்கள் விருஷ்ணி, அந்தகர் முதலியோர். இதில் விருஷ்ணி குலத் தோன்றலே ஸ்ரீகிருஷ்ணன் ஆகும்.

13. பூ மண்டலப் பிரிவுகள்

பூமண்டலம் ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றைச் சுற்றி ஏழு வகையான சமுத்திரங்கள் உள்ளன. ஏழு வகையான பர்வதங்கள் உள்ளன. பாரத வர்ஷம் எனப்படும் நம் நாடு எட்டுப் பிரிவாக உள்ளது. இந்திரத் தீவு, சுசேருமனத்தீவு, தாம்ரபரணத்தீவு, கபஸ்தி மானத்தீவு, நாகத்தீவு, சௌம்யத்தீவு, காந்தர்வத்தீவு, வாருணத்தீவு என்பவை பாரதம். ஒன்பதாவது பகுதி கடலில் மூழ்கிவிட்டது. பாரத வர்ஷத்தின் கிழக்கில் கிராதர்களும், மேற்கில் யவனர்களும் உள்ளனர். பூமிக்கடியில் அதலம், விதலம், நிதலம், சுதலம், தலாதலம், ரஸாதலம், பாதாளம் என்று ஏழு உலகங்கள் உள்ளன. இவற்றில் தைத்தியர்கள், தானவர்கள், நாகர்கள் ஆகியோர் வசிக்கின்றனர். இந்தப் பாதாள லோகங்கள் மிகவும் அழகியவை, இங்கு பொன்னும் பொருளும் குவிந்து கிடக்கின்றன. இங்கேயும் காடு, பறவைகள் போன்ற ஜீவராசிகளும் நிறைந்துள்ளன என்று நாரதர் கூறினார். பூமண்டலப் பகுதியாக பல நகரங்கள் அமைந்துள்ளன. இதற்கெல்லாம் தலைவன் யமதர்மராஜன். அவரவர் செய்யும் பாவங்களுக்கு ஏற்ப இங்கு ஜீவன் தண்டிக்கப்படுகிறது. பாவப் பிராயச்சித்தம் செய்தவர்களும் புனிதர்களும் நரகங்களுக்குச் செல்லார். ஸ்ரீகிருஷ்ணனைத் தியானிப்பதே சிறந்த தவமாகும். மண்ணிலிருந்து விண் வரை பரவியிருப்பது இப்பூமி. புவர் லோகம் இதில் ஒரு பகுதி. மற்றும் வரிசையாக சூரிய மண்டலம், சந்திர லோகம், புதன், சுக்கிரன், அங்காரகன், குரு, சனி, சப்தரிஷி மண்டலம், துருவ லோகம் என்று பல பிரிவுகள் உள்ளன. கல்ப முடிவில் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் மட்டும் அழியும்.

14. கோனார்க் (உத்கல நாடு)

ஒரிஸ்ஸா (அ) உத்கலப் பகுதியில் வேத சாஸ்திர புராணங்கள் அறிந்த பிராமணர்கள் உள்ளனர். யஜ்ஞ, யாகாதிகள் நடத்தும் திறம்மிக்க பண்டிதர்கள். இங்கு கோனாதித்தியன் எனப்படும் சூரியன் வடிவம் உள்ளது. அர்க்க, ஆதித்யா என்பவை சூரியனுடைய பெயர்கள். கோனாதித்தியன் என்றாலும் கோனார்க் என்றாலும் ஒன்றையே குறிக்கும். கோனாதித்தியன் (அ) சூரியனின் விக்கிரகத்தைப் பார்த்தாலே, தரிசனம் செய்தாலே பாவம் பொடிபடும். இதைச் சுற்றியுள்ள மணற்பகுதியில் மரங்கள் செழிப்பாக வளர்கின்றன. சூரியோதயத்தில் இக்கடவுளைத் தரிசிப்பது மிகவும் சிறப்புடையது. கிழக்கு நோக்கி நின்று, எட்டு இதழ்கள் கொண்ட தாமரை மலர், சிவப்பு சந்தனம், தாமரை இதழ்கள் ஆகியவற்றைப் பரப்பி, அதன்மீது ஒரு தாமரைச் சொம்பில் நெல், எள், நீர், சிவப்புச் சந்தனம், சிவப்பு மலர்கள், தர்ப்பை கொண்டு நிரப்ப வேண்டும். இத்தகைய அமைப்பில் தாமரை இதழ்கள் மீது சூரிய பகவானை எழுந்தருளுமாறு பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு இக்கோயிலிலுள்ள சூரிய தேவனைப் பூஜை செய்தால், ஏழு பிறப்பு வினைகளும், பாவங்களும் நீங்கும். இந்திரன், தத்தன், பர்ஜன்யன், த்வஷ்டன், புஷன், ஆர்யமன், பகன், விவஸ்வனன், விஷ்ணு, அம்ஷுனன், வருணன், மித்திரன் என்ற பன்னிரண்டும் சூரியனின் வெவ்வேறு உருவங்களே. சூரியன், இந்திரனாக தேவர்களின் பகைவர்களை அழிக்கிறான். தத்தனாகப் படைக்கிறான். பர்ஜன்னியனாக மழையைப் பொழிவிக்கிறான். த்வஷ்டனாகத் தாவரங்களில் வாழ்கிறான். புஷனாகத் தான்யங்களை உற்பத்தி செய்து வளர்க்கிறான். ஆர்யமனாக காற்றை வீசுகிறான். பகலனாக எல்லா ஜீவராசிகளிலும் குடிகொண்டுள்ளான். விவஸ்வனனே தீயாகி உணவாக்க உதவுகிறான். விஷ்ணுவாக துஷ்ட நிக்கிரகம் செய்கிறான். அம்ஷுமனாகக் காற்றில் உள்ளான். வருணனாக நீரிலும், மித்திரனாக சந்திரனிலும் சமுத்திரத்திலும் உள்ளான். மேற்கூறிய பன்னிரண்டு பெயர்களில் பன்னிரண்டு மாதங்களில் பிரகாசிக்கிறான். இந்தப் பன்னிரண்டிலும் கதிர்கள் வெவ்வேறு அணுவில் ஒளிர்கின்றன. இவையே அன்றி சூரியனுக்கு மேலும் பன்னிரண்டு பெயர்கள் உள்ளன. அவை முறையே ஆதித்தியன், சவிதன், சூரியன், மித்திரன், அர்க்கன், பிரபாகரன், மார்த்தாண்டன், பாஸ்கரன், பானு, சித்திரபானு, திவாகரன், ரவி என்பவை. இந்த பிரமம புராணத்தில் சூரியனுடைய அஷ்டோத்திர நாமங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

15. இந்திரத்யும்னனும் புரு÷ஷாத்தம ÷க்ஷத்திரமும்

சத்திய யுகத்தில் இந்திரத்யும்னன் என்ற புகழ்பெற்ற மன்னன் இருந்தான். அவன் சத்தியம், நீதி, நெறிமுறையை தவறாது ஆண்டு வந்தான். அவன் ஒரு நல்ல ÷க்ஷத்திரத்தில் ஸ்ரீவிஷ்ணுவைத் தரிசிக்க நினைத்தான். ஆனால், எந்தத் தலமும் அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அந்த மன்னனின் தலைநகரம் அவந்தி மாளவ நாட்டில் இருந்தது. எல்லா வகையிலும் அந்த நகரம் சிறப்பு வாய்ந்து விளங்கியது. அழகு, இயற்கை, எழில், கோட்டை, யாவும் பெற்றிருந்தது. அந்நகரில் மகாகாலன் என்ற சிவன் கோயில் கீர்த்தி வாய்ந்தது. மகாகாலனைத் தரிசித்தால் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும். அவந்தி நகரில் ஷிர்பா நதி ஓடுகிறது. அதன் கரைகளில் விஷ்ணுவுக்கு கோவிந்தசாமி ஆலயம், விக்கிரம ஸ்வாமி ஆலயம் என இரண்டு ஆலயங்கள் இருந்தன. இவ்வளவு இருந்தும் அவை மன்னனுக்கு மனத் திருப்தி தரவில்லை. எனவே, அவன் ஸ்ரீ விஷ்ணுக்குப் புதியதாக ஓர் ஆலய நிர்மாணம் செய்யத்தக்க இடத்தைத் தேடினான். இவ்வாறு தேடிய அவன் இறுதியில் தெற்கிலுள்ள லவண சமுத்திரக் கரையை அடைந்தான். ஆங்கோர் இடத்தில் பூக்களும், பழக்களும் நிறைந்து, பலவிதப் பறவைகளும் நிறைந்த ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தான். அதுதான் தற்போது பூரி என்று புகழ்பெற்ற புரு÷ஷாத்தம ÷க்ஷத்திரம். இந்தத் தலம் ஒரு முக்கிய தீர்த்தமாகும். ஆனால் அதைப் பற்றிய விவரங்கள் மறைந்து கிடந்தன. இந்த இடத்தில் முன்பொரு விஷ்ணு கோயில் புகழ்பெற்று விளங்கியது. அந்த விஷ்ணுமூர்த்தியைத் தரிசித்தவர் எல்லாப் பாவங்களும் நீங்கிப் புனிதராயினர். இதனால் அங்கு எந்தப் பாவியையும் தண்டிக்க முடியாத யமதர்மன் பகவானிடம் முறையிட விக்கிரகம் மணலில் புதையுண்டு போயிற்று. இந்த இடம் இந்திரத்யும்னனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதன் அருகில் மகாநதி ஓடிக் கொண்டிருந்தது. ஒரு முகூர்த்த நாளில் ஆலய நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இச்செய்தியைப் பற்றி கலிங்க, உத்கல, கோசல நாட்டு மக்களுக்கும் தெரிவித்து ஆலயத்துக்கான கற்களை வேண்டினான். விந்திய மலைகளிலிருந்து கற்கள் படகுகளிலும், தேர்களிலும் வந்து சேர்ந்தன. மற்ற நாட்டு மன்னர்களும் ஆலய நிர்மாணச் செய்தியை அறிந்து ஒன்று கூடினர். அவர்களிடம் மன்னன் தான் மிகக் கடினமான இரண்டு பணிகளை மேற்கொண்டிருப்பதாகவும், அவர்களது உதவியால் அவை நிறைவு பெறும் என்ற நம்பிக்கையையும் விண்ணப்பித்தான்.

ஜம்புத்வீபத்திலிருந்து வேதசாஸ்திர விற்பன்னர்கள் வந்தனர். சிறப்பாக யாகசாலை நிர்மாணம் செய்யப்பட்டு யாகம் நல்ல முறையில் நடந்தேறியது. இனி விக்கிரக உருவாக்கம் பற்றித் தன் கவனத்தைச் செலுத்திய மன்னன் ஒரு கனவு கண்டான். அதில் மகாவிஷ்ணு தோன்றி கவலை வேண்டாம். சூரியோதயத்தில் சமுத்திரக்கரைக்குச் செல். அங்கு நன்கு வளர்ந்த ஒரு மரம் பாதி நீரிலும், பாதி மணலிலுமாக ஓங்கி வளர்ந்திருக்கும். அதை வெட்டி எடுத்து அதைக் கொண்டு பிரதிமைகளை உருவாக்கு என்றார். மரம் இரண்டு துண்டாக வெட்டப்படும் போது அங்கே விஷ்ணுவும், விச்வகர்மாவும் இரண்டு அந்தணர் வடிவில் தோன்றினர். அவர்கள் மரத்தை ஏன் வெட்டினாய் என்று கேட்க, மன்னன் கனவில் விஷ்ணு இட்ட ஆணையைப் பற்றி விளக்கினான். அப்போது அந்தணர் வடிவில் இருந்த விஷ்ணு அது நல்ல காரியம் என்று சிலாகித்து, மேலும் தன் அருகிலுள்ள அந்தணச் சிறந்த சிற்பி விக்கிரகம் அமைத்துக் கொடுப்பார் என்று கூறினார். அந்த அந்தணச் சிற்பி உதவியால் மூன்று பிரதிமைகள் உருவாகின. ஒன்று, வெள்ளை நிறத்தில் உருவான பலதேவர் எனப்படும் பலராமர் விக்ரகம். கண்கள் மட்டும் சிவப்பாக அமைந்தன. நீலவர்ண உடை, தலை மீது பாம்புப் படம், கையில் கதைகளுடன் ஏற்பட்டது. இரண்டாவது ஸ்ரீகிருஷ்ணனின் பிரதிமை. நீல நிறம். தாமரைக் கண்கள், மஞ்சள் உடை, கையில் சக்கராயுதத்துடன் உருவாயிற்று. மூன்றாவது, கிருஷ்ணனின் சகோதரி சுபத்திரையின் பிரதிமை. பொன்னாலான பட்டாடையுடன் தோன்றியது. கண நேரத்தில் பிரதிமைகள் உருவானது கண்ட மன்னன் பிரத்யும்னன் அந்தணர்களின் கால்களில் வணங்கி நீங்கள் உண்மையில் அந்தணர்கள் அல்லர், நீங்கள் யார்? என்று வினவினான். உடனே இருவரும் விஷ்ணு, விசுவகர்மாவாகத் தோன்ற மன்னன் மெய்மறந்து நின்றான். மகாவிஷ்ணு இந்திரத்யும்னனை ஆசிர்வதித்தார். நெடுங்காலம் நாட்டை ஆண்டு பரமபதத்தை அடைவாய் என்று கூறி மறைந்தார். ஒரு நன்முகூர்த்த நாளில் மூன்று விக்கிரகங்களும் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

16. மார்க்கண்டேயரும் புவனேசுவரர் ஆலயமும்

முன்காலத்தில் மார்க்கண்டேயர் என்ற முனிவர் கடும் தவம் செய்து வந்தார். எங்கும் நீரும் அந்தகாரமும் சூழ்ந்தன. உலகெங்கும் தீ பரவியது. மார்க்கண்டேயரையும் தீ பாதிக்க அவர் ஓர் ஆலமரத்தைக் கண்டார். அதன் அடியில் அமர்ந்து தொடர்ந்து விஷ்ணுவை நோக்கித் தவம் செய்யலானார். ஜலத்தின் மீது பள்ளி கொண்டிருந்த விஷ்ணு பகவான் மார்க்கண்டேயனிடம், அச்சம் வேண்டாம். என்னுடைய பக்தனாகிய உன்னைக் காப்பாற்றுவேன் என்றார். தன்னுடன் பேசியது யார்? என்ற வியப்பில் ஆழ்ந்திருந்த போது ஆலமரம் நீரில் மிதக்க அதனடியில் கிளைகளின் மீது ஒரு தங்கப் படுக்கையில் ஒரு சிறுவன் படுத்திருப்பதைக் கண்டார். அச்சிறுவன் விஷ்ணு என்பதை அவர் அறியவில்லை. அப்போது அச்சிறுவன், நீ களைப்படைந்திருக்கிறாய். என்னுடைய உடலில் சேர்ந்து ஓய்வு கொள் என்றான். அந்தச் சிறுவன் உடலில் பிரவேசித்த மார்க்கண்டேயர் அங்கு இந்தப் பேரண்டத்தின் சகல பகுதிகளையும் கண்டார். என்ன செய்வதென்று தோன்றாமல் திகைத்து அச்சிறுவனிலிருந்து வெளிப்போந்து விஷ்ணுவைப் பிரார்த்திக்க அவர் முன் மகாவிஷ்ணு தோன்றி வேண்டிய வரத்தைக் கேள் என்றார். அப்போது முனிவர் புரு÷ஷாத்தம ÷க்ஷத்திரத்தில் அரியும், சிவனும் ஒன்றே என்று காட்ட ஒரு சிவாலயம் எழுப்ப விரும்புகிறேன். அதற்கு அருள் புரிய வேண்டும் என வேண்டினான். பகவான் விஷ்ணு, கோரிய வரத்தை அருள, மார்க்கண்டேயர் புவனேச்வரர் ஆலயத்தை நிர்மாணித்தார்.

17. பலிச்சக்கரவர்த்தியும் உலகளந்தானும்

இது வாமன அவதாரம் பற்றிய பகுதி. பல  புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதில், ஓங்கி உலகளந்தான் மூன்றாவது அடியை பலியின் சிரசில் அல்ல, முதுகில் வைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஓங்கி உலகளந்தான் பாதம் விண்ணை அளந்த போது பிரம்மன் கமண்டலத்திலிருந்த புனித நீரால் பாதத்தை நீராட்ட அந்நீர் மலைகள் மீது தெளிக்கப்பட்டு நாலாபுறமும் பாய மேற்கில் சிந்திய நீர் பிரம்மன் கமண்டலத்தையே திரும்பி வந்து அடைந்தது. கிழக்கில் சென்ற நீரைத் தேவர்களும், முனிவர்களும் சேகரித்தனர். தெற்கில் பாய்ந்த நீர் சிவனின் ஜடாமுடியில் இறங்கியது. அதுவே கங்கை நதி ஆகும்.



உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்.....!

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்.....!

1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை மூன்று மணிவரை நதிகளில் குளிக்கக்கூடாது.

2. மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது. கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.

3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும். முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.

4. காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின்போது சொல்லுதல் கூடாது
சுத்தமான இடத்தில் தான் ஜபிக்க வேண்டும்.

5. கற்பூர ஹாரத்தி சூடம் காண்பித்தல் பற்றி ... சூடம் காண்பிக்கும் போது கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும். தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்க வேண்டும். முகத்துக்கு ஒரு தடவை கடைசியாக முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.


காசியில் ஏன் கருடன் பறப்பது இல்லை பல்லி ஒழிப்பது இல்லை

 காசியில் கருடன் பறப்பதில்லை: காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ஏன்


தெரியுமா?

காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர் ராவணவதம் செய்த பின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வரும் படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார். காசியின் காவலாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார். என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்? என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர் எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும் பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின் படி இன்றும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை என்பது அதிசயமான ஒன்று.
_____________________________________________________________________________________________பல்லி ஒலிப்பதில்லை ஏன் தெரியுமா?

காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர் ராவணவதம் செய்த பின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வரும் படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார். காசியின் காவலாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார். என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்? என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர் எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும் பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின் படி இன்றும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை என்பது அதிசயமான ஒன்று.
_____________________________________________________________________________________________