வெள்ளி, 2 அக்டோபர், 2020

லட்சுமி நாராயணர் திருக்கோவில்

லட்சுமி நாராயணர் திருக்கோவில்


மூலவர்  : லட்சுமி நாராயணர்
தாயார்  : லட்சுமி                                      ஊர்  : காரிசேரி
மாவட்டம்  : விருதுநகர்
மாநிலம்  : தமிழ்நாடு
திருவிழா : வைகுண்ட ஏகாதசி 

சிறப்பு : மூலவரின் சிலை நவபாஷாண சிலை என்பது சிறப்பு. மிகச்சிறிய கோயிலாக இருந்தாலும், நவபாஷாணத்தில் பெருமாள் சிலையை பார்ப்பது அரிது என்பதாலும், கீர்த்தி பெரிது என்பதாலும் சனிக்கிழமைகளில் மக்கள் வந்து செல்கின்றனர்.  
     

திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமை காலை 8 - மாலை 6 மணி வரை திறந்திருக்கும். முகவரி,
அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில், காரிசேரி- 626 119 விருதுநகர் மாவட்டம்.  
     
 தகவல் : இங்கு மார்கழி திருவோண நட்சத்திரத்தன்று சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது. சனிக்கிழமைகளில், நவக்கிரக தோஷ பரிகாரத்திற்கும் யாகம் நடத்துகின்றனர்.  
 

பெருமை : பெருமாள் நான்கு கரங்களுடன், வலது காலை மடித்து லட்சுமி தாயாரை மடியில் வைத்து, அணைத்த கோலத்தில் காட்சி தருகிறார். பிரகார தெய்வங்கள் இல்லை.     

ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் வத்திராயிருப்பு அருகிலுள்ள சதுரகிரி மலை மகாலிங்க சுவாமி கோயிலில் வசித்த சில சித்தர்கள் நவபாஷாணத்தில் ஒரு லட்சுமி நாராயணர் சிலை செய்து வழிபட்டு வந்தனர். ஒரு சமயம் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, சிலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, காரிசேரியில் கரை ஒதுங்கியது. சிலையை எடுத்த மக்கள், இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 15

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 15
 


பெரிய நம்பிகள் இளையாழ்வான் சந்திப்பு

திருக்கச்சி நம்பிகளிடம் ஆளவந்தார் திருவரங்கத்திற்கு இளையாழ்வானை அழைத்து வரச் சொன்னதாக சொன்னார் அல்லவா, பெரிய நம்பிகள்?

அந்த காலத்தில் குரு சிஷ்யன் எல்லாம் ஒருத்தருக்கொருத்தர் உடனே முன்னாடி போய் பேச மாட்டார்கள். ஒருவரிடம் பேசவேண்டும் என்றால் தனக்குத் தெரிந்ததை முதலில் வெளிப்படுத்துவார்கள். அப்படித்தான் அடுத்த நாள் காலை நீராடிவிட்டு பெரிய நம்பியும் தான் ஆளவந்தாரின் சிஷ்யன் என்று சொல்லாமல், காஞ்சி பேரருளாளன் முன்பு பாடுகிறார் ஆளவந்தார் இயற்றிய தோத்திர ரத்தினத்தை.

"ஸ்வாதயந்நிஹா சர்வேஷாம் |
த்ரயந்தார்தம் ஸூதுர்க்ரஹம் ||  
ஸ்தோத்ரயாமாச யோகின்ற |
தம் வந்தே யமுனாஹ்வயம் ||"

(சாதாரணவர்கள் வேதார்த்தத்தை புரிந்துகொள்வது வெகு கடினம். அப்படிப்பட்டோருக்காக வேதார்த்தத்தின் மீது ஈர்ப்பும் புரிதலும் ஏற்பட ஸ்தோத்திர ரத்தினத்தை வழங்கிய ஸ்ரீ யமுனாச்சாரியாருக்கு எனது முதற்கண் வணக்கத்தை தெரிவிக்கின்றேன்.)

"நமோ நமோ யமுனாய |
யமுனாய நமோ நமஹ ||
நமோ நமோ யமுனாய |
யமுனாய நமோ நமஹ ||"

(ஆளவந்தருக்கு நமஸ்காரம், ஆளவந்தருக்கு நமஸ்காரம்; ஆளவந்தருக்கு நமஸ்காரம், ஆளவந்தருக்கு நமஸ்காரம்!)

"நமோ சிந்யாத்புதாக்லிஷ்ட
ஞான வைராக்கிய ராசாயே..."

இதற்கிடையில் திருமஞ்சனத்திற்கு சாலக்கிணற்றிலிருந்து நீர் எடுத்து வந்த இளையாழ்வானின் காதுகளில் இந்த தோத்திரம் பாய்ந்தது. அவர் மெய் மறந்து அப்படியே நின்றுவிட்டார். பெரிய நம்பிகள் பாடி முடிக்கும் வரை அங்கேயே நின்றார் இளையாழ்வான்.

தோத்திரம் முடிந்ததும் அவரிடம், "இந்த தோத்திர ரத்தினம் உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்க அவரோ "இது ஆளவந்தார் இயற்றியது. ஆளவந்தார் என் குரு" என்கிறார்.

இளையாழ்வானுக்கு எப்படி தோத்திர ரத்தினம் பற்றி தெரியும் என்றால் திருக்கச்சி நம்பிகளும் தன் குருவான ஆளவந்தார் பற்றியே ஜெபம் பண்ணுவார். ஒருமுறை இளையாழ்வான் அவரிடம் "எந்த மந்திரத்தைச் சொல்லி ஜெபம் செய்கிறீர்கள்?" எனக் கேட்டார். அப்போது "ஆளவந்தார் திருநாமத்தைச் சொல்லி ஜெபம் செய்கிறேன்" என்றார் திருக்கச்சி நம்பிகள். தோத்திர ரத்தினம் பற்றி மேலும் சொல்லி இருக்கிறார் திருக்கச்சி நம்பிகள்.

இப்போது பெரிய நம்பிகள் பாடவும், இந்த பாடல் அவருக்கு எப்படி தெரியவந்தது என வினவுகிறார்.

அப்போதுதான் இளையாழ்வானைக் கண்ட நம்பிகள், அவரிடம் வைஷ்ணவத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்பதற்கான எல்லாத் தகுதியும் இருக்கக் கண்டார். ஆளவந்தார் தம்மிடம் இளையாழ்வானை அழைத்து வரச் சொன்னதாகச் சொல்கிறார். இளையாழ்வான் அவருடன் சென்றாரா என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

பெரிய நம்பிகள் வைபவம்.....

அரங்கன் முன்பு அனைவரும் சமமே என்றவர் ராமானுஜர்.
தாழ்ந்த குலத்தில் பிறந்த மாறநேர் நம்பிக்கு,ஈமக்கிரியைகளை செய்து,ராமானுஜரை ஊக்குவித்தவர்,ராமானுஜரின் ஆச்சார்யரான பெரிய நம்பிகள்.ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில்,ஜாதி பேதம்  இல்லை என்பதை,உலகறியச் செய்தவர் பெரிய நம்பிகள்...

ஆளவந்தார் (என்னும் ஆசாரியர்)  அவதரித்து, 21 ஆண்டுகள்
கழித்து, கி.பி.997-998 ஹேவிநம்பி வருடத்தில்,மார்கழி
மாதத்தில் கேட்டை நக்ஷத்திரத்தில், புதன் கிழமை
ப்ருஹச்சரண ப்ராஹ்மண குலத்தில், பாரத்வாஜ கோத்திரத்தில்
 ஸ்ரீ பராங்குஸதாஸர் என்னும் திருநாமம் உடையவராய்,
குமுதர் என்னும் நித்யஸூரியின் அம்சமாக  அவதரித்தவர் பெரியநம்பி.

எம்பெருமானாருக்கு ஸமாஸ்ரயணம் (பஞ்ச ஸம்ஸ்காரம்)
செய்த ஆசார்யர் இவர். ஆகையால்தான், ஆளவந்தாருடைய சீடர்களுக்குள் பெருமை பெற்றவராய், "பெரியநம்பி" என்று அழைக்கப்பெற்றார்  

ஆளவந்தார் நியமனத்தின் பேரில் இவரே, ஸ்ரீ ராமானுஜரைத் திருவரங்கத்துக்கு அழைத்துவந்தார். ஆளவந்தார் காலத்திற்கு
பின், ஆளவந்தாருடைய மற்ற சீடர்களாலே ப்ரார்த்திக்கப்பெற்ற இவரே,ஸ்ரீ ராமானுஜருக்கு ஸமாஸ்ரயணம் செய்து அழைத்து வருவதற்காகஸ்ரீ காஞ்சிக்குப்  புறப்பட்டார். அதே சமயம், தேவப்
பெருமாளின் (ஸ்ரீ வரதராஜர்) நியமனம் பெற்று, பெரியநம்பியை ஆஸ்ரயிப்பதற்காக  ஸ்ரீ ராமானுஜர் திருவரங்கத்தை நோக்கிப் புறப்பட்டார். ஒரே நோக்குடன்புறப்பட்ட இருவரும்,
மதுராந்தகம் ஏரி காத்தபெருமாள் கோயிலிலே சந்திக்க,
அங்கு "ஸ்ரீ ராமானுஜ ஸமாஸ்ரயணம்" நடைபெற்றது.

பெரியநம்பிகள் தம் ஆசார்யரான ஆளவந்தாரின் மற்றொரு
 சீடராய், தாழ்ந்த குலத்தில் தோன்றிய மாறனேறி நம்பி, ஆளவந்தாரை ராஜபிளவை என்னும் கொடிய நோய் தாக்க,  அவருடைய புண்ணைக் கழுவி, மருந்திட்டு, உணவும் அளித்து கைங்கர்யங்கள் புரிந்து வந்தார்.

அதனால், மற்ற பிராமணர்கள் அவரைத் திட்டுவதையும்
அவர் பொருட்படுத்தவில்லை. ஒரு சமயம், ஆசார்யரான ஆளவந்தாரிடம் அவர் அனுபவிக்கும் உபாதை நோயைத்
தனக்குப் பிரசாதமாக அளிக்கவேண்டும் என்று வேண்ட, ஆளவந்தாரும் அவரது ஆசார்ய பக்தியைப் பார்த்து மகிழ்ந்து,
தன் நோயை மாறனேரி நம்பிக்குக் கொடுத்தார்.

அந்தக் கொடியநோயை வாங்கிக் கொண்டதால்,
மாறனேறி நம்பி, ஆளவந்தாரை தியானித்துக் கொண்டே,
இந்தப் பூத உடலை விட்டு அகன்று, திருநாடு அலங்கரித்தார்.
அவர் இறந்த பின்பு இறுதிக் காரியங்களைச் செய்ய எவருமே முன்வரவில்லை. அப்போது பெரியநம்பி,
மாறனேறி நம்பியின் தியாக உள்ளத்தை மெச்சி, அவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்றும் பாராமல், ஆசார்ய பக்தியில்,
ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயதத்திற்கே ஏற்றம் அளித்தவர் என்று போற்றி, மாறனேர் நம்பியின் உடலுக்கு இறுதி
 சம்ஸ்காரங்களைச் செய்தார்.

பெரியநம்பியின் இச்செயல், வைஷ்ணவர்களைச் சினம்
கொள்ளச் செய்தது. “உயர்குலத்தில் பிறந்த பெரிய நம்பி,
 தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவரின் ஈமக்கிரியைகளை
 எப்படிச் செய்யலாம்?” என்று கூக்குரலிட்டார்கள்.

பெரியநம்பி வயதில் மூத்தவர். ஆளவந்தாரின் அருமைச் சீடர். ஆனால் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல்,
வைஷ்ணவர்கள் அவரை ஒதுக்கி வைத்தார்கள். எவரும்
அவரிடம் நீரும் நெருப்பும் பெறக்கூடாது என்றும்
உத்தரவிட்டார்கள். ஆனால் பக்தராகிய பெரியநம்பி அதைப்
பற்றிக் கவலைப்படவில்லை. இதய புண்டரீகத்திலே
வாசம் செய்யும் பெருமாளைப் பூஜித்து வணங்கிவந்தார்.

மிகச் சிறந்த ஞானியாகத் திகழ்ந்த பெரிய நம்பிகளுக்கு
அத்துழாய் என்ற மகள் இருந்தாள். துளசி என்பதற்கு
திருத்துழாய் என்று பெயர். அதனையே பெரியநம்பி,
தம் மகளுக்குச் சூட்டி மகிழ்ந்தார்.

ஆனால் பெரியநம்பியின் மகள் அத்துழாய் வைஷ்ணவர்கள்,
தங்கள் தந்தைக்கு இழைத்த அநீதியைக் கண்டு உள்ளம்
கொதித்தாள். அவள் நாள்தோறும் கோவிலுக்குச் சென்று
அரங்கராஜப் பெருமாளைச் சேவித்து வந்தாள். தன் தந்தை
பூஜை செய்யும்போது உதவி செய்தாள். வைஷ்ணவர்கள்
தந்தைக்கு எதிராகச் செய்த செயலை என்றாவது ஒரு நாள்,
தவறு என்று அவர்கள் அறியச் செய்ய வேண்டும் என்று வாய்ப்புக்காகக் காத்திருந்தாள்.

அவளுடைய எதிர்பார்ப்பும் வேண்டுகோளும் விரைவிலே
அத்தகைய வாய்ப்பு ஒன்றை அளித்தது. ஸ்ரீரங்கநாதர் வருட உற்சவத்திலே வீதி உலா வந்து கொண்டிருந்த நேரம். மங்கல வாத்யங்கள் முழங்க, சேவார்த்திகள் பெருமாளைச் சுமந்த
வண்ணம் வீதியிலே வந்துகொண்டிருந்தார்கள். வண்ணச் சப்பரத்திலே பெருமாள் சர்வாலங்காரங்களுடன் புன்முறுவல் பூத்தவண்ணம் காட்சிதந்தார்.

வீதிவீதியாக உலாவந்து அடியவர்களுக்கு தரிசனம் தந்து ஆட்கொள்ளும் எம்பெருமான் வீதியுலா பெரிய நம்பிகளின்
வீதிக்கும் வந்தது. வீட்டினுள்ளே இருந்து அத்துழாய் வீதிக்கு
ஓடோடி வந்தாள். வணங்கினாள். நேருக்கு நேராக நின்றாள்.

“பெருமாளே! நான் கூறுவதைக் கேளும். இதோ இங்கே
 உங்களைச் சுமந்தும், உங்கள் புகழைப் பாடிக்கொண்டும் வருகிறவர்கள் அனைவருமாகக் கூடி என் தந்தை செய்தது
மாபாதகச் செயல் என்று கூறுகிறார்கள். அப்படி என்ன செய்தார் என்பதைக் கூறுங்கள். அனைத்தும் அறிந்த தங்களுக்குத்
தெரியாதது ஒன்றுமில்லை. பெருமாளே கதி என்றும் ஆசார்யரே தெய்வம் என்றும், சேவை புரிந்து வந்த மாறனேர்நம்பிக்கு, என் தந்தை ஈமக்கடன் செய்து விட்டார். இது தவறா? பதில்
கூறிவிட்டு இங்கிருந்து நகர்ந்து செல்லுங்கள்.” என்று
அத்துழாய் ஆணையிட்டு விட்டாள்.

“மொய்த்துக் கண்பனிசோர மெய்கள்
சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
எய்த்துக் கும்பிடு நட்டம் இட்டு எழுந்து
ஆடிப்பாடி இறைஞ்சி என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடி
யார்கள் ஆகி அவனுக்கே
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள்
மற்றையார் முற்றும் பித்தரே!”

“பரமனை நினைத்து கண்ணீர் சோர ஆனந்தக் கண்ணீர் பெருக
உடல் மயிர்க் கூச்செரிய ஏங்கித் தவித்து, கூத்தாடி பலவிதப் பாட்டுகள் பாடி வணங்கி எந்தையும் என் அண்ணனுமான
அரங்கப் பெருமாளைப் பற்றியவர் பித்தர் அல்லர். அவர் பால்
பற்று இல்லாதவரே பித்தர் என்று குலசேகர ஆழ்வார் பாடியது உண்மையல்லவா? யார் பக்தர்? பெருமாளே கூறிவிட்டுச் செல்லுங்கள்.”

என்று அத்துழாய் ஆவேசம் வந்தவள் போலப் பேசி முடித்தாள். அனைவரும் ஸ்தம்பித்து நின்றார்கள்.

உடனே வீதிஉலா வந்த அரங்கன் வாய் மலர்ந்தார்.

“மாறனேர் நம்பிக்கு, பெரியநம்பி செய்த ஈமக்கிரியைகள்
 நமக்கும் சம்மதமே! நாம் ஒப்பிய பரமபாவனமான செயலே!”
 என்று பெருமாள் அசரீரியாக அருள் மொழி கூறியதும்
அத்துழாய் பூரித்தாள்.

வீட்டினுள்ளே அடைந்து கிடந்த பெரிய நம்பியும் அதைக் கேட்டுக் கண்ணீர் பெருக்கினார். ஸ்ரீரங்கநாத வீதி உலாவுக்கு வந்திருந்த வைஷ்ணவர்கள் அனைவரும் விதிர் விதிர்த்தார்கள்.

சிறுபெண் என்று அத்துழாயை எண்ணிய அறிவீனத்தை நினைத்து ஊரார் வருந்தினார்கள். தாம் செய்ததை எண்ணி வருந்தி, பெரிய நம்பிகளுக்குச் செய்த அபசாரத்திற்காக மன்னிப்புக் கோரினார்கள்.

அத்துழாயியின் பக்தியும் தீரமும் வைணவ உலகிலே புதிய சகாப்தத்தை நிலை நிறுத்தியது.

இதை அறிந்த எம்பெருமானார், வர்ணாஸ்ரம தர்மத்தின் வரம்பை மீறி நீர்  இப்படிச் செய்யலாமோ என்று பெரியநம்பிகளிடம் கேட்க, நம்பிகள் அதற்கு,
சாமான்ய தர்மத்தை நிலைநாட்டுகிற சக்கரவர்த்தித்
திருமகனார் (ஸ்ரீ ராமர்), பக்ஷி ஜாதியான (பறவை) ஜடாயுவுக்கு இறுதிச் சடங்ககுகளைச்  செய்தாரே! அவரிலும்நான் பெரியனோ? அந்தப் பறவையைக் காட்டிலும், இவர் (மாறனேறி நம்பி
சிறியவரோ? என்றும்,

மேலும் யுதிஷ்டிரர் (தருமர்)  விதுரருக்கு (தாழ்ந்த குலத்தில் பிறந்தவளின் மகனாகத் தோன்றியவர்) இறுதிக் கிரியைகள் செய்தாரே!  நான் என்ன யுதிஷ்டிரரைக் காட்டிலும் பெரியவனோ? மாறனேறி நம்பி விதுரரைக் காட்டிலும் தாழ்ந்தவரோ? என்றும்,

மேலும், நம்மாழ்வார், "பயிலும் சுடரொளி"
(திருவாய்மொழி, 3.7)  என்ற  பதிகத்திலும்,
"நெடுமாற்க்கடிமை"(திருவாய்மொழி, 8.10) என்ற பதிகத்திலும், பாகவதர்களின் (பெருமானின் அடியார்கள்) சிறப்பைக்கூறி, "எம்மையாளும் பரமர்" என்றும்,"என் கொழுகுலந் தாங்களே"
என்றும் கூறினவையெல்லாம் வெறும் வெற்று
வார்த்தைகளோ?  அவை நடப்பிற்கு ஒத்துவராததோ?
 என்றும் கேட்டு பாகவத உத்தமர்கள் எல்லாவற்றாலும் சிறப்பிக்கப்பட வேண்டியவர்களே என்பதை நிலை நிறுத்தினார்.

இவற்றைக் கேட்ட எம்பெருமானாரும் சந்தோஷம் அடைந்தார். இவற்றையெல்லாம் தாம் அறிந்திருந்தாலும், பெரியோர்
மூலமாக உணர, உணர்த்தவேண்டும் என்பதற்காகவே
கேட்டேன் என்றாறாம் எம்பெருமானார்.

ஒரு சமயம், ஸ்ரீ ராமானுஜர் சற்று தூரத்தில் வந்து
கொண்டிருக்க, அவருக்குப் பெரியவரான பெரிய நம்பிகள்
கீழே விழுந்து அவரை நமஸ்கரித்தாராம். சிறியவரின் காலில் பெரியவர் விழலாமா, அதுவும் ஸமாஸ்ரயணம் செய்த ஆசாரியராயிற்றே நீர்? சிஷ்யன் காலில் விழலாமா என்று
கேட்க, நம்பிகள், ஸ்ரீ ராமானுஜரின் தோற்றம், தன்
ஆசார்யரான, ஸ்ரீ ஆளவந்தாரைப் போலவே இருந்ததால்,
இவர் ராமானுஜர் என்பதை மறந்து, ஆளவந்தாராகவே
பாவித்து வணங்கினேன் என்று கூறினாராம் .

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவையில் ஊறி, அதன்
அமுதச் சுவையை நன்கு புருகியவர் ஸ்ரீ ராமானுஜர்.  
இதனாலேயே அவருக்குத் "திருப்பாவை ஜீயர்" என்ற
பெயருமுண்டு. ஒரு நாள் காலை, இப்படி அவர் திருப்பாவைப் பாசுரங்களை சொல்லிக்கொண்டு, நம்பிகளின் இல்லத்தை
நெருங்க, நம்பிகளின் திருக்குமாரத்தியான (மகள்) அத்துழாய் ராமானுஜரைத் தரிசிக்க, தன் இல்லத்தின் வாசற்க் கதவைத்
திறக்க, அவளைப் பார்த்த ராமானுஜர் அவளை விழுந்து
வணங்கி மயக்கமுற்றுக் கிடந்தாராம்.

 ஒரு பெரியவர் தன் காலில் விழுவதைக் கண்டு அஞ்சிய அத்துழாய்,தன் தந்தையான நம்பிகளை அழைத்து, இதைத் தெரிவிக்க, நம்பிகள் துளியும் பதறாமல், எம்பெருமானாரைப் பார்த்து, "உந்து மதகளிற்றன்" பாசுரம் (திருப்பாவை, 18) அனுஸந்தானமோ என்று கேட்டாராம்.

 அதாவது, இந்தப் பாசுரத்தில் "நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்" என்ற வரியை  ராமானுஜர் அனுசந்திக்கும்
அதே சமயம்,  அத்துழாய்க் கதவைத் திறக்க, அத்துழாய்
அவர் கண்ணிற்கு "நப்பின்னைபிராட்டியை"ப் போலத்
தெரிந்தாளாம்.  இராமருக்கு சீதபிராட்டியைப் போல்,
ஸ்ரீ வராஹருக்கு பூமிப்பிராட்டியைப் போல்,  நப்பின்னை  
கண்ணன் எம்பெருமானின் திருத்துணைவி ஆவாள். இது "மூவாயிரப்படியில்" உள்ளபடி.
(ஆனால், இந்தசம்பவம் திருக்கோஷ்டியூர் நம்பியின் திருக்குமாரத்தியான தேவகி பிராட்டியார் விஷயத்தில்
நடந்ததாக "ஆறாயிரப்படி" தெரிவிக்கிறது.)

அத்துழாய் திருமணம் ஆகி தன் புகுந்த வீட்டிற்க்குச் செல்ல, அத்துழாயின் மாமியார் உனக்கு சீதனமாக பணிப்பெண்
ஒருவரையும் அனுப்பவில்லையே உன் தந்தை (நம்பிகள்)
என்று கேட்க, அத்துழாய் தன தந்தையிடம் இதைத் தெரிவிக்க, நம்பிகள் வருத்தமுற்று  பணிப்பெண்ணுக்கு நான் எங்கே
செல்வேன் என்று கேட்டு, ராமானுஜரிடம் சென்று இதைப்
பற்றிக் கூறு என்று அவளிடம் சொல்ல, அவளும் உடனே
சென்று அவரிடம் இதைக் கூற, இதைக் கேட்ட ராமானுஜர்,
தன் சீடரான முதளியாண்டனை அழைத்து அவளுடன் பணிப்பெண்ணாகச் செல்லும்படி கட்டளையிட, முதலியும் ஆசார்யனின் கட்டளையை செவ்வனே நிறைவேற்றும்
வண்ணம், அத்துழாயின் பணிபெண்ணாக, அவள் மாமியார் வீட்டிற்க்குச் சென்றார்.

ராமானுஜர் துறவறம் பூண்டபோது,  அனைத்தையும் துறந்தேன்,  முதளியாண்டனைத் தவிர என்று கூறியவர். அவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் முதலியாண்டான். அவரையே அத்துழாயுடன் பணிப்பெண்ணாக அனுப்பி, தியாகம் செய்தார் என்றால்,அது ராமானுஜர் தன் ஆசார்யரான பெரிய நம்பிகளுக்குச் செய்யும்
கடமை என்ற எண்ணத்தில்தான்.

ஒரு சமயம், வைணவ மதம் சிறந்ததா, சைவ மதம் சிறந்ததா
என்று வாதம் எழ, சைவ மதமே சிறந்தது, சிவனைக் காட்டிலும் மேலான தெய்வமில்லை" என்று அதில் ஊற்றம் கொண்ட
சோழ மன்னன் கூற, அவன் சபையில் இருந்த மந்திரிகள்,
இதை ஒரு வைணவர் சொன்னால்தான் எடுபடும் என்றும்,
மேலும் அவர் ஒரு சாதாரண வைணவராக இருக்கக்கூடாது
என்றும், வைணவ சம்பிராதயத்தில் ஊற்றம் கொண்டவராக இருக்கவேண்டும் என்று கூற, அப்படிப்பட்டவர் யார் இருக்கிறார் என்று கேட்க, வைணவ மதம் சிறக்கத் தோன்றிய ராமானுஜரே அப்படிப்பட்டவர் என்றும், அவரை அழைத்துவந்து, சைவ மதமே சிறந்தது என்று கூறி, கையெழுத்து இட்டால்தான் அரசனின்
கூற்று எடுபடும் என்று தெரிவித்தார்கள்.

 உடனே, அரசன், ராமானுஜரை அழைத்துவரும்படி
 ஊழியர்களைப் பணிக்க, ராமானுஜர் அங்கு சென்றால்
இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும்,ஒப்புக்
கொள்ளாமால் போனால், மன்னன் அவரைக் கொன்று
விடுவான் என்றும் நினைத்து, அவரது சீடரான
கூரத்தாழ்வான் இதை ராமானுஜரிடம் தெரிவித்து,
ராமானுஜருக்கு தான்  உடுத்தியிருந்த வெள்ளை வேட்டியைக் கொடுத்து உடுத்தச் சொல்லி, அவரது காவி உடையைத் தான் அணிந்துகொண்டு, ராமானுஜராய் அரசனின் சபைக்கு,
ஆழ்வான் பெரிய நம்பிகளுடன் சென்றார்.  

சபைக்குச் சென்றவுடன், ராமானுஜராய் வேடமனிந்த
ஆழ்வானைப் பார்த்து,"சிவாத் பரதரம் நாஸ்தி" என்று கையெழுத்திடச் சொன்னான். அதற்கு ஆழ்வான்,
ஒருவன் உலகளந்தான் (எம்பெருமான்); ஒருவன் (பிரமன்)
அவன் திருவடிகளைக் கழுவினான்; கழுவப்பட்ட  அந்தத்
தீர்த்தத்தை ஒருவன் (சிவன்) தலையில் தாங்கிப் புனிதனானான். இதனால், யார் சிறந்தவன் என்பதை நீயே உணர்ந்து பார்
என்று பல படியாக ஸ்ரீமந்நாராயணனே பரதெய்வம் என்று உறுதிபடுத்தினார்.

 நீர் வித்வான் ஆகையால் எப்படியும் பேச அல்லவர். இதில்
 நீர் கையெழுத்திடும் என்று அரசன் ஆணையுடன் நிர்ப்பந்திக்க, ஆழ்வான், சிவனைத்  தாழ்த்தி விஷ்ணுவை  உயர்த்திவைத்து  கையெழுத்திட்டார்.  இதனால்  கோபமடைந்த அரசன், பெரிய நம்பியைப் பார்த்து, கையெழுத்திடும்படி கட்டளையிட,அவரும் அதற்கு மறுத்தார். உடனே, தன் ஊழியர்களை அழைத்து,
அவர்கள் இருவரின் கண்களையும் பிடுங்கும்படி கட்டளையிட்டான்.

உடனே ஆழ்வான், துஷ்டனான உன்னைக் கண்ட கண்கள்
எனக்கு  உதவாது என்று கூறித் தம் நகங்களைக்  கொண்டே
தம் கண்களைப் பிடுங்கி அரசன் மேல் வீசினார். பெரிய நம்பிகளின் கண்கள் பிடுங்கப்பட்டன. பின்னர் இருவரும் ராஜ சபையிலிருந்து வெளியேறினர். வழியில் வலி தாங்காமல் அந்திம காலத்தை அணுகினார் நம்பிகள். அதனால் விரைவில் ஸ்ரீரங்கத்தை அடைவோம் என்று ஆழ்வானும் அத்துழாயும் கூறினர்.  

அதுகேட்டு நம்பிகள், "அது வேண்டாம்; அப்படி செய்வோமானால் பெரியநமபிகள் திருமேனியை விடுவதற்கு ஸ்ரீரங்கம் போனார்; அதனால், நாமும் திவ்யதேசத்தில்தான் சரீரம்
விடவேண்டுமென்று அனைவரும்  எண்ணுவர். முதலிலே ஆசார்யனாலே அனுக்ரஹிக்கப் (அங்கீகரிக்கப்)பட்டவருக்குப்  பரமபதம் நிச்சயமாகையாலே,அந்த தேச  நியமம் என்று  கூறி,
தன் ஆசார்யரான ஸ்ரீ ஆளவந்தாரை தியானித்துக்கொண்டு
ஆழ்வான் மடியிலே திருமுடியும், மகள் அத்துழாய் மடியிலே திருவடியுமாகப் பரமபதம் அடைந்தார். இதனால், பகவானே பேற்றுக்கு உபாயம் என்று அவனைத் தஞ்சமாகப் பற்றிவனுக்கு, இறுதிக் காலத்தில்  இன்ன தேசத்தில் தேகத்தை விடவேண்டும்
என்ற கட்டுப்பாடில்லை என்பதை நிலை நாட்டினார் நம்பிகள்.

திருப்பாணாழ்வார் அருளியுள்ள "அமலனாதிபிரான்" என்னும் பிரபந்தத்திற்கு, "ஆபாதசூடமனுபூய ஹரிம் ஸயாநம்" என்று தொடங்கும் அற்புதமான  வடமொழித் தனியன் இட்டவர் பெரியநம்பிகள்.
இனியும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையர் திருவடி!!

அருள் மிகு கோலவில்லி ராமர் திருக்கோவில்

திருவெள்ளியங்குடி அருள் மிகு  கோலவில்லி ராமர் திருக்கோவில்


108 திவ்யதேசத்தின் 22 ஆம் ஸ்தலம்* 🌿🌿

🔥மூலவர் : கோலவில்லி ராமர், ஸ்ரீராப்தி நாதன்

  🔥உற்சவர் : சிருங்கார சுந்தரர் (தன்னை அழகுபடுத்திக்
 கொள்வதில் இப்பெருமானுக்கு விருப்பம் அதிகம்)

  🔥தாயார் :  மரகதவல்லி (ஸ்ரீதேவி, பூதேவி)

  🔥தல விருட்சம் :  செவ்வாழை

  🔥தீர்த்தம் : சுக்கிர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பரசுராம தீர்த்தம், இந்திர தீர்த்தம்

  🔥ஆகமம்/பூஜை : வைகானஸ ஆகமம்

  🔥பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

  🔥புராண பெயர் : பார்கவ க்ஷேத்திரம், திருவெள்ளியங்குடி

  🔥ஊர் : திருவெள்ளியங்குடி

  🔥மாவட்டம் : தஞ்சாவூர்

  🔥மாநிலம் :  தமிழ்நாடு
 
 🔥பாடியவர்கள்:
     
  மங்களாசாசனம்

திருமங்கை ஆழ்வார்

ஆநிரை மேய்த்து அன்று அலைகடலடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களையுருட்டி கார்நிறை மேகம் கலந்த தோருருவக் கண்ணனார்க் கருதியகோவில் பூநிரைச் செருத்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரிவண்டுமிண்டி தேனிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திருவெள்ளியங் குடியதுவே

-திருமங்கையாழ்வார்  
     
  🔥திருவிழா:
     
   ராமநவமி, கோகுலாஷ்டமி, நவராத்திரி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி  
     
  🔥தல சிறப்பு:
     
  பெருமாளின் 108 திருப்பதிகளுள் இங்கு மட்டும் தான் கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம். இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 22 வது திவ்ய தேசம்.  
     
 🔥திறக்கும் நேரம்:
     
  காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

🔥முகவரி:
     
  அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில், திருவெள்ளியங்குடி - 612 102 தஞ்சாவூர் மாவட்டம்  
     
 🔥போன்:
     
  +91- 435-245 0118
     
  🔥பொது தகவல்:
     
 
இத்தல பெருமாள் புஜங்க சயனத்தில்,கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் புஷ்கலா வர்த்தக விமானம் எனப்படுகிறது.. சுக்கிரன், பிரம்மா, இந்திரன், பராசுரர், மயன் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.

இத்தலத்தின் அருகில் சேங்கானூர் என்ற ஊர் உள்ளது. இதுதான் வைணவ மேதை பெரியவாச்சான் பிள்ளையின் அவதார தலமாகும். காஞ்சிப்பெரியவர் இத்தலத்தில் தங்கி கோயில் திருப்பணி செய்துள்ளார்.
 
     
 
 🔥பிரார்த்தனை
     
  கண்ணில் குறைபாடு உள்ளவர்கள், திருமண தடை உள்ளவர்கள், புத்திர பாக்கியம் வேண்டுவோர் இங்கு வழிபட்டால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை.சுக்கிரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.  
     
 🔥நேர்த்திக்கடன்:
     
  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.  
     
  🔥தலபெருமை:
     
  இந்த பெருமாளை தரிசித்தால் 108 திருப்பதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தனக்கு கண்ணில் ஒளி தந்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில், சுக்கிர பகவான் அணையா தீபமாக இத்தலத்தில் இரவு பகலாக பிரகாசித்து கொண்டிருக்கிறார். எனவே இத்தலம் நவக்கிரகத்தில் சுக்கிரத்தலமாக போற்றப்படுகிறது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இங்கு மட்டும் தான் கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக் கிறார்.இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம்.

🔥தல வரலாறு:
     
 
மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது இறைவன் என்பதை அறியாத மன்னன் தாரை வார்த்து கொடுக்க சம்மதிக்கிறான். ஆனால், உண்மைநிலை அறிந்த அசுர குல குரு சுக்கிராச்சாரியார், தாரை வார்க்கும் செம்புக்குடத்தின் துவாரத்தை ஒரு வண்டாக உருவெடுத்து அடைத்து விட்டார். குருவின் இந்த செயல் அறிந்த பகவான் ஒரு குச்சியால் துவாரம் வழியாக குத்த, ஒரு கண்ணை இழக்கிறார் சுக்கிரன்.ஒளியிழந்த கண்ணுடன் பல தலங்களுக்கு சென்று வழிபட்டு கடைசியாக இத்தலத்து பெருமாளை வழிபட்டு மீண்டும் பார்வை பெற்றார். இதனால் தான் இத்தலம் வெள்ளி(சுக்கிரன்)யங்குடி என அழைக்கப்படுகிறது.சுக்கிரன் இத்தலத்தில் வந்து தவம் செய்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தேவ சிற்பியான விஸ்வகர்மா பெருமாளுக்கு அழகாக கோயில்களை கட்டி முடித்தார். இதே போல் தன்னால் கோயில்கள் கட்ட முடியவில்லையே என அசுர குல சிற்பி மயன் வருத்தப்பட்டு பிரம்மனிடம் வேண்டினார். அதற்கு பிரம்மா இத்தலத்தில் கடும் தவம் செய்தால் பெருமாள் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்,'' என கூறினார். மயனின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் சங்கு சக்ரதாரியாக காட்சி கொடுத்தார். ஆனால் மயன்,""தனக்கு இந்த தரிசனத்திற்கு பதில், ராமாவதார காட்சி வேண்டும் என்றான். தன் கரத்திலிருந்த சங்கு சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு கோலவில்லி ராமனாக வில் அம்புகளுடன் தரிசனம் தந்தார் பகவான். இப்படிப்பட்ட பெருமைக்குரிய தலத்தில் தவமிருக்க விரும்பி இங்கு வந்தார் சுக்கிராச்சாரியார். இதன் காரணமாகவும் இது "வெள்ளியங்குடி' ஆயிற்று.
 
     
 🔥சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் 108 திருப்பதிகளுள் இங்கு மட்டும் தான் கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம். இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள் பாலிக்கிறார்.

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 14

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 14




இளையாழ்வானை அழைத்துவரச் சொல்லுதல்

ஆளவந்தார் காஞ்சியிலிருந்து திருவரங்கம் புறப்பட்டுச் சென்றபின்பு இளையாழ்வானின் நினைவாகவே இருந்தார். நமக்குப் பின்பு இந்த திருவரங்கம் ஆஸ்தானத்தில் அனைத்துமாக இருந்து இளையாழ்வான்தான் வைஷ்ணவ சம்பிரதாயத்தை உலகெங்கும் பரப்ப வேண்டும் என்பதில் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

ஆளவந்தாருக்கும் வயது ஆகிக்கொண்டே சென்றது. முன்போல் செயல்பட முடியவில்லை. நினைத்துக் கொண்டார் - தான் திருநாடு அலங்கரிக்கப்போகும் நாள் வந்துவிட்டது என்று. உடனே, பெரிய நம்பிகளை அழைத்தார். தன்னுடைய சிஷ்யர்களிடமும், பெரிய நம்பிகளிடமும் இளையாழ்வானைப் பற்றி விசாரித்தார்.

"இளையாழ்வான் அத்வைதக் கொள்கையுடைய யாதவப் பிரகாசரிடம் காலட்சேபம் பண்ணுவதை நிறுத்தி விட்டாரே. இப்பொழுது என்ன செய்கிறார்?" என்று கேட்டார் ஆளவந்தார். உடனே, அங்கிருந்தோர் இளையாழ்வான் இப்போது சாலக்கிணற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துவரும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும் திருக்கச்சி நம்பிகளிடம் கற்றுக் கொள்கிறார் என்றார்கள். திருக்கச்சி நம்பிகளுடன் இருப்பது, நல்லது என்று ஆளவந்தாருக்குத் தோன்றியது.

🍀💐 சிஷ்யர்களை அழைத்தார்

வயோதிகத்தால் தான் மிகவும் தளர்ச்சியடைந்ததைக் கருதி, சிஷ்யர்களை அழைத்து ஆளவந்தார் கூறியது:

"இறைவனே நம் வாழ்க்கை. இறைவன் மீது பூரணமாக நம்பிக்கை வைத்து, அவன் பாதங்களே தனக்கு அடைக்கலம் என்று இருப்பவன் உண்மையான பக்தன். கடவுள் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், ஒருவனுக்குத் தன் மீதே நம்பிக்கை இல்லையென்று அர்த்தம். நம் உள்ளத்தின் உருவகம் இறைவன். நாம் அவனிடம் உள்ளோம். அவன் நம்மிடம் உள்ளான். மனித சமுதாயத்திற்குச் சேவை செய்யவே இறைவன் நம்மைப் படைத்துள்ளான்!"

அறிவுகூர்மை நிரம்பப்பெற்ற இளையாழ்வார் சில உபனிஷத் சொற்றொடர்களுக்கு யாதவப்ரகாசர் கூறிய பொருத்தமற்ற பொருளை ஏற்க மறுத்தார்.
. *தஸ்ய யதா² கப்யாஸம் புண்ட³ரீகம் ஏவமக்ஷிணீ* என்ற சாந்தோக்ய உபனிஷத் (1-6-7) சொற்றொடருக்கு “குரங்குகளின் பின்புறம் போல் சிவந்த கண்களை உடையவன்” என்று யாதவப்ரகாசர் பொருள் கூறியதைக் கேட்டு கண்ணீர் விட்டார் இளையாழ்வார்.
8.சூரிய ஒளியால் அப்போது மலர்ந்த அழகிய தாமரைப் பூக்களைப் போன்ற திருக்கண்களை உடையவன் என்ற சிறப்புடைய பொருளைப் பகிர்ந்தார் இளையாழ்வார்.

 ஆளவந்தாருடைய ஆணையை நிறைவேற்றி இளையாழ்வாரை திருவரங்கத்திற்கு அழைத்து வர கச்சி நகரம் நோக்கிப் புறப்பட்டார் பெரியநம்பிகள்.
 பெரியநம்பியும் காஞ்சிபுரம் சென்றடைந்தார். அங்கு சாலைக்கிணற்றுக்கு அருகே நின்று ஆளவந்தாரின் ஸ்தோத்ரரத்தினத்தில் ஒரு ச்லோகத்தை இளையாழ்வார் காதில் விழும்படி சேவித்தார்.
38. அற்புதமான பொருள் பதிந்திருக்கும் ஸ்தோத்ரரத்தினத்தில் பால் ஈர்க்கப்பட்ட இளையாழ்வார், பெரியநம்பியை வணங்கி அதன் விபரம் கேட்க பெரியநம்பிகளும் ஸ்தோத்ரரத்தினத்தை பற்றியும், அதை எழுதிய ஆளவந்தாரைப் பற்றியும், அவருடைய தற்போதைய நிலைமை மற்றும் அவா பற்றியும் விளக்க இளையாழ்வார் உடனே ஆளவந்தாரை கண்டிட வேண்டும் என்று பெரியநம்பிகளுடன் திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார்.

இவ்வாறு அவர் கூறிவிட்டு திருவரங்கம் அரங்கநாதன் கோவிலுக்குச் சென்று, அரங்கனின் சந்நிதானத்தில் சிறிது நேரம் அமைதியாக நின்றார். பிறகு, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். 'நான் தெரிந்தோ தெரியாமலோ இதுவரை செய்திருக்கூடிய பிழைகளைத் தேவரீர் பொறுத்தருள வேண்டும்!' என்று இறைஞ்சினார். அருகிலிருந்த பக்தர்கள் அழுதார்கள். ஆளவந்தார் தம்முடைய முடிவு மிக அருகிலிருப்பதாகக் கூறினார்.

 பெரிய நம்பிகள் இளையாழ்வானை அழைக்கச் செல்லுதல்

ஆளவந்தாரின் சீடர்களில் முக்கியமானவர்கள் ஐந்து பேர். அவர்கள் 1. பெரிய நம்பிகள் 2. பெரிய திருமலை நம்பிகள் 3. திருக்கச்சி நம்பிகள் 4. திருக்கோட்டியூர் நம்பிகள் 5. திருமாலையாண்டான். இவர்கள் ஐந்து பேருக்குமே ஆளவந்தார் தான் இருக்கும் பொழுது, முக்கியமான சில கடமைகளையும், பொறுப்புகளையும் கொடுத்தார்.

எப்படி அரசன் ஒருவன் தான் இறக்கும் தருவாயில், இளவரசனுக்குத் தேவையானவற்றை பூர்த்தி செய்து கொடுக்கிறானோ, அவனைப்போல இங்கு மன்னராக ஆளவந்தார் இருக்கிறார். இளவரசனாக இளையாழ்வான் இருக்கிறார். இப்போது இந்த ஆளவந்தாரான அரசனுக்கு, தனக்குப்பின் வைஷ்ணவத்தைத் தன் அகன்ற தோள்களால் தாங்கப்போகும் வருங்காலத் தலைவர் இவர்தான் என்று எப்போது தோன்றியதோ, அப்பொழுதிலிருந்து இளையாழ்வான் இளவரசனாகிவிட்டார். இப்போது இந்த வருங்கால இளவரசருக்கு வைஷ்ணவ சாம்பிராஜ்யத்தை திறமையுடன் நடத்த, ஐந்து சீடர்களால்தான் முடியும் என்று, ஐந்து சீடர்களுக்கும் ஒவ்வொரு கடமையைத் தந்தருளினார் ஆளவந்தார். "என்னுடைய காலத்திற்குப்பின் உங்கள் ஐந்து பேருக்கும் ஒவ்வொரு கடமை இருக்கிறது. அதை நிறைவேற்றபோவது நீங்கள் தான்" என்றார்.

இப்பொழுது பெரிய நம்பிகளை அழைத்து, "நீர் போய் இளையாழ்வானை அழைத்து வாரும்" என்றார். அக்கட்டளையை ஏற்றுக்கொண்ட சீடர் பெரிய நம்பிகளும் உடனே காஞ்சிபுரம் புறப்பட்டுச் சென்றார்.

காஞ்சிபுரத்திற்கு வந்து சேர்ந்த பெரிய நம்பிகள் திருக்கச்சி நம்பிகளைச் சந்தித்து, ஆளவந்தார் இளையாழ்வானை அழைத்துவரச் சொன்ன விதமாக விசயங்களைச் சொன்னார். திருக்கச்சி நம்பிகளும் மிகவும் மகழ்ச்சியடைந்தார். "ஆளவந்தாருக்குப் பிறகு பட்டம் ஏறத் தகுதியுடையவர் இளையாழ்வான் மட்டுமே!" என்றார் பெரிய நம்பிகள்.

பெரிய நம்பிகள், இளையாழ்வான் சந்திப்பு நாளை நிகழும்.

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 13

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 13




🌺🌹 திருக்கச்சி நம்பிகளை கட்டாயப்படுத்துதல்

இளையாழ்வான் மறுபடியும் திருக்கச்சி நம்பிகளிடம் சென்று, யாதவப் பிரகாசர் தன்னை காலட்சேபம் பண்ண வர வேண்டாம் என்று சொன்னதை சொல்லி தன்னை சீடராக ஏற்கும்படி சொன்னார். இப்போதும் திருக்கச்சி நம்பிகள் மறுத்து விட்டார். மறுபடியும் காஞ்சி பேரருளானனுக்கு நீர் எடுத்து வரும் சேவையைச் செய்யுமாறு பணித்தார். இளையாழ்வானும் அவ்வாறே செய்தார்.

என்ன செய்தாலும், 'திருக்கச்சி நம்பிகள் நமக்கு குருவாக ஆக மாட்டுறாரே. என்ன செய்யலாம்?' என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.

மூன்று பேரின் எச்சில் இலைகளைச் சாப்பிடுவதன் மூலம், நாம் செய்த பெரும் பாவத்தை போக்கிக் கொள்ளலாம். வயதில் மூத்தவர்களான பெரியோர்கள், ஞானிகள், குரு. இவர்கள் உண்ட மிச்சத்தை ஒருவன் உண்டானானால் அவன் தன்னுடைய பிறவிப் பயனைக் கடந்து விடுவான். இதனால், திருக்கச்சி நம்பிகளை தம் வீட்டில் அமுதுண்ண அழைத்தார் இளையாழ்வான்.

ஏனெனில், தன்னை சிஷ்யானாக திருக்கச்சி நம்பிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் உண்ட எச்சிலை உண்டாவது பிறவிப் பயனை நீங்கி, அந்த வழியிலாவது அவரை குருவாக ஏற்றுக் கொள்ளலாம் என்று எண்ணினார் இளையாழ்வான். இதை அறிந்த திருக்கச்சி நம்பிகளோ, "நான் நாளை அமுதுண்ண வருகிறேன்" என்று கூறிவிட்டார். இதனால் இளையாழ்வனுக்கு மிக்க மகிழ்ச்சி.

🌺🌹 பேரருளாளனும் திருக்கச்சி நம்பிகளும்

தன் மனைவி தஞ்சம்மாளிடம் சொல்லி மறுநாள் திருக்கச்சி நம்பிகள் அமுதுண்ணுவதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். இதனிடையே திருக்கச்சி நம்பிகள் பேரருளானுக்கு ஆலவட்டம் வீசிக்கொண்டிருக்கையில், பெருமாளிடம் கேட்டே விட்டார். "இந்த இளையாழ்வானிடம் இருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை. நீரே வழி சொல்லும் தேவரீரே!"  என்றார். பேரருளாளனும், "திருக்கச்சி நம்பிகளே!  இளையாழ்வானை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டிதானே?!" என்றார். "அது வர்ணாசிரமத்திற்கு எதிரானது" என்று பெருமாளிடம் கூறிவிட்டார்.

இளையாழ்வான் அமுது தயாராகியதும், 'பொழுதாகி விட்டதே இன்னும் திருக்கச்சி நம்பிகள் வரவில்லையே' என்று, திருக்கச்சி நம்பிகளைத் தேடி தெருவின் வழியே தேடிச்சென்றார்.

இளையாழ்வான் இந்தப் பக்கம் அவரைத் தேடிச்செல்ல, இவரோ தெருவின் மறுவழியாக வந்தார். தஞ்சம்மாளிடம் வேலைப்பளு அதிகம் இருப்பதால் தான் உடனே கிளம்ப வேண்டியதாக சொன்னார். தஞ்சம்மாளும் அவருக்கு வீட்டு வாசலிலேயே அமுதமிட்டாள். அவர் உணவருந்தி முடிந்ததும், நான் செல்கிறேன் என்று தஞ்சம்மாளிடம் கூறிவிட்டு சென்று விட்டார்.

தஞ்சம்மாளும் அவர் பிராமணன் அல்லாதபடியால் உணவருந்திய மிச்சத்தை கொட்டிவிட்டு, தானும் தலை மெழுகி, அந்த இடத்தை மெழுகி, மீதமிருந்த உணவையும் கொட்டினார். இப்பொழுது இளையாழ்வான் வந்தார்.

தஞ்சம்மாளிடம் திருக்கச்சி நம்பிகள் பற்றி கேட்க, திருக்கச்சி நம்பிகள் வந்து உணவருந்தியதையும், அந்த இடத்தை சுத்தம் செய்ததையும் சொன்னாள். இளையாழ்வானுக்கு மிகுந்த வருத்தம். "அவர் உணவருந்திய மிச்சத்தை உண்டு சந்தோசப்படலாம் என்று நினைத்தேன். அதற்கும் வழி இல்லையா!" என்று அழுது புலம்பினார்.

பிறகு, வழக்கம் போல சாலக்கிணற்றிலிருந்து நீர் எடுத்து கைங்கரியம் செய்தார் இளையாழ்வான். திருக்கச்சி நம்பிகள் இனி தமக்கு குருவாக கிடைக்க மாட்டார் என்பதை உணர்ந்து வேறு குருவைத் தேட நினைத்தார். பேரருளாளனிடம் பிரார்த்தித்தார்.

ராமானுஜர்

திருக்கச்சிநம்பி ராமானுஜரிடம் பெருமாள் சொன்ன விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார். நானே அனைத்தும்; நானே பரப்பிரம்மம். ஜீவர்களுக்கும் இறைவனுக்கும் வித்தியாசம் உறுதியாக இருக்கிறது.
இனியும் பிறக்காமல் முக்தியடைய வேண்டுமென விரும்புவோர், என்னையே சரணமடைய வேண்டும். சரணாகதி தத்துவமே உயர்ந்தது. ஒருவன் இறக்கும் சமயத்தில் என்னை நினைக்க மறந்து விட்டாலும் பரவாயில்லை; காலமெல்லாம், அவன் என் பக்தனாய் இருந்ததற்காக அவனுக்கு நிச்சயமாக முக்தி அளிப்பேன்.
அவர்கள் இறந்தவுடனேயே வைகுண்டத்தை அடைந்து விடுகிறார்கள். பெரிய நம்பியே இனி உனக்கு குரு. அவரது திருவடிகளைப் பற்றிக் கொள்,. இதுதான் ராமானுஜருக்கு, பெருமாள் சொல்லி அனுப்பிய விஷயம். ராமானுஜரோ குருவைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்.
வைணவத்தலைவர் ஆளவந்தாருக்கு அடுத்தபடியாக பெரியநம்பி பெரிதாக மதிக்கப்படுபவர். பெருமாளே அவரைப் பற்றிக் கொள் என கூறியபிறகு, இனி குருவைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. இதன் காரணமாக அவர் மகிழ்ச்சிக் கூத்தாடினார்.
தனக்காக பெருமாளிடம் பேசி தன் சந்தேகத்தை தீர்த்து வைத்ததுடன், ஒரு குருவையும் அடைய வழிகாட்டிய திருக்கச்சிநம்பியின் கால்களில் விழப்போனார் ராமானுஜர். அவர் எவ்வளவோ தடுத்தும் கேளாமல், சுவாமி! தங்களை விட பூமியில் உயர்ந்தவர் யாருமில்லை, என்றவாறு அவர் கால்களில் விழுந்துவிட்டார். இந்தக் கணத்தில் இருந்து ராமானுஜர் வீட்டை மறந்தார்.
மனைவியை மறந்தார். சொந்தபந்தம் எதுவும் நினைவுக்கு வரவில்லை. வீட்டில் சொல்லிக் கொள்ளாமலேயே ஸ்ரீரங்கத்திற்கு சென்று கொண்டிருந்தார். இந்நேரத்தில் ஸ்ரீரங்கமடத்தில் ஆளவந்தாருக்கு பிறகு மடத்தின் பொறுப்பில் இருந்த திருவரங்க பெருமாள் அரையர் சிஷ்ய கோடிகளிடையே பேசிக் கொண்டிருந்தார்.
ஆளவந்தார் வேத விளக்கங்களில் கரை கண்டவர். அரையரும் இதில் வல்லுநர் தான் என்றாலும், ஆளவந்தாரின் அளவுக்கு தேர்ந்தவர் அல்ல. எனவே அவர் சிஷ்யர்களிடம், சீடர்களே! நீங்கள் என்னிடம் மரியாதை வைக்கும் அளவுக்கு நான் உயர்ந்தவன் அல்ல. பரமனுக்கு பூஜை செய்கிறேன்; அவன் புகழ் பாடுகிறேனே ஒழிய ஸ்ரீஆளவந்தாருக்கு பிறகு, அவரைப் போலவே வேத விளக்கங்களை உங்களுக்கு என்னால் தர முடியவில்லை.
இவ்விஷயத்தில் மிகவும் அற்ப சக்தியுள்ளவனாகவே இருக்கிறேன். வேத விளக்கங்களில் விற்பன்னரான, ஒருவர் நமது மடத்துக்கு தலைவராக வேண்டும். நானும், அவரது தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். ஆளவந்தார் முக்தியடைவற்கு முன்பு, ராமானுஜரை அழைத்து வரச் சொல்லியிருந்தார். அவரே, ஒருவரை அழைக்கிறார் என்றால், அந்த மகான் கல்வியில் மிகச்சிறந்தவராகவும், வேத விளக்கங்களை தெளிவாக அறிந்தவராகவும் இருக்க வேண்டும். இளைஞராயினும் கூட, அவரது தலைமையின் கீழ் இந்த மடம் செயல்படுவதே சரியானதென்று எண்ணுகிறேன்.
யாராவது ஒருவர் அவரைச் சந்தித்து, அவரை இங்கு அழைத்து வாருங்கள். ஆளவந்தார் மறைந்த நாளில் அவர் இங்கு வந்தார். அப்போது அவர் பேசப்பேச ஆளவந்தாரின் கை விரல்கள் நிமிர்ந்ததை என்னால் மறக்க முடியவில்லை, என்றார். நமது மகான்களின் வரலாறை இளைய தலைமுறை கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இதனால் தான். இப்போதெல்லாம், ஒன்றும் தெரியாதவர்கள் பலர் பதவிக்காக போட்டி போட்டு, தங்களையும் அழித்துக் கொண்டு, தாங்கள் சார்ந்துள்ள நிறுவனங்களையும் அழித்து விடுகிறார்கள்.
தெரியாத ஒன்றை தெரிந்தது போல் காட்டி நாடகமாடும் வழக்கம் மகான்களிடம் இல்லை. அரையர் போன்றவர்களின் வரலாறை சிறுவயதில் படித்திருந்தால், இந்நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டிருக்காது. இதை சீடர்கள் எல்லாரும் ஏற்றனர்.
ராமானுஜரை அழைத்து வர பெரியநம்பியை அனுப்புவது என முடிவாயிற்று. சீடர்கள் பெரியநம்பியிடம், சுவாமி! தாங்கள் ராமானுஜரை அழைத்து வாருங்கள். ஒருவேளை ராமானுஜர் இப்போதே வரத் தயங்கினால் அவரை வற்புறுத்த வேண்டாம். அரங்கநாதனின் சித்தப்படி அவர் எப்போது வரவேண்டுமென உள்ளதோ, அப்போதே வந்து சேரட்டும். ஆனால், நீங்கள் உடனடியாகத் திரும்பி விட வேண்டாம்.
ஒரு ஆண்டு ஆனாலும் பரவாயில்லை. காஞ்சிபுரத்திலேயே தங்கியிருந்து, திவ்ய பிரபந்தங்களைக் கற்றுக் கொடுங்கள். அவர் இன்னும் பல விஷயங்களில் தேர்ச்சி பெறட்டும். அவரை தலைவராக்க உள்ளோம் என்ற செய்தியையும் அவர் இங்கு வரும் வரை சொல்ல வேண்டாம், என்றனர். அந்த மடத்தில் திருமணமான சீடர்கள் சிலரும் இருந்தனர்.
ஆனால், ஊருக்கு வெளியே அவர்களை குடி வைத்திருந்தார்கள் சீடர்கள். பெரியநம்பியும் திருமணமானவர். அவர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டார். செல்லும் வழியில் மதுராந்தகம் கோயிலில் தங்கினார்.
கோயில் குளக்கரையில் மனைவியோடு பேசிக் கொண்டிருந்த போது, ஒரு இளைஞன் அவர் திருவடியில் விழுந்து வணங்கினான். யார் இவன்? முன்பின் தெரியாத ஊரில், முன்பின் தெரியாத இந்த இளைஞன் காலடிகளில் விழுந்து கிடக்கிறானே! பெரியநம்பி அவனை, எழுந்திரப்பா! நீ யார்? என்றார்.

இளையாழ்வான் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவம் பற்றி நாளைய பதிவில் அறியலாம்.

இன்னும் அனுபவிப்போம்....

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!💐

லக்ஷ்மி நரசிம்மர் கோவில்

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் தரிசனம்.....
 
மூலவர் : லட்சுமி நரசிம்மர்
தாயார் :  அகோபிலவல்லி தாயார்
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : பழைய சீவரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்


 தகவல்: மூலவர் லட்சுமிநரசிமமர் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியும், வலக்கரத்தால் அபயம் அளித்தும், இடது கையால் லட்சுமியை அணைத்தபடியும் உள்ளார். அகோபிலவல்லி தாயார் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாள். ஆண்டாள், நிகமாந்த மகாதேசிகன், வீர ஆஞ்சநேயர் சந்நிதிகளும் உள்ளன. ராஜகோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது. பிரதோஷம், சுவாதி நட்சத்திர நாட்களில் இவரை தரிசிப்பது சிறப்பு. தினமும் இருகால பூஜை நடக்கிறது.  
     
பிரார்த்தனை : நாள்பட்ட நோயால் சிரமப்படுபவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.  
     

பெருமை : ஆரோக்கிய வழிபாடு: 300 ஆண்டுகளுக்கு முன், வட இந்தியாவிலிருந்து பக்தர்கள் இங்கு வந்தனர். அதில் ஒருவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. இங்கு தங்கிய போது அவரின் கனவில் தோன்றிய பெருமாள், இங்கேயே 48 நாட்கள் தங்கி வழிபாடு செய்ய நோய் நீங்கும் என அருள்புரிந்தார். அவரும் அதன் படி தங்கி வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். அவருடைய பரம்பரையில் வந்தவர்களே அறங்காவலர்களாக இன்றும் இருந்து வருகின்றனர். ஆப்பரேசன் செய்ய இருப்பவர்கள் மருத்துவமனை செல்லும் முன் இங்கு வந்து தரிசிக்கின்றனர். நாள்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள் ஆரோக்கியம் பெற லட்சுமி நரசிம்மரை வீட்டிலிருந்த படியே வேண்டிக் கொள்ளலாம். இவர்கள் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை ஜபித்தபடியே மருந்து உண்டால், நோய்கள் பறந்தோடும் என்பது நம்பிக்கை. பாவம் காரணமாகவே நோய்கள் வருகின்றன. இந்த மந்திரத்தை ஜெபித்து, நல்லதை மட்டுமே செய்தால் நோய்கள் தங்கள் பரம்பரைக்கும் வராமல் தடுக்கலாம்.  
     

ஸ்தல வரலாறு : இமயமலையிலுள்ள நைமிசாரண்யத்தில் வசித்த மரீசி முனிவர், மற்ற முனிவர்களிடம் பூலோகத்தில் உள்ள சத்திய விரத
க்ஷத்திரமான காஞ்சிபுரத்தில் தவம் செய்தால் இறையருள் உண்டாகும் என தெரிவித்தார். இந்த சமயத்தில், விகனஸருடைய சீடரான அத்ரிமகரிஷி, விஷ்ணுவை லட்சுமிநரசிம்மர் கோலத்தில் தரிசிக்க விருப்பம் கொண்டிருந்தார். அப்போது அசரீரி ஒலித்தது. வெங்கடாஜலபதி வீற்றிருக்கும் திருமலைக்கு தெற்கிலும், பாடலாத்ரிக்கு மேற்கிலும் இருக்கும் பத்மகிரி என்னும் மலைக்குச் செல். அந்த மலை யட்சர், கின்னரர், கந்தர்வர்களால் வழிபாடு செய்யப்பட்ட பெருமை மிக்கது. அங்கு வழிபட்டால் லட்சுமி நரசிம்மரின் தரிசனம் கிடைக்கும், என்றது. அத்ரி பத்மகிரியை அடைந்தார். அங்கு கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து கொண்டு வந்த தாமரை மலர் பூத்த குளத்தைக் கண்டார். அதன் கரையில் இருந்த அரசமரத்தடியில் தவத்தில் ஆழ்ந்தார். அவரின் பக்திக்கு மகிழ்ந்த, விஷ்ணு, லட்சுமிதாயாரை மடியில் அமர்த்திய கோலத்தில் சாந்த நரசிம்மராக காட்சியளித்தார். அதே கோலத்தில் இன்றும் கோயில் கொண்டிருக்கிறார். விஷ்ணு லட்சுமியோடு வாசம் செய்யும் தலம் என்பதால் ஸ்ரீபுரம் எனப்பட்ட இத்தலம் சீவரம் என மாறியது. பழமையான ஊர் என்பதால் பழைய சீவரம் என பிற்காலத்தில் மருவியது.
ஸ்ரீ என்றால் லட்சுமி. பிரம்மாண்ட புராணத்தில் இக்கோயில் வரலாறு உள்ளது.

நரசிம்மரை நம்பினோர் கை விடப்படார்....

🌹கொடிய நோய்களையும் நொடியில் தீா்த்தருளும் பழையசீவரம் நரசிம்மா்!

🌹 தா்மநெறிகளுக்கு சோதனை ஏற்படும் காலங்களில் சா்வலோக சரண்யனான ஶ்ரீமந்நாராயணன் தா்மத்தை நிலைநாட்டவும் துஷ்டா்களை சம்ஹாரம் செய்து நல்லவா்களைக் காப்பாற்றவும் “அவதாரம்” எடுக்கின்றாா்.

🌹 எப்போதும் தன் திருநாமம் ஒன்றையே உச்சாித்துக்கொண்டு, தன் மீது ஈடு இணையில்லாத பக்தி கொண்டிருந்த பாலகன் பிரகலாதனைக் காப்பாற்றவும், துஷ்டனான இரண்யனை வதம் செய்து தா்மத்தை நிலைநாட்டவும் எம்பெருமான் “நரசிம்ம அவதாரம்” எடுத்தாா்.

🌹 எம்பெருமான் எடுத்த பத்து அவதாரங்களிலும் தனிச்சிறப்பு வாய்ந்தது நரசிம்ம அவதாரம். இறைவன் “சா்வாந்தா்யாமி” என்பதை உலகிற்கு உணா்த்திய அவதாரமும் இத்திருவடிவம் தான். “தூணிலும் இருப்பாா், துரும்பிலும் இருப்பாா், உன்னுள்ளும் என்னுள்ளும் இருக்கின்றாா்” என்ற தன் பக்தன் பிரகலாதனின் நம்பிக்கையைக் காப்பாற்றி உள்ளும், புறமும், எங்கும், எப்பொழுதும் நிறைந்திருக்கும் ஈடு இணையற்ற பரம்பொருள் “ஶ்ரீமந்நாராயணனே” என்பதை உலகறியச் செய்த அவதாரம் ஶ்ரீநரசிம்ம அவதாரம்.

🌹 துன்பப்படும் தன் பக்தா்களைக் காத்தருள்வதில் ஒரு விநாடி கூட தாமதிப்பதில்லை அந்த அழகிய சிங்கம்! இதனால் தான் “நாளை என்பதில்லை நரசிம்மனிடம்” என்று நெஞ்சம் நெகிழ்ந்து இந்த அவதாரப் பெருமையைப் போற்றியுள்ளாா் “ஶ்ரீமத் நிகமாந்த மஹாதேசிகன்”.

🌹 சீற்றம் தணிந்த எம்பெருமான்.

🌹 ஶ்ரீமந்நாராயணன் தன் பிராட்டி லக்ஷ்மி தேவியை க்ஷண நேரமும் பிாியாமல் தன் திருமாா்பிலே தாங்கியிருப்பவா். இதனால் எம்பெருமானுக்கு “திருமகள் திருமாா்பன்” என்ற திருநாமமும் உண்டு. ஶ்ரீமந்நாராயணன் என்ற திருநாமத்திலேயே லக்ஷ்மி பிாியாமல் இணைந்திருக்கிறாள். “ஶ்ரீ” என்பது மஹாலக்ஷ்மியைக் குறிக்கும். பக்தா்கள் பெருமானையும் பிராட்டியையும் சோ்த்து வழிபடுவதே ஏற்றம் தருவதாகும். இதனால் எம்பெருமானே பக்தா்களின் வசதிக்காக தன் தேவியை தனது திருமாா்பில் ஏந்திக் கொண்டாா். எம்பெருமான் தன் பக்தன் பிரகலாதனின் பொருட்டு எடுத்த நரசிம்ம அவதாரத்தில் பிராட்டியுடன் இல்லாத உக்ர மூா்த்தியைக் கண்டு கலக்கம் அடைந்தனா் தேவா்கள்.

🌹 இரண்யனை வதம் செய்த பின்னா் உக்ரம் தணியாத எம்பெருமானின் திருமுகம் கண்டு நடுங்கிய தேவா்கள் செய்வதறியாது திகைத்தனா். எப்போதும் சாந்தமூா்த்தியாய், சந்திரவதனத்துடன் சிங்கார ரூபனாகக் காட்சிதரும் பெருமானின் “நரசிம்மரூபம்” கண்டு தேவா்கள் அஞ்சியதில் வியப்பேதும் இல்லை. நான்முகன் ஆலோசனையின்படி லக்ஷ்மி பிராட்டியின் திருவருளை நாடி நின்றனா் தேவா்கள். தேவா்களின் நிலை கண்டு வருந்திய தேவியும் அவா்களது துயா் தீா்க்க திருவுள்ளம் கொண்டாா்.

🌹 கொதிக்கும் நீரை குளிா்ந்த நீரால் தானே தணிக்கமுடியும். குளிா் நிலவினையொத்த தன் திருமுக மண்டலத்தில் கஸ்தூாித் திலகம் தாித்து பொன்மணி ஆபரணங்களும் முத்துமாலைகளும் துலங்க சா்வாபரண பூஷிதையாக அருள்பாலிக்கும் பிராட்டி எம்பெருமானைத் தன் திருவிழிகளால் நோக்கியவாறு அவரது திருமடியில் வந்து அமா்ந்தாா்.

🌹 தன் மடியில் அமா்ந்த தேவியை ஆலிங்கனம் செய்த அதே தருணத்தில் எம்பெருமானின் கோபமும் தணிந்தது. பெருமானின் கோபம் என்ற கொதிக்கும் நீரை அருள்பாா்வையாக மாற்றி பக்தா்களைக் காத்தருளினாா் லக்ஷ்மிதேவி. பிராட்டியை ஆலிங்கனம் செய்த அாிய இத்திருக்கோலத்தில் எம்பெருமான் “ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மராக” பல புராதனத் திருத்தலங்களில் அா்ச்சாவதார மூா்த்தியாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாா். அத்தகைய புராதனத் தலங்களில் ஒன்று தான் “பழைய சீவரம்” என்னும் தலத்தில் உள்ள “ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மா்” திருத்தலமாகும்.

பழைய சீவரம்− ஸ்தல வரலாறு.

🌹 பிரம்மதேவனின் மானஸ புத்திரா்களில் ஒருவா் “அத்ரி” மகாிஷி. பூவுலகம் தோன்றிய காலத்திலேயே அவதாித்த இம் மகரிஷி அனைத்து வேதங்களிலும் கரை கண்டவா் என்பதோடு தவவலிமையிலும் சிறந்து விளங்கியவா். பொதிகை மலைத்தொடாில் உள்ள அத்ரி மலையில் தவம் செய்து மும்மூா்த்திகளின் தாிசனம் கண்ட இம்மகாிஷிக்கு மஹா விஷ்ணுவை “ஶ்ரீலக்ஷ்மி நரசிம்ம மூா்த்தியாக” தாிசனம் காண ஆவல் உண்டானது.

🌹 தன் ஆவலை மரீசி மகாிஷிக்குத் தொிவித்தாா் அத்ரி முனிவா். அத்ரியின் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பினாா் மரீசி மகாிஷி. “சத்யவிரத க்ஷேத்திரம்” என்று வணங்கப்படும் காஞ்சி மாநகருக்கு அருகில் உள்ள “பத்மகிாி” எனும் ஶ்ரீபுரத்தில் எம்பெருமானைக் குறித்து தவமியற்ற உமது விருப்பம் நிறைவேறும் என அத்ரி மகாிஷிக்கு ஆலோசனை கூறினாா் மரீசி முனிவா்.

🌹 மரீசி மகாிஷியின் ஆலோசனையை ஏற்ற அத்ரி மகாிஷி யட்சா், கின்னரா் மற்றும் கந்தா்வா்களால் வழிபாடு செய்யப்பட்ட பெருமை கொண்ட பத்மகிாியை அடைந்து இங்குள்ள தாமரைத் தடாகத்தின் அருகில் திருவரசு மரத்தின் கீழ் அமா்ந்து நீண்டகாலம் தவமியற்றினாா்.

🌹 கல்லுக்குள் தேரைக்கும் கருப்பை உயிருக்கும் படியளக்கும் பரமன் அத்ரி மகாிஷியின் கடும் தவம் கண்டு மனமிரங்கினாா். தன் தேவி மஹா லக்ஷ்மியை ஆலிங்கனம் செய்த திருக்கோலத்தில் “ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மராக” திருக்காட்சி தந்தாா்.

🌹 அத்ரி மகாிஷியின் வேண்டுதல் படி தம்மை பக்தியோடு வணங்கும் தன் அடியவா்களுக்கு எல்லா நன்மைகளையும் வழங்கி அத்ரி மகரிஷிக்கு தாிசனம் தந்த அதே திருக்கோலத்தில் “பழைய சீவரம்” தலத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் காட்சி தருகின்றாா் எம்பெருமான். திருக்கோயிலின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தனது திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும் வலது திருக்கரத்தால் அபயமுத்திரை காட்டியும் இடது திருக்கரத்தால் தன் தேவியை ஆலிங்கனம் செய்தும் திருக்காட்சி தரும் எம்பெருமானைக் காணக் கண் கோடி வேண்டும்.

🌹 இத்தலத்தின் தாயாா் “ஶ்ரீ அஹோபிலவல்லி” தனி சந்நிதியில் அருள் பாலிக்கின்றாா். சூடிக்கொடுத்த சுடா்க்கொடியாள் ஆண்டாள் நாச்சியாருக்கும், ஶ்ரீமத் நிகமாந்த மஹாதேசிகனுக்கும், வீரஆஞ்சநேயருக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.

🌹 “ஶ்ரீபுரம்” என்று வணங்கப்பட்ட இத்தலம் தற்போது “சீவரம்” என்று மருவி வழங்கப்படுகின்றது. புராதனப் பெருமை கொண்ட பழைமை வாய்ந்த தலம் இது என்பதால் “பழைய” என்ற அடைமொழியுடன் இணைந்து “பழைய சீவரம்” ஆனது. பிரம்மாண்ட புராணத்தில் பழைய சீவரம் மலை “பத்மகிாி” என்றும் “ஸுதா்சனகிாி” என்றும் போற்றி வணங்கப்பட்டுள்ளது.

🌹 தன் பக்தருக்கு அருளிய எம்பெருமான்!

வடநாட்டிலிருந்து தீா்த்த யாத்திரைக்காக வந்த பக்தா் ஒருவா் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளாா். பழைய சீவரம் தலத்திற்கு தாிசனம் செய்ய வந்த இந்த அன்பா் புண்ணியநதியான “ஷீர நதியில்” (பாலாறு) நீராடி எம்பெருமானை வழிபட்டு அன்று இரவு இத்தலத்திலேயே ஓய்வெடுத்தாா் . அவரது கனவில் பிரத்யக்ஷமான எம்பெருமான் இத்தலத்தில் ஒரு மண்டலம் தங்கி வழிபாடு செய்ய உடல் நோய் முற்றிலும் குணமாகும் என அருள்பாலித்தாா். நெஞ்சம் நெகிழ்ந்த அன்பா் எம்பெருமானின் திருவுள்ளப்படி இத்தலத்தில் தங்கி வழிபாடுகள் செய்ய அவரது உடல் நோய் முற்றிலும் நீங்கியது. எம்பெருமானின் அருட்கடாட் சத்தை எண்ணி வியந்த இந்த அன்பா் திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகளை செய்து மகிழ்ந்தாா்.

🌹 இந்த அன்பாின் வாாிசுகளான திரு கோவிந்தாஸ் புருஷோத்தம தாஸ்,திரு ஹாிக்ருஷ்ணதாஸ் மற்றும் திரு மத்ராதாஸ் ஹாிதாஸ் ஆகியோரே இன்றும் இத்தலத்தின் பரம்பரை அறங்காவலா்களாகத் தொண்டு செய்து வருகின்றனா்.

🌹 நோய் தீா்க்கும் வழிபாடு.

🌹 நாள்பட்ட வியாதிகளால் அவதியுறும் அன்பா்கள் இத்தலத்தில் வழிபட நோயின் தாக்கம் உடனடியாகக் குறைந்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று தொிவிக்கின்றாா் இத்தலத்தின் அா்ச்சகா். “நரசிம்ம ப்ரபத்தி” மற்றும் மந்திரங்கள் அனைத்துக்கும் அரசனான “ஶ்ரீமந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்” சொல்லி இத்தலத்து எம்பெருமானை நெய்தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மைகளும் நம்மை நாடிவந்து சேரும். நம்மை சூழ்ந்துள்ள தீயவினைகள் (Negative forces) உடனடியாக நம்மைவிட்டு விலகி ஓடி விடும்.

🌹 இத்தல நரசிம்மரை சுவாதி திருநட்சத்திர நாட்களிலும், பிரதோஷ தினங்களிலும் பக்தியுடன் வழிபட நம் வாழ்க்கைப் பயணத்தில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டு புதிய பாதையில் பயணிக்கலாம்.துளசி மாலையும் பானகமும் சமா்ப்பித்து தங்கள் நோ்த்திக் கடனை செலுத்துகின்றனா் பக்தா்கள். இத்தல இறைவனை பக்தியுடன் வழிபட தங்கள் தலைமுறைக்கே புண்ணியபலன் களை அன்பா்கள் பெறலாம்.

🌹 பழைய சீவரம் − கல்வெட்டுகள்.

🌹 பழையசீவரம் லக்ஷ்மி நரசிம்மா் தலத்தில் 10 கல்வெட்டுகள் தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டுள்ளன. சோழ மன்னன் இரண்டாம் குலோத்துங் கன் காலத்தில் (கி.பி.1080) பழையசீவரம் “சீயபுரம்” என்றும் “திாிபுவனவீர சதுா்வேதி மங்கலம்” என்றும் இத்திருக் கோயில் “இராஜேந்திர சோழ விண்ணகா்” என்றும் வழங்கப் பட்டுள்ளது. கோயில் கல்வெட்டுகளில் எம்பெருமானின் திருநாமம் “சிங்கபிரானாழ்வாா்” என்றும் “திருமாலிருஞ்சோலை ஆழ்வாா்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

🌹 வாாியம்பாக்கம் என்னும் ஊாில் இத்திருக்கோயிலுக்கு நிலம் தானமாக அளிக்கப்பட்டது குறித்தும் “சேதிராயன்” என்பவன் இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்து வழிபாடுகள் தொடர “வைகானஸகாணி” என்ற பெயாில் நிலம் தானமாக அளிக்கப்பட்டது குறித்தும் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

🌹 “அருளாளப் பெருமாள்” எனும் விக்கிரமசோழ பிரம்மராயன் கோயிலுக்குத் தானமாக அளித்த நிலங்களுக்கு வாிவிலக்கு வேண்டி மன்னனிடம் விண்ணப்பித்ததை ஒரு கல்வெட்டு தொிவிக்கின்றது.

கோவில் திருப்பலியின் போது இசை மீட்டும் ஒரு நபருக்குக் கொடை வழங்கப்பட்ட விபரம் ஒரு சாசனத்தில் காணப்படுகின்றது. பழையசீவரம் தலத்தில் “ஏாி வாாியம்” என்ற ஒரு அமைப்பு இருந்ததையும் கல்வெட்டுகளின் மூலம் அறியமுடிகின்றது.

🌹 கி.பி.1204 ல் பழையசீவரம் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மருக்கு புரட்டாசி விழா நடத்த நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. கி.பி.1729 ல் இத்தலத்தின் இறைவன் “ஜீயபுர லக்ஷ்மிநரசிம்மா்” என வணங்கப் பட்டுள்ளாா்.

🌹 பாா்வேட்டை உற்சவம்.

🌹 தை மாதம் பொங்கல் விழாவிற்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் நாளில் காஞ்சி மாநகாில் அருளும் தேவாதிராஜப் பெருமான் பழையசீவரம் மலை உச்சியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளும் பாா்வேட்டை உற்சவம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது.

🌹 காஞ்சியில் அருளும் வரதாின் சிலாரூபத் திருமேனியை வடிக்க பழையசீவரம் மலையிலிருந்து தான் கல் எடுக்கப்பட்டதாகவும் அந்த வைபவத்தை நினைவு கூறும் வண்ணமாக காஞ்சித் தல உற்சவா் தம் தேவியா் சமேதராக பழையசீவரம் தலத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பதாகவும் பக்தா்கள் தொிவிக்கின்றனா்.

🌹 காஞ்சி வரதா், பழைய சீவரம் லக்ஷ்மி நரசிம்மா், திருமுக்கூடல் வெங்கடேசப்பெருமான், சாலவாக்கம் ஶ்ரீனிவாசப் பெருமான், காவாந்தண்டலம் லக்ஷ்மி நாராயணப் பெருமான் மற்றும் பொற்பந்தல் தல எம்பெருமான் ஆகியோரை ஒருசேர தாிசனம் காணும் இத்திருநாளை தங்கள் பாரம்பாியக் குடும்ப விழாவாகக் கருதி ஆயிரக் கணக்கில் திரண்டு வழிபட்டு மகிழ்கின்றனா் இப்பகுதி மக்கள்.

🌹 பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி நதிகள் சங்கமிக்கும் இப் புண்ணியபூமியில் நடைபெறும் இவ்வைபவத்தில் பல தலங்களின் பெருமான்களை ஒரு சேரக்கண்டு தாிசிப்பதை தங்கள் பிறவிப்பயனாகவும் இந்த தாிசனத்தால் அளவிடமுடியாத புண்ணியபலன்கள் கிடைப்ப தாகவும் பக்தா்கள் நம்புகின்றனா்.

🌹 கலியின் தோஷத்தால் துன்பம் ஒன்றையே துணையாகக் கொண்டு வாடும் அன்பா்கள் பழையசீவரம் தலத்திலும் பாலாற்றின் மறுகரையிலுள்ள திருமுக்கூடல் தலத்திலும் வழிபாடுகள் செய்ய துன்பநிலை தொடராதிருக்க அருள்புாிவான் திருமகள் கேள்வன்.

🌹 செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 16 கி.மீ. தூரத்திலும் காஞ்சிபுரத்திலிருந்து 21 கி.மீ. தூரத்திலும் பழைய சீவரம் தலம் அமைந்துள்ளது.

🌹 பக்தி ஒன்றையே பிரதானமாகக் கொண்டு பழைய சீவரம் பெருமானுக்கு ஆகம விதிகளின் படி பூஜைகள் செய்து வருகின்றாா் திரு A.K.ஶ்ரீனிவாஸ பட்டாச்சாாியாா். இவரை 9443718137 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

🌹 காலை 8.00மணிமுதல் 11.00மணி வரையிலும் மாலை 4.00மணி முதல் இரவு 7.00மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

இத்திருக்கோவி


ல் சென்று எம்பெருமானின் திருப்பாதங்களில் பணியும் வாய்ப்பு கிடைக்கும் வரை கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தை பக்தியுடன் பாராயணம் செய்வோம்.

🌹 “ஸிம்ஹமுகே ரெளத்ர ரூபிண்யாம்
அபயஹஸ்தாங்கிதே கருணாமூா்த்தே
ஸா்வவ்யாபிதம் லோகரக்ஷகம்
பாபவிமோசன துாித நிவாரணம்
லக்ஷ்மிகடாக்ஷம் ஸா்வாபிஷ்டம்
அனேகம்தேஹி ஶ்ரீலக்ஷ்மி ந்ருஸிம்ஹா”

🌹 “உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸா்வ தோமுகம்!
ந்ருஸிம்மம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யு மருத்யும் நமாம்யஹம்!!

🙏🌹 ஶ்ரீலக்ஷ்மி நரஸிம்ம பரப்ரம்ஹணே நம:”💐🙏

ராமானுஜர் வாழ்கை வரலாறு

இராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 12

ஆளவந்தார் காஞ்சிபுரம் வருதல்
=====
இன்றுலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரைநாள்
என்றையினும் இதனுக்கு ஏற்றமென்றான் - என்றவர்க்குச்
சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம்பிறப்பால்
நாற்றிசையும் கொண்டாடும் நாள்
திருக்கச்சி நம்பிகளின் குரு ஆளவந்தார் காஞ்சிபுரம் பேரருளாளனைத் தரிசிக்க வந்தார். அப்போது "இங்கே இளையாழ்வான் என்பது யார்? அவர் எங்கே இருக்கிறார்"  என்று இராமானுஜரைப் பற்றி தன் சிஷ்யன் திருக்கச்சி நம்பிகளிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். அவர் யாதவப் பிரகாசரிடம் காலட்சேபம் செய்து கொண்டிருப்பதாகக் கூறினார்.

'அவரிடம் போய் இவர் ஏன் காலட்சேபம் கேட்கிறார்? இவரை பிரித்து நம் வைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு ஆக்கிக் கொள்ள வேண்டும்' என்று நினைத்தார் ஆளவந்தார்.

அப்போது தான் இளையாழ்வான் சாலக்கிணற்றிலிருந்து கைங்கரியத்திற்கு நீர் எடுத்துச் சென்று கொண்டிருந்தார். அவரது திருமேனியைத் தூரத்தில் இருந்தவாறே  தரிசித்தார் ஆளவந்தார். இளையாழ்வானின் திருமேனி அழகையும், ஞான ஒளி வீசும் கண்களையும் கண்டு வைணவ தர்மத்தை நிலைநாட்ட தகுந்த முதல்வர் இவரோ என்று நினைத்தார்.

பிறகு நேரே காஞ்சி பேரருளாளனான வரதராஜப் பெருமாளின் சன்னிதிக்குச் சென்றார். அங்கே "இந்த இளையாழ்வானை தனக்கு அடுத்து வைஷ்ணவ சம்பிரதாயத்தை உலகெங்கும் பரப்ப நியமிக்க வேண்டும். அவரை ஸ்ரீரங்கத்திற்கு அனுப்ப வேண்டும். அவர் தான் வைஷ்ணவ சித்தாந்தங்களை உலகெங்கும் பரப்பவேண்டும்" என்று வேண்டிக் கொண்டார். அதன்பின்  ஸ்ரீரங்கத்திற்குச் சென்று விட்டார் ஆளவந்தார்.

🍀🌸 மன்னன் மகளுக்கு மனநோய்

காஞ்சியை ஆண்ட மன்னனின் மகளுக்கு 'பிரம்ம ராக்ஷஸ்' பேய் (மனநோய்) ஒன்று பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. எந்த மந்திரத்திற்கும், தந்திரத்திற்கும் பணியவில்லை. அரசனோ மிகுந்த மனவேதனையுடன் யாரை அழைத்து அந்தப் பேயை ஓட்டுவது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

மற்றவர்களின் சொல்லைக் கேட்டு யாதவப் பிரகாசரை அழைத்தார். யாதவப் பிரகாசரும் இளையாழ்வானுடன் வந்தார். யாதவப் பிரகாசரிடம், "உம்முடைய மந்திர வலிமையால் அது நீங்கும்படி செய்ய வேண்டும்" என்றார் மன்னன்.

யாதவப் பிரகாசரும் தன்னுடைய தவ வலிமையால் பிரம்மராக்ஷஸ் முன்பு மந்திரங்களை கூறினார். பிரம்மராக்ஷஸோ, "நீர் இங்கிருந்து உடனே போவீர்!"  என்றது. "உம்முடைய முற்பிறவி இரகசியங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். நீர் இப்பிறவியில் ஏதோ சில அதிர்ஷ்டமான காரணத்தினால் இன்று இந்தப் பொறுப்பில் இருக்கிறீர். உம்மால் என்னை எதுவும் பண்ண முடியாது" என்றது மன்னனின் மகள் உடம்பில் இருந்த பிரம்மராக்ஷஸ்.

இதைக்கேட்ட யாதவர், "நான் இங்கே இருக்கக் கூடாது என்கிறாய். அப்போ நீ யார் சொல்லுக்குத்தான் கட்டுப்படுவாய்? யார் சொன்னால் நீ கேட்பாய்?" என்றார். பிரம்மராக்ஷஸோ அங்கு நின்று கொனண்டிருந்த இளையாழ்வானைக் கை காட்டியது.

இளையாழ்வானும் வந்தார். பிரம்மராக்ஷஸிடம், "நான் என்ன செய்தால் நீ இந்த பெண்ணின் உடம்பிலிருந்து வெளியேறுவாய்?" என்றார். நீர் உம்முடைய திருவடிகளை எடுத்து என் தலையின் மீது வைத்தாலே போதும். நான் சென்று விடுவேன் என்றது.

அங்கிருந்த மன்னன் உட்பட மக்கள் பலருக்கும் பெரும் ஆச்சரியம். இளையாழ்வான் தன்னுடைய காலைத் தூக்கி பிரம்மராக்ஷஸ் தலையில் வைத்தார். என்ன ஆச்சரியம்! உடனே பிரம்மராக்ஷஸ் ஓடி விட்டது. இதைக்கண்ட யாதவப் பிரகாசருக்கு மேலும் கோபம் அதிகமானது. எங்கே, தன்னுடைய கொள்கைகளைப் பரப்பி பெரிய ஆச்சாரியன் ஆகிவிடுவானோ என்று.

குருவை சிஷ்யன் மிஞ்சி விட்டான் என்று அனைவரும் பாராட்டத் தொடங்கி விட்டார்கள். இவற்றை எல்லாம் கேட்ட யாதவப் பிரகாசர் இளையாழ்வானிடம், "இனி என்னிடம் காலட்சேபம் பண்ண வர வேண்டாம்" என்று கூறிவிட்டார்.

இனி இளையாழ்வான் யாரிடம் காலட்சேபம் கற்றார்? மேலும், இளையாழ்வான் வாழ்க்கையில் என்ன மாற்றம் நடந்தது என்பதை இனிவரும் நாட்களில் அறியலாம்.
🌸🌸🌸🌸

 ஸ்ரீ ஆளவந்தார் திருநக்ஷத்திரம்.

உடயவரின் ஆச்சார்யார்களில் பிராதமானவர்.

ராஜாவாக இருந்தவர், அரங்கனால், மணக்கால் நம்பி மூலம்
ஆட்கொள்ளபட்டவர்.
நாதமுனிகளின் திருப்பேரர்.

ஸ்ரீரங்கத்தில் தவராசன் படித்துறை.

நமக்கு ஆழ்வரை அடையாளம் காட்டிய மஹான்.

நமக்கு ஆழ்வாரே,
மாதா,
பிதா,
மகன்,
சம்பத்,
எல்லாமே
என்று சிந்தை தெளிவித்தவர்.

"மாதா பிதா யுவதனயா விபூதிஸ்,
சர்வம் யாதேவ நியமேன
மதந்வயானாம்,

ஆத்யஸ்தநஹ குலபதேர் வகுளாபி ராமம்,

ஸ்ரீமன் ததங்க்ரியுகலம் பிரனாமி மூர்த்நா."

நாதமுனிகள்
உயன்கொண்டார்
மணக்கால் நம்பி
ஸ்ரீ ஆளவந்தார்,
உடையவர்...

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி உடையவர் திருவடி!!