புதன், 11 செப்டம்பர், 2019

*வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்*

*குருவிந்த மணி-ச்ரேணீ-கநத்-கோடீர-மண்டிதா*

“குருவிந்த மணி-ச்ரேணீ-கநத்-கோடீர-மண்டிதா” என்று லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பாளை ரத்னமயமாக ப்ரகாசிக்கிற கிரீடம் அணிந்தவள் (“பத்மராக மணிகள் வரிசையாக பதிக்கப்பெற்று ஒளி வீசும் அழகிய கிரீடம் அணிந்தவள்”) என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறது.  ‘கோடீரம்’ என்றால்கிரீடம்.

ஸேவிக்கிறவர்களின் கிரீடங்களையெல்லாம் இடறிக்கொண்டு, ஸேவிக்காதவனை ஸேவிப்பதற்காக அம்பாள் ஓடுகிறாள் என்றுகூட ஸௌந்தர்ய லஹரியில் ஒரு ஸ்லோகம் இருக்கிறது. தேவ ச்ரேஷ்டர்களெல்லாம் அவளுடைய சரணத்திலே தங்களுடைய கிரீடங்களைச் சாய்த்து நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்களாம். அப்போது ஈச்வரன் எங்கேயோ போய்விட்டுத் திரும்பிவருகிறாராம்.

அவர் எங்கேயோ தூரத்தில் வருகிறதைப் பார்த்தவுடனேயே அம்பாளுக்குப் பதிபக்தி, ப்ரேமை இரண்டும் பொங்கிக் கொண்டு வருகிறதாம். அவரை எதிர்கொண்டழைக்கணும் என்று தான் ஆஸனத்தைவிட்டு எழுந்து ஓடுகிறாளாம். அப்போது அவளுடைய சேடிகள், பார்த்துப் போகும்படி அவளை எச்சரிப்பதாக ச்லோகம் பண்ணியிருக்கிறார்.

“கிரீடம் வைரிஞ்சம் பரிஹர” – “ப்ரம்மாவோட கிரீடத்திலிருந்து விலகிப் போங்கோ”. [இது அம்பிகையின் காலடியில் பணியும் பிரம்மாவின் கிரீடத்தில் அவள் தடுக்கிக் கொள்ளாமலிருப்பதற்காக அவளது சேடியர் செய்யும் எச்சரிக்கை.]

அப்புறம், “கைடபபித: கடோரே கோடீரே ஸ்கலஸி” – “கைடபாஸுரனைப் பிளந்து தள்ளினவர் இருக்கிறாரே – அதுதான் விஷ்ணு – அவருடைய கெட்டியான கிரீடத்தில் தடுக்கிண்டுடப் போறேள் ! பார்த்து போங்கோ!”

கடோரமான கிரீடம் என்றால் கெட்டியான கிரீடம். ‘போல்’ (காலி/ வெற்று) இல்லை; அப்படியே ‘ஸாலி’டாக (Solid) இருக்கும் கிரீடம். ஏன் என்றால், அதற்கு விடை ஆசார்யாளின் ‘விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்ர’த்தில் இருக்கிறது.

க்ருத-மகுட-மஹாதேவ-லிங்க-ப்ரதிஷ்டே என்று அங்கே சொல்கிறார்.

சிவலிங்க ரூபமாகவேயுள்ள கிரீடத்தை விஷ்ணு வைத்துக் கொண்டிருக்கிறாராம்! சிவலிங்கமென்றால் “போலா”யில்லாமல் ‘ஸாலி’டாகத்தானே  இருக்கணும்?

வேடிக்கை என்னவென்றால், அம்பாள் பக்தியிலே, அந்த லிங்கத்திற்குஅபசாரமாச்சே என்பதைக்கூட மஹாவிஷ்ணு நினைத்துப் பார்க்காமல் கிரீடத்தை அவளுடைய பாத பீடத்தில் சாய்த்திருக்கிறார்!

அம்பாளும் பதியிடம் பரமபக்தியில் ரிஸீவ் (receive) பண்ண ஓடும்போது அந்த லிங்கத்தைக் காலால் இடறப் பார்க்கிறாள்!

பக்தியும் ப்ரேமையும் ஒரேயடியாக மேலிடும் போது – கண்ணப்பர் சிவலிங்கத்தின் நேத்ர ஸ்தானத்திலேயே செருப்புக் காலை ஊன்றிக் கொண்ட மாதிரி – எந்த அபசாரமும் அபசாரமாவதில்லை!
பெரியவா சரணம்!
பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் மூல நூல்களில் இருந்ததற்கான ஆதாரங்கள்.

1. ருத்ர முஹுர்த்தம்---------------06.00AM – 06.48AM
2. ஆஹி முஹுர்த்தம்--------- 06.48am –07.36am
3. மித்ர முஹுர்த்தம்------------------- 07.36am – 08.24am
4. பித்ரு முஹுர்த்தம்----------------- 08.24am – 09.12am
5. வசு முஹுர்த்தம்-------------------- 09.12am – 10.00am
6. வராஹ முஹுர்த்தம்------------- 10.00am – 10.48am
7.விச்வேதேவாமுஹுர்த்தம்---- 10.48am – 11.36am
8.விதி முஹுர்த்தம்------------------- 11.36am – 12.24pm
9. சுதாமுகீ முஹுர்த்தம்------------ 12.24pm – 01.12pm
10. புருஹூத முஹுர்த்தம்---------- 01.12pm – 02.00pm
11. வாஹிநீ முஹுர்த்தம்------------ 02.00pm – 02.48pm
12.நக்தனகரா முஹுர்த்தம்------ 02.48pm – 03.36pm
13. வருண முஹுர்த்தம்-------------- 03.36pm – 04.24pm
14. அர்யமன் முஹுர்த்தம்---------- 04.24pm – 05.12pm
15.பக முஹுர்த்தம்--------------------- 05.12pm – 06.00pm
16. கிரீச முஹுர்த்தம்----------------- 06.00pm – 06.48pm
17. அஜபாத முஹுர்த்தம்------------ 06.48pm – 07.36pm
18.அஹிர்புத்ன்ய முஹுர்த்தம் 07.36pm – 08.24pm
19.புஷ்ய முஹுர்த்தம்-------------- 08.24pm – 09.12pm
20.அச்விநீ முஹுர்த்தம்------------ 09.12pm – 10.00pm
21.யம முஹுர்த்தம்------------------ 10.00pm – 10.48pm
22.அக்னி முஹுர்த்தம்------------- 10.48pm – 11.36pm
23.விதாத்ரு முஹுர்த்தம்-------- 11.36pm – 12.24am
24.கண்ட முஹுர்த்தம்------------- 12.24am – 01.12am
25.அதிதி முஹுர்த்தம்-------------- 01.12am – 02.00am
26.ஜீவ/அம்ருத முஹுர்த்தம்--- 02.00am – 02.48am
27.விஷ்ணு முஹுர்த்தம்------------ 02.48am – 03.36am
28.த்யுமத்கத்யுதி முஹுர்த்தம்-- 03.36am – 04.24am
29.பிரம்ம முஹுர்த்தம்--------------- 04.24am – 05.12am
30.சமுத்ரம் முஹுர்த்தம்------------ 05.12am – 06.00am

பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சிலாகித்துச் சொல்லப்பட்டுள்ளது.
🌀 விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் 🌀

கணபதியின் 32 திரு உருவங்களும் அதற்குரிய ஸ்லோகங்களும்!

  1. பால கணபதி

கரஸ்த கதலீ சூத பநஸேக்ஷூக மோதகம்
பால ஸூர்ய ப்ரபாகாரம் வந்தேஹம் பாலகணபதிம்

தனது துதிக்கையோடு சேர்ந்த ஐந்து கரங்களில்,முறையே, மா, வாழை, கரும்பு, பலா, மோதகம் ஆகியவற்றைத் தாங்கியவரும், இளஞ்சூர்ய நிறத் திருமேனியை உடையவருமான, பால கணபதியை வந்தனம் செய்கிறேன்.

 2.  பக்த கணபதி

நாளிகேராம்ர கதலீ குளபாயஸ தாரிணம்
ஸரச்சந்த்ராப வபுஷம் பஜே பக்த கணாதிபம்  

தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், வெல்லத்தாலான பாயஸம் நிறைந்த கலசம் ஆகியவற்றைத் தாங்கியவரும், குளிர் காலத்தில் மிக வெண்மையாக ஒளிரும் நிலவை விஞ்சும் வெண்ணிறத் திருமேனியை உடையவருமான  பக்த கணபதியைத் துதிக்கிறேன்.

3.  ஸக்தி கணபதி

ஆலிங்க்ய தேவீம் ஹரிதாம் நிஷண்ணம் பரஸ்பராஸ்லிஷ்ட கடெளநிவேஸ்ய
ஸந்த்யாருணம் பாஸஸ்ருணிம் வஹந்தம் பயாபஹம் ஸக்தி கணேஸமீடே

பச்சை நிறத்தவளான தேவியைப் பரஸ்பரம் ஆலிங்கனம் செய்த திருக்கோலத்துடன், மாலை நேரச் சூரியனின் இளமஞ்சள் நிறத் திருமேனியை உடையவரும், திருக்கரங்களில் பாசம், அங்குசம் ஆகியவற்றைத் தாங்கியவரும், (பக்தர்களின்) அச்சத்தைப் போக்குபவருமான ஸக்தி கணபதியை வணங்குகிறேன்.

4.  ஸித்தி கணபதி

பக்வ சூத பலகல்ப மஞ்ஜரீ மிக்ஷூ தண்ட திலமோதகைஸ்ஸஹ
உத்வஹத் பரஸூஹஸ்த தே நம: ஸ்ரீ ஸம்ருத்தியுத தேவ பிங்கல

மாம்பழம், மலர்க்கொத்து, கரும்புத் துண்டு, எள்-கொழுக்கட்டை, பரசு ஆகியவற்றைக் கரங்களில் தாங்கிய, பசும்பொன் நிறத் திருமேனியை உடைய ஸ்ரீ ஸம்ருத்தி என்ற தேவியுடன் வீற்றிருக்கும் ஸித்தி கணபதியைத் துதிக்கிறேன்.

5.  உச்சிஷ்ட கணபதி

நீலாப்ஜம் தாடிமீ வீணா ஸாலீ குஞ்ஜாக்ஷ ஸூத்ரகம்
தததுச்சிஷ்ட நாமாயம் கணேஷ: பாது மோக்ஷத:

சதுர்புஜம் ரக்ததநும் த்ரிநேத்ரம் பாஸாங்குசம் மோதகபாத்ர தந்தகம்
கரை: ததாநம் ஸரஸீருஹஸ்தம் உந்மத்த-முச்சிஷ்ட கணேசமீடே

நீலோற்பலம், மாதுளை, வீணை, நெற்கதிர், ருத்ராக்ஷமாலை இவற்றைத் தரித்தவரும், முத்தியளித்துக் காப்பவருமான உச்சிஷ்ட கணபதியின் பாதம் பணிகிறேன்.

நான்கு  கரங்களை உடையவராகவும், அவற்றில் பாசம், அங்குசம், மோதக பாத்ரம், தந்தம் இவற்றைத் தரித்திருப்பவராகவும், செந்நிறமானத் திருமேனியும், முக்கண்ணும் உடையவராகவும், செந்தாமரைப் பூவிலே எழுந்தருளி இருப்பவராகவும், உந்மத்தராகவும் உள்ள உச்சிஷ்ட கணபதியை த்யானிக்கிறேன்.

6. க்ஷிப்ர கணபதி:

தந்த கல்ப லதாபாஸ ரத்நகும்பாங்க குஸோஜ்வலம்
பந்தூக கமநீயாபம் த்யாயேத் க்ஷிப்ரகணாதிபம்

தந்தம், கற்பகக் கொடி,  பாசம், துதிக்கையில் இரத்தினத்தால் இழைத்த பொற்குடம், அங்குசம் இவற்றுடன், செம்பருத்தி மலர் நிறத்தில் பிரகாசமான திருமேனியை உடைய க்ஷிப்ரகணபதியைத் தியானிக்கிறேன்.

7.விக்ந ராஜ (விஜய) கணபதி

பாஸாங்குஸஸ்வதந் தாம்ர பலவாநாகுவாஹந:
விக்நம் நிஹந்து நஸ்ஸர்வம் ரக்தவர்ணோ விநாயக:

பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றுடன், மூஷிக வாகனத்தில் அமர்ந்து எல்லா இடர்களையும் களைபவராய் எழுந்தருளும், செவ்வண்ண மேனியராம் விஜய கணபதியைத் துதிக்கிறேன்.

8.ஸ்ருஷ்டி கணபதி

பாஸாங்குஸஸ்வதந் தாம்ர பலவாநாகுவாஹந:
விக்நம் நிஹந்து நஸ்ஸோண: ஸ்ருஷ்டிதக்ஷோ விநாயக:

பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றுடன், மூஷிகத்தை வாகனமாக உடையவரும்,  , அனைத்து தடைகளையும் நீக்குபவருமான‌ஸ்ருஷ்டி கணபதியைத் தியானிக்கிறேன்.

9.ருணமோசந கணபதி:

பாஸாங்குஸௌ  தந்த ஜம்பூ ததாந ஸ்படிகப்ரப:
ரக்தாம்ஸூகோ கணபதிர் முதேஸ்யாத் ருணமோசக:
ஸிந்தூரவர்ணம் த்விபுஜம் கணேஸம் லம்போதரம் பத்மதலே நிவிஷ்டம்
ப்ரஹ்மாதி தேவை: பரிஸேவ்யமாநம் ஸித்தைர்யுதம்தம் ப்ரணமாமி தேவம்

பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் ஆகியவை தாங்கியவரும் வினைகளகற்றுபவரும் ஸ்படிக நிறத் திருமேனியில் ரக்த வண்ண ஆடை தரித்தவருமான  ருணமோசன கணபதியைத் துதிக்கிறேன். செந்நிறம், இரண்டு கரங்கள், பெரிய  திருவயிறு, ஆகியவற்றை உடையவரும்,  பத்மாஸநத்தில் அமர்ந்து, ப்ரஹ்மாதி தேவர்களால் ஸேவிக்கப் பெறுபவரும், சித்தர்களால் சூழப்பட்டவருமான தேவனை (விநாயகரை) நமஸ்கரிக்கின்றேன்.

10.டுண்டி கணபதி

அக்ஷமாலாம் குடாரஞ்ச ரத்நபாத்ரம் ஸ்வதந்தகம்
தத்தேகரைர் விக்நராஜோ டுண்டிநாம முதேஸ்துந:

ருத்ராக்ஷமாலை, கோடரி, ரத்தின பாத்திரம், தந்தம் ஆகியவை தாங்கியவரும் தடைகளகற்றுபவருமான டுண்டி விநாயகரைத் துதிக்கிறேன்.

11.த்விமுக கணபதி

ஸ்வதந்த பாஸாங்குச ரக்ந பாத்ரம் கரைர் ததாநோ ஹரி நீல காத்ர:
ரக்தாம்ஸூகோ ரத்ந கிரீட மாலீ பூத்யை ஸதாமே த்விமுகோ கணேஸ:

தந்தம், பாசம், அங்குசம், ரத்தின பாத்திரம் தாங்கியவரும் ஹரியைப் போல்  நீல‌நிறத் திருமேனியுடன் கூடியவரும்  செந்நிற ஆடை; ரத்ன கிரீடம் தரித்தவரும் ஆன‌த்விமுக கணபதியைத் எந்நேரமும் துதிக்கிறேன்.

12.யோக கணபதி

யோகாரூடோ யோகபட்டாபிராமோ பாலார்காபஸ்சேந்த்ர நீலாம்ஸூகாட்ய
பாஸேக்ஷ் வக்ஷாந் யோக தண்டம் ததாநோ பாயாந்நித்யம் யோக விக்நேஸ்வரோந:

யோகாசனத்தில் யோகபட்டம் தரித்த திருக்கோலத்தில் அழகு மிகுந்த தோற்றத்தில், இளஞ்சூர்யனைப் போன்ற திருமேனியுடன் நீல நிற ஆடை அணிந்து, பாசம், கரும்பு, அக்ஷமாலை, யோகதண்டம் தரித்து, அனுதினமும் அருள் பாலிக்கும் யோக விக்நேச்வரரைத் துதிக்கின்றேன்.

13. ஏகதந்த கணபதி

லம்போதரம் ஸ்யாமதநும் கணேஸம் குடாரமக்ஷஸ்ரஜ மூர்த்வகாப்யாம்
ஸலட்டுகம் தந்தமத: கராப்யாம் வாமேதராப்யாம் ச ததாநமீடே

பெருவயிறுடன் கூடியவராக,; நீல நிற மேனியுடன் பரசு, அக்ஷமாலை, லட்டுகம், தந்தம் ஆகியவற்றைக் கரங்களில் தரித்த ஏகதந்த கணபதியைத் துதிக்கிறேன்.

14. ஹேரம்ப கணபதி

அபய வரத ஹஸ்த: பாஸ தந்தாக்ஷமாலா
ஸ்ருணி பரஸூ ததாநோ முத்கரம் மோதகம் ச
பலமதிகத ஸிம்ஹ: பஞ்ச மாதங்க வக்த்ரோ
கணபதி ரதிகௌர: பாது ஹேரம்ப நாமா

முன்னிரு திருக்கரங்களில், அபய வரத முத்திரைகளைத் தரித்தவரும், மற்ற கரங்களில், பாசம், தந்தம், அக்ஷமாலை, உலக்கை, கோடரி, மலர், மோதகம், பழம் ஆகியவற்றைத் தாங்கியவரும், சிம்மத்தை வாகனமாகக் கொண்டவரும், ஐந்து திருமுகங்களைக் கொண்டவரும்  ஹேரம்பர் என்ற திருநாமத்தை உடையவருமான ஹேரம்ப கணபதி நம்மைக் காக்க வேண்டும்.

15. ந்ருத்த கணபதி

பாஸாங்குஸாபூப குடாரதந்த சஞ்சத்கரா க்ல்ருப்த வராங்குலீயகம்
பீதப்ரபம் கல்பதரோரதஸ்தம் பஜாமி ந்ருத்தோப பதம் கணேஸம்
பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் தாங்கிய கரங்கள்: மோதிரம் போல் வளைந்த துதிக்கை, பொன்னிறத் திருமேனி ஆகியவற்றுடன் கூடி, கற்பக மரத்தடியில் நடமிடத் தூக்கிய திருப்பாதத்துடன் அருளும் நிருத்த கணபதியைத் துதிக்கிறேன்.

16. ஹரித்ரா கணபதி

ஹரித்ராபம் சதுர்பாஹூம் ஹரித்ரா வதநம் ப்ரபும்
பாஸாங்குஸ தரம் தேவம் மோதகம் தந்தமேவச
பக்தாபய ப்ரதாதாரம் வந்தே விக்ந விநாஸநம்

பாஸாங்குஸௌ மோதகமேகதந்தம் கரைர் ததாநம் கநகாஸநஸ்தம்
ஹாரித்ரகண்ட ப்ரதிமம் த்ரிநேத்ரம் பீதாம்ஸூகம் ஹரித்ரா கணேஸமீடே

மஞ்சள் நிறத் திருமுகத்துடன் ஐச்வர்யங்களுக்கு அதிபதியாக விளங்குபவரும், பாசம், அங்குசம், மோதகம், தந்தம் தாங்கிய மஞ்சள் ஒளி வீசும் நாற்கரங்களை உடையவரும்,  பக்தருக்கு அடைக்கலம் ஈந்து தடைகளை அகற்றுபவருமான  - ஹரித்ரா கணபதியைத் துதிக்கிறேன்.

பாசம், அங்குசம், மோதகம், தந்தம் ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவரும், பொன்மயமான ஆசனத்தை உடையவரும் மஞ்சள் நிறத் திருமேனியை உடைய முக்கண்ணரும் பொன்னிறத்தினாலான பீதாம்பரத்தை தரித்தவரும் ஆன‌ஹரித்ரா கணபதியை வணங்குகிறேன்.

17. தருண கணபதி

பாஸாங்குஸாபூப கபித்த ஜம்பூ
பலம்திலாந் வேணுமபி ஸ்வஹஸ்தை:
த்ருத: ஸதாயஸ் தருணாSருணாப:
பாயாத் ஸயுஷ்மாந் தருணோ கணேஸ:

பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவல் பழம், எள்ளுருண்டை, கரும்புத் துண்டு, முறித்த‌தந்தம் ஆகியவற்றைத் தாங்கிய எட்டுத் திருக்கரங்களும், இளங்கதிரவன் போன்ற செந்நிற மேனியும் கொண்ட தருண கணபதியைத் துதிக்கிறேன்.

18. வீர கணபதி

வேதாள ஸக்தி ஸரகார்முக சக்ர கட்க
கட்வாங்க முத்கர கதாங்குஸ நாகபாஸாந்
ஸூலஞ்ச குந்த பரஸூத்வஜ முத்வஹந்தம்
வீரம் கணேஸ மருணம் ஸததம் ஸ்மராமி

வேதாளம், வேல், வில், அம்பு, சக்ரம், வாள், கேடயம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகியவற்றைத் தாங்கிய பதினாறு திருக்கரங்களுடன்`அருளுபவரும், செந்நிறத்திருமேனியை உடையவருமான‌ வீர கணபதியை எந்நாளும் தொழுகிறேன்.

19. த்வஜ கணபதி

ய: புஸ்தகாக்ஷ குணதண்ட கமண்டலு ஸ்ரீர்
நிவ்ருத்யமாந கரபூஷண மிந்துவர்ணம்
ஸ்தம்பேரமாநந சதுஷ்டய ஸோபமாநம்
த்வாம் ஸம்ஸ்மரே த்வஜகணாதிபதே ஸ தந்ய:

புத்தகம், அக்கமாலை, தண்டம், கமண்டலம் ஆகியவை நான்கு திருக்கரங்களையும் ஆபரணங்களாக அலங்கரிக்க, சந்திரனின் வண்ணத்தில் (வெண்ணிறத்தில்) ஒளிரும் திருமேனியை உடைவரும், கம்பம் போல் திடமானதும், சோபிப்பதுமான நான்கு திருமுகங்கள் கொண்டவரும் ச்ரேஷ்டருமான, த்விஜ கணபதியைத் துதிப்பவர் புண்ணியம் செய்தவராவார்.

20. விக்ந (புவநேச) கணபதி

ஸங்கேக்ஷூசாப குஸூமேஷூ குடாரபாஸ
சக்ராங்குஸை: கலம மஞ்ஜரிகா ககாத்யை:
பாணிஸ்திதை: பரிஸமாஹித பூஷண ஸ்ரீ
விக்நேஸ்வரோ விஜயதே தபநீய கௌர:

சங்கு, கரும்பு வில், மலரம்பு, கோடரி, பாசம், சக்ரம், அங்குசம், பூங்கொத்து ஆகியவை தாங்கிய எண்கரங்களை உடையவரும், விரும்பத் தக்க அலங்காரங்கள் சூழ சோபையுடன் விளங்குகிறவரும், பொன்னிறத் திருமேனியை உடையவரும் ஆன  விக்ந விநாயகரைத் துதிக்கிறேன்.

21. ஊர்த்வ கணபதி

கல்ஹார ஸாலி கமலேக்ஷூக சாபபாண
தந்தப்ரரோஹககதீ கநகோஜ்வலாங்க:
ஆலிங்கநோத்யதகரோ ஹரிதாங்கயஷ்ட்யா
தேவ்யாதிஸத்வ மபய மூர்த்வ கணாதிபோமே

செங்கழுநீர்ப் புஷ்பம், நெற்கதிர்க் கொத்து, தாமரை மலர், கரும்பு வில், அம்பு; தந்தத்தில் தாங்கிய கதை முதலியவற்றைக் கரங்களில்  தரித்த‌, பொன் போல மின்னும் திருமேனியை உடையவரும்,  பச்சை நிற திருமேனியளான தேவியை ஆலிங்கனம் செய்தவாறு அருட்காட்சி  தருபவருமான‌ ஊர்த்வ கணபதியைத் துதிக்கிறேன்.

22. லக்ஷ்மீ கணபதி

பிப்ராணஸ் ஸூகபீஜபூர கமலம் மாணிக்ய கும்பாங் குஸாந்
பாஸங் கல்பலதாஞ்ச கட்க விலஸத் ஜ்யோதிஸ் ஸூதா நிர்ஜர:
ஸ்யாமேணாத்த ஸரோருஹேண ஸஹிதோ தேவீத்வயே நாந்திகே
கௌராங்கா வரதாந ஹஸ்த கமலோ லக்ஷ்மீ கணேஸோSவதாத்

தந்தாபயே சக்ரவரௌ ததாநம் கராக்ரகம் ஸ்வர்ணகடம் த்ரிநேத்ரம்
த்ருதாப்ஜ மாலிங்கிதமப்தி புத்ர்யா லக்ஷ்மீ கணேஸம் கநகாபமீடே

திருக்கரங்களில் இருக்கும், கிளி, செம்மாதுளம்பழம், தாமரை, மாணிக்கமயமான  கும்பம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி, வாள் ஆகியவை, ஜோதிப் பிரகாசம் போல் ஒளி வீச பிரகாசமான திருமுகத்துடன், நீல வண்ண ஆம்பல் மலரைத் தாங்கிய, வெண்ணிறத் திருமேனியை உடைய இரு தேவியரை இரு புறமும் அருகில் அமர்த்திக் கொண்டு, பொன்னிறத் திருமேனியை உடையவராக வரம் தரும் (வரத முத்திரை) கரத்துடன் விளங்கும் லக்ஷ்மீ கணபதியைத் துதிக்கிறேன்.

தந்தம், அபயம், வரதம், சக்ரம் ஆகியவை தாங்கிய  கரங்களுடையவரும்,  துதிக்கையில் பொற்கலசம் ஏந்தியவரும், மூன்று கண்களை உடையவரும்,, செந்தாமரை ஏந்திய லக்ஷ்மீயுடன் கூடியவருமான, பொன்னிற மேனியை உடைய லக்ஷ்மீ கணபதியை வணங்குகிறேன்.

23. மஹா கணபதி

ஹஸ்தீந்த்ராநநம் இந்துசூடம் அருணஸ் சாயம் த்ரிநேத்ரம் ரஸாத்
ஆஸ்லிஷ்டம் ப்ரியயா ஸ பத்மகரயா ஸ்வாங்கஸ்தயா ஸந்ததம்
பீஜாபூர கதேக்ஷூ கார்முக லஸச் சக்ராப்ஜ பாஸோத்பல
வ்ரீஹ்யக்ர ஸ்வவிஷாண ரக்நகலஸாந் ஹஸ்தைர் வஹந்தம் பஜே

சிறந்த யானை முகத்தை உடையவரும், பிறைச்சந்திரனை மணிமுடியில் தரித்தவரும், சிவந்த மேனியை உடையவரும், முக்கண்ணரும், தாமரையைக் கரத்தில் தாங்கிய அன்புக்குரிய தேவியை மடி மீதில் அமர்த்திக் கொண்டிருப்பவரும், மாதுளம்பழம், கதை, கரும்பு, வில், சக்கரம், தாமரை, பாசம், நீலோத்பலம், நெற்கதிர், தந்தம் முதலியவற்றைக் கரங்களில் தரித்தவரும், துதிக்கையில் ரத்ன கலசம் தாங்கியருளுபவருமான‌ மஹாகணபதியைத் துதிக்கிறேன்.

24. ஏகாக்ஷர கணபதி

ரக்தோ ரக்தாங்க ராகாம் ஸூக
குஸூமயுதஸ்தும் திலஸ் சந்த்ரமௌலி:
நேத்ரைர் யுக்தஸ்த்ரிபி: வாமநகர
சரணோ பீஜபூரம் ததாந:
ஹஸ்தாக்ரா க்ல்ருப்த பாஸாங்குஸ ரதவரதோ
நாகவக்த்ரோSஹி பூஷோ
தேவ:பத்மாஸநஸ்தோ பவது ஸூககரோ
பூதயே விக்நராஜ:

சிவந்த நிறப் பட்டாடை அணிந்து, சிவப்பு நிற மலர் மாலையுடன், செந்நிறத் திருமேனியும், பிறை அணிந்த் திருமுடியும் கூடியவராக,  முக்கண்களும், சிறிய அளவிலான (குள்ளமான) கரங்கள்-கால்கள் உடையவராக‌, மாதுளம்பழம், அங்குசம், பாசம், வரதம் கைகளில், யானை முகம், நாகம் ஆபரணம் ஆகியவற்றையும், ஐஸ்வர்யத்தின் அறிகுறியாகக் கிளியையும் கரங்களில் தாங்கியவராக, பத்மாசனத்தில் அமர்ந்து அருளும், ஏகாக்ஷர கணபதியாம் விக்னராஜனைத் துதிக்கிறேன்.

25. வர கணபதி

ஸிந்தூராபம் இபாநநம் த்ரிநயநம்
ஹஸ்தே ச பாஸங்குஸௌ
பிப்ராணம் மதுமத் கபாலம் அநிஸம்
ஸாத்விந்து மௌலிம் பஜே
புஷ்ட்யாஸ்லிஷ்டதநும் த்வஜாக்ர கரயா
பத்மோல்லஸத்தஸ்தயா
தத்யோந்யாஹித பாணிமாத்தவ வஸூமத்
பாத்ரோலஸத் புஷ்கரம்

செந்நிறத் திருமேனி, மூன்று கண்கள், பாசம், அங்குசம், தேன் கிண்ணம், கொடி உள்ள நான்கு கரங்கள், ஆகியவற்றுடன், சந்த்ரனைத் திருமுடியில் தரித்த வர கணபதியைத் துதிக்கிறேன். அவர் கொடியோடு கூடிய தாமரை உள்ள கரத்தால், தம் தேவியானவளைத்  தழுவி நிற்பவர். செல்வம் நிரம்பிய மின்னலென ஒளிரும் பாத்திரத்தைத் துதிக்கையில்  ஏந்தியவர்.

26. த்ரயாக்ஷர கணபதி

கஜேந்த்ரவதநம் ஸாக்ஷாச் சலாகர்ண ஸூசாமரம்
ஹேமவர்ணம் சதுர்பாஹூம் பாஸாங்குஸதரம் வரம்
ஸ்வதந்தம் தக்ஷிணே ஹஸ்தே ஸவ்யே த்வாம்ரபலம் கதா
புஷ்கரே மோதகஞ்சைவ தாரயந்தம் அநுஸ்மரேத்

யானை முகத்துடன், அசையும் காதுகளில் சாமரம் என்னும் அணிகள் மின்னும் பொன்னிற மேனியை உடையவரும், நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம்,   தந்தம், மாம்பழம் ஆகியவற்றைத் தரித்தவரும், துதிக்கையில் மோதகம் தாங்கியருளுபவருமான  த்ர்யாக்ஷர கணபதியைத் துதிக்கிறேன்.

27. க்ஷிப்ர-ப்ரஸாத கணபதி

த்ருதபாஸாங்குச கல்பலதாஸ் வரதஸ்ச பீஜபூரயுத:
ஸஸிஸகல கலிதமௌளி: த்ரிலோசநோருணஸ்ச கஜவதந:
பாஸூர பூஷணதீப்தோ ப்ருஹதுதர: பத்ம விஷ்டரோல்லஸித:
விக்நபயோதரபவந: கரத்ருத கமலஸ்ஸதாஸ்து பூத்யை

பாசம், அங்குசம், கற்பகக் கொடி, வரத முத்திரை, தாமரை, தர்ப்பை தாங்கிய ஆறு திருக்கரங்களுடன், துதிக்கையில் மாதுளையைத் தரித்தவரும்,, சந்த்ரன் ஒளி வீசும் திருமுடி(மௌலி)யுடன் கூடியவரும் , முக்கண்ணரும், சிவந்த மேனியரும், ஆனை முகத்தவரும், ஒளிரும் ஆபரணங்கள் இலங்கும் பெருவயிறு  உடையவரும், பத்மாசனத்தில் இருப்பவரும், மேகத்தைத் தாக்கும் காற்றைப் போன்றவரும், தாமரையைக் கையில் தரித்தவரும், (பிரார்த்தித்த) உடனே வந்து செல்வங்களருளும் க்ஷிப்ர ப்ரஸாத கணபதியைத் துதிக்கிறேன்.

28. உத்தண்ட கணபதி

கல்ஹாராம்புஜ பீஜபூரக கதா
தந்தேக்ஷூ பாணைஸ்ஸதா
பிப்ராணோமணி கும்பஸாலி கலஸோ
பாஸஞ்ச சக்ராந்விதம்
கௌராங்க்யா ருசிராரவிந்த கரயா
தேவ்யாஸ் ஸதாஸம்யுத:
ஸோணாங்கஸ் ஸூபமாதநோது பஜதாம்
உத்தண்ட விக்நேஸ்வர:

நீலோத்பலம், தாமரை, மாதுளை, கதை, தந்தம், கரும்பு, வில், நெற்கதிர், கலசம், பாசம், அம்பு ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவரும், கைகளில், தாமரை மலரைத் தாங்கி நிற்கும் பச்சை வண்ண தேவியுடன் எப்போதும் இருப்பவரும், மங்களங்கள் அருளுபவருமான  உத்தண்ட கணபதியைத் துதிக்கிறேன்.

29. த்ரிமுக கணபதி

ஸ்ரீமத்தீக்ஷ்ண ஸிகாங்குஸாக்ஷவரதாம்
தக்ஷே ததாந: கரை:
பாஸாம்ருத பூர்ணகும்ப-மபயம்
வாமே ததாநோ முதா
பீடே ஸ்வர்ணமயாரவிந்த விலஸத்
ஸத்கர்ணிகா பாஸூரே
ஆஸீநஸ்த்ரிமுக: பலாஸருசிரோ
நாகாநந: பாதுந:

கூர்மையான அங்குசம், அக்கமாலை, வரதமுத்திரை ஆகியவை மூன்று வலக்கரங்களில் ஒளிவீச,  பாசம், அமுத கலசம், அபயம் இடக்கரங்களில் மின்ன, அழகான கர்ணிகையுடன் ஒளி வீசும் தங்க மயமான தாமரைப்பீடத்துடன் கூடியவரான‌, செந்நிறத் திருமேனியும், மூன்று முகங்களும் உடையவரான மும்முக கணபதி என்னைக் காப்பாற்றுவராக.

30. ஸிம்ஹ கணபதி

வீணாம் கல்பலதாம் அரிஞ்ச வரதம்
தக்ஷே விதத்தே கரை:
வாமே தாமரஸஞ்ச ரத்நகலசம்
ஸந்மஞ்ஜரீ சாபயம்
ஸூண்டாதண்டலஸந் ம்ருகேந்த்ரவதந:
ஸங்கேந்துகௌர: ஸூப:
தீவ்யத் ரத்ந நிபாம்ஸூகோ கணபதி:
பாயாதபாயாத் ஸந:

வீணை, கற்பகக்கொடி, ஸிம்ஹம், வரதம் ஆகியவை வலக்கரங்களிலும், தாமரை, ரத்ந கலசம், மலர்க்கொத்து, அபய முத்திரை ஆகியவை இடக்கரங்களிலும் தாங்கி, தடி போன்ற துதிக்கையுடன் விளங்குகின்ற ம்ருகேந்த்ர முகம் கொண்ட, சங்கு போன்ற (வெண்ணிறமுடைய) சந்த்ரனைத் தரித்த, உயர்வான ரத்நம் போன்ற ப்ரகாசமான ஆடையை அணிந்தவரான‌ ஸிம்ஹ கணபதியை முறையோடு எப்போதும் துதிக்கிறேன்.

31. துர்கா கணபதி

தப்தகாஞ்சந ஸங்காஸஸ்ச
அஷ்டஹஸ்தோ மஹத்தநு:
தீப்தாங்குஸம் ஸரஞ்சாக்ஷம்
தந்தம் தக்ஷேவஹந் கரை:
வாமே பாஸம் கார்முகஞ்சலதாம்
ஜம்பூத்யதத் கரை:
ரக்தாம்ஸூகஸ்ஸதா பூயாத்
துர்கா கணபதிர் முதே

உருக்கிய  பொன் போன்ற திருமேனியும், எட்டு திருக்கரங்களுடன் பெரிய உருவமும் கொண்டு,  ஜ்வலிக்கின்ற அங்குசத்தையும், அம்பு, அக்ஷமாலை, தந்தம் ஆகியவற்றை வலக்கரங்களிலும், பாசம், வளைந்த வில், கற்பகக் கொடி, நாவற்பழம் ஆகியவற்றை இடக்கரங்களிலும் ஏந்திய செந்நிற ஆடை உடுத்தியுள்ள துர்கா கணபதியைத் துதிக்கிறேன்.

32. ஸங்கடஹர கணபதி

பாலார்காருண காந்திர் வாமே பாலாம் வஹந் நங்கே
லஸதிந்தீவர ஹஸ்தாம் கௌராங்கீம் ரத்ந ஸோபாட்யாம்
தக்ஷேSங்குஸ வரதாநம் வாமே பாஸஞ்ச பாயஸ பாத்ரம்
நீலாம்ஸூகலஸமாந: பீடே பத்மாருணே திஷ்டந்
ஸங்கடஹரண: பாயாத் ஸங்கடபூகாத் கஜாநநோ நித்யம்  

பால சூர்யன் போன்ற நிறத்துடன் கூடியவராக, நீல மலரைத் தாங்கியுள்ள பச்சை மேனியளான தேவி இடது தொடையில் அமர்ந்திருக்க,  வரதம், அங்குசம் ஆகியவை வலக்கரங்களிலும்,  பாசம், பாயஸ பாத்ரம் ஆகியவை இடக்கரங்களிலும் தாங்கி, நீல நிற ஆடை அணிந்து, தாமரைப் பீடத்தில் நின்ற திருக்கோலத்துடன் கூடியவராகக் காட்சி தந்து, ஸங்கடத்தின் போது எப்போதும் தோன்றி அருளும் யானைமுகக் கடவுளைத் துதிக்கிறேன்🌀
ச ர வ ண ப வ - சில விளக்கங்கள்

ஓம் ஸ்ரீ சரஹணபவாய நமஹ

விளக்கம் 1

       ச ... செல்வம்
       ர ... கல்வி
       வ ... முக்தி
       ண ... பகை வெல்லல்
       ப ... கால ஜெயம்
       வ ... ஆரோக்கியம்

(ஆறுமுகனுக்குகந்த ஆறு படைவீடுகள் எனும் நூலிலிருந்து)

விளக்கம் 2

சரவணபவன் ... நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன்

விளக்கம் 3

       ச ... மங்களம்
       ர ... ஒளி கொடை
       வ ... சாத்துவிகம்
       ண ... போர்
       பவன் ... உதித்தவன்

விளக்கம் 4

       ச (கரம்) ... உண்மை
       ர (கரம்) ... விஷயநீக்கம்
       அ (வ) (கரம்) ... நித்யதிருப்தி
       ண (கரம்) ... நிர்விடயமம்
       ப (கரம்) ... பாவநீக்கம்
       வ (கரம்) ... ஆன்ம இயற்கை குணம்

(முருக தரிசனம் எனும் நூலிலிருந்து)

விளக்கம் 5

ஓம் சம்

       ... ஓங்கார ஸ்வரூபாய
       ஓஜோதராய ஓஜஸ்வினே
       நமஸ் ஸம்ஹ்ருதாய
       இஷ்ட ஸித்தாத்மனே பாஸ்வரரூபாய ||

ரம்

       ... ஷட்கோண மத்ய நிலயாய
       ஷட்க்ரீடதராய
       ஸ்ரீமத் ஷடாதராய ||

ஹம்

       ... ஷண்முக சரஜன்மனே
       சுபலக்ஷணாய
       ஸிகிவாஹனாய ||

ணம்

       ... க்ருசாநு ஸம்பவாய
       கவச தாரிணே
       குக்குடத்வஜாய ||

பம்

       ... கந்தர்ப்ப கோடி தீப்யமானாய
       த்விஷட்பா ஹுரூபாய
       த்வாதசாக்ஷாய ||

வம்

       ... கேடதராய
       கட்க தாரிணே
       சக்தி ஹஸ்தாய ||

       ...... ஓம் ......

(ப்ருஹத் ஸ்தோத்ர மஞ்சரீ எனும் நூலிலிருந்து)
புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு பெண் பெரியவாளிடம் அப்படியொரு பக்தி கொண்டிருந்தாள். நல்ல வஸதியான குடும்பத்தை சேர்ந்தவள். பார்க்க மிகவும் குட்டையாக இருப்பாள். பெரியவாளை தர்ஶனம் செய்ய வரும் போதெல்லாம் ஏலக்காய் மாலை க்ரீடம் என்று பார்த்து பார்த்து ஆசையாசையாய் பண்ணிக் கொண்டு வருவாள். பாவம் அந்தப் பெண்ணுக்கு தகுந்த வரன் மட்டும் கிடைக்கவில்லை. அடிக்கடி வருவதால் பாரிஷதர்கள் எல்லாருக்குமே அவளைத் தெரியும். ஒவ்வொரு முறையும் சில ஸிஷ்யர்கள் அவளுக்காக பெரியவாளிடம் பரிந்தனர். பாவம் அந்தப் பொண்ணு பெரியவா அனுக்ரஹம் பண்ணணும். நல்ல எடத்ல கல்யாணம் ஆகணும் பெரியவா புன்னகைத்தார். பிறகு அந்தப் பெண்ணிடம் "ஒனக்கு எப்டியாப்பட்ட ஆம்படையான் வேணும்?" எனக்கு பெரியவாகிட்ட பக்தியா இருக்கறவரா இருக்கணும். ஏழையா இருந்தாலும் சரிதான் குடுமி வெச்சிண்டிருந்தாலும் சரிதான். அழகா இருக்கணும்னு கூட அவஸ்யமில்லே பெரியவா"

கொஞ்ச நாள் கழித்து காமாக்ஷி கோவிலில் எல்லாருக்கும் தர்பனம் குடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண் அங்கு வந்தாள். வழக்கம் போல் அந்தப் பாரிஷதரும் தன் ஸிபாரிசு ப்ரார்த்தனையை செய்தார். பெரியவா சிரித்துக் கொண்டே அவரிடம் சரி. நா அனுக்ரஹம் பண்றேன். நீ இப்போவே எதாவுது ஒரு பையனை அழைச்சிண்டு வா. கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன்..."பாரிஷதர் பெரியவாளை பெரியவாளின் அளப்பறிய மஹா பக்தியை அறிந்தவர். எனவே கொஞ்சங்கூட தயங்கவில்லை எப்படி இப்போவே அழைச்சிண்டு வரமுடியும்? என்று திகைக்கவில்லை. கீழே இறங்கி அங்கே இங்கே தேடிக்கொண்டிருந்தார்.

யாரை? அந்த பெண்ணுக்கான வரனை.

மஹா ஆச்சர்யம் பெரியவாளை தரிசனம் பண்ண கும்பகோணத்தை சேர்ந்த ஒரு ஆடிட்டர் பையன் நின்று கொண்டிருந்தான். பாரிஷதர் அவனிடம் சென்று" கொஞ்சம் எங்கூட வாங்கோ. பெரியவாகிட்ட கூட்டிண்டு போறேன்" என்றதும் அவனும் வந்தான். "பெரியவா... இதோ ஒரு பையன் வந்திருக்கான் "பெரியவா சிரித்துக் கொண்டே அந்தப் பையனிடம் அந்தப் பெண்ணைக் காட்டி" இந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ" என்றார்.

அந்தப் பையனும் பெரியவாளிடம் கொண்ட பக்தியில் சளைத்தவனில்லை என்பதால் பெரியவா உத்தரவுப்படி இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கறேன்... ஆனா கும்பகோணத்ல எங்கம்மா அப்பாகிட்ட சொல்லிட்டு அவாளோட ஸம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கறேன்" என்றான்.

"பேஷ் அம்மா, அப்பா ஆஸிர்வாதம் ரொம்ப முக்யம். நீ ஊருக்குப் போயி அவாட்ட நான் சொன்னேன்னு சொல்லு. இவளோட அம்மா அப்பாவை விட்டு மிச்ச விஷயங்களை ஏற்பாடு பண்ணச் சொல்றேன்" பாரிஷதர் மனம் குளிர்ந்தார். பையனும் பொண்ணும் ஸந்தோஷமாக நமஸ்காரம் பண்ணினார்கள் தனித்தனியாக.

"க்ஷேமமா இருங்கோ"

அடுத்த சில வாரங்களிலேயே தம்பதியாய் சேர்ந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்யும்படியாக அந்தப் பெண்ணுக்கும் ஆடிட்டர் பையனுக்கும் புதுக்கோட்டையில் ஜாம்ஜாமென்று பெரியவா அனுக்ரஹத்தோடு கல்யாணம் நடந்தது.
குலதெய்வத்தின் சிறப்பை பெரியவர் உணரச்செய்த சம்பவம் ஒன்று உண்டு.
கட்டுரை இந்திரா சௌந்தரராஜன் (தகவல் உதவி தீபம் இதழ் பால ஹனுமான்)

பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்து வந்தார் ஒரு நாள்   ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்த போது ஒரு விவசாயி பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னு கூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா என் வாழ்க்கையில் போராட்டமே வாழ்க்கையா இருக்கு என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

பெரியவர் அவரிடம் குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா? என்று கேட்டார். குலதெய்வமா… அப்படின்னா? திருப்பிக் கேட்டார் அவர். சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா? ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பி வந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான் என்றார்.

உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?

ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.

அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.

ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டா தான் என் பிரச்னை தீருமா?

அப்படித்தான் வெச்சுக்கோயேன்…

என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்க தான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?

நான் அப்படிச் சொல்லவே இல்லையே!

அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!

காரணமாத்தான் சொல்றேன் ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம் தான். எனக்கு பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா உனக்கு பாத்திரம் தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”

அப்ப குலதெய்வம் தான் பாத்திரமா… அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?

நீ கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன் என்று அவரை அனுப்பி வைத்தார்.

அவரும் ஒரு பத்து நாள் கழித்து சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சு போய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அது மேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வந்தேன் என்றார்.

நல்லது… அந்தக் கோயிலை நல்ல படியா எடுத்துக்கட்டு தினசரி அங்க விளக்கு எரியும் படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா உன் குடும்பமும் ஜொலிக்கும் என்றார் பெரியவா!

சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?”

அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!”

அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது? என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார்.

அது…?

ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம் தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால் நமக்கு முன் பிறந்த எல்லோருமே முன்னோர்கள் தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால் நாம் நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தை வழி பாட்டன்மார் வரிசையில் மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால் ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல் ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

அடுத்து இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக உடலமைப்பு வேறாக குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அது தான் இயற்கையும்கூட! ஆனால் கோத்திர வழி மாறாத படி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம், போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால் குலதெய்வக் கோயிலுக்கு நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு வணங்க வைக்கவும் படுகிறோம். இதன் படி பார்த்தால் குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”

பெரியவா சொல்லச் சொல்ல பர்மாக்காரரிடம் பரவசம்!

அது மட்டுமல்ல ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல் அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?

ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வது கூட தவறு. வெளிப்பட வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில் நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.

இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?

பெரியவா விளக்கி முடிக்க வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது. இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால் அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.

நான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பா பேசி நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால் அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால் அவர் ஒரு நாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.

இப்படி நம்பிக்கையற்றுப் போனவர் தன் பிள்ளைகளை அழைத்துவர மாட்டாரே! அவர்கள் இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய் விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரு வழியில் ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல் முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில் வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பது தான் இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். உடம்புக்கு உணவுப் பொருளால் சக்தி ஏற்படுவது போல் மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது.

ஒரு குலதெய்வத்தின் பின்னால் இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளது. குல தெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும் போது பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அதுதான் நிகழ்ந்தது.

எனக்கும் இந்தக் குலதெய்வ விஷயம் மனசுக்குள் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போன போது என் பார்வையே மாறிப்போனது. அந்தக் கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும் போது என் தாத்தன் தொட்ட தூண்.. என் தாத்தன் நின்று மூச்சுவிட்ட இடம்.. என் முப்பாட்டன் அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு.. அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா?

ஒன்று உறுதி அந்தப் பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரகம்! இந்தக் குலதெய்வ விளக்கமும் இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று.
பொங்கல் பண்டிகையும் சூரிய வழிபாடும்!

சூரிய வழிபாட்டிற்குரிய பொங்கல்

பொங்கல் விழாவே ஒரு சூரிய வழிபாட்டு விழாவாகும். ஆகாயத்தில் காற்றும், காற்றில் தீயும் உருவாகின்றன. தீயினால் புதுப்பானையில் (நிலம்) உள்ள அரிசி (நிலத்தின் பயன்) நீரில் வெந்து பொங்கலாகிறது. பொங்கலைப் படைத்து சூரியனை வழிபடுகின்றவர்கள், ஐம்பெரும் பூதங்களையே வழிபடுகின்றனர் என்பது ஐதீகம்.பாரதத்தில் சூரிய வழிபாடு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ரிக்வேத காலத்துக்கும் முன்பிருந்தே இந்த வழிபாடு இருந்து வருகிறது. அசையும் பொருள்கள் அனைத்திற்கும் சூரியனே உயிர் தருகிறான் என்கின்றன, வேதங்கள் !இந்த வழிபாடு எப்படி ஏற்பட்டது என்பது பற்றி நிச்சயமாக ஒன்றும் கூறமுடியவில்லை கிமு 2000 - க்கு முன்பே சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை இந்தியர்கள் வழிபட்டு வந்துள்ளனர்.நம்நாடு சூரிய வெப்பம் மிகுந்த நாடு. ஆகவே, அவன் அருளைப் பெற அவனை மக்கள் வழிபட முற்பட்டதில் வியப்பில்லை. பல நோய்களை சூரிய கிரணங்கள் குணப்படுத்துவதாக அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. உபநிஷத்துக்களும் புராண இதிகாசங்களும் சூரியனின் புகழைப் பேசுகின்றன. பிற தெய்வங்களைப் போல் அல்லாமல் சூரியன் கண்ணெதிரே தோன்றும் தெய்வமாக விளங்குகிறான்.

சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்று மக்கள் நம்பினார்கள். சூரியனுக்காகக் கட்டிய புராதனக் கோயிலில் ஒன்று ஒரிஸ்ஸாவிலுள்ள கொனார்க் கோயில். கலிங்கத்தை ஆண்ட நரசிங்கதேவன் (கி.பி 1238--64) இதைக் கட்டினான்.இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் உலகில் வேறு எங்கும் காண கிடைக்காத வேலைப்பாடு மிக்கவை.தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்துள்ள சூரியனார் கோயில் என்ற இடத்தில் சூரியனுக்கென்று தனி ஆலயமே இருக்கிறது. சூரியனைப் பரம்பொருளாக ஆதித்திய ஹிருதயம் கூறுகிறது. மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம் முதலியவை சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன. மந்திரங்களில் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் காயத்ரி சூரியனுக்கு உகந்த மந்திரம். சூரிய நமஸ்காரம் என்பது உடற்பயிற்சி, யோகப் பயிற்சியுடன் கூடிய வழிபாடு. இன்று இது மேனாட்டிலும் பரவியுள்ளது. சூரிய வழிபாடு சௌரமதம் என்ற பெயரில் ஷண்மதங்களுள் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. சௌரமதம் ஒரு காலத்தில் உலகளாவிய மதமாகவும் பரவியிருக்கிறது.  தை மாதம் முதல் நாள் - சூரியன் மகர ராசிக்குள் (உத்தராயணம்) பிரவேசிக்கும் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு சூரிய வழிபாடு நடத்துகிறார்கள். கீதையில் கண்ணபிரான் ஜ்யோதிஷம் ரவிர் சும் சுமான் என்று கூறி ஜ்யோதிகளில் தாம் சூரியனாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்.அந்தக் காலத்தில் ரிஷிகள் சூரியனின் கனிந்த ஒளியிலே நாள் தவறாமல் திளைத்து வந்தார்கள். சூரிய கிரணங்களை ஜீவத்திறல் என்றும் ஆயுளை வளர்க்கும் அன்னம் என்றும் போற்றினார்கள். அவர்கள் உடல், உள்ளம், உயிரில் தேவசக்தியும் தெய்வ ஒளியும் துள்ளின. சுற்றும் உலகுக்கே சூத்திரமாக விளங்கும் சூரியனின் பெருமை இன்று சுருங்கிப்போய்விட்டது. என்றாலும், பொங்கல் திருநாளில் மட்டும் ஆதித்தனைப் போற்றும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.

*பொங்கல் தத்துவம்

பொங்கல் திருவிழா ஏன் கொண்டாடப்படுகிறது என்றால், பொங்கலுக்கு முதல் நாளான போகிப்பண்டிகையின் போது நம்மிடமுள்ள கெட்ட குணங்கம் போகின்றன.பொங்கல்  பண்டிகையன்று நம்மிடம் நல்ல குணங்கள் பொங்கிப் பெருக ஆரம்பிக்கின்றன. மறுநாள் காணும் பொங்கல் எதிர்வரும் (காணும்) காலங்களில் நல்ல எண்ணங்கள் எங்கும் எதிலும் நீடித்து நிற்க இறைவன் அருள்புரிய கொண்டாடப்படுகிறது.

ஆரோக்கியம் தரும் ஆதித்தன்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. உலகில் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லாவிட்டால் செல்வத்தால் பயனில்லை. சுவரை வைத்துத் தானே சித்திரம் என்றும்கூட சொல்வதுண்டு. அதனால் மனிதவாழ்விற்கு மன, உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம். இதற்குரிய தெய்வமாக சூரியன் இருக்கிறார். இவருக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் செந்தாமரை மலரிட்டு வணங்கினால் ஆரோக்கியம் உண்டாகும். கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யாதே என்பது சூரியனின் பெருமையை எதிர்மறையாகக் கூறுவதாகும். இப்பழமொழி கண் பெற்ற பயனே சூரியனைக் கண்டு மகிழ்வதற்கு என்று குறிப்பிடுகிறது.

அழகெல்லாம் முருகனே!

தமிழ்க்கடவுள் என்று முருகப்பெருமானைப் போற்றுகிறோம். முருகன் என்ற சொல்லுக்கு நேரான பொருள்அழகு என்பதாகும். நீலக்கடல் பரப்பில் இளஞ்சூரியன் தோன்றுவதை வழிபட்டு பரவசம் கண்டவர்கள் நம் முன்னோர். இளஞ்சூரியனைப் பார்க்க செக்கச்செவேல் என்றிருக்கும். கடல் நீரோ நீலவண்ணம் கொண்டிருக்கும். இந்த அழகுக்காட்சியைக் கண்டமக்கள், முருகு என்று சொல்லி மகிழ்ந்தனர். முருகப்பெருமானின் வாகனம் மயில். மயில் நீலநிறத்துடன் இருக்கும். முருகனையும் சிவந்தவன் என்னும் பொருளில் சேயோன், செவ்வேல் என்றெல்லாம் குறிப்பிடுவர். காலப்போக்கில் சூரியன் மட்டுமில்லாமல் மலை, காடு, அருவி என்று இயற்கை அழகுக் காட்சிகளையெல்லாம் முருகனாகவே போற்றி வழிபட்டனர். அதைத்தான் அழகெல்லாம் முருகனே என்று குறிப்பிடுகிறோம்.

கண்கண்ட தெய்வம்

விநாயகரை முழுமுதலாகக் கொண்டு வழிபடும் மதம் காணாபத்யம். முருகனை வழிபடுவது கவுமாரம். சக்திவழிபாட்டினை சாக்தம் என்பர். சைவசமயத்தில் சிவபெருமானே முதற்பொருள். திருமாலை வழிபடுவதற்கு வைணவம் என்று பெயர்.சூரியனையே பரம்பொருளாக வழிபடும் முறை சவுரம் ஆகும். இந்த ஆறுவித வழிபாடுகளில் சூரியனைத் தவிர, மற்ற தெய்வத்தை கண்களால் காணும் வாய்ப்பு கிடையாது. கண்கண்ட தெய்வமான சூரியன் கிழக்கில் உதயமாகி அருள்புரிகிறார். இவருடைய வழிபாடு பழங்காலத்தில் மக்கள் மத்தியில் சிறப்பாக இருந்தது. ஆனால், இப்போது கோயில்களில் பரிவார தெய்வங்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

உலகின் முதல் வழிபாடு

காலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு கீழ்வானில் உதயமாகும் இளஞ்சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்று. இதனை சூரிய நமஸ்காரம் என்று சிறப்பாக குறிப்பிடுவர். இயற்கை வழிபாட்டில் சூரியவழிபாடே முதல் வழிபாடாகும். காட்டில் அலைந்து திரிந்த மனிதன் இருளைக் கண்டு பயந்தான். இரவில் ஒவ்வொரு கணப்பொழுதும் யுகமாய் கழிந்தது. பொழுது புலர்ந்த வேளையில் செங்கதிரோன் வானில் உதயமாகி ஜொலித்தது. ஒளியைக் கண்ட மனிதன் மகிழ்ச்சிப்பெருக்கில் வணங்கி நின்றான். இதுவே சூரியவழிபாட்டின் தொடக்கமாகும்.

முதல்நாள் ஞாயிறு ஆனது ஏன்?

உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது. சூரியோதயத்திற்கு முன் காலையில் விழித்து அன்றாடக் கடமைகளைச் செய்யவேண்டும். மனிதர் மட்டுமில்லாமல் எல்லா உயிர்களும் சூரியோதயத்தின் போது கண்விழிக்கின்றன. தாவரங்கள் சூரியஒளியின் துணையோடு ஒளிச்சேர்க்கையை நிகழ்த்துகிறது. பறவைகள் இரை தேடச் செல்கின்றன. மனிதர்கள் தங்கள் கடமையைச் செய்கின்றனர். ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா உயிர்களுக்கும் ஜீவாதாரமாக சூரியன் திகழ்கிறது. அதனால், வாரத்தின் முதல்நாளில் சூரியனுக்குரிய நாளாக ஏற்படுத்தினர். தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதல் நூலான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தின் தொடக்கமே ஞாயிறு போற்றுதும் என்றே தொடங்குகிறது. மற்ற இயற்கை வழிபாடுகளான நிலா, மழை போன்ற தெய் வங்கள் சூரியனுக்கு பின்னரே குறிக்கப்படுகின்றன.

சூரியனின் வடதிசைப்பயணம்

12 மாதங்களில் தை முதல் ஆனி வரையிலும் வடதிசையிலும், ஆடி முதல் மார்கழி வரையிலும் தென்திசையிலும் சூரியன் பயணிக்கிறார். இதை உத்தராயணம், தட்சிணாயனம் என்று கூறுவர். பூலோகத்தைப் போல, தேவலோகத்திலும் பகல், இரவு உண்டு. இதில் உத்தராயணகாலம் தேவர்களுக்கு பகல்பொழுதாகவும், தட்சிணாயணம் இரவாகவும் இருக்கும். ஆறுமாதமாக தென்திசையில் பயணித்த சூரியன் வடதிசைக்கு திரும்பும் நாளே தைமுதல் நாள். இந்த நாளையே மகரசங்கராந்தி என்பர். இந்நாளில் சூரியனை வழிபாடு செய்வதால் வாழ்வு செழிக்கும் என்று கூறுவர்.

சூரியவம்சத்து சுடர்மணிகள்

அயோத்தியை ஆண்ட வம்சம் சூரியவம்சம். நீதி நேர்மை தவறாமல் ஆட்சிபுரியும் நல்லமன்னர்கள் பிறந்த குலம் இது. எவ்வளவு துன்பம் நேர்ந்தபோதும், உண்மையிலிருந்து விலகாமல் சத்தியம் பேசிய அரிச்சந்திரன், சனிதோஷம் போக்கும் நளச்சக்கரவர்த்தி, பசுக்களுக்கு வாழ்வு தந்த திலீபச்சக்கரவர்த்தி, தசாவதாரங்களில் ஒருவராக வணங்கப்படும் ராமபிரான் ஆகியோர் சூரியகுலத்தில் தோன்றியவர்கள். கொடை வள்ளல் கர்ணனும் சூரியனின் பிள்ளையே. சூரியனை வழிபட்டவர்கள் சூரியகுலத் தோன்றல் களான இந்த மன்னர்களின் நல்லாசியையும் பெறுவர் என்பது உறுதி.

அனுமனுக்கு உபதேசித்த மந்திரம்

சொல்லின் செல்வன் என்று அனுமனுக்கு சிறப்பு பெயர் உண்டு. ஆனால், அந்த அனுமனுக்கு பாடம் நடத்திய பெருமை சூரியனைச் சேரும். ஒருமுறை அனுமன் சூரியனைப் பழம் என்று நினைத்து வானமண்டலத்திற்கு தாவினார். சூரியனின் இயக்கம் தடைபட்டு நின்றது. இதனால் உலகமே ஒருகணம் அசையாமல் நின்று போனது. விஷயத்தை அறிந்த இந்திரன், ஓடோடிவந்து அனுமனின் முகத்தில் தன் வஜ்ராயுதத்தால் ஓங்கியடித்தான். மயங்கிய குழந்தை அனுமனைத் தாங்கிப்பிடித்தார் வாயுபகவான். (வாயுவின் மகனே அனுமன்). கோபமான வாயுவை இந்திரனும், சூரியனும் சமாதானப்படுத்தினர். தன் தவறுக்கு பரிகாரமாக சூரியன்அனுமனுக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்ததுடன், இலக்கணங்களையும் கற்றுத் தந்தார். அன்று முதல் அனுமன் சர்வவியாகரண பண்டிதன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். வியாகரணம் என்றால் இலக்கணம்.

தை பிறந்தால் வழி பிறக்கும்

சிறப்பான தை முகூர்த்தம் சுபநிகழ்ச்சி நடத்துவதற்குரிய மாதங்களில் முகூர்த்தங்கள் அதிகமுள்ள மாதமாக தை அமைந்துள்ளது. பெண்ணுக்கு திருமணம் பேசும் பெற்றோர், வரும் தையில் கல்யாணத்தை வைச்சுக்கலாம் என்று சொல்வது வழக்கம். அக்காலத்தில் மார்கழியில் பெரும்பாலும் அறுவடை முடிந்துவிடும். அதனால், உழவர்கள் கையில் தை மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதைப் பயன்படுத்தி கல்யாணச் செலவு செய்யலாம் என்பதால் தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி உண்டானது. இப்பழமொழிக்கு வேறொரு பொருளும் சொல்வதுண்டு. வயலில் அறுவடை முடிந்து விட்டதால், பயிர்பச்சை இல்லாமல் வரப்பு நடப்பதற்கு ஏதுவாக காலியாக இருக்கும். அதனையும் தைபிறந்தால் வழிபிறக்கும் என்பர்.

மகரசங்கராந்தி

சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்வார். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளில் மூன்று ராசிகள் குறிப்பிடத்தக்கவை. சித்திரை மாதத்தில் மேஷராசியில் சூரியன் உச்ச பலத்தையும், ஐப்பசி மாதத்தில் சூரியன் பலவீனத்தையும்(நீச்சத்தன்மை)பெறுகிறார். மகரராசியில் பிரவேசிக்கும் நாளை மகரசங்கராந்தி என்று பெயர். இம்மாதத்தில் சூரியனுக்கு பகன் என்று பெயர். தை மாதம் சூரியனை வழிபட்டவர்களுக்கு எல்லா வளங்களும், பால்பாக்கியமும் (பசுக்களால் யோகம்) உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சூரியனுக்கு 12 பெயர்

ஆதித்தன், பாஸ்கரன், ரவி, ஞாயிறு என்று சூரியனுக்கு பலபெயர்கள் உண்டு. ரஸ்மி புராணத்தில் சூரியனுக்கு பன்னிரண்டு பெயர்கள் சொல்லப்பட்டுள்ளது. மித்திரன், ரவி, சூரியன், பானு, ககான், பூஷ்ணன், ஹிரண்யகர்பன், மரீசி, ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன் என்பவையே அவை.

விழா நிறைந்த தைமாதம்

தைமாதம் முதல் நாளிலிருந்து முப்பது நாளுமே பக்திமயமாகவும், விழாமயமாகவும் இருக்கும். முதல் நாள் தைப்பொங்கல். சூரியனை பொங்கலிட்டு நன்றியுணர்வோடு வழிபாடு செய்கிறோம். இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல். மாடுகளுக்கு பொங்கல் வைத்து வணக்கம் செலுத்துகிறோம். மூன்றாம் நாள் சிலபகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்னும் வீரவிளையாட்டு நடைபெறும். சில பகுதிகளில், உறவினர்களோடு கூடி மகிழும் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆறு, கடல் பகுதிகளில் உறவினர்கள், நண்பர்கள் கூடி மகிழ்வர். மகரஜோதியாக சபரிமலை ஐயப்பன் தைமாதத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தையில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் தைவெள்ளி என்று சிறப்பாக குறிப்பிடுவர். இந்நாளில் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வர். தை அமாவாசை நாளில் தீர்த்தக்கரைகளில் முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு. தை பவுர்ணமிநாளில் பூசநட்சத்திரமும் சேரும் வேளையில் தைப்பூசவிழா நடைபெறும். இவ்விழா முருகன் கோயில்களில் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக பழநிக்கோயில் தேர்பவனியில் முருகப்பெருமான் வீதியுலா வருவார். முருகபக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்துவருவர். மதுரையில் ராஜாங்க விழாவாக, மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரரோடு தெப்பம் சுற்றிவருவாள்.

நன்றி காட்டும் நல்லநாள்

உழவர்கள் நெல் அறுவடை செய்து மகிழ்ந்திருக்கும் வேளையில், விவசாயத்திற்கு துணைபுரிந்த சூரியன், பணியாட்கள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அமைந்த விழா பொங்கல் விழா. சூரியன் தன் செங்கதிர்களால் உலகிற்கு ஒளியூட்டுகிறார். கடல்நீரை ஆவியாக்கி மழை பொழியச் செய்கிறார். கிருமிகளை அழித்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டுகிறார். மண்ணில் உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார். அவருக்குரியதாக இந்த நாள் அமைந்துள்ளது. சூரியனுக்குரிய நாளாக தைப்பொங்கலும், கால்நடைகளுக்குரிய நாளாக மாட்டுப்பொங்கலும், உறவினர்,நண்பர்கள், வேலையாட்களைப் பாராட்டும்விதத்தில் காணும்பொங்கலும் அமைந்துள்ளன.

வெற்றி நாயகனுக்கு நமஸ்காரம்

* அதிதியின் புத்திரனே! நீயே இந்த உலகத்தை படைத்திருக்கிறாய். உலக ஜீவன்கள், தங்கள் செயல்களை செய்யும்படியான பலத்தை கொடுக்கிறாய். எவ்வித எதிர்பார்ப்புமின்றி உலகிற்கு ஒளி கொடுப்பதற்காக ஆகாயத்தில் சஞ்சரிக்கிறாய். ஒளிமிக்க கதிர்களை கொண்டிருக்கிறாய்.
* தங்க நிறமானவனே நீ! அபரிமிதமான பலன்களை கொடுக்கிறாய். சுவர்ணமயமான இந்த பிரபஞ்சத்திற்கு நீயே அதிபதி. நீயே பகலைப் படைக்கிறாய்.
* கருத்த குதிரைகளால் இழுக்கப்படுபவனே! ஆயிரம் கதிர்களைக் கொண்டவனே! சப்த என்ற பெயரை உடைய குதிரை பூட்டிய தேரை உடையவனே! விசேஷ பிரகாசம் உள்ளவனே! இருட்டை நாசம் செய்கிறவனே! உன்னிடமிருந்தே சகல சுகமும் எங்களுக்கு கிடைக்கிறது. இவ்வுலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் நீயே அழிக்கிறாய். அழித்த பிறகு மீண்டும் அவற்றை படைப்பதற்காக பிரகாசம் மாறாமல் அப்படியே இருக்கிறாய்.
* கதிரவனே! நீ எல்லோராலும் கொண்டாடப்படுகிறாய். அக்னியை உனக்குள் அடக்கிக் கொண்டிருக்கிறாய். மாலை வேளையில் மறைந்து போகிறாய். பனியை அழிக்கிறாய். ஆகாயத்திற்கு நீயே நாதன், ராகு என்னும் இருளைப்பிளந்து கொண்டு வெளியில் வரும் படியான சக்தியைக் கொண்டிருக்கிறாய்.
* ரிக், யஜூர், ஸாமம் என்ற வேதங்களின் முடிவைக் கண்டவனே! உன்னிடத்திலிருந்தே மழை உண்டாகிறது. நீ கடலரசனின் நண்பன், தட்சிணாயன காலத்தில் விந்தியபர்வதம் என்ற மலையின் வழியாக செல்கிறாய். ஆகாயத்தில் தெப்பமாய் மிதக்கிறாய். உன்னிடமிருந்தே வெயில் பிறக்கிறது.
* வட்ட வடிவம் உடையவனே! விரோதிகளை நாசம் செய்கிறவனே! உதயகாலத்தில் மஞ்சள் நிறம் கொண்டவனே! மதிய வேளையில் எல்லா வஸ்துகளையும் தகிக்கச் செய்கிறவனே! சாஸ்திரங்களை உபதேசிக்கிறவனே! உலகிற்கு வழிகாட்டுபவனே! மகத்தான ஒளியை உடையவனே! எல்லா பிராணிகளிடமும் அன்பு கொண்டவனே! அந்தப் பிராணிகளை அழிக்கவும் செய்பவனே! உனக்கு நமஸ்காரம்.
* நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் அதிபதியே! பிரபஞ்சத்தை நிலைபெறச் செய்கிறவனே! எல்லா தேவதைகளைக் காட்டிலும் அதிகமான சக்தியை உடையவனே! இந்திரன், வருணன், தாரா, பகன், பூஷா, அர்யமா, அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, ஸவிதா, விஷ்ணு என்ற மூர்த்திகளை உள்ளடக் கியவனே! உனக்கு நமஸ்காரம்.
* கண் கண்ட தெய் வமே! உத்ய பர்வதமலையில் உதிக்கும் உனக்கு நமஸ்காரம். மேற்கு மலையில் அஸ்தமிக்கும் உனக்கு நமஸ்காரம். நட்சத்திர மண்டலங்களுக்கும், கிழமைகளுக்கும் அதிபதியாய் இருக்கும் உனக்கு நமஸ்காரம்.
* வணங்குவோருக்கு வெற்றியையும், ÷க்ஷமத்தையும் கொடுப்பவனே! குதிரைகளால் இழுக்கப்படும் தேரை உடையவனே! இருட்டை நாசம் செய்பவனே! வணங்குவோரின் எதிரிகளை அழிப்பவனே! பரந்த உலகத்தின் நாயகனே! நன்றியற்றவர்களை கொல்பவனே! உனக்கு நமஸ்காரம்.
* உருகியோடும் தங்க ஆறு போன்ற ஒளியைக் கொண்டவனே! அக்னியின் வடிவே! சகல உலகமும் தோன்றக் காரணமானவனே! அஞ்ஞானம் என்ற இருளை போக்குகிறவனே! கருணாமூர்த்தியே! உலகிலுள்ள சகல ஜீவன்களின் புண்ணிய பாவங்களுக்கு சாட்சியாய் இருப்பவனே! உனக்கு நமஸ்காரம்.
8:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!

             8:ஸ்ரீ கைவல்யாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

                                        (கி.பி.55-கி.பி.28)

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

ஸ்ரீ கைவல்யாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆந்திர தேசத்து அந்தணகுலத்தவர்.திருப்பதியில்வாழ்ந்த"த்ரைலிங்கசிவய்யா"என்பவரின்புதல்வர்.பெற்றோர்இவருக்குஇட்டநாமதேயம்'மக்கண்ணா'இவரை'சச்சிதானந்தர்'எனவும்'கைவல்யயோகி'எனவும் கூறுவார்கள்.இவர் தம் வாரிசாக ஸ்ரீ க்ருபா சங்கரரை நியமித்தார்.இவர் கி.பி.28-ல் சர்வதாரி ஆண்டு தைமாதப் பிறப்பன்று காஞ்சி 'மண்டன மிச்ரர்'அக்ரஹாரத்திலுள்ள 'புண்யரஸா' என்னும் பகுதியில் சித்தியடைந்தார்.
வினை நீக்கும் மந்திரம்!

ஓங்காரமே உலகின் பிரதான ஒலி. அதனை ப்ரணவ மந்திரம் என்பர். ப்ரணவம் என்பதில் ப்ர என்பதற்கு விசேஷ என்பது பொருள், நவம் என்பதற்கு புதுமை என்று பொருள். புதுப்புது விசேஷங்களை உள்ளடக்கிய மந்திரமே ப்ரணவ மந்திரம் ஓம் என்பதைப் போன்றே பிள்ளையார் சுழியும் விசேஷமானது. பிள்ளையார் சுழியில் அகரம், உகரம், மகாரம் மூன்றும் அடங்கியுள்ளன. ஒலி வடிவமும் வரி வடிவமும் சேர்ந்துதான் எழுத்தாகிறது. ஒலி வடிவம் நாதம்; வரி வடிவம் பிந்து. உயிரும் உலகமும் உண்டாக இவையிரண்டும் வேண்டும். நாத பிந்து சேர்க்கையின் குறியீடாகத் திகழும் பிள்ளையார் சுழியை நாம் எழுதத் தொடங்கும்முன் பயன்படுத்தினால், அந்தப் பணி இடையூறின்றி முடியும். அதே போல் எந்த ஒரு செயல் ஆரம்பிக்கும் போதும் விநாயகர் மந்திரமான ஸ்ரீ கணாதிபதயே நம: என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்தால் விநாயகர் அருளால் எந்த வினைகளும் தடைகளும் வராமல் நாம் தொடங்கும் செயல் வெற்றிகரமாக அமையும் என்பது நம்பிக்கை.

பழங்காலத்தில் சுவடிகள் எழுதத் துவங்கும் போது பிள்ளையார்சுழிக்குப் பதிலாக விநாயகர் மந்திரமான ஸ்ரீ கணாதிபதயே நம: என்று எழுதினர். இவ்வாறு சொல்லியோ அல்லது எழுதியோ தொடங்கும் பணிகள்  தடங்கலின்றி விரைவில் நிறைவேறும் என்பர்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் காலத்தால் பழமையான ஒரு குடைவரை கோயிலாகும். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் அர்ஜுன வன திருத்தலங்கள் நான்கு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர் தஞ்சை மாவட்டத்தில் திருவுடைமருதூர், ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம் சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி ஆகியவையாகும். விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவறைக்கோயில். இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுகிறது. முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் உள்ள கற்பக விநாயகர் சன்னதி விநாயகரின் ஐந்தாவது படை வீடாகும். நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.

இருப்பிடம்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தாலுகாவில், திருப்புத்தூர் காரைக்குடி மெயின் ரோட்டில் உள்ளது பிள்ளையார்பட்டி. திருப்புத்தூரிலிருந்து சுமார் 9 கி.மீ., தூரத்திலும், காரைக்குடியிலிருந்து மதுரை வரும் ரோட்டில் சுமார் 18 கி.மீ., தூரத்திலும் உள்ளது.