சனி, 14 டிசம்பர், 2019

இருள் நீக்கியிலிருந்து இருள் நீக்க வந்த இறையருளே!

மாகாதேவர் தந்த மஹா தேவரே!
சரஸ்வதி அம்மாள் சுமந்த சரஸ்வதியே!

ஜனிக்கும் போது கூப்பிய கரங்களுடன் பிறந்தீர்!

இன்று ஜகம் அனைத்தும் உம்மை கை கூப்பி வணங்குகிறது!

அவனிக்கு வரும் போது அனைவரும் அழுது கொண்டு தான் வருகிறோம்!

ஆனால் நீர்மட்டம் தொழுது கொண்டு வந்ததால் தான் உம்மையே தெய்வமென தொழுது கொண்டு கொஞ்சம் நிற்கிறது இவ்அவனி!

சுப்பிரமணியனாய் பிறந்து ஜயேந்திர சரஸ்வதியாய் வந்து ஜகம் அனைத்தும் ஆளும் ஜகத் குருவே!

பொன்மாரி பொழிய வைத்த சங்கரின் வழி வந்த பொன்னாக மின்னும் எங்கள் பொக்கிஷமே!
உயர் பொலிவுடன் திகழும் பொன் மயமே!

உயர் சந்திரகேகரேந்திர சரஸ்வதி மகிழ்ந்த சங்கராச்சாரிய குருதேவா!

சரஸ்வதி புகழும் சதுர்மறை கூறும்
அருளே வா!

சங்கரருக்கு பிறகு மஹா கைலாஷ
சிகரத்தில் அவருக்கு சிலை வைத்த சிகரமே!

பல்கலைக்கழகம் கண்ட பல்கலை வித்தகரே!

சமய தொண்டுடன் சமுதாய தொண்டும் ஆற்றிய வித்தகரே ஆன்மீக குருவே!

குருநாதரின் கனவுகளை நினைவாக்கிய குருபக்த சிகாமணியே!

ஆன்மீக சமாஜத்தின் அருள் பாலித்த அருட்கொடை வள்ளலே!

ஊங்களை இரு கரம் கூப்பி வணங்குகிறோம் எங்களை காத்தருள்வாயாக!

ௐ ப்ரத்யக்ஷ ஸ்ரீநிவாஸனே சரணம் சரணம்.

ஜய ஜய சங்கர ஜயேந்திர சங்கர
தீபாவளி🎆🎇🎇
பட்ஷணங்கள் ஆத்தில் இருந்து செய்து தரப்படுகிறது. பட்ஷணங்கள் விவரம் மற்றும் விலை.
   
காரவகைகள்      

                         கிலோ
1.  தட்டை       -      200ரூ

2. மனோப்பு     -    200ரூ

3.தேங்குழள்    -     200ரூ

4.ரிப்பன் பகடா  -   200ரூ

5.மிக்ச்சர்         -      250ரூ

6.ஓமப்பொடி    -     250ரூ


இனிப்பு  வகைகள்

1.  ரவாலட்டு    - 6ரூ(ஒன்று )

2. தேங்காய்  பர்பி  -   200ரூ கிலோ


3.மைசூர் பாகு -400ரூ கிலோ    

4. பூந்தி லட்டு   - 300ரூ கிலோ 


அனைத்து  பட்ஷணங்களும்  சுத்தமாகவும் தரமாகவும் செய்து  தரப்படும். ஒருவாரத்திருக்கு முன்     ஆடர் செய்யவும். சென்னையில்  உள்ளவர்களுக்கு மட்டும்  செய்து தரப்படும். தொடர்புக்கு : லஷ்மி  மாமி 8015032463, வாட்ஸ்அப்  6385805723

நன்றிகள்🙏🙏🙏 இதை பகிரவும்.
எட்டின் மகிமை தெரியுமா?

மனிதப் பிறப்பில் எட்டாவது மாதம் ஒரு திருப்புமுனை. தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை அப்போதுதான் முழு வளர்சியைப் பெறுகிறதாம். கருப்பையில் இடம்போதாமல் நெருக்கத்தில் சிக்கி, இருக்கும் இடத்துக்கு ஏற்ப தன்னுடைய கை-கால்களை மடக்கிக்கொண்டு, உடல் உறுப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முதல் அறிவை அப்போதுதான் அந்தக் குழந்தை பெறுகிறது. முற்பிறவியில் செய்த தீவினையால்தானே, ஒரு தாயின் கருப்பைக்கு வந்தோம். இந்தப் பிறவியில் தவறு ஏதும் செய்யக் கூடாது எனும் சிந்தனை ஞானம் ஏற்பவதும் 8-வது மாதத்தில்தான் என்கிறது கீதை. ஆனால் பிறந்ததும் அந்த ஞானத்தை மனிதன் மறந்து போகிறான். மீண்டும் அந்த ஞானம் அவனுக்கு 80 வயதில் நிச்சயம் தோன்றுமாம். இதனாலேயே 8 எனும் எண்ணை ஞான எண்ணாகக் கூறுவார்கள். மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும், எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும்... என்று கருப்பையில் உள்ள 8 மாத சிசுவின் வடிவை, மிக அற்புதமாக விவரிக்கிறது. அதுசரி.. மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல, அந்த நடராஜ பெருமானே தன் கைப்பட எழுதிய பெருமை மிக்க நூலான திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் எந்தத் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது தெரியுமா? 8 - வது திருமுறையாகத்தான் !

அஷ்ட கணபதிகள்: முழுமுதற் கடவுளாம் கணபதியை அஷ்டகணபதிகளாகவும் கொண்டாடுவர். ஆதி கணபதி, மகாகணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, வாலை கணபதி, உச்சிஷ்ட கணபதி, உக்ர கணபதி, மூல கணபதி ஆகிய அஷ்ட பிள்ளையார்களை வழிபட வினைகள் யாவும் நீங்கும் !

அஷ்ட புஷ்பங்கள்: புன்னை, செண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம், அரளி, நீலோத்பலம், தாமரை ஆகிய மலர்களை தெய்வ பூஜைக்கு சிறந்த அஷ்ட புஷ்பங்களாகப் போற்றுகின்றன ஞானநூல்கள் !

திசை யானைகள் எட்டு: ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் ஆகியவையே திசை யானைகள் 8 எனப் போற்றுகின்றன புராணங்கள் !

அஷ்ட ஐஸ்வரியங்கள்: தனம், தானியம், நிதி, பசு, புத்திரர், வாகனம், சத்தம், தைரியம் ஆகியன அஷ்ட ஐஸ்வரியங்களாகும். இறைசிந்தையும், அறவாழ்வும் இந்தச் செல்வங்களைப் பெற்றுத் தரும்.

அருள் தரும் அஷ்ட பிரபந்தங்கள்: மாலவனின் பெருமைகளை விவரிக்கும் நூல்களில் எட்டு குறிப்பிடத்தக்கவை. அவை: திருவரங்கக் கலம்பகம். திருவரங்கத்துமாலை. திருவாங்கத்து அந்தாதி, ஸ்ரீரங்கநாயகர்ஊசல், திருவேங்கடமாலை, திருவேங்கடத்து அந்தாதி, அழகர் அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி !

அஷ்ட பந்தனம்: சுக்கான்கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன் மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நற்காவி.... ஆகிய எட்டு பொருட்களுமே, ஆலயங்களில் விக்கிரக பிரதிஷ்டையில் பயன்படும் அஷ்ட பந்தனமாகும்.

அட்டமா ஸித்திகள்: தவமுனிகள் செய்யும் யோக முறையால் எட்டுவிதமான ஸித்திகளை அடையலாம். அற்புதமான அந்த ஸித்திகள்: அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் !

அஷ்ட வசுக்கள்: அனலன், அணிலன், ஆபத்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்தியூஷன், பிரபாசன் ஆகியோரே அஷ்ட வசுக்கள் ! இவர்களில் பிரபாசன் என்பவனே, வசிஷ்ட முனிவரின் சாபத்தால் பூமியில் பிறந்து, பீஷ்மராகத் திகழ்ந்தான் !

அஷ்ட வித்யேச்வரர்: அநந்தர், சூக்ஷ்மர், சிவோத்தமர், ஏகநேத்ரர், ஏகருத்ரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டர், சிகண்டி ஆகியோரை அஷ்ட வித்யேச்வரர் எனப் போற்றுவர். இவர்கள் மாயைக்கு மேல் சுத்த வித்யைக்குக் கீழிருக்கும் புவனவாசிகள் என்கின்றன ஞானநூல்கள்.

எட்டெட்டந்தாதி: காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மனின் மீதான ஒரு பாடல் இது. எட்டெட்டு பாடலாக 64 செய்யுள்கள் அடங்கிய அந்தாதியாக திகழ்கிறது என்பார்கள். ஆனாலும், விநாயகர் வழிபாடாக முதலில் ஒரு பாடலும், செய்யுள் பலனாக கடைசியில் ஒரு பாடலும் அதிகம் உண்டு.
---------------------------------------------------------------------------------‐--
அக்னி நட்சத்திரம் பிறந்தது எப்படி?

அக்னி நட்சத்திரம்  இந்த வருடம் மே 4ம்தேதி இரவு 12.35 மணிக்கு ஆரம்பித்து, மே 29ம் தேதி காலை 6.45 மணிக்கு முடிகிறது.

முன்னொரு காலத்தில் சுவேதகி யாகத்தில் பன்னிரண்டு வருடங்கள் இடைவிடாமல் நெய் ஊற்றி யாகம் செய்தனர். தொடர்ந்து அக்னி தேவன் அந்த யாக நெய்யை உண்டதால் உடலில் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மருந்து காண்டவ காட்டை அழித்து உண்பதுதான் என்று ஆலோசனை கூறப்பட, காண்டவ வனத்தை நோக்கிச் சென்றான் அக்னிதேவன். அதனை அறிந்து அக்காட்டில் வசித்த உயிரினங்கள், தாவரங்கள் அனைத்தும் வருணனிடம் உதவி வேண்டின. எனவே வருணன் இடைவிடாது மழை பெய்தான். அதனால் அக்னியால் காட்டை அழிக்க முடியவில்லை. எனவே அக்னி தேவன் திருமாலிடம் உதவி வேண்டினான். திருமால், அர்ச்சுனனிடம்  அக்னிக்கு உதவச் சொன்னார். அர்ச்சுனன் தன் கணைகளால் அந்தக் காட்டை மறைத்து சரக்கூடுகட்டி தீ அணையாது எரிய உதவினான். அப்போது திருமால் அக்னிக்கு ஒரு நிபந்தனை விதித்தார். உனக்கு இருபத்தோரு நாட்கள் அவகாசம் தருகிறேன். அதன்பின் நீ காட்டை அழிக்கக் கூடாது என்றார். எனவே அக்னி 7 நாட்கள் மெதுவாக எரிந்து பின் 7 நாட்கள் வேகமாக எரிந்து கடைசி 7 நாட்கள் வேகம் குறைந்து உண்டபின் திரும்பினான். அதுவே அக்னி நட்சத்திர காலம் என புராணக்கதை கூறுகிறது.

அக்னி நட்சத்திரம் அசத்தி எடுத்துடும்: அக்னி நட்சத்திரம். ஒவ்வொரு வருடமும் உஸ் என்று வியர்த்து வழிவதில் ஆரம்பித்து அப்பாடா என்று களைத்து அமர்வதில் இது முடியும். இப்படி அசத்தி எடுக்கும் அக்னி நட்சத்திர நாட்களுக்கும், புராணத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா ? அக்னி நட்சத்திர நாளில் சந்திரனும் பூமியும் சூரியனுக்கு சற்று அருகே இருப்பதால்தான் இந்த நிலை என்கிறது விஞ்ஞானம். கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி தேவன். இது நெருப்பைக் கக்கும் நட்சத்திரம் எனவே இதை அக்னி நட்சத்திரம் என்பர்.

ஆறுதல் பெற ஆண்டவனை கும்பிடுங்க: அக்னி நட்சத்திர காலத்தில் அதிகாலை துயிலெழுந்து நீராடியபின் சூரிய பூஜையும், சூரிய நமஸ்காரமும் செய்வது சிறந்தது. முருகனையும், மீனாட்சியையும் வழிபடுவதுடன், பரணிக்குரிய துர்க்கையையும், ரேவதிக்கு உரிய பிரம்மனையும், கிருத்திகைக்கு உரிய அக்னியையும் வழிபாடு செய்வதும் நல்லது.

தாகம் தீர்க்க தானம் பண்ணுங்க: குடை, விசிறி, காலணிகள் தானம் செய்யலாம். அத்துடன் அன்னதானமும் ஆடைதானமும் செய்வது நல்லது. தண்ணீர்ப் பந்தல் அமைத்து தண்ணீர், நீர்மோர் போன்றவத்தைத் தருவது நற்பலன் தரும். அக்னி நட்சத்திர நாட்களில் நோய்கள் பல பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது. அக்னிக் காற்று நோய் பரப்பும் தன்மை கொண்டது. அதனால் தினமும் குடத்தில் நீர் நிரப்பி மஞ்சள் கரைத்த அதனை வேப்பிலைக் கொத்துகளால் நனைத்து வீடு முழுதும் தெளிக்கலாம். நரசிம்மரை வழிபட்டு தயிர்சாதம், நீர்மோர், பானகம் படைத்து தானம் செய்யலாம். விஷ்ணு நாமத்தை 108 முறை ஜபிக்கலாம். சீதளா தேவி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதும் நல்லது.

கருணை மழையில் நனையுங்க: எளிய எல்லோராலும் இயன்ற வழி, இக்காலத்தில் அகமும் புறமும் தூய்மையுடன் இருப்பதும், பிறர் மனம் குளிரும் வண்ணம் நடப்பதும், இயன்ற அளவில் தருமம் செய்வதும், மனம் உருகி இறைவனை வழிபடுவதும், கடவுள் அருள் மழையில் நம்மை நனைக்கும் என்பது நிச்சயம். இறைவன் கருணை மழையில் நனைந்து விட்டால் கத்திரி வெயிலும் நம்மை வாட்டாது குளிரும் வாழ்வும் மலரும்.
---------------------------------------------------------------------------------‐--
பழநி முருகனின் கோவண ரகசியம்!

ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழநியில் அருளும் முருகனுக்கு ஞானப் பழம் என்ற பெயருண்டு. இங்கு முருகப்பெருமான், மாலையில் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார். இது போலியான உலக வாழ்வைக் குறிக்கிறது. இவரே காலை வேளையில் கோவணத்துடன் காட்சியளிப்பார். நேற்று இருப்பது இன்றில்லை என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. இந்த உலக வாழ்வு போலியானது. உன்னோடு நான் உடுத்தியிருக்கும் கோவணம் கூட வரப்போவதில்லை. ஏதுமில்லாமல் வந்தாய், ஏதுமில்லாமல் போவாய், என்று முருகப்பெருமான் இத்தலத்தில் உணர்த்துகிறார். இந்த ஞானத்தை உலக மக்களுக்கு வழங்கும் கனி போன்று திகழ்வதால் இங்கு முருகனுக்கு ஞானப்பழம் என்ற பெயர் ஏற்பட்டது. இதனால்தான், இங்கு வந்த அவ்வையாரும் முருகனை பழம் நீ! என்று அழைத்தாள்.
---------------------------------------------------------------------------------‐--
பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா?

ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம்  என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உ என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும்.  அ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம். மேலும், உ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே உ என எழுதுகிறோம்.
---------------------------------------------------------------------------------‐--
அரவானின் தியாகம்!

பாண்டவர்களின் தர்ம யுத்த வெற்றிக்காக தன்னுயிரையே பலி கொடுத்த அரவான்! அரவானின் தியாகம் தான் பாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்குக் காரணம் என்று புராணம் கூறுகிறது. அர்ச்சுனனுக்கும், நாககன்னிக்கும் பிறந்தவன் அரவான். சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன். இவன் பாரதப் போருக்காக களப்பலியான கதை சற்று வித்தியாசமானது. பாண்டவர்களுக்கும் துரியோதனாதியர்களுக்கும் போர் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் பாண்டவர்கள் வெற்றியடைய பகவான் கண்ணன் பல யுக்திகளைக் கையாண்டார். பாண்டவர்களில் ஒருவரான ஜோதிட மேதை சகாதேவனைச் சந்தித்தார் கண்ணன். சகாதேவா! இந்தப் போரில் நாம் வெற்றி பெற வழி என்ன? சாஸ்திரப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். ஓலைச்சுவடிகளை எடுத்து ஆராய்ந்த சகாதேவன், சாமுத்திரிகா லட்சணம் கொண்ட இளைஞன் ஒருவனை களப்பலி கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்றான். சாமுத்திரிகா லட்சணம் கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள் என்று கண்ணன் யோசித்தார். அப்படிப்பட்டவர்கள் இரண்டே பேர் தான். ஒருவன் அர்ச்சுனன்; மற்றொருவன் அவன் மகன் அரவான். அர்ச்சுனனை களப்பலி கொடுக்க முடியாது. ஏனெனில் இந்தப் போருக்கு அச்சாணியாக விளங்குபவன் அவன்.

வெற்றிவாகை சூடக்கூடிய திறமையும் அர்ச்சுனனிடம் மட்டுமே உள்ளது.மேலும் கண்ணனின் தங்கையான சுபத்ராவின் கணவன் அவன். எனவே, அரவாணைத் தேர்ந்தெடுத்தார் கண்ணபிரான். அரவான் இளைஞன்; அழகன்; அனைத்து அம்சங்களும் பொருந்தியவன். அரவானைச் சந்தித்த கண்ணபிரான் தன் நிலையைச் சொன்னார். மறுபேச்சு பேசாமல் களப்பலிக்குத் தயார் என்று சம்மதம் தெரிவித்தவன், அதே சமயம் இரண்டு நிபந்தனைகளும் விதித்தான். நான் திருமணமாகாதவன். பெண் சுகம் என்றால் என்னவென்று அறியாதவன். ஆகவே, என்னை எவளாவது ஒருத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவளுடன் நான் ஓரிரவாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அடுத்து களப்பலி ஆனதும் வெட்டுப்பட்ட என் தலைக்கு போர் முடியும் வரை போர்க்காட்சிகளைக் காணும் சக்தியைத் தர வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் ஏற்பாடு செய்தால் நாளைக்கே நான் களப்பலிக்குத் தயார் என்றான். கண்ணன் யோசித்தார். இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்றி விடலாம். ஆனால் முதல் நிபந்தனையை எப்படி நிறைவேற்றுவது? நாளை சூரிய உதயத்தில் போர் ஆரம்பமாகப் போகிறது. விடியற்காலையில் களப்பலியாகப் போகும் அரவானை எந்தப் பெண் மணப்பாள்? ஆழ்ந்து சிந்தித்தார். பிறகு அவனிடம், உன் ஆசைகள் நிறைவேறும். இன்றிரவு உன்னைத் தேடி ஓர் அழகிய பெண் வருவாள். அவளை நீ காந்தர்வ விவாகம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இரு. அதோ, அங்கே தெரிகிறது பார் ஒரு மாளிகை. அங்கு நீ அவளை எதிர்நோக்கி இருக்கலாம் என்றார். அரவானும் மகிழ்ச்சியுடன் அந்த மாளிகையை நோக்கிச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு மெள்ள மெள்ள தலை காட்டியது. அப்பொழுது, அரவான் தங்கியிருந்த மாளிகை நோக்கி ஒரு அழகிய பெண் சென்றாள். அவள் நடந்து வரும் அழகை ரசித்த அரவான் அவளை நெருங்கினான். கைகோர்த்தான்; சந்தனத்தின் சுகந்தம் அவன் மனதை நிலை தடுமாறச் செய்தது. அங்கேயே மாளிகைக்கு முன் உள்ள நந்தவனத்தில் நிலவின் சாட்சியாக அவளை காந்தர்வ விவாகம் செய்துகொண்டு, அவளை அழைத்துக் கொண்டு மாளிகைக்கு சென்றான். இரவு இதமான தென்றல் வீசியது. மாளிகையில் விளக்குகள் அணைந்தன.

அரவான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். அரவானை காந்தர்வ விவாகம் செய்து கொண்ட அந்த அழகி யார்? அரவானின் ஆசையை நிறைவேற்ற கண்ணன் தன் மாய சக்தியால் ஒரு அழகிய பெண்ணை உருவாக்கி அனுப்பினார் என்றும்; கண்ணனே பெண்ணாக மாறினார் என்றும் புராணத் தகவல்கள் கூறுகின்றன. எது எப்படி இருந்தாலும் அரவான் முழுமையாக மகிழ்ச்சியடைந்தான். விடிந்ததும் கண்ணனிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நீராடி, தூய ஆடை அணிந்து களப்பலிக்குத் தயாரானான் அரவான். முறைப்படி அவளை களப்பலி கொடுத்தனர். பாண்டவர்களுக்கும் துரியோதனர் கூட்டத்திற்கும் போர் ஆரம்பமாயிற்று. பதினெட்டு நாட்கள் நடந்த இந்தப் போரினைத் தான் பாரதப் போர் என்று வரலாறு சொல்கிறது. பாரதப் போருக்காக களப்பலியான அரவானின் தலை, போர் முடியும் வரை உயிருடன் இருந்தது. போரில் நடந்த நிகழ்ச்சிகளை அரவான் கண்டு மகிழ்ந்தான். போர் முடிந்து பாண்டவர் வெற்றி பெற்றதும் கண்ணன், அரவானை உயிர்ப்பித்தான் என புராணம் கூறுகிறது. இதனை நினைவூட்டும் வகையில் சித்திரை மாத பவுர்ணமி அன்று விழுப்புரம் அருகிலுள்ள கூவாகம் என்னும் கிராமத்திலிருக்கும் கூத்தாண்டவர் கோயிலில் அரவாணிகள் (திருநங்கையர்கள்) திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவில் வாழும் அரவாணிகள் பலரும் கூத்தாண்டவர் கோயிலை நோக்கி வருவது வழக்கம். பாரதப்போரில் களப்பலியான அரவான் தான் தங்கள் கணவன் என்றும்; களப்பலிக்கு முன் அழகிய பெண்ணாக மாறிய கண்ணனின் வாரிசுகள் தான் தாங்கள் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
---------------------------------------------------------------------------------‐--
பகவான் பாடிய பகவத் கீதை!

பகவத் கீதா என்பதற்கு பகவான் பாடியது என்று பொருள். கீதம் என்றால் பாட்டு. கீதம் என்று சொல்லாமல் கீதா என்று சொன்னதன் காரணம் என்ன? கீதை உபநிஷத்துகளின் சாரம். உபநிஷத் என்பது பெண்பாலாக உள்ள வட சொல். ஆகவே, கீதா என்பதும் பெண் பாலில் இருப்பது; உபநிஷத்துகளின் மாற்று உருவமே கீதை என்பதைக் காட்டுகிறது. பாண்டவர்களை துரியோதனன் நாடு கடத்திவிட்டான். அவர்கள் வனவாசமும் அஞ்ஞாத வாசமும் செய்து திரும்பினார்கள். பிறகு, தம் ராஜ்ஜியத்தைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கிருஷ்ண பகவானைத் துரியோதனனிடம் தூது அனுப்பினார்கள். ஆனால், பேராசை கொண்ட துரியோதனன், பாண்டவர்களுக்கு ஊசிமுனை இடம் கூட தரமாட்டேன் என்றான். இனி, யுத்தம் செய்தே நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்று பாண்டவர்கள் முடிவு செய்தார்கள். துரியோதனனும் அர்ஜுனனும் கண்ணபிரானின் உதவியைப் பெறுவதற்காக துவாரகைக்குச் சென்றனர். பகவான், நான் ஆயுதம் எடுப்பதில்லை. நிராயுதபாணியான நான் வேண்டுமா? அல்லது என் சேனை அனைத்தும் வேண்டுமா? என்று கேட்டார். துரியோதனன், அவருடைய சேனையே தனக்கு வேண்டும் என்றான். அர்ஜுனன், கண்ணபிரானின் உதவிதான் தேவை என்றான்.

யுத்தம் தொடங்க, இரு திறத்தாரின் சேனைகளும் அணிவகுத்து நின்றனர். கிருஷ்ணரின் ரதத்தில் அர்ஜுனன் அமர்ந்து, இரு பக்கத்து சேனையில் இருப்பவர்களையும் பார்த்தான். அவர்கள் எல்லோருமே தனது உறவினர்களாகவும் ஆசிரியர்களாகவும் இருப்பதைக் கண்டான். அவனுடைய மனம் கலங்கியது. எனக்குப் போர் வேண்டாம்; அரசு வேண்டாம்; போகங்கள் வேண்டாம்; என்றெல்லாம் பலவாறு வருந்தினான். அர்ஜுனனின் அந்த வருத்தமே, அர்ஜுன விஷாத யோகம் என்ற, பகவத்கீதையின் முதல் அத்தியாயமாக உருவெடுத்தது. இந்த அர்ஜுன விஷாத யோகமே, அடுத்துப் பதினேழு அத்தியாயங்களில் பகவான் சொல்லிய  உபதேசமான பகவத் கீதைக்கு வித்து போன்றது. வித்து என்றால் விதை. வித்தினால் வித் (ஞானோபதேசம்) உண்டாயிற்று. அர்ஜுனனை நிமித்தமாகக் கொண்டு பகவான் உபதேசித்த ஆத்ம ஞானத்தையே பகவத் கீதை என்ற பெயரால் நாம் போற்றுகிறோம். பகவத் கீதை என்பது தனிப் புத்தகமாக எழுதப்பெறவில்லை. மகாபாரதத்தில் பீஷ்ம பர்வம் 25-ஆம் அத்தியாயம் தொடங்கி 42-ஆம் அத்தியாயம் வரையிலான ஒரு பகுதியாகவே பகவத் கீதை அமைந்திருக்கிறது. பாரத: பஞ்சமோ வேத என்றபடி, பாரதம் ஐந்தாவது வேதம். வேதமோ ஞான காண்டம், கர்ம காண்டம் என்று இரு வகையாகப் பிரிந்திருக்கிறது. வேதத்தில் உள்ள ஞான காண்டம் போலவே, பாரதத்திலுள்ள பகவத் கீதை என்பதும் ஞான காண்டமாகும். வேதத்தில்  அந்த பாகத்தை உபநிஷத் என்கிறார்கள்.

ஆகவே, பகவத் கீதையைப் பெரியோர்களிடம் உபதேச ரூபமாக முதலில் கிரகித்து, அதன் பொருளையும் நன்கறிந்து தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால், சகல உபநிஷத்துகளையும் பாராயணம் செய்வதால் உண்டாகும் நற்பலன்கள் நமக்குக் கிட்டுவது உறுதி. பகவத் கீதைக்கு அன்று முதல் இன்று வரை எத்தனையோ உரைகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றை ஓரளவு மட்டுமே கணக்கிட்டு, மூவாயிரத்துக்கும் அதிகமான உரைகள் இருக்கின்றன. பகவத்கீதைக்கு சங்கரர், ராமானுஜர், மத்வாசாரியார் என்ற ஆசார்யர்கள் முறையாக எழுதிய பாஷ்யங்களையே உயர்ந்தவையாகவும் குருமூலமாக உபதேச முறையில் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டியவையாகவும் கருதிப் போற்றுகிறார்கள். ஸ்ரீ சங்கராசாரியர் அத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; ஸ்ரீராமானுஜர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; ஸ்ரீமத்வாசாரியர் துவைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும் கீதைக்கு பாஷ்யங்களை இயற்றியிருக்கிறார்கள். இவர்களுக்குப்பின் இந்த ஆச்சார்ய பரம்பரையில் வந்த சில மகான்கள், இந்த ஆச்சார்யர்களின் கீதா பாஷ்யங்களுக்கு டீகா என்ற விளக்க உரை எழுதியிருக்கிறார்கள். இந்த வைதீக சம்பிரதாய முறையிலான உரைகளைத் தவிர, சமஸ்கிருதத்திலும், கிரீக், ஜெர்மன், லத்தீன், ஆங்கிலம், பிரெஞ்ச், ருஷ்யன் முதலிய பல வெளிநாட்டு மொழிகளிலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராட்டி, வங்காளி, குஜராத்தி போன்ற நம் நாட்டு மொழிகளிலும் ஆயிரக்கணக்கில் பகவத் கீதைக்கு உரை எழுதியிருக்கிறார்கள். லோகமான்ய பால கங்காதர திலகர் எழுதிய கர்ம யோகம், மகாத்மா காந்தி எழுதிய அநாஸக்தி யோகம், ராஜாஜி எழுதிய கை விளக்கு ஆகிய கீதை உரைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் பகவத் கீதையின் மகிமையைப் பறைசாற்றுகின்றன.
---------------------------------------------------------------------------------‐--
ராமர் பட்டாபிஷேகம் எப்படி நடந்தது?

ஸ்ரீராமபிரானுக்கு பட்டாபிஷேகம் எப்படி நடந்தது? எத்தனையோ ராமயணங்கள் இருந்தாலும், அதில் வால்மீகி ராமாயணத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. அந்தக் காவியத்தில் ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடந்ததை வால்மீகி எப்படி வர்ணிக்கிறார்?

அதிகாலையின் அற்புதம் திவ்யமாக இருக்கிறது. மதுரமான இசையாலும், கருவிகளின் ஒலிகளாலும், தங்க ஆபரணங்கள் அணிந்து உத்தமப் பெண்களின் நாட்டியங்களாலும், தாங்கள் எழுப்பப்டுவதைக் கண்டு நாங்கள் சந்தோஷம் கொள்கிறோம்.  வானவீதியில் முழுமையான ஒளிக்கிரணங்களுடன் அனைத்து உலகுக்கும் தேஜஸையும் ஆயுளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நடுப்பகல் சூரியன் போன்று, தாங்கள் பட்டாபிஷேகப் பெரும் வைபவத்தோடு, சிம்மாசனத்திலிருந்து எங்கள் அனைவருக்கும் அருள்பாலித்து நலம் புரிவதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறோம். பூமி உள்ள வரையிலும் தாங்கள் பரிபாலனம் நடத்த வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை! இவ்வாறாக பரதன், தலைமீது கரங்களைக் கூப்பியவண்ணமாக ஸ்ரீராமனிடம் வேண்டினான்.

பூஜிதா மாமிகா மாதா
தத்தம் ராஜ்யம் இதம் மம
தத் ததாமி புனஸ் துப்யம்
யதாத்வம் ததா மம

முன்பு எனக்கு அரசு தந்து என் தாயைப் போற்றினாய். அதை அப்படியே உனக்குத் தருகிறேன். பரதனின் சரணாகதியை அயோத்தி ராமனும் ஏற்றார். ஆசனத்தில் அமர்ந்தார். பட்டாபிஷேகத்துக்குரிய பணிவிடைகள் எல்லாம் சீராகத் தொடங்கின. ராம லக்ஷ்மண பரத சத்ருக்னார்களுடைய அலங்காரம் நடந்தேறியது. சீதாதேவிக்கு, தசரத பத்தினிகளே அலங்காரம் செய்தனர். வந்திருக்கும் வானரப் பெண்களுக்கும் அழகு செய்கிறாள் கௌசல்யை.

ததோ வானர பத்னீனாம்
ஸர்வாஸாமேவ சோபனம்
சகார யத்னாத் கௌஸல்யா
ப்ரஹ்ருஷ்டா புத்ரவத்ஸலா

சத்ருக்னருடைய ஆணையின் பேரில் இஷ்வாகு குலத்தின் தேரோட்டியான சுமந்திரர், கம்பீரமான குதிரைகள் பூட்டிய ரதத்தைக் கொணர்ந்தார். கதிரவன் போன்று ஒளிமயமாகக் காட்சிதரும் அந்த ரதத்தில் ஸ்ரீராமன் ஏறி அமர்ந்தார். சுக்ரீவனும் அனுமனும் உடன் சென்றனர். சுக்ரீவன் மனைவியும் சீதாபிராட்டியும், திவ்யமான அலங்காரத்துடன் அவர்களுடனே சென்றனர். ஸ்ரீராமனுக்கு சகல நலங்களும் சுகமும் தனமும் பெருகுவதற்கும், அயோத்தி நகரமும் அந்த நாடும் என்றும் மங்கலம் பெறுவதற்கும் உரிய சுப காரியங்களைச் செய்யுமாறு அனைவரும் வசிஷ்டரிடம் வேண்டினர். அமைச்சர்கள் பின்தொடர ஜய விஜயபீவ என்ற முழக்கம், ஜயகோஷமுமாகக் காற்றுடன் அலை மோதியது. ரகுராமனான, கல்யாண ராமனான, சீதா ராமனான, தசரத ராமனான, கல்யாண குனோஜ்வலனான, பித்ருவாக்ய பரிபாலனான, ஏக பத்னி விரதனான, சர்வஜன ரக்ஷகனான ஸ்ரீராமன் அயோத்தி நகரை நோக்கி வந்து கொண்டிருந்தார். மஞ்சள் கலந்த அட்சதையுடன் பிராமணர்களும் உடன் சென்றனர். பசுக்களும் கோலாகலத்தில் கலந்து சென்றன. குடிமக்களின் குதூகலம் பொங்க, ஸ்ரீராமன் அரண்மனைக்குள் அடியெடுத்து வைத்து, கௌசல்யாதேவி, சுமித்ரா தேவி, கைகேயி தேவி மூவரையும் நமஸ்கரித்தார். சத்ருக்னர், ராமருடைய அபிஷேகத்துக்காக சுக்ரீவனிடம் வானரர்களை அனுப்பப் பணித்தார். பொழுது புலரும் முன் வானரர்கள், ரத்னமும் தங்கமும் இழைத்த குடங்களில், கடலிலிருந்தும் நதிகளிலிருந்தும் புண்ணிய தீர்த்தத்தைக் கொணர்ந்தார்கள். ஜாம்பவான், அனுமன், வேகதர்சீ, சிஷபன் ஆகியோர் ஐந்நூறு நதிகளிலிருந்து புண்ணிய தீர்த்தத்துடன் வந்தார்கள். ஸுஷேணன், ரிஷபன், கவயன், நளன் நால்வரும் முறையே நாலா திசை சமுத்திரங்களிலிருந்தும் புனித நீரைக் கொணர்ந்தார்கள்.

பேரருள் பெற்றவரும் தசரத குல குருவுமான வசிஷ்ட மகரிஷி, புலன்களையும் புத்தியையும் சமன் செய்து, பிராமணர்களின் சம்மதத்துடன் ஸ்ரீராமனை ரத்தின ஒளிவீசும் சிம்மாசனத்தில் அமரும்படி செய்தார்.

ராமம் ரத்னமயே பீட
ஸஹஸுதம் ந்யவேசயத்

பட்டாபிஷேக வைபவம் பவித்திரமாகத் திகழ்ந்தது. வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காச்யபர், காத்யாயநர், ஸுயஜ்ஞர், கௌதமர், விஜயர் ஆகிய எட்டு மகா ஞானியர்களும் நிகழ்த்திய பட்டாபிஷேகம். எண்மரும் வேதச் சீர்மையுடன் மந்திரங்களை உச்சாடனம் செய்து ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை மணமிகுந்த திரவியங்கள் கலந்த புண்ணிய தீர்த்தத்தால் நெறிமுறைகளின்படி பட்டாபிஷேகத்தை நிறைவேற்றினார்கள். வானத்தில் திக்பாலர்களும் தேவகணங்களும் பேருவகை கொண்டார்கள். சத்ருக்னர் வெண்குடை பிடித்தார். சுக்ரீவன் வெண் சாமரம் வீசினார். வாயுபகவான் தங்கத் தாமரைகளாலான ஒளி கூடிய மாலைகளையும், ஒன்பது ரத்தினம் சேர்ந்த முத்து மாலையையும் கொணர்ந்தார். பூமி செழித்தது. மரங்களில் கனிகள் நிறைந்தன. பசுக்களையும், கன்றுகளையும், தங்க நாணயங்களையும், ஆபரணங்களையும் ஸ்ரீராமன் தானமாக வழங்கினார். சுக்ரீவனுக்குத் தங்க மாலையையும், அங்கதனுக்குத் தங்கத்தோள் வளைகளையும் வழங்கினார். சீதாதேவியிடம் சந்திரன் போன்று பிரகாசமான முத்துமாலையை வழங்கினார். பிராட்டியும் மணாளனின் விருப்பத்தை ஜாடையால் அறிந்து, அம்மாலையை அனுமனுக்கு அளித்தாள். விபீஷணர், ஸ்ரீரங்க விமானத்தைப் பெற்று லங்காபுரி சென்றார். தசரத குமாரனான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, குடிமக்கள் அனைவரையும் தமது குழந்தைகளாக நினைத்து பரிபாலனம் நடத்தி வந்தார். லக்ஷ்மணனை இளவரசாக இருக்கக் கோரினார். லக்ஷ்மணர் இசையவில்லை. பரதனுக்கு இளவரசுப் பட்டம் நிகழ்ந்தது. சிம்மாசனத்தைத் தாங்கி நிற்கிறான் அனுமன். அங்கதன் வாள் ஏந்த, பரதன் வெண்குடை தாங்க, மற்ற இரு சகோதர்களும் சாமரம் வீச, சீதையின் உவகை ஓங்க, வசிஷ்டர் மகுடம் சூட்டுகிறார். அச்வமேதம், வாஜபேயம் போன்ற யாகங்களைப் புரிந்து, ஸ்ரீராமன் ஆட்சி ராமமயமாகவே இருந்தது.
---------------------------------------------------------------------------------‐--
மஹாபாரதத்தில் மறு ஜென்மம்!

மஹாபாரதம் நிகழ்வுக்குக் காரணம: அதர்மம் அதிகரிக்க பூமி தேவி பாரம் தாங்காமல் பிரம்மாவை வேண்ட, அவர் தேவர்கள், கந்தர்வர்கள், அப்ஸரஸுகள் உள்ளிட்ட அனைவரையும் அவரவர் அம்சத்தில் பூமியில் பிறக்குமாறு கட்டளையிட்டு, விஷ்ணுவையும் அவதரிக்குமாறு வேண்டுகிறார். எனவே விஷ்ணு கிருஷ்ணராக அவதரிக்கிறார். மஹாபாரத நிகழ்வு நடக்கப் போகிறது. ஆகவே அனைத்து தேவர்களும் அவரவருக்கு உரிய இடங்களில் பிறந்து விடுங்கள் என்று கட்டளையிடுவதை ஆதிபர்வம் (65ம் அத்தியாயம்) விளக்குகிறது.

நளாயினியே திரௌபதி: நளாயினியே தனது பெண் திரௌபதியாகப் பிறந்திருக்கிறாள் என்பதை வியாஸர் சொல்லக் கேட்டு ஆச்சரியமடைந்த துருபதன் அவளது ஜனனத்திற்கான காரணத்தை வினவ, அவளது முன் ஜென்ம வரலாற்றை வியாஸர் விரிவாக விளக்குகிறார். (ஆதி பர்வம் - 213ம் அத்தியாயம்) அருவருப்பான உருவம் கொண்ட கிழவரும் வியாதியால் பீடிக்கப்பட்ட வருமான மௌத்கல்யர் என்ற மஹா முனிவருக்கு மனைவியாக வாய்த்த நளாயினியுடன் காம போகங்களில் திளைத்து வாழும்போது ஒருநாள் அதில் சலித்துப் போன மௌத்கல்யர் வைராக்கியமடைந்து பிரம்ம தியானத்தில் ஈடுபடத் தொடங்கினார். அப்போது நளாயினியை அவர் விடவே, நளாயினி பூமியில் விழுந்தாள். தான் இதுவரை அனுபவித்த போகங்களில் திருப்தியுறாதவளாயிருப்பதை நளாயினிக்கு தெரிவிக்கவே மௌத்கல்யர். துருபதனின் புத்திரியாக நீ இருப்பாய். அப்போது ஐந்து கணவர்கள் உனக்கு இருப்பார்கள். அழகான உருவம் உடைய அவர்களுடன் நீ வெகு காலம் இன்பத்தை அடைவாய் என்று கூறுகிறார். பிறகு அவள் சங்கரரை நோக்கித் தவம் புரியவே அவர் நேரில் தோன்றி, நீ ஐந்து கணவர்களை அடுத்த ஜென்மத்தில் அடைவாய் என ஆசீர்வதித்து வரம் கொடுகிறார். ஏன் ஐந்து கணவர்கள்? என்று திகைப்புடன் நளாயினி வினவ, நீ ஐந்து முறை பதியைக் கொடும் என்று கேட்டாய்! ஆகவே, உனக்கு ஐந்து கணவர்கள் அமைவார்கள் என்று மஹேஸ்வரர் பதில் அருளுகிறார். நளாயினியைப் பற்றி மஹாபாரதம் விவரிக்கையில் நள-தமயந்தியின் புத்திரியே அவள் என்ற ஒரு சுவையான செய்தியையும் அது தருகிறது.

ஹிரண்யகசிபுவே சிசுபாலன்: ஆதி பர்வத்தில் மிக விவரமாகக் கூறப்படும் புனர்ஜென்ம விவரங்கள் ஆச்சரியம் தருபவை. ஹிரண்யகசிபுவே சிசு பாலனாகப் பிறக்கிறான். விப்ரசித்தி என்ற அசுரனே ஜராசந்தனாகப் பிறக்கிறான். ப்ரஹ்லாதனுக்குத் தம்பியாக இருந்த ஸம்ஹ்லாதன் சல்லியனாகவும், இன்னொரு தம்பியாகிய அநுஹ்லாதன் த்ருஷ்ட கேதுவாகவும் பிறக்கின்றனர். அஜகன் என்பவன் ஸால்வனாகப் பிறக்கிறான். ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவரான அனுமன், த்வாபர யுகத்திலும் இருந்து பீமனைச் சந்தித்து ஆசி கூறுகிறான்.

பீஷ்மரே அஷ்டவஸுக்களில் கடைசி வஸு: அஷ்டவஸுக்கள் வஸிஷ்டருடைய சாபத்தாலும், இந்திரனுடைய கட்டளையினாலும், சந்தனு ராஜாவுக்கு கங்காதேவியிடம் புத்ரர்களாக ஜனித்தனர். அவர்களில் கடைசி வஸுவே பீஷ்மர். ருத்ரர்களுடைய கூட்டத்திலிருந்து வந்தவர் கிருபாசாரியார். துவாபுர யுகமே வந்து பிறந்து சகுனியாக ஆனது ! ஸப்த மருந்துகளின் பட்சத்திலிருந்து கிருஷ்ணனது நெருங்கிய தோழனான சாத்யகி பிறந்தான். விராட ராஜாவும் ஸப்த மருத்துக்களிலிருந்து தோன்றியவனே. பாண்டவர்களின் ஜனனம் அனைவரும் அறிந்ததே. ஹம்ஸன் என்ற பெயர் பெற்ற கந்தர்வ ராஜனே திருதராஷ்டிரனாகப் பிறந்தான். அவனது தாயார் செய்த குற்றத்தினால் ரிஷியின் சாபத்திற்கு ஆளாகிக் குருடனாக அவன் பிறக்க வேண்டி நேர்ந்தது. பாண்டு ஸப்த மருத்துக்களின் கூட்டத்திலிருந்து ஜனித்தவன். கலியின் அம்சம், கெட்ட எண்ணமுடைய துரியோதன ராஜாவாக பூமியில் ஜனித்தது. மிக நீண்ட பட்டியலான இந்த புனர் ஜென்ம விவரங்களை ஆதி பர்வம் அறுபத்தெட்டாம் அத்தியாயம் விவரிக்கிறது. பரந்த நூல் நெடுகிலும் நாம் காணும் புனர்ஜென்ம விவரங்களைத் தனி நூலாகவே ஆக்கி அதன் மர்மங்களை அவிழ்க்க முற்படலாம். இவை எல்லாம் ஹிந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றான மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தி அன்றறிவாம் என்னாது அறம் செய்க என்ற கட்டளையைப் போதித்துக் கொண்டே வருகிறது. இவற்றை நுணுகி ஆராய்ந்தால் மறம் வலிமையுறுவது போலத் தோன்றுவதும், ஆனால் இறுதியில் அறமே ஜெயிப்பதையும் பார்த்து மகிழ முடிகிறது.
---------------------------------------------------------------------------------‐--
கோயிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும்?

ஆலயங்களில் நமக்கு அளிக்கப்படும் மலர்கள் மற்றும் அனைத்து பிரஸாதங்களும் நிர்மால்யம் என போற்றப்படுகிறது. நிர்மால்யம் எனில் அழுக்கற்றது, தூய்மையானது. அவற்றில் இறைவனின் அருட்சக்தி நிறைந்து இருக்கும். அவற்றை வெறும் மலர் என்றோ அன்னம் என்றோ பார்க்கக்கூடாது. ரூபாய் நோட்டுக்கும் வெறும்தாளுக்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா. ரூபாய் நோட்டுக்களிலும் கூட அதனில் பதிக்கப்பட்ட எண்களைப் பொறுத்து மதிப்பு மாறுகிறது. இதுபோன்று ஒவ்வொரு கடவுளர்களின் பிரஸாதமும் ஒவ்வொரு சக்தி உடையது. அவற்றை நாம் பக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டு, நமது நெற்றியிலும், இருதயத்திலும் வைத்து அந்த இறை அருள் நம்முள் உட்புகுவதாக எண்ணுதல் வேண்டும். பிறகு வீட்டில் பூஜை அறை இருப்பின் அங்கு வடக்கிலோ, வடகிழக்கு திசையிலோ ஒரு தாம்பாளத்தின் மீது வைத்துவிடல் வேண்டும். வீட்டில் பெண்கள் அவற்றிலிருந்து சிறிது எடுத்து பக்தியுடன் தலையில் வைத்துக் கொள்ளலாம். மறுநாள் காய்ந்த மலர்களை நீர்நிலைகளிலோ, மரங்களின் கீழோ வைத்திட வேண்டும். நமது வீட்டில் உள்ள இறை உருவங்களுக்குவேறு மலர்களை சார்த்துவது சிறந்தது.
---------------------------------------------------------------------------------‐--
முறைப்படி நடைபெறும் திருமணத்தின் சடங்குகளின் விபரம்!

நடைமுறையில் உள்ள மாங்கல்ய தாரணத்திற்குப்பின், மணமகன் தன் கீழ் நோக்கிய வலது உள்ளங்கையால், மணமகளின் மேல் நோக்கிய வலது கை ஐந்து விரல்களையும் சேர்த்துப்பிடிப்பது தான் பாணிக்ரஹனம்.

கைத்தலம் பற்றியவாறு அக்னிக்கு வடபுறத்தில் மணமகன் தன் இடது கையால், மணமகளின் கால் கட்டை விரலை பிடித்துக்கொள்ள வேண்டும். அன்னவளமை, உடல் வலிமை, விரதங்களில் சிரத்தை, சுகவாழ்க்கை, செல்வச்செழுமை, பருவ காலங்களில் தன்மை, யாகயக்யஞங்களால் பெருமை என்ற ஏழு பாக்கியங்களையும் விஷ்ணு எப்போதும் அளித்துக் காப்பாராக, என்று கூறி ஏழு அடி எடுத்து வைக்க வேண்டும். இதுவே ஸப்தபதி எனப்படும். இந்த ஏழுடிகளை கடந்து வந்து நாம் நண்பர்களாகி விட்டோம். இனி வாழ்நாள் முழுவதும் அன்புடனும் ஆதரவுடனும் இணைபிரிய மாட்டோம். இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து மனம் ஒன்றி வாழ்வோம் என்று மணமகன், மணப்பெண்ணிடம் உறுதி மொழி அளிக்கிறான்.
---------------------------------------------------------------------------------‐--
கல்வியில் சிறந்து விளங்க செல்ல வேண்டிய கோயில்!

தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் திருவாரூர் அருகில் உள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் உள்ள மதுரபாஷினிக்கு வழிபாடு செய்கின்றனர். சிவனுக்கு வெப்பமான நெற்றிக்கண் இருப்பதைப்போல், இத்தல அம்மன் மதுரபாஷினிக்கு சந்திரனைப் போல் குளிர்ச்சியான நெற்றிக்கண் இருக்கிறது. பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் எழுதப்பட்ட வந்தேமாதரம் தேசபக்திப்பாடலில் வரும் மதுரபாஷிநீம் என்ற வரிக்கு அடிப்படையான இவள், மனிதனுக்கு தேவையான 34 சவுபாக்கியங்களையும் தரும் ÷க்ஷõடாட்சர தேவியாக, ராஜராஜேஸ்வரியாக, கல்விக்கு அரசியாக அருளுகிறாள். இதனால் இத்தலம் வித்யாபீடமாகக் கருதப்படுகிறது. அகத்தியர் இவளை, ஸ்ரீசக்ர தாரிணி, ராஜசிம்மாசனேஸ்வரி, ஸ்ரீலலிதாம்பிகையே என புகழ்ந்து போற்றியுள்ளார். கல்வி மேல்படிக்க செல்லும் மாணவர்கள் இந்த அம்மனுக்கு தேன் அபிஷேகம் செய்து, அதனை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி பெருகி அறிவாற்றல் வளரும். அதேபோல் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் மதுரபாஷினிக்கு தேன் அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை செய்து, அந்த தேனை குழந்தையின் நாவில் தடவி வேண்டிக்கொண்டு, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறையும் இங்கு உள்ளது.இதனால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. வாய் பேச முடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் மதுரபாஷினி அம்மனை வழிபாடு செய்தால் விரைவில் சிறந்த பலன் கிடைக்கும் என்பது நிச்சயம்.

இருப்பிடம்: திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

போன்:  98947 81778, 99428 81778.
---------------------------------------------------------------------------------‐--
சித்ரகுப்தனின் அருள்பெற வேண்டுமா?

உலக மக்களின் கர்மபலன்களை நியாயம் தவறாமல் நிர்ணயிப்பவர் சித்ரகுப்தர் ஆவார். என்றும் பதினாறு சிரஞ்சீவியாக மார்க்கண்டேயர் இருப்பது போல், இவரும் பன்னிரண்டு வயது சிரஞ்சீவியாகத் திகழ்பவர். தேவ ஸ்வரூபர். பிரம்ம குரு. அனைத்து லோகங்களின் அமைப்பைப் பரிபாலனம் செய்பவர். உலகத்து உயிரினங்கள் அன்றாடம் செய்யும் பாவ புண்ணிய செயல்களைத் தொகுத்து தனது பதிவேட்டில் பதிய வைக்கும் தலையாய பணியைப் பொறுமையுடன் செயல்படுத்துபவர். மனிதர்கள் தங்களுக்குத் தானே ஆத்ம விசாரம் செய்துகொள்வதற்கு வித்திடுபவரும் இவரே! நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் கர்மவினைகளை இம்மியும் பிசகாமல் குறிப்பெடுப்பது அவ்வளவு எளிதா என்ன! சித்ரகுப்த மகராஜர் சாதாரணமாகக் கிரீடம் தரித்த தோற்றத்தில் காட்சியளிப்பார். மராட்டிய புண்ணிய புருஷர்களான ஏகநாதர், நாமதேவர் அணிந்திருப்பது போன்று துணியிலான தலைப்பாகையிலும் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளிக்கும் கோலமும் உண்டு.

உமாமகேஸ்வரரின் அருளால் தோன்றியவர்! பார்வதி தேவியின் ரூபமாகவும் பராசக்தியின் அவதாரமாகவும் அறியப்படும் இவர், தன் எட்டுக் கரங்களிலும் சித்தர்களை அமர்த்திக் கொண்டுள்ளதோடு, எட்டாவது கரத்தில் கார்க்கினி தேவியை அமுதக்கலசமாகவும் கொண்டு அன்ன வாகனத்தில், ஆயுர்தேவியின் சந்நிதானத்தில் தலைப்பாகை, எழுதுகோல் ஏட்டுடன் அமர்ந்திருக்கும் சிறப்புக் கோலத்திலும் சித்ரகுப்தரைத் தரிசிக்கலாம்! சித்ரகுப்தருக்கு பட்டுப் பீதாம்பரத் தலைப்பாகை வந்து சேர்ந்ததற்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணியும் உண்டு! ஒருமுறை பலகோடி ஜீவன்களின் கர்மவினைகளைக் கணக்கெழுதும் போது, அவருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. அந்த வினைப்பயன் கணக்கில் பெரும் பகுதி தீவினையாகவே இருப்பதைக் கண்டு கலங்கினார். தனது எழுதுகோலால் புண்ணிய ஆத்மாக்களின் கணக்கை எழுதவே முடியாதோ? இது என்ன சோதனை? இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிக்கொண்டு விட்டோமே என வருந்தியவர், தன் தலையில் ஓங்கிக் குட்டிக்கொண்டார். அவ்வளவு தான்! தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்காமல் ஏன் விசாரப்பட வேண்டும் என இறைவன் நினைத்தாரோ என்னவோ, அவருக்கு ஒரு சோதனையை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்துவிட்டார். அழுத்திக் குட்டிக்கொண்டதில் சித்ரகுப்தருக்கு தீராத மண்டையிடி ஏற்பட்டுவிட்டது.

தாங்கிக்கொள்ள முடியாத வலியால் அவதிப்பட, தனது அன்றாட வேலையில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் கர்மங்கள் தேக்கமடைய, அனைத்து லோகங்களும் செயலிழக்க ஆரம்பித்தன. பதற்றமடைந்த சித்ரகுப்தர் ஸ்ரீகிருஷ்ணரை மானசீகமாகத் தொழுது வேண்டிக்கொண்டார். பரந்தாமன் மனமிரங்காமல் இருப்பாரா? சித்ரகுப்தர் முன் தோன்றினான் கேசவன்! சித்ரகுப்தா! தலைவலி ரொம்பப் பலமோ? என்று புன்முறுவலுடன் வினவிய மாயவனை அடிபணிந்த கணக்கர், பிரபோ! என்னை இந்த இக்கட்டிலிருந்து காத்தருளுங்கள் சுவாமி! என வேண்டினார். முறுவலித்த மாதவன், தன் இடையில் அணிந்திருந்த பட்டுப் பீதாம்பரக் கச்சையை அவிழ்த்து, சித்ரகுப்தரின் சிரசில் கிரீடமாக அணிவித்தார். அதுவரை வாடிய முகத்துடன் தென்பட்டவர், மனம் லேசாகிப் போனதை உணர்ந்தார். வாட்டியெடுத்த தீராத் தலைவலி, உடனே அகன்றது. தலைக்கு வந்த வலி, தலைப்பாகையை அணிவித்ததும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது! அகமகிழ்ந்த சித்ரகுப்தன், மாலவனைத் தொழுதுப் போற்றினார். இன்றிலிருந்து உன்னை வழிபடுவோருக்கு, தங்கள் குறைகளைக் களைந்து அவற்றை நிவர்த்தி செய்துகொள்ளும் பக்குவம் உண்டாகட்டும்! என்ற வரத்தை அருளினார் பரந்தாமன். மறுபடியும் கணக்கர் வேலையில் மூழ்கிவிட்டார் சித்ரகுப்தர். ஆகவே வேணுகானம் இசைக்கும் ஸ்ரீகிருஷ்ணரைத் தினமும் வழிபட்டால், சித்ரகுப்தரின் அருட்பார்வை நம்மீது பரவும் என்பது ஐதீகம்.
---------------------------------------------------------------------------------‐--
நவராத்திரி

ஒவ்வொரு காரியம் செய்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். கண் இருந்தால்தான் பார்க்க முடியும், குருடனால் பார்க்க முடியாது. காதுதான் கேட்கும், செவிடனால் கேட்க முடியாது. இப்படி ஒவ்வொரு பணி செய்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். இந்த சக்திகளுக்கெல்லாம் சக்தி அளிப்பவள் பராசக்தி. அந்த பராசக்திக்கு உருவம் கிடையாது. அது மின்சாரம் போல. காண முடியாது, உணரத்தான் முடியும். ஆனால் அதை பூரணமாக உணர விரும்பி உருவமாக அமைத்து வழிபடும் போது அதற்கு சில விசேஷ சக்திகள் கிடைக்கின்றன. அதை வைத்துத்தான் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று சக்திகளாக வழிபடுகிறோம்.

மனிதன் காலை எழுந்ததும் முதலில் தன் கரத்தை உற்றுப் பார்க்கவேண்டும். கையின் மேல்புறத்தில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், கீழே துர்க்கையும் கண்டு வணங்க வேண்டும் என்று சொல்வார்கள். மனித வாழ்வின் ஆதாரம் செல்வம். அதற்கு அதிபதியான மகாலட்சுமி முதலில், அந்த செல்வத்தை அறிந்து, உணர்ந்து, நல்வழியில் பயன் படுத்த அறிவு அவசியம். அந்தக் கல்வியின் நாயகியான சரஸ்வதி அடுத்து, இத்தனை இருந்தும் இதனைக் கட்டிக் காக்கும் பராக்ரமம், வீரம் வேண்டுமல்லவா? அடுத்ததாக துர்க்கை இருக்கிறாள் என்றும் இந்த வாக்கியத்தை விளக்கம் சொல்வார்கள். அப்படி, காலை எழுந்தவுடன் இந்த மூன்று சக்திகளையும் பிரார்த்தித்துக் கொண்டோமானால் வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய அத்தனை பலன்களும் மிகச் சுலபமாக நமக்குக் கிட்டுவிடும்.

இதைத்தான் அக்காலத்துப் பெரியோர்கள் தினம் செய்து வந்தார்கள். பிற்காலத்தில் இப்பழக்கம் மிகவும் குறைந்து பூஜை செய்வதோடு சரியென்று மாறி தற்போது அதுவும் அருகி வருகிறது. இப்போது ஏதூவது விசேஷங்களில் மட்டும் பூஜை செய்தால் போதும் என்று பலரும் கருதுகிறார்கள். அதையாவது ஒழுங்காகச் செய்யவேண்டுமென்பதற்காகத்தான் நவராத்திரி, சிவராத்திரி எல்லாம் இருக்கிறது.

பார்வதி தேவியே இரவின் ஸ்வரூபமாகவும், பரமசிவனே பகலின் ஸ்வரூபமாகவும் இருப்பதாக ஒரு புராணம் கூறுகிறது. பொதுவாக இரவிலே பூஜை செய்வது கூடாது. ஆனால் நவராத்திரியிலே மாத்திரம் இரவில் பூஜை செய்யலாம். சிவராத்திரியில் சிவனுக்கு பூஜை செய்யலாம்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடும் செய்வார்கள். சரஸ்வதி வழிபாட்டின் இறுதியில், நல்லறிவும், ஞானமும் வேண்டி, விஜயதசமியன்று பூஜையைப் பூர்த்தி செய்வார்கள்.

வடநாட்டிலும் இந்த நவராத்திரி பூஜை மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது. அங்கு விஜயதசமியன்று இந்த பூஜா விக்ரகங்களை பெரிய ஊர்வலமாக எடுத்துச் சென்று சமுத்திரத்தில் கலக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. துர்கா பூஜை என்று கல்கத்தா பகுதிகளில் இன்னும் அது மிகப் பிரசித்தம்.

இதே போன்று வஸந்த பஞ்சமியன்று அஸ்ஸாம், பெங்கால் பகுதிகளில் சரஸ்வதி பொம்மைகளைப் பெரிதாக ஊர்வலமாகக் கொண்டு சென்று சமுத்திரத்தில் கரைப்பார்கள்.

இப்படி துர்கா, லட்சுமி, சரஸ்வதி இந்த முக்கியமான மூன்று சக்திகளுக்கு நாடு முழுவதும் விழா கொண்டாடப் படுகிறது.

துக்கத்தைப் போக்குபவள் துர்க்கை.

செல்வத்தைப் பொழிபவள் லட்சுமி.

ஞானத்தை நல்குபவள் சரஸ்வதி.

இந்த மூன்று சக்திகளின் வழிபாட்டுக்குரிய காலம் இந்த நவராத்திரி.

சின்னச் சின்ன அற்ப நலன்களை எதிர்பார்த்து வழிபடுவதற்கல்ல இந்த பூஜை. இனி பிறவாத மிக உயர்ந்த நிலையை அருள வேண்டுவதுதான் இந்த பூஜையின் நோக்கம்.

ஞானத்தோடு, ஆத்ம சுத்தியோடு இந்த பூஜை நிறைவுருவதைக் குறிக்கும் படியாக ஞானவாஹினியான சரஸ்வதி பூஜையோடு இவ்விழா நிறைவுறுகிறது.

இந்த வகையிலே, ஒவ்வொருவரும் நவராத்திரி காலத்திலே நல்லெண்ணம், நல்ல சிந்தனையுடன் அம்பாளை பூஜை செய்து, தியானித்து வழிபட்டு வாழ்வில் எல்லா சுகங்களையும் பெற வேண்டுமாய் வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றோம்!
---------------------------------------------------------------------------------‐--
வேதமே ஆதாரம்

நம்முடைய வைதிக சனாதன தர்மத்திற்கு ஆதாரங்கள் வேதங்கள்.

வேதங்களில் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதமென நான்கு பிரிவுகள் உள்ளன.

ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களுக்கு முறையே ரிக் வேதத்திற்கு 21

சாகைகள், யஜுர் வேதத்திற்கு 101 சாகைகள், ஸாம வேதத்திற்கு ஆயிரம்

சாகைகள், அதர்வண வேதத்திற்கு ஒன்பது சாகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கிளை வேத பாகத்திற்குத் ஸம்ஹிதா பாகம், ப்ராம்மண பாகம் என பிரிக்கப்படும். ப்ராம்மண பாகத்தில் உபநிஷத்தும் ஒரு பகுதியில் வருகிறது. உபநிஷத் என்ற சொல்லுக்கு அர்த்தம் பரமாத்மாவினுடைய சமீபத்துக்கு அழைத்து செல்வது என்று பொருள். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் வேத அத்யயனம் செய்ய வேண்டும், அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும், அதன் படி கர்மானுஷ்டானங்கள் செய்ய வேண்டும் என்பது நியதி. கர்மாக்கள் நித்ய கர்மா, காம்ய கர்மா, நைமித்திக கர்மா என்று மூன்று வகைப்படும். நித்ய கர்மா என்றால் நித்யம் செய்வது என்று பொருள் அல்ல, தவறாமல் செய்ய வேண்டும் என்று பொருள். சில க்ரமாக்கள் தினந்தோறும் செய்ய வேண்டியதாக இருக்கும். சில க்ரமாக்கள் பட்சம், மாத, வருஷங்களில் செய்வதாக இருக்கும். இதைச் செய்தே ஆகவேண்டும் என்பது விதி. நித்ய கர்மா செய்வதனால் விசேஷ பலன் ஒன்றும் கிடையாது. பாபநிவர்த்தியும், மனத்தூய்மையும் கிடைக்கும். நைமித்திக கர்மாவை நிமித்தம் ஏற்படும் போது செய்ய வேண்டும். நிமித்தம் யாருக்கு ஏற்படுகிறதோ, எப்போது ஏற்படுகிறதோ அப்போது செய்வதற்கு நிமித்த கர்மா என்று பெயர். நிமித்த கர்மாவிற்கு பலன் எதன் நிமித்தமாக செய்கிறோமோ அதனுடைய பலனை அடையவே. சூரிய க்ருஹணம், சந்திர கிருஹணங்கள் வருகின்றன. அப்போது செய்யவேண்டிய கர்மாக்கள் நிமித்த கர்மாக்கள் என்று சொல்லப்படுகின்றன. ஏனென்றால் சூரிய, சந்திர கிரஹண நிமித்தத்தை வைத்துச் செய்வதால் அந்தப் பெயர். நிமித்த கர்மா செய்வதன் மூலம் விசேஷ பாப பரிகாரம் உண்டு - பலனும் உண்டு.

மூன்றாவதாக காம்ய கர்மா. ஒரு பலனை உத்தேசித்து செய்வது காம்ய
கர்மா. மழை பொழிய வேண்டும், சத்ருபாதை தீரவேண்டும், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் போன்ற உலகாயதனமான ஆசைகளை
வைத்துக் கொண்டு செய்யப்படும் கர்மாக்கள் எல்லாம் காம்ய என்று
சொல்லப்படுகிறது. காம்ய கர்மாவிற்கு பலன் நாம் விரும்பிய பலனை அடைவது. இந்த மூன்று கர்மாக்களையும் செய்வது மனிதனுடைய கடமை. இந்த கர்மாக்களை செய்வதன் மூலமாக வேதத்தில் சொல்லப்பட்ட கர்மாக்களை செய்தவர்களாக ஆகி விடுவோம். இவைகளைப் பற்றி சொல்வது ஸம்ஹிதா பாகம், ப்ராம்மண பாகத்தில் சில பாகம். இந்த கர்மாக்களை செய்து அதனால் வரக்கூடிய பலனை ஈச்வரனுக்கு அர்ப்பணம் செய்து விட்டால் அதனால் நம் வாழ்கையில் துக்கம் ஏற்படாது. சுகம் கிடைக்கும். மனதுக்கு அமைதி கிடைக்கும். இந்த நிலையோடு நம் வாழ்க்கையில் நாம் ஈச்வரனைப் பற்றியும், பரமாத்மாவைப் பற்றியும் அறிந்து கொள்வதற்குச் சாதகமாக பல உபாசனைகளைப் பற்றியும், ஈச்வரனைப் பற்றியும், பரமாத்மாவைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்காக, மகரிஷிகள் தவம் செய்த, பரிசீலனை செய்து நூல்களை எழுதியுள்ளார்கள். கர்ம கண்டம் சம்பந்தமான விஷயங்களை அறிந்த கொண்டு அதற்கேற்றவாறு சூத்ரங்களை ஜைமினி மகரிஷி எழுதியுள்ளார். அந்த சூத்ரங்களுக்கு சப்ரசுவாமி போன்றவர்கள் எல்லாம் பாஷ்யங்களையும் எழுதியுள்ளார்கள். இந்த வேதங்களுக்கு எல்லாம் அர்த்தத்தை வித்யாரண்யர் என்ற பெரிய சன்யாசி வேதத்துக்கு பாஷ்யங்களை எழுதியுள்ளார்கள். உபநிஷத்துக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேதவ்யாசர் ப்ரும்ம சூத்ரம் என்ற நூலை எழுதியுள்ளார். இதற்கு ஆதிசங்கரர் பாஷ்யம் எழுதியுள்ளார். இந்த ப்ரம்ம சூத்ரத்திற்கு ராமானுஜர், மத்வர், வல்லபர், சைவ சம்பந்தமான ஸ்ரீ கண்டர் போன்ற பலரும் ஆதிசங்கரரும் பாஷ்யங்கள் எழுதியுள்ளார்கள். ஆனால் ஆதிசங்கரர் உபநிஷத் மந்திரங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு ப்ரம்ம சூத்ரத்திற்கு பாஷ்யங்கள் எழுதியுள்ளார். இந்த வேத வாக்யத்திற்கு விரோதமாகச் சிறிதளவு கூட அவருடைய பாஷ்யத்தில் காண முடியாது. சங்கராச்சாரியார் தவிர இதர பாஷ்யங்கள் யாவையும் ஆதிசங்கரர் போல் உபநிஷத் வாக்யங்களோடு பாஷ்யம் எழுதவில்லை. புராணங்களை
அடிப்படையாகவைத்துக்கொண்டு ப்ரும்மசூத்ரத்திற்கு பாஷ்யம் எழுதியுள்ளார்கள்.

இதே போல் தசோபநிஷத்துக்கும், பகவத் கீதைக்கும் ஆதிசங்கரர் பாஷ்யம்
எழுதியுள்ளார்கள். இதைத்தவிர இந்த மூன்று கிரந்தத்தின் சாரமாக விவேக
சூடாமணி போன்ற நூல்களையும் தன்னுடைய சொந்த அனுபவத்தின் மூலமாக ஆதிசங்கரர் எழுதியுள்ளார். இதே போல் குழந்தைகள் படிக்க வசிதயாக விநாயகர் முதல் ஆஞ்சநேயர் வரை பல ஸ்தோத்ரங்களையும் வேதாந்த கருத்துக்கு ஏற்றவாறு எழுதியுள்ளார். பெரியவர்களடைய சதாப்தி நடைபெறகிற சமயத்தில் இது போன்ற நல்ல நூல்களை

படித்து பிறவிப் பயனை அடைய ஆசீர்வதிக்கிறோம்.
---------------------------------------------------------------------------------‐--
தாய் - தந்தை - குரு - தெய்வம்

(சிதம்பரனார் மாவட்டத்தில் கும்மிடிக்கோட்டை - வாலை குருநாதஸ்வாமி கோயிலில் கும்பாபிஷேகத்தில் சுவாமிகளின் அருள்வாக்கு)

கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். இந்த உயர்ந்த மனிதப்பிறவி எடுத்த எல்லோரும் நல்ல பழக்க வழக்கங்களோடு விளங்க வேண்டும். பக்தியும் மரியதையும் இருந்தால்தான் நல்ல பழக்கவழக்கங்கள் வரும் மூன்று பேர்களிடத்திலே பக்கிதியோடு இருக்க வேண்டும்.

தாய் தந்தையரிடத்திலே பக்தியோடு இருக்க வேண்டும். மரியாதையோடு இருக்க வேண்டும். குருவினடத்திலே பக்தியோட இருக்க வேண்டும். தெயவத்தினிடத்திலே பக்தியோடு இருக்க வேண்டும்.

முன்காலத்திலே பார்த்தால், படிப்பைத் தேடிக் கொள்வதற்காக குருவினடித்திலே சென்று அவருக்கு வேண்டிய சேவைகள் பணிவிடைகளெல்லாம் செய்து, பல காலங்கள் அவருடனேயே இருந்து, பாடமெல்லாம் கற்றுக் கொண்டார்கள். துரோணாச்சாரியாரிடத்திலே பலபேர் படித்தார்கள். ஆசிங்கரரிடத்திலே பலபேர் படித்தார்கள்.

ஒரே ஒரு முனிவரிடத்திலே ஆயிரம் பேர்கள் கூட படித்தார்கள். இதுபோல் பல நூறுபேர் சேர்ந்து படிக்கக் கூடிய இடத்திற்கு, கடிகாஸ்தானம் என்று பெயர். பல்கலைக்கழகம் என்று சொல்லுகிறோமே அது போன்று கடிகாஸ்தானம்.

உபமன்யு என்று ஒருவர், அவர் ஒரு முனிவரிடத்திலே சேவை செய்து, அவர் சொல்லும்படியெல்லாம் கேட்டுக்கொண்டு படித்தார். அவர் என்ன சாப்பிடச் சொல்லுகிறாரோ, அதைத்தான் சாப்பிடுவார். அவர் சொல்லும்படியெல்லாம் இருந்துகொண்டு கஷ்டப்பட்டுப் படித்தார்.

இதுபோல் கிருஷ்ணபரமாத்மா கூட சாந்த்வீபணி என்ற முனிவரிடத்திலே.. பகவானே.. படித்தார். ராமபிரானுக்கு விஸ்வாமித்திரர் நல் உபதேசம் செய்தார். எப்படிப் பசியை நீக்குவது, எப்படித் தூக்கத்தை வெல்வது என்றெல்லாம் விஸ்வாமித்திரர் ராமபிரானுக்குச் சொல்லிக் கொடுத்தார். அது குருபக்தி.

அதுபோன்று தாய் தந்தையர்களுக்குச் செய்ய வேணடியதைச் செய்து, மதித்தார். இப்படி மதித்தவர்களில் பெரிய உதாரணம் பிள்ளையார்.

உலகமனைத்துமே தாய் தந்தையர்தான் என்று தாய் தந்தையரையே வலம் வந்தவர். அதன் மூலமாக ஒரு பழத்தையே பெற்றவர்.

அதுபோல, சிரவணகுமாரன் என்று ராமாயணத்திலே வருகிறது, வயதான தாய் தந்தையருக்குப் பணிவிடைகளெல்லாம் செய்து வந்தார். ஒரு சமயம் தசரத மகாராஜா வேட்டைக்காகச் செல்லும்பொழுது ஒரு யானை தண்ணீர் குடிக்கிற மாதிரிச் சத்தம் கேட்டது. அதைப் பார்த்து சத்தத்தைக் கேட்டு யானை தான் தண்ணீர் குடீக்கிறதாக்கும் என்று நினைத்து அவர் அடித்தார். அவர் சத்தத்தைக் கேட்டு திக்கை அறிந்து கொண்டு அடிக்கக் கூடியவர் என்னும் திறமைக்காக.. வேறு ஒன்றுமில்லை.. அந்த நேரம் மனிதக்குரல் கேட்டவுடனேயே அவர்களிடத்திலே போய் மன்னிப்பெல்லாம் கேட்டுக்கொண்டார் தசரத மகாராஜா.

மகாராஷ்டிராவிலே பண்டர்பூர் என்று ஒர் ஊர் இருக்கிறது. சில படங்களைப் பார்த்தால் தெரியும். இடுப்பிலே கை வைத்துக்கொண்டு ஒரு பெருமாள் இருப்பார்.

அவரை விட்டல் என்று சொல்லுவார்கள். அந்த இடத்திலே புண்டரீகன் என்று ஒருவர் இருந்தார். அவர் தாய், தந்தையர்களுக்கெல்லாம் பணிவிடை செய்து வந்தார். கூப்பிட்டால் மட்டுமே வரக்கூடிய ஸ்வாமி, இவ்வளவு நல்லவர்கள் இருக்கிறார்களே என்று தானாகவே வந்தார், தாய் தந்தையர்களிடத்திலே பக்திக்கு இது போன்றவர்கள் உதாரணங்கள்.

அதேபோன்று தெய்வத்தினிடத்தில் பக்திக்கு, துருவன் என்று ஒருவர் இருந்தார். ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர், சின்ன வயதிலேயே தவம் செய்தார். அதே போன்று பிரஹலாதன் சின்ன வயசிலேயே தபஸ் பண்ணினார். சின்ன பாலகராக இருந்தவர் பெரிய ஞானத்தைப் பிரசாரம் செய்யக்கூடிய ஞானஸ்தனாக விளங்கினார். இவர்களெல்லாம் சிறந்த தெய்வ சக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள்.

இதுபோல், தாய் தந்தையர் குரு, தெய்வம் இவர்களிடத்தில பக்தி செய்து நல்லதொரு மனப்பக்குவத்தை அடைந்து அதன் மூலமாக இறைவனுடைய அருளைப் பெற்றவர்கள், ஞானத்தைப் பெற்றவர்கள், முக்தியை அடைந்தவர்கள், ஆனந்த அனுபவ நிலையிலேயே திளைத்திருந்தவர்கள் நம்முடைய முன்னோர்கள் எல்லாம் ஈஸ்வரனிடத்திலே பக்தியை வைக்க வேண்டும். அந்த பக்தி மாறுதல் அடையக் கூடியதாக இல்லாமல் சஞ்சலமும் சந்தேகமும் உள்ளதாக இல்லாமல் தீர்மானமானதாகவும், அகங்காரம் கர்வம் இல்லாததாகவும் இருக்க வேண்டும், பிரியத்துடன் இருக்க வேண்டும். பிரார்த்தனைகளை நல்ல பிரார்த்தனைகளாகச் செய்ய வேண்டும், தர்மத்தினுடைய அடிப்படையில் பிரார்த்தனைகள் அமைய வேண்டும். அப்படி என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நமக்குத் தெரிய வில்லையென்றால் 'என்ன கொடுத்தால் எனக்கு நல்லதோ, அதைக் கொடுங்கள்' என்று பிரார்த்தனை செய்ய வாவது தெரிந்து கொள்ளவேண்டும். இப்படியாக பக்தி அமைய வேண்டும்.

அப்படி ஒரு பக்தி செய்வதற்காகத்தான் உருவ வழிபாடெல்லாம் நாம் செய்து வருகிறோம். எல்லா இடத்திலேயும் நிறைந்திருக்கக்கூடியவர் ஸ்வாமி. அவரை அதே ரூபத்திலே நாம் தெரிந்து கொள்வது கடினம். அதற்காகத்தான் மூர்த்தி வழியாக, உருவத்தின் வழியாக வழிபடுகிறோம்.

தீபத்தை வழிபடுகிறோம். தீபமங்கள் ஜோதி என்று சொல்லுகிறோம்.

இது போல தீபத்தை வழிபடுவதை, ஆதிசங்கரர் முதலாகப் பல பேரும் சொல்லியிருக்கிறார்கள். சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஆதிசங்கரர் அம்மனைப் பற்றிச் சொல்லும் போதும் இ தை சொல்லியிருக்கிறார்.

மிருத்யுஞ்சயன் என்று ஒரு ஸ்வாமி. ஈஸ்வரனுடைய ஒரு விதம். பதினாறு வயதில் ஒரு மார்க்கண்டேயர். வயது முடிந்தவுடனயே எமன் வந்தபோது ஈஸ்வரனை பக்தி செய்தார். எமன் வந்தார். ஈஸ்வரனுடைய அருள் இருந்ததனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பக்திக்காக ஈஸ்வரன் இவருக்கு ஆசி புரிந்தார். அந்த மிருத்யுஞ்ஜயரைப் பற்றிச் சொல்லும்போது அந்த தீபத்தைப் பற்றியும் சொல்லி எப்படியெல்லாம் தீபம் இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

ஒரு தீபத்திலிருந்து இன்னொரு தீபம் எரிவது போல் ஞானம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது தாத்பர்யம். அதையும் நம்முடைய

உருவ வழிபாட்டில் சேர்த்தார்கள், பல தீபங்களைப் பற்றியும் பல நூல்களிலும் சொல்லியிருக்கிறார்கள்.

'மாதா ச பார்வதீ தேவீ, பிதா தேவோ மஹேஸ்வரா:' என்பத ஸ்லோகம். அதேதான், 'சொல்லும் பொருளும் என் நடமாடும்' என்று ஆதீ தம்பதிகள் என்று பெயர். வால்மீகி முனிவர் ஆதிகவி. ஒருவர் புரிந்து கொள்வதற்காகப் பேசுகிறோம். நம்முடைய இலக்கியங்கள் எல்லாம் பாட்டில் இருக்கிறது தேசிகர் விருத்தம், கலிவெண்பா, கட்டளைக் கலிவெண்பா, சக்கர பந்தம் இப்படிப் பல முறைகளில், வெண்பாக்களில் அமைந்திருக்கிறது, எழுத்துக்களில் குறில் நெடில் எல்லாம் வைத்து வெவ்வேறு விருத்தங்கள் அமைந்திருக்கின்றன. அந்தாதி என்று சொல்லுகிறோம், அதுபோல் பல விதங்களில் அமைந்துள்ளது. முதல் முதலில் பாட்டு என்று அமைத்தவர் வால்மீகி முனிவர். அவர்தான் முதல் முதலாக ராமாயணத்தை எழுதியவர். முதலில் மனிதன் எழுதிய பாட்டு என்றால் அதுதான்.

அதுபோல் பார்வதி பரமேஸ்வரன் இரண்டு பேரும் ஆதி தம்பதிகள். 'ஏகபிம்பம் சிவார்ப்பணம்' என்பதாக பக்தியோடு சமர்ப்பிக்க வேண்டும். சுதோஷி என்று பெயர். ஒரு தும்பைப்பூ. அது இருந்தாலே சந்தோஷப்படக்கூடியவர் ஸ்வாமி, சிவ சிவ சிவ சிவ என்று சொன்னாலே போதும். கங்காதரர் அவர் ,ஒரு புனிதமான எண்ணத்தைக் கொடுக்கக்கூடிய, பாவங்களைப் போக்கக்கூடிய கங்கையை நமக்காகத் தரித்துக் கொண்டிருப்பவர், அவருக்கு கங்கையினால் ஆகவேண்டியது ஒனறுமில்லை. அவருக்கு எந்தப் புனிதத் தன்மையும் வேண்டியதேயில்லை. மனிதர்கள், இந்த உலகத்திலே இருக்கக்கூடியவர்கள், நல்லதொரு மனதுடன் இருக்கவேண்டும், பாவங்கள் நீங்க இருக்கவேண்டும் என்பதற்காக, பகீரதன் தவம் பண்ணினதை ஏற்றுக்கொண்டு அதற்காகத் கங்கையைத் தருவித்துக் கொடுத்தவர். அதனால் கங்காதரன் என்று பெயர்.

அம்பாள், இந்த அம்பாளுடைய கருணையானது தனியானது, முனிவர்கள் எல்லோரும் அம்பாளுடைய பக்தியைச் செய்த ஞானத்தைச் செய்திருக்கிறார்கள். இந்திரனுக்கு ஞானத்தை உபதேசித்தவள் அம்பாள். ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியெல்லாம் செய்திருக்கிறார். காமாட்சியம்மனிடத்திலே ஸ்ரீ சக்ரப்பிரதிஷ்டை செய்திரூக்கிறார். அதே போன்று திருவானைக்கா. அது நீரைச் சேர்ந்த ஸ்தலம். அங்கே அம்பாளுக்கு காதணிகள் இருக்கிறதே, அதை தாடங்கம் என்று சொல்லுவார்கள். அந்த தாடங்கத்தை அணிவித்தவர். இதுபோன்று பல இடங்களிலே ஆதிசங்கரர் பக்தி செய்திருக்கிறார்.

காளிதாஸர் சாதாரணமாக இருந்து, அம்பாளுடைய அருளினாலே பெரிய மகாகவி ஆனவர். காஞ்சிபுரத்திலே ஒருவர் ஊமையாக இருந்தார். அம்மனின் அருளாலே பேசும் சக்தி பெற்றார், பாடினார். வேறு யாரைப் பற்றியும் பாடவோ பேசவோ விரும்பாமல் இதுவே போதும் என்று இருந்துவிட்டார். ஐந்து விதங்களிலே அம்மனைப் பற்றிப் பாடியிருக்கிறார். ஐநூறு பாடல்கள். அதில் ஒரு பகுதியில் அம்மனுடைய பாதங்களை, மந்தஹாஸத்தை (புன்னகை) கடாட்சத்தை (பார்வை) எல்லாவற்றையும் பற்றி நூறு நூறு எழுதியிருக்கிறார். அந்த அளவுக்கு பக்தியினுடைய மகிமை !

ஐம்பத்தி ஒரு சக்தி பீடங்கள் இருக்கின்றன. அம்பாதி என்ற ஊரிலே ஐம்பது

ஷேத்திரங்கள் இருக்கின்றனவே அதற்கெல்லாம் சேர்த்த மாதிரி கோயில் கட்டியிருக்கிறார்கள். குஜராத்தில் இருக்கிறது காமாட்சியம்மன் கோயில். இமயமலை, காஞ்சீபுரம் என்று எங்கெங்கெல்லாம் அம்மனுடைய சக்தி பீடம் இருக்கிறதோ அதற்கெல்லாம் கோயில் கட்டியிருக்கிறார்கள்.

இப்படி அம்பாளுடைய பக்தர்களாக விளங்கியவர்கள் எல்லோரும் பெரிய ஞானிகளாக விளங்கியிருக்கிறார்கள் அகத்தியர். தெய்வீகத்துக்கும் தமிழ் மொழிக்கும் முக்கியமானவர் அந்த அகத்திய முனிவருடைய தர்மத்தின் லோபாமுத்திரை. இந்த லோபாமுத்திரை அம்மனுடைய பக்தை. இதுபோன்று பெரியவர்கள் எல்லாம் நிறைய பக்தி செய்து அவரவர்களுக்கு வேண்டிய அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்லக்கூடிய எல்லா வகையிலும் பயன் பெற்றிருக்கிறார்கள். இந்த ஊரிலே வெள்ளிக் கிழமைகளிலே சுவாமிக்கும் அம்பாளுக்கும் பூஜைகள் எல்லாம் நடைபெற்றிருக்கிறது. முன்பிருந்த பெரியவர்கள் எல்லாம் இந்த ஊருக்கு வந்து செய்திருக்கிறார்கள். இந்த ஊரைச் சேர்ந்தார்கள் எல்லாம் பெரிய பெரிய விழாவெல்லாம் நடத்தினார்கள். எல்லோருமே தினமும் காலையிலும் சாயங்காலமும் ஐந்து நிமிஷம் தீப வழிபாடு செய்து, இறைவனுடைய பெயரை வெட்கமில்லாமல் பக்தியோடு, உரக்கச் சொல்லி பிரார்த்தனை செய்துகொண்டு, நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, அதன் மூலம் எல்லோரும் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றோம்.
---------------------------------------------------------------------------------‐--
கிருஷ்ணர் வழிபட்ட துர்க்கை !

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சுயம்புவாக தோன்றிய தேவி, கனகதுர்க்கா என்ற திருநாமத்துடன் அருள் புரிகிறாள்.  கிருஷ்ணர், பரசுராமர், பரத்வாஜர், அகத்தியர், பாண்டவர்கள், ஆதிசங்கரர் என்று பலரும் இவளை வழிபடிருக்கிறார்கள். இந்தக் கோயிலின் நான்கு பக்கமும் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரங்களைக் காணலாம்.
---------------------------------------------------------------------------------‐--
சிரஞ்சீவிகள் ஏழு பேர் !

அஸ்வத்தாமன், பரசுராமன், மார்க்கண்டேயன், ஹனுமான், விபீஷணன், மாபலி சக்ரவர்த்தி, வியாசர் இந்த ஏழு பேரும் சிரஞ்சீவிகள்.  இவர்கள் எழுவரும் சிவாலயங்களையும், சிவனையும் பாதுகாப்பவர்கள்.

நாம் சிவாலய தரிசனம் முடித்ததும், ஐந்து நிமிடமாவது கோயிலில் அமர்ந்துவிட்டு கிளம்புவோம்.  அப்போது அந்த எழுவரும் நம்முடன் பாதுகாப்பாக வீடுவரை வருவார்களாம்.  அதனால், கோயீலுக்குச் சென்று விட்டு நேரே வீட்டிற்கு வந்து விளக்கேற்றி அவர்களை வரவேற்க வேண்டும் என்பது ஐதீகம்.!
---------------------------------------------------------------------------------‐--
நலங்கள் அள்ளி தரும் நவராத்திரி

சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. அவர் தம் தேவியர்க்கு உகந் தது நவராத்திரி. ‘நவம்’ என்ற சொல்லுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ‘நவ நவமாய் பெருகும்’ என்று ஆன்றோர்கள், சான்றோர்கள் கூறுவார்கள். நவக்கிரகங்கள்,  நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவமேகங்கள், நவநிதிகள் என ஒன்பதின் பெருக்கத்தை விசேஷமாக கூறுவார்கள். அந்த வகையில், நாடு முழுவதும் ஒன்பது நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை சிறப்பானதாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும்.

நவராத்திரி பண்டிகை முடிந்து வரும் தசமி திதியை ‘விஜயதசமி’ என்று கொண்டாடி நிறைவு செய்கிறோம். பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகளை சுபகாரியங்கள் செய்ய விலக்கி வைக்கிறோம். அந்த திதிகளையும் சிறப்பிப்பதற்காகவும், எல்லா திதிகளிலும் இறைவன் அம்சம் உளளது என்பதை உணர வைப்பதற்காகவும், நவராத்திரியில் இந்த திதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நவராத்திரியில் வரும் நவமி நாள் ஆயுத பூஜை என்றும் சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள்.

நவராத்திரியில் வரும் தசமி நாள் விஜயதசமி என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தொடங்கப்படுகின்ற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். இந்நாளில் ஞானம், வித்தை, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும், நலமும் வந்து சேரும். இந்நாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வழிபடுவது மிகவும் உகந்ததாகும். நவராத்திரி என்பது நமது பண்பாடு, கலை, கலாசாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் விழாவாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. இது முக்கியமாக பெண்களை முன்நிறுத்தி கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

சக்தி தேவியான அம்பாளை பிரார்த்தித்து அவள் அருள் வேண்டி ஒன்பது ராத்திரிகள் விரதம் இருந்து வணங்குவதே இதன் சிறப்பு. இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி (இச்சை என்றால் விருப்பம், ஞானம் என்றால் அறிவு, கிரியா என்றால் செய்தல்) என்ற முப்பெரும் தேவிகளை வணங்குவதே நவராத்திரியின் சிறப்பாகும். இதற்கு சாரதா நவராத்திரி என்றும் பெயர் உண்டு. குமரி பூஜை நவராத்திரியில் மிக முக்கியமான ஒன்றாகும். 2 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பல்வேறு விதமான வேடங்கள் அணிவித்து, அந்த அம்பாளாகவே பாவித்து பூஜிக்க வேண்டும். பல்வேறு சக்தி அம்சங்கள் இருந்தாலும், மிக முக்கிய அம்சங்களான குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்கா, சுபத்திரா வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கிளி சரஸ்வதி, மகேஸ்வரி, கவுமாரி, வாராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்மி சாமுண்டி என்று இந்த நாமாக்களை சொல்லி ஒவ்வொரு இரவும் பூஜிக்க வேண்டும்.

அவரவர் வசதிக்கேற்ப குடும்ப வழக்கப்படி 1, 3, 5, 7, 9, 11 என்ற கணக்கில் கொலு படிகள் அமைத்து அதில் கடவுள் அவதார சிலைகள், தலைவர்கள் சிலைகள், பறவை, மிருகங்கள், காய்கறி, பழவகைகள் போன்ற பொம்மைகளை அடுக்கி வைத்து வழிபடலாம். மேல் படியின் நடுவில் ஒரு கும்பம் வைத்து அதில் அரிசி, பருப்பு போட்டு மாவிலை சொருகி, அதன் மீது தேங்காய் வைக்கலாம். அதன் முன்பு முப்பெருந்தேவியரான சக்தி, லட்சுமி, சரஸ்வதி பொம்மைகளை வைக்க வேண்டும். அடுத்தடுத்த படிகளில் சாமி சிலைகள், இறைவனின் மற்ற அவதாரங்கள், தட்சிணாமூர்த்தி போன்றவற்றையும், பின்னர் சாய்பாபா, ஆதிசங்கரர் போன்ற மகான்களின் சிலைகள், பிறகு மனிதர்கள், அதன் கீழே விலங்குகள், பூச்சிகள், அதற்கும் கீழே காய்கறி, பழ வகைகள், பாத்திரங்கள் போன்ற பொம்மைகளை வைக்கலாம். உயிரற்ற பொருட்களும் குறைந்த அறிவுள்ள பொருட்களும் கீழ் நிலையில் இருக்கின்றன. படிப்படியாக ஞானம் பெற்றால் உயர்நிலையை அடையலாம் என்பது இதன் தாத்பர்யம்.

மாலையில் கொலு படி அருகில் கோலம் போட்டு விளக்கேற்றி வைக்க வேண்டும். அவரவர் வசதிப்படி பொங்கல், சுண்டல் ஆகியவற்றை நிவேதனம் செய்யலாம். இசை என்பது பக்தியின் ஒரு வடிவம். கல் நெஞ்சையும் உருக வைக்கும் மகத்துவம் இசைக்கு உண்டு. பாடத் தெரிந்தவர்கள், இசைக் கருவிகள் இசைக்க தெரிந்தவர்கள் தினமும் மாலை நேரத்தில் பக்திப் பாடல்கள் பாடுவது சிறப்பு. ஸ்லோகங்கள் சொல்லலாம். தினமும் நடுவாசலிலும் கோலம் போட்டு, அக்கம்பக்கம் உள்ளவர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்களை கொலுவுக்கு அழைத்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொள்ளலாம். நிவேதனம் செய்த பொங்கல், சுண்டல் போன்றவற்றுடன் ஜாக்கெட் பிட், பழங்கள், வெற்றிலை பாக்கு, பூ, மஞ்சள், தேங்காய், பரிசு பொருட்கள் கொடுத்து உபசரித்து அவர்களின் அன்பையும், ஆசியையும் பெறுவதே இந்த வழிபாட்டின் தத்துவம்.

ஆடம்பரமாகத்தான் கொலு வைக்க வேண்டும் என்றில்லை. அவரவர் வசதிப்படி ஒரு படி வைத்து நாலைந்து பொம்மைகளை வைத்தால்கூட அது கொலுதான். முப்பெருந்தேவியரை நம் வீட்டில் எழுந்தருளச் செய்து 9 நாட்களும் வழிபட வேண்டும் என்பதே முக்கியம். ஒரேயடியாக எல்லா பொம்மைகளையும் வாங்குவது என்பது பலருக்கு சிரமமாக தெரியும். ஒவ்வொரு ஆண்டும் சில பொம்மைகள் வாங்கி கொலு வைக்க தொடங்கி, ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைவது போல நம் வாழ்க்கையிலும் வளம் பெருகும்.
---------------------------------------------------------------------------------‐--