திங்கள், 9 செப்டம்பர், 2019

கைலாசம் போக என்ன செய்ய வேண்டும்?

மனித வாழ்க்கை எப்படி எல்லாமோ முடிவுக்கு வந்து விடுகிறது. இப்படி, எப்படியாவது வாழ்க்கை நடத்தி விட்டால் போதுமா! நமக்கு நற்கதி ஏற்பட, ஏதாவது செய்ய வேண்டாமா... வீட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தாகி விட்டது. இதெல்லாம், பிறருக்கு தான் உதவும். நமக்கு உதவுவது, நாம் செய்யும் புண்ணியம் மட்டும் தான். இதை சுலபமாக சம்பாதித்து விடலாம் என்கின்றனர் முன்னோர். ஆலயத்தை பிரதட்சணம் செய்வது ஒரு புண்ணியம். வாக்கிங் போகிற மாதிரி, சாயந்திரம் கிளம்பி, ஒரு ஆலயத்தை சுற்றி விட்டு வந்தாலே, ஆலயப் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைத்து விடும். ஒரு சின்ன கதை! சோழ மகாராஜா ஒருவர் இருந்தார். அவர் ஒரு சமயம், ஹரதத்தர் என்ற மகானை தரிசிக்க வந்தார். மகானை சந்தித்த ராஜா, அவரை வணங்கி, நான் கைலாசம் போக என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு ஹரதத்தர், நீர் கஞ்சனூர் முதலான ஏழு சிவ ஸ்தலங்களை, அரை யாம நேரத்தில் தரிசித்து வந்தால், உன் ஆசை நிறைவேறும்... என்றார். உடனே ராஜா, இதென்ன பிரமாதம்... என்று சொல்லி, பஞ்ச கல்யாணி குதிரை மீது ஏறி, குடைபிடித்து ஒருவன் ஓடிவர, ஏழு சிவஸ்தலங்களையும் அரை யாமத்தில் தரிசித்தார். 
அதே சமயம், குதிரையும், குடைபிடித்து ஓடிவந்தவனும் மயங்கி விழுந்து, இறந்து போயினர். அந்த நிமிடமே, வானிலிருந்து ஒரு விமானம் வந்து, குதிரையையும், குடைபிடித்தவனையும் ஏற்றிக் கொண்டு, கைலாசம் சென்றது. அந்த அதிசயத்தை கண்டு ஆச்சரியப்பட்ட சோழ ராஜன், தானும், ஆலயத்தை சுற்றி வந்திருக்கும் போது, குதிரைக்கும், குடை பிடித்தவனுக்கு மட்டும், கைலாயம் போகும் பாக்கியம் கிடைத்திருக்கிறதே... நமக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை என்று எண்ணினார். நேராக ஹரதத்தரிடம் சென்று, நடந்த விபரத்தை சொன்னார். அதற்கு ஹரதத்தர், குதிரையும், குடை பிடித்தவனும் காலால் நடந்தே, ஆலயத்தை வலம் வந்தனர். அந்த புண்ணியத்தால், அவர்களுக்கு கைலாசம் போகும் பாக்கியம் கிடைத்தது. நீ, குதிரை மேல் ஏறி வந்ததால் சரீர சுகம் தான் கிடைத்தது. கைலாயம் போகும் பாக்கியம் கிடைக்கவில்லை... என்றார். அரசன் மறுபடியும் அவரை வணங்கி, நான் இப்போது என்ன செய்ய வேண்டும்... என்று கேட்க, நீ பாதசாரியாகவே அந்த ஏழு சிவாலயங்களையும் பிரதட்சணம் செய்... என்றார். அரசனும், ஆசார சீலனாக பக்தியுடன், நடந்தே ஏழு சிவாலயங்களையும் வலம் வந்து, அவர் முன் வணங்கி நின்றார். அடுத்த வினாடி, விமானம் வந்து அரசனை, கைலாசத்துக்கு சகல மரியாதைகளுடன், அழைத்துச் சென்றது. இதன் மூலம் அறிந்து கொள்வது என்னவென்றால், ஆலயம் வலம் வருவது என்பது, காலால் நடந்து வலம் வர வேண்டும். ஏதாவது ஒரு வாகனத்தில் ஏறி பவனி வந்து, நான் நூறு சுற்று சுற்றி விட்டேன்... என்றால், அது பயன்படாது. புண்ணியம் என்பது சிரமப்பட்டு சம்பாதிக்க வேண்டியது; விலைக்கு வாங்குவதல்ல.
--------------------------------------‐----------------------------------------
அமாவாசையன்று வாசலில் கோலம் போடக் கூடாது?

ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு திதி விசேஷமானது. சதுர்த்தி-விநாயகருக்கு சஷ்டி-முருகனுக்கு, ஏகாதசி-மகாவிஷ்ணுவுக்கு. அஷ்டமி-பைரவருக்கு, சதுர்த்தசி-சிவனுக்கு. பவுர்ணமி-அம்மனுக்கு... இதைப் போலவே, மறைந்த முன்னோர்களுக்கு(பித்ருக்களுக்கு) என்று ஒரு திதி, அதுதான் அமாவாசை. ஆகவே தான், அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம், சிராத்தம் (திதி) முதலானவற்றைத் தவறாது செய்யவேண்டும். அதனால் பித்ருக்களின் பசியும் தாகமும் நிவர்த்தியாகும் என்கிறது சாஸ்திரம். இவ்வாறு நம் முன்னோர்களை நம் இருப்பிடத்துக்கு வரவழைத்து, அவர்களின் பசி தாகம் தீர எள்ளு கலந்த ஜலத்தால் தர்ப்பணம், சிராத்தம் செய்யும் போது, அவர்கள் நம் இருப்பிடம் வந்து நாம் தரும் எள்ளு கலந்த ஜலத்தை ஏற்றுக்கொண்டு பசி, தாகத்தை தணித்துக்கொள்கிறார்கள். அவ்வாறு தர்ப்பணம் செய்யும் நாளன்று, அதாவது அமாவாசையன்று, பித்ருக்களுக்குப் பிடிக்காத சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டும் அதாவது கோலம், மணி அடிக்கும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி போன்றவை பித்ருக்களின் வருகையைத் தடுப்பதாக அமையும் என்பதால். இவை பித்ருக்களுக்குப் பிடிக்காது. ஆகவே அமாவாசையன்று நம் வீட்டுக்கு பித்ருக்கள் வந்துசெல்லும் வரை,  அதாவது தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலிலோ பூஜையறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்புவதையும்(தெய்வங்களுக்குப் பூஜை செய்வதையும்) தவிர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். ஆகவேதான், அமாவாசையன்று முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை செய்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பித்ரு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர். வீட்டில் பூஜையறையில் கோலம் போட்டு தீபம் ஏற்றி மணியடித்து தெய்வ பூஜையை வழக்கம்போல் செய்யலாம்.
--------------------------------------‐----------------------------------------
பேராசைப்படுபவரா நீங்கள்?

பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் யாக யக்ஞங்களால், தேவர்கள் திருப்தியடைகின்றனர். எப்படி? இங்கு அக்னியில் போடப்படும் அவிஸ், அமிர்தமாகி அவர்களை அடைகிறது. பதிலுக்கு அவர்கள் மழையைக் கொடுக்கின்றனர். இப்படி பரஸ்பரம் உதவி நடக்கிறது. ஒரு சமயம், மனிதர்களுக்கு எவ்வித ஆசையும் இல்லாமல் இருந்தது. ஆசை இருந்தால் தானே அது நிறைவேற ஏதாவது செய்ய வேண்டும்! ஆசை இல்லாமையால் அவர்கள் எந்த யாக யக்ஞங்களோ, கர்வங்களோ செய்யவில்லை. அதனால், கவலைப்பட்ட தேவர்கள். அவர்களது குருவான பிரகஸ்பதியிடம் முறையிட்டனர். அதற்கு அவர், நான் இதில் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் பிரம்மாவிடம் முறையிடுங்கள்... என்றார். இதே சமயம் சத்யலோகத்தில், மற்றொரு காரியத்தில் ஈடுபட்டிருந்தார் பிரம்மா. பிரம்மாவிடம் சென்ற தேவர்கள், பூலோகவாசிகள் யாகம், யக்ஞம் எதுவும் செய்வதில்லை. எங்களை மதிப்பதில்லை... என்று புகார் செய்தனர். அதற்கு அவர், உலகில் மானிடர்கள் தனக்கு ஏதாவது பயன் உண்டாக வேண்டும் என்பதற்காகவே பிறருக்கு உதவி செய்கின்றனர். மானிடருக்கு உங்கள் உதவி தேவையில்லை. அதனால், அவர்கள் வேள்வி செய்யவில்லை. இதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் மகாலட்சுமியிடம் முறையிடுங்கள்.என்றார். தேவேந்திரனும், மற்ற தேவர்களும் இமயமலை சென்று மகாலட்சுமியைக் குறித்து, ஸ்தோத்திரம் செய்தனர். மகாலட்சுமி, அவர்கள் முன் தோன்றி, தேவர்களே... உங்கள் துதியைக் கேட்டு சந்தோஷப்படுகிறேன். உங்கள் குறை யாது? என்றாள்; தேவர்களும் தங்கள் குறையைத் தெரிவித்து; ஸ்தோத் திரம் செய்தனர். அந்த ஸ்தோத்திரத்தை கேட்ட மகாலட்சுமி, மனிதர்களில் யார் இந்த நாமாக்களை சொல்லி, ஸ்தோத்ரம் செய்கின்றனரோ, அவர்கள் செல்வந்தர்களாகவும், மற்றவர்கள் ஏழைகளாகவும் இருப்பர்... என்று சொல்லி, மறைந்தாள். சில காலம் சென்றது. அப்படியும் தேவர்கள் குறை தீரவில்லை. மறுபடியும் மகாலட்சுமியை துதித்தனர்; மகாலட்சுமியும் வந்தாள்; விவரம் தெரிந்தது. ஓஹோ... இதற்குக் காரணம் மனிதர்களிடம் ஆசை என்பதே இல்லாமல் இருப்பதுதான். ஆசை இருந்தால் தானே அது வேண்டும், இது வேண்டும் என்ற எண்ணம் எழுந்து, யாக யக்ஞங்களைச் செய்வர். அதற்கு ஒரு வழி செய்கிறேன்... என்று சொல்லி, காமன் என்ற குழந்தையை உண்டாக்கி, தேவர்களிடம் கொடுத்து, இதை நன்றாக வளருங்கள். உங்கள் குறையை தீர்த்து வைப்பான்... என்று சொல்லி மறைந்தாள். இந்த காமன் தான் (காமன் என்றால் ஆசை, விருப்பம்!) மனிதர்களின் மனதில் புகுந்து, பலவித ஆசைகளை உண்டாக்கி அவை நிறைவேற வேண்டி, பூஜை, ஹோமம், யாகம், யக்ஞம் எல்லாவற்றையும் செய்யும்படி செய்தான். தேவர்களுக்கு முன்போல் அமிர்தம் கிடைத்து, நிம்மதியாக இருந்தனர் என்பது கதை. ஆக, மனிதர்களுக்கு காமம் (ஆசை, விருப்பம்) என்பது இருந்தால் தான், பலவித காரியங்கள் நடைபெறும். மனிதர்களும், தேவர்களும் சந்தோஷமாக இருக்க முடியும். இந்த ஆசை என்பது நிதானமாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும். பேராசையாகவும், அநியாயமாகவும் இருக்கக் கூடாது; ஞாபகம் இருக்கட்டும்!
--------------------------------------‐----------------------------------------
மங்கல வாழ்வு அருளும் மதுரைக்கு அரசி!

மதுரையில், மலையத்துவஜ பாண்டியன் நீண்டகாலமாக மகப்பேறு வாய்க்காமல் வருந்தினான். புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான். பாண்டியனின் மனைவியான காஞ்சனமாலை முற்பிறவியில் வித்யாவதி என்ற பெயரில் பிறந்து, பராசக்திக்கு சேவை செய்து வந்தாள். இன்னொரு பிறவியில், அம்பிகையே தனக்கு மகளாகப் பிறக்கவேண்டும் என்ற வரத்தைப் பெற்றிருந்தாள். அதன் பயனாக, அவள் மூன்றுவயது பெண்குழந்தையாக யாகத்தீயில் தோன்றினாள். தடாதகை என்னும் பெயரிட்டு குழந்தையை வளர்த்தனர். குழந்தைக்கு மூன்று தனங்கள் இருந்ததைக் கண்டு காஞ்சனமாலை வருந்தினாள். காஞ்சனமாலையே! வருந்தாதே!  தடாதகை தனக்கு மாலைசூடும் மணாளனைக் கண்டதும் மூன்றாவது தனம் மறைந்துவிடும்! என்று வானில் அசரீரி ஒலித்தது. ஆதிபராசக்தியின் அவதார மான தடாதகை வீரதீரம்மிக்கவளாக வளர்ந்தாள். தக்கவயதை அடைந்ததும் மன்னன் பாண்டியநாட்டின் இளவரசியாக முடிசூட்டினான்.  உலகில் உள்ள தேசங்களை எல்லாம் கைப்பற்ற எண்ணிய தடாதகை, திக்விஜயம் புறப்பட்டாள். அஷ்டதிக்பாலகர்களான (எட்டுதிசை காவலர்கள்) இந்திரன், அக்னி,யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியவர்களை வென்று கைலாயம் அடைந்தாள். அங்கு கயிலைநாதனைக் கண்டாள். அவளின் வீரம் நொடியில் காணாமல் போனது. நாணத்தால் முகம் சிவந்தாள். அசரீரியின் வாக்கை மெய்ப்பிக்கும் விதத்தில் தடாதகையின் மூன்றாம் தனம் மறைந்தது. அங்கயற்கண்ணி மீனாட்சியாக உருவெடுத்தாள். ஐயனும் சொக்கேசப்பெருமானாக வந்து அவளின்கரம் பற்றினார். முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடிநிற்க மதுரையில் மீனாட்சிகல்யாணம் நடந்தேறியது. அம்மையும் அப்பனும் பாண்டியநாட்டின் மன்னராக பட்டம் சூடி அரசாட்சி நடத்தினர். மீனாட்சியை மீன்+அக்ஷி என பிரிப்பர். மீன் போன்ற கண்களையுடையவள் என்பது இதன் பொருள். மீன் தன் பார்வையாலேயே குஞ்சுகளின் பசியைப் போக்கி விடும். அதுபோல், அங்கயற்கண்ணி எம்பிராட்டியும் தம் பார்வையாலேயே பக்தனின் குறையைப் போக்கிடுவாள். இதனால் தான் அவள் மீனாட்சி என்ற பெயர் பெற்றாள். மதுரையில் மீனாட்சி சந்நிதி விசேஷமானது. இங்கு அம்மனுக்கு நடக்கும் தனிவிழாக்களில் நவராத்திரி சிறப்பானது. கொலுமண்டபத்திற்கு எழுந்தருளும் மீனாட்சியம்மன் ஒன்பது நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தந்து மங்கல வாழ்வு அருள்வாள். கொலுவும் வைக்கப்படும்.
--------------------------------------‐----------------------------------------
சாஸ்திரங்களை மாற்ற முடியுமா?

சாஸ்திரங்களும் வேதங்களும் அநாதி காலமாக இருந்துவரும் சத்தியமான உண்மைப் பொருள். இவற்றை மாற்றவோ, திருத்தவோ கூடாது. மகரிஷிகளும் முனிவர்களும் கடும் தவம்புரிந்து நினைத்து நினைத்து உணர்ந்து, எது உண்டோ அதை எழுதினார்களே தவிர, தங்கள் கற்பனையினால் எழுதவில்லை. அதை எல்லாம் நாம் மாற்றப் பார்த்தோமேயானால் விபரீதமான விளைவுகளையே அனுபவிக்க நேரிடும். இதை விளக்க ஒரு சம்பவம்.  ஒரு ஆச்சாரியர் சீடர்களுக்கு பாடங்கள் போதித்து வந்தார். ஒருநாள் இந்திரியங்கள் வித்வான்களை ஆகர்ஷிக்காது என்று போதித்தார். ஆனால் சீடர்களோ, இந்திரியங்கள் மிகவும் பலம் வாய்ந்தவை. வித்வான்களையும் இழுக்கும் சக்தி கொண்டவை என்றார்கள் ஆச்சாரியரோ அதை ஒப்புக்கொள்ளவில்லை. மறுநாள் காலை ஆசிரமத்தில் ஆச்சாரியர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். அந்தசமயம் ஆசிரமத்தின் வழியாக ஒரு அழகான பெண் கையில் குடத்துடன் தண்ணீர் எடுத்துவரச் சென்றாள். ஒரு வினாடி ஆச்சாரியரின் மனம் ஸ்தம்பித்துவிட்டது. என்ன சவுந்தர்யம்! என்ன நளினம்! மனம் எண்ணிக் கொண்டிருக்கும்போதே அந்த பெண் அவரைக் கடந்து ஆசிரமத்தில் நுழைந்து உட்பக்கமாகத் தாளிட்டுக் கொண்டாள்.
ஆச்சாரியரோ நடுங்கிப் போனார். சீடர்கள் பாடம் கேட்கவரும் நேரமாகிவிட்டது. ஆச்சாரியர் கதவை பலமுறை தட்டிப் பார்த்தார் கதவு திறக்கப்படவில்லை. உடனே ஆச்சாரியர் ஆசிரமத்தின் மேலே ஏறி, வேயப்பட்டிருந்த தென்னங்கீற்றுகளைப் பிரிக்கத் தொடங்கும்போது இரண்டு மூங்கில்களுக்கிடையில் கால்கள் மாட்டிக் கொண்டன. மூங்கில் கணுக்கள் குத்தி ரத்தம் வழிந்தது வேதனை தாங்கவில்லை. அந்தசமயம் சீடர்கள் வந்தனர் ஆச்சாரியர் நேற்று சொல்லிக்கொடுத்தபடியே. இந்திரியங்கள் வித்வான்களை ஆகர்ஷிக்காது என்பதை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வந்தனர். ஆச்சாரியரோ தாங்கமுடியாத அவஸ்தையில் இருந்தார். சீடர்கள் ஆசிரமத்தின் மேலே ஆச்சாரியர் இருப்பதைப் பார்த்தார்கள். அவர்கள் வியப்போடு குருவே மேலே என்ன செய்கிறீர்கள்? என்று கேட்க, ஆச்சாரியரோ, நான் செய்வது இருக்கட்டும். நேற்று நான் சாஸ்திரத்தை திருத்தி எழுதிய மந்திரத்தை உடனே மாற்றி எழுதுங்கள் பலவான் உடனே மாற்றி எழுதுங்கள் பலவான் இந்த்ரியக்ராம் வித்வாம்ஸமபி கர்ஷதி, கர்ஷதி, கர்ஷதி, கர்ஷத்யேவ என்று கதறினார். இந்திரியங்கள் மிகவும் பலம் வாய்ந்தவை அவை வித்வான்களையும் இழுக்கும் இழுக்கும் இன்னும் இழுக்கும் என்று சொன்னபோதே ஆச்சாரியர் பொத்தென்று உள்ளே விழுந்தார். ஆனால் அங்கு யாரையுமே காணவில்லை. அப்படியானால் வந்தது யார்? சாஸ்திரமே பெண் உருக்கொண்டு வந்து அவரைத் திருத்தியிருக்கிறது.
இராவணேஸ்வரனைப்போல சர்வ வல்லமை படைத்தவர் யாருமே இல்லை. சிவ பக்தன் வீராதி வீரன். கயிலை மலையையே தனது கைகளால் தூக்கி, தனது நரம்புகளையே வீணையாக மீட்டி சாமகானம் பாடி, சிவபெருமானிடம் சந்திரஹாஸம் என்ற வாளைப் பெற்றவன். எத்தனை இருந்தும் தன் உள்ளே இருக்கிற காம இச்சையை அடக்க முடியாமல் மனைவி, மக்கள் உற்றார், உறவினர், நாடு, செல்வம், புகழ் என அனைத்தையும் இழந்து தன்னையும் இழந்தான். ஐம்புலன்களை வெல்வதென்பது அவ்வளவு சுலபமானதல்ல. தியானம், தவம் போன்றவற்றைத் தொடர்ந்து பழகவேண்டும். இந்த இந்திரியங்களை வென்றால் நாம் எதையும் பெற்றுவிடலாம்.
--------------------------------------‐----------------------------------------
யார் யார் கொடியில் என்னென்ன சின்னங்கள்!

ராமாயணமும் மகாபாரதமும் இந்தியாவின் மாபெரும் காவியங்கள். இவை, மன்னர்கள் மற்றும் இளவரசர்களின் வீரக் கதைகளை மட்டுமின்றி, அன்றைய சமூக அமைப்பை விவரிக்கும் கண்ணாடியாகவும் திகழ்வன. அந்தக் காலத்தில் கொடிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டது. மகாபாரதப் போரின்போது, அர்ஜுனனின் கொடியில் அனுமன் இடம்பெற்றிருந்த விஷயம் பெரும்பாலானோருக்குத் தெரியும். அதேபோன்று... தருமர் தமது கொடியில் நந்தா, உப நந்தா எனப்படும் இரண்டு மிருதங்கங்களைக் கொண்டிருந்தாராம். பீமன் - சிம்மக்கொடி; நகுலன் - சரபக்கொடி; சகாதேவன் - அன்னம்; அபிமன்யு - சாரங்கப் பறவை; பீமனின் மகன் கடோத்கஜன் - கழுகுக் கொடியுடன் திகழ்ந்தார்களாம். திருஷ்டத்யும்னன் கோவி தாரா கொடியும், ஸ்ரீகண்ணன் கருடக் கொடியும், அவரின் மகன் பிரத்யும்னன் மகரக் கொடியும் கொண்டிருந்தார்கள்.
கவுரவர்களின் சார்பில்... பீஷ்மர் - ஐந்து நட்சத்திரங்களுடன் கூடிய தாளக்கொடி கொண்டிருந்தார் (தாள மரம் என்பது பெரிதும் மதிக்கப்பட்ட மூங்கில் மரமாம்). துரியோதனன் - சர்ப்பக் கொடி கொண்டிருந்தான். துரோணர் - பீடத்தின் மீது மான் தோல் பொருத்தப்பட்டு அதன்மேல் வில்லும், கமண்டலமும் இருக்கும்படியான ஒரு சித்திரத்தை சின்னமாக வைத்திருந்தார். கிருபாச்சார்யர் எருதுக்கொடியும், அஸ்வத்தாமன் சிங்கவால் கொடியும் வைத்திருந்தனர். கர்ணன் தனது கொடியில் யானைச் சங்கிலி சின்னம் பொறித்திருந்தான். ஜெயத்ரதன் கரடியையும், சல்லியன் கலப்பையையும் கொடியில் கொண்டிருந்தனர். பீஷ்மரை எதிர்த்து பாண்டவர் தரப்பில் போரிட்டவன் சிகண்டி. ஒரு காலத்தில் பெண்ணாக இருந்தது மட்டுமல்லாமல், அவனது கொடியில் அமங்கலமான ஒரு சின்னத்தை பொறித்து வைத்திருந்ததாலும் அவனுடன் போர் புரிய மறுத்துவிட்டாராம் பீஷ்மர்.
--------------------------------------‐----------------------------------------
இறைவனைப்பற்றி நினைப்பதுண்டா நீங்கள்?

மனிதன், தூங்கும் நேரம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் எதைப் பற்றியாவது சிந்தனை செய்து கொண்டோ, யோசித்துக் கொண்டோ தான் இருக்கிறான். ஆனால், கடவுளைப் பற்றி நினைக்கத்தான் நேரமில்லை என்கிறான். என்ன சார், இன்னிக்கு பிரதோஷமாச்சே... கோவிலுக்குப் போகலையா... என்று கேட்டால், அப்படியா... இன்னிக்கு பிரதோஷமா... எங்கே சார் நேரமிருக்கு... இங்கேயே வேலை சரியா இருக்கு... என்று பதில் சொல்லி, டிவி பார்க்க உட்கார்ந்து விடுகிறார். ஆனால், பகவானோ, என்னை வழிபடு, என்னை தியானம் செய். என் கோவிலுக்கு வா... என்று யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவனவனுக்கு என்ன பிராப்தமோ அதன்படி நடக்கட்டும் என்று விட்டு விடுகிறார். நான் உன்னை விடமாட் டேன்... என்று, எந்த பக்தன் அவரை பிடித்துக் கொள்கிறானோ, அவனை கை விடாமல் காப்பாற்றுகிறார். நாம் ஒவ்வொரு நாளும், எவ்வளவோ விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள் கிறோம்.  நேரப்படி எத்தனையோ காரியங்களை செய்கிறோம். ஞாபகமாக காலை, 6:00 மணிக்கு காபி சாப்பிடுகிறோம். பிறகு டிபன் 9:00 மணியானதும் அலுவலகத்துக்குப் போக வேண்டும். எதற்காக? சம்பளம் பெற்று குடும்பத்தைக் காப்பாற்ற. வீட்டில் யாருக்காவது உடல் நலமில்லை என்றால், வைத்தியரிடம் ஓடுகிறோம். அவர் கொடுக்கும் மருந்தை வாங்கி வந்து, நேரம் தவறாமல் கொடுக்கிறோம். அப்போது, அலுவலகம் போவதை முக்கியமாக கொள்வதில்லை. நோயாளியை குணப்படுத்துவதே முக்கியமாக கருதுகிறோம். இதுவரையில் அலுவலகம் முக்கியம். இப்போது வீட்டில் உள்ளோர் முக்கியம். இவைகளை தவிர, வேறு பல வேலைகளும் உள்ளது. அதற்காக நேரங்களை ஒதுக்கி, அவைகளை கவனிக்கிறோம். அன்றைய பொழுது போய் விடுகிறது; இரவும் வந்து விடுகிறது. அப்பாடா...இன்னிக்கு ஒரே அலைச்சல்... களைப்பாயிருக்கிறது... என்று சொல்லி, சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்று விடுகிறோம். இவ்வளவு நேரம் செலவிட்ட போதும், இவ்வளவு விஷயங்களை ஞாபகம் வைத்து கொண்ட போதும், கடவுள் ஞாபகம் மட்டும் வருவதில்லை; அதற்கான நேரமும் கிடைப்பதில்லை. ஒருவன், ஒரு ஊருக்குப் போக வேண்டியிருக்கிறது. ஞாபகமாக, 10 நாள் முந்தியே டிக்கெட் ரிசர்வ் செய்து, அதை பத்திரமாக வைத்துக் கொள்கிறான். என்ன தேதி, எந்த ரயில், எத்தனை மணிக்கு என்பதையும், ரயிலுக்குப் புறப்படும் முன், என்னென்ன பொருள், துணிமணிகள், எவ்வளவு பணம் எடுத்துக் கொள்வது என்பது பற்றியெல்லாம் முன்கூட்டியே எடுத்து வைத்து, தயார் செய்து கொள்கிறான். சரியான நேரத்துக்கு ரயில்வே ஸ்டேஷனை அடைவதிலேயே. கவனம் முழுவதும் இருக்கிறது. ஆனால், சிறிது நேரமாவது கடவுளை நினைக்கவோ, அதற்கு நேரம் ஒதுக்கவோ முடியவில்லை. ஸ்டேஷனுக்குப் போகும் வழியில், ஒரு கோவில் இருந்தால் கூட, உள்ளே போய் சுவாமி தரிசனம் செய்ய நேரமில்லை என்று, வாசலிலிருந்தே ஒரு கையால் அவசர கும்பிடு போட்டு விட்டுப் போகிறான். இந்த உலகில் நாம் பிறந்து, நல்ல நிலைமைக்கு வந்து சுகமாக இருப்பதே, அவனருளால் தான் என்பதே மறந்து விடுகிறது! உலக வாழ்க்கை என்பது எவ்வளவு நாட்கள் என்பது நிச்சயமில்லை. எப்படி எல்லாமோ நாட்களை கழிக் கிறோம். நமக்கு என்று ஒரு நற்கதியை தேடிக்கொள்ள வேண்டாமா? இது எப்படி கிடைக்கும்? கடவுள் ஞாபகமும், கடவுள் வழிபாடும் இருந்தால் தான் கிடைக்கும். ஈசனை நினைக்க பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்!
--------------------------------------‐----------------------------------------
ஆதிசங்கரர் அருளிய ஞானோபதேசம்!

காஷ்மீர் முதல் குமரி வரை பல முறை யாத்திரை செய்து, ஞான நூல்கள் பலவற்றை இயற்றியுள்ளார் ஸ்ரீஆதிசங்கரர். தன் அவதாரம் பூர்த்தியாகும் காலத்தில், தன்னைப் பிரிய வேண்டியிருப்பது குறித்து வருந்திய சீடர்களுக்கு, சில உபதேசங்களைச் செய்து உள்ளார். அவை:நித்யம் வேதம் ஓது; அதன் விதிப்படி தர்மத்தை செய். கர்மானுஷ்டானத்தைக் கொண்டே ஈசனுக்குப் பூஜை செய்; காம்ய பலன்களில் புத்தியைச் செலுத்தாதே; உலகப் பற்றை ஊட்டும் இன்பங்களெல் லாம், முடிவில் துன்பங்களா கவே மாறும் என்பதை மறவாதே; உன்னை நீ அறிவதில் ஆவல் கொள்; தன்னலப் பற்றிலிருந்து உன்னை மீட்டுக் கொள்; நல்லவர்களிடத்தில் உறவு கொள். பகவானிடத்தில் மாறாத அன்பு வை; புலன்களை அடக்குதல் போன்ற உத்தம குணங்களை பழகிக் கொள்; இல்லறத்துக்குரிய கர்மங்களை விடுத்து, துறவறத்தை மேற்கொண்டு, ஆத்ம ஞானியை குருவாக நாடி, அவரது திருவடித் தொண்டை மேற்கொள்; அவரிடம் பிரண உபதேசத்தை வேண்டிக் கொள்; வேதங்களின் முடிவான பொருளை உரைக்கும் வாக்கியங் களைக் கேட்டு தெரிந்து கொள்; வீண், தர்க்க வாதங்களில் ஈடு படாதே.வேதத்தின் முடிவான பொருளை அடைவதற்கு துணை செய்யும் நியாயமான காரணங்களை மட்டும் நன்கு ஆலோசித்து கொள்; எங்கும் நிறைந்த பரம்பொருளே இந்த உடலில், நான் என்னும் அறிவுப் பொருளாக நிற் கிறது என்ற உண்மையை, நினைவில் வைத்துக் கொள்; நான் ஞானவான் என்னும் கர்வத்தை அறவே ஒழித்து விடு; படித்த மேதாவிகளுடன் வாதம் செய்ய வேண்டாம்; பசிப் பிணிக்கு அன்னத்தை மருந்தாக உட்கொள்; ருசியுள்ள உணவைத் தேடியலையாதே; தெய்வாதீனமாக தானாகக் கிடைத்ததைக் கொண்டு மகிழ வேண்டும்.
குளிர், உஷ்ணம் போன்ற உபாதைகளைப் பொருட்படுத் தாமலிரு; பயனில்லாத வார்த்தைகளை சொல்லாதே; பேசும் போது ஜாக்கிரதையாகப் பேசு; எதிலும் பற்றற்ற நிலையில் இரு; உலகத்தாரின் போற்றுதல், தூற்றுதல் இவைகளை மனதில் வாங்கிக் கொள்ளாதே; ஏகாந்தத்தை நாடு.உயர்வினும் உயர்வான பரம்பொருளிடம் சித்தத்தை லயிக்கச் செய்; எல்லாமாய் நின்ற ஒரே பொருளான ஆத்மாவை அந்த பரிபூர்ண நிலையில் பார்; ஆத்மா ஒன்றே உண்மையில் எல்லாமுமாய் நிற்பதால், இந்த பிரபஞ்சம் எனப்படும் எல்லாப் பொருட்களும் வெறும் தோற்றமே எனும் தெளிவைப் பெறு; இவ்விதத் தெளிவினால், முன் செய்த வினைகளை யெல்லாம் அழித்து விடு; இவ்விதத்தெளிவின் பலத்தினால், வருங்காலத்தில் ஏற்படும் கர்மங்களிடம் ஒட்டாமல் இரு; இந்தப் பிறவியின் இன்ப, துன்பங்களை மகிழ்வுடன் ஏற்று அனுபவித்து விடு; இவ்வளவு வினைகளையும் கடந்த நீயே பரம்பொருள். — இப்படியெல்லாம் உபதேசங்களைச் செய்து உள்ளார். அவரது ஞானோபதேங்களைப் பலரோ, சிலரோ பின்பற்றுவதால் தான், இன்னமும் மனித வர்க்கம் நல்லபடியாக இருக்கிறது என்பது பெரியோர்களின் கருத்து. இந்த உபதேசங்கள், சோபான பஞ்சகம் என்ற ஐந்து சுலோகங்களாக அமைந்துள்ளது. இந்த உபதேசம், சீடர்களாகிய நம் எல்லாருக்கும் சொல்லப்பட்டது தான் என்பதை யும் மறந்து விடக்கூடாது. முடிந்த வரையில் அனுசரித்து நடப்பது நல்லது. சொல்வதும், எழுது வதும் சுலபம் தான். அனுசரிக்க முடியுமா சார்? என்று கேட்டால், அனுசரிக்க வேண்டும் என்பதற்காகத் தான் சொன்னார். முயன்று பார்க் கலாம். முடியாவிட்டால், மனசே ராஜா, புத்தியே மந்திரி. நம் இஷ்டம்!
--------------------------------------‐----------------------------------------
பலகோடி மடங்கு பலன் தரும் பாதரச லிங்கம்!

கோடிக்கணக்கான சிவலிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலன்களைவிட, பாதரச லிங்கத்தை பூஜிப்பதன் மூலம் பல மடங்கு பலன்களை எளிதில் பெற முடியும் என்கின்றன சாஸ்திர புராணங்கள்.  பிரம்மபுராணத்தின் கருத்துப்படி, மனதிலுள்ள ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் பாதரச லிங்கத்தை பூஜிக்கும் மனிதன் தன்யனாகிறான். யார் வேண்டுமானாலும் பாதரச லிங்கத்தை பூஜித்து எல்லா பவுதிக சுகங்களையும் அனுபவித்து, பரமபதத்தை அடைய முடியும். பிரம்மவைவர்த்த புராணம் சொல்லுவது என்னவென்றால் பாதரலிங்கத்தை விதிப்படியும் முறைப்படியும் ஒரே ஒரு முறை பூஜிப்பவர்கள்கூட சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளவில்லா சுகத்தைப் பெற முடியும்!சிவ நிர்ணய ரத்னாகரம் என்ற நூலின் கருத்துப்படி கல்லாலான சிவலிங்கத்தை பூஜிப்பதைவிட கோடி மடங்கு நற்பலன், தங்கம் வேயப்பட்ட சிவலிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். அதைவிட பன்மடங்கு பலன் ரத்தினங்கள் பதித்த லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். ஆனால் அதைவிட பலப்பல மடங்கு பலன், பாதரச லிங்கத்தின் பூஜை அல்லது தரிசனத்தாலேயே கிடைக்கும். பாதரச லிங்கத்தைவிட உயர்வான சிவலிங்கம் உலகில் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை!

சிவபுராணத்தின் கூற்றுப்படி, பசு வதை செய்த பாவியும், நன்றிகெட்ட மனிதனும், வீரனைக் கொலை செய்தவனும், கர்ப்பத்தலுள்ள சிசுவைக் கொன்றவனும், தாய் தந்தையரைக் கொன்றவனும்கூட, பாதரச லிங்கத்தை பூஜித்து வந்தால், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு, முக்தியை அடைய முடியும்! வாய்விய சம்ஹிதையின் கருத்துப்படி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் மற்றும் நம் வாழ்வில் வேண்டுவதையெல்லாம் பெறுவதற்கு ஒரே சிறந்த சுலபமான வழி பாதரச லிங்கத்தை பூஜித்து வழிபடுவதுதானாம். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை தரிசித்தவரைவிட, பாதரசலிங்கத்தை தரிசித்த அதிர்ஷ்டசாலியையே நான் அதிகம் விரும்புகிறேன்! என்று சிவபெருமானே சொல்லியிருக்கிறார்!சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில் பாதரசத்தை திடப்பொருளாக்கி, அதை லிங்கமாக்கி பூஜிப்பவர்களுக்கு, எப்போதுமே மரணபயம் இருப்பதில்லை. தவிர எந்த ஒரு காலத்திலும் அவர்கள் வீட்டில் வறுமை எட்டிப் பார்ப்பதில்லை என்று சிவபெருமான் பார்வதியிடம் கூறியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ரசார்ணவ தந்திரம் என்ற நூலின் கருத்துப்படி எந்த ஒரு மனிதனும் ஒரே ஒருமுறை பாதரசலிங்கத்தை பூஜித்து விட்டாலே போதும், அவனுக்கு வாழ்கையில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற சித்திகள் கிடைத்துவிடுகின்றன. பிரசித்திபெற்ற ஆயிரம் லிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலனைவிடக் கோடி மடங்கு நற்பலன், பாதரச லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கிறது.

ரசசமுச்சயம் என்ற நூலில், பாதரசலிங்கத்தைத் தொடர்ந்து ஆராதித்து வருவதால், எல்லாவித நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. வயதான காலத்தில், மனிதனை நோயின்றி வைத்துக் கொள்வதற்கு வேறெந்தத் தரவரத்திற்கோ, உலோகத்திற்கோ சக்தியில்லை. ஏனெனில் அவை எல்லாமே தண்ணீரில் கரைந்து போகக்கூடியவை; வெப்பத்தால் காய்ந்து போகக்கூடியவை. ஆனால் பாதரசம் ஒன்றுதான் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை. பாதரசத்தை விசேஷச் செயல்பாடுகள் மூலம் திடபதார்த்த மாக்குவதால், அது அமிர்தமாகி விடுகிறது. அப்படி திடப்படுத்தப்பட்ட பாதரசத்தில் சிவலிங்கத்தை உருவாக்கி, அந்த லிங்கத்தை வழிபடும் பக்தர்களுக்கு கல்வி, அறிவு, செல்வம், சொத்து, சுகம், அமைதி, செழிப்பு, ஐஸ்வர்யம், மக்களன்பு முதலிய எல்லாப் பலன்களும் தானாகவே வந்தடைகின்றன. பாதரசம் நோய்களை அகற்றி புத்துயிரும் புது இளமையையும் கொடுக்கிறது. அதோடு அஷ்டசித்திகளையும் நவநிதிகளையும் அளிக்கிறது. சாதாரணமாக பாதரசத்தில் அழுத்தங்கள் நிறைய இருக்கும். அதை புடம் போட்டு அசுத்தங்களை அகற்றிய பிறகுதான் அது திடபதார்த்தமாக்கப்படுகிறது. அதிலிருந்து வடிவமைக்கப்படும் சிவலிங்கம் முழுப் பலன்களையும் அளிக்கவல்லது. விதிமுறைப்படி தினந்தோறும் அனுஷ்டானங்கள் செய்து பூஜை, அர்ச்சனை, ஆரத்தி முதலிய சேவைகள் செய்து ஆராதிக்கக்கூடியவர்கள் மட்டும் பாதரச லிங்கத்தை வீட்டில் ஸ்தாபிக்க வேண்டும். வெறும் லிங்கத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விடுவதால் மட்டும் பலன் கிடைப்பதில்லை!
--------------------------------------‐----------------------------------------
கண்ணன் வழிபட்ட காமதேனு!

மகாவிஷ்ணு கிருஷ்ணனாக அவதரித்து கோகுலத்தில் வளர்ந்த சமயத்தில், கோகுவாசிகள் ஆண்டுதோறும் செய்துவந்த இந்திர பூஜையை நிறுத்தச் சொன்னார். அதனால் இந்திரன் கோபம் கொண்டு கடும் மழை பொழியச் செய்தான். ஊரும் உயிர்களும் நீருள் மூழ்கித் தவிக்க, கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்து அதன்கீழ் சகலரையும் இருக்கச் செய்து காத்தார். கோகுலவாசிகளை தன்னால் எதுவும் செய்ய இயலாது என உணர்ந்து கண்ணனிடம் வந்து மன்னிப்புக் கேட்டான் இந்திரன். இந்திரபூஜை நின்றாலும், இந்திரனை அவனது தம்பி உபேந்திரனையும் சேர்த்து வழிபடச் சொல்லி, அப்படி வழிபடுவோர்க்கு எல்லா சுகங்களும் கிடைக்கட்டும் என்று பகவானே ஆசியளித்தார் அந்த நாளே, போகி.  இந்திர உப÷ந்திரர்களுடன் கோகுலவாசிகளும் இணைந்து நாராயணனின் அம்சமாகிய சூரியநாராயணனை வழிபட்டனர். அந்த தினமே ஸங்கராந்தி(பொங்கல்) பசுக்களைக் காத்ததால், காமதேனு ஆநிரைகளோடு முன்னின்று தனது பாலால் அபிஷேகித்து கண்ணனை வழிபட்டு கோவிந்தராஜ பட்டாபிஷேகம் செய்தாள்.  கோவிந்தனை கோவாகிய காமதேனு வழிபட்டு செய்த பூஜையே மாட்டுப் பொங்கல்.  சூரியனை, தினமும் காயத்ரியாலும், சூரியநமஸ்காரத்தாலும், ஆதித்ய-ஹ்ருதயம் போன்ற ஸ்லோகங்களாலும் பூஜிக்கிறோம். ராமபிரான், ராவணனை வெல்லவும், பாண்டவர் அட்சயபாத்திரம் பெறவும், ஸத்ராஜித் என்னும் அரசன் ஸ்யமந்தக மணியைப் பெறவும் அவர்கள் சூரியனை வழிபட்டதே காரணம். கிருஷ்ணருக்கும் சாம்பவதிக்கும் பிறந்தவனான ஸாம்பன் சாபத்தால் பெற்ற பெரு நோய், சூரியனின் அருளால், நீங்கப் பெற்றான், ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ நாராயண அதாவது எப்போதும் சூர்ய மண்டலத்தில் மத்தியில் இருப்பவன் நாராயணன் என்கிறது. வேதசாஸ்திரம். அருள், ஆரோக்கியம், அறிவு, ஆகியன தருபவன் சூரியன். இந்திரனைப்போல் சகல பாக்யங்களும் பெற வேண்டி போகியும் அவற்றை முழுமையாக அனுபவித்திட ஆயுளும் ஆரோக்யமும் வேண்டிச் செய்யும் சூர்ய நமஸ்காரமும் ஸங்காரந்தியும் (பொங்கல்) மறுநாள் மகாலட்சுமியின் அருள்கிட்டச் செய்யும் கோ பூஜையான மாட்டுப்பொங்கலுமேல மார்கழி கடைசிதினமும், தையின் முதல் இரு நாட்களும் பண்டிகை கொண்டாடுவதன் உட்பொருளாகும்.
--------------------------------------‐----------------------------------------
ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் விரதம் இருப்பதன் நன்மை

விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள் ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி, ஞானத்தை தேடி புறப்படுகிறது.வறுமையால்உணவு இல்லை, சூழ்நிலை காரணமாக உணவில்லை என்ற நிலை வரும் போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம் கண்முன் பாலும், பழமும், இனிப்பும், சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும் குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி பசித்திருக்கிறோமோ, அது தான் உண்மையான விரதம்.இன்றைய உலகில், உணவுக்கட்டுப்பாடு பற்றி டாக்டர்களே நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.டயட்டீசியன்களுக்கு இப்போது நிறையவே வேலை. எந்த வகை உணவு உண்ணலாம், எது கூடாது என்று இருதயவியல் நிபுணர்கள் நமக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். இதைத் தான், நமது முன்னோர் விரதம் என்றார்கள்.ஆயுர்வேதம் என்பது அதர்வண வேதத்தின் உபவேதமாகும். இதில் லங்ஙனம் பரம ஒளஷதம் என்று சொல்லப்பட்டுள்ளது. லங்ஙனம் என்றால் உணவு. ஒளஷதம் என்றால் மருந்து. உணவே சிறந்த மருந்து என்பது வேதவாக்காகும். நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். அதனால் தான் அமாவாசை, பவுர்ணமி, வெள்ளி, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை வகுத்தார்கள். விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. சுருங்கி விரியும் தன்மை சீராகிறது. மலஜலம் சரியாக வெளியேறுகிறது. ஆரோக்கியமாக வாழவே விரதங் களை நம் முன்னோர் வகுத்தனர்.விரதமாவது.. ஒன்றாவது... மனுஷன் செவ்வாயிலே வெள்ளம் வந்துச்சான்னா ஆராய்ச்சி பண்ணிகிட்டிருக்கான், இதிலே விரதம் கிரதமுனு பாடாபடுத்துறா எங்க அம்மா! என்று இனியும் சொல்ல மாட்டீர்கள் தானே!
--------------------------------------‐----------------------------------------
அரோகரா என்றால் என்ன?

ஹர என்ற சொல்லுக்குப் பாவங்களைப் போக்குவது என்று பொருள். ஹ என்ற எழுத்து தமிழில் அ என்று வரும். ஹரஹர என்ற சொல் தமிழில்அரோகரா என்று வந்தது. சிவபெருமானுடைய திருநாமங்களில் அர என்ற சொல் உயர்ந்தது. அரஹரா என்று இடைவிடாமல் உச்சரித்தால், நம் பாவங்கள் யாவும் தீயில் இட்ட பஞ்சு போல் எரிந்து ஒழியும்.  -வாரியார் உரையிலிருந்து ..
--------------------------------------‐----------------------------------------
சிவன் அருள்பாலிக்கும் தலங்களும் அவற்றின் சிறப்பும்!

பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவபெருமானை வழிபட்டதால் சிவலிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

*நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்

*ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

*தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன், இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.

*கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் காட்சி தருகிறார், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.

*அமர்நாத்தில் உள்ள பனி லிங்கம் சந்திரனைபோலவே 15 நாளில் வளர்ந்து பவுர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.

*கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.

*அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

*செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.

*காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்

*மகாராஷ்டிரா மாநிலம் எல்லோரோ குகைகளுக்கு அடுத்து உள்ள குஸ்மேசம் என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது.

*பொதுவாக பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்டுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில் மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.

*திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமவுலீஸ்வரர். அவர் மும்முக லிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும் தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.

*ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள அனுமன் காட்டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப் பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.

*பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

*தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார்.

*ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1 காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வரர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

*தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நல்லூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாப்பழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.

*காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குத் தெற்கே சிறிது தூரத்தில் ஜ்வரஹரேஸ்வரர் என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.

*மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில் மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

விஷ்ணு சிறப்புச் செய்திகள்

*திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் ஏழுமலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீவாரிபாதம் எனப்படும் அந்த இடத்தில் திருமலைவாசனின் பாதச்சுவடுகளே வழிபடப்படுகின்றன.

*திருமலையில் உள்ள பெருமாளுக்கு மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

*நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் போகிற வழியில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அல்லாவுக்கு பூஜை நடக்கிறது.

*திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியில் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.

*உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் புடவை உடுத்துகிறார்கள்.

*ஆந்திராவில் பத்ராசலத்தில் ராமர் சங்கு சக்ரத்துடன் காட்சியளிக்கிறார்.

*திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரியில் பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

*சிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காண சிங்கப்பெருமாள் கோயில் செல்ல வேண்டும் இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.

*திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.

*ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்தமைந்த சிவன்-திருமால் கோயில் இது மட்டுதான்.

*திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோயிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவருக்கு வேதநாராயணன் என்று பெயர்.

*காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அத்திவரதர். அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தரும் இவரது தரிசனம் 2019-ம் ஆண்டு கிடைக்கும்.

*திருக்கோவிலூரில் உள்ள மூலவர் இலுப்பை மரத்தால் ஆனவர். இவரது பெயர் திருவிக்ரசுவாமி.

*கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழு தலைகள் இருப்பது வித்தியாசமானது.

*திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன் கோயில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோயில்களிலும் தாயாருக்கு சன்னதி இல்லை.

*பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீ வைகுண்டத்தில் நத்தத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

*காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதிகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிப்படுகிறார்கள்.

*கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.

*மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோயிலில் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்துக்கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு சக்கரம் இல்லை.

*காஞ்சி உலகளந்த பெருமாள் திருக்கோயிலில் திருமழிசையாழ்வாராலும், திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன, பேரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகியவையே அவை.
--------------------------------------‐----------------------------------------
வழிபாட்டுக்கு பின் விநாயகரை கரைப்பது ஏன்?
கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.
------------‐-----------------------------------------
சதுர்த்தியன்று கடைபிடிக்க வேண்டியவை!

விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி வந்து பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை, அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.

நம் வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி வரச் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண்டும். குன்றிமணியால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும்.

கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள், பத்ரங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்யவேண்டும். பின்னர்,
ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா

எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை அல்லது 51 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு நிவேதனப் பட்சணங்களை வழங்கி நாமும் சாப்பிடலாம். வீட்டில் பூஜை முடித்தபின் ஆலயம் சென்று விநாயகரை வணங்கி வரலாம். காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு. விநாயகர் சதுர்த்திக்குப் பின் விநாயகர் சிலையை விவர்ஜனம் செய்யவேண்டும். விநாயகர் சதுர்த்தியையும் சேர்த்து, அன்றைய தினமோ அல்லது ஒன்றைப் படையில் அமையும்படியாக 3,5,7-ஆவது நாட்களிலோ இதை மேற்கொள்ளலாம். ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க வேண்டும். விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவருக்கு இருவேளை பூஜை நைவேத்தியம் செய்ய வேண்டும். பிள்ளையார் சிலை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும்; லட்சுமி கடாட்சம் கிட்டும்.
------------‐-----------------------------------------
கணபதிக்கு பிரியமானவை!

கணபதிக்கு பிரியமான 21: கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு?

ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள்-5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.

மலர்கள் 21: புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை. சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.

அபிஷேகப் பொருட்கள் 21: தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.

இலைகள் 21: மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.

நிவேதனப் பொருட்கள் 21: மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்.
------------‐-----------------------------------------
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் காலத்தால் பழமையான ஒரு குடைவரை கோயிலாகும். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் அர்ஜுன வன திருத்தலங்கள் நான்கு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர் தஞ்சை மாவட்டத்தில் திருவுடைமருதூர், ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம் சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி ஆகியவையாகும்.

விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவறைக்கோயில். இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுகிறது. முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் உள்ள கற்பக விநாயகர் சன்னதி விநாயகரின் ஐந்தாவது படை வீடாகும். நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.

இருப்பிடம்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தாலுகாவில், திருப்புத்தூர் - காரைக்குடி மெயின் ரோட்டில் உள்ளது பிள்ளையார்பட்டி. திருப்புத்தூரிலிருந்து சுமார் 9 கி.மீ., தூரத்திலும், காரைக்குடியிலிருந்து மதுரை வரும் ரோட்டில் சுமார் 18 கி.மீ., தூரத்திலும் உள்ளது.
------------‐-----------------------------------------
விநாயகர் அவதாரம்!

விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, யாரையும் உள்ளே விடாதே என்று கூறிச்சென்றாள். அப்போது சிவன் வர, காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன். தேவி வெகுண்டாள். நிலையை உணர்ந்த சிவன் முதலில் தென்பட்ட உயிரினமான யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும். நீயே யாவருக்கும் தலைவன். எனவே விநாயகன் என்றார். விக்னத்தை ஏற்படுத்துபவனும் அவன்; நிவாரணம் செய்பவனும் அவன்; காரிய ஜயம் தருபவனும் அவன்.

ஸர்வ விக்னஹரம் தேவம்
ஸர்வ விக்ன விவர்ஜிதம்
ஸர்வ ஸத்தி ப்ரதாதாரம்
வந்தே அஹம் கணநாயகம்.

என்று போற்றுகிறது. அவரது தந்தை, தாயான சிவபராசக்தி வணங்குவதால் அவரது பெயர் ஜ்யேஷ்டராஜன் ஆயிற்று.
------------‐-----------------------------------------
விநாயகரின் 32 வடிவங்கள்!

விநாயகரின் 32 வடிவங்கள்: 1. பால கணபதி, 2. தருண கணபதி, 3. பக்தி கணபதி, 4. வீர கணபதி, 5. சக்தி கணபதி, 6. துவிஜ கணபதி, 7. சித்தி கணபதி, 8. உச்சிஷ்ட கணபதி, 9. விக்ன கணபதி, 10. க்ஷிப்ர கணபதி, 11. ஹேரம்ப கணபதி, 12. லட்சுமி கணபதி, 13. மகா கணபதி, 14. விஜய கணபதி, 15. நிருத்த கணபதி, 16. ஊர்த்துவ கணபதி, 17. ஏகாட்சர கணபதி, 18. வர கணபதி, 19. த்ரயக்ஷர கணபதி, 20. சிப்ரப்ரசாத கணபதி, 21. ஹரித்ரா கணபதி, 22. ஏகதந்த கணபதி, 23. சிருஷ்டி கணபதி, 24. உத்தண்ட கணபதி, 25. ருணமோசன கணபதி, 26. துண்டி கணபதி, 27. துவிமுக கணபதி, 28. மும்முக கணபதி, 29. சிங்க கணபதி, 30. யோக கணபதி, 31. துர்க்கா கணபதி, 32. சங்கடஹர கணபதி.

கோபுர கணபதி: கோயில்களின் கோபுர வாயிலில் கணபதிக்குத் தனிச்சன்னதி அமைக்கப்படும். அவரைக் கோபுரக் கணபதி என்று கூறுவர். அவ்வாறு இல்லாதபோது கோபுர கோஷ்டத்தில் இவரை அமைப்பர். இவரை வணங்கிய பிறகே, பக்தர்கள் ஆலய தரிசனத்தைத் தொடங்குவர். சில ஆலயங்களில் கோபுரக் குடைவரை எனப்படும் கோபுரத்தின் உட்புறம் அமைந்த மேடைகளிலும் விநாயகரைக் காணலாம். இவரைக் குடைவரைப் பிள்ளையார் என்பர். ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் கோபுரக் குடைவரையில் கலங்காமல் காத்த விநாயகர் என்ற பெயரில் குடைவரைப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.

எதிர்நோக்கும் கணபதி: சில ஆலயங்களில் இறைவன் கிழக்கு நோக்கியிருக்க ராஜ கோபுரம் அல்லது தலைவாசல் தெற்கு நோக்கி இருக்கும். இத்தகைய கோயில்களில் கோயிலுக்குள் நுழைந்ததும் வழிபடத்தக்க வகையில் உள்மதில் ஓரமாக வாயிலை நோக்கியவாறு ஒரு கணபதியைச் சிறிய சன்னதியில் எழுந்தருள வைத்துள்ளனர். இவரை எதிர்கொள் கணபதி என்பர். மேற்கு நோக்கிய திருமயிலை கபாலீசுவரர் ஆலயத்தில் கிழக்கு வாயிலுக்கு நேராகவுள்ள நர்த்தன கணபதி, திருமழிசை ஒத்தாண்டேசுவரர் ஆலயத்தின் தேவராஜகணபதி, திருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் ஆலயத்தின் முல்லைவன கணபதி முதலான கணபதியர் எதிர்கொள் கணபதியராக விளங்குகின்றனர்.

கொடிமர கணபதி : கோயிலில் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கொடிமரத்திற்கு முன்பாகவோ, அவற்றின் பீடத்தின் அடியிலோ சிறிய மாடத்துள் இருப்பவரைக் கொடிமரக் கணபதி என்றும், கம்பத்தடி கணபதி என்றும் கூறுவர். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் கொடிமரக் கணபதியாகப் படித்துறை விநாயகர் அமைந்துள்ளார். இந்த ஆலயம் செப்பு ஓடு வேய்ந்து மூன்று கலசங்களுடன் அழகிய சபையாக உள்ளது. தனிச் சன்னதியாக அமைக்க முடியாதபோது பலிபீடத்தின் கிழக்கு அடிப்பட்டைப் பகுதியில் சிறிய மாடம் அமைத்து அங்கு விநாயகரை அமைப்பர். இப்படிச் சிறிய மாடத்துள் இருந்தாலும் பெரும் புகழ் பெற்ற விநாயகரைப் பல இடங்களில் காணலாம். திருவலஞ்சுழியில் மூலஸ்தானத்தில் கடல் நுரையால் ஆன வடிவில் விநாயகர் ஸ்வேத (வெள்ளை) விநாயகர் என்ற பெயரில் விளங்குகிறார். பலிபீடத்தில் அமைக்கப்பட்டுள்ள கணபதிக்குச் சிறப்பளித்து முகமண்டபம், மகாமண்டபம் முதலியவற்றை அமைத்துத் தனி ஆலயமாக ஆக்கியுள்ளனர். இவருக்குக் கொடியேற்றி விழா நடத்துகின்றனர். பலிபீடத்திற்கு முன்பாக அமையும் கணபதிக்குச் சங்கல்ப கணபதி என்று பெயர். முன்னாளில் இவருக்கு முன்பாகச் சங்கல்பம் செய்து கொண்டு, அன்றைய பஞ்சாங்கத்தைப் படித்த பின்னரே ஆலயத்தில் பூசைகளை மேற்கொள்வர்.

கன்னிமூலை கணபதி: பிராகாரங்களில் கன்னிமூலை எனப்படும் தென்மேற்குமுனையில் விநாயகர் சன்னதி அமைப்பது வழக்கம். அனைத்துப் பிரகாரங்களிலும் கன்னிமூலையில் கணபதி ஆலயம் அமைகிறது என்றாலும் முதல் பிரகாரத்தில் அமையும் கன்னிமூலை கணபதியே பிரதான கணபதியாகப் போற்றப்படுகிறார். இவரைத் தல விநாயகர் என்று கொண்டாடுகின்றனர். சபரிமலையில் கன்னிமூலை கணபதி மிகவும் விசேஷமானவர்.

துவார கணபதி: ஆலயத்தின் ஒவ்வொரு வாயிலிலும் வலப்புறம் விநாயகரும் இடப்புறம் முருகனும் அமைக்கப்படுகின்றனர். இவர்களை முறையே துவார கணபதி, துவார சுப்பிரமணியர் என்று அழைப்பர். தத்துவவாதிகள் இவர்களை உலக உற்பத்திக்கு ஆதாரமான பிந்து நாதங்களின் வடிவம் என்கின்றனர். மேலும், விநாயகர் கல்யாண கணபதி, பந்தக்கால் கணபதி, நந்தவனப் பிள்ளையார், வசந்த மண்டப கணபதி, தேரடிமண்டப கணபதி என்று பல்வேறு பெயர்களில் ஆலயத்தில் பல இடங்களில் வீற்றிருந்து அருள்புரிகிறார்.

விமான கணபதி: ஸ்ரீவிமானத்தில் அமையும் பஞ்ச கோட்டங்களில் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள கோட்டத்தில் நர்த்தன விநாயகரைக் காணலாம். இவர் கோஷ்ட கணபதி. சில விமானங்களில் மேற்பகுதியில் விநாயகரை அமைத்துள்ளனர். மயிலாடுதுறை மயூரநாத சுவாமி ஆலயத்தில் ஸ்ரீவிமானத்தின் அருகில் சிறிய சன்னிதியில் ஸ்ரீவிமான கணபதி எழுந்தருளியுள்ளார். அகத்தியர் மணலைத் திரட்டி இவரது திருமேனியை அமைத்து வழிபட்டார் என்று தலபுராணம் கூறுகிறது.
------------‐-----------------------------------------
வினை நீக்கும் மந்திரம்!

ஓங்காரமே உலகின் பிரதான ஒலி. அதனை ப்ரணவ மந்திரம் என்பர். ப்ரணவம் என்பதில் ப்ர என்பதற்கு விசேஷ என்பது பொருள்; நவம் என்பதற்கு புதுமை என்று பொருள். புதுப்புது விசேஷங்களை உள்ளடக்கிய மந்திரமே ப்ரணவ மந்திரம், ஓம் என்பதைப் போன்றே பிள்ளையார் சுழியும் விசேஷமானது. பிள்ளையார் சுழியில் அகரம், உகரம், மகாரம் மூன்றும் அடங்கியுள்ளன. ஒலி வடிவமும் வரி வடிவமும் சேர்ந்துதான் எழுத்தாகிறது. ஒலி வடிவம் நாதம்; வரி வடிவம் பிந்து. உயிரும் உலகமும் உண்டாக இவையிரண்டும் வேண்டும். நாத பிந்து சேர்க்கையின் குறியீடாகத் திகழும் பிள்ளையார் சுழியை நாம் எழுதத் தொடங்கும்முன் பயன்படுத்தினால், அந்தப் பணி இடையூறின்றி முடியும்.  அதே போல் எந்த ஒரு செயல் ஆரம்பிக்கும் போதும் விநாயகர் மந்திரமான ஸ்ரீ கணாதிபதயே நம: என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்தால் விநாயகர் அருளால் எந்த வினைகளும் தடைகளும் வராமல் நாம் தொடங்கும் செயல் வெற்றிகரமாக அமையும் என்பது நம்பிக்கை.

பழங்காலத்தில் சுவடிகள் எழுதத் துவங்கும்போது பிள்ளையார்சுழிக்குப் பதிலாக விநாயகர் மந்திரமான ஸ்ரீ கணாதிபதயே நம: என்று எழுதினர். இவ்வாறு சொல்லியோ அல்லது எழுதியோ தொடங்கும் பணிகள்  தடங்கலின்றி விரைவில் நிறைவேறும் என்பர்.
------------‐-----------------------------------------
சதுர்த்தியன்று சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம்!

விநாயகர் சதுர்த்தியன்று மோதகம், பொரி, கடலை, பழம் படைத்து சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் இதோ!

கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் வர காத்திருக்கும் குணநிதியே!

பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே!

ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுரனை கொன்றவனே! அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பவனே!

என்னைக் காக்கும் விநாயகனே!
உனக்கு என் வணக்கம்.

இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே! பாவங்களைக் களைந்து புண்ணியத்தை அருள்பவனே!

தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்க  வனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் செல்வவளத்தை அருள்பவனே!

எல்லையில்லாத பரம் பொருளே! விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.

உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட
மன்னித்து அருள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாமூர்த்தியே! சகிப்புத் தன்மை, பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களைத்
தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.

திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து, தூய்மையான உள்ளத்தைத் தருவாயாக.

உலகம் அழியும் காலத்திலும் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றிபெற என்றும் துணை நிற்பவனே! மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்கலத்தை தந்தருள்வாயாக.

பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் பிள்ளையே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! துன்பங்களைப் போக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப் பொருளே! யானை முக கணேசனே! காலமெல்லாம் உன்னை நினைத்து,வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். எங்களுக்கு இம்மையில் சகல செல்வத்தையும், மறுமையில் முக்தியையும் தந்தருள்வாயாக.
------------‐-----------------------------------------
விநாயகர் அகவல்!

சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பல இசை பாடப்
பொன் அரை ஞானும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும் மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழ் ஒளி மார்பும்
சொற்பதம் கடந்து துரிய மெய்ஞ்ஞான
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன!

இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத்தான் எழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்து எழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்து என் உளந்தனில் புகுந்து

குரு வடிவாகிக் குவலம் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இது பொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக்
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கு அருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து

தலம் ஒரு நான்கும் தந்து எனக்கு அருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத்து அங்கிசை நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடை பிங்கலையின் எழுத்து அறிவித்துக்
கடையில் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்று எழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டு எழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டு எழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முகம் ஆக இனிது எனக்கு அருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிது எனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டிற்கும் ஒன்று இடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்

எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் கட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடு மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலை அறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட
வித்தக விநாயக விரை கழல் சரணே!
------------‐-----------------------------------------
வடக்கே தலை வச்சா என்னாகும்?

இந்த காலத்துப் பிள்ளைகளில் ஒரு பகுதியினர் பெரியவர்கள் பேச்சைக் கேட்பதில்லை. வடக்கே பார்த்து தலை வைத்து படுப்பவர்களை பெரியவர்கள் கண்டித்தால் நீ பழைய பஞ்சாங்கம்! எங்கே தலை வைத்தால் உனக்கென்ன! என்று குரலில் கேலியைக் குழைத்து பேசுகிறார்கள். பிள்ளையார் மனித முகத்துடன் இருந்த காலத்தில் சிவனுடன் போர் புரிந்தாராம். போரில் அவரது தலை துண்டிக்கப்பட்டதாம். பார்வதி அழுதாளாம். மனைவியை சமாதானப்படுத்த சிவன் வடக்கே யார் தலை வைத்து படுத்திருக்கிறார்களோ அவரது தலையை வெட்டி வரும்படி கூறினாராம். ஒரு யானை வடக்கே தலை வைத்து படுத்திருந்ததாம். அதன் தலையைக் கண்டு வந்து பிள்ளையாருக்கு பொருத்தினார்களாம். இதெல்லாம் புராணக்கதை என்று நம் பிள்ளைகள் ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் இந்தக் கதைக்கு அறிவியல் பின்னணியே காரணம். பூமியின் வடதுருவத்திற்கு காந்த சக்தி அதிகம். அதனால் வடக்கு நோக்கி படுத்தால் காந்தசக்தி மூளையைத் தாக்கும். இதனால் குழம்பிய மனநிலை உருவாகும். ஆழ்ந்த தூக்கம் உண்டாகாது. தூக்கம் கெடும்போது உடல்நலம் பாதிக்கும். உயிர் பிரிந்ததும் வடக்கு நோக்கி படுக்க வைப்பது நம் மரபு. சமண சமயத்தில் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் உயிரை விட எண்ணினால் வடக்கிருத்தல் என்ற விரதத்தை மேற்கொள்வர். இதற்குசள்ளேகனம் என்றும் பெயருண்டு. நட்புக்கு இலக்கணம் வகுத்த பிசிராந்தையாரும், கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்து உயிர் விட்ட செய்தியை பழந்தமிழ் இலக்கியம் கூறுகிறது.  அறிவியல் செய்தியை படித்தவர்கள் உணர்ந்து கொள்வார்கள். பாமரர்கள் புரிந்து கொள்ளவே பிள்ளையார் பற்றிய புராணக்கதையை பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். புரிகிறதா!
------------‐-----------------------------------------
பிள்ளையார் என்பது ஏன்?

தாய், தந்தை, மாமன், மாமி என்று அனைத்து உறவுப்பெயருக்கும் ஆர் என்னும் விகுதியைச் சேர்த்து தாயார், தந்தையார், மாமனார், மாமியார் என்று சொல்வது வழக்கம். ஆனால், வீட்டில் உள்ள சிறுகுழந்தைகளை பிள்ளையார் என்று யாரும் சொல்வதில்லை. விதிவிலக்காக, விநாயகரை மட்டும் பிள்ளையார் என்று சிறப்பித்துக் கூறுகிறோம். சிவபார்வதியின் பிள்ளைகளில் மூத்தவர், சிறந்தவர் என்ற காரணத்தால் விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வழங்கப்படுகிறது.
------------‐-----------------------------------------
அருள் மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்

மூலவர்:சுந்தர்ராஜப்பெருமாள்
உற்சவர்:வடிவழகிய நம்பி
தாயார்:அழகியவல்லி
தல விருட்சம் :தாழம்பூ
தீர்த்தம்:மண்டுக தீர்த்தம்
ஆகம பூஜை:பாஞ்சராத்ரம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திரு அன்பில்
ஊர்:அன்பில்
மாவட்டம் :திருச்சி
மாநிலம் :தமிழ்நாடு
பாடியவர்கள்:திருமழிசையாழ்வார்
      
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் நாகத் தணையரங்கம் பேர் அன்பில் - நாகத் தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால் அணைப் பார் கருத்தனாவான்.திருமழிசையாழ்வார்  
     
விழா:மாசியில் தீர்த்தவாரி திருவிழா மற்றும் வைகுண்ட ஏகாதசி.           சிறப்பு:பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் இருப்பதைப்போல இங்கும் சுவாமி தாரகவிமானத்தின் கீழ் இருக்கிறார். இவ்விமானம் ராஜகோபுரம் போன்ற அமைப்பில் இருப்பது சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
      
திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 12.30 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்,திருஅன்பில்- 621702. திருச்சி மாவட்டம்;போன்:+91- 431 - 6590 672. 
    
தகவல்:108 திவ்ய தேசங்களில் இத்தலம் 4வது தலமாக கருதப்படுகிறது.பிரகாரத்தில் நரசிம்மர்,வேணுகோபாலர்,லட்சுமி நரசிம்மர்,வீர ஆஞ்சநேயர் 12 ஆழ்வார்கள் ஆகியோர் இருக்கின்றனர். இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான திருப்பேர்நகர் அப்பக்குடத்தான் கோயில் இருக்கிறது.இங்கும் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் இருக்கிறார். திருச்சி,திருப்பேர்நகர்,திருஅன்பில் என அருகருகே மூன்று பள்ளிகொண்ட பெருமாள்களை தரிசனம் செய்வது விசேஷமான பலன்களைத் தரும் என்கிறார்கள்.மூலவரின் விமானம் தாரக விமானம் எனப்படுகிறது.  
     
பெருமை:சுதபா எனும் மகரிஷி ஒருவர் தன் தவ வலிமையால் நீரிலும் நிலத்திலும் வாழும் பண்புகளைக் கொண்டவராக இருந்தார்.மகாவிஷ்ணுவின் மீது பக்தி கொண்டிருந்த அவர் ஒருநாள் தண்ணீருக்கடியில் தவம் செய்து கொண்டிருந்தபோது அவரைப் பார்க்க துர்வாச முனிவர் வந்தார்.சுதபா தவத்தில் இருந்ததால் துர்வாசர் வந்ததை கவனிக்கவில்லை.நீண்டநேரம் வெளியில் காத்திருந்ததால் கோபம் கொண்ட துர்வாசர் அவரை தண்ணீரில் வாழும் தவளையாக மாறும்படி சபித்துவிட்டார்.இதனால் சுதபா மகரிஷிக்கு மண்டுகர்(மண்டுகம் - தவளை)என்ற பெயர் ஏற்பட்டது. துர்வாசரின் சாபத்திற்கு ஆளான மண்டுகர் அவரிடமே தனது சாபத்திற்கு விமோசனம் கேட்டார். துர்வாசர் அவரிடம் உனக்கு கிடைத்த இந்த சாபம் முற்பிறவியில் செய்த கர்மத்தால் கிடைத்ததாகும்.தகுந்த காலத்தில் மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்கப்பெற்று சாபவி மோசனம் பெறுவாய் என்றார்.அதன்படி மண்டுக மகரிஷி இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் (மண்டுகதீர்த்தம்)சுவாமியை எண்ணி தவம் செய்து வந்தார்.மகாவிஷ்ணு அவருக்கு சுந்தர்ராஜராக காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். சுவாமி கருவறையில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி நாபியில் பிரம்மாவுடன் இருக்கிறார்.உத்தமர் கோயிலில் தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற சிவன் இத்தலம் வந்து இங்குள்ள பெருமாளை தரிசனம் செய்துவிட்டுச் சென்றார்.அமர்ந்த நிலையில் ஆண்டாள்: முன்மண்டபத்தில் ஆண்டாள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள்.இவள் நின்ற கோலத்தில் இருக்க உற்சவர் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள்.ஒரே சமயத்தில் ஆண்டாளின் இரு கோலங்களையும் தரிசனம் செய்வது அபூர்வம்.திருமண தோஷம் உள்ளவர்கள் இவளிடம் வேண்டிக் கொண்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. தேவலோக கன்னியான ஊர்வசி தன் அழகு மீது கர்வம் வந்துவிடாமல் இருப்பதற்காக இவரை வணங்கிச் சென்றுள்ளாள்.
 
      
ஸ்தல வரலாறு:ஒருசமயம் பிரம்மாவுக்கு உலகில் உயிர்களை நாமே பிறக்க வைக்கிறோம். ஒவ்வொரு உயிரும் அழகுடன் இருப்பதற்கும் நாம்தான் காரணமாக இருக்கிறோம்.அந்த அழகிய உயிர்களுக்கெல்லாம் மூலாதாரமாக இருக்கும் நாம்தான் அனைவரிலும் அழகானவர் என்ற ஆணவம் உண்டானது. மேலும் அனைவரையும் படைக்கும் தன்னை யாரும் வணங்குவதில்லையே என்ற ஆதங்கமும் எழுந்தது.பிரம்மாவின் எண்ணத்தை அறிந்த மகாவிஷ்ணு அவரது ஆணவத்தை விட்டுவிடும்படி சொல்லிப்பார்த்தார்.பிரம்மாவோ கேட்பதாக இல்லை.எனவே அவரை பூலோகில் சாதாரண மனிதனாக பிறக்கும்படி சபித்துவிட்டார் மகாவிஷ்ணு.பூலோகம் வந்த பிரம்மா ஒவ்வொரு தலங்களுக்கும் சென்று சுவாமியை வணங்கி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு வேண்டி வந்தார். இத்தலம் வந்த அவர் சுவாமியை எண்ணி தவம் இருந்தார்.அப்போது மகாவிஷ்ணு பேரழகு வாய்ந்த மனிதராக அவர் முன்பு வந்தார்.அவரைக் கண்ட பிரம்மா இவ்வளவு அழகான எவரையும் இதுவரையில் நான் பார்த்ததில்லையே நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? எனக்கேட்டார். அவரிடம் அன்பாக பேசிய விஷ்ணு அழகு என்பது நிலையற்றது. ஆணவம் ஒருவனை அழிக்கக்கூடியது. இவ்விரண்டு குணங்களையும் கொண்டிருப்பவர் சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதில்லை என உபதேசம் செய்து பள்ளிகொண்ட கோலத்தில் அவருக்கு காட்சி தந்தார் மகாவிஷ்ணு.உண்மையை உணர்ந்து கொண்ட பிரம்மா ஆணவம் ஒழியப்பெற்றார்.பிரம்மாவின் வேண்டுதலுக்காக விஷ்ணு இத்தலத்தில் பள்ளிகொண்ட கோலத்திலேயே எழுந்தருளினார்.பிற்காலத்தில் சோழமன்னர் ஒருவர் இங்கு கோயில் கட்டினார்.பிரம்மாவின் மீது அன்பு கொண்டு அவருக்காக மகாவிஷ்ணு எழுந்தருளிய தலம் என்பதால் இத்தலம் "அன்பில்' என்ற பெயரும் பெற்றது.


பந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்!

காமம்: பற்று உண்டானால் பாசம் மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும் ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

கண்: ஆண்டவனைப் பார்க்கவும் ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

18 படி தெய்வங்கள்

ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு.

1.விநாயகர் 2. சிவன் 3.பார்வதி 4.முருகன் 5.பிரம்மா 6.விஷ்ணு 7.ரங்கநாதர் 8.காளி 9.எமன் 10.சூரியன் 11.சந்திரன் 12.செவ்வாய் 13.புதன் 14.குரு(வியாழன்) 15.சுக்கிரன் 16.சனி 17.ராகு 18.கேது

பதினெட்டுப் படிகளின் தாத்பரியம் என்ன?

முதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல் படி.

இரண்டாம் படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி.

மூன்றாம் படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.

நான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம் புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி.

ஐந்தாம் படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

ஆறாம் படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.

ஏழாம் படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான்  என உணர்வது ஏழாவது படி.

எட்டாம் படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.

ஒன்பதாம் படி: ராஜவித்ய ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது ஒன்பதாம் படி.

பத்தாம் படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.

பதினொன்றாம் படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது பதினொன்றாம் படி.

பன்னிரண்டாம் படி: பக்தி யோகம். இன்பம்  துன்பம் விருப்பு வெறுப்பு ஏழை  பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.

பதின்மூன்றாம் படி: ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம் படி.

பதினான்காம் படி: குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.

பதினைந்தாம் படி: தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

பதினாறாம் படி: சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.

பதினேழாம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி.

பதினெட்டாம் படி: மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல் உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி. சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால் நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.
வடக்கே தலை வச்சா என்னாகும்?

இந்த காலத்துப் பிள்ளைகளில் ஒரு பகுதியினர் பெரியவர்கள் பேச்சைக் கேட்பதில்லை. வடக்கே பார்த்து தலை வைத்து படுப்பவர்களை பெரியவர்கள் கண்டித்தால் நீ பழைய பஞ்சாங்கம்! எங்கே தலை வைத்தால் உனக்கென்ன! என்று குரலில் கேலியைக் குழைத்து பேசுகிறார்கள். பிள்ளையார் மனித முகத்துடன் இருந்த காலத்தில் சிவனுடன் போர் புரிந்தாராம். போரில் அவரது தலை துண்டிக்கப்பட்டதாம். பார்வதி அழுதாளாம். மனைவியை சமாதானப்படுத்த சிவன் வடக்கே யார் தலை வைத்து படுத்திருக்கிறார்களோ அவரது தலையை வெட்டி வரும்படி கூறினாராம். ஒரு யானை வடக்கே தலை வைத்து படுத்திருந்ததாம். அதன் தலையைக் கண்டு வந்து பிள்ளையாருக்கு பொருத்தினார்களாம். இதெல்லாம் புராணக்கதை என்று நம் பிள்ளைகள் ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் இந்தக் கதைக்கு அறிவியல் பின்னணியே காரணம். பூமியின் வடதுருவத்திற்கு காந்த சக்தி அதிகம். அதனால் வடக்கு நோக்கி படுத்தால் காந்தசக்தி மூளையைத் தாக்கும். இதனால் குழம்பிய மனநிலை உருவாகும். ஆழ்ந்த தூக்கம் உண்டாகாது. தூக்கம் கெடும்போது உடல்நலம் பாதிக்கும். உயிர் பிரிந்ததும் வடக்கு நோக்கி படுக்க வைப்பது நம் மரபு. சமண சமயத்தில் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் உயிரை விட எண்ணினால் வடக்கிருத்தல் என்ற விரதத்தை மேற்கொள்வர். இதற்குசள்ளேகனம் என்றும் பெயருண்டு. நட்புக்கு இலக்கணம் வகுத்த பிசிராந்தையாரும், கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்து உயிர் விட்ட செய்தியை பழந்தமிழ் இலக்கியம் கூறுகிறது.  அறிவியல் செய்தியை படித்தவர்கள் உணர்ந்து கொள்வார்கள். பாமரர்கள் புரிந்து கொள்ளவே பிள்ளையார் பற்றிய புராணக்கதையை பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். புரிகிறதா!
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 31ॐ

கல்யாண மண்டபம் யாகசாலையை அடுத்து உள்ள அர்த்த ஜாம சுந்தரரைத் தரிசனம் செய்துகொண்டு பக்கத்தில் உள்ள சங்குடன் கூடிய "பாலகணபதி"யைத் தரிசனம் செய்யலாம். இதே பிரகாரத்தில் சனீஸ்வரருக்குத் தனி சன்னதி கிழக்கே பார்த்து உள்ளது. தவிரவும் நவகிரகங்களுடனும் சனீஸ்வரர் இடம் பெற்று இருக்கிறார். இதை அடுத்து உள்ள தேவ சபையானது சித்சபைக்கு மேற்கே தென் திசையை நோக்கி உள்ளது. உற்சவ மூர்த்திகள் இங்கே வைக்கப்பட்டுள்ளதோடு தீட்சிதர்களின் தினசரி கூடும் இடமாகவும் உள்ளது. இங்கே கூடித் தான் கோவில் நடைமுறைகள் வழிபாடுகள் பற்றிய முடிவுகள் கோவில் நிர்வாகம் பற்றிய முடிவுகள் முதலியன தீட்சிதர்களால் எடுக்கப்படும். சிதம்பரம் கோவிலில் 5 பிரகாரங்கள் உள்ளன. இதில் 2வது பிரகாரத்தில் கோபுரங்கள் அமைந்துள்ளன. இந்த 2வது பிரகாரத்தைப் "பிராணமயகோசம்" எனவும் சொல்லுகிறார்கள். நம் உடலில் பிராணன் எவ்வளவு முக்கியமோ அவ்வலவு முக்கியத்துவம் கோபுரங்களுக்கும் உண்டு. கோபுர தரிசனம் பாப விமோசனம் என்பது ஆன்றோர் வாக்கு! கோவில் நடை கூடக் குறிப்பிட்ட காலம் வரை தான் திறந்து இருக்கும். இறையைத் தரிசனம் செய்யவும் குறிப்பிட்ட காலங்கள் உண்டு. ஆனால் இந்தக் கோபுரங்கள் நம்மால் இறை தரிசனம் செய்ய முடியாவிட்டாலும் கோவில் மூடிய பின்பு கூட இவற்றின் தரிசனத்தால் நமக்கு இறை தரிசனம் கிடைத்த மாதிரி மனம் நிம்மதி அடைகிறது. இந்தக் கோபுரங்கள் அவ்வப் பொழுது வந்த அரசர்களால் பராமரிப்பும் திருப்பணியும் செய்யப் பட்டிருக்கிறது. இதில் முக்கியமான மன்னர்கள் எனச் சரித்திரம் குறிப்பிடுபவை பல்லவர்களின் நந்திவர்மன், ஹிரண்யவர்மன் சோழ அரசர்களில் தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்த முதலாம் பராந்தகன், பாண்டியர்களில் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், விஜய நகர அரசர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.

தெற்குக் கோபுரம் கோப்பெருஞ்சிங்கன் என்னும் பல்லவ அரசனால் திருப்பணி செய்யப்பட்டதாய்ச் சொல்லப்படுகிறது. இதை ஒட்டி ஒரு சுப்ரமணியர் கோவில் வடக்கே பார்த்து உள்ளது. தவிரவும் சதாசிவ மூர்த்தி என்ற சிவனின் ஒரு ரூபத்திற்கு எனத் தனி சன்னதியும் தெற்கு கோபுரத்துக்கு எதிரே உள்ளது. இதை அடுத்து நாம் காண்பது 8 அடிக்கு உயரமான மிகப் பெரிய "முக்குறுணி விநாயகர்". இவருக்குப் பெரிய படி அளவு 6 படிக்கு அரிசியில் செய்யப்பட்ட கொழுக்கட்டையை ஒரே கொழுக்கட்டையாகச் செய்து நைவேத்தியம் செய்யப்படுகிறது. இங்கே தவிர மதுரையில் மீனாட்சி சன்னதியில் இருந்து ஸ்வாமி சன்னதிக்குப் போகும் வழியில் தெற்கு கோபுரத்தைப் பார்த்துக் கொண்டு "முக்குறுணி விநாயகர்" அமர்ந்திருப்பார். அவருக்கும் இதே மாதிரி முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட கொழுக்கட்டை நைவேத்தியம் பிள்ளையார் சதுர்த்தி அன்று செய்யப்படும். முன் பதிவில் போட்டிருக்கும் லிங்கத் திருமேனி சிதம்பரம் மூலநாதரின் லிங்க ஸ்வரூபம் இல்லை. அது நான் புகுந்த ஊரான பரவாக்கரைக்கு அருகில் உள்ள "கருவிலி" எனப்படும் சற்குணேஸ்வரபுரத்தின் "சற்குணேஸ்வரர்" ஆவார்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
உபநிடதங்கள் என்பதன் பொருள் தெரியுமா?

உபநிஷத் என்றால் அருகில் அமர் என்பது பொருள். குருவின் அருகில் அமர்ந்து சீடனால் கேட்கப்பட்ட அரிய பெரிய தத்துவங்கள் அடங்கியதே உபநிடதம் எனப்பட்டது. உபநிடதங்கள் மொத்தம் 108 என்று சொல்லப்படுகிறது. அவற்றுள் மிக முக்கியமானவை பத்து. அவை ஈசாவாஸ்யம், கேனம், கடம், பிரச்சினம், முண்டகம், மாண்டுக்யம், தைத்தரீயம், ஐதரேயம், சாந்தோக்யம், பிரகதாரணியகம் எனப்படும். உபநிடதங்கள் இறைவனின் உண்மை வடிவைக் காண, அதாவது பிரம்மத்துடன் ஒன்றி ஐக்கியம் அடைதலாகிய வீடு பேற்றைப் பெறவேண்டும் என்னும் கருத்தைக் கொண்டவை. அஹம் பிரம்மாஸ்மி (நான் பிரம்மமாயிருக்கிறேன்) தத்வம் அசி (நீயும் அதுவாகவே இருக்கிறாய்) என்ற இந்தப் பேருண்மையை உபநிடதங்கள் சொல்லி நிற்கின்றன. வேதங்களின் சாரமே உபநிடதங்கள் என்பர்.
__________________________________________________________________________________________________________
1. ஈசாவஸ்யம் : இதை ஈசோபநிடதம் என்பர். இது இரண்டு வழிகளைக் கற்பிக்கிறது. ஒன்று ஞானத்தின் வழி; மற்றது ஞானத்தின் வழி நின்று பற்றுகளை விட்டொழிக்கும் வழி. முதல் சுலோகம் ஈசா வாஸ்யம் எனத் தொடங்குவதால் காரணப் பெயராயிற்று.
__________________________________________________________________________________________________________
2. கேன வாஸ்யம் : உளநூற் பாகுபாடுகளைத் தெளிவாகச் சொல்லி அனைவருக்கும் பரம்பொருளின் நிலைமை அறியச் செய்கிறது. உருவத்தில் சிறியது, கருத்தில் பெரியது என்ற தத்துவத்தின் படியும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற உண்மையையும் விளக்குகிறது. சங்கராச்சாரியார் இதற்கு பதபாஷ்யமும் வாக்யபாஷ்யமும் செய்திருக்கிறார். முதல் ஸ்லோகம் கேன் என்று தொடங்குவதால் காரணப் பெயராயிற்று.
__________________________________________________________________________________________________________
3. கடோப நிடதம் : வேதாந்தத்தின் மிக உயர்ந்த கோட்பாடுகளை எடுத்து உரைக்கின்றது. மறைத் தத்துவத்தை விளக்கும் பூரணமான நூல். வாழ்க்கையின் இன்ப துன்பங்களையும் வேதத்தின் விழுமிய கருத்துகளையும் நன்குணர்ந்த ஆத்ம ஞானியான யமனை ஆசிரியனாகவும் நசிகேதனை மாணவனாகவும் கொண்டு வேதாந்தத்தின் அதீத பயனை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறது.
__________________________________________________________________________________________________________
4. பிரசின உபநிடதம் : ஆறு இளஞ்சீடர்கள் பிப்பிலாதன் என்னும் நல்லாசிரியனை குருவாகக் கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டு ஐயங்களைத் தீர்த்துக் கொண்டனர். அதுவே பிரசின உபநிடதம்.
__________________________________________________________________________________________________________
5. முண்டக உபநிடதம் : துறவிகளின் ஞான வாழ்க்கையைப் பற்றியும் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளையும் போதிப்பது.
__________________________________________________________________________________________________________
6. மாண்டுக்ய உபநிடதம் : உருவில் சிறியது. பன்னிரண்டு மந்திரங்கள் மட்டுமே கொண்டது.
__________________________________________________________________________________________________________
7. தைத்திரிய உபநிடதம் : சிறந்த வாழ்க்கை முறைக்கு வழிகாட்டும் நூல். குரு சீடனுக்கு உபதேசிக்கும் அறிவுரைகள் கொண்ட முறையில் அமைந்தது.
__________________________________________________________________________________________________________
8. ஐதரேய உபநிடதம் : நாம் உண்ணும் உணவே பிரம்மம் என்பதையும், உயிரைக் காப்பாற்றக்கூடிய உணவுப் பொருள் பிரத்தியட்சமான தெய்வம் என்பதையும் விரிவாகச் சொல்வது. இதை வருண பகவான் தனது மகன் பிருகுவுக்கு உபதேசித்ததாம்.
__________________________________________________________________________________________________________
9. சாந்தோக்கிய உபநிடதம் : மூச்சுக் கலை எனப்படும் பிராண வித்தையைப் பற்றிக் கூறுவது. ஜாபாலசத்திய சாமர் என்பவர் வியாக்கிர பாதருடைய குமாரன் கோசுருத்திக்கு உபதேசம் செய்தது.
__________________________________________________________________________________________________________
10. பிரக தாரணியகம் உபநிடதம் : ஆறு அத்தியாயங்களைக் கொண்டது. முதல் இரண்டு அத்தியாயங்கள் மதுகாண்டம் எனவும் மத்திய இரண்டு அத்தியாயங்கள் யாக்ஞவல்கிய காண்டம் எனவும் கூறப்படும். உபதேசம், விளக்கம், உபாசனை இம்மூன்றும் ஒவ்வொரு காண்டத்திலும் இடம் பெறுகிறது.
__________________________________________________________________________________________________________
நமது ஐந்தாவது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

              5:ஸ்ரீ ஞானானந்தேந்ர ஸ்ரஸ்வதி ஸ்வாமிகள்
                                     (கி.மு.268-205)

சோழ நாட்டிலுள்ள மங்கலம் என்ற சிற்றூரில் ஸ்ரீ ஞானானந்தேந்ர ஸ்ரஸ்வதி ஸ்வாமிகள் அவதரித்தார். திராவிட அந்தண குலத்தவரான நாகேசன் என்பவரின் புதல்வர். ஞானோத்தமன் என்பது இவறது இயற்பெயர். தர்க்க சாஸ்திரத்தில் நிபுணர் ஸ்ரீகாமகோடி பீடத்தின் 2வது ஆச்சார்யரான ஸ்ரீசுரேஸ்வரர் இயற்றிய 'நைஷ்கர்ம்ய சித்தி'என்ற நூலுக்கு விளக்க உரை எழுதியுள்ளார். அதன் பெயர் சந்திரிகை. அந்நூலில் இவர் ஸ்ரீசுரேஸ்வரரையும் அடுத்து வந்த குருவையும் போற்றியிருக்கிறார். இவர் மன்மத ஆண்டு, மார்கழி மாதம், சுக்லபக்ஷ பஞ்சமியில் (கி.மு.205)காஞ்சியில் சித்தியடைந்தார்.
சதுர்த்தியன்று சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம்!

விநாயகர் சதுர்த்தியன்று மோதகம், பொரி, கடலை, பழம் வைத்து சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் இதோ!

கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் வர காத்திருக்கும் குணநிதியே!

பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே!

ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுரனை கொன்றவனே! அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பவனே!

என்னைக் காக்கும் விநாயகனே!
உனக்கு என் வணக்கம்.

இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே! பாவங்களைக் களைந்து புண்ணியத்தை அருள்பவனே!

தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்க  வனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் செல்வவளத்தை அருள்பவனே!

எல்லையில்லாத பரம் பொருளே! விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.

உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட
மன்னித்து அருள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாமூர்த்தியே! சகிப்புத் தன்மை, பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களைத்
தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.

திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து, தூய்மையான உள்ளத்தைத் தருவாயாக.

உலகம் அழியும் காலத்திலும் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றிபெற என்றும் துணை நிற்பவனே! மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்கலத்தை தந்தருள்வாயாக.

பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் பிள்ளையே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! துன்பங்களைப் போக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப் பொருளே! யானை முக கணேசனே! காலமெல்லாம் உன்னை நினைத்து,வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். எங்களுக்கு இம்மையில் சகல செல்வத்தையும், மறுமையில் முக்தியையும் தந்தருள்வாயாக.


_______________________________________________________________________________________
விநாயகர் அகவல்!

சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பல இசை பாடப்
பொன் அரை ஞானும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும் மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழ் ஒளி மார்பும்
சொற்பதம் கடந்து துரிய மெய்ஞ்ஞான
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன!

இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத்தான் எழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்து எழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்து என் உளந்தனில் புகுந்து

குரு வடிவாகிக் குவலம் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இது பொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக்
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கு அருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து

தலம் ஒரு நான்கும் தந்து எனக்கு அருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத்து அங்கிசை நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடை பிங்கலையின் எழுத்து அறிவித்துக்
கடையில் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்று எழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டு எழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டு எழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முகம் ஆக இனிது எனக்கு அருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிது எனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டிற்கும் ஒன்று இடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்

எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் கட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடு மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலை அறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட
வித்தக விநாயக விரை கழல் சரணே!
கடலூர் பொல்லாப் பிள்ளையார்!

அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. இவரது தந்தை திருநாரையூர் (கடலூர் மாவட்டம்) சவுந்தர்யேஸ்வரர் கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். ஒரு முறை தந்தை வெளியூர் சென்று விட்டதால் நம்பி கோயிலுக்கு பூஜைக்கு கிளம்பினார். பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்த பின் அவரைச் சாப்பிடும் படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் அவர் கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கலை திருப்தியாகச் சாப்பிட்டார். இந்த தகவலைக் கேள்விப்பட்ட மன்னன் ராஜராஜசோழன் இதை நம்பவில்லை. இருப்பினும் நம்பியின் பேச்சை ஏற்று பலவகையான பலகாரங்களுடன் கோயிலுக்கு வந்து பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்யச் சொன்னான். பிள்ளையார் சாப்பிடவில்லை. உடனே நம்பி பக்தியுடன் அவர் மீது பாடல்களைப் பாடினார். இதுவே இரட்டை மணிமாலை என்று பெயர் பெற்றது. பாடல் கேட்டு மகிழ்ந்த பிள்ளையார் தன் பக்தன் கேலிப்பேச்சுக்கு ஆளாகக் கூடாதே என்பதற்காக நைவேத்யத்தை அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டார். இந்த பிள்ளையார் சிலை உளியால் செதுக்கப்படாத சுயம்பு விநாயகர் என்பதால் பொள்ளாப் பிள்ளையார் எனப்பட்டார். பொள்ளா என்றால் செதுக்கப்படாத என்பது பொருள் காலப்போக்கில் இது பொல்லாப்பிள்ளையார் ஆகிவிட்டது.

இருப்பிடம்: சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தூரத்தில் திருநாரையூர் உள்ளது.