சனி, 28 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 46 ॐ

பலரும் திரும்பத் திரும்பச் சொல்லும் ஒரு விஷயம் சிதம்பரம் கோயிலில் தமிழ்த் தேவாரத் திருவாசகங்கள் பாடப்படவில்லை என சிலர் தெரியாமல் சொல்லுகின்றார்கள் என்பதை நான் உறுதியாய்ச் சொல்லுவேன் பல வருஷங்களாய்ச் சிதம்பரம் கோயிலுக்குச் சென்று வருவதாலும் பல காலங்களிலும் கால பூஜை பார்த்திருப்பதாலும் எந்த எந்தச் சமயங்களில் திரு முறை ஓதுகின்றார்கள் என்பது நன்றாகவே தெரியும். கடைசியாய்ப் சென்ற வருஷம் கும்பாபிஷேஹத்துக்கு முதல்நாள் போன போது யாகம் நடக்க இருந்தது. அதற்கு முன்னால் ஓதுவார்கள் "திருமுறை" ஓதிய பின்னரே யாகம் ஆரம்பிக்கப்பட்டது. யாகம் நடக்கும் இடம் கருதியும் அதைப் புகைப்படம் எடுக்க முடியாது என்பதாலும் படங்கள் எடுக்க முடியவில்லை. மேலும் எங்களிடம் டிஜிட்டல் காமிராவும் கிடையாது. ஓதுவாரைத் தனியே கூப்பிட்டுப்படம் எடுத்துப் பேச வைத்து இணைப்பது என்றாலும். தீட்சிதர்களின் தனிப்பட்ட அவர்கள் வாழ்வைப் பற்றி நான் இங்கே எழுதவில்லை என்பதால் மற்றவற்றைத் தவிர்த்துக் கோயில் வழிபாட்டில் திருமுறை கட்டாயம் ஓதுகின்றார்கள் என்பதை மீண்டும் உறுதி கூறுகின்றேன். மேலும் அனைவரும் கூறும் இன்னொரு விஷயம் சிதம்பரம் கோயிலின் வைதீக முறை பூஜை பற்றி. அது என்னமோ நடுவில் வந்ததாய்ச் சிலர் கூறுகின்றனர். சைவ ஆகம முறைப்படி தான் முன்னர் இருந்ததாயும் பின்னர் வந்த தீட்சிதர்கள் அதை மாற்றி விட்டதாயும் சொல்கின்றனர். ஒருவேளை அவர்கள் சொல்வது சைவ ஆகமங்கள் கிரந்தத்தில் இருந்ததால் இருக்கலாம் என நினைக்கின்றேன். ஆனால் ஆகமமும் வேதத்தின் ஒரு பகுதியே எனவும் ஆகமத்தை ஐந்தாவது வேதம் எனச் சொல்லுவார்கள் எனவும் ஒருமுறை படிச்சேன். சில புத்தகங்கள் கிடைக்கவில்லை. முக்கியமாய் தருமபுர ஆதீனத்தில் போட்டிருக்கும் புத்தகம் கிடைக்க வேண்டும். சிலவற்றைக் கூகிளாண்டவர் மூலம் தேடி எடுத்து விட்டேன். முக்கியமாய் ஆகமத்துக்கும் வைதீக முறைக்கும் உள்ள வித்தியாசம். ஆகமத்திலும் வடமொழி உண்டு. தென்னாட்டில் தான் ஆகம முறைப் பூஜை என்பதால் அது தமிழ் மொழியில் இருந்தது எனச் சிலர் கூறுகின்றார்கள். அது பற்றியும் தகவல் திரட்டுகிறேன்.

The worship services that follow at about 9:30, and then at noon, and at 5 in the evening and at 7 pm involve a combination of rituals involving ablutions to the Crystal Lingam and the ceremonial show of lamps to Nataraja and Sivakami amidst the chanting of Vedic and Tamil hymns. The Shiva Agama system of temple rituals followed in almost all of the Saivite temples in Tamilnadu, is not followed at Chidambaram. It is a unique worship protocol said to have been prescribed by Patanjali that is followed at this temple.

www.indiantemples.com/Tamilnadu/chidchid.html

மேலே குறிப்பிட்டிருக்கும் லிங்கில் போய்ப் பார்த்தால் தமிழிலும் திரு முறைகள் சொல்லுவதும் வைதீக முறைப்படிப் பூஜை செய்யப்படுவது பற்றியும் குறிப்பிட்டிருக்கிறதைப் பார்க்கலாம். மற்றவை நன்கு படித்துப்பார்த்துப் புரிந்து கொண்டு உள்வாங்கிக் கொண்டு வருகிறேன். தாமதத்துக்கு மன்னிக்க வேண்டுகிறேன். அதிகம் யாரும் படிக்கிறதில்லை என்றாலும் படிக்கிற ஒருத்தர் இரண்டு பேருக்காவது தாமதத்துக்குக் காரணம் தெரியணும் இல்லையா? ஒருவேளை கூகிளிலேயே சிதம்பரம் பற்றிய அனைத்துத் தகவல்களும் கிடைப்பதால் யாருக்கும் அவ்வளவாய் இதில் ஆர்வம் இல்லையோ என்னமோ என்று தோன்றுகிறது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 47 ॐ

ஆகமங்களைப் பற்றித் திருமூலர் கூறியவை தொகுத்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருமூலரின் திருமந்திரத்தில் முதல் தந்திரத்திலேயே வேதத்தின் சிறப்பைப் பற்றி 6 பாடல்களும் அதற்குப் பின்னர் ஆகமச் சிறப்பு என்ற தலைப்பிலே 10 பாடல்களும் வருகின்றன.

1.அதில் ஆகமங்கள் மொத்தம் 28 எனவும் அவை யாவுமே சிவபெருமான் அருளிச் செய்தவை எனவும் கூறுகின்றார். ஈசனின் ஈசான முகத்தில் இருந்து இவ்வாக்கியங்கள் வந்து ஆகமமாய் நிலை பெற்றது எனவும் சொல்கின்றார்.

அதற்கான பாடல்:

//அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.//

2.இந்த ஆகமங்களை எண்ணினால் 28 என்றாலும் அவை இந்த அளவில் நில்லாமல் அளவின்றியும் உள்ளன. இவற்றைப் பற்றிக் கூறிய 66 பேர்களைத் தவிர யானும் இது பற்றிச் சிந்தித்துத் துதிக்க ஆரம்பித்தேன்.

//அண்ண் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.//

3.இறைவன் அருளால் அருளப் பட்ட இந்த ஆகமம் ஆனது வானோர்களாலும் அறியப் படாத ஒன்றாகும். இவை அனைத்தும் சொல்லப்பட்டால் பூவுலக மாந்தர்க்கு அறிய முடியாத ஒன்றாகும்.

//அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.//

4.சிவலோகத்தில் "சதாசிவ"மூர்த்தியாய் இருந்து ஆகமங்களைப் பிரணவர் முதலானோர்க்கு உணர்த்திய ஈசன் அவற்றைப் பூலோக மாந்தர் அறியும்படி உரைத்த போது"சீகண்ட பரமசிவன்" ஆக இருந்து உணர்த்த அதைக் கேட்ட நந்தி எம்பெருமான் மெய்யுணர்வோடு அவற்றை உணர்ந்தவராய் மெய்யுணர்வோடு விளங்கப் பெற்றார்.

//பரனாய்ப் பராபரங் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அற்சிக்கும் நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.//

5.இத்தனை ஆகமங்களில் சிறந்ததான ஒன்பது ஆகமங்கள் நாத தத்துவத்தில் நிலைத்த சிவத்திடம் இருந்து வந்த காலத்தில் சிவமானது விந்து தத்துவத்தில் நிலைத்த சத்தியினிடத்தில் இதை உணர்த்த சத்தியானது தன்னில் இருந்து தோன்றிய சதாசிவருக்கும் சதாசிவர் சம்பு பட்ச மகேசுவரருக்கும் அங்கிருந்து அணுபட்ச மகேசுரராகிய மந்திர மகேசுரர் பின்னர் உருத்திரர், திருமால், பிரம்மா என அனைவருக்கும் சென்றடைந்த இந்த ஆகமங்களில் ஒன்பதை எங்கள் ஆசிரியர் ஆன நந்தி எம்பெருமான் சீகண்ட பரமசிவனிடமிருந்து பெற்றார்.

//சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.//

6. அந்த ஆகமங்கள் முறையே 1. காரணம், 2. காமிகம், 3. வீரம், 4. சிந்தியம், 5. வாதுளம், 6......7.....8.... சுப்பிரபேதம், 9. மகுடம் ஆகியவை ஆகும்.

//பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.//

7. இறை அருளால் சொல்லப்பட்ட இந்த ஆகமங்கள் அளவின்றி இருப்பினும் அவற்றின் உட்பொருளை இப்பூவுலக மக்கள் அறியவில்லை எனில் அது அவர்களுக்குச் சரிவரப்பயன்படாது.

// அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்
அண்ணல் அறைந்த அறிவறி யாவிடில்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.//

8.மக்கள் அனைத்து மெய்யுணர்வையும் உணராது புலனுணர்வே மிகப் பெற்று வாழுங்காலத்து அதைப் போக்கும் வண்ணம் சிவபெருமான் உமாதேவியார்க்கு "ஆரியம் தமிழ்" என்னும் இரு மொழிகளை உலகம் உய்யச் சொல்லித் திருவருள் செய்ய எண்ணங்கொண்டான்.

//மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.//

9.இறைவன் உயிர்களைப் பாசத் தளையினின்று விடுவிக்கின்ற முறையையும் பின் உயிர்கள் தன்னிடம் செலுத்தும் அன்பால் அவற்றைத் தன்னிலேயே நிலை நிறுத்தும் முறையையும் அவ்வாறு நிலை நிறுத்தும்போது உயிரானது பண்டைய நினைவுகளால் மோதி அலைப்புண்டு பாசத்திலே பொருந்தி நிற்பதையும் "தமிழ் மொழி வடமொழி" இவ்விரு மொழிகளுமே ஒரே மாதிரியாக உணர்த்தும். அவற்றைச் சரியானபடி உணராதவருக்குச் சிவஞானம் கை கூடுவது அரிதே யாகும்.

// அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ்
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே.//

10.மொழிகள் பதினெட்டு உள்ளன அனைத்து மொழிகளுமே சிவபிரான் தனது அறத்தைப் பொதுவாகவும் சிறப்பாகவும் அனைவரும் உணர அமைத்த வாயிலே. அதை உணராத கற்றோர் எத்தனை தான் கற்றிருந்தாலும் "கல்லாதவர்" என்றே உணரப் படுவார்கள்.

//பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடைருளி
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.//

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ