சனி, 24 ஆகஸ்ட், 2019

சூரியனின் குடும்பம்!

பெற்றோர்:காஷ்யப முனிவர்,அதிதி.
சகோதரர்கள்:கருடன்,அருணன்
மனைவியர்:உஷா,பிரத்யுஷா(சாயாதேவி)
மகன்கள்:எமதர்மன்,சனீஸ்வரர்,அஸ்வினி தேவர்கள்,கர்ணன்,சுக்ரீவன்
மகள்கள்:யமுனை,பத்திரை

பார்த்தபின் சாப்பிடுங்க:தாபனீய உபநிஷத் என்னும் நூலில் நரசிம்மருக்கு மூன்று கண்கள் உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வலக்கண் சூரியன், இடக்கண் சந்திரன், நடுக்கண் அக்னியாக விளங்குகிறது. புருஷ சூக்தம் என்ற நூல், விஷ்ணுவின் கண்களில் இருந்து சூரியன் உண்டானதாகச் சொல்கிறது. சூரியனை வணங்காமல் சாப்பிடுவது கூடாது என வேதம் கூறுகிறது. சூரியவழிபாடைத் தவறாமல் செய்தால் வாக்குவன்மை, ஆரோக்கியம் உண்டாகும். சூரியனைக் காணாத நாள் ஒவ்வொன்றும் வீண்நாளே என்கிறார் காஞ்சிப் பெரியவர்.

முதல் கடவுள்:மனிதன் தோன்றிய காலம் தொட்டே சூரியவழிபாடு இருந்து வருகிறது. இருளில் தவித்த மனிதன், தினமும் காலையில் கிழக்கு வெளுத்து சூரிய உதயமாவதைக் கண்டு மகிழ்ந்தான். தன் இருகைகளைக் குவித்து வணங்கி வழிபட்டான். விநாயகர், முருகன், சிவன், சக்தி, விஷ்ணு ஆகிய தெய்வ வழிபாடுகள் பிற்காலத்திலேயே தோன்றின. சூரிய வழிபாட்டுக்குரிய மதத்தை "சவுரம் என அழைத்தனர். இதனால் சூரியன், "முதல் கடவுள் என்ற சிறப்புக்கு <உரியவராகிறார்.

அம்பாளின் வலக்கண்: சூரியனைச் சிவ அம்சமாகக் கொண்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவின் அம்சமாகக் கொண்டு சூரியநாராயணர் என்றும் சொல்வர். இவர் அம்பிகையின் வலக்கண்ணாக இருப்பதாகவும் கூறுவர். ஜோதிட சாஸ்திரம் சூரியனை நவக்கிரக நாயகனாகப் போற்றுகிறது. இவரைச் சுற்றியே மற்ற கிரகங்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. நவக்கிரக மண்டபத்தில் நடுவில் வீற்றிருந்து அருளுகிறார் சூரியன். இதுதவிர, சிவாலயங்களில் இவர் தனது துணைவியரான உஷா, பிரத்யுஷாவுடன் தனி சந்நிதியிலும் இருப்பார்.

சூரியமந்திரம் சொல்வோமா:சூரியவழிபாட்டுக்கு உகந்த நாள் ஞாயிறு. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்கள் சிறந்தவை. திதிகளில் வளர்பிறை சப்தமி ஏற்றது. இந்த நாட்களில் காலையில் நீராடிய பிறகு, கிழக்கு நோக்கி நின்று சூரியனை வணங்க வேண்டும்.

நம:ஸவித்ரே ஜகதேச சக்ஷúஷே
ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாச ஹேதவே
த்ரயீமயாய த்ரிகுணாத்ம தாரிணே
விரிஞ்ச நாராயண சங்கராத்மனே
ஜபாகு ஸும ஸங்காசம்
காஸ்யபேயம் மஹாத்யுதிம்
த்வாந்தாரிம் ஸர்வ பாபக்னம்
ப்ரணதோஸ்மி திவாகரம்
என்ற சூரிய மந்திரத்தைச் சொல்ல வேண்டும். இதன் பொருளையும் சொல்லலாம்.

பொருள்:உலகிற்குக் கண்ணாக இருப்பவனே! முத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்பவனே! வேத வடிவமே! முக்குணங்களைப் பெற்றவனே! பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியாகவும் திகழும் சூரியனே! உமக்கு நமஸ்காரம். காஷ்யப முனிவரின் மகனே! செம்பருத்திப்பூவின் நிறத்தைக் கொண்டவனே! இருளின் எதிரியே! பேரொளி உடையவனே! பாவங்களைப் போக்குபவனே! திவாகரனே! உம்மைப் போற்றுகிறேன். இந்த மந்திரத்தை ஜெபித்தால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் உண்டாகும்.
----------------------------------------

கருத்துகள் இல்லை: