வியாழன், 26 நவம்பர், 2020

அருள் மிகு கற்கடேஸ்வரர் திருக் கோவில்

அருள் மிகு கற்கடேஸ்வரர் திருக் கோவில்


 
மூலவர் :கற்கடேஸ்வரர்
உற்சவர் :சோமாஸ்கந்தர்
அம்மன் :அபூர்வநாயகி, அருமருந்துநாயகி
தல விருட்சம் :நங்கை மரம்
தீர்த்தம் :நவபாஷாண தீர்த்தம்
ஆகமம் பூஜை  :சிவாகமம்
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :கற்கடேஸ்வரம்
ஊர் :திருந்துதேவன்குடி
மாவட்டம் :தஞ்சாவூர்
மாநிலம் :தமிழ்நாடு
 
பாடியவர்கள்:சம்பந்தர்

தேவாரப்பதிகம்:மருந்துவேண் டில்லிவை மந்திரங் கள்ளிவை புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்ளிவை திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய அருந்தவத் தோர்தொழும் அடிகள் வேடங்களே.திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 42வது தலம்.

திருவிழா:சிவராத்திரி, திருக்கார்த்திகை   
       
தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பொதுவாக கோயில்களில் ஒரு அம்பாள் மட்டுமே இருப்பாள். ஆனால் இங்கு இரண்டு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகிறன்றனர். சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும், இந்திரனால் வெட்டுப்பட்ட காயமும் இருக்கிறது.   
       
திறக்கும் நேரம்:காலை 9 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி - 612 105. வேப்பத்தூர் போஸ்ட், திருவிடைமருதூர் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:+91 435 - 2000 240, 99940 15871  

பொது தகவல்:ஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: கோபமும் வேகமும் கொண்ட இவர்கள் செல்வந்தர்களாக இருப்பர். சிவந்த மேனி, அகலமான கண்களைப் பெற்றிருப்பர். நியாய தர்மங்களை மற்றவர்களுக்குப் போதிப்பர். மந்த குணமும் இருக்கும். நகை அணிதல், பணம் சம்பாதிப்பதில் அலாதிப் பிரியம் இருக்கும். செலவு செய்வதில் கெட்டிக்காரர்களாகத் திகழ்வர். இத்தலவிநாயகர் கற்கடக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், சுதை வடிவில் நடராஜர் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி கிடையாது. சிவனை வணங்கிய இந்திரன் தவறை உணர்ந்து திருந்தியதால் இத்தலம், திருந்துதேவன்குடி என்றழைக்கப்படுகிறது. இப்பெயரைச் சொன்னால் உள்ளூர்வாசிகளுக்கு தெரிவதில்லை. நண்டு கோயில் என்றுதான் இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள்.   
       
பிரார்த்தனை:ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கிரக தோஷங்கள் நிவர்த்தியாக கற்டேஸ்வரருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். இந்த எண்ணெயை உண்டகொண்டால் நோய் நீங்குவதாகவும் நம்பிக்கை இருக்கிறது.

நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் வஸ்திரம் சாத்தி, விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.  
      
தலபெருமை:ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது, வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய தலம் இது. பிணி நீக்கும் சிவன்: காலவெள்ளத்தில் இவ்விடத்தில் சுயம்புலிங்கம் மண்ணிற்குள் மறைந்தது. ஒருசமயம் இப்பகுதியை சோழ மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். ஒருசமயம் அவனுக்கு வாதநோய் உண்டானது. பல வைத்தியங்கள் பார்த்தும் நோய் குணமாகவில்லை. சிவபக்தனான அம்மன்னன், நோய் தீர அருளும்படி சிவனிடம் வேண்டினான். ஒருசமயம் வயதான மருத்துவ தம்பதியர் அவனது அரசவைக்கு வந்தனர். மன்னனிடம் சென்ற அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த விபூதியை, தீர்த்தத்தில் கரைத்து கொடுத்தனர். அந்த மருந்தை சாப்பிட்ட உடனே மன்னன் நோய் நீங்கி எழுந்தான். மருத்துவ தம்பதியரை தனது அரசவையில் ராஜ வைத்தியராக தங்கும்படி வேண்டினான். அவர்கள் கேட்காமல் கிளம்புவதாக கூறினர். எனவே மன்னன் அவர்களுக்கு பொன்னும், பொருளும் பரிசாக கொடுக்க எடுத்து வந்தான். அதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வியந்த மன்னன் அவர்களிடம், தாங்கள் விரும்புவது எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். அதை நிறைவேற்றி வைப்பது என் கடமை! என்றான். பின்னர் அவர்கள் இவ்விடத்திற்கு அழைத்து வந்து சுவாமி இருந்த இடத்தில் கோயில் எழுப்பும்படி கூறினர். மன்னனும் ஒப்புக்கொண்டான். அப்போது லிங்கத்தின் அருகில் சென்ற இருவரும், அதனுள் ஐக்கியமாயினர். அதன்பின்பு வந்தது சிவ, பார்வதி என உணர்ந்த மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பினான். இவரிடம் வேண்டிக்கொள்ள பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. சம்பந்தர் இவரை பிணி நீங்கும் சிவன் என்று பதிகம் பாடியுள்ளார்.

இரட்டை அம்பிகையர் தலம்: பொதுவாக கோயில்களில் ஒரு அம்பாள் மட்டுமே இருப்பாள். ஆனால் இங்கு இரண்டு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகிறன்றனர். மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பியபோது, ஏற்கனவே இங்கிருந்த அம்பிகையை காணவில்லை. எனவே புதிதாக ஒரு அம்பிகையை பிரதிஷ்டை செய்தான். மருத்துவர் வடிவில் வந்து அருளியவள் என்பதால், அருமருந்து நாயகி என்று பெயர் சூட்டினான். ஆனால் சிறிது நாட்களிலேயே தொலைந்த அம்பிகை சிலை கிடைத்தது. அதனையும் இங்கு பிரதிஷ்டை செய்தான் மன்னன். இவள் அபூர்வநாயகி என்று அழைக்கப்பட்டாள். இவளே இங்கு பிரதான அம்பிகையாக கருதப்படுகிறாள்.

யோக சந்திரன்: புனர்பூசம், பூசம், ஆயில்ய நட்சத்திரம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கான பரிகார தலம் இது. சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும், இந்திரனால் வெட்டுப்பட்ட காயமும் இருக்கிறது. கோயில் நுழைவுவாயில் சந்திரன் சன்னதி உள்ளது. இவர் யோக நிலையில், யோக சந்திரனாக காட்சி தருகிறார். ஜாதகத்தில் சந்திர திசை உள்ளவர்கள் இவருக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி வழிபட்டால், தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.

சிறப்பம்சம்: கடக ராசிக்கு உட்பட்ட ஆயில்ய நட்சத்திரத்திற்கு சிறந்த மருத்துவ குணங்கள் உண்டு. மேலும், தெய்வ பக்தியுடன் எதையும் செய்து சாதிக்க முடியும் என்ற ஆன்மிக ரீதியான மனத்தை இது தரும். மனக்குழப்பத்தையும், நோய்களையும் தீர்க்கவல்லது. ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் நட்சத்திர நாள் மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் இத்தல இறைவனுக்கு நல்லெண்ணெய் சாத்தி வழிபாடு செய்தால் வாழ்வில் வளம் பெருகும், உடலும் உள்ளமும் நலம் பெறும். அமாவாசை, செவ்வாய், சனிக்கிழமைகளிலும் இங்கு வழிபாடு செய்யலாம். நீண்டகாலமாக நோயுள்ள பிற நட்சத்திரக்காரர்களும் இந்த நாட்களில் கற்கடேஸ்வரரையும், அருமருந்து நாயகியையும் வழிபட்டு, மருந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   
       
தல வரலாறு:ஒரு சமயம் துர்வாசமகரிஷி, சிவபூஜை செய்து விட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன் துர்வாசரின் நடையைப் பார்த்து, நீர் நண்டு ஊர்ந்து செல்வதைப் போல நடக்கிறீர், என்று கேலி செய்ததுடன், அவரைப் போல நடந்தும் காட்டி அவமானப்படுத்தினான். கோபம் கொண்ட துர்வாசர், அவனை நண்டாக பிறக்கும்படி சபித்துவிட்டார். வருந்திய கந்தர்வன் மன்னிப்பு வேண்டினான். துர்வாசரின் அறிவுரைப்படி இத்தலத்தில் நண்டு வடிவில் பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றான். சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையை இப்போதும் காணலாம். கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் இவர் கற்கடேஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்திரன் தன் ஆணவம் நீங்க, குரு பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி இங்கு சிவபூஜை செய்தான். இங்கிருந்த புஷ்கரிணியில் தினமும் 1008 மலர் பறித்து சிவலிங்கத்திற்கு படைத்து வழிபாடு செய்து திருந்தினான்.இதனால் இத்தலம், திருந்து தேவன்குடி என்றழைக்கப்படுகிறது. இப்பெயரைச் சொன்னால் உள்ளூர்வாசிகளுக்கு தெரிவதில்லை. நண்டுகோயில் என்று சொன்னால் தான் புரியும்.   
       
சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பொதுவாக கோயில்களில் ஒரு அம்பாள் மட்டுமே இருப்பாள். ஆனால் இங்கு இரண்டு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகிறன்றனர்.சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும், இந்திரனால் வெட்டுப்பட்ட காயமும் இருக்கிறது.

ராமாயணம் பகுதி ஐந்து

ராமாயணம் பகுதி ஐந்து

அந்த அழகு விழிகளை ராமனின் கண்களும் சந்திக்கத் தவறவில்லை. அந்த நீலவண்ணக் கண்ணைக் கொண்டவன், அவளை நோக்கவும், அந்த கருவிழிகள் வெட்கத்தால் தரை நோக்கித் தாழ்ந்தது. மீண்டும் ஆவலுடன் மேலெழுந்து தணிந்தது. அவள் செக்கச் சிவந்த அழகு. அவன் கார்மேனியன். கருப்பும் நீலமும் கலந்தவன். அந்த செம்பொன் மேனியளை நம் அண்ணல் நோக்க அவளும் நோக்கினாள். கண்கள் கலந்து விட்டால் மனங்களும் ஒன்றிணைந்து விட்டதாகத்தானே அர்த்தம். யார் அவள் என்று உங்களுக்கு சொல்லாமலே தெரிந்திருக்குமே! அவள் தான் மிதிலைநகர் இளவரசி ஜனகபுத்ரி சீதாதேவி. ராமன் அவ்விடத்தை கடந்து ஜனகரின் அரண்மனைக்கு விஸ்வாமித்திரருடன் சென்றடைந்தான். ஜனகர் விஸ்வாமித்திரரையும், அவருடன் வந்த தசரத குமாரர்களையும் அன்புடன் வரவேற்றார். தன் புத்ரிகள் சீதைக்கும், ஊர்மிளாவுக்கும் திருமணம் செய்ய வேண்டிய மாபெரும் கடமை தம்முன் இருப்பதை விஸ்வாமித்திரரிடம் தெரிவித்தார். பெண்ணைப் பெற்றவன் ஏழையாய் இருந்தால் என்ன... பணக்காரனாக இருந்தால் என்ன? தன் மகளுக்கு ஒரு குணவான் அமைய வேண்டும். எந்த கெட்ட வழக்கமும் இருக்கக்கூடாது. மகளை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பலசாலியாக இருக்க வேண்டும், தெய்வப்பற்றுள்ளவனாக இருக்க வேண்டும், என்றெல்லாம் எண்ணுவது சகஜம்தானே! ஜனக மகாராஜாவும் இதே கவலையில் தான் இருந்தார். போதாக்குறைக்கு சிவபெருமானால் அருளப்பட்ட சிவதனுசு என்னும் வில்லும் அவரிடம் இருந்தது. அதை ஜனகரைத் தவிர வேறு யாராலும் அசைக்கக்கூட முடியாது. அதை யார் ஒருவன் தூக்கி நாணேற்றி அம்பெய்கிறானோ, அனனுக்கே தன் மகளை மணம் முடித்துக் கொடுப்பேன் என்பது ஜனகரின் நிபந்தனை. ஏன் இந்த நிபந்தனை? ஜனகர் ஒருமுறை யாகம் ஒன்றைச் செய்தார்.

ஒரு கலப்பையால் யாககுண்டம் அமைப்பதற்கான நிலத்தை உழுதபோது, கலப்பை ஏதோ ஒரு இடத்தில் தட்ட, அவ்விடத்தை அகழ்ந்து பார்த்த போது, அங்கே அழகிய பெண் குழந்தையைக் கண்டார். அவளே சீதா. அவள் லட்சுமியின் அவதாரமல்லவா? அவளை கிருஷ்ண பரமாத்மாவைத் தவிர வேறு யாரால் திருமணம் செய்ய இயலும்? எனவே தான் சிவபெருமான் சிவதனுசுவை ஜனகரிடம் கொடுத்து, இதை யாரால் தூக்க இயலுகிறதோ அவளுக்கே இந்தப் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் எனச் சொல்லி மறைகிறார். இங்கே கிருஷ்ண பரமாத்மா மானிட வடிவெடுத்து, ராமனாய் பூமிக்கு வந்துள்ளார். தன் தேவியை அடைய இங்கு வந்திருக்கிறார். அவர் பூமியில் பிறக்கிறார் என்றால் வைகுண்டத்தில் அவரைத் தன் மடியில் சுமந்திருக்கும் ஆதிசேஷனுக்கு என்ன வேலை? கிருஷ்ணா! நானும் உன்னோடு பூமிக்கு வருகிறேன், என்கிறான் ஆதிசேஷன். அவனைத் தம்பி என அழைக்கும் கிருஷ்ணர், சேஷாத்திரி! நீ பூமியில் என் தம்பி லட்சுமணனாய் பிறப்பாய் என்கிறார். அடுத்து சங்கு, சக்கரங்கள் ஓடி வந்து கேவிக்கேவி அழுகின்றன. ஆதிசேஷனும், நீங்களும் பூமிக்கு போன பிறகு எங்களுக்கென்ன வேலை? நாங்களும் உங்களோடு வருகிறோம், என கண்ணீர் சிந்தினர். அவர்கள் தன் மீது கொண்ட பாசத்தை உணர்ந்த பகவான் விஷ்ணு, சங்குநாதா! நீ பரதன் என்ற பெயரில் என் தம்பியாய் வருக, சக்கரத்தாழ்வாரே! நீ சத்ருக்கனன் என்ற பெயரில் கடைக்குட்டி தம்பியாய் வருக, என அருள்பாலித்தார். இவர்கள் அனைவரும் தசரத குமாரர்களாக அவதரித்தனர். நான்கு சகோதரர்களுக்கு வெவ்வேறு குடும்பங்களில் பெண் எடுத்தால் பிரச்னை தானே மிஞ்சும்! எனவே ஒரே குடும்பத்தில் பெண் எடுத்தால் நல்லது தானே என்று விஸ்வாமித்திரர் நினைத்திருக்கக்கூடும். அவர் முற்றும் உணர்ந்த ஞானியல்லவா? ஆம்! ஜனகரின் தம்பி குசத்வஜன். அவர் சாங்காஸ்யா தேசத்து அரசர். அவரையும் விஸ்வாமித்திரர் நினைவில் வைத்திருந்தார். அவருக்கும் இரண்டு புத்திரிகள். மாண்டவி, சுருதகீர்த்தி என்னும் திருநாமம் கொண்டவர்கள். இவர்கள் பரதனுக்கும், சத்ருக்கனனுக்கும் நிச்சயிக்கப்பட்டால், ஒற்றுமையான சகோதர, சகோதரிகள் பிரியவே மாட்டார்கள் என்பது அவரது கணிப்பு. இதெல்லாம் இருக்கட்டும்! முதலில் போட்டியில் வென்றாக வேண்டுமே! ராமனால் மட்டும தான் அந்த வில்லில் நாணேற்ற முடியும் என்பதை விஸ்வாமித்திரர் அறிந்து தானே வைத்திருந்தார். ஜனகரிடம் அவர் தன் விருப்பத்தைச் சொன்னார்.

ஜனகா! வில்லில் நாணேற்றும் போட்டிக்கு ஏற்பாடு செய். யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்து கொள்ளட்டும். நான் வந்திருக்கும் இந்த சமயத்தில் போட்டி நடந்தால் மிகவும் மகிழ்வேன், என்றார். ஜனகர் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். பல நாட்டு வில்லாதி வில்லர்களெல்லாம் வந்தனர். சிவதனுசுவை அசைக்கக்கூட முடியாமல், அவமானத்தால் தலையை தொங்க விட்டுக் கொண்டு சென்றனர். இச்சமயத்தில், ராமனை தன் கண்ணசைவால் ஏவினார் விஸ்வாமித்திரர். அவரது குறிப்பை உணர்ந்த ராமன், பீடு நடை போட்டு சிவதனுசின் அருகில் சென்றார். வில்லுக்கு மரியாதை செலுத்தினார். ஒற்றைக் கையால் தூக்கினார். நாணை இழுத்தார். அவரது பலத்தில் பாதிக்கும் குறைவாகவே அந்த வில் அமைந்திருந்தது. நாணை இழுக்கவும் மிகப்பெரிய ஓசையுடன் இரண்டாக ஒடிந்தது. அந்த ஓசை இடி ஓசைக்கும் மேலானது. உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அந்த ஓசை கேட்டு ஒரு கணம் நடுங்கி விட்டன. ஜனகர், விஸ்வாமித்திரர், லட்சுமணன் நீங்கலாக அங்கு கூடியிருந்த அரசர்கள் கூட நடுங்கி விட்டார்கள்.ஜனகராஜனுக்கு மிகவும் மகிழ்ச்சி. வில்லொடித்த வாலிபனை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மகளுக்கேற்ற மணாளன் கிடைத்த மகிழ்ச்சி அடங்க வெகுநேரம் ஆயிற்று. சீதைக்கும் இத்தகவல் எட்டியது.என் மனதுக்கு பிடித்த அந்த அழகரா சிவதனுசை ஒடித்தார்? அவள் கண்களில் காதல் பார்வை பொங்கியது.


மகாபாரதம் பகுதி ஒன்று

மகாபாரதம் பகுதி ஒன்று

கதைக்குள் செல்லும் முன்...

மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். ஒரு கதாசிரியர், தன்னையும் ஒரு பாத்திரமாக இந்த காவியத்தில் இணைத்துக் கொண்ட பெருமை பெற்றது. ஆம்... மகாபாரதத்தின் முக்கியஸ்தர்களான பாண்டுவும், திருதராஷ்டிரனும், விதுரனும் இவருக்குப் பிறந்தவர்களே. தேவமொழி என வர்ணிக்கப்படும் சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார். பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர். அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18 பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார். மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது உறுதி.

ராமபிரான் சூரியவம்சத்தில் அவதரித்தது போல, பஞ்ச பாண்டவர்கள் சந்திர குலத்தில் பிறந்தவர்கள். பாற்கடலை தேவாசுரர்கள் கடைந்த போது, தோன்றியவன் சந்திரன். 14 கலைகளைக் கொண்ட இவன், தினமும் ஒன்றாக சூரியனுக்கு கொடுப்பான். திரும்பவும் அதை வாங்கிக் கொள்வான். சுட்டெரிக்கும் சூரியன், இவனிடம் பெறும் கலையால் குளிர்ந்து தான் உலகத்தை எரிக்காமல் வைத்திருக்கிறான். இவன் தாரை என்பவளைத் திருமணம் செய்து பெற்ற மகனே புதன். ஒரு முறை மநு என்ற அரசனின் மகனான இளை என்பவன் காட்டுக்கு வேட்டையாட வந்தான். இந்தக் காட்டின் ஒரு பகுதியிலுள்ள குளத்தில், ஒருசமயம் சிவபெருமானின் மனைவியான பார்வதி நீராடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ஆடவர் சிலர், அவள் குளிக்கும் அழகை ரசித்தனர். கோபமடைந்த பார்வதி அவர்களைப் பெண்ணாகும்படியும், இனி அந்த ஏரிப்பகுதிக்குள் யார் நுழைகிறார்களோ, அவர்கள் பெண்ணாக மாறுவர் என்றும் சபித்துவிட்டாள். அவள் பூவுலகை விட்டு, சிவலோகம் சென்ற பிறகும் கூட அந்த சாபம் மாறவில்லை. இதையறியாத இளன் அந்த ஏரிப்பகுதிக்குள் நுழைந்தானோ இல்லையோ, பெண்ணாக மாறி விட்டான்.

அவள் வருத்தத்துடன் இருந்த வேளையில், அழகுப் பதுமையாக இருந்த அவளை அங்கு வந்த புதன் பார்த்தான். அவளது கதையைக் கேட்ட புதன், அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளைத் திருமணம் செய்து கொண்டான். அவளுக்கு இளை என்ற பெயர் ஏற்பட்டது. புதனுக்கும், இளைக்கும் புரூரவஸ் என்ற மகன் பிறந்தான். புரூரவஸ் வாலிபன் ஆனான். அழகில் அவனுக்கு இணை யாருமில்லை. ஒருமுறை வான்வெளியில் ஒரு பெண்ணை சில அசுரர்கள் கடத்திச் செல்வதைப் பார்த்தான். அவள் தன் மானத்தைக் காத்துக் கொள்ள கதறினாள். பறக்கும் தேர் வைத்திருந்த புரூரவஸ், அவளைக் காப்பாற்றுவதற்காக மின்னல் வேகத்தில் விண்வெளியில் பறந்து சென்றான். அசுரர்களை எதிர்த்து உக்கிரத்துடன் போரிட்டான். அசுரர்கள் அவனது தாக்குதலை தாங்க முடியாமல், ஓடிவிட்டனர். அப்பெண்ணை பார்த்தான். அப்படி ஒரு அழகு... கண்ணே! நீ தேவலோகத்து ஊர்வசியோ? என்றான். அவள் வெட்கத்துடன் தலை குனிந்து, நான் நிஜமாகவே ஊர்வசி தான். என் மானம் காத்த நீங்களே எனக்கு இனி என்றும் பாதுகாவலாக இருக்க வேண்டும், என்றான். ஊர்வசியே தனக்கு மனைவியாகப் போகிறாள் என்று மகிழ்ந்த புரூரவஸ், அவளைத் திருமணம் செய்து கொண்டான். அவர்களது இனிய இல்லறத்தில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.

ஆயு என்று அவனுக்குப் பெயரிட்டனர். இப்படியாக சந்திர வம்சம் பூமியில் பெருகியபடி இருந்தது. ஆயுவிற்கு நஹுஷன் என்ற மகன் பிறந்தான். இவன் நூறு அசுவமேத யாகங்களைச் செய்து தேவலோகத்தையே பிடித்துக் கொண்டவன். தேவலோக மன்னனான இந்திரனை விரட்டிவிட்டு, அரசனாகி விட்டான். அதிகார மமதையுடன், காம போதையும் சேர, இந்திரலோகத்தை ஜெயித்ததால், இந்திரனின் மனைவியான இந்திராணியும் தனக்கே சொந்தம் என அவளை ஒரு அறையில் அடைத்து விட்டான். இந்திராணியோ அவனது ஆசைக்கு இணங்க மறுத்து விட்டாள். ஒருநாள் போதை உச்சிக்கேற, அவளை வலுக்கட்டாயமாக அடைவதற்காக தன் பல்லக்கில் ஏறி புறப்பட்டான் நஹுஷன். பல்லக்கை சுமக்கும்படி முனிவர்களை மிரட்டினான். முனிவர்களும் தூக்கிச் சென்றனர். அந்த முனிவர்களில் ஒருவர் அகத்தியர். அவர் குள்ளமாக இருந்ததால், மற்றவர்களைப் போல் வேகமாகச் செல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நஹுஷன், ஓய்! மற்றவர்கள் வேகமாகச் செல்லும் போது, உமக்கு மட்டும் என்னவாம்! என்று, முதுகில் ஓங்கி மிதித்தான். அகத்தியர் மகாதபஸ்வியல்லவா! அவருக்கு கோபம் வந்து விட்டது. சிறுவனே! அதிகார மமதை, காமபோதைக்கு ஆட்பட்டு, தபஸ்விகளை துன்புறுத்தினாய். மேலும், வயதில் பெரியவர்களை மதியாமல், காலால் மிதித்தாய். எனவே நீ பாம்பாகப் போ, என சாபமிட்டார். அவன் பாம்பாக மாறி, தேவலோகத்தில் இருந்து பூமியில் விழுந்தான்.


ராமானுஜர் பகுதி ஒன்று


ராமானுஜர் பகுதி-1

சற்றேறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீ பெரும்புதூர் கிராமமே மகிழ்ச்சியில் மூழ்கிக்கிடந்தது. அவ்வூரில் ஒரு பெரிய பெருமாள் கோவில்... சுவாமியின் திருநாமம் ஆதிகேசவப் பெருமாள்... அந்த ஊரில் வசித்தவர் ஆசூரிகேசவாசாரியார். இவர் வேள்விகள் செய்வதில் வல்லவர். அதாவது எந்த வேள்வியாக இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்வார். அதனால், இவருக்கு ஸர்வக்ரது என்ற பட்டத்தை வேதபண்டிதர்கள் வழங்கினர். இந்த சொல்லுக்கு எல்லா வேள்விகளையும் செய்பவர் என்று பொருள். இக்காரணத்தால், இவரை ஸ்ரீமத் ஆசூரி ஸர்வக்ரது கேசவ தீட்சிதர் என்று மக்கள் அழைத்தனர்.  இந்த சமயத்தில் மணக்கால் நம்பியின் சீடரான ஆளவந்தார் (யமுனைத்துறைவர்)என்பவர், தான் ஆட்சிசெய்த ராஜ்ய பரிபாலனத்தை விட்டுவிட்டு, ஸ்ரீரங்கத்தில் தங்கி துறவியாக மாறிவிட்டார். அவரது சீடர் பெரியநம்பி. பெருமாள் மீது ஆளவந்தார் இயற்றிய துதிகள் அருமையானவை. நாத்திகர்கள் கூட அவரது பாடலைப் படித்தால் பரவசத்தின் உச்சிக்கு சென்று விடுவார்கள் என்றால், அதன் இனிமையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெரியதிருமலை நம்பி என்பவரும் ஆளவந்தாரின் சீடராக இருந்தார். இவர் ஆளவந்தாரை விட வயதில் மூத்தவர் என்றாலும், அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார். பெரியதிருமலை நம்பிக்கு காந்திமதி, தீப்திமதி என்று இரண்டு தங்கைகள் இருந்தனர். அவர்களில் பெரிய தங்கை காந்திமதியை, ஆசூரி கேசவாசாரியார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். தீப்திமதியை, அகரம் என்ற கிராமத்தில் வசித்த கமலநயனப்பட்டர் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்தை நடத்திய பிறகு, நிம்மதியடைந்த பெரியதிருமலை நம்பி, எந்நேரமும் பெருமாளின் திருவடிகளையே எண்ணி தியானத்தில் ஆழ்ந்து கிடந்தார். ஆசூர் கேசவாசாரியாரும் காந்திமதியும் இல்லற வாழ்வை நீண்டகாலம் மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதிகளுக்கு இது பெரும் மனக்குறையாக இருந்தது. தெய்வத்திவம் முறையிட்டால் குறைகள் தீரும். அதிலும் வேள்விகள் இயற்றுவதில் சிறந்த கேசவாசாரியாருக்கு எந்த தெய்வத்திடம் குறையைச் சொல்லலாம் என யோசித்த போது, விருந்தாரண்யம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட பெருமாள் ஸ்தலம் நினைவில் வந்தது. திருவல்லிக்கேணி என்ற குளத்தின் கரையில் அது அமைந்திருந்தது. அந்த குளத்தின் பெயர் தான் இன்றைக்கு அவ்வூருக்கு அமைந்து விட்டது. ஆம்...அது தான் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில். அங்கு சென்று அவர்கள் மகப்பேறு குறித்த வேள்விகளைச் செய்தனர். இதன் பிறகு, கேசவாசாரியார் ஓய்வெடுக்க ஓரிடத்தில் அமர்ந்தார். கண்களைச் சுழற்றவே தூங்கி விட்டார். அப்போது, பார்த்தசாரதி பெருமாள் கனவில் வந்தார். கேசவா! நீர் ஒழுக்கசீலர், வேள்விகள் இயற்றி எம்மைத் திருப்தி செய்பவர், உமது பக்தி ஆழமானது. குழந்தை இல்லா கவலை இனி உமக்கு தேவையில்லை. நானே உமக்கு குழந்தையாகப் பிறப்பேன். இவ்வுலக மக்கள் பூர்வாச்சாரியார்கள் அருளிய உபதேசங்களின் மகிமை புரியாமல், தங்களையே உயர்வாக எண்ணிக்கொண்டு வாழ்கின்றனர். அகந்தை கொண்டு தீமை பல புரிகின்றனர். எனவே, அவர்களைக் கடைத்தேற்ற நான் அவதாரம் எடுப்பேன். இனி நீர் ஊர் திரும்பலாம். உம் விருப்பம் விரைவில் நிறைவேறும், என்றார்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் கேசவாசாரியார் ஊர் திரும்பினார். ஓராண்டு கடந்தது. காந்திமதி அம்மையார் கர்ப்பவதியானார். கலியுகம் 4118, ஆங்கில ஆண்டு 1017, சித்திரை 12, வியாழன், திருவாதிரை, வளர்பிறை பஞ்சமியன்று அவதரித்தது அந்தத் தெய்வக்குழந்தை. இதனிடையே, காந்திமதி அம்மையாரின் தங்கையான தீப்திமதிக்கும் ஆண்குழந்தை பிறந்தது. அக்காவின் குழந்தையைப் பார்க்க தங்கை தீப்திமதி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார். தங்கள் இருவருக்கும் ஆண்குழந்தை பிறந்ததில் அவர்களுக்கு பரம சந்தோஷம். தங்கைகளுக்கு குழந்தை பிறந்த செய்தியறிந்த பெரிய திருமலை நம்பி ஸ்ரீபெரும்புதூர் வந்தார். காந்திமதியின் குழந்தை லட்சுமணனின் அவதாரம் என்பது புரிந்தது. எனவே, குழந்தைக்கு ராமானுஜன் என்று பெயர் வைத்தார். ராமனுக்கு இளையவன் என்பது இதன் பொருள். தீப்திமதியின் குழந்தைக்கு கோவிந்தன் என பெயரிட்டார். இன்னும் சிலகாலம் கழித்து, தீப்திமதி பெற்ற மற்றொரு ஆண் குழந்தைக்கு சிறிய கோவிந்தப் பெருமாள் என்று பெயர் சூட்டினர். அக்காலத்தில், குழந்தைகள் பிறந்து நான்கு மாதம் கழிந்ததும், சூரியனைப் பார்த்தல் என்னும் சடங்கைச் செய்தனர். ராமானுஜனுக்கும், கோவிந்தனுக்கும் இந்த சடங்கு நடந்தது. பிறகு முதல் சோறு ஊட்டுதல், காது குத்துதல், மொட்டையடித்தல், கல்வி துவக்கம், உபநயனம் என வரிசையாக சடங்குகள் நடத்தப்பட்டன.

அருள் மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்

அருள் மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்
 



மூலவர் :  மகாலிங்கேஸ்வரர்
அம்மன் :  மரகதவல்லி, மாணிக்கவல்லி
பழமை :  2000 வருடங்களுக்கு முன்
ஊர் :  விராலிப்பட்டி, தவசி மேடை
மாவட்டம் :  திண்டுக்கல்
மாநிலம் :  தமிழ்நாடு
 
திருவிழா:இத்தலத்தில் மாசி மக திருவிழா விசேஷமாக நடக்கும்.   
      
தல சிறப்பு:சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு. மகம் நட்சத்திரத்திற்குரிய சிறப்பான ஆலயம் இது. மக நட்சத்திரம் தவிர மற்ற 26 நட்சத்திரக்காரர்களும் வணங்கி வழிபட்டு சகல சவுபாக்கியங்களையும் பெறக்கூடிய சிறப்பு பெற்றது. பொதுவாக, ஒரு சன்னதிக்குள் ஒரு அம்பிகைதான் இருப்பாள். ஆனால், இங்கு ஒரே சன்னதிக்குள் மாணிக்கவள்ளி, மரகதவள்ளி என்ற இரண்டு அம்பிகைகள் இச்சா சக்தியாகவும், கிரியா சக்தியாகவும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சிவலிங்கம் வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பரத்வாஜ மகரிஷியால் பூஜிக்கப்பட்டது. பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் வழிபட வேண்டிய தலம் இது. அகத்தியர் முதல் பல ஆயிரம் சித்தர்கள், மகரிஷிகள், மற்றும் முனிவர்களும் தவமியற்றி வழிபட்ட லிங்கம். ராமர் தன் பரிவாரங்களுடன் பரத்வாஜ மகரிஷியை தரிசித்து விருந்துண்ட தலம். இங்குள்ள பைரவர் ஈசனுக்கு நேர் எதிரே ஆதிபைரவராக அருள்பாலிக்கும் சிறப்புப் பெற்ற ஒரே ஸ்தலம்.   
       
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி, ஒடுக்கம் தவசி மேடை- 624 304 சாணார்பட்டி வழி, நத்தம் வழி, திண்டுக்கல் மாவட்டம்.போன்:+91 95782 11659  
      
பொது தகவல்:மகம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட இவர்கள், கல்வி பயில்வதில் ஆர்வம் கொண்டிருப்பர். தருமம் செய்வதில் வல்லவர்கள். மனத்தூய்மை, நேர்மை மிக்கவர்கள். பிறரை கவுரவமாக நடத்துவர். மதுரமான மொழி பேசுவதோடு பேச்சு சாதுர்யமும் பெற்றிருப்பர். பெரும்பாலும் தலைமைப்பதவியில் தான் இருப்பர்.

கோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம், தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த நிலையில் இங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள்.   
       
பிரார்த்தனை:மகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். மாசி மகத்தன்று சிவன், அம்பாளுக்கு விசேஷ பூஜை நடக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்நாளில் வேண்டிக் கொள்வது விசேஷம். நோய் நிவர்த்தி பெற, சிவன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். வீடுகளில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் அந்தக் குறை நீங்கவும் சிறப்பு பூஜை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.  
      
தலபெருமை:மகம் நட்சத்திர கோயில்: பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தில் இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

இரண்டு அம்பிகையர்: அளவில் சிறிய இக்கோயிலில், மகாலிங்கேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு வலது பக்கத்தில் உள்ள சன்னதியில் மரகதவல்லி, மாணிக்கவல்லி என்ற இரண்டு அம்பிகையர் காட்சி தருகின்றனர். மதுரையில் அருளும் மீனாட்சியம்மனின் பெயரால் இவர்களுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. கிழக்கு நோக்கிய இந்த சன்னதிக்குள், அம்பாள்கள் இருவரும் தெற்கு நோக்கி மதில் ஓரத்தில் உள்ளனர். சன்னதிக்குள் எட்டிப்பார்த்துதான் இவர்களைத் தரிசிக்க முடியும். இத்தகைய அமைப்பிலான சன்னதியைக் காண்பது அரிது. இச்சா சக்தி, கிரியா சக்தியாக அருள்பாலிக்கும் இந்த அம்பிகையரை வழிபட்டால், ஞான சக்தியான இறைவனை எளிதாக அடையலாம் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாறு அமைத்துள்ளனர். பரத்வாஜர் ஒரு தவமேடையில், யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு, ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் எப்போதும் யோகிகளும், தபஸ்விகளும் சிவனை அரூபமாக பூஜை செய்து வருகின்றனர். பெண்களால் இவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் தான், அம்மன் வெளியே தெரியாமல் சுவரை ஒட்டி அருள்பாலிப்பதாக தல வரலாறு கூறுகிறது.

ஆதி பைரவர்: சிவாலயங்களில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் காட்சி தரும் பைரவர், இங்கு சிவனுக்கு எதிரில் காட்சியளிக்கிறார். இங்கு அருளும் மகாலிங்கேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால், இவரது உக்ரம் பக்தர்களைத் தாக்காமல் இருக்க எதிரில் பைரவரை பிரதிஷ்டை செய்துள்ளனர். இவரை ஆதி பைரவர் என்கின்றனர். பைரவருக்குப் பின்புறம் தலைக்கு மேலே சிறிய துளை ஒன்றுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த துளை வழியாக, சிவனை தரிசித்து விட்டு, பின்பு பைரவரை வணங்கி, அதன்பின்பு கோயிலுக்குள் செல்கிறார்கள். சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு.   
       
தல வரலாறு:சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய ராமர், பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கி அவரது உபசரிப்பை ஏற்றார். அவர்களுடன் ஆஞ்சநேயரும் வந்திருந்தார். தனக்கு உதவியஆஞ்சநேயரை கவுரவிக்கும் விதமாக, தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கத்திலிருந்த உணவை அவரை உண்ணும்படி கூறினார். (இந்நிகழ்விற்குப் பிறகுதான் வாழை இலையின் நடுவில் கோடு வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்று கூறுகிறது) இத்தகு சிறப்பு மிக்க பரத்வாஜர், இத்தலத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. மதுரை மீனாட்சியை பிரதிஷ்டை செய்த ஐந்து முனிவர்களில் இவரும் ஒருவர்.

சிறப்பம்சம்: பரத்வாஜர் இந்தக்கோயிலுக்கு வந்து, ஒரு தவமேடை அமைத்தார். அதில் அமர்ந்து யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு, ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் ஏற்பட்டது. கோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம் தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த பீடங்களின் வடிவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் பல ரிஷிகளும், மகான்களும் அரூப வடிவில் கலந்து கொள்வதாக ஐதீகம். மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம் என்பது பழமொழி. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரதாவாஜரை குருவாகக் கொண்டு மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாத சிவராத்திரி நாட்களில் இத்தல இறைவனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் வாழ்வில் நல்ல நிலையை அடைவார்கள் என்பது நம்பிக்கை.   
       
சிறப்பம்சமவிஞ்ஞானம் அடிப்படையில்: சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு. பொதுவாக, ஒரு சன்னதிக்குள் ஒரு அம்பிகைதான் இருப்பாள். ஆனால், திண்டுக்கல் அருகிலுள்ள ஒடுக்கம் தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயிலில், ஒரே சன்னதிக்குள் இரண்டு அம்பிகையரை தரிசிக்கலாம்.

தேவியின் ஐம்பத்தொரு சக்தி பீடங்கள்:

தேவியின் ஐம்பத்தொரு சக்தி பீடங்கள்:

1 - காஞ்சிபுரம் - இது ஸ்ரீ சக்கரபீடம். தேவியின் நாபி இங்கு விழுந்ததாகக் கூறுவர்.

2 - மதுரை - இது மந்த்ரிணி பீடம்.

3 - திருஆனைக்கா - இது வராகி பீடம்.

4 - திருக்குற்றாலம் - இது பராசக்தி பீடம்.

5 - திருவாரூர் - இது கமலை பீடம், காமகலா பீடம் என்றும் கூறுவர்.

6 - கன்னியாகுமரி - இது தேவியின் பிருஷ்டபாகம் விழுந்த இடம்.

7 - அம்பத்தூர் - சென்னைக்கு அருகிலுள்ள வைணவி ஆலயம், சக்திபீட வரிசையில் ஐம்பத்தோரூர் என்பதே அம்பத்தூர் என மருவியதாகக் கூறுவர்.

8 - கோகர்ணம் - வலது காது விழுந்த இடம். பரசுராம ஷேத்திரம். தேவியின் திருநாமம் பத்ரகர்ணிகை.

9 - ஸ்ரீ சைலம் - இடது காது விழுந்த இடம். சிறந்த சிவத்தலம். அம்பிகையின் திருநாமம் பிரமராம்பாள். மாதவி பீடம்.

10 - பூரி - நாபி விழுந்த இடம். உத்கலம் எனப்படும் ஒரிசா மாநிலத்தில் உள்ளது. பைரவ பீடம். தேவியின் திருநாமம் விமலை.

11 - சிருங்கேரி - மைசூர் மாநிலத்தில் உள்ளது. தேவி சாரதையாகத் திகழ்கின்றாள்.

12 - கோலாப்பூர் - கண்கள் விழுந்த இடம். அன்னை மகா இலக்குமியாக விளங்குகின்றாள்.

13 - அரசூர் - தனம் விழுந்த இடம். ஆபூமலைக்கு அருகில் உள்ளது. இங்கு சிலா வடிவில் இல்லாமல் அம்பிகை யந்திர வடிவில் அம்பிகா என்ற திருநாமத்துடன் விளங்குகின்றாள்.

14 - ஜலந்தரா - தனம் விழுந்த இடம். தேவியின் திருநாமம் திரிபுரமாலினி.

15 - துவாராவாட் - குஜராத் மாநிலத்தில் உள்ளது.

16 - பிரபாசா - திருவயிறு விழுந்த இடம். இதனை சோமநாதத் தலம் என்றும் கூறுவர்.

17 - பராகத் - இக்குன்றின் அமைப்பே காளிகா யந்திர உருவில் உள்ளது.

18 - சிம்லா - தேவியின் திருநாமம் சியாமளா. இதுவே திரிந்து சிம்லா ஆயிற்று.

19 - மானசரோவர் - இது ஒரு தடாகம். தலை விழுந்த இடம். இமயத்தில் உள்ளது. அம்பிகை தாட்சாயணி. குமுதா பீடம்.

20 - காஷ்மீரம் - கழுத்து விழுந்த இடம். அம்பிகையின் திருநாமம் மகாமாயை.

21 - நேபாளம் - முழங்கால் விழுந்த இடம். இங்குள்ள அஷ்ட மாத்ருகைகளின் ஆலயம் புகழ்மிக்கது.

22 - ஜுவாலாமுகி - நாக்கு விழுந்த இடம்.

23 - சுகந்தா - மூக்கு விழுந்த இடம். இமயமலைச் சரிவில் உள்ள தலம்.

24 - வாரணாடி ( காசி ) - காதுக் குண்டலம் விழுந்த இடம். இது மணிகர்ணிகை பீடம். தேவியின் திருநாமம் விசாலாஷி.

25 - நைமிசாரண்யம் - அம்பிகை இலிங்க தாரிணியாகத் திகழ்கின்றாள்.

26 - குருஷேத்திரம் - முழங்கை விழுந்த இடம்.

27 - பிரயாகை - கைவிரல்கள் விழுந்த இடம்.

28 - உஜ்ஜயினி - இங்கு தேவி மங்கள சண்டிகையாக விளங்குகின்றாள். மகாகவி காளிதாசனுக்கு அருள் நல்கியவள்.

29 - பிருந்தாவனம் - கூந்தல் விழுந்த இடம். இராதா பீடம்.

30 - அத்தினாபுரம் - இங்கு அம்பிகையின் திருநாமம் ஜெயந்தி. ஜயந்தி பீடம்.

31 - கன்னியாகுப்ஜம் - கௌரி பீடம். அம்பிகையின் திருநாமம் கௌரி.

32 - புஷ்கரம் - அன்னையின் திருநாமம் புருஹுதை. புருஹுதா பீடம்.

33 - கேதாரம் - சன்மார்க்க தாயினி பீடம்.

34 - பத்ரை - பத்ரேஸ்வரி பீடம்.

35 - உருத்திர கோடி - உருத்ராணி பீடம்.

36 - சாளக்ராமம் - மஹாதேவி பீடம்.

37 - மலயாசலம் - தேவியின் திருநாமம் கல்யாணி. ரம்பா பீடம்.

38 - தேவிகா தடம் - நந்தினி பீடம்.

39 - சஹஸ்திராஷம் - உத்பலாஷி பீடம்.

40 - வராக சைலம் - ஜயா பீடம்.

41 - இரண்யாஷம் - மகோத்பலா பீடம்.

42 - திரிகூடபர்வதம் - உருத்திர சுந்தரீ பீடம்.

43 - சஃயபர்வதம் - ஏகவீரா பீடம்.

44 - வைத்தியநாதம் - ஆரோக்யா பீடம்.

45 - மகாகாளம் - மஹேஸ்வரி பீடம்.

46 - விந்தியபர்வதம் - நிதம்பை பீடம்.

47 - வேதமுகம் - காயத்ரீ பீடம்.

48 - ஹேமகூடம் - மன்மதா பீடம்.

49 - அமர கண்டம் - சண்டிகா பீடம்.

50 - கல்கத்தா - கால் விரல்கள் விழுந்த இடம். அன்னை காளிகா தேவியாக அருள் பாலிக்கின்றாள்.

51 - காமரூபம் - உபஸ்தம் விழுந்த இடம். இத்தலம் அஸ்ஸாமில் உள்ளது. காமாக்யா என்பது அம்பிகையின் திருநாமம்