ஞாயிறு, 3 ஜூன், 2018

போனவர்களுகு

நமது கதை நாம் இருந்ததோடு முடிவதில்லை. நம்முள் இதுவரை இருந்த சூக்ஷ்ம உடல் தொடர்கிறது. அந்த சூக்ஷ்ம உடலில் நமது எண்ண பதிவுகள் அப்படியே இருக்கும். இதை தான் வாசனை  என்கிறோம். பூர்வ ஜென்ம வாசனை இது தான். சிலபேருக்கு  எந்த ஜென்மத்திலோ நடந்த வாசனைகள், அதாவது நினைவுகள் வந்து அவர்கள் பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா. எங்கோ ஒரு பெண்மணி தான் பல நூற்றாண்டுகள் முன்பு அக்பரின் மனைவியாக இருந்தாள்  என்று சொன்னதாக பத்ரிகைகள்  சொல்லியது ஞாபகம் இருக்கிறதா? நான்  உடலோடு இருக்கும் போது  இந்த எண்ணங்களை அலசி, பிரித்து பார்த்து எதை வெளியே கொண்டுவர வேண்டும். எதை உள்ளேயே  அமுக்கி வைக்கவேண்டும் என்று தீர்மானித்தோம். அந்த உடல் இப்போது இல்லை. எரித்து விட்டார்கள். எண்ணங்கள் மட்டும் சூக்ஷ்ம உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் எண்ணங்கள் தலை தூக்கும்.

அதற்கு தான் நல்ல எண்ணங்கள் மட்டும் நிலைக்கட்டும் என்று  இறக்கும்போது ஒருவன் காதில் தாரக மந்திரம் ஓதுகிறோம். விஷ்ணு சஹஸ்ரநாமம் படிக்கிறோம், கீதை பாராயணம் எல்லாமே. கட்டுப்படுத்தும் உடல் இல்லை என்பதால் கடைசியில் ஒருவன்  பயத்தோடு இறந்தால் அந்த பயம் அவனது சூக்ஷ்ம உடலில் தலை தூக்கும்.  அதே போல் தான் கோபம், ஆத்திரம் அதிகமாக கட்டுப்பாடின்றி புலப்படும். பேய் பிசாசு பழிவாங்கியது என்றெல்லாம் இதனால் தான் பேசுகிறாரகள். நல்ல எண்ணங்கள் சொர்க்கத்தில், மற்றவை நரகத்திலும் தள்ளும் என்பது இதனால் தான். இதையே கர்ம பலன் என்போம்..இதை முழுதும் அழிக்க, விலக்க , பல பிறவிகள், பல உடல்கள் வேண்டும். சூக்ஷ்ம சரீரம்  உடலை தேடும், அது மீண்டும் அதை பிரிந்த உடலை அடையமுடியாதபடி துவாரங்கள் அடைபட்டுவிட்டது. அது இறந்த தனது முந்தைய உடலையே சுற்றிக்கொண்டிருக்கும். முக்கியமாக  நாசித்துவாரம் , மூலாதாரம் ரெண்டின் வழியாக தான் மூச்சு போகும் வரும், இதையே   தான் பிராணன் அபானன்  என்று  மூக்கு மலத்துவாரம் என்கிறோம். மூக்கை பஞ்சு அடைத்தும், மற்றதை கட்டை விரல்களை இணைத்து வழியை முடியும் விடுகிறார்கள்.

ஊரார் உற்றார் வந்த பிறகு காரியங்கள் துவங்குகிறது. இறந்தவன் தலை அருகே செங்கல் ஹோமகுண்டம் தயார் செய்வது  எம தர்மனுக்கு மரியாதைக்காக. உடல் இனி பஞ்ச பூதங்களை அடைவதால் அதற்கு பூத உடல் என்று பேர். அதை ஒரு நூலின், கயிறின் மூலம்  ஹோமகுண்ட கும்பம், அக்னியோடு இணைப்பார்கள். ஜீவன் அக்னியோடு சங்கமமாகுமுன் அதை நீரால் சுத்தப்படுத்துகிறார்கள். பிறகு தான்  உடலை அக்னிக்கு அளிக்கவேண்டும். நெருங்கிய  உறவினர் அந்த சடங்குகளை நிறைவேற்றுகிறார்கள்.   கல் ஊன்றுதல் என்பதை பாஷணஸ்தாபனம் என்பார்கள்.  இந்த  சடங்கில் குடும்பத்துக்கு குடும்பம் மாறுதல் இருக்கிறது. அதற்கான வழிமுறைகள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறதை புரோகிதர்கள் அறிந்து கர்மாவை செய்ப்பவர்களுக்கு விளக்க வேண்டும். என்ன செயகிறோம் என்பதே தெரியாமல் எதையும் செய்தல் தவறு இதற்கிடையில்  பெரிய கும்பல் சேர்ந்து விடுகிறது. இறந்தவருக்கு மலர் சூட்ட, அஞ்சலி செலுத்துபவர்கள் வருவார்கள். எதற்காக இறந்த உடலுக்கு  பூ மாலைகள்?  இதற்கு  சாஸ்திரம் எதுவும் இல்லை. இறந்தவர் தெய்வமாகிவிட்டார் என்ற  நம்பிக்கை அப்படி மரியாதை செலுத்த வைக்கிறது. அது ஒரு பழக்கமாக, வழக்கமாக ஆகிவிட்டது. இறந்த உடலுக்கு செய்யவேண்டியது  பிரேத சம்ஸ்காரம் எனும் சடங்குகள் மட்டுமே.

இறந்தவரின் குடும்ப நபர்கள், மனைவி, பெண் பிள்ளை பேரன் பேத்தி மருமகன் மருமகள் மற்றும் நெருங்கிய சுற்றம், ஆகியோர் ஸ்நானம் செய்து ஈரத்துணியுடன், தலை துவட்டாமல் குடத்தில் ஜலத்தோடு  இறந்தவர் கால் முதல் தலை வரை உடலை  நனைப்பார்கள். தலை அருகே காலி குடம் கவிழ்த்து வைத்து அதிலிருந்து வழிந்த ஜலத்தை அதன் மேல் தெளித்து பிறகு அந்த பாத்திரம் உடலின் வடக்கு பக்கத்தில் வைப்பார்கள். வடக்கே கங்கை இருக்கிறது. அதன் ஜலம் இறந்தவர் உடலை புனிதப்படுத்துவதாக ஐதீகம். அந்த ஜல பாத்திரமும் கங்கைநீரால் புனிதமாகியது.   இது தான் பிரேத அபிஷேக பூஜை. பிறகு அனைவரும் பிரேதத்தை  சுற்றி வணங்குவார்கள்.   இதை செய்வது அஸ்வமேத யாகம் செய்த பலன் என்று சொல்வதுண்டு.

பிறகு அந்த இடம் ஈரம் துடைக்கப்பட்டு உடலை துடைத்து ஆணோ பெண்ணோ புது ஆடை அணிவிப்பார்கள்.  இனி நகைகள் ஆபரணங்கள் எதுவும் கிடையாது விடுவார்கள். தெற்கு பார்த்த அந்த உடலை அனைவரும் வணங்கிய பின்  பிரயாண ஏற்பாடுகள். அதற்கான மந்திரங்கள் ஆரம்பிக்கும்