வியாழன், 28 மே, 2020

திருஷ்டிக்கு பூசணிக்காயை உடைப்ப‍து ஏன்?

கூச்மாண்டன். அரக்கர் குலத்தில் பிறந்த அரும் தவ புதல்வன். அரக்கர்களுக்குள்ள குலவழக்கப்படி வலிய வம்புக்கு போய், தேவர்களை சண்டைக்கு இழுத்தான்.

அரக்கனின் கொடுமை தாங்காத தேவர்கள் தப்பி பிழைக்க ஒரே வழி, வைகுண்டனை சரணடைவது தான் என்று எண்ணி வைகுண்டம் சென்றார்கள்.

புண்ணியதேவனே... தேவர்கள் இனமே அழிந்து விடும் போலிருக்கிறது. தாங்கள்தான் காத்தருள வேண்டும் என்று கதறினார்கள்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மமே வெல் லும் என்ற பழமொழிக்கு ஏற்ப, அசுரனின் கதை முடியும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார் நாராயணன்.

உடன் அரக்கன் இருப்பிடம் நோக்கி சென்றார். வந்திருப்பது நாராயணன் என்பதை மறந்தான். தன் பலத்திருக்கு முன் யாரும் வரமுடியாது என்ற ஆணவத்தில் கொக்கரித்தான் கூச்மாண்டன். சண்டைக்கும் தயாரானான்.

அதுசரி.. அழிவுகாலம் வந்துவிட்டால், அறிவு தான் வேலை செய்யாதே.

யுத்தத்தின் இறுதியில் வேரறுந்த மரம் போல் விழுந்தான்.

கூச்மாண்டா.. நல் வழியில் செல்வதற்கு வழி இருந்தும் அழிவை நீயே தேடிக்கொண்டாய். இது உன்பாவத்தின் சம்பளம்.

வேண்டுபவர்களுக்கு எல்லாம் வேண்டும் வரம் தரும் பெருமானே. இனி நான் பிழைக்க போவதில்லை.

எனது கடைசி ஆசையை நீங்கள்தான் வர மாக தர வேண்டும் என்று மரண வாயில் நின்று மண்டியிட்டான்.

சரி கேள். என்ன வரம் வேண்டும்?

நான் மறைந்தாலும். என் புகழ் அழியாத வரம் வேண்டும்.

இதுவரை. உன் வாழ்நாளில் எந்த நன்மையை யும் செய்யாத உனக்கு அழியாத புகழை எப்படி தருவது?

பெருமானே.. நான் இறப்பதை பற்றி கவலைப்படவில்லை. உங்கள் கை யால் மரணம் எய்வதே நான் செய்த பாக்கியம். இருப்பினும் நான் உயிரோடு இருந்த வகையில் எந்த நன்மையையும் செய்ததில்லை.

இறந்த பிறகாவது பிறருக்கு பயன்பட வேண்டும். அதற்கு நீங்கள் தான் அருள வேண்டும்.

சரி.. நீ பூசணிக்காயாக பிறவி எடுப்பாய். உன்னை வாசலில் வைத்தால் சகல தோஷமும் மறையும். கண் திருஷ்டி மறையும். பில்லி சூன்யம், ஏவல் கூட பாதிக்காது. அதோடு நீ யாருக்கு தானமாக போகிறாயோ.. அதை தந்தவருக்கு நம்மைகள் கிட்டும்.

அதோடு உன்னை யாராவது பிறர் அறியாமல் திருடி சென்றால் சகல தோஷமும் அவர்களை பிடித்து கொள்ளும்.

அதனால், இன்றும்கூட கிராமங்களில் உரியவர் இல்லாமல் பூசணிக்காயை பறித்து சென்றால் அதற்குரிய பணத்தை பக்கத்தில் வைத்து விட்டு பறித்து செல்வார்கள்.

கண் திருஷ்டி மறைய பூசணிக்காயை வைக்கும் நடைமுறையில் இதனா ல் வந்தது. அந்த பூசணிக்காயை உடைத்தால் சகலதோஷமும் மறைந்து விடும்.
"வைரக்குஞ்சிதபாதம் திருவாதிரை அன்று சமர்ப்பித்த பெரியவா"

(பொள்ளாச்சி ஜெயம் பாட்டிக்கு கிடைத்த அற்புத அனுபவம்)

நன்றி-மகாபெரியவா புராணம்.+திரு இந்திரா சௌந்தர்ராஜனும் புதுயுகம் டி.வி.யில் 21-12-2018 அன்று சொன்னார்

சிதம்பரம் நடராஜரின் குஞ்சித பாதத்திற்கு வைரத்தால் கவசம் செய்து வைரக் குஞ்சித பாதம் அணிவிக்க வேண்டும் என்று ஶ்ரீ பெரியவா விரும்பினார்கள். நடராஜருக்கு வைரக்குஞ்சித பாதம். பெரியவா எது செய்தாலும் அது அவர் வழிச்செல்லும் அன்பர்களுக்காகத்தானே! அவரே ஸர்வேச்வரன். அவர் ஏன் கோவிலுக்குப் போகவேண்டும். ராமர் விஷ்ணுவின் அவதாரம். மானுஷ்ய தர்மத்தைக் கடைப்பிடிக்கவில்லையா? அது போலத்தான்.

சரி. குஞ்சித பாதம் செய்வதென்று தீர்மானித்துவிட்டார்கள். மடத்தில் ஶ்ரீகார்யம், மற்றும் சில முக்யமானவர்களை அழைத்து discussion முடிந்து decision எடுக்கப்பட்டது. அடுத்த step…..அளவு வேண்டும். யாரிடம் இந்தப் பணியை ஒப்படைக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்த்து எல்லோரும் காத்திருந்தார்கள். அன்றைய தினம் அம்மா தரிசனத்திற்குச் சென்றிருந்தாள்.(பொள்ளாச்சி ஜெயம் பாட்டி)

“இங்கே வா”. பெரியவா அழைக்கிறார்கள்.

“இங்கே பேசினதெல்லாம் கேட்டுண்டிருந்தயோனோ”.

அம்மா “ஆமாம் கேட்டேன்”…

“சரி சிதம்பரத்துக்குப் போய் நடராஜர் குஞ்சித பாதத்தோட அளவை எடுத்துண்டு வா”.

அம்மாவிற்கு ஒரே shock. எவ்வளவோ விஷயம் தெரிஞ்சவாளெல்லாம் இருக்கும்போது தன்னைப் போகச் சொல்றாளே என்று தயக்கம். மெள்ள மறுபடியும் கிட்டப் போய் “நானா போகணும்” என்று அம்மா கேட்டாள்.

உடனே பெரியவா “ஆமாம் ஆமாம் நீதான் போகணும். போ !!!”

கூட நின்றுகொண்டிருந்த ஒரு பெரியவர் நான் வேணா கூடப் போகட்டுமா என்று கேட்க, ” வேணாம் வேணாம் அவளே போகட்டும்.” என்று சொல்லிவிட்டார். பெரியவா Supreme Court. அப்பீலே கிடையாது. சொன்னா சொன்னதுதான். அம்மா சிதம்பரத்திற்குக் கிளம்பிவிட்டாள்.

சிதம்பரம் நடராஜா ஸன்னிதியில் நின்று கொண்டு சிலரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள். யாரும் கண்டு கொள்ளவில்லை. ஒரு நாள் பூராவும் ஒன்றும் நடக்கவில்லை. மறு நாள் காலை ஸ்ன்னிதியில் நின்று கொண்டிருந்தபோது ஒரு வயஸான தீக்‌ஷிதர் “என்னம்மா நேற்றிலிருந்து நிக்கறையே. உனக்கு என்ன வேணும்”. என்று கேட்க அம்மா விஷயத்தைச் சொன்னாள். என்னடா இது மடிசார் கட்டிக்கொண்டு ஒரு பெண்மணி பெரியவாள் அனுப்பினார் எனறு வந்து நிற்கிறாளே உண்மையாக இருக்குமா என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. இங்கே வா என்று சித்சபைக்கு அழைத்துச் சென்றார். ஒரு வாழை நாரை எடுத்து நடராஜரின் குஞ்சித பாதத்தை கணக்காக அளவெடுத்து அம்மாவிடம் கொடுத்து, பெரியவாளுக்கு நடராஜாவின் ப்ரசாதத்தையும் கொடுத்தனுப்பினார். அம்மாவுக்கு ஒரே ஸந்தோஷம். பெரியவா சொன்ன வேலை நல்லபடியாக முடிந்துவிட்டதே!

பிறகு, யாரென்றே தெரியாத இந்த மடிசார் மாமியை அழைத்துச்சென்று ஸ்வாமி மற்றும் அம்பாளுடைய நகைகளையெல்லாம் காண்பித்து , ஒரு தீக்‌ஷிதர் இல்லத்தில் ஸ்வாமி ப்ரஸாதங்களை ஆகாரமாக அளித்து அனுப்பி வைத்தார்கள். ஒரு நாள் பூராவும் யாரென்றே கண்டுகொள்ளப்படாதவளுக்கு ராஜ மரியாதை. பெரியவாளுடைய representative எனறு தெரிந்துவிட்டதே.

மறு நாள் பெரியவாளிடம் அளவைக் கொடுத்துவிட்டு, வைரக்குஞ்சிதபாதத்திற்கு தன்னுடைய காணிக்கையாக ஒரு வைரத்தையும் அம்மா பெரியவாளிடம் ஸமர்ப்பித்தாள். பெரியவா ஆக்ஞைப்படி செய்யப்பட்ட வைரக்குஞ்சித பாதத்திற்கு பலரிடமிருந்து பெறப்பட்ட வைரங்களில் முதல் வைரம் அம்மாவுடையதுதான். அன்று மாலை பெரியவா விச்ராந்தியாக இருந்த சமயம் அருகில் சென்று அம்மா கேட்டாள்.

“மடத்திற்கு வேண்டிய, விஷயம் தெரிஞ்ச எவ்வளவோ பேர் இருக்கா. பெரியவா ஒரு வார்த்தை சொன்னா உடனே செய்து கொடுக்க எவ்வளவோ பேர் இருக்கா. இந்தக்காரியத்திற்கு என்னை ஏன் பெரியவா அனுப்பினா-ன்னு தெரிஞ்சுக்கலாமா”. உடனே பெரியவா அம்மாவைப் பார்த்து “அவசியம் தெரிஞ்சுக்கணுமோ”. என்று. கேட்க, “பெரியவா தெரிஞ்சுக்கலாம்னு சொன்னா தெரிஞ்சுக்கறேன்” என்றாள்.

பெரியவா: “குஞ்சித பாதம் எந்த காலில் இருக்கு””.

அம்மா: “இடதுகாலில்”

பெரியவா: இடது கால் யாருடையது ?

அம்மா: யோசித்தாள். ஆஹா சிவன் அர்த்தனாரி அயிற்றே என்று நினைவிற்கு வந்தது. உடனே “இடது கால் அம்பாளோடதுதான்.” என்றாள்.

பெரியவா: உடனே பெரியவாள், ” ஒரு பெண்ணோட பாதத்தை அளவெடுக்க ஒரு ஆம்பளையையா அனுப்பறது. அதான் உன்னை அனுப்பினேன். இப்பொ புரிஞ்சுதா”.
*லிங்க புராணம் ~ பகுதி — 02*

        அஷ்டாங்க யோகம்
=======================

ஈசன் திருவருளால் தெளிந்த ஞானத்தைப் பெற்று., அதனால் யோகத்தைக் கடைப்பிடித்தால் பிறவாப் பேரின்பமாகிய முக்தி கிட்டும். ஈசன் சனகாதி முனிவர்களுக்கு கூறிய யோக சாரம் ஜனகர்., அத்திரி., வியாசர்., முதலியோரால் உலகில் பிரசித்தமாயிற்று.

01. *பிரம்மச்சரியம்* : பற்றின்றி இருத்தல் இயமம். இது உண்மை பேசுவதாலும் ஒழுக்கம் வழுவாமையாலும் பற்றற்ற தன்மையாலும் ஏற்படும். மனம்., வாக்கு., காயம் (உடம்பு) இந்த மூன்றாலும் பெண்களைத் தீண்டாது இருப்பது பிரம்மச்சரிய நெறி. தூய்மையாக இல்லறத்தை நடத்துவதும் பிரம்மச்சரிய நெறியைச் சேர்ந்ததே. வானப்பிரஸ்த ஆசிரமம் கடைபிடிப்போர் முற்றும் துறந்த சந்நியாசிகள்., மனைவியருடன் காட்டில் உறைவர்.

02. *நியமம்* :  பற்றற்று இருக்குமாறு உள்ளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது நியமம். இதன் மூலம் மகிழ்ச்சி., சவுசம்., தவம்., ஜபம்., சிவ பிரணிதானம் ஆகியவற்றை அடையலாம். ஆசையின்மை என்ற மண்ணால்., ஞான நீரில் உள்ளத்தை நீராட்டித் தூய்மை செய்தல் அகச்சவுசம் எனப்படும். புனித நீராடி., திருநீறு அணிதல் புறச்சவுசமாகும். தவம் என்பது சாந்திராயண விரதம் அனுஷ்டிப்பதாகும். அதாவது., அமாவாஸை அன்று உபவாசம் இருந்து மறுநாள் முதல் நாள் ஒரு கவளம்., இரண்டாம் நாள் இரண்டு கவளம்., என்று கூட்டிக் கொண்டே சென்று பௌா்ணமி அன்று மறுபடியும் உபவாசம் இருக்க வேண்டும். பின்னர் பௌா்ணமிக்கு பிறகு பிரதமை அன்று 14 கவளம் உண்டு பின்பு நாளொன்றுக்கு ஒரு கவளமாக குறைத்துக் கொண்டே வந்து அமாவாஸை தினம் திரும்பவும் உபவாசம் இருக்க வேண்டும். மறை நெறிகளில் நின்று ஆசிரம நிலைகளுக்கு ஏற்ப இருப்பது மகிழ்ச்சியாகும். ஈசனைத் தியானித்தல் சிவப்பிரணிதானம் ஆகும்.

03. ஆசனம் : யோக நிலைக்கான அங்கங்களில் ஆசனமும் ஒன்று. அது பத்மாசனம் போன்ற பல..... அவற்றில் ஒன்றைக் கடைபிடிக்க வேண்டும்.

04. *பிராணாயாமம்* : ஏதேனும் ஒரு பொருத்தமான ஆசனத்தில் அமர்ந்து பிராணாயாமம் செய்ய வேண்டும். அது மூன்று வகை. பிராணாயாமம் செய்யும் போது வியர்வை தோன்றினால் அதமம்., மனதில் சஞ்சலம் இருந்தால் மத்திமம்., சிந்தையில் மகிழ்ச்சி ஏற்படின் உத்தமம். ரேதஸ் மேல் நோக்கி எழும் மந்திரம் ஜபித்துப் பிராணாயாமம் செய்வது சகற்பம் என்றும்., இன்றி செய்வது விகற்பம் என்றும் பெயர் பெறும். நம் உடலில் பத்து வித வாயுக்கள் உள்ளன....
அவை.....

04.a) உயிருக்கு அத்தியாவசியமானதால் இதயத்தில் தங்குவது *பிராண வாயு.*

04.b) கீழ்நோக்கிப் பிரிவது *அபான வாயு.*

04.c) உடலெங்கும் நிறைந்து இரத்த ஒட்டம்., சீரணமான உணவு உடலில் பரவ உதவுவது *வியான வாயு.*

04.d) உறுப்புகளின் சந்திகளில் தங்குவது *உதான வாயு.*

04.e) உடலைச் சமனப்படுத்தவது *சமன வாயு.*

04.f) விக்கல்., கக்கல் ஏற்படக் காரணமானது *கூர்ம வாயு.*

04.g) தும்மலை உண்டாக்குவது *கிரிகா வாயு.*

04.h) கொட்டாவிக்கு உதவுவது *தேவதத்த வாயு.*

04.i) உடலை வீங்கச் செய்வது *தனஞ்செய வாயு.*

04.j.) பாடுதல்., கண் சிமிட்டல்., மயிர்க் கூச்சலுக்கு உதவுவது *நாகன் வாயு.*

இந்தப் பத்து வித வாயுக்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளல் மிகவும் அவசியம்.

05. *பிரத்தியாகாரம்* : இச்சைகளினால் பாதிக்கப்படும் ஐம்புலன்களைத் தடுத்து நிறுத்துவது இது.

06. *தாரணை* : புலன்களை அடக்கி மனதில் தெளிவை ஏற்படுத்தி ஒரு நிலையில் நிறுத்துவது.

7. *தியானம்* : ஆதியந்தமில்லாப் பரம்பொருளை மனக்கண்முன் நிறுத்தி நிலைப்பது தியானம் ஆகும்.

08. *சமாதி* : ஈசனைத் தியானித்து மனம் உருகி மெய்மறந்த நிலையில் இருப்பது சமாதி ஆகும்.

இந்த எட்டும் யோகமும் அங்கங்கள் ஆகும்.

யோகம் கடைப்பிடிக்கும் போது பல இடையூறுகள் ஏற்படும். அவை... *நோய்., ஐயுறல்., சிரத்தையின்மை., பிரமாதம்., விஷயங்களில் இச்சை., துன்பம்., அப்பிரதிஷ்டை., பிராநிதி தரினம்* என்று கூறப்படும்., ஆதிதெய்வீகம்., ஆதிபௌதிகம்., ஆத்யாத்மிக துக்கங்கள் என்பன. இவையன்றி குறிப்பாக உணரக்கூடிய உபசருக்கம் ஆறு உள்ளன. அவை முறையே பிரதிபை., தேவதரிசனம்., சிரவணம்., வார்த்தை., சுவாதம்., ரசனை ஆகும். மேலும் பஞ்சபூதத்தின் குணங்கள்., பிரம்மத்தின் குணங்கள் என்று பல குணங்களும் விளக்கப்பட்டன. யோகியானவ(ள்)ன் தன் முயற்சிக்கு ஏற்படும் இடையூறுகளை நன்குணர்ந்து அவற்றை விலக்கி., எம்பெருமான் திருவடிகளை சேவித்தால் அவர் அருளைப் பெற்று முக்தி அடைவா(ள்)ன்.

யோகத்தைக் கடைப்பிடித்து ஈசன் அருள் பெறலாம். அதுமட்டுமின்றி நல்லறத்தைக் கடைபிடித்து அவ்வழி நின்றோர்க்கும் ஈசன் அருள் கிட்டும். ஒரு சமயம் பார்வதி தேவி சிவபெருமானிடம்., எந்த வழியில் வழிபட்டால் அவரது அருள் கிடைக்கும் என்று கேட்டார். ஒரு சமயம் பிரம்மனிடம் தான் கூறியதைப் பார்வதிக்கு எடுத்துரைத்தார். மஹாமேரு முதல் மாந்தர்கள் வரை எவராக இருந்தாலும் உள்ளம் கனிந்து மனமுருகி என்னிடம் செலுத்தும் பக்திக்கு நான் அருள் செய்வேன் என்றார்.

தொடரும்.....

🕉️ *ஓம் நமச்சிவாய* 🕉️

*தேவமுனி ப்ரவரார்சித லிங்கம்.,*
*காமதஹன கருணாகர லிங்கம் |*
*ராவண தர்ப வினாஸன லிங்கம்.,*
*தத்-ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||*
*"பசுவும் மாற்றுக் கன்றும்"*

ஒரு பசுமாட்டையும் கன்றையும் ஓட்டிக்கொண்டு வந்து ஸ்ரீமடத்துக்கு சமர்ப்பித்தார் ஒரு பக்தர்.

பெரியவாள் வெளியே வந்து மாடு-கன்றைப் பார்வையிட்டார்கள். பக்தரைப் பார்த்து, "இந்தப் பசு மடத்துக்கு வேண்டாம்" என்று சொன்னார்கள்.

அன்று வெள்ளிக்கிழமை. அந்த நல்ல நாளில் வந்திருக்கும் கோமாதாவை "வேண்டாம் என்கிறார்களே பெரியவாள் என்று மனசுக்குச் சஞ்சலம்.

பெரியவாளிடம் மெல்ல வினயமாகச் சொன்னார் மானேஜர், "இன்னிக்கு வெள்ளிக்கிழமை. பசுமாடு கொண்டு வந்திருப்பவர், ரொம்ப நாளா மடத்து பக்தர், திருப்பி அனுப்பறது நியாயமில்லையோன்னு."

"நீங்க சொல்றது சரிதான் வெள்ளிக்கிழமை அன்னிக்கு ஒரு பக்தர் மனப்பூர்வமாகக் கொடுக்கிற பசுமாடு-கன்றை ஏற்றுக்கொள்வதுதான் நியாயம்.."

மானேஜருக்கு கொஞ்சம் தெம்பு வந்தது.

"ஆனால், இந்தக் கன்றுக்கு, இந்த மாடு தாய் இல்லை"

எப்படி? எப்படி?

"பாருங்கோ.. கன்னுக்குட்டி, பசுமாடுகிட்டே போய் ஒட்டிக்க மாட்டேங்கிறது. பசுமாடு கன்னுக்குட்டியை நக்கிக் கொடுக்கல்லே... தங்கிட்ட சேர்த்துக் கொள்ளல்லே...."

"ஆமாம்...ஆமாம் கன்றுக்குட்டி, நாலு அடி தள்ளி சிவனே'என்று நிற்கிறது.

பக்தர் மாடு வாங்கிய இடத்திற்குப் போய் விசாரித்தார். மாட்டு வியாபாரி உண்மையை ஒப்புக்கொண்டார். ஒரு கன்றின் தாய் இறந்து விட்டது; ஒரு மாட்டின் கன்று இறந்து விட்டது. இந்தக் கன்றையும் அந்தத் தாயையும் சேர்த்துவிட்டார் மாட்டு வியாபாரி.

குறைகளில்லாத வேறொரு பசு-கன்றை ஓட்டிக் கொண்டு வந்தார் பக்தர்.

பெரியவாள் மாட்டைச் சொறிந்து கொடுத்து, பசு, கன்றை வலம் வந்து ஏற்றுக்கொண்டார்கள்.

மனித இயல்புகள் பெரியவாளுக்குத் தெரியும் என்றால் ஆச்சரியமில்லை. மாட்டு இயல்புகளை எந்த கால்நடைக் கல்லூரியில் கற்றுத் தேறினார்கள்.?

ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர.
எது தானம்? எது தர்மம்?

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது. சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார். சூரியனே, என்ன தடுமாற்றம் உன் மனதில் ? என ஈசன் கேட்க,
பரம்பொருளே! இல்லை என கூறாமல் சகல விதமான தான தருமங்களையும் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன். ஆனால், எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது? இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.

சிரித்துக்கொண்டே ஈசன், சூரியனே, நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள். தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில், இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.

ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா ?

இதைக்கேட்ட சூரிய தேவன் " இறைவா! நன்கு புரிந்தது! தானமும் , தர்மமும் , பாவமும் , புண்ணியமும் எல்லாமும் நீயே என்பதை உணர்ந்தேன்!"

ஈசன் சொன்ன விளக்கம் சூரிய தேவனுக்கு மட்டுமல்ல நமக்கும் நன்றாக புரிந்திருக்கும்!

கேட்டு கொடுப்பது தானம்! கேட்காமல் கொடுப்பது தான் தர்மம்!