திங்கள், 16 மே, 2022

வேதங்கள்


வேதம் என்ற சொல் ' வித்' என்ற தாதுவில் இருந்து உண்டானது. இதற்கு அறிதல் என்று பொருள். இதை அறிந்து கொள்ளும் வழி வித்தை எனப்படும். வித்தையினை அறிவினால் தான் பெற முடியும் எனவேதான் வித் என்ற தாதுவிலிருந்து வேதம் ,வித்யா என்ற இரண்டு சொற்களும் உண்டாயின. இந்த
வேதங்கள் என்பது உலகை படைத்து காத்து ரட்சிக்கும் ஈசனின் மூச்சுக் காற்றாக புராணங்கள் கூறுகின்றன.
பரம்பொருளை  அறியும் பேறறிவாக வேதங்கள் திகழ்கின்றது

பரம்பொருளில் இருந்து இடைவெளி வெளிப்பட்டது; ஆகாசம் தோன்றியது; அதிலிருந்து காற்று வந்தது . அந்தக் காற்றானது பொருள் படைத்த ஒலி வடிவைப் பெற்று, உலகின் காதுகளில் வந்து விழுந்தது. காதில் விழுந்த முதல் ஒலி வேதம் என்கிறது ஸனாதனம்.

வேத மந்திரங்கள் காலத்தால் அழிந்து போகாமல் இருக்க ரிஷிகள் இதனை மனனம் செய்து வழிவழியாக தங்கள் சீடர்களுக்கு கற்பித்தனர்.
சுவடிகளில் எழுதிப் படிக்காமல், குரு சொல்ல, சிஷ்யர்கள் காதால் கேட்டு மனனம் செய்து வந்ததால் வேதத்தை "ஸ்ருதி" என்றனர். வேதத்தை காது வழி கேட்டு பாடம் செய்யும் முறைக்கு அத்யயனம் என்று பெயர்.

ஆச்சாரியார் ஒரு முறை ஒரு மந்திரத்தை சொல்ல, மாணவர்கள் பத்து முறை திரும்பத்திரும்ப சொல்லி பாடம் செய்வதை திருவை சொல்லுதல் என்பார்கள்.

"ச்ரோத்ரம்" என்ற சொல்லுக்கு காது என்று பொருள்.  இப்படி வேதத்தை குருவிடமிருந்து காது வழியாக கேட்டு அத்யயனம் செய்தவர்களுக்கு "ச்ரெளதிகள்" என்று பெயர்.

வேதத்தை கற்பிக்கும் குருவானவர் நல்ல ஆச்சாரம் உள்ளவராகவும் வேத லக்ஷணம் ,அர்த்தம், ஆகியவற்றினை நன்கு தெரிந்தவராகவும், நன்கு புரியும்படி கற்பிப்பவராகவும், வேதத்தில் பக்தியும் ,சிரத்தையும் உள்ளவராகவும் இருக்க வேண்டும். கற்றுக்கொள்ளும் மாணவன் ஆசாரம் உள்ளவனாகவும் சோம்பல் இன்றி இருப்பவனாகவும் வேதம் மற்றும் குருவிடம் மிகுந்த பக்தி உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்பவை வேதம் கற்பதற்குண்டான நியமங்கள்.

தொடர்வோம்..........

அறுபத்து மூன்று நாயன்மார்கள் 5 - ஆனாயநாயனார்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் தொடர் பதிவு..

5 - ஆனாயநாயனார்
 



பெயர் : ஆனாயர்
குலம்: இடையர்
பூசை நாள் :கார்த்திகை ஹஸ்தம்
அவதாரத் தலம் :திருமங்கலம்
முக்தித் தலம் :திருமங்கலம்

வரலாறு சுருக்கம்:

“அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்”
–திருத்தொண்டத் தொகை

சோழவளநாட்டு மேன்மழநாடு மண்ணுலகிற்கு அருங்கலம் போன்றது.அது மங்கலமாகியது திருமங்கலம் என்ற மூதூர். அம்மூதூரில் வாழும் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார்.
அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர்; மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும்
சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேசாதவர்....

தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர். பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியிற் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமற்காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்துவருவார். இளங்கன்றுகள், பால்மறை தாயிளம்பசு, கறவைப்பசு, சினைப்பசு, புனிற்றுப்பசு, விடைக்குலம் என்பனவாக அவற்றை வெவ்வேறாக பகுத்துக் காவல் புரிவார். ஏவலாளர்கள் அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்பவர்.

தாம் பசுக்களை மேயவிட்டு, புல்லாங்குழலிலே பெருமானரது அஞ்செழுத்தைப் பொருளாகக் கொண்ட கீதமிசைத்து இன்புற்றிருபபர்.இப்படி நியதியாக ஒழுகுபவர் ஒரு நாள் தமது குடுமியிற் கண்ணி செருகி, நறுவிலி புனைந்து, கருஞ்சுருளின் புறங்காட்டி வெண்காந்தப்பசிய இலைச்சுருளிற் செங்காந்தட் பூவினை வைத்துக் காதில் அணிந்து கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச்சாத்தி கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில்
திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி அதனைத் திருமேனியிலும் மார்பிலும் பூசி, முல்லை மாலை அணிந்து, இடையில் மரவுரி உடுத்து அதன் மேல் தழைப்பூம்பட்டு மேலாடையினை அசையக் கட்டி, திருவடியில் செருப்புப் பூண்டு, கையினில் மென்கோலும் வேய்ங்குழலும் விளங்கக் கொண்டு, கோவலரும், ஆவினமும் சூழ சென்றார்.

அவர் தம்முடைய ஏவலாளராகிய மற்றையிடையர்களோடும் பசுநிரைகளைக் காட்டுக்குக் கொண்டு போய் மேய்த்துக் கொண்டும், காந்தருவ வேதத்திலே சொல்லியபடி செய்யப்பட்ட வேய்ங்குழலினாலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் சத்தசுரம் பொருந்த வாசித்து ஆன்மாக்களுக்குத் தம்முடைய இசையமுதத்தைச் செவித் துவாரத்தினாலே புகட்டிகொண்டும் வருவார்.

கார்காலத்திலே ஒருநாள், இடையர்கள் பசுநிரைகளைச் சூழ்ந்து கொண்டு செல்ல, அவ்வானாயநாயனார் கையிலே கோலும் வேய்ங்குழலுங் கொண்டு நிரைகாக்கும் படி காட்டுக்குச் சென்ற பொழுது; அவ்விடத்திலே மாலையைப்போல நீண்ட பூங்கொத்துக்களைத் தாங்கிக் கொண்டு புறத்திலே தாழ்கின்ற சடையினையுடைய பரமசிவனை போல நிற்கின்ற ஒரு கொன்றைமரத்துக்குச் சமீபத்திலே போய் அதைப் பார்த்துக்கொண்டு நின்று, அன்பினாலே உருகி இளகிய மனசையுடையவராகி, வேய்ங்குழலினாலே இசை நூலிலே விதித்தபடி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வாசித்தார்.

அவர் பஞ்சாக்ஷரத்தை அமைத்து வாசிக்கின்ற அதிமதுரமாகிய இசை வெள்ளமானது எவ்வகைப்பட்ட உயிர்களின் செவியிலும் தேவ கருவின் பூந்தேனைத் தேவாமிர்தத்தோடு கலந்து வார்த்தாற்போலப் புகுந்தது. இடையர்கள் சூழப்பட்ட
பசுக்கூட்டங்கள் அசைவிடாமல் ஆனாயர் அடைந்து உருக்கத்தினாலே மெய்ம்மறந்து நின்றன; பால் குடித்துக் கொண்டு நின்ற கன்றுகளெல்லாம் குடித்தலை மறந்துவிட்டு, இசை கேட்டுக் கொண்டு நின்றன.

எருதுகளும் மான் முதலாகிய காட்டுமிருகங்களும் மயிர் சிலிர்த்துக்கொண்டு அவர் சமீபத்தில் வந்தன; ஆடுகின்ற மயிற்கூட்டங்கள் ஆடுதலொழிந்து அவர் பக்கத்தை அடைந்தன; மற்றைப் பலவகைப் பட்சிகளும் தங்கள் செவித்துவாரத்தினாலே புகுந்த கீதம் நிறைந்த அகத்தோடும் அவரருகிலே வந்து நின்றன; மாடு, மேய்த்துக் கொண்டு நின்ற இடையர்களெல்லாரும் தங்கள் தொழிலை மறந்து கானத்தைக் கேட்டுக்கொண்டு நின்றார்கள்.

விஞ்சையர்களும் சாரணர்களும் கின்னரர்களும் தேவர்களும் மெய்ம்மறந்து விமானங்களிலேறிக் கொண்டு வந்தார்கள்; வருத்துகின்ற உயிர்களும் வருத்தப்படுகின்ற உயிர்களும் அவ்விசையைக் கேட்டு அதன்வசமான படியால், பாம்புகள் மயங்கிப் பயமின்றி மயில்களின் மேலே விழும்; சிங்கமும் யானையும் ஒருங்கே கூடிவரும்; மான்கள் புலிகளின் பக்கத்திலே செல்லும்; மரக்கொம்புகள் தாமும் சலியாதிருந்தன. இப்படியே சரம் அசரம் என்னும் ஆன்மவர்க்கங்களெல்லாம் ஆனாயநாயனாருடைய வேய்ங்குழல் வாசனையைக் கேட்டு, இசைமயமாயின, அவ்விசையைப் பொய்யன்புக்கு அகப்படாத பரமசிவன் கேட்டு, பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய் ஆகாயமார்க்கத்தில் எழுந்தருளி வந்து நின்று,
அவ்வானாயநாயனார் மீது திருவருணோக்கஞ்செய்து,

"மெய்யன்பனே; நம்முடைய உன்னுடைய வேய்ங்குழலிசையைக் கேட்கும்பொருட்டு, நீ இப்பொழுது இவ்விடத்தில் நின்றபடியே நம்மிடத்துக்கு வருவாய்"
-என்று திருவாய்மலர்ந்தருளி, ஈசன் அவ்வானாயநாயனார் வேய்ங்குழல் வாசித்துக் கொண்டு பக்கத்திலே செல்லத் திருக்கைலாசத்தை அடைந்தருளினார்.

தொடரும்.....

ஆத்மா

ஆத்மாவை உணருதல். எப்படி என்று பார்ப்போமா.


பரபிரம்மத்தை உணறதுலே எல்லா மனித பிறவியின் நோக்கம்.
எல்லாமே அவன் என்கின்ற எண்ணம் வந்து விட்டால் எதற்கு மன போராட்டம். மன பக்குவம் தான் தேடலில் ஆரம்பம். எதற்காக வேஷம்? நாம், நாமாக இருப்பதே நலம். அதற்கு சாட்சி நம் மனம் தானே. நல்ல மனதுடன் பிறரோடு பழகும் போது மனதில் மகிழ்ச்சி உருவாகும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போது தான் மனநிறைவு உருவாகும். அந்த மனநிறைவு தான் உடலில் புது சக்தியை உருவாக்கும். அந்த மந்திர சக்தி தான் வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்கும்.
நீங்க எத்தனை கோடி கொடுத்தாலும், ஒரு சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தால் மட்டுமே, உங்களுக்கு அது தெரிய வரும்.


மனித உடல் இறைவனின் வடிவம். அதை இறைவனின் கோவிலாக மாற்றுவதும், வெறும் கூடாகவே வைத்திருப்பதும் அவரவர் கையில் இருக்கிறது. ஆனால் இதை கோவிலாக மாற்றுவதற்கான எளிதான முறையை சொல்வது தான் நமது நோக்கம். இதற்கு மிகவும் எளிதான வழியாக இருப்பது தான் இறைவனுடைய சிந்தனை. அதாவது மனதை ஆசை, பொறாமை போன்ற எதற்கும் உதவாத எண்ணங்களில் இருந்து மாற்றி இறைவனை தியானிப்பது.
மனதுக்கு திடம் கொடுப்பவை – மன திறம் – மந்திரம் என்பது. சில மந்திரங்களை நாம் குறிப்பிட்ட அதிர்வில் ஜெபிக்க, அந்த சக்தி நம் செயல்களை முறைப்படுத்தி, நம்மை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது.


ஒவ்வொருவருக்கும் அவரவர் மூலாதாரத்தில் ஒரு மிகப் பெரும் சக்தி சுருண்டு கிடக்கிறது. முறையான மூச்சுப் பயிற்சியினாலும், மந்திர அதிர்வாலும், இந்த சக்தி தூண்டப்பட்டு மேல் நோக்கி எழும்பும். இந்த நிலையை அடைந்தவருக்கு அவர் எடுக்கும் முயற்சியில் தோல்வியே கிடையாது எனலாம். நாம் இந்த பிறவியில் செய்யும் நன்மை, தீமை எல்லாமே நம் மனதில் பதிவாகிறது இல்லையா? இதை யாரும் மறுக்க முடியாது. இறந்த பிறகும், இந்த நினைவடுக்குகள் அப்படியே தான் நம் ஆன்மாவில் இருக்கின்றன. நாம் அடுத்த பிறவி எடுக்கும் போது நமது நல்ல கெட்ட பலன்களுக்கு ஏற்ப நம் எண்ணங்களை, செயல்களை மனது தீர்மானித்து நம்மை செயல்பட வைக்கிறது.
நவ கிரகங்கள் நம் ஜாதக கட்டங்களில் உட்கார்வதும் அதற்க்கேற்ப்பத்தான். நம் தலை எழுத்து அல்லது விதி எனப்படுவது, இவ்வாறாக எழுதப்படுகிறது.


மிக நேர்த்தியாக முத்துக்கள், ஒரு கயிற்றில் கோர்க்கப்பட்டு இருக்கும் ஒரு முத்து மாலை ஒன்றை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அதில் கோர்க்கப்பட்டுள்ள கயிறு நம் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் கயிறு நிச்சயம் இருக்கிறது இல்லையா? அந்த கயிறு போன்றது தான் நம் ஆத்மா. முத்துக்கள், நம் எண்ணங்கள் போன்றவை. ஒரு எண்ணத்திற்கும், இன்னொரு எண்ணத்திற்கும் உள்ள இடைவெளியில் நம் ஆத்மாவை நம்மால் உணர முடியும். அப்படி என்றால், என்ன அர்த்தம் என்று உங்கள் மனம் கேட்கிறதா.


ஒரு எண்ணத்திற்கும், இன்னொரு எண்ணத்திற்கும் இடைவெளி தேவை. அல்லது எண்ணங்களே இல்லாத நிலையை அதிகமாக்க வேண்டும். அந்த நிலை


தான் – நம்மை பரவசப்படுத்தும் நிலை, பரமாத்மா குடிகொண்டுள்ள பேரானந்தமான ஆனந்த நிலை.

பூஜா சங்கல்பம் மந்திரம் பொருள்

பூஜா சங்கல்பம் மந்திரம் பொருள்




மமோபாத்த ஸமஸ்த#- என்னால் அடையப்பெற்ற அனைத்து, #துரித க்ஷயத்வாரா# – பாபங்களின் நிவர்த்தி வாயிலாகவும், #ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்# – இறைவனின் ப்ரீதிக்காகவும், #சுபே சோபனே முஹூர்த்தே# – சுபமான இந் நல்வேளையில், #அத்ய ப்ரஹ்மண# – இன்றைய பிரம்மாவின், #த்விதீய பரார்த்தே# – பிரம்மாவின் ஆயுளில் இரண்டாம் பாகம், #ஸ்வேத வராஹ கல்பே# – ஸ்வேத வராஹ கல்பத்தின், #வைவஸ்வத மன்வந்தரே# – வைவஸ்வத மன்வந்தரத்தின், #அஷ்டாவிம் சதிதமே# – இருபத்தெட்டாவது, #கலியுகே பிரதமே பாதே# – கலியுகத்தின் முதல் கால் பாகத்தில், #ஜம்பூ த்வீபே# – ஜம்பூ த்வீபத்தில், #பாரத வர்ஷே# – பாரத வர்ஷத்தில், #பரத கண்டே# – பரத கண்டத்தில், #மேரோர் தக்ஷிணே பார்ஸ்வே# – மஹா மேருவாகிய ஹிமயத்தின் தென்பக்கம், #சகாப்தே# – சக என்னும் ஆண்டு கணக்கின்படி, #அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே# – நமது தற்கால வழக்கிலுள்ள, #ப்ரபவாதி ஷஷ்டி ஸமவத்ஸரானாம் மத்யே# – பிரபவ முதல் தொடங்கும் அறுபது ஆண்டுகளினிடையே, #அமுக ஸம்வத்ஸரே# – இன்ன பெயருள்ள ஆண்டின், #அமுக அயனே# – இன்ன அயனத்தில், #அமுக ருதௌ# – இன்ன ருதுவில், #அமுக மாசே# – இன்ன மாதத்தில், #அமுக பக்ஷே# – இன்ன பக்ஷத்தில் (பிறையில்), #ஸுபதிதௌ# – சுபதிதி, #அமுக வாசர யுக்தாயாம்# – இன்ன கிழமையும், #அமுக நக்ஷத்ர யுக்தாயாம்# – இன்ன நக்ஷத்திரமும், #சுபயோக சுபகரன# – நல்யோகமும் கரணமும், #விசேஷேன விசிஷ்டாயாம்# – மிக விசேஷமும், #அஸ்யாம் ஸுபதிதௌ# – கூடிய நல்ல நாளில், #ஸ்ரீ நாராயண ப்ரீத்யர்த்தம்# – நாராயண ப்ரீதிக்காகவும் (பரமேஸ்வரன் மற்றமுள்ள அம்பிகை போன்ற தங்களின் உபாசனைக் கடவுளர்களின் பெயரைச் சொல்ல வேண்டும்) #அஸ்மாகம் ஸஹ குடும்பானாம்# – நமது குடும்பத்தினரின், #க்ஷேம ச்தைர்ய தைர்ய# – க்ஷேமம், ஸ்திரத் தன்மை, தைர்யம், #வீர்ய விஜய ஆயுளாரோக்ய# – வீரம், வெற்றி வியாதியற்ற ஆயுளும், #அஷ்ட ஐஸ்வர்ய# – எட்டு செல்வங்களும், #அபிவ்ருத்யர்தம்# – பெருகும் பொருட்டும், #ஸமஸ்த மங்களா வாப்யர்தம்# – அனைத்து மங்களங்களும் கிடைக்கும் பொருட்டு, #ஸமஸ்த துரிதோப சாந்த்யர்தம்# – அனைத்து பாபங்களின் நிவர்த்திக்காகவும், #தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித# – றம், பொருள், இன்பம், வீடு, நால்வகை, #புருஷார்த்த சித்யர்த்தம்# – பேறுகள் கிட்டவும், #யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி# – சக்திக்கேற்ப, தியானம் ஆவாஹனம் கூடிய, #பூஜாம் கரிஷ்யே# – பூஜையை செய்கிறேன், #பூஜாம் கரிஷ்யாம்# – பூஜையை செய்கிறோம்.

ஸ்ரீமத் பாகவதம் – பரீக்ஷித் சரித்திரம்

ஸ்ரீமத் பாகவதம் – பரீக்ஷித் சரித்திரம் – அஷ்டம ஸ்கந்தத்தின் கதை என்ன?

முதலை வாயில் அகப்பட்டு ‘ஆதிமூலமே’ என்று கதறிய கஜேந்திரனைப் பகவான் காப்பாற்றியதும், கூர்மம் முதலிய அவதாரங்கள் செய்து தேவதைகளுக்கு அமிர்தபானம் கிடைக்கும் படி பகவான் செய்ததும், மஹாபலியை வாமனராகி மூன்றடி மண் யாசித்துத் திருவிக்கிரமராகி உலகை இரண்டடியால் அளந்து அவனைப் பாதாள லோகம் போகும் படி செய்து தேவர்களுக்குப் பகவான் ஸஹாயம் செய்ததும், மத்ஸ்யாவதாரம் செய்து பகவான் ஹயக்ரீவாசுரனைக் கொன்று அவன் திருடிச் சென்ற வேதங்களைப் பிரம்மாவிடம் ஒப்புவிக்கு முன் பிரளயோதகத்தில் வைவஸ்வத மனுவிற்கு ஞானோபதேசம் செய்ததுமே எட்டாம் ஸ்கந்தத்தில் அடங்கிய கதை.


ஸ்ரீமத் பாகவதம் – மூன்றாவது ஸ்கந்தம்

ஸ்ரீமத் பாகவதம் – 3வது ஸ்கந்தம்


– விதுரருக்கு மைத்திரேயர் இருக்கும் இடம், அவரது சிறப்பு முதலியன எவ்வாறு தெரியவந்தது?

விதுரர் தீர்த்தயாத்திரை செய்து கொண்டு வருகையில் யமுனா நதிக்கரையில் பதரிகாசிரமம் நோக்கிப் போய்க் கொண்டிருந்த பகவத் பக்தரான உத்தவ சுவாமியைக் கண்டு இருவரும் ஒருவரை ஒருவர் ஆலிங்கனம் செய்து கொண்டு க்ஷேம சமாசாரங்களை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது உத்தவரிடமிருந்து யாதவர்கள் ரிஷி சாபத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டிருந்ததும், முன் ஜன்மத்தில் வழியாக இருந்து அந்த ஜன்மத்தில் வேடனாக இருந்த ஒருவனது அம்பால் பகவான் பரமபதம் சென்றதையும் கேள்விப்பட்டு மிகுந்த துக்கமடைந்து பகவான் உலகம் விட்டுப் போகையில் சொல்லிப் போன ரகசியாதிகளைத் தனக்குச் சொல்லும்படி உத்தவரை விதுரர் கேட்டார். அவர் தாம் ஒரு விரதத்தோடு பகவான் உத்திரவின்படி சீக்கிரம் பதரிகாசிரமம் போய்ச் சேர வேண்டும் என்றும், தனக்கு ரகசியங்களைப் பகவான் பரமபதம் போகும் தருணத்தில் உபதேசிக்குங்கால் மைத்திரேயர் என்ற மகாமுனியும் அங்கு வந்திருந்தார் என்றும், பகவான் அந்தக் காலத்தில் தன்னையும் விதுரரயும்தான் ஞாபகத்தில் வைத்திருந்தார் என்றும், அப்பொழுது விதுரர் இல்லாமையால் அவருக்குத் தாம் எடுத்துச் சொல்லிய ரகசியங்களை ஆதியோடந்தமாகச் சொல்ல வேண்டும் என்று மைத்திரேயருக்குப் பகவான் உத்தரவு கொடுத்திருக்கிறார் என்றும், மைத்திரேயர் அப்பொழுது ஹரித்வாரத்தில் இருக்கிறார் என்றும், முக்கிய விஷயங்களை உத்தவர் விதுரருக்கு எடுத்துரைத்துப் பதரிகாசிரமம் சென்றார். விதுரருக்குப் பகவான் மேல் பக்தி அதிகரிக்க மைத்திரேயரைச் சீக்கிரத்தில் சென்று அடைந்தார்.