திங்கள், 8 ஜூலை, 2019

ஆதி சங்கரர் அருளிய நிர்வாணாஷ்டகம்!

சிவ வழிபாட்டின் உன்னத நோக்கத்துக்கு, பயனுக்கு நம் வேதாந்திகளின் முதல்வர் - மதச் சீர்திருத்தம் செய்தவரும் ஷண்மத ஸ்தாபகருமான ஆதி சங்கரர் அருளிய நிர்வாணாஷ்டகம் என்னும் பாக்களே சிறந்த சான்று. ஆதிசங்கரர் அருளிய ஆனந்த நிலையின் ஆறு சுலோகங்கள் : (நிர்வாணாஷ்டகம்)

1. மனமும் நானல்ல; புத்தியும் நானல்ல;
நான் என்ற அகங்காரமும் நானல்ல;
அறிவும் சக்தியும் நானல்ல.
உடலின் அங்கங்களும் நானல்ல; ஆகாயம், பூமியும் நானல்ல;
ஜோதியும் நானல்ல; காற்றும் நான் அல்ல.
ஆனந்த மயமான சிவனே நான் - நானே சிவன்.

2. உச் சுவாச, நிச் சுவாச மூச்சினால் ஆனவன் அல்ல, நான்.
கப, பித்தம் முதலிய ஏழு தாதுக்களால் ஆனவனுமல்ல; பஞ்ச (ஐந்து) கோசத்தால் ஆனவனும் அல்ல.
வாக்க நான் அல்ல, கை கால்களும் நான் அல்ல.
ஆனந்த மயமான சிவனே நான் - நானே சிவன்.

3. துவேஷம் எனக்கில்லை; ராகமும் (அன்பும்) எனக்கு இல்லை. லோபமும் எனக்கில்லை; மோகமும் எனக்கில்லை.
மதமும் எனக்கில்லை, மாத்சர்யமும் (சினமும்) எனக்கில்லை, தர்மத்துக்கும் தொடிசு இல்லை, சம்பத்துக்கும் சம்பந்தமில்லை.
ஆனந்தமயமான சிவனே நான் - நானே சிவன்.

4. புண்ணிய பாவமும் எனக்கேது? ஓதுவது, தீர்த்தாடனம் எனக்கேது? வேதம், வேள்வி எனக்கேது? சுகம் ஏது? துக்கம் ஏது?
ஹவிஸ் நானல்ல; அனுபவிக்கிறவனும் நானல்ல; அனுபவிக்கப்படுபவனும் நானல்ல!
ஆனந்தமயமான சிவனே நான்; நானே சிவன்.

5. மிருத்யுவிடம் (மரணத்திடம்) எனக்குப் பயமில்லை. ஜாதி வித்தியாசம் எனக்கில்லை.
தகப்பனும் இல்லை; தாயும் இல்லை; பிறவியும் எனக்கில்லை;
பந்துவும் இல்லை; சினேகிதனும் எனக்கில்லை. ஆசானும் இல்லை; சிஷ்யனும் எனக்கில்லை. ஆனந்தமயமான சிவனே நான் - நானே சிவன்.

6. சஞ்சலம் இல்லாதவன்; உருவங்களால் கட்டுப்படாதவன்; இந்திரியங்கள் அனைத்தையும் ஜயித்தவன்; பற்றை அறவே துறந்தவன்; எனக்கு முக்தியே.

பந்தமோ விஷயமோ இல்லை. ஆனந்தமய சிவனே நான் - நானே சிவன். சொல்லும் அதன் பொருளும் போல் இணைபிரியாத ஜகத்துக்கே தாய் தந்தையராக விளங்கும் பார்வதி பரமேசுவரரை நான் வணங்குகிறேன். சொல்லும் அதன் பொருளும் நான் நன்றாக அறிவதற்கு அருள வேண்டும்.
ஸ்ரீ மஹாலஷ்மியை தோத்திரம் செய்வதன் மூலம் சர்வ கார்ய ஸித்திகள் ஸ்ரீ மஹா லஷ்மித் தேவியைத் தங்களுடைய இஷ்டத் தெய்வமாகக் கொண்டு உபாசித்து வருபவர்கள் அநேகம் பேர். அவளுக்குரிய சில பவித்திரமான மந்திரங்களை ஜபிப்பதன் மூலமாக அவளுடைய அருளை, அவளை ஆராதிப்பவர்கள் அடையலாம். அத்துடன் சகல கார்யங்களிலும் சகல விதமான சித்திகளையும் அடையலாம். இவ்வாறு சித்தி பெறுவதற்குரிய மந்திர மார்க்கங்களை அனுசரித்து எப்படிப் பலன் பெறலாம் என்பதைக் காணலாம்.

1. அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அடைவதற்கு . . .

கீழ் வரும் மந்திரத்தினைத் தினந்தோறும் காலையில் எழுந்து இருபத்து ஏழு தடவை ஜபம் செய்யவும்.

மந்திரம் : மஹா லக்ஷ்மீர் மஹாகாளீ மஹாகந்யா ஸரஸ்வதீ
போக வைபவ ஸந்தாத்ரீ பக்தானுக்ரஹ காரிணீ

2. எல்லாவிதப் பயங்களும் ஒழிய கீழ் வரும் மந்திரத்தைத் தினந்தோறும் மாலையில் பனிரெண்டு தடவை ஜபம் செய்யவும்.

மந்திரம் : பத்ரகாளீ கராளீ ச மஹாகாளீ திலோத்தமா
காளீ கராள வக்த்ராந்தா காமாக்ஷீ காமதா ஸுபா

3. ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய எண்ணும் போது அதில் வெற்றி கிட்ட வேண்டும் என்றால் கீழ் வரும் மந்திரத்தைத் தாங்கள் எந்தக் காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணினார்களோ அந்தக் காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் தினந்தோறும் பத்துத் தடவை ஜபம் செய்து வரவும்.

மந்திரம் : ஜயா ச விஜயா சைவ ஜயந்தீ சாபராஜிதா
குப்ஜிகா காளிகா ஸாஸ்த்ரீ வீணா புஸ்தக தாரிணீ

4. எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட கீழ் வரும் மந்திரத்தைக் காலையில் எழுந்தவுடன் பதினெட்டுத் தடவை. தினந்தோறும் ஜபிக்கவும்.

மந்திரம் : பிப்பலா ச விஸாலாக்ஷீ ரன்க்ஷக்க்நீ வ்ருஷ்டி காரிணீ
துஷ்ட வித்ராவிணீ தேவீ ஸர்வோபத்ரவ நாஸிநீ

5. கல்வியில் வல்லமை பெற கீழ் வரும் மந்திரத்தைக் காலையில் எழுந்தவுடன் பனிரெண்டு தடவை ஜபிக்கவும்.

மந்திரம் : அர்த்த நாரீஸ்வரி தேவீ ஸர்வ வித்யா ப்ரதாயிநீ
பார்கவீ பூஜுஷீ வித்யா ஸர்வோபநிஷ தாஸ்திதா

6. ஒன்று மாற்றி ஒன்றாகக் கஷ்டங்கள் வந்து கொண்டே இருந்தால் கீழ் வரும் மந்திரத்தைத் தினந்தோறும் நூற்றியெட்டுத் தடவை ஜபம் செய்து வந்தால் கஷ்டங்கள் நிவர்த்தியாகும்.

மந்திரம் : கேதநீ மல்லிகா ளஸோகா வாராஹீ தரணீத்ருவா
நாராஸிம்ஹீ மஹோக்ராஸ்யா பக்தாநா மார்தி நாஸிநீ



திருமணத்தின் போது சொல்லப்படும் சப்தபதி மந்திரங்கள்...
பாக்கியம் உள்ளவர்கள் மட்டுமே இதை முழுவதும் படிப்பார்கள்....

ஸகா! சப்தபதா! பவ ஸாக்யோவ்! சப்தபதா! பாபூவா!
என்னுடன் ஏழு அடிகள் எடுத்து வைத்து நீ என் சிறந்த தோழி ஆவாய்.

ஸக்யம் தே கமே யம் ஸக்யாத் தே மாயோஷம் ஸகயன் மே!
நாம் இணைவது தெய்வத்தின் ஆணையாகக் கருதுவதால், இந்த பந்தத்தில் இருந்து நான் என்றும் விடுபடமாட்டேன்.

மாயோஷ்ட சமயாவ சமயாவ சங்கல்பாவஹை சம்ப்ரியோவ்
அன்போடும் பாசத்தோடும் இணைந்து நாம் எல்லாச் செயல்களையும் இணைந்தே செய்வோம்
ரோசிஷ்ணு சுமனஸ்யமநோவ் இஷாமூர்ஜம் அபி ஸ்வசாநோவ்
நாம் எண்ணத்தாலும் செயலாலும் நண்பர்களாக இருப்போம். நம் கடமைகளையும் கர்மாக்களையும் இணைந்தே செய்வோம்

மனக்ஹும்சி சம்வ்ரதாஸ் ஸ்மு சித்தானி ஆகாரம் சத்வமாசி
நீ பாடல் எனில் நான் இசையாக இருக்கிறேன், நீ இசை எனில் நான் பாடலாக இருக்கிறேன்.

அமூஹம் அமூஹமாஸ்மி ஸா த்வம் த்யோவ்றஹம்
நான் ஆகாசமாக இருக்கிறேன் நீ பூமியாக இருக்கிறாய்

பருத்திவீ தவம் ரேதோ அஹம் ரேதோ பிருத்வம் மனோஹமஸ்மி
நான் செயலின் ஆதாரமாக இருக்கிறேன் நீ செலுத்தும் ஆற்றலாக இருக்கிறாய்

வாக் தவம் ஸாமா ஹம் அஸ்மி ருக்த்வம் சாமாம்
நான் எண்ணங்களாக இருக்கிறேன் நீ அதைச் சொல்லும் வாக்காக இருக்கிறாய்

அனுவ்ரதா பாவ பும்சே பும்சே புத்ராய வேத்தவை
நீ வார்த்தைகளாக இருக்கிறாய் நான் அதன் பொருளாக (அர்த்தம்) இருக்கிறேன்

ஸ்ரீயை புத்ராய வேத்தவை ஏஹி ஸூந்ரூரூதே||
நீ உன் அன்பான வார்த்தைகளால் என் வாழ்நாட்களை நிரப்பு, என் ஆற்றலாய் இருந்து நம் வாழ்வை மகிழ்ச்சியால் செழிக்கச் செய்வாயாக, நம் குடும்பம் குழந்தைகளால் செழித்து வளர உதவுவாயாக.
============================================
முதலடி: ஏகமிஷே விஷ்ணுத்வ அன்வேது
தெய்வ சாட்சியாக எடுத்து வைக்கும் முதல் அடி

இரண்டாவதடி: த்வே ஊர்ஜ்வே விஷ்ணுத்வ அன்வேது
உனக்கும் நம் சந்ததிகளுக்கும் அளவில்லாத உணவுகளைக் கொடுக்க கடமைப்படுகிறேன். உனக்கு அளவில்லாத ஆற்றலும் ஆரோக்கியமும் அளிக்க உறுதிகொள்கிறேன்

மூன்றாமடி: த்ரீணீ வ்ருத்தவ விஷ்ணுத்வ அன்வேது
வேதங்களில் சொன்னபடி உன் வாழ்நாள் முழுதும் உன் கடமைகளை பூர்த்தி செய்ய நான் துணையிருக்க கடமைப்படுகிறேன். உன் விரதங்களை(கடமை) அனுஷ்டிக்க துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்

நாலாமடி: சத்வாரி மாயோ விஷ்ணுத்வ அன்வேது
நீ வாழ்நாள் முழுதும் மகிழ்ந்திருக்கச் செய்ய கடமைப்படுகிறேன்.உனக்கு மகிழ்ச்சியைத் தருவேனென உறுதிகொள்கிறேன்

ஐந்தாமடி: பஞ்ச பசுப்ய: விஷ்ணுத்வ அன்வேது
நீ உன் வீட்டில் வளர்க்கும் செல்லபிராணிகளுக்கும், பசுக்களுக்கும், பயிர்களுக்கும் பாதுகாப்பாயிருந்து அவை பெருகி வளம் கொழிக்கச் செய்யவும் துணையிருக்க கடமைப்படுகிறேன். நீ பராமரிக்கும் செல்லப்பிராணிகள், பசுக்கள் போன்றவை பெருகத் துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்.

ஆறாமடி: சத்ரு துப்யா: விஷ்ணுத்வ அன்வேது
மழை வெயில் பனி போன்ற எல்லா காலங்களிலும் நீயும் நம் சந்ததியினரும் பாதுகாப்பாக இருக்கத் துணையிருக்க கடமைப்படுகிறேன்.உனக்கு துன்பம் வராமல், எல்லா காலங்களிலும் காப்பேன் என உறுதிகொள்கிறேன்.

ஏழாமடி: சப்த சப்தப்யா: விஷ்ணுத்வ அன்வேது
அக்னி வளர்த்து நீ செய்யும் செயல்கள் வெற்றிபெற துணையிருக்கவும், உனக்கு இடைஞ்சல்கள், தீங்கு நேராமல் காக்கும்படி கடமைப்படுகிறேன்.நீ அக்னி வளர்த்து செய்யும் செயல்கள் எல்லாவற்றிற்கும் இடைஞ்சலில்லாமல் பார்த்துக் கொள்வேன் என உறுதிகொள்கிறேன்.
========================================
இருவரும் சொல்வது
========================================

ஓம் ஏகோ விஷ்ணுஜர்கத்ஸ்வரம், வ்யாஸம் யேன சராசரம்! ஹ்ருதயே யஸ்ததோ யஸ்ய! தஸ்ய ஸாக்ஷி ப்ரதீயதாம்!

மணமகன் சொல்வது: என் இணையே! நம் ஹ்ருதயபூர்வ அன்பினால் இணைந்து இந்த முதல் காலடி எடுத்து வைக்கிறோம். நீ நம் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளைச் சமைப்பாயாக. என் செயல்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் உன் துணையையும் வேண்டுகிறேன். நீ நம் குடும்ப மேன்மைக்கு உதவியாய் இருப்பாயாக. நீயும் நம் சந்ததிகளும் மகிழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டிய செல்வ-நலன்களுக்காக உழைத்து உங்களைப் பேணுவேன் என்று உறுதி கூறுகிறேன். நீ என்னைப் பேணுவாயாக.

ஓம் இஷ ஏகபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயுது புத்ரான் வின்தாவஹை! பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்டய:

மணமகள் சொல்வது: உன்னிடம் நானும் அன்பினால் பணிந்து இணைகிறேன். நீ உன் வீட்டின் பொறுப்புக்கள் அனைத்தையும் என்னிடம் அளித்துவிடு. உனக்கான உணவை நானே தருகிறேன். நீ நம் குடும்பத்திற்காக ஈட்டிவரும் செல்வங்களை பேணி வளர்த்து செழிக்கச் செய்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். நம் குழந்தைகளும் நாமும் ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இருக்க பார்த்துக்கொள்ளும்படி நீ என்னைப் பேணுவாயாக.

ஓம் ஜீவாத்மா பரமாத்மா ச, ப்ருத்வி ஆகாஷமேவ ச! சூர்யசந்த்ரத்வயேமர்த்தயே, தஸ்ய சாக்ஷி ப்ரதீயதாம்!!

அன்பே! ஜீவனும் ஆத்மாவும் போல என்னில் இரண்டரக் கலந்த நீ, என்னோடு இரண்டாமடி எடுத்து வைத்து விட்டாய். பூமி ஆகாசத்தை நிரப்பி, ஆகாசத்தின் இருப்பைக் குறிப்பது போல, என் இதயத்தை உன் அன்பின் ஆற்றலால் நிரப்பி உறுதியாக்கு. உன் மகிழ்ச்சியாலேயே என் இதயம் உறுதியாகும்.அப்போதுதான் நானும் மகிழ்ந்திருப்பேன். நாம் இணைந்து நம் குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றுவாயாக.

ஓம் ஊர்ஜே த்விபதீ பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயு புத்ரான் வின்தாவஹை, பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்ட்ய:!!

என் அன்பே! நீ துக்கமடைந்திருக்கும்போது, உன் இதயத்தை என் அன்பின் ஆற்றலால் நிரப்புவேன். நீ சந்தோஷமாயிருக்கும்போது நானும் மகிழ்ந்திருப்பேன். உன்னை என் அன்பான வார்த்தைகளால் மகிழ்வுறச் செய்வேன் என்று உறுதிகொள்கிறேன். நம் குடும்பத்தையும் குழந்தைகளையும் உன் மனைவியாக உன்னோடு இணைந்து காப்பேன் என்று உறுதிகூறுகிறேன்.

ஒம் த்ரிகுணாஷ்ச த்ரிதேவாஷ்ச, த்ரிசக்தி: சத்பராயண:!! லோகத்ரயே த்ரிஸந்த்யாயா: தஸ்ய ஸாக்ஷீ ப்ரதீயதாம்!

அன்பே! இப்போது என்னோடு மூன்றடிகள் நடந்துவிட்டாய். மங்களங்கள் நிறைந்த உன் கரங்களைப் பற்றிய எனக்கு இந்தப் புண்ணியத்தால் செல்வச் செழிப்பு நிறைந்து வளம் பெருகப்போகிறது. இன்றிலிருந்து உன்னைத் தவிர மற்ற பெண்கள் அனைவருமே என் தாய்கும் சகோதரிக்கும் ஒப்பாகக் கருதுவேன். நம் குழந்தைகளுக்கு கல்விச்செல்வத்தை நாம் இணைந்து அளிக்கலாம் கல்வி செல்வம் பெருகி அவர்கள் நீடூழி வாழட்டும்.

ஓம் ராயஸ்போஷாய த்ரிபதீ பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயு புத்ரான் வின்தாவஹை, பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்ட்ய:!!

அன்பே! என் ஹ்ருதயபூர்வமாய் உன்னை விரும்புகிறேன், என் கணவனாக வரித்து உன் நலனையே குறித்திருப்பேன். மற்ற ஆண்கள் அனைவருமே என் தந்தைக்கும் சகோதரனுக்கும் ஒப்பாகக் கருதுவேன். நீயே என் மகிழ்ச்சியாக இருக்கிறாய்.

ஓம் சதுர்முகஸ்த்தோ ப்ரம்மா, சத்வாரோ வேதஸம்பவா: சதுர்யுகா: ப்ரவதந்த்ரே தேஷாம் சாக்ஷீ ப்ரதீயதாம்!!

அன்பே! என் பூர்வபுண்ணியங்களின் பலனாகவே உன்னோடு இந்த நான்காம் அடி எடுத்து வைக்கிறேன். என் வாழ்வில் சர்வமங்களங்கள் உன்னோடு வருகின்றது. நீ எனக்கு கர்மாக்கள் செய்யும் தகுதியுடைய புண்ணியத்தை தருகிறாய். நமக்கு செரிந்த அறிவும், பணிவும், மேன்மையும் கூடிய மக்கட்செல்வம் உண்டாகட்டும். அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துவோம்.

மாயோ பவாய சதுஷ்பதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

உன் வாழ்க்கை புஷ்பங்களிலிருந்து வீசும் நறுமணம் போல மணம் வீசட்டும். மணமாலையில் கோர்க்கப்பட்ட பூக்கள் போல உன்னோடு இணைந்தும், குழைத்து வைத்த சந்தனத்தினைப் போல உன் அன்பால் நெகிழ்ந்தும் இருக்கிறேன்.

ஓம் பஞ்ச்சமே பஞ்ச்சபூதானாம், பஞ்ச்சப்ராணை: பராயணா:! தத்ர தர்ஷணிபுண்யானாம் சாக்ஷிண: ப்ராணபஞ்சதா:

அன்பே, இப்போது என்னோடு ஐந்தாம் அடியையும் எடுத்து வைத்து என் வாழ்வை சிறப்பானதாக்கினாய், அர்த்தமுள்ளதாக்கினாய். உனக்கு தெய்வத்தின் அருள் என்றும் இருக்கட்டும். நம் சந்ததிகள் நீடூழி வாழட்டும்.

ஓம் ப்ரஜாப்யாம் பஞ்சபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே நான் உனது துக்கங்களிலும் சந்தோஷங்களிலும் பங்கு கொள்கிறேன். உன் அளவில்லாத அன்பு கண்டு உன் மீது மதிப்பும் நம்பிக்கையும் கூடுகிறது. இந்த அன்பைப் பெற நான் எதுவும் செய்வேன்.

ஓம் ஷஷ்டே து ஷட்க்ருதூணாம் ச, ஷண்முக: ஸ்வாமிகார்த்திக: ! ஷட்ரஸா யத்ர ஜாயந்தே, கார்த்திகேயாஷ்ச சாக்ஷிண:!!

அன்பே! ஆறாம் அடியெடுத்து என்னோடு நடந்து என் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பினாய். நம் பந்தத்தால் நமக்கு மகிழ்ச்சியும் அமைதியும் என்றென்றும் விளையட்டும்.

க்ருதுப்ய: ஷட்ஷ்பதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே! நீ தர்மானுஷட்டான காரியங்கள் செய்யும் போதெல்லாம் நானும் அதில் பங்கேற்று உனக்கு துணையாயிருப்பேன். நம் குடும்பத்திற்கு தேவையான செல்வச் செழிப்புக்களை மிகுதியாக்க துணையிருப்பேன். தெய்வ காரியங்களிலும், நம் மகிழ்ச்சிக்காக நீ செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் எப்போதும் துணையிருப்பேன்.

ஓம் சப்தமே ஸாகராஷ்சைவ ஸப்ததீபா: ஸபவர்த்தா:! ஏஷாம் ஸப்தஷிர்பதநீநாம் தேஷாமாதஷர்சாக்ஷிண:!!

அன்பே! இந்த ஏழாம் அடியோடு நம் பந்தம் பிரிக்கவியலாததாக பிணைந்தது. நம் அன்பும் நட்பும் தெய்வீகமானது. தெய்வமே ஏற்படுத்திய பந்தம்தான் இது. நீ முழுமையாக எனதானாய், நான் முழுமையாக உனதானேன். என் வாழ்க்கையை உன் கையில் ஒப்படைக்கிறேன். என் வாழ்க்கை போகும் திசையை நீயே தீர்மானிப்பாயாக.

ஸகே சப்தபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே! தெய்வத்தின் ஆணையாலும், புண்ணிய புத்தகங்களான வேதங்களில் குறித்த வண்ணமும் கர்மங்களைச் செய்து நாம் இணைந்தோம். நான் உனது மனைவியானேன். நாம் செய்த சத்தியப் பிரமாணங்கள் அனைத்துமே மனதால் செய்தவை. நாம் ஒருவருக்கொருவர் உண்மையாயிருப்போம். இந்தத் திருமணம் நம் வாழ்நாள் முடியும் வரை நீடித்திருக்கட்டும்.
மனிதன் பஞ்சபூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் தன்மையால் ஆனவன். மனிதன் குழந்தையாய்ப் பிறந்து நிலத்தில் உழல்கிறான். உணவுப் பொருட்களில் நீரைச் சேர்த்து, நெருப்பிட்டு சுவையாய் அருந்தி, இதமாய் வருடிச் செல்லும் காற்றை சுவாசிக்கிறான். சந்தோஷமான வாழ்க்கையில் அவன் தன்னை மறந்த நிலையில் ஆகாயத்தில் ஆனந்தமாய்ப் பறக்கிறான்.

பஞ்சபூதங்கள் ஒரு மனிதனை அரவ ணைத்துச் சென்றால் அவன் வாழ்கிறான். இல்லையெனில் வீழ்கிறான். ஒருவனு டைய உயிர் நீரோட்டம் போன்றது. உயிரற்ற உடலை மண்ணில் புதைப் பதும் நெருப்பில் எரிப்பதும் நிகழ் கிறது. உயிரானது காற்றில் கலந்து ஆகாயத்தில் ஒடுங்கி விடுகிறது.

உடலை வைத்துத்தான் இந்த உலகத்தில் நமக்கு இருப்பிடம். இதை எல்லாரும் உணர வேண்டும். ஒருவரின் லட்சியங்கள் எவ்வளவு உயர்ந்த தாக வேண்டுமானாலும் இருக்க லாம். ஆனால் உடல்நலம் ஒத்துழைக்க வில்லையென்றால் பாதிக்கிணறு தாண்டிய கதையாகிவிடும்.

உடலைப்பற்றி பின்வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்.

"கூறுவேன் தேகமது என்னவென்றால்

குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி

மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு

வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி

தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி

தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி

ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி

அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.'

உடல் என்பது, எலும்புகளைத் தூண்போல நாட்டி வைத்து, அவற்றின் இருப்பிடம் மாறி விடாமல் இருக்க நுண்ணிய துவாரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, அவற்றுக்கு இடையில் தசைகளைச் சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, தோலால் மூடி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை அடக்கி உடல் என்ற உருவம் உண்டாக்கப்பட்டிருக்கிறதாம்.

இன்றைய நவீன மருத்துவம் மனித உடம்பை அதன் செயலின் பொருட்டு பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து வகைப்படுத்தியுள் ளது. நவீன மருத்துவம் தேகத்தின் அடிப்படை யாகக் கருதும் எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், தசை மண்டலம், மூச்சு மண்டலம் ஆகிய ஐந்து மண்டலங்களும் சேர்ந்ததுதான் நம்முடைய தேகம் என்பதை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் தம் மதிநுட்பத்தால் மேற் கண்ட பாடல் மூலம் நமக்குத் தெரியப்படுத்தி உள்ளார்கள்.

எனவே, விஞ்ஞானம் விண்ணை முட்டி அதற்கு மேலும் வளரலாம். ஆனால் விஞ்ஞானம் ஒருக்காலும் சித்தர்களின் ஞானத்திற்கு ஈடாகாது. ஏன்? எப்படி என்று எப்போதும் கேள்விகளையே எழுப்பிக் கொண்டிருந்தால் கடைசியில் குழப்பம்தான் மிஞ்சும். சில நேரங்களில் சித்தர்களின் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் உயர அதுவே வழியாகும்.

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைதல்தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் (நெருப்பு) பித்த நோய்களும், காற்றினால் (வாயு) வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

பிணியுடையவனே மனிதன். தனக்கு வரும் பிணியை மதிநுட்பம், மன திடம் போன்றவற் றால் போக்கிக் கொள்வதே சாமர்த்தியம்.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய சித்தர்களைச் சரணடைவதே உத்தமம். வானத்தை முட்டும் கட்டிடங்களும் குளிரூட்டப் பட்ட மருத்துவமனைகளும் நுனிநாக்கு ஆங்கிலமும் ஒருபோதும் நோயை முழுமையாய் விரட்டிவிடாது. நமக்குநாமே மருத்துவனாகி, நமது உடம்பை நாமே பகுத்துப் பார்க்கும் மதிநுட்பத்தை நாம் பெற வேண்டும்.

மானுட உடலைப் பீடிக்கும் நோய்கள் மொத்தம் 4448 ஆகும். அதில் மிகவும் கடுமை யான நோய்கள் 448 என திருமூலர் குறிப்பிடு கிறார். கடுமையான நோய்கள் தேகத்தைத் தாக்கி னால், விரைவில் நலம் பெற சிவபெருமானை வேண்டுங்கள் என்று திருமூலர் கூறுகிறார்.

உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல, திருமூலர் அறுபதுக்கும் மேற்பட்ட காயகற்ப முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் பெற எவர் முனைந்தாலும், முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள வேண்டும். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

துவர்ப்புக்கும் வாயுவுக்கும் ஆகாது. ஆனால் வாழைப்பூவை கடலைப்பருப்பு சேர்த்துத்தான் பொரியல் செய்து சாப்பிடு கிறோம். கடலைப்பருப்பு வாயுப் பதார்த்தம். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவை யான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காயை மருந்தாக்குவது எப்படி?

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது. பின் வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்.

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு

மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்

விருத்தனும் பாலனாமே.'

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள். இதனால் முன் சொன்ன அனைத்து நோய்களும் உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

தென்னாட்டவருக்கு திரிபலா...

திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம்.

உடல் வலிமை பெற...

நூறு கிராம் கடுக்காய், சிலாசத்து பற்பம் 50 கிராம்- இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை- இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்; நரம்புகள் முறுக்கேறும்.

பல் நோய்கள் தீர...

கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.

மூல எரிச்சல் தீர...

கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்.

எனவே, கடுக்காய் உங்கள் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷ மாகும். கடுக்காய் திருமூலரின் ஆசி பெற்றது. நாமும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இந்த உடல் பெற்ற உபாயம் அறிவோம். நல்லன செய்து நலம் பல பெறுவோம். கடுக் காயைக் கருத்தில் வையுங்கள். திருமூலர் ஆசி உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. வாழ்க வளமுடன்!


      வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!
காரடையார் நோன்பின் மகிமை

உ லகில் உள்ள எல்லா நாடுகளிலும் ஆன்மீகத்தில் சிறந்த நாடாக பலம் மிகுந்த நாடாக இந்தியா கருதப்படுவது ஏன் என்று சிந்தித்தால் நமக்குக் கிடைக்கும் பதில் பாரத தேசம் ஒரு புண்ணிய பூமி, கர்ம பூமி பல ஆலயங்கள் நிறைந்த நாடு என்று கூறுவார்கள். அது மட்டுமல்ல, நமது நாட்டுப் பெண்கள் இல்லங்களிலும், ஆலயங்களிலும் ஆற்றிய ஆன்மீகப் பணியும் ஒரு காரணம். நமது நாட்டு வரலாற்றில்

ஆன்மீக பக்கத்தை புரட்டினால் ஆண்கள் புரிந்த ஆன்மீகச் செயல்கள் மற்றும் அதிசயச் செயல்கள் போல சற்றும் குறையாமல் ஏன் சற்று அதிகமாகவே பெண்கள் ஆற்றியுள்ளனர். அப்படி ஒரு ஆன்மீகச் சாதனை புரிந்தவர்களில் சாவித்திரி தேவியும் ஒருவர். அவர் புரிந்த சாதனையே இன்று கொண்டாடப்படும் காரடையார் நோன்பிற்கு காரணம். அதனுடைய வரலாற்றை நாம் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

மத்திர தேசம் என்ற நாட்டை ஆண்டு வந்த அசுவபதி என்ற ராஜாவிற்கு குழந்தை இல்லை என்ற கவலை. ஒரு நாள் நாரதர் அங்கு வந்த போது அவரிடம் தன் குறையை சொல்ல நாரதர் சாவித்திரி தேவியை நினைத்து பூஜை ஹோமங்கள் செய்தால் வழி பிறக்கும் என்று சொல்லி மறைந்தார். ராஜாவும் அவர் சொன்னபடியே செய்தார். அந்த ஹோமம் செய்த அக்னி குண்டத்திலிருந்து ஜெகத்ஜோதியாய் தேவியவள் வந்தாள். பிரம்மதேவன் அனுப்பியதால் இங்கு வந்தேன். இப்போது உனக்கு மகன் இல்லை. இனிமேல் உண்டாகும். செய்த தவத்திற்கு பலனாக நானே கன்னிகையாய் வந்து அவதரிப்பேன் என்று சாவித்திரி தேவி சொல்லி மறைந்தாள்.

சிறிது நாட்களுக்கப் பிறகு தேவி அவள் சொன்னபடியே அரசனின் பட்ட மகிஷியான மாளவியின் வயிற்றில் சாவித்திரி தேவி பிறந்தாள். அவள் வளர்ந்து பருவ மங்கையானதும் அவளுக்கு திருமணம் செய்ய நினைத்தார்கள். அவளுடைய அழகிற்கு ஈடாக எந்த அரச குமாரனும் இல்லை, என்பதால் அசுவபதி ராஜா தன் மகளிடம் நீயே உன் தோழிமாரோடு சென்று உனக்கேற்றவனைக் தேர்ந்தெடுத்து வா என்று சொல்லி அனுப்பினார்.

சாவித்திரி தேவியும் தேசமெங்கும் ஆராய்ந்தும் கிடைக்காமல் இருந்த போது நாட்டை இழந்து காட்டில் வசிக்கும் சாலுவ தேசத்து அதிபதியின் மகனை (சத்தியவான்) வனத்தில் கண்டாள். தன் தந்தையிடம் வந்து தன் விருப்பத்தைத் தெரிவித்தாள். அப்போது அங்கு வந்த நாரதர் அதைக் கேட்டுக் கலங்கினார். காரணம் என்ன என்று ராஜா கேட்டதற்கு நாரதர் சொன்னார். அந்த சத்தியவான் ஒரு வருடத்தில் மரணம் அடைந்து விடுவான் என்று. ராஜா தன் மகளிடம் சொல்ல வேறு ஒருவரை வரித்து வா என்று சொன்னார். ஆனால் சாவித்திரியோ மனதில் ஒருவரை வரித்த பின்பு வேறு ஒருவரைத் தேடுவது பதிவிரதம் கெட்டுவிடும். அவரையே தான் நான் மணப்பேன் என்று உறுதியாகக் கூறிவிட்டாள்.

நாரதர் அரசனிடம் சாவித்திரி அவள் மன திடத்தாலே எமனையும் வெற்றி பெறுவாள் என்று சொல்ல அரசரும் அவள் விருப்பப் படியே காட்டிற்கு சென்று சத்தியவானிடம் கன்னிகா தானம் செய்து விட்டு வந்தார். காட்டில் சாவித்திரி பதிவிரதா தர்மத்திற்கு ஒரு குறையும் இல்லாமல் கணவனோடு கானகத்தில் வாழ்ந்து வந்தாள். கணவனுடைய மரண தேதியை அறிந்து இருந்ததால் கடுந்தவம் செய்தாள், கௌரி நோன்பு இருந்தாள். காமாக்ஷி தேவியை நோக்கி கடுந்தவம் இருந்தாள். அந்த பங்குனி முதல் நாள் வந்தது. கடும் நோன்பு இருந்து உணவு இல்லாமல் இருந்தாள். காட்டில் விறகு கொண்டு வர கணவனுடன் சென்றாள். விறகு பிளக்கும் போது கணவன் உயிர் துறந்தான். சாவித்திரி தன் கணவனின் உயிரை மீட்க சபதம் கொண்டாள். கணவனுக்கு ஈமைக்கிரியைகள் செய்ய உறவினர்கள் வந்த போது செய்ய அவள் அனுமதிக்கவில்லை. சாவித்திரி தனது கணவனின் உடலுடன் காட்டில் தனியாக அவன் உயிரை மீட்க காமாட்சி தேவியை நோக்கி பூஜித்தாள். பூஜையை தொடர்ந்து நடுவே எமன் தோன்றி உன்னுடைய பூஜைகள் அனைத்தும் வீண். உயிர் பிரிந்தது பிரிந்தது தான் என்று சொல்லியும் அவள் தன் விரதத்தை கைவிடவில்லை. காட்டில் கிடைத்த பூக்களையும், பழங்களையும் வைத்து பூஜித்தாள். அம்மைக்கு அமுது படைக்க விரும்பினாள். காடுகளில் ஏதும் கிடைக்காததால் அங்கே கிடைத்த களிமண்னை அடையாகவும், கள்ளிப் பாலை வெண்ணெயாகவும் பாவித்து பூஜை செய்தாள்.

எமதர்மன் சத்தியவான் உயிரை எடுத்து விட்டுச் சென்று கொண்டிருந்தார். சாவித்திரி விடாமல் பின் தொடர்ந்து சென்றாள். எமன் அவளைப் பார்த்து ''என்னை ஏன் தொடருகிறாய்?''என்று கேட்க ''என் கணவன் உயிர் வேண்டும்'' என்றாள். வேறு எதை வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்ற எமனிடம் ''எனக்கு நூறு பிள்ளைகள் வேண்டும்'' என்று வரம் கேட்க ''தந்தேன் அம்மா உனக்கு'' என்றார். தொடர்ந்து அவரைப் பின் தொடர்ந்து உங்கள் வரம் ''பலிக்காமல் போகலாமா!கணவனில்லாமல் எப்படி உங்கள் வரம் எனக்கு பலிதமாகும்? தரும தேவனுடைய வாக்கு பொய்யாகலாமா?'' என்றாள். எமதேவனுக்கு அப்போது தான் சாவித்திரி தேவியின் மதி நுட்பம் புரிந்தது. சாவித்திரியின் பூஜைகளையும், மதி நுட்பத்தையும் மெச்சி உள்ளங்குளிர்ந்து கணவனுடைய உயிரைப் தந்ததோடு இழந்த ராஜ்ஜியத்தையும் அளித்தார்.

இவ்வாறு காலனையே கதி கலங்க வைத்து போராடி வெற்றி பெற்றதற்கு சாவித்திரியம்மன் செய்த கௌரி நோன்பு தான் காரணமாகும். அப்படி சாவித்திரி செய்த பூஜையே இன்று நாம் அனைவரும் செய்யும் காரடையார் நோன்பு ஆகும். மாசி முடிந்து பங்குனி தொடங்கும் சமயம் அன்றைய தினம் சுமங்கலிகள் பூஜை செய்தால் அவர்களுடைய கணவரைப் பிரியாமல் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள் என்பதே அந்த நோன்பின் மகத்துவம்.

காட்டில் சாவித்திரி படைத்த மண் அடையை வெல்ல அடையாகவும், கள்ளிப்பாலை வெண்ணெயாகவும் நாம் அன்னைக்கு படைக்கிறோம். பூஜையின்போது ''உருகாத வெண்ணெயும், ஒரடையும் நான் உனக்கு தருவேன். கணவனை பிரியாத வரம் வேண்டும்''என்று சுமங்கலிகள் அனைவரும் காரடையார் நோன்பு எனும் பூஜையை செய்தால் சாவித்திரி போல திடமான மனதையும் கொண்ட கொள்கையில் உறுதியும் காமாட்சி அன்னையின் அருளையும் பெறுவார்கள் என்பது உறுதி.
“தர்பையின் மகிமை”

க்ருஷ்ண மூர்த்தி ஸாஸ்த்ரிகள்
(வேதபாஷ்ய ரத்னம், வேதாந்த மீமாம்ஸா சிரோமணி)

நமது வாழ்க்கைக்கு உணவு, ஜலம், காற்று எல்லாம் தேவை. உணவு என்பது தான்யங்களின் மூலம் கிடைக்கிறது. பசி என்ற நோயை குணப்படுத்துவதால் தான்யங்களுக்கு ஓஷதிகள் என்று வைத்து தைத்திரீய உபநிஷத்தில் “ஓஷதீப்யோ அன்னம்” எனப்படுகிறது.

உணவினால் உயிருக்கு பலம் ஏற்படுவதால் மட்டும் போதாது.பல நோய் எதிர்ப்பு சக்தியையும் நாம் பெற வேண்டும்.அதற்காக விசேஷமாக ரத்த ஸுத்திக்காக அருகம்புல் மிகவும் பயன்படுவது போல தர்பை எனப்படும் புல்வகையானது சில சூழ்நிலைகளில் உள்ள கெடுதல்களைப்போக்கடிக்கும் தன்மை பெற்றது என்று வேதத்திலேயே கூறப்படுகிறது.

1.பவித்ரம் வை தர்பா:
தர்பையானது புனிதத்தன்மையைத்தருகின்றன. நமது உடலில் வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது. எனவே தான் நாம் எந்த ஒரு செயல் (வைதீககார்யங்கள்) செய்ய ஆரம்பிக்கும் போதும் தர்பத்தில் உட்கார்ந்து கையிலும் தர்ப்பவித்ரத்தை அணிகிறோம்.

2.“தர்பையின் உத்பத்தி”
வேதத்தில் பல முறை இந்த கதை வருகிறது. இந்திரன் வ்ருத்ராஸுரனை கொன்ற பொழுது வ்ருத்ராஸுரனின் தலை நதியில் விழுந்தது. அப்போது ஜலத்தில் இயல்பாக உள்ள ஒரு விசேஷமான சக்தி தெய்வத்தன்மை இரண்டும் நதியின் கரையோரத்தில் வெளிவந்து மண்டியது. அந்த இடத்தில் உடனே தர்பை முளைத்தது. எனவே யாகாதிகளான செயல்களுக்கு தேவையான சக்தியும், தெய்வத்தன்மையும் தன்னுள்ளே கொண்டுள்ளதாக தர்பையானது கருதப்படுகிறது. ”இந்த்ரோ  வ்ருத்ரமஹன்,………தே தர்பா அபவன்” (6.1.1)இதே ஸந்தர்பம் ப்ராம்ஹணத்திலும் (3.2.4)வருகிறது.

3.“அக்னியின் ப்ரதிநிதி”
கடைந்து எடுக்கும் அக்னி உற்பத்தியாகாவிடில் மற்ற தீக்ஷிதரின் அக்னியை எடுத்து கொள்ளலாம். அதுவும் கிடைக்காவிடில் தர்பஸ்தம்பத்தில் ஹோமம் பண்ணலாம். தர்பஸ்தம்பத்தில் அக்னியின் ஸாந்நித்யம் உள்ளது. ”தர்பஸ்தம்பே ஹோதவ்யம். அக்னிவான் வை தர்பஸ்தம்ப: ”(3.7.3)

4.“தீயகதிர்களைத்தவிர்ப்பது”
சந்திர, ஸூர்ய க்ரஹணகாலங்களில் வீடுகளில் பெரியவர்கள் தொன்று தொட்டு ஊறுகாய் போன்ற நீடித்து பயன் படுத்தும் உணவு பொருட்களில் (ஜாடி, பாட்டில்) தர்பையைக்கிள்ளி அதன் துண்டை உள்ளே போடுகிறார்கள். ஏனெனில் வெளியிலே அந்த நேரத்தில் வரும் தீயகதிர்கள் வாயிலாக உணவு பொருட்களில் கெடுதல் ஏற்படாதவாறு தர்பை தடுக்கும் தன்மை வாய்த்தது. இவ்வாறு நமது மூதாதையர்கள் பயன் படுத்தி வரும் தர்பைக்கு பலப்பல விசேஷங்கள் உள்ளன. உடல் வலிமையும் புத்திகூர்மையும் கூட அவற்றால் ஏற்படும் என்று ஊகிக்க முடிகிறது. ஏனெனில் பாணிணி முனிவர் கௌமுதியை எழுதும் போது “பவித்ர பாணியாக உட்கார்ந்து ஆலோசித்து எழுதினார்” என்று மஹாபாஷ்யத்தில் கூறப்படுகிறது. ஒரு புனிதச்செயல் செய்யும் நேரத்தில் நமது சக்தி தடைபடாமலிருக்க நாம் கையில் தர்பத்தினாலான பவித்ரத்தை தரிக்கிறோம். முழுமையாக அந்த வேலை பூர்தியாகும் வரை கழற்றாமலிருப்பது நம் செயலுக்கு உதவுகிறது.

5.“சக்தியை பரிமாறுவது”
இந்த விதத்திலும் தர்பை உபயோகிக்கப்படுகிறது. யஜமானன் தனக்கு பதிலாக புரோஹிதரை கார்யங்கள் செய்யுமாறு அதிகாரத்தை மாற்றித்தரும் போதும். ஸ்த்ரீகளே சில கார்யங்கள் (பித்ருகார்யங்கள்) செய்ய நேரிடும் போதும் தர்பங்களை மற்றவருக்கு கொடுத்து தன் அதிகாரத்தை மாற்றுவதும் வழக்கத்தில் உள்ளது.
குருடர்களுக்கு கண்ணாடி எவ்வளவு பயனுள்ளதோ அவ்வளவு பயனுள்ளதே முட்டாள்களுக்கு புத்தகங்கள்

கல்வியே சிறந்த நண்பன். கல்விமான்களுக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு. கல்வி அழகையும், இளமையையும் விஞ்சி விடும்.

பிறர் செய்யும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள், ஏனெனில் நீங்களாகவே பட்டு உணர்ந்து பாடம் கற்கவேண்டுமெனில் இந்த ஆயுள் போதாது.

ஒருவர் மிகவும் நேர்மையாக இருக்கக்கூடாது. நேர் நிமிர்ந்த மரமே முதலில் வெட்டிச் சாய்க்கப்படுகிறது. நேர்மையான மனிதனே அதிக சோதனைகளை எதிர்கொள்கிறான்.

பாம்புகள் கூட விஷமில்லாமல் இருக்கலாம், ஆனால் விஷம் இருப்பதாக பாசாங்கு செய்வது அவசியம்.

ஒவ்வொரு நட்புறவிலும் கொஞ்சம் சுயநலம் உள்ளது. சுயநலமற்ற நட்புறவு இல்லவேயில்லை. இதுதான் கசப்பான உண்மை!

எந்த ஒரு வேலையைத் தொடங்குவதாக இருந்தாலும் முதலில் உங்களிடம் நீங்களே 3 கேள்விகளை கேட்கவேண்டும்: நான் ஏன் இதனைச் செய்யவேண்டும், முடிவுகள் என்னவாகவிருக்கும், நான் இதில் வெற்றி பெறுவேனா? இந்தக்கேள்விகளை ஆழமாகச் சிந்திக்கும்போதுதான் திருப்திகரமான விடைகள் கிடைக்கும். முயற்சி செய்யுங்களேன்.

பயம் உங்களை நெருங்கும்போது அதனை தாக்கி அழியுங்கள்!

உலகின் ஆகப்பெரிய சக்தி இளமையும் பெண்ணின் அழகும்தான்!

ஒரு வேலையத் துவங்கிவிட்டீர்களென்றால் அதன் விளைவுகள் பற்றி அச்சப்படக்கூடாது. கைவிடாதீர்கள்! நேர்மையாக பணியாற்றுபவர்கள் மகிழ்ச்சியானவர்கள்.

மலரின் மணம் காற்றின் திசைவழி மட்டுமே செல்லும், ஒரு நல்ல மனிதனின் நற்தன்மை அனைத்து திசைகளுக்கும் செல்லும்.

விக்கிரகங்களில் கடவுள் இல்லை. உங்கள் உணர்வுகளே உங்கள் கடவுள். ஆன்மாவே கோயில்.

மனிதன் செயலினால் உயர்ந்தவனே தவிர பிறப்பினால் அல்ல.

உங்களை விட தகுதியில் உயர்ந்தவர்களிடமோ, தாழ்ந்தவர்களிடமோ நட்பு பாராட்டாதீர்கள், இந்த நட்பினால் மகிழ்ச்சி ஏற்படாது.

முதல் 5 ஆண்டுகளுக்கு உங்கள் குழந்தைகளை அன்புடன் நடத்துங்கள். அதன் பிறகு கண்டியுங்கள், 16 வயது ஆகிவிட்டதா நண்பராக நடத்துங்கள், வளர்ந்த உங்களுடைய குழந்தைகளே உங்கள் சிறந்த நண்பர்கள்.
தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம்
இறைவனை வழிபடுவது என்பதே ஆனந்தம் அதிலும் இசையோடு இறைவனை வழிபடமுடியும் என்றால் பக்தர்களின் சந்தோஷத்திற்கு அளவேது. அப்படிப்பட்ட அற்புத ஆலயம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் உள்ள தென்னாங்கூரில் உள்ளது. இயற்கை எழில் நிறைந்துள்ள இந்த கிராமத்திற்கு அழகு சேர்ப்பதே இந்த ஆலயம் தான் என்றால் அது மிகையாகாது.

பாண்டுரங்கனை தரிசிக்க வருபவர்கள் இந்த கிராமத்திற்குள் நுழைந்ததும் தங்களை மறக்கச் செய்கின்ற வகையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. திசைமாறி கிழக்கு இந்திய பகுதிக்குள் நுழைந்து விட்டோமோ என்கிற பிரமிப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் பூரி ஜகன்னாதா ஆலயத்தின் வடிவமைப்பில் தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம் அமைந்திருப்பது தான்.

மேலும் இந்த ஆலயம், கோவில்களுக்கு என உள்ள ஆகமவிதிப்படி தியான மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், ராஜகோபுரம் என அடுத்தடுத்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காண்போரை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராஜகோபுரத்தின் உயரம் 120 அடி ஆகும். அதற்கு மேல் தங்கக் கலசம் நிர்மாணிக்கப்படுகிறது.

இந்த அழகிய கோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கருவரையில் பிரம்மாண்டமாக காட்சி தரும் வகையில் பாண்டுரங்கனும், ருக்மனியும் (இந்த ஆலயத்தில் ருக்மணி என்பதற்கு பதிலாக ருக்மாயி என்று அழைக்கப்படுகிறது) அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள கருவரையில் பாண்டுரங்கனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, அவர்கள் கொடுக்கும் காணிக்கையான தேங்காய், பழம்ஆகியவற்றை பெற்றுக் கொண்டவுடன் திரைச்சீலை விலக்கப்படும். அப்போது கருவரையில் இருக்கும் பாண்டுரங்கனையும் ருக்மணியையும் காணும் பக்தர்கள் உள்ளத்தில், வைகுந்தத்தில் இறைவனை காண்பது போன்ற பிரமிப்பை எற்படுத்துகின்றது.

ஒவ்வொரு நாளும் பாண்டுரங்கனுக்கு ஒவ்வொரு வகையான அலங்காரம் செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக பக்தர்களை கவருவது, வியாழக்கிழமை நடக்கும் நிஜபாத தரிசனம், வெள்ளிக்கிழமை நடக்கும் வெள்ளிகலச சேவை அலங்காரம், சனிக்கிழமை நடக்கும் திருப்பதி வெங்கடேசபெருமாள் அலங்காரம். ஞாயிற்றுக்கிழமை நடக்கும் ராஜஸ்தான் தலைப்பாகையுடன்அலங்கரிக்கப்படும் ராஜகோபாலன் அலங்காரம் ஆகியனவாகும்.
பசுவந்தனை சங்கு ஸ்வாமிகள் (பகுதி-2)

விடிந்தது தங்களுடைய வயலுக்கு நீர் பாய்ச்சப்பட்டிருக்கும் என்ற எண்ணத்துடன் வயலுக்கு வந்த அண்ணன் பக்கத்து வயலில் நீர் பாய்ந்து இருந்ததைக் கண்டு அர்ச்சியுற்றார். ஸ்வாமிகள் மீது ஆத்திரம் கொண்டார். ஏண்டா நம் வயலில் தண்ணீர் இறைக்கச் சொன்னால் அடுத்தவன் வயலுக்கு வேலை செய்திருக்கிறாயே. நம் வயலில் பொட்டுத் தண்ணீரைக் காணோம். உனக்கு மூளை பிசகி விட்டதா? என்று கத்தினார். ஸ்வாமிகள் தண்ணீர் இறைப்பதை நிறுத்தாமல் அண்ணா எங்கே பாய்ந்தால் என்ன. அதுவும் நம் வயல் தானே. அந்த வயலிலும் தண்ணீர் இல்லையே என்றார். ஆத்திரமுற்ற அண்ணன் வரப்பில் கிடந்த கழியை எடுத்து ஸ்வாமிகளின் மேல் மாறி மாறி அடித்தார். அப்படியே களைப்புற்றார். சங்கு ஸ்வாமிகள் தன் மேல் விழுந்த அடிகளைப் பொருட்படுத்தாமல் புன்னகைத்தார். அண்ணா இப்படி ஓங்கி ஓங்கி அடித்தாயே உன் கைகள் என்னமாய் வலிக்கும்? நான் கொஞ்சம் தடவி விடவா? என்று பரிவுடன் கேட்டார். அவ்வளவு தான் அடுத்த வினாடி. அனல் மேல் பட்ட புழுபோல் அண்ணன் விழுந்து துடித்தார். இதைக் கண்டு சகிக்க முடியாத ஸ்வாமிகள். கவலை வேண்டாம் அண்ணா உமது வலி இந்தக் கணமே நீங்கும் என்று சொல்ல. அதுவரை சகோதரனை துவள வைத்த வலி சட்டென்று அகன்றது. அதிர்ந்து போனார் அண்ணன்.

முன்பு ஸ்வாமிகளின் தந்தை இப்போது அண்ணன். அடிப்பட்டவருக்கு வலிக்கும் என்பது சரி. அடித்தவருக்கும் வலிக்குமா என்று யோசித்த சகோதரர் ஏதோ ஒரு சக்தி ஸ்வாமிகளிடம் இருப்பதை உணர்ந்தார். இந்தச் சேதி மெள்ள மெள்ள அக்கம் பக்கத்துக்கு ஊர்களுக்குப் பரவியது. பிறகு உள்ளூர்க்காரர்கள் எவரும் ஸ்வாமிகளிடம் எந்த வேலையையும் தருவதில்லை. வேலைக்காரனைப் போல் ஸ்வாமிகளைப் பயன்படுத்தி வந்தவர்கள். அவரைப் பார்த்ததும் மரியாதையுடன் கையெடுத்துக் கும்பிட்டனர். ஸ்வாமிகள் வழக்கம் போல் இஷ்டப்படித் திரிந்தார். கிடைத்ததை உண்டார். அந்க ஊரில் உள்ள பாழடைந்த மண்டபம் ஒன்றில் படுத்து உறங்கினார். பல முறை நிஷ்டையில் ஆழ்ந்து விடும் ஸ்வாமிகள் சமாதி நிலைக்குச் சென்று விடுவார். இந்த நிலையில் அவரைப் பார்ப்பவர்கள் ரொம்ப களைப்புல தூங்கிறார் போல என்றே கருதுவர். ஒரு நாள் தந்தை மற்றும் சகோதரருடன் தரையில் உட்கார்ந்து சாப்பிட்டார் ஸ்வாமிகள். மூவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார் ஸ்வாமிகளின் தாயார். இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஸ்வாமிகள் மட்டும் கண் மூடித் தவத்தில் மூழ்கிக் கிடந்தார். இந்தத் தருணத்தைப் பயன் படுத்தி அவருடைய அண்ணன் நைஸாக ஸ்வாமிகளின் தட்டில் இருந்த உணவை எடுத்துச் சாப்பிட்டார். சிறிது நேரத்தில் கண் விழித்த ஸ்வாமிகள் தட்டைப் பார்ததார். அண்ணனோ ஸ்வாமிகளை ஏளனத்துடன் பார்த்தார்.

அவ்வளவு தான் சட்டென்று ஸ்வாமிகள் தட்டு முழுவதும் உணவுப் பதார்த்தங்கள் நிரம்பி வழிந்தன. அதிர்ந்து போன அண்ணன் குழப்பத்துடன் ஸ்வாமிகளை ஏறிட்டார். அண்ணா வேண்டுமானால் இந்த உணவையும் எடுத்துக் கொள்ளுங்கள். இறை சிந்னையில் இருக்கும் என்னை பசி ஒன்றும் செய்யாது என்றார். ஒரு முறை சிங்கம்பட்டி ஜமீன்தாரான நல்லக்குத்தி பெரியசாமித் தேவர் ராஜா பூர்வ ஜன்ம வினைப்பயனால் மகோதரம் என்னும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயால் பெரிதும் அவதிப்பட்டார். (சங்கு ஸ்வாமிகள் காலத்தில் ஜமீனை ஆண்டு வந்தவர் இவர்) பசுவந்தனையில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் இருக்கிறது சிங்கம்பட்டி. பசி எடுக்கும் சாப்பிட முடியாது. இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாது. வாந்தி குமட்டல் என்று நரக வேதனையை அனுபவித்து வந்தார் ஜமீன்தார். இதைக் கண்ட அவருடைய குடும்பமே சோகத்தில் தவித்தது. அரண்மனை வைத்தியர்கள் வெளியூர் வைத்தியர்கள் என்று பலர் முயன்றும் ஜாமீன்தாரின் நோயை குணப்படுத்தவே முடியவில்லை. தெய்வ பக்தியில் சிறந்தவரான ஜமீன்தார். குடும்பத்தினரது வேண்டுகோளின் படி சிதம்பரம் சென்று நடராஜ பெருமானை தரிசித்து முறையிடுவது என முடிவு செய்தார். அதன் படி அமைச்சர் மற்றும் வீரர்கள் சூழ பல்லக்கில் பயணித்தார். நெடு நாள் பயணத்துக்குப் பின் சிதம்பரத்தை அடைந்து நடராஜப் பெருமானின் ஆலயத்தினுள் நுழைந்தனர்.

புனித தீர்த்தமான சிவகங்கை திருக்குளத்தில் நீராடிவிட்டு கனக சபையைக் கண்ணராக் கண்டார்.  மலர்களால் சிவானரைத் தொழுதார். அவரது கண்களில் இருந்து நீர் பெருகியது. பிறவி நோய் தீர்க்கும் பெருந்தகையே அடியவர்களது இன்னல்களைக்களையும் அம்பலவாணா அடியேனைப் படுத்தும் மகோதரத்தை நீக்கி அருள் மாட்டாயா?என்று வேண்டினார். ஆட்சியை மறந்தார் ஆயிரங்கால் மண்டபத்திலேயே தங்கினார். ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி ஆறு கால பூஜையை  அனுதினமும் தரிசித்தார். பாலும் பழமும் உண்டு விரதம் அனுஷ்டித்தார். ஆலயத்துக்கு வந்த பக்தர்களும் ஜமீன்தார் குணமாக வேண்டி இறைவனிடம் பிரார்த்தித்தனர். இப்படியாக ஒரு மண்டல காலம் அங்கு தங்கி இருந்தார் ஜமீன்தார். 48ம் நாள் விரதம் பூர்த்தியானது. ஆனால் மகோதர நோய் மறையவில்லை. மனம் கலங்கினார் ஜமீன்தார். அன்றிரவு ஆலயக்கதவு மூடப்பட்டது. உடன் வந்தோர் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர். ஆறாத துயரத்தில் தவித்த ஜமீன்தார் நடராஜ பெருமானுக்கு அருகே சென்றார்.

தில்லையம்பலவாசா உன்னையே நம்பி வந்தேனே. உன்னை மட்டுமே நம்பி இருந்தேனே. என்னைக் கைவிடாலமா?ஒரு மண்டல காலம் உன் சந்நிதியில் தவமாகத் தவம் இருந்து உடல் நலம் குணமாகாமல் நான் ஊர் திரும்பினால் ஊரே என்னை மட்டுமின்றி உன்னையும் பழிக்காதா? எனவே விடிவதற்குள் என் நோய் தீர வழி பிறக்க வேண்டும். இல்லையெனில் சிவகங்கை குளத்தில் வீழ்ந்து என்னை நானே மாய்த்து கொள்வேன். இது சத்தியம் என்றார் ஜமீன்தார். பிறகு அயர்ச்சியில் சந்நிதியிலேயே தூங்கிப் போனார். அவர் கனவில் தோன்றிய நடராஜ பெருமான். அன்பனே வருந்தாதே உனக்கு ஏற்பட்ட நோயைத் திர்க்கவல்ல சங்கு ஸ்வாமிகள் பாண்டிய தேசத்திலே பசுவந்தனை எனும் தலத்தில் உள்ளான். எனக்கு மிகவும் வேண்டிய அடியவன். பரமஞானி விடிந்ததும் அவனைத் தேடிப் புறப்படு. நலம் பெறுவாய் என்று அருளினார். இறைவன் அருளியதில் குளிர்ந்து போன ஜமீன்தார். விடிந்ததும் சிவகங்கை தீர்த்தத்தில் நீராடிப் சிவனாரை வணங்கி விட்டு பசுவந்தனை நோக்கிப் புறப்பட்டார். பல நாட்கள் பயணித்து பசுவந்தனை திருத்தலத்தை அடைந்தார்.

பல்லக்கில் ஜமீன்தார் வருவதைக் கண்டு ஆச்சரியத்துடன் பார்த்த ஊர்மக்கள் பல்லக்கைத் தொடர்ந்தனர். அவர்களிடம் இந்த ஊரில் சங்கு ஸ்வாமிகள் என்பவர் எங்கே வசித்து வருகிறார்? என்று பவ்யமாகக் கேட்டார். சங்கு ஸ்வாமிகளா?அப்படி ஒரு ஆசாமி இந்த ஊரிலேயே இல்லை என்றனர் மக்கள். இந்த ஊரில் தான் இருக்கிறார். ஒரு வேளை அந்தத் தவசீலரைப் நீங்கள் தரிசித்தது இல்லையோ? அப்போது கும்பலில் இருந்த ஒருவன். மகாராஜா இந்த ஊரில் சங்கு ஸ்வாமிகள் என்று எவரும் இல்லை. ஆனால் சங்கு என்று ஒரு சோம்பேறி இருக்கிறான். ஊருக்கு ஒதுக்கு புறமா இருக்கிற பாழடைந்த மண்டபத்தில் அந்தச் சோம்பேறி படுத்து கிடைப்பான் என்றான். ஜமீன்தாரின் முகம் பிரகாசம் ஆனது. ஆமாம் அவர் தான் நான் அவரைத்தான் தரிசிக்க வேண்டும். எனக்கு வழி காட்டுங்களேன் என்றார் கெஞ்சலாக ஊர்ஜனங்கள் முன்னே நடக்க பாழடைந்த மண்டபம் நோக்கிப் பல்லக்கு புறப்பட்டது. அங்கே மண்டபத்தின் சிதிலமடைந்த திண்ணையில் கால் மேல் கால் போட்டு ஏதோ சிந்தித்த பாவனையில் இருந்தார் சங்கு ஸ்வாமிகள்.

பல்லக்கில் இருந்து இறங்கிய ஜமீன்தார் ஸ்வாமிகளை நோக்கி மெள்ள நடந்தார். கண்ணில் நீர் மல்க அவரை வணங்கினார். தட்டுகளில் பழங்களும் பலகாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. ஜமீன் தாரை ஏறெடுத்துப் பார்த்த சங்கு ஸ்வாமிகள் என்ன அப்பனே அந்த நடராஜ் பெருமான் உன் நோயைத் தீர்க்க முடியவில்லை என்று என்னிடம் அனுப்பி இருக்கிறாரோ? எல்லாமே ஒரு நாடகம் தான். இந்தா இந்தப் பழத்தைச் சாப்பிடு என்று தட்டில் இருந்த பழம் ஒன்றை எடுத்து அவருக்குக் கொடுத்தார். இறை அருளால் கிடைத்த தெய்வப் பிரசாதம் எனக்கருதி அதை உண்டார் ஜமீன்தார். என்னே ஆச்சிரியம். அந்தப் பழத்துண்டுகள் வயிற்றுக்குள் சென்றதும் ஒரவித புத்துணர்வு ஜமீன்தாரை ஆட் கொண்டது. அமிர்தத்தை உண்டவர் போல் மகிழ்ந்தார். ஆடினார் பாடினார் சங்கு ஸ்வாமிகளுக்கு நன்றி தெரிவித்து விழுந்து வணங்கினார். அவரது மகிமையை ஊர் மக்களுக்கும் புரிய வைத்தார். சங்கு ஸ்வாமிகள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு வைபவத்துக்கும் சிங்கம்பட்டி ஜமீனில் இருந்து உரிய மரியாதை இப்போதும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பசுவந்தனை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பாசனம் மற்றும் குடி நீருக்கு எப்போதுமே தட்டுப்பாடு உண்டு. காரணம் இங்கு ஆறு குளங்கள் எதுவும் கிடையாது. எனவே மழை நீரை சேகரித்து வைத்து அதைத் தட்டுப்பாடான காலங்களில் பயன் படுத்துவது வழக்கம். ஒரு வருடம் மழை பொய்த்துப் போனாலும் அதோகதிதான்.

இது போன்ற தருணத்தில் சங்கு ஸ்வாமிகளே பல ஊருணிகளை (குளம்) ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது அவர் எங்காவது பயணிக்கும் போது எதிர்ப்படும் எவராவது சாமி ரொம்ப தாகமாக இருக்கு. தண்ணி வேணும் என்று கேட்டு விட்டால் போதும். ஓரிடத்தில் உட்கார்ந்து கைகளால் மணலைத் தோண்டுவார். உடனே அவர்களும் சேர்ந்து தோண்டுவார்கள். சிறிது ஆழ்த்திலேயே தண்ணீர் ஊற்று போல பிய்ச்சிக்கொண்டு வரும். ஸ்வாமிகளின் அருள் திறத்தால் உண்டான பல ஊருணிகள் இன்றும் பசுவந்தனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ளன. இவை சங்கு ஸ்வாமிகள் ஊருணி என்றே அழைக்கப்படுகின்றன. எல்லா மஹான்களையும் போலவே தான் சமாதி ஆகப்போகும் காலம் இது தான் என்று துல்லியமாகத் தன் சீடர்களிடம் சொல்லி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார் சங்கு ஸ்வாமிகள். அந்த நாளும் வந்தது. அன்று பசுவந்தனை கயிலாயநாதர் ஆலயம் சென்று இறைவனைத் தொழுதார். பிறகு அவர் சொன்ன அதே நேரத்தில் ஜப மாலையுடனும் சின் முத்திரையுடனும் சமாதி ஆனார். ஸ்வாமிகள் அவர் கூறியிருந்தபடி சமாதி அமைத்து. அவரது பூத உடலை நல்லடக்கம் செய்தனர் சீடர்கள். இன்றும் தன் சமாதி கோயிலை நாடி வரும் பக்தர்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி நல்லருள் புரிந்து வருகிறார் சங்கு ஸ்வாமிகள். நாமும் அவரின் திருவடி பணிவோம். திருவருள் பெறுவோம்.

தலம்: பசுவந்தனை சிறப்பு: சங்கு ஸ்வாமிகள் சமாதி கோயில்

இருப்பிடம்: கோவில்பட்டியில் இருந்து தெற்கே சுமார் 24 கி.மீ தொலைவில்  இருக்கிறது. பசுவந்தனை மதுரை நெல்லை ரயில் மார்க்கத்தில் கடம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே சுமார் 20 கி.மீ தொலைவு. மதுரை நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறில் இருந்து கிழக்கே சுமார் 21 கி.மீ தொலைவு. தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலையில் எப்போதும் வென்றானில் இருந்து மேற்கே சுமார் 11 கி.மீ தொலைவு.

செல்லும் வழி: பகவந்தனைக்கு அருகில் உள்ள நகரம் கோவில்பட்டி தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் கோவில்பட்டியை அடைவது எளிது. கோவில்பட்டி நெல்லை தூத்துக்குடி முதலான ஊர்களில் இருந்து பகவந்தனைக்குப் பேருந்து வசதி உண்டு. என்றாலும் பேருந்து சர்வீஸ் குறைவாகவே உள்ளது.

தொடர்புக்கு: அருள்மிகு கயிலாதநாத ஸ்வாமி திருக்கோயில்.
பகவந்தனை : 625 718, ஒட்டப்பிடாரம் வட்டம். தூத்துக்குடி மாவட்டம். போன்:0461-2282308.