செவ்வாய், 10 டிசம்பர், 2019

17.குதம்பை சித்தர்

அம்மா! உடலைக் கட்டுப்படுத்தி வைக்க வெண்காயம் (பால் காயம்) இருக்கிறது. மிளகு இருக்கிறது, சுக்கு இருக்கிறது. இவற்றைக் கலந்து மருந்தாக்கி உட்கொண்டால், ஒரு பெண்ணின் காயம் (உடல்) நமக்கு எதற்கு தேவைப்படப் போகிறது? பெண் இன்பத்தால் சித்திக்காத மன இன்பம் இந்த மருந்தால் சித்திக்காதோ, என்று கேட்டார் குதம்பைச் சித்தர். குதம்பை என்றால் என்ன? காதிலே அணியும் ஒரு வகை தொங்கட்டான் போன்ற அணிகலன். இவர் தஞ்சாவூர் பக்கம் பிறந்திருக்க வேண்டும். பிறந்த ஊர் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இவர் யாதவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும்,  பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு பிறந்தவர் என்பதும் சில நூல்கள் மூலம் தெரிய வருகிறது. இவரது அன்னைக்கு தன் குழந்தை மீது மிகுந்த பாசம். ஆண்குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தை போல் அதிக அழகு. அந்த அழகை மிகைப்படுத்த குழந்தையின் காதிலே ஒரு தொங்கட்டான் அணிவித்தாள் அந்த புண்ணியவதி. அது ஆடும் அழகைப் பார்த்து குழந்தையிடம் மனதைப் பறி கொடுப்பாள். அந்த அணிகலனின் பெயரால் குதம்பை என்றே மகனை அழைக்க ஆரம்பித்து விட்டாள். அவரது பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. கணநேரம் கூட குழந்தையைப் பிரியமாட்டாள். அப்படி ஒரு பேரன்பு! மகனுக்கு 16 வயதானது. அதுவரை அம்மா பிள்ளையாகத்தான் இருந்தார் குதம்பையார். ஒருநாள், ஒரு சித்தரை அவர் சந்தித்தார். குழந்தாய் குதம்பை! நீ சாதிக்கப் பிறந்தவன். உனக்கு உன் தாய் திருமணம் முடிக்க இருக்கிறாள். ஆனால், அது நடக்காது. காரணம், நீ கடந்த பிறவியில் ஒரு காட்டில் இறை தரிசனம் வேண்டி தவமிருந்து வந்தாய். ஆனால், இறைவனைக் காணமுடியாத படி விதி தடுத்து விட்டது. உன் ஆயுளுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில், நீ எந்த காட்டில் தங்கியிருந்தாயோ, அங்கே ஒருநாள் பெரும் புயலடித்தது. ஒரு மரத்தின் அடியில் தவநிலையில் இருந்தபடியே நீ உயிர் விட்டாய். விட்ட தவத்தை தொடரவே, நீ பிறந்திருக்கிறாய். தவம் என்றால் என்ன தெரியுமா? என்றவர், தவத்தின் மேன்மை, யோக சாதனைகள் பற்றி குதம்பையாருக்கு எடுத்துச் சொன்னார்.

குதம்பையார் மிகுந்த பணிவுடன் அவற்றையெல்லாம் கேட்டு, தன்னை ஆசிர்வதித்து, இப்பிறவியிலும் தவம் தொடர ஆசி வேண்டினார். அந்த சித்தர் அவருக்கு ஆசியளித்து மறைந்தார். அவரையே தன் குருவாக ஏற்ற குதம்பையார், அவர் சென்ற திசையை நோக்கி வணங்கி விட்டு தாயாரிடம் சென்றார். அம்மா அவருக்கு பல இடங்களில் பெண் பார்த்து வைத்திருந்தார். மகனே! அவள் அழகில் ரம்பை, இவள் ஊர்வசி, இவள் அடக்கத்தில் அருந்ததி...இப்படி பல புராணப் பாத்திரங்களை தன் வருங்கால மருமகள்களுக்கு உதாரணமாக காட்டினார். அப்போது தான் இந்தக் கதையின் துவக்கத்தில் வந்த வரிகளை அம்மாவிடம் சொன்னார் குதம்பையார். அம்மாவுக்கு அதிர்ச்சி. என்னடா! சித்தன் போல் பேசுகிறாயே! இல்லறமே துறவறத்தை விட மேலானது. உன்னைப் பெற்றதால் நான் மகிழ்ந்தேன். நீ பெறும் குழந்தைகளாலும் நான் மகிழ வேண்டும். ஒரு தாயின் நியாயமான ஆசை இது. அதை நிறைவேற்றி வை, அம்மாவின் கண்ணீர் குதம்பையாரை வருந்தச் செய்யவில்லை. அவரது எண்ணமெல்லாம், முந்தைய பிறவியின் தொடர்ச்சியாக தவம் செய்வதிலேயே இருந்தது. அன்றிரவு அம்மாவும், அப்பாவும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். குதம்பையார் கதவைத் திறந்து வெளியே வந்தார். சந்திர ஒளியில் மிக வேகமாக நடந்தார். மனதின் வேகத்தை விட அதிக வேகம் அது! அந்த வேகத்துடன் சென்றவர் காட்டில் போய் தான் நின்றார். பூர்வஜென்மத்தில் அவர் மீது சாய்ந்த மரம் இருந்த பகுதி அது. ஆனால், குதம்பையாருக்கு அது தெரியவில்லை. அங்கு நின்ற அத்தி மரத்தில் ஒரு பெரிய பொந்து இருந்தது. அதற்குள் குதம்பையார் அமர்ந்தார். ஒருவேளை, தாய் தந்தை காட்டுக் குள் தேடி வந்து நம் தவத்தைக் கலைத்து அழைத்துச் சென்று விட்டால் என்னாவது என்ற முன்னெச்சரிக்கையால் இப்படி செய்தார். தவம்... தவம்... தவம்... எத்தனையோ ஆண்டுகள் உணவில்லை, கண்கள் மூடவில்லை. இறைவனின் சிந்தனையுடன் இருந்தார். இறைவா! உன்னை நேரில் கண்டாக வேண்டும், என்னைக் காண வா! அல்லது உன் இருப்பிடத்திற்கு கூட்டிச்செல். ஏ பரந்தாமா! எங்கிருக்கிறாய்! கோபாலா வா வா வா, இது மட்டுமே மனக்கூட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது பரந்தாமன் உருவமற்ற நிலையில் அசரீரியாக ஒலித்தான்.

குதம்பை! நீ இப்போது வைகுண்டம் வர வேண்டாம். உன்னால் இந்த உலகத்துக்கு இன்னும் நன்மைகள் நடக்க வேண்டியிருக்கிறது. நீ இப்போது இருப்பது விந்திய மலைப்பகுதியில்.
16.புலிப்பாணி

நான் எம்பெருமான் முருகனுக்கு சிலை செய்ய ஆசைப்படுகிறேன். உலோகங்களால் அவருக்கு பல இடங்களில் சிலைகள் உள்ளன. ஆனால், நான் ஆசைப்படுவது வேறு. இந்த முருகனைத் தரிசித்த மாத்திரத்திலேயே உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் விலகியோட வேண்டும். மன நோயும் விலக வேண்டும். எனவே, நான் மூலிகைகளைக் கொண்டு அவருக்கு சிலை செய்ய வேண்டும். நீ நோய் தீர்க்கும் மூலிகைகளைப் பறித்து வா, என்றார் குருவான போகர் சித்தர்.குருவின் கட்டளையை ஏற்ற புலிப்பாணி, ஏ புலியே கிளம்பு, என்றார்.புலி மீது சவாரி செய்பவர் யார் எனக் கேட்டால், நீங்கள் ஐயப்பன் என்று பதில் சொல்வீர்கள். அவர் தெய்வம். தர்ம சாஸ்தாவான அவர், புலியின்மீது பயணம் செய்வதில் ஆச்சரியமாக இல்லை. ஆனால், ஒரு சித்தர் புலியின் மீது பயணம் செய்கிறார் என்றால், அவர் எப்பேர்ப்பட்ட சக்தி மிக்கவராக இருக்க வேண்டும். விலங்குகளை வசியப்படுத்தி, தன் கட்டுக்குள் வைத்திருப்பவர் அவர். அந்தளவுக்கு அவருக்கு தவசக்தி அமைந்திருந்தது.புலிப்பாணி சித்தர் சீனாவில் பிறந்ததாக ஒரு தகவல் இருக்கிறது. பழநியில் வசித்த போகர் சித்தர் சீனாவுக்கு வான்வழியே யோக சாதனையைப் பயன்படுத்தி சென்றார். அவரது அருமை பெருமைகளைத் தெரிந்து கொண்ட புலிப்பாணி அவரது சீடரானார். அவரிடம் சகல யோக வித்தைகளையும், சித்து வேலைகளையும் கற்றுக் கொண்டார். பின்னர் இருவரும் பாரதத்துக்கு வந்து சேர்ந்தனர்.போகர் பழநியில் தங்கிய போது புலிப்பாணியும் உடன் தங்கினார். ஒருமுறை போகர் சித்தர் தாகத்துடன் ஒரு காட்டில் தவித்த போது, புலிப்பாணி தன் புலியின்மீது ஏறிச் சென்றார். தண்ணீரை பாணி என்றும் வேற்றுமொழியில் சொல்வதுண்டு. புலியில் ஏறிச்சென்று பாணி கொண்டு வந்ததால் புலிப்பாணி என்று இருமொ ழிகளையும் இணைத்து அவருக்கு பெயர் வந்ததாகவும், அவர் சீனாவில் பிறந்தவர் என்பதால் அவரது நிஜப்பெயர் தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.புலிப்பாணி புலியில் ஏறி தண்ணீர் கொண்டு வந்ததை நிரூபிக்கும் பாடல் ஒன்றை போகரே எழுதியிருக்கிறார். அந்தப் பாடல் இதுதான்!

ஆழ்ந்தவே காலங்கி கடாட்சத்தாலே அப்பனே வேங்கை தனில்  ஏறிக்கொண்டு தாழ்ந்திடவே ஜலம் திரவ்விப்புனிதவானும் சாங்கமுடன் தாரணியில் சுற்றி வந்தோன் என்ற பாடல் புலிப்பாணியையே குறிப்பதாகச் சொல்கிறார்கள். முருகன் சிலை செய்ய மூலிகைகளைக் கொண்டு வரச்சொல்வதின் நோக்கத்தை புலிப்பாணி புரிந்து கொண்டார். எவ்வளவு அருமையான யோசனை! என் குருநாதருக்கு தான் இந்த மக்கள் மீது எவ்வளவு கரிசனம் இருக்கிறது! ஆனால், குருநாதர் குறிப்பிடும் ஒன்பது வகை மூலிகைகளும் விஷத்தன்மை கொண்டவை ஆயிற்றே! விஷ மூலிகைகள் எப்படி மனிதனைக் குணப்படுத்தும்! மாறாக, அவை ஆளையல்லவா கொன்று விடும், என்ற சந்தேகமும் இருந்தது.தன் சந்தேகத்தை மிகுந்த பணிவுடன் கேட்டார் புலிப்பாணி. மக்கள் மீது புலிப்பாணிக்கு இருக்கும் அபிமானத்தை மனதுக்குள் பாராட்டிய போக சித்தர், புலிப்பாணி! கவலை கொள்ளாதே. நீ கொண்டு வரும் ஒன்பது மூலிகைகளையும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்தால் பவ பாஷாணம் என்னும் மருந்து கிடைக்கும். இந்த மருந்தை நேரடியாகச் சாப்பிட்டால் மரணம் சம்பவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நவபாஷாணத்தை சிலையாக வடித்து, அதற்கு அபிஷேகம் செய்யும் பொருட்களைச் சாப்பிட்டால் அது விஷத்தன்மைக்கு பதிலாக மருத்துவத்தன்மை பெறும், மேலும், நவபாஷாணத்தின் வாசம் பட்டாலே போதும், மனிதன் புத்துணர்வு பெறுவான். இதோ! இந்த பழநி மலையின் உச்சியில் நவபாஷாண முருகன் சிலையை, கலியுகம் முடியும் வரையில்  மக்கள் வணங்கும் வகையில் பிரதிஷ்டை செய்வேன். அவன் அருளால் உலகம் செழிக்கும். எக்காலமும் வற்றாத மக்கள் வெள்ளம் இந்தக் கோயிலுக்கு வரும். பழநி முருகனின் ஆணையோடு தான் இந்தச் சிலையைச் செய்கிறேன். எனவே மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது, என்றார். புலிப்பாணி சித்தர் மகிழ்ச்சியடைந்தார். குருநாதர் சொன்னது போலவே புலியில் ஏறிச்சென்று ஒன்பது வகை மூலிகைகளையும் கொண்டு வந்து கொடுத்தார். பழநிக்குச் செல்பவர்கள், போகரை மட்டுமின்றி புலிப்பாணி சித்தரையும் நிச்சயமாக மனதில் நினைக்க வேண்டும். போகர், இவ்வூர் முருகன் சிலையைச் செய்யக் காரணமாக இருந்தவர் இவரே! போகர் நினைத்தபடி நவபாஷாண சிலை உருவாயிற்று.

ஒருநாள் புலிப்பாணியை அழைத்த போகர், புலிப்பாணி! நான் சீனதேசம் செல்கிறேன். இனி இங்கு எப்போது வருவேன் எனத்தெரியாது. நீயே இந்த முருகன் சிலைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும், என சொன்னார்.
--------------------------
15.சிவவாக்கியர்

பெண்ணே! இந்த மணலையும், கசப்புமிக்க இந்த சுரைக்காயை கசப்பு நீக்கி ருசியாகவும் சமைத்து தர உன்னால் முடியுமா? சிவவாக்கியர், அந்த குறவர் குலப்பெண்ணிடம் கேட்டார். அவள் பதிலேதும் பேசவில்லை. அவர் கொடுத்ததை பயபக்தியுடன் கைநீட்டி வாங்கினாள். அடுப்பு பற்ற வைத்தாள். மணலை அரிசி களைவது போல களைந்தாள். மண் பானையில் போட்டாள். குறிப்பிட்ட நேரத்திலேயே அது சாதமாகி விட்டது. அடுத்து சுரைக்காயை சமைத்தாள். கறி மிக ருசியாக இருந்தது. கசப்புத்தன்மை அறவே இல்லை. பெரியவர்கள் எதையாவது சொன்னால், ஏன் ஏதென்று கேட்காமல் செய்வது அக்காலத்தில் சிறியவர்களின் வழக்கமாக இருந்தது. அதிலும், இவரோ தவசிரேஷ்டர் போல இருக்கிறார். இளவயது வேறு. முகத்தில் தேஜஸ் ஜொலிக்கிறது. இந்த சிவவாக்கிய சித்தர் பிறந்த இடம் பற்றிய தகவல் இல்லை என்றாலும், இவர் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் அவதரித்தார் என்பது மட்டும் சில நூல்களில் இருந்து தெரிய வருகிறது. பிறக்கும் போதே குழந்தை சிவவாக்கியர் சிவசிவ என்று சொன்னாராம். சிவன் என்ற வாக்கியத்தைச் சொன்னதால் சிவவாக்கியர் என்று இவரது பெற்றோர் பெயர் வைத்து விட்டனர். சிவன் மீது மிகுந்த பற்றுக் கொண்ட இவர், சிவபெருமானை நமசிவாய என்று சொல்லி வழிபடுபவர்களின் உயிர் பிரிந்து விட்டால் கூட மீண்டும் உயிர் பிழைத்து விடுவார் என்ற அடிப்படையில் ஒரு பாடல் பாடியுள்ளார். சிவபித்தரான இவர், சித்தர்களைப் பற்றி அறிந்தார். யாராவது ஒரு சித்தரை தனது குருவாக அடைய வேண்டும் எனக்கருதி காசிக்கு சென்று விட்டார். அங்கே ஒரு சித்தரைப் பற்றிக் கேள்விப்பட்டார். அந்த சித்தர் காசிக்கு வரும் பக்தர்களின் காலணி பழுதாகி விட்டால், அதை சரி செய்து கொடுப்பார். சிலருக்கு, அவர்களது காலின் அளவைப் பார்த்தே காலணி செய்து கொடுத்து விடுவார். அந்தளவுக்கு தொழிலில் திறமைசாலி. காலணி செய்யும் தொழில் செய்தாலும், பிராணாயமம், தியானம், யோகா என அவருக்குத் தெரியாத வித்தைகள் இல்லை. அவர் தியானத்தில் ஆழ்ந்து போனால், அவராக எழுந்தால் தான் உண்டு.

யாராலும் அவ்வளவு எளிதில் அவரை எழுப்ப முடியாது. தியானத்தில் திறமைசாலி என காசி மக்களிடையே அவருக்கு பெயர் இருந்தாலும், அவர் செய்யும் தொழிலால் பெரும்பாலோர் அவருக்கு மரியாதை செய்வதில்லை. ஒரு சிலர் அவரைக் கடவுள் போல நினைத்து ஆசி பெற்றுச் செல்வார்கள். அவரைப் பற்றி கேள்விப்பட்டார் சிவவாக்கியர். அவரிடம் சென்று, குருவே! தங்கள் மாணவன் வந்திருக்கிறேன், தங்களுக்கு பணிவிடை செய்வதில் எனக்கு ஆனந்தம். தங்கள் மூலமாக இறைவனைக் காண விரும்புகிறேன், என்றார். சிவவாக்கியரை சித்தர் ஒரு பலகையில் அமரச்சொன்னார். அவ்வளவுதான்! பலகை பறக்கத் தொடங்கி விட்டது. ஏதோ ஒரு பரவசம் சிவவாக்கியரை ஆட்கொண்டது. உயர உயரப் பறந்தார். வானமண்டலத்தை அடைந்து விட்டது போல் ஒரு உணர்வு. அங்கே தான் தெய்வங்கள் இருக்கும் என்பார்களே! தெய்வங் களைப் பார்க்க வேண்டும் என்று சித்தரிடம் ஒரு வார்த்தை தானே சொன்னோம். அவர் தேவலோகத் திற்கே கூட்டி வந்து விட்டாரே! நட்சத்திர மண்டலங்களின் மத்தியில் மிதந்தார் சிவவாக்கியர். தெய்வங்கள் யாராவது கண்ணில் படுகிறார்களா என ஆராய்ந்தார். சற்று நேரமானது. கடவுளைக் காண்பதற்குள்ளாகவே பலகை வேகமாக கீழ் நோக்கி இறங்கியது. சிவவாக்கியரின் உடல் நடுங்கியது. கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சம் வேறு. அந்த உணர்வு திடீரென நின்றது. சிவவாக்கியர் கண் திறந்தார். இப்போது உடலில் பரவசநிலையும் இல்லை. பலகை மேலே பறக்கவுமில்லை. இருந்த இடத்தில் அப்படியே இருந்தார். நான் நிஜமாகவே வானமண்டலத்திற்கு பறந்தேனா சுவாமி? என்றார். இல்லையே! நீ வந்ததில் இருந்தே என் முன்னால் தான் இருக்கிறாய்? என்ற சித்தர், சிவவாக்கியா! நீ கடவுளைக் காண ஆசைப்படுகிறாய். அது எளிதான காரியமல்ல. அதே நேரம், இப்போது பலகையில் பறப்பது போல உணர்ந்தாயே! அந்த உணர்வு நிரந்தரமாக உடலில் தங்கினால் நீ கடவுளை  காணலாம்.

 அதே நேரம் உனக்கு அதற்குரிய பக்குவம் வரவில்லை. நான் ஒரு பரிட்சை வைக்கிறேன். இந்த தேர்வில் தேறினால், நீ கடவுளைப் பார்த்து விடலாம், என்றார்.என்ன தேர்வு? என ஆவலுடன் சிவவாக்கியர் கேட்க, கங்கைக்குச் செல்.செருப்பு தயாரித்து இங்கே நான் சேர்த்து வைத்துள்ள இந்தக் காசை வாங்கிச்செல். என் குருநாதரின் காணிக்கை இது, என அவளிடம் சொல். அவள் வாங்கிக்கொள்வாள், வரும் போது இந்த தோல்பையில் கங்காதீர்த்தம் கொண்டு வா, என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
--------------------------
14.ராமதேவர்

மெக்கா நகர மக்களே! நான் ஒரு சித்தன். உங்கள் அரபு நாட்டில் காயகல்ப மூலிகைகள் இருப்பதை அறிந்து, அவற்றைப் பற்றி ஆய்வு செய்து, மருந்துகள் தயாரித்து மனித குலத்தின் நோய் தீர்க்கவே இங்கு வந்தேன். என்னைத் தவறாகக் கருதாதீர்கள். எனக்கு மத வேறுபாடெல்லாம் கிடையாது. நான் எல்லா மதங்களையும் நேசிப்பவன், என்றார் ராமதேவர். யார் இவர்? ராமதேவர் நாகப்பட்டினத்தில் மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் அவதரித்தவர். இளம் வயதிலேயே அஷ்டமாசித்திகள் கைவர  பெற்றவர். சில சித்தர்கள் தங்கள் உடலை கிடத்திவிட்டு, ஆன்மாவை பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். ஆங்காங்கு கிடைக்கும் உடல்களில் புகுந்து கொண்டு சேவை செய்வார்கள். ராமதேவர் மிகவும் வித்தியாசமானவர். முயற்சி... முயற்சி... முயற்சி... இதுவே அவரது தாரக மந்திரம். இந்த மந்திரத்திற்கு மாபெரும் பலன் கிடைத்தது. ராமதேவர் தன் உடலுடனேயே பிற தேசங்களை விரைவில் அடையும் சித்தியை பெற்றார். ஒருமுறை இவர் கங்கைக்கு நீராடச் சென்ற போது, சட்டைநாதரின் விக்ரகம் அவருக்கு கிடைத்தது. அதை நாகப்பட்டினம் கொண்டு வந்து ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்தார். சில சித்தர்களின் தரிசனமும் இமயமலைக் காடுகளில் அவருக்கு கிடைத்தது.அவர்கள் ராமதேவரிடம், சித்தனே! நீ மெக்கா செல். அங்கே ஏராளமான காயகல்ப மூலிகைகள் இருக்கின்றன. அவற்றை ஆய்வு செய்து, மருந்து தயாரித்து மக்களின் பிணி தீர்க்கும் உன்னதமான பணியைச் செய், என்று வற்புறுத்தினர். அவர்களது கட்டளையை ஏற்ற ராமதேவர் தன் சித்தியால் மெக்கா சென்றடைந்தார். புதியவர் ஒருவர் தங்கள் நாட்டுக்கு வந்ததும், அரபு நாட்டு மக்கள் அவரை ஏற்க மறுத்தனர். அரபு நாட்டவரைத் தவிர மற்றவர்கள் அங்கு தங்க அனுமதி கிடைக்காது என்று கூறி அவரை திரும்பி விடும்படி எச்சரித்தனர். நான் எல்லா மதங்களையும் நேசிப்பவன், என்று அவர் அவர்களிடம் சொல்லவே, மிக நல்லது, அப்படியானால், நீங்கள் எங்கள் மதத்தில் இணைந்து விட வேண்டியது தானே! குர்ஆனையும் நீங்கள் ஓத வேண்டும். அவ்வாறு செய்தால், நீங்கள் இங்கிருக்க அனுமதி தருகிறோம், என்று மக்கள் கூறினர்.

அவ்வளவுதானே! அதை நான் செய்கிறேன், என்றார் ராமதேவர். அவருக்கு யாக்கோபு என்று பெயரிட்டு தங்கள் மதத்தில் சேர்த்துக் கொண்டனர் அரபு மக்கள். ராமதேவ சித்தர் இப்போது யாக்கோபு சித்தர் ஆகிவிட்டார். அரபுநாட்டில் கிடைத்த பலவகை மூலிகைகளை ஆய்வு செய்து அவற்றின் குணம், குணப்படுத்தும் நோய்கள் ஆகியவை குறித்து எழுத ஆரம்பித்தார். சிறிது காலத்திலேயே அரபு மொழியையும் கற்று, அந்நாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் வைத்திய சிந்தாமணி என்னும் நூலை அரபு மொழியில் எழுதினார். அரபு மக்கள் அவரை போற்றத் துவங்கினர். அவரிடம் பலர் மருத்துவ முறைகளையும் கற்றுக் கொண்டனர். இந்நிலையில், போகர் சித்தர் அவர் முன்பு தோன்றினார். ராமதேவா! நீ வைத்திய முறைகளை முழுமையாக அறிந்து கொண்டு விட்டாய். இனி நீ நாடு திரும்பு. சதுரகிரி மலைக்குச் சென்று இந்த மூலிகைகளை ஆய்வு செய்தது குறித்து எழுது. மேலும், இம்மூலிகைகளை ஆய்வு செய், என்றார். அதன்படி ராமதேவர் சதுரகிரி மலை வந்து சேர்ந்தார். தனது சீடர்களிடம், போகரின் அறிவுரைப்படி நான் பத்தாண்டுகள் ஒரு சமாதிக்குள் இருந்து பாலைவன மூலிகைகள் குறித்து ஆய்வு செய்யப் போகிறேன். நான் வரும் வரை நீங்கள் சமாதி வாசலில் காத்திருங்கள், என்றார்.பத்தாண்டு காலம் சமாதிக்குள் இருக்கும் ஒருவர் எப்படி திரும்புவார்? இது சாத்தியமல்ல என்று நினைத்த சீடர்கள், அவர் சமாதிக்குள் சென்றதும் அங்கிருந்து சென்று விட்டனர். ஒரே ஒரு சீடர் மட்டும் தனது குரு நிச்சயம் திரும்புவார் என நம்பி சமாதி வாசலில் காத்திருந்தார். சமாதிக்குள் சென்ற சித்தர், மூலிகைகளை ஆய்வு செய்தார். சமாதிக்குள் இருந்தே யாரும் அறியாத வண்ணம் பல்வேறு இடங்களுக்குச் சென்றார். ஒருமுறை  சமாதிக்குள் இருந்த காலங்கிநாத சித்தரைத் தரிசித்தார். அவர் தன்னுடைய அனுபவங்களையெல்லாம் ராமதேவருக்கு போதித்தார். ஆக, ராமதேவ சித்தர் மிகப்பெரிய ஞானியாகத் திகழ்ந்தார்.

எதையும் செய்யும் ஆற்றலைப் பெற்ற பிறகு, அவர் சொன்னபடியே சமாதிக்குள் இருந்து பத்தாண்டுகள் கழித்து வெளிப்பட்டார். தன்னுடைய சீடர்களே தன்னை நம்பாமல் சென்றது பற்றி அவர் சிறிதும் வருந்தவில்லை. ஒரே ஒரு சீடன் விசுவாசத்துடன் தங்கியிருந்தது பற்றி சந்தோஷம் கொண்ட அவர், சீடனே! மற்றவர்கள் என்னைத் தூற்றி விட்டு சென்றது பற்றி நான் கவலைப்படவில்லை.
--------------------------
13.சட்டைமுனி

ரங்கநாதா, திருவரங்கப்பெருமானே! காவிரி சூழ் நாயகனே! இந்த பாழும் மனிதர்களின் சந்தேகத்தை தீர்த்து வை. இந்த மனிதகுலம் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்பதற்காக, அவர்களுக்குப் புரியும் பாஷையிலே, பல குறிப்புகளை எழுதி வைத்தேனே! அப்படிப்பட்ட எனக்கு, இவர்கள் தந்திருக்கும் பரிசைப் பார்! என்னைத் திருடன் என்கிறார்கள். நானா திருடன். கயிலையிலே சிவபெருமானை காணச்செல்லும் சித்தர்களில் நானும் ஒருவன். அங்கே செல்லும் போது, குளிர் தாங்க முடியவில்லை என்பதற்காக கம்பளிச் சட்டை அணிந்தேன். அதையே நிரந்தரமாக எங்கு சென்றாலும் அணிந்து கொள்கிறேன். அதனால் தானே என்னை சட்டை முனி என்றே எல்லாரும் அழைக்கிறார்கள்! இந்த உடையைத் தவிர வேறெந்த ஆடம்பரமும் இல்லாத நானா உன் அணிகலன்களுக்கு ஆசைப்படுவேன்! நீயே இவர்களிடம் உண்மையை நிரூபி, என கதறினாரோ இல்லையோ, அர்த்தஜாம பூஜைக்குப் பின் சாத்தியிருந்த ரங்கநாதர் கோயில் கதவுகள் தானாகவே திறந்தன.சட்டை முனி மீது குற்றம் சாட்டியிருந்தவர்களெல்லாம் பதறிப் போனார்கள். மன்னன் தலை குனிந்தான். சரியாக விசாரிக்காமலும், இந்த சித்தரின் மேன்மை புரியாமலும் சந்தேகப் பட்டு விட்டோமே என மனம் வருந்தினான்.யார் இந்த சட்டை முனி?கடல்சூழ் இலங்கையிலே சிங்கள தாசிப்பெண் ஒருத்திக்குப் பிறந்தவர் சட்டை முனி. இந்தப் பெண்மணியும், அவரது கணவரும் பிழைப்புக்காக தமிழகம் வந்தனர். சட்டைமுனி இளமையிலேயே தியானம், தவம் என அலைந்தார். மகனைச் சீர்திருத்தி, இல்லறத்தில் அடியெடுத்து வைக்கச் செய்ய மிகவும் போராடினர் பெற்றோரான சிங்கள தம்பதியர். மிகவும் கட்டாயப்படுத்தி மகனுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டனர்.ஆனால், இறைவன் சித்தமோ வேறு மாதிரியாய் இருந்தது. சட்டைமுனிக்கு இல்லறத்தில் அறவே நாட்டமில்லை. துறவறம் பூண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். காடு, மலைகளில் திரிந்த அவர் போகர், திருமூலர், அகத்தியர் ஆகிய சித்தர்களைத் தரிசித்து அவர்களுடன் உரையாடி தானும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமெனவும், தனக்கு உபதேசிக்கும்படியும் வேண்டினார்.

ஒருமுறை உரோமசர் என்ற முனிவரை பொதிகை மலையில் தரிசித்தார். கயிலைக்குச் செல்லாமல் பொதிகைக்கு சிவபெருமானை வரவழைக்கும் அற்புதமான தவத்தில் ஈடுபட்டிருந்தவர் இந்த முனிவர். ஒருமுறை சிவன் இவருக்கு காட்சி கொடுத்து, முனிவரே! கயிலையில் கங்கைக்கு ஈடான பலன் கொடுக்கும் நதி ஒன்று அகத்தியரால் இங்கு பிறக்கும். தாமிரபரணி எனப்படும் அந்த நதி வற்றாத ஜீவநதியாக ஓடும். அந்நதியில் நீ ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடு. அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் சிவலிங்கம் அமைத்து வழிபடு. கயிலைக்கு அடுத்தபடியாக பொதிகையும் என் இருப்பிடங்களில் ஒன்றாக உன் விருப்பப்படியே அமையும், என்று அருள்பாலித்தார். (இந்த தலங்களே தற்போது நவகைலாயங்கள் என்ற பெயரில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளன).இப்படி சிவதரிசனம் பெற்ற உரோமசரைச் சந்தித்த சட்டை முனி, முனிவரே! இந்த மக்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களாக உள்ளனர். அடுத்தவர்களின் குறைகளைக் காணுகிறார்களே தவிர தங்கள் குறையைக் களைவது பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை. இந்த மக்களை நேர்வழிப்படுத்த விரும்புகிறேன். அதற்கு தாங்களே வழிசெய்ய வேண்டும், என்றார். அன்பனே! உன் உயர்ந்த நோக்கம் எனக்குப் புரிகிறது. சிவபெருமானே இதற்கு உனக்கு வழிகாட்ட இயலும். அவரது தரிசனம் வேண்டுமானால் நீ கயிலைக்குச் செல். அவரை வழிபடு. கயிலைக்கு நீ இங்கிருந்து நடந்து செல்ல முயற்சிக்காதே. கடுமையான தவமிரு. அஷ்டமாசித்திகளை உன்னுள் வரவழைக்க கடும் பயிற்சி மேற்கொள். அவற்றை நீ அடைந்து விட்டால், உன் உடம்பைப் பஞ்சாக்கி நீ எந்த இடத்திற்கும் செல்ல முடியும், என அருளுரை வணங்கினார்.சட்டைமுனி சதுரகிரி எனப்படும் மலைக்கு வந்தார். அங்கே பல சித்தர்களின் தரிசனம் அவருக்கு கிடைத்தது. அவர்களுக்கு சேவை செய்து, அவர்களின் நம்பிக்கையை  பெற்று அஷ்டமாசித்திகளை அடைந்தார். கடும் தவத்தின் பேரில் கயிலைக்குப் பறந்து சென்றார்.

கயிலைமலையான் இவரது முயற்சியைக் கண்டு, நண்பன் போல இவருடன் பேசினார்.சிவதரிசனம் பெற்ற சட்டைமுனி மீண்டும் தென்னகம் வந்தார். மக்களின் நோய் போக்க தமிழிலேயே மருத்துவக்குறிப்புகளை எழுதினார். அத்துடன் மக்கள் சுபிட்சமாக வாழவும், இறந்தவர்களை எழுப்பும் வழிமுறைகளையும் பகிரங்கமாக எழுதினார்.
--------------------------
12.திருமூலர்

சீடனே! அவள் அழுது புலம்புவதை என்னால் தாங்க முடியவில்லை. கணவனைத் தனது தெய்வமாகக் கருதி வழிபட்டவள் அந்த மகாராணி. அவன் மீது உயிரையே வைத்திருந்தாள். அநேகமாக துக்கம் தாளாமல் அவளும் இறந்து போவாள் என்று தான் கருதுகிறேன். அதற்குள் அவளை காப்பாற்றியாக வேண்டும். எனவே, நான் அந்த அரசனின் உடலில் புகப்போகிறேன். உயிர்களைக் காக்கவே, இறைவன் சில மாய வித்தைகளை உருவாக்கியிருக்கிறான். சித்தர்களும், முனிவர் களும் அதைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள். எனக்கும் ஒரு கலை சித்தித்திருக்கிறது. அதில் ஒன்றான பரகாயப் பிரவேசம் எனக்கு தெரியும். அதாவது என் உடலை ஓரிடத்தில் கிடத்திவிட்டு, உயிரை மட்டும் வேறு ஒரு உடலில் செலுத்தி விட்டால் அது உயிர் பெற்று விடும். கூடுவிட்டு கூடு பாயும் வித்தை என்றும் இதைச் சொல்வர், என்றதும், சீடன் ஆச்சரியம் தாளாமல் கேட்டான். இந்த உரையாடல் திருமூலருக்கும் அவரது சீடனான குருராஜனுக்கும் இடையே நிகழ்ந்தது. இந்த உரையாடலுக்கு காரணம் என்ன? இறந்தது யார்? அழுகின்ற அரசி யார்? அதை முதலில் தெரிந்து கொள்வோம். பாண்டியநாட்டில் ராஜேந்திரபுரி என்ற பகுதி இருந்தது. இதை தவேதன் என்பவன் ஆண்டு வந்தான். அவனது பட்டத்தரசி சுந்தரவல்லி. இவளுக்கு வீரசேனன் என்ற மகன் பிறந்தான். சந்திரவதனி என்பவளையும் அவளது பேரழகுக்காக அவன் திருமணம் செய்து கொண்டான். அவளுக்கு மூன்று புதல்வர்கள் பிறந்தார்கள். தவேதன் தனது இறுதிக்காலத்தில் பட்டத்து ராணியின் பிள்ளையான வீரசேனனுக்கு பட்டம் சூட்டி விட்டு ஓய்வெடுக்க ஆரம்பித்தான். வீரசேனனுக்கு குணவதி என்ற மனைவி வாய்த்தாள். இரண்டாம் தாரத்தின் பிள்ளைகளுக்கும் திருமணம் நடந்தது. குணவதி- வீரசேனன் தம்பதியர் அன்பில் சிறந்து விளங்கினர். அரசசபையிலும் கூட இருவரும் இணைந்தே அமர்ந்திருப்பர். கணநேரம் கூட பிரியாத மனைவியை, அவ்வப்போது நகர்வலம் செல்லும் போது மட்டுமே அரண்மனையில் விட்டுச் செல்வான் வீரசேனன்.ஒருநாள் இரவில் மாறுவேடம் தரித்து நகர்வலம் சென்றான்.

திரும்பி வந்ததும் அந்தப்புரத்துக்கு வேகமாகச் சென்றவன் மயங்கினான். வாயில் நுரை தள்ளியது. குணவதி பதறிப்போனாள். அரண்மனை வைத்தியர்கள் விரைந்தனர். அதற்குள் வீரசேனனின் உயிர் பிரிந்து விட்டது. குணவதியின் கதறல் ஒலி அரண்மனையில் மட்டுமல்ல, வானத்தில் பறந்து கொண்டிருந்த திருமூலர் சித்தரின் காதிலும் விழுந்தது. ஐயோ! எவ்வளவு அன்பாக இருந்தனர் இந்த தம்பதிகள்! சின்ன வயதிலேயே மன்னனின் விதி முடிந்து விட்டதே! இவள் இனி உயிர் வாழ மாட்டாள். இதுபோன்ற உயர்ந்த பெண்மணிகள் மடிந்து விடக்கூடாது. என்ன செய்யலாம்? என்ற யோசனையுடன் மிக வேகமாக தான் தங்கியிருந்த சதுரகிரி மலைக்குப் பறந்தார் திருமூலர் குருராஜனிடம் மேற்கண்டபடி பேசினார். குருராஜனும் சம்மதிக் கவே, சீடனே! நான் மன்னனின் உடலில் புகுந்து, அந்நாட்டு ராணியின் மனம் மகிழும் வகையிலும், நாட்டு மக்களை தெய்வீக வழியில் திருப்பும் வகையிலும் சேவையாற்றி திரும்ப சில ஆண்டுகள் ஆகும். அதுவரை என் உடலை இந்த மலைக் குகைக்குள் பத்திரமாகப் பாதுகாத்து வா! இது கெட்டுப் போகாது. ஏனெனில், நான் கல்பசாதனை செய்து என் உடலை வைரம் பாய்ந்த மரம் போல் மாற்றியிருக்கிறேன். மிருகங்களால் இதற்கு ஆபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள், என சொல்லிவிட்டு ராஜேந்திரபுரிக்கு கணநேரத்தில் சென்று விட்டார். எல்லோரும் அழுது கொண்டிருந்தனர். அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக மன்னனின் உடல் அசைந்தது. ஆ... மன்னரின் உடல் அசைகிறது. அவர் இறக்கவில்லை, மயக்கநிலையில் தான் இருந்திருக்கிறார், என்று எல்லோரும் கூவினர். குணவதியோ இந்திரலோகத்தில் வசிப்பது போன்ற உணர்வை அடைந்து, சோக நீரை ஆனந்த நீராக கண்களில் இருந்து வடித்தாள். மன்னனின் உடலில் திருமூலர் புகுந்து விட்டார்.

எழுந்து அமர்ந்ததும், மகாராணி அவரைத் தன் கணவனெனக் கருதி தழுவிக் கொள்ள முயற்சித்தாள். சற்று ஒதுங்கி அமர்ந்த கணவரிடம், அன்பரே! தங்களுக்கு என்னாயிற்று? தாங்கள் இறந்து போய் விட்டதாக கருதியல்லவா இப்படி அரற்றி அழுதோம்! நடந்ததைச் சொல்லுங்கள், என்றார். மன்னர் பேச ஆரம்பித்தார்.குணவதி! நான் நகர்உலா முடித்து, காற்று வாங்கலாம் என எண்ணி நமது நந்தவனத்திற்குள் புகுந்தேன். அப்போது, ஒரு ரோஜா செடியின் மீது பாம்பு ஒன்று ஓடியது. அதன் முள் பாம்பு மீது படவே, சீறி எழுந்த பாம்பு அதில் இருந்த ரோஜாமலரில் கொத்தியது. அதன் விஷம் அந்த மலரில் பாய்ந்திருக்க வேண்டும் எனக்கருதுகிறேன்.
--------------------------
11.இடைக்காடர்

நவக்கிரகங்களில் குருவைத் தவிர அனைவரும் பதறிப் போனார்கள். நாம் சரியான இடத்தில் தானே நேற்றிரவு படுத்திருந்தோம், இன்று இடம் மாறியிருக்கிறோம். எப்படி இது நிகழ்ந்தது? நமது மாறுபாட்டான நிலையால், கொடும் பஞ்சம் சம்பவிக்க வேண்டிய ஒரு மாமாங்க காலத்தின் நடுப்பகுதியிலேயே, மழை கொட்டிக் கொண்டிருக்கிறதே! இனி நாம் முந்தைய நிலையை அடைந்தாலும், மழை நிற்குமா? என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.குரு சிரித்தார்.கிரகங்களே! நீங்கள் பேசுவது நகைப்புக்குரியதாய் இருக்கிறது. நாம் ஒருமுறை இடம் மாறி விட்டால், குறிப்பிட்ட காலம் வரை அதே இடத்தில் தான் சஞ்சரிக்க முடியும் என்ற விதியைக் கூட மறந்து விட்டீர்களா? விதியை மதியால் வெல்லலாம் என்பது இதுதான்! இந்த விளையாட்டுக்கு காரணமானவர் யார் தெரியுமா? இடைக்காடர்... ஆம்... நேற்று வரை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அவர், இன்று மாபெரும் சித்தர். சிவனருள் பெற்றவர். அவரது மதி பலம் மட்டுமல்ல... நமக்கெல்லாம் படியளக்கும் சிவபெருமான் மீது அவர் கொண்டிருக்கும் பக்தியும் இதற் கொரு காரணம், என்றதும், ஆ... என வாயைப் பிளந்த கிரகங்கள், ஆடு மேய்த் தவர் சித்தரானது எப்படி? குருதேவா! எங்களுக்கு விளக்கியருள வேண்டும்? என்றனர். குரு இடைக்காடரின் வரலாறை விவரித்தார். இடைக்காடர், காஞ்சிபுரம் அருகிலுள்ள இடையன் மேட்டைச் சேர்ந்தவர் என்று ஒரு சாராரும், சிவகங்கை அருகிலுள்ள இடைக்காட்டூரைச் சேர்ந்தவர் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். எப்படியிருப்பினும், ஊரின் பெயரே இவருக்கு நிலைத்திருக்கிறது. இவரது தந்தை நந்தக்கோனார், தாய் யசோதா. இந்தப் பெயர் களைக் கொண்டு, இவரைப்பெருமாளின் ஒரு அம்சம் என்று கூறுபவர்களும் உண்டு.

கண்ணன் பசுக்களை மேய்த்தார், இவரே ஆடுகளை மேய்த்தார். கல்வியறிவு அறவே இல்லை. இந்த ஆடுகள் அங்குமிங்கும் பாய்கின்றனவே! தனக்கு வரும் ஆபத்தை உணராமல் குறுக்கும் நெடுக்குமாக ஓடி, முன்னால் செல்ல துடிக்கின்றனவே! இவற்றின் மந்தபுத்தியால், இவை தனக்கும், பிறருக்கும் சிரமத்தைத் தருகின்றனவே! ஓ...ஆண்டவனே! இந்த ஆடுகளின் ஸ்பாவத்தைப் போலவே தானே, உன்னைப் போன்ற மனிதர் களின் ஸ்பாவமும் இருக்கிறது என்பதைப் புரிய வைக்கிறாயோ! மனிதன் கடவுளுக்கு பயப்படவா செய்கிறான்? ஆடுகளைப் போல குறுக்கு வழியில் முன்னேறத்தானே நினைக்கிறான்! இந்த ஆடுகளை நான் நல்வழிப்படுத்தி, அவரவர் வீட்டில் ஒப்படைப்பது போல, மனித ஜீவன்களையும் ஒழுங்குபடுத்தி, உன்னிடம் ஒப்படைக்கத்தான் எனக்கு இந்தப் பிறவியைத் தந்துள்ளாயோ! படிப்பில்லாவிட்டாலும் கூட, இடைக்காடரின் மனதில் ஆழ்ந்த ஞானத்தைத் தரும் இந்தக் கேள்வி எழும்பியதும், இதற்கு விடை தேடி அலைந்தார். ஆடுகளை ஓரிடத்தில் மேயவிட்டு, கோலை ஊன்றி, ஒற்றைக்காலை உயர்த்தி, தவ நிலையில் இருப்பார். சிவபெருமானே! என் கேள்விக்கு விடை வேண்டும், இந்த சமூகத்தை நான் ஒழுங்குபடுத்த வேண்டும். கல்வி எனக்கில்லை, யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள அது அவசியமும் இல்லை. எனக்கு, மனித வாழ்வின் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ளும் சக்தியைக் கொடு, இந்த சமுதாயத்தை ஒழுங்குபடுத்தும் உபாயத்தைச் சொல்,.... இப்படி அன்றையப் பொழுது முழுவதும் பல மாதங்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். ஒருநாள், அவர் முன்னால் அதிபயங்கர மின்னல் போன்ற பிரகாசமான ஒளி வீசியது. அது இடைக்காடரின் உடலில் பாய்ந்தது. இடைக் காடருக்கு ஏதோ தனக்குள் மாற்றம் ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அப்போது அசரீரி ஒலித்தது. சேவை... சேவை... சேவை... இதுவே மனிதன் என்னை அடைவதற்கான வழி...பிறருக்கு சேவை செய். அதற்குரிய உபாயத்தைக் காண். மகனே! இதோ, ஞானநூல்கள் அனைத்தையும் கற்ற பெருமைக்குரியவர்களின் வரிசையில் உன்னையும் சேர்க்கிறேன்.

நீ இன்று முதல் பெரிய மகான். சாதாரண இடைக்காடன் அல்ல... இடைக்காட்டு சித்தன்... இடைக்காட்டு சித்தன்... ஒலி நின்றுவிட்டது. சிவனருளால் இடைக்காடர் இப்படி சகல ஞானமும் பெற்றதும், அவரால் நினைத்ததை எல்லாம் செய்ய முடிந்தது. ஒருமுறை அவர் தியானத்தில் இருந்த போது, கொடிய பஞ்சம் வரப்போவதை அறிந்தார். அந்த பஞ்சம் 12 ஆண்டுகள் நீடிக்கும் என்பதைக் கணித்தார்.ஆஹா...நதிகள் வற்றப்போகின்றன. ஊற்று தோண்டினால் கூட தண்ணீர் கிடைக்காது. தண்ணீர் இல்லாவிட்டால் உலகமேது. இந்தப் பஞ்சத்தால் பல உயிர்கள் அழிவது உறுதியாகி விட்டது. நானும் அதில் ஒருவனாகத்தானே இருப்பேன்! ஒருவேளை நான் உயிர் பிழைத்தேன் என்றால், ஏதாவது செய்து இந்த மக்களுக்கு நல்வழி பிறக்கச் செய்யலாம்.
--------------------------
10.தேரையர்

தலையைப் பிளந்து  அறுவைச்சிகிச்சை செய்வது என்பது இன்று அறிவியல் வளர்ந்த நிலையில் கூட கடுமையான சோதனைக்களத்தில் நிற்கும் உணர்வைத் தருகிறது. ஆனால், நம் தேசத்தில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மூலிகை வகைகளைக் கொண்டே இந்த சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சையை செய்தவர் அகத்தியர் என்றாலும், அது வெற்றி பெற காரணமானவர் தேரையர். வைத்தியரே குழம்பிப்போய் நின்ற வேளையில், துணிச்சலும் சமயோசிதமும் கலந்து இந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற காரணமானார். தேரையர் சித்தர் மலையாள தேசத்தில், திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்தவராக இருந்திருக்க வேண்டும். அவரது வரலாற்றின் போக்கைக் கொண்டு இவ்வாறு கணிக்க வேண்டியுள்ளது. அவர் சமாதியானது மலையாள தேசத்திலுள்ள தோரண மலை என கணிக்கப்பட்டுள்ளது. தோரணமலை, குற்றாலம் அருகில் உள்ளது. முற்காலத்தில், குற்றாலத்தைச் சார்ந்த பகுதிகள் மலையாள தேசத்தில் தான் இருந்தன. மேலும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தார். அகத்தியரும், பொதிகை மலையில் தங்கியிருந்தார். இதையெல்லாம் கணக்கில் கொண்டால், இது உண்மையாக இருக்கலாம் என்றே நம்பலாம். தமிழ் மூதாட்டி அவ்வையார், தேரையரின் திறமையைப் பற்றித் தெரிந்து, அவரை அகத்தியரிடம் அறிமுகப்படுத்தியதாகவும், அவரை அகத்தியர் சீடராக ஏற்றுக்கொண்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அப்போது தேரையருக்கு என்ன பெயர் இருந்ததோ? ஆனால், அவர் தேரையர் என்ற பெயர் பெற ஒரு நிகழ்ச்சியே காரணமானது. எப்படியிருப்பினும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தது நிஜமே.ஒருமுறை தேரையர் அகத்தியரிடம், குருவே! மனிதன் ஏன் பிறக்கிறான்? அவன் இந்த உலகத்தை தன்னுடையதாகக் கருதி, இங்கேயே தங்க விரும்புகிறானே? மரணம் கண்டு அவன் அஞ்சுவது எதனால்? முக்திநிலை அடைவது தானே வாழ்வின் நோக்கம். பிறப்பற்ற நிலை பெற, நீங்கள் தான் உபதேசிக்க வேண்டும், என்றார்.

அகத்தியர் சிரித்தார். தேரையர் சற்றும் எதிர்பாராத ஒரு பதிலை அளித்தார். சீடனே! உடம்பை பாதுகாத்துக் கொள். உடம்பை பாதுகாத்தால் உனது ஆயுள் பெருகும். ஆயுள் பெருகப் பெருக உனக்கு முக்தி கிடைத்து விடும், என்றார்.சுவாமி! தங்கள் பதில் விந்தையாக இருக்கிறதே! இந்த உடம்பை விடுத்து, விரைவில் வந்த இடம் போய் சேர்வது தான் முக்தி தத்துவம். தாங்களோ, ஆயுள் அதிகரித்தால் முக்தி கிடைக்கும் என்கிறீர்களே! இதெப்படி சாத்தியம்? என்றார். சீடனே! ஒரு கேள்விக்கு பதில் சொல், என்றார் அகத்தியர்.தேரையர் ஆவலுடன் அவர் முகத்தை நோக்கினார். நீ பல திருமணங்களைப் பார்த்திருப்பாய். மணமக்களை விருந்தினர்கள் என்ன சொல்லி வாழ்த்துகின்றனர்? என்றார். நீடூழி வாழ்க, என்று சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள்? உன் கூற்றின்படி பார்த்தால், விரைவில் முக்தி அடைக என்றல்லவா வாழ்த்த வேண்டும்! மகனே! ஆயுள் வளர்வது வீணே பொழுது போக்குவதற்காக அல்ல. ஆண்டவனால் நிர்ணயிக்கப்படும் வாழ்நாளை ஆண், பெண் இருபாலரும், பிறர் நன்மை பெறுவதற்காகப் பயன்படுத்த வேண்டும். நம்மைப் போன்ற துறவிகளும் இதையே செய்ய வேண்டும். மேலும், ஞானத்தைப் பெற கடும் ஆன்மிகப்பயிற்சிகள் தேவை. இந்த பயிற்சியைப் பெற உடல் வலுவாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நோயற்ற உடல் வேண்டும். எனவே, நீ எல்லோருக்கும் நோயற்ற உடல் அமையும் வகையில், சேவை செய். நீ ஞானம் பெற்று, முக்தி பெறுவாய், என்றார். குருவின் இந்த அற்புதமான விளக்கத்தைக் கேட்ட தேரையர், அவரிடம் மிகுந்த நேசம் கொண்டார். அந்நேரத்தில் அகத்தியர், காடுகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு பலவித ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தார். தேரையர் அவர் கேட்கும் மூலிகை வகைகளைத் தேடிப்பிடித்து கொண்டு வந்து மருந்து தயாரிக்க உதவினார். இந்த சமயத்தில், காசிவர்மன் என்ற அரசனுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. நாளாக நாளாக வலி அதிகரித்தது. அவன், அகத்தியரைத் தேடி அவரது குடிலுக்கு வந்தான்.பெருமானே! என்னை தாங்க முடியாத தலைவலி ஆட்டிப்படைக்கிறது.

ராஜாங்க விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. தாங்கள் நினைத்தால், இதை நொடியில் குணப்படுத்தி விடுவீர்கள் என்பதை நான் அறிவேன். என்னைக் காப்பாற்ற வேண்டும், என வேண்டி அவரது பாதத்தில் விழுந்தான்.அரசன் மீது அகத்தியர் மிகுந்த கருணை கொண்டார். அவனை பரிசோதித்தார். தலைவலிக்கான காரணம் தெரிந்து விட்டது. அவனிடம் சொல்ல யோசித்தார். மன்னா! நீ அரண்மனைக்குச் செல். நாளை இந்த வியாதியை தீர்த்து விட ஏற்பாடு செய்கிறேன், என்றார்.
--------------------------
09.பாம்பாட்டி சித்தர்

மருதமலை காட்டிலுள்ள எல்லா பாம்புகளும் ஒன்று கூடின. பாம்புகளின் தலைவன் கவலையுடன் பேசியது. பாம்புகளே! நம்மைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழியையே பொய்யாக்கி விட்டான் அந்த இளைஞன். நம் தோழர்கள் எத்தனை பேர் இறந்திருப்பார்கள். அவனைக் கடிக்க மறைந்திருந்து தாக்கினாலும், எப்படியோ நாம் இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்து, நம்மைத் தூக்கி வீசி எறிந்து விடுகிறான். புற்றுகளையெல்லாம் இடித்து தள்ளுகிறான். அதனுள் இருக்கும் குஞ்சுகளை நசுக்கி விடுகிறான். நம்மிலுள்ள விஷப்பைகளை எடுத்து மருந்து தயாரிப்பதாகச் சொல்கிறான். இப்போது, நம் பாம்பினத்திற்கே பெருமை தரும் வகையில் ஒளிவீசும் நவரத்தினங்களை உள்ளடக்கிய ரத்தினப் பாம்பைப் பிடிக்க வருகிறான். அது மட்டும் அவனிடம் சிக்கி விட்டால், அவன் இந்த உலகத்திலேயே பெரிய செல்வந்தனாகி விடுவான். மன்னாதி மன்னரெல்லாம் கூட அவனிடம் சரணடைந்து விடுவார்கள், என்றது. எல்லாப்பாம்புகளும் வருத்தப் பட்டதே ஒழிய, அந்த இளைஞனுக்கு எதிராக கருத்துச் சொல்லக்கூடத் தயங்கின. இவை இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே, காலடி ஓசை கேட்டது. தங்கள் உணர்வலைகளால், வருபவன் அந்த இளைஞனே என்பதை உணர்ந்து கொண்ட பாம்புகள் திசைக்கு ஒன்றாக ஓடின. பாம்புகளின் தலைவனும் உயிருக்கு அஞ்சி எங்கோ சென்று மறைந்து கொண்டது. இப்படி பாம்புகளையே கலங்கடித்த அந்த இளைஞனுக்கென பெயர் ஏதும் இல்லை. பாம்புகளைப் பிடித்து மகுடி ஊதி ஆடச்செய்பவன் என்பதால், பாம்பாட்டி என்றே அவனை மருதமலை பகுதி மக்கள் அழைத்தனர். அந்த இளைஞனே பாம்பாட்டி சித்தர் என்ற பெயரில் பிற்காலத்தில் மக்களால் வணங்கப்பட்டார்.

அவர் திருக்கோகர்ணம் என்னும் புண்ணிய தலத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. இந்தத்தலம் கர்நாடக மாநிலத்தின் உட்பகுதியில் இருப்பதாகவும், ஒரு சாரார், அவர் அங்கே பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தமிழகத்தில் புதுக்கோட்டை நகர எல்லையிலுள்ள திருக்கோகர்ணத்தில் பிறந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இவர் பிறந்த ஊர் பற்றிய ஆதாரம் சரியாக இல்லை.இவர் இளைஞராக இருந்த காலத்தில் தான் பாம்புகளைப் பிடித்து அவற்றின் நாக ரத்தினங்களை எடுப்பதையும், விஷத்தைக் கொண்டு மருந்து தயாரிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்போது, நவரத்தின பாம்பு பற்றிக் கேள்விப் பட்டு, அதைப் பிடித்து அதனுள் இருக்கும் ரத்தினங்களை எடுத்து விற்றால், உலகத்தின் முதல் பணக் காரராகி விடலாம் என்ற எண்ணம் கொண்டார்.அவர் தான் இப்போது காட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறார்.பாம்புகள் மறைந்து ஓடின. அப்போது ஓரிடத்தில் ஒளிவெள்ளம் பாய்ந்தது. ஆஹா....நவரத்தின பாம்பு தான் அவ்விடத்தில் மறைந்திருக்கிறது. அது தன் உடலை முழுமையாக மறைக்க முடியாததால், அதன் உடல் ஒளிவீசுகிறது என பாம்பாட்டி சித்தர் நினைத்துக் கொண்டார். ஆனால், ஒளி வெள்ளம் சற்று மங்கி, அவர் முன்னால் ஒரு மனிதர் நின்றார். அவரிடம், மகானே! தாங்கள் யார்? தங்கள் உடல் பொன் போல் பிரகாசிக்கிறதே. ஒருவேளை நான் தேடி வந்த பாம்பாக இருந்த நீங்கள், என்னிடம் சிக்காமல் இருக்க மனித உருவம் கொண்டீர்களோ! என்றவர், அவரது தேஜஸைப் பார்த்து, தன்னையும் அறியாமல் அவரது பாதங்களில் விழுந்து வணங்கினார். அந்த மகான் பாம்பாட்டி சித்தரை ஆசிர்வதித்தார். இளைஞனே! நீ இந்த சாதாரண பாம்புகளைப் பிடிப்பதற்காகவா இந்த உலகத்தில் பிறந்தாய். உன் பிறப்பின் ரகசியமே வேறு. நீ தேடி வந்த செல்வத்தின் அளவு பெரியது தான்.

செல்வமே உலகத்தை ஆட்டிவைக்கும் கருவி என நீ நினைக்கிறாய். எல்லா மக்களுமே இப்படி நினைப்பதால், நீயும் நினைப்பது இயற்கையே. எனவே, சாதாரண செல்வத்தை தேடி இங்கு வந்திருக்கிறாய், என்றவரை இடைமறித்த பாம்பாட்டி சித்தர், சுவாமி! தாங்கள் யார்? தங்கள் உடலே பொன்போல் மின்னுகிறதே, என்றார்.மகனே! உடலைக்கூட பொன்னாகக் கருதி பார்க்கும் அளவுக்கு, உன் மூளையில் செல்வம் தேடுவதின் தாக்கம் தெரிகிறது. சரி...இந்த உடல் என்றாவது அழியத்தானே போகிறது. அப்போது அது தீயில் கருகியோ, மண்ணில் நைந்தோ உருத்தெரியாமல் போய்விடுமே. அப்போது பொன்னை எங்கே தேடுவாய், என்றார்.அவரது அந்த வார்த்தைகள் இளைஞனின் மனதைத் தொட்டன.சுவாமி! இந்த அரிய உபதேசத்தை செய்த தாங்கள் யார் என்பதை நான் அறிந்து கொள்ளும் தகுதியுடையவனா? என பாம்பாட்டியார் பணிவுடன் கேட்டதும், அவனது மனம் செல்வத்தில் இருந்து விடுபட்டுவிட்டது என்பதை வந்தவர் உணர்ந்து கொண்டார்.மகனே! நான் தான் சட்டைமுனி சித்தர்.
--------------------------
08.கருவூரார்

என்ன கருவூராரைக் காணவில்லையா? சிறையில் அடைக்கப்பட்டவர் எப்படி வெளியே போவார் ? நீங்களெல்லாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? மன்னன் இரணியவர்மன் கர்ஜித்தான். காவலர்கள் தங்கள் தலைக்கு கத்த வந்து விட்டது என்பதை புரிந்து கொண்டு நடுநடுங்கினர். போகர் சித்தரே ! அறியாமல் நடந்த பிழையை மன்னிக்க வேண்டும். தங்கள் மாணவன் தான் கருவூரார் என்பதை அறியாமல் அவரைச் சிறையில் அடைத்து விட்டேன். நான் என்ன செய்வேன் !. எப்படி உங்களை சமாதானம் செய்யப்போகிறேன்! நான் செய்த தவறுக்கு வேண்டுமானால், என் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள், மன்னன் புலம்பினான்.அவன் புலம்புமளவுக்கும், போகர் சித்தர் கருவூராரைத் தேடி வருமளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது ?கருவூரார் சோழநாட்டிலுள்ள போகர் சித்தர் கருவூராரைத் தேடி வருமளவுக்கும் அப்படி என்ன நடந்து விட்டது ? கருவூரார் சோழநாட்டிலுள்ள கருவூரில் (இன்றைய கரூர்) ஒரு அந்தணத்தம்பதியரின் மகனாக அவதரித்தவர். இளமையிலேயே ஞானம் தேடி அலைந்தார். அவருக்கு பழநியில் நவபாஷண முருகன் நிலை செய்த போகரின் தரிசனம் ஒருமுறை கிடைத்தது. அவரிடம், இந்த உலக வாழ்வின் உண்மை நிலையை அறிந்து கொள்ள விரும்புவதாகச் சொன்னார். கருவூரா! மக்கள் சேவையே மகேசன் சேவை. ஒவ்வொரு மனிதனும் இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் சோவை செய்வதற்காக  படைக்கப்பட்டவளே ! சேவையில் நீ கடவுளைக் காணலாம். பராசக்தியை நீ வழிபடு. வாழ்க்கை பற்றிய அரிய ஞானத்தைப் பெறுவாய், என ஆசிர்வதித்தார். பல காலமாக தொண்டு செய்து வந்தார் கருவூரார். இந்நிலையில், வடநாட்டை ஆண்ட இரணியவர்மன் , ஒருமுறை தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்கு வந்தான். சிவகங்கை தீர்த்ததில் நீராடிக் கொண்டிருந்தான். ஒருமுறை அவன் தண்ணீருக்குள் கண்டான். பெரும் பரவசம் அவனைத் தொற்றிக் கொண்டது. தண்ணீரில் இருந்து எழுந்து மீண்டும் மூழ்கி கண்களைத் திறந்து பார்த்தான். அங்கே யாரையும் காணவில்லை. ஆனால், சிவனின் நாட்டியக்காட்சி அவன் நெஞ்சை  விட்டு அகல மறுத்தது.

எப்படியாவது இந்த நடன சிவனை சிலையாக வடிக்க வேண்டும். அதுவும் தங்கத்தில் வடித்தால், அது பூமி உள்ளளவும் நம் பெயர் சொல்லும் என்று எண்ணினான். சிற்பிகள் அனைவரையும் வரவழைத்தான். தங்கத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து, நான் கண்ட காட்சியைக்ஞா கூறி, நடன சிவன் சிலை வடிக்க வேண்டுமென்றும், அதற்கு 48 நாட்கள் அவகாசம் தருவதாகவும், அதற்குள் சிலை வடிக்காவிட்டால் அவர்களுக்கு கடும் தண்டனை அளிப்பதாகவும் உத்தரவு போட்டுவிட்டான். சிற்பிகளும் வேலையை தொடங்கினர். தங்கத்தை வளைப்பதனால் செம்பு சிறிதளவு சேர்க்க வேண்டும். மன்னனோ, எக்காரணம் கொண்டும் செம்பு சேர்க்கக் கூடாது என்றும், என்ன வித்தை செய்தேனும், தங்கத்தை வளைத்தே சிலை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தான். சிற்பிகளும் ஏதோ ஒரு தைரியத்தில் வேலையைத் தொடங்கி விட்டனர். 47 நாட்கள் கடந்து விட்டன. யாருக்குமே சிலை சரியாக வரவில்லை. நாளை மன்னன் வருவான் ! அவன் சிலையை எங்கே என்று கேட்டால் என்ன செய்வது ! சிறையில் அடைத்து விடுவானே சிற்பிகள் பயந்தனர். இந்த சம்பவம் போகரின் சித்தத்திற்கு எட்டியது. அவர் திருவூராரை அழைத்து, சிதம்பரத்தில் நடந்து கொண்டிருக்கும் விஷயத்தை விளக்கினார். கருவூரா ! நீ உடனே சிதம்பரம் செல். அந்த சிலைøப் பணியை முடித்துக் கொடு, என்றார். கருவூரார் கண்ணிமைக்கும் நேரத்தில், சிற்பிகள் முன்பு ஒரு துறவியின் வேடத்தில் போய் நின்றார். சிற்பிகளே ! உங்கள் மனக் கலக்கத்தை நான் அறிவேன். நீங்கள் எதற்கும் கலங்க வேண்டாம். இன்னும் இரண்டே நாழிகையில்  (சுமார் முக்கால் மணி நேரம்) சிலையை நான் தயார் செய்து விடுகிறேன். துறவியே ! நீர் யாரோ எவரோ ? சிவனின் அடியார் போல் தோன்றுகிறீர். நாங்கள் தமிழகத்தின் பெரும் சிற்பிகள். எங்களாலேயே 48 நாட்களில் செய்து  முடிக்க முடியாததை உம்மால் எப்படி இரண்டு நாழிகையில் சாதிக்க முடியும் ? நீர் எங்களைக் கேலி செய்கிறீரா ? இல்லை... உமக்கு மாயமந்திரங்கள் தெரியுமா ? மனம் நொந்து போயுள்ள எங்களை புண்படுத்துவது அடியாரான உமக்கு அழகாகுமோ ? என கோபமாகக் கேட்டனர்.

அவர்கள் அப்படி சொன்னதற்காக பண்பட்ட மனம் கொண்ட கருவூரார் கோபிக்கவில்லை. அவர்களின் நிலையில் யார் இருந்தாலும் அப்படித்தான் பேசுவர் என்பது அந்த சித்தாந்திக்கு தெரியாதா என்ன ! அவர் தன் வாதத்தில் உறுதியாக இருந்தார்.என்னதான் நடக்கிறதென பார்ப்போமே என சிற்பிகளும் தலையாட்டினர். கருவூரார் அறைக்கும் சென்றார்.
--------------------------
07.கோரக்கர்

பெண்ணே ! இன்னும் என்ன கலக்கம். உனக்குத்தான் ஒரு மகன் பிறந்திருப்பானே ! அவன் உன்னைக் கவனிப்பதில்லையோ என்ன ! எதற்காக அழுது கொண்டிருக்கிறாய் ? என்ணார் மச்சேந்திர சித்தர். மச்சேந்திரன் பிறப்பு அலாதியானது. சிவபெருமான் ஒருமுறை பார்வதிதேவிக்கு ஒரு கடற்கரையில் அமர்ந்து மந்திர உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு மீன், ஒரு மந்திரத்தை அப்படியே கிரகித்துக் கொண்டது. அந்த மந்திரம் மனித வடிவாக மீனின் வயிற்றில் உருவாகி வெளிப்பட்டது. மீனுக்கு மச்சம் என்ற பெயரும் உண்டு. அந்தக் குழந்தைக்கு மச்சேந்திரன் எனப் பெயரிட்ட சிவன், நீ சித்தனாகி மக்களுக்கு நலப்பணி செய்வாயாக என அருளினார். சிவனருளால் பிறந்த மச்சேந்திரர், பல இடங்களுக்கும் சென்ற போது, ஒரு பெண் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தார். அவளது வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார். சுவாமி ! நான் குழந்தையின்றி இருக்கிறேன். ஊராரும் என் குடும்பத்தாரும் என்னை மலடி என திட்டுகின்றனர். என் நிலைமைக்கு தீர்வு எப்படி வரப்போகிறதோ என கலங்குகிறேன், என்றாள் கண்ணீர் சிந்தியபடியே. அம்மா ! அழாதே. இதோ! திருநீறு, இதை சாப்பிடு. நீ கர்ப்பம் தரிப்பாய், என்று சொல்லி திருநீறை கொடுத்து விட்டு சென்று விட்டார். திருநீறுடன் தெருவில் சென்று கொண்டிருந்தவனை அவளது தோழி ஒருத்தி பார்த்தாள். சாமியார் திருநீறு தந்த விபரத்தை அந்தப்பெண் தோழியிடம் சொன்னாள். தோழி அவளிடம், அடிபைத்தியக்காரி ! யாராவது திருநீறு கொடுத்தால் அதை வாங்கி விடுவதா ! இதை சாப்பிட்டால் நீ மயங்கி விடுவாய். அந்த சாமியார் உன்னை தன் தவறான இச்சைக்கு ஆட்படுத்தி விடுவார். இதை வீசி எறிந்து விடு, என்றாள். தோழி சொன்னதிலும் உண்மையிருக்குமோ என்று பயந்து போன அந்தப் பெண், திருநீறை வீட்டுக்கு கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் எரியும் அடுப்பில் போட்டு விட்டாள்.

சில ஆண்டுகள் கடந்தன. அந்தப் பெண், இப்போதும் அழுது கொண்டிருக்க, மச்சேந்திரர் வந்தார். அப்போது தான், மேற்கண்ட கேள்வியைக் கேட்டார். சுவாமி ! என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் கொடுத்த திருநீறை என் தோழி சொன்னதால் பயத்தில் அடுப்பில் போட்டு எரித்து விட்டேன். எனக்கு இன்னும் குழந்தையே பிறக்கவில்லை. என்னை மன்னிக்க வேண்டும் என்றாள். அவளது நிலைமையில் யார் இருந்தாலும் அப்படித் தான் செய்திருப்பார்கள் என்பதை உணர்ந்து கொண்ட மச்சேந்திரர் அவளிடம் கோபிக்கவில்லை. சரியம்மா ! உன் வீட்டு அடுப்புச் சாம்பலை எங்கே கொட்டுவீர்கள் ? ஒரு வேளை கொட்டியதை அப்புறப்படுத்தி விட்டீர்களா ? என்றார். இல்லை சுவாமிஜி அடுப்புச்சாம்பலை இதோ அந்த எருக்குழியில் (கழிவுகளை உரமாக்கும் தொட்டி போன்ற அமைப்பு)  போட்டு வைத்திருக்கிறோம், பல ஆண்டுகளுக்கு  ஒருமுறை தான் அதை அப்புறப்படுத்துவார்கள். நான் திருநீறை எரித்து சாம்பலும் இத்துடன் கலந்து தான் கிடக்கிறது, என்றாள். மச்சேந்திரர் மகிழ்ந்தார். உனக்கு யோகமிருக்கிறது, என்றவர், எருக்குழியில் அருகே போய், கோரக்கா ! என குரல் கொடுத்தார். என்ன சித்தரே ! என உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. எழுந்து வெளியே வா, என்றார் சித்தர். அப்போது, சாம்பலைக் கொடுத்த நாளில் இருந்து, இதுவரை கடந்த பத்தாண்டுகளைக் கடந்த நிலையில், பத்து வயது சிறுவன் ஒருவன், தெய்வ லட்சணங்களுடன் எழுந்து வந்தான். அவனை தாயிடம் ஒப்படைத்தார் மச்சேந்திரர். சுவாமி ! தாங்கள் தந்த திருநீற்றின் மகிமை அறியாமல், வீசி எறிந்தேன். இவனை என் வயிற்றில் சுமக்கும் பாக்கியத்தை இழந்தேன். என அழுதவள், மகனை அரவணைத்துக் கொண்டாள். ஆனால், அந்த சிறுவனோ அன்னையின் பிடியில் இருந்து தன்னை உதறிக்கொண்டு வெளிப்பட்டான். தாயே! என்னை சிறு வயதிலேயே வீசி எறிந்துவிட்டாய். நான் இந்த நாற்றம்பிடித்த குழியில் இவ்வளவு நாளும் கிடந்தேன். என்னை ஒதுக்கிய உன்னோடு இணைந்து வாழ நான் விரும்பவில்லை. மேலும், நான் தவ வாழ்வில் ஈடுபடப்போகிறேன். இருப்பினும், நான் இந்த பூமிக்கு வர காரணமாக இருந்ததற்கும், என் தாய் என்ற முறையிலும் உன்னை வணங்குகிறேன். நான் இந்த சித்தருடன் செல்கிறேன். என்னை வழியனுப்பு, என்றான்.

கைக்கு கிடைத்தும் வாய்க்கு கிடைக்காமல் போனாலும், மகனின் உறுதியான பேச்சால் ஆடிப்போன அந்தத்தாய், வேறு வழியின்றி கோரக்கருக்கு விடை கொடுத்தாள். அதன்பின் கோரக்கர் நாலா திசைகளிலும் அலைந்தார். அவருக்குள் மனிதனையும் பிற உயிர்களையும் படைக்கும் பிரம்மனின் தொழிலை தானே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
--------------------------
உதவிய அனைத்து உள்ளங்களுக்கு என் சிறம் தாழ்ந்து
வணங்குகின்றேன்... இரு தினங்களுக்கு முன் அடியேன் காவாந்தண்டலம் பழனி சிவா என்பரை பற்றிய செய்தி ஒன்று போட்டிருந்தேன். திரு பழனி சிவா என்ற திரு நாமம் கொண்ட அடியார் அவரின் பெரும் முயற்சியாலும் ஊர் காரர்களின் பங்களிப்பினாலும் இதில் பெரும் பங்காற்றிய அவர்களின் பெரும் முயற்ச்சியாளும் கோவில் இனிதே கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் வெகு சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. தற்போது அந்த அடியாருக்கு ஸ்வாமிக்கு நாகாபரணம் செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறியிருந்தார். அடியேனும் அதற்க்கு உதவுவதாக கூறினேன். அடியேனுக்கு ஒரு ஆசையிருந்தது ஏன் நம் முகநூல் வழியாக உதவிவை கேட்கலாமே என்று தோன்றியது. அடியேனின் என்னம் என்ன வெண்றால்  இந்த புண்ணிய கைங்கர்யத்தில் அனைவரும் ஈடுபடவேண்டும் என்ற என்னத்தில் முகநூல் வாயிலாக உதவி கேட்டுருந்தேன் என்பது அனைவருக்கும் தெரியும்.

இதில் முதலில் உதவியவர் திரு Suriyanarayanan Gopalan (1000Rs) இரண்டாவதாக உதவிய திரு Rajagopalan Natarajan (1000Rs)மூன்றாவதாக குவயித்திலிருந்து  உதவிய திரு Shrira Krishna Moorthy (2000)அமெரிக்காவில் வாழும் திரு Priya Venkataraman அவற்கள் நாங்கள் சற்றும் எதிர் பார்காதவிதத்தில் அவரின் தந்தை மூலம் எங்களை அழைத்து சுமார் (25,000Rs)அந்த அடியாருக்கு கொடுத்து உதவியுள்ளனர். மேலும் மிக முக்கியமான விஷயம் என்ன வென்றால் அந்த அடியார் என்னிடம் சொல்லும் போது 25000 ரூபாய் செலவாகும் என்று தான் கூறினார். அதிசயம் என்ன என்றால் ஒரு ஆச்சாரி இவருக்கு 14,000 ரூபாயில் நாகாபரணம் செய்து தருவதாக கூறியுள்ளார் என்பது மேலும் மகிழ்ச்சியான செய்தி. இந்த 14,000 ரூபாய் விஷயம் எனக்கு தெரியாமலே நான் முகநூலில் சுமார் 25000 என்று பதிவு செய்திருந்தேன்.  Priya Venkataraman அவர்கள் அமெரிக்காவிலிருந்து அடியார் பழனி சிவா அவர்களிடம் தொலைபேசியில் பேசிய போது அடியார் நாகாபரணத்திற்கு 14,000 என்று கூறியுள்ளார். மேலும் அந்த அடியார் (புதிதாக) மூன்றாவதாக ஒரு கற்கோவிலை தற்போது எடுத்து கண்டிக்கொண்டுள்ளார். என்பதை Priya Venkataraman அவர்களிடம் இந்த அடியார் கூறியுளார். இந்த புதிய கோவிலுக்கு கருங்கற்களாள் ஆன வாசகால் வேண்டும் என்று சொன்னார். அதற்க்கும் சேர்த்து Priya Venkataraman தம்பதிகள் நாகாபரணத்திற்கு 11,500 ரூபாயும், வாசகாலிற்க்கு முதல் தவனையாக 11,000 ரூபாயும், அண்ணாபிஷேகத்தன்று அண்ணதாணத்திற்காக  2500 ரூபாய்யும் ஆகமொத்தம் 25,000 ரூபாயை அடியார் பழனி சிவாவிடம்  Priya Venkataraman அவர்களின் தந்தை வழங்கினார்கள். மேலும் அடியேனின் வங்கி கணக்கில் வந்த நான்காயிரத்தை எனது தந்தை மூலம் அடியார் பழனி சிவாவிடம் வழங்கி விட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்த அடியார் மூன்றாவது கோவிலை நல்ல முறையில் கட்டி முடிக்க மேலும் பணம் தேவைப்படுவதால் இதை கண்ணுறும் அன்பர்கள் தாராலமாக பண உதவியும், பொருள் உதவியும் செய்யுமாறு தங்கள் பாதம் தொட்டு வணங்கி வேண்டிகிறேன்.
                                     
                                                     என்றும் நன்றியுடன்
                                                           B.Hari Haran
                                                       Cell:+919941258112
                                                       Chromepet,chennai
சாய்பாபா -பகுதி 9

சத்யா நடந்தே கமலாப்பூர் வந்து சேர்ந்து விட்டான்.எந்த வகையிலும் அவன் தன் பெற்றோரை சிரமப்படுத்த நினைத்ததில்லை. இந்தக்கால மாணவர்கள் சத்யசாய்பாபாவிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அவரது அண்ணன் சேஷமராஜூ பெண் எடுத்த ஊர் தான் கமலாப்பூர். தன் மாமனார் வீட்டில், சத்யாவை தங்கச் செய்து உயர்நிலைக் கல்விக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்டு சாய்பாபா அந்த வீட்டாரிடம் பணஉதவி எதுவும் கேட்டதில்லை. அதுபோல் தன் நண்பர்களிடமும் பணம் கேட்டதில்லை. அவரது வாழ்நாளில் சிறு பையனாக இருந்தபோதே உழைக்கத் துவங்கி விட்டார்.சில திறமைகள் மனிதர்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ளன. குறிப்பாக இளமைப்பருவத்தில், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதை செயல்படுத்துவதில் தயக்கம் காட்டுவதால் தான் நமது மாணவர்கள் முன்னேறுவதில்லை. அமெரிக்காவில் மாணவர்கள் கார் துடைத்து சம்பாதிக்கிறார்கள், ஜப்பானில் ஓய்வு நேரத்தில் வேலைக்கு போகிறார்கள், என்று புத்தகங்களில் படிக்கிறார்களே தவிர, நாமும் அப்படி செய்தால் என்ன என்று பெரும்பாலோனோர் விரும்புவதில்லை. பெற்றோர்களும் அதை கவுரவக்குறைவாக கருதுகிறார்கள்.சத்யா அப்படியில்லை...அவர் இளமையிலேயே தன் திறமையால் சிறுசிறு வேலைகளைச் செய்தார். அதில் கிடைத்த பணத்தில் படித்தார். அண்ணன் சேஷமராஜூ திடீரென அனந்தப்பூருக்கு படிக்க சென்று விட்டார். தெலுங்கில் வித்வான் பட்டம் பெறுவது அவரது நோக்கம். எனவே படிப்பு நீங்கலான மற்ற செலவுகளுக்கு சத்யாவுக்கு பணம் கிடைப்பதில்லை. சத்யாவும் அனாவசியமாக செலவழிப்பதை விரும்பவில்லை. சிறுவயதில் மனஅடக்கம் இருப்பது கடினம். குழந்தைகளுக்கு எதைப்பார்த்தாலும் வாங்க வேண்டுமென்ற எண்ணமே இருக்கும். ஆனால் சத்யா அப்படி எதையும் விரும்பவில்லை. மனக்கட்டுப்பாடு மனிதனை வாழ்க்கையில் உயர்த்துகிறது. இதை சிறு வயதிலேயே நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை, மானிடராகப் பிறந்த சாய்பாபா, தன் வாழ்க்கையின் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.இதரவகை செலவுகளை, சத்யாவே சம்பாதிக்க துவங்கி விட்டான். ஒருமுறை அவன், காகிதத்தில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். அதை பின்பக்கமாக வந்த நண்பன் ஒருவன் படித்து விட்டு சிரித்தான்.

சத்யா! நீ பாட்டெல்லாம் கூட எழுதுவியா?சத்யா அவன் வந்ததை அப்போது தான் அறிந்தவனாய், உம்! அப்பப்ப பாட்டு எழுதுவேன். இது குடைப்பாட்டு. இங்குள்ள வியாபாரி கோட்டை சுப்பண்ணா ஒரு டெக்னிக் வைத்திருக்கிறார். அதாவது தன் கடைமுன்பு குழந்தைகளை நிறுத்தி, தன் கடையிலுள்ள பொம்மை, குடை, பேன்சி பொருட்களைப் பற்றி பாட வைக்கிறார். அவர்கள் பாட நல்ல பாட்டாக நான் எழுதி கொடுக்கிறேன். இவை விளம்பரப் பாடல்கள். இதை எழுதினால், அவர் எனக்கு பணமோ, பொருளோ தருவார். இதை வைத்து நான் பிற செலவுகளை கவனித்துக் கொள்கிறேன், என்றான்.மகான்கள் சிறுவயது முதலே மானிடர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுகிறார்கள். நமது மாணவர்களும் தங்களால் முடிந்த வேலையை செய்து, தங்கள் ஓராண்டு படிப்புச் செலவை தாங்களே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இந்தக்காலத்தில் எவ்வளவோ சிறு வேலைகள் காத்துக் கிடக்கின்றன. மாணவர்கள் சத்யசாயியைப் போல வாழ்வில் முன்னேற உறுதி எடுக்க வேண்டும். இதற்கு சாயியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.சத்யா சிறுவயதில் பஜனைப் பாடல்கள் மட்டுமல்ல....தன்னை அன்போடு ஊட்டி வளர்த்த சுப்பம்மாவின் கணவர் பற்றியும் கூட ஒரு பாட்டு எழுதினான். அவர் கிராமகர்ணம் என்பதால் தோரணைக்காக பெரிய மீசை வைத்திருந்தார். அதைக் கேலி செய்து சத்யா ஒரு பாட்டுப் பாடினான். அதோடு அவர் மீசையை எடுத்து விட்டார். இப்படி சத்யா எழுதிய குறும்புப்பாடல்களும் அதிகம்.குழந்தைகள் குறும்புத்தனமாக பேசுவார்கள். ஏதாவது படம் வரைந்து கிறுக்கித் தள்ளுவார்கள். இதை நாம் தடுக்கக்கூடாது. காரணம், அவர்கள் தங்களை மேதைகள் போல மனதில் கருதி செய்பவை இவை. அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் இந்த கிறுக்கல் படைப்புகள் மிக உயர்ந்தது. இதை தடுக்காமல் இருந்தால் பத்தில் ஒருவர் சிறந்த படைப்பாளிகளாக வருவர் என்பது உறுதி. சத்யா சிறுவயதில் குறும்பாக எழுதிய பாடல்கள், காலப்போக்கில் அவனது கற்பனைத் திறனை விளம்பரப் பாடல்கள் எழுதும் அளவு உயர்த்தி விட்டது. அது சிறு வருமானத்தையும் தந்தது.

அன்று மாலையில் சத்யாவின் குடைப்பாட்டு ஊரில் பிரபலமானது.எடுத்து விரித்து பிரிக்கலாம், மடக்கி கையில் சுருட்டலாம், என எதுகை மோனையுடன் எழுதி இருந்ததைக் கேட்டு, மக்கள் அந்தப்பாட்டில் மனம் லயித்தனர். கோட்டை சுப்பண்ணாவுக்கு வியாபாரமும் நன்றாக இருந்தது.நாட்கள் வேகமாக நகர்ந்தன. யாருமே எதிர்பாராத பொழுதாக அன்று கமலாப்பூருக்கு விடிந்தது. தெய்வம் சில நாட்கள் புட்டபர்த்தி கிராமத்தில் இருந்தது. சில காலம் கமலாப்பூர் என்ற சிறு நகரத்தில் இருந்தது. இப்போது அண்ணன் சேஷமராஜூவுக்கு வித்வான் படிப்பு முடிந்து, உரவகொண்டா என்ற ஊரில் வேலை கிடைத்தது. அதுவும் ஆசிரியர் பணி. தான் பணியாற்றும் பள்ளியிலேயே தம்பியையும் சேர்த்துவிட அவர் முடிவு செய்து விட்டார்.சத்யாவுக்கு வேதனை. புட்டபர்த்தியிலுள்ள நண்பர்களைப் பிரிந்தாயிற்று. இன்று கமலாப்பூர் நண்பர்களையும் விட்டு பிரிய வேண்டிய சூழல் உருவாகி விட்டது. விளையாட்டு ஆசிரியர் இந்தத் தகவலைக் கேட்டு அழுதே விட்டார். ஊர் முக்கிய பிரமுகரின் மகன்கள் இருவரும், சத்யாவைக் கட்டிப்பிடித்து அழுதனர்.சத்யா...எங்க அப்பா இந்த ஊர் சிரஸ்தார். எங்ககிட்ட நெறய பணம் இருக்கு. ஆனா உன்னைப் போல நல்ல நண்பன் இல்லை. நீ இங்கேயே படி, எங்களை விட்டு போய் விடாதே, எனக்கதறினர்.சத்யா அமைதியாக அவர்களைத் தேற்றி, உங்கள் பணத்தில் படிப்பதை என் அண்ணனோ, நானோ விரும்பமாட்டோம். இங்கேயே தனியாகத் தங்கிப் படிப்பதை அம்மாவும் விரும்பமாட்டாள். தங்கிப்படிக்கும் அளவுக்கு எனக்கு வசதியும் இல்லை, என்றான். அவன் வாய் அப்படி சொன்னதே ஒழிய, அந்த நண்பர்களைப் பிரிய சத்யாவுக்கும் விருப்பமில்லை. ஆனாலும், பொங்கி வந்த கண்ணீரை இமைகளிலிருந்து கீழே விழாமல் அடக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டான்.உரவுகொண்டா நகரம் சத்யாவுடன் உறவு கொள்ள தயாராக இருந்தது. ஆனால் அவன் படிக்கப் போகும் பள்ளியிலோ, ஆசிரியர்களுக்குள் ஒரு பெரிய தகராறே நடந்து கொண்டிருந்தது.தலைமை ஆசிரியரின் அறையில், சார்..அந்த சத்யாங்கிற பையன் நம்ம ஸ்கூலுக்கு வந்தா...என ஆரம்பித்தார் ஒரு ஆசிரியர். அதைக் கேட்டு மற்ற ஆசிரியர்கள் கொதித்தார்கள். முடியாது, முடியாது...அதெல்லாம் முடியாது....அந்தப் பையனை.... என்று கூச்சல் தொடர்ந்தது. அங்கு என்ன தான் நடந்தது?அங்கு பாபாவை சேர்க்கக்கூடாது என்ற விவாதம் ஏதும் நடக்கவில்லை. ஒவ்வொரு ஆசிரியரும் அவர் ஒரு தெய்வப்பிறவி என்பதை உணர்ந்து தங்கள் வகுப்பிற்கே அவரை அனுப்ப வேண்டுமென தலைமை ஆசிரியரிடம் போராடிக் கொண்டிருந்தனர். தலைமை ஆசிரியர் அவர்களைச் சமாதானப்படுத்தும் வகையில், அந்தப் பையன் தெய்வம் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறு இருக்கும்பட்சத்தில் தெய்வத்திடம் தானே முடிவை விட வேண்டும். அவன் விரும்பும் வகுப்புக்குச் செல்லட்டும், என்றார். ஒருவழியாக பாபா அங்கு வந்து சேர எல்லாரும் ஒற்றுமையாக அவரை வரவேற்றனர். அந்தப் பள்ளியிலேயே மிகச்சிறந்த மாணவராக அவர் விளங்கினார். அவரே அங்கு எழுதி நடத்திய நாடகம், பஜனை முதலானவை மாணவர்களையும், ஊர் மக்களையும் ஈர்த்தன. சிலகாலம் கழித்து புட்டபர்த்திக்கே திரும்பிய அவர், ஜிலேபி வரவழைத்துக் கொடுப்பது, உதிரிப்பூக்களை வீசி எறிந்து சாய்பாபா என தெ<லுங்கில் தனது பெயர் வரச்செய்வது என்று சித்து வேலைகளையும் செய்தார்.இந்த விஷயங்கள் பாபாவின் தந்தை வெங்கப்பராஜுவுக்கு தெரிய வர, அவர் தன் பெரியமகன் சேஷமராஜுவுக்கு கடிதம் எழுதி தெரியப்படுத்தினார். அவரும் பாபாவைக் கண்டித்து தன்னுடன் உரவுகொண்டாவுக்கே மீண்டும் அழைத்துச் சென்று விட்டார். ஒரு சமயம் ஹம்பி நகரிலுள்ள விருபாக்ஷர் கோயிலுக்கு அவர்கள் சென்றனர். அங்குள்ள கருவறைக்குள் பாபா சென்று விட்டார். அர்ச்சகர் அவரைக் கடுமையாகத் திட்டினார். வந்த பக்தர்களும் முகம் சுளித்தனர். ஆனால், திடீரென கருவறையில் இருந்து ஒளி வள்ளம் எழுந்தது கண்டு அவர்கள் அதிசயித்தனர். இன்னொரு சமயம் பாபாவின் தலையின் பின்பக்கம் ஒளிவெள்ளம் எழுந்தது கண்டு அவரது அண்ணியார் அதிசயப் பட்டார். ஆரம்பத்தில் அவரது அண்ணியாரும் அவர் தெய்வப்பிறவி என்பதை நம்ப மறுத்தார். இந்தக் காட்சி அவரது மனதை மாற்றிவிட்டது. காலவெள்ளத்தில் அவரது சகோதரரும் அவரது செயல்பாடுகள், முகத்தில் ஏற்பட்ட ஒளி ஆகியவற்றை நேரில் கண்டு அவரைத் தெய்வமென்று நம்பினார். போதாக்குறைக்கு அவ்வூரில் வசித்த நாராயண சாஸ்திரி என்ற பிரபல மனிதர், இளைஞர் என்றும் பாராமல் பாபாவின் கால்களில் விழுந்து நீயே தெய்வம் என்று கூறினார். இதன்பிறகு உரவுகொண்டாவிலுள்ள சுங்கத்துறை அதிகாரி ஒருவர் தோட்டத்தில் அமர்ந்திருந்த பாபா, தலையின் பின்பகுதியில் ஒளிவட்டத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்ட மக்களெல்லாம் அவரை வணங்கினர்.

என்னதான் தெய்வப்பிறவி போல தோன்றினாலும், சாய்பாபாவின் போக்கு சேஷமராஜுவுக்கு பிடிக்கவில்லை. அவர் உடனே தன் தாய் தந்தையை வரவழைத்தார். அவர்கள் ஊருக்குள் வந்தார்களோ இல்லையோ, தெய்வக்குழந்தையை எங்களுக்கு தந்த பெற்றோர் வாழ்க என்று அங்கு நின்றவர்கள் கோஷமிட்டனர். பாபாவும் உணர்வு நிலையிலேயே இல்லை, பெற்றோர்களைக் கவனிக்காமலே பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். பாபாவின் அண்ணன் சேஷமராஜு பெற்றோரை பாபா அருகில் அழைத்துச்சென்று,சத்யா! இவர்களை யார் தெரிகிறதா? என்றார்.பாபா அவர்களைப் பார்த்து, இவர்கள் மாயைகள் என்றார்.ஈஸ்வரம்மா கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விட்டார்.சத்யா! நீ நிஜத்தில் தெய்வமாகவே இருந்தாலும், எங்களை மாயை என எப்படி சொல்லலாம்? பற்றற்ற நிலைக்கு நீ வேண்டுமானால் போகலாம். பெற்ற எங்கள் வயிறு தாங்குமா? என்றார்.மேலும், மகனின் பேச்சால் அதிர்ந்து போன அவர், என்னங்க! சத்யாவை புட்டபர்த்திக்கே கூட்டிச் சென்று விடுவோம், என கணவரிடம் அழுதபடியே சொன்னார். வெங்கப்பராஜு மனைவியைத் தேற்றி,ஈஸ்வரா! நானும் அப்படித்தான் நினைத்து வந்தேன். ஆனால், இங்கு வந்து பார்த்தபின் தானே, அவனுக்கு கிடைக்கும் மாலை மரியாதை, வழிபாடு ஆகியவையெல்லாம் தெரிகிறது. இனி அவன் நம் பிள்ளையல்ல! உலகத்துக்குச் சொந்தமாகி விட்டான், என்றார்.யார் என்ன சொன்னாலும் பெற்றவளின் மனம் கேட்குமா? ஈஸ்வரம்மா மகனிடம்,சத்யா! உன்னை இந்த சந்நியாசி கோலத்தில் பார்க்க மனம் சகிக்கலையடா! வா! உன் பாசத்துக்குரிய சொந்தமான இந்த தாயைப் பார், என்றார்.ஆனால் பாபா,இந்த உலகில் யார் யாருக்கு சொந்தம்? என்றுதிருப்பிக்கேட்டார். அந்த சமயத்தில் வந்த போட்டோகிராபர் ஒருவர்,அம்மா! அவரை வற்புறுத்தாதீர்கள். நேற்று நான் அவரை ஒரு படம் எடுத்தேன். பிரின்ட் போட்டுப் பார்த்தால் ஷிர்டிபாபாவின் படம் இருக்கிறது. அவர் அவரது அவதாரம், என்றார்.பின்னர் வெங்கப்பராஜு மனைவியிடம்,ஈஸ்வரா! கலங்காதே! அவன் இங்கே தானே இருக்கிறான்! அவனைத் தெய்வமென மக்கள் கொண்டாடுவதும் நமக்குப் பெருமை தானே! என்றார். அதன்பிறகு அம்மா வருகில் வரும்போதெல்லாம்,இதோ! மாயை வந்துவிட்டது என்பார்.

பிள்ளையின் இந்தச் சொல் அம்மாவுக்கு வருத்தத்தைத் தந்தது. ஒருநாள் திடீரென, அம்மா பசிக்கிறது, என்றார். ஈஸ்வரம்மா மகிழ்ந்தார். மகன் பழையநிலைக்கு திரும்பி விட்டதாக நினைத்தார். வகைவகையாக உணவு பரிமாறினார். சாய்பாபா அவற்றை மொத்தமாகப் பிசைந்தார். மூன்று உருண்டையாக உருட்டி, அவற்றை எடுத்துத்தரும்படி கேட்டார். அம்மா எடுத்துக் கொடுக்க அதைச் சாப்பிட்டார். உடனே தாய் அவரிடம்,சத்யா! நீ உன் விருப்பப்படியே இவ்வாறே பஜனை, சத்சங்கம் என்றே இரு! அதில் நாங்கள் தலையிடமாட்டோம். ஆனால், புட்டபர்த்திக்கு வந்து இதைச் செய், என்றார். இதற்கு பாபா மறுப்பேதும் சொல்லவில்லை. அவர்களுடன் புறப்பட்டும் விட்டார்.பாபாவின் புகழைக் கேள்விப்பட்டிருந்த உள்ளூர் மக்கள் அவரை வரவேற்க காத்து நின்றனர். அவர்களில் ஒருவர் சுப்பம்மா. பாபாவை இளமையில் வளர்த்தவர். தன் வீட்டுக்கு பாபா வரமாட்டாரா என ஏங்கிக்கொண்டிருந்தார். பாபா ஊரில் வந்து இறங்கி தன் வீட்டுக்கு முதலிலும், பின்பு தனது தாய்மாமனார் வீட்டிற்கும் சென்றார். ஆனால், அங்கெல்லாம் குடும்பச்சண்டைகள் நிகழ்ந்தன. முற்றும் துறந்தால் அவரால் அதையெல்லாம் பொறுக்க முடியவில்லை. சுப்பம்மா வீட்டிற்கு சென்று நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.ஊர்மக்கள் அவரை பாபா என்று அழைத்தனர். சில பக்தர்கள் அவரிடம்,நீங்கள் தெய்வம் என்றால் மனிதவடிவில் ஏன் லீலை புரிகிறீர்கள்? என்றனர். அவர்களிடம்,நான் சங்கு சக்கரத்துடன் காட்சியளித்தால் நீங்கள் என்னை நம்பத்தயாரா? அப்படிச்செய்தால் ஏதோ நாடக வேடதாரி என்று தானே சொல்வீர்கள்! என திருப்பிக்கேட்டார்.சாயி எங்காவது இமயமலை பக்கம் போய்விடுவாரோ என பலரும் கருதினர். ஆனால், அவர் இன்று வரை புட்டபர்த்தியிலேயே தங்கி அந்த கிராமத்தை உலகப்புகழ் பெற்றதாக்கி விட்டார். பல சமுதாயப்பணிகளை மக்களுக்காக ஆற்றி வருகிறார். சாய்ராம்!

-முற்றும்.
--------------------------
சாய்பாபா -பகுதி 8

கமலாப்பூர் மிகப்பெரிய நகரம். சத்யாவுக்கு அவ்வூர் வாழ்க்கை ஒன்றும் கடினமாகத் தோன்றவில்லை. சத்யா வந்தபிறகு அவ்வூர் வழக்கத்தை விட செழிக்க ஆரம்பித்தது. இதற்கான காரணம் அவ்வூர் மக்களுக்கு தெரியவில்லை. தெய்வமே அவ்வூரில் வசிக்க வந்ததை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அந்த இனம்புரியா மகிழ்ச்சிக் கடலில் மக்கள் திளைத்தனர். சத்யா உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து விட்டான். எளிமையான உடை, புத்தகங்கள் தவிர வேறு எதற்கும் அவன் ஆசைப்படவில்லை. பள்ளியில் விழாக்கள் நடந்தால் பாடுவான். பழைய மாணவர்கள் பாடிய பாடல்களெல்லாம் சத்யாவின் இனிய குரலுக்கு முன்பு எடுபடவில்லை. பாட்டுகளாலேயே அவன் பள்ளியில், பிரபலமாகி விட்டான். அவனது விளையாட்டு ஆசிரியர், கேசவன் என்ற நண்பன் ஆகியோருக்கு சத்யா நெருக்கமாகி விட்டான்.பள்ளியில் நாடகம் நடந்தால் சத்யாவுக்கு முக்கிய பாத்திரம் கொடுக்கப்படும். அதை செம்மையாக நடித்துக் காட்டுவான். கமலாப்பூரில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளில் இறைவணக்கம் பாடுவதற்கென்றே ஊர் பெரியவர்கள் சத்யாவை அனுப்பும்படி கேட்டுக் கொள்வார்கள். கமலாப்பூரின் முக்கிய பிரமுகராகி விட்டான் சத்யா. ஆனால் அந்த எளிமை மட்டும் அவனை விடவில்லை. சாரணர் இயக்கத்தில் சேரும்படி, விளையாட்டு ஆசிரியர் சத்யாவை வற்புறுத்தினார். இயக்கத்தினர் கேம்ப் போட்டால், அவரவர் சொந்த செலவில் தான் போக வேண்டும். சத்யாவிடம் அந்த அளவு பணமில்லை. பக்கத்து ஊர் ஒன்றிற்கு போய் வரக்கூட சாப்பாட்டுடன் சேர்த்து 20 ரூபாயாவது வேண்டும். இதை தான் தங்கியிருக்கும் அண்ணனின் மாமனார் வீட்டில் சத்யா கேட்கமாட்டான். கடுமையாகத் தயங்குவான். இந்தநிலையில், இயக்கத்தில் சேர சத்யா மறுத்து விட்டான். ஆனால் அவன் உள்மனதில், சாரணர் இயக்கத்தின் சேவைகள் அலை மோதின. இந்த இயக்கத்தில் சேர்வதன் மூலம் மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்யலாம் என்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது.

சாரணர் இயக்கத்தில் சேர்வதற்குரிய யூனிபார்ம் வாங்க பணம் அதிகமாக வேண்டும். இதற்கு என்ன செய்வது என தயங்கி நின்ற வேளையில், அவனது இரண்டு நண்பர்கள் யூனிபார்ம் வாங்கிக் கொடுத்தனர். அவர்கள் உள்ளூர் பணக்காரரின் குழந்தைகள். சத்யா மீது அன்பு கொண்டவர்கள். அவன் தன்னோடு கேம்ப் வருவதை பெருமையாகக் கருதினார்கள்.சத்யாவுடன் சேர்ந்த மாணவர்கள் எல்லாம் பஸ்சுக்கு தயாரானார்கள். சத்யாவைக் காணவில்லை. முகாமுக்கு ஒரு பையன் குறைகிறானே! என்ன செய்வது? என ஆசிரியர் கையைப் பிசைந்தார். சத்யா வரவே இல்லை. வீட்டுக்கு ஆள் அனுப்பி பார்த்தால், அவன் ஏற்கனவே கிளம்பிப் போய் விட்டானே, என்ற பதில் கிடைத்தது. குழம்பிப் போன முகாம் அமைப்பாளர் வேறு வழியின்றி மற்ற மாணவர்களுடன் கிளம்பி விட்டார். புஷ்பகிரிக்கு செல்லும் வழியில், பஸ்சில் சென்ற மாணவன் ஒருவன், சத்யா ரோட்டில் நடந்து செல்வதைக் கவனித்தான். எல்லாரும் புஷ்பகிரி சென்றாயிற்று. அங்கே சத்யாங தயாராக நின்றான்.ஆசிரியரும், நண்பர்களும் சத்யாவை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். நண்பன் கேசவன் சத்யாவிடம், நாங்கள் கிளம்பும் போது உன்னைக் காணவில்லையே! ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தாயே! என்னாயிற்று உனக்கு? என வாஞ்சையோடு கேட்டான்.சத்யா நடந்ததைச் சொன்னான்.நண்பர்களுடன் பஸ்சில் வந்தால், பஸ்சுக்கு கட்டணம் கொடுக்க வேண்டும். சத்யாவிடம் காசு இல்லை. தன் பழைய புத்தகங்களை சிலரிடம் விற்றான். அவர்கள் கூடுதலாக பணம் கொடுக்க முன் வந்தாலும், ஐந்து ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டான். அதைச் சாப்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். புஷ்பகிரிக்கு நடந்தே போய் விடலாம் என முடிவு செய்து விட்டான்.கமலாப்பூரிலிருந்து, புஷ்பகிரிக்கு பத்துமைலுக்கும் அதிமான தூரம். இருந்தாலும் நடந்தே சென்று விட சத்யா எண்ணி விட்டான். வழியில் களைப்பாக இருந்தது. சத்யா மட்டுமல்ல. புஷ்பகிரி கோயில் திருவிழாவுக்கு வரும் ஏழை மக்கள் அனைவருமே நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் களைப்பாற, வழியிலுள்ள ஆற்று மணலில் படுத்து உறங்கினர். சத்யாவும் களைப்பின் மிகுதியால் அவர்களுடனேயே படுத்து உறங்கினான்.இதன் உள்பொருளை நாம் உணர வேண்டும். தெய்வம் ஏழைகளுடன் துணை வருகிறது. ஏழைகள் படும் சிரமத்தை தானும் படுகிறது. ஏழைமக்கள் நடந்து வரும் போது வாகனத்தில் செல்ல தெய்வம் விரும்பாது என்பதையே குறிப்பால் உணர வேண்டும்.

சத்யா தான் கொண்டு வந்த ஐந்து ரூபாயை தன் தலைமாட்டில் ஒரு துணியில் சுற்றி வைத்துக்கொண்டு உறங்கினான். விழித்து பார்த்த போது, தலைமாட்டில் பை இல்லை. யாரோ அதை திருடி விட்டார்கள். சத்யாவுக்கு சாப்பாட்டு காசுக்கும் வழியில்லை. ஆனாலும் புஷ்பகிரியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். வரும் வழியில் ஒரு அணா கீழே கிடந்தது. அதை எடுத்தான். புஷ்பகிரி கோயிலின் ஒரு பக்கத்தில், இரட்டை லாட்டரி விளையாட்டு நடந்து கொண்டிருந்தது.அதாவது ஒரு ரூபாய் வைத்து ஒரு சக்கரத்தை சுழற்ற வேண்டும். சொன்ன நம்பரில் சக்கரம் நின்றால், இரட்டிப்பு பணம் தருவார்கள். இல்லாவிட்டால் பணம் கடைக்காரனைச் சேர்ந்து விடும். சத்யா தன் காசை அங்கு வைத்தான். இரட்டிப்பாக கிடைத்தது. மீண்டும் வைத்தான். அதுவும் இரட்டிப்பானது. இப்படியே 12 அணா சேர்ந்து விட்டது. கடைக்காரனுக்கு பயம் வந்து விட்டது. சிறுபையனாக இருந்தாலும், ஜெயித்துக் கொண்டே இருக்கிறானே என்ற பயத்தில், விளையாட்டு முடிந்ததாகச் சொல்லி கடையைக் கட்டி விட்டான். கிடைத்த காசுக்கு தின்பண்டங்கள் மட்டும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு சாரணர் இயக்கப் பணிகளிலும் கலந்து கொண்டான் சத்யா.இவ்வளவு விஷயத்தையும் நண்பர்களும், ஆசிரியரும் அறிந்து கொண்டனர். சரியாக சாப்பிடாமல், வெறும் தின்பண்டங்களுடன் சாரணர் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திய சத்யாவைப் பாராட்டினர். அவன் ஒரு இடத்தில் இருந்தபடியே, திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போன குழந்தைகள் பற்றிய தகவல்களைச் சொன்னான். அங்கு போய் பார்த்தால், காணாமல் போன குழந்தை நிற்கும். இதுபோல பல அற்புதங்களை இருந்த இடத்தில் இருந்தே செய்தான். எங்காவது குப்பை கூளம் குவிந்திருந்தால், அதை அப்புறப்படுத்த சொல்வான். அவன் சொன்ன இடத்தில் குப்பை கிடக்கும். தண்ணீர் பானைகள் காலியாகி விட்டால், எங்கோ நின்று கொண்டு, அதில் தண்ணீர் நிரப்பச் சொல்வான். அவன் சொன்னபடி அங்கு காலியான பானை இருக்கும். அந்த ஆண்டில் திருவிழாவில் எந்த பிரச்னையும் இல்லாமல் முடிந்தது. சாரணர் இயக்க சிறுவர்களை அதிகாரிகள் பாராட்டினர். முகாம் முடிந்து எல்லாரும் ஊருக்கு புறப்பட்டனர். சத்யாவின் கையில் சல்லிக்காசு இல்லை. அவன் மீண்டும் நடக்க ஆரம்பித்தான். நண்பர்கள் கூப்பிட்டும், பஸ்சில் வர மறுத்து விட்டான்.
--------------------------
சாய்பாபா -பகுதி 7

பகவான் ஷிர்டி சாய்பாபா பற்றிய எண்ணம் தான் அது. இத்தனைக்கும் ஷிர்டிபாபா பற்றி சத்யாவுக்கு யாரும் சொல்லிக் கொடுத்ததில்லை. ஷிர்டிக்கு சென்றதும் கிடையாது. இருப்பினும் அவர் நினைவு வந்தது. அவரைப் பற்றிய பஜனைப் பாடல்களை சத்யா பாடினான். அவனது நண்பர்களும் அதை திரும்பப் பாடினர்.இதனால் புட்டபர்த்தியை காலரா தொட்டுப்பார்க்க கூட இல்லை. மக்களுக்கு ஒரே ஆச்சரியம். சத்யாவின் பஜனைப்பாடல்களின் மகிமையால் தான் இந்த அதிசயம் நிகழ்கிறது என்பதை மட்டும் அவர்களால் உணர முடிந்தது.இப்போது பஜனைக்கு சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் வர ஆரம்பித்தனர். அவர்கள் மற்ற கிராமங்களில் உள்ளவர்களிடம், சத்யா பாடும் ஷிர்டி பஜனைப் பாடல்கள் பற்றி கூறினர். மற்ற ஊர் மக்களும் சத்யாவை தங்கள் கிராமத்திற்கு வந்து பஜனை செய்யும்படி கேட்டனர். ஆனால் காலரா பாதித்த கிராமங்களுக்கு சத்யாவை பெற்றோர் விடுவார்களா? மறுத்து விட்டனர்.சத்யா அவர்களைச் சமாதானம் செய்து அந்த கிராமங்களுக்கு சென்றான். அவனது பஜனை கோஷ்டியும் சென்றது. எங்கும் பக்திப்பரவசம் எழுந்தது. சத்யாவின் காலடிபட்ட கிராமங்களில் காலரா காணாமல் போனது. எல்லாரும் இதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். தெய்வீகச் சிறுவன் என வாழ்த்தினர்.நாடகங்களில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த சத்யாவுக்கு சவால் ஒன்றும் வந்து சேர்ந்தது. புட்டபர்த்தியை சுற்றியுள்ள கிராமங்களில் புதிய நாடகக் கம்பெனி ஒன்று வந்தது. ருஷ்யேந்திரமணி என்ற சிறுமி தான் இந்தக் கம்பெனியின் மிகப்பெரும் சொத்து. அவள் ஆடும் நடனத்திற்காகவே கூட்டம் சேர்ந்தது. அவள் மிகப்பெரிய நடிகை என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் சத்யாவே, அவள் நடித்த நாடகத்தை காண வந்திருந்தான். அவளது நடன அசைவுகளைக் கவனித்தான்.பாட்டில் ஒன்றை தலையில் வைத்து அது கீழே விழாமல்,குனிந்தும், நிமிர்ந்தும், சுழன்றும் ஆடினாள் அவள். இதைக்கண்டு பார்வையாளர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.சத்யாவுக்கும் இதே ஆசை பிறந்தது.

ருஷ்யேந்திராவை விட மிகச்சிறப்பாக ஆடி பெயரைத் தட்டிச் செல்ல வேண்டும் என்பதே அந்த ஆசை. தந்தை வெங்கப்பராஜூவும், தாய் ஈஸ்வராம்பாளும் கூட இதற்கு சம்மதித்தனர். ருஷ்யேந்திரா ஒரு தீப்பெட்டியை தரையில் வைத்து, அதனை ஒரு கைக்குட்டையால் மூடி, பாட்டிலை தலையில் வைத்து வளைந்து நெளிந்து கீழே விழாமல், உதடுகளால் கவ்வி கைக்குட்டையை எடுத்தாள்.இதைவிட அரிய சாகசத்தை நிகழ்த்த சத்யா முடிவு செய்தான். . நண்பர்களிடம் அதைச் செய்து காட்டினான். நண்பர்கள் சத்யாவிடம், பக்கத்து ஊர் திருவிழாவில் இந்த நடனத்தை ஆடிக்காட்டு. நம் நாடகக்குழுவின் பெருமையை உயர்த்து, என்றனர்.சத்யாவை, அவரது சகோதரிகள் ருஷ்யேந்திரமணி போலவே அலங்கரித்தனர். சத்யா பெண் வேடத்தில் ஜொலித்தான். இறைவன் ஆணும், பெண்ணுமாக இருக்கிறான். அவனுக்கு இருபிரிவும் ஒன்றே என்பதை சத்யசாய் இங்கே குறிப்பால் உணர்த்தியிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.சத்யா நாடக மேடையில் ஏறினான். கம்சனின் அவையில் ஒரு நடன மாது ஆடுவது போன்ற காட்சி. சத்யா இசைக்கேற்ப ஆடினான். தலையில் பாட்டில் இருந்தது. எவ்வளவு சுழன்று ஆடியும் கீழே விழவில்லை. இறைவன் ஆனந்தநடனம் புரிவது போல, பார்வையாளர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். சத்யா கீழே குனிந்தான். ருஷ்யேந்திரமணி உதடுகளால் கைக்குட்டையைத் தானே எடுத்தாள்! ஆனால் சத்யாவோ கண் இமைகளால் ஒரு குண்டூசியையே எடுத்து சாதனை படைத்து விட்டான்.நாடகம் நடந்த திடலே கரகோஷத்தால்  அதிர்ந்தது. ஈஸ்வராம்பாவும், வெங்கப்பராஜூவும் மகனின் திறமை கண்டு, ஆனந்தக் கண்ணீர் சிந்தினர்.ஈஸ்வராம்பாவுக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உண்டு. வயதுக்கு மீறிய சக்தியுடன் சத்யா பல காரியங்களைச் செய்கிறான். அவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் ஒரு அற்புதமாகவே தெரிகிறது. இதனால் அவனுக்கு திருஷ்டி ஏற்பட்டு, ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது, என யோசிப்பார்.தன் சந்தேகத்தை பக்கத்து வீட்டு தோழியும், சத்யாவை தன் மகன் போல பாசம் செலுத்தியவருமான சுப்பம்மாவிடம் கேட்டார்.

சத்யா! இப்படி செய்வதால் திருஷ்டி ஏற்பட்டு, அவனுக்கு ஏதும் ஆகி விடுமோ? என்றார்.சுப்பம்மா சிரித்தார்.அடி போடி! ஏன் அஞ்சுகிறாய். அவன் உன் பிள்ளை மட்டுமல்ல. என் பிள்ளையும் தான். அவன் இங்கு தான் பொழுது போக்குகிறான். இங்கு தான் சாப்பிடுகிறான். அவனை பெற்ற தாயான உன்னை விட முழுமையாக நான் அறிவேன். அவன் குழந்தைகளிடம், சினிமா, பொழுதுபோக்கு என தறிகெட்டு அலையாதீர்கள். அந்த நேரத்தை இறை வழிபாட்டுக்கு பயன்படுத்துங்கள். பண்டரிநாதன் புகழ் பரப்பும் பஜனையைப் பாடுங்கள், என்று புத்திமதி சொல்கிறான். இதிலிருந்து அவன் சாதாரண பிள்øளா? இறைவனே அவன் தான் என எனக்கு தோன்றுகிறது. இறைவனுக்கு திருஷ்டி எப்படி ஏற்படும்? நீ மனதைக் குழப்பாதே! அவனுக்கு ஏதும் ஆகாது, என்றார்.ஆனால் இந்த விஷயத்தில் ஈஸ்வராம்பாவே ஜெயித்தார். கம்சநாடகம் முடிந்த மறுநாளே ஊரார் கண்பட்டதாலோ என்னவோ? சத்யாவுக்கு கடும் ஜூரம் அடித்தது. ஈஸ்வராம்பா என்ன செய்வதென தெரியாமல் தவித்தார். அன்று இரவில் ஒரு பெரிய அதிசயம் நடந்தது. யாரோ ஒருவர் வீட்டுக்குள் வந்தது போன்ற ஒரு உணர்ச்சி...அவரது காலில் மரத்தால் ஆன காலணி. அதன் சத்தத்துடன், வந்த உருவம் சத்யா இருந்த அறைப்பக்கம் சென்றது. சற்று நேரத்தில் சத்தம் நின்றுவிட்டது. ஈஸ்வராம்பா நடுங்கியபடி சத்யாவின் அறைக்குள் சென்றார். அங்கே சத்யா அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். உடம்பில் கையை வைத்து பார்த்தார் ஈஸ்வராம்பா. காய்ச்சல் இல்லை. உடம்பே ஜில்லிட்டு இருந்தது. காய்ச்சல் குணமானதற்கும், உள்ளே வந்த உருவத்துக்கும் என்ன சம்பந்தம்? அது புரியாத புதிராகவே இருந்தது.அடுத்தநாள் சத்யா சகஜமாகி விட்டான். வீட்டுத் திண்ணையில் அவன் அமர்ந்திருந்த போது, அவ்வூர் சிறுவர்கள் சிலர் அலறி அடித்து ஓடினர். பெரியவர்கள் அவர்களை வீட்டுக்குள் இழுத்துப் போட்டு கதவுகளை அடைத்தனர். ஒரு சில பெரியவர்கள் மட்டுமே எதையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சத்யா அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிய ஆவலுடன் இருந்தான்.அப்போது ஒருவர் கடாமீசையுடன் ஊருக்குள் வந்தார். ராணுவ சீருடை, கையில் துப்பாக்கி சகிதமாக வந்த அவர், உறுமலான குரலில் தோரணையுடன், ஒரு பெரியவரிடம், அந்த மந்திரவாதி பையனை எங்கே? என்று கேட்டார்.அந்தக்காலத்தில் போலீஸ் வந்தாலே கிராம மக்கள் என்னவோ ஏதோவென்று பயந்து வீடுகளுக்குள் ஒளிந்து கொள்வார்கள். ஆனால் வந்தவரோ ராணுவ தோற்றத்தில் இருந்ததால் ஒரு சில வயோதிகர்களைத் தவிர, மற்றவர்கள் வீட்டுக்குள் புகுந்து கொண்டனர். பெரியவர்கள் விசாரித்த போது, அவர் அப்பகுதி ஆங்கிலேயக் கலெக்டரின் டிரைவர் என்பது தெரிந்தது.அவர் வீராப்பாக, அங்கு நின்ற பெரியவர்களிடம் சத்யாவைப் பற்றி தெரிந்து கொண்டார். நேராக சத்யாவிடம் வந்தார்.உம்! புறப்படு! அங்கே கலெக்டர் காரில் அமர்ந்திருக்கிறார். கார் ரிப்பேராகி விட்டது. அதை சரிசெய்து கிளம்பச் செய், உடனே வா, என்றார்.ஒரு சின்னப்பையனிடம், இந்த ஆள் இந்த விரட்டு விரட்டுகிறானே என்று பெரியவர்களுக்கு கோபம் வந்தாலும், அதைத் தட்டிக் கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை. கலெக்டரின் கார் டிரைவரான இவன், நம்மைப் பற்றி ஏதாவது கலெக்டரிடம் வத்தி வைத்து விட்டால் தங்கள் கதி அதோகதி தான் என்பதை தெரிந்து, வாய்மூடி மவுனிகளாக நின்று விட்டனர்.சத்யா டிரைவரின் தோற்றம் கண்டோ, மிரட்டல் பேச்சுக்கோ பயங்கொள்ளவில்லை.நான் கார் மெக்கானிக் அல்ல. எனக்கு ரிப்பேர் பார்க்க தெரியாதே, நான் வந்து எப்படி காரை கிளப்ப முடியும்? என்றான்.உனக்கு கார் ரிப்பேர் தெரியாது என்பது எனக்கும் தெரியும். ஆனால் மந்திரம் தெரியுமே! நீ அதை தொட்டாலே ஓடி விடுமாமே, எதையாவது செய்து காரை கிளப்பு. என்னோடு வா, என்றார் டிரைவர் அதட்டலாக.சத்யா கிளம்பி விட்டான். அவனது வீட்டாருக்கும், உறவினர், நண்பர்களுக்கு பயம். இருப்பினும் அரசாங்க காரியம் என்பதால், அவனை தடுக்கவும் வழியில்லாமல் நின்றனர்.சத்யா கார் நின்ற மலைப்பாங்கான பகுதிக்கு வந்து விட்டான். துரை கடும் டென்ஷனில் இருந்தார்.உடனே காரை கிளப்ப வழி பாரு. சீக்கிரம் கிளம்பணும். எனக்கு நெறய வேலைகள் இருக்கு, என்றார் எரிச்சலாக.சத்யா காருக்குள் எட்டிப்பார்த்தான். உள்ளே ஒரு புலி படுத்திருந்தது. அது துரையால் வேட்டையாடப்பட்டு இறந்த புலி. மிஸ்டர் துரை! என்று விளித்தான் சத்யா அனாசயமாக.

துரைக்கு தூக்கி வாரிப்போட்டது.ஒரு கிராமத்து சிறுவன் கலெக்டரான தன்னை இவ்வளவு அதிகாரமாக அழைக்கிறானே,. அவர் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தார். உங்கள் வண்டியில் இறந்து கிடக்கும் புலியை சுட்டுக் கொன்று விட்டீர்கள். அதன் குட்டிகள் தாயைப் பிரிந்து காட்டில் அல்லாடுகின்றன. தாயையும், குட்டியையுயும் பிரிப்பது எங்கள் நாட்டில் பெரும் பாவச் செயலாக கருதப்படும். நீங்கள் உடனே காட்டிற்குப் போய், குட்டிகளை கண்டுபிடித்து அவற்றின் துன்பம் தீரும் வகையில் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யுங்கள். அதுவரை யார் வந்து ரிப்பேர் செய்தாலும் இந்தக் கார் நகராது, என்றான் சத்யா.அதிகாரி மிரண்டு விட்டார்.காட்டில் மூன்று குட்டிகளின் தாய்ப்புலியை நான் சுட்டுக் கொன்றது இவனுக்கு எப்படி தெரிந்தது? போதாக்குறைக்கு இவன் மந்திர தந்திரம் தெரிந்தவன் என டிரைவர் சொல்லி இருக்கிறார். எப்படியிருப்பினும் இவன் ஒரு ஆபத்தான சிறுவன். இவனிடம் கவனமாக நடந்து கொள்வதே நல்லது, என சிந்தித்த கலெக்டர், மறுப்பேதும் சொல்லாமல் மீண்டும் காட்டுக்குள் சென்றார்.நீண்ட தேடுதலுக்கு பிறகு பயந்து கிடந்த புலிக்குட்டிகளைக் கண்டுபிடித்தார். அவற்றை மிருகக்காட்சி சாலையில் ஒப்படைப்பதாக உறுதி கூறினார். அவ்வளவு தான். காரை டிரைவர் ஸ்டார்ட் செய்ததும், வண்டி புறப்பட்டது.இப்பேர்ப்பட்ட மகானா இந்தச் சிறுவன் என ஆச்சரியப்பட்டார் கலெக்டர்.இந்த சம்பவம் நடந்த சிறிது நாளில் சத்யாவின் எட்டாம் வகுப்பு படிப்பு புங்கப்பட்டணம் பள்ளியில் நிறைவடைந்ததது. அவன் விடுமுறையில் இருந்தான். மேற்கொண்டு படிக்க வைக்க கிராமத்தில் வசதி இல்லை. எனவே சத்யா கவிதைகளை எழுதியே பொழுது போக்கி வந்தான். ஊரெங்கும் தினமும் பகல் வேளையிலும் பஜனை சத்தம் கேட்டது. ஈஸ்வராம்பாவுக்கு மகனை வெளியூருக்கு அனுப்பி மேல்படிப்பு படிக்க வைக்க விருப்பமில்லை. சத்யாவைப் பிரியும் மனோபாவம் அவளிடம் இல்லை. இந்த நேரத்தில் சத்யாவின் அண்ணன் சேஷமராஜூ, தாயாரிடம் ஒரு யோசனை சொன்னார்.அம்மா! சத்யா இங்கு இருந்தால் பஜனை, கச்சேரி, நாடகம், கவிதை என்று பொழுதை போக்கி விடுவான். அதனால் அவனை கமலாப்பூருக்கு அனுப்பி விடுவோம். (கமலாப்பூர் ஆந்திராவின் கடப்பை மாவட்டத்தில் உள்ளது). அங்கே இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் அவன் மேல்படிப்பு படிக்கட்டும், என்றார்.

ஈஸ்வராம்பா மறுத்து விட்டார்.என் மகனை பிரியும் சக்தி எனக்கில்லை. அவனுக்கு வயதும் குறைவு. வெளியூரில் தங்கிப்படிக்கும் அளவுக்கு அவனுக்கு வயது இல்லை. நான் அனுப்ப மாட்டேன், என்றதும், கணவர் வெங்கப்பராஜூவின் காதில் இது விழுந்தது.ஈஸ்வரா! உன் மகன் மீது உனக்கிருக்கும் பாசத்தை விட ஒரு மடங்கு அதிகமாகவே எனக்கும் இருக்கிறது. இங்கிருந்தால், அவன் நாடகத்தோடு வாழ்க்கையை முடித்து விட வேண்டியது தான். ஆனால் உயர்கல்வி படித்தால் அவனுக்கு சர்க்கார் உத்தியோகம் கிடைக்கும். நல்ல கவுரவமான வாழ்க்கையை சத்யா அமைத்துக் கொள்வான். என் நாடகத் தொழில் என் மகனுக்கு வேண்டாம், என்றார்.கணவரின் சொல்லில் நியாயம் இருப்பதை ஈஸ்வராம்பா புரிந்து கொண்டார். சத்யா கமலாப்பூரில் வசித்த சேஷமராஜூவின் மாமனார் வீட்டில் தங்க முடிவாயிற்று.சத்யா புறப்பட்டு விட்டான். ஊரே கண்ணீர் விட்டது. அவனை அன்போடு வளர்த்த பக்கத்து வீட்டு சுப்பம்மா வடித்த கண்ணீருக்கு அளவே கிடையாது. அது சித்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கையே ஏற்படுத்தி விடும் போல் தெரிந்தது.தெய்வப்பிறவியான சத்யாவுக்கே கூட சற்று கலக்கம் தான். கிராமத்திலுள்ள தன் அன்பு நண்பர்கள், நாடகக்கலைஞர்கள். வேளாவேளைக்கு அமுதூட்டிய அன்னை, தன்னை கண்ணின் மணிபோல் காத்த பக்கத்து வீட்டு அன்னை சுப்பம்மா, நாடகத்தில் புகழ் பெறக்காரணமான தந்தை, பள்ளி செல்லும் போதெல்லாம் அலங்கரித்து அனுப்பிய சகோதரிகள்...அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான் சத்யா.பிரிவுத்துயரை வெளிக்காட்டாமல் தன் அண்ணனுடன் கமலாப்பூருக்கு கிளம்பி விட்டான். எல்லாரும் அழுதனர். நண்பர்கள் அழுத அழுகை அனைவரையும் கலக்கியது. புட்டபர்த்தியே களை இழந்தது போன்ற பிரமை. ஊரை விட்டு தெய்வமே வெளியேறுவது போன்ற உணர்வு... சத்யா வண்டியேறி விட்டான்.
--------------------------
சாய்பாபா -பகுதி 6

ஈஸ்வராம்பாவுக்கு மனதில் ஏற்பட்ட பயம் இன்னும் தீரவில்லை. என்ன இருந்தாலும், ஒரு ஆசிரியரை சத்யா எழவிடாமல் செய்தது அவரது மனதை வெகுவும் பாதித்தது.இது என்ன பெரிய மனுஷத்தனம்...இதனால் சத்யாவின் எதிர்காலம் பாதிக்குமே, என மற்ற ஆசிரியர்களிடம் வருத்தப்பட்டு சொன்னார் ஈஸ்வராம்பா. ஆனால் ஆசிரியர்கள் யாரும் சத்யாவைக் குறை சொல்லவில்லை.அம்மா! சத்யாவால் இப்படி செய்ய முடிகிறதென்றால் ஏதோ தெய்வீக சக்தி அவனுள் அடங்கி இருக்கிறது என்றே பொருள். நீங்கள் கலங்க வேண்டாம். நாங்கள் சத்யாவை தெய்வமாகவே மதிக்கிறோம், என்றனர்.ஆசிரியர்களின் ஒட்டு மொத்த கருத்து ஈஸ்வராம்பாவை மேலும் கலங்கடித்தது. தெய்வப்பிறவி என்பதால் சத்யாவை கண்டிக்க ஆசிரியர்கள் தவறினால் அவனது எதிர்காலம் என்னாகுமோ என கலங்கினார். கஸ்தூரி என்ற ஆசிரியர் இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்ட முன் வந்தார்.நான் சத்யாவிடம் இதுபற்றி கேட்கிறேன், என்றவர், சத்யாவின் வகுப்பறைக்கு சென்று அவனைத் தனியாக அழைத்தார்.சத்யா! நீ தெய்வப்பிறவி என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக ஒரு ஆசிரியரை எழவிடாமல் செய்தது, அவரை அவமானப்படுத்துவது போல் ஆகாதா? என்றார்.இதற்கு சத்யசாயிபாபா, நான் தெய்வப்பிறவி அல்ல. நானே தெய்வம். தெய்வத்தை மனிதன் சோதிக்க முயலும் போது தெய்வம் மனிதனை என்ன செய்யுமோ அதைத்தான் செய்திருக்கிறேன். என்னை தெய்வம் என்று அடையாளம் காட்ட இதுபோன்ற லீலைகளைச் செய்கிறேன், என்றார்.ஆசிரியர் கஸ்தூரி இதை ஏற்றுக் கொண்டார். சாயிபாபாவின் சீடராக மாறினார். தெய்வப்புராணங்களை புரட்டினால் அரக்கர்கள் தெய்வ சக்திக்கு எதிராகவே செயல்பட்டு வந்திருக்கிறார்கள். தெய்வத்திடமே வரம் பெற்று, தெய்வத்திற்கு எதிரான நிலையை எடுப்பார்கள். சத்யா விஷயத்திலும் இது உண்மையாயிற்று.சத்யாவிற்கு எதிராக ஒரு கூட்டம் கிளம்பியது. தாத்தா கொண்டமராஜூவின் வம்சாவழியினருக்கு ஏராளமான குழந்தைகள் இருந்தனர். எல்லாருமே சத்யாவின் வீட்டில் தான் தங்கியிருந்தனர். இவர்களும் சத்யாவின் பள்ளியில் படிப்பவர்கள் தான். சத்யாவிற்கு ஏற்படும் புகழைத் தாங்கும் சக்தி இவர்களிடம் இல்லை. பொறாமையால் சத்யாவை மட்டம் தட்டுவது என முடிவெடுத்தனர்.

அன்று சத்யா பள்ளிக்கு போய்க் கொண்டிருந்தான். சித்ராவதி ஆற்றைக் கடந்து தான் சத்யா பள்ளிக்கு சென்றாக வேண்டும்.சத்யா! நீ தான் கடவுளாச்சே! எங்கே எங்களுடன் போட்டிக்கு வா! நாம் சண்டை போடுவோம். யார் வெற்றி பெறுகிறார்கள் என பார்ப்போம், வாப்பா, என்றனர்.சத்யா அவர்களைப் பார்த்து புன்முறுவல் செய்து விட்டு தன் வழியில் சென்றான். டேய்! அவன் சரியான பயந்தாங்கொள்ளிடா! அவனாவது, நம்மகிட்ட வாலாட்டுவதாவது, எனக் கேலி செய்தனர்.மனிதர்களின் கேலிக்கு தெய்வம் பணிந்தால் மனிதனுக்கும், தெய்வத்துக்கும் என்ன வித்தியாசம்...அந்த தெய்வமகன் எதையும் சட்டை செய்யாமல் நடந்து கொண்டே இருந்தான்.உடனே சத்யாவின் அனைத்து உறவு பையன்களும் ஆத்திரமடைந்தனர். அவன் கையைப்பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக சண்டைக்கு இழுத்தனர். சத்யாவை அடித்து துவைத்தனர். சத்யாவின் அழகான உடைகள் கலைந்தன. சத்யாவை ஆற்றுமணலில் போட்டு புரட்டி எடுத்தனர். கண்டு கொள்ளவே இல்லை சத்யா.அடித்தவர்களின் கைகள் வலித்தன. சத்யாவை தரதரவென இழுத்துக் கொண்டு போய், ஒரு முள்புதர் அருகே போட்டுவிட்டனர்.சத்யா அமைதியே வடிவாக எழுந்து பள்ளிக்குச் சென்றான். அவன் தலையும், உடையும் கலைந்திருப்பதைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.சத்யா என்ன நடந்தது? என அவர்கள் விசாரித்தனர்.
அடி கொடுத்து விட்டு வகுப்பில் நல்ல பிள்ளைகள் போல் அமர்ந்திருந்த சத்யா ஏதும் நடக்கவில்லை என்றே சொன்னான்.அதற்குமேல் ஆசிரியர்கள் ஏதும் கேட்கவில்லை. ஆனால் மாலையில் வீடு திரும்பியதும், சத்யாவின் அழுக்கடைந்த உடையையும், கலைந்த கேசத்தையும் கண்ட அன்னை ஈஸ்வராம்பா சத்யாவைக் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்து விட்டார். சத்யா, சொல், உடைகள் அழுக்காக காரணம் என்ன? முடி இப்படி கலைந்திருக்கிறதே! அம்மாவிடமும் ஏதும் நடக்கவில்லை என்றே சொன்னான் சத்யா. அம்மா! இன்று காலையில் பஜனை நடந்தது. எல்லாரும் பஜனை பாடினார்கள், என்றான்.

ஆம்! தெய்வத்தை போற்றினாலும், தூற்றினாலும் அது பஜனையாகவே ஆகிறது...அதனால் தான் பாபா இப்படி சொல்லி இருக்க வேண்டும்.மறுநாள் விடுமுறை. அம்மா சத்யாவைக் காணாமல் வெளியே தேடிச் சென்றார். தோப்பிலிருந்து இனிமையான சங்கீதம் கேட்டது. பண்டரிநாதனை வாழ்த்தி பஜனைப்பாடல் கேட்டது. இதுவரை கேட்காத பாட்டு அது.இவ்வளவு அழகாக புத்தம்புது பாடலை இசை அமைத்து ராகத்துடன் பாடுவது யார்? உடன் ஏராளமானோர் பாடுகிறார்களே!ஈஸ்வராம்பா தோட்டத்திற்கு சென்றார். அங்கே சத்யா நடுநாயகமாக வீற்றிருந்து இனிமையாகப் பாட, மற்றவர்கள் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தனர்.ஈஸ்வராம்பா தன் மகனுக்கு இந்த இளம்வயதிலேயே பாடல் இயற்றி பாடும் திறமை வந்தது பற்றி பெருமை கொண்டார். அதே நேரம் தாய்மைக்கே உரிய கனிவுடன், இவனுக்கு கடும் திருஷ்டி ஏற்படுமே, எனக் கவலையும் கொண்டார்.அன்று மதியம் பெருமழைக்கான அறிகுறி தெரிந்தது. அவ்வூரில் புது வீடு கட்டிக் கொண்டிருந்த வெங்கம்மா, தன் செங்கல் சூளையை எப்படி காப்பாற்றுவது என கவலை கொண்டாள். மிகவும் சிரமப்பட்டு கடன் வாங்கி, பச்சை செங்கல்களை அடுக்கி அவற்றை சுடுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யும் போது மழை கொட்டினால் என்னாவது. கவலையுடன் இருந்த அவளுக்கு ஒரு பெரியவர் உதவ முன்வந்தார்.தன் வயலில் இருக்கும் கரும்புத்தோகையைக் கொண்டு வந்து சூளை மீது போட்டு விட்டால் மழைத்தண்ணீரில் இருந்து சூளையை ஓரளவு பாதுகாக்கலாம் என யோசனை சொன்னார் பெரியவர்.எல்லாரும் வயலுக்கு புறப்பட்டனர். சத்யா இல்லாமலா...அவனும் அவர்களுடன் புறப்பட்டான். பாதி வழி சென்றதும் வானம் மேலும் இருட்டியது. சத்யா எல்லாரையும் தடுத்து நிறுத்தினான்.வேண்டாம்! யாரும் வயலுக்கு செல்ல வேண்டாம். இனிமேல் மழை பெய்யாது,என்றான்.வானம் கருத்து மேகம் புடைசூழ்ந்து நிற்கும் போது இவன் இப்படி சொல்கிறானே! இவனுக்கு என்னாச்சு, அனைவரும் திகைத்தனர்.ஊரார் சத்யா சொன்னதை ஆரம்பத்தில் நம்பவில்லை. அவர்கள் சித்ராவதி நதியைக் கடந்து, வயலில் இருக்கும் கரும்புத்தோகையை எடுத்து வர கிளம்பினார்கள். சின்னப்பையன்... அவனுக்கு என்ன விபரம் தெரியும்? நாம் புறப்படுவோம். மழை வருவதற்குள் கரும்புத்தோகையை எடுத்து வந்து வெங்கம்மாவின் செங்கல் சூளையில் வைப்போம், என்றார் ஒரு பெரியவர்.சத்யா மீண்டும் அடித்து சொன்னான். அவனை நம்பும் சிறுவர்களைத் தவிர வேறு யாரும் அவன் சொன்னதைக் கேட்கவில்லை. வானமோ இன்னும் கருத்தது. சத்யா சொன்னது இதுவரை பொய்த்ததில்லை. ஆனால் வானம் மேலும் மேலும் கறுக்கிறதே! இவன் சொன்னது போல் நடக்காதா? அப்படியானால் இவனது மகிமை என்னாவது? சத்யாவின் நண்பர்கள் கவலைப்பட்டனர்.சத்யாவின் சொல்லைக் கேட்காமல் புறப்பட்டவர்கள் ஆற்றங்கரை வரை தான் சென்றிருப்பார்கள். வானம் திடீரென வெளுத்தது. பெரும் காற்றடித்தது. மேகக்கூட்டம் போன திசை தெரியவில்லை. சத்யாவின் சொல்வாக்கை அப்போது தான் எல்லாரும் உணர்ந்தனர். புறப்பட்டு சென்ற அனைவருமே அவனிடம் ஓடி வந்தனர்.நீ தெய்வப்பிறவி என்பதில் சந்தேகமே இல்லையப்பா! பெரும் மழை பெய்யும் என எதிர்பார்த்தோம். வெங்கம்மாவின் சூளையைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் உன் சொல்லைக் கேட்காமல் போனோம். ஆனால் உன்னைப் புரியாத இந்த ஜென்மங்களுக்கு புத்தி புகட்டி விட்டாய் என அனைவரும் கூறினர். அப்போது அங்கே மழை பெய்தது. என்ன மழை...கண்ணீர் மழை...சத்யாவின் பெருமையை நினைத்து அவனது ஊரார் வடித்த ஆனந்தக் கண்ணீர் மழை! சத்யா பதிலேதும் சொல்லவில்லை. அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே புறப்பட்டான். அவனது நண்பர்களுக்கோ தங்கள் தலைவன் செய்த அற்புதத்தை நினைத்து மிகவும் பெருமை. ஒரு சிறுவன் ஈஸ்வராம்பாவிடம் ஓடிப் போனான்.

நடந்ததை வரிவிடாமல் சொன்னான். அவர் ஆச்சரியப்பட்டார். பக்கத்து வீட்டு சுப்பம்மாவிடமும் சம்பவம் பற்றி சொன்னார். சுப்பம்மா மகிழ்ச்சியுடன், ஈஸ்வராம்பா! அவன் உனக்கு மட்டுமா பிள்ளை..எனக்கும் பிள்ளை தான். என் பிள்ளை இதை மட்டுமா செய்வான்...ஒரு காலத்தில் உலகமே அவனைப் பார்க்க வரிசையில் காத்துநிற்கும்... வேண்டுமானால் பார்... என பெருமை பொங்க சொன்னார்.ஒருநாள் ஊரில் திருவிழா. கதாகாலட்சேபம் நடத்துவதென முடிவாயிற்று. என்ன தலைப்பு கொடுக்கலாம் என சிந்தித்தனர். பிரகலாதன் கதை சொல்வதென முடிவாயிற்று.காலட்சேபம் நடந்து கொண்டிருந்தது. பிரகலாதன் தன் தந்தை இரண்யனிடம், வாதாடிக் கொண்டிருந்த காட்சி வந்தது.எங்கே உன் நாராயணன்? கர்ஜிக்கிறார் இரண்யன் போல் காலட்சேபம் செய்பவர். பின்பு அவரே குரலை மாற்றி, அவர் இந்தத் தூணில் கூட இருக்கிறார், என்று பிரகலாதன் போல சொல்கிறார்.இரண்யன் கதாயுதத்தால் தூணை பிளக்கும் காட்சியை ஆவேசமாக அவர் சொல்லவும், கதை கேட்டுக் கொண்டிருந்த சத்யா, ஊய் என சத்தமிட்டபடி ஆட்டம் போட்டான்.கிருஷ்ணரின் அவதாரமான சத்யா நரசிம்மராகவே மாறிவிட்டான். அவனை அடக்க யாராலும் இயலவில்லை. பெரியவர்கள் அவன் அருள் வந்து ஆடுவதைக் கண்டு பரவசமும், பயமும் கொண்டனர். நரசிம்ம பகவானே! நீங்கள் சாந்தமடைய வேண்டும், என சில தைரியசாலிகள் கூறினர்.ஆனால் சத்யா அடங்கவில்லை. பின்பு ஊரிலுள்ள பயில்வான்கள் சிலர் வரவழைக்கப்பட்டு, சத்யாவை அடக்க வேண்டியதாயிற்று. இதன் பிறகு, சத்யாவை ஊர்மக்கள் கிருஷ்ணனாகவே பார்க்க துவங்கினர். சத்யாவின் தந்தை வெங்கப்பராஜூவும் சிறந்த நாடக நடிகர். சத்யாவை நாடகங்களில் ஈடுபடுத்தினால் என்ன என்று அவருக்கு தோன்றியது. சத்யாவுக்கு பிடித்த பக்தி நாடகங்களை நடத்துவோம் என முடிவு செய்தார். அவரே சொந்தமாக நாடகங்களை தயாரித்தார். அதில் நடிக்க சத்யாவுக்கு விருப்பமா எனக் கேட்டார்.சத்யா நீ கிருஷ்ணனாக நடிக்கிறாயா?சத்யா சிரித்தான்.

இறைவனுக்கே வந்த சோதனை என்பது இதுதானோ? கிருஷ்ணனிடமே கிருஷ்ணனாக நடிக்கிறாயா என தந்தை கேட்கிறாரே! எனினும் இப்பிறவியில் சத்யாவைப் பெற்ற தந்தை அல்லவா அவர்? தந்தையின் சொல்லுக்கு மகன் கட்டுப்பட்டான்.கிருஷ்ணனாகவே அவன் மேடைகளில் உருமாறினான். அவனது நடிப்பு எல்லாரையும் கவர்ந்தது. சத்யா மேடையில் வந்தாலே கை தட்டல் தான். பெண் வேடமிட்டும் சத்யா நடித்தான். கிருஷ்ணன் மோகினியாக அவதாரம் எடுத்தவராயிற்றே! எனவே மோகினியாகவும் வேடமிட்டு நடித்தான். கிருஷ்ணனுக்கு பிடித்த திரவுபதியாக நடித்தான். ஏழெட்டு சேலைகளை உடலில் கட்டிக் கொண்டு, துச்சோதனன் துயில் உரியும் காட்சியில் தத்ரூபமாக நடிப்பு அமைந்தது.ஒரு நாடகத்தில் சத்யாவை வெட்டப்போவது போல ஒரு காட்சி. ஈஸ்வராம்பா பயந்து போனார். மேடைக்கு தாவி ஓடி, என் மகனை வெட்டாதீர்கள், என கூக்குரல் இட்டார். சத்யா உட்பட எல்லாரும் சிரித்து விட்டனர்.அம்மா! இங்கு நாடகம் தானே நடக்கிறது? ஏன் பயப்படுகிறீர்கள்? என்றான் சத்யா.பெற்றவள் அந்த அளவு தன் பிள்ளை மீது பாசம் வைத்திருந்தாள்.ஊருக்கு அவன் தெய்வம் போல காட்சி தரலாம். ஆனால் எனக்கு அவன் பிள்ளையல்லவா? என்றே தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்வார் ஈஸ்வராம்பா. இந்தநேரத்தில் தான் பக்கத்து ஊர்களில் காலரா பரவியது. பலர் இறந்து போனார்கள். புட்டபர்த்தியையும் காலரா தாக்கும் என பஞ்சாயத்தில் எச்சரித்தனர். மக்கள் கலவரம் அடைந்தனர். என்னாகுமோ ஏதாகுமோ என்ற பீதி எங்கும் ஏற்பட்டது. அன்று சத்யாவின் உள்ளத்தில் ஒரு மகானைப் பற்றிய எண்ணம் ஏற்பட்டது. மகானின் மனதில் இடம் பெற்ற அந்த மகான் யாராக இருக்கும்?
--------------------------
சாய்பாபா - பகுதி 5

சாப்பாட்டையே தொடாத நெய் வாசனை சத்யாவின் கைகளில் இருந்து வந்தது ஈஸ்வராம்பாவுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. அவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால் அவன் தெய்வம் அல்லவா? பகவான் கிருஷ்ணனின் அவதாரம் அல்லவா அவன்? அவனது கையிலிருந்து நெய் வாசம் வர கேட்கவா வேண்டும்? கோகுலத்தில் அவன் தின்னாத வெண்ணெயா? நெய்யா? அதன் மணம் எத்தனை யுகங்கள் கடந்தாலும், அவன் உடலில் அந்த வாசனை ஒட்டியிருக்கத்தானே செய்யும்? இதை அன்னையால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. சத்யாவை ராமலீலா ஊர்வல வண்டியில் ஏற்றிய அர்ச்சகரிடம், அவனை வண்டியில் எப்படி ஏற்றினீர்கள்? எனக் கேட்டார் ஈஸ்வராம்பா. குருவை ஏற்ற என்ன தயக்கம்? என்று பதிலளித்தார் அவர். குருவா? யாருக்கு யார் குரு?. அம்மா! தங்கள் மகன் இந்த ஊரில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குருவாக இருக்கிறான். அவனை தங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்டுள்ளனர் குழந்தைகள். அவர்கள் எல்லாருமாக சேர்ந்து அவனை வண்டியில் ஏற்றச் சொன்னார்கள். அவனை வண்டியில் ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னை அறியாமலே உந்தியது. அவனை ஏற்றி வந்தேன், என்றார் அர்ச்சகர். ஈஸ்வராம்பாவுக்கு தன் மகன் மற்ற குழந்தைகளை விட உயர்ந்த நிலையில் இருக்கிறான் என்பதை நினைத்து பெருமையாக இருந்தது. ஆனால் பகவானாக பிறந்தவர், தன்னை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் தானாகவே அமர்ந்து வந்தார் என்ற உண்மை அவர்கள் யாருக்கும் புரியவில்லை. குழந்தைகள் சத்யாவை விரும்ப ஒரு காரணம் இருந்தது. அவ்வூரில் திண்ணைப்பள்ளிகள் மட்டும் தான் உண்டு. எழுதப்படிக்க தெரிந்தவர்கள் சிலரே. அவர்களே ஆசிரியர்களாக இருப்பார்கள். சூரிய உதயம் ஆனவுடனேயே வகுப்புகள் ஆரம்பித்து விடும். பல குழந்தைகளின் உடம்பில் துணியே இருக்காது.

சத்யாவுக்கு ஈஸ்வராம்பா சட்டை அணிவித்து அனுப்புவார். அவன் அதிகாலை குளிரில் நடுங்கும் தன் சக நண்பர்களை பார்த்துக் கொண்டே இருப்பான். சிரமத்துடன் கல்வி கற்றனர் அவர்கள். அவர்களுக்கு சட்டை கொடுத்தால் என்ன என்ற எண்ணம் சத்யாவுக்கு ஏற்பட்டது. வீட்டில் தனக்காக வைத்திருந்த சட்டைகள், துண்டுகளை எல்லாம் எடுத்து வந்தான். குழந்தைகளுக்கு அணிவித்தான். வீட்டில் எல்லாருக்கும் இது தெரியும். ஆனால், சத்யா! இப்படி செய்யலாமா? உன் சட்டைகளை மற்ற குழந்தைகளுக்கு கொடுத்து விட்டால் நீ என்ன செய்வாய்? என்று கேட்க குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தயக்கம். தர்மவானாக அல்லவா வளர்கிறார் நமது பாபா. அவரது செயல்களை தடுக்க வல்லவர் யார்? கீதையிலே கண்ணன் சொன்னது போல, உலகில் எப்போது அநியாயம் தலைதூக்குகிறதோ அப்போது நான் அவதாரம் எடுப்பேன், என்று சொல்லியதை நிறைவேற்ற வந்துள்ள மகான் அல்லவா அவர். அவர் இன்னும் என்னென்ன அற்புதங்களை நிகழ்த்தப் போகிறாரோ? சிறு வயதிலேயே அவர் தர்ம காரியங்களுடன் அற்புதங்களையும் செய்யத் தொடங்கி விட்டார். சத்யா திண்ணைப்பள்ளிக்கூடத்தில் அடிப்படை படிப்பை முடித்து ஆரம்பக் கல்விக்காக புக்கப்பட்டணம் செல்ல வேண்டியதாயிற்று. புட்டபர்த்தியிலிருந்து 5 கி.மீ.தொலைவில் இருந்தது புக்கப்பட்டணம். காலையில் புறப்பட்டால் இருட்டிய பிறகு தான் வீடு வருவான் சத்யா. செல்லும் வழியெல்லாம் முட்புதர்கள் அடர்ந்திருக்கும். கற்கள் குவிந்து கிடக்கும். ஒரு ஆற்றிலும் இறங்கி அதை கடக்க வேண்டும். சத்யா இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்டதில்லை. அவன் தினமும் நடந்தே சென்று வருவான். இந்தக் கால குழந்தைகள் ஆட்டோவிலும், பஸ்களிலும் பள்ளிக்கு செல்கிறார்கள். அவர்கள் பாபா சிறுவயதில் தினமும் 10 கி.மீ. நடந்தே சென்று படித்து வந்ததை உணர வேண்டும். அவரை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு சிரமப்பட்டு படிக்க வேண்டும்.

சத்யாவின் நினைப்பெல்லாம் தன் சக மாணவர்களை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்வது என்பது தான். அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுப்பான். தன் சட்டை பைக்குள் கையை விடுவான். ஏதாவது பலகாரம் வரும். நண்பர்களுக்கு கொடுப்பான். எத்தனை பேர் கேட்டாலும் கொடுப்பான். சத்யா! உன் சட்டைப் பையில் ஒன்றுமே இல்லை. இருந்தாலும் கையை விட்டால் பண்டங்கள் வருகின்றன. அது எப்படி? என்பார்கள் நண்பர்கள். சத்யா அவர்களுக்கு புன்முறுவலையே பதிலாகத் தருவான். அவனது செய்கை அவர்களுக்கு ஆச்சரியம் தந்தது. அவனை புக்கப்பட்டணம் பள்ளி மாணவர்களும் குரு என்றே அழைத்தனர். பகவானுக்கு நாம் படையல் வைக்கிறோம். பூஜை முடிந்ததும் நாமே சாப்பிட்டு விடுகிறோம். இதை பிரசாதம் என்கிறோம். பிரசாதம் என்பது பகிர்ந்தளிக்கப்படுவது. ஆண்டவனுக்கு நாம் ஆத்மார்த்தமாக கொடுக்கும் பொருளை அவன் நமக்கு பகிர்ந்தளிக்கிறான் என்பதே பிரசாதத்தின் தத்துவம். ஆனால் சத்யா தனக்கென்று எதையும் எதிர்பார்ப்பதில்லை. மதிய உணவாகக் கொண்டு வரும் பழையசாதத்தையும், ஊறுகாயையும் கூட பசிக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடுவான். பள்ளிப் பிள்ளைகள் சத்யாவை ஆராய ஆரம்பித்தார்கள். சத்யாவால் எப்படி வெறும் பையில் இருந்து தின்பண்டங்கள் தர முடிகிறது என்பதே அந்த ஆராய்ச்சி. இறைவனை மனிதன் என்றுமே ஆராய்ந்து வந்திருக்கிறான். நாத்திகன் அவன் இருக்கிறானா என ஆராய்கிறான். ஆஸ்திகன் அவன் இருக்குமிடத்தையும், அங்கு சென்று எப்படி அவனை அடைவது என்றும் ஆராய்கிறான். ஆக ஆத்திகன், நாத்திகன் இருவருமே இறைவனை ஆராய்கிறார்கள். அவனைப் பார்த்து விட துடிக்கிறார்கள். அவர்கள் அவனை அடையச் செல்லும் பாதை தான் வித்தியாசமானது. சத்யாவுடன் படித்த அந்தக் குழந்தைகளும் கூட தெய்வக்குழந்தைகளே! அவர்களை நினைத்தால் ஒரு வகையில் பெருமையாகவும், ஒரு வகையில் பொறாமையாகவும் இருக்கிறது. ஏன் நாமும் அந்தக் கூட்டத்தில் ஒருவனாக இல்லை? என்றே நமக்கு எண்ணத் தோன்றுகிறது. அவரது கடைக்கண் பார்வை படாதா என்று இப்போதும் ஏங்கும் உள்ளங்கள் எத்தனை? ஆனால் அவரோடு வாழ்ந்த குழந்தைகளை, அவரது அருட்பிரசாதம் பெற்ற குழந்தைகளை வணங்கத் தோன்றுகிறது. சத்யாவிடமே குழந்தைகள் தங்கள் சந்தேகத்தை கேட்டார்கள். சத்யா..வெறும் பையிலிருந்து எப்படி பண்டங்களை வரவழைக்கிறாய்?. சத்யாவின் பதிலுக்காக அவர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.சத்யா தன் நண்பர்களிடம் அழகாக பதில் சொன்னான்.இது ஒன்றும் அதிசயமில்லை. நம் கிராம தேவதை ஒன்று இந்த பண்டங்களை எனக்கு தந்து கொண்டிருக்கிறது. அதை உங்களுக்கு தந்து கொண்டிருக்கிறேன், என்றான்.குழந்தைகள் அவனை தெய்வமாகவே நினைக்க ஆரம்பித்தனர். ஆனால் சத்யாவின் இந்த நிலை அவனுக்கு சாதகத்தை விட பாதகத்தையே நிறைய தந்தது. அன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சத்யாவை அம்மா ஈஸ்வராம்பா கடுமையான வார்த்தைகளால் திட்டினார்.டேய் சத்யா! நீ இப்படியெல்லாம் செய்தா மாடு மேய்க்கத்தாண்டா போவே, அம்மா இவ்வளவு கடுமையான வார்த்தையை உதிர்த்து சத்யா கேட்டதே இல்லை. அவன் அம்மாவின் முகத்தை வருத்தத்துடன் ஏறிட்டு பார்த்தான்.அம்மா! நான் எந்தத்தப்பும் செய்யலையே?டேய்! பொய் சொல்றியா? இன்றைக்கு வகுப்பிலே ஆசிரியர் கொண்டப்பாவை என்னடா பண்ணினே? என்று அம்மா கேட்டதும் தான் சத்யாவுக்கு உறைக்க ஆரம்பித்தது. ஓ! அதுதான் அம்மாவின் கோபத்திற்கு காரணமா?அன்று வகுப்பறை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அந்தப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள். ஒருவர் கொண்டப்பா. இன்னொருவர் மகபூப்கான். மகபூப்கானுக்கு சத்யா மீது பிரியம் அதிகம். அவனுக்கு தான் கொண்டு வரும் இனிப்பு பண்டங்களைக் கொடுப்பார் அவர். ஆனால் சத்யா அதைச் சாப்பிட யோசிப்பான். அவர் ஒரு முஸ்லிம் என்பதால், வீட்டில் மாமிசம் சமைப்பார்கள். மாமிசம் சமைத்த பாத்திரத்தில் இந்த பண்டங்களையும் சமைத்திருப்பார்கள். எப்படி இதை சாப்பிடுவது? என்பது தான் சத்யாவின் தயக்கத்திற்கு காரணம். மகபூப்கான் இதைப் புரிந்து கொண்டார். ஒருநாள் தன் வீட்டை நன்றாக கழுவி, பெருக்கி, மெழுகி வீட்டை சுத்தமாக்கினார். புதுப்பாத்திரங்கள். புது எண்ணெய், புதிதாக மளிகைப் பொருள்கள் வாங்கி வீட்டில் பலகாரம் செய்யச் சொன்னார். அதை சத்யாவுக்கு எடுத்து வந்து கொடுத்தார்.

சத்யா! இன்று என் வீட்டை சுத்தமாக்கி, சுத்தமாக செய்து எடுத்து வந்த பலகாரம் இது. இதையாவது சாப்பிடேன், என்றார். ஆசிரியர் தன் மீது கொண்ட அன்பை எண்ணி வியந்தான் சத்யா. அது மட்டுமல்ல! சத்யா ஒரு சமயம் கடந்த தெய்வமாகவும் உருவாகி இருக்கிறான் என்பதையும் இந்த சம்பவம் எடுத்துக் காட்டியது. ஆசிரியர் கொண்டப்பா கண்டிப்பானவர். தான் பாடம் சொல்லித்தரும் போது மாணவர்கள் வேறு எங்காவது கவனத்தை செலுத்தினால் அவருக்கு பிடிக்காது. ஒருநாள் அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது சத்யா ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். கொண்டப்பா சத்யாவைக் கண்டித்தார்.சத்யா! நான் பாடம் நடத்தும் போது கவனிக்காம அங்கே என்ன செஞ்சுகிட்டிருக்கே! கொண்டப்பா சத்தம் போட்டார்.ஐயா! நான் இங்கே எழுதிகிட்டிருந்தாலும், நீங்க சொல்றதை கவனிச்சுகிட்டும் இருக்கேன். இதோ பாருங்க! பஜனை பாட்டு தான் எழுதிக்கிட்டு இருந்தேன்,.சத்யாவின் இந்த பதில் ஆசிரியரை எதிர்த்து பேசுவது போல் இருந்தது. அவருக்கு கோபம் அதிகமாகி விட்டது.சத்யா! செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்காம எதிர்த்தா பேசுறே! பெஞ்சு மேலே ஏறு! வகுப்பு முடியறவரைக்கும் நிக்கணும் புரியுதா! என்றார். சத்ய நாராயணன் அப்படியே செய்தான். அவன் தன் நண்பர்களுக்கு பஜனைப் பாடல்களை எழுதிக் கொடுப்பான். அதை வகுப்பு நேரத்திலேயே செய்வான். அதே நேரம் பாடங்களில் கோட்டை விட்டதில்லை. எல்லா பாடங்களை படிப்பதிலும் படுசுட்டி சத்யா.அடுத்த பீரியட் ஆரம்பமானது. கொண்டப்பா பக்கத்து வகுப்புக்கு கிளம்ப தயாரானார். மகபூப்கான் உள்ளே வந்தார். அவர் சத்யா பெஞ்சு மீது நிற்பதைப் பார்த்ததும் கலவரம் அடைந்தார்.தெய்வத்தை தண்டிக்கும் அதிகாரம் நமக்கேது! என பதறியபடியே சிந்தித்தவராய் நடந்த விஷயத்தை கொண்டப்பாவிடம் கேட்டார். கொண்டப்பா சொன்னதும், பரவாயில்லை, சிறுவன் தானே! தெரியாமல் செய்து விட்டான், விட்டு விடுங்கள், என கேட்டுக் கொண்டார்.

கொண்டப்பா மனம் இரங்கவில்லை. அவன் இன்று முழுவதும் நிற்கட்டும், என்றவர் நாற்காலியை விட்டு எழுந்தார். ஆனால் அவரால் எழ முடியவில்லை. வலுக்கட்டாயமாய் எழுந்த போது, நாற்காலியும் பின்பக்கமாய் ஒட்டிக் கொண்டு வந்தது.மகபூப்கான் நினைத்தது போலவே தான் நடந்தது. சத்யாவை பெஞ்சில் ஏற்றியதால், கொண்டப்பாவுக்கு ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதை தெரிந்து கொண்ட அவர், இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. குழந்தைகளெல்லாம் சிரித்தனர்.ஐயா! எங்கள் குருவை கீழே இறக்குங்கள். இல்லாவிட்டால் நாற்காலி உங்களை விடாது, என்றனர். மகபூப்கானும் இதையே சொன்னார்.வேறு வழியின்றி சத்யாவை இறங்கச் சொன்னார் கொண்டப்பா. சத்யா இறங்கவும், ஒட்டிய நாற்காலி கீழே விழுந்தது.காண்டப்பா ஆச்சரியப்பட்டார். இவன் மகான் தான், சந்தேகமே இல்லை, என மனதில் நினைத்து அவனை கருணை பார்வை பார்த்தபடி வெளியே சென்றார்.இந்த சம்பவம் வீட்டுக்கு தெரியாமல் இருக்குமா? சக சிறுவர்கள் சத்யாவின் அம்மாவிடம் போய் சொல்லி விட்டார்கள். அம்மாவுக்கு கடும் கோபம்.அதன் விளைவு தான், அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தான் சத்யா. சத்யாவை கண்டித்து விட்டு, ஈஸ்வராம்பா தற்செயலாக வெளியே சென்றார். ஆசிரியர் கொண்டப்பாவை அவர் பார்த்தார். நடந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கெஞ்சும் தொனியில் கூறினார். ஆனால், கொண்டப்பா, அம்மா அப்படி சொல்லாதீர்கள். அவன் தெய்வம், நீங்கள் தெய்வத்தாய், என்று அக மகிழ்ந்து சொல்லவும் ஆச்சரியப்பட்டார் ஈஸ்வராம்பா.
--------------------
சாய்பாபா -பகுதி 4

தொட்டிலில் படுத்திருந்த சத்யாவின் தலையில் வட்ட வடிவ ஒளி தகதகவென மின்னிக் கொண்டிருந்தது. பார்க்க கண் கூச வைத்த அந்த ஒளி அனலாய் தகிக்குமோ என ஈஸ்வராம்பா நினைத்தார். ஆனால், அந்த ஒளி குளுகுளுவென்று இருந்தது. ஈஸ்வராம்பா அதைப் பார்த்தபடியே தன்னை மறந்து அமர்ந்து விட்டார். அந்த ஒளி நீண்ட நேரமாய் அப்படியே இருந்தது. பிறகு படிப்படியாக குறைந்து ஒரு கீற்று மட்டும் தெரிந்தது. இந்த நேரத்தில் மாமியார் லட்சுமம்மா உள்ளே வந்தார். அடித்து வைத்த சிலை அசையாமல் உட்கார்ந்திருந்த மருமகளை எழுப்பி, என்னம்மா நடந்தது? ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறாய்?  என்றார். நடந்த விபரத்தைச் சொன்னார் ஈஸ்வராம்பா. அதிசயப்பட்டார் லட்சுமம்மா. நான் சொல்லவில்லையா? உனக்கு பிறந்திருப்பது சாதாரண குழந்தை அல்ல. அவன் தெய்வ மகன். இந்த உலகத்தை காக்க வந்த கடவுள் அவன். இருந்தாலும் இங்கே நடந்ததை வெளியே சொல்லாதே. மற்றவர்கள் இதைக் கேட்டால் நம்பாமல் எள்ளி நகையாடுவார்கள். நமக்குள்ளேயே இதை ரகசியமாக வைத்துக் கொள்வோம், என்றார். சிறிது நேரத்தில் ஒளி மறைந்து விட்டது. அதன் பிறகே குழந்தைய தூக்கினார் ஈஸ்வராம்பா. சத்யா கிடுகிடுவென வளர்ந்தான். அவனது பொழுது பக்கத்து வீட்டு சுப்பம்மா வீட்டில் தான் கழியும். இவன் அங்கு போனால் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஏன் இவன் அங்கு போனால் சந்தோஷமாக இருக்கிறான். வீட்டுக்கு வந்தால் உம்மென ஆகி விடுகிறானே! ஈஸ்வராம்பாவுக்கு இதுவும் கவலையைத் தந்தது. இதற்கான காரணத்தை கண்டறிய முற்பட்டார். ஒருநாள் வீட்டில் கோழிக்கறி சமைக்க ஏற்பாடாயிற்று. பூஜை, புனஸ்காரம் என செய்தாலும், சத்யாவின் குடும்பத்தினர் அசைவமும் சாப்பிடுவர். அன்று சத்யாவைக் காணவில்லை. அவனைத் தேடிப் பார்த்தார்கள். வீட்டின் பின்புறத்தில் சத்யா கோழியை மார்போடு அணைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

இன்னும் சிறிது நேரத்தில், உன் உயிர் பறிபோய் விடுமே! உன்னைக்காப்பாற்ற என்னால் இயல்வில்லையே, என்று கண்ணீர் ததும்ப கோழியைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான் சத்யா. அவனது செய்கையை புரிந்து கொண்ட குடும்பத்தினர் கோழியை வெட்டாமல் விட்டு விட்டனர். அந்தக் குழந்தை சுப்பம்மாவை விரும்பியதற்கு காரணமே அந்த வீட்டில் இருந்த ஜீவகாருண்யம் தான். சுப்பம்மா பிராமணர் என்பதால், அங்கு மாமிசம் சமைப்பதில்லை. சத்யா சைவமாகவே இருக்க விரும்பினான். அவன் அசைவம் சமைத்த பாத்திரங்கள் அருகே கூட போக மாட்டான். சத்யாவின் செய்கைகள் எல்லாமே வித்தியாசம் தான். அவன் சக நண்பர்களுடன் ஆற்றுக்கு போவான். விளையாட்டும் ஆட்டமும் பாட்டமுமாக இருப்பான். ஆனால் வீட்டுக்கு வந்தால் மவுன ராகம் இசைத்து விடுவான். ஈஸ்வராம்பா பல பண்டங்களை அவனுக்கு செய்து கொடுப்பார். வேண்டாம் எனச் சொல்லி விடுவான். ஈஸ்வராம்பாவின் மனம் படாத பாடு படும். அவனது வீட்டுக்கு அனந்தப்பூரில் இருந்து வியாபாரிகள் துணிமணிகள் கொண்டு வருவார்கள். பார்க்க அழகாக இருக்கும் அந்தத் துணிகளை சத்யா கண்ணெடுத்தும் பார்க்க மாட்டான். உனக்கு பிடித்ததை எடு தாயே, என அம்மாவிடம் சொல்லி விடுவான். வீட்டிலுள்ள மற்ற குழந்தைகள் எல்லாம் விரும்பி எடுக்கும் விலை உயர்ந்த ஆடைகள் பற்றி சத்யா கவலைப்பட்டதில்லை. அவனுக்கு எளிய உடைகளே பிடித்திருந்தன. இதெல்லாம் ஈஸ்வராம்பாவுக்கு பெரும் வருத்தம் தந்தன. மகனை மற்ற குழந்தைகள் போல் நல்ல உடைகள் அணிவித்து, சீரும் சிறப்புமாக வளர்க்க வேண்டும் என்று எல்லாத் தாய்மார்களும் விரும்புவதைத் தான் ஈஸ்வராம்பாவும் விரும்பினார். ஆனால் சத்யா எளிமையே வடிவாக இருந்தான். பஜனைப் பாடல்களைப் பாடுவான். திருநீறை அள்ளி அள்ளி பூசுவான்.

ஒருமுறை ராமலீலா திருவிழா அன்று வீட்டில் சத்யா காணாமல் போனான். வீட்டில் உள்ளவர்கள் அவனை தேடி அலைந்தனர். அப்போது சிலர் ஒரு வண்டியில் ராமனின் படத்தை அலங்கரித்து எடுத்து வந்தனர். சத்யா அந்த படத்தின் கீழே அமர்ந்திருந்தான். இதைப் பார்த்த ஈஸ்வராம்பா, இவனை சப்பரத்தில் ஏற எப்படி பூஜாரி அனுமதித்தார், என ஆச்சரியப்பட்டார். இளமையிலேயே அவனுக்கு இரக்க சுபாவம் அதிகமாக இருந்தது. ஊரில் இருக்கும் பிச்சைக்காரர்கள் எல்லாம் இவனது இரக்க சுபாவத்தை பயன்படுத்தி, வீட்டிற்கே வர ஆரம்பித்தார்கள். சில சமயங்களில் சத்யாவும் இவர்களைத் தேடிப்போய் வீட்டுக்கு கூட்டி வந்து விடுவான். ஒருநாள் இவனது சாப்பாட்டையே ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுத்து விட்டான். அம்மா கண்டித்தார். நீ சாப்பிட்டாயா? என்றார். ஆமாம் அம்மா! பொய் சொல்லாதே சத்யா! நீ பிச்சைக்காரனுக்கு கொடுப்பதை நான் பார்த்தேனே. அம்மா! நானும் சாப்பிட்டேனே! தாத்தா எனக்கு சாப்பாடு தந்தாரே அம்மாவுக்கு சந்தேகம். தாத்தாவிடம் கேட்டார். நான் சாப்பாடு எதுவும் கொடுக்கவில்லையே, என்றார் தாத்தா. அம்மாவுக்கு கோபமே வந்து விட்டது. சத்யா திரும்பத்திரும்ப பொய் சொல்லாதே, என்று கோபமாக கேட்டதும், தன் கையை அம்மா முகத்தில் வைத்து, பாருங்கள்! நெய் வாசம் அடிக்கிறது, என்றான் சத்யா. அம்மாவுக்கு ஆச்சரியமாகி விட்டது.  இவனுக்கு நெய்ச்சோறு கொடுத்தது யார்?. வயிறு நிறைய சாப்பிட்டது போன்ற உணர்வுடன் இருக்கிறானே, என ஆச்சரியப்பட்டார்.
--------------------------
சாய்பாபா -பகுதி 3

இனிமையான அந்த இசை எங்கிருந்து வந்தது என கொண்டமராஜூவுக்கு புரியவில்லை. அதே நேரம் ஈஸ்வரம்மாவின் கணவர் வெங்கப்பராஜூவின் கனவிலும் அதே இசை கேட்டது. அவர் கலக்கமடைந்தவராய் மறுநாள் ஜோதிடர் இல்லத்திற்கு சென்றார். என் வீட்டில் கேட்கும் அந்த இசை எங்கிருந்து வருகிறது? என்றார். உங்கள் வீட்டில் யாராவது கர்ப்பமாக உள்ளார்களா? என்றார் ஜோதிடர். இதெப்படி அவருக்கு தெரிந்தது. நம் மனைவி அல்லவா கர்ப்பமாக இருக்கிறாள்? கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கும், இசைக்கும் என்ன சம்பந்தம்?. சிந்தித்த வெங்கப்பராஜூவின் முகத்தில் ஓடிய சலனங்களை வைத்தே புரிந்து கொண்ட ஜோசியர், சொல்லுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் அந்த கர்ப்ப ஸ்தீரி யார்? என்றார். என் மனைவி தான்,. நீங்கள் கொடுத்து வைத்தவர். உங்கள் மனைவியின் வயிற்றில் இருக்கும் அந்த குழந்தையை தூங்க வைக்கவே அந்த தேவகானம் எழுகிறது. அது ஒரு தெய்வக்குழந்தை, என்றார் ஜோதிடர். ஆச்சரியம், மகிழ்ச்சி, ஆர்வம் தொற்றிக் கொள்ள வீட்டிற்கு வந்தார் வெங்கப்பர். மனைவியை கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டார். 1926 நவம்பர் 22ம் தேதி இரவில் ஈஸ்வராம்பாவுக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. மாமியார் லட்சுமம்மா அருகிலிருந்த அர்ச்சகர் வீட்டில் நடந்த சத்யநாராயண பூஜைக்கு சென்றிருந்தார். மருமகளுக்கு பிரசவ வேதனை ஏற்பட்ட செய்தியை வேலைக்காரனிடம் சொல்லி அனுப்பினர். அவர் பிரசாதம் பெற்றுக் கொண்டு வருவதாக சொல்லி விட்டார். சற்று நேரத்தில் பிரசாதத்துடன் வீட்டுக்கு வந்தார். மருமகளுக்கு கொடுத்தார்.

கவலைப்படாதே! நிச்சயமாய் ஆண்மகன் பிறப்பான். அவன் உலகத்திற்கே சொந்தமானவனாக விளங்குவான், என்றார். நவம்பர் 23ம் தேதி காலை 5.06 மணிக்கு பிரசவம் நிகழ்ந்தது. பூவுலகம் மகிழ அவதரித்தார் தெய்வமகன் பாபா. அந்த வீட்டில் உள்ளவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அன்று கார்த்திகை மாதம் திங்கள்கிழமை திருவாதிரை நட்சத்திரம். பொதுவாக குழந்தை பிறந்ததும் என்ன செய்யும்? வீறிட்டு அழும். இந்தக்குழந்தையும் அழுதது. ஆனால் மெல்லிய குரலில் சிறிது நேரம் அழுது விட்டு ஓய்ந்து விட்டது. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டில் உள்ளவர்களெல்லாம் பார்க்க வந்தனர். அதிலும் அவர்களுக்கு அடுத்து, இரண்டாவது வீட்டில் வசித்த சுப்பம்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஜாதி வித்தியாசம் பாராத பெண்மணி அவர். அவரது கணவர் தான் அவ்வூர் கர்ணம். இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை. அதனால் குழந்தையைக் கண்டதும் அள்ளி, அணைத்து கொஞ்ச ஆசைப்பட்டு ஓடோடி வந்தார். அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பிரசவம் பார்த்த பெண் ஈஸ்வரம்மாவின் அருகில் கிடந்த குழந்தையைக் கவனித்தாள். குழந்தை படுத்திருந்த துணி மேலும் கீழும் அசைந்தது. ஏதோ மன பிரமை என நினைத்தவளின் கண்களில் திரும்பவும் துணி ஆடுவது தெரிந்தது. என்ன இது! துணி மேலும் கீழும் ஆடுகிறதே! குழந்தையும் மேல் நோக்கி எழுந்து தாழ்கிறதே! என சந்தேகப்பட்டவளாய், குழந்தையை தூக்கினாள். துணியின் அடியில் ஒரு பாம்பு சுருண்டு படுத்துக் கிடந்தது. துணியை தூக்கியவுடன் அது சென்று விட்டது. பயமும், வியப்பும் மேலிட பாம்பை பார்த்தாள் பிரசவம் பார்த்த பெண். ஆனால் அந்தப் பாம்பு நாராயணனை சுமக்க வந்த ஆதிசேஷன் போன்றது என்பதை அவளால் அறிய முடியவில்லை. இவ்வூருக்குள் பாம்பு வருவது சகஜம் என்ற அளவிலேயே எடுத்துக் கொண்டாள். சத்ய நாராயண பூஜை நேரத்தில் பிறந்ததால் குழந்தைக்கு, சத்யநாராயணன் என பெயர் வைத்தனர்.

சத்யா என்பது அவனது செல்லப்பெயர். சத்யாவின் அழகை கண்டு விரும்பி அவனைப் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாரும் தூக்கி சென்று கொஞ்சுவார்கள். இருப்பினும் கர்ணம் மனைவி சுப்பம்மாள் வீட்டில் தான் சத்யா நீண்ட நேரம் இருப்பான். வீட்டிற்கு வந்தால் தாத்தா கொண்டமராஜூவிடம் இருப்பான். அவர் தனியாக ஒரு கூரை அமைத்து அங்கு தங்கியிருந்தார். அங்கு தான் பூஜைகளைச் செய்வார். நம் வீட்டில் பூஜை நடக்கும் போது நம் குழந்தைகள் விளக்கை இழுக்கும். குங்குமத்தை கொட்டி விடும். தீப்பெட்டியை எடுத்து விளையாடும். இப்படி குழந்தைகள் செய்யும் எந்த சேஷ்டையையும் செய்வதில்லை சத்யா. அமைதியே வடிவாக இருப்பான். தாத்தா செய்யும் பூஜைகளை அந்த சின்ன வயதிலும் கூர்ந்து கவனிப்பான். அவன் அறைக்குள் இருந்தால், தாத்தாவுக்கும் பூஜை செய்யும் போது தனி பலமே வந்தது போல இருக்கும். விறுவிறுவென ஏற்பாடுகளைச் செய்து பூஜையைக் கவனிப்பார். சத்யா பிறந்து 9 மாதம் ஓடி விட்டது. அமைதியே வடிவாய் இருக்கும் தன் குழந்தையை பார்த்து தாய் ஈஸ்வராம்பாவுக்கு சற்று கலக்கமும் ஏற்படுவதுண்டு. அழக்கூட செய்வதில்லையே இந்தக் குழந்தை. இவன் ஏன் இப்படியே இருக்கிறான்?. மற்ற குழந்தைகளைப் போல துறுதுறுவென இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று எண்ணியபடியே சமையலறையில் பால் காய்ச்சி கொண்டிருந்தார். சற்று நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக தொட்டிலில் கிடந்த குழந்தை அழுதது. அழுகை நிற்கவில்லை; அதிகரித்தது. ஈஸ்வராம்பாவுக்கு சந்தேகம். அழாத குழந்தை வீறிட்டு அழுகிறது. பூச்சி எதுவும் கடித்து விட்டதா? குழந்தைக்கு வயிறு வலிக்கிறதா? பெற்ற தாயின் மனம் பரபரத்தது. அவர் கலங்கிப் போய், சத்யா ஏண்டா அழுகிறாய்? என்றவராய், சமையல்கட்டிலிருந்து வெளியே வந்து தொட்டிலைப் பார்த்தார். அப்படியே அதிர்ச்சியில் உறைந்து விட்டார். அங்கே....?
--------------------------