சனி, 24 ஆகஸ்ட், 2019

பாவம் போக்கும் 12 ஜோதிர்லிங்க துதி!

புனிதமும் அழகும் நிறைந்த சவுராஷ்டிர தேசத்தில் ஜோதிமயமாக இருப்பவரும்; தலையில் பிறைச் சந்திரனைச் சூடியவரும்; எல்லையற்ற கருணை காரணமாக எல்லாருக்கும் பக்தியை அளிப்பதற்காகவே அவதாரம் செய்தவருமாகிய சோமநாதர் என்ற சிவலிங்கத்தைச் சரணடைகிறேன். மேலான இமயமலையின் தாழ்வுப் பிரதேசத்தில், கேதாரம் என்ற இடத்தில் ஆனந்தமாகக் குடிகொண்டிருப்பவரும்; சிறந்த முனிவர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் யட்சர்களாலும் நாகர்களாலும் எப்போதும் பூஜிக்கப்படுபவரும்; இரண்டற்றவருமான கேதாரேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைத் துதிக்கிறேன்.

மிக உயர்ந்த ஸ்ரீசைலம் என்ற மலையில், அறிஞர்களின் சத்சங்கத்தில் மிகவும் மகிழ்ச்சியோடு வசிப்பவரும்; சம்சாரம் என்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு உதவும் தோணி போன்றவருமாகிய மல்லிகார்ஜுனர் என்ற சிவலிங்கத்தை வணங்குகிறேன். நல்லவர்களுக்கு முக்தி அளிப்பதற்காக அவந்திகா (உஜ்ஜயினி) நகரத்தில் அவதாரம் செய்தவரும்; தேவர்களுக்குத் தலைவனுமாகிய மகாகாலேஸ்வரர் என்ற சிவலிங்கத்தை எனக்கு அகால மரணம் நேராமல் இருக்கும் பொருட்டு வணங்குகிறேன்.  நர்மதை நதி பாயும் தூய்மையான இடத்தில், நல்லவர்களைக் காக்க எப்போதும் மாந்தாத்ரு என்ற ஊரில் வசிப்பவரும்; ஓங்காரேஸ்வரர் என்ற அத்விதீயருமான (இரண்டற்ற) சிவபெருமானை வணங்குகிறேன்.

வடகிழக்கு திசையில் கொழுந்துவிட்டு எரியும் தீ ஜ்வாலை உள்ள மயானத்தில் வசிப்பவரும்; கிரிஜா என்ற பார்வதிதேவியுடன் எப்போதும் சேர்ந்திருப்பவரும்; தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவருமாகிய வைத்தியநாதர் என்ற சிவலிங்கத்தை வணங்குகிறேன். தென்திசையில் மிகவும் அழகிய ஸதங்கம் என்ற நகரத்தில், நன்கு அலங்கரிக்கப்பட்ட அங்கங்களோடு நிகரற்ற செல்வங்கள் நிறைந்தவரும்; உயர்ந்த பக்தியையும் முக்தியையும் வழங்கும் ஒரே தெய்வமாகத் திகழ்பவருமாகிய நாகேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைச் சரணடைகிறேன்.

தாமிரபரணி நதி கடலில் கலக்கும் இடத்தில், எண்ணற்ற அம்புகளைக் கொண்டு அணையைக் கட்டிய ஸ்ரீராமராவ் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட ராமேஸ்வரர் என்ற சிவலிங்கத்தை முறைப்படி வணங்குகிறேன்.

அழகாகவும் விசாலமாகவும் இருக்கும் இளாபுரம் என்ற இடத்தில் விளங்குபவரும்; பெருங்கருணையைத் தமது இயல்பாகக் கொண்டவரும்; கிருஷ்ணேஸ்வரர் (குசுருணேஸ்வரர்) என்ற பெயர் பெற்ற வருமாகிய பரமேஸ்வரனைச் சரணடைகிறேன்.

புனிதமான ஸஹ்ய மலையில், பவித்ரமான கோதாவரி நதிக்கரையில் எழுந்தருளியிருப்பவரும்; எவருடைய தரிசனத்தால் எல்லாப் பாவங்களும் விலகி விடுகின்றனவோ, அந்த த்ரியம்பகேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைத் துதிக்கிறேன்.

டாகினீ, சாகினீ முதலிய பூதகணங்கள் வசிக்கும் இடத்தில், அரக்கர்களால் வணங்கப்படுபவரும்; என்றும் பீமேஸ்வரர் என்று புகழப்படுபவரும்; பக்தர்களுக்கு நன்மை செய்பவருமாகிய சங்கர பகவானுக்கு நமஸ்காரம் செய்கிறேன்.

காசியில் ஆனந்தபவனத்தில் பேரானந்தத்துடன் வசிப்பவரும், மகிழ்ச்சிக் குவியலாக விளங்குபவரும்; பாவம் அகற்றுபவரும்; வாரணாசியின் தலைவரும்; ஆதரவற்ற அநாதைகளுக்கு நாதனுமாகிய விஸ்வநாதரைச் சரணடைகிறேன்.

கருத்துகள் இல்லை: