செவ்வாய், 1 டிசம்பர், 2020

ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று  ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர். விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால்,  ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.

ஏகாதசியன்று இறந்தால் முக்தி கிடைத்துவிடுமா?

வைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும். ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விட முடியாது. ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். கிராமங்களில் மக்கள் இன்று வைகுண்ட ஏகாதசி. இன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்து விட்டார், என்பதற்கு வேறு காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி  என்பர்.

ஏகாதசியன்று செய்யக்கூடாதது

ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.

ஏழு பிரகாரம்

இந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களைக் கொண்ட கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மட்டுமே. இந்தப் பிரகராங்களின் வாசல் சுவர்களின் நடுவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக முதன்மை வாசல் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். ஆனால், இங்கு தெற்கு நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலின் பரப்பு 6 லட்சத்து 31 ஆயிரம் சதுரஅடி. அதாவது 156 ஏக்கர். ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு. உடலின் நடுவே ஆத்மா <உள்ளது போல, கோயிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார். மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனதாகச் சொல்வதுண்டு. இதன் அடிப்படையிலேயே ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டது.

துவாதசிக்கு  அகத்திக்கீரை

வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும். சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.


பலகோடி மடங்கு பலன் தரும் பாதரச லிங்கம்!

பலகோடி மடங்கு பலன் தரும் பாதரச லிங்கம்!

கோடிக்கணக்கான சிவலிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலன்களைவிட, பாதரச லிங்கத்தை பூஜிப்பதன் மூலம் பல மடங்கு பலன்களை எளிதில் பெற முடியும் என்கின்றன சாஸ்திர புராணங்கள்.  பிரம்மபுராணத்தின் கருத்துப்படி, மனதிலுள்ள ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் பாதரச லிங்கத்தை பூஜிக்கும் மனிதன் தன்யனாகிறான். யார் வேண்டுமானாலும் பாதரச லிங்கத்தை பூஜித்து எல்லா பவுதிக சுகங்களையும் அனுபவித்து, பரமபதத்தை அடைய முடியும். பிரம்மவைவர்த்த புராணம் சொல்லுவது என்னவென்றால் பாதரலிங்கத்தை விதிப்படியும் முறைப்படியும் ஒரே ஒரு முறை பூஜிப்பவர்கள்கூட சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளவில்லா சுகத்தைப் பெற முடியும்!

சிவ நிர்ணய ரத்னாகரம் என்ற நூலின் கருத்துப்படி கல்லாலான சிவலிங்கத்தை பூஜிப்பதைவிட கோடி மடங்கு நற்பலன், தங்கம் வேயப்பட்ட சிவலிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். அதைவிட பன்மடங்கு பலன் ரத்தினங்கள் பதித்த லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். ஆனால் அதைவிட பலப்பல மடங்கு பலன், பாதரச லிங்கத்தின் பூஜை அல்லது தரிசனத்தாலேயே கிடைக்கும். பாதரச லிங்கத்தைவிட உயர்வான சிவலிங்கம் உலகில் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை!

சிவபுராணத்தின் கூற்றுப்படி, பசு வதை செய்த பாவியும், நன்றிகெட்ட மனிதனும், வீரனைக் கொலை செய்தவனும், கர்ப்பத்தலுள்ள சிசுவைக் கொன்றவனும், தாய் தந்தையரைக் கொன்றவனும்கூட, பாதரச லிங்கத்தை பூஜித்து வந்தால், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு, முக்தியை அடைய முடியும்! வாய்விய சம்ஹிதையின் கருத்துப்படி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் மற்றும் நம் வாழ்வில் வேண்டுவதையெல்லாம் பெறுவதற்கு ஒரே சிறந்த சுலபமான வழி பாதரச லிங்கத்தை பூஜித்து வழிபடுவதுதானாம். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை தரிசித்தவரைவிட, பாதரசலிங்கத்தை தரிசித்த அதிர்ஷ்டசாலியையே நான் அதிகம் விரும்புகிறேன்! என்று சிவபெருமானே சொல்லியிருக்கிறார்!

சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில் பாதரசத்தை திடப்பொருளாக்கி, அதை லிங்கமாக்கி பூஜிப்பவர்களுக்கு, எப்போதுமே மரணபயம் இருப்பதில்லை. தவிர எந்த ஒரு காலத்திலும் அவர்கள் வீட்டில் வறுமை எட்டிப் பார்ப்பதில்லை என்று சிவபெருமான் பார்வதியிடம் கூறியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ரசார்ணவ தந்திரம் என்ற நூலின் கருத்துப்படி எந்த ஒரு மனிதனும் ஒரே ஒருமுறை பாதரசலிங்கத்தை பூஜித்து விட்டாலே போதும், அவனுக்கு வாழ்கையில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற சித்திகள் கிடைத்துவிடுகின்றன. பிரசித்திபெற்ற ஆயிரம் லிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலனைவிடக் கோடி மடங்கு நற்பலன், பாதரச லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கிறது.

ரசசமுச்சயம் என்ற நூலில், பாதரசலிங்கத்தைத் தொடர்ந்து ஆராதித்து வருவதால், எல்லாவித நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. வயதான காலத்தில், மனிதனை நோயின்றி வைத்துக் கொள்வதற்கு வேறெந்தத் தரவரத்திற்கோ, உலோகத்திற்கோ சக்தியில்லை. ஏனெனில் அவை எல்லாமே தண்ணீரில் கரைந்து போகக்கூடியவை; வெப்பத்தால் காய்ந்து போகக்கூடியவை. ஆனால் பாதரசம் ஒன்றுதான் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை.

பாதரசத்தை விசேஷச் செயல்பாடுகள் மூலம் திடபதார்த்த மாக்குவதால், அது அமிர்தமாகி விடுகிறது. அப்படி திடப்படுத்தப்பட்ட பாதரசத்தில் சிவலிங்கத்தை உருவாக்கி, அந்த லிங்கத்தை வழிபடும் பக்தர்களுக்கு கல்வி, அறிவு, செல்வம், சொத்து, சுகம், அமைதி, செழிப்பு, ஐஸ்வர்யம், மக்களன்பு முதலிய எல்லாப் பலன்களும் தானாகவே வந்தடைகின்றன. பாதரசம் நோய்களை அகற்றி புத்துயிரும் புது இளமையையும் கொடுக்கிறது. அதோடு அஷ்டசித்திகளையும் நவநிதிகளையும் அளிக்கிறது. சாதாரணமாக பாதரசத்தில் அழுத்தங்கள் நிறைய இருக்கும். அதை புடம் போட்டு அசுத்தங்களை அகற்றிய பிறகுதான் அது திடபதார்த்தமாக்கப்படுகிறது. அதிலிருந்து வடிவமைக்கப்படும் சிவலிங்கம் முழுப் பலன்களையும் அளிக்கவல்லது. விதிமுறைப்படி தினந்தோறும் அனுஷ்டானங்கள் செய்து பூஜை, அர்ச்சனை, ஆரத்தி முதலிய சேவைகள் செய்து ஆராதிக்கக்கூடியவர்கள் மட்டும் பாதரச லிங்கத்தை வீட்டில் ஸ்தாபிக்க வேண்டும். வெறும் லிங்கத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விடுவதால் மட்டும் பலன் கிடைப்பதில்லை!


14 உலகங்களில் வசிப்பவர்கள் யார் தெரியுமா?

 14 உலகங்களில் வசிப்பவர்கள் யார் தெரியுமா?

இறைவன் ஏழு உலகங்களை உருவாக்கி இருக்கிறாராம். சத்தியலோகத்தில் பிரம்மன், தபோலோகத்தில் தேவதைகள், ஜனோலோகத்தில் பித்ருக்கள், சொர்க்கத்தில் இந்திரன் முதலான தேவர்கள், மஹர்லோகத்தில் முனிவர்கள், புனர்லோகத்தில் கிரகங்கள், நட்சத்திர தேவதைகள், பூலோகத்தில் மனிதர்கள், விலங்குகள் வசிக்கின்றனர். இவையெல்லாம் பூமிக்கு மேலிருப்பவை. பாதாளத்திலும் இதே போல ஏ ழு லோகங்கள் உண்டு. இதனால் தான் அசுரர்கள் ஈரேழு 14 லோகங்களையும் அடக்கியாண்டதாக புராணங்களில் சொல்லப்படும். கீழுள்ள அதல, விதல லோகங்களில் அரக்கர்கள், சுதல லோகத்தில் அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி, தலாதல லோகத்தில் மாயாவிகள், மகாதல லோகத்தில் புகழ்பெற்ற அசுரர்கள், பாதாள லோகத்தில் வாசுகி முதலான பாம்புகள், ரஸாதல லோகத்தில் அசுர ஆசான்கள் வசிப்பதாக நம்பிக்கை.

பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்

பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்

பல்வேறு புராண சம்பவங்கள் ஹரியும், சிவனும் ஒன்றே என்று நமக்கு உணர்த்துகின்றன. திருமாலின் இருதய மத்தியில் என்றும் நீங்காமல் சிவன் இருக்கிறார் என்று தைத்திரிய ஆரண்யம் என்ற நூல் கூறுகிறது. சிவபெருமான்  கைலாயத்தில் எப்போதும் ராமநாமாவை சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது. திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார். இந்த பத்து அவதாரங்களில் பெருமாள் சிவபிரானை பூஜித்ததற்கு பல சான்றுகள் உள்ளன. அவற்றின் தொகுப்பே இது.

01. மச்சாவதாரம்

சோமுகாசுரன் வேதங்களை  திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பிறகு மீன் உருவத்துடன் கடலுக்கடியில் சென்று மகிழ்ச்சியில் கடலை கலக்கி விளையாடினார். இந்த செயலால் உலகம் துன்பமடைந்தது. அப்போது சிவபெருமான் பெரிய கொக்கு வடிவமெடுத்து திருமாலுக்கு தன் தவறை உணர்த்தினார். திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன் பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும், அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காண்கிறோம். திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் எனப்படுகிறார். கும்பகோணம் அருகிலுள்ள தேவராயன்பேட்டை என்ற ஸ்தலம் முன்னாளில் சேலூர் (சேல் - மீன்) என்று அழைக்கப்பட்டது. அங்குள்ள சிவபெருமானையும் மீன் வடிவ திருமால் வணங்கியதால், இறைவன் மச்சேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

02. கூர்மாவதாரம்

திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர் களும் கடைந்தபோது, மத்தாக இருந்த மந்திரமலை கடலுக்கடியில் மூழ்காமல் இருக்க ஆமை (கூர்மம்) அவதாரம் எடுத்து தன் முதுகில் தாங்கினார் திருமால். ஆமை வடிவம் கொண்ட பெருமாள், மலையை தாங்கும் வல்லமையை தர சிவபெருமானை வேண்டினார். இதற்காக, காஞ்சிபுரத்திலுள்ள திருக்கச்சூர் சிவன் கோயிலில் ஆமைமடு என்ற தீர்த்தம் உண்டாக்கி பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள விநாயகர் சன்னதி விதானத்தில் திருமால் ஆமை வடிவில் சிவபூஜை செய்வது சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. முருங்கை மரத்தின்கீழ் ஜோதி வடிவாக விளங்கும் சிவலிங்கத்தை பெருமாள் ஆமை வடிவத்தில் வழிபட்டதால் இந்த சிவபெருமானுக்கு கச்சபேஸ்வரர் (கச்சபம் - ஆமை) என்ற பெயர் ஏற்பட்டது.

03.வராக அவதாரம்

இரண்யாட்சன் என்ற அசுரன் பாதாள லோகத்தில் இருந்தபடி தேவர்களைத் துன்புறுத்த பெருமாள் வராக அவதாரமெடுத்து  பூமியை தோண்டி அங்கு சென்று அவனை அழித்தார். கோபம் நீங்காத அவரை சிவபெருமான் சாந்தப்படுத்தினார். சிவ தரிசனத்தால் சினம் தணிந்த பெருமாளுக்கு  சிவபெருமான் அருள் புரிந்த தலமே திருப்பன்றிக்கோடு (வராகம் - பன்றி) ஆகும்.  இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

04.நரசிம்மஅவதாரம்

தன் பக்தனான பிரகலாதனை இரண்யனிடமிருந்து காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்து பெருமாள் வெளிப்பட்டார். இரண்யனைக் கொன்றார். அவரது உக்கிரத்தைத் தணிக்க, அதனினும் மேற்பட்ட உக்கிரத்துடன் சிவபெருமான் சரபேஸ்வரராக வடிவெடுத்தார். காஞ்சிபுரத்தில் தாமல் என்ற பகுதியில், நரசிம்மர் வழிபட்ட நரசிம்மேஸ்வர சிவாலயம் உள்ளது. புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் தலத்தில் நரசிம்மர் வழிபட்ட காமீஸ்வரர் என பெயர் கொண்ட சிவபெருமானை தரிசிக்கலாம்.

05.வாமன அவதாரம்

மலை நாட்டை ஆண்ட மகாபலியின் ஆணவத்தை அடக்க அவனை குள்ள அந்தணன் (வாமனன்) வடிவெடுத்து திருமால் முக்தி கொடுத்தார். அவனை காலால் அழுத்தி பாதாள லோகம் அனுப்பிய பாவம் தீர பெருமாள் வழிபட்ட சிவத்தலம் கடலூர் அருகிலுள்ள திருமாணிக்குழியாகும்.

06.பரசுராம அவதாரம்

ஜமதக்னி என்ற முனிவரின் மகனாய் பிறந்து, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தத்துவத்தை உணர்த்த, தன் தாயின் தலையையே கொய்து, அவளுக்கு மீண்டும் உயிர் வரம் கேட்ட அவதாரம் பரசுராம அவதாரம். இந்த அவதாரத்தில் மன்னர்களின் செருக்கையும் அடக்கினார் திருமால். திருமால் பரசுராமராய் பூஜித்த சிவத்தலங்கள் பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் அருகிலுள்ள பழுவூர் மற்றும் மயிலாடுதுறை அருகே உள்ள திருநின்றியூர் ஆகும்.

07.ராமாவதாரம்

ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை உணர்த்தவும், பெற்றவர் சொல் கேட்டு நடக்கவும், அநியாயத்தை எப்பாடுபட்டேனும் வேரறுக்கவும், சிவ பக்தனாயினும் காமத்திற்கு அடிமைப்பட்ட அரக்கனை அழிக்கவும் திருமால் எடுத்த அவதாரம் ராமாவதாரம். ராம நாமத்தை சிவனே  உச்சரிக்கிறார் என்பதும் வரலாறு. அவரே அனுமானாக உருவெடுத்து, ராவணனை அழிக்க திருமாலுக்கு உதவினார் என்பதும் செவிவழிச் செய்தி. திருமால், ராமாவதார காலத்தில் சிவனுக்காக சேதுக்கரையில் ஒரு தலமே உருவாக காரணமாக இருந்தார்.  சிவலிங்கம் சமைத்து பூஜித்தார். அதுவே ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலாகும். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திலுள்ள சிவனை ராமர் வழிபட்டதாக கூறப்படுவதால் அவர் ராமலிங்கேஸ்வரர் எனப்படுகிறார்.

08. பலராம அவதாரம்

திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் முன்பு, அவரது சயனமான ஆதிசேஷன் பலராமனாக உருவெடுத்ததாகவும், திருமால் அதனைக் கவுரவிக்க தன் அண்ணனாக உருவெடுக்கச் செய்தார் என்பதும் பலராம அவதாரத்தின் வரலாறு. காஞ்சிபுரத்தில் பலராமர் வழிபட்ட சிவன் கோயில் பலபத்ர ராமேஸ்வரம் என பெயர் கொண்டதாகும். திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்) அருகிலுள்ள கோடியக்கரை குழகர்கோயில் பலராமர் வழிபட்ட தலமாகும்.

09.கிருஷ்ண அவதாரம்

கண்ணன் தனது சிவயோக மகிமையால் சிவபெருமானாகவே இருந்து, குரு÷க்ஷத்ர யுத்தத்திற்கு காரண பூதராய் அழித்தல் தொழிலை செய்ததாக பாகவதம் கூறுகிறது. மேலும் கண்ணன் தன் வினைகள் தீர, திருவீழிமலை (திருவாரூர் மாவட்டம்) மற்றும் திருவிடை மருதூர் (தஞ்சாவூர் மாவட்டம்) சிவபெருமானை பூஜித்த தலங்களாக கூறப்படுகிறது.

ராமகிருஷ்ணர் பகுதி ஒன்று

ராமகிருஷ்ணர் பகுதி ஒன்று

சத்தியம் தவறாத சுதிராமிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவ்வூரில் மிகப்பெரிய ஜமீன்தார் ராமானந்தர். அவரைப் பகைத்துக்கொண்டு யாராலும் வாழ இயலாது. அவ்வாறு பகைத்துக்கொண்டால் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சொத்துக்களைப் பறித்துக்கொண்டு ஊரைவிட்டே விரட்டிவிடுவார். இதே நிலைமைதான் இப்போது சுதிராமிற்கு ஏற்பட்டிருந்தது. சத்தியம் தவறாத உத்தமரான சுதிராம் கோல்கட்டாவிலிருந்து 120 கி.மீ. தொலைவில் அமைந்திருந்த தேரேய்பூர் கிராமத்தில் வசித்தார். அவரது முன்னோர்கள் புகழ்பெற்று விளங்கினர். ராமபிரான் அவர்களின் குலதெய்வம். இருந்தாலும் சிவபெருமானையும் வழிபடத் தவறுவதில்லை. 50 ஏக்கர் நிலத்திற்கு சுதிராமும், அவரது இரண்டு தம்பிகளும் சொந்தக்காரர்கள். ஏழைகளுக்கு இரக்கத்துடன் உதவுவார்கள். பிறர் துன்பம் கண்டு மனமுருகும் தன்மை கொண்டவர்கள். இக்குடும்பத்தின் புகழ் பக்கத்து கிராமங்களில்கூட பரவியிருந்தது. மாணிக்ராம் சட்டர்ஜி என்பவர்தான் இக்குடும்ப தலைவராக இருந்தார். அவரது மகன்தான் சுதிராம். சுதிராமிற்கு பிறகு நிதிராம், கனைராம் என்ற தம்பிகளும், ராம்சிலா என்ற தங்கையும் பிறந்தார்கள். இவர்களில் சுதிராம் பக்தியில் மிகுந்த நாட்டமுள்ளவர். ராமபிரானைத் துதித்துக்கொண்டே இருப்பார். காலையில் ராமனை வணங்கிய பிறகுதான் தண்ணீர்கூட குடிப்பார். தியாக உணர்வு மிக்கவர். உண்மை மட்டுமே பேசுவார். அவருக்கு இயற்கையாகவே ஆசைகள் மனதில் இல்லை. ஒழுக்கம் தவறி நடப்பவர்களைக் கண்டால் ஒதுங்கிப் போய் விடுவார். அவர்களைப்பற்றி வேதனையோடு பேசுவார். சாஸ்திர சம்பிரதாயங்களில் அதிக நாட்டம் கொண்டவர்.

அக்கால அந்தணர் மரபுப்படி, இளமையிலேயே அவருக்கு ஒரு சிறுமியை மணம் செய்து வைத்தனர். ஆனால், அச்சிறுமி மனைவி சில நாட்களில் இறந்து போனார். மீண்டும் இருபத்தைந்தாம் வயதில் சந்திரமணிதேவி என்னும் நற்குண மங்கையை மணம் செய்துகொண்டார். சந்திராவும் தன் கணவரைப் போலவே பக்திப்பிழம்பாக இருந்தார். கள்ளம் கபடமற்றவர். பிறரது துன்பங்களை வலியச்சென்று ஏற்றுக்கொள்வார். ஒரு சுமைதாங்கியாக அவர் திகழ்ந்தார். 1805-ல் இத்தம்பதியருக்கு ராம்குமார் என்ற மகன் பிறந்தான். 1810-ல் காத்யாயனி என்ற மகள் பிறந்தாள். இதன்பிறகு 16 ஆண்டுகள் கழித்து ராமேஸ்வர் என்ற மகன் பிறந்தான். மூத்தவர் என்ற முறையில், குடும்பப் பொறுப்பு சுதிராமின் கைவசம் இருந்தது. உழைப்பில் வல்லவரான அவர் குடும்பத்திற்காக ஏராளமான சொத்துக்களைச் சேர்த்தார். செழுமைக்கு பஞ்சமில்லை. ஆனால், இந்த அழகிய குடும்பத்தின் மீது யார் கண்பட்டதோ; அல்லது சுதிராம் ராமனின் பக்தர் என்பதால், இயற்கையாகவே துன்பம் ஆட்கொண்டதோ தெரியவில்லை. அவரது குடும்பத்திற்கு வந்தது சோதனை. அப்போது தேரேய்பூர் கிராமம் ஜமீன்தார்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருந்தது. அவர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கு மொத்தமாக வரியை கட்டிவிட்டு கிராமத்தை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வருவார்கள். அவர்கள் வைத்தது தான் சட்டம். அவர்கள் விதித்தது தான் வரி. தேரேய்பூர் கிராமம் ராமானந்தராய் என்ற ஜமீன்தாரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அவர் பெரும் கொடுமைக்காரர்.

அவ்வூரில் வசித்த ஏழை ஒருவன் அவரது கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தான். அவன்மீது பொய்வழக்கு தொடர்ந்தார் ராய். தனது வழக்கிற்கு சாட்சிகளை அவர் தேடவேண்டி வந்தது. அவ்வூரிலேயே சத்தியவான் என கருதப்பட்டவர் சுதிராம். எனவே அவரை சாட்சிசொல்ல அனுப்பினால், அந்த சாட்சியம் நியாயமானதாகக் கருதப்பட்டு, ஏழைக்கு தக்க தண்டனை கிடைக்கும் என அவர் நம்பினார். சுதிராமிற்கு ஆள் அனுப்பினார். நான் சொல்வதை நீ கேட்க வேண்டும். அந்த ஏழைக்கு எதிராக நீ நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் நான் உனக்கு வேண்டிய வசதி செய்து தருகிறேன் என்றார். சத்தியம் தவறாத சுதிராம் இதற்கு மறுத்தார். ஏய் சுதிராம்! நீ சாட்சி சொல்ல மறுத்தால் அந்த ஏழையின் கதிதான் உனக்கும் ஏற்படும். உன்மீதும் பொய் வழக்கு போட்டு உன் சொத்துக்களைப் பறிப்பேன். உன் குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வந்துவிடுவேன். நீ மட்டுமின்றி உனது சகோதரர்களும் அவர்களது குடும்பமும் தெருவிற்கு வந்துவிடும், ஜாக்கிரதை, என மிரட்டினார் ராமானந்தர்.

சுதிராம் அவரது மிரட்டலுக்கு பணியவில்லை. என்னால் ஒரு ஏழையின் குடும்பம் அழியக்கூடாது. என் குடும்பம் வேண்டுமானால் அழிந்து போகட்டும், என ஆணித்தரமாகச் சொல்லி விட்டார். தன் குடும்பமே அழியப்போகிறது என தெரிந்தும் சத்தியம் தவறக்கூடாது என்பதில் உறுதியாக நின்று விட்டார். ஆனால், அந்த ஜமீன்தாரின் செல்வாக்கின் முன் சாதாரண பணக்காரரான சுதிராமின் சத்தியம் எடுபடவில்லை. ராமானந்தர் நினைத்ததை சாதித்துவிட்டார். சுதிராம்மீது பொய்வழக்கு தொடுக்கப்பட்டது. அவரது வீடு, 50 ஏக்கர் நிலம் அத்தனையும் பறிமுதல் செய்யப்பட்டன. அவை ராமானந்தருக்கு சொந்தமாகிவிட்டன. தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த வீட்டை விட்டு குடும்பத்தினர் கண்ணீருடன் வெளியேறினர். ஊர்மக்கள் அவர்கள்மீது பரிதாபப்பட்டார்களே தவிர, ஜமீன்தாருக்கு பயந்து எவ்வித உதவியும் செய்ய முன்வரவில்லை. சுதிராமின் இரண்டு சகோதரர்களும் அவரவர் மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டனர். 40 வயதே நிரம்பிய சுதிராம் மனைவி, குழந்தைகளுடன் நட்ட நடுரோட்டில் தத்தளித்து நின்றார். அப்போது ஒரு கரம் அவரது தோளைப் பற்றியது..


சீதா(சீதை)

சீதா(சீதை)

காலம் காலமாக, தலைமுறை தøமுறையாகக் கேட்கப்பட்டும் படிக்கப்பட்டும் பழக்கப்பட்ட இதிகாசம் ராமாயணம். மூல ராமாயணமான வால்மீகி ராமாயணத்தைத் தழுவி 12க்கும் மேற்பட்ட ராமாயணங்கள் பல்வேறு மொழிகளில் ஸ்ரீராமனின் புகழ்பாடும் காவியங்களாகத் திகழ்கின்றன. இது பலருக்கும் தெரியும் ஆனால் , சீதாயணம் என்ற காவியம் பற்றி தெரியுமா? அயணம் என்பது வழிநடந்த பாதையைக் குறிக்கும். ஸ்ரீராமன் நடந்து சென்ற பாதையும் அவன் காட்டிய தர்மநெறிகளும் ராமாயணமாகத் திகழ்கின்றன என்றால் , ராமாயணத்தின் தெய்வீகக் கதாநாயகி சீதை வாழ்ந்து காட்டிய வரலாறு சீதாயணம் எனப்படுகிறது.  இதை, ராமாயணத்தின் ஒரு பகுதியாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த 10 அவதாரங்களில் ராமாவதாரமும் ஒன்று . இந்த அவதாரத்தில் ஸ்ரீராமனுக்கு உறுதுணையாக நின்று அவன் அவதாரப் பணி நிறைவேற விஷ்ணு பத்தினி மகாலட்சுமி எடுத்த அவதாரமே சீதாதேவி. தசரதனுக்கும் கோசலைக்கும் மகனாகப் பிறந்த ஸ்ரீராமனின் பிறப்பு பற்றியோ, அவதார ரகசியம் பற்றியோ பல்வேறு பரிமாணங்களில் ராமாயணத்தில் பேசப்படவில்லை. ஆனால் சீதாதேவியின் பிறப்பு தோற்றம் பற்றிய விவரங்கள் வித்தியாசமான பரிமாணத்தில் காணப்படுகின்றன. சீதையின் ஒரு அவதாரத்துக்குள் மூன்று, நான்கு அவதாரப் பரிமாணங்கள் காணப்படுகின்றன.

                                                  சரி,யார் இந்த சீதை?

வால்மீகி ராமாயணத்தின் படி, மிதிலை நகர் மன்னர் ஜனகர் ஒரு யாகத்தைச் செய்து முடித்து தங்கத்தால் ஆன உழுகருவியை ஏர்கொண்டு பூட்டி நிலத்தை உழுதார் அப்போது பூமியில் புதைந்து கிடந்த ஒரு வண்ணப்பெட்டகம் தட்டுப்பட்டு, அதனுள் இருந்து ஓர் அழகான பெண் குழந்தை அவருக்குக் கிடைத்தது பூமித்தாய் தந்த புத்திரியாக ஏற்று, அவளுக்கு ஜானகி என்று பெயரிட்டார் ஜனகர். சீராட்டி வளர்த்த அந்த மகள் பெரியவள் ஆனதும் அவளுக்காக சுயம்வரம் நடத்தினார். யாராலும் தூக்கமுடியாத சிவ தனுஸை, தசரதன் மைந்தன் ஸ்ரீராமன் வளைத்து முறித்து ஜானகியின் கரம் பற்றினான். இந்த சீதாராம கல்யாணக் கதை அனைவருக்கும் தெரிந்ததே! அதே நேரம் சீதையின் பிறப்பு ரகசியம் பற்றி அத்புத ராமாயணம் என்ற காவியத்திலும் ராவணனால் எழுதப்பட்ட இராவணீயம் என்ற நூலிலும் வித்தியாசமாகக் குறிப்பிட்பட்டுள்ளது.

ராவணனுக்கும் மண்டோதரிக்கும் பிறந்த முதல் பெண் குழந்தைதான் சீதை. தான் அன்றாடம் வணங்கும் சிவபெருமானின் இடப்பாகமாகத் திகழும் அன்னை பார்வதியே தனக்கு மகளாகப் பிறந்திருப்பதாக எண்ணி பெரும்மகிழ்ச்சி அடைந்தான் ராவணன். ஆனால், குழந்தையின் ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள் அந்தக் குழந்தை விஷ்ணுவின் அம்சமுடையது என்றும்  ராவணனை அழிக்கும் பொருட்டு விஷ்ணுவுக்கு உதவவே அந்தக் குழந்தை பிறந்திருக்கிறது என்றும் கூற அதிர்ச்சியானான் ராவணன் அந்தக் குழந்தையைக் கொன்று விட உத்தரவிட்டான் ஆனால் அவன் மனைவி மண்டோதரி சிசுஹத்தி பெரும் பாவம் என்றும் அதனால் தங்களுக்குச் சந்ததியே இல்லாமல் போய்விடும் என்றும் எடுத்துக் கூறி மன்றாடினாள். இதில் கொஞ்சம் மனம் இரங்கிய ராவணன், அந்தக் குழந்தையை சிவபெருமான் வீற்றிருக்கும் இமயத்திலேயே விட்டுவிடத் தீர்மானித்து, கங்கையின் உற்பத்தி ஸ்தானத்தில் பனிபடர்ந்த ஒரு பகுதியில் பனிப்பாறைகளுக்கு நடுவில் பேழை ஒன்றில் வைத்து விட்டுவிடுகிறான் . இப்படிச் செய்தால் பனியில் உறைந்து அந்தக் குழந்தை மடிந்துவிடும் என நம்பினான்.

ஆனால் அதற்கு மாறாக பனி உருகி கங்கையின் பிரவாகத்தில் இழுத்துச் சொல்லப்பட்டது அந்தப் பேழை. அது மிதிலை நகரை அடைந்து பூமிக்கடியில் புதைந்தது. அந்தக் தருணத்தில்தான் மன்னர் ஜனகர் ஏர் பூட்டி உழுதார். குழந்தையும் கிடைத்தது. பூமியை உழும்போது கிடைத்த குழந்தை என்பதால் ஏரின் கூரான பகுதிக்கு வழங்கப்பட்ட சீதா என்பதையே குழந்தைக்குப் பெயராகச் சூட்டினான். ஜனகர் மகள் என்பதால் ஜானகி என்றும் மிதிலை நகரில் கண்டெடுக்கப்பட்டதால் மைதிலி என்றும் அழைக்கப்பட்டாள் சீதை. அவளுக்கு வைதேஹி என்றும் ஒரு பெயர் உண்டு. தேவி மஹாத்மிய புராணத்திலோ சீதையின் அவதாரம் பற்றி முற்றிலும் வேறு விதமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதில் நாரதரிடம் பகவான் விஷ்ணுவே மகாலட்சுமி துளசி தேவியாகவும் வேதவதியாகவும் சீதையாகவும் அவதரிப்பாள் என்று கூறுவதாக வருகிறது. இந்தக் கதையை இன்னும் விளக்கமாகப் பார்ப்போம்.

த்ரேதா யுகத்தில் தர்மத்வஜன் குஜத்வஜன் என்னும் இரண்டு பேர் விஷ்ணுவை நோக்கிக் கடும் தவமிருந்து, மகாலட்சுமியே தங்களுக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என வரம் கேட்டுப் பெற்றனர். அதன் படி தர்மத்வஜனுக்கு மகாலட்சுமியே பெண்ணாகப் பிறந்து பிருந்தா எனப் புகழ்பெற்றாள். தன் பதிவிரதா தர்மத்தால், பிருந்தாவே துளசி எனும் செடியாகி விஷ்ணு சேவை செய்து நம்மால் வழிபடப்பட்டு வருகிறாள். இதே போல் குஜத்வஜனுக்கும் மகாலட்சுமி பெண் குழந்தையாகப் பிறந்தாள். பிறந்த சில மணி நேரங்களிலேயே அந்தக் குழந்தையின் வாயிலிருந்து வேதங்கள் ஒலிக்க ஆரம்பித்தன .அதனால் அவள் வேதவதி என்று பெயர் பெற்றாள். ஒரு கானகத்தில் தபஸ்வினிபோல தனிமையில் வாழ்ந்துகொண்டிருந்த அவள், விஷ்ணுவையே பதியாக அடைய வேண்டும் என்று கடும் தவம் புரிந்தாள். தர்மத்தைக் காக்க ஸ்ரீராமனாக அவதாரம் செய்யும் விஷ்ணுவுக்குப் பத்தினியாகி சேவை செய்ய வேண்டும் என்பது அவளின் ஆசை.

ஒரு நாள் வேதாவதி வாழ்ந்து வந்த கானகத்தின் வழியே ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருந்தான் ராவணன். யதார்த்தமாக வேதவல்லியை அவன்  கவனித்துவிட, அக்கணமே அவள் அழகில்மயங்கினான் . அவள் அருகில் சென்று அவள் கரத்தைப் பற்றினான். அதிர்ச்சியும் கோபமும் அடைந்த வேதவதி, எந்த ஒரு பெண்ணையும் அவளுக்கு விருப்பமில்லாத நிலையில் ராவணன் தொட்டால், அக்கணமே அவனது தலை வெடித்துச் சிதறிவிடும் என்று சாபம் கொடுத்துவிட்டு அங்கே எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீயில் அக்னிப் பிரவேசம் செய்தாள். அப்போது, நான் மீண்டும் பிறந்து வந்து உன்னை அழிப்பேன்  என்று சபதமிட்டு அக்னியில் பஸ்பமாகிவிடுகிறாள் அவள் . அக்னிதேவனேச, வேதவதியாகத் தோன்றிய மகாலட்சுமியைப் பாதுகாத்து வைத்துக்கொள்கிறான். பஞ்சவடியில் சீதா, லட்சுமணனுடன் ஸ்ரீராமன் வனவாசம் கழித்துக் கொண்டிருந்த நாளில், ஒரு நாள் மாலையில் சந்தியாவந்தனம் செய்யும் வேளையில் அக்னி பகவான் ஸ்ரீராமன் முன் தோன்றினான்.

ராமா! உன்னிடம் ஒரு பரமரகசியம் சொல்லவே வந்தேன் .சில நாட்களில் ராவணன் தன் மாயா சக்தியால் உன் மனைவி சீதாதேவியை சிறையெடுத்துச் செல்வான் . அப்போது நான் உன் மனைவி சீதைக்குப் பதில் என்னுள் மறைந்திருக்கும் வேதவதியை மாயா சீதையாக்கி ராவணனுடன் அனுப்பிவிடுவேன் நிஜ சீதாதேவியை நான் பவித்ரமாகப் பாதுகாத்து வைத்திருப்பேன் . ராவண சம்ஹாரம் முடிந்த பிறகு மாயா சீதை உன்னை அடைவாள். அதுவரை இந்த ரகசியத்தை நீ யாரிடமும் வெளியிடக் கூடாது ! என்றான் அக்னிதேவன். ஸ்ரீராமனும் அந்த ரகசியத்தைக் காப்பாற்றுவதாக சத்தியம் செய்து கொடுத்தான். இதன் படி ராவணன் பர்ணசாலையில் இருந்து சீதையைத் தூக்கிச் செல்லத் திட்டமிட்டபோது நிஜ சீதைக்கு பதில் மாயா சீதையே (வேதவதி) ராவணனுடன் செல்கிறாள். அசோகவனத்தில் இருந்து கொண்டு சீதையின் கடமைகளையே அவள் செய்கிறாள் சாபத்தின் காரணமாக ராவணனால் அவளை நெருங்க முடிய வில்லை. அதே நேரம் நிஜ சீதை அக்னிதேவன் பாதுகாப்பில் பத்திரமாக இருந்தாள்.

ராவண வதம் முடிந்ததும், ஸ்ரீராமன் சீதைக்கு அக்னிப் பரீட்சை நடத்தினான். லட்சுமணன், ஹனுமன், விபீஷணன், சுக்ரீவன் போன்றவர்கள் சீதைக்கா அக்னிப் பரீட்சை என்று கலங்கிக் கண்ணீர் வடித்தனர். ஆனால் அதற்கான காரணம் ஸ்ரீராமனுக்கும் அக்னிதேவனுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. தீக்குளித்த மாயா சீதை (வேதவதி) அக்னி தேவனை அடைகிறாள். தன்னிடம் அடைக்கலத்தில் இருந்த நிஜ சீதையை ஸ்ரீராமனிடம் சேர்க்கிறான்  அக்னிதேவன் . ஏகபத்தினி விரதனான ஸ்ரீராமன் ராமாவதாரத்தில் வேதவதியை மனைவியாக ஏற்க முடியவில்லை. ஆனால் கலியுகத்தில் அவளை ஏற்பதாக வாக்களிக்கிறான் திருமலையில் ஸ்ரீநிவாசப் பெருமாளாக அருள்பாளிக்கும் வேங்கடாசலபதியின் தேவியாகத் திகழும் பத்மாவதி வேதவதியின் அவதாரமே! தேவி மஹாத்மியம் மட்டுமின்றி, வெங்கடேஸ்வர மஹாத்மியம் எனும் திருமலை ஸ்தல புராணத்திலும் வேதவதி என்கிற வேதவல்லியின் வரலாறு காணப்படுகிறது. இன்னொரு கதையில் பூமித்தாயின் புத்ரிதான் சீதை என்கிற தகவல் நமக்கக் கிடைக்கிறது. இந்தக் கதையையும் பார்த்துவிடுவோமே! இந்தத் தகவலைச் சொல்வது, உத்தர ராமாயணம் இதில், சீதாதேவி இரண்டாவது வனவாசம் ஏற்றுக்கொள்வது பற்றி விரிவாக விளக்கப்படுகிறது.

கர்ப்பிணியான சீதை, வால்மீகி மஹரிஷி ஆஸ்ரமத்தில் வாழ்ந்து லவ குசர்களைப் பெற்றெடுத்தாள்,. உலக அபவாதத்துக்குகூட நியாயம் வழங்க நினைத்து மனைவி சீதையைக் காட்டுக்கு அனுப்பி இருந்தான் ஸ்ரீராமன். ராஜாராமனாக வாழ்வதா, சீதாராமனாக வாழ்வதா என்ற பிரச்சனையில் ராஜாராமனாகவே வாழ முடிவு செய்து சீதையைத் தியாகம் செய்தான் ஸ்ரீராமன். நிந்தித்தவர்களே தவறுகளை நினைத்துத் திருந்தி மன்னிப்புக் கோரியபோதும் சீதை அயோத்திக்கு திரும்ப விரும்பவில்லை. ராமாவதாரம் முடியப் போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து, ஸ்ரீராமன் பாற்கடல் விஷ்ணுவோடு ஐக்கியமாகும் முன்பே சீதாதேவி தன் தாயான பூமா தேவியை வேண்டி வரவழைத்து, அவள் மடியில் சரணடைந்துவிடுகிறாள். ஆக அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு எடுத்த ராமாவதாரத்தில் அவருக்குச் சரிசமமாகத் தன் பணியைச் செய்து துன்பங்களை ஏற்று தியாகங்களை விரும்பிச் செய்து சூரியவம்சத்தின் புகழ் மறையாதிருக்க லவ குசர்கள் எனும் இரு வாரிசுகளையும் தந்து, ராமாயணத்தை ஒரு தொடர் கதையாக்கிய தெய்வீக வடிவம்தான் மகாலட்சுமியின் அம்சமான சீதை!


Sri Azhagia Singa Perumal temple

Sri Azhagia Singa Perumal temple
 



Moolavar :Mukunda Nayakan,Azhagia Singar
Thayar :Velukkai Valli
Theertham :Kanaga Saras,Hema Saras
Old year :1000 years old
Historical Name :Tiruvelukkai
City :Kancheepuram
District :Kanchipuram
State :Tamil Nadu
 
Singers:The temple is praised in the Mangalasasanam hymns of Saints Peyazhwar and Tirumangai Azhwar.   
       
Festival:Vaikunda Ekadasi is devotionally celebrated in the temple in December-January.   
       
Temple's Speciality:This is one of the celebrated 108 Divya Desas of Lord Vishnu.   
       
Opening Time:The temple is open from 7.00 a.m. to 11.00 a.m. and from 5.00 p.m. to 7.30 p.m.  
     
Address:Sri Azhagia Singa Perumal Temple, Kancheepuram-631 501.   Phone:+91- 44-6727 1692  
      
General Information:The Vimana above the sanctum sanctorum of Lord Narasimha is called Kanaka Vimanam.  Sage Brugu had worshipped Perumal in this temple.  Sri Sudarsana Chakkarathazhwar the deity of Lord Vishnu’s discuss graces from a shrine in the outer corridor-prakara.  Sri Garuda Bhagwan in the Narasimha shrine appears with his head slightly on a side as if unable to bear the fury of the Lord.  This is a strange and different style of Garuda in this temple.
 
Prayers:Devotees pray to Perumal for relief from the various problems they experience in life.
 
Thanks giving:Devotees perform Tirumanjanam to Perumal and Mother on realizing their wishes.  
      
Greatness Of Temple:This is one of the 108 Divya Desas of Lord Vishnu.  According to scriptures, Lord granted darshan to sage Brugu from under the Kanaka Vimana facing east.  Saint Peyazhwar in his hymns praises this shrine equal to that of Lord Uppiliappan and temples of Kumbakonam and Tirupathi.  Vaishnava Acharya Sri Mahadesikan had praised Perumal in his celebrated Kamasikashtakam.  It is believed that chanting this sloka daily will bring in tallest benefits of the blessings of Lord Narasimha.  The shrine is also known as Kamashika Narasimha Sannadhi.
 
Temple History: Of the Avatars-incarnations of Lord Vishnu, Sri Narasimha Avatara is considered great representing His “Protection Readiness” for His devotees.  In this Avatar He came to the rescue of His devotee instantly from a pillar.  After destroying Hiranya, Lord wanted peace.  Tamil word Vaell means desire.  Perumal had the desire to be calm and peaceful in this place, it came to be known as Velirukkai which later changed as Velukkai.

A group of demons came to destroy a yajna proposed by Lord Brahmma.  He surrendered to Lord Perumal for protection.  As Perumal appeared from a pillar to protect Prahladha in lion-human form (Narasimha), He came now in the same form from Hasthisailam cave and drove the demons.  They disappeared from this place in Kancheepuram.  Lord stayed there as Yoga Narasimma facing east.  Lord is known as Aall, Hari and Mukunda Nayakan.

அருள் மிகு நிலாதுண்டப்பெருமாள் திருக் கோவில்

அருள் மிகு நிலாதுண்டப்பெருமாள் திருக் கோவில்
 



மூலவர் :நிலாத்துண்டப்பெருமாள்
தாயார் :நேர் உருவில்லாவல்லி
தீர்த்தம் :சந்திர புஷ்கரணி
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :நிலாத்திங்கள் துண்டத்தான்
ஊர் :நிலாதிங்கள்துண்டம்
மாவட்டம் :காஞ்சிபுரம்
மாநிலம் :தமிழ்நாடு

மங்களாசாசனம். திருமங்கையாழ்வார்

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய் உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும் காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய் பெருமானுன் திருவடியே பேணினேனே.-திருமங்கையாழ்வார்
திருவிழா:சந்திரனின் ஒளி பெற்றவர் என்பதால் இங்கு பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகள் விசேஷம்.   
       
தல சிறப்பு:சிவாலயத்துக்குள் இருக்கும் இந்த சன்னதி பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று. இத்தலத்தில் மகாலட்சுமி பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். நாபிக்கமலம் பிரம்மாவிற்கு உரிய இடம் என்பதால், இவ்விடத்தில் லட்சுமியை பிரம்மாவின் அம்சத்துடன் இருப்பதாக கருதலாம். இந்த அரிய காட்சிக்கு விதியை மாற்றும் தன்மையுண்டு என்பார்கள்.   
       
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு நிலாத்துண்டப்பெருமாள் திருக்கோயில், நிலாத்திங்கள்துண்டம் காஞ்சிபுரம் 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.போன்: +91- 44 - 272 22084,  
      
பொது தகவல்:தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலத்தில் பெருமாள் அருள்பாலிப்பது சிறப்பு   
       
பிரார்த்தனை:பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தோல் வியாதிகள், வயிறு சம்பந்தமான நோய்கள், தோஷங்கள் நீங்கும், உடல் உஷ்ணம் குறையும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு வேண்டிக் கொண்டால் புத்திரப்பேறு கிடைக்கும் என்பதும், தாய், பிள்ளை இடையே பாசப்பிணைப்பு அதிகமாகும் என்பதும் நம்பிக்கை.  
      
நேர்த்திக்கடன்:பெருமாளுக்கு சாம்பிராணி தைலக்காப்பு செய்து விசேஷ பூஜைகள் செய்து அன்னதானம் செய்யலாம்.  
      
தலபெருமை:மகாலட்சுமி சிறப்பு: மகாவிஷ்ணுவின் இதயத்தில் குடிகொண்டிருப்பவள் மகாலட்சுமி. இவள் விஷ்ணுவின் இடது மார்பில் காட்சி தருவாள். ஆனால், இத்தலத்தில் பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். நாபிக்கமலம் பிரம்மாவிற்கு உரிய இடம் என்பதால், இவ்விடத்தில் லட்சுமியை பிரம்மாவின் அம்சத்துடன் இருப்பதாக கருதலாம். இந்த அரிய காட்சிக்கு விதியை மாற்றும் தன்மையுண்டு என்பார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு வேண்டிக்கொண்டால் புத்திரப்பேறு கிடைக்கும் என்பதும், தாய், பிள்ளை இடையே பாசப்பிணைப்பு அதிகமாகும் என்பதும் நம்பிக்கை.

சகோதர தலம்: சிவனின் கண்களை மூடியதால் ஏற்பட்ட பாவத்திற்கு தன் தங்கை பார்வதிதேவி விமோசனம் பெற்ற இத்தலத்தில் அவளது அண்ணன் மகாவிஷ்ணுவும் நோய் நீங்கப்பெற்றுள்ளார். பார்வதிக்கு கங்கையையும், மகாவிஷ்ணுவிற்கு சந்திரனையும் பயன்படுத்தி சிவன் அருள் செய்த தலம். சகோதர சகோதரிகள் நிலாத்துண்ட பெருமாளையும், ஏகாம்பரேஸ்வரரையும் வணங்கினால் அவர்களிடையே ஒற்றுமை கூடும் என நம்புகிறார்கள்.
கோயிலின் முதல் பிரகாரத்தில் சிறிய சன்னதியில் புருஷசூக்த விமானத்தின் கீழ், பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கென தனியே பிரகார தெய்வங்கள் இல்லை.நோய் நீங்குவதற்காக தனியே வந்தவர் என்பதால் தாயார் சன்னதியும் கிடையாது. ஆனாலும், மகாவிஷ்ணுவின் நாபியில் இருக்கும் மகாலட்சுமியையே "நேர் உருவில்லாத் தாயாராக' எண்ணி வழிபடுகின்றனர். உருவமில்லாமல் பெருமாளுடன் ஐக்கியமாகி இருப்பதால் இப்பெயர் வந்தது. சிவனை வணங்கி குணமாகியவர் என்பதால் இங்கு பெருமாளுக்கு சைவ ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்படுகிறது. இவரை குளிர்ச்சிப்படுத்துவதற்காக சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கின்றனர். பிறைச்சந்திரனின் ஒளிபட்டவர் என்பதால் இத்தலத்து பெருமாளை திருமங்கையாழ்வார், சந்திரனின் பெயரையும் சேர்த்து ""நிலாத்திங்கள் துண்டத்தாய்'' என்று பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். "சந்திர சூடப் பெருமாள்' என்ற பெயரும் இவருக்கு உண்டு.

தல வரலாறு:தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) வடிவம் எடுத்து மத்தாக பயன்பட்ட மேருமலையை தாங்கிக் கொண்டிருந்தார். அப்போது கயிறாக உதவிய வாசுகி பாம்பு ஆலகால விஷத்தை உமிழ்ந்தது. பாற்கடலில் கலந்த விஷம் ஆமையாக இருந்த விஷ்ணுவின் மீது பட்டது. இதனால், மகாவிஷ்ணுவின் நீலமேனி கருப்பானது. தேவர்கள் பல சிகிச்சைகளை செய்தும் பயனில்லாமல் போனது. கலங்கிய மகாவிஷ்ணு தனது உடல் பழைய நிறம் பெற வழி கூறும்படி பிரம்மாவிடம் வேண்டினார். சிவனிடம் வேண்டினால் உஷ்ணம் குறைந்து நிறம் மாறும் என ஆலோசனை கூறினார் பிரம்மா.அதன்படி மகாவிஷ்ணு, சிவனை எண்ணி தவமிருந்தார். விஷ்ணுவுக்கு காட்சி தந்த சிவன், தனது தலையில் இருந்த பிறைச்சந்திரனை மகாவிஷ்ணு மீது ஒளி பரப்பும்படி பணித்தார். சந்திரனும் தன் கதிர்களைப் பரப்ப நீலவண்ணத்தை மீண்டும் பெற்றார். முன்பை விட பொலிவாகவும் விளங்கினார். இந்த நிகழ்வின் அடிப்படையில் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் அமைக்கப்பட்டது, இங்கே வடகிழக்கு பாகத்தில் (ஈசானிய மூலை) பெருமாள் சன்னதி அமைக்கப்பட்டது. சிவாலயத்துக்குள் இருக்கும் இந்த சன்னதி பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. பெருமாளின் நிறம் மாற தானும் ஒரு காரணமானதால் வருத்தம் கொண்ட வாசுகி பாம்பு, அவருக்கு குடையாக நின்று பரிகாரம் தேடிக்கொண்டது. சந்திரனின் ஒளியால் இயல்பு நிறம் பெற்றதால் இத்தலத்து பெருமாளை "நிலாத்திங்கள் துண்ட பெருமாள்' என்று அழைக்கின்றனர்.   
       
சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் மகாலட்சுமி பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். நாபிக்கமலம் பிரம்மாவிற்கு உரிய இடம் என்பதால், இவ்விடத்தில் லட்சுமியை பிரம்மாவின் அம்சத்துடன் இருப்பதாக கருதலாம். இந்த அரிய காட்சிக்கு விதியை மாற்றும் தன்மையுண்டு என்பார்கள்.

ஸ்ரீ வராகீஸ்வரர் ஆலயம்

ஸ்ரீ வராகீஸ்வரர் ஆலயம்

கல்வெட்டுக்கள் நிறைந்துள்ள  இத்திருக்கோயில் 3000 ஆண்டு பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.பெரிய ராஜ கோபுரத்துடன் விளங்கும் இக்கோயிலில்  ஸ்ரீ வராகீச்வ்வரர் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார். அம்பாள் திருநாமம் ஸ்ரீ கௌரீச்வரி. லிங்க திருமேனியில் சங்கு,சக்கிரம் காணப்படுகிறது.

தல புராணம்:ஸ்ரீ மகாவிஷ்ணு வராக அவதார நோக்கம் முடிந்தபின் வைகுண்டம் திரும்பாமல் இருக்க பிரம்மா  மற்றும் தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டிட  இறைவன் வராகத்துடன் 18 நாட்கள் யுத்தம் செய்து அதன் கோர பற்களை பிடுங்கி மாலையாக போட்டுக்கொண்டார்.ஸ்ரீ மகாவிஷ்ணுவும் தம் நிலை அறிந்து ,அருகில் தீர்த்தம் உண்டாக்கி நீலோத்பல புஷ்பங்களால் சிவனை அர்ச்சித்து வைகுண்டம் திரும்பினார்.

தல மகிமை:ரத சப்தமி முதல் மகாசிவராத்திரி வரை  சூரிய பூஜை நடைபெறுகிறது.சூரியன் செங்கதிர்கள் மாலை வேளையில் லிங்க திருமேனியில் படுகிறது.
அம்பாளுக்கு இங்கு ஐராவதம் வாகனமாக அமைந்துள்ளது விசேஷம்.அஷ்ட தட்சிணாமூர்த்தி. அஷ்ட பைரவர் இத்தலத்தில் காட்சி கொடுப்பது விசேஷம்.ராகுகால நேரத்தில்,எல்லா இடர்களையும் போக்கும்  சரபேஸ்வரர் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ராகு,கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது.மூலவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாட்டு வந்தால் திருமண தடைகள் நீங்கும்.

ஆலயம் கட்டப்பட்ட வரலாறு; இந்த ஊரில் வாழ்ந்து வரும் திருமதி கௌரி அம்மாள் என்ற மூதாட்டியை  கோயில் கட்டும்படி காஞ்சி மடத்து ஸ்ரீ மகாஸ்வாமிகள் கூறினார்கள்.சித்தர்கள் வழிபடும் இக்கோயில்  இடிந்துபோய் முட்புதர்களாக இருந்தது.மகாபெரியவர் கூறியபடி பணம் திரட்டிட ஒரு குச்சியில் தயிர்சாதம் கட்டி ஆஞ்சநேயர் படம்  முன்பு அப்பெண்மணி வைக்க கட்டு சோற்றுடன் கிளம்பிய அனுமார் தேவையான பணத்தை கொண்டு சேர்த்தார். இந்த நிகழ்ச்சி நிதர்சனமான உண்மை.பெரும் செல்வம் படைக்காத சாதாரண குடும்பத்தில் வந்த அந்த மாது இப்பெரிய ஆலயத்தை மகாஸ்வாமிகள் சொன்னபடி அவரின் அருளாசியோடு கட்டி  முடித்துள்ளார்கள்.திரட்டிய பணம் அதிகமாகவும் இல்லை,குறைவாகவும் இல்லை. கோயில் கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்து முடிக்க வேண்டிய அளவிலேயே இருந்தது.சிவகொஷ்டங்கள், பிரகாரத்தில் விநாயகர்,முருகன், நவக்கிரக சன்னதிகள்.
ஸ்ரீ மகாவிஷ்ணு அமைத்த திருக்குளம் அருகில் உள்ளது.

ஆலய அர்ச்சகர் திரு தீனேஷ் குருக்கள்-9994367390, திரு சரவண குருக்கள் -9952379986.


தொண்டை நாட்டு திவ்யதலம் திருப்புட்குழி

தொண்டை நாட்டு திவ்யதலம் திருப்புட்குழி

108 வைணவ திருத்தலங்களில், தொண்டை நாடு திருத்தலங்களில் முக்கியமானதாக கருதப்படுவது இந்த திவ்ய தலம். பெருமாள் ஸ்ரீ விஜய ராகவப்பெருமாள். வீற்றிருந்த கோலம். இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயர்கள் இடம் மாறி காட்சி கொடுக்கின்றனர். வலதுபுறம் பூதேவி தாயார். இடதுபுறம் ஸ்ரீதேவி தாயார். தனிக்கோயில் கொண்டுள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயார் சன்னதி இடதுபுறமும் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி வலதுபுறமும் அமைந்து உள்ளன.

தலபுராணம்

ஸ்ரீ ராமாவதாரத்தில், ராவணன் சீதா தேவியை கவர்ந்து செல்லும்போது பட்சி ராஜனான ஜடாயு ராவணனோடு யுத்தம் செய்து காயம் பட்டு வீழ்ந்தது. அந்த இடத்திற்கு வந்த ஸ்ரீ ராமர் சீதா  தேவி ராவணனால் கவரப்பட்ட விவரம் ஜடாயு மூலம் அறிந்தார். ஜடாயு வேண்டியபடி, ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ ராமபிரான் காட்சி கொடுத்து அருளினார். தன் வலது பக்கம் தீ மூட்டி ஜடாயுவை தகனம் செய்து, ராமபாணத்தினால் உண்டான தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமகிரியை செய்து முடித்தார். தீ ஜ்வாலை தாங்காமல் ஸ்ரீ ராமரின் வலதுபுறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் ஸ்ரீ ராமரின்  இடதுபக்கம் வந்து காட்சி அளிக்க பூதேவி தாயாரும் வலதுபுறம் வந்து காட்சி கொடுத்ததாக வாமன புராணத்தில் விவரமாக கூறப்பட்டு உள்ளது. ஸ்ரீ ராமரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் இன்றும் ஜடாயு புஷ்கரணி  என்ற பெயரில் காணப்படுகிறது.

சுந்தர பாண்டிய மன்னன் இக்கோயிலை கட்டி மான்யங்கள் அளித்ததாக கல்வெட்டு செய்திகள் உள்ளன. உடையவர் ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ யாதவ பிரகாசர் என்பவரிடம் இளமைக்காலத்தில் இத்தலத்தில் கல்விகற்றதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது. வேண்டியதை அள்ளிக்கொடுக்கும் தாயார் வறுத்த பயிரை முளைக்க வைக்கும் மரகதவல்லி தாயார் என போற்றப்படுகிறார். திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட தலம். ஸ்ரீ வேதாந்ததேசிகர் இப்பெருமானை பரமார்த்த ஸ்துதி என்ற பாசுரங்களால் மங்களா சாசனம் செய்துள்ளார்கள்.

பக்தர்கள் அதிகம் வரும் இத்திருக்கோயிலில் 2 கால பூஜைகள் நடைபெறுகின்றன. பேச்சு வராத குழந்தைகளுக்கு இங்கு தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்ய, குழந்தைகளை நன்கு பேச வைக்கும் தலமாக விளங்குகிறது. ஆலய அர்ச்சகர் திரு ஸ்ரீனிவாச பட்டாச்சாரியார் 9047489295. தொடர்புக்கு திரு நாராயணன்-9445214825. காஞ்சியிலிருந்து 15 கி.மி.


திருப்பதியில் உள்ள ஏழு மலைகள்!

திருப்பதியில் உள்ள ஏழு மலைகள்!

வெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். அவை:

1. விருஷபாத்ரி - எருதுமலை
2. நீலாத்ரி- கருமலை
3. அஞ்சனாத்ரி - மைமலை
4. சேஷாத்ரி - பாம்பு மலை
5. கருடாத்ரி - கருடமலை
6. நாராயணாத்ரி - நாராயண மலை
7. வேங்கடாத்ரி - வேங்கட மலை.


சாஸ்திரத்தை அனுசரியுங்கள்!

சாஸ்திரத்தை அனுசரியுங்கள்!

வாழ்க்கையானது, தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது போல் அமைய வேண்டும். அப்படி அமைத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. உலகில் பல மதங்கள் உள்ளன ஒவ்வொரு மதத்திலும் சில கோட்பாடுகள் உள்ளன. அவைகளில் கூறியுள்ளபடி ஒவ்வொரு மதத்தினரும் நடந்து கொள்ள வேண்டும். இந்து மதத்தில் ஏராளமான சாஸ்திர சம்பந்தமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் அனுசரிக்க முடியா விட்டாலும் ஒரு சிலவற்றையாவது அனுசரிக்க வேண்டும். பூஜா நேரத்தில் பட்டு வஸ்திரம் உடுத்திக் கொள்வது நல்லது. அதிலும் கரை போட்டதாக இருக்க வேண்டும். கரையில்லாத வஸ்திரம் எப்போதுமே உடுத்தக் கூடாது. வஸ்திரங்களில் கிழிசல் தையல் இருக்கக் கூடாது இவைகளைப் பயன்படுத்தக் கூடாது. பூஜைக்கு மடி வஸ்திரம் உபயோகிக்க வேண்டும். புது வஸ்திரம் நல்லது. பட்டு வஸ்திரம் நனைக்காததாக இருந்தால் திரும்பத் திரும்ப உபயோகிக்கலாம். பூஜை முடிந்து சாப்பிட ஆரம்பிக்கும் முன் கை கால் அலம்பி மந்திரம் உச்சரித்து சாப்பிடுமிடத்தை சுத்தம் செய்து வடக்கு, கிழக்கு முகமாக உட்கார்ந்து வாழை இலை அல்லது வெள்ளித் தட்டில் சாப்பிடலாம். தையல் இலை மற்றும் சில இலைகளில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது வீண் வம்பு பேச்சு பேசாமல் அன்னத்தை நிந்திக்காமல் பகவத் தியானத்தோடு சாப்பிட வேண்டும். அந்த சமயத்தில் வீட்டில் அவசப்தம் அழுகைக் குரல் போன்றவை கூடாது. சாப்பிடுவது நம் சரீர பலத்துக்காக மட்டுமல்ல நமக்குள் இருக்கும் பரமாத்மாவுக்கு அர்ப்பணம் செய்யப்படுவதற்காகவும் தான்.உத்தரீயம் இல்லாமல் ஒற்றை வேஷ்டியுடனோ சட்டை அணிந்தோ உடைந்த பாத்திரங்களிலோ இலையின் பின்புறத்திலோ சாப்பிடக் கூடாது. சிலர் தாமரை இலையின் பின்புறத்திலும் வாழை மட்டையை சீவி பின்புறத்திலோ சாப்பிடுவதுண்டு இது கூடாது.வெண்கலப் பாத்திரத்தில் சாப்பிடுவதோ தண்ணீர் எடுத்து கை கால் அலம்பவோ கூடாது.என்ன சார்...இவ்வளவு சாஸ்திரங்கள் சொல்கிறீர்களே... அனுசரிக்க முடியுமா... என்று கேட்டால் சாஸ்திரத்தில் அப்படியுள்ளது என்ற பதில் தான் கிடைக்கும்.முடிந்ததை அனுசரிக்கலாமே!

இறைவனோடு உறையாடிய உத்தமர்கள்!

இறைவனோடு உறையாடிய உத்தமர்கள்!

அவ்வைப் பாட்டி: வைணவத்துக்கு ஒரே ஒரு ஆண்டாள். சைவத்துக்கோ காரைக்காலம்மையார்,  மங்கையர்க்கரசியார், குலச்சிறையாரும் தான். கௌமாரத் தெய்வமான முருகனையும், காணாபத்ய கணபதியையும் அவ்வைப் பாட்டி ஒருத்தியே அதிகம் நெருங்கியுள்ளாள். சௌரத்தின் வழிக்கு திரௌபதியை சொன்னாலும் அவளை தீயிலே பூத்த ஒரு தெய்வப்பெண், வைணவக் கண்ணனை அண்ணனாகவே பெற்று விட்டவள். எனவே திரௌபதியை இந்த தெய்வப்பிறவிகளின் கணக்கில் சேர்க்கவும் நீக்கவும் நெருடுகிறது. கூட்டிக் கழித்தால் நான்கு பேர்தான் தேறி நிற்கிறார்கள். இவர்களில் ஆண்டாளும் சரி,  அவ்வையும் சரி, தங்கள் சிந்தனைகளை பாடல்களாக்கி, இந்த சமுதாயத்துக்குத் தந்து விட்டுச் சென்றுள்ளதுதான் சிறப்பு. இதில் ஆண்டாளின் வழி வேறானதாக, காதல்மிக்கதாய் உள்ளது. ஓர் எழிலார்ந்த பெண்மகளாய் அந்தத் திருமால் மேல் காதல் கொண்ட, அந்தக் காதலில் வெற்றியும் பெற்றவளாய்த் திகழ்கிறாள். அதனால் இல்வாழ்வில் ஈடுபட விரும்புவோர்க்கு இவள் பெரிய  வழிகாட்டியாகவும் விளங்குகிறாள்.

இவளது திருப்பாவைப் பாடல்கள் நம்பாவையர்களை, அவர்களின் வினைப்பாடுகளிடம் இருந்து, மீட்டுக் கரை சேர்ப்பதாக உள்ளது. இவளுக்கு நேர் எதிர்த்திசையில் நிற்கிறாள் நம் அவ்வைப் பாட்டி! ஆண்டாள் தெய்வக் காதலினால் கவர்ந்தாள். அவ்வையிடம் சமுகப் பார்வையும் அறக்கோட்பாடுகளும் மிகுந்து காணப்படுகிறது. இவளும் இறைவனை அடைய விரும்புகிறாள்... அது காதல் வழி அல்ல. தவத்தின்  வழி...! அவ்வைப் பாட்டியின்  பூர்வீகம் சோழ நாட்டு உறையூர். அந்தண குலத்திலே ஒருதாய் தகப்பனுக்கு மூத்த பெண்ணாகப் பிறந்தவர். எப்படி குழந்தைப் பருவத்திலேயே ஞானசம் பந்தர் கோபுரத்து தெய்வசிலையைப் பார்த்து தோடுடைய செவியன் என்று தொடங்கும் பாடலைப் பாடி தன் ஞானத்தை உலகறியச் செய்தாரோ அதே போலவே அவ்வையும் பிள்ளையாக இருந்தபோதே தான் ஒரு தெய்வக்குழந்தை என்பதை  உணர்ந்து விட்டாள்- இட்டமுடன் என் தலையில் இன்னபடியென்று எழுதிவிட்ட சிவனுஞ் செத்துவிட்டானோ? முட்டமுட்டப் பஞ்சமேயானாலும் பாரம் அவனுக்கன்னாய்! நெஞ்சமே அஞ்சாதே நீ என்று அவ்வை பாடியதைக் கேட்டு வியக்காதவர்கள் இல்லை. குறிப்பாக அவ்வையின் தாய் தந்தையர்கள் இவரைப் பற்றிய கவலையை விட்டொழித்தனர்.

குழந்தைப் பிராயத்திலேயே, அவ்வையின் மனம் கவர்ந்த கடவுள் பிள்ளையார்தான். யானை உம்மாச்சி என்று நம் பிள்ளைகளின் மனங்களையும் வேகமாகக் கவர்பவர் இந்த கணபதிதானே? இந்தப் பிள்ளையார் ஆகமத்துக்கு அடங்குவது போலவே வெறும் அன்புக்கும் அடங்குபவர். நல்ல நிலம் பார்த்துக் கோவில் கட்டிக் அங்கேதான் இவரை குடியமர்த்த வேண்டும் என்றில்லை. கட்டிக் களிமண்ணை எடுத்துக் கையாலே உருவம் அமைத்து ஒரு மரத்தடியில் உட்கார்த்தி வைத்து இரண்டு அருகம்புல்லைக் கிள்ளிப் போட்டாலே போதும். அகம் மகிழ்ந்து அருளை வாரி வழங்கிவிடுபவர் இவர். அவ்வை வாழ்ந்த உறையூரிலும் இவருக்குத் திரும்பிய பக்கமெல்லாம் வானம் பார்த்த கோவில்கள். ஆற்றுப்பக்கமாய் குடம் எடுத்துச் செல்லும்போதெல்லாம் அவ்வையின் பார்வையில் படும் இவர்தான் முதல் இஷ்ட தெய்வம். ஆற்று நீரை குடத்தில் கொண்டு வந்து அபிஷேகம் செய்து விட்டு அப்படியே பிரதட்சணமாய் வந்து மனமுருக வணங்கிடும்போது அவ்வைக்குள்ளே  இனிய தமிழில் பல துதிப் பாடல்கள் தோன்றின. அதில் ஒன்றுதான்-

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா...

என்னும் பாடல். அவ்வையின் காலம் மதுரையின் கடைச்சங்கம் இருந்த காலம். இந்த கால்த்தில்தான் சோழநாட்டில் கம்பரும், ஒட்டங்கூத்தரும், புகழேந்தியார் என்னும் புலவரும் வாழ்ந்து வந்தனர். இவர்களில் கம்பருக்கும், ஒட்டங்கூத்ருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்.  புகழேந்தியார் வழியோ தனிவழி. இப்படிப் பெரும் புலவர்கள் வாழ்ந்த நாளில்தான் காலம் அவர்களோடு அவ்வையையும் கொண்டு சேர்த்தது.

முன்னதாக அவ்வைத் தன் வாழ்வில் ஓர் அதிசயத்தையும் கேட்டு நிகழ்த்திக் கொண்டதை அனைவரும் அறிந்து கொண்டாக வேண்டும். அவ்வை ஒரு பெண்ணாக இருந்தும் பெண்களுக்கேயுரிய அழகுணர்ச்சிக்கும் அலங்காரத்திற்கும் முக்கியத்துவம் தரவேயில்லை. வாலிபப் பிராயத்தை எட்டும் நிலையில் தானொரு ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு இல்வாழ்வு எனும் இல்லறத்தில் செல்ல விரும்பவில்லை. இல்லறத்தில் செல்ல விரும்பாத நிலையில் நல்லறமாக அவ்வை கருதியது இறையறத்தைத்தான். அதாவது தவத்தை... குழந்தைப் பிராயத்திலேயே சிவபெருமான் மேல் பாரத்தைப் போட்டு விட்டேன் என்று பாடிய மனம், இல்லறம் எனும் பெரும்பாட்டை, பிள்ளைகள் உறவுகள் என்று வழிவழி யாய்த் தொடரும் ஒரு பந்தத்தை எப்படி விரும்பும்? அதையே விரும்பாதபோது இளமைதான் எதற்கு? இந்த இளமை, பெண்கள் வரையில் சற்று போகமும் மோகமும் சார்ந்தது. நாம் அதைக் கொண்டாடாவிட்டாலும் பிறர் கண்களுக்கு அது விருந்தாகி விடும் ஆபத்தும் அதிகம். தோற்றம் என்பது ஏற்றம் தருவதாக இருக்க வேண்டும். எனவே அவ்வை தனது மனதிற்கிசைந்த கணபதியிடம் தனக் கேற்ற விதமான உடம்பைக் கேட்கிறாள். கணபதியும் அந்த இளமையான தெய்வக்குழந்தைக்கு முதிர்ந்த வைரம் பாய்ந்த ஞானம் மிக்க தேகத்தை வழங்கி அருளுகிறான். உலகிலேயே இளமையைத் துறந்து முதுமையை வேண்டிப் பெற்றவர்கள் இருவர். ஒருவர் காரைக்காலம்மையார், அடுத்து, அவ்வைப் பாட்டி மட்டுமே. இங்கேயிருந்து தொடங்குகிறது அவ்வையின் பவித்ரமான பயணம்...


ஜோதிட அடிப்படை

ஜோதிட அடிப்படை

1 நாழிகை = 24 நிமிடம்
2 1/2 நாழிகை = 1 மணி
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்
7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம் = 1 ஜாமம்
8 ஜாமம் = 1 நாள் (பகல் + இரவு சேர்ந்து)
7 நாள் = 1 வாரம்
15 நாள் = 1 பக்ஷம் (பட்சம்)
2 பக்ஷம் = 1 மாதம்
2 மாதம் = 1 ருது (பருவம்)
3 ருது = 1 ஆயனம்
2 ஆயனம் = 1 வருடம்

நமது வான மண்டலத்தில் குறிப்பாக நமது சூரிய மண்டலத்தில் இருபத்தியேழு நட்சத்திர மண்டலங்கள் உள்ளன அவை பன்னிரண்டு ராசி மண்டலங்களுக்குள் உள்ளன. இந்த பன்னிரண்டு ராசி மண்டலங்களும் பன்னிரண்டு மாதங்களை குறிக்கின்றன. ஒரு நட்சத்திர மண்டலம் நான்கு பாவங்களாக (முதலாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் ) பகுக்கப்பட்டுள்ளன. ஒரு ராசி மண்டலமானது ஒன்பது பாதங்களை கொண்டது.
அதாவது 27×4= 108. 108/12=9 அதாவது ஒன்பது நட்சத்திர பாதங்கள் கொண்டது ஒரு ராசி.
ஒரு நட்சத்திரம் 4 பாதம் என்றால் ஒரு ராசியில் 3
நட்சத்திரங்களின் பாதங்கள் இருக்கும்

#ராசிகள்            

நட்சத்திரங்கள்
மேஷம்  - அசுவினி, பரணி,
கார்த்திகை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம் - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய மிதுனம் - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய கடகம்  - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய சிம்மம்  - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய துலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய
விருச்சிகம் - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய தனுசு - மூலம், பூராடம், உத்திரம் ஒன்றாம் பாதம் முடிய
மகரம் - உத்திராடம் இரண்டாம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் இரண்டாம் பாதம் முடிய
கும்பம்  - அவிட்டம் மூன்றாம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி மூன்றாம் பாதம் முடிய
மீனம் - பூரட்டாதி நான்காம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய....