புதன், 23 அக்டோபர், 2013

எது இனிய இல்லற வாழ்க்கை முறை?

ஆண் - பெண் உறவையோ, இயக்கத்தையோ உலகத்தின் எந்த மதமும் மறுத்ததில்லை. அப்படி எந்த மதமாயினும் மறுத்திருக்குமானால் உலக இயக்கமே தடுமாறிப் போயிருக்கும் இஸ்லாம், கிறிஸ்தவம், இந்துமதம் இவை அனைத்துமே முழுக்க இல்லறத்தை ஆதரித்தவையாகும். பெண்டு பிள்ளைகளைத் துறந்து விட்ட மாத்திரத்திலேயே ஒருவன் முக்திக்குத் தகுதி உடையவன் ஆக மாட்டான் என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதையில் உபதேசிக்கிறார். பெண்டுகள், பிள்ளைகள், சுற்றத்தார், இனத்தார், நாட்டாரை துறந்து செல்பவன் கடவுளுடைய இயற்கை விதிகளைத் துறந்து செல்கிறான். மனவலிமை இல்லாமையே அதன் காரணம். வசிஷ்டர், வாமதேவர் முதலிய மகரிஷிகள் அத்தனை பேரும் மணம் புரிந்து கொண்டு மனைவி மக்களுடனேயே இன்புற்று வாழ்ந்தனர். புலன்களை அடக்கியாளும் பொருட்டாக அக்காலத்து ரிஷிகள் பிரம்மச்சாரிகளாக இருந்த, நெடுங்காலம் பலவகைக் கொடிய தவங்கள் செய்து முடித்து, பின்பு இல்வாழ்க்கையில் புகுதலே மஹரிஷிகளுக்குள் வழக்கமாக நடைபெற்று வந்தது. ஆண் - பெண் உறவு என்பது வெறும் காம இச்சை அன்று. உடல் உறவின் புனிதத் தன்மையைக் கோயில் பிரகாரத்தில் இருந்து கோயிலின் உள்ளேயும் பார்க்கிறோம் அல்லவா! அப்படியே வாழ்க்கையையும் வாழ்ந்து பார்க்க வேண்டும்.

உற்சாகமான ஒரு தாம்பத்ய வாழ்க்கையை மேற்கொள்வதை, ஆடவர்கள் புனிதமான கோயில் வாழ்க்கையாக எண்ணிக் கொள்ள வேண்டும். வெறும் வரட்டுத்தனமும், வெறும் காம வேட்கையுமல்ல இல்லற வாழ்க்கை என்பது. பல கடமைகளுக்கு நடுவே காதல் என்றாலும், காதல் தான் முதலிடம் வகிப்பது அந்த முதலிடத்தைக் கணவன் தான் மனைவிக்குத் தந்தாக வேண்டும். கற்புடைய மனைவியுடன் காலதலுற்று அறமும் தர்மமும் தவறாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும். ஒருவனுக்குத் தன் வீடே கோயில், வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைக்குகையிலோ, மற்ற கோயிலிலோ கடவுளைக் காண மாட்டான். மனைவியுடன் துயிலும் போது, மனைவியின் கையால் சாப்பிடும் போது, மனைவி தமக்குப் பெற்றெடுத்துத் தந்த குழந்தை தொட்டிலில் தூங்கும் போது இந்தப் புனிதமான வாழ்க்கை உலகில் எவருக்கும் அமையாது என்கின்ற உற்சாகம் வேண்டும். பல கடமைகளுக்கு மேலே தான் அவள் காதலை வைத்திருக்கிறாள் என்றாலும் அவளுடைய உடம்பையும் அமைதிப் படுத்த வேண்டியது, நிம்மதிப்படுத்த வேண்டியது கணவனின் கடமையாகும். ஒரு பெண் வாழ்ந்தாள் என்று சொல்வதே அவள் கணவனோடு வாழ்ந்தாள் என்பதைத் தான் குறிக்கும்.

இல்லறமல்லது நல்லறமில்லை. அனுசரித்துப் போவது தான் இல்லறத்தில் மிக முக்கியம். நல்ல குழந்தை ஒரு வீட்டில் பிறந்திருக்கிறதென்றால் கணவன், மனைவி நன்றாக வாழந்திருக்கிறார்கள் என்பது அதன் பொருளாகும். கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடக்கூடாது. மனைவியிடம் இருந்து கணவனும் கடமையை எதிர்பார்க்கலாம். அதை நிறைவேற்ற அவள் தயங்கக் கூடாது. ஒரு இந்தியப்பெண் தன்னுடைய கணவனின் தேவைகளை எந்தக் காலத்திலும் மறுக்கவும் மாட்டாள். மறக்கவும் மாட்டாள். எனவே கணவன் - மனைவி உறவு என்பது புனிதமானது. கோயில் போன்றது. கோபுரத்துச் சிலை போன்றது என்பதை மனதிலே கொண்டு வாழ்வைத் துவக்குங்கள். உங்களுக்குப் பிறக்கின்ற குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். அவனுக்கு வருகின்ற மனைவியும் - அவளுக்கு வருகின்ற மண மகனும், ஆக மாப்பிள்ளை வந்தாலும் மருமகள் வந்தாலும் உங்களைப் பார்த்து அவர்கள் வாழக் கற்றுக் கொள்வார்கள். ஆரோக்கியமான சந்ததி உருவாகும். உங்களாலே நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குழந்தைகள் வாழ்கின்றன. உங்கள் பேரன் பேத்திகள் வாழ்கின்றார்கள். உங்களைப் பார்த்து அடுத்த வீடு, அக்கம் பக்கம் வாழ்கின்றது. அத்தோடு சமுதாயமே வாழ்கின்றது. நல்ல சமுதாயத்துக்கு அடிப்படை ஒரு நல்ல குடும்பம்.
காதலில் வெற்றிபெற செல்ல வேண்டிய கோயில் எது தெரியுமா?

எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதை தீர்த்து வைப்பதற்கென்று ஒரு சில கோயில்கள் உள்ளது. இப்படி தனித்துவம் வாய்ந்த கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் இருக்கும் போது, காதலிப்பவர்களை ஒன்று சேர்ப்பதற்கென்று கோயில் ஏதும் உண்டா என்பது பலரது கேள்வியாக உள்ளது.

அது சரி....

காதல் என்றால் என்ன? ஒரு சிலரிடம் கேட்டால் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நேசிப்பது காதல் என்பார்கள். காதல் என்றால் இதுமட்டும் தானா? இல்லை....இல்லவே இல்லை...

காதல் என்பது ஒருவரை ஒருவர் நேசிப்பது. விரும்புவது. அன்பு செலுத்துவது. பிரியம் வைப்பது. பாசம் வைப்பது. இதற்கு பெயர்தான் காதல் என பெரியவர்கள் கூறுகின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் வருவது மட்டும் காதல் இல்லை. தாய் பிள்ளைகளிடம் வைக்கும் பாசம். சகோதரன் சகோதரியிடம் வைக்கும் பிரியம். ஒருவன்  ஆண் அல்லது பெண் நண்பரிடம் வைக்கும் நேசம், ஒரு ஆண் ஒரு பெண்ணை மனதார விரும்புவது. தலைமையில் இருக்கும் ஒருவர் தனக்கு கீழ் இருப்பவரிடம் வைக்கும் அன்பு இப்படிப்பட்ட எல்லாமே காதல் தான்.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பாசம் இல்லாமல் தவிப்பவர்களும், சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இடையே பிரியம் இல்லாமல் வருத்தப்படுவர்களும். நண்பர்களுக்கிடையே நேசம் இல்லாமல் கவலைப்படுபவர்களும், ஆணும் பெண்ணும் ஒருவர் விரும்பி மற்றொருவர் விரும்பால் திரிபவர்களும், தலைமையும் கீழ் உள்ளவர்களும் ஒற்றுமையில்லையே என நினைப்பவர்களும் சென்று வழிபட வேண்டிய கோயில் நாகப்பட்டினம் மாவட்டம் கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் ஆகும்.

தாரகாசூரன் போன்ற அசுரர்கள் அழிய முருகனின் அவதாரம் தேவை. எப்போதுமே தியானத்திலிருப்பவர் சிவன். தேவர்கள் எல்லோரும் சேர்ந்து மன்மதனிடம் கூறி சிவன் மீது அம்பெய்து சிவனது தியானத்தை கலைக்க கூறினர். மன்மதனும் சிவன் மீது கணை தொடுக்க, கோபமடைந்த சிவன் மன்மதனை எரித்து விடுகிறார். பதறிப்போன ரதி தேவி, சிவனிடம் மடிப்பிச்சை கேட்க சிவனின் அருளால் மன்மதன் உயிர்ப்பிழைக்கிறான். சிவன் இத்தலத்தில் காமதகன மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.

காதலர் தினத்தன்று ஆண், பெண் காதலர்கள் தான் இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்பதில்லை. பாசம், பிரியம், நேசம், விருப்பம், அன்பு, ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோயிலுக்கு சென்று  இங்குள்ள காமதகன மூர்த்தியை வழிபட்டால் தங்களது விருப்பம் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இக்கோயில் பற்றி மேலும் அறிய..
ஆன்மீகம் மற்றும் மருத்துவம் கூறும் துளசியின் மகத்துவம் தெரியுமா?

துளசி இலையின் நுனியில் நான்முகனும் அடியில் சங்கரனும் மத்தியில் நாராயணனும் வசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. துளசி அனைத்து இலை பூ, வேர்கள், கிளைகள், நிழல் எல்லாம் ஆன்மீகமானவை. பக்தியுடன் துளசியின் இலையை கிருஷ்ணருக்கு அளிப்பவர் அவர் அருகிலேயே வாழ்வர். துளசியின் மண்ணை எடுத்து உடலில் பூசிக்கொண்டு கிருஷ்ணரை வணங்குபவர், ஒவ்வொரு நாளும் நூறு நாள் பூஜை செய்த பயனை அடைவர்.

துளசியின் மருத்துவ குணங்கள்:  எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும். துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழியின் விளக்கம் தெரியுமா?

அனைவருக்கும் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்ற ஒரு பழமொழி பற்றி தெரியும். ஆனால் இந்த பழமொழி எதற்காக எப்பொழுது முதன் முதலில் சொல்லப்பட்டது இதன் உண்மையான விளக்கம் என்ன என்று தெரியுமா?

குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார். அப்போது கர்ணன், தனது தா‌ய் கு‌ந்‌திதே‌வி‌க்கு ப‌திலுரை அ‌ளி‌க்‌கிறா‌ர். அ‌தி‌ல், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும். ஆகவே, ஆறிலும் சாவுதா‌ன், அ‌ப்படி இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் நூறிலும் சாவுதா‌ன். எப்படி செத்தால் என்ன? அத‌ற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய எனது நண்பன் துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான் கர்ணன். இவ்வாறு கர்ணன் கூறியது தான் இந்த பழமொழிக்கு உண்மையான பொருள். இத்தகைய கர்ணனை தான் கொடைத் தன்மைக்கு மட்டுமல்லாது நல்ல நட்பிற்கும் எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறோம்.
சித்தர்கள் கூறும் எளிய மருத்துவ முறைகள்!

பண்டைச் சித்தர்கள் தங்களது ஆய்வின் மூலமாக நோயினைத் தீர்க்க எளிய முறையை உருவாக்கித் தந்துள்ளார்கள். இந்த மருத்துவ முறை பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது. அதில் வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் மூலம் எளிதாக செய்யும் சில மருத்துவ முறைகளையும் குறிபிட்டுள்ளனர் அவை ..

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும். தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும். நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும். மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும். பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும். வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும். வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும். கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும். எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.
ஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெண்ணெய் சார்த்துவது ஏன்?

நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்துவடை சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு.

வெண்ணெய் சாத்துதல்: ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார், அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை, அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,
மாமியார் உடைத்தால் மண் குடம்: மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பதன் விளக்கம் தெரியுமா?

ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்பது தான் இதன் அர்த்தம். ஆனால் மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயிகள் வீட்டில் ஆண், பெண், குழந்தைகள் என அத்தனை பேரும் தங்கள் விளைநிலத்தில் உழைக்கின்றனர். இதில் ஆணுக்கு இணையாக பெண்கள் ஈடுபடும் போது வெளிமனிதர்களுக்குக் கொடுக்கும் கூலி மிச்சமாகிறது. அதோடு ஒற்றுமையின் விளைவாக உழைப்பினவ பலன் பெருகுகிறது. மாமியார் தங்கள் குடும்ப நிலத்தில் உழைத்தால், அது மண்ணுக்கு உரம். அதாவது அந்த வீட்டுத் தலைவனின் கரங்களைப் பலப்படுத்துவதின் மூலம் அவர்கள் சொந்த மண்ணுக்கு உரமாகும். வீட்டுக்கு வந்த மருமகளும் சேர்ந்து உழைத்தால் மண் பொன்னாகும். பொன்னுக்கே உரம் என்றார்கள். இவ்வளவு அருமையான கருத்துடைய பழமொழியே நாளடைவில் மாமியார்களைப் பற்றி ஒரு தவறான கருத்தைக் கூறுவது போல் அமைந்து விட்டது.
ரதசப்தமியன்று சூரியனை எவ்வாறு வழிபட வேண்டும்?

சூரியனுக்குரிய வடதிசைப்பயணம் துவங்கும் மாதம் தை. இம்மாதத்தில் வரும் வளர்பிறை சப்தமியன்று ரதசப்தமி கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சூரியனின் தேர் மேற்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம். சூரியன் வலம்வரும் பொன்மயமான தேரின் குதிரைகள் ஏழு என்பதால், சூரியனிடமிருந்து ஏழு பிராணங்களும், ஏழு ஜ்வாலைகளும், ஏழு சமித்துகளும், ஏழு ஹோமங்களும் தோன்றி இதயக்குகையில் ஒடுங்குகின்றன என்று வேதங்கள் சொல்கின்றன. பொதுவாக, தேருக்கு எட்டு குதிரைகள் பூட்டுவார்கள். ஆனால் சூரியனின் தேருக்கு ஏழு குதிரை மட்டுமே உள்ளது. ஒளியின் வண்ணங்கள் ஏழு. அதுவே ஏழு குதிரைகள் என்று கூறப்படுகிறது. அவை: காயத்ரி, பிரகுஹதி, உஷ்ணிக், ஜகதி, திரிஷ்டுப், அனுஷ்டுப் மற்றும் பங்கி என்பனவாகும். ரத சப்தமி அன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி பிறப்பதால், அன்று விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

ரதசப்தமி குளியல்: சூரிய உதயத்துக்குமுன் எழுந்து சூரியனுக்குப் பிடித்த எருக்க இலைகளில் ஏழு எடுத்து, அத்துடன் அட்சதையும்(பச்சை அரிசி சிறிதளவு), சிறிதளவு விபூதியும் தலையின்மீது வைத்துக்கொண்டு கிழக்குத் திசை நோக்கி நீராட வேண்டும். சுமங்கலிகள் குளிக்கும்போது, ஏழு எருக்க இலைகளை அடுக்கி, மேல் இலையில் சிறிது மஞ்சள் தூளும், அட்சதையும் வைத்து, உச்சந்தலையில் வைத்து நீராட வேண்டும். ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறையில் தேர்க்கோலமிட்டு, சுற்றிலும் செங்காவிப்பட்டை இட்டு சூரியபகவானுக்கு சர்க்கரைப் பொங்கலும் வடையும் படைத்து வழிபட வேண்டும். இந்த வழி பாட்டால் ஆரோக்கியமும், மாங்கல்ய பாக்கியமும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.
உடலில் உள்ள மச்சங்களின் அடிப்படையில் சாஸ்திரங்கள் கூறும் பலன்கள்!

சாஸ்திர முறைகளில் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பொதுவாக சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை ஏற்படும் போது அவர்களை மச்சக்காரன் என்பார்கள். பிறக்கும்போதே இருக்கும் மச்சம் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களையும், யோகங்களையும் கொடுக்கும். இவ்வாறு கொடுக்கும் பலன்களை ஆண் மற்றும் பெண்களுக்கு கீழ் கண்டவாறு குறிபிட்டுள்ளனர்.

ஆண்களுக்கான பலன்கள்: புருவங்களுக்கு மத்தியில் – நீண்ட ஆயுள், நெற்றியின் வலது புறம் – தனயோகம், வலது புருவம் – மனைவியால் யோகம், வலது பொட்டு (நெற்றி) – திடீர் அதிர்ஷ்டம், வலது கண் – நண்பர்களால் உயர்வு, வலது கண் வெண்படலம் – புகழ், ஆன்மீக நாட்டம், இடது புருவம் – ஏற்ற, இறக்கம், செலவாளி, மூக்கின் மேல் – சுகபோக வாழ்க்கை, மூக்கின் வலதுபுறம் – நினைத்ததை அடையும் அம்சம், மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம், மூக்கின் நுனி – ஆவணம், கர்வம், பொறாமை, மேல், கீழ் உதடுகள் – அலட்சியம், காதல் வயப்படுதல், மேவாய் (உதடுகளுக்கு மேல்) – செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம், வலது கன்னம் – வசீகரம், தயாள குணம், இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு,வலது காது நுனி – சில கண்டங்கள் வரலாம், இடது காது நுனி – தகாத சேர்க்கை, அவமானம், காதுகளின் உள்ளே – பேச்சாற்றல், திடீர் யோகம், தொண்டை – திருமணத்துக்கு பிறகு யோகம், கழுத்தின் வலதுபுறம் – சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை, இடது மார்பு – ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார், வலது மார்பு – பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர், வயிறு – பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை,அடிவயிறு – திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை

பெண்களுக்கான  பலனகள்: நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து, நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு, நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி, மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி, மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம், மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள், மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம், மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர், இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு, வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை,வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம், நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம், கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்,இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்,  தலை – பேராசை, பொறாமை குணம், தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை, தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம், தொப்புள் – ஆடம்பரம், படாடோபம், வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை, அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள், இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள், வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை.
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!

ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.

1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.
2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.
3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.
4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.
5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.
6. பெற்றோர், மற்ற பெரியோர்ளைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.
7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.
8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.
9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.
10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.
11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.
12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.
13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.
14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.
15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.
16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.
17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.
18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.
19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.
20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.
21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.
22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷõரகர்த்தமம்.
23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ர÷க்ஷõணம்.
24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.
25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.
26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.
27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.
28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.

தாமிஸிர நரகம்: பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.

அநித்தாமிஸ்ர நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

மகா ரௌரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.

காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.

அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.

பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.

அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.

சான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

வைதரணி: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.

பிராணி ரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.

லாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.

சாரமேயாதனம்: வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.

அவீசி: பொய்சாட்சி சொன்னால்  நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்.

மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கேற்ற தண்டனைகள்:

1. பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின் கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.
2. குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும்.
3. விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் செய்யப்படுவர்.
4. அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் கால்கள் வெட்டப்படும்.
5. தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.
6. தீர்த்தத்தில் மலம், சிறுநீர் கழிப்பவன் கல்லுக்குள் தேரையாய்ப் பிறப்பான்.
7. நீசனிடம் தானம் கேட்டோர், யாசகர், குருவிடம் பொய் கூறியோர் நாயாகப் பிறப்பர்.
8. தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால் திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி அவதிப்படுபவனாகவும் பிறப்பர். இப்படி வேறு, வேறு பாவங்களுக்கு ஏற்ப ஏராளமான தண்டனைகள் நரகத்தில் அளிக்கப்படும். எனவே மனிதன் பாவத்திற்கு ஏற்ற தண்டனை நரகில் நிச்சயம் என்று அறிந்து புண்ணியத்தையே சம்பாதிக்க வேண்டும்.
அமாவாசையன்று வாசலில் கோலம் போடகூடாது என்பது ஏன்?

பிதுர்களுக்குத் திதி கொடுப்பதை ஏதோ செய்யக்கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாள் என சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்தில் தான், கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்கச் சொல்லியுள்ளனர். முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்சம் உகந்தவை. கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இந்நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்யவேண்டும். அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பது நல்லது. திருமணத்தடை, வேலையின்மை, நோய்நொடி போன்ற கவலைகள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும்.

எங்கு நீராடலாம்: சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாள் அமாவாசை, இருவரும் உலகின் ஆன்மாக்கள், கண்ணுக்குத் தெரியும் கடவுளர்கள். தை அமாவாசையன்று பித்ருக்கள் பிரசன்னமாவார்கள் அன்று அவர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் அவர்களது பரிபூரண ஆசி கிட்டுவதோடு உயர்ந்த பலனும் பெறலாம். இதை கருடபுராணமும் தெரிவிக்கிறது. அமாவாசையன்று ஈர்ப்பு விசையால் கடல் நீர் மேலும் கீழும் புரளும். கடலடியில் உள்ள சங்கு, சிப்பி, வாயுக்கள் மேலே வரும் அப்போது நீரில் கரைந்துள்ள சக்திகள் உடலில் ஊடுருவி ஆரோக்யம் உட்பட அநேக பலன் ஏற்படும். ராமபிரான் தேவிபட்டின கடற்கரையில் மணலைப் பிடித்தபோது அது இறுகி நவகிரகங்கள் ஆயின என்பர். இங்கு தை அமாவாசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி புண்ணியம் பெறுவர். அதுதவிர ராமேஸ்வரம், வேதாரண்யம், கன்னியாகுமரி கடலிலும்; குற்றாலம், பாபநாசம், பாணதீர்த்தம் அருவிகளிலும்; காவேரி, வைகை, தாமிரபரணி நதிகளிலும் நீராடுவது அதிக பலன் தரும்.
உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.  உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.  வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.  இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்கக்கூடாது.

வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.  உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும். ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும். நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.
பிதுர் வழிபாட்டிற்கு உகந்த தை அமாவாசையின் சிறப்பு தெரியுமா?

ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது. இருந்தாலும், தை அமாவாசை தினத்தில் பிதுர் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பு. எனவேதான் உத்தராயணப் புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங்களிலோ நீராடி, வேத விற்பன்னர் வழிகாட்டுதலுடன், நீத்தார் வழிபாட்டிற்குரிய பூஜையைச் செய்வது போற்றப்படுகிறது. அக்னி தீர்த்தம் உள்ள கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமகத் தீர்த்தக்குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்சநதிக்கரை ஆகியவை பிதுர் பூஜைக்குரிய தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இவையன்றியும் பல தலங்கள் உள்ளன.

தமிழகத்தில் பிதுர் பூஜைக்குரிய இடங்கள் பல இருப்பதுபோல், வட நாட்டில் காசி, பத்ரிநாத், கயா போன்ற இடங்களில் எப்பொழுதும் எந்நாளிலும் பிதுர் பூஜை செய்யலாம். அந்த வகையில் காசியில் மணிகர்ணிகா கட்டம் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்கிறது. அதேபோல் கேரளாவில் ஐவர் மடம் என்னும் தலம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இங்குள்ள மயானத்தில் தினமும் அறுபதிலிருந்து எழுபத்தைந்து சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றன. இந்த இடம் காசி கங்கைக்கரையோரம் உள்ள மணிகர்ணிகா காட் என்ற இடத்தை நினைவூட்டுகிறது. ஐவர் மடத்தின் அருகில் பாரதப் புழா என்னும் நதி ஓடுகிறது. இந்த நதியில் ஐந்து நதிகள் கலந்து வருவதால் மேன்மேலும் சிறப்புப் பெறுகிறது. இந்த நதிக்கரை அருகில்தான் மயானம் உள்ளது. காசி மணிகர்ணிகா காட் என்னுமிடத்தில் உள்ள மயானத்தில் சடலங்கள் தகனமாகிக் கொண்டேயிருக்கும். வெகுதூரத்திலிருந்து சடலங்களைக் கொண்டு வந்து தகனம் செய்வார்கள். இங்கு சிவன் ஏற்றி வைத்த நெருப்பு இன்றும் கனன்று கொண்டிருக்கிறது. அதிலிருந்து நெருப்பு எடுத்துதான் தகனத்திற்குத் தீமூட்டுவர்.

அதேபோல, ஐவர் மடம் மயானம் பஞ்சபாண்டவர்கள் மோட்சமடைந்த இடம் என்று கருதப்படுவதால், அவர்களது சடலங்கள் இங்கு எரியூட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. (இது குறித்து வேறு கருத்துகளும் உள்ளன) விடியற்காலையிலேயே இந்த மயானம் சுறுசுறுப்படைகிறது. இங்கு காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை மட்டுமே சடலங்கள் எரியூட்டப்பட வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளதால், வெகுதூரத்திலிருந்தும் வாகனங்களில் குறித்த நேரத்திற்குள் வந்து, சடலத்திற்குச் செய்ய வேண்டிய சடங்குகளை முறைப்படி செய்து எரியூட்டுகிறார்கள். இங்கு மின்சார தகனம் என்பது கிடையாது. (காசியில் மின்சாரத் தகனம் செய்ய வசதி உள்ளது. தொடர்மழையால் விறகுக் கட்டைகளைப் பயன்படுத்த முடியாதபோது மின்சாரத் தகனத்தை மேற்கொள்கிறார்கள்.)

ஒவ்வொரு அமாவாசையிலும் ஐவர் மடத்தில் தர்ப்பணம், நீத்தார் வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக தை, ஆடி, ஐப்பசி, புரட்டாசி அமாவாசை நாட்களில் இங்கு முன்னோர்களுக்கான வழிபாடுகள் செய்ய கூட்டம் நிரம்பி வழியும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு இங்கு சிறப்புப்பூஜை, சடங்குகள் செய்தால், அவர்கள் ஆவியாக அலையாமல் சொர்க்கம் செல்லுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த மயானத்தின் அருகேயுள்ள ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் அதற்குரிய பூஜைகள், ஹோமங்கள் செய்து, அந்த ஆத்மாவைச் சாந்தப்படுத்தி மேலுலகத்திற்குச் செல்ல வழிசெய்கிறார்கள். பொதுவாக அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கான வழிபாட்டினைச் செய்வதுடன், அன்னதானமும் செய்தால் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும். அதில் தை அமாவாசை மேலும் சிறப்புமிக்கது!
என்றும் நலமுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?

நம் கருத்தைப் பிறர் மீது திணிக்கக் கூடாது. பிறர் கூறும் நல்ல கருத்துக்களை கேட்க வேண்டும்.பிறர் நம்மை நம்பும் படி நாம் நடந்து கொள்ள வேண்டும். மனதில் சாந்தி இருக்கும் பொழுது தான் ஆனந்தம் ஏற்படுகிறது. பணம் இருந்தும் அடக்கமாய் இருப்பவன் உயர்ந்தவன். பலம் இருந்தும் பொறுமையாய் இருப்பவன் வீரன். அடிக்கடி கோபம் கொள்ளாதீர்கள். ஏனெனில் கோப உணர்ச்சி கல்லீரலைப் பாதிக்கிறது. மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. எதற்கெடுத்தாலும் பயப்படாதீர்கள். ஏனெனில் பய உணர்ச்சி சிறுநீரகத்தைப் பாதிக்கிறது. நெய்யில் அடியில் தங்கியிருக்கும் கசடைப் பயன்படுத்தக் கூடாது. வெண்ணெயில் உள்ள அழுக்குகளின் திரட்சி இது. எளிதில் ஜீரணமாகாது. இதை உட்கொண்டால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, கல்லீரல் மந்தம் உள்ளவர்களுக்குக் காமாலை நோய் ஆகியவை ஏற்படும். எனவே இதைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. மனதை ஒருநிலைபடுத்தி இறைவனை நினைத்து தியானம் செய்வது நல்லது. தியானத்திற்கு எப்போதும் ஒரு அரிய சக்தி உண்டு. நம் நிதானம் தவறாது காப்பதே அதன் சக்தி. என்ன சூழ்நிலை வந்தாலும் நாம் நம்மை அமைதியாய், தெளிவாய், நிதானித்து பார்க்கும் ஒரு மனிதனாய் தியானம் நம்மை மாற்றியமைத்து விடுகிறது.
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பதன் பொருள் தெரியுமா?

ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும் வேண்டும். திட்டமிடாமல், மன உறுதியும் இல்லாமல் ஒரு செயலைத் துவங்கினால் அதை முடிக்க முடியாமல் திண்டாடுவோம். அப்போது, பலரும் பலவிதமாக ஆலோசனை சொல்லி குழப்புவர். அப்போது, செயலைத் தொடங்கியவருக்கு அங்கும் இங்கும் தாவும் குரங்கு போன்ற மனநிலை ஏற்பட்டு, எடுத்த செயலை முடிக்காமலேயே விட்டு விடுவார்கள். ஒரு காரியத்தைச் செய்யத் துவங்குவது என்பதை பிள்ளையார் பிடிப்பது என்றும், அது சரி வர நடக்காமல் போனால் அங்குமிங்கும் தாவும் குரங்காய் முடிந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம். இதன் மற்றொரு அர்த்தம் எந்த ஒரு வழிபாட்டையும் பிள்ளையாரின் துவங்கி ஆஞ்சநேயரில் முடிக்க வேண்டும் என்பதே. நவக்கிரகங்களால் பிடிக்கப்பட முடியாத இருவர் ஆஞ்சநேயரும், பிள்ளையாரும் மட்டுமே. எனவே இந்த இரு தெய்வங்களை வழிபட்டாலேயே நவக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.
வாழ்வில் உயர்வு பெற தேவை எது தெரியுமா?

மனிதனுக்கு வியாதி என்பதே வரக்கூடாது. தலைவலி வந்தால் தாங்க முடியாது. அவதிப்படும் போது, பல்வலி வந்தால் தலைவலி பரவாயில்லை என்று தோன்றும். வயிற்று வலி வந்தால் இவை இரண்டும் பரவாயில்லையே என்று தோன்றும். இதேபோல் மனிதன் பொருளாதாரத்தினாலும், சாப்பாட்டுக்கும் கஷ்டப்படும் போது தன்னைவிட தன் தகுதிக்கும் அந்தஸ்துக்கும் குறைந்தவனை நினைத்தால் நமது கஷ்டம் பரவாயில்லை என்று தோன்றும். ஒருவனுக்கு பெரிய கஷ்டம் அல்லது ஆபத்து வரும்போது இதைவிட பெரிய ஆபத்திலும் கஷ்டத்திலும் உள்ளவனை நினைத்தால் இந்தக் கஷ்டம் பெரிதாகத் தெரியாது. இதற்கெல்லாம் பொறுமையும், தன்னடக்கமும், தெய்வ நம்பிக்கையும் வேண்டும். இன்று என்ன செய்வது என்று யோசிப்பதை விட முதலில் கஷ்டம் தீரும் என்ற நம்பிக்கையே ஒருவனது வாழ்க்கையை உயர்த்தும். வெற்றிக்கும் அதுவே சிறந்த வழி.
மலையேறி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகம் விரும்புவது ஏன்?

தற்போது மலை தரிசனத்துக்கு மவுசு அதிகம் உள்ளது, கைலாஷ், சபரிமலை போன்ற கடினமான யாத்திரைகளை பக்தர்கள் மேற்கொள்கின்றனர். திருப்பதியில் பாதை வசதி ஏற்படுவதற்கு முன், பக்தர்கள் மலையேறியே சென்றனர். சபரிமலையில் இப்போதும் பம்பையில் இருந்து சந்நிதானம் வரை நடந்தே செல்ல வேண்டியுள்ளது. நன்றாகப் பசித்த பிறகு சாப்பிட்டால் தான், உணவு உடலில் ஒட்டும் என்பார்கள். அதுபோல, கஷ்டப்பட்டு யாத்திரை செய்தால் தான் தரிசனபலன் பூரணமாக மனிதனுக்கு கிடைக்கும். இதன் காரணமாகவே இறைவன் மலைகளிலும், காடுகளிலும் பதுங்கியிருக்கிறான். ஒரு காலத்தில் ஜோதிர்லிங்கத் தலமான ஸ்ரீசைலத்துக்கு போவது என்றால் மிகவும் கடினம். செல்லலுற அரிய சிவன் சீபர்ப்பத மலை என்கிறார் சுந்தரர். சீபர்ப்பதம் என்பது ஸ்ரீசைலத்தைக் குறிக்கும். பர்வதம் என்றால் மலை. இதையே பர்ப்பதம் என்றார் சுந்தரர். ஸ்ரீ என்பதையே தமிழில் சீ என்றார். மலைக்கோயில்களுக்குச் செல்ல போக்குவரத்து வசதி இருந்தாலும், வலுவான உடல்நிலை உள்ளவர்கள் மலையேறிச் சென்று தரிசனம் செய்து வாருங்கள். அதிக பலனை அடைவீர்கள்.
இளைஞர் தினம்: கீழ்ப்படியக் கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்!

ஜனவரி 12: விவேகானந்தரின் 150வது பிறந்ததினம். விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதியைத் தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர். விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது. சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது.1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் இறைவனுடன் கலந்தார்.

விவேகானந்தரின் பொன்மொழிகள்:

    நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"
    உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!
    கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்
    உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை.
    அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது.
    தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
    கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்.
    மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்.
    கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம் அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்.
    சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்.
    ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.
    உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது.
    சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள். தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும்.
    ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.
    கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.உயிர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் கடவுளுக்கே சேவை செய்தவராகிறோம்.
தை மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிபாடு மற்றும் விரதங்கள்!

சாவித்ரி கவுரி விரதம் : தை மாதம் 2-ஆம் நாள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. சிவனார் தனக்கருளிய இந்த விரதத்தை, தருமருக்கு போதித்தார் மார்க்கண்டேயர். விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். அதன்பின், குயவர் வீட்டுக்குப் போய் அவரது சக்கரத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு வர வேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டும். பிறகு மவுன விரதம் பூண்டு முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் பூஜித்து, 9-வது நாளன்று மலையில் பூஜையை முடிக்க வேண்டும். பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோதி முறங்களில்.. ஒவ்வொன்றிலும் ஒன்பது வெற்றிலை பாக்கு - ஒன்பது மஞ்சள் கிழங்குகள் - ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும். அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உண்ண வேண்டும். நீண்ட ஆயுள், செல்வம், சந்தான பாக்கியத்தையும் அருளக் கூடியது இந்த விரதம்.

பைரவ வழிபாடு : தை மாதத்தில் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை வடை மாலை சாற்றி வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும்.

வீரபத்திர வழிபாடு : மங்கலவாரம் எனப்படும் செவ்வாய்க் கிழமை தோறும் ஒரு வருட காலம் வீரபத்திரரை வழிபட, வல்வினைகள் நீங்கும். வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், தை மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளிலாவது இந்த விரதம் இருப்பது சிறப்பு. இதனால், நீங்காத தடைகள் நீங்கும். பயமும் தீவினைகளும் நம்மைவிட்டு விலகும். கிரக பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் அற்புத வழிபாடு இது.
குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரியா?

நாகரீக மோகத்தில் நிகழும் தவறுகளில் இதுவும் ஒன்று. சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தாம் மகிழ்ந்து இருப்பதாக மகாலட்சுமி கூறுகிறாள். எனவே, குங்குமம் தான் உயர்ந்தது. பொட்டு வைத்துக் கொள்வதையே, நாகரீகக் குறைவாக சில சகோதரிகள் கருதும் சூழலில் ஸ்டிக்கராவது வைத்துக் கொள்கிறார்களே என்று அல்ப சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது சிறந்தது.
விரதம் மற்றும் பண்டிகை தினங்களில் ஆலயங்களில் செய்யக்கூடிய 18 பணிகள்!

நமக்கு அன்றாடம் எவ்வளவோ பணிகள் இருந்தாலும் விரத மற்றும் பண்டிகை நாட்களிலாவது ஆலயப்பணிகளை செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.

1. சன்னதிதோறும் கோலமிடுதல்
2. ஆலய வளாகத்தை அலங்கரித்தல்
3. தரைப் பகுதியைப் பெருக்குதல்
4. மேல்பகுதிகளில் ஒட்டடை நீக்குதல்
5. கட்டிடங்களில் உள்ள செடிகளை அகற்றுதல்
6. விளக்கு, திருவாசிகளைத் தேய்த்தல்
7. மின் அமைப்பைப் பராமரித்தல்
8. நந்தவனத்தைப் பேணுதல்
9. அபிஷேக நீர்த்தொட்டியை சுத்திகரித்தல்
10. மண்டபங்களைக் கழுவி விடுதல்
11.சிறப்பு வழிபாடுகளை நடத்துவித்தல்
12. பூஜைப் பணிகளில் உதவுதல்
13.தரிசிப்போரை வரிசைப்படுத்துதல்
14. பிரசாதம் வழங்களில் உதவுதல்
15. புதியவர்க்கு வழிகாட்டல்
16. இறைத் துதிகளை கற்றுவித்தல்
17. இறை நூல்களை விநியோகித்தல்
18. வழிபாட்டில் முழுமையாக பங்கேற்றல்.
கை குலுக்கும் பழக்கம் குரங்குகளிடமிருந்து மனித இனத்தைத் தொற்றியதா?

ஷேக் ஹாண்ட் கொடுக்கும் பழக்கம் மேல்நாட்டுக்காரர்களிடம் இருந்து இன்று உலகிலுள்ள எல்லாரையும் தொற்றியுள்ளது. வெளிநாட்டு பிரமுகர்கள் நம்மூர் பிரமுகர்களை சந்திக்க வந்தால் நீண்ட நேரமாக கை குலுக்குவதை டிவிகளில் காட்டுகிறார்கள். இந்தப் பழக்கம் குரங்குகளிடம் இருந்து மனித இனத்தைத் தொற்றிய சுவாரஸ்யமான கதை உங்களுக்கு தெரியுமா?

ஒரு பெண்ணை ஆணுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதை பாணிக்ரஹணம் என்பர். அதுபோல, ராமபிரானை சுக்ரீவன் சந்தித்து அவருடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான். அதற்கு அடையாளமாக தனது கையை அவர் பிடித்தால் போதும் எனக்கருதி க்ருஹயதாம் பாணினா பாணிம் என்றான். கையைப் பிடித்தாலே நம் நட்பு உறுதியாகி விட்டது என்று பொருள். ராமன் மனிதனாக வந்திருந்தார் என்றாலும் அவர் கருணாமூர்த்தி. அவரவர் தரத்தைப் புரிந்து கொண்டு, அதே தரத்திற்கு தானும் இறங்கி வந்து அனுக்கிரஹம் செய்பவர். எனவே, குரங்கு என்றும் பாராமல் சுக்ரீவனின் கையைப் பிடித்து நட்பை உருவாக்கிக் கொண்டார். இவ்வாறு முதன் முதலில் கைபிடித்து உருவாகிய நட்பு, இன்று பரிணாம வளர்ச்சி பெற்று கை குலுக்கும் அளவுக்கு போயிருக்கிறது. வெள்ளைக் காரர்கள் நம் நாட்டை ஆண்ட போது, அவர்களை குரங்குக்கு ஒப்பிட்டு பரிகாசம் செய்ய, ஆன்மிக உபன்யாசகர்கள் இந்த மேற்கோளை காட்டுவார்களாம்.
இடதுகண் துடித்தால் ஆண்களுக்கு கேடு என்பது ஏன்?

இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என்பதை ராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது. ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக கையைப் பிடித்தபடியே, புதுமணத் தம்பதிகள் போல அக்னியை வலம் வந்தனர். ""ராமா! நாம் நண்பர்களாகி விட்டோம். இனிமேல், சுகமோ கஷ்டமோ நம் இரண்டு பேருக்கும் உரியது, என்றான் சுக்ரீவன். ராமனும் அந்த வார்த்தைகளை அங்கீகரித்தார். அந்த சமயத்தில், எங்கோ இருந்த மூவருக்கு இடதுகண் துடித்தது. ஒன்று அசோகவனத்தில் இருந்த சீதை. பெண்களுக்கு இடதுகண் துடித்தால் நன்மை ஏற்படும். சீதையின் விடுதலைக்கான நேரம் அப்போதே குறிக்கப்பட்டு விட்டது. வாலி மற்றும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன. ஆண்களுக்கு இது கெடுபலனை உண்டாக்கும். அவர்களின் அழிவுக்கான நேரமும் அப்போதே உருவாகி விட்டது. பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடதுகண் துடித்தால், அவனது முடிவுகாலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம்.
உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா?

நடைமுறை வாழ்க்கையில் பல்வேறு விதமான பழமொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு சிலர் சகுன சாஸ்திரங்களை நம்பி அதன்படி நடக்கின்றனர். எனினும், எல்லாம் அறிந்தவர் இறைவன் ஒருவரே. இந்தக் காரணங்களினால் இந்த காரியம் நடைபெற வேண்டும் என்று நம்மை வழிநடத்திச் செல்பபவர் அவரே. கடுமையாக உழைத்தால் அதற்கு ஏற்ற பலன்களை இறைவன் நமக்கு நிச்சயம் அளிப்பார். இதுபோன்ற மக்களின் மூடநம்பிக்கைகளில் நேரத்தை செலவழிக்காமல் நம்மால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்வோம். இறை அருள் நமக்கு எதை அருளினாலும் அதை ஏற்றுக்கொள்வோம்.
இறைவழிபாட்டில் எலுமிச்சம்பழத்திற்கு முக்கியத்துவம் ஏன்?

எல்லாம் வல்ல இறைவனுக்கு நம்மால் இயன்றவற்றை பக்தியுடன் அளிப்பதே பூஜை. ஆண்டவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனானது அவருக்கு மட்டும் இல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் சென்றடைந்து பயன் அளிக்கிறது. நாம் நமது சக்திக்கு ஏற்றவாறு பக்தியுடன் அளிக்கும் அனைத்து பொருட்களையும், இறைவன் அன்புடன் ஏற்கிறார். ஆகமங்களில் ஒவ்வொரு தெய்வ வடிவங்களுக்கும் அவர்களுக்கு உரிய சிறப்பான மலர், பழங்கள், மந்திரங்கள், வஸ்திரங்கள், எந்த நாட்களில் செய்ய வேண்டும் என மிகச் சிறப்பாக வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு சில அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவானதாக உள்ளது. புஷ்பங்களைத் தொடுத்து மாலையாக அணிவிப்பதைப் போல, சில சிறப்பான பழங்களையும் மாலையாகக் கட்டி கடவுளுக்கு அர்ப்பணிப்பதை ஆகமங்கள் ஆமோதிக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தான் எலுமிச்சம்பழம்.

தீயவற்றைப் போக்கி நன்மையை அளிக்கக்கூடிய மிகப் பெரிய மருந்து இது. வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது. காளி, மாரி, துர்கா போன்ற வீரத்தை வெளிப்படுத்தி நம்மைக் காக்கும் தெய்வங்களுக்கு இவை மிக உகந்தது. எனினும், மற்ற தெய்வங்களுக்கும் இவற்றை அளிக்கலாம். இவ்வகையில் எலுமிச்சம்பழத்தை மாலையாகக் கடவுளுக்கு அளிப்பதினால், அந்தப் பழத்தின் சிறந்த மஞ்சள் நிறத்தினாலும் தன்மையாலும் நாம் நமது காரியங்களில் வெற்றியடையலாம் என்பது உறுதி. அக்காலங்களில் நாம் நமது பிரார்த்தனையைத் தெரிவிக்க வேண்டுமெனில், அவர்களாகவே தங்களின் பிரார்த்தனைகளை சங்கல்பித்துக்கொண்டு பூவையோ பழங்களையோ தொடுத்து கடவுளுக்கு அளித்து நன்மைகளைப் பெற்றார்கள். முயன்றவரை நாமும் நம் கைகளால் பூவையோ, பழங்களையோ மாலையாகத் தொடுத்து இறைவனுக்குப் படைத்து பயனடைவோம்.
பக்தர்கள் கருப்பு மற்றும் மஞ்சள் ஆடை அணிவது ஏன் தெரியுமா?

சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் கருப்பு, காவி மற்றும் கருநீலம், பச்சை ஆகிய நிறங்களில் ஆடைகள் அணிகிறார்கள். ஆனால் கருப்பு ஆடை அணிவது தான் ஏற்றது. கருப்பு ஆடை அணிந்தால் தீங்கு விளைவிக்கக் கூடிய மிருகங்கள் நெருங்காது. இதற்கு அடுத்ததாக காவி உடையை தேர்வு செய்யலாம் இந்த ஆடை அணிந்தால் தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கிட்ட வரவே வராது.

மஞ்சள் ஆடையின் மகிமை: சில ஊர்களில் கோயில் திருவிழா ஆரம்பித்ததும், விரதம் இருக்கும் பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து கொள்வார்கள். அது பக்தியின் அடையாளம் தான் என்றாலும், அதனால் பல நன்மைகளும் இருக்கிறது. அதாவது, திருவிழா நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பு உண்டு. அந்த கிருமிகள் தாக்குதலை தடுக்கும் சக்தி இந்த மஞ்சள் ஆடைக்கு உண்டு. மேலும் மன ரீதியாக தெய்வ நம்பிக்கையையும் இந்த மஞ்சள் ஆடை அதிகரிக்கிறது.
சனி பெயர்ச்சியால் சங்கடமா? இருக்கு எளிய பரிகாரம்!

சனிதோஷம் விலக வழி: சனிபகவானுக்குரிய இலை வன்னி இலை. இந்த இலையால் நவக்கிரக மண்டபத்திலுள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் ஊர் கோயில்களில் வன்னிமரம் வைக்க ஏற்பாடு செய்யலாம். மேலும், சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். நவக்கிரக மண்டபத்திலுள்ள சனீஸ்வரருக்கு நீலநிற வஸ்திரம் அணிவிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், அவலட்சணமாக இருப்பவர்களுக்கு உதவி செய்தால், மிகுந்த நன்மை தருவார். திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு ( திருவாரூர்), குச்சனூர்(தேனி) ஆகிய ஊர்களிலுள்ள  கோயில்களுக்கு சென்று  அர்ச்சனை செய்து வரலாம்.

அஷ்டமச்சனி பரிகாரம்: நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் இந்த மூன்று எண்ணெயையும் கலந்து, ஒரு இரும்பு விளக்கில் எட்டு முகம் வைத்த திரியை கொண்டு சனீஸ்வரனுக்கு விளக்கேற்றி, அவரை வலம் வந்து வழிபட்டால் அஷ்டமச்சனி விலகிவிடும். நிம்மதி பிறக்கும். வாழ்க்கை சந்தோஷமாகும்.
யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள் இவை தான்:

1. ஒருவரது வயது, 2. பணம் கொடுக்கல் வாங்கல் 3. வீட்டு சச்சரவு, 4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள், 5. கணவன்-மனைவி அனுபவங்கள், 6. செய்த தானம், 7. கிடைக்கும் புகழ், 8. சந்தித்த அவமானம், 9. பயன்படுத்திய மந்திரம். இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை!

நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர், இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல் ...

அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே

பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து  இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.
பூஜையின் போது கோயில் மற்றும் வீடுகளில் மணியடிப்பது ஏன்?

பூஜையின் போது மணியோசை முக்கிய பங்குவகுக்கிறது. பூஜை முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் அசுரர், அரக்கர்கள் போன்ற கொடியவர்களை விரட்டியடித்து தேவர்களையும், தேவ கணத்தினரையும் அழைக்கவே பூஜையின் போது மணியடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். நிருத்தம், வாத்தியம், கீதம் இந்த மூன்றில் மணியோசைக்கும் ஓர் இடம் உண்டு. சங்கு, மணி, சேமக்கலம் இம்மூன்றுமே கடவுள் வழிபாட்டிற்கான சிறந்த சாதனங்களாக இன்றளவும் விளங்குகின்றன. மணி சத்தம் கேட்கும் இடங்களில் தீய சக்திகள் நெருங்காது என்பது நம்பிக்கை.
யார் இறைவனாக மதிக்கப்படுகிறார்?

தானம் செய்வது மிகச் சிறந்த விஷயமாகும். இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்கும் போது இறைவனாகவே மதிக்கப்படுகிறான். அவ்வாறு தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்...

1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்
4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்
6. நெய் தானம் தர நோயைப் போக்கும்
7. பால் தானம் தர துக்கநிலை மாறும்
8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்
9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்
10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்
11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்
12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்
14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்
15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.
மகாகவி பாரதியார் கூறும் பக்தி நெறிமுறைகள்!

டிசம்பர்-11: மகாகவி பாரதி பிறந்த தினம்,1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி தனது 11-ம் வயதிலேயே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார் பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும், மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பாரதியாரின் வரிகள் ..

தைரியம் தரும் பக்தி:

* தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே உலகமே வியக்கும் வண்ணம் ஒருவனுக்கு எதிர்பாராத விதத்தில் பயன்கள் கிடைக்கும்.
* கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி, பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே தெய்வம் அருள் புரியும்.
* நல்ல விளக்கிருந்தாலும் பார்க்க கண் வேண்டும். அதேபோல் நாலுபேர் துணையிருந்தாலும் நல்ல முறையில் வாழ சுயபுத்தி வேண்டும்.
* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன், பிற உயிர்களைத் திருத்த அதிகாரம் பெறமாட்டான்.
* வெறும் சொல்லுக்கு மகிமையில்லை. அச்சொல் உள்ளத் துணிவை உணர்த்துமாயின் அதற்கு மகிமையுண்டு.
* உண்மையான பக்தி இருந்தால் மனதைரியம் கிடைக்கும், மனதைரியம் இருந்தால் தெய்வ பக்தி ஏற்படும். அத்துடன், இந்த பிறவியிலேயே தெய்வநிலை பெறலாம்.
* கடவுளிடமும் அவருடைய படைப்பாகிய அனைத்து ஜீவன்களிடமும் என்றும் மாறாத அன்பு செலுத்துவதே பக்தி. அதுவே முடிவான சாதனமாகும்.

சூரிய நமஸ்காரம்: முனிவர்களும், புலவர்களும் உமது பெருமையைப் பெரிதென்று போற்றுகின்றனர். அப்பெருமையைக்கொண்ட சூரியதேவனே! உம்மை வாழ்த்துகின்றேன். பரிதியே! யாவற்றுள்ளும் முதல் பொருளாகத் திகழ்பவனே! பானு என்ற பெயர் கொண்டவனே! பொன் போல் நல்லொளியினை திரளாகப் பிரகாசிப்பவனே! உன்னை வணங்குகின்றேன். கதிரொளி தரும் உன் முகத்தினை சற்றே காட்டுவாயாக! வேதமொழிகள் உன்னைப் புகழும் புகழினைக் கண்டு நானும் வேள்விப்பாடல்களை பாடுவதற்கு ஆவல் கொண்டேன். நீ உதிக்கும் வேளையில் நாதத்தினை எழுப்பும் கடலின் இனிய ஒலியோடு நல்ல தமிழில் சொல்லில் இசைப்பாடல்களைச் சேர்ப்பேன். கீழ்வானில் படரும் வான் ஒளி இன்பத்தைக் கண்டு, பறவைகள் பாட்டுப்பாடி மகிழும். விழியினைப் போல சுடர்முகம் கொண்ட உன் வடிவம் கண்டு கடலின் ஒவ்வொரு துளியும் சுருதி பாடி புகழ் சேர்க்கும். என் உள்ளம் கடலினைப் போல் உன் இணையடியின் கீழே நின்று வணங்கும். உலகில் ஒவ்வோர் அணுவும் உந்தன் ஜோதியால் நிறைந்து நல்வாழ்வு பெறும். வானிலே நிலைபெற்று உலகமெல்லாம் வாழ்விக்கும் ஒளி தரும் தேவா! உன்னை ஆயிரம் முறை அஞ்சலி செய்வேன்.
திருக்கார்த்திகையில் தீபம் ஏற்றுவதன் சிறப்பு தெரியுமா!

திருக்கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபங்களை யார் பார்த்தாலும், ஏன்....விலங்குகள் பார்த்தாலும் கூட அவைகளுக்கு நீண்ட ஆயுள் உண்டாகும் என்பது ஐதீகம். கார்த்திகை தீபத் திருநாள் அன்று 60 வயது நிரம்பிய சுமங்கலிப் பெண்ணைக் கொண்டு தீபம் ஏற்றி, அதிலிருந்து 6 தீபங்கள் சுமங்கலிப் பெண்கள் ஏற்ற வேண்டும். அவர்கள் ஏற்றும் தீபங்களில் இருந்து ஆறு, ஆறாக பசுநெய் விளக்குகளை ஏற்றி வீட்டை அலங்கரித்தால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலித்துவ வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. வடமாநிலங்களில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று பெண்கள் தீபம்ஏற்றி, அதை இலையில் வைத்து ஆற்றில் விடும் வழக்கம் உள்ளது. இப்படிச் செய்தால், தங்கள் உடன் பிறந்தவர்கள் நீண்ட ஆயுள் பெறுவார்கள் என்று நம்புகிறார்கள்.
இறைவனை எளிதாக அடைய கைகொடுக்கும் 108!

அண்ணாமலையார், அபிதகுஜாம்பிகை, விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மட்டுமல்ல, திருக்கார்த்திகையன்று திருவிளக்கு ஏற்றி பூஜை செய்யும் போதும் 108 போற்றி சொல்லி வழிபடுகிறோம். இதை 120, 130, 150, 1000 என்றும் வைத்திருக்கலாமே! ஏன் 108க்கு முக்கியத்துவம் தரப்பட்டது தெரியுமா?

மனிதன் ஒரு மணிநேரத்துக்கு 900 தடவை வீதம் 24 மணி நேரத்துக்கு 21,600 தடவை மூச்சு விடுகிறான். இதில் பகலில் 10,800 தடவையும், இரவில் 10,800 தடவையும் மூச்சு விடப்படுகிறது. ஒவ்வொரு தடவை மூச்சு விடும் போதும் இறைவனை நினைக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இது சாத்தியமா என்றால் இல்லை. "மாயை (உலக வாழ்க்கை நிரந்தரமானது என்ற எண்ணம்) என்ற வலையில் சிக்கியுள்ள மனிதன் இறைவனை நினைப்பதில்லை, நினைத்தாலும் அதற்கு ஒதுக்கப்படும் நேரம் குறைவு. மாயைக்குரிய எண் 8. இந்த மாயையில் இருந்து நம்மை மீட்பவன் இறைவன். நாம் பல வடிவங்களில் வழிபட்டாலும், அவன் ஒரே ஒருவன் தான். ஆக, ஏக இறைவனுக்கும் (ஒன்றுக்கும்) எட்டுக்கும் ( மாயைக்கும்) மத்தியில் நாம் ஒரு சக்தியுமே இல்லாத பூஜ்யமாக இருக்கிறோம். அதனால் தான் 108 என்ற எண் முக்கியத்துவம் பெற்றது. கலியுகத்தில் இறைவனை அடைய 108 போற்றி அதிகமாகவே கைகொடுக்கிறது.
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களைச் செய்து விடுகின்றனர். அப்படி செய்யப்பட்ட பாவங்களுக்கு பரிகாரம் உண்டா என்று கேட்பதுண்டு. மக்களுக்கு சந்தான பிராப்தி அவசியம். இந்த பிராப்தி, சிலருக்கு இல்லாமல் போவதுண்டு. பொதுவாக, இது போன்று புத்திர பாக்கியம் இல்லாமல் போவதற்கு சிலவகை காரணங்களை, பாவங்களில் சொல்லியிருக்கின்றனர். குரு, தாய், தந்தையை துவேஷித்து, துன்பப்படுத்தி இருந்தால், சந்தான பாக்கியம் இருக்காதாம். இதற்கு பரிகாரம், சொர்ணத்தால் கிருஷ்ண விக்ரகம் செய்து, தானம் செய்தால், சந்தானம் உண்டாகும். அதே போல், கன்றையும் பசுவையும், தாயையும் பிள்ளையையும் பிரித்தால், சந்ததி உண்டாகாது. இதற்கு, பூமிதானம், கோதானம் செய்தால், பாவம் விலகி, சந்தான பாக்கியம் கிடைக்கும். மேலும், குழந்தைகளை மிரட்டுவது, அடிப்பது, அவர்களுக்கு கொடுக்காமலோ, ரகசியமாகவோ அல்லது எதிரிலேயோ பட்சணங்கள் சாப்பிடுவதும் புத்திர தடைக்கு காரணம். இதற்கு பரிகாரமாய், குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள், மரப்பாச்சி, சோழி இவைகளை வாங்கி, தானம் செய்ய வேண்டும். பிறருடைய குழந்தைகளை அடித்து புண்படுத்துவது, மற்ற உயிரினங்களின் முட்டைகளை உடைப்பது போன்ற செயல்கள், சந்ததி நாசம் ஏற்படுத்தும். தண்ணீரில் மூழ்கி இறந்து விடும் தறுவாயில் உள்ள விலங்குகளை காப்பாற்ற முயற்சிக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பாவம். இதற்கு, தினமும் கோ பூஜை செய்வதும், பசுவுக்கு புல் கொடுப்பதும் பரிகாரமாக சொல்லப்படுகிறது. சர்ப்பங்களை அடித்துக் கொல்வதாலும், ராகு கேது கிரகதோஷங்களாலும், பித்ருக்கள் சாபத்தாலும், சந்தானம் இல்லாமல் போகலாம். நாகப் பிரதிஷ்டை, சர்ப்ப சாந்தி செய்தால், புத்திர பாக்கியம் ஏற்படும்.