ஞாயிறு, 15 டிசம்பர், 2019

பாசுரம்  1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

பாசுரம்  6

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

பாசுரம் 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பாசுரம்  9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

பாசுரம்  10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

பாசுரம்  11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

பாசுரம்  12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம் 13

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம் 14

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.

பாசுரம்  15

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.

பாசுரம்  16

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.

பாசுரம்  17

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.

பாசுரம்  18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  19

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

பாசுரம் 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

பாசுரம் 21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  22

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம் 23

மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பாசுரம்  24

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

பாசுரம்  25

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம் 26

மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

பாசுரம்  27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம் 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பாசுரம்  29

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

பாசுரம்  30

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
 அதிகாலையில் எழுபவரே உயர்ந்தவர்!

நம்மிடையே பல ஜாதிப்பிரிவுகள் உள்ளன. அவரவர் தங்கள் ஜாதியின் சிறப்பை எடுத்துக்கூறி உயர்ந்த ஜாதியாக கொள்கிறார்கள். ஆனால் யாரொருவன் காலையில் சூரியனைப் பார்க்கிறானோ அவனே உயர்ந்த ஜாதிக்காரன் என்கிறார் வேதத்திற்கு பதம் பிரித்த அத்ரி மகரிஷி.உதைநம் கோபா அத்ருஷன் அத்ருஷன் உதஹார்ய:அத்ருஷன் அத்ருஷன் என்கிறார்.இதற்கு சூரியனை முதலில் பார்க்கும் ஜாதி உயர்ந்தது என்று பொருள்.அதாவது காலையில் சூரியன் உதிக்கும் முன்பே எந்த நாடு எழுகிறதோ அந்த நாடே உருப்படும். திருப்பாவையில் ஆண்டாள் இதையே மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்கிறாள்.மதி என்றால் ஒளி என்றும் பொருளுண்டு.ஆயர்பாடி மக்கள் பசுக்களை மேய்ச்சலுக்காக ஓட்டிக்கொண்டு காலையிலேயே கிளம்புகிறார்கள்.அவர்களே முதலில் சூரியனைப் பார்க்கிறார்கள்.அடுத்து பெண்கள் குடங்களுடன் நீராட கிளம்பி விட்டார்கள்.அவர்கள் அடுத்ததாக சூரியனைப் பார்க்கிறார்கள். அவர்களும் கொடுத்து வைத்தவர்களே! இவர்களுக்கு பிறகு தான் சூரிய வெளிச்சம் தரையில் விழுந்து பூமியே சூரியனைப் பார்க்கிறதாம்.மதியை நிலா என்று எடுத்துக் கொள்ளலாம். பகலில் சூரியனும் இரவில் சந்திரனும் ஒளிரும் நாளே நற்செயல்கள் செய்ய உகந்த நாள்.அப்படிப்பட்ட உயர்ந்த நாளில் மார்கழி நோன்பு துவங்குகிறது, இதனால் தான் ராமபிரான் சூரியகுலத்திலும் கிருஷ்ணர் சந்திர குலத்திலும் அவதரித்தனர். இனிமேலாவது சூரியோதத்துக்கு முன் எழும் பழக்கத்தை மேற்கொண்டு உயர்ஜாதியில் ஒரு உறுப்பினர் ஆவீர்களா!
---------------------------------------------------------------------------------
12 ராசிகளுக்கான மார்கழி மாத பலன்கள்!

மார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது. மார்க்க என்றால் வழி.சீர்ஷம் என்றால் மேலான.ஆக மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள்.பக்தியே மேலான வழி.அதிலும் இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி.இத்தகைய சிறப்பான மார்கழி மாதத்தின் 12 ராசிகளுக்கான பலன்களும் பரிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
என்ன கோலம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கோலம் போட்டுக் கோலாகலமாக வாழுங்க: கோலம்போடும்போது கோடுகள் கோணல் மாணலாக இருந்தாலும் போட்டு முடித்தபின் எப்படிக் கோலாகலமான அழகுடன் இருக்கிறதோ அப்படியே கோலம் போடும் வீட்டினையும் மகாலட்சுமி தன் அருட்பார்வையால் நிறைப்பாள் என்பது ஐதிகம். கோலங்கள் தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போட வேண்டும். ஹ்ருதய கமலம், நவகிரக கோலங்கள், ஐஸ்வர்யக் கோலம், ஸ்ரீசக்ரக் கோலம் போன்றவை யந்திரம் போன்றவை. இவற்றை மஞ்சள் பொடியினாலும், அரிசிமாவினாலும் மட்டுமே போடுவது நல்லது. அழகுக்காக வண்ணப் பொடிகளைப் பயன்படுத்தினால் கோலத்திற்கு உரிய தெய்வம் அல்லது கிரகத்திற்கு உரிய வண்ணத்தில் போடலாம்.  இத்தகைய கோலங்களால் தெய்வீக அருள் நிரம்பும் தோஷங்கள் விலகும். சுப காரியங்களுக்காகப் போடப்படும் கோலங்கள் கண்டிப்பாக இரட்டை இழைக்கோலங்களாகத்தான் இருக்க வேண்டும் ஒற்றை இழை ஒருபோதும் கூடாது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் சமயத்தில் போடும் கோலங்களுக்கு காவியால் அழகூட்டுவது சிறப்பானது. இப்படிப் போடுவதால் மங்கலம் சிறக்கும்; மனை விளங்கும்.  வீட்டு வாசலில் போடும் கோலங்களில் தெய்வீக வடிவங்கள் இடம்பெறக் கூடாது. புனிதமான பொருட்களின் வடிவங்களை வரைவதைத் தவிர்ப்பதும் நல்லது. அவற்றை பூஜை அறையிலோ வீட்டின் உள்ளே போடலாம். படிக்கோலத்தின் நான்கு மூலைகளிலும் போடும் தாமரை, திசை தெய்வங்களின் ஆசியைப் பெற்றுத்தரும். வாசல் படிகளில் குறுக்குக் கோடுகள் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கோலத்தின் தொடக்கமும் முடிவும் கோலத்தின் மேற்புறமாக அமையும்படி போடுவது அவசியம். ஏறு முகமான பலனை இது தரும். கோலத்தில் இடப்படும் காவி சிவ சக்தி ஐக்கியத்தை உணர்த்துகிறது. இப்படிக் கோலமிடுவது, சகல நன்மையும் தரும்.
---------------------------------------------------------------------------------
திருவெம்பாவை-பாடல் 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

பொருள்: வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!

விளக்கம்: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி அதிகாலையில் பவனி வருகிறார். அவரைத் தரிசிக்க பெண்கள் காத்து நிற்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த இந்த நற்பேறு தங்கள் தோழிக்கும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் அவளை எழுப்புகிறார்கள்.
---------------------------------------------------------------------------------
திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை!

கைசிக ஏகாதசி விழாவையொட்டி, திருப்பதி கோவிலில் இருந்து நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்த வேங்கடமுடையான் வஸ்திர மரியாதையுடன், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாப்பிராஜு, நிர்வாக அதிகாரி கோபால், ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், கோவில் இணை கமிஷனர் கல்யாணி ஆகியோர் வீதியுலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
---------------------------------------------------------------------------------
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - சிறப்பு கோலங்கள்!

மார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது. மார்க்க என்றால் வழி. சீர்ஷம் என்றால் மேலான. ஆக, மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள். பக்தியே மேலான வழி. அதிலும், இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி. ஆண்டாள், பெருமாளைச் சரணடைந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். அதற்காக, முப்பது நாள் நோன்பிருந்தாள். தான் மட்டுமின்றி, மற்றவர்களும் இறைவனை அடைய வேண்டும் என்ற மேலான நோக்கில், தோழியரையும் நோன்பிருக்கும்படி வற்புறுத்தினாள். பக்தி மட்டுமின்றி பொதுநலமும் மேலான வழி என்பதை இம்மாதம் நமக்கு எடுத்துரைக்கிறது.
---------------------------------------------------------------------------------
திருப்பாவை-பாடல் 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.
---------------------------------------------------------------------------------
கந்த சஷ்டி தந்த தேவராயர்

வல்லூரில் வீராசாமி என்பவருக்கு பிள்ளையில்லாத குறையை நீக்க பிறந்தவர் தேவராசர். இவர் பெங்களூரில் வசிக்கும் போது, தீராத கொடிய வயிற்று வலியால் அவதிப்பட்டார். அப்போது அவர் முருகனின் அருளைநாடி திருச்செந்தூர் அடைந்தார். அன்று கந்தசஷ்டித் திருவிழாவில் முதல்நாள். முருகனின் முன்வந்தவுடன் வலி குறையத் துவங்கியது. அதனால் தேவராசர், முருகன் மீது கவசம் பாடலானார். 6 நாட்களும் முருகனைத் துதித்துப் பாடியதே கந்த சஷ்டி. (ஆறு) கவசம், சஷ்டி விழாவில் பாடியதாலும் சஷ்டி கவசம். கவசம் ஆறாயினும் ஒவ்வொன்றும் தனிப்படை வீட்டுக்கு உரியதல்ல. ஒவ்வொன்றிலுமே மற்ற படை வீடுகள் சிறப்பு தெரிகிறது. அதுமட்டுமின்றி, படைவீடு அல்லாத தலங்கள் பலவும் வர்ணிக்கப்படுகின்றன. கந்த சஷ்டி கவசங்களை முருகனின் எண்ணில்லா தன்னிகரிலா உலகத்திலுள்ள அனைத்துத் தலங்களுக்கும் உரியனவாகக் கருதுவதே முறை எனத் தோன்றுகிறது. எல்லா கவசமும் ஒரே ராகத்தில் பாடலாம். தினமும் படிக்கலாம். இயலாதவர்கள் செவ்வாய். கார்த்திகை, சஷ்டி தினங்களில் மட்டுமாவது படிப்பது மிகவும் நல்லது. இதில் குன்று தோறாடல் என்பது திருத்தணிக்கு மட்டுமின்றி எல்லா குன்று மீது உள்ள முருகனுக்கும் உகந்தது.
பானுதாசர்

பயிர் பச்சைகள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த நகரம் பைடனிபுரம். இந்நகரத்து மக்கள் தெய்வ பக்தியில் சிறந்தவர்கள். இங்கு சூரிய நாராயணர் என்ற பெரியவர் வசித்தார். இவர் தினமும் ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்தபின்னரே தமது வேலைகளைச் செய்வார். இவருக்கு சூரிய பகவானின் அருளால் ஒரு மகன் கிடைத்ததால், பானு என பெயரிட்டார். பானுவுக்கு ஏழு வயது ஆனதும், உபநயனம் செய்வித்து வேத அத்யனத்தை கற்பித்தார். ஆனால், தந்தையின் அடிக்குப் பயந்து ஒப்புக்குப் படிப்பான் பானு. இதனால் பெற்றோர் மிக வருந்தினர். ஒருநாள் தந்தைக்கு கோபம் உச்சிக்கு ஏற, மகனை நன்றாக அடித்துவிட்டார். இனி இங்கு இருந்தால் தந்தையார் நம்மை அடித்தே கொன்றுவிடுவார் என்று எண்ணிய பானு வீட்டைவிட்டு நகரை அடுத்துள்ள காட்டிற்கு சென்று விட்டான். பசி, தாகம் கண்ணை இருட்டிக்கொண்டு ஒரு மண்டபத்திற்குள் நுழைந்தான். அது சூரியதேவன் கோயில். சூரியதேவனைப் பார்த்ததும் துதிக்க வேண்டும் என்று மனதில் தோன்ற, இரு கரம் தூக்கி, பகவானே ! வீட்டில் பெற்றோர் அடிக்கும் அடிக்குப் பயந்து உன்னைச் சரணடைந்தேன். என்னைக் காப்பாற்றும், என்று மனமுருக வேண்டி நின்றான். கதிரவன் ஓர் அந்தணர் வேடம் புனைந்து அவன் முன் காட்சிதந்தார். ஒளிவீசும் அவரின் முகமலரைக் கண்டு வியந்த சிறுவன் அவர் பாதங்களில் பணிந்து, ஐயனே ! எனக்கு வேதங்கள் வரவில்லை. தாங்கள்தான் காக்க வேண்டும் என்றான்.

கதிரவன் அவனை அணைத்து, குழந்தாய் ! இனி உன்னை யாரும் அடிக்கமாட்டார்கள். இன்றுமுதல் உனக்கு எல்லாவிதக் கலைகளும், வித்தைகளும் வரும். ஸ்ரீ பாண்டுரங்கனின் புகழ்பாடி அவரை பக்திசெய், என்று கூறி மகாமந்திரத்தை உபதேசித்தார். அறிவு ஒளி வீச பானு வீடு திரும்பினான். பானுவின் கண்களில் வீசி அறிவு ஒளிரக்கண்டு பெற்றோர் வியந்தனர். அவர்களிடம் காட்டில் நடந்தவற்றைக் கூறினான். காலம் உருண்டோடியது, பானு இளைஞன் ஆனான். அவனின் பக்தியையும் அறிவையும் கண்டு மக்கள் அவனை பானுதாசர் என அழைக்கலாயினர். தக்க வயதில் பானுதாசருக்கு மணம் முடித்தனர் பெற்றோர், அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குத் தன் தந்தையின் பெயரான சூரியநாராயணன் என்ற பெயரை வைத்தார். பானுதாசரின் மனம் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவில்லை. இறைவனைப் போற்றிப்பாடுவதே தன் கடமை என்று நினைத்தார். இதனால் வீட்டில் வறுமை தாண்டவமாடியது. உறவின வியாபாரிகள் சிலர் பானுதாசரின் குடும்பம் கஷ்டப்படுவதைக்கண்டு அவருக்கு, சிறிய ஜவுளிக்கடை வைத்துக் கொடுத்தனர். அத்துடன் வியாபார நுணுக்கங்களான உண்மையைச் சொல்லி விற்றால் லாபம் கிடைக்காது. பொய் சொல்லிவிற்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தனர். பானுதாசர் ஜவுளிக்கடையை ஏற்றுக்கொண்டார். வியாபார நுணுக்கங்களை காற்றில் பறக்க விட்டார். பதிலாக கடைக்கு வருபவர்களிடம் நல்ல கருத்துக்களை கூறுவார். இதனால் இவர் பெருமை எங்கும் பரவியது. மக்களும் இவர் கடையில் குவிந்தனர். விற்பனையும் பெருகிற்று. மற்ற கடைகளின் வியாபாரம் மந்தம் அடையத் தொடங்கியது. இதனால் எல்லோரும் யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டது போல் நாமே நம்மைக் கெடுத்துக்கொண்டோமே என்று பொறாமையும், கலக்கமும் கொண்டனர். இதற்கு ஒரு முடிவு கட்ட ஏற்பாடு செய்தனர்.

ஒருநாள் எல்லா வியாரிகளும் குதிரைகளின் மேல் சரக்குகள் ஏற்றி வெளியூர் சென்றனர். பானுதாசரும் தம் சரக்குகளுடன் புறப்பட்டார். வியாபாரம் முடிந்து ஊர் திரும்பும்போது இருட்டத் தொடங்கவே நடுவில் உள்ள ஒரு சிற்றூரில் உள்ள கோயில் மண்டபத்தில் மீதி சரக்குகளுடனும், விற்ற பணத்துடனும் தங்கினர். கோயிலுக்குள் ஹரிதாசர் என்னும் உபன்யாசர், பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இதை அறிந்த பானுதாசர் மற்றவர்களிடம் தம் பொருள்களைப் பார்த்துக் கொள்ளும்படியும், பிரசங்கம் கேட்டுவிட்டு வருவதாகவும் கூறி கோயிலுக்குள் சென்றுவிட்டனர். மற்ற வியாபாரிகள், கடவுளே நமக்கு நல்ல வாய்ப்பு அளித்துள்ளார் என்று நினைத்தனர். பானுதாசரின் பொருள்கள் அனைத்தையும் ஒரு பாழும் கிணற்றில் போட்டனர். குதிரையை அவிழ்த்து விரட்டி விட்டனர். பானுதாசரிடம், பொருள்கள் களவு போய்விட்டது என்று சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்தனர். நள்ளிரவில் கொள்ளையர் கூட்டம் மண்டபத்தைச் சூழ்ந்தது. அவ்வளவுதான்  என்ன நடந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம். அப்போதுதான் தாங்கள் செய்த தவறை உணர்ந்தனர். பானுதாசரின் பொருள்களை அபகரிக்க நினைத்தோம். நமது பொருள்கள் பறிபோயின. உயிர்பிழைத்ததே கடவுள் புண்ணியம். பானுதாசர் தெய்வ பக்தி மிக்கவர். அவர் பொருள்கள் பத்திரமாக கிணற்றில் இருக்கின்றன. நமது பொருள்கள்தான் போய்விட்டன என்று மனம் வருந்தினர்.  பானுதாசர் ஹரிதாசரின் பிரசங்கத்தைப் பற்றி அசைபோட்டபடி மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வழிப்போக்கன், ஐயா ! இந்தாருங்கள் உங்கள் குதிரை, என்று அவரிடம் கடிவாளத்தைக் கையில் கொடுத்துச் சென்றான்.கட்டி வைத்த குதிரை எப்படி இங்கே வந்தது ? கொடுத்துச் சென்ற மனிதர் யார் ? என்ற சிந்தனையுடன் அந்த மனிதனிடம் கேட்பதற்குள், வந்தவரைக் காணவில்லை. குழப்பத்துடன் அவர் மண்டபத்திற்கு வந்தார். அங்கே எல்லோரும் அழுதுகொண்டும் புலம்பிக் கொண்டும் இருந்தனர். எல்லோரும் நடந்ததைக்கூறி வருந்தினர். அவர்களிடம், ஐயா ? நீங்கள் தான் எனக்கு வியாபாரம் செய்ய வழி செய்தீர்கள். இவை உங்களின் உடைமை. கிணற்றில் கிடப்பவற்றை நீங்களே பகிர்ந்து கொள்ளுங்கள், என்றார். இதன்பின் பானுதாசர் தெய்வ பக்தியில்  மனம் செலுத்தினார். இறைவனைப் பற்றிப் பாடுவதையே தன் கடமையாகக் கொண்டார். யாராவது நண்பர்களோ, உறவினர்களோ ஏதாவது கொடுத்தால்தான் சாப்பாடு. சில சமயங்களில்  கையில்  கிடைத்ததையும் தானம் செய்து விடுவார். பஜனை, தியானம், நாம சங்கீர்த்தனம். இதுவே பானுதாசரின் உயிர் மூச்சாக இருந்தது. தக்க தருணத்தில் இறைவன் அவரை ஆட்கொண்டார்.
தர்மத்தின் சட்டம்

மாதவ முனிவரான மாண்டவ்யர் இமயமலையில் அடர்ந்த காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். அவரது தவம் ஈடு இணையற்றது. சிவனை வணங்கி அவரது உயரிய அருளைப்பெற்றிருந்தார். உலகிலுள்ள அனைத்து முனிவர்களும் மாண்டவ்யரின் தவத்திற்கு முன்னால், தங்களது தவம் மிகவும் சாதாரணமானது என்பதை உணர்ந்திருந்தனர். எனவே அவர்கள் மாண்டவ்யருக்கு மிகவும் மரியாதை கொடுத்து வந்தனர். அந்த மாமுனிவருக்கும் ஒரு சோதனை வந்தது. ஒரு முறை சாலவ தேசத்தில் கள்வர்களின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. அவர்கள் பொதுமக்களை கொன்று பொருள்களை திருடிச் சென்றனர். காவலர்களால் இவர்களை பிடிக்கவே முடியவில்லை. கொள்ளளையர்களின் தலைவன் ஒரு திட்டமிட்டான். தன் கூட்டாளிகளை அழைத்து, இப்படி சிறிய திருட்டை செய்வதை விட்டு விட்டு, அரண்மனை கஜானாவை கொள்ளையடித்து விட்டால் சொகுசான வாழ்க்கையை நிரந்தரமாக அமைத்துக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறினான். தலைவனின் திட்டப்படி கொள்ளையர்கள் அரண்மனைக்குள் புகுந்து காவல் காத்த அத்தனை வீரர்களையும் கொன்று கஜானாவை கொள்ளையடித்து குதிரைகளில் தப்பியோடினார். இவைகளை கவனித்த காவலர்கள் அவர்களை விரட்டினர். களைந்து போன திருடர்கள் கொள்ளையடித்த பொருட்களை தவம் செய்து கொண்டிருந்த மாண்டவ்யரின் ஆசிரமத்திற்குள் போட்டு விட்டனர். அங்கே வந்த காவலர்கள் ஒளிந்திருந்த திருடர்களை பிடித்தனர்.

தவத்தில் இருந்த மாண்டவ்யரை எழுப்பிய போது அவர் அசையவே இல்லை. எனவே அப்படியே மன்னனிடம் தூக்கி சென்றனர். மன்னன் எப்படி கேட்டும் மாண்டவ்யர் அசையவே இல்லை. இதனால் கோபம் கொண்ட மன்னன் முனிவரை கழுவில் ஏற்றும் படியும், மற்ற திருடர்களை கொன்றுவிடும் படியும் உத்தரவிட்டான். முனிவர் கழுவில் தொங்கிவிடப்பட்டார். அவரது உடல் முழுவதும் ஊசி குத்தப்பட்டிருந்தது. நெஞ்சில் ஆணி அடிக்கப்பட்டிருந்தது. அப்போது வானத்தில் சென்று வசிஷ்டர் முதலான முனிவர்கள் இந்த செயலை பார்த்து வந்து முனிவரை வணங்கி மாண்டவ்யர் என்ற பட்டத்தை வழங்கினார். அப்போது தான் மாண்டவ்யர் கண்விழித்தார். இதைப்பார்த்த காவலர்கள் மன்னனிடம் தெரிவித்தனர். மன்னன் வந்து, அறியாமல் தான் செய்த தவறிற்கு முனிவரிடம் மன்னிப்பு கேட்டான். பின் எமலோகம் சென்ற முனிவர் எமதர்மராஜனிடம், இந்த பிறவியில் தான் செய்யாத பாவத்திற்கு ஏன் தண்டனை கொடுத்தாய் என கேட்டார். நீ சென்ற பிறவியில் சிறு வயதில் ஒரு தட்டான் பூச்சியை பிடித்து அதன் நெஞ்சில் ஒரு முள்ளை செருகி விளையாடினாய் அந்த வினைப்பயன் தான் இது என்றார் எமன். அதற்கு முனிவர், எமதர்மராஜனே ! நான் சிறுவயதில் அறியாமல் செய்த தவற்றுக்கு, என்னை நல்வழிப்படுத்தாத பெற்றோர்கள் காரணம். எனவே அறியாமல் சிறுவயதில் செய்யும் தவறுக்கு தண்டனையை பெற்றோர்களுக்கும் பிரித்து தர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கேட்டு கொண்டார். எமனும் சம்மதித்தார். உடனே முனிவர், தர்மராஜா, நீ எப்படியேனும் எனக்கு தண்டனை கொடுத்து விட்டாய். எனவே மகாபாரதத்தில் திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோரின் சகோதரன் விதுரனாக பிறந்து துரியோதனன் அவையில் வேலைக்காரி மகன் என அவமானப்படுத்தப்படுவாய் என கூறினார்.எனவே, குழந்தைகளை எதற்கும் தீங்கு செய்ய விடாமல் அன்பின் வழி நடத்தி செல்ல வேண்டும்.
ஹரி அனந்தர்

வடநாட்டில் உள்ள ஒரு சிற்றூரில் ஹரி அனந்தர் என்பவர் வாழ்ந்து வந்தார். வேத சாஸ்திரங்களில் கரைகண்டவர். இவரிடம் பல மாணவர்கள் படித்தாலும் ஒரு மாணவன் அளவில்லாத அன்பு வைத்திருந்தான். குருகுல முறைப்படி, நாள்தோறும் பிச்சைக்குச் சென்று ஒரு படி ரொட்டிமாவு கொண்டு வருவான். அதை குருவின் திருவடிகளில் சமர்ப்பித்து பின்பு ரொட்டி செய்வான். அந்த ரொட்டிகளில் தாம் சாப்பிட்டது போக மீதியை மற்றவர்களுக்கு கொடுப்பான். ஒரு சமயம் கபீர்தாசின் குருவான சாது ராமானந்தர் அவ்வூரிலுள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார். பிச்சைக்குச் சென்ற மாணவன் அவரை வணங்கினான். அகத்தின் அழகு முகத்திலே தெரியும் என்பது போல, இவ்வளவு அன்பும், பரிவும், நல்ல குணங்களும் கொண்ட இந்த சிறுவன் நாளை காலையோடு ஆயுள் முடிந்து இறந்து போகப்போகிறானே என வருத்தப்பட்டு அந்தோ ! அடடா ! என்றார் ராமானந்தர். இப்படி ஒரு வார்த்தை அவரது வாயிலிருந்த வருமானால் அது ஆபத்துக்கு அறிகுறி என பொருள். இதைக்கேட்டு மாணவனுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. குருவே ! நான் நீங்கள் சொன்னதைக் கேட்டு எவ்வித அச்சமும் கொள்ளவில்லை. மரணத்தைக் கண்டு நான் பயப்படவில்லø. எனது மரணத்திற்கு முந்தைய தினமான இன்று உங்கள் தரிசனம் கிடைத்தது நான் செய்த பாக்கியத்தையே குறிக்கிறது என்று சொல்லி மீண்டும் ஒரு முறை வணங்கினான்.

அங்கிருந்து புறப்பட்டு குருவிடம் சென்றான். தனது ஆயுள் முடியப்போகும் விஷயத்தை குருவிடம் விளக்கினான். ஹரி அனந்தர் மாணவனை அருகில் அழைத்து, இன்றைய வேலைகளை வழக்கம் போல செய்துவிட்டு, தியானம் முடித்து தூங்கு. நாளை காலையில் அருணோதயத்திற்கு முன்னதாக என்னை எழுப்பு, என்றார். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்னதாக குருவை எழுப்பினான் மாணவன். இருவரும் நீராடி தியானம் செய்யும் சமயத்தில் மாணவனை அருகில் அழைத்த ஹரி அனந்தர், பத்மாசனத்தில் அமர்ந்தார். தனது புலன்களை ஒவ்வொன்றாய் ஒடுக்கி, சமாதி நிலைக்கு சென்றார். மாணவனும் அதே முறையில் தியானத்தில் ஆழ்ந்தான். இப்படி இருவரும் ஒரே விதமாக தங்கள் இதயத்தில் வாழும் இறைவனை தியானிக்கலாயினர். இறைவன் இவர்களது ஒப்பற்ற தியானத்திற்கு கட்டுப்பட்டவராய், சங்கு, சக்கரங்களுடன் அங்கே எழுந்தருளினார். சக்கரத்தாழ்வாரை குரு, சிஷ்யன் ஆகியோரின் தலைக்கு மேலே சுழன்று கொண்டிருக்கும்படி பணித்து, தானும் அங்கேயே அமர்ந்து விட்டார்.

உரிய நேரம் வந்தது. நீலவண்ணத்தில் உலகம் இருளில் மூழ்க, எருமையின் மீதேறி வந்து நின்றான் எமன். இறைவன் புன்முறுவலுடன் வீற்றிருக்க, எதிரில் குருவும், மாணவனும் மெய்மறந்து தியான நிலையில் அமர்ந்திருப்பதையும், தலைக்கு மேல் வெண்கொற்றக்குடை போல சக்கரம் கம்பீரமாக சுழல்வதையும் கண்டு நடுநடுங்கிப் போனான். இறைவனே இங்கு வந்து அமர்ந்திருப்பதால் நம்மால் எதுவும் செய்ய முடியாது என கருதிய அவன், வந்த வழியே திரும்பிப்போனான். எமன் சென்றதும் குருவும் மாணவனும் கண்விழித்தனர். இருவரையும் நெஞ்சாரத்தழுவி ஆசி கூறி மறைந்தார் கிருஷ்ண பரமாத்மா. அடுத்தநாள் வழக்கம்போல் பிச்சைக்கு, சென்றான் மாணவன். ராமானந்தரின் பாதத்தைத் தொட்டு வணங்கினான். அடடா ! பிழைத்து விட்டாயே ! என்று ஆச்சரியப்பட்டவர். நடந்தவற்றை தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்தார். உன்னைக் காப்பாற்றிய சக்திமிக்க குருவை நான் காணவேண்டும் என்றார். இருவரும் ஹரி அனந்தரின் இருப்பிடத்திற்கு வந்தனர். எமனையே வென்ற உமது பக்தி அற்புதம் ! அற்புதம் ! என பாராட்டிய ராமானந்தர் ஹரியை கண்ணால் கண்ட ஹரி அனந்தரின் பாதங்களில் விழுந்து கண்ணீர் பெருக போற்றினார்.
பவுரிதாசர்

நின்றால் ஜெகந்நாதன், நடந்தால் ஜெகந்நாதன், அமர்ந்தால் ஜெகந்நாதன்.... ஜெகன்னாதனின் நாமத்தை தவிர அவரது வாய் வேறு சொற்களையே உச்சரிக்காது. கார்மேனி வண்ணனான கண்ணனை பூரி ஜெகந்நாதரை கண்ணாரக் கண்டுகளிக்க வேண்டும் என விரும்பியவர் பவுரிதாசர். இவரது பெற்றோர் நெசவுத்தொழிலை செய்துவந்தன. இந்த தொழில் மூலம் ஏதோ  அவர்களுக்கு வயிற்றுக்குப் போதுமான அளவு வருமானம் கிடைத்தது. இந்த குடும்பத்தினரின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் பூரி ஜெந்நாதர்தான். இவர்கள் குடியிருந்த வீட்டிலிருந்து 3 மைல் தொலைவில் ஜெகந்நாதர் கோயிலுக்கு வந்து ஜெகந்நாதரை  அந்த குடும்பத்தினர் வணங்கி செல்வார்கள். அதன்பிறகே அன்றாட பணிகள் தொடங்கும். ஜெகந்நாதர் கோயிலில் பெருமாளின் மகிமையை விளக்கி ஹரிகதை சொல்லப்படுவதுண்டு. இந்தக் கதையைக் கேட்க பவுரிதாசர் தவறாமல் சென்றுவிடுவார். இந்த வகையில் ஹரி கதையில் சொல்லப்படும் நல்ல கருத்துக்கள் புவுரிதாசரின் மனதில் நின்றன. குறிப்பாக, பெருமாளின் பெருமையை பாகவதர்கள் சொல்லும்போது, அதில் அப்படியே லயித்துவிடுவார் பவுரிதாசர். பெருமாளின் மீதான பக்தியை இந்தக்கதைகள் மென்மேலும் வளர்ந்தது. காலப்போக்கில் பக்தியின் வேகம் அதிகரித்தது. அவர் நிம்மதியாக சாப்பிடுவதில்லை. கண்கள் விழித்தபடியே இருக்கும். வாய் எந்நேரமும் ஜெகந்நாதன் பற்றி மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருக்கும்.

அந்த பக்தனை மேலும் சோதிக்க விரும்பவில்லை பெருமாள். தனக்காகவே வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருக்கும் பவுரிதாசரின் முன்பு தோன்றினார். பவுரிதாசர் ! நீ என்மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக அனைத்து பெண்களையும் தாயாராகவே கருதினாய். இந்த மனப்பக்குவம் உலகில்யாருக்கும் வருவதில்லை. நீ என்ன கேட்டாலும் கொடுத்து வரவேண்டும் என்பது உன் தாயார் எனக்கு இட்ட கட்டளை. அதன்படி உனக்கு வேண்டும் வரம் தருகிறேன், கேள் என்றார். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த பவுரிதாசர் என்ன கேட்டிருந்தாலும் இறைவன் கொடுத்திருப்பான். ஆனால், அவர் பொன்னோ, பொருளோ கேட்கவில்லை. இறைவா ! நான் எப்போது அழைத்தாலும் நீ வரவேண்டும். உன் திருக்காட்சியை எனக்கு காட்ட வேண்டும். உனது நினைவாகவே இருக்கும் நான். உன்னைத்தவிர வேறு எதையும் கேட்கமாட்டேன். நீயே என் அருகில் இருக்கும்போது, வேறென்ன எனக்கு வேண்டும் ? மற்றவை தானாகவே வந்து சேரும், என்றார். பவுரிதாசரின் பற்றற்ற நிலையை அறிந்து மகிழ்ந்த பெருமாள், அவர் கேட்ட வரத்தையே அருளினார். அன்றுமுதல் ஜெகந்நாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் பவுரிதாசர் ஆண்டவனுக்குரிய காணிக்கைகளை கொடுத்து அனுப்பினார். ஒருமுறை இளநீர் ஒன்றை ஒரு பக்தர் மூலம் அனுப்பிவைத்தார். கர்ப்பகிரகத்தில் இருந்து இரு கைகளையும் நீட்டி அந்த இளநீரை பெற்றுக்கொண்டார் பகவான்.

இதைக்கண்ட அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அந்த பக்தர் ஓடோடிச்சென்று பவுரிதாசரிடம் இந்த அதிசயத்தை விவரித்தார். இதுகேட்டு பவுரிதாசர் ஆனந்தக்கூத்தாடினார். ஒரு முறை கூடை நிறைய மாங்கனிகளை கொடுத்து அனுப்பினார். கோயிலுக்குள் சென்றதும், கூடை மாயமாகிவிட்டது. சற்று நேரத்தில் கூடை கர்ப்பக்கிரகத்திற்கு வெளியே வந்து அமர்ந்தது. அனைவரும் ஆச்சரியத்துடன் அதை பார்த்தனர். கூடைக்குள் கொட்டைகள் மட்டுமே எஞ்சியிருந்தன. பக்தன் பக்தியுடன் கொடுத்த உணவை பகவான் ஏற்றுக்கொண்டார். இதைக்கண்டு பரவசமடைந்த கோயில் அர்ச்சகர், பவுரிதாசர் தங்கியிருக்கும் இடத்திற்கு ஓடினார். பகவானுக்கு அணிவித்த மாலையை அவரது கழுத்தில் அணிவிக்க முயன்றார். பவுரிதாசர் அதை ஏற்க மறுத்துவிட்டார். பகவானுக்குரிய பொருட்களை நாம் எடுக்கக்கூடாது. பகவானுக்கு நம்மால் முடிந்த பொருளை கொடுக்க வேண்டும். இதுவே உண்மையான பக்தி என்றார். நீண்ட நெடுங்காலம் பகவானுக்கு உணவளிக்கும் கைங்கர்யத்தை அவர் செய்துவந்தார். பகவான் முன்பு சென்றாலே அதைக்கொடு; இதைக்கொடு என கேட்கும் இக்காலத்தில், பவுரிதாசரின் வாழ்க்கை வரலாறு ஆசையற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. பவுரிதாசரின் பக்தியை பின்பற்றி அனைவரும் நடப்போம்.
சுதீட்சணர்

சுதீட்சணர் அகத்தியரின் சீடர். அகத்தியர் தந்த சிலையை பாதுகாக்க தவறியதால் அவரிடம் சாபம் பெற்றவர். ஐந்து வயதில் பெற்ற சாபம் ஐம்பது ஆண்டுகள் கடந்துதான் தீர்ந்தது. சுதீட்சணர் என்றால் கூர்மையான புத்தி உடையவர் என பொருள். சிறுவயதில் பெற்றோரை இழந்துவிட்ட சுதீட்சணர், அகத்தியரின் சீடரானார். அகத்தியர் அவர்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். சிறு குழந்தை என்பதால் மிகவும் குறும்புத்தனம் செய்வான் சுதீட்சணன். ஆனால் அவனை நல்லமுறையில் வளர்ப்பதற்காக இளம் வயதிலேயே பூஜை, புனஸ்காரங்கள் பற்றி கற்றுக்கொடுத்தார் அகத்தியர். ஒருமுறை அவர் தலயாத்திரை கிளம்பினார். அப்போது தன்னிடமிருந்த சாளக்கிராமம் என்ற மூலிகைகளால் செய்யப்பட்ட நாராயணனன் சிலை ஒன்றை சுதீட்சணனிடம் கொடுத்து அதை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியும், அதற்கு தினமும் பூஜை புனஸ்காரங்கள் செய்யும்படியும் கூறினார். சுதீட்சணனும் அதை வாங்கிக்கொண்டான். ஆனால் அகத்தியர் சொன்னதை விளையாட்டுப்பிள்ளையான அவன் கடைபிடிக்க வில்லை. ஏனோதானோவென சிலையை கண்ட இடத்தில் வைத்துவிடுவான். அகத்தியர் கிளம்பும்போது அந்த சிலைக்கு நதியிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து அபிஷேகம் செய்யும்படி சொல்லியிருந்தார். ஆனால் சுதீட்சணன் அதைக் கேளாமல் நதிக்கே சிலையை எடுத்துச் சென்று அங்கு வைத்து அபிஷேகம் செய்தான். நதியிலிருந்து குடத்தில் தண்ணீர் எடத்துவர சோம்பல்பட்டு இப்படி செய்து வந்தான். அந்தச்சிலையை ஒரு பெட்டியில் வைத்து நதிக்கரைக்கு எடுத்துச்சென்று பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருந்தான்.

நதிக்கரையில் ஒரு நாவல்மரம் இருந்தது. மிகப்பெரிய பழங்கள் பழுத்துக்கிடந்தன. ரிஷிகுமாரர்கள் அந்த பழங்களை பறிப்பதற்காக நதிக்கரைக்கு கூட்டமாக வருவார்கள். சிறுவனான சுதீட்சணனுக்கும் நாவல்பழங்களை தின்பதில் விருப்பம் அதிகம். அவனும் ரிஷிகுமாரர்களுடன் சேர்ந்து கல்லெறிந்து பழங்களை பறிப்பான் . ஒருநாள் இவ்வாறு பழம் பறித்துக்கொண்டிருந்தபோது மரத்தின் உச்சியில் மாம்பழம் அளவுக்கு பெரிதான நாவல்பழம் ஒன்று தொங்கியது. அதை எப்படியாவது பறித்துவிடவேண்டும் என்ற ஆசை அவனுக்கு ஏற்பட்டது. சுற்றும்முற்றும் பெரிய கல் ஏதாவது கிடக்கிறது எனதேடிப்பார்த்தான். கல் கிடைக்கவில்லை. எனவே தன்கையில் இருந்த சாளக்கிராம சிலையை மரத்தின்மீது வீசினான். பழம் கீழே விழுந்தது. ஆனால் சிலை மரத்தின் கிளையில் சிக்கிக் கொண்டது. சுதீட்சணனுக்கு பயம்தொற்றிக் கொண்டது. அகத்தியர் வந்தால் என்ன பதில் சொல்வது ? என தெரியாமல் திண்டாடினான். மரத்தின் மீது ஏறி சிலையை எடுக்க ரிஷிகுமாரர்கள் பயந்தனர். அந்த மரத்திலிருந்த பொந்தில் ஒரு பாம்பு வசித்தது. மரத்தில் ஏறினால் பாம்பு கடித்துவிடும் என்ற பயத்தில் யாரும் ஏற மறுத்துவிட்டனர். சுதீட்சணன் கவலையுடன் ஆசிரமத்திற்கு திரும்பினான். அவன் எதிர்பாராத விதமாக அகத்தியர் அன்று வந்து சேர்ந்து விட்டார். நாராயணன் சிலைக்கு தினம்தோறும் அபிஷேகம் செய்தாயா ? அதை எங்கே வைத்திருக்கிறாய் ? உடனே எடுத்துவா, பூஜை செய்ய வேண்டும், என்றார். சுதீட்சணன் விழித்தான். ஒரு சிலையை எடுத்துவந்தான். அது முன்னம் கொடுத்த சிலைபோல இல்லாமல் வித்தியாசமாக இருந்தது.தொட்டுப்பார்த்தபோது நசுங்கியது. தான் பறித்த நாவல் பழத்தில் நாராயணன் போல் சித்திரம் எழுதி, அதை அகத்தியரிடம் கொடுத்துவிட்டான். அகத்தியர் அதை கண்டுபிடித்து விட்டார். அதன்பிறகு மரத்தில் சிலை சிக்கிக்கொண்டது பற்றி சுதீட்சணன் பயத்துடன் சொன்னான். அகத்தியருக்கு கோபம் வந்த விட்டது. உண்மையைச் சொல்லாமல் தன்னை ஏமாற்றிய சீடனுக்கு, சிறுவன் என்றும் பாராமல் சாபம் கொடுத்து விட்டார். எப்போது நீ நாராயணன் சிலையுடன் வருகிறாயோ, அப்போது இங்கு வந்தால் போதும் அதுவரை உனக்கு இடமில்லை. என சொல்லி விரட்டி விட்டார்.

சுதீட்சணன் மீண்டும் மரம் இருக்கும் இடத்திற்கு சென்றான். மரத்தில் ஏறினான். ஆனால் பாம்பு அவனை விரட்டியது. பயந்துபோன சுதீட்சணன் அருகிலிருந்த காட்டுக்குள் ஓடி விட்டான். அவனுக்கு 50 வயதை எட்டிவிட்டது. அகத்தியரின் சீடன் என்பதால் காட்டிலிருந்த மற்ற முனிவர்கள் சுதீட்சணனுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தனர். காட்டில் காலத்தை வீணாக கழிக்காமல் தன் குருவின் விருப்பப்படி மீண்டும் நாராயணன் சிலை கிடைக்கவேண்டும் என, அந்த நாராயணனை நினைத்தே தவம் இருந்தான். இதனால் சுதீட்சணன் சுதீட்சண முனிவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார். அவரும் சாளக்கிராமத்தில் பல வணங்கி வந்தார். அந்த சிலைகளை சில குரங்குகள் எடுத்துச் சென்று அருகிலுள்ள ஏரியில் வீசி வந்தன. சுதீட்சணரும் மீண்டும் மீண்டும் சிலைகள் செய்து வணங்கிவந்தார். அகத்தியருக்கு பிடித்தமான சிலையை தொலைத்துவிட்டதால் தான் குரங்குகள் இவ்வாறு தனக்கு துன்பம் செய்வதாக சுதீட்சணர் நினைத்தார். மனம் தளராமல் பல சிலைகளை செய்து நாராயணனை வணங்கிவந்தார். ஆனால் ஒவ்வொரு நாளும் குரங்குகள் அவற்றை ஏரியில் வீசிவந்தன. இதைக்கண்டு மனம் பொறுக்காத சுதீட்சணர், நளன், நீலன் என்ற அந்த குரங்குகளிடம், நீங்கள் இனிமேல் எந்த பொருளை தண்ணீரில் வீசினாலும் அவை மிதக்கும் என சாபம் கொடுத்தார். பிற்காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு சென்றபோது அனுமானுடன் சென்ற நளன், நீலன் என்ற இந்த குரங்குகள் தான் கடலில் பாறைகளை தூக்கி வீசி பாலம் அமைத்தன. அந்த பாறைகள் தண்ணீருக்குள் மூழ்காமல் கடலில் மிதந்ததால் பாலம் அமைப்பது எளிதாக அருந்தது. இதனால் சுதீட்சணர் அளித்த சாபம்கூட ராமனுக்கு உதவியது. இதைக்கேள்விப்பட்ட ராமன். சுதீட்சணர் இருக்கும் இடத்திற்கு வந்து, இலங்கைக்கு செல்ல உங்களது சாபம்தான் எனக்கு மிகவும் பயன்பட்டது, எனக் கூறி அவருக்கு நன்றி தெரிவித்தார். நாராயணனே ராம அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தவர் என்பதை உணர்ந்த சுதீட்சணர், அவரை அழைத்துக்கொண்டு தனது குருவான அகத்தியரிடம் சென்றார். ராமனே தன் ஆசிரமத்திற்கு வந்ததும் மகிழ்ச்சியடைந்த அகத்தியர் அவரை வணங்கினார். சுதீட்சணர் அகத்தியரிடம், தாங்கள் நாராயணன் சிலை இல்லாமல் உங்களை பார்க்கக்கூடாது என சொன்னீர்கள். ஆனால் நான் நாராயணனையே இங்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டேன். உங்கள் சாபம் இன்றோடு தீர்ந்தது. என்னை மீண்டும் உங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் என்னை வெளியே அனுப்பாமல் இருந்திருந்தால் நாராயண தரிசனம் எனக்கும் கிடைத்திருக்காது. என்மீது கொண்ட உண்மையான பாசத்தால், ராம தரிசனம் கிடைக்க எனக்கு தாங்கள் உதவியதை இப்போது புரிந்து கொள்கிறேன். உங்கள் சீடனாக இருக்க இனியாவது அனுமதிப்பீர்களா என கேட்டார். அகத்தியர் அவரை மகிழ்வோடு அணைத்து மீண்டும் தன் சீடனாக்கி கொண்டார்.
ஓத சுவாமிகள்

மலைகளுக்கும் மகான்களுக்கும் பெயர் பெற்றது நம் பாரத தேசம். இன்றைக்குத் திகிலைக் கிளப்பி, மனிதர்கள் நடமாடுவதற்கு சவாலாக இருக்கும் பல மலைகளில் சித்த புருஷர்கள் ஒரு காலத்தில் தவ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். இவ்வாறு காடு மலைகளியே சுற்றித்திரிந்த சித்தபுருஷர்கள் நேர்மை, நியாயம், தர்மம் போன்றவற்றில் இருந்து தடம் மாறிப் போன மக்களை நல்வழிப்படுத்தி, அவர்களுக்கு ஆசி புரிவதற்கென்றே மலைகளை விட்டு இறங்கி வந்தார்கள். பதிணெண் சித்தர்களில் ஒருவரான போகரின் வழியைப் பின்பற்றி எண்ணற்ற சித்தர்கள் அவதரித்தனர். இவர்களில் ஓத சுவாமிகளும் ஒருவர். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலுக்குப் பின்பக்கம் இவர் ஜீவசமாதி அடைந்து, தன்னை நம்பி வரும் பக்தர்களை இன்றளவும் காத்து அருள்புரிந்து வருகிறார். ஸ்ரீமத் ஓத சுவாமிகள் என்று பக்தர்களால் அழைக்கப்படும் இவரை சுப்பையா சுவாமிகள் என்றும் குறிப்பிடுகிறார்கள். சுவாமிகளுக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். இவரது திரு அவதாரமே மிகவும் சிலிர்க்க வைக்கும் ஒன்று. கி.பி. 1850-ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் தோன்றியவர் ஓத சுவாமிகள். காசியில் வாழும் விஸ்வநாதரின் ஆசியோடும், அருட்கடாட்சத்தோடும் அவதரித்தவர்தான் ஓதசுவாமிகள். பழநியில் இருந்து சுமார் 11 கி.மீ., தொலைவில் உள்ள பாலசமுத்திரம் என்கிற கிராமத்தில் வாழ்ந்து வந்தது சுவாமிகளின் குடும்பம்.  ஓத சுவாமிகளின் தந்தையாரான பரமேஸ்வர ஐயர், இறை பக்தி மிக்கவர். ஒருமுறை வடமாநிலங்களுக்கு ÷க்ஷத்திராடனம் சென்றார்.

வாகன வசதி எல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் சுமார் ஏழு வருடங்கள் நீடித்தது இந்த யாத்திரை. அதாவது வீட்டை விட்டுக் கிளம்பி, ஏழு வருடங்களுக்குப் பிறகு தான் மீண்டும் வீடு திரும்பினார் பரமேஸ்வர ஐயர். அந்தக் காலத்தில் யாத்திரை என்றால் இப்படித்தான் இருக்கும்.யாத்திரை நிகழ்ந்த ஏழு வருடமும் கடுமையான விரதம். காய்ந்த சருகு மட்டுமே உணவு. எங்காவது நீர்நிலைகளில் ஓடுகின்ற தண்ணீரை மட்டுமே அருந்துவார். இப்படிக் கஷ்டப்பட்டுச் சென்று காசி விஸ்வநாதருக்கு கங்கையின் நீர் கொண்டு அபிஷேகம் செய்து ஆனந்தப்பட்டார் பரமேஸ்வர ஐயர். அந்த ஜோதிர்லிங்க சொரூபனின் சன்னதியிலேயே ஆசிர்வாதமும் கிடைத்தது. பரமேஸ்வரா... இந்த காசிவிஸ்வநாதனே உனக்கு மகனாகப் பிறக்க போகிறான் பார், என்று அங்கே ஓர் அசரீரி வாக்கு எழுந்தது. மனம் மகிழ்ந்தார் பரமேஸ்வர ஐயர். அதன் பின் பூரி, திருப்பதி, ராமேஸ்வரம் முதலான ÷க்ஷத்திரங்களைத் தரிசனம் செய்து பாலசமுத்திரம் திரும்பினார் பரமேஸ்வரர். மகான் வழங்கிய ஆசி மனத்திரையில் ஓடிக்கொண்டே இருந்தது. தன் மனைவியிடம் அவ்வப்போது இதைச் சொல்லி பூரிப்பார். உத்தம மகன் பிறக்கப் போகும் நாளை அந்தப் பெற்றோர் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காலங்கள் ஓடின. காசி விஸ்வநாதரின் அருளால் பரமேஸ்வரரின் துணைவியார் கருவுற்றார். பிரசவ காலமும் நெருங்கியது. பிரசவ வலி ரொம்பவும் வாட்டியது. எனவே உள்ளூரில் இருந்த மருத்துவச்சியின் துணையோடு வீட்டின் தனியான ஓர் அறையில் கிடத்தப்பட்டார் பரமேஸ்வரரின் துணைவியார். வீட்டிற்கு வெளியே தவிப்புடன் காணப்பட்டார் பரமேஸ்வரர். என்னதான் இறைவனின் ஆசியோடு மகன் பிறக்கப் போவதாக திருவாக்கு மலர்ந்திருந்தாலும், உள்ளே தன் மனைவி படும் அவஸ்தையை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஒரு சில நிமிடங்கள் உருண்டோடின. உள்ளே எந்தவிதமான அலறல் சத்தமும் இல்லை. மருத்துவச்சியின் ஆறுதல் குரலும் கேட்கவில்லை. மாறாக வேத ஒலி கன கம்பீரமாக அட்சர சுத்தமாகக் கேட்டது. பிரசவ அறைக்குள் இருந்து வேத ஒலி எப்படி? வெளியே தவிப்புடன் நின்றிருந்த பரமேஸ்வர ஐயரும், அவரது உறவினர்களும் பிரமித்தனர். மருத்துவச்சி வந்து தகவல் சொல்வாள் என்ற எதிர்பார்ப்புடன் வெளியே காத்திருந்த அனைவருக்கும் பிரமிப்பு தாங்க முடியவில்லை. எனவே, கதவை வேகமாகத் திறந்து உள்ளே நுழைந்தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சியில் நிலை குலைந்து போனார்கள். பேசுவதற்கு வார்த்தைகள் எதுவும் எழவில்லை. உள்ளே ரோஜாப்பூக்களுக்கு நடுவில் ஒரு ஆண் குழந்தை புன்னகை ததும்பும் முகத்தோடு காணப்பட்டது. சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற மும்மூர்த்திகளின் அருளோடு அக்குழந்தை பிறந்தது. இவ்வாறு பிறக்கும் போதே பல அற்புதங்களை நிகழ்த்தினார் ஓத சுவாமிகள். குழந்தைக்கு முருகப்பெருமானின் திருநாமமான சுப்ரமண்யன் என்பதையே சூட்டி விட்டார் பரமேஸ்வர ஐயர். பின்னாளில் இவர் சுப்பையா என எல்லோராலும் அழைக்கப்பட்டார். சுவாமிகளுடைய ஐந்தாவது வயதில் அவருக்கு உபநயனம் நடந்தது. சிறு வயதில் இருந்தே இறை இன்பத்தில் நாட்டம் அதிகம் கொண்டவராகத் திகழ்ந்தார் சுவாமிகள். ஓம் என்றும் ஆதிசங்கரா என்றும் சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரு கட்டத்தில் தந்தையார் மறைந்து விட்டார். அதன் பின் காடு, மலை என்று சுற்றித் திரிய ஆரம்பித்தார். ஒருமுறை தன் தாயாரிடம் நீ என்னை எப்போடு கூப்பிடுகிறாயோ அப்போது நான் வருகிறேன். எனக்கென்று சில பணிகள் இருக்கின்றன என்று சொல்லி, அன்னையின் ஆசியுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

தனது எட்டு வயதிலேயே அஷ்டமா சித்திகளும் சுவாமிகளுக்கு கைவரப் பெற்றதாகச் சொல்வர். தெருவில் குடிநீர் எடுத்துக்கொண்டு போகும் ஒரு வண்டியில் உள்ள ஒட்டுமொத்த நீரையும் ஒரே மடக்கில் விறுவிறுவெனக் குடித்து விடுவார். பின்பு அதை அப்படியே உமிழ்ந்து விடுவார். இவ்வாறு எண்ணற்ற லீலைகளை சிறு வயதிலேயே நிகழ்த்திக் காண்பித்தார் சுவாமிகள். பகவான் ரமண மகரிஷியைத் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்த பெருமை ஓத சுவாமிகளையே சாரும். ஸ்ரீரமணர் திருச்சுழியில் பிறந்தவர். தந்தையின் பணி மாறுதல் காரணமாக அவரது குடும்பம், திண்டுக்கல்லுக்கு இடம் பெயர்ந்தது. அபிராமி அம்மன் கோயில் அருகே ரமணரின் குடும்பம் வசித்து வந்தது. அப்போது நகராட்சி பள்ளியில் சேர்க்கப்பட்ட ரமணர் துவக்கத்தில் ஒழுங்காகத்தான் பள்ளிக்குச் சென்றார். ஆனால், ஒருமுறை அவதூராகத் தெருக்களில் வலம் வரும் ஓதசுவாமிகளைப் பார்த்த மாத்திரத்தில் அவர் செல்லும் இடமெல்லாம் ரமணரும் செல்ல ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சிறுவனான ரமணரை அடையாளம் கண்டுகொண்ட ஓதசுவாமிகள், அவரை அருகே அழைத்து திருவண்ணாமலைக்குச் செல்... அங்கே உனக்கான பணி காத்துக் கொண்டிருக்கிறது. அண்ணாமலையார் உன்னை வரவேற்கக் காத்திருக்கிறார் என்றார். அதன்பின் வீட்டில் கடிதம் எழுதிவைத்து விட்டு புறப்பட்டார் ரமணர். ஒரு சமயம் சிருங்கேரி மடத்தின் முப்பத்திரண்டாவது பீடாதிபதியான ஜகத்குரு நரசிம்ம பாரதி சுவாமிகள் திண்டுக்கலுக்கு விஜயம் செய்திருந்தார். அபிராமி அம்மன் ஆலயத்தின் எதிரே இருக்கும் சாலையில் சிருங்கேரி மடம் இருந்தது. அங்கே முகாமிட்டிருந்தார் ஆச்சார்யர். சிருங்கேரி மடத்தின் மீது அபிமானம் கொண்ட எண்ணற்ற பக்தர்கள் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் வந்து திண்டுக்கல் மடத்தில் குவிந்திருந்தார்கள். பக்தர்களுக்கு ஆசி வழங்க வேண்டும் என்பதற்றகாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வலம் வந்து கொண்டிருந்தார்.

ஒரு தெருவழியாக செல்லும் போது அங்குள்ள சாக்கடை நீரில் ஸ்நானம் செய்து கொண்டிருந்தார் ஓத சுவாமிகள். சிருங்கேரி ஆச்சாரியாரின் பல்லக்கை பார்த்து பெருமூச்சுவிட்டு ஹும்... பல்லக்கு, பட்டு பீதாம்பரம் தெரு வழியே போகுது பார் என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார். இதை ஞானத்தால் உணர்ந்த பாரதி சுவாமிகள் பல்லக்கை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி நடந்து வந்தார். சாக்கடையில் அமர்ந்து ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஓதசுவாமிகளின் அருகே வந்தார் ஆச்சார்யார். அண்ணா என்ன கோலம் இது! என்று சுவாமிகளை பார்த்துக் கேட்டார். ஓ.. நரசிம்மனா வா நரசிம்மா, வா வா என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். உடனே அங்கிருந்தவர்கள் இவன் பித்து பிடித்தவன், இவனை ஒரு பொருட்டாக மதிக்காதீர்கள் என்று கூறினர். அப்படியெல்லாம் கூறாதீர்கள் என்ற ஆச்சார்யார் மற்றவர்களின் அழுக்கைப் போக்குவதற்காகவே இவ்வாறு நீராடுகிறார். மாபெரும் சித்த புருஷர். இறை பக்தியில் இத்தகைய நிலையை அடைவது என்பது எவருக்கும் எளிதில் கைகூடாது. நானும் இது போன்ற நிலையை அல்லவா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார். பின்னர் சிருங்கேரி ஆச்சாரியாரின் மடத்திற்கு சென்ற ஓத சுவாமிகள் அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இவ்வாறு பலவிதமான அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டே இருப்பார் ஓதசுவாமிகள். இவ்வாறு பல லீலைகளை செய்து கொண்டிருந்த சுவாமிகள் ஒரு நாள் அவரது பக்தரான சதாசிவ ஐயரின் கனவில் தோன்றி, சதாசிவா... இன்னும் சில நாட்களுக்குள் நான் சித்தி ஆகப் போகிறேன். நிரந்தரமாகக் குடிகொள்ள எனக்கென்று ஒரு இடத்தை தேர்வு செய் என்று சொல்லி மறைந்தார். ஓத சுவாமிகள் 1906ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேத சித்தி ஆனார். அன்று திருவாதிரை நட்சத்திரம். சுவாமிகளின் ஜனன நட்சத்திரமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு தற்போது அதிர்ஷ்டானம் அமைக்கப்பட்டு அனைவரும் ஓதசுவாமிகளை வழிபட்டு வருகின்றனர்.
கணேச பஞ்சரத்னம்

1.முதாகராத்தமோதகம் ஸதா விமுக்திஸாதகம்

கலாதராவதம்ஸகம் விலாஸிலோகரக்ஷகம்

அநாயகைகநாயகம் விநாசிதேபதைத்யகம்

நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநயகம்.

2.நதேதராதிபீகரம் நவோதிதார்கபாஸ்வரம்

நமத்ஸுராரிநிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்

ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்

மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்.

3.ஸமஸ்தலோகதங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்

தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்

க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்

மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்.

4.அகிஞ்சநார்திமார்ஜநம் சிரந்தநோக்த்திபாஜநம்

புராரிபூர்வநந்தநம் ஸுராரிகர்வசர்வணம்

ப்ரபஞ்சநாசபீஷனம் தநஞ்ஜாதிபூஷணம்

கபோலதாநவாரணம் பஜே புராணவாரணம்.

5.நிதாந்த காந்ததந்த காந்தி மந்தகாந்தகாத்மஜம்

அசிந்த்யரூபமந்த ஹீநமந்தராயக்ருந்தநம்

ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்

தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்.

6.மஹாகணேசபஞ்சரந்தமாதரேண யோந்வஹம்

ப்ரஜல்பதி ப்ரபாதகே ஸ்மரந் கணேச்வரம்

அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்

ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதி ஸோசிராத்

.....கணேசபஞ்சரத்நம் ஸம்பூர்ணம்

இந்த கணேச பஞ்சரத்னத்தை எவர் தினமும் காலையில் ஸ்ரீ கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்கிறாற்களோ, அவர் நோயின்றி குறை யேதுமின்றி, நல்ல கல்விகளையும் நன்மக்களையும், அஷ்டைச்வர்யமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
ராமகிருஷ்ணர் பகுதி இரண்டு

அந்த அன்புக்கரத்திற்கு சொந்தக்காரர் கமார்புகூரில் வசித்த சுகலால் கோஸ்வாமி. அவர் சுதிராமின் நெருங்கிய நண்பர். தன் நண்பனின் கஷ்டகாலத்தில் உதவுவது தனது கடமை என நினைத்தார். தனது ஊருக்கே வந்து விடும் படி நண்பரை அழைத்தார். சுதிராமிற்கு வேறு வழியில்லை. மனைவி இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் கமார்புகூரில் குடியேறினார். தேரேய்பூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இந்த கிராமம் இருந்தது. கமார் என்ற வங்காள சொல்லுக்கு கொல்லர்கள் என்பது பொருள். புகூர் என்ற சொல்லுக்கு குளம் என்பது பொருள். இவ்வூர் செழிப்புமிக்க கிராமம். தண்ணீர் வசதி அதிகமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் வயல் வெளிகளில் தாவரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. தாமரை பூக்கள் நிறைந்த குளங்கள் ஆறு இக்கிராமத்தில் இருந்தது. கோஸ்வாமி தனது நண்பருக்கு ஒரு ஏக்கர் நிலத்தை கொடுத்தார். அதில் சில குடிசைகளும் இருந்தன. அந்த இடத்திற்கு லட்சுமிஜாலா என பெயர். பல கஷ்டங்களை அனுபவித்தாலும் நடப்பதெல்லாம் பகவான் செயல் என உணர்ந்து இறைவனிடம் நம்பிக்கையை விடாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். துன்பங்கள் தொடரும் வேளையில் சுதிராமின் மனைவி சந்திராதேவி மிகுந்த பதட்டத்திற்கு ஆளானார். அவர் படும் வேதனையைக் கண்டு பொறாத சுதிராம் ஆறுதல் சொல்வார். சந்திரா! இவை சாதாரண துன்பங்கள். நாம் பட்டினி கிடக்கிறோம். பட்டினி என்பது ஒரு நோயல்ல. அதைக்கண்டு கலங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எத்தனையோ பேர் செல்வம் இருந்தும் பகவானுக்காக நோன்பிருக்கிறார்கள். அவர்களே பட்டினி கிடக்கும்போது ஏழைகளான நாம் பட்டினி கிடந்தால் என்ன? இறைவன் நம்மை நோன்பிருக்கச் செய்துள்ளார். அது அவரது விருப்பமாக இருக்கிறது. சற்று காலத்தில் நாம் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்புவோம். கவலைப்படாதே! என்பார். காலப்போக்கில் நண்பர் கோஸ்வாமி தந்த நிலம் விளையத் தொடங்கியது. சுதிராமின் குடும்பத்தில் பட்டினிக்கு இடமில்லாமல் போனது. எஞ்சிய உணவுப் பொருளை ஏழைகளுக்கு அவர் அளித்து வந்தார். ராமபக்தரான சுதிராம் வயலுக்கு சென்றதும் ஹே.. ராமா! ரகுவீரா! என்று அழைப்பார். அதன் பிறகே கூலியாட்களை வயலுக்குள் இறக்குவார். நடுகையின் போது ராமனின் பெயரை உரக்கச்சொல்லி முதல் நாற்றை நடுவார். தொடர்ந்து பணியாட்கள் வேலை செய்வார்கள். ஒரு முறை பக்கத்து ஊருக்கு ஏதோ பணி நிமித்தமாக சென்றிருந்த சுதிராம் அதை முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவரால் நடக்கக்கூட முடியாமல் தளர்வு ஏற்பட்டது. அங்கிருந்த மரத்தடியில் படுத்தார். காற்று இதமாக இருந்தது. மரம் தந்த நிழலின் சுகத்தில் அப்படியே கண்ணயர்ந்து விட்டார். அப்போது கனவு ஒன்று தோன்றியது. சுதிராம்! நான் சொல்லும் இடத்திற்கு செல். அங்கே கவனிப்பாரின்றி நான் கிடக்கிறேன். என்னை உன் வீட்டிற்கு எடுத்துச்செல் என ஒரு சிறுவனின் வடிவில் தோன்றிய ராமர் சொன்னார். சுதிராம் திடுக்கிட்டு விழித்தார். சற்று தூரம் சென்றார். ராமர் கனவில் சொன்னதுபோலவே ஒரு இடம் தென்பட்டது. அங்கே ஒரு பாம்பு படமெடுத்து நின்றது. அதன் கீழ்  ஒரு சாளக்கிரம ராமர்சிலை கிடந்தது. அதை எடுப்பதற்காக சுதிராம் விரைந்தார். பாம்பு அங்கிருந்து சென்று விட்டது. சிலையை எடுத்துக்கொண்டு கண்களில் நீர் மல்க வீடு திரும்பினார் சுதிராம். ராமரே தந்த சிலை என்பதால் அவரது பக்தி உணர்வு மிகவும் அதிகரித்தது. அந்தச்சிலையை வீட்டில் வைத்து பூஜித்து வந்தார். அவரது குலதெய்வமான சீதளாதேவி ஒரு சிறுமியின் வடிவில் வந்து தினமும் பூ பறித்து தருவாள். அவளுடன் சுதிராம் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருப்பார். அந்தக்குழந்தை அவரோடு தோட்டத்திற்கு சென்று மரக்கிளைகளை வளைத்துக் கொடுப்பாள். சுதிராம் இலகுவாக மலர்களை பறித்துக்கொள்வார். தெய்வத்தை நேரில் தரிசிக்கும் பாக்கியம் கொண்டவரான சுதிராமின் வாழ்வில் மற்றொரு அதிசயமும் நிகழ்ந்தது. கமார்புகூரில் இருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ள மேதினிப்பூர் என்ற ஊருக்கு சுதிராம் சென்று கொண்டிருந்தார். வழியில் வில்வ மரம் ஒன்று நின்றது. பொதுவாக அந்தக்காலத்தில் மரத்தில் இலைகள் உதிர்ந்திருக்கும். ஆனால் இந்த மரத்தில் மட்டும் இலைகள் ஏராளமாக இருந்தது சுதிராமிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது சிவபெருமானின் கருணை என்றே நினைத்தார். வில்வ இலைகளை பறித்தார். மேதினிப்பூருக்கு செல்லாமல் மீண்டும் வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டில் இருந்த சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டார். வெளியூருக்கு புறப்பட்ட காரணத்தையே மறந்து விட்டார். மறு நாள் தான் அவருக்கு அந்த நினைவே வந்தது. அந்த அளவிற்கு மிகப்பெரிய ராமபக்தராகவும், சிவபக்தராகவும் விளங்கினார் சுதிராம். எந்தச் சூழ்நிலையிலும் அவர் நேர்மை மாறவே இல்லை. யாரிடமும் கடனாகவோ இலவசமாகவோ எதையும் பெற மாட்டார். ஒழுக்கமற்ற மனிதர்களைக் கண்டாலே ஒதுங்கிப்போவார். அவர் காயத்ரி ஜெபம் செய்யும் போது ஒரு தெய்வீக ஒளி வீசும். கன்னங்களில் கண்ணீர் வழியும். ராமசேவையிலேயே அவரது காலம் கழிந்தது. இதனிடையே மூத்த மகன் ராம்குமாருக்கும், மூத்த மகளுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. ராம்குமார் ஜோதிடக்கலையில் வல்லவர். தந்தையாரின் தொழிலில் உதவியாக இருந்தார். இதனால் குடும்பத்தில் மீண்டும் செல்வவளம் செழித்தது. ராம்குமாரிடமும் தெய்வீகசக்திகள் இருப்பதாக ஊரார் நம்பினர். அவரது ஜோதிடம் சரியாக இருந்ததால் கூட்டம் மொய்த்தது. காளிதேவியை ராம்குமார் வழிபட்டு வந்தார். ஒருமுறை காளி கோயிலுக்கு அவர் சென்றிருந்தார். அப்போது அதிபயங்கர வடிவத்தில் காளிதேவி அவர் முன்பு தோன்றினாள்.

மீண்டும் சந்திப்போம் நண்பர்களே