செவ்வாய், 22 அக்டோபர், 2013

மூன்று நாள் விளக்கேற்றுங்க... முப்பது நாள் விளக்கேற்றிய பலனை பெறுங்க...

கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும், கோயில்களிலும் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. அவ்வாறு தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள், திருக்கார்த்திகை அன்றும், அதற்கு முதல் நாளும், அடுத்த நாளும் தவறாது விளக்கேற்ற வேண்டும். இந்த தினங்களில் விளக்கேற்றினாலே கார்த்திகை முழுவதும் தீபம் ஏற்றிய பலனைப் பெறலாம்.
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் சுற்றினால் என்ன பலன் கிடைக்குமோ...அதே பலன் கிடைக்க...

கிரி என்பது மலை என பொருள்படும். கோடு, குன்று, பாறை, அறை, கல், அலகம், சைலம், அத்திரி, தோதாந்திரி முதலியனவும் கிரியாகிய மலையை குறிக்கும் சொல்லாகும். கிரிவலம் என்பது மலையை வலம் வருதல் (மலைக்கு வலபக்கத்தில் தொடங்கி சுற்றி வழிபட்டு வருதல்) என்பதாகும்.

கிரிவழிபாடு

இறைவழிபாடு காலத்தை கடந்த பழமையானதாம். இறையை வழிபடுவது போல மலையை ஆன்மாக்கள் மகிழும்படி எழுந்து மகாமேருமலையை வலமாக சுற்றிவந்து வழிபடும் பல சமயத்தாரும் வழிபடுவதும் காலத்தை கடந்த பழமையானதாம். இவ்வகையில் கையிலை மலையை வழிபடுவது காலத்தை கடந்த வழிபாடாக உள்ளது. சிவசிந்தனை தோன்றிய போதே கையிலை மலையை பற்றிய சிந்தனையும் தோன்றிவிட்டது. வழிபாடும் தோன்றி விட்டது. சூரியன் கையிலை மலையை வலம் வந்து நாள் தோறும் வழிபடுகிறான் என்கின்றனர். இதனை நக்கீரர்

உலக முவப்ப வலநோபு திருதரு
பலா புகழ் ஞாயிறு   

திருமுருகற்று படைவரிகளில் உணர்த்துவதை காணலாம்.

புனிதமான ஸ்தலத்தையோ, தீர்த்தத்தையோ, மலையையோ, வனத்தையோ, தெய்வீகம் உள்ள இடத்தையோ சுற்றி வருவதே வலம் வருதல் அல்லது பிரதட்சணம் எனப்படும். அதேபோல் ஒரு மூர்த்தியையோ (கடவுளையோ) வில்வமரம் போன்ற தெய்வீக மரத்தையோ துளசி செடியையோ சுற்றி வருவதும் கூட வலம் வருதல் அல்லது பிரதட்சணம் எனப்படுகிறது. இவ்வாறு பக்தர்கள் எதையாவது ஒன்றை சாதாரண முறையில் சுற்றி வந்தால் அதை வலம் வருதல் அல்லது பிரதட்சணம் என்று அழைப்பர். இதையே மிகப்பெரிய அளவில் செய்தால் அது பரிக்கிரம் அல்லது கிரிவலம் எனப்படுகிறது.

கிரிவலம் சுற்றுவதன் பெருமை: நாம் உணராவிட்டாலும் கூட, ஒவ்வொரு நொடியுமே, நாமும், நம் உலகமும், அகண்டாகார பிரபஞ்சமும் சுழன்று கொண்டேயிருக்கிறோம்.

நகர்வின்றி நிகழ்வில்லை. சுழற்சியின்றி சக்தியில்லை.

சிறிய சைக்கிள் டைனமோ முதல், ஆலைகளில் உள்ள பெரிய ஜெனரேட்டர்கள் மற்றும் அணைகளில் உள்ள பிரம்மாண்டமான டர்பைன்கள் வரை, சக்தி உருவாக்கிகள் யாவுமே சுழற்சியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. மின் கடத்தி இழைகளையும், காந்தத்தையும், ஒன்றை அசைவற்ற நிலையிலும், மற்றதை சுழலும் படியும் அமைக்கும் போது தான் மின்சக்தி உருவாகிறது. ஆலயத்தை வலம் வரும் வழிபாடும் இவ்வடிப்படையில் உருவானதே. ஜெனரேட்டரில், காந்தத்தின் சக்தியை அல்லது மின் இழையின் பரிமாணத்தை மட்டும் அதிகரித்தால் போதாது. இரண்டுக்குமிடையே சுழற்சி உறவை உருவாக்கினால்தான் மின்சாரம் கிடைக்கும். அது போலவே தான் இறைத் திருவுருவங்களுக்கு விரிவான பூசைகள் நடத்துவதால் மட்டுமோ, அதிக அளவில் பக்தர்கள் கூடுவதால் மட்டுமோ, முழு நன்மையையும் பெற்றிட இயலாது. அடியவர்கள் ஆலயத்தை வலம் வரும் போதுதான் முழுப்பயனையும் அடையும் நிலை உருவாகிறது. பூசித்த பலனை பிரதக்ஷிணத்தால் அடை என்பது பழமொழி. இதனால் தான் வீட்டில் வழிபடும் போதும், திருவுருவைச் சுற்ற முடியாத இடங்களிலும் ஆத்ம பிரதட்சிணமாவது செய்யுமாறு கூறப்படுகிறோம். திருச்சுற்று கூட தெய்வீகமும் கூடும். டைனமோவை ஓரிரு முறை சுழற்றும் போது மின்னோட்டம் ஏற்பட்டாலும், அது நம் கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு விளக்கில் ஒளியைக் கொடுப்பதில்லை. பன்முறை சுற்றும் போதே திருப்தியான பலன் கிடைக்கிறது.

மேலும் சைக்கிளில் கால் சுழற்றுமிடத்தில் உள்ள பல் சக்கரத்தின் அளவு பெரிதாக பெரிதாக, பின் சக்கரத்தின் சுழற்சி கூடி, சைக்கிள் செல்லும் வேகம் அதிகரிப்பது போல, ஆலயங்களிலும் வெளிக்கோடியிலுள்ள பெரிய பிரகாரத்தை வலம் வரும்போது நன்மை மிக அதிகமாகக் கிடைக்கிறது. இதனால் தான் முன்னோர்கள், இயன்ற வரையில், பல ஆலயங்களிலும் 5சுற்று, 7 சுற்று என பல சுற்றுக்களை ஏற்படுத்தியிருக்கின்றனர். இத்தகு அமைப்பு உள்ள தலங்களை பஞ்சாவரண/சப்தாவரண/நவாவரண ÷க்ஷத்ரங்கள் என்று போற்றி வந்திருக்கின்றனர். இச்சுற்றுக்களை வலம் வருவதின் மேன்மையை நமக்கெல்லாம் நினைவுபடுத்துவதாக, இன்றும் ஒருசிலர், மதுரை மீனாக்ஷி ஆலயத்தில் முதலில் சித்திரை வீதியையும், அடுத்து ஆடி வீதியையும், பின்னர் 2வது உள் பிரகாரத்தையும், அதற்கும் பிறகு முதல் உள் பிரகாரத்தையும் வலம் வந்த பின்பே அம்மனையோ, சுவாமியையோ தரிசிப்பதைக் காணலாம். பணிப் பளுவினால், கால அவகாசமின்மையால், எல்லோராலும், எல்லா நாட்களிலும், எல்லாச் சுற்றையுமோ, பெரிய பிரகாரத்தையோ வலம் வர இயலாது என்றாலும் இயன்றவரை சிறிய திருச்சுற்றையாவது சில முறையாவது வலம் வருதல் நல்லது. வாரம் ஒருமுறை / மாதம் ஒரு முறையாவது பெரிய திருச்சுற்றை வலம் வருதலை எல்லோரும் வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

கிரிவலத்தின் நன்மை: தேக ஆரோக்கியத்தை காப்பதற்காக தினமும் பலர்  மைதானத்திலும்  ரோடு ஓரங்களிலும் நடக்கின்றனர். இது மிகவும் நல்லது. ஆனாலும் உடல் நலத்துடன், அமைதியும், ஆன்ம பலமும் அடைய வேண்டும் என்று பலரும் உணரத் துவங்கியிருப்பதால் தான், இன்று ஆலயங்களையும் மலைகளையும் வலம் வருவது கூடியுள்ளது. சிலரது வீட்டருகே சுற்றி வரும் அளவிற்கு மலை இல்லாமல் இருக்கலாம். எனவே அருகில் இருக்க கூடிய கோயில் உள்ள இடங்கள் வரை இறை சிந்தனையுடன் நடந்து சென்று கோயிலையும் வலம் வந்தால், உடல் நலமும் கிடைக்கும். உள்ளமும் பலம் பெறும். மாதம் ஒரு முறை அல்லது இருமுறை அருகிலுள்ள கிரிவலம் செல்லக்கூடிய மலைக்கோயில் வாசல்  வரை வாகனத்தில் சென்று, அங்கு வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து தெய்வபலம் பொருந்திய மலையை கிரிவலம் செய்தால் உடலும் மனமும் வலிமை பெறும்.
விடுமுறையென்றால், வீட்டிலேயே இருந்து, தொலைக்காட்சியை மட்டுமே பார்க்காமல், குடும்பமாக, குழுவாக, இயற்கை வளம் மிகுந்த ஊர்களுக்கும், இறையருட்தலங்களுக்கும் சென்று வருவது மனதுக்கு நிம்மதி கிடைக்கும். இது போலவே, கிரிவலம் செல்வது கூட பவுர்ணமியில் மட்டுமின்றி, வார விடுமுறை நாட்களில் சென்று வருவது நல்லது.

கிரிவலம் செல்வதால் மனஅழுத்தம் குறையும். அக்குபஞ்சர் முறையில் காலில் சிறு கல் குத்துவதில் இரத்த ஓட்டம் சீராக அமையும். கிரிவலம் செல்பவர்களின் தாய் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி நடப்பவர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்வது நல்லது. ஆண்கள் கிரிவலம் செல்லும் போது சட்டை அணியாமல் செல்ல வேண்டும். சந்திரனின் ஒளிக்கதிர்கள் உடலில் படுவதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

மலையை வலம் வர மனது விரியும்
நடந்து வழிபட தேக நலனும் கூடும்
நாலு பேரோடு நடக்க நல்லுறவும் பெருகும்
அவனைப் பணிய, அவனடியவரை நினைக்க
அமைதியும் கூடும், அகஒளியும் பெருகும்.

திருவண்ணாமலை கிரிவலம்: ஒரு சில பக்தர்கள் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இடைவிடாது திருவண்ணாமலை சென்று கிரிவலம் வருகின்றனர். திருவண்ணாமலை தலம், சிவபெருமானுக்கு உரிய பஞ்சபூத தலங்களில் அக்னி தலம் ஆகும். இங்குள்ள மலையடி வாரத்தின் கீழ் சிவாலயம் அமைந்துள்ளது. கார்த்திகை தீபத்தன்று இந்த மலை மீது ஏற்றப்படும் தீபத்தில் ஈஸ்வரன் அருள் பாலிக்கிறார். இங்கு மலையே சிவலிங்கமாகும். இந்த மலையைச் சுற்றி வருவது பெரும் புண்ணியமாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு சாதாரண நாளில் திரு அண்ணாமலை கிரிவலம் சென்றாலே நமது முன்வினைகள் கடுமையாக நீங்கிவிடும். பொருள் வேண்டுபவர்கள் பவுர்ணமியிலும், அருள் வேண்டுபவர்கள் அமாவாசையிலும் அண்ணாமலையாரை கிரிவலம் செய்வது மரபு. இதில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் எல்லோரும் அமாவாசையில் தான் அண்ணாமலையாரை கிரிவலம் வந்து சிவனின் அருள் பெற்றுள்ளனர். பவுர்ணமியன்று அண்ணாமலையாரை கிரிவலம் வந்து வழிபடுவது மரபாக இருந்தாலும் கூட, பிறநாட்களிலும் நாம் அந்த மலையை வலம் வந்து வழிபடலாம்.

வார நாட்களில் கிரிவலம் சுற்றினால் ஏற்படும் பலன்கள்:

ஞாயிறு: மரணத்துக்குப் பின் சிவபதம் (கைலாயம்) சேர்தல்
திங்கள்: செல்வவளம் கிடைத்தல்
செவ்வாய்: வறுமை, கடன் நீங்குதல்
புதன்: கல்வியில் வளம் (பள்ளி விடுமுறை காலங்களில் குழந்தைகளுடன் புதன்கிழமையில் வலம் வரலாம்)
வியாழன்: தியானம், யோகா முதலியவற்றில் பற்று ஏற்படுதல்
வெள்ளி: விஷ்ணுலோகமான வைகுண்டம் அடைதல்
சனி: கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பம் நீங்குதல்
அமாவாசை நாட்கள்: சிவனின் பரிபூரண அருள், மன நிம்மதி கிடைத்தல் தொடர்ந்து 48 நாட்கள் தம்பதி சமேதராக சுற்றுதல்........ குறையிருந்தாலும் மகப்பேறு கிடைத்தல்

பக்தர்கள் எல்லோரும் திருவண்ணாமலை போன்ற சில கோயில்களுக்கு மட்டுமே பவுர்ணமி அன்று கிரிவலம் செல்கிறார்கள். ஆனால் பவுர்ணமி கிரிவலம் என்பது அனைத்து கடவுளுக்குமே முக்கியமானது. கோயில்களில் மதில் சுவர்களை எழுப்பி உருவாக்கப்படும் பிரகாரங்கள் நாமாக ஏற்படுத்திக் கொண்டவை என்றால், மலையைச் சுற்றியுள்ள கிரிவலப்பாதை இயற்கையாகவே கிடைத்ததாகும். திருவண்ணாமலையில் மட்டுமின்றி மலையுள்ள ஊர்களில் எல்லாம், அங்குள்ள ஆலயத்தை தரிசிக்கும் முன்பு மலையை கிரிவலம் வந்து வணங்குவது மிக நன்று. கைலாயத்திலுள்ள கைலாச நாதனையும், தமிழகத்திலுள்ள அண்ணாமலையானையும் மட்டுமின்றி, விநாயகர், முருகன், சிவன், விஷ்ணு, அம்மனின் ஆலயங்கள் மலைமீது உள்ள அமைந்திருந்தாலும்,  அல்லது மலைக்கு கீழே குடைவரைக்கோயிலாக அமைந்திருந்தாலும் அந்த மலையை பவுர்ணமி நாட்களில் சுற்றி வருவது மிகுந்த புண்ணியத்தை தரும். மலைமேல் உள்ள மருந்தே மாமருந்து என்பதற்கு இணங்க சுவாமி அருளால் எல்லா தோஷங்களும் விலகும். தற்போது பக்தர்கள் விநாயகரை பிள்ளையார்பட்டியிலும், முருகனை பழநி, திருப்பரங்குன்றத்திலும், பெருமாளை வேலூர் சோளிங்கரிலும், அம்மனை திண்டுக்கல் அபிராமியம்மை கோயிலிலும் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். கிரிவலம் செல்லும் மேலும் சில கோயில்கள்:

திருவள்ளூர்: திருத்தணி

வேலூர்: சோளிங்கர், ரத்தினகிரி, வள்ளிமலை

காஞ்சிபுரம்: திருநீர் மலை, சிங்கபெருமாள், திருக்கச்சூர் கச்சபேஸ்வரர்
திருக்கழுக்குன்றம்

திருவண்ணாலை: அருணாசலேஸ்வரர், பர்வதமலை, தேவிகாபுரம் கனககிரீஸ்வரர்

கிருஷ்ணகிரி: ஓசூர் சந்திரசூடேஸ்வரர்

சேலம்:  வடசென்னி மலை, கஞ்ச மலை

கடலூர்:  பாடலீஸ்வரர், விருத்தாச்சலம், சிதம்பரம் நடராஜர், திருவதிகை வீரட்டானேஸ்வரர்

ஈரோடு: கதித்தமலை, சென்னிமலை

திருச்செங்கோடு: அர்த்தநாரிஸ்வரர்

பெரம்பலூர்: செட்டிகுளம் முருகன்

கோவை: வெள்ளியங்கிரி, மதுக்கரை தர்மலிங்ககேஸ்வரர், கிணத்துக்கடவு முருகன், சரவணம்பட்டி, ரத்தினகிரி, செஞ்சேரி மலை

திருப்பூர்: அலகுமலை

திருச்சி:மலைக்கோட்டை, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர், ஈங்கோய்மலை

கரூர்:  தான்தோன்றி மலை, ஐயர் மலை

தஞ்சாவூர்: சுவாமி மலை, நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர்

நாகப்பட்டினம்:  சீர்காழி சட்டநாதர்

புதுக்கோட்டை: விராலி மலை, திருமயம் சத்தியகிரிஸ்வரர், தேனிமலை முருகன்

மதுரை:  திருப்பரங்குன்றம், யானை மலை

திண்டுக்கல்:அபிராமி அம்மன், பழனி

தேனி : பெரியகுளம் கைலாச நாதர்

சிவகங்கை: பிரான்மலை, குன்றக்குடி, பிள்ளையார்பட்டி

தூத்துக்குடி: கழுகுமலை

திருநெல்வேலி:  பண்பொழி முத்துகுமாரசுவாமி

கன்னியாகுமரி: வேலி மலை குமாரசுவாமி.

இது தவிர தமிழகத்தில் புகழ்பெற்ற பல கோயில்களில் கிரிவலம் அமைதியான முறையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கிரிவலம் வரும்போது கடைப்பிடிக்க வேண்டியவை என்ன?

மலையை வரும்போது வலதுபுறமாக வருவதும், மேல் சட்டை அணியாமலும் தலைப்பாகை அணியாமலும், காலில் செருப்பு அணியாமலும் வரவேண்டும். ஏனெனில், இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான சித்தர்கள் கிரிவலம் செல்லுவார்கள். அவர்களின் உடலில் பட்ட காற்று நம்மையும் அறியாமல் நமது உடல் மீது பட்டாலே நமது முற்பிறவிபாவங்களை அழித்துவிடும் என்பது  உண்மை. உடையை உடைமைகளை கையில் பிடித்துக்கொண்டு வருவதும் தவிர்க்க வேண்டியதாகும். மேலும் கிரிவலம் வரும்போது மனதில் இறைவன் சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். வாகனங்களில் கிரிவலம் செல்வதை தவிர்த்து நடந்துதான் செல்ல வேண்டும். எங்கு கிரிவலத்தை தொடங்குகின்றோமோ அங்குதான் முடிக்கவேண்டும். கிரிவலம் வந்து முடித்தவுடனே குளிக்க கூடாது, தூங்க கூடாது. ஒரு சிலர் கிரிவலம் சுற்றுகிறேன் என்ற பேரில் பேசிக் கொண்டும், நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டும், கொஞ்சம் கூட இறை சிந்தனை இல்லாமல் சுற்றி வருகின்றனர். மேலும்  குறிப்பிட்ட சில கோயில்களில் மட்டும் கிரிவலம் சுற்றுவதற்காக கூட்டத்தை ஏற்படுத்தி அந்த ஊரை குப்பை மேடாக்குவதுடன் அந்த ஊர் மக்களுக்கும் தொந்தரவு ஏற்படுத்துகின்றனர். கிரிவலம் சுற்றி வரும் மக்கள் கோயிலுக்குச் செல்லாமல் கிரிவலத்தை மட்டும் ஜாலியாக சுற்றி விட்டு ஊர் வந்து சேருகின்றனர். இதனால் கோயிலுக்கு எந்தவித வருமானமும் கிடையாது. இதற்கு பதிலாக பக்தர்கள் அவரவர் ஊரில் கிரிவலம் செல்லக்கூடிய கோயில்களில் ஏற்கனவே கிரிவலம் செல்லக்கூடிய பக்தர்களுடன் சேர்ந்து நிம்மதியாக இறை சிந்தனையுடன் கிரிவலம் சென்று கோயிலுக்குள்ளும் சென்று இறைவனை தரிசித்து விட்டு முழு பலனுடன் வீடு வந்து சேரலாம்.

பவுர்ணமியின் தனிச்சிறப்பு: சந்திரன் படிப்படியாக, ஒளி குறைந்து, முற்றுமாக, நம் கண்ணுக்குத் தென்படாத தினத்தை அமாவாசை என்றும், அதன் பிறகு, படிப்படியாக ஒளி கூடி, முழு இரவும் முழுமையாகத் தென்படும் நாளை பவுர்ணமி என்றும் கூறுகிறோம். பகலில் சூரியனும்; இரவில் சந்திரனுமாக, ஒரு நாளில் 24 மணி நேரமும், விண் ஒளிகள், நம்மீது, இயற்கையாகவே படர்வது பவுர்ணமி அன்று மட்டுமே. இதனால் தான் பரம்பொருள் வழிபாட்டில் மற்ற நாட்களில் செய்யப்படும் வழிபாடுகளை விட பவுர்ணமி பூசையை மிகச் சிறந்ததாகப் போற்றி வந்திருக்கின்றனர். பொதுவாக, ஒவ்வொரு திதியையும், குறிப்பிட்ட ஒரு தெய்வ வழிபாட்டுக்கே மிக உகந்ததாக கருதப்படுவதை அறிவோம்.  உதாரணமாக, சதுர்த்தி விநாயகருக்கும், சஷ்டி முருகனுக்கும், அஷ்டமி, நவமி அம்மனுக்கும், ஏகாதசி விஷ்ணுவுக்கும், திரயோதசி, சதுர்த்தசி சிவபெருமானுக்கும் ஏற்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு மாறாக, பவுர்ணமியை மட்டும், சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், முருகனுக்கும் அன்னை பராசக்திக்கும், லக்ஷ்மிக்கும் என்று பல தெய்வ வழிபாடுகளுக்கும் மிக மேன்மையாகக் கருதுவது குறிப்பிடத்தக்கது. பவுர்ணமியில் பூசை பண்ணியதும் பலன் என்று கூறுமளவுக்கு முழுநிலவன்று வழிபடுவது மிக்க சிறப்புடையது.

காலத்தைக் கணக்கிடும் பல முறைகளில், சூர்யமானம், சந்திரமானம் என்பவை மிக முக்கியமானவை. பொதுவாக, வடபாரத மாநிலங்களில் தான், சந்திரனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டாலும், சூரியனின் நகர்வைப் பின்பற்றும் தமிழகத்திலும் பலமுக்கிய செயல்பாடுகளுக்கு நிலவின் நிலையும் கருதப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இறைவழிபாட்டில், அதுவும், ஆலய வழிபாட்டில் பவுர்ணமியும் அதை ஒட்டிய நட்சத்திரமுமே மிகவும் மேன்மையாகக் கருதப்பட்டிருக்கின்றன. சித்திரைத் தேர் முதல், பங்குனிக் காவடி வரை, லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் மிகப்பெரிய திருவிழாக்கள் அநேகமாக பவுர்ணமி நாளன்றே நடைபெறுகின்றன.

மாதம் தோறும் வரக்கூடிய ஒவ்வொரு பவுர்ணமியிலும் ஒரு சிறப்பு உள்ளது. உதாரணத்திற்கு ஒரு சில சிறப்புக்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

சித்ரா பவுர்ணமி : (சித்திரை நட்சத்திரம்) அனைவரின் செயல்களையும் பதிவு செய்யும் சித்ரகுப்தனின் பிறந்த நாள். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இழங்கும் விழா சிறப்பு.

வைகாசி பவுர்ணமி: (விசாகம் நட்சத்திரம்)  முருகன் அவதரித்த நாள்.

ஆனிப் பவுர்ணமி : (மூலம் நட்சத்திரம்) இறைவனுக்கு மா, பலா, வாழை போன்ற பல கனிகள் படைக்கும் நாள். திருவையாற்றில்  சிறப்பு.

ஆடிப் பவுர்ணமி : (பூராடம்/உத்ராடம் நட்சத்திரம்) விஷ்ணு வழிபாட்டுக்கு உகந்த நாள். காஞ்சியில்  சிறப்பு.

ஆவணிப் பவுர்ணமி : (அவிட்டம் நட்சத்திரம்) வட இந்தியாவில் ரக்ஷõபந்தனம் என்றும், கேரளத்தின் ஓணம் பண்டிகை என்றும் கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி பவுர்ணமி : (பூரட்டாதி/உத்திரட்டாதி நட்சத்திரம்) சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வரனுக்கு வட இந்தியாவில் சிறப்பான பூஜை.

ஐப்பசி பவுர்ணமி : (அசுவதி நட்சத்திரம்) வட இந்தியாவில் மகாலட்சுமி விரதமும், தென் இந்தியாவில் சிவனுக்கு அன்னாபிஷேகமும் விசேஷம்.

கார்த்திகைப் பவுர்ணமி : (கார்த்திகை நட்சத்திரம்) திருவண்ணாமலையில் நடைபெறும் தீருக்கார்த்திகை தீபம் சிறப்பு.

மார்கழிப் பவுர்ணமி : (திருவாதிரை நட்சத்திரம்) சிவன் நடராஜராக காட்சியளித்த நாள்.

தைப் பவுர்ணமி : (பூசம் நட்சத்திரம்) சிவனுக்கும், முருகனுக்கும் பெருவிழா நடத்தும் நாள்.

மாசிப் பவுர்ணமி : (மகம் நட்சத்திரம்) மாசி மகத்தன்று கும்பகோணத்திலும், வடக்கே அலகாபாத்திலும் சிறப்பு.

பங்குனிப் பவுர்ணமி : (உத்திரம் நட்சத்திரம்) சிவன் பார்வதி திருமணம் போன்ற பல முக்கிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.

பவுர்ணமி இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்ற காரணத்தினால் தான் பவுர்ணமியில் சுற்றும் கிரிவலமும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
சுவாமிக்கு சாத்திய வஸ்திரத்தை பக்தர்கள் அணியலாமா?

சுவாமிக்கு சாத்த வேண்டும் என பக்தர்கள் காணிக்கையாக வஸ்திரம் வாங்கிக் கொடுக்கிறார்கள். இதுவே கூடுதலாக சேர்ந்து விடுகிற பொழுது வீணடிக்காமல் இருக்க ஏலத்தில் விடுகிறார்கள். இதன் மூலம் மூன்று வழிகளில் பயன் கிடைக்கிறது.  பக்தர்களின் வஸ்திர காணிக்கை நிறைவேறுகிறது. ஏலத்தின் மூலம் கோயில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. வஸ்திரங்கள் வீணாகாமல் மற்றவர்கள் உபயோகிக்கவும் முடிகிறது. சுவாமிக்குப் படைக்கப்படும் நிவேதன பிரசாதத்தை உண்பது போல, சுவாமிக்கென பக்தியோடு அணிவிக்கும் வஸ்திரங்களையும் உபயோகிக்கலாம்.
பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் தெரியுமா?

காலை 4.30 மணி முதல்  6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.
விரத உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக்கூடாது என்பது ஏன்?

விரதம் என்ற சொல்லுக்கு கஷ்டப்பட்டு  இருத்தல் என்று பொருள். விரதமிருப்பவர், அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக எண்ண வேண்டும். சாப்பிட்டால் மலஜலம் கழிக்க நேரிடுமே என்பதால் தண்ணீர் கூட குடிக்காமல் பசித்திருந்து, சிந்தனை மாறாமல் இருப்பதையே உபவாசம் என்ற நிலையில் முதன்மையாகக் கூறியுள்ளனர். உபவாசம் என்றால் இறைவனுக்கு அருகில் இருத்தல் என்று பொருள். முறையாக இருக்க இயலாதவர்கள் கூட அரிசி சாதத்தையும், வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும். அரிசி, வெங்காயம், பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்?

தாய்க்குப் பின் மனைவி என்றே சொல்லியிருக்கலாமே! ஏன் தாரம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. தாரம் என்றால் மகிழ்ச்சி. தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதே இதன் பொருள்.  ஆன்மிகத்திலும் ஒரு தாரம் இருக்கிறது. அது என்ன தெரியுமா? மந்திர சாஸ்திரத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தாரம் என அழைப்பர். அதாவது, இந்த மந்திரத்தை உச்சரிப்போர், பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர். ஆன்மிகத்தில் முக்தியே உயர்ந்த சந்தோஷமாகும்.

பிரணவம் என்பதற்கு புதியது என்று அர்த்தம். ஓம் ஓம் ஓம் என முழங்காத நாட்களே ஒரு பக்தனின் வாழ்க்கையில் இல்லை. அவரவர் இஷ்ட தெய்வத்தின் முன்னால் ஓம் சக்தி விநாயகா, ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் முருகா, ஓம் காளி, ஓம் சக்தி என்றெல்லாம் மந்திரம் சொல்லி பிரார்த்திக்கிறார்கள். ஆனாலும், அந்த தெய்வங்களை அவர்களால் பார்க்க முடிகிறதா? அவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறதா? தெய்வங்களைப் பற்றி பேசப் பேச, படிக்க படிக்க, வணங்க வணங்க புதுப்புது சந்தேகங்களும், கேள்விகளும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. என்றும் புதிதாகவே இருக்கிறேன் என்பதே இந்த மந்திரத்தின் மூலம் இறைவன் நமக்களிக்கும் தகவல்.
தெய்வத்திற்கும் தண்ணீருக்கும் உள்ள ஒற்றுமை தெரியுமா?

தாயைக் கழித்தாலும் தண்ணீரைக் கழிக்காதே என்று கூறுவார்கள். தண்ணீரை வீணாக்குபவர்கள் பெரிய சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பது பெரியோர்கள் கண்ட உண்மை. தண்ணீர் தெய்வத்திற்கு சமமானது என்பததை இப்படி விளக்குகிறார்கள். தண்ணீர் உயரமான இடத்திலிருந்து தாழ்வான இடத்தை நோக்கியே வரும். அதே போல் கடவுளும் உயரமான இடத்திலிருந்து அவதாரம் என்று சொல்லி கீழ் நோக்கி வருகிறார். தண்ணீர் எந்த நிறத்தில்கலக்கிறதோ அதே நிறத்தைப் பெறுகிறது. அதே போல் கடவுளும் எந்த அவதாரத்தை எடுக்கிறாரோ அந்த நிறத்தைக் காட்டுவார்.

தண்ணீருக்கு நிறம், மணம், குணம் கிடையாது. அதேபோல அருவமான கடவுளுக்கும் நிறம்,மணம், குணம் கிடையாது. உணவுப் பொருளை உற்பத்தி செய்ய உதவுவது தண்ணீர்தான். அது தானும் உணவாவது போல இறைவன் பக்தியின் விளை நிலமாகவும், பக்திப் பொருளாகவும் ஆகிறான். தண்ணீர் நாம் எடுக்கும் பாத்திரத்தின் அளவுக்கே நிறைவது போல இறைவனும் பக்தியின் அளவுக்கே பலன் தருகிறான். தண்ணீருக்கு ஏழை,பணக்காரன், ஆண், பெண், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றபேதம் கிடையாது. கடவுளுக்கும் இந்தவிதமான பேதங்கள் கிடையாது என்பதை நாம் அறிவோம். தண்ணீரை சர்வதேவதா ஸ்வரூபம் என்கிறது வேதம்.

சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன?

பா எனில் வெளிச்சம். ப்ரபாதம் எனில் காலைப்பொழுது. சுப்ரபாதம் எனில் இனிய காலைப் பொழுது என்று அர்த்தம். வடமொழியில் சு எனும் எழுத்து ஒரு சொல்லுக்கு முன்னர் சேர்க்கப்பட்டால் உயர்ந்பொருளை நல்கும். பாக்ஷிதம்-வார்த்தைகள், சுபாக்ஷிதம்-நல்வார்த்தைகள். கன்யா-பெண், சுகன்யா-நல்லப் பெண். இதுபோன்று சுப்ரபாதம் என்பது நல்ல இனிய காலைப் பொழுது. காலையில் கடவுளை இந்துதிகளால் வழிபடுவதன் மூலம் நாம் கடவுளுக்கு காலை வணக்கம் சொல்வதாகவும், இவை கடவுளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் எழுப்பும் விதமாகவும் இதனால் நாமும் புத்துணர்ச்சி பெறுவதும் அனுபவ உண்மை.இவை அனைத்து கடவுளுக்கும் பல மகான்கள் அருளியிருக்கிறார்கள். இவற்றைகாலையில் கேட்பதே உயர்ந்தது. எனினும், மற்ற காலங்களில் கடவுளின் நாமாவளிகளின் தொகுப்பு என்ற மட்டில் கேட்கலாம் தவறில்லை. எனினும், விடியற்காலையில் கேட்பதே பொருத்தமானது.
குண்டர்கள் என்பவர்கள் யார்?

உலகில் குண்டர்கள் என்போர் யார் என்பதை அருணகிரி நாதர் தமது தோழமை கொண்டு சலஞ்செய் குண்டர்கள் என்று தொடங்கும் திருப்புகழ் பாடலில் கூறியிருக்கிறார். அவருடைய வாக்கின்படி இடம் பெற்றிருக்கும் குண்டர்கள்.

1. நண்பனாக இருந்து கொண்டு துன்பம் செய்கிறவர்கள்.
2. செய் நன்றியை மறந்தவர்கள்
3. விரதங்களை விலக்கியவர்கள்
4. தானம் செய்வதை தடுப்பவர்கள்
5. சொன்ன வாக்கை காப்பாற்றாதவர்கள்
6. சோம் பேறிகளாக இருந்து கொண்டு சொல்லை வீசுகிறவர்கள்.
7. இறைவனுக்கு உரிமையான சொத்துக்களை சூறையாடுபவர்கள்.
வேலுண்டு வினைதீர்க்க; மயிலுண்டு வழி காட்ட- கந்த சஷ்டி ஸ்பெஷல்

குருவாய் வருவாய் முருகா!கந்தபுராணத்தில் திருத்தணி பற்றி சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. வெகுதொலைவில் இருந்தபடியே, திருத்தணி என்ற பெயரை உச்சரித்தாலும், கேட்டாலும், நினைத்தாலும், அவ்வூர் இருக்கும் திசை நோக்கி வணங்கினாலும் புண்ணியம் கிடைக்கும் என்கிறது தணிகைப்புராணம். இத்தலத்தின் பெருமையையும், மகிமையையும் வள்ளிக்கு முருகப்பெருமானே எடுத்துச் சொன்னதாக கந்தபுராணம் கூறுகிறது. திருத்தணி முருகனின் அருள் பெற்ற அடியார் முத்துச்சுவாமி தீட்சிதர். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஓருவரான இவர், திருத்தணி முருகன் சந்நிதியில் தியானித்துக் கொண்டிருந்தார். அப்போது, முருகன் சிறுபாலகனாய் வந்து, அவருக்கு கற்கண்டு கொடுத்தார். உடனே தீட்சிதர் முருகனைப் பற்றி பல கீர்த்தனைகளைப் பாடினார். தம் கீர்த்தனைகளில் முருகனை ""குருகுஹ என்று போற்றுகிறார். அவரையே குருவாக ஏற்றார். கலியுகத்தில், சிறந்த குரு கிடைக்காத பட்சத்தில் திருத்தணி முருகனையே மானசீக குருவாக ஏற்று வழிபடலாம். "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று அருணகிரிநாதரும் முருகனைப் போற்றுகிறார்.

பிள்ளைகள் கருத்துக்கு முன்னுரிமைகொடுங்க!முருகனுக்கு தனி வழிபாடும், முக்கியத்துவமும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தங்களிடம் இருந்து அவரைப் பிரித்து இந்த திருவிளையாடல்களை சிவன் நிகழ்த்தினார். இதற்காக, பெற்றோரை உலகமாகக் கருதி, அவர்களைச்சுற்றி வந்த விநாயகருக்கு, ஞானப்பழத்தைக் கொடுத்தார். எதிர்பார்த்தபடியே முருகனும் கோபம் கொண்டு பெற்றோரை பிரிந்தார். மேலும், தன் மகனின் பெருமையை உலகறியச் செய்ய, மந்திர நாயகனான அவர், ஒரு மந்திரத்திற்கு பொருள் தெரியாதது போல் நடித்து, மகன் மூலம் உபதேசம் பெற்றார். குடும்பத்தில் பிள்ளைகளின் கருத்துக்கும் பெரியவர்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சிவகுடும்பம் அமைந்தது.

கருவறைக்குள் திரைச்சீலை:இலங்கை கதிர்காமம் முருகன் கோயில் கொழும்பிலிருந்து 230 கி.மீ., தூரத்தில் உள்ளது. இவர் "கதிரேசன் என்று போற்றப்படுகிறார். கருவறையில் எந்த வடிவில் முருகன் இருக்கிறார் என்பது ரகசியமாக உள்ளது. சந்நிதியின் கதவில் தொங்கவிடப்பட்டிருக்கும் திரையில் மயில் மீது வள்ளி, தேவசேனாவுடன் அமர்ந்திருக்கும் முருகனின் உருவம் இருக்கும். இதைப்போன்று வேறு திரைச்சீலைகளும் தொங்கவிடப்பட்டிருக்கும். இந்த திரைக்கே பூஜை நடத்தப்படுகிறது. இங்கு ஆடிஅமாவாசையன்று ஆரம்பித்து பவுர்ணமியில் முடியும் விழா பிரபலமானது. விழாவின் போது யானைமீது, முருகனுக்குரிய யந்திரம் அடங்கிய ஒரு பெட்டி எடுத்து வரப்படும். இதை முருகனாகக் கருதி மக்கள் வழிபடுகின்றன். இக்கோயிலின் பின்புறமிருக்கும் அரசமரத்தை சிங்களர்கள் வழிபடுகின்றனர். தமிழ் மக்களும், சிங்களர்களும் இணைந்து வழிபடும் கோயில் இது. கிரகபாதிப்பை போக்கும் பாடல்: ராசிபலனை தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் விருப்பம் அதிகம். நம் பூர்வஜென்ம பாவபுண்ணியங்களுக்குத் தகுந்தபடி வாழ்க்கை அமைகிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராசி மண்டலத்தில் அசுவினி முதலாக ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. பிறந்த நட்சத்திரத்தைப் பொறுத்து ராசி அமைகிறது. அருணகிரிநாதர் "கந்தர் அலங்காரம் என்னும் நூலில், நட்சத்திர நாயகனான முருகனை வழிபாடு செய்யும் அன்பர்களை நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்று உறுதிபடக் கூறுகிறார்.""நாள் என்செயும் வினைதான் என்செயும்எனை நாடிவந்த கோள்என் செயும்கொடுங்கூற்றென் செயும், குமரேசர்இரு தாளும் (இரண்டு பாதங்கள்), சிலம்பும் (இரண்டு சிலம்பணிகள்),சதங்கையும் (இரண்டு சலங்கையும்),தண்டையும் (இரண்டு தண்டைகள்),சண்முகமும் (ஆறு முகங்கள்)தோளும் (12 தோள்கள்)கடம்பும் (கழுத்திலுள்ள கடம்பு மாலை)எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. முருகனின் 27 உறுப்புகளும் 27 நட்சத்திரங்களைக் குறிக்கின்றன. இதைப் பாடினால் கிரக பாதிப்பு நீங்கும்.

நோய் தீர்க்கும் சந்தனம்: அழகே உருவான முருகப்பெருமானுக்கு, சூரபத்மனுடன் போரிட்ட போது மார்பில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்துடன் அவர் அமர்ந்துள்ள தலம் திருத்தணி. சூரனுடன் போரிட்ட கோபம் தணித்த இடம் என்பதால் "தணிகை என இத்தலம் பெயர் பெற்றது. அவரது காயத்தின் வலி குறைய சுவாமிக்கு சந்தன அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. அந்த சந்தனமே இங்கு பிரசாதமாக தரப்படுகிறது. அது நோய் தீர்க்கும் எனும் நம்பிக்கையுடன் பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். சந்தனம் அரைப்பதற்காக கோயிலில் கல் ஒன்றும் உள்ளது.

திருப்புகழின் பொருள்: முருகனின் சிறப்புகளையும், அவரது அருள் வேண்டியும் அருணகிரிநாதர் பாடிய பாடல்களின் தொகுப்பே திருப்புகழ், இதன் முதல் அடியை முருகனே எடுத்துக் கொடுத்தார். "திரு என்றால் "அழகு, ஐஸ்வர்யம் என்று பொருள். அழகனாகிய, ஐஸ்வர்யம் தருகின்ற முருகனை புகழ்வதால், "திருப்புகழ் என்று பெயர் உண்டானது.

அறுபடை வீடுகள்:திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை என்னும் ஆறுதலங்களும் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள். மனிதனின் உடலில் ஆறு ஆதாரங்களாக மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகியவை இருப்பது போல, முருகனின் படை வீடுகள் திகழ்கின்றன. முருகப்பெருமானின் வாழ்க்கை வரலாற்றை இந்த ஆறுதலங்களுக்குள்ளும் அடக்கிச் சொல்வர். திருமுருகாற்றுப்படை என்னும் பழந்தமிழ் இலக்கியம் படை வீடுகளின் சிறப்பை விரிவாகக் கூறுகிறது.

தாயில்லாமல் இவர் இல்லை: முருகன் தாயின் மூலமாக பிறக்காமல், தந்தையால் மட்டுமே பிறந்தவர் என்று எண்ணுகிறோம். இது சரியானதல்ல. அசுரன் ஒருவன் சிவனிடம், தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் அழிந்துவிட வேண்டும் என வரம் பெற்றிருந்தான். ஒரு கட்டத்தில், சிவனது தலை மேலேயே கை வைக்க வந்தான். அவர் மறைந்து கொண்டார். பின்னர் அவன் பார்வதிதேவியின் தலை மீது கை வைக்க ஓடினான். அவள் சரவணப் பொய்கை தீர்த்தமாக மாறிவிட்டாள். சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கி சரவணப் பொய்கையில் இட்டார். அதிலிருந்து முருகன் அவதரித்தார். இதன் மூலம் முருகன் தன் தந்தை, தாயிடமிருந்து தோன்றினார் என்பது புலனாகிறது. இதனால் முருகனை "சிவசக்திபாலன் என்றும் அழைப்பர்.

வழித்துணையாய் வா முருகா! கந்த சஷ்டி பிரார்த்தனை:
*முழுநிலவு போல குளிர்ச்சியான முகத்துடன் விளங்கும் முருகப்பெருமானே! வெற்றி தரும் வேலாயுதத்தை தாங்கியவனே! உன் அன்பைப் பெற என்மனம் ஏங்கித் தவிக்கிறது. என்னை உன் அடிமையாக ஆட்கொள்ள வந்தருள வேண்டும்.
* முருகா! என் கண்கள் காண்பதாக இருந்தால் உன் திருவடித் தாமரைகளையே காணட்டும். என் உதடுகள் உந்தன் திருப்புகழையே மட்டுமே பேசட்டும். இரவும் பகலும் என் மனம், உன் பெருமையை மட்டும் சிந்தித்திருக்கட்டும். இந்த அரிய வரத்தை நீ தந்தருளவேண்டும்.
* மாமரமாய் நின்ற சூரனை இருகூறாகப் பிளந்த வெற்றி வீரனே! கற்றவர்கள் புகழ்ந்து போற்றும் ஞானபண்டிதனே! செவ்வானம் போல சிவந்த மேனியனே! கடம்பம், முல்லை மலர்களை விரும்பி அணிபவனே! அறிவுக்கண்களைத் திறந்து ஞானத்தைத் கொடுத்தருள்வாயாக.
* முத்துப் போல பிரகாசிக்கும் புன்னகையுடன் காட்சி தருபவனே! உமையம்மையை மகிழ்விக்க வந்த சிவ பாலனே! அழகெல்லாம் ஒன்று திரண்டு வந்தது போல கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவனே! அருட்கண்களால் என்னைக் காத்தருள்வாயாக.
*எங்கள் எண்ணம், சொல், செயலுக்கு எட்டாத பரம்பொருளே! ஆறுமுகப்பெருமானே! எனக்கு வேண்டிய
வரங்களை வாரி வழங்க பன்னிரு கரங்களுடன் வந்தருள்வாயாக.
*கருணைக்கடலே! கந்தப்பெருமானே! நமசிவாயத்தின் நெற்றிக்கண்ணில் உதித்த அருட்சுடரே! வண்ண மயில் மீது வலம் வரும் சுப்பிரமணியனே! வள்ளி மணாளனே! இதயமாகிய குகையில் வீற்றிருக்கும் குகப்பெருமானே! உனது திருவடிகளை சிந்திக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக.
* ஆனைமுகப் பெருமானின் தம்பியே! ஆதிபராசக்தியின் புதல்வனே! வள்ளிக்கு வாய்த்தவனே! குன்றெல்லாம் குடிகொண்டிருக்கும் குமரப்பெருமானே! சஷ்டி நாதனே! சூரபத்மனுக்கும் பெருவாழ்வளித்த புண்ணியமூர்த்தியே!
எங்கள் தவறையும் மன்னித்து அருள்வாயாக.
* திருமாலின் மருமகனே! தெய்வானையை மணந்த வடிவேலனே! மலர்ந்த தாமரை போல எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவனே! சேவல் கொடியோனே! மலைமகள் பார்வதி பெற்ற பாலகனே! மயில் வாகனனே! கிரகதோஷம் எதுவும் என்னைத் தாக்காமல் காத்தருள வேண்டும்.
*மலைக்குத் தெய்வமான குறிஞ்சிநாதனே! அன்பர் குறைகளைப் போக்கும் குகப்பெருமானே! மயிலேறும் மாணிக்கமே! தயாபரனே! முன்செய்த பாவத்திலிருந்து விடுவித்து, வாழ்க்கைப் பயணத்திற்கு வழித்துணையாய் வந்தருள்வாயாக.
*கார்த்திகைப் பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்ட தவப்புதல்வனே! சரவணப் பொய்கையில் தவழ்ந்தவனே! தந்தைக்கே பாடம் சொன்ன குருநாதனே! எங்களுக்கு செல்வச்செழிப்பைத் தந்தருள்வாயாக.
* தெய்வானை மணாளனே! சரவணபவ மந்திரம் சொல்வோருக்கு உதவிட ஓடிவருபவனே! சரணடைந்தவரைக் காப்பவனே! தேவர்களைக் காத்த தேவசேனாபதியே! வாழ்நாள் முழுவதும், எனக்கு வழித்துணையாக வருவாயாக.
* சொல்லில் அடங்காப் திருப்புகழ் கொண்டவனே! உள்ளம் ஒன்றி வழிபடுவர்களுக்கு அருளைப் பொழியும் ஆறுமுகனே! திக்கற்றவர்க்கு துணை நிற்கும் திருமுருகனே! நம்பினோரைக் கரைசேர்த்திடும் நாயகனே! இந்த உலகமெல்லாம் செழிக்க வந்தருள்வாயாக.
விரதம் இருப்பதால் என்ன நன்மை?

விரதம் இருப்பதன் மூலம் உடல் தூய்மை பெறும், மனம் வலிமைபெறும். இறைவனது அருள் நமக்கு கிடைக்கும். ஓயாமல் சாப்பிடுவதன் மூலம் ஓய்வெடுக்க முடியாமல் இருக்கும் நம் உடலின் ஜீரண உறுப்புகளுக்கும் அப்போது ஓய்வு கிடைக்கும். விரதத்திற்கு மறுநாள் நாம் சாப்பிடும்போது ஜீரண உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும். பணி புரிபவர்கள் அனைவருக்கும் வார விடுமுறை தேவைப்படுவது போல, ஆலயங்களுக்குச் சென்று அருள் பெற விரும்பும் நாம், ஆரோக்கியமாக இருக்க விரதங்கள் தேவை. இதற்காக வாரத்தில் ஒரு நாள் அல்லது ஒரு வேளை உணவையாவது உண்ணாமல் இருந்து, தங்களுக்கு பிடித்தமான கடவுளுக்காக விரதமிருப்பது உடலுக்கும், மனதுக்கும் சிறந்தது.
பெண்களுக்கு சமபங்கு பெற்று தந்த மகா விரதம் எது தெரியுமா?

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண்மையை முதன்முதலில் இந்த உலகுக்கு சிவபெருமான் உணர்த்தியது தீபாவளித் திருநாள்(ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி) ஒன்றில்தான் என்கின்றன புராணங்கள். சிவபெருமான் தனது மேனியில் பாதியை அம்பிகைக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த நாள் இதுவே. சிவனின் இடப்பாகம் வேண்டி பார்வதி இருந்த விரதம் கேதாரீஸ்வரர் விரதம் என்றும், இந்த விரதத்தை கேதாரீஸ்வரர் மற்றும் பார்வதியாகிய கவுரியுடன் மனிதர்கள் கடைப்பிடிப்பதால் கேதார கவுரி விரதம் என்றும் பெயர் பெற்றது.

ஒருநாள் கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் இருந்தபோது சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர்கள், அட்டவசுக்கள் முதலான யாவரும் தினமும் கூடிப் பார்வதி பரமேஸ்வரனை வணங்கிச் சென்றனர். ஆனால் பிருங்கி முனிவர், சிவனை மட்டும் பலமுறை விழுந்து வணங்கினார். அம்பிகை நெருங்கி அமர, முனிவரோ வண்டு உருவம் எடுத்து இடையில் புகுந்து சிவனைமட்டும் வலம் வந்தார். இதனால் கோபமடைந்த தேவி இதற்கான காரணத்தை சிவனிடம் வினவினார். பரமேஸ்வரன், பார்வதியே! பிருங்கி முனிவன் பாக்கியத்தை விரும்பினவனல்ல. மோட்சத்தை விரும்பினவன். மவுனநிலை வகித்த பெருந் தவமுடையவன்; காரணப் பொருள் ஒன்றேயெனக் கருதுபவன்; மற்றொன்றிருப்பதாகக் கருதாதவன்; ஆதலின் என்னை மாத்திரம் பிரதட்சணம் செய்தான் எனக் கூறியருளினார். அத்தருணம், சென்றுகொண்டிருந்த முனிவரைப் பார்வதி தேவி அழைத்து, பிருங்கியே! நான்தான் ஈசனும் சக்தியாக இருப்பவள். உலகில் சக்தியும் சிவனும் இணைந்து இருப்பதுதான் நியதி. சக்தி இல்லையேல் சிவன் கூட இல்லை. உம் உடம்பில் ஓடும் ரத்தமும் ஒட்டியிருக்கும் சதையும் கூட சக்தியான எனது அம்சங்களே! தெரியுமா உங்களுக்கு? எனக் கோபமாகச் சொன்னாள் இறைவி. உடனே முனிவர், தாயே! நீங்கள் கூறும் சக்தி ஏதும் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு தன் உடம்பில் இருந்த ரத்தத்தையும் சதையையும் உதறி எறிந்தார். சக்தியை இழந்த அவரால் நிற்கக்கூட முடியவில்லை. தடுமாறிய அவருக்கு  சிவபெருமான் ஓர் ஊன்றுக் கோலை கொடுத்தார். அதன் உதவியோடு தனது இருப்பிடம் சென்றடைந்தார் முனிவர். இந்த சம்பவம் பார்வதியின் மனதை வெகுவாகப் பாதித்தது.

பார்வதிதேவி இந்த அவமதிப்பையும் சிவபெருமான் கண்டுகொள்ளவில்லையே என்று நினைத்து, கயிலாசத்தை விட்டு பூலோகத்தை அடைந்து, கவுதமர் என்னும் முனிவரது ஆசிரமத்தில் தங்கினார். பன்னிரண்டு வருடம் மழையின்றி மடிந்தும், ஒடிந்தும், வாடியுமிருந்த ஆசிரமத்து நந்தவனமானது துளிர்த்துத் தழைத்துப் பூத்து பரிமளித்து எங்கும் நறுமணம் வீசியது. மரங்கள் முதலாயின பூத்துக் காய்த்துப் பொலிந்து அழகுடன் மிளிர்ந்தன. அப்போது தர்ப்பை  முதலியவற்றிற்காக வெளியே சென்றிருந்த கவுதம முனிவர்; உமாதேவியார் எழுந்தருளியிருப்பதைத் தெரிந்துகொள்ளாதவராய்ப் பூங்காவைக் கண்டு அதிசயித்து,  அதனைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். வரும்போது ஒரு வில்வ மரத்தடியிலே எழுந்தருளியிருக்கும் உமாதேவியாரைக் கண்டார். தாயே! கயிலாசத்தை நீங்கிப் பூலோகத்திலே அடியேனுக்குக் காட்சியளித்தருளிய தன்மைக்கு, யான் என்ன தவம் செய்தேனோ? என் முன்னோர் புரிந்த பெருந்தவமோ? அல்லது இந்த ஆசிரமந்தான் செய்த புண்ணியமோ? என்று கூறி வணங்கி நின்று, ஈஸ்வரியே! நீர் பூலோகத்திற்கு எழுந்தருளிய காரணம் யாதோ? எனக் கேட்டார். பார்வதிதேவி கயிலாசத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் கூறினாள். இதையெல்லாம் கேட்ட முனிவர் பார்வதியை சிம்மாசனம் ஒன்றின் மீது எழுந்தருளச் செய்து, அவளுக்கு வேண்டும் உபசாரங்கள் செய்து வணங்கி நின்றார்.

இவ்வாறாக பார்வதி தேவி கவுதமரை நோக்கி, தபோதனரே! சிவபெருமானுக்கு இடது பாகத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, இப்பூவுலகில் யான் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும், மிகவும் மகத்துவம் நிறைந்த விரதமொன்றும் அதனை அனுஷ்டிக்கும் முறைமையும் உரைத்தல் வேண்டும் எனக் கேட்டார். முனிவர், தாயே! பூவுலகில் அனுஷ்டிக்கப்படும் சிறந்த விரதம் ஒன்றுண்டு. கேதாரீஸ்வரர் விரதம் என்றும், கேதார விரதம் என்றும் அதற்குப்பெயர் எனக் கூறி, அதனை அனுஷ்டிக்கும் முறையையும் கூறினார். இந்த கேதாரீஸ்வரர் விரதம்  புரட்டாசி மாதப் வளர்பிறை அஷ்டமித் திதியிலிருந்து ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசித் திதி வரையில் அனுஷ்டிக்கப்படுவது.  அல்லது புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் ஐப்பசி  தேய்பிறை சதுர்த்தசி வரை உள்ள நாட்களில்  இவ்விரதம் அனுஷ்டிக்கப்படும்.  அதுவும் இல்லாமல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினும் கேதாரநாதரைக் குறித்து அனுஷ்டிக்கப்படுவதாகும். விரதம் ஆரம்பித்த நாட்கள் முதல்  ஒவ்வொரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி  இரவில் தர்ப்பையில் உறங்க வேண்டும். இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து , அர்ச்சனை செய்து  முறுக்கு, அதிரசம், வெண்தாமரை, வெற்றிலை, பாக்கு, சந்தனம் உருண்டை, மாஇலை, அரளி மொட்டு, வாழைப்பழம் போன்றவற்றை 21 என்ற எண்ணிக்கையில் படைத்து  பூஜித்து கேதரநாதரை வணங்கி உபவாசமிருத்தல் வேண்டும். மறுநாள் உதயத்தில் உபவாசம் முடிக்க வேண்டும் என்று பார்வதியை நோக்கி கவுதமர் பணிவுடன் கூறினார். பார்வதி தேவியும் இதன்படி விரதமிருந்தார்.

விரதத்தின் 21 வது நாள் சிவபெருமான், சிவகணங்களோடு கவுரி தேவியான பார்வதிக்குக் காட்சி தந்தார். கவுதம முனிவரை ஆசிர்வதித்து, தனது மேனியில் பாதியை அன்னைக்கு தந்து  அர்த்தநாரீஸ்வரராகிக் கயிலாயத்திற்கு எழுந்தருளினார். இதன் மூலம் ஆணும், பெண்ணும் சமம் என இந்த உலகுக்கு உணர்த்தினார். கேதாரீஸ்வரரைக் குறித்து உமாதேவியாராகிய கவுரி அனுஷ்டித்த விரதமே கேதார கவுரி விரதமாகும். கேதார கவுரி விரதமிருக்கும் பெண்களும் மேற்கூறிய முறையில் விரதம் இருக்க வேண்டும். இதில் சதுர்த்தசி நாளில் கும்பம் வைத்து அதை அம்மனாக நினைத்து வழிபட வேண்டும். வெண்மையை கவுவர்ணம் என்பர். ஆதியில் பரசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளி போல் வெண்மையாகத் தோன்றி, அண்ட சராசரங்களையும் உயிர்களையும் படைத்து, அவற்றுக்கெல்லாம் அருள, மலைகளின் மேல் வந்து தங்கினாள் தேவி. வெண்மையான நிறத்துடன் இருந்தாலும் மலைகளில் தங்கியதாலும் கவுரி என அழைக்கப்பட்டாள். அருணகிரிநாதர் கவுரிதேவியை, உலகு தரு கவுரி எனப் போற்றுகிறார். கவுரிதேவியை வழிபடுவது, அனைத்து தேவ-தேவியரையும் வழிபடுவதற்குச் சமம்;  கவுரி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு என்கின்றன ஞானநூல்கள். ஞானிகள் 108 வகை கவுரி தேவி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட வகை செய்துள்ளனர். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள 16 (சோடஷ)கவுரிகளின் திருவடிகளைப் போற்றி, வழிபாடு செய்தால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.

ஞான கவுரி: ஒரு முறை சக்திதேவி,உலக உயிர்கள் செயல்படுவது தனது சக்தியால். எனவே, எனது செயலை உயர்ந்தது என்று சிவனாரிடம் வாதிட்டாள். சிவனாரோ, ஒருகனம் உலக உயிர்களின் அறிவை நீக்கினார். இதனால் பெரும் குழப்பம் நேர்ந்தது. அதைக் கண்ட தேவி திகைத்தாள். உயிர்களுக்கு சக்தி மட்டுமே போதாது என்று உணர்ந்தவள்., நாயகனைப் பணிந்தாள். சிவம், உலக உயிர்களுக்கு மீண்டும் ஞானம் அளித்தது. கவுரி தேவிக்கு அறிவின் திறத்தை உணர்த்திய சிவமூர்த்தியை, கவுரி லீலா சமன்வித மூர்த்தி என்று சிவபராக்கிரமம் போற்றுகிறது. இதன் பிறகு, வன்னி மரத்தடியில் அமர்ந்து தவம் செய்த அம்பிகைக்கு தன் உடலில் பாதி பாகத்தை தந்த ஈசன், அவனை அறிவின் அரசியாக்கினார். இதனால் ஸ்ரீஞான கவுரி என்ப போற்றப்பட்டாள் அம்பிகை. பிரம்மன் அவளை ஞானஸ்வர கவுரியாக கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமியில் வன்னி மரத்தின் அடியில் இருத்தி வழிப்பட்டான். அந்நாள் ஞான பஞ்சமி, கவுரி பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. வீரர்கள் இவளைப் புரட்டாசி வளர்பிறை தசமியில் வழிபடுகின்றனர். அந்த நாளே விஜயதசமியாகப் போற்றப்படுகிறது. இவளுடன் ஞான விநாயகர் வீற்றிருப்பார். இந்த தேவி, மக்களுக்கு உயர்ந்த ஞானத்தையும் கல்வியையும் அருள்கின்றாள்.

அமிர்த கௌரி: உயிர்களுக்குக் குறையாத ஆயுளைத் தருவது அமிர்தம். மிருத்யுஞ்ஜயரான சிவனாரின் தேவியானதால் கவுரிக்கு, அமிர்த கவுரி என்று பெயர். இவளுக்குரிய நாள் ஆடி மாத பவுர்ணமி, ஜல ராசியான கடக மாதத்தில் இவளை வழிபடுவதால் ஆயுள் விருத்தியாகும்; வம்சம் செழிக்கும். இவளுடன் அமிர்த விநாயகர் வீற்றிருப்பாள். திருகடவூர் அபிராமி, அமிர்த கவுரியானவள். அங்குள்ள ஸ்ரீகள்ளவாரணப் பிள்ளையார் அமுத விநாயகர் ஆவார்.

சுமித்ரா கவுரி: உயிர்களுக்கு இறைவன் தலைசிறந்த நண்பனாக இருக்கிறான். சுந்தரரின் தோழனாக ஈசன் அருள் பாலித்த கதைகள் நமக்குக் தெரியும். அவரைப் போன்றே உயிர்களின் உற்ற தோழியாகத் திகழும் அம்பிகையை, அன்பாயி சினேகவல்லி என்ப போற்றுகின்றன புராணங்கள். திருஆடானையில் அருளும் அம்பிகைக்கு சினேகவல்லி என்று பெயர். இவளையே வடமொழியில் ஸ்ரீசுமித்ரா கவுரி எனப் போற்றுவர். இவளை வழிபட, நல்ல சுற்றமும் நட்பும் வாய்க்கும்.

சம்பத் கவுரி: வாழ்வுக்கு அவசியமான உணவு, உடை, உறைவிடத்தை சம்பத்துகள் என்பர். அந்தக் காலத்தில் பசுக்களும் (கால்நடைகள்) உயர்ந்த செல்வமாகப் போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்பவள் ஸ்ரீசம்பத் கவுரி. சம்பத்துகளை உணர்த்தும் வகையில் பசுவுடன் காட்சி அளிப்பாள் இந்த தேவி. அவளே பசுவாக உருவெடுத்து வந்து, சிவபூஜை செய்த தலங்களும் உண்டு. இதனால் அவளுக்கு கோமதி, ஆவுடைநாயகி ஆகிய திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. திருச்சிக்கு அருகிலுள்ள துறையூரில் இறைவன், சம்பத் கவுரி உடனாய நந்தீசுவராகக் கோயில் கொண்டுள்ளார். காசி அன்னபூரணியையும் மகாமங்கள கவுரி, சம்பத் கவுரி என்பர். இவளுடன் ஐஸ்வர்ய மகாகணபதி வீற்றிருக்கிறார். பங்குனி-வளர்பிறை திருதியையில் விரதம் இருந்து சம்பத் கவுரியை வழிபட வீட்டில் தான்யம், குழந்தை குட்டிகளுடன் கூடிய வம்சம், செல்வம் எல்லாம் விருத்தியாகின்றன. வயதான பெரியோர்கள் சுகம் அடைகிறார்கள்.

யோக கவுரி: யோக வித்தையின் தலைவியாக ஸ்ரீமகா கவுரி திகழ்கிறாள். இவளையே ஸ்ரீ யோக கவுரி என்கிறோம். மகா சித்தனாக விளங்கும் சிவனாருனுடன் அவள் யோகேஸ்வரியாக வீற்றிருக்கிறாள். காசியில் அவர்கள் இருவரும் வீற்றிருக்கும் பீடம் சித்த யோகேஸ்வரி பீடம் என்று அழைக்கப்படுகிறது. சித்தர்கள் யோகங்களை அருளும் அம்பிகையை யோகாம்பிகை, யோக கவுரி என்று அழைக்கின்றனர். யோக கவுரியுடன் வீற்றிருக்கும் விநாயகரை யோக விநாயகர் என்பர். திருவாரூரில் தியாகராஜர் மண்டபத்தில் வீற்றிருக்கும் (மூலாதார) விநாயகரை யோக கணபதி என்பர். திருவாரூரிலுள்ள கமாலாம்பிகை யோக கவுரி ஆவாள். அங்குள்ள தியாகராஜரின் ராகசியங்கள், யோக வித்தை எனப்படுகின்றன. திருப் பெருந்துறையில் அன்னை யோக கவுரி யோகாம்பிகையாக வீற்றிருக்கிறாள்.

வஜ்ர ச்ருங்கல கவுரி: உறதியான உடலை வஜ்ர தேஹம் என்பர். அத்தகைய உடலை உயிர்களுக்குத் தரும் கவுரிதேவி வஜ்ர ச்ருங்கல எனப் போற்றப்படுகிறாள். கருட வாகனத்தில் பவனி வரும் இவள் அமுத கலசம், சக்கரம், கத்தி ஆகியவற்றுடன் நீண்ட சங்கிலியை ஏந்திக் காட்சியளிக்கிறாள். ச்ருங்கலம் என்பதற்கு, சங்கிலி என்பது பொருள். வைரமயமான சங்கிலியைத் தாங்கி இருப்பதால். வஜ்ர ச்ருங்கல கவுரி என்ப்படுகிறாள். உயிர்களுக்கு வஜ்ர தேகத்தை அளித்து நோய் நொடிகள் அணுகாமல் காத்து, அருள்புரிவதுடன் இறுதியில் மோட்சத்தையும் தருகிறாள். இவளுடன் இருப்பது ஸித்தி விநாயகர்.

ஸ்ரீத்ரைலோக்ய மோஹன கவுரி: ஆசைக் கடலில் சிக்கி அவதிப்படாமல் இருக்க, இவைள வழிபட வேண்டும். மனதுக்கு உற்சாகத்தையும் உடலுக்குத் தெய்வீக சக்திகளையும் அளிக்கிறாள் இவள். இவளுடன் த்ரைலோக்கிய மோஹன கணபதி வீற்றிருக்கின்றார். காசியில் நளகூபரேஸ்வரருக்கு மேற்குப் பக்கத்தில் குப்ஜாம்பரேஸ்வரர் என்னும் சிவாலயம் உள்ளது. அதில் த்ரைலோக்ய (மோஹன) கவுரி வீற்றிருக்கிறாள்.

சுயம் கவுரி: சிவனாரை தன் மண மகனாக மனதில் எண்ணியவாறு, நடந்து செல்லும் கோலத்தில் அருள்பவள். திருமணத் தடையால் வருந்தும் பெண்கள் சுயம்வர கவுரியை வழிபட, நல்ல கணவன் வாய்ப்பான், ருக்மணி, சீதை, சாவித்ரி முதலானோரின் வரலாறுகள் கவுரி பூஜையின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. நல்ல இல்லறத்தை நல்கும் இந்த அம்பிகையை சாவித்ரி கவுரி என்றும் அழைக்கின்றனர். இந்த தேவியுடன் கல்யாண கணபதி வீற்றிருக்கிறார்.

கஜ கவுரி: பிள்ளையாரை மடியில் அமர்த்தியபடி அருள்புரியும் தேவி இவள், ஆடி மாத பவுர்ணமி திதியில் இந்த தேவியை வழிபட, சந்தான பாக்கியம் கிடைக்கும்; வம்சம் விருத்தியாகும். காசி அன்னபூரணி ஆலயத்தில் சங்கர கவுரி கணபதியின் பெரிய திருவுருவம் உள்ளது. இலங்கையில், பல இடங்களில் தேர்ச் சிற்பங்களாகவும், தூண் சிற்பங்களாகவும் ஸ்ரீகஜ கவுரி காட்சியளிக்கிறாள்.

கீர்த்தி கவுரி(எ) விஜய கவுரி: நற்பயனால் ஒருவன் பெரிய புகழை அடைந்திருந்தபோதிலும், அதன் பயனை முழுமையாக அனுபவிக்கச் செய்யும் தேவியாக விஜய கவுரி விளங்குகிறாள். அவளுடைய அருள் இருக்கும் வரையில் அவனது நற்குணங்களும் செயல்களும் மேன்மைபெறும்; கெட்ட நண்பர்களும், பகைவர்களும் விலகுவர்.

சத்யவீர கவுரி: நல்ல மனம் படைத்தவர்களே கொடுத்த வாக்கை நிறைவேற்றுவர். அத்தகைய மனப்பாங்கை அருள்பவள் ஸ்ரீசத்யவீர கவுரி. இந்த தேவியுடன் ஸ்ரீவீர கணபதி அருள்பாலிப்பார். இந்த கவுரிக்குரிய நாள்-ஆடி மாத வளர்பிறை திரயோதசி ஆகும். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் என்று அழைக்கின்றனர்.

வரதான கவுரி: கொடை வள்ளல்கள் கரத்தில் ஸ்ரீவரதான கவுரி குடியிருப்பாள். அன்பர்கள் விரும்பும் வரங்களைத் தானமாக அளிப்பதால் இவள் ஸ்ரீவரதான கவுரி என்று போற்றப்படுகிறாள். திருவையாற்றில் விளங்கும் அம்பிகை, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி; வடமொழியில் தர்மசம்வர்த்தினி. அவளுடைய கணவன் அறம்வளர்த்தீசுரர் என்று அழைக்கப்படுகிறார். காஞ்சியிலும் ஸ்ரீஅறம்வளர்த்தீசுவரர் ஆலயத்தைத் தரிசிக்கலாம். புரட்டாசி-வளர்பிறை திருதியை நாளில், வரதான கவுரியை வழிபடுவது சிறப்பு.

சுவர்ண கவுரி: ஒரு பிரளய முடிவில் அலைகடலின் நடுவில் ஸ்வர்ண லிங்கம் தோன்றியது, தேவர்கள் யாவரும் பூஜித்தனர். அப்போது, அதிலிருந்து பொன்மயமாக ஈசனும்,பொற்கொடியாக பராசக்தியும் தோன்றினர். எனவே தேவியை, சுவர்ணவல்லி என்று தேவியை, சுவர்ணவல்லி என்று தேவர்கள் போற்றினார்கள். ஸர்ண கவுரியை வழிபடுவதால் தோஷங்கள், வறுமை ஆகியன நீங்கும். குலதெய்வங்களின் திருவருள் கிடைக்கும். சுவர்ணகவுரி விரதத்தை, ஆவணி-வளர்பிறை திருதியை நாளில் கடைபிடிக்க வேண்டும் என்கின்றன. புராணங்கள். எனினும் நடைமுறையில், கடலரசியான அவளை மாசி மாதத்தில் வழிபடுவதால் பூரண பலனை அடையலாம் என்று அனுபவத்தில் கூறுகிறார்கள்.

சாம்ராஜ்ய மஹாகவுரி மீனாட்சி: அன்பும் வீரமும் ஒருங்கே விளங்கும் தலைமைப் பண்பை தரும் தேவி இவள். இந்த அம்பிகையை ராஜராஜேஸ்வரியாக வணங்குவர். இந்த தேவியுடன் ஸ்ரீராஜ கணபதி அருள்புரிவார். இவளை மனதார வழிபட, ராஜ யோகம் கிடைக்கும்.

அசோக கவுரி: துன்பமற்ற இடமே அசோகசாலம் எனும் தேவியின் பட்டணமாகும். இங்கு தேவி, ஸ்ரீஅசோக கவுரி என்னும் பெயரில் வீற்றிருக்கிறாள். சித்திரை-வளர்பிறை அஷ்டமியில் (அசோகஷ்டமி) அசோக கவுரியை வழிபட, பேரின்ப வாழ்வை, இவளுடன் சங்கடஹர விநாயகர் வீற்றிருக்கிறார்.

விஸ்வபுஜா மகாகவுரி: தீவினைப் பயன்களை விலக்கி, நல்வினைப் பயனை மிகுதியாக்கி, உயிர்களுக்கு இன்பங்களை அளிக்கும் தேவி. காசிக்கண்டம் இவளுடைய பெருமைகளை விவரிக்கிறது. தூய எண்ணங்களை மனதில் வளரச் செய்து, ஆசைகளைப் பூர்த்தி செய்பவளும் இவளே! எனவே, மனதார பூர்த்தி கவுரி என்றும் அழைக்கப்படுகிறாள். சித்திரை மாத வளர்பிறை திரதியையில் இவளை வழிபடுவது விசேஷம். இவளுடன் ஆசா விநாயகர் வீற்றிருக்கிறார்.

இவ்விரத நாட்களில் இருபத்தொரு இழையிலாகிய காப்பை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொள்ளுதல் வேண்டும்.இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து அதை அம்மனாக நினைத்து பூஜை செய்ய வேண்டும்.  விரத நாட்களில்  உபவாசமிருக்க இயலாதவர் கேதாரநாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பிலாப் பணியாரம் சாப்பிட்டுக்கொள்ளலாம்.

விரத பலன் : கேதார கவுரி விரதம் இருப்பவர்கள் சிறந்த புத்திரப் பேற்றையும், சகல செல்வங்களையும் பெறுவர். வறுமை நீங்கி நினைத்த காரியம் எல்லாம் கைகூடும். விரதம் இருக்கும் பெண்கள் எல்லா வளங்களையும் நலன்களையும் பெற்று, இல்வாழ்வில் கணவரோடு இணைபிரியாது வாழ்வது நிச்சயம்.
பெண்கள் நெற்றியில் அணியும் குங்குமத்தின் சிறப்பு தெரியுமா?

பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்றியில் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் தங்கள் நெற்றியில் குங்குமம் அணிகிறார்கள்.

குங்குமத்தை மோதிர விரலால் தான் நெற்றியில் இட வேண்டும். மற்ற விரல்களைப் பயனபடுத்தக்கூடாது. கோயில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து இடது கையில் போட்டுக் கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பதும் கூடாது. வீட்டில் யாராவது ஒருவரை வலது உள்ளங்கையில் சிறிதளவே போடச் சொல்லி, வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்.
இனிமையான இல்லறம் அமைய என்ன செய்ய வேண்டும்?

இன்று உள்ள காலகட்டத்தில் குடும்பத்தை நடத்தும் பொறுப்பு, பணிச்சுமை போன்ற பலவிதமான காரணங்களால் கணவன், மனைவி இருவரும் தங்களுக்குள் அன்பையோ, பிரச்சனைகளையோ பரிமாறிக் கொள்வது குறைந்து வருகிறது. மனம் ஒத்த தம்பதிகளாக நூற்றுக்குப் பத்து பேர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இருவரும் விட்டுக் கொடுத்து வாழ மனமில்லாமல் தங்களில் யார் பெரியவர் என்ற மனநிலையிலேயே காலத்தை கழித்து விடுகின்றனர். காலப்போக்கில் கணவன், மனைவி இருவருமே குழந்தைகளுக்காக மட்டுமே வாழ்கிறோம் என்ற சூழ்நிலை உருவாகி விடுகிறது. ஆனால் அப்படி இல்லாமல் வாழும் காலம் வரை கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் மட்டுமே வாழ வேண்டும். இப்படி இல்லறத்தை நடத்துபவர்களும், இல்லற வாழ்க்கையில் ஈடுபடப் போகின்றவர்களும் கீழே உள்ள சிறுகதையைப் படித்து இல்லறத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சுமனை என்பவள் உத்தமமான பதிவிரதை. கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழ்ந்தவள். இவள் திடீரென மரணம் எய்ததும், சொர்க்க லோகத்துக்குச் செல்கிறாள். நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அப்போது அங்கே சாண்டல்யன் என்பவன் எப்படியம்மா உனக்கு இப்படி ஒரு வரவேற்பு? ஏதேனும் சந்நியாச வாழ்க்கை வாழ்ந்து, உயர்ந்த நெறிகளைக் கடைப்பிடித்தாயா? என்று கேட்கிறான். அதற்கு சுமனை, சந்நியாச வாழ்க்கை எல்லாம் வாழவில்லை. பெண்களுக்கே உரிய தர்மப்படி என் கணவரைப் போற்றி வாழ்ந்தேன். அவருக்கு உரிய கடமைகளை நான் முறையாகச் செய்தேன். அவ்வளவுதான் என்றாள். வியந்தான் சாண்டல்யன். அப்படி, என்ன, எவரும் செய்யாததை நீ உன் கணவனுக்குச் செய்தாய்? என்று எதிர் கேள்வி கேட்டான். என் கணவர் மனம் வருந்தும்படி எந்த நாளும் ஒரு செய்கையை நான் செய்ததில்லை. எப்போதும் கனிவான வார்த்தைகளையே பேசி வந்தேன். கணவருக்கு எந்த ஒரு தொந்தரவையும் தர மாட்டேன். என் கணவருக்குப் பிடித்ததை மட்டுமே சமைப்பேன். பணி நிமித்தம் கணவர் வெளியே எங்காவது சென்றிருந்தால், அவர் திரும்பி வரும்வரை தெய்வ வழிபாட்டில் இருப்பேன்.

அசதியின் காரணமாக அவர் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும்போது எத்தகைய முக்கியமான செய்தி என்றாலும், அவரை எழுப்பவே மாட்டேன். இதை வாங்கிக் கொடுங்கள்... அதை வாங்கிக் கொடுங்கள் என்று அவரை நச்சரிக்க மாட்டேன். எனக்குப் பணம் தாருங்கள் என்று அவரிடம் எந்த நாளும் நான் கேட்டதே இல்லை. அவர் ஊரில் இல்லை என்றால், நான் என்னை அலங்கரித்துக் கொள்ள மாட்டேன். என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போக... சாண்டல்யன் அதிசயித்தான். அவளை வணங்கினான். இதைப் படிக்கும் கணவன்மார்களுக்கு, தங்களது மனைவியும் இப்படி இருந்தால் எத்தனை சுகமாக இருக்கும் என்கிற ஏக்கம் வருவது இயற்கை! உண்மை ! எதிர்பார்ப்பு ! ஆனால், பதிவிரதா தர்மத்தில் இருந்து சுமனை இம்மியும் நழுவாமல் இருந்ததற்கு, உத்தமமான அந்தக் கணவனும் ஒரு காரணம் என்பது உண்மை. இல்லறம் என்பது கணவனும் மனைவியும் இணைந்து நடத்துகிற நல்லறம் ! அதில் கண்ணீரும், கவலையும் கலந்து விடாமல் இருக்க வேண்டும் ! கணவனும் மனைவியும் ஒருவர் மீது மற்றொருவர் செலுத்துகிற அன்பே, இந்த இல்லறத்தின் மூலதனம் ! இதயம் மட்டும் உறுதி கொண்டதாக அமைந்து விட்டால், ஒரு சுண்டெலிகூட யானையைத் தாக்கி விடும் என்பது மேலைநாட்டுப் பழமொழி. உங்கள் இதயங்களை உறுதி கொண்டதாக ஆக்குங்கள். இல்லறம் நல்லறமாக மாறும்.
சிவ பூஜையில் கரடி என்றால் என்ன?

பூஜை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவ பூஜையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது, கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூஜையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.
மனிதனுக்கு உண்மை தேவை அறிவியலா? ஆன்மிகமா?

படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர்.செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவான உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.

வெய்யில் சுட்டெரிக்கும் போது உடல் எங்கும் வியர்த்து கொட்டுகிறது. வேலைகள் செய்ய முடியாத அளவுக்கு சோர்வாகயிருக்கிறது. ஆன்மிகத்தால் வியர்வையை போக்கும் ஒரு விசிறி மட்டை கூட செய்து தர முடியவில்லை. மார்கழி மாத கடுங்குளிரில் நடுங்கும் போது விஞ்ஞான கண்டுபிடுப்பான கம்பளி போர்வை தான் காப்பாற்றுகிறது,காலராவை ஒழித்தது விஞ்ஞானம்.  கால் கடுக்க
நடந்தவனுக்கு கார்களை தந்தது விஞ்ஞானம். கண்டம் விட்டு கண்டம் தாவும் ஆயுதங்களை படைத்தது விஞ்ஞானம். இத்தனையும் தந்த விஞ்ஞானம், இதை போற்றுவதை விட்டுவிட்டு ஆலகால விஷம் உண்ட ஆண்டவா போற்றி என பாடுவது எந்த வகையில் நியாயமாகும்? என்று கேட்கலாம். அறிவு கலப்பையை அகலமாக உழுவதை விட ஆழமாக உழுதால் இந்த கேள்விக்கு எல்லாம் நல்ல பதில் கிடைக்கும். வெப்பத்தில் வியர்க்கிறது.  வியர்வையினால் உடம்பில் உள்ளிருக்கும் கழிவு பொருள் எல்லாம் வெளியேறுகிறது. காற்றாடி கொண்டு வீசினால் சுகமாக இருக்கும்.  ஆனால் நாளடைவில் கழிவுகள் உடம்பில் தங்கி நோய்களாக வெளிவரும்.

குளிரால் நடுங்கும் போது தசைகள் துடித்து முறுக்கேறுகிறது.  நரம்புகள் தாங்கும் திறனை அதிகரித்து கொள்கிறது. கம்பளி குளிரை தடுக்கலாம்.  நோயை தடுக்காது. எப்படி பார்த்தாலும் விஞ்ஞானம் தருகின்ற கருவிகள் எல்லாம் மனிதர்களுக்கு தற்கால சுகத்தை கொடுத்து நெடுங்கால கஷ்டத்தை தருவதேயாகும். ஆன்மிகம் துயரத்திலிருந்து தப்பிக்க வழி சொல்லாது.  அந்த துயரத்தோடு மோதி ஜெயிப்பதற்கு தான் வழிகாட்டும். நிரந்தரமான சந்தோஷமே ஆன்மிகத்தின் இறுதி நோக்கம். நாம் நினைப்பது போல விஞ்ஞானம் சுகமான வாழ்க்கையை நமக்கு தரலாம் ஆனால் மனித சமுதாயம் இன்று அனுபவித்து கொண்டிருக்கும் கஷ்டங்களுக்கும் அதுவே ஒரு வகையில் காரணமாக இருக்கிறது. அதற்காக விஞ்ஞானம் என்பதும் அறிவு தேடல் என்பதும் வேண்டாம் என்பது அர்த்தமல்ல. எல்லாமே விஞ்ஞான பூர்வமாக இருப்பது தான் சரி என்ற மனோபாவம் தவறு என்பதே. சொல்ல போனால் விஞ்ஞானம் என்பதே ஒரு வகை ஆன்மிகம் தான். மக்கள் கஷ்டம் தீர்க்க புறப்பொருளை நாடுவது விஞ்ஞானம்.  அகப்பொருளை தேடுவது மெய் ஞானம் ஆகும். சக்தி தான் சிவம், சிவன் தான் சக்தி.  இரண்டாக தெரிந்தாலும் இரண்டும் ஒன்று தான் என்கிறது ஆன்மிகம். பொருளும் பொருளின் சக்தியும் வேறு வேறானது அல்ல ஒன்று தான் என்கிறது அறிவியல். சொல்லும் முறையில் தான் மாற்றம் இருக்கிறதே தவிர உள் கருத்து என்னவோ ஒன்று தான்.

அறிவியல் மனிதனின் தேவையை பூர்த்தி செய்வதற்காக!
ஆன்மிகம் என்பது என்ன தேவை என்பதை அறிவது அல்ல
தேவையற்றது எது என்பதைப் புரிந்து கொள்வதற்காக!
தமிழ் மாதங்கள் பிறந்தது எப்படி?

தமிழ் மாதம் என்றால் சித்திரை, வைகாசி என ஆரம்பித்து மாசி, பங்குனி என முடிவது நம் அனைவருக்கும் தெரியும். இந்த மாதங்களுக்கு எப்படி பெயர் வந்தது, யார் பெயர் வைத்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக உள்ளதா, இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை படித்தால் மாதங்களுக்கு பெயர்கள் வந்தது எப்படி என்பது உங்களுக்கு சுலபமாகப் புரிந்து விடும். சம்ஸ்கிருத வார்த்தைகளே நாளடைவில் மருவி தமிழ் மாதப்பெயர்களாக அமைந்துள்ளன. பெரும்பாலும் ஒரு மாதத்தில் அமாவாசையும், பவுர்ணமியும் மாறி மாறி வரும். இதில் பவுர்ணமி அன்று எந்த நட்சத்திரமோ அதுவே அந்த மாதத்தின் பெயராக இருக்கும். அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும் விழாவாகவும் இருக்கும்.

சித்ரா நட்சத்திரத்தன்று தான் சித்திரை மாசத்தில் பவுர்ணமி வரும் .அதனால் சித்திரை மாதம் என்றானது.

விசாக சம்மந்தமானது வைசாகம். விசாக நட்சத்திரத்தில் பெரும்பாலும் பவுர்ணமி ஏற்படுகிற மாதம் தான் வைசாகி. மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.

அனுஷ நட்சத்திர சம்மந்தமானது ஆனுஷீ. அந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி ஏற்படுகிற மாதம் ஆனுஷீமாசம். தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.

ஆஷாட நட்சத்திரத்தில் பூர்வ ஆஷாடம், உத்தர ஆஷாடம் என்று இரண்டு உண்டு. இதில் பூர்வம் என்றால் முன், உத்தரம் என்றால் பின். பூர்வ/ உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும், ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் ஆயிற்று. இந்த இரு நட்சத்திரங்களில் ஒன்றில் பவுர்ணமி வரும் மாதம் ஆஷாடி. இதில் ஷா என்ற எழுத்து உதிர்ந்து ஆடி ஆயிற்று.

ச்ராவணம் என்பது ச்ரவண நட்சத்திரத்தை குறிக்கும். முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் மறைந்து, மீதமுள்ள வண த்தை ஓணம் என்கிறோம். அது  மஹாவிஷ்ணுவின் நட்சத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம். அனேகமாக பவுர்ணமி ச்ராவண நட்சத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும். இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச், ர என்ற கூட்டெழுத்து மறைந்து ஆவணி மாதமாயிற்று.

ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று. அஷ்ட என்பது அட்ட என திரிந்தது. உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நட்சத்தில் பவுர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது எப்படியோ திரிந்து புரட்டாசி ஆயிற்று.

ஆச்வயுஜம், அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பவுர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.

க்ருத்திகை நட்சத்திரம் தான் கார்திகை. இந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.

மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று. இதில் பெரும்பாலும் பவுர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று. அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.

புஷ்யம் தான் தமிழில் பூசம். புஷ்ய சம்மந்தமானது பவுஷ்யம். புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர். பவுர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம். அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.

மக நட்சத்திரத்தில் பவுர்ணமி வருவதால் மாகி என்றாயிற்று. இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.

பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம். இந்த இரு நட்சத்திரத்தில் பவுர்ணமி வருவதால் பல்குனி எனப்படும. அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.

சமஸ்கிருதம்                                            தமிழ்

சைத்ர                                                            சித்திரை
வைஸாயுகயு                                            வைகாசி
ஆநுஷி / ஜ்யேஷ்ட                                  ஆனி
ஆஷாட                                                         ஆடி
ஸ்யுராவண​:                                                ஆவணி
ப்ரோஷ்டபதீ /பாத்யூரபதயூ                   புரட்டாசி
ஆஸ்யுவிந​:                                                  ஐப்பசி
கார்திக:​                                                            கார்த்திகை
மார்கயூஸீயுர்ஷ​:                                        மார்கழி
தைஷ்யம்/ பவுஷ​:                                       தை
மாக                                                                    மாசி
பாயுல்குயூந​:                                                   பங்குனி.
வழிபாட்டுக்கு காலை, மாலை எந்த வேளை சிறந்தது?

காலை வேளையே மிகவும் சிறந்தது. உங்களைப் பார்த்து உங்கள் வாரிசுகளும் காலையிலேயே எழும் பழக்கத்தை மேற்கொள்வார்கள். காலை 5.30 மணிக்கு எழுந்து, 6 மணிக்குள் வீடு சுத்தம் செய்து, ஏழு மணிக்குள் நீராடி, 7.30 மணிக்குள் பிரார்த்தனையை முடித்து விடுங்கள். 5 நிமிடம் வணங்கினாலும், குடும்பத்தினர் அனைவரும் இணைந்து வழிபட்டால் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம்.
அணில் கதைக்கு ஆதாரம் எது?

நாம் ஒருவர் செய்யும் பணியில், ஏதோ ஒரு உதவி செய்தாலே போதும்! அந்த சிறு பங்களிப்பை ராமருக்கு அணில் உதவி செய்தது போல என்ற உவமையுடன் குறிப்பிடுவர். உண்மையில், இந்த நிகழ்ச்சி ராமாயணத்தில் இடம் பெற்றதா என்றால் அதுதான் இல்லை. புகழ்பெற்ற வால்மீகி ராமாயணத்திலோ, தமிழில் கம்பராமாயணத்திலோ, இந்தியில் துளசிதாசர் எழுதியதிலோ சேதுபாலம் கட்டும் போது அணில் உதவியதாக தகவல் இல்லை. இது ஒரு கர்ணபரம்பரை கதை. ஆனால், எல்லா மொழி மக்களிடமும் இந்தக்கதை பிரசித்தமாகி விட்டது.  இந்தக் கதை எதில் தான் இருக்கிறது என்றால், திருமாலின் அடியவர்களான ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய திருமாலை 27வது பாசுரத்தில் இடம்பெற்றுள்ளது. அணில் பற்றிய குறிப்பு அதில் வருகிறது. அடியவர்களின் பாதத்தூளியை (தூசு) தலையில் ஏற்றுக் கொண்ட அடியவர் இவர் என்பதால், அணிலையும் பெருமையாகப் பாடிவிட்டார் என்றே தோன்றுகிறது.
விஞ்ஞானம் முடிவடையும் இடத்தில் மெய்ஞ்ஞானம் தொடங்குகிறது என்பது சரியா?

விஞ்ஞானம் ஒரு விஷயத்தை வெளிப்படையாக ஆராய்கிறது. மெய்ஞ்ஞானம் அதே விஷயத்திற்கு உள்முகமாக விளக்கம்தருகிறது. ஒவ்வொரு செயலுக்கும் நேர், எதிர்மறை பலன் உண்டு என்கிறது அறிவியல். (நியூட்டனின் மூன்றாம் விதி) அதையே ஆன்மிகமும், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் எல்லாம் அவரவர் செய்த வினைப்பயன் என்று எச்சரிக்கிறது. விஞ்ஞானமும், மெய்ஞ் ஞானமும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை அல்ல. பாதை வெவ்வேறானாலும், உண்மையை அறிவது தான் இவற்றின் நோக்கம்.
வியாழக்கிழமைகளில் மவுனவிரதம் இருப்பது ஏன்?

மவுனமாக இருந்து பழகினால், மனசாட்சியின் மெல்லிய குரலை நம்மால் கேட்க முடியும் என்பர். மோனம் (மவுனம்) என்பது ஞானவரம்பு என்று அவ்வையார் குறிப்பிடுகிறார். சிவாலயங்களில் கல்லால மரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி சீடர்களுடன் தெற்கு நோக்கி வீற்றிருப்பார். இவர் பேசும் மொழி என்ன தெரியுமா? மவுன மொழி. ஆம்..இவர் பேசுவதில்லை. சைகை மூலம் உலகத்துக்கு பெரும் தத்துவத்தைச் சொல்கிறார். இதனால் தான் இவருக்கு ஊமைத்துரை, மவுனச்சாமி என்ற பெயர்கள் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பிக்கு ஊமைத்துரை என்று தான் பெயர். மவுனமாக இருப்பது வழிபாட்டு வகைகளில் ஒன்றாகும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை தியானித்து மவுனவிரதம் மேற்கொள்வது இதனால் தான். பெரும்பாலான துறவிகள் வியாழக்கிழமைகளில் பேசுவதில்லை. மவுனத்தில் மூன்று வகை உண்டு. அவை உடல் மவுனம், வாக்கு மவுனம், மன மவுனம் என்பன. உடலைச் சிறிதும் அசைக்காமல் கட்டைபோல இருப்பது உடல் மவுனம். இவர்கள் பத்மாசனத்தில் அமர்ந்து சின்முத்திரை காட்டி தியானத்தில் ஆழ்ந்திருப்பர். வாக்குமனம் என்பது பேசாமல் அமைதி காப்பதாகும். மனதாலும் மவுனமாக இருப்பதே மன மவுனம். இந்த மவுனங்களை கடைபிடிப்பவர்கள் ஞானநிலை எய்துவதுடன், கடவுளோடு பேசி உறவாடும் சக்தியையும் பெறுகிறார்கள்.
புது மணப்பெண்ணை தானியத்தை உதைத்து வீட்டிற்குள் வரவழைப்பது ஏன்?

வீட்டிற்கு வரும் புது மணப்பெண்ணை மகாலட்சுமியாகப் பார்க்கிறார்கள். அந்தக் காலத்தில் மருமகள் என்று எதற்கு சொன்னார்கள் என்றால், மகாலட்சுமியே வீட்டிற்கு வந்து வாசம் செய்கிறாள், இன்று முதல் மகாலட்சுமி குடிபுகுகிறாள் என்று சொல்லக்கூடிய வழக்கம் இருந்தது. இன்றைக்கும் சில ஊர்களில் திருமணம் முடிந்து நேராக மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்து அங்கு விளக்கேற்றச் சொல்வார்கள். புதுப்பெண்ணிற்கு ஒரு காமாட்சி அம்மன் விளக்கு கொடுத்து அதனை ஏற்றச் சொல்வார்கள். அவர்கள் நுழையும் போது லட்சுமியோடு உள்ளே வருகிறார்கள் என்று அர்த்தம். தானியங்கள் தான் குறிப்பாக லட்சுமியினுடைய அம்சம். அதன்பிறகுதான் வெள்ளி, தங்கம் எல்லாம். அந்தத் தானியத்திலும் முனைமழியாத பச்சரிசி, நெல் முதலியவற்றில் லட்சுமி முழுமையாக வாசம் செய்வதாக ஐதீகம். அதனால்தான் அதுபோன்று காலால் உதைக்கச் சொல்கிறார்கள். அதை அவர்கள் உதைக்கவில்லை, லட்சுமியே உதைத்து உள்ளே கொண்டு வருகிறாள். அந்தப் பெண் காலடி வைக்கும் நேரத்தில் இருந்து லட்சுமி கடாட்சம் சூழ்ந்து வருவது போன்று. அதனால்தான் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்வது என்பது ஐதீகம். ஏற்கனவே அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மண மேடையில் அவர்கள் ஒரு புனித நிலையை அடைகிறார்கள். நாம் வைத்திருக்கும் சம்பிரதாயங்கள், சடங்குகளில் ஒரு பெண் புனித நிலையை அடைகிறார்கள். அந்த நேரத்தில் அவளுடைய மனநிலை ஒரு தெய்வ நிலையில் இருக்கிறது. அந்த நேரத்தில் அவளுக்கு கூடுதல் சக்தி கிடைப்பதாக ஐதீகம். அதனால்தான் அந்தப் பெண்ணை மகாலட்சுமியாக கருத்தில் கொண்டு தானியத்தை உதைத்து வீட்டிற்குள் லட்சுமி கடாட்சத்தை வரவழைப்பதாக ஐதீகம்.
எமகண்டம் மற்றும் குளிகை நேரத்தை எளிதாக கண்டுபிடிக்கும் வழிமுறை என்ன?

எமகண்டம்: சூரிய உதயமான காலை 6 மணியிலிருந்து தான் நல்லநேரம், ராகு, குளிகை, எமகண்டம் போன்றவை கணக்கிடப்படும். அதன்படி காலை 6 -7.30 மணிக்கு வியாழக்கிழமையில் எமகண்டம் ஆரம்பிக்கிறது. இதை கணக்கில் வைத்துக்கொண்டு கீழே கொடுத்துள்ள படி இந்த நேரத்துடன் ஒன்றரை மணி நேரத்தை கூட்டிக்கொண்டும், கிழமையை குறைத்துக்கொண்டும் வந்தால் அடுத்தடுத்த கிழமைக்கான  எமகண்ட நேரம் வந்து விடும்.

வியாழக்கிழமை எமகண்ட நேரம் - 6.00 - 7.30
புதன்கிழமை எமகண்ட நேரம் -     7.30 - 9.00
செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரம் - 9.00-10.30
திங்கள்கிழமை எமகண்ட நேரம் - 10.30-12.00
ஞாயிற்றுக்கிழமை எமகண்ட நேரம் - 12.00-1.30
சனிக்கிழமை எமகண்ட நேரம் - 1.30-3.00
வெள்ளிக்கிழமை எமகண்ட நேரம் - 3.00-4.30.

குளிகை: காலை 6 -7.30 மணிக்கு சனிக்கிழமையில் குளிகை நேரம் ஆரம்பிக்கிறது. இதை கணக்கில் வைத்துக்கொண்டு கீழே கொடுத்துள்ள படி இந்த நேரத்துடன் ஒன்றரை மணி நேரத்தை கூட்டிக்கொண்டும், கிழமையை குறைத்துக்கொண்டும் வந்தால் அடுத்தடுத்த கிழமைக்கான  குளிகை நேரம் வந்து விடும்.

சனிக்கிழமை குளிகை நேரம் - 6.00 - 7.30
வெள்ளிக்கிழமை குளிகை நேரம் - 7.30 - 9.00
வியாழக்கிழமை குளிகை நேரம் - 9.00-10.30
புதன் கிழமை குளிகை நேரம் - 10.30-12.00
செவ்வாய்க்கிழமை குளிகை நேரம் - 12.00-1.30
திங்கள் கிழமை குளிகை நேரம் - 1.30-3.00
ஞாயிற்றுக்கிழமை குளிகை நேரம் - 3.00-4.30.
தங்கம் கனவில் வரலாமா?

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு பவுன் பத்து ரூபாய் இருந்தது ஒரு காலம். இப்போழுது இருபது ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டது. அந்த தங்கம் கனவில் வந்தால் நோய்கள் உருவாகும், கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழிலுக்கு செய்த முதலீடுகளில் பிரச்சனைகள் உருவாகலாம், ஆனால் தஙகத்தேர் கனவில் வந்தால் காரிய வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை.
நெல்லிக்காயின் மகத்துவம் தெரியுமா?

நெல்லியில் மகாவிஷ்ணு நித்யவாசம் செய்கிறார். எனவே நெல்லியமுதம் அவருக்கு மிகவும் பிடித்தமானது. ஏகாதசியில் நெல்லி மேல் பட்ட நீரில் நீராட, துவாதசியில் நெல்லி உண்பவன் கங்கையில் நீராடிய பயனும், காசியை பூஜித்த பலனையும் பெறுகின்றான். சூரியன் தவிர மற்றோரை நெல்லியால் பூஜிக்கலாம் அமாவாசையன்று நெல்லியை பயன்படுத்துதல் கூடாது. கோயில் கோபுரம் கலசங்களில் நெல்லியையும் போடுவர். மேலும் விமான உச்சிக் கலசத்தின் கீழாக நெல்லிக்கனி வடிவத்தில் ஒரு கல்லை செதுக்கி வைப்பார் இதற்கு ஆமலகம் என்று பெயர்.

ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது. கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகி விடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும்,இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். இரவில் நெல்லிக்காய் சாப்பிட கூடாது. சாப்பிட்டால் புத்தி, வீர்யம், தேஜஸ் குறைந்து விடும்.
கடவுளுக்கு உருவம் உண்டா?

ஒரு சமயம் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த ஒரு பக்தர், கடவுளுக்கு உருவம் உண்டா? என்று கேட்டார். அதற்கு ராமகிருஷ்ணர், இறைவன் உருவம் உடையவர், உருவம் அற்றவர்-இந்த இரண்டும் அவரே! அதாவது பனிக்கட்டியையும், தண்ணீரையும் போல என்று பதில் கூறினார். இறைவன் என்பவன் முடிவில்லாமல் பரந்து கிடக்கும் மகா சமுத்திரத்தைப் போன்றவன். சமுத்திரம் அதீத குளிர்ச்சியின் காரணமாக சில இடங்களில் உறைந்திருக்கும். அவ்விதம் உறைந்த பனிக் கட்டிகள் பலவித வடிவங்களில் இருக்கும். ஆனால் சிறிது வெப்பம் அதிகரித்ததும் பனி உருகி நீரோடு நீராகக் கலந்து விடும். பனிக்கட்டியும் நீரும் ஒரே சமுத்திரத்தைச் சேர்ந்தவைதான். இறைவனும் அப்படித்தான். பக்தியின் குளிர்ச்சியால் அவன் பக்தர்களுக்கு தகுந்தாற்போல பலவேறு வடிவங்களில் தோன்றுகிறான். ஞானம் என்ற வெம்மை செயல்பட ஆரம்பித்ததும், அவனும் வடிவமற்றவானாகி விடுகிறான். இவ்வாறாக, சாதாரண பக்தனுக்கு வடிவம் தேவைப்படுகிறது. ஆனால் அனைத்தும் அறிந்த ஞானிக்கு வடிவம் தேவைப்படுவதில்லை.
தியானம் செய்வதால் என்ன நன்மை?

தியானம் செய்வதனால் உடலில் ஏற்படுகின்ற  கோபம், ஆணவம், பிடிவாதம், பற்றின்மை, அமைதியின்மை போன்றவை விலகி நம்மை நிம்மதிபடுத்துகின்றன. மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு தியானம் முக்கிய பங்கு வகிக்கிறது. உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம். வட திசையும், கிழக்கு திசையும் சிவனாகவே கருதப்படுவதால், இத்திசைகள் சிறப்பானவை. எனவே கிழக்கு, வடக்கு என இரு திசைகளைப் பார்த்தே தியானம் செய்ய வேண்டும். வடதிசையில் வீசும் காந்தக் கதிர்கள் மூளையை பாதிப்படைய செய்யும் என்பதால், அத்திசையில் தலை வைத்து தூங்கவோ, உணவு உண்ணவோ கூடாது.

தியானம் செய்தால் நாம் பல நன்மைகளை அடைகின்றோம். ஞாபக சக்தி, புத்தி கூர்மை அதிகரித்து, மன உளைச்சல், மன அழுத்தம் நீங்குகிறது, அலைபாயும் மனம் அமைதியடைகிறது, சிந்தனை ஆற்றலும், ஞாபக சக்தியும் கூடுகிறது,நோய் இன்றி பெரு வாழ்வு கிடைக்கிறது, மூச்சு விடும் விகிதம் குறைகிறது. ஆதலால் ஆயுள் நீடிக்கிறது,உடம்பில் இருக்கும் நோய்கள் குறைகிறது. பொறுமை, விடாமுயற்சி தான் தியானத்தில் வெற்றி பெற ஒரே வழி.
ஐப்பசி மாத ராசிபலனும் பரிகாரமும்!

மேஷம்

எச்செயலையும் ஆர்வமுடன் செய்து வெற்றிபெறும் மேஷராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் இந்த மாதம் ராசிக்கு 4, 5ம் இடங்களில் பிரவேசிக்கிறார். இந்த நிலை சில எதிர்மறை பலன்களை உருவாக்கும். சனி, சுக்கிரன், புதன் அனுகூலமாக செயல்படுகின்றனர். உங்களிடம் வில்லங்கமாகப் பேசுபவர்கள், செயல்படுபவர்களிடம் விலகிப்போவது நல்லது. எதிர்நீச்சலடிக்கும் மாதம். வெகுநாள் தடைபட்ட செயல் அதிர்ஷ்ட வசமாக நிறைவேறும். கூடுதல் பணவரவு கிடைப்பதற்கான வழி உருவாகும். பூர்வசொத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். புத்திர வகையில் சுபநிகழ்ச்சி நிறைவேறும்.  உடல்நலம் சுமார். வீடு, வாகனத்தில் தகுந்த பராமரிப்பு, பாதுகாப்பு நடைமுறை அவசியம். கடனை ஓரளவு அடைப்பீர்கள். தம்பதியர் கருத்து ஒற்றுமையுடன் நடந்து குடும்ப நன்மையைப் பேணுவர். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்வது நல்லது. தொழிலதிபர்கள், உற்பத்தியை உயர்த்தி கூடுதல் ஒப்பந்தம் பெறுவர். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளைச் செய்து லாபமடைவர். பணியாளர்கள் நிலுவைப்பணிகளை நிறைவேற்றி நிர்வாகத்திடம் நற்பெயரும், சலுகையும் பெறுவர். பணிபுரியும் பெண்கள் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி, பணி நடைமுறையை எளிதாக்குவர். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து நடப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து ஆதாய பணவரவு காண்பர். அரசியல்வாதிகள் கடந்தகால சமூகப்பணிக்கு உரிய பலனை பெறுவர். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். விவசாயிகள் மகசூல் சிறந்து கணிசமான பணவரவு பெறுவர். மாணவர்கள் கவனமாகப் படிப்பதால் மட்டுமே எதிர்பார்க்கும் மதிப்பெண் கிடைக்கும்.

உஷார் நாள்: 28.10.11 பகல் 2.14 முதல் 30.10.11 மாலை 5.33 மணி வரை வெற்றி நாள்: அக்டோபர் 18, 19 நிறம்: ரோஸ், ஆரஞ்ச்               எண்: 1, 9
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் தொழில் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும்.

ரிஷபம்

நடை, உடை, பாவனையில் மாற்றத்தை விரும்பும் ரிஷபராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சூரியன் அமர்ந்து மிகுந்த நற்பலன்களை தரும் வகையிலும், ராசிநாதன் சுக்கிரன், புதன், ராகுவுடன் சப்தம
ஸ்தானத்தில் கெடுபலன் தரும் குணத்துடனும் உள்ளனர். அக்கம் பக்கத்தவருடன் நல்அன்பு பாராட்டி அன்பு, நட்பு பெறுவீர்கள். பணவரவுக்கேற்ப சிக்கனமாக இருப்பது நல்லது. வீடு, வாகன வகையில் விரும்பிய வளர்ச்சி மாற்றங்களை செய்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்கள் உதவிகரமாகச் செயல்படுவர். புத்திரர்கள் பிடிவாத குணங்களை சரிசெய்ய கூடுதல் பொறுமை தேவைப்படும்.உடல்நலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களை தவிர்ப்பது நல்லது. வழக்கு, விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இடையே தேவையற்ற சண்டையால் கருத்து வேறுபாடு ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பதால் சிரமம் குறையும். தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றுவர். கூடுதல் உற்பத்தி, தாராள பணவரவு கிடைக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நற்பெயர் பெற புதிய திட்டம் செயல்படுத்துவர். விற்பனை சிறந்து பணவரவு கூடும். பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பு கிடைத்து தாராள பணவரவில் குடும்பத்தேவையை நிறைவேற்றுவர். பணிபுரியும் பெண்கள் குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றி நன்மதிப்பு பெறுவர். சலுகைகள் கிடைக்கும். குடும்ப பெண்கள் சுய கவுரவ சிந்தனையை பின்பற்றி எதிர் விளைவுகளால் மனக்கஷ்டம் அடைவர். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் அரசு தொடர்புடைய உதவி கிடைக்கப்பெறுவர். அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் உண்டு. மாணவர்கள் லட்சியத்துடன் படித்து சிறந்த தேர்ச்சி அடைவர்.

உஷார் நாள்: 30.10.11 மாலை 5.34 முதல் 1.11.11 இரவு 10.34 மணி வரை
வெற்றி நாள்: அக்டோபர் 20, 21 நிறம்: வெள்ளை, மஞ்சள் எண்: 3, 6
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் சகல வளமும் பெறலாம்.

மிதுனம்

திட்டமிட்ட பின் எக்காரணம் கொண்டும் பின்வாங்காத மிதுனராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் ஆறாம் இடத்தில் அனுகூல பலன் தருகிற ராகுவுடன் உள்ளார். குருபகவானும் உங்கள் வாழ்வு வளம்பெற தேவையான முக்கிய செயல்களை நிறைவேற்றுவார். எவரிடத்தும் அளவுடன் பேசுவது நல்லது. செவ்வாய் மாத முற்பகுதியில் சிரமத்தையும் பிற்பகுதியில் மனம் மகிழும் வகையில் நற்பலனும் தருவார். இளைய சகோதரர்களால் நன்மை இல்லை. நம்பகத்தன்மை குறைந்தவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது. அறிமுகம் இல்லாதவர்களுக்கு வாகனத்தில் லிப்ட் கொடுக்காதீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். வழக்கு, விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும். தம்பதியர் கருத்துவேற்றுமை சூழ்நிலைகளை எதிர்கொள்வர். நண்பர்களின் செயல் மற்றும் கருத்துக்களை விமர்சிக்க வேண்டாம். தொழிலதிபர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு நிர்வாக நடைமுறைகளை சீர்படுத்துவர். புதிய ஒப்பந்தம், தாராள பணவரவு கிடைக்கும். வியாபாரிகள் கூடுதல் சரக்கு கொள்முதல் செய்து மனதிருப்தி அடைவர். விற்பனை அதிகரித்து லாபவிகிதம் கூடும். பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு நன்மதிப்பு, சலுகைகள் பெறுவர். பணிபுரியும் பெண்கள் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவர், உறவினர்களிடம் மனக்கிலேசம் வளரும் அளவிற்கு பேசுவது கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் சந்தைப்போட்டி குறைந்து கூடுதல் உற்பத்தி, விற்பனை இலக்கை அடைவர். ஆதாய பணவரவு சேமிப்பாகும். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவர். சமூகத்தில் மதிப்பு உயரும். விவசாயிகளுக்கு சராசரி மகசூல்கிடைக்கும். மாணவர்கள் நன்கு படிப்பர்.

உஷார் நாள்: 1.11.11 இரவு 10.35 முதல் 4.11.11 காலை 5.54 மணி வரை
வெற்றி நாள்: அக்.,22, நவ.,8 நிறம்: சிமென்ட், நீலம் எண்: 4, 8
பரிகாரம்: துர்க்கையை வழிபடுவதால் செயல் வெற்றியும் எதிர்பார்த்த பணவரவும் உண்டு.

கடகம்

கருணை மனதுடன் பிறருக்கு உதவுகின்ற கடகராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சந்திரன் மாத துவக்கத்தில் திருவாதிரை நட்சத்திர சாரத்தில் தனது பிரவேசத்தை துவக்குகிறார். நற்பலன் தரும் கிரகங்களாக சனி, சுக்கிரன், கேது செயல்படுகின்றன. மனதில் உருவாகிற அர்த்தமற்ற குழப்பங்களை உங்கள் நலன் விரும்பும் நண்பர்களின் ஆலோசனையால் சரிசெய்வீர்கள். அவசியமான விஷயங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தருவது நல்லது. இளைய சகோதரர்கள் உறுதுணையாக நடந்து கொள்வர். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும். புத்திரர்கள் நற்குணங்களை பின்பற்றி குடும்பத்திற்கு பெருமை தேடித்தருவர். நன்றாகப் படிக்கவும் செய்வர். உடல்நலத்திற்கு தகுந்த சிகிச்சை தேவைப்படும். கணவன் மனைவி குடும்ப சூழ்நிலையை உணர்ந்து முன்னேற்றம் தரும் செயல்களை மேற்கொள்வர். வெளியூர் பயணம் நன்மை தருகிற புதிய அனுபவங்களை ஏற்படுத்தும். தொழிலதிபர்கள் சீரான உற்பத்தியும் நிர்வாக நடைமுறையில் கூடுதல் செலவும் காண்பர் வியாபாரிகள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பு, கவனத்தினால் சராசரி விற்பனை இலக்கை அடைவர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் திறமையுடன் பணி செய்து வருமானத்தை அதிகரிக்கும் வழிவகைகளை ஏற்படுத்திக் கொள்வர். பணிபுரியும் பெண்கள் பணியில் உள்ள குறைபாடுகளை ஆர்வமுடன் சரிசெய்வர். சலுகைகளும் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரிடம் அன்புடன் நடந்து நற்பெயர் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய சந்தை வாய்ப்புக்களை பயன்படுத்தி விற்பனையை உயர்த்துவர். லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களின் செயல்குறையை விமர்சிக்கக் கூடாது. விவசாயிகளுக்கு அளவான மகசூல், கால்நடை வளர்ப்பில் கூடுதல் பணவரவு கிடைக்கும். மாணவர்கள் சிறப்பாகப் படித்து  தரத்தேர்ச்சி பெற்று, பரிசு, பாராட்டு பெறுவர்.

உஷார் நாள்: 4.11.11 அதிகாலை 5.55 முதல் 6.11.11 பகல் 3.38 மணி வரை வெற்றி நாள்: அக்டோபர் 24, 25 நிறம்: சிவப்பு, நீலம் எண்: 3, 4
பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதால் வாழ்வு வளம்பெற வழி பிறக்கும்.

சிம்மம்

எண்ணத்திலும் செயலிலும் உறுதி நிறைந்த சிம்மராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சூரியன் மூன்றாம் இடத்தில் நீச்சம் பெற்று குருவின் பார்வை பலத்தை பெற்றுள்ளார். அனுகூல பலன் தரும் கிரகங்களாக புதன், குரு, சுக்கிரன், சூரியன் செயல்படுவர். அளவுடன் பேசி நற்பெயர் பெறுவீர்கள். இளைய சகோதரர்கள் வாழ்வில் உயர்ந்து உங்களுக்கும் உதவிபுரிவர். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புத்திரர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். பூர்வசொத்தில் கூடுதல் பணவரவும் புதிய சொத்து வாங்குவதுமான நன்னிலை இருக்கும். உடல்நலம் சீராகும். கடன் பாக்கிகளை அடைப்பீர்கள். தம்பதியர் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் நடந்து குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பர். உங்கள் திறமை வெளிப்பட நண்பர்கள் உதவுவர். திட்டமிட்ட சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். தொழிலதிபர்கள் குளறுபடிகளை சரிசெய்து உற்பத்தியை உயர்த்துவர். கூடுதல் ஒப்பந்தம், தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு அதிக வருமானம் பெறுவர். உபரி பணவரவில் குடும்பத்தேவைகள் நல்லபடியாக நிறைவேறும். வியாபாரிகள் கூடுதல் சரக்கு கொள்முதல் செய்வர். வாடிக்கையாளர் நன்மதிப்பில் விற்பனை உயரும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றுவர். பணி இலக்கு நிறைவேறி சலுகைப்பயன் பெற்றுத்தரும். குடும்பப் பெண்கள் உற்சாக மனதுடன் செயல்படுவர். குடும்பத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான நன்மை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். விற்பனை சிறந்து லாபவிகிதம் கூடும். அரசியல்வாதிகள், ஆதரவாளர்களிடம் நன்மதிப்பு பெறுவர். புதிய பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து கால்நடை வளர்ப்பிலும் கூடுதல் லாபம் வரும். மாணவர்கள் ஆர்வமுடன் படித்து சிறந்த தேர்ச்சி பெறுவர்.

உஷார் நாள்: 6.11.11 பிற்பகல் 3.39 முதல் 9.11.11 காலை 3.01 மணி வரை வெற்றி நாள்: அக்டோபர் 26, 27 நிறம்: வயலட், சிவப்பு எண்: 1, 7
பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் தொழில் வளர்ச்சியும் குடும்பத்தில் மங்கலமும் உண்டாகும்.

கன்னி

எவருக்கும் உரிய மரியாதை தருகிற கன்னிராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் ராசிக்கு மூன்றாம் இடத்தில் உள்ளார். சுக்கிரன், ராகு இந்த மாதம் அளப்பரிய நற்பலன்களை வழங்குவர். செவ்வாய் மாத முற்பகுதியில் தாராள பணவரவு தந்து மாத பிற்பகுதியில் சுபசெலவுகளை உருவாக்குவார். செயல்பாட்டு திறனை வளர்த்துக் கொள்வதால் துவங்குகிற காரியம்  எளிதாக நிறைவேறும்.  வீடு, வாகனத்தில் கிடைக்கிற வசதியை குறைவாக பயன்படுத்துவது போதுமானதாகும். குடும்பத்தேவை நிறைவேறும். புத்திரர்கள் இதமாக பேசி தாங்கள் விரும்பியதை கேட்டுப்பெறுவர். அரசு தொடர்பானவர்களிடம் கடினப்போக்கை பின்பற்றக்கூடாது. கணவன், மனைவி தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து செயல் படுவர். குடும்பத்தில மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நண்பரின் அன்பு, உதவி கிடைத்து மனம் நெகிழ்வீர்கள். தொழிலதிபர்கள் நிர்வாக நடைமுறைத் தேவைகளை நிறைவேற்ற அக்கறை கொள்வர். உற்பத்தி சீராகும்.வியாபாரிகளுக்கு விற்பனை அதிகமாகி, தாராள லாபம் பெறுவர். பணியாளர்கள் புதிய யுக்திகளைப் பின்பற்றி பணி இலக்கை நிறைவேற்றுவர். சம்பளம் கூடும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணியை முழுமனதுடன் நிறைவேற்றுவர். சலுகைப்பயன் ஓரளவு கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவர் வழி உறவினர்களிடம் நன்மதிப்பு பெறும் வகையில் செயல்படுவர். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் விற்பனை அதிகமாகப் பெறுவர். பணவரவு சீராக இருக்கும். அரசியல்வாதிகள் புகழ், அந்தஸ்தை தக்கவைக்க அதிக செலவு செய்வர். விவசாயிகளுக்கு சராசரி மகசூல் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் தேர்ச்சிபெற கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

உஷார் நாள்: 9.11.11 அதிகாலை 3.02 முதல் 11.11.11 பிற்பகல் 2.32 மணி வரை
வெற்றி நாள்: அக்டோபர் 28, 30 நிறம்: மஞ்சள், ரோஸ் எண்: 3, 9
பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் வாழ்வில் சிரமம் குறைந்து நன்மை ஏற்படும்.

துலாம்

மற்றவர்களின் உணர்வுக்கும் மதிப்பளிக்கும் துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இரண்டாம் இடத்தில் அமர்ந்து நல்ல பலன் தரும் வகையில் உள்ளார். குருவின் பார்வை ராசிக்கு உள்ளது. செவ்வாயின் 10, 11ம் இட அமர்வு மாத முற்பகுதியில் பெரும் செலவையும், பிற்பகுதியில் சேமிப்பையும் ஏற்படுத்தும். உங்களை அவமானப்படுத்துகிற நோக்கில் செயல்படுபவர்களிடம் விலகி இருப்பது நல்லது. புதிய திட்டங்கள் பின்வரும்நாட்களில்நிறைவேற்றலாம். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி தேவைப்படும். பூர்வ சொத்தில் அளவான பணவரவு கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலம் உண்டு. உடல்நலம் சீராக இருக்க சத்தான உணவு, தகுந்த ஓய்வு அவசியம். தம்பதியர் குடும்பநலனைக் கவனத்தில் கொண்டு பொறுமையுடன் செயல்படுவர். நண்பர்களிடம் தகுதிக்கு மீறிய எந்த உதவியும் கேட்கக்கூடாது. தொழிலதிபர்கள் புதிய குறுக்கீடுகளை சமாளித்து உற்பத்தி இலக்கை எட்டுவர். பணவரவு சீராகும். வியாபாரிகள் கடும் முயற்சியின் பேரிலேயே விற்பனையை உயர்த்த முடியும். பெரிய அளவு வருமானம் இருக்காது. பணியாளர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உட்படுவர்.  பணிபுரியும் பெண்கள் புதிய நடைமுறைகளைப் பின்பற்றி வேலையிலுள்ள குளறுபடிகளைச் சரிசெய்வர். வழக்கமான வருமானம் இருக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை திட்டமிடுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி வளரும். சுயதொழில் புரியும் பெண்கள் கடும் உழைப்பால் உற்பத்தியை சீராக்குவர். புதிய ஆர்டர் கிடைத்து பணவரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் அரசு தொடர்பான செயல்பாடுகளை நிறைவேற்ற நிதான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். விவசாயிகளுக்கு சராசரி மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் லாபம் உண்டு. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். பரிசு, பாராட்டு கிடைக்கும்.

உஷார் நாள்: 11.11.11 பகல் 2.33 முதல் 13.11.11 நள்ளிரவு 12.37 மணி வரை
வெற்றிநாள்: அக்டோபர் 31, நவம்பர் 1 நிறம்: சிமென்ட், சிவப்பு எண்: 1, 4
பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் நன்மை அதிகரிக்கும்.

விருச்சிகம்

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உயரும் விருச்சிகராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 9, 10 இடங்களில் அனுகூலக் குறைவாக பிரவேசிக்கிறார். சுக்கிரன், சனி நல்ல பலன்களை வழங்குவதில் முன்னுரிமை தருவர். தெய்வ வழிபாடு, சுற்றுலா பயணங்களில் ஆர்வம் வளரும். இளைய சகோதரரின் உதவி கிடைக்கும். உறவினர்கள் மீதான அதிருப்தி வளரும். தாயின் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். புத்திரர்கள் சிறு அளவிலான உடல்நலக்குறைவுக்கு உட்படுவர். சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் தருவது, கடன் வாங்குவது ஆகியவற்றைத் தவிர்க்கவும். எதிரிகள் சிரமம் தர முயற்சிப்பர். கவனம். கணவன், மனைவி குடும்ப சூழ்நிலையை கவனத்தில் கொண்டு தியாக மனதுடன் நடந்துகொள்வர். நண்பர்கள் நல்ல ஆலோசனை, தேவையான உதவிகளை முன்வந்து வழங்குவர். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்லக்கூடாது.தொழிலதிபர்கள் கூடுதல் பணத்தேவைக்கு உட்படுவர். உற்பத்தி இலக்கு நிறைவேறுவதில் தாமதம் உண்டு. வியாபாரிகளுக்கு போட்டி அதிகரிக்கும். லாபத்தைக் குறைத்து விற்க வேண்டிய நிர்ப்பந்தமான நிலைமை வரும். பணியாளர்கள் கவனக்குறைவால் பணியில் குளறுபடியை எதிர்கொள்வர். சிலர் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு ஆளாகலாம். பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உட்படுவர். அயராத உழைப்பு நிலைமையை சரிசெய்யும். குடும்பப் பெண்கள் கணவரின் பாசம் கிடைத்து மகிழ்வுடன் இருப்பர். பணவரவுக்கு ஏற்ப சிக்கன நடைமுறை பின்பற்றுவர். சுயதொழில் புரியும் பெண்கள் கடன் பெற்று வியாபாரத்தை நடத்த வேண்டி வரும். அரசியல்வாதிகள் அரசு தொடர்பான அனுகூலம் பெறுவதில் தாமதம் இருக்கும். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் உண்டு. மாணவர்கள் அதிக முயற்சியுடன் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி பெற இயலும்.

உஷார் நாள்: 18.10.11 காலை 6.01 முதல் 19.10.11 நள்ளிரவு 12.48 மணி வரை மற்றும் 14.11.11 அதிகாலை 12.37 முதல் 16.11.11 காலை 8.23 மணி வரை
வெற்றி நாள்: நவம்பர் 2, 3 நிறம்: வெள்ளை, மஞ்சள் எண்: 3, 6
பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதால் உடல்நலமும் தொழில்வளமும் சிறக்கும்.

தனுசு

குடும்ப உறுப்பினர்களிடம் அதிக பாசமுள்ள தனுசுராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் குரு ஐந்திலும், சூரியன் பதினொன்றாம் இடத்திலும் அனுகூலமாக அமர்ந்து சமசப்தம பார்வை பெற்றுள்ளனர். பணவரவை அதிகரிப்பதில் சாதகநிலை கூடும். இளைய சகோதரர்கள் அவர்கள் வேலையைப் பார்ப்பார்களே தவிர, உங்களுக்கு உதவமாட்டார்கள். வீடு, வாகனத்தில் தேவையான வளர்ச்சிமாற்றம் செய்வீர்கள். அக்கம் பக்கத்தவர் மதிப்புடன் நடத்துவர். புத்திரர்கள் உங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப நல்லவிதமாக நடந்துகொள்வர். பூர்வ சொத்தில் பெறுகிற வருமானம் தடையின்றி கிடைக்கும். எதிரிகள் செய்கிற கெடுதல் முயற்சி கூட உங்களுக்கு அனுகூலமாகும். பொன், பொருள் சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். கணவன், மனைவி கடந்த கால மனக்கஷ்டங்களை மறந்து அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர். நண்பர்கள் உதவுவதும், உதவி பெறுவதுமான நன்னிலை உண்டு. தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்திப்பணி புரிவர். அரசு சார்ந்த அனுகூலம் கிடைக்கும். வியாபாரிகள் போட்டியை சமாளித்து தமக்கென முத்திரை பதிப்பர். பணவரவு சீரான வகையில் இருக்கும். பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். சலுகைகள் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் ஆரோக்கிய உடல் நலத்துடன் பணியில் ஆர்வம் கொள்வர். நிர்வாகத்திடம் நற்பெயர் கிடைக்கும். குடும்பப் பெண்கள் சந்தோஷ சூழ்நிலை அமைந்து அன்றாட பணிகளை நிறைவேற்றுவர். தாய்வீட்டு சீர்முறை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் சாதனை நிகழ்த்தும் எண்ணத்துடன் திறம்பட செயல்படுவர். உற்பத்தி விற்பனை சிறந்து தாராள பணவரவைத்தரும். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஆதரவைப் பெற்று முக்கிய பணிகளை நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து கால்நடை வளர்ப்பில் முன்னேற்றம் பெறுவர். மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.

உஷார் நாள்: 20.10.11 அதிகாலை 12.49 முதல் 22.10.11 காலை 5.21 மணி வரை மற்றும் 16.11.11 காலை 8.23 முதல் 17.11.11 காலை 6 மணி வரை. வெற்றி நாள்: நவம்பர் 4, 5 நிறம்: பச்சை, நீலம் எண்: 5, 7
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் மன பலமும் தொழில் வளமும் சிறப்பாகும்.

மகரம்

அடுத்தவர்களின் உதவியை அளவுடன் ஏற்கும் மகரராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சூரியன் அனுகூலமாக உள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், புதன், ராகு ஆதாய ஸ்தானத்தில் அமர்ந்து செயல்படுகின்றனர். இதனால் உங்களின் நல்முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். தாராள பணவரவு பெற தகுந்த வாய்ப்பு வரும். வீடு, வாகனத்தில் விரும்பிய நல்மாற்றமும், புதிய வாகனம் வாங்க நல்யோகமும் உண்டு. தாய்வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு சரியாகும். புத்திரர்கள் நற்செயல் புரிந்து படிப்பில் திறமை வளர்ப்பர். உடல்நலம் பலம் பெறும். விருந்து உபசரிப்பில் ஆர்வமுடன் கலந்து கொள்வீர்கள். வழக்கு, விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொள்வர். வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நண்பர்கள் கடந்த காலத்தில் பெற்ற உதவிக்கு தகுந்த நன்றி பாராட்டுவர். தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்துடன்  உற்பத்தியை உயர்த்துவர். புதிய ஒப்பந்தம் கிடைத்து தாராள பணவரவு பெறுவர். வியாபாரிகள் விற்பனையில் முன்னேற்றம் காண்பர். லாபவிகிதம் அதிகரிக்கும். பணியாளர்கள் இலகுவாக பணிகளை நிறைவேற்றுவர். தாமதமான சலுகைகள் எளிதில் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகை பயன் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் நல்அன்பு, பாசத்துடன் பணவசதியும் பெறுவர். சந்தோஷ வாழ்வு முறை அமையும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தராள பணவரவில் சேமிப்பை உயர்த்துவர். அரசியல்வாதிகள் புகழை அதிகரிக்க ஆதரவாளர்களின் முக்கிய தேவையை கவனமுடன் நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் பராமரிப்புச் செலவு கூடும். மாணவர்கள் உயர்ந்த தரதேர்ச்சி பெற்று சாதனை புரிவர்.

உஷார் நாள்: 22.10.11 காலை 5.22 முதல் 24.10.11 இரவு 8.36 மணி வரை வெற்றி நாள்: நவம்பர் 7, 8 நிறம்: ஆரஞ்ச், சந்தனம் எண்: 3, 7
பரிகாரம்: பைரவரை வழிபடுவதால்வாழ்வில்இன்பம் சேரும்.

கும்பம்

பேச்சில் சர்வ ஜாக்கிரதையைக் கையாளும் கும்பராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சனி அஷ்டமச் சனியாக செயல்படுகிறார்.மாத முற்பகுதியில் செவ்வாயும், மாதம் முழுவதும் புதனும் அதிர்ஷ்டகரமான பலன்களைத் தருவர். எந்த செயலையும் தகுந்த திட்டமுடன் நிறைவேற்றுவது நல்லது. பணவரவு பெற வருகிற வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொண்டால் தான் நிதிநிலையைச் சமாளிக்கலாம். வீடு, வாகன வகையில் பெறுகிற வசதியை முறையாக பயன்படுத்துவது போதுமானது.
புத்திரர்களின் உடல்நலம் நன்றாக இருக்கும். பூர்வசொத்தில் சுமாரான பணவரவு கிடைக்கும். எதிரிகளால் வருகிற தொந்தரவை பொறுமையால் சரிசெய்வீர்கள். நிர்ப்பந்த கடனை, புதுக்கடன் வாங்கி சரிசெய்வீர்கள். தம்பதியர் சுயகவுரவம் காரணமாக கருத்து வேறுபாடு கொண்டு, குழப்பமான சூழ்நிலையை எதிர்கொள்வர். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழிலதிபர்கள் அளவான மூலதனத்துடன் புதிய வழிமுறைகளைப் பின்பற்றி உற்பத்தி இலக்கை உயர்த்துவர். நிலுவைப்பணம் வசூலாகும். வியாபாரிகள் கூடுதல் போட்டியை எதிர்கொள்வர். லாபம் குறையும். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றுவதால் மட்டுமே பிரச்னை, நடவடிக்கைகள் வராமல் தவிர்க்கலாம். பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிச்சுமையால் குழப்பம் அடைவர். உற்சாகத்துடன் செயல்படுவதால் மட்டுமே பணி இலக்கு நிறைவேறும். குடும்பப் பெண்கள் சிக்கனச்செலவில் கடன் சுமையை தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள் உதவிகரமாக நடந்துகொள்வர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி இலக்கை அடைவதிலும் விற்பனையிலும் தேக்கநிலை காண்பர். முக்கிய செலவுகளுக்கு கடன் பெறுகிற நிலை உண்டு. அரசியல்வாதிகள், பிறர் விவகாரங்களில் ஈடுபடாமல் சொந்தப்பணிகளில் கவனம் கொள்வது நல்லது. விவசாயிகளுக்கு அளவான மகசூலும் சுமாரான பணவரவும் உண்டு. மாணவர்கள் கூடுதல் முயற்சியால் தரத்தேர்ச்சியை தக்கவைக்கலாம்.

உஷார் நாள்: 24.10.11 இரவு 8.37 முதல் 26.10.11 பகல் 11.48 மணி வரை வெற்றி நாள்: நவம்பர் 9, 10 நிறம்: சந்தனம், ரோஸ் எண்: 1, 3
பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் உடல்நலமும் தொழில் சிறப்பும் ஏற்படும்.

மீனம்

பிறருக்கு நன்மையை மட்டுமே விரும்பும் மீனராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் குரு இரண்டாம் இடத்தில் அனுகூலமாக உள்ளார். கேது, சுக்கிரன் மாதம் முழுவதும், செவ்வாய் மாத பிற்பகுதியிலும் நற்பலன் வழங்குவர். பேச்சில் தெளிவும் சாந்தமும் இருக்கும். அதிக வருமானம் பெறும் வகையில் செயல்படுவீர்கள். அக்கம் பக்கத்தவரின் நல்அன்பு மனதிற்கு ஊக்கம் தரும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி செய்ய வேண்டி வரும். தாய்வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நல்லவிதமாக நடந்து கொள்வர். உடல்நலம் சீர்பெற தகுந்த சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும். மருத்துவச்செலவு சற்று அதிகரிக்கும். எதிரிகளால் வருகிற தொல்லை படிப்படியாக சரியாகும். வெகுநாளாகக் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும்.  தம்பதியர் குடும்ப சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் நடந்து கொள்வர். நண்பர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். தொழிலதிபர்கள் நிர்வாக நடைமுறைகளை சரிவர பாதுகாப்பதால் அரசு தொடர்பான நடவடிக்கை வராமல் தவிர்க்கலாம். உற்பத்தி, லாபம் சுமாராக இருக்கும். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் விற்பனையை உயர்த்துவதில் ஆர்வம் கொள்வர். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பணியாளர்களுக்கு தற்போதைய நிலை தொடரும். அரியர்ஸ் கிடைக்க கடும் முயற்சி தேவைப்படும். பணிபுரியும் பெண்கள் நிதானமாகச் செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். குடும்பப் பெண்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு குடும்ப நலன் காத்திடுவர். கணவர் வழி உறவினர் அன்பு பாராட்டுவர். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், சக தொழில் சார்ந்த தோழியின் உதவியால் புதிய சந்தை வாய்ப்பு பெறுவர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் அதிர்ஷ்டகரமாக பதவி, கட்சிப்பொறுப்பு பெறுவர். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் கிடைக்கும். மாணவர்கள் கூடுதல் பயிற்சியினால் திட்டமிட்ட தேர்ச்சி அடைவர்.

உஷார் நாள்: 26.10.11 பகல் 11.49 முதல் 28.10.11 பகல் 2.13 மணி வரை வெற்றி நாள்: நவம்பர் 12, 13நிறம்: மஞ்சள், சிமென்ட் எண்: 3, 8
பரிகாரம்: லட்சுமி தாயாரை வழிபடுவதால் எதிர்பார்த்த பணவரவும் நன்மையும் ஏற்படும்.
அதிகாலையில் எழுந்ததும் என்ன செய்ய வேண்டும்?

அதிகாலையில் தூக்கம் கலைந்து எழும்போது பூமாதேவியை பிரார்திக்க வேண்டும். தாயே உலகில் அனைத்திற்கும் அன்னையான உன்னை நான் எனது காலால் மிதிப்பதை பொறுத்தருள வேண்டும் என்று கூறி முதலில் இடக்காலை ஊன்றி எழுந்து பூமியில் வைக்க வேண்டும். பின்னர் வலக்காலை எடுத்து வைத்து இன்றைய தின காரியங்கள் அனைத்திலும் எனக்கே வெற்றி உண்டாக நீயே அருள வேண்டும் என்று கூறி வலக்காலை எடுத்து வைத்து எழ வேண்டும்.
சரஸ்வதியின் சிறப்பும் வழிபாடும்!

சரஸ்வதியின் வாகனங்கள்: சரஸ்வதிக்கு ஞான சரஸ்வதி, ஆகமச் செல்வி, ஆகமசுந்தரி, ஞானச்செல்வி என்று பல பெயர்கள் உண்டு. சரஸ்வதியை வேதங்கள் அன்னத்தின் மீது அமர்ந்திருப்பவளாகப் போற்றுகின்றன. அன்ன வாகனத்துடன் உள்ள சரஸ்வதியை அம்சவல்லி என்பர்.  அன்னம், அப்பழுக்கற்ற வெண்மை நிறமுடையது. அதுபோல், ஒருவர் கற்கின்ற கல்வியும் மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதையும், படித்தவர்கள் வெள்ளை மனதினராக இருக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது. அவளது வெள்ளைப்புடவை, அவள் அமர்ந்துள்ள வெள்ளைத் தாமரை ஆகியவையும் இதையே உணர்த்துகின்றன. தென்னகத்தில் கலைமகளை மயில் வாகனம் கொண்டவளாகப் போற்றுகின்றனர். ரவிவர்மாவின் ஓவியங்களில் சரஸ்வதிக்கு மயிலே வாகனமாக குறிக்கப் பட்டுள்ளது. மயில் தோகை விரிப்பதும், மடக்கிக் கொள்வதும் ஒருவன் கற்ற கல்வி பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும் என்பதையும், அவனுக்கு அடக்கம் வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது.

சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை: தெட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யமும் முக்கியம். இதற்கு காரணம் என்ன தெரியுமா? சரஸ்வதி,தெட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜபமாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர். மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர்குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடாமகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் பெற்றிருப்பதைக் காணலாம். கொண்டைக் கடலை உ<யிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இல்லையென்றால், அவரது <<உயிருக்கு பாதகம் வரலாம். எனவே, குரு பார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தெட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர். மனித வாழ்வின் உயிர்நாடி கல்வி. அந்த <கல்வியில் சிறந்து விளங்க, சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை (சுண்டல்) நைவேத்யம் செய்கிறோம்.

சொல் கிழவியைத் தெரியுமா?

ஒட்டக்கூத்தர் கலைமகளின் பக்தராக விளங்கினார். நாமகளின் அருளால் பாடும் திறம் பெற எண்ணினார். இதற்காக ஹரிநாதேஸ்வரம் என்னும் கூத்தனூரில் ஓடும் அரசலாற்றில் நீராடி கலைவாணியின் திருவடிகளை சிந்தித்து தியானத்தில் ஆழ்ந்தார். கலைவாணி அவர் முன் தோன்றி, தன் வாயிலிருந்த தாம்பூலத்தை (வெற்றிலை) கூத்தருக்கு கொடுத்தாள். அப்போதிருந்து பேரறிவும், ஞானமும் பெற்றார் ஒட்டக்கூத்தர். கூத்தருக்கு கலைமகள் காட்சி கொடுத்து அருளிய திருத்தலம் என்பதால் கூத்தனூர் என்ற பெயர் ஏற்பட்டது. தாம் பாடிய தக்கயாகப்பரணியில் இத்தேவியை ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியே என்று பாடியிருப்பது இவரின் பக்தியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. கிழத்தி என்பதற்கு கிழவி என்றும், தலைவி என்றும் பொருளுண்டு. சொல்லுக்கு (வாக்கு) தலைவி என்பதால் இவளை ஒட்டக்கூத்தர் இப்பெயரிட்டு அழைத்தார். இவளுக்கு வாக்தேவி என்றும் பெயருண்டு.

கல்விக்கோயில்: சிவபெருமானை அலட்சியப்படுத்தும் விதமாக தட்சன் ஒரு யாகம் நடத்தினான். சிவன், தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். அவர், யாகத்தை அழித்ததுடன், யாகத்தை முன்னின்று நடத்திய பிரம்மதேவனையும் தண்டித்தார். மேலும், அவரது மனைவியான கலைமகளின் மூக்கினையும் அரிந்தார். பயந்து நின்ற அவள் தன் கணவன் பிரம்மனுடன் சீர்காழிக்குச் சென்று சிவனை வழிபட்டாள். இந்த நிகழ்ச்சியை திருஞானசம்பந்தர், நாவினாள் மூக்கரித்த நம்பர் என்று குறிப்பிடுகிறார். மேலும், நாவியலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலங்கோயில் என்றும் பாடியுள்ளார். சீர்காழி ஒரு கல்வித்தலம் ஆகும். மாணவர்கள் ஒருமுறையேனும் சீர்காழி சென்று, அங்கு அருள்புரியும் தோணியப்பரையும், அம்பாளையும், திருஞானசம்பந்தரையும் வணங்கி வந்தால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம். இவ்வூரில் அவதரித்த சம்பந்தருக்கு, இத்தலத்தில் தான் அம்பிகை தாயாக இருந்து பால் புகட்டினாள்.
சரஸ்வதிபூஜை: கல்வி வளம் சிறக்க கலைமகளே வந்தருள்வாய்!

சரஸ்வதிபூஜையன்று மாணவர்கள் பாராயணம் செய்வதற்காக இப்பகுதி இடம் பெற்றுள்ளது. புத்தகங்களை அடுக்கி தூபதீபம் காட்டியபின், இதனை மனம் ஒன்றி படியுங்கள். கலைமகளின் அருளால் கல்வியில் முன்னேறலாம்.

அழகிய வெண்தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளே! அன்னையே! என் மனத்தாமரையிலும் நீயே வீற்றிருக்க வேண்டும். பிரம்மதேவன் விரும்புகின்ற வெண்சங்கு போன்ற நிறமும், அழகிய திருவடிகளும் கொண்ட தாயே! உன்னை வணங்குகிறேன். அறுபத்து நான்கு கலைகளுக்கும் இருப்பிடமானவளே! வெண்பளிங்கு போல் ஒளி பொருந்தியவளே! எனது கல்வியில் தடை நேராதவாறு என்றென்றும் நீயே காத்தருள வேண்டும். வெண்பளிங்கு நிறமும், பவளம் போல் சிவந்த இதழும், உடுக்கை போல இடையும், தாமரை மலர் போன்ற கரங்களும் உடைய கலைமகளே! தினமும் உன்னை மறவாமல் நினைக்கும் பாக்கியத்தை  தந்தருளவேண்டும். அறிஞர்களால் விரும்பப்படுபவளே! பச்சை இலைகளைக் கொண்ட மணம் மிக்க தாமரையில் வாழ்பவளே! முத்துமாலையைக் கையில் ஏந்தியவளே! கலைகளின் நாயகியே! வேதம் நான்கையும் காத்தருள்பவளே! உன் அருளின் தன்மையை வியந்து போற்றுகின்றேன். சொர்க்கம், பூமி, பாதாளம் ஆகிய மூவுலகங்களையும் படைத்தவளே! சூரியோதய வேளையிலும், சந்திரோதய வேளையிலும் எழில் ஓவியம் போன்று காட்சி தருபவளே! அன்று மலர்ந்த பூவைப் போன்ற முகத்தையுடையவளே! என்னை ஆட்கொண்டு கல்வி நலம் தந்தருளி அருள்புரிய வேண்டும். அன்னையே! உன் திருவடியை வணங்குபவர்களின் மனதில் புகுந்து அக இருளைப் போக்குபவளே! அறிவிற்கு ஆதாரமாய் திகழ்பவளே! ஞானத்தின் பிறப்பிடமே!

நாவில் உறையும் நாமகளே! திருமாலின் உந்திக் கமலத்தில் வாழும் பிரம்மனின் துணைவியே! மாலை நேர நிலவொளியாய் குளிர்ச்சி கொண்டவளே! தாயே! உன்னருளை என் மீது பொழியச் செய்யவேண்டும். பெண் மான் போன்ற மருட்சி தரும் பார்வை உடையவளே! குற்றத்தைப் போக்கியருளும் குணக்குன்றே! அறியாமையை நீக்கும் மாமருந்தே! மெல்லிய பூங்கொடியாய் மகிழ்ச்சியில் திளைப்பவளே! உன் திருவடித் தாமரைகளை என் முடி மீது வைத்து அறிவுக்கண்ணைத் திறந்தருள்வாயாக. சுவடி, ஸ்படிகமாலையைத் தாங்கி இருப்பவளே! உபநிஷதங்களின் உட்பொருளானவளே! பாடுவோர், கல்வி பயில்வோர் நாவில் குடியிருப்பவளே! உலகத்தில் இருக்கும் பொருட்செல்வம் யாவும் அழிந்து போனாலும், என்றென்றும் அழியாத கல்விச் செல்வத்தை தந்தருள்பவளே! உன்னையன்றி வேறு கதி எனக்கில்லை! உன் கருணைப் பார்வையை என் மீது சிந்துவாயாக. கருணை விழிகாட்டி கல்வியை வாழச்செய். சரஸ்வதி தாயே! உன்னை நினைக்கும் நேரமெல்லாம் என் மனதிற்குள் புகுந்து விடு. பேசும்போது என் நாக்கில் அமர்ந்து கொள். என்னை நல்வழிப்படுத்து. சகலகலாவல்லியே! தரமான கல்வி, தர்ம வழியில் ஈட்டிய செல்வம், புகழ்மிக்க வாழ்வு ஆகியவற்றை எனக்கு தந்தருள்வாயாக.

சரஸ்வதிக்குரிய நட்சத்திரங்கள்: சரஸ்வதிக்குரிய நட்சத்திரம் மூலம். இந்த நட்சத்திரம் உச்சமாயிருக்கும் வேளையில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்து பூஜிப்பது வழக்கம். திதியின் அடிப்படையில் நவமியன்று பூஜை செய்வர். அதனால் சரஸ்வதி பூஜைக்கு மகாநவமி என்றும் பெயருண்டு. இந்த ஆண்டு அக்.4ல் மூலநட்சத்திரம் வந்தது. அக்.5ல் நவமி வந்துள்ளது. இந்தக் குழப்பத்தை தீர்க்கத்தான், ஒரு காலத்தில் மூலத்தன்று தொடங்கி திருவோண நட்சத்திரம் வரை நான்கு நாட்கள் சரஸ்வதிக்கு பூஜை செய்தனர். காலப்போக்கில் இவ்வழிபாடு மறைந்துபோனது. நட்சத்திரங்களில் மூலமும், திருவோணமும் கல்விக்குரியவை. திருவோணத்திற்கு சிரவணம் என்றும் பெயருண்டு. சிரவணம் என்பதற்கு குருவின் உபதேசங்களைக் கேட்டல் என்று பொருள்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்: கல்வி தெய்வமான சரஸ்வதிக்குரிய பூஜையை ஆயுதபூஜை என்பர். தொழில்முறையில் அவரவருக்குரிய தொழிற்கருவிகளை இந்நாளில் வழிபடுவதால் இப்பெயர் வந்தது. வாழ்வில் வெற்றி பெற, ஒருவன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்க வேண்டும்.  அம்பிகையின் அருள் ஒருவனுக்கு இருந்தால், அவன் தைரியசாலியாக இருப்பான். சரஸ்வதியின் அருள் பெற்றவர்களின் கையில் கத்திக்குப் பதிலாக எழுத்தாணியே இருந்தது. இதையே வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று குறிப்பிட்டனர். எழுத்து என்பது மிகப்பெரிய சக்தி. பல வல்லரசுகளையும் ஒருவனது எழுத்து கவிழ்த்து விடும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வைத் தூண்டும்.

இலக்கிய விருதில் வாக்தேவி சின்னம்!

இந்திய மொழி இலக்கியங்களுக்கு ஞானபீடம் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதில் இடம்பெற்றுள்ள சின்னத்தை வாக்தேவி (வாக்குக்கு அதிபதியான சரஸ்வதி) என்பர். கி.பி.1034ல் போஜமகாராஜன் உஜ்ஜயினியில் நிர்மாணித்த கோயிலில் உள்ள சரஸ்வதியின் வடிவம் இது. தற்போது இந்தச்சிலை லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது. ஞானபீடபரிசு பெறுபவருக்கு பஞ்சலோக வாக்தேவி சிலை வழங்கப்படும். அவள் 14 இதழ்களைக் கொண்ட பத்மபீடத்தில் நின்றபடி காட்சிதருவாள். இந்த இதழ்கள் 14 இந்திய மொழிகளைக் குறிப்பதாகும். இவளது கைகளில் கமண்டலம், பத்மம், ஜபமாலை, சுவடி இருக்கும்.