செவ்வாய், 29 அக்டோபர், 2019

மகான் ரமண மகரிஷி

அன்று ஆருத்ரா தரிசனம்!அதாவது மார்கழி திருவாதிரை நட்சத்திரம்!திருச்சுழி பூமிநாதசுவாமி திருக்கோயிலில் நடராஜர் புறப்பாடு சிறப்பாக நடந்தது.வீதி உலா இனிதே நிறைவு பெற்று திருக்கோயிலில் சுவாமி பிரவேசிக்கும் நேரம்!பூமிநாதர் திருக்கோயில் மணி ஒலித்தது!அதே நேரத்தில் அருட்குழந்தை ரமணர் பூவுலகில் அவதரித்தார்.ஜோதி தரிசனம்:பூமிநாதர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் நிறைவு பெற்ற நேரத்தில் கண்பார்வை இல்லாத ஒரு பெண்மணிக்கு ஜோதி தரிசனம் கிடைத்தது!ஆம்!ரமணரின் தாய் அழகம்மாவிற்குப் பிரசவம் பார்க்க வந்த பெண்மணி கண்பார்வை இல்லாதவர் ரமணர் பூமியில் அவதரித்த அதே நேரத்தில் அந்தப் பெண்மணிக்கு ஒரு ஜோதி தரிசனம் கிடைத்தது!தலைச்சுழியை மாற்றும் திருச்சுழி:பாண்டிய நாட்டிலுள்ள பதினான்கு பாடல் பெற்ற சிவத்தலங்களில் பத்தாவது திருத்தலம் திருச்சுழியல்.இது மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் ஐம்பது கி.மீ தொலைவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.திருஞானசம்பந்தர் திருவவதாரம் செய்த சீர்காழி பிரளய வெள்ளத்தில் தோணியப்பர் திருவருளால் மிதந்து தப்பித்தது!ரமணர் உதித்த திருச்சுழியல் பிரளய வெள்ளம் பாதாளத்தில் புகுந்ததால் பிழைத்தது!சிவபெருமான் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்து பாதாளத்தில் செலுத்திக் காத்ததால் இத்தலத்தை திருச்சழியல் என அழைத்தனர் தற்காலத்தில் திருச்சுழி என வழங்கி வருகிறது திரிசூலபுரம் முத்திமாநகர் மகா ஆவர்த்தபுரம் ஜோதிவனம் போன்ற வேறு பெயர்களும் உள்ளன.

சிவபக்தர் சுந்தரம் ஐயர்:தேவாரம் போற்றும் திருச்சுழி பூமிநாதப் பெருமானை அன்றாடம் வழிபடும் பக்தரான சுந்தரம் ஐயர் அழகம்மா என்ற பெண்ணை மணந்து இனிதே இல்லறம் நடத்தி வந்தார்.சுந்தரம் ஐயர் உழைப்பால் உயர்ந்து செல்வம் சேர்த்து அறச்செயல்கள் புரிந்தவர்.கணக்கப்பிள்ளை குமாஸ்தாவாக இருந்தவர் மனுக்களும் விண்ணப்பங்களும் எழுதிக் கொடுக்கும் தொழிலை மேற்கொண்டார்.சட்ட நுணுக்கங்களைக் கற்று பட்டம் பெறாத வழக்கறிஞராக உயர்ந்தார்.சட்ட உதவியைத் தொழிலாகக் கருதாமல் தம்மை நாடி வந்தவர்களுக்கு நல்லதே செய்யும் பண்பாளராக விளங்கினார். அதனால் அப்பகுதியில் சுந்தரம் ஐயர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.ஆங்கிலக் கணக்குப்படி 1879 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முப்பதாம் நாள் சுந்தரம் ஐயர் அழகம்மாள் தம்பதியரின் மகனாக ஸ்ரீரமணர் அவதரித்தார்.சுந்தரம் ஐயர் தம்பதியர் தங்கள் மகனுக்கு வேங்கடராமன் என்று பெயர் சூட்டினர்.குழந்தையின் சுட்டித்தனத்தைக் கண்டு மகிழ்ந்த அனைவரும் ராமன் என்று செல்லமாக அழைத்தனர்.சுந்தரம் ஐயர் தம்முடைய குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்வியை அளிக்க விரும்பினார்.பள்ளிமடம் வட்டத்திலிருந்த ஒரு மிஷனரி ஆரம்பப்பள்ளியில் வேங்கடராமனைச் சேர்ந்தார்.வேங்கடராமனின் மனம் பள்ளிப்படிப்பில் ஈடுபட வில்லை.வயிற்றுப் பிழைப்புக்காகப் படிக்கும் கல்வியில் அவருக்கு நாட்டம் இல்லை.

கால்பந்து விளையாடுதல் மல்யுத்தம் பயிறுதல் ஓடுதல் நீந்துதல் கபடி விளையாடுதல் போன்றவை வேங்கடராமனுக்கு விருப்பமான விளையாட்டுக்களாக இருந்தன.அதனால் அவனுக்கு அதிகமான நண்பர்கள் கிடைத்தனர்.அவர்களிடையே வேங்கடராமன் முக்கியத்துவமும் முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தான் கௌண்டின் யநதி பள்ளிக்கு அருகில் இருந்தது அந்த நதிக்கரையில் வேங்கடராமன் தனது நண்பர்களுடன் விளையாடுவான் காளையார்கோயில் வேங்கடராமன் படித்த பள்ளிக்கு அருகில் இருந்தது.திருச்சுழியிலிருந்து கோயில் பூஜை செய்யும் குருக்கள் பட்டர் வேத விற்பன்னர்கள் ஆகியோர் அன்றாடம் காளையார் கோயிலுக்குச் செல்வார்கள் அவர்களுடன் சிறுவன் வேங்கடராமனும் சென்று அங்கு விளையாடுவான்.ஒரு முறை சுந்தரம் ஐயரின் முன்னோர் ஒருவரின் இல்லம் தேடி வந்த சந்தியாசியை அவர் உரிய முறையில் வரவேற்று உபசரிக்கவில்லை அதனால் சந்நியாசி கோபம் கொண்டு சாபம் கொடுத்துவிட்டார் உங்கள் பரம்பரையில் தலைமுறைக்கு ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி கையேந்தி பிச்சை வாங்கிச் சாப்பிடும் நிலை ஏற்படும் என்று அந்த சந்தியாசி சபித்தார்.அச்சாபம் குறித்து சுந்தரம் ஐயர் அழகம்மாவிடம் கூறினார்.அச்சாபப்படி நடந்து வருவதாகவும் விளக்கினார்.சுந்தரம் ஐயரின் தகப்பனாரின் சகோதரர் ஒருவர் காவியுடுத்துத் துறவியாகித் திரித்து கொண்டு இருந்தார்.சுந்தரம் ஐயரின் மூத்த சகோதரர் வீட்டை விட்டு வெளியேறிப் பரதேசியாகத் திரிந்தார்.

திண்டுக்கல்லில் வேங்கடராமன் ஐந்தாம் வகுப்பு வரைகற்றான்.திண்டுக்கல் பகுதியில் இருந்த மலைகள் கோயில்கள் ஆகிய அனைத்தும் அவனுக்கு அத்துபடி! நண்பர்களுடன் அங்கெல்லாம் அலைந்து திரிந்து விளையாடி மகிழ்வான்.வேங்கடராமன் திண்டுக்கல்லில் படித்துக் கொண்டிருந்தபொழுது எதிர்பாராத விதமாக சுந்தரம் ஐயர் காலமானார் அழகம்மாவும் குழந்தைகளும் சோகத்தில் ஆழ்ந்தனர்.அந்தச் சோகத்திலும் வேங்கடராமன் சிந்தனையில் மூழ்கினான்.உடல்தான் சுந்தரம் ஐயரா?அவருடைய உயிர் எங்கே போயிற்றது?மரணம் என்பது என்ன? மரணத்தைத் தவிர்க்க இயலாத?உயிரை எடுத்துக் கொண்டு போவது யார்?என்றெல்லாம் பலவாறு வேங்கடராமன் சிந்திக்கலானான்.சுந்தரம் ஐயரின் இறுதிக்கடன்கள் முடிந்தன.கூட்டுக் குடும்பங்கள் நிறைந்திருந்த அக்காலத்தில் சுந்தரம் ஐயரின் சதோதரர்கள் அழகம்மா மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசித்தனர்.குடும்ப நண்பரான பூமிநாதசுவாமிதிருக்கோயில் குருக்களும் உடன் இருந்தார்.சுந்தரம் ஐயரின் தம்பிகளில் ஒருவரான சுப்பையா மதுரையில் வசித்து வந்தார் மற்றொரு தம்பியான நெல்லையப்பர் மானாமதுரையில் இருந்தார்.நாகசாமி மற்றும் வேங்கடராமன் மதுரையிலுள்ள சுப்பையா வீட்டில் தங்கி படிப்பைத் தொடருவது நல்லதென எண்ணினார்.அழகம்மாள் குழந்தைகள் நாகசுந்தரம் அலமேலு ஆகிய மூவரையும் நெல்லையப்பர் தன்னுடன் மானமதுரைக்கு அழைத்துச் செல்லத் தீர்மானித்தார் சுந்தரம் ஐயரின் குடும்பச் சுமையை அவருடைய சகோதரர்கள் அன்புடன் பங்கிட்டுத் தாங்க முற்பட்டனர்.மானாமதுரையில் தங்கியிருந்த அழகம்மா மற்றும் குழந்தைகளை நெல்லையப்பர் பரிவுடன் கவனித்துக் கொண்டார்.அதே நேரத்தில் மதுரைக்குச் சென்ற நாகசாமி கல்லூரியில் சேர்ந்து படித்தான்.தம்பி வேங்கடராமன் வழக்கம் போல் பள்ளிக்கல்வியில் நாட்டம் இல்லாமல் இருந்தான்.

வேங்கடராமன் ஆங்கிலத்தில் மோசமாகவும் தமிழ் தவிர மற்றப் பாடங்களில் சுமாராகவும் மதிப்பெண்கள் வாங்கினான்.தமிழில் ஆர்வம் ஆதிகம் இருந்தது நன்னூல் சூத்திரங்கள் வேங்கடராமனுக்கு மனப்பாடமாக இருந்தன இந்தச் செய்திகளை சுப்பையா கடிதம் மூலம் அழகம்மாவிற்கு தெரியப்படுத்தினார் அழகம்மா மதுரையில் இருந்த இரண்டு மகன்களையும் சென்று பார்க்க விரும்பினார்.மதுரை சென்ற அழகம்மா வேங்கடராமனுக்கு அறிவுரைகளைக் கூறினார்.வேங்கடராமன் அவற்றை அமைதியாகக் கேட்டான்.வேங்கடராமன் விடுமுறை நாள்களில் மலையடிவாரங்ளுக்கும் திருக்கோயில்களுக்கும் செல்வான்.திருச்சுழியைச் சேர்ந்த சொக்குப் பட்டர் என்பவர் தீபத்திருநாளைக் காணத் திருவண்ணாமலைக்குச் சென்று திரும்புகையில் மதுரையில் வேங்கடராமனின் தந்தையின் இளவல் சுப்பையரின் இல்லத்திற்குச் சென்றார்.பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.அவரிடம் வேங்கடராமன் எங்கிருந்து வருகிறீர்கள்?என்று கேட்டான்.சொக்குப் பட்டர் நான் அருணாசலத்திலிருந்து வருகிறேன் என்றார் வேங்கடராமன் அப்பெயரைக் கேட்டவுடன் அனைத்தையும் மறந்தான்! தன்னை மறத்த நிலையில் வேங்கடராமன் வேகமாக மாடியறைக்குச் சென்றான் சிறிது நேரம் கழித்து மாடியறையில் இருந்த பெரிய புராணப் புத்தகத்தை எடுத்து ஈடுபாட்டுடன் படிக்கலானான்.சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் திருச்சுழியில் பிறந்த வேங்கடராமன் என்ற சிறுவனின் மனதில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மகரிஷி ரமணரை மாநிலத்திற்கு அளித்தது! இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யத்துணிந்த சிவனடியார்களின் தொண்டு வாழ்க்கை சிறுவன் வேங்கடராமனின் மனதில் ஆழப் பதிந்தது பள்ளிக் கல்வியில் நாட்டமில்லாத வேங்கடராமனை ஒரு திருமுறை நூல் கவர்ந்தது விந்தைதான்!

மதுரையில் சுப்பையாவின் இல்லம் மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு அருகில் இருந்தது. அதனால் வேங்கடராமன் அன்றாடம் கோயிலுக்குச் செல்வான் மீனாட்சியிடம் சுந்தரரேசுவரிடமும் தான் நாயன்மார்களைப் போன்ற பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டுமென உள்ளம் உருகி வேண்டிக் கொள்வான் வேங்கடராமனிடம் சிவபக்தியும் ஞானவைராக்கியமும் வளரலாயிற்று.
மாடியறையில் அமர்ந்து மரணம் முதலான விஷயங்கள் குறித்துச் சிந்தித்தான் வேங்கடராமன். ஆழ்ந்த சிந்தனை தியானமாக மாறியது!தியானம் உச்ச நிலையைத் தொட்டது.வேங்கடராமன் சிறிது நேரம் மரணத்தின் விளிம்பிற்கே சென்றுவந்தான்!அது முதல் அவனுக்கு மரணம் குறித்த அச்சம் ஒழிந்தது.கோயிலுக்குச் செல்வதும் தியானம் செய்வதுமே முக்கியப் பணியாகிவிட்ட வேங்கடராமனுக்குப் படிப்பு அறவே வெறுத்துப் போயிற்று.ஆர்வத்துடன் ஈடுபட்ட விளையாட்டுக்களும் மகிழ்ச்சியைத் தர வில்லை.நண்பர்கள் குழாத்தையும் நாடவில்லை.
ஆங்கில இலக்கணப் புத்தகத்தின் சில பகுதிகளை மூன்று முறை எழுதும் தண்டனையைப் பெற்றான் வேங்கடராமன்.அதன்படி இரண்டு முறை எழுதி முடிந்த நிலையில் வேங்கடராமனுக்கு விரக்தியும் வெறுப்பும் மேலிட்டது.இலக்கணப் புத்தகம் பேனா ஆகியவற்றை வேங்கடராமன் வீசி எறிந்தான்.அச்செயலைக் கண்ட அண்ணன் நாகசாமி பெரிதும் கடிந்து கொண்டார்.அதனைப் பொருட்படுத்தாத வேங்கடராமன் அடுத்த நடவடிக்கை குறித்துச் சிந்தித்தான்.அருணாசலம் குறித்த நினைப்பு மேலிட்டது.இனி அருணாசலத்தை நோக்கிப் புறப்பட வேண்டியதுதான்!என்ற திடமான தீர்மானமான முடிவிற்கு வந்தான்.அன்றைய சூழ்நிலை அவனுக்குச் சாதகமாகவே அமைந்தது!

 பள்ளிக்கூடத்தில் இன்று ஸ்பெஷல் கிளாஸ் போய்விட்டு வருகிறேன் என்று வேங்கடராமன் அண்ணனிடம் கூறினான்.அப்படியா?கீழே இருக்கும் என் பெட்டியைத் திறந்து ஐந்து ரூபாய் எடுத்துக்கொள் போகும் வழியில் எங்கள் காலேஜில் கட்டிவிடு என்று அண்ணன் நாகசாமி கூறினார்.அதுவும் அண்ணாமலையார் திருவருளே என்று கருதிய வேங்கடராமன் ஜந்து ரூபாயை எடுத்துக் கொண்டான்.இரயில் மார்க்கங்கள் குறித்த ஒரு வரைபடத்தைப் பார்த்ததில் திருவண்ணாமலை பயணத்திற்கு மூன்று ரூபாய் போதும் என்று தெரிந்தது.நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவருடைய உத்தரவுப்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டேன்.நல்ல காரியத்திற்கே புறப்படுவதால் எவரும் விசனப்பட வேண்டாம்.பணமும் செலவு செய்ய வேண்டாம் உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை ரூ.2 இதோடு கூட இருக்கிறது என்று அண்ணனுக்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்தான் வேங்கடராமன்.அவசரமாக மதுரை இரயில் நிலையத்திற்குச் சென்றான்.அன்று தெய்வாதீனமாக இரெயில் சற்றுக் காலதாமதமாக வந்தது!திண்டிவனத்திற்குப் பயணச் சீட்டு வாங்கினான் ஒருவாறு விடுதலை பெற்ற உணர்வோடு வண்டியில் ஏறி அமர்ந்தான்.வண்டியும் புறப்பட்டது.அண்ணாமலை அருணாசலம் அருணகிரி ஆகிய சொற்கள் பக்தர்களைச் சொக்க வைக்கும் மந்திரச் சொற்கள் மகான்களைத் தன்பால் ஈர்த்து இறையருள் இன்பத்தில் திளைக்கச் செய்து புகழும் முக்தியும் அருளும் அற்புதத் திருத்தலம் அண்ணாமலை!மலையும் அண்ணாமலை! மகிமைமிகு தலமும் அண்ணாமலை தலத்தில் உறையும் மகேசன் பெயரும் அண்ணாமலை!

மதுரையிலிருந்து திண்டிவனத்திற்கு ரெயில் கட்டணம் இரண்டு ரூபாய் பதின்மூன்று அணா.அது போக வேங்கடராமனிடம் மூன்று அணாதான் எஞ்சி இருந்தது.திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை மிகவும் அருகில் இருக்குமென்று வேங்கடராமன் கருதினான்.வண்டியேறிய பிறகு வேங்கடராமன் வயதான ஒருவர் புதிய வழித்தடம் குறித்துக் கூறினார்.விழுப்புரத்திலிருந்து காட்பாடி செல்லும் வண்டிகள் திருவண்ணாமலை வழியாகச் செல்கின்றன என்ற விவரத்தைக் கூறினார்.இவனிடம் மீதமிருந்த சில்லரை அறையணி நல்லூர் வரை செல்லுமளவிற்கே இருந்தது.அங்கே இறங்கி நடந்தே திருவண்ணாமலைக்குச் செல்லத் தீர்மானித்தான் மாலை நேரத்தில் அறையணி நல்லூரில் இறங்கி மலைக்கோயில் ஈசனைத் தரிசிக்கச் சென்றான் வேங்கடராமன்.அங்கு ஒரு ஜோதி தோன்றியது சன்னிதியிலிருந்த ஈசன் திருமேனியில் அந்த ஜோதி ஐக்கியமானது!திருக்கோவிலூர் பாகவதரிடம் வேங்கடராமன் தனது கடுக்கனை அடகு வைத்து நான்கு ரூபாய் வாங்கிக் கொண்டான் அடுத்தநாள் காலையில் திருக்கோவிலூரிலிருந்து ரயிலில் திருவண்ணாமலைக்குப் பயணமானான் திருவண்ணாமலையை நெருங்கிய உடனேயே வேங்கடராமன் ஆனந்தக் கண்ணீர் உகுத்தான்.உடல் சிலிர்த்தது!அருணாசலசிவ!அருணாசலசிவ! என்ற மந்திரத்தை உள்ளம் உருகி ஜபித்தபடி 1886 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் வேங்கடராமன் பாலரமணராக அண்ணாமலையில் அடியெடுத்து வைத்தார்.ஈசனும் பாலரமணரைப் பாசத்துடன் வரவேற்றார்!ஆனால் பாலரமணர் பாசங்கள் அனைத்தையும் துறந்தார்.

தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டார்.வேட்டியைக் கோவணமாகக் கட்டிக் கொண்டார். ஜாதி சின்னமாகிய பூணூலை அறுத்து எறிந்தார்.அனைத்தையும் துறந்த சுத்தபுருஷனாக ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார்.பால் வடியும் முகம் கொண்ட பாலரமணரின் தவத்தைக் கண்டு பலரும் வியந்தனர்.எனினும் விஷமிகள் சிலர் அவர் மீது கற்களை வீசித் தொந்தரவு செய்தனர்.அண்ணாமலையர் கோயிலில் ஓர் இருண்ட குகை இருந்தது.அதனைப் பாதாளலிங்கக் குகை என்று கூறுவார்.அங்குப் பகல் நேரத்திலேயே இருள் நிறைந்திருக்கும்.பாலரமணர் அதுவே தனது தவத்திற்கு ஏற்ற தனிமையான இடம் எனத் தேர்ந்தெடுத்தார்.அங்குச் சென்று தவத்தில் அமர்ந்தார்.ஊண் உறக்கம் இல்லாமல் கடுந்தவம் இயற்றினார்.உடல் மெலிந்தது.குகைக்குள் இருந்த புழுக்களும் பூச்சிகளும் பாலரமணரின் உடலைத் துளைத்தன.பாலயோகியின் தொடைப்பகுதி அரிக்கப்பட்டது ஆனாலும் அவருடைய தவம் கலையவில்லை!அங்கு அவர் எத்தனை காலம் கடுந்தவம் இயற்றினார் என்பது எவருக்கும் தெரியாது.சேஷாத்ரி சுவாமிகள் அக்குகையில் நுழைந்து வெளியே வந்தார்.உள்ளே தவமியற்றிய உத்தமத் துறவியை உலகிற்கு அறிமுகம் செய்தார்.சேஷாத்ரி சுவாமிகள் ரமணர் திருவண்ணாமலைக்கு வருவதற்கு எழு ஆண்டுகள் முன்பு வந்தவர்.வயதிலும் ரமணரைவிட மூத்தவர்.உத்தண்டி நயினார் என்ற சாது பாலரமணரிடம் உபதேசம் பெற வந்தார் அவர் பாலரமணருக்குப் பாதுகாவலாக இருந்தார்.அவர் இல்லாத நேரங்களில் விஷமிகள் ரமணருக்கு இடையூறுகள் செய்தனர்.எனினும் ரமணர் தமது மௌனத் தவத்தைத் தொடர்ந்தார்.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் முதல் குருநாதரான ஸ்ரீமத்தெய்வசிகாமணி பரமாச்சார்ய சுவாமிகளின் சமாதி அமைந்துள்ள திருக்கோயிலை குருமூர்த்தம் என்று அழைத்தனர்.அண்ணாமலைத் தம்பிரான் என்ற சுவாமிகள் பாலரமணரை குருமூர்த்தத்தில் அமர்ந்து தவம் இயற்ற உதவினார் அங்கு பாலரமணர் பதினெட்டு மாதங்கள் கடுந்தவம் இயற்றினார்.அண்ணாமலைத் தம்பிரான் மதுரையில் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் பாலரமணரின் பெருமைகளை எடுத்துக் கூறினார் அதனைக் கேட்ட சிறுவன் ஒருவன் திருச்சுழி வேங்கடராமன் திருவண்ணாமலையில் இருப்பதாக உறவினர்களிடம் கூறினான்.வேங்கடராமனின் மற்றொரு சிற்றப்பாவான நெல்லையப்பர் திருவண்ணாமலைக்கு வந்தார் மாந்தோப்பில் பரண் அமைத்து அதன் மீதிலிருந்து தவம் இயற்றிக் கொண்டிருந்தார் பாலரமணர் மானாமதுரை நெல்லையப்பர் தரிசனம் செய்ய விரும்புகிறார் என்று எழுதியனுப்பினார் சிற்றப்பா.அவருக்கு அனுமதி கிடைத்தது.பாலரமணரின் கோலத்தைக் கண்டு ஒருபுறம் பெரிதும் வருந்தினார் மறுபுறம் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பாலகன் பரமஞானியாகத் திகழ்வதைக் கண்டு மகிழ்ந்தார்.தன்னுடன் ஊருக்கு வருமாறு அழைத்தார்.பாலரமணர் எவ்விதச் சலனமும் இன்றி மௌனமாக இருந்தார். அவருடைய வைராக்கியத்தைப் புரிந்து கொண்ட நெல்லையப்பர் ஊர் திரும்பினார்.தாய் அழகம்மை தனது மூத்த மகன் நாகசாமியுடன் திருவண்ணாமலைக்கு வந்தார்.அப்போது பாலரமணர் பவளக் குன்று என்ற வேறு இடத்தில் நிஷ்டையில் அமர்ந்திருந்தார்.மகன் வேங்கடராமனை கௌபீன தாரியாகக் கண்ட தாயின் மனம் துடித்தது.தாயும் அண்ணனும் தவசீலரைத் தங்களுடன் அழைத்தனர்.பந்தபாசங்கள் அனைத்தையும் அறுத்துவிட்ட ஞானி பாலரமணர் அவர்களின் சொற்களைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை தாயின் கதறலைக் கண்ட பக்தர்கள் பதிலை எழுதிக் காட்ட பாலரமணரிடம் வேண்டினர்.

அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான்
நடவா தென் முயற்சிக்கினும் நடவாது
நடப்ப தென்றடை செய்யினும் நில்லாது
இதுவே திண்ணம் ஆதலின்
மௌனமாய் இருக்கை நன்று!

என்ற ஞானமொழிகளை பாலரமணர் எழுதினார் தாய் வேறு வழியின்றி நாகசாமியுடன் ஊர் திரும்பினார்.விசாகப்பட்டினம் நரசிம்ம சாஸ்திரிகளின் மகன் கணபதி முனிவர் திருவண்ணாமலை வந்து தியானத்தில் அமர்ந்திருந்தார்.அப்போது பகவான் அழைக்கிறார் என்றல ஒரு ஒலி அவுருக்குக் கேட்டது உடனே மலையேறிச் சென்று விருபாட்ச குகையில் அமர்ந்திருந்த பகவானைக் கண்டு வணங்கினார்.தன்னைச் சீடனாக ஏற்று நல்லுபதேசம் செய்ய வேண்டினார்.பகவான் அவ்வாறே அவரைச் சீடராக ஏற்று பதினைந்து நிமிடத்திற்கு உபதேசம் செய்தருளினார்.பின்னர் கணபதி முனிவர் பாலரமணரை இளமையிலேயே புலன்களை அடக்கி ஆண்டவர் என்ற பொருளில் அவரை ரமணர் என்று அழைத்தார்.அப்பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது!சேஷாத்ரி சுவாமிகள் அடையாளம் காட்டிய பாலரமணரைப் பாமர மக்கள் பிராமண சாமியார் என்றே அழைத்து வந்தனர்.திருவண்ணாமலையில் அடியெடுத்து வைத்தவுடன் வேங்கடராமன் பூணூலை அறுத்தெறிந்தார்.ஜாதிமதங்களைக் கடந்த உத்தமராகி விட்டார் எனினும் அவருக்கும் ஜாதி முத்திரை!

வேங்கடராமன் சிறுவனாக இருந்தபொழுது, அவருடைய உறவினர் லட்சுமண  அய்யர் என்பவர் அவரை ரமணி என்ற செல்லப் பெயரிட்டு அழைத்து வந்தார்.அவரது விருப்பப்படியும் ரமணர் என்ற பெயர் பொருத்தமாக அமைந்துவிட்டது.அடுத்தநாள் ரமணமகரிஷி தமது சீடர்களுக்கு சிறிது நேரம் உபதேசம் செய்தருளினார் காவியகண்ட கணபதி முனிவர் முன்னரே பிரபலமாக இருந்தார்.அவர் ரமண மகரிஷியின் சீடரான பிறகு மக்கள் மத்தியில் ரமணர் பெரும் புகழ் பெற்றார் பகவான் அவ்வப்பொழுது பக்தர்களின் வினாக்களுக்கு அளித்த பதில்களைத் தொகுத்து ரமணகீதை என்ற நூலாக வெளியிட்டவர் கணபதி முனிவரே ஆவார்.முதல் முறை திருவண்ணாமலைக்கு வந்து மகனைக் கண்டு ஏமாற்றத்துடன் மானாமதுரைக்குத் திரும்பினார் அழகம்மை.எனினும் மகனைக் காணஅடிக்கடி வந்து சென்றார் 1914 ஆம் ஆண்டு அண்ணாமலை வந்த அழகம்மைக்கு உடல் நலம் குன்றியது இருபது நாள்களுக்கு மேல் அவர் படுத்த படுக்கையாக இருந்தார்.அப்போது ரமணர் தமது அன்னையை அன்புடன் கவனித்துப் பணிவிடைகள் செய்தார் உடல் நலம் தேறியவுடன் அழகம்மை மானாமதுரைக்குத் திரும்பினார்.அழகம்மைக்குப் பாதுகாப்பாக இருந்து வந்த நெல்லையப்பர் காலமானார்.மகன் நாகசுந்தரத்தின் மனைவியும் மறைந்தார்.சோகங்கள் தொடர்ந்தன.துவண்டு போன அழகம்மை தம்முடைய  ஞானப் புதல்வனே கதியென்று கருதி 1916ஆம் ஆண்டு மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்தார்.அழகம்மையின் வருகைக்குப் பிறகு பகவான் ஸ்கந்தாஸ்ரமத்தில் வசிக்கலானார்.அழகம்மை சமையல் பணிகளை மேற்கொண்டு பக்தர்களுக்கு அன்னம் அளித்தார்.அழகம்மை உடன் இருப்பதை பகவான் விரும்பமாட்டார் என்றும் அவர் நமது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டுவிடுவார் என்றும் பக்தர்கள் எண்ணினர்.பகவான் அவ்வாறு செய்யவில்லை எனினும் ரமணர் பக்தர்களிடம் பேசிய அளவிற்கு அழகம்மையிடம் பேசியதில்லை.

பகவான் ஆசிரமத்திலுள்ள பல பக்தர்களில் ஒருவராகவே அழகம்மையையும் கருதினார். பகவானின் தாய் என்ற முறையில் அவருக்கென்று எந்த விதமான தனியுரிமையும் அளிக்கவில்லை எனினும் பகவான் அவ்வப்பொழுது அழகம்மையின் ஆச்சார அனுஷ்டானங்கள் குறித்து நகைச்சுவை கலந்த விமர்சனங்கள் செய்வார் அந்த முறையிலேயே தமது தாயை ஞானமார்க்கத்திற்குத் திரும்பினார்.அழகம்மையின் இறுதிக்கால வாழ்க்கையில் ஆறு ஆண்டுகள் ஆச்சிரமத்தில் கழிந்தன.அப்போது அவருக்கு பகவானிடம் பூரண நம்பிக்கை ஏற்பட்டது. அழகம்மையின் இறுதிநாளும் வந்தது.அழகம்மைக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.பகவான் தமது வலக்கரத்தை அன்னையின் இதயப் பகுதியிலும் இடக்கையை உச்சந்தலையிலும் வைத்தபடி அருகிலேயே உட்கார்ந்திருந்தார். இரவு எட்டு மணிக்கு அழகம்மை முக்தி அடைந்தார்.அழகம்மை சமாதிநிலை அடையும் வரை பகவானும் பக்தர்களும் சாப்பிடாமல் இருந்தனர்.சமாதி எய்திய பிறகு பகவான் இனி நாம் சாப்பிடலாம் தீட்டும் இல்லை ஒன்றும் இல்லை என்று கூறினார்.அடுத்தநாள் காலையில் சமாதிக் கிரியைகள் தொடங்கின.அழகம்மையின் உறவினர்களும் ரமணரின் பக்தர்களும் கூட்டமாக வந்தனர்.மலைக்கு அப்பாலுள்ள பாலிதீர்த்தம் என்ற இடத்தில் முறைப்படி சமாதிக் குழியில் விபூதி கற்பூரம் உப்பு ஆகியவற்றை நிரப்பினர்.அதன் மீது ஒரு சமாதி கட்டினார்.சமாதியின் மீது சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.அந்த சிவலிங்கம் மாத்ருபூதேசுவரர் என்று பெயர் பெற்றது மாத்ருபூதேசுவரருக்கு அன்றாட பூஜைகள் தொடர்ந்து நடக்கின்றன.ஆண்டு தோறும் வைகாசி தேய்பிறை நவமியில் மாத்ருபூதேசுவரர் மகாபூஜை சிறப்பாக நடைபெறுகிறது .கணபதி சாஸ்திரிகளைப் போன்ற கல்வியாளர்கள் பலரும் ரமணரின் சீடர்களானார்கள்.பல துறைகளைச் சேர்ந்த சான்றோர்களும் பாமரரும் பகவானுக்குச் சீடர்கள் ஆகி தங்களால் இயன்ற பணிவிடைகளையும் தொண்டுகளையும் செய்தனர்.

ரமணாஸ்ரமம்:ரமணர் 54 ஆண்டுகள் திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.அதில் 26 ஆண்டு வாழ்க்கையை பாதாளலிங்கக் குகை குருமூர்த்தம் மாந்தோப்பு, பவழக் குன்று விருபாட்ச குகை ஸ்கந்தாஸ்ரமம் ஆகிய வேறுபட்ட இடங்களில் வாழ்ந்தார் இருபத்தெட்டு ஆண்டுகள் பகவான் ரமணாஸ்ரமத்தில் தொடர்ந்து எழுந்தருளியிருந்தார்.ரமண பக்தர்களில் ஒருவர் கந்தசாமி.இவர் தன்னுடைய சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் ஸ்கந்தாஸ்மரத்தை உருவாக்கினார்.அவருடைய நினைவைப் போற்றும் வகையில் தான் ரமணர் அந்த இடத்திற்கு ஸ்கந்தாஸ்ரமம் என்று பெயரிட்டார்.மலையிலுள்ள ஸ்கந்தாஸ்ரமத்திலிருந்து ரமணர் அடிக்கடி அன்னையின் சமாதிக்குச் சென்று வருவார்.ஒரு நாள் அன்னையின் சமாதிக்கு வந்த ரமணர் தெய்வீக உந்துதலால் அங்கேயே தங்கிவிட்டார்.அந்த இடம் பக்தர்கள் எளிதில் வந்து போகவும் வசதியாக இருந்தது.ஆகவே அந்த இடத்திலேயே பக்தர்கள் ரமணாஸ்ரமத்தை நிறுவினர்.

ஆஸ்ரம நடைமுறைகள்:ரமணர் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து விடுவார். ஆஸ்ரம அன்பர்கள் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, மண்டபத்தில் கூடிவிடுவார்கள்.தியானமும் பக்தியிசையும் நடைபெறும்.ஐந்து மணிக்கு ரமணர் தமது ஆசனத்தில் அமர்வார்.அவர் பதினைந்து மணித்துளிகள் தியானம் செய்வார்.ஆழ்ந்த தியானத்தில் ரமணரை பக்தர்கள் தவயோகியாகக் கண்டு தரிசிப்பார்கள்.ஆஸ்ரம வாழ்க்கையில் எல்லோரும் எல்லாவற்றிலும் சமம் என்ற கோட்பாட்டை பகவான் வலியுறுத்தினார்.பதினோரு மணியளவில் ஆஸ்ரமத்திலுள்ள பசு முதலான வாயில்லா ஜீவன்களுக்கும் வெளியில் காத்திருக்கும் ஏழைகளுக்கும் உணவு வழங்கப்படும்.

புதிய மரபு:ரமணாஸ்ரமத்தில் விலங்கினங்களுக்கும் ஏழைகளுக்கும் முதலில் உணவு வழங்குப்படும் ரமணாஸ்ரமத்தில் பக்தர்களுக்கு உணவு பரிமாறிய பிறகே ரமணருக்குப் பரிமாறுவர்!இது புதிய மரபு!

ரமணரின் எளிமை:பிரமாண்ட பந்தலில் பூஜை அன்னதானம் என அமர்க்களப்படுகிறது.காலை 10 மணி முகூர்த்தத்தில் ரமணரை அழைத்து வந்து பூஜை செய்ய ஏற்பாடு.இதற்கிடையே அன்னதானத்திற்காக நிறைய பரதேசிகள் வி.ஐ.பி பந்தலில் நுழைந்துவிட்டனர்.அப்போது யாரோ ஒருவர் பரதேசிகளுக்கு கிழக்குப் பந்தலில் அன்னதானம் நடக்கும்.அங்கே செல்லுங்கள்.இங்கே வராதீர்கள்!என்று விரட்டியடித்தார்.மணி காலை 9.50 ரமணரை அழைக்கப் போனால் அவரைக் காணோம்!எங்கே தேடியும் கிடைக்காமல் திடுக்கிட்டு திகைத்தனர்.பூஜை நேரமோ நெருங்கிவிட்டது. அப்போது ஒருவர் ஓடோடி வந்து.கிழக்குப் பக்க பந்தலில் ரமணரைப்போல் ஒருவர் உட்கார்ந்திருப்பதாகச் சொன்னார்.அங்கு போய்ப் பார்த்தால் பரதேசிகளுக்கு நடுவே ரமணர் அமர்ந்திருக்கிறார்.இங்கே வந்து ஏன் உட்கார்ந்திருக்கிறீர்கள்!என்று கேட்டபோது ரமணர் சொன்னார்.பரதேசிகள் கிழக்குப் பந்தலுக்குப் போகணும்னு ஒருவர் விரட்டினார்.அதான் இங்கு வந்து விட்டேன்!

என் கடன் பணிசெய்து கிடப்பதே:என்கடன் பணிசெய்து கிடப்பதே என்றார் அப்பர்பெருமான் அதற்கேற்ப பகவான் ரமணர் எப்போதும் ஏதாவது ஒரு பணியில் தன்னை ஈடு படுத்திக் கொள்வார் காலையில் ஒன்பது மணிக்கு செய்தித்தாள்களைப் படிப்பார்.கடிதங்களைப் படிப்பார்.அச்சுப் பிரதிகளைத் திருத்துவார் புத்தக பைண்டிங் செய்வார்.காய்கறிகளை நறுக்குவார்;தோட்ட வேலைகள் செய்வார்;எனினும் அவருடைய உள்ளம் எப்போதும் ஆத்மானுபவத்தில் திளைத்து இருக்கும்!மாலை மூன்று மணி அளவில் ஆஸ்ரம அன்பர்களுக்கு காபி அல்லது தேநீர் வழங்கப்படும்.அதன் பிறகு ரமணர் பக்தர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.ஐயங்களைப் போக்குவார்.சில நாள்களில் ரமணர் மெதுவாக நடந்து சென்று கிரிவலம் வருவார்.ரமணரின் இளவலும் சின்ன சுவாமி என்று அழைக்கப்பட்டவரும் ஆகிய நிரஞ்சனானந்தர்  ஆஸ்ரமம் பொறுப்பாளராக இருந்து அனைத்து வளர்ச்சிப்பணிகளையும் நிறைவேற்றினார்.ஆஸ்ரமத்தில் புத்தக விற்பனை மையம் திறப்பு மாத்ருபூதேஸ்வர் கோயில் குடமுழுக்கு வேத பாடசாலை தொடக்கம் ஆகிய பணிகள் அனைத்தும் நிரஞ்சானந்தரால் செல்வனே நிறைவேற்றப்பட்டன.ஆஸ்ரமத்தில் இரவு ஏழு மணிக்கு மேல் பக்திப் பாடல்களை இசைப்பார்கள் ஒன்பது மணிக்கு இரவு உணவு பரிமாறப்படும்.

ரமண மகரிஷியும் ஸ்ரீநாராயணகுருவும்:அண்மைக்காலத்தில் வாழ்ந்த அருளாளர்களில் முக்கியமானவர் ஸ்ரீநாராயணகுரு.அண்ணாமலையில் ரமண மகரிஷியும் கேரளத்தில் ஸ்ரீநாராயண குருவும் சமகாலத்தில் ஞானச்செங்கோல் ஓச்சி வந்தனர்.அச்சுதானந்தர் கோவிந்தானந்தர் வித்யானந்தர் ஆகிய சீடர்களுடன் நாராயணகுரு அண்ணாமலைக்கு வந்தார்.ரமணமகரிஷி ஸ்கந்தாஸ்ரமத்தில் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தார்.சற்று நேரம் அவரை உற்று நோக்கிய ஸ்ரீநாராயணகுரு மரத்தடியில் அமர்ந்து ரமணருடன் அளவளாவினார்.
இன்று எங்களுடன் சாப்பிடலாமே!என்று ரமணர் ஸ்ரீநாராயணகுருவிடம் மலையாளத்தில் கூறினார்.இருவரும் அமர்ந்து உணவருந்தினர்.ஸ்ரீநாராயணகுரு பத்தியச் சாப்பாடு மேற்கொண்டு இருந்ததால் மோர்சாதம் கனிகள் அப்பளம் பாயசம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டார்.ரமணர் மதிய உணவிற்குப் பிறகு சற்று நேரம் நேரம் மலைப்பக்கம் சென்று வருவார்.அன்று ரமணர் மலைப்பக்கம் சென்றுவருவதற்குள் ஸ்ரீநாராயணகுரு அவருக்கு கவிதைக் காணிக்கை  ஒன்றை ஆயத்தமாக வைத்திருந்தார்!ஆம் கவிதை எழுதிய சீட்டை நாராயணகுரு ரமணரிடம் கொடுத்தார்.நாராயணகுரு விடைபெற்றுச் சென்ற பிறகு ரமணர் அந்தச் சீட்டைப் பிரித்துப் படித்தார்.நிவ்ருத்தி பஞ்சகம் என்ற தலைப்பில் ஸ்ரீநாராயணகுரு ரமணரைப் போற்றிப் புகழ்ந்து, சம்ஸ்காரத்தில் ஐந்து சுலோகங்கள் எழுதியிருந்தார்.சிலநாட்கள் சென்ற பின் நாராயணகுருவின் வர்க்கலை ஆசிரமத்திலிருந்து ரமணருக்கு ஒரு கடிதம் வந்தது.அதில் நாராயணகுரு பகவானைப் போற்றி முனிசரய பஞ்சகம் என்ற தலைப்பில் மேலும் ஐந்து சுலோகங்கள் இயற்றி அனுப்பியிருந்தார்.ஸ்ரீநாராயணகுரு இயற்றிய பத்துப் பாடல்களையும்(இரண்டு பஞ்சகங்கள் )ரமணர் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் தமது கைப்பட எழுதி வைத்துள்ளார்.நாராயணகுரு பகவானை ராஜ சர்ப்பம் என்று போற்றி உரைத்துள்ளார்.வர்க்கலை ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களிடம் ஸ்ரீநாராயணகுரு ரமணரைப் பற்றி விசாரிப்பது வழக்கம்.நாராயணகுரு உடல் நலம் குன்றிய செய்தி தந்தி மூலம் ரமணருக்குத் தெரிவிக்கப்பட்டது.பகவான் ரமணர் ஸ்ரீநாராயணகுருவிற்கு உதவுவதற்காகத் தமது சீடர்கள் இருவரை அனுப்பி வைத்தார்.ஸ்ரீநாராயணகுரு சமாதி அடையும் வரை அவர்கள் வர்க்கலையில் தங்கியிருந்து அவருக்கு அணுக்கத் தொண்டுகள் புரிந்தனர்.இவ்வாறு இரு  நட்புக் கொண்டிருந்தனர்.

ரமணாஸ்ரமத்தில் ராஜேந்திர பிரசாத்:அப்போது இந்திய விடுதலை வேள்வி இறுதிக் கட்டத்தில் இருந்தது. மகாத்மா காந்தியின் தூதுவர்களாக மூவர் ரமணாஸ்ரமத்திற்கு வந்து ஒரு வாரம் தங்கினர்.ரமணரைத் தரிசித்து மகிழ்ந்தனர்.பாபு ராஜேந்திர பிரசாத் ஜம்னாலால் பஜாஜ் காமத் ஆகிய மூவருமே ரமணாஸ்ரமம் வந்தார்கள்.அவர்கள் விடைபெற்றுச் செல்வதற்கு முன்னால் ரமணரைத் தரிசித்தனர்.பஜாஜ் அவர்கள் ரமண தரிசனம் தங்களுக்கு புதிய ஆத்ம பலத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறினார்.ரமணரும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.சுதந்திரத்திற்குப் பிறகு 1950 இல் ரமணரின் ஆசிகளைப் பெற்ற பாபு ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகப் பெறுப்பேற்றார்.

தமிழ்க் கவிஞர் ரமணர்:ஆத்மஞானியாகவும் சித்தபுருஷராகவும் திகழ்ந்த ரமணர் ஒரு சிறந்த தமிழ்க் கவிஞர் ஆவார்.பிக்ஷ ஏற்கச் செல்லும் பக்தர்கள் பாடுவதற்கு ஏற்றதாக ரமணர் இயற்றியது அக்ஷரமணமாலை என்ற தோத்திரம்.அக்ஷரம் என்றால் அழியாதது என்று பொருள்.எழுத்துக்கள் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்பதால் அக்ஷரம் என்றனர்.மேலும் எழுத்துக்கள் அகரத்தில் தொடங்கி க்ஷகர த்தில் முடிவடைகின்றன.அழியாமல் இருக்கும் இறைவனுக்கு அழியாமல் இருக்கும் எழுத்துக்களால் தொடுத்ததே அக்ஷரமணமாலை.அக்ஷரமணமாலை என்றும் அக்ஷர மணமாலை என்றும் பொருள் கொள்ளலாம்.இதனை ரமணர் தமிழில் தொடுத்ததால் அவில் தொடங்கி வை என்ற எழுத்தில் நிறைவு செய்கிறார்.மொத்தம் நூற்றெட்டுக் கண்ணிகளைக் கொண்டது அக்ஷரமணமாலை.நூலின் தொடக்கத்தில் கணபதி காப்பும் அருணாசலசிவ!அருணாசலசிவ! என்ற பல்லவியும் உள்ளது.வள்ளுவர் தமது பெற்றோர் பெயர்கள் வரும் வகையில் ஆதிபகவன் என்று தொடங்கினார் ரமணர் அக்ஷரமணமாலையின் இரண்டாம் கண்ணியில் அழகு சுந்தரம் போல் என்று குறிப்பிட்டுள்ளார்.ரமணரின் தாய் அழகம்மா தந்தை சுந்தரம் இருவர் பெயரையும் இணைந்து அழகுசுந்தரம் என்று இரண்டாவது கண்ணியைத் தொடங்குகிறார்.தோத்திரமாகப் பாட ஏற்றது.எனினும் அக்ஷரமண மாலையில் மேலான வேதாந்தக் கருத்துக்கள் பொதிந்துள்ளன.நான் யார் என்ற ஆத்ம விசார நூலை ரமணர் இயற்றியுள்ளார். ரமணர் இயற்றிய உள்ளது நாற்பது, திருமூலரின் திருமந்திரத்தைப் போன்ற நடையில் இயற்றப்பட்டுள்ளது.வடமொழியில் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் ரமணர் சில கவிதைகள் இயற்றி உள்ளார்.எனினும் தமிழ்க்  கவிதை எழுதுவதிலேயே ஆதிக ஆர்வம் கொண்டிருந்தார்.ரமணரின் தாயார் உடல் நலம் குன்றியிருந்த பொழுது அவர் இனிய வெண்பாக்களை இயற்றினார்.

அலையாய் வருபிறவி அத்தனையும் மாற்ற
மலையாய் எழுந்த மருந்தே!- தலைவாநின்
தாள்கதியாய் வாழும் என் தாய் தாப மாற்றியே
ஆள்வதும் உன்கடனே ஆம்.

நினைத்த மாத்திரத்தில் வெண்பாக்களை இயற்றும் திறமை பெற்றவர் ரமணர். ரமணரின் நூல்கள் ரமண நூற்றிரட்டு என்ற பெயரில் வெளிவந்துள்ளன.தனி நூல்களும் உள்ளன.ரமணர் திருவண்ணாமலைக்கு வந்த பொன்விழா ஆண்டு 1946 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.1948 ஆம் ஆண்டு பகவானுக்கு இடது முழங்கைக்குக் கீழே ஒரு கட்டி தோன்றியது சர்க்கோமா என்ற புற்றுநோய்க் கட்டி என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர்.கரத்தை வெட்டி எடுக்க வேண்டுமென்று கூறினார்.மகான் இயற்கை வழி நடக்கட்டும் என்று கூறிவிட்டார்.அறுவைச் சிகிச்சை பயனளிக்கவில்லை.நோயைப் பொருட்படுத்தாமல் மகரிஷி தனது பணிகளைச் செய்து வந்தார்1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் பகவான் பரிபூரணம் எய்தினார்.சற்றே கண்களை விரித்து புன்னகை மலர்ந்து விழியோரத்தில் பேரானந்தக் கண்ணீர் மல்கக் காட்சியளித்த நிலையில் சித்தி அடைந்தார்.அதே நேரத்தில் ஓர் எரிநட்சத்திரம் வானவெளியில் மெல்ல நகர்ந்து அண்ணாமலைச் சிகரத்தில் ஐக்கியமானதை நகரவாசிகள் கண்டனர்!அருணாசலசிவ என்று பக்தர்கள் முழங்கினர்.மகரிஷியின் பூதவுடலை பத்மாசனத்தில் இருக்கச் செய்து அபிஷேக ஆராதனைகள் நடத்தினர்.மாத்ரு பூதேஸ்வரர் சன்னதி பழைய தரிசன மண்டபம் இரண்டுக்கும் இடையில் பூதவுடலை சமாதிகொள்ளச் செய்தனர்.அன்றாட வழிபாடுகள் நடைபெறுகின்றன.திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் ஆண்டு தோறும் ஆராதனை விழா நடைபெறுகிறது.ரமணாசிரமம் சேஷாத்ரி சுவாமிகள் அதிஷ்டானம் உள்ள அதே சாலையில் வலப்புறத்தில் அமைந்துள்ளது.திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்தில் அவருடைய கமண்டலம் பாதணி கைத்தடி ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.இந்த புண்ணிய பூமியில் ரமணர் இன்றும் தங்கியிருந்து தங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் பக்தர்கள்.
பிண்ணாக்கீசர்

கோபாலா, எனக்கு பசிக்கிறதே! யாராவது உணவு தாருங்களேன், என்று அரற்றினார் பிண்ணாக்கீசர்.இவர் ஒரு அத்திமரப் பொந்தில் வசித்து வந்தார். கார்காத்தார் என்ற குலத்தில் இவர் அவதரித்ததாகச் சொல்கிறார்கள். இவருக்கு தந்தை கிடையாது. கன்னித்தாய் ஒருத்தி இறையருளால் இவரைப் பெற்றெடுத்தாள். அவரைப் பற்றிய தகவல்கள் இல்லை. குழந்தையைப் பெற்றெடுத்த அந்தத்தாய் எந்நேரமும் இறை சிந்தனையிலேயே இருப்பாள். கோயில்களுக்குச் சென்று அங்கேயே தங்குவார். பிரசாதம் தான் உணவு. கோயிலுக்கு வருவோர் போவோரும் உணவளிப்பர். இதை மட்டுமே சாப்பிட்டு வளர்ந்ததால், பிண்ணாக்கீசருக்கு எவ்வித கெட்ட வழக்கங்களுக்கும் ஆளாக வழியில்லாமல் போனது.சமையல் என்பது முக்கியமான ஒரு விஷயம். பெண்ணோ ஆணோ வீட்டில் சமைக்கும் போது, நல்ல எண்ணங்களுடன் சமைக்க வேண்டும். நாம் என்ன எண்ணியபடி சமைக்கிறோமோ, அந்த எண்ணங்கள் உணவில் ஊறிப்போகும். நல்லதை எண்ணியிருந்தால், தெய்வ ஸ்லோகங்களைச் சொல்லியபடியோ, கேட்ட படியோ சமையல் செய்திருந்தால் அதை சாப்பிடுவோரின் உடல்நலன் மட்டுமின்றி உள்ளத்தின் நலனும் வளரும். டாக்டர் சொன்னபடி சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்வோருக்கு கொழுப்பு, சர்க்கரை, உப்பு முதலிய சத்துக்கள் ரத்தத்தில் முன்பை விட அதிகரிக்கும். காரணம் என்ன தெரியுமா? எண்ணங்களின் வண்ணம் தான்! கெட்ட எண்ணங்கள், பிறரை வஞ்சிக்கும் குணம், பணத்தைப் பற்றிய நினைப்பு, அதைக் காப்பாற்றுதல் அல்லது பெருக்குதல் போன்ற சிந்தனைகளுடன் சமையல் செய்தால் பேராசையும், அந்த ஆசையை எட்டுவதற்கு என்னென்ன பாதகங்கள் செய்யலாம் என்ற எண்ணமே வளரும்.இத்தகைய எண்ணங்களுக்கு கோயில் பிரசாதத்தில் இடமில்லை. சாப்பிடும் முன் அந்த உணவை கடவுளுக்கு சமர்ப்பித்து விட்டு சாப்பிடுபவர்கள் நல்ல குணம், செழிப்புடன் திகழ்வார்கள். இதே போல், பிண்ணாக்கீசர் தன் தாய் கொடுத்த கோயில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு உயிர் வளர்த்தார். அவர் ருசிக்கு சாப்பிடுவதில்லை. பசிக்கு சாப்பிடுவார்.

இப்படி நற்சிந்தனைகளுடன் வளர்ந்த அவர், தன் தாயின் காலத்திற்குப் பிறகு கண்ண பரமாத்மாவின் நிரந்தர பக்தரானார். கண்ணா, கண்ணா, கண்ணா இதைத் தவிர அவர் வாயில் வேறு எதுவும் வராது. பசி வந்தால் கோபாலா, எனக்கு உணவு கொடேன், எனக் கதறுவார்.அந்நேரத்தில் யாராவது ஒருவர் பால், பழம் கொண்டு வந்து கொடுப்பார். ஒரு பழம், கொஞ்சம் பால்...அவ்வளவு தான் சாப்பிடுவார். பசி தீர்ந்து விடும். மீண்டும் மரப்பொந்தில் போய் அமர்ந்து, இறைவனைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவார். இப்படியே காலம் கடந்த வேளையில், ஒருநாள் பாம்பாட்டி சித்தர் அவர் முன்பு தோன்றினார். சீடனே, பொந்தில் இருந்து வெளியே வா, என்றார். கண்ணால் பார்த்து நயன தீட்சை அளித்தார். கையால் தொட்டு ஸ்பரிச தீட்சை கொடுத்தார். கால்களால் அவருக்கு திருவடி தீட்சை கொடுத்தார். உலக நன்மையே உன் குறிக்கோளாக இருக்கட்டும் என்று உபதேசம் செய்து விட்டு மறைந்து விட்டார். குருவின் போதனையை நிறைவேற்ற கண்ணனை நினைத்து கடும் தவத்தில் ஆழ்ந்தார் பிண்ணாக்கீசர். இதனால் அவருக்கு அஷ்டமாசித்திகளும் கைகூடின. ஒருமுறை சிவ தியானத்திலும் அவர் ஆழ்ந்தார். தன் தவத்தின் முடிவில் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்ற தத்துவத்தை அறிந்தார். நோயற்ற மக்களைக் குணப்படுத்த முடிவு செய்தார். அவரைப் பார்த்தாலே சிலருக்கு நோய்கள் பறந்தன. சிலரை அவர் தொட்டவுடன் நோய் குணமானது. சிலருக்கு மண்ணையே மருந்தாக அவர் கொடுத்தார். அவர் கொடுத்த மண்ணை வாயில் போட்டதும் சர்க்கரை போல நோயாளிகளுக்கு இனித்தது. மண்ணைத் தின்ற மாத்திரத்தில் நோய்களும் விலகின. இதனால், அவரைத் தேடி ஆயிரக் கணக்கானோர் வர ஆரம்பித்து விட்டனர். கேரளாவில் உள்ள நாங்கணாச் சேரி என்ற கிராமத்திற்கு அவர் சென்றார்.

தகரத்தைப் பொன்னாக்கும் ரகசியம், உடலை எத்தனை வயதானாலும் இளமையுடன் வைத்திருக்கும் காயகல்ப ரகசியம் ஆகியவற்றைப் படித்தார். அந்தக்கலையைப் படிப்பதற்காக பல இளைஞர்கள் அவரைத் தேடி வந்தனர். தங்களைச் சீடர்களாக ஏற்று, அந்த ரகசியங்களைக் கற்றுத் தருமாறு கேட்டனர். அந்த இளைஞர்கள் இந்த வித்தைகளைக் கற்று சுயநலத்துடனும், உலகை மிரட்டும் நோக்குடனும் செயல்படுவார்கள் என்பதை ஞானதிருஷ்டியால் உணர்ந்த சித்தர், அதற்கு மறுத்து விட்டார். மேலும், தனக்கு சீடர்களே வேண்டாம் எனச் சொல்லி விட்டார். பின்னர், ஒரு மரப்பொந்தில் தங்கிக் கொண்டார் சித்தர். அங்கிருந்தபடியே மக்களுக்கு வைத்தியம் செய்ய ஆரம்பித்தார். இந்த உடலில் கட்டப் பட்டிருக்கும் கோவணம் கூட இறைவனால் தரப்பட்ட இரவல் தான். உன் உயிர் பிரிந்து உன்னை எரிக்கவோ, புதைக்கவோ செய்தால் இந்த  கோவணம் உன்னோடு வருமா? கோவணமும் இரவல் கொண்ட தூலம் இது என்று உடலைப் பற்றி அவர் பாட்டுப் பாடி மக்களை உலகப்பற்றில் இருந்து விடுவிக்க முயற்சியெடுத்தார். அவற்றைப் பாடல்களாக வடித்தார். ஒருநாள் அவர் சிவபூஜையில் ஆழ்ந்தார். அப்படியே சமாதி நிலைக்குச் சென்றவர், அந்த மரப்பொந்தை விட்டு வெளியே வரவில்லை. ஒரு காலத்தில் அந்தப் பொந்தும் அடைபட்டுப் போனது. சித்தர் சமாதியாகி விட்டார் என்பதை அறிந்த மக்கள், அந்த மரத்தையே அவரது சமாதியாகக் கருதி வழிபடத் துவங்கினர். 18 சித்தர்கள் தொடரை படித்த நாம், அவர்களை தினமும் மனதார வணங்கி, தங்கத்தின் மீதான ஆசையை ஒழிக்க அருள்புரியுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும்.
ஐம்பெரும் காப்பியம் அறிமுகம்

பழந்தமிழ் இலக்கியங்களில் காப்பியங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.காப்பியம் என்பது தெய்வத்தையோ உயர்ந்த மக்களையோ கதைத் தலைவர்களாகக் கொண்ட நீண்ட செய்யுள் ஆகும். ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதலில் குறிப்பிட்டவர் மயிலை நாதர்.அறம்,பொருள், இன்பம்,வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை காப்பியம் எனப்பட்டன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சிலப்பதிகாரம்,மணிமேகலை,சீவக சிந்தாமணி, வளையாபதி,குண்டலகேசி ஆகிய ஐம்பெருங் காப்பியங்கள் தோன்றின.இந்த ஐந்தனுள் சிறப்புத் தகுதி வாய்ந்தவை சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் ஆகும்.இவ்விரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைப்பர்.இவ்விரண்டும் கதையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது மட்டுமன்றி சமகாலத்தில் தோன்றியவையாகும்.பிற மூன்று காப்பியங்களும்  சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.காப்பியம் தமிழில் முக்கியபங்கு வகிக்கின்றன என்ற அடிப்படையில் ஒவ்வொரு காப்பியமும் ஒவ்வொரு சிறப்பினை பெற்று திகழ்கிறது.அதில் சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியமாகும்.அடுத்ததான மணிமேகலை தமிழின் முதல் சமயக் காப்பியம் ஆகும்.மூன்றாவதான சீவகசிந்தாமணி விருத்தப்பா என்ற யாப்பு வகையில் தமிழில் எழுந்த முதல் காப்பியம் என்பதுடன் காலத்தால் முதன்மை என்ற பெருமையும் பெற்றது.நான்காவதாக உள்ள வளையாபதியில் விருத்தப்பாவின் முன்னைய வளர்ச்சி நிலைகளை காணலாம் கடைசியாக உள்ள குண்டலகேசியோ சமயப்பூசல் அடிப்படையில் தோன்றிய காப்பியம் ஆகும்.ஐம்பெரும் காப்பியம் பற்றி தண்டி அலங்காரம் கூறும் இலக்கணம்

பெருங்காப்பிய நிலைபேசும் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றின் ஒன்று
ஏற்புடைத் தாகி முன்வர இயன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகி
கற்றோர் புனையும் பெற்றிய தென்ப.
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 81 ॐ
      {திருவாதிரைச் சிறப்பு : 2}
கிட்டத் தட்ட முடியும் தருணம் வந்து விட்டது இந்தச் சிதம்பர ரகசியம் தொடருக்கு. ஆனாலும் என்னோட மனம் என்னமோ நடராஜர் பற்றியும் அந்தத் திருமேனியைப் பற்றிய புதுப் புது விஷயங்களைச் சேகரிப்பதிலுமே சென்று கொண்டிருக்கின்றது. என்றாலும் எதற்கும் ஒரு முடிவு வேண்டுமே? அது போல் இன்னும் மிஞ்சினால் இரண்டு அல்லது மூன்று பதிவுகளுக்குள் முடிந்துவிடும். இப்போது நாம் நடராஜத் திருமேனி சிதம்பரம் வந்த கதையைத் தொடர்வோமா? சிற்பிகளைச் சிறையில் அடைக்கச் சொன்ன மன்னன் மீண்டும் ஒரு முறை சிலையைப் பார்த்தான். சுத்தச் சொக்கத் தங்கத்திலே செய்யச் சொன்ன சிலை இப்போது செம்பின் சிவந்த நிறத்திலேயே காட்சி அளித்தது. அன்றிரவு தூக்கம் இன்றி தவித்த மன்னன் ஒரு வழியாய்க் கண்ணயரும் தருணத்திலே அவன் முன்னே தோன்றியது ஓர் பேரொளி. கண்ணைக் கூசும் ஒளியைக் காண முடியாமல் கண்ணை மூடித் திறந்த மன்னனின் கண்ணெதிரே நடராஜ திருமேனி காட்சி அளிக்க மன்னனுக்கு ஓர் அசரீரி போன்ற தொரு ஒலி கேட்டது. "மன்னா! இது எம் விருப்பம். நாம் இங்கே செப்புத் திருமேனியாகவே காட்சி அளிக்க எண்ணம் கொண்டோம். உன் கண்களுக்கு மட்டுமே நாம் பொன் மேனியாகக் காட்சி அளிப்போம். இந்தச் சிலையை இங்கேயே பிரதிஷ்டை செய்வாய். முன்னால் செய்த செப்புத் திருமேனியை இந்தச் செந்தமிழ் நாட்டின் தென் பாகத்துக்குக் கொண்டு போகச் சொல்! எந்த இடத்திற்கு அருகே வந்ததும் சிலையின் கனம் அதிகம் ஆகித் தூக்க முடியாமல் போகின்றதோ அந்த இடத்தில் சிலையை இறக்கி வைக்கச் சொல்! மற்றவை எம் பொறுப்பு!" என்று ஆணை இடுகின்றார் கூத்தபிரான். அது போலவே மறுநாள் காலையில் சிற்பிகளை விடுதலை செய்த மன்னன் முதலில் செய்த செப்புத் திருமேனியை ஒரு அழகிய பல்லக்கில் வைத்துக் கூடவே சிற்பிகளையும் அனுப்பித் தெற்கே பயணம் ஆகச் செய்கின்றான். தெற்கே போகப் போக எதுவும் அடையாளம் தெரியவில்லையே என கலங்கிய வீரர்களுக்கு தாமிரபரணியின் வடகரைக்கு வரவும் சிலையின் கனம் அதிகரித்து வந்தது தெரிய வருகின்றது. சிலையைக் கீழே வைக்கின்றனர். அசதி மிகுந்து போய்த் தூங்கிப் போகின்றனர் வீரர்களும் சிற்பிகளும். விழித்து எழுந்து பார்த்தால் சிலை அங்கே இல்லை. பதறிப் போனார்கள் அனைவரும். அந்தப் பகுதியின் அரசன் யார் என விசாரித்தார்கள். ராமபாண்டியன் என்பவன் ஆட்சி புரிந்து வந்ததாய்த் தெரிய வந்தது. சிவபக்தியில் சிறந்தவன் என்றும் தினமும் நெல்வேலி நெல்லையப்பரைத் தரிசனம் செய்யாமல் வழிபடாமல் உணவு உட்கொள்ள மாட்டான் எனவும் தெரிந்து கொண்டனர். இந்நிலையில் இச்சிலை தாமிரபரணி கரைக்கு வருவதற்கு முன்னர் ஓர் நாள் மன்னன் கனவில் நெல்லையப்பர் தோன்றினார். ஏற்கெனவே பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் நெல்லையப்பரைத் தரிசிக்கச் செல்ல முடியாமல் மன்னன் மனம் நொந்து வேதனையில் ஆழ்ந்திருந்த சமயம் அது. அப்போது தோன்றிய மன்னன் கனவில் நெல்லையப்பர் வந்து "மன்னா வனத்துக்குப் போ. சிலம் பொலி கேட்கும். அந்தச் சிலம்பொலி கேட்கும் இடத்துக்கு எறும்புகள் சாரை சாரையாய் ஊர்ந்து போவதும் தெரிய வரும். அந்த எறும்புகளைப் பின் தொடர்ந்து செல்வாயாக! அங்கே காணும் என் வடிவைப் பிரதிஷ்டை செய்து ஒரு கோயில் எழுப்பு!" என்று சொல்கின்றார். விழித்தெழுந்த மன்னனுக்குக் கனவில் கண்டது பற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. யோசனையில் ஆழ்ந்திருந்த சமயம் வடக்கே இருந்து வந்த சிற்பிகளும் வீரர்களும் வந்து தாங்கள் கொண்டு வந்த அதி அற்புத நடனச் சிலையைக் காணோம் எனவும் ஈசனின் ஆனந்த நடன வடிவம் அது எனவும் சொல்லவே மன்னன் மேலும் திகைத்தான். அவர்களையும் அழைத்துக் கொண்டு வனத்திற்குச் சென்றான். வனத்தினுள்ளே உள்ளே உள்ளே சென்றான். திடீரென ஓர் இடத்தில் மத்தளம் கொட்டியது. பேரிகை முழங்கியது. தேவதுந்துபி முழங்கும் சப்தம் கேட்டது. தாளம் போடும் ஒலி அத்தோடு யாரோ ஆடும் சிலம்பொலியும் கேட்டது. மன்னனுக்கு நினைவு வந்து கீழே பார்த்தால் எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. எறும்புகளைப் பின் தொடர்ந்தான் மன்னன். குறிப்பிட்ட ஓர் இடத்தில் நடராஜரின் திருமேனி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான். மன்னன் ஆனந்தக் கூத்தாடினான். ஆனந்தக் கூத்தாடும் இறைவனுக்கு அங்கேயே கோயில் எழுப்பவேண்டும் என்பதை அவர் குறிப்பால் அறிவுறுத்தியதையும் நினைவு கூர்ந்தான். அந்த இடத்திலேயே தில்லைக் கூத்தனுக்கு ஓர் அற்புதக் கோயில் எழுப்பினான். அதுவே செப்பறை ஆனந்தக் கூத்தர் திருக்கோயில். திருநெல்வேலிக்கு வடகிழக்கே 9 கி.மீ தூரத்தில் உள்ள ராஜவல்லிபுரத்துக்கு இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தச் செப்பறை ஆனந்தக் கூத்தர் திருக்கோயில். முழுக்க முழுக்கச் சிதம்பரம் கோயில் பாணியிலேயே கட்டப்பட்ட கருவறையோடு கோயிலின் முகப்பில் காளிக்காகவும் ஒரு கோயில் இருக்கின்றது. சிதம்பரத்தின் எல்லையில் இருப்பது போல இங்கேயும் காளி குடி கொண்டிருப்பதாய்ச் சொல்கின்றனர். இது மட்டுமா?? இதே போல் இன்னும் இரண்டு நடராஜர்கள் அதே சிற்பியால் செய்யப்பட்டு இதே திருநெல்வேலி மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி நாளை காண்போமா??

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 81 ॐ

திருவாதிரைச் சிறப்பு பகுதி : 3

ராம பாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசன் ஆன வீரபாண்டியன் செப்பறையில் புதியதோர் விக்கிரஹம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதை அறிகின்றான். தரிசனத்துக்கு வந்த அவன் கண்களிலே நடராஜர் சிலையின் அழகு கவர்கின்றது. மீண்டும், மீண்டும் எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத தித்திக்கும் பேரழகுச் சிற்பம். ஆஹா இதை வடிவமைத்தவர் யாரோ? கேட்ட வீரபாண்டியனுக்குச் சிற்பியின் அறிமுகம் கிடைத்தது. தன்னுடைய சிற்றரசுக்கு உட்பட்ட கட்டாரி மங்கலம்" என்னும் ஊரிலும், "கரிசூழ்ந்த மங்கலம்" ஊரிலும் உள்ள கோயிலில் இது போன்ற அதி அற்புத ஆடும் கூத்தனைப் பிரதிஷ்டை செய்ய எண்ணினான் வீரபாண்டியன். சிற்பியை அவ்வாறே இரு சிலைகள் செய்யுமாறு ஆணை இட்டான் வீரபாண்டியன். சிற்பியும் அதே போல் இரு அழகிய நடராஜர் சிலைகளை வடிவமைத்தார். அவற்றின் அழகில் மெய்ம்மறந்த வீரபாண்டியன் இனி மற்ற எந்தக் கோயில்களிலும் இது போன்ற சிலைகள் பிரதிஷ்டை செய்யக் கூடாது என எண்ணினான். இந்தச் சிற்பி செதுக்கினால் தானே சிலை? சிற்பியின் கைகளைத் துண்டிக்க ஆணை இட்டான் வீரபாண்டியன். பின்னர் சிற்பியையே கொன்றுவிடும்படியும் ஆணை இட்டான். ஆனால் காவலர்களோ இரக்கம் மீதூறச் சிற்பியின் ஒரு கையை மட்டுமே துண்டித்துவிட்டு உயிரோடு விட்டு விட்டார்கள். ராமபாண்டியனுக்கு விஷயம் தெரியவர வீரபாண்டியன் மேல் கோபம் கொண்ட அவன் வீரபாண்டியனின் இரு கைகளையும் வெட்டி விடுகின்றான். பின்னர் அந்த இரு சிலைகளையும் முறையே கட்டாரிமங்கலத்திலேயும் கரிசூழ்ந்த மங்கலத்திலேயும் பிரதிஷ்டை செய்கின்றான். சிற்பிக்கு மரக்கையையும் பொருத்தித் தர ஆணை இடுகின்றான். மரக்கை பொருத்தப்பட்ட சிற்பி அந்தக் கைகளோடேயே முன்பை விட அழகான நடராஜர் சிலை ஒன்றைச் செய்கின்றார். இந்த அதி அற்புதச் சிலையின் அழகில் தன்னையே மறந்த அவர் அது சிலை என்பதையும் மறந்து சிலையின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ள என்ன ஆச்சரியம்?? அவர் கிள்ளிய வடு கன்னத்தில் பதிந்தே விட்டது. கிள்ளிய அந்த வடுவுடனேயே அந்தச் சிலை தூத்துக்குடி அருகே உள்ள கருவேலங்குளம் என்னும் ஊரில் பிரதிஷ்டை செய்யப் பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இந்த செப்பறை, கட்டாரி மங்கலம், கரிசூழ்ந்த மங்கலம், கருவேலங்குளம் ஆகிய நான்கு ஊர்களிலுமே திரு ஆதிரைத் திருநாள் மிக சிறப்பாய்க் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தக் கோயில்கள் அனைத்துமே சிவாகம முறைப்படி அனைத்து அம்சங்களும் பொருந்தியவையும் கூட. திருவாதிரைத் திருநாள் அன்று இந்த நான்கு கோயில்களும் விடிய விடியத் திறந்தே இருக்கும். அன்று நான்கு நடராஜர்களையும் சேர்த்து வழிபடுவதை மிகச் சிறப்பாகவும் நினக்கின்றனர். முதலில் செப்பறை அங்கிருந்து கரிசூழ்ந்த மங்கலம் அங்கிருந்து கருவேலங்குளம் கடைசியாகக் கட்டாரிமங்கலம் என்ற முறையில் தரிசித்தால் பயண நேரமும் சரியாக இருக்கும் என்றும் சொல்கின்றனர்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
10. குலசேகர ஆழ்வார்

பிறந்த இடம் : திருவஞ்சைக்களம் (கோழிக்கோடு அருகில்)
பிறந்த நாள் : எட்டாம் நூற்றாண்டு, பராபவ ஆண்டு மாசி மாதம்
நட்சத்திரம் : மாசி புனர்பூசம், (வளர்பிறை துவாதசி திதி)
கிழமை : வெள்ளி
தந்தை : திட விரதன்
எழுதிய நூல் : பெருமாள் திருமொழி
பாடிய பாடல் : 105
சிறப்பு : மன்னனின் மகனாய் பிறந்து பக்தி மார்க்கத்தில் திளைத்தவர். (கவுஸ்துபாம்சம்)
பிற பெயர்கள் : கொல்லிகாவலன், கூடல்நாயகன், கோழிக்கோன், சேரலர்கோன், வில்லவர்கோன்

திருமாலின் திருவருளால் சேர மன்னன் திடவிரதன் என்பவனுக்கு  கவுஸ்து அம்சமாக குலசேகராழ்வார் அவதரித்தார்.

தனது தந்தைக்குப்பின் சேரநாட்டை மிகவும் சிறப்பான ஆட்சி செய்தார். இவரது சிறப்பான ஆட்சி கண்டு பொறாமைப்பட்டு இவருடன் போருக்கு வந்த சோழ, பாண்டிய மன்னர்களை வென்று, தமிழகத்தை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். இவரது வீரத்தை கண்ட பாண்டியமன்னன் தன் மகளை இவருக்கு திருமணம் செய்து வைத்தார்.


வீரம், போர், நான், எனது என்ற அகங்காரத்துடன் இருந்த குலசேகராழ்வாரின் மனதில் திருமால் புகுந்து, மாயையை விலக்கி தன் மீது மட்டும் நேசம் உடையடவராக மாற்றினாõர். இதனால் மனம் மாறிய குலசேகராழ்வார் இது நாள் வரை தான் செய்து வந்த அற்பத்தனமான செயல்களை நினைத்து வருந்தினார். அத்துடன் நாளுக்கு நாள் நாராயணன் மீது அளவுகடந்த அன்பும் பக்தியும் மிகுதியானது. இந்த அன்பையும் பக்தியையும்,

செந்தழலே வந்து அழலைச்
செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெம்கதிரோறரு
அல்லால் அலராவால்;

வெம்துயம் வீட்டாவிடினும் விற்
றுவக் கோட்டு அம்மானே ! உன்
அந்தம் இல்சீர்க்கு அல்லால்
சுகம் குழைய மாட்டேனே

என்று பாடி அதன் படி வாழ்ந்தும் வந்தார். அத்துடன் நாள்தோறும் வைணவப் பெரியவர் மூலம் ராமாயணக் கதைகளை கேட்டும் வந்தார். ராமாயணக்கதை கேட்ட போது ராமர் சீதையைக் மீட்க அரக்கர்களுடன் போர் புரிந்தார் என்பதை கேட்ட போது உணர்ச்சிவசப்பட்டு அந்த அரக்கர்களுடன் சண்டை போ தன் படையை தயார் செய்தவர். இப்படி பெருமாள் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த மன்னர், ஒருநாள் திடீரென தன் நாட்டை ஆளும் பொறுப்பை தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு பெருமானை தரிசிப்பதற்காக ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம் போன்ற திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார்.

இவர் பெருமாள் மேல் பாடிய பாசுரங்களுக்கு பெருமாள் திருமொழி என்று பெயர், இவர் தன் வாழ்நாள் முழுவதும் பெருமாளை பூமாலையாலும் பாமாலையாலும் பூஜை செய்தார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோயில் சென்று பெருமாளை தரிசித்து நிற்கும் போது இறைவன் பேரருளால் இவ்வுலகை விட்டு வைகுண்டம் சேர்ந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் குலசேகர ஆழ்வார் தனியாக சென்று 1 கோயிலையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 7 கோயில்களையும் என மொத்தம் 8 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
-------------------------
11. நம்மாழ்வார்

பிறந்த இடம் : ஆழ்வார் திருநகரி(தூத்துக்குடி மாவட்டம்)
தந்தை : காரி
தாய் : உடையநங்கை
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12
நட்சத்திரம் : வைகாசி விசாகம் (பவுர்ணமி திதி)
கிழமை : வெள்ளி
எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி
பாடல்கள் : 1296
சிறப்பு : திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்சேனரின்  அம்சம்
பிற பெயர்கள் : மாறன், ஸடகோபன், குருகையர்கோன், வகுளாபரணன், பராங்குஸன்

வைணவத்தில் ஆழ்வார் என்றாலே அது நம்மாழ்வரைத் தான் குறிக்கும்.

வடமொழியின் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களுக்கு ஒப்பான திருவாய் மொழி உள்ளிட்ட நான்கு தமிழ் பிரபந்தங்களை அருளியவர் நம்மாழ்வார்.

ஆழ்வார் அவதரிக்கும் போது ஆத்ம ஞானத்தை மறைக்கிறசடம் என்னும் காற்று தம்மை நெருங்க அதனைக் கோபித்துக் கொண்டார். அதனாலேயே இவருக்கு சடகோபன் என்கிற பெயர் உண்டாயிற்று. மேலும் இவருக்கு பராங்குரர், வகுளாபரணர் என்ற பெயர்களும் உண்டு ஆழ்வார் பிறந்த போதிலிருந்தே பால் உண்ணாமலும், அழாமலும், சிரிக்காமலும், வளர்ந்து வந்தார். இதனால் பெற்றோர் மிகவும் வருந்தினர். திருவநந்தாழ்வான் திருப்புளிமரமாக வளர்ந்திருக்க அந்த மரத்தடியில் தொட்டில் கட்டி மாறன் என்ற பெயரிட்டு அங்கேயே விட்டுப்போனார்கள். ஆழ்வாரும் திருப்புளி மரத்தில் குகை போன்ற பொந்தில் பதினாறு வருஷங்களை கழித்தார்.

திருமாலுக்குரிய திவ்விய தேசங்களில் 37 திவ்விய தேசங்களுக்கு மங்களாசாசனம் செய்துள்ளார். அயோத்தியில் இருந்த மதுரகவி ஆழ்வார் தெற்கே வந்து நம்மாழ்வாரை வணங்கி அவருக்கு சேவை செய்து வந்தார். நம்மாழ்வார் பெருமானின் குணங்களை சொல்ல சொல்ல மதுர கவியாழ்வார் எழுதுவார். நம்மாழ்வார் அனுபவித்து சொல்லும் பொழுது மயக்கம் அடைந்து விடுவார். அப்பொழுதெல்லாம் மதுரகவியாழ்வார் தான் இவரை மயக்கம் தெளிவிப்பார்.





நம்மாழ்வார் மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவே இவ்வுலக வாழ்க்கையை வேண்டினார். இப்பொழுதும் ஆழ்வார் திருநகரியில் இவர் தவம் செய்த புனித புளியமரம் உள்ளது.

பெருமாளின் 108 திருப்பதிகளில் நம்மாழ்வார் தனியாக சென்று 16 கோயில்களையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 19 கோயில்களையும் என மொத்தம் 35 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
-------------------------
12. மதுரகவி ஆழ்வார்

பிறந்த இடம் : திருக்கோளூர் (தூத்துக்குடி மாவட்டம்)
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, சித்திரை மாதம்
நட்சத்திரம் : சித்திரை சித்திரை, (வளர்பிறை சதுர்த்தசி திதி)
கிழமை : வெள்ளி
எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி
பாடல்கள் : 96
சிறப்பு : ஆழ்வாராயிருந்து இன்னொரு ஆழ்வாரைப் பாடிய பேறு பெற்றவர், நம்மாழ்வாரைப் புகழ்ந்தவர். (வைநதேயாம்சம்)
பிற பெயர்கள் : இன்கவியார், ஆழ்வார்க்கடியான்

கருடாழ்வாரின் அம்சமாக திருக்கோளூர் என்ற திவ்யதேசத்தில் அவதரித்தவர் மதுரகவி ஆழ்வார். செவிக்கு இனிமையாக செஞ்சொற்களால் கவிதை பாடும் வல்லவர் ஆதலால் இவர் மதுரகவி ஆழ்வார் என புகழப்பட்டார். ஒருமுறை இவர் அயோத்தியில் உள்ள ராமபிரானை வணங்கிவிட்டு அங்கேயே சிலகாலம் தங்கினார். ஒருநாள் தான் பிறந்த திருக்கோளூர் பெருமானை தென்திசை நோக்கி வணங்கும்போது வானத்தில் ஒரு ஜோதி தெரிவதைக் கண்டார். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களும் அந்தத் தென்திசை நோக்கிப் புறப்பட்டார். ஆழ்வார் திருநகரி வந்தவுடன் அந்த ஜோதியைக் காணாத ஆழ்வார், அந்த ஊர் மக்களிடம் இந்த ஊரின் சிறப்பு என்ன எனக் கேட்டார். ஊர் மக்களும், அந்த ஊர் புளிய மரத்தினுள் பத்மாசனத்தில் சின் முத்திரையோடு அமர்ந்திருக்கும் நம்மாழ்வாரைப் பற்றி கூறினார்கள்.

நம்மாழ்வாரின் முன் சென்ற மதுரகவி ஆழ்வார், நம்மாழ்வாருக்கு காது கேட்குமா என அறிய ஒரு குண்டுக்கல்லை தூக்கிப்போட்டார். அந்த சத்தத்தால்  நம்மாழ்வார் கண் விழித்தார். இவர் நம்மிடம் பேசுவாரா என்பதை அறிய செத்த பின் வயிற்றிலே சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடைக்கும் ? (உயிரில்லாததான உடம்பில் ஆத்மா வந்து புகுந்து எதனைஅனுபவித்து எங்கே இருக்கும் ?) எனக் கேட்டார். அதற்கு, பிறந்தது முதல் பெற்றவர்களிடம்கூட பேசாத நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரிடம் அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும் (அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தபடி அங்கேயே இருக்கும்) என்று பதில் உரைத்தார். மதுரகவி ஆழ்வார், தன்னை ஆட்கொள்ளுமாறு நம்மாழ்வாரிடம் வேண்ட அவரும் நம் பிரபந்தங்களை ஓலைப்படுத்தும்படி ஆணையிட்டார். நம்மாழ்வார் காலத்துக்குப் பின் அவரது விக்ரகத்தை ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளச் செய்தார்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவர்கள் நம்மாழ்வாரை வாதத்திற்கு அழைத்தனர். அவர் இல்லாததால்  மதுரகவி ஆழ்வார், முன்னூறு சங்கப்புலவர்கள் ஏறிய சங்கப்பலகையில் நம்மாழ்வார், பாடிய ஓலையை வைத்தவுடன் பலகை கவிழ்ந்தது. அனைத்துப்புலவர்களும் பொற்றாமரைக்குளத்துக்குள் விழுந்துவிட்டனர். நம்மாழ்வார் பகவானின் அம்சம் என்பதை சங்கப்புலவர்கள் உணர்ந்தனர். மதுரகவி, ஆழ்வார் தம் குருவான நம்மாழ்வாரின் பெருமைகளையும் பிரபந்தங்களையும் உலகெங்கும் பரப்பி உயர்வுற்றார்.



பெருமாளின் 108 திருப்பதிகளில் மதுரகவி ஆழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து ஒரு கோயிலை மட்டும் மங்களாசாசனம் செய்துள்ளார். அந்தக்கோயிலிலும் பெருமானைக் கூடபாடாத மதுரகவி ஆழ்வார் தன் குருவான நம்மாழ்வாரைப் போற்றி கண்ணிநுன் சிறுத்தாம்பு என்ற திவ்ய பிரபந்தத்தை பாடினார்.
-------------------------
பெரியாழ்வார் அருளிச்செய்தது

பொது தனியன்கள்

வடகலை ஸம்ப்ரதாயம்

ஸ்ரீ வேதாந்த தேசிகன் தனியன்

ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம்
ஸ்ரீ மத்வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேஸிகம்.

குருபரம்பரை தனியன்

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.

எம்பெருமானார் தனியன்

யோ நித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸந்தோ:
ராமா நுஜஸ்ய சரணௌ ஸரணம் ப்ரபத்யே.

நம்மாழ்வார் தனியன்

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்-
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா.

ஆழ்வார்கள் உடையவர் தனியன்

பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய-பட்டநாத-
ஸ்ரீபக்திஸார-குலஸேகர-யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு-பரகால-யதீந்த்ர மிஸ்ராந்
ஸ்ரீமத் பராங்குஸ முநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.

தென்கலை ஸம்ப்ரதாயம்

ஸ்ரீ மணவாள மாமுனிகள் தனியன்

ஸ்ரீஸைலேஸ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம்.

குருபரம்பரை தனியன்

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.

எம்பெருமானார் தனியன்

யோ நித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸந்தோ:
ராமா நுஜஸ்ய சரணௌ ஸரணம் ப்ரபத்யே.

நம்மாழ்வார் தனியன்

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்-
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா.

ஆழ்வார்கள் உடையவர் தனியன்

பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய-பட்டநாத-
ஸ்ரீபக்திஸார-குலஸேகர-யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு-பரகால-யதீந்த்ர மிஸ்ராந்
ஸ்ரீமத் பராங்குஸ முநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.

மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்த
நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

முதலாயிரம்

பெரியாழ்வார் திருமொழித் தனியன்கள்
ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தது

குருமுக மநதீத்ய ப்ராஹ வேதா நஸேஷாந்
நரபதி - பரிக்லுப்தம் ஸுல்க மாதாதுகாம:
ஸ்வஸுர மமரவந்த்யம் ரங்கநா தஸ்ய ஸாக்ஷõத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி.

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை

இரு விகற்ப நேரிசை வெண்பா

மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூ ரென்று, ஒருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தா னென்றுரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து

பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று,
ஈண்டிய சங்க மெடுத்தூத - வேண்டிய
வேதங்க ளோதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

பெரியாழ்வார் திருமொழி (பெரியாழ்வார் அருளிச்செய்தது)

முதற்பத்து

முதல் திருமொழி

1. திருப்பல்லாண்டு

மக்கள் தன்னலத்தையே விரும்புகிறார்களே! பிறர் நலத்தையும் எண்ண வேண்டாவோ! தம்முடைய நன்மையை விரும்பியே பகவானிடம் செல்லுகிறார்கள்; வேண்டியவற்றைக் கேட்டுப் பெறுகிறார்கள்; பகவானுக்கு ஒரு முறைகூடப் பல்லாண்டு பாடுவதில்லை! உலகின் தன்மையை அறிந்து பெரியாழ்வாரின் திருவுள்ளம் குமுறுகிறது. பல்லாண்டு பாடலாம் வாருங்கோள் என்று எல்லோரையும் அழைக்கிறார். பல்லாண்டு பாடுவதே (மங்களாசாஸனம் செய்வதே) அடியார்களின் கடமை! அவர் காட்டிய வழியைத்தான் பின்பற்றுவோமே!

காப்பு- பல்லாண்டு வாழ்க

குறள் வெண்செந்துறை

1. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2. அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

இராமனைப் பாடு

3. வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதமே

நமோ நாராயணாய

4.ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே

இருடீகேசனைப் பாடு

5.அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்மினே

நரசிம்மனைப் பாடு

6. எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே

ஆழிவல்லானைப் பாடு

7. தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி
பாயச் சுழற்றிய ஆழிவல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

கருடக் கொடியானைப் பாடு

8. நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே

நாகணையானைப் பாடு

9. உடுத்துக் களைந்தநின் பீதக வாடை யுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும்இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு வோணத் திருவிழவில்
படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

மதுரைப்பிரானைப் பாடு

10. எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி யோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமது ரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நா கத்தலை பாய்ந்தவ னே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

பவித்திரனைப் பாடு

11. அல்வழக் கொன்றுமில் லாஅணி கோட்டியர் கோன்அபி மானதுங்கன்
செல்வனைப் போலத் திருமா லேநானும் உனக்குப் பழவடியேன்
நல்வகை யால்நமோ நாரா யணாவென்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திர னேஉன்னைப் பல்லாண்டு கூறுவனே

சார்ங்கபாணியைப் பாடு

12. பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே

(இந்த 12 பாசுரங்களையும் உருக்கமாகப் பாராயணம் செய்பவர்கள் பக்தி சிரத்தையுடன் பல்லாண்டு வாழ்வர்)

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

அடிவரவு: பல் அடி வாழ் ஏடு அண்டம் எந்தை தீ நெய் உடுத்து எந்நாள் அல்வழக்கு பல்லாண்டு- வண்ணம்.

(ஆதி கூறுதும், அநந்தரம் கூறுமின், அண்டம் என்மின், எந்தை பாடுதும், தீ உடுத்தெந்நாள் கூறுதும், நெய்யுமல்லும் கூறுவனே)

இரண்டாம் திருமொழி

2. வண்ண மாடங்கள்

பிறந்த நாளை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம், கண்ணன் பிறந்த நாள் எப்படிக் கொண்டாடப்படுகிறது! பக்தியின் எல்லையைக் கடந்தவர்களின் செயல் இப்படித்தான் இருக்கும்! குழந்தை கண்ணன் யார்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகக் கூறிப் புகழ்கிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் உறுதி! பலரும் பல வகையாகப் புகழ்வதற்கு ஏற்ற தகுதியுடையவன் அவன் ஒருவனே!

கண்ணன் திருவவதாரச் சிறப்பு
கலி விருத்தம்

திருக்கோட்டியூர்க் கேசவனே கண்ணன்

13.வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்துஅள ராயிற்றே.

ஆயர்களின் மெய்ப்பாடு

14. ஓடு வார்விழு வார்உகந் தாலிப்பார்
நாடு வார்நம்பி ரான்எங்குற் றானென்பார்
பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று
ஆடு வார்களும் ஆயிற்றுஆய்ப் பாடியே.

திருவோணத்தான் உலகாளும்

15. பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்
ஆணொப் பார்இவன் நேரில்லை காண்திரு
வோணத் தானுல காளுமென் பார்களே.

ஆயர்களின் மெய்ம்மறந்த செயல்

16. உறியை முற்றத்து உருட்டிநின் றாடுவார்
நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்துஎங்கும்
அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே.

அரும்பன்ன பல்லினர்

17. கொண்ட தாளுறி கோலக் கொடுமழு
தண்டி னர்பறி யோலைச் சயனத்தர்
விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்துநெய் யாடினார்.

பிள்ளை வாயுள் வையம் கண்ட அசோதை

18. கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்
பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்
ஐய நாவழித் தாளுக்குஅங் காந்திட
வைய மெழும்கண் டாள்பிள்ளை வாயுளே.

அருந்தெய்வம்

19. வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே.

உத்தான விழா

20. பத்து நாளும் கடந்த இரண்டாநாள்
எத்தி சையும் சயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை
உத்தா னம்செய்து உகந்தனர் ஆயரே.

குழந்தையின் செயல்

21. கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்.

பாவம் பறந்துவிடும்

22. செந்நெ லார்வயல் சூழ்திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல்விட்டு சித்தன் விரித்தஇப்
பன்னு பாடல்வல் லார்க்குஇல்லை பாவமே

அடிவரவு: வண்ணம் ஓடு பேணி உறி கொண்ட கை வாயுள் பத்து கிடக்கில் செந்நெல்.

மூன்றாந் திருமொழி

3. சீதக்கடல்

கண்ணனை மகனாகப் பெற்ற பாக்கியத்தைப் பெறாப் பெரும் பேறாக நினைக்கிறாள் யசோதை! ஆயர்பாடியிலுள்ள பெண்களை அழைத்துக் கண்ணனின் திருமேனி அழகைக் காட்டுகிறாள். தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்பதே யசோதையின் நோக்கமாகும். திருவடிமுதல் திருமுடி வரை இத்திருமொழியில் புகழப்படுகிறது!

திருப்பாதாதிகேச வண்ணம்

(கண்ணனின் திருமேனியழகை திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்தல்)
கலித்தாழிசை

பாதக் கமலங்கள்

23. சீதக் கடல்உள் ளமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர்வந்து காணீரே.

ஒளி விரல்கள்

24. முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல்எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட் டிருந்தவா காணீரே ஒண்ணுத லீர்வந்து காணீரே.

வெள்ளித் தளை இலங்கும் கணைக்கால்

25. பணைத்தோ ளிளவாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்தார உண்டு கிடந்தஇப் பிள்ளை
இணைக்காலில் வெள்ளித் தளை நின் றிலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே.
-------------------------
நாலாயிர திவ்விய பிரபந்தம்

நூல் சிறப்பு!

நாலாயிர திவ்விய பிரபந்தம் என்பது பெருமாளை குறித்து 1. பொய்கையாழ்வார்,  2. பூதத்தாழ்வார், 3. பேயாழ்வார், 4. திருமழிசையாழ்வார், 5. நம்மாழ்வார், 6. மதுரகவியாழ்வார், 7. குலசேகர ஆழ்வார், 8. பெரியாழ்வார், 9. ஆண்டாள், 10. தொண்டரடிப்பொடியாழ்வார், 11. திருப்பாணாழ்வார், 12. திருமங்கையாழ்வார் என்ற 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட பக்தி பாடல்களின் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தில் ஒரு முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது.

கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் 12 ஆழ்வார்களால் பாடப்பட்ட இந்த 4000 பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் நாதமுனிகள் நாலாயிரத்திவ்விய பிரபந்தம் எனத் தொகுத்தார். இதில் திருவரங்கமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

திவ்விய எனும் சொல் திருமாலையும் பிரபந்தம் எனும் சொல் பாடலையும் குறிக்கும். இந்த நூல் ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது. திவ்விய பிரபந்தங்கள் 24 வகைப்படும், அவை

1. திருப்பல்லாண்டு, 2. பெரியாழ்வார் திருமொழி, 3. திருப்பாவை, 4. நாச்சியார் திருமொழி, 5. பெருமாள் திருமொழி, 6. திருச்சந்தவிருத்தம், 7. திருமாலை, 8. திருப்பள்ளி எழுச்சி, 9. அமலனாதிபிரான், 10. கண்ணிநுண்சிறுத்தாம்பு, 11. பெரிய திருமொழி, 12. திருக்குறுந்தாண்டகம், 13. திருநெடுந்தாண்டகம், 14. முதல் திருவந்தாதி, 15. இரண்டாம் திருவந்தாதி, 16. மூன்றாம் திருவந்தாதி, 17. நான்முகன் திருவந்தாதி, 18. திருவிருத்தம், 19. திருவாசிரியம், 20. பெரிய திருவந்தாதி, 21. திருஎழுகூற்றிருக்கை, 22. சிறிய திருமடல், 23. பெரிய திருமடல், 24. இராமானுச நூற்றந்தாதி.

இதில்
முதலாயிரம்  -947 பாடல்கள்
பெரிய திருமொழி -1134 பாடல்கள்
திருவாய்மொழி  -1102 பாடல்கள்
இயற்பா  -817 பாடல்கள்

என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடல்கள் அனைத்தும் பெருமாளையும் , அவரது பல்வேறு அவதாரங்களையும் குறித்து அமைந்துள்ளன. பெரும்பாலான பாடல்கள் 108 திவ்ய தேசங்களில் பாடப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில், சுமார் 1100 பாடல்கள் நம்மாழ்வாரால் இயற்றப்பட்டதாகும். இப்பாசுரங்களின் மொத்த எண்ணிக்கை 3892 ஆகும். இராமானுசர் காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுசர் நூற்றந்தாதியையும் (108 பாசுரங்கள் கொண்டது) சேர்த்து நாலாயிரம் என்பர். இவற்றுள் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடல்களாகும்.

முதலாயிரம்

பெரியாழ்வார் (திருப்பல்லாண்டு 12, திருமொழி 461),
ஆண்டாள் (திருப்பாவை 30, நாச்சியார் திருமொழி 143),
குலசேகராழ்வார் (பெருமாள் திருமொழி 105),
திருமழிசையாழ்வார் (திருச்சந்தவிருத்தம் 120),
தொண்டரடிப்பொடியாழ்வார் (திருமாலை 45, திருப்பள்ளி எழுச்சி 10),
திருப்பாணாழ்வார் (அமலனாதிபிரான் 10),
மதுரகவியாழ்வார் (கண்ணிநுண்சிறுத்தாம்பு 11)

இரண்டாவதாயிரம்

திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழி 1084, திருக்குறுந்தாண்டகம் 20, திருநெடுந்தாண்டகம் 30)

மூன்றாவதாயிரம்

பொய்கை ஆழ்வார் (முதல் திருவந்தாதி 100),
பூதத்தாழ்வார் (இரண்டாம் திருவந்தாதி 100),
பேயாழ்வார் (மூன்றாம் திருவந்தாதி 100),
திருமழிசை ஆழ்வார் ( நான்முகன் திருவந்தாதி 96),
நம்மாழ்வார் (திருவிருத்தம் 100, திருவாசிரியம் 7, பெரிய திருவந்தாதி 87),
திருமங்கை ஆழ்வார் (திருஎழுகூற்றிருக்கை 1, சிறிய திருமடல் 40, பெரிய திருமடல் 78,
திருவரங்கத்தமுதனார் (இராமானுச நூற்றந்தாதி 108)

நான்காவதாயிரம்

நம்மாழ்வார் (திருவாய்மொழி 1102) ஆகிய பாடல்களைக் கொண்டது.
-------------------------
2.உரோமரிஷி

அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார். ஒரு பிரம்மா இறந்தால் இவருடைய மயிர் ஒன்று உதிரும் இவ்வாறு மூன்றரைக்கோடி பிரம்மா இறந்தால் மட்டுமே இவருடைய வாழ்நாள் முடியும் ஒரு உரோமமுனி இறந்தால் அஷ்டகோண (8 கோண) முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்று கூறுவர். இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார்.

ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்றுவிடவே அந்த தாடியை உடனே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த ரோமமுனியை விநாயகரும் முருகனும் தடுத்தனர். இதை கண்ட சித்தர் வருந்தி கோபுர வாயிலிலேயே நின்றார்.  புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோயிலுக்கு வெளியிலேயே இறைவன் தம் தரிசனத்தை அளித்ததாக கூறுவர். உரோமரிஷி அற்புதமான பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம்.

உரோமரிஷி இயற்றிய நூல்கள்
உரோமரிஷி வைத்தியம்  1000
உரோமரிஷி சூத்திரம்  1000
உரோமரிஷி ஞானம்  50
உரோமரிஷி பெருநூல்  500
உரோமரிஷி குறுநூல்  50
உரோமரிஷி காவியம்  500
உரோமரிஷி முப்பு சூத்திரம்  30
உரோமரிஷி இரண்டடி  500
உரோமரிஷி ஜோதிட விளக்கம்

நாகாரூடம், பகார சூத்தரம், சிங்கி வைப்பு, உரோமரிஷி வைத்தி சூத்திரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

தியானச் செய்யுள்
கனிந்த இதயம், மெலிந்த உருவம்
சொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோ?
அலையும் மனதை அடக்கி,
அருள் அள்ளியே தருவாய்
தாடியில் தங்கம் தந்த தெய்வமே
தங்கள் திருவடி சரணம்

ரோமசித்தரின் பூஜைமுறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன் மேல் ரோமரிஷி ஸ்ரீ கயிலாய கம்பளிச் சட்டைமுனி சித்தரின் படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள், குங்குமம் இட்டு முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருகக் கூறி ஜாதி கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்:
1. கயிலாயத்தில் வசிப்பவரே போற்றி!
2. ஜடாமுடிப் பிரியரே போற்றி!
3. சந்திரனை தரிசிப்பவரே போற்றி!
4. சிவசக்தியாகத் தோன்றுபவரே போற்றி!
5. நந்தி தேவரால் காப்பாற்றப்படுபவரே போற்றி!
6. சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி!
7. சங்கீதப் பிரியரே போற்றி!
8. தடைகளை நீக்குபவரே போற்றி!
9. காகபுஜண்டரால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
10. மகாலக்ஷ்மியின் அருள் பெற்றவரே போற்றி!
11. முருகப்பெருமானை வணங்குபவரே போற்றி!
12. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!
13. சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி!
14. காலத்தைக் கடந்தவரே போற்றி!
15. தெய்வீகச் சித்தரே போற்றி!
16. கைலாயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான ஓம் ஸ்ரீ உரோமரிஷி முனி சித்தர் ஸ்வாமியே போற்றி என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பூஜைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல் மிளகு, சீரகம் கலந்து குழைவாக செய்த வெண் பொங்கல், பழங்கள் தண்ணீர் வைக்க வேண்டும். பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்யவும்.

உரோமரிஷி சித்தரின் பூஜை பலன்கள்:

இவர் சந்திர கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர், மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டும். என்றால் மனோன்மணி சதக்தி பெருக வேண்டுமென்றால் சந்திரனின் அருள் நமக்குக் கிடைக்க வேண்டும். இவரை முறைப்படி வழிபட்டால்...

1. மன வியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும்,
2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் தவறான முடிவுகள் எடுப்பது, நீங்கி தெளிவாக முடிவெடுக்க முடியும்.
3. சஞ்சல புத்தி நீங்கும்
4. படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.
5. தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தாய், மகன், மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

இவரை திங்கள் கிழமை வழிபட்டால் விசேட பலன்கள் கிடைக்கும்.
-------------------------
பதஞ்சலி முனிவர்

இவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் பிரகாசிப்பவருமான அத்திரிமகரிஷிக்கும், மும்மூர்த்திகளை குழந்தைகளாக்கிய அனுசுயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிஷேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சுக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார். தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்குநேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கவுட பாதர் என்னும் சீடர் மட்டும், பதஞ்சலி முனிவர் ஏவிய பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார்.

இத்தனைகாலமாக அரூவமாக உபதேசித்து வந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் சீடர்களுக்குமிடையே ஒரு கனமான திரையை போட்டுக் கொண்டார், திரையின் பின் அமர்ந்து ஆதிஷேட உருவில் கடும் விஷ மூச்சுக்காற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் வியாகரண சூத்திரத்தை உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம் இத்தனை நாள் அசரீரியாக ஒலித்த குருவின் குரலை பக்கத்திலேயே கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்குண்டான சந்தேகங்களைக் கேட்டனர்.

வெண்கல மணியோசை முனிவரின் குரல் பதிலாக வந்தது. குரு நாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்றான் ஒரு சீடன்.  உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம் மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்க(வசப்படுத்த) செய்யப்படும் சடங்கே தவம் என்றார் முனிவர். இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா குருதேவா என்று கேட்டான் ஆவலோடு சீடன் ஒருவன். பஞ்சபூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையாளம் சித்தர்களுக்கு இது சாத்தியமே என்று பதஞ்சலி கூறினார்.

பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்கு முக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரமான குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தை ஒரு கணம் திரைநீக்கிப் பார்த்து விடவேண்டுமென்ற ஆவலால் திரையைப் பிடித்திழுக்க திரை விலகியது. அடுத்த கணம் ஆதிஷேடனின் கடும் விஷக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர். முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த முனிவர் அவர்மீது மூச்சுக்காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்திறந்த கவுடபாதர் என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பாலகி விட்டார்களே என்று கதறிக் கண்ணீர் விட்டார். குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள்  பொறுமை காத்தவர்கள் இன்று அவரசப்பட்டு விட்டார்கள். கவுடபாதரே, நீர் மட்டும் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக் கொள் என்று ஆறுதல் கூறினார் பதஞ்சலி. உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன் உன்னுடைய இப்போதைய மனநிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும் என்றார்.

படிப்படியாக கவுடபாதருக்கு அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தில் உள் ஆழ்ந்து மூலாதாரத்தில் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதர்  பதஞ்சலி ஆதிஷேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய் சிலிர்த்தார். பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சமாதியடைந்ததாக கூறப்படுகிறது.

பதஞ்சலி முனிவர் தியானச்செய்யுள்

ஆயசித்தி அனைத்தும் பெற் சத்திய சித்தரே
சப்தரிஷி மண்டலத்தில் பிரகாசிப்பவரே
பக்தியுடன் வணங்கும் எமக்கு
நல்லாசி தரவேண்டும் பதஞ்சலியாரே

பதஞ்சலி சித்தரின் பூஜை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளினால் மெழுகி அரிசிமாவினால் கோலமிட்டு அப்பலகையின் மேல்  பதஞ்சலி முனிவரின் திருவுருவப்படத்தினை வைக்க வேண்டும். படத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட திருவிளக்கினை வைத்து, நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு இரண்டுமுக தீபமேற்ற வேண்டும், பொன்றி வஸ்திரம் அணிவித்து பொன்னிற மலர்களையும் பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்ற மலர்களாலும் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.
-------------------------
அகப்பேய் சித்தர்

திருவள்ளுவர் பரம்பரையில் தோன்றிய இந்த சித்தரின் இயற்பெயர் நாயனார். இந்த மகான் நெசவுத் தொழில் நடத்தி வாழ்ந்து வந்தார். தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. எனினும் சித்தர் பெருமானின் மனம் பொருளாசையை விடுத்து அருளைத் தேடி அலைந்தது.

மக்களை மாயையிலிருந்து மீட்பதற்காக, முதலில் தனக்கு ஒரு குருவைத் தேடி காடுகளில் எல்லாம் தரிந்தார். அப்பொழுது ஜோதி மரம் ஒன்று இவர் கண்களுக்கு தெரிந்தது. உடனே அந்த மரப்பொந்துக்குள் புகுந்து கொண்டு வியாசர் பெருமானை தன் மனக் கோவிலில் குருவாக தியானித்து தவம் இருக்கத் துவங்கினார். இவரின் கடுந்தவத்தினை மெச்சிய வியாசர் நேரில் தோன்றினார். மிகப்பெரும் தவப்பேற்றை அகப்பேய் சித்தருக்கு கொடுத்து அரியபல மந்த்ர உபதேசங்களையும் செய்தார். அகப்பேய் சித்திரைவாழ்த்தி விட்டு வியாசர் மறைந்தார், மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழும் தீய செயல்களையும் தீய எண்ணங்களையும் நீக்குவதற்காக இவர் அகப்பேய் சித்தர் பாடல்கள் 90 என்ற நூலை எழுதினார்.

அங்கும் இங்கும் ஓடும் மன அலையை மட்டுப்படுத்தினால், நங்சுண்ணவும் வேண்டாம் நாதியற்று திரியவும் வேண்டாம். அந்த இறை நாதன் உன்முன் தோன்றுவான் என்பது இவரின் வாக்கு.

இவர் இயற்றிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை

அகப்பேய் சித்தர் பாடல் 90
அகப்பேய் பூரண ஞானம்
சித்தி அடைந்த திருத்தலம்- திருவையாறு
இலை உடையுடன் கலை உருவாய்
காட்சி தரும் காரியசித்தி ஸ்வாமியே
மாறாத சித்தியை மரப்பொந்தினில்
பெற்ற மங்காச் செல்வரே
அசைகின்ற புத்தியை
இசைகின்ற சித்தியால்
இனிது காப்பாய் அகப்பேய் சித்தரே

அகப்பேய் சித்தர் பூஜை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் அகப்பேய் சித்தர் ஸ்வாமியின் படத்தை வைத்து, அப்படத்திற்கு முன்பு மஞ்சள், குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பிட்டிருக்கும் தியானச் செய்யுளை மனமுருகக்கூற வேண்டும். பின்பு பின்வரும் பதினாறு போற்றிகளை வில்வம் அல்லது பச்சிலைகள் அல்லது துளசி அல்லது கதிர்பச்சை அல்லது விபூதி பச்சை கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:

1. வனத்தில் சஞ்சாரம் செய்பவரே போற்றி!
2. பேய் பிசாசுகளை விரட்டுபவரே போற்றி!
3. பித்ருப்ரியரே போற்றி!
4. உயிர்களை காப்பாற்றுபவரே போற்றி!
5. சாந்தமாக இருப்பவரே போற்றி!
6. சந்தான தோஷத்தை போக்குபவரே போற்றி!
7. சங்கீதப்பிரியரே போற்றி!
8. சூரியன், சந்திரன் போன்று பிரகாசம் உடையவரே போற்றி!
9. ரத்தினங்களை அணிபவரே போற்றி!
10. ஹஸ்த தரிசனம் செய்பவரே போற்றி!
11. கஜபூஜை செய்பவரே போற்றி!
12. முனிவர்களுக்குக் காட்சி அளிப்பவரே போற்றி!
13. உலகரட்சகரே போற்றி!
14. சிறுவர்களால் வணங்கப்படுபவரே போற்றி!
15. முக்தி அளிப்பவரே போற்றி!
16. ஸ்ரீ சக்ர ஸ்வாமியாகிய அகப்பேய் சித்தர் ஸ்வாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான, ஓம் அகப்பேய் சித்தரே போற்றி என்று 108 முறை ஜபிக்க வேண்டும்.

பின்பு நிவேதனமாக இளநீர்(வடிகட்டி வைக்க வேண்டும்) அல்லது பால் பழம் வைத்து படைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக்கூறி வேண்ட வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.

ஸ்ரீ அகப்பேய் சட்டமுனி ஸ்வாமிகள் பூஜை பலன்கள்:

இவர் நவக்கிரஹத்தில் குரு பகவானால் பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால்

1. ஜாதகத்தில் குருபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அகலும்
2. பணப்பிரச்சனை, புத்திரபாக்கியம் கோளாறு, அரசாங்கத்தால் பிரச்சனை போன்றவை அகலும்.
3. வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம், சமாளிக்க முடியாத நிலை இவையெல்லாம் அகன்று லட்சுமி கடாட்சம் பெருகும். வயிறு, குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
4. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்,
5. கொடுக்கல், வாங்கல் பிரச்சனை வழக்குகள் அகலும்.
6. அரசாங்கத்தால் பிரச்சனை, அரசாங்க அதிகாரிகளுக்குள்ள பிரச்சனை நீங்கும்,
7. வறுமை அகன்று வாழ்க்கை வளம் பெறும்.
8. இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்

இவரை பூஜிக்க சிறந்தநாள் வியாழக்கிழமை ஆகும்.
-------------------------
வல்லபசித்தர்

தாதி பொன்னனையாள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவளது குடிலில் தகரம், செம்பு, பித்தளை பாத்திரங்கள் மட்டுமே இருந்தன. பெண்கள் திறமைசாலிகள். தங்களுக்கு கணவனோ, பிறரோ கொடுக்கும் பணத்திலோ, தாங்கள் உழைத்து சம்பாதித்ததிலோ சிறிதளவாவது மிச்சம் பிடித்து வெள்ளியிலோ, தங்கத்திலோ சிறுநகைஒன்றாவது வாங்கி விடுவார்கள். பொன்னனையாளும் அதற்கு விதிவிலக்கல்ல. சிவபக்தையான அவள், கூடல் மாநகராம் மதுரை அருகிலுள்ள திருப்புவனம் என்ற ஊரில் வசித்தாள். அங்குள்ள பூவன நாதர் அவளது இஷ்ட தெய்வம். அவரது ஆலயத்தில் சேவை செய்தது மட்டுமின்றி, ஆலயத்துக்கு வரும் சிவனடியார்களுக்கு, தான் ஆடிப்பிழைக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அவர் களுக்கு உணவளிக்கும் பழக்கத்தை யும் கொண்டிருந்தாள். அவளது கண்ணீருக்கு காரணம் தெரிய வேண்டுமே. அவளுக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை. திருப்புவனநாதர் லிங்கவடிவில் காட்சியளிக்கிறார். அவருக்கு உற்சவர் சிலை இருந்தால், அதைக்கொண்டு திருவிழா நடத்தலாம். திருவிழா நடந்தால், மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் ஊர் நோக்கி வருவார்கள். கோயிலின் வருமானம் பெருகும். கோயில் விருத்தியாகும். ஆனால், சிலை செய்ய யார் முன்வருவார்கள்? தானே செய்யலாம் என்றால் அதற்கு அந்தளவுக்கு பணமில்லையே! என்ன செய்வது? இதை நினைத்து நினைத்து கண்ணீர் வடித்தபடியே, தன்னையறி யாமல் உறங்கி விடுவாள். நடனமாடும் நேரத்தில் கூட, இந்த சிந்தனை அவளை வாட்டிக் கொண்டிருந்தது.

ஒருநாள், அவளது ஊருக்கு சில சிவனடியார்கள் வந்தனர். அவர்களை தனது இல்லத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தாள் பொன்னனையாள். அடியார்களும், அவளது பக்தியைப் பற்றி ஊரார் சொல்லக் கேள்விப் பட்டு, அவளது இல்லத்துக்கு சென்றனர். அங்கு அனைவருக்கும் உணவு படைத்தாள். சம்பாதிக்கும் பணமெல்லாம், அடியவர்களுக்கு உணவளிப்பதிலேயே செலவழித்து விடுவாள். அவர்கள் சாப்பிட்டது போக மீதமிருந்தால், அதை மட்டுமே சாப்பிடுவது பொன்னனை யாளின் வழக்கம்.அன்று வந்திருந்த அடியவர் களில் ஒரு அடியவர் மிகுந்த தேஜஸுடன் இருந்தார். அவரது அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. பொன்னனையாளுக்கு உதவியாக இருந்த மற்ற கணிகைகளும், அவளுடன் இணைந்து அடியவர்களுக்கு உணவு பரிமாறினர். அழகாக இருந்த அடியவர் மட்டும் சாப்பிடாமல் அமர்ந்திருந்தார். அதற்கான காரணம் புரியாத கணிகைகள், பொன்னனையாளிடம் அதுபற்றிக் கூறினர். பொன்னனையாள் அவரருகில் சென்று, சுவாமி! மற்றவர்கள் நான் அளித்த இந்த எளிய உணவை சாப்பிடும்போது, தாங்கள் மட்டும் சாப்பிடாமல் இருக்கிறீர்களே! உணவு சுவையாக இல்லையா? தங்களுக்கு வேறு ஏதாவது கொண்டு வர வேண்டுமா? தாங்கள் கேட்பதை நொடியில் சமைத்து தருகிறேன், என்றதும், அந்த அடியவர் சிரித்தார்.

அவரது சிரிப்பில் சொக்கிப் போனாள் பொன்னனையாள். அவரது சிரிப்பு அந்த இடத்தையே ஆனந்தமயமாக்கியது. அம்மையே! உலகுக்கே படியளக்கும் எனக்கு, நீ இன்று படியளந்திருக்கிறாய். அதை நினைத்தேன், சிரித்தேன், என்ற அடியவரின் பேச்சில் இருந்த சூட்சுமம், பொன்னனையாளுக்கு புரியவில்லை. உடனே அடியவர் அவளிடம், வருந்தாதே, மகளே! நீ தந்த உணவின் மணம் என்னைச் சாப்பிடத் தூண்டுகிறது. ஆனால், உணவளிக்கும் போது, பெண்கள் மகிழ்ச்சியான மனநிலையைக்காட்ட வேண்டும். அது முகத்தில் எதிரொளிக்க வேண்டும். உன் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிந்தது. ஏதோ, சோகத்தை மனதில் தாங்கிய நீ தரும் உணவை எப்படி என்னால் மகிழ்ச்சியுடன் சாப்பிட முடியும். நான் சொல்வது சரிதானே! உன் மனதை ஏதோ ஒரு கவலை வாட்டுகிறது என்பது உண்மை தானே! என்றதும், அவளது கண்களில் கண்ணீர் வைகை நதியின் கரை புரண்ட வெள்ளம் போல் பெருகியது. ஐயனே! தாங்கள் என் மன நிலையைப் புரிந்து கொண்டீர்கள். ஆனால், இந்த வருத்தம் என் சுயநலம் கருதியது அல்ல. எம்பெருமானுக்கு, ஒரு சிலை வடிக்க வேண்டும். அதைக் கொண்டு உற்சவம் நடத்தி, மக்களை எனது ஊருக்கு ஈர்க்க வேண்டும். இங்கிருக்கும் பூவனநாதர் கோயில் பெரிய அளவுக்கு உயர வேண்டும்.

மன்னாதிமன்னர்களும், பிரபுக்களும் இங்கு வந்தார்கள் என்றால், அவர்கள் தரும் நன்கொடையைக் கொண்டு கோயிலை பெரிதாக்குவேன். உற்சவர் சிலையை வடித்து முடிப்பேன். இதெல்லாம், எப்படி நடக்கப் போகிறதோ என்ற கவலை தான், என் முகவாட்டத்துக்கு காரணம். இருப்பினும், தங்கள் முன்னால் கனிந்த முகம் காட்டாமைக்கு வருந்துகிறேன். அடியவர், இந்தச் சிறியவளின் தவறை புறந்தள்ளி, அமுது செய்ய வேண்டும், என அவரது பாதத்தில் விழுந்து வேண்டினாள். அடியவர் அவளைத் தேற்றினாள்.
-------------------------
நந்தீஸ்வரர்

நந்தீஸ்வரர் முனிவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 3 நாள் ஆகும்.
---------------------------------------------‐‐-----------------------------------------------------------------------------‐‐--------------------------------
வான்மீகர்

வான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 நாள் ஆகும்.

---------------------------------------------‐‐-----------------------------------------------------------------------------‐‐--------------------------------
மச்சமுனி

மச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 42 நாள் ஆகும்.
---------------------------------------------‐‐-----------------------------------------------------------------------------‐‐--------------------------------
தன்வந்திரி

தன்வந்திரி  முனிவர் ஐப்பசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 800 ஆண்டுகள் 32  நாள் ஆகும்.
 ---------------------------------------------‐‐-----------------------------------------------------------------------------‐‐--------------------------------
தவழும் முழந்தாள்

26. உழந்தாள் நறுநெய் ஒரோதடா வுண்ண
இழந்தா ளெரிவினா லீர்த்துஎழில் மத்தின்
பழந்தாம்பா லோச்சப் பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ்முலை யீர்வந்து காணீரே.

இரணியனை அழித்த தொடைகள்

27. பிறங்கிய பேய்ச்சி முலைசுவைத் துண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்தஇப் பிள்ளை
மறங்கொ ளிரணியன் மார்பைமுன் கீண்டான்
குறங்கு களைவந்து காணீரே குவிமுலை யீர்வந்து காணீரே.

அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்

28. மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில்
அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்
முத்த மிருந்தவா காணீரே முகிழ்நகை யீர்வந்து காணீரே.

பரமனின் திருமருங்கு

29. இருங்கை மதகளிறு ஈர்க்கின் றவனை
பருங்கிப் பறித்துக்கொண்டு ஓடுபர மன்தன்
நெருங் குபவளமும் நேர்நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே வாணுத லீர்வந்து காணீரே.

நந்தன் மதலையின் உந்தி

30. வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து
தந்தக் களிறுபோல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்று மழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளியிழை யீர்வந்து காணீரே.

தம்பினால் கட்டப்பட்ட திருவயிறு

31. அதிரும் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலையூட்டி வஞ்சித்து வைத்து
பதறப் படாமே பழந்தாம்பா லார்த்த
உதரம் இருந்தவா காணீரே ஒளிவளை யீர்வந்து காணீரே.

கவுஸ்துபம் திகழும் திருமார்பு

32. பெருமா வுரலில் பிணிப்புண் டிருந்துஅங்கு
இருமா மருதம் இறுத்தஇப் பிள்ளை
குருமா மணிப்பூண் குலாவித் திகழும்
திருமார்பு இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே.

அசுரரை அழித்த திருத்தோள்கள்

33.நாள்களோர் நாலைந்து திங்க ளளவிலே
தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்
வாள்கொள் வளையெயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரிகுழ லீர்வந்து காணீரே.

சங்கு சக்கரம் நிலவும் கைத்தலங்கள்

34. மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங் கள்வந்து காணீரே கனங்குழை யீர்வந்து காணீரே.

உலகங்களை விழுங்கிய கழுத்து

35. வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே.

ஆய்ச்சியர் விரும்பும் அழகிய வாய்

36. எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு
அந்தொண்டை வாயமு தாதரித்து ஆய்ச்சியர்
தம்தொண்டை வாயால் தருக்கிப் பருகும்இச்
செந்தொண்டை வாய்வந்து காணீரே சேயிழை யீர்வந்து காணீரே.

முகத்தின் அழகு

37. நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்துநீ ராட்டும்இந் நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்தவா காணீரே மொய்குழ லீர்வந்து காணீரே.

வாசுதேவனின் கண்கள்

38. விண்கொ ளமரர்கள் வேதனை தீரமுன்
மண்கொள் வசுதேவர் தம்மக னாய்வந்து
திண்கொ ளசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கனவளையீர்வந்து காணீரே.

தேவகி மகனின் திருப்புருவம்

39. பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளிமணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே  பூண்முலை யீர்வந்து காணீரே.

மகரக்குழை பதிந்த திருச்செவிகள்

40. மண்ணும் மலையும் கடலும் உலகேழும்
உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு
வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை
திண்ணம் இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே.

பரமன் திருநுதல்

41. முற்றிலும் தூதையும் முன்கைம்மேல்  பூவையும்
சிற்றி லிழைத்துத் திரிதரு வோர்களை
பற்றிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன்
நெற்றி இருந்தவா காணீரே  நேரிழை யீர்வந்து காணீரே.

கண்ணன் திருக்குழல்கள்

42. அழகிய பைம்பொன்னின் கோல்அங்கைக் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்துஎங்கு மார்ப்ப
மழகன் றினங்கள் மறித்துத் திரிவான்
குழல்கள் இருந்தவா காணீரே குவிமுலை யீர்வந்து காணீரே.

தரவு கொச்சகக் கலிப்பா
திருப்பாதாதிகேசம் (அடியும் முடியும்)

43. சுருப்பார் குழலி யசோதை முன்சொன்ன
திருப்பாத கேசத்தைத் தென்புது வைப்பட்டன்
விருப்பா லுரைத்த இருபதோ டொன்றும்
உரைப்பார்போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே.

அடிவரவு: சீத முத்தும் பணை உழ பிறங்கிய மத்த இருங்கை வந்த அதிருங் பெருமா நாள்கள் மை வண்டு எந் நோக்கி விண்பருவம் மண் முற்றில் அழகிய சுருப்பார்- மாணிக்கம்

நான்காந் திருமொழி

4. மாணிக்கங்கட்டி

மக்கட் பேறு பெற்று மகிழும் இக்காலப் பெண்களுக்கு நல்ல வழிகாட்டி! தாலாட்டுப் பாடலிலும் பகவத் விஷயம் கலந்திருக்க வேண்டாமா! இப்பாடல்களையே தாலாட்டுப் பாடல்களாகப் பாடலாமே! இப் பாடல்களைக் கேட்டுப் பழகும் குழந்தைகள் பகவானின் திருவருளைப் பெறுவது திண்ணம். அவர்களுக்கு வாழ்வில் துன்பமே ஏற்படாது என்கிறாள் தெய்வ நங்கை யசோதை!

திருத்தாலாட்டு
(கண்ணனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுதல்)
கலித்தாழிசை

பிரமன் விடுதந்த தொட்டில்

44. மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!

அரனளித்த அரைவடம்

45. உடையார் கனமணியோடு ஒண்மா துளம்பூ
இடைவிரவிக் கோத்த எழில்தெழ்கி னோடு
விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்;
உடையாய் அழேல்அழேல் தாலேலோ! உலக மளந்தானே தாலேலோ!

இந்திரனீத்த கிண்கிணி

46. என்தம் பிரானார் எழில்திரு மார்வர்க்கு
சந்த மழகிய தாமரைத் தாளர்க்கு,
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்துஉவ னாய்நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே தாலேலோ!

அமரர் தந்த அரைஞான்

47. சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்,
செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ!

குபேரன் தந்த முத்துவடம்

48. எழிலார் திருமார்வுக்கு ஏற்கு மிவையென்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்
தொழுதுஉவ னாய்நின்றான் தாலேலோ! தூமணி வண்ணனே தாலேலோ!

வருணன் அளித்த சாதிப்பவளம்

49. ஓதக் கடலின் ஒளிமுத்தி னாரமும்
சாதிப் பவளமும்சந்தச் சரிவளையும்
மாதக்க வென்று வருணன் விடுதந்தான்
சோதிச் சுடர்முடியாய்  தாலேலோ! சுந்தரத் தோளனே தாலேலோ!

திருமங்கை அனுப்பிய திருத்துழாய் மாலை

50. கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்
வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்
கோனே! அழேல்அழேல் தாலேலோ! குடந்தைக் கிடந்தானே தாலேலோ!

பூதேவி கொடுத்தனுப்பிய உச்சிமணிச் சுட்டி

51. கச்சொடு பொற்சுரிகை காம்பு கனவளை
உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ
அச்சுத னுக்கென்று அவனியாள் போத்தந்தாள்
நச்சு முலையுண்டாய் தாலேலோ! நாராய ணாஅழேல் தாலேலோ!!

துர்கை தந்த பொருள்கள்

52. மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்குஅஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய்நின்றாள்
அய்யா அழேல்அழேல் தாலேலோ! அரங்கத் தணையானே தாலேலோ!!

இடரில்லை

53. வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட
அஞ்சன வண்ணனை ஆய்ச்சிதா லாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர்புதுவைப் பட்டன்சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு  இல்லை இடர்தானே.

(இந்த 10 பரசுரங்களைப் பாராயணம் செய்தால் எந்தக் கஷ்டமும் வராது. மேற்கொண்டு இம்மாதிரி பல பாசுரங்கள் காணலாம். பக்தி, சிரத்தை மஹாவிச்வாசம் மிக மிக அவசியம்.)

அடிவரவு: மாணிக்கம் உடை எந்தம் சங்கு எழில் ஓதக்கானார் கச்சொடு மெய் வஞ்சனையால்- தன்

ஐந்தாந் திருமொழி

5. தன்முகத்து

கண்ணன் வளர்ந்து தவழ்கிறான். திறந்த வெளியில் வருகிறான். வெண்ணிலவு! சந்திரனைப் பார்க்கிறான்; தன்னோடு விளையாட வருவான் என்று நினைக்கிறான். ஆனால் சந்திரன் வான வீதியில் வேகமாகச் செல்லுகிறான். இவனே பகவான். இவனை அலட்சியம் செய்தால் நீ தப்பமுடியாது என்று யசோதை சந்திரனுக்குக் கூறி, நமக்கும் உணர்த்துகிறாள்.

அம்புலிப் பருவம்
(சந்திரனை அழைத்தல்)

கலிநிலைத்துறை

கோவிந்தன் கூத்து

54. தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்
பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி யளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தி னை இள மாமதீ
நின்முகம் கண்ணுள வாகில் நீஇங்கே நோக்கிப்போ.

அஞ்சன வண்ணனோடு ஆடு

55. என்சிறுக் குட்டன் எனக்கோ ரின்னமுது எம்பிரான்
தன்சிறுக் கைகளால் காட்டிக் காட்டி யழைக்கின்றான்
அஞ்சனவண்ணனோடு ஆடலாட உறுதியேல்
மஞ்சில் மறையாதே மாமதீ மகிழ்ந்தோடிவா.

வித்தகன் வேங்கடவாணன்

56. சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்
எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா.

சக்கரக்கையன்

57. சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து
ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும்காண்
தக்க தறிதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கட் பெறாத மலட னல்லையேல் வாகண்டாய்.

சிரீதரன் மழலைச் சொல்

58. அழகிய வாயில் அமுதவூறல் தெளிவுறா
மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்
குழகன் சிரீதரன் கூவக் கூவநீ போதியேல்
புழையில வாகாதே நின்செவி புகர்மாமதீ!

கண்ணனின் துயில்

59.தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன்
கண்துயில் கொள்ளக்கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப்பா லறாகண்டாய் உறங்காவிடில்
விண்தனில் மன்னிய மாமதீ விரைந் தோடிவா.

ஆலினிலை வளர்ந்த சிறுக்கன்

60. பாலக னென்றுபரிபவம் செய்யேல் பண்டொருநாள்
ஆலி னிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்
மேலெழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மாமதீ மகிழ்ந் தோடிவா.

கண்ணன் நெடுமால்

61.சிறியனென் றுஎன்னிளஞ் சிங்கத்தை இகழேல்கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள்
சிறுமைப் பிழைகொள்ளில் நீயும்உன் தேவைக்குரியைகாண்
நிறைம தீநெடு மால்விரைந்து உன்னைக் கூவுகின்றான்.

வெண்ணெய் விழுங்கும் கண்ணன்

62.தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய
பேழை வயிற்றெம் பிரான்கண்டாய்உன்னைக் கூவுகின்றான்
ஆழிகொண் டுஉன்னையெறியும் ஐயுற வில்லைகாண்
வாழ வுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா.

இடரில்லை

63.மைத்தடங் கண்ணி யசோதை தன்மக னுக்குஇவை
ஒத்தன சொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை
எத்தனை யும்சொல்ல வல்ல வர்க்குஇட ரில்லையே

அடிவரவு: தன் என் சுற்று சக்கரம் அழகிய தண்டொடு பாலகன் சிறியன் தாழியில் மை-உய்ய

ஆறாந் திருமொழி

6. உய்யவுலகு

கண்ணன் இரு கைகளையும் இரண்டு முழந் தாள்களையும் தரையில் ஊன்றிக்கொண்டு தலையை நிமிர்த்தி அசைத்து விளையாடுகிறான். இதில் மயங்கினாள் யசோதை! அழகனே! இன்ப ஊற்றாக அமையும் அமுதே! எனக்காக ஒரே ஒரு முறை தலை யசைத்து விளையாடிக் காட்டு என்று வேண்டுகிறாள் அவள்.

செங்கீரைப் பருவம்
(தலையை நிமிர்த்தி முகத்தையசைத்து ஆடுதல்)

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பரம்பரனே ஆயர்கள் போரேறு

64. உய்ய உலகுபடைத் துண்ட மணிவயிறா ஊழிதோ றூழிபல ஆலி னிலையதன்மேல்
பைய உயோகுதுயில் கொண்ட பரம்பரனே பங்கய நீள்நயனத்து அஞ்சன மேனியனே
செய்யவள் நின்னகலம் சேமமெ னக்கருதிச் செல்வுபொ லிமகரக் காது திகழ்ந்திலக
ஐயஎ னக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.

கோளரியே ஆயர் போரேறு

65. கோளரி யின்னுருவங் கொண்டுஅவுணனுடலம் குருதி குழம்பியெழக் கூருகி ரால்குடைவாய்
மீள அவன்மகனை மெய்ம்மை கொளக்கருதி மேலை யமரர்பதி மிக்கு வெகுண்டுவர
காளநன் மேகமவை கல்லொடு கால்பொழியக் கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே
ஆள எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.

திரிவிக்கிரமனே ஆயர் போரேறு

66. நம்முடை நாயகனே நான்மறை யின்பொருளே நாபியுள் நற்கமல நான்முக னுக்குஒருகால்
தம்மனை யானவனே தரணி தலமுழுதும் தாரகை யின்னுலகும் தடவி அதன்புறமும்
விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ்விடையும் விரவிய வேலைதனுள் வென்று வருமவனே
அம்ம எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.

நரகனை அழித்தவனே ஆயர் போரேறு

67. வானவர் தாம்மகிழ வன்சக டமுருள வஞ்சமு லைப்பேயின் நஞ்சமது உண்டவனே
கானக வல்விளவின் காயுதி ரக்கருதிக் கன்றது கொண்டெறியும் கருநிற என்கன்றே
தேனுக னும்முரனும் திண்திறல் வெந்நரகன் என்பவர் தாம்மடியச் செருவத ரச்செல்லும்
ஆனை எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.

மருதம் முறித்தவனே ஆயர் போரேறு

68.மத்தள வும்தயிரும் வார்குழல் நன்மடவார் வைத்தன நெய்களவால் வாரிவிழுங்கி ஒருங்கு
ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்
முத்தினி ளமுறுவல் முற்ற வருவதன்முன் முன்ன முகத்தணியார் மொய்குழல்கள் அலைய
அத்த எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.

காளியனுச்சியில் நடம்பயின்றவனே ஆயர் போரேறு

69. காய மலர்நிறவா கருமுகில் போலுருவா கானக மாமடுவில் காளிய னுச்சியிலே
தூய நடம்பயிலும் சுந்தர என்சிறுவா துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே
ஆய மறிந்துபொரு வான்எதிர் வந்தமல்லை அந்தர மின்றியழித் தாடிய தாளிணையாய்
ஆய எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.

நப்பின்னை நாதனே ஆயர் போரேறு

70. துப்புடை யயார்கள்தம் சொல்வழு வாதுஒருகால் தூய கருங்குழல்நல் தோகை மயிலனைய
நப்பினை தன்திறமா நல்விடை யேழவிய நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டியஎன்
அப்ப எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.

ஏழுலகுடையவனே ஆயர் போரேறு

71. உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி உன்னொடு தங்கள்கருத்தாயின செய்துவரும்
கன்னிய ரும்மகிழக் கண்டவர் கண்குளிரக் கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறை யாய் மதிள்சூழ் சோலை மலைக்கரசே கண்ண புரத்தமுதே
என்னவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழுலகும் முடையாய் ஆடுக ஆடுகவே.

மறை ஏழும் பொருளே ஆயர் போரேறு

72. பாலொடு நெய்தயிர்ஒண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்லகருப் பூரமும் நாறிவர
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள வெள்ளிமுளைப் போல்சில பல்லிலக
நீல நிறத்தழகா ரைம்படை யின்நடுவே நின்கனி வாயமுதம் இற்று முறிந்துவிழ
ஏலு மறைப்பொருளே ஆடுக செங்கீரை ஏழுல கும்முடையாய் ஆடுக ஆடுகவே.

இடைக் குலத்தரசே ஆயர் போரேறு

73. செங்கம லக்கழலில் சிற்றிதழ் போல்விரலில் சேர்திக ழாழிகளும் கிண்கிணி யும்அரையில்
தங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிர மும்கிறியும்
மங்கல ஐம்படையும் தோல்வளை யும்குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக
எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை ஏழுல கும்முடையாய் ஆடுக ஆடுகவே.

புகழும் இன்பமும் அடைவர்

74. அன்னமும் மீனுருவும் ஆளரி யும்குறளும் ஆமையு மானவனே ஆயர்கள் நாயகனே
என்அவ லம்களைவாய் ஆடுக செங்கீரை ஏழுல கும்முடையாய் ஆடுக வாடுகவென்று
அன்ன நடைமடவாள் அசோதை யுகந்தபரிசு ஆன புகழ்ப்புதுவைப் பட்ட னுரைத்ததமிழ்
இன்னிசை மாலைகள்இப் பத்தும்வல் லார்உலகில் எண்திசை யும்புகழ்மிக்கு இன்பம்அது எய்துவரே.

(இந்த 11 பரசுரங்களை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்பவர்க்கு மாபெரும் புகழ் உண்டாகும்)

அடிவரவு: உய்ய கோளரியின் நம்முடை வானவர் மத்தள காய துப்பு உன்னை பாலொடு செங்கமலம் அன்னம்-மாணிக்கம்

ஏழாந் திருமொழி

7. மாணிக்கக்கிண்கிணி

கண்ணன் தன் திருமேனியைச் சிறிது அசைக்கிறான். இடுப்பில் கட்டிய சதங்கைகள் ஒலிக்கின்றன! தன் முத்தப் பற்களைக் காட்டிப் புன்முறுவல் செய்கிறான். பெருஞ் செயல்களைச் செய்த இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டுகிறான்! அரிய செயலைச் செய்து விட்டதாக நினைக்கிறான்! கைதட்டுவதால் ஏற்பட்ட ஓசையைக் கேட்டு மேலும் மகிழ்கிறான். இதைக் கண்டு பேரானந்தம் அடைகிறாள் யசோதை. கண்ணா! மீண்டும் ஒரு முறை சப்பாணி கொட்டு; உலகம் மகிழட்டும் என்று வேண்டுகிறாள்.

சப்பாணிப் பருவம்
(கைகொட்டி விளையாடுதல்)

கலித்தாழிசை

பண்டு காணி கொண்ட கைகள்

75. மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின்மேல்
ஆணிப்பொன் னால்செய்த ஆய்பொன் னுடைமணி
பேணிப் பவளவாய் முத்திலங்க பண்டு
காணிகொண்ட கைகளால் சப்பாணி கருங்குழல் குட்டனே சப்பாணி.

மாயவன் கண்ணன்

76. பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி
தன்னரை யாடத் தனிச்சுட்டி தாழ்ந்தாட
என்னரை மேல்நின் றிழிந்துஉங்க ளாயர்தம்
மன்னரை மேல்கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி.

ஆழியங்கையன்

77. பன்மணி முத்துஇன் பவளம் பதித்தன்ன
என்மணி வண்ணன் இலங்குபொற் றோட்டின்மேல்
நின்மணி வாய்முத் திலங்கநின் னம்மைதன்
அம்மணி மேல்கொட்டாய் சப்பாணி ஆழியங் கையனே சப்பாணி.

திருக்குடந்தை ஆராவமுது

78. தூநிலா முற்றத்தே போந்து விளையாட
வானிலாஅம்புலீசந்திரா வாவென்று
நீநிலா நின்புக ழாநின்ற ஆயர்தம்
கோநிலா வக்கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே சப்பாணி.

பத்மநாபன்

79. புட்டியில் சேறும் புழுதியும் கொண்டுவந்து
அட்டி யமுக்கி அகம்புக் கறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும்உண்
பட்டிக்கன் றேகொட்டாய் சப்பாணி பற்பநா பாகொட்டாய் சப்பாணி.

தேவகி சிங்கம்

80. தாரித்து நூற்றுவர் தந்தைசொல் கொள்ளாது
போருத்து வந்து புகுந்தவர் மண்ணாள
பாரித்த மன்னர் படப்பஞ் சவர்க்குஅன்று
தேருய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி.

திருக்குடந்தை சார்ங்கபாணி

81. பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை
இரந்திட்ட கைம்மேல் எறிதிரை மோத
கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க
சரந்தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்கவிற் கையனே சப்பாணி.

திருக்குடந்தை சக்ரபாணி

82. குரக்கினத் தாலே குரைகடல் தன்னை
நெருக்கி அணைகட்டி நீள்நீ ரிலங்கை
அரக்கர் அவிய அடுகணை யாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி நேமியங் கையனே சப்பாணி.

சிங்கமதாகிய தேவன்

83. அளந்திட்ட தூணை அவந்தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க வுருவாய்
உளந்தொட் டிரணியன் ஒண்மார் வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய்முலை யுண்டானே சப்பாணி.

கடல் கடைந்த கார்முகில்

84. அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி
வடம்சுற்றி வாசுகி வன்கயி றாக்க்
கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார்முகில் வண்ணனே சப்பாணி.

தீவினை போகும்

85. ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தங் கோவினை
நாட்கமழ் பூம்பொழில் வில்லிபுத் தூர்ப்பட்டன்
வேட்கையி னால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையி னால்சொல்லு வார்வினை போமே.

அடிவரவு: மாணிக்கம் பொன் பன் தூநிலா புட்டியில் தாரித்து பரந்து குரக்கினம் அளந்து அடைந்து ஆட்கொள்ள- தொடர்

எட்டாந் திருமொழி

8. தொடர்சங்கிலிகை

நடக்கத் தெரியாத குழந்தையை நடக்கச் செய்வதும், அது தடுமாறிக் கொண்டு நடந்து வருவதைக் கண்டு மகிழ்வதும் தாயின் செயல்! கண்ணா நீ யல்லனோ நடையழகன். உன்னைச் சதுர்கதி: என்று எல்லோரும் கூறுகிறார்களே! அந்த நடையழகை எனக்குக் காட்டமாட்டாயா? உன் மெல்லடித் தாமரைகளைத் தரைமீது மெல்ல வைத்து யானைக்குட்டி போல் நடந்து வா! என்கிறாள் யசோதை. இப்பாடல்களை ஆர்வத்தோடு பாடுவோர் கண்ணைப் போன்று புகழ்மிக்க மகனைப் பெறுவார்கள்.

தளர் நடைப் பருவம்
(தளர் நடை நடத்தல்)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வாரணம் கண்ணன்

86. தொடர்சங் கிலிகை சலார்பிலா ரென்னத் தூங்குபொன் மணியொலிப்ப
படுமும் மதப்புனல் சோர வாரணம் பையநின்று ஊர்வதுபோல்
உடங்கூடிக் கிண்கிணி யாரவா ரிப்ப உடைமணி பறைகறங்க
தடந்தா ளிணைகொண்டு சாரங்க பாணி தளர்நடை நடவானோ.

அனந்த சயனன்

87. செக்க ரிடைநுனிக் கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைபோல
நக்க செந்துவர் வாய்த்திண்ணை மீதே நளிர்வெண்பல் முளையிலக
அக்கு வடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன்
தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ.

இருடீகேசன்

88. மின்னுக் கொடியும் ஓர்வெண் திங்களும் சூழ்பரி வேடமுமாய்
பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்
மின்னில் பொலிந்த தோர்கார் முகில்போலக் கழுத்திணில் காறை யொடும்
தன்னில் பொலிந்த இருடீ கேசன் தளர்நடை நடவானோ.

என் திரு மார்வன்

89. கன்னற் குடம்திறந் தாலொத் தூறிக் கணகண சிரித்துவந்து
முன்வந்து நின்று முத்தம் தரும்என் முகில்வண்ணன் திருமார்வன்
தன்னைப் பெற்றேற்குத் தன்வா யமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ.

கருமலைக் குட்டன்

90. முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடுமொடு விரைந்தோட
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன் பெயர்ந்தடி யிடுவதுபோல்
பன்னி யுலகம் பரவியோ வாப்புகழ்ப் பலதே வனென்னும்
தன்நம்பி யோடப் பின்கூடச் செல்வான் தளர்நடை நடவானோ.

காமன் தந்தை

91. ஒருகா லில்சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த
இருகா லும்கொண்டு அங்கங்கு எழுதினாற்போல் இலச்சினை படநடந்து
பெருகா நின்ற இன்பவெள் ளத்தின்மேல் பின்னையும் பெய்துபெய்து
கருகார்க்கடல்வண்ணன் காமர் தாதை தளர்நடை நடவானோ.

தடந்தாளிணையான்

92. படர்பங் கயமலர் வாய் நெகிழப் பனிபடு சிறுதுளிபோல்
இடங்கொண் டசெவ் வாயூறி யூறி இற்றிற்று வீழநின்று
கடுஞ்சேக் கழுத்தின் மணிக்குரல் போல் உடைமணி கணகணென
தடந்தா ளினைகொண்டு சார்ங்க பாணி தளர்நடை நடவானோ.

மணிவண்ணன் வாசுதேவன்

93. பக்கம் கருஞ்சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய
அக்கு வடமிழிந் தேறித் தாழ அணியல்குல் புடைபெயர
மக்க ளுலகினில் பெய்தறி யாத மணிக்குழ வியுருவின்
தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ.

திருவிக்கிரமன் வேழக்கன்று

94. வெண்புழுதி மேல்பெய்து கொண்ட அளைந்ததோர் வேழத்தின் கருங்கன்றுபோல்
தெண்புழுதி யாடித் திரிவிக் கிரமன் சிறுபுகர் படவியர்த்து
ஒண்போதலர் கமலச் சிறுக்கா லுரைத்து ஒன்றும் நோவாமே
தண்போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ.

செங்கண்மால் கேசவன்

95. திரைநீர்ச் சந்திர மண்ட லம்போல் செங்கண்மால் கேசவன்தன்
திருநீர் முகத்துத் துலங்கு சுட்டி திகழ்ந்தெங்கும் புடைபெயர
பெருநீர்த் திரையெழு கங்கை யிலும் பெரியதோர் தீர்த்தபலம்
தருநீர் சிறுச்சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ.

பக்தி மிக்க மக்களைப் பெறுவர்

96. ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன்தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை
வேயர் புகழ்விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்கவல்லார்
மாயன் மணிவண் ணன்தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே.

(இந்த 11 பாசுரங்களையும் பாராயணம் செய்து ஆத்திகத்தில் அக்கறை கொண்ட குழந்தைகளைப் பெறுங்கள்)

அடிவரவு: தொடர் செக்கர் மின்னுக் கன்னல் முன்னல் ஒரு காலில் படர் பக்கம் வெண் திரை ஆயர்- பொன்.

ஒன்பதாந் திருமொழி

9. பொன்னியற்கிண்கிணி

பகவான் பக்தி சபலன். பக்தியுள்ளவர்கள் அழைத்தவுடன் எதிரில் வந்து நிற்பான். பெரியாழ்வார் அழைத்தால் எதிரில் வந்து நிற்பான். நச்சுவார்முன் நிற்கும் நாராயணன் அவன். யசோதைக்குக் கண்ணன்மீது அன்பு மிகுதி. குழந்தை தாயைக் கண்டவுடன் ஓடிவந்து அவளை அணைத்துக்கொள்ளும். குழந்தை கண்ணனும் அவ்வாறே வந்து தன்னை அணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாள் யசோதை!

அச்சோப் பருவம்
(அணைத்துக்கொள்ள அழைத்தல்)

கலித்தாழிசை

மின்னியல் மேகம்

97. பொன்னியல் கிண்கிணி சுட்டி புறம்கட்டி
தன்னிய லோசை சலஞ்சல னென்றிட
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல்
என்னிடைக்கோட்டரா அச்சோ வச்சோ எம்பெரு மான்வாரா அச்சோ வச்சோ

பஞ்சாயுதன்

98.செங்கம லப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல்
பங்கிகள் வந்துஉன் பவளவாய் மொய்ப்ப
சங்குவில் வாள்தண்டு சக்கர மேந்திய
அங்கைக ளாலேவந்து அச்சோ வச்சோ ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ.

பஞ்சவர் தூதன்

99. பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
நஞ்சுமிழ் நாகம் கிடந்தநற் பொய்கைபுக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ வச்சோ.

கூனியின் கூனினை நிமிர்த்தவன்

100. நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன
தேறி அவளும் திருவுடம் பில்பூச
ஊறிய கூனினை உள்ளே யொடுங்கஅன்று
ஏற வுருவினாய் அச்சோ வச்சோ எம்பெரு மான்வாரா அச்சோ வச்சோ.

துரியோதனனை அழல விழித்தவன்

101. கழல்மன்னர் சூழக் கதிர்போல் விளங்கி
எழலுற்று மீண்டே இருந்துஉன்னை நோக்கும்
சுழலைப் பெரிதுடைத் துச்சோ தனனை
அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழியங் கையனே அச்சோ வச்சோ.

ஸ்ரீ பார்த்தஸாரதி

102. போரொக்கப் பண்ணிஇப் பூமிப் பொறைதீர்ப்பான்
தேரொக்க வூர்ந்தாய் செழுந்தார் விசயற்காய்
காரொக்கும் மேனிக் கரும்பேருங் கண்ணனே
ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ ஆயர்கள் போரேறே அச்சோ வச்சோ.

சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறியவன்

103. மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்
தக்கதி தன்றென்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய
சக்கரக்கையனே அச்சோ வச்சோ சங்க மிடத்தானே அச்சோ வச்சோ.

நமுசியை வானில் சுழற்றியவன்

104. என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ.

திருமறுமார்வன்

105. கண்ட கடலும் மலையும் உலகேழும்
முண்டத்துக் காற்றா முகில்வண்ணா ஓஒவென்று
இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள
மண்டை நிறைத்தானே அச்சோ வச்சோ மார்வில் மறுவனே அச்சோ வச்சோ.

ஹம்ஸாவதாரம்

106. துன்னிய பேரிருள் சூழ்ந்துஉல கைமூட
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட
பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்கஅன்று
அன்னம தானானே அச்சோ வச்சோ அருமறை தந்தானே அச்சோ வச்சோ.

நாரணனைப் பாடுவார்

107. நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை
அச்சோ வருகவென்று ஆய்ச்சயு ரைத்தன
மச்சணி மாடப் புதுவைகோன் பட்டன்சொல்
நச்சலும் பாடுவார் நீள்விசும் பாள்வரே.

அடிவரவு: பொன் செங்கமலம் பஞ்சவர் நாறிய கழல் போர் மிக்க என்னிது கண்ட துன்னிய நச்சுவார்-வட்டு

பத்தாந் திருமொழி

10. வட்டு நடுவே

குழந்தை ஓடி வந்து தாயின் முதுகைக் கட்டிக்கொண்டு மகிழும்; தாயும் மகிழ்வாள். கண்ணனும் தாய்க்குத் தெரியாமல் பின்புறத்தே மெல்ல நடந்து வந்து முதுகைக் கட்டிக் கொள்வான். அந்நிலையை விரும்பி யசோதை மகிழ்ந்தது போல் ஆழ்வார்தாமும் விரும்புகிறார்.

புறம் புல்கல்
(தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)
வெண்டளையால் வந்த கலித்தாழிசை

கோவிந்தன் புறம் புல்குதல்

108. வட்டு நிடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்
சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்கஎன்
குட்டன்வந்து என்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்.

எம்பிரான் கண்ணன்

109. கிங்கிணி கட்டிக் கிறிகட்டி கையினில்
கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி
தன்கணத் தாலே சதிரா நடந்துவந்து
என்கண்ணன் என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.

கொத்துத் தலைவனை அழித்த அச்சுதன்

110. கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்
ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண்ணாள்வான்
கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய
அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆயர்க ளேறுஎன் புறம்புல்குவான்.

விசயன் தேர் ஊர்ந்தவன்

111. நாந்தக மேந்திய நம்பி சரணென்று
தாழ்ந்த தனஞ்சயற் காகி தரணியில்
வேந்தர்க ளுட்க விசயன் மணித்திண்தேர்
ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்.

மண்பல கொண்ட வாமனன்

112. வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி
கண்பல செய்த கருந்தழைக் காவின்கீழ்
பண்பல பாடிப்பல் லாண்டிசைப்ப பண்டு
மண்பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னைப் புறம்புல்குவான்.

பத்திராகாரன் கண்ணன்

113. சத்திர மேந்தித் தனியொரு மாணியாய்
உத்தர வேதியில் நின்ற ஒருவனை
கத்திரியர் காணக் காணிமுற்றும்கொண்ட
பத்திராகாரன் புறம்புல்குவான் பாரளந் தான்என் புறம்புல்குவான்.

வயிறார வெண்ணெய் விழுங்கியவன்

114. பொத்த வுரலைக் கவிழ்த்துஅதன் மேலேறி
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயி றார விழுங்கிய
அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான்.

மறையோர் வணங்கும் எம்பிரான்

115. மூத்தவை காண முதுமணற் குன்றேறி
கூத்துஉவந் தாடிக் குழலால் இசைபாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்தவந்து என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.

கற்பக மரத்தைப் பூமிக்குக் கொணர்ந்தவன்

116. கற்பகக் காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவதென்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள்
உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்.

தரவு கொச்சகக் கலிப்பா
நன்மக்களைப் பெற்று மகிழ்வர்

117. ஆய்ச்சியன் றாழிப் பிரான்புறம் புல்கிய
வேய்த்தடந் தோளிசொல் விட்டுசித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர்
வாய்த்தநின் மக்களைப் பெற்று மகிழ்வரே.

அடிவரவு: வட்டு கிங்கிணி கத்த நாந்தகம் வெண்கலம் சத்திரம் பொத்த மூத்தவை கற்பகம் ஆய்ச்சி-மெச்சூது.