திங்கள், 2 ஜூலை, 2018

அனுக்ரஹம் பரிபூர்ணம்...

அஞ்சலை என்ற இளம் வயதுப் பெண். அவள் ஒரு துப்புறவுத் தொழிலாளி. கணவன் இல்லை; இரண்டு சின்னச்சிறு பாலகர்கள்; கடுமையான வறுமை...

இதுதான் அஞ்சலையின் வாழ்க்கை.

பெரியவாளைப் பற்றி அவளுக்கு எதுவுமே தெரியாது! தெரிந்து கொள்ளும் சூழ்நிலையிலும் அவள் இல்லை...!

1984-ல் பெரியவா... அவள் இருந்த க்ராமத்துக்கு விஜயம் செய்தார். க்ராமத்தில் இருந்த பெரிய மனிதர்கள் முதல் எல்லோரும் பெரியவாளை தினமும் சென்று தர்ஶனம் செய்வதை கண்டாள்.

"நம்ம ஊருக்கு ஒரு ஸாமியார் வந்திருக்காங்களே...! நானும், அவரைப் போயி பாத்துட்டு வரப்போறேன்"

அக்கம்பக்கத்திலிருப்பவர்களிடம் கூறிவிட்டு, தன் குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு பெரியவாளை வந்து நமஸ்கரித்தாள்.

பக்தி என்ற நிலையெல்லாம் அவளுக்கு என்னவென்றே தெரியாது.

நமஸ்காரம் பண்ணிவிட்டு குழந்தைகளுடன் நகர்ந்தவளை... தடுத்தாட்கொண்டது.... அவ்யாஜகாருண்யம்!

"அவ பேர்... என்னன்னு கேளு.."

பாரிஷதரிடம் சொன்னார்....

"ஒம்பேர் என்னம்மா? ஸாமிகிட்ட சொல்லு"

"அஞ்சலைங்க... ஸாமி ! "

"என்ன வேலை பாக்கற?.."

"துப்புறவு வேலை செய்யறேங்க ஸாமி !.."

"இவா... ரெண்டு பேரும்....?."

"இவங்க எம் பையனுங்க... ஸாமி! பெரியவன் நாலாப்பு படிக்கறான், இவன் சின்னவன் ஸாமி " 

கேட்ட கேள்விக்கு பதில் கூறிவிட்டு "அவ்வளவுதான்! " என்பதுபோல் குழந்தைகளோடு வாஸலுக்கு வந்து விட்டாள்.

பாவம் ! அவளுக்கு பக்தி பண்ணுவதில், எந்தவித முறையும் தெரியாது.

தெய்வம்... ஒருவருக்கு அனுக்ரஹம் பண்ண வேண்டும் என்று எண்ணிவிட்டால்......?????

"அவளக் கூப்டு!..."

"இந்தாம்மா! ஒன்ன... ஸாமி கூப்படறார்..."

பாரிஷதர் ஓடி வந்து அழைத்ததும், உள்ளே ஒரு வித பயத்தோடு மெல்லத் திரும்பி வந்தாள்.

"ஒம்பேரு அஞ்சலைன்னு சொன்னியே....! நீ எதுக்குமே பயப்பட மாட்டியோ?..."

அன்பும், குறும்பான புன்னகையும் பெரியவா முகத்தில் தவழ்ந்தது. (அஞ்சுதல் என்றால் பயம்)

எல்லாவற்றுக்கும் மேலே, பெரியவாளுடைய தீக்ஷண்யமான நயன தீக்ஷை அந்த ஏழைத் துப்புறவுத் தொழிலாளியின் ஹ்ருதயத்துக்குள் ஆழ்ந்து இறங்கி, தக்ஷணமே "உண்மையான மஹாபக்தை" என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டாள்!

விளையாட்டாக அவளோடு பேசுவது போல் சீண்டினார்....

"ஒன்னோட ரெண்டாவுது பிள்ளை, டில்லிலயா வேலை பாக்கறதா சொன்ன?.."

அஞ்சலைக்கு அவளையும் அறியாமல், லேஸாக சிரிப்பு வந்துவிட்டது.!

பக்கத்தில், ஒழுகும் மூக்கை உறிஞ்சிக் கொண்டு, அஞ்சலையின் புடவைத் தலைப்பை விடாமல் பிடித்துக் கொண்டு, கிழிந்து தொங்கும் ஒரு சாயம் போன நிக்கரும், பொத்தான் இல்லாத சட்டையோடு நிற்கும் தன் இரண்டாவது பாலகனைப் பார்த்தாள்.

பெரியவா கேட்ட கேள்விக்கு, சிரிப்பைத் தவிர அவளால் வேறு பதில் சொல்ல முடியவில்லை.

மிகவும் யதார்த்தமாக தெய்வத்தை மனஸில் catch பண்ணிக் கொண்டாள்.

அவளுடைய பதில் இனி எதற்கு?

அனுக்ரஹம் பரிபூர்ணம் !

அவளுக்கு பெரியவாளை பிடித்துக் கொள்ளத் தெரிந்துவிட்டது. அது போதாதா?

“எதற்காக இப்படிக் கேட்டார்?” என்றெல்லாம் கூட, அவள் மனஸை குழப்பிக் கொள்ளவேயில்லை.

( எல்லாத்தையும் படித்து, கேட்டு, அலசி ஆராயும் அறிவாளிகளான நாம்தான் குழப்பத் திலகங்களாக இருப்போம்)

தினமும் குளித்துவிட்டு, கற்பூரத்தை ஏற்றி ஸூர்யனுக்கு காட்டுவாள். அவளுடைய மனஸு முழுவதையும் பெரியவா ஆக்ரமித்திருந்தார்.

பெரியவாளுடைய ஒரு படம் கூட அவளிடம் கிடையாது.

அந்த 'மஹாஸாமி'யை படத்தில் வைத்துப் பூஜிக்கக் கூட தனக்கு அருகதை கிடையாது என்று எண்ணினாள்.

எந்த பெரிய பக்தருக்கும் தோன்றாத எண்ணமாக, எங்கும் வ்யாபித்த பெரியவாளை, பரந்து விரிந்த ஆகாஶத்தில், ஒளிப்பிழம்பாய் தோன்றும் ஸூர்யனாகக் ஆராதிக்கும் பக்குவத்தைப் பெற்றிருந்தாள்.

அவள் வாழ்வில் படிப்படியாக கஷ்டங்கள் குறைந்தன.

25 வருஷங்களுக்குப் பிறகு ரதயாத்ரையாக வந்த பெரியவா விக்ரஹத்தை, பெரியவா நேரிலேயே வந்தது போல் தர்ஶித்து பேரானந்தம் அடைந்தாள்.

"பெரியவங்க நம்மை விட்டுட்டு எங்கயும் போகலீங்க! அப்டி நெனைக்கறவங்க, அந்த தெய்வத்தைப் புரியாதவங்க! இந்த ரதத்துல... அவரு மெய்யாலுமே வந்திருக்காருன்னு நா... நிச்சியமா சொல்லுவேன்"

25 வர்ஷங்களுக்குப் பிறகு, இப்போதும் அவள் பக்கத்தில் அவளுடைய 27 வயஸு நிறைந்த அதே இளைய மகன் நின்றிருந்தான்!

"ஒன்னோட ரெண்டாவது பிள்ளை, டெல்லிலயா வேலை பாக்கறதா சொன்ன?"....

25 வர்ஷங்களுக்கு முன்பு, பெரியவா விளையாட்டு போல் கேட்ட போது, அப்போதும் அவளுடைய ரெண்டே வயஸான மகன், மூக்கை உறிஞ்சியபடி, மலங்க மலங்க பார்த்துக் கொண்டு, அவளுடைய புடவை தலைப்பை பிடித்தபடி நின்று கொண்டிருந்தான்!

அதே மகன்தான்!....  இன்று லீவில் ஊருக்கு வந்திருந்தான்....

"டில்லியில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் உயர் அதிகாரியாக இருக்கிறான்"

"பெரியவா எனும் அம்ருத ஸாகரம், குறிப்பிட்ட ஒரு ஸாராருக்குத்தான்!" என்ற பொய்யை, மஹாப் பொய்யென்று நிரூபித்தவர்களில், அஞ்சலையும் ஒருத்தி!

இவ்வளவு தூரம் பெரியவாளை க்ரஹித்துக் கொள்வதற்கு அவளிடம் போலித்தனமோ, படாடோபமோ இல்லாத அமைதியான நம்பிக்கை மட்டுமே இருந்தது!

ஸூர்யனின் ஒளிக்கு உயர்வு-தாழ்வு பேதங்களே இல்லை. அந்த ஒளியை க்ரஹித்து கொள்ளுவதும், தள்ளுவதும் நம்முடைய கர்மபலனே!

ஆனால், கர்மபலன் மேல் பழியை போடாமல், மனஸார துளியாவது நம்பிக்கையோடு பகவானிடம் அன்பு பூண்டால் போதும்!

ஆம்! அவன் மேல் கொள்ளும் அசைக்க முடியாத நம்பிக்கையால், நம் விதி இறந்து போகும்!
ஸ்ரீ மஹா பெரியவா
**********************************************************
காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் சீமா பட்டாச்சாரி அவர்களின் அனுபவம் வேறு யாருக்கும் கிட்டாத பாக்யமாக அமைந்துள்ளது.

வரதர் கோயிலில் பிரும்மோத்ஸவம். ஆறாம் நாள் உற்சவம். பெருமாள் ஸ்ரீ வேணுகோபாலனாக சேவை சாதித்து அருளி வீதி வலம் வருகிறார். ஸ்ரீ வேணுகோபாலனாக அதி அற்புத அழகில் சீமா பட்டாச்சாரி பரவசமுறுகிறார்.

பெருமாள் திருவீதிவலம் ஸ்ரீ மடத்தின் எதிரே வந்தடைகிறது. ஸ்ரீமடத்திலிருந்து சாட்சாத் ஈஸ்வரரான ஸ்ரீ பெரியவா வெளியே வந்து பக்தி பரவசத்துடன் ஊர்வலம் வந்து நிற்கும் பரமனை தரிசித்து நிற்கிறார்.

சீமா பட்டர் இந்த அரிய காட்சியால் உணர்ச்சி பெருக்கெடுத்து நிற்கிறார். அப்போது அவருக்கு ஒரு அதிசய அனுபவம் ஸ்ரீ வேணுகோபாலனை தரிசித்து நிற்கும் ஸ்ரீ பெரியவாளிடம் அவர் பார்வை சென்றபோது, அங்கே ஸ்ரீ பெரியவாளை இவரால் காண இயலவில்லை. அதற்கு பதிலாக அதே இடத்தில் திரு உலாவரும் ஸ்ரீ வேணுகோபாலன் அலங்கார அழகோடு நிற்பதை தரிசித்து சற்றே சீமா பட்டர் அதிர்ச்சியுறுகிறார். இந்த அற்புதத்தை தாங்க முடியாமல் பட்டர் திணறிபோய் ஸ்தம்பித்து நிற்கிறார். பரவசத்தில் தோய்ந்தவராய் பட்டர் எல்லையில்லா ஆனந்தத்தில் மூழ்கி நிற்கிறார்.

இந்த அதி அற்புதம் ஒரு நொடிப் பொழுதில் பட்டருக்கு மட்டும் அருளப்பட்டு மறைகிறது.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளே ஸ்ரீ வேணுகோபாலன் என்ற மாபெரும் ரகசியம் பட்டருக்கு இதனால் தெளிவாக அருளப்பட்டுவிட்டது.

இது உண்மைதான் என்பது ஊர்ஜிதமாக சீமா பட்டருக்கு மற்றொரு சம்பவமும் அனுபவமானது. ஸ்ரீ பெரியவாள் தேனம்பாக்கத்தில் அருளிக்கொண்டிருந்த சமயமது. ஒருநாள் பெருமாள் கோயிலிலிருந்து சீமா பட்டரை ஸ்ரீ பெரியவா அழைத்துவர ஆக்ஞையிட்டார்.

சீமா பட்டாசாரியாரும் வந்து நின்று வந்தனம் செய்தார்.

“இன்னிக்கு என்ன திதி” என்று ஸ்ரீ பெரியவா பட்டரை கேட்டார்.

பட்டர் மெதுவாக “ஏகாதசி” என்றார்.

“உபவாசம் நமக்கு மட்டும் தானே? இல்லே வரதனுக்கும் தானா?” இப்படி ஸ்ரீ பெரியவா கேட்டதும் பட்டர் வெலவெலத்து போனார்.

ஸ்ரீ பெரியவா தொடர்ந்து கேட்டார் “பெருமாளுக்கு இன்னிக்கு நைவேத்யம் ஏன் செய்யவில்லை?”

இந்த கேள்வியால் பட்டர் அதிர்ச்சி அடைந்தார். அவருடைய நாக்கு குழறியது “தெரியல்லே…. விசாரிச்சுண்டு வரேன்” என்று சொல்லிவிட்டு கோயிலுக்கு பட்டர் திரும்பிச் சென்றார்.

அங்கு சென்று விசாரித்தபோதுதான் உண்மை தெரிய வந்தது. கோயிலின் உள்கட்டில் ஏதோ தவறு நடந்துள்ளது தெரிய வந்தது. அதனால் பெருமாளுக்கு நைவேத்யம் செய்யாமல் விடுபட்டுவிட்டிருந்தது.

உடனே பட்டர் அதை சரிபடுத்தி, தக்க பிராயச்சித்தம் செய்து பெருமாளுக்கு அதன்பின்னே திருவமுது படைக்கப்பட்டது. பிரசாதத்தை உடனே ஸ்ரீ பெரியவாளிடம் பட்டர் கொண்டு சமர்ப்பித்தார்.

வரதராஜ பெருமாளுக்கு நைவேத்யம் நடக்கவில்லை என்பது ஸ்ரீ பெரியாளுக்கு எப்படி தெரிந்தது? தெரிந்திருந்தாலும் அதைப் பற்றி கவலைபடுவானேன்?

இப்படி சீமா பட்டர் சந்தேகமாக நினைக்க வாய்ப்பே இல்லாமல் போனது. சாட்சாத் ஸ்ரீ வேணுகோபாலனேதான் ஸ்ரீ பெரியவா என்ற உண்மையை அனுபவித்த பாக்யம்தான் ஏற்கனவே பட்டருக்கு கிடைத்துள்ளதே!

ஸ்ரீ வேணுகோபாலனாக சீமா பட்டருக்கு காட்சித் தந்த மகான் இன்னும் பல பக்தர்களுக்கும் அவர்கள் இஷ்ட தெய்வங்களாக தரிசிக்கும் பாக்யம் அருளியுள்ளார். பரப்பிரம்ம சொரூபத்தில் அத்தனை தெய்வங்களும் அடக்கமாகின்ற இந்த மேன்மை இயல்பல்லவா?

இப்பேற்பட்ட எல்லாமுமாகி நின்றருளும் நடமாடும் தெய்வமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளிடம் நாம் கொள்ளும் பரிபூர்ணபக்தி நமக்கெல்லாம் சர்வ ஐஸ்வர்யங்களை தந்து சகல மங்களங்களையும் அருளும்!

பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ

காமகோடி தரிசனம் காணக்காணப் புண்ணியம்
ஐந்து வகை ஸ்நானங்கள் பற்றி காஞ்சி மகாபெரியவர்…

காஞ்சி மகாபெரியவர் சாஸ்திரத்தில் 5 வகை ஸ்நானங்கள் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்நானம் என்றவுடன் நாம் தினமும் செய்கிறதான ஜலத்தில் குளிப்பது… இது, ‘வாருணம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த வாருணம் என்பதும் குளம், ஆறு போன்றவற்றில் முங்கிக் குளித்தலே! இதுவே முக்கிய ஸ்நானம். மற்றபடி பாத்திரம் போன்றவற்றால் நீரை எடுத்து விட்டுக் கொள்வது போன்றவை, இரண்டாம்பட்சம்தான். இதற்கு அப்பறம் வருவதுதான், ‘கௌண’மாக கழுத்து வரை குளிப்பது, இடுப்பு வரை குளிப்பது போன்றவையெல்லாம்! ஆனால் இந்த கௌண ஸ்நானங்கள் எல்லாம், ஜலத்தால் நீரால் செய்யும் வாருணத்தில் வருவதுதான்.

இல்லங்களில் சளி,ஜுரத்தில் இருக்கும் போது விபூதி ஸ்நானம் செய்வார்கள் பெரியோர். இது இரண்டாம் வகை. இதற்கு ஆக்நேயம் என்று பெயர். அக்னி ஸம்பந்தமுடையது என்று பொருள். அக்னியின் பஸ்மத்தால் கிடைக்கும் பஸ்மத்தை,சாம்பலை ஜலம் விட்டுக் குழைக்காமல் வாரிப் பூசிக் கொள்வதை பஸ்மோத்தூளனம் என்கிறோம்.

பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது எழும் குளம்படி மண் புனிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு கோ தூளி என்று பெயர். ஸ்ரீகிருஷ்ணனே இந்தப் பசுக்களின் குளம்படித் தூள், சந்தனப் பொடி தூவினதுபோல தனது உடம்பில் படிந்தபடி ‘கோதூளீ தூஸரிதனாக’ இருந்தானாம். இவ்வாறான ‘கோதூளி’ நம்மீது படும்படியாக நின்று அந்த மண்துகள்கள் நம் உடலில் ஏற்பது மூன்றாம் வகையான ஸ்நானம். இதன் பெயர் ‘வாயவ்யம்’. இது வாயுவுடன் சம்பந்தமுடையதாக இருப்பதால், அதாவது காற்றினால் பறக்கும் மண் தூசி என்பதால் இதன் பெயர் வாயவ்யம்.

அபூர்வமாக சில தருணங்களில் வெய்யில் அடிக்கும்போதே மழையும் பொழிகிறதல்லவா..? இவ்வாறான மழைஜலம் தேவலோகத்திலிருந்து வரும் தீர்த்தத்துக்கு சமம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் குளிப்பது ‘திவ்யஸ்நானம்’. இதுவே நான்காம் வகை ஸ்நானம்.

புண்யாக வாசனம், உதகசாந்தி போன்றவை செய்தபின் மந்திர ஜலத்தை புரோகிதர் நம் மீது தெளிப்பார். சந்தியாவந்தனத்தில் ‘ஆபோஹிஷ்டா’ சொல்லி நீரைத் தெளித்துக் கொள்கிறோம். இவ்வாறு அபிமந்திரித்து தெளித்துக் கொள்ளுவது ஐந்தாம் முறை. இதன் பெயர் ‘ப்ராஹ்மம்’. ‘ப்ரம்மம்’ என்றால் வேதம், வேத மந்திரம் என்று ஒரு அர்த்தம். ஆகவே வேத மந்திரத்தால் புனிதப்படுத்தப்பட்ட தீர்த்தப் புரோக்ஷணத்துக்கு, ‘ப்ராஹ்ம ஸ்நானம்’ என்று பெயர்.

பார்க்கப் போனால் எல்லா ஸ்நானமுமே ப்ராஹ்மம்தான். எந்தக் காரியமானாலும் அந்தக் காரியத்தை மட்டும் பண்ணாமல், அதோடு மந்திரத்தையும் சேர்த்து ஈச்வர ஸ்மரணையுடன், ஈஸ்வரார்ப்பணமாகப் பண்ணுவதாகவே அத்தனை ஆசாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
மஹா பெரியவா அற்புதங்கள்
==========================

""மஹாபெரியவா அணிந்த துளசிமாலை !!""

சாதாரணமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன். வயது பன்னிரண்டு அல்லது பதிமூன்று இருக்கலாம். ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக் கொண்டிருக்கலாம்.

மாநிறம். எண்ணெய் அதிகம் கண்டிராத தலை. தடிமனான அரை டிராயர்; கசங்கிப் போன மேல்சட்டை… அரை டிராயரும் மேல்சட்டையும் என்ன நிறம் என்பதைப் பார்த்த மாத்திரத்தில் எவரும் சொல்லி விடமுடியாது. அழுக்கேறிப் போயிருந்தாலும் அந்த ஆடைகள் அவ்வப்போது துவைத்துத் தான் அணியப் படுகின்றன என்பதை அதைப் பார்க்கும் எவராலும் புரிந்து கொள்ள முடியும். நெற்றியில் ஒரு வளைந்த கீற்றாக முறையே இல்லாமல் ஏனோ தானோ என்று விபூதி பூசப்பட்டிருந்தது. ஒருவேளை இங்கு கிளம்பி வருகிற அவசரத்தில் அவனது அம்மா இட்டு விட்டிருக்கலாம். தேர்வு காலங்களில் கிராமத்தில் இருப்பவர்கள் தெருமுனையில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போய், ஒரு சின்ன கற்பூரத்தை ஏற்றி வைத்து, பேனாவை பிள்ளையார் பாதத்தில் வைத்து வழிபட்டு விட்டுப் பரிட்சை எழுதப் போவார்கள். இது ஒரு விதமான நம்பிக்கை. அதாவது இறைவன் அருளோடு தேர்வு எழுதப் போகிறோம் என்கிற ஒரு தைரியம் மாணவர்களுக்கு வரும். அது போல் இந்த சிறுவன் காஞ்சிபுரத்தில் வசிப்பவன் என்பதாலும், மஹா பெரியவாளின் சாந்நித்யம் பற்றி யாரோ சொல்ல – அவன் தகுதிக்கு ஏதோ கேள்விப்பட்டிருந்தாலும் இன்று தேர்வு எழுதப் போகும் முன் ஸ்ரீமடத்துக்கே வந்து விட்டான் போலிருக்கிறது.

விடிகாலை நேரத்தில் விஸ்வரூபதரிசனம் காண வந்திருந்த பக்தர்கள் பலரும் இன்னமும் நகராமல் அங்கேயே நின்றிருந்தபடி பெரியவா தரிசனத்தில் திளைத்திருந்தார்கள்.

இதைத் தவிர, காலை வேளையில் ஏராளமான பக்தர்கள் வேறு ஸ்ரீமடத்தில் குவிந்து விட்டிருந்தார்கள். நாம பஜனைகளும் சங்கர கோஷமுமாக ஸ்ரீமடமே பக்தி மணம் கமழ… அருள் நிரம்பிக் காணப்பட்டது.

இவ்வளவு கூட்டம் பெரியவா தரிசனத்திற்காகக் காத்து நின்றாலும், சிறுவனாகப் பட்டவன் வரிசையில் நின்று கொண்டிருக்கும் எந்த ஒரு பக்தரைப் பற்றியும் கவலைப் படாமல், ராஜபாட்டை போல் விறுவிறுவென்று நடந்து மஹா பெரியவாளின் சந்நிதியை நெருங்கினான்.

முகத்தில் உற்சாகம் கொப்பளிக்க, பெரியவாளைப் பார்த்தபடியே நின்றான். அவனை எவரும் தடுக்கவில்லை. ஏதும் கேள்வி கேட்கவில்லை. காரணம் – அந்தச் சிறுவனின் ஆர்வத்தையும் பரபரப்பையும் பார்த்த பின் இயல்பான அந்த பக்திக்குத் தடை போட எவருக்கும் விருப்பமில்லை.

“மடத்துக்குப் போய் சாமியைக் கும்பிடணும்னா, அவருக்குத் தோதா ஏதாவது எடுத்துட்டுப் போகணும்” என்று அவனுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்களோ…. தெரியவில்லை. தன் கையில் தொடுத்த ஒரு மாலையை வைத்திருந்தான்.

அந்த மாலையைப் பார்த்த பல பக்தர்களும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளைத் தங்களுக்குள் வெளிப்படுத்திக்கொண்டு விமர்சித்துப் பேசினார்கள்.

சிலர் வியந்தார்கள்; சிலர் வெளியே ஏதும் பேச முடியாமல் தங்களுக்குள் கேலியாகச் சிரித்துக் கொண்டார்கள்.
பலரது விமரிசனத்துக்கும் கேலிச் சிரிப்புக்கும் உள்ளான அந்த மாலையில் அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா?
அது – துளசி மாலை!

அதுவும் துளசியை அடர்த்தியாக – கொத்துக் கொத்தாக வைத்துக் கட்டப்பட்ட மாலை இல்லை. தனித் தனி துளசி இலைகளைக் கோணாமாணா என்று – ஒரு முறை இல்லாமல் கோர்த்துத் தொடுக்கப்பட்டிருந்த மாலை.

ஒருவேளை அடுத்தடுத்து துளசி இலைகளை நெருக்கமாக வைத்துத் தொடுத்திருந்தால் அதில் இடைவெளி என்பதே தெரியாமல் போயிருக்கும். ஆனால் இந்தச் சிறுவன் தொடுத்துக் கொண்டு வந்திருந்த துளசி மாலையில் இடைவெளி அதிகம் தெரிந்தது. அதனால் பார்த்தவுடன் ’மாலை’ என்று சொல்வதற்கு எவருக்கும் வாய் வராது.

இதில் இன்னொரு அலங்கோலமும் வெளிப்பட்டது. அதாவது இறைவழிபாட்டிற்குக் கொண்டு செல்கிற துளசியைப் பெரும்பாலும் வாழைநாரில்தான் கட்டுவார்கள். ஆனால் இந்தச் சிறுவன் ஒரு சணலில் இந்த ’மாலை’யைக் கட்டி எடுத்து வந்திருந்தான்.

(வீட்டில் ஏதாவது பொருளைக் கட்டி வைத்திருந்த மூட்டையில் இருந்த சணலை மட்டும் பிரித்து எடுத்திருப்பான் போலிருக்கிறது). இது போன்ற காரணங்களால் சிறுவன் எடுத்து வந்திருந்த துளசி மாலையைப் பார்த்து சிலர் சிரித்தார்கள்.

ஆனால் பக்குவப்பட்ட சிலர், ”இந்த வயதில் இந்த அளவுக்கு பெரியவாளிடம் ஒரு பக்தி இருக்கிறதே… வெறுங்கையோடு வரக்கூடாது என்கிற நாசூக்கு தெரிந்திருக்கிறதே” என்று நெகிழ்ந்தார்கள்.

ஒரு கட்டத்தில் பெரியவாளின் திருப்பார்வை அவன் மேல் விழுந்தது. ஒரு புன்னகையை உதட்டோரம் தவழ விட்டு, ”அருகில் வா” என்பது போல் அவனுக்கு ஜாடை காட்டினார்.
விறுவிறுவென்று நடந்து முன்னுக்கு வந்தான்.

”என்ன?” என்பது போல் ஆச்சரியமான முகத்துடன் தலையை மேலும் கீழும் அசைத்து ரசனையாகக் கேட்டது அந்தப் பரப்ரம்மம்.

சிறுவன் சந்தோஷமானான். தனக்கு உரிய அங்கீகாரம் இந்த சந்நிதானத்தில் கிடைத்துவிட்டது என்பதாக மகிழ்ந்தான்.

கையில் துளசி மாலையோடு பெரியவாளை இன்னும் நெருங்கி, அவரின் திருவடி அருகே இதை சமர்ப்பித்தான். பெரியவாளின் கைங்கர்யப் பணிக்காக அங்கே இருந்த சீடர் ஒருவர் அந்த துளசி மாலையை அங்கிருந்து எடுத்து வேறு இடத்தில் சேர்ப்பிப்பதற்காகக் குனிந்தார்.

சற்றே நிமிர்ந்து அந்த சீடரைப் பார்த்த பெரியவா, ’வேண்டாம்’ என்பது போல் வலது ஆட்காட்டி விரலை இடப்புறமும் வலப்புறமும் அசைத்து சமிக்ஞை செய்தார். சீடரையும் தள்ளி நிற்கச் சொன்னார். அந்த மாலையைத் தான் அகற்றுவதைப் பெரியவா விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட சீடன், நின்ற வாக்கிலேயே அப்படியே ரிவர்ஸில் நகர்ந்து கொண்டான்.

”எக்ஸாம் இன்னிக்கு இருக்கோ?” – சிறுவனைப் பார்த்துப் பெரியவா கேட்டார்.

இவ்வளவு பேர் கூடி இருக்கும் இடத்தில் தன்னைப் பார்த்துப் பெரியவா ஒரு கேள்வி கேட்கிறார் என்பது அந்தச் சிறுவனின் முகத்தில் ஏராளமான சந்தோஷத்தைக் கொடுத்திருந்தது. தவிர, தனக்குத் தேர்வு இருப்பதைப் பெரியவா எப்படிக் கண்டு பிடித்தார் என்கிற ஆச்சரியமும் அவன் முகத்தில். பிரகாசமானவன், “ஆமா சாமி, இன்னைக்கு சயின்ஸ்” என்று கூடுதல் தகவலையும் சொன்னான்.

”துளசி மாலையை எனக்காகக் கொண்டு வந்தியோ?” என்று அவனைப் பார்த்துக் கேட்டு, அந்த மாலையைக் கையில் எடுத்தார்.

இப்படியும் அப்படியும் அதை ஆராய்ந்தார். தான் காணிக்கையாக எடுத்து வந்திருந்த மாலையைப் பெரியவா தன் கையால் எடுத்து விட்டார் என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அச்சிறுவனுக்குப் பெருமை பிடிபடவில்லை…”எங்க வீட்டுலேயே துளசிச் செடி இருக்கு… அதுலேர்ந்து நானே பறிச்சுக் கட்டினேன்.”

அந்தப் பரப்ரம்மம் அவனைப் பார்த்துச் சிரித்தது. கூடி இருந்த திரளான பக்தர்களும் அடுத்துப் பெரியவா என்ன செய்யப் போகிறார் என்பதைக் கவனிப்பதில் ஆர்வமானார்கள். ஒரு க்ஷண நேரத்தில் இந்தச் சிறுவன் பெரியவரின் கவனத்தை இப்படிக் கவர்ந்து விடுவான் என்று அங்கிருந்த எவரும் எதிர் பார்க்கவில்லை. சிறுவன் மேல் பெரியவா செலுத்தும் கரிசனத்தைக் கண்டு, சீடர்களும் மடத்துச் சிப்பந்திகளும் கூட அதிசயப் பட்டுப் போனார்கள்.

அந்தத் துளசி மாலையை தன் கையில் எடுத்துக் கொண்டார். வலக் கரத்தால் அந்த மாலையை எடுத்துத் தன் தலைக்கு மேல் வைத்தார். என்ன புண்ணியம் செய்ததோ அந்தத் துளசி மாலை! பெரியவாளின் தலையில் அமர்ந்து கொண்டது. துளசி மாலை பெரியவா சிரசில் அப்படியே நின்றது. சுற்றிலும் நின்றிருந்த தன் பக்தர்களை இப்படியும் அப்படியும் திரும்பிப் பார்த்தார் பெரியவர்.

எல்லாப் பக்கமும் திரும்பிப் பார்க்கிற வேளையில் அவர் முகத்தில் ஒரு புன்னகை ததும்பியது. ”இந்தக் கோலத்தில் நான் எப்படி இருக்கேன்? இந்த மாலை நன்னா இருக்கா?” என்று பெரியவா கேட்பதாக எல்லோருக்கும் பட்டது.

பெரியவாளுக்கு சமர்ப்பிக்க வேண்டி பக்தர்கள் வாங்கி வந்திருந்த எத்தனையோ மலர் மாலைகள் அவருக்கு முன்னால் – சற்றும் மணம் குறையாமல் – மலை போல் குவிந்திருந்தன. ரோஜா, மல்லிகை, சம்பங்கி என விதம் விதமான மலர்களைக் கொண்டு மிகவும் நேர்த்தியாகத் தொடுக்கப்பட்டிருந்த மாலைகள் அவை.

ஆனால், அனைத்தையும் விட்டு விட்டு, ஒரு ஒழுங்குமுறையே இல்லாத, ஒரு மாலைக்கு உரிய எந்த விதமான இலக்கணத்திலும் சேராத, சாதாரண சிறுவன் கொண்டு வந்த துளசி மாலை ஏனோ பெரியவாளுக்குப் பிடித்து விட்டது. தானே அதை ஸ்வீகரித்துக் கொண்டார்.

’இதுதான் பக்தி’ என்பதை அங்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் உணர்த்தும் விதத்தில், ‘இந்த மாலையை அணிந்திருக்கிற நான் எப்படி இருக்கேன்?’ என்பதாக அனைவரையும் பார்த்தாரோ?

எத்தனையோ மலர் மாலைகள் இருந்தும் அன்பின் மிகுதியால் – ஆர்வத்தின் வெளிப்பாடாகத் தொடுத்துக் கொண்டு வரப்பட்ட இந்தத் துளசி மாலை என் உள்ளத்தைக் கவர்ந்து விட்டது என்பதைப் பகட்டான பக்தர்களுக்கு உணர்த்துகிறாரோ?

பக்தி என்றால் என்ன என்பதைப் பற்றிப் பெரிதும் படிக்காத, கேட்காத இந்தச் சிறுவன் தன் செய்கையால் அங்கிருந்த அனைவருக்கும் பெரியவரின் அருட்செயலின் மூலம் உணரச் செய்து விட்டான்.

செல்வச் செழிப்பில் திளைக்கும் எத்தனையோ பக்தர்கள் குவிந்திருக்கும் இந்த சந்நிதானத்தில் தான் அன்புடன் எடுத்து வந்திருக்கும் ஒரு துளசி மாலைக்கு இவ்வளவு மரியாதையா என்று சிறுவன் திகைத்துப் போனான்.

அவன் விழிகளில் லேசாக ஈரம் ததும்பியது. சரேலென்று தரையில் விழுந்து பெரியவாளை நமஸ்கரித்தான். எழுந்து நின்றான்.

சுமார் பத்து நிமிடங்கள் கழித்துத் தான் அந்தத் துளசி மாலையைத் தன் தலையிலிருந்து எடுத்துக் கீழே வைத்தார் பெரியவா. புன்னகை அரும்ப அந்த சிறுவனை ஆசீர்வதித்தார். கல்கண்டும் குங்குமமும் கொடுத்தார்.
தன் தலையில் வைத்திருந்த மாலையை அருட் பிரசாதமாக அவனிடமே கொடுத்தார்.

அதன் அருமை தெரிந்தோ தெரியாமலோ பயபக்தியுடன் வாங்கிக் கொண்டான். எந்த ஒரு மாலையைப் பார்த்துப் பரிகசித்துத் தங்களுக்குள் விமர்சித்துக் கொண்டார்களோ, அந்த பக்தர்கள் இப்போது நெகிழ்ந்து போனார்கள். அவர்களின் பரிகசிப்புக்கு உள்ளான மாலை இப்போது புனிதம் பெற்று விட்டது.

மாலையைப் பெற்றுக்கொண்டு வெளியேறும் அந்தச் சிறுவனிடம் இருந்து, “குழந்தே, அதில் இருந்து ரெண்டு துளசி தளங்களைப் பிய்ச்சு எங்ககிட்ட தாயேன். அது பெரியவா பிரசாதம்” என்று கெஞ்சும் குரலில் கேட்டனர்.

அப்படிக் கேட்டவர்களுக்கெல்லாம் துளசி இலைகளைப் பிய்த்துக் கொடுத்துவிட்டு, “எக்ஸாமுக்கு டயமாச்சு. ஸ்கூல்ல பெல் அடிச்சுடுவாங்க..” என்று சொல்லி விட்டான் ஒரே ஓட்டம்! இன்று சயின்ஸ் தேர்வாயிற்றே!

ஹர ஹர சங்கர!! ஜெய ஜெய சங்கர !!  காஞ்சி சங்கர!! காமகோடி சங்கர!!
தை அமாவாசை சற்று நிதானமாக படிக்கவும்

🍃சிரார்த்தம், திதி, தர்ப்பணம், மஹாளயம் மற்றும் பித்ரு தோஷ பரிகாரம் – ஐயம் போக்கும் முழுமையான அறுபது தகவல்கள்.

🍃1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.

🍃2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.

🍃3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிரார்த்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

🍃4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.

🍃5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து  மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

🍃6. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

🍃7. அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால்  தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர்களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.

🍃8. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

🍃9. மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. அகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.

🍃10. மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிரார்த்தம் செய்ய வேண்டும்.

🍃11. மன்வாதி 14 நாட்களிலும் யுகாதி 4 திதிகளிலும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆயிரம் ஆண்டுகள் வரை முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

🍃12. மன்வாதி யுகாதி நாட்களில் செய்யப்படும் புண்ணிய நதி நீராடல், ஜெபம், ஹோமம் ஆகியவை கூடுதல் பித்ரு புண்ணியத்தைத் தரும்.

🍃13. தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாள். அன்று சூரியனுக்குச் செய்யும் பூஜை மற்றும் ஏழைகளுக்குச் செய்யப்படும் தானம் ஆகியவை அளவற்ற பலனைத்தரும்.

🍃14. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த  நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

🍃15. இந்த 96 நாட்களை விட மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டி நாள் தான்.

🍃16. துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத் தரும். ஆகவே அதிக புண்ணியங்களைத் தரும் தந்தையரின் சிரார்த்தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.

🍃17. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

🍃18. இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அன்றைய நாளன்று இறந்த ஜீவன் காற்று வடிவில் இறந்தவரின் குழந்தைகள் வாழும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிரார்த்தத்தில் தரும் உணவை சாப்பிடுவதற்காக காத்துக் கொண்டிருக்குமாம்.

🍃19. முறையாக உணவு செய்து வைத்து, ஹோமம், பிண்டதானம் செய்து நடத்தப்படும் சிரார்த்தத்துக்கு பார்வண சிரார்த்தம் என்று பெயர்.

🍃20. ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல் உணவு மட்டும் வைத்து செய்யப்படும் சிரார்த்தம் சங்கல்ப சிரார்த்தம் எனப்படும்.

🍃21. ஒருவருக்கு சாப்பாடு போட என்னென்ன பொருட்கள் தேவையோ அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள் அனைத்தையும் சமைக்காமல் அப்படியே தட்சணையுடன் அளித்துச் செய்யும் சிரார்த்தம் ஆம சிரார்த்தம் எனப்படும்.

🍃22. சிரார்த்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வது ஹிரண்ய சிராத்தம் எனப்படும்.

🍃23. சிரார்த்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.

🍃24. சிரார்த்தம் நடத்தப்படும் இடம், சிராத்தம் செய்யும் நேரம், சிரார்த்தத்தில் பித்ருக்களாக பாவித்து பூஜிக்கப்படும் நபர், சிரார்த்தத்தில் உபயோகிக்கும் பொருட்கள், சிராத்தம் செய்யும் நபர் ஆகியவை சிரார்த்தத்துக்கு முக்கியமானவை. இவைகள் தூய்மையானவைகளாக இருந்தால் சிரார்த்தத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும்.

🍃25. பித்ருக்களை சிரார்த்தம் செய்ய வேண்டிய நாளன்று முறையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு சிரார்த்தம் செய்து அவர்களுக்கு உணவளித்து, அவர்களை திருப்தி செய்தால் அவர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள், அழியாப்புகழ், உடல் வலிமை, செல்வம், பசுக்கள், சுகம், தானியங்கள் ஆகியவற்றை தருகிறார்கள்.

🍃26. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கி த்தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.

🍃27. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும் போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டு தான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும் போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.

🍃28. பெற்றோர்களின் வருஷ சிரார்த்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிரார்த் தத்தைச் செய்ய வேண்டும்.

🍃29. அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பணத்தை செய்து விட்டு பிறகு மஹாளயத்தை செய்ய வேண்டும்.

🍃30. பெற்றோர்களின் வருஷாந்தர சிரார்த்தமும் மன்வாதி அல்லது யுகாதியும் ஒன்று சேர்ந்தால் முதலில் மன்வாதி அல்லது யுகாதி தர்ப்பணங்கள் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.

🍃31. தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும் மற்றொருவருக்கு வருஷாந்திர சிரார்த்தமும் ஒரே நாளில் நேர்ந்தால், முதலில் வருஷசிராத்தம் செய்து விட்டு பிறகு மாஸிகத்தை செய்ய வேண்டும்.

🍃32. தாய் தந்தை இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிரார்த்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய வேண்டும். பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.

🍃33. பெற்றோர் இறந்த மாதம் பட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத்தீட்டு அல்லது உறவினர்களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டு விட்டால், தீட்டு எப்போது முடிவடைகிறதோ அன்று பிராயசித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப்போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

🍃34. இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே முதலில் உங்கள் மறைந்த முன்னோர் வழிபாட்டை பிரதானமாக நடத்துங்கள்.

🍃35. சிரார்த்தம், தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாகப் பிறப்பான் என்று புரா ணங்களில் கூறப்பட்டுள்ளது.

🍃36. உடல் நிலை சரியில்லாதவர்கள் உரவினர்களை யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு சிரார்த்தம் செய்ய வேண்டும்.

🍃37. நம்மை விட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி கோடியாக புண்ணியமும், செல்வமும் நமக்கு கிடைக்கும்.

🍃38. மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

🍃39. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத் தப்பட்டுள்ளார்கள்.

🔥அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள்.

🔥அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள்.

🔥சித்தப்பா, மாமா,  குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை  நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

🍃40. மக்களுக்கு தொண்டாற்றி சுயநலமின்றி அரிய இறைப்பணிகளைப் புரிந்தோர் மட்டுமே பித்ருலோகம் அடைகின்றனர் என்பதை கருடபுராணம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

🍃41. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மஹாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.

🍃42. கார்த்திகை மாதம் உத்திராயண புண்ணியகாலம் சுக்ல பட்சம், பவுர்ணமி திதியில் தானம் செய்ய வேண்டும். கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) துவாதசி திதியில் தானங்கள் அளிக்கலாம்.

🍃43. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.

🍃44. பித்ருக்கள் எங்கிருந்தாலும் சரி தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள்அளவும் சந்தேகம் கிடையாது.

🍃45. ஒருவர் மரண படுக்கையில் அவதிப்படும் போது அவரது மகன் அல்லது மகள் மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரையை எருமை மாட்டிற்கு தானம் அளித்தால் மரண அவதி நீங்கும்.

🍃46. வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மை அளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.

🍃47. சாஸ்திரப்படி சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு உண்ணக் கூடாது.

🍃48. சிரார்த்தம் செய்ய கூடியவர் ஒரு பக்ஷ்ஷம் நாள் முகச்சவரம் செய்யக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது, மனைவியுடன் சேர்ந்து உறங்கக் கூடாது, பிரஷ் கொண்டு பல் தேய்ப்பதும், வெற்றிலை தாம்பூலம் போடுவதும் கூடாது.

🍃49. மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடக்கும் பொழுது முதலில் பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெற வேண்டும். இது மிக மிக முக்கியம்.

🍃50. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.

🍃51. திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவனுக்கு அறிவு, ஞான சக்தி, பசுக்கள் தேக ஆரோக்கியம், சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம், அனைத்து பலன்களும் தவறாமல் கிடைக்கும்.

🍃52. சதுர்த்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்திருந்தால் திருப்தி அடைவார்கள்.

🍃53. மஹாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை நினைத்து மனதார வணங்கினால் சகல சவுபாக்கியங்களும் தேடி வரும்.

🍃54. மஹாளய பட்சத்தின் 16 நாட்களும் சிரார்த்தம் செய்வது ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அளிக்கும்.

🍃55. தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அற்றை நன்கு தெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

🍃56. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

🍃57. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மஹாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.

🍃58. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

🍃59. திருவாலாங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும்  அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

🍃60.  திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீ ராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு வஎ தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.🌼