வியாழன், 24 ஏப்ரல், 2014


புலால் உணவு உட்கொண்டும் கண்ணப்ப நாயனார் சிவ பதம் பெற்றது எவ்வாறு ? சில விளக்கங்கள்.

'புலால் உணவை கைவிடுவது இல்லை' என்னும் முடிவுக்கு முன்னமே வந்து, பின்னர் அம்முடிவுக்கு சாதகமான புராண- இதிகாச நிகழ்வுகளை சேகரித்து வைத்துக் கொண்டு வாதிடுவது முறையன்று. தர்மங்களை புராணங்கள் - சாத்திரங்கள் - நீதி நூல்கள் மூலம் முறையாகக் கற்று, அதன் பின்னரே தர்ம - அதர்மம் குறித்த முடிவுக்கு வருதல் வேண்டும்.

கண்ணப்பர் வேடர் மரபில் தோன்றிய அருளாளர். தர்ம அதர்மம் குறித்த புரிதல் பெரிதாக இல்லாத வேடர்கள் நிறைந்த சூழலில் - வனப் பகுதியில் உதித்தவர். ஆனால் நம் நிலையோ முற்றிலும் மாறுபட்டது. எண்ணற்ற தர்ம சாத்திரங்களை கற்று உணர வாய்ப்பும், கல்வியும் நமக்கு இன்று அமையப் பெற்றுள்ளது. ஆகவே, கண்ணப்பரின் சூழலையும் நம் சூழலையும் ஒப்பு நோக்குவது முறையன்று.

நம் உடலின் ஊடு-கதிர்ப்படத்தை (எக்ஸ்-ரே) மருத்துவத் துறையில் வல்லுனரான ஒருவரின் துணையைக் கொண்டே அறிய முயல்கிறோம். அது போல புராண நிகழ்வுகளில் இருந்து நாம் உணர வேண்டிய நீதிகளை, சமயத் தொண்டாற்றும் ஆச்சார்யார்கள் மூலமே கற்றுத் தெளிய வேண்டும். அது விடுத்து, புராண நிகழ்வுகளை மேலோட்டமாக அணுகுவது நுனிப் புல் மேய்வதை ஒக்கும்.

கண்ணப்பர் வரலாறில் உள்ள சாரம் யாது எனில் 'இறை வழிபாட்டில் அன்பே பிரதானம். ஆச்சாரமும் நெறிமுறைகளும் அவசியமே. ஆனால் அவையால் மட்டும் வழிபாடு முழுமை பெறுவதில்லை. ஆச்சாரம் மிகுந்த வழிபாடு நாளடைவில் அன்பு வழிபாடாக பரிணாமம் பெறுகிறது. விதி முறைகள் வழிபாட்டின் தொடக்க நிலை; அன்பே அதன் இறுதி நோக்கம்'.

கண்ணப்பர் தன்னலமில்லா அன்பின் உறைவிடம். அன்பின் வெள்ளமான அப்பெருந்தகையுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதோ? அவ்வன்பில் கோடியில் ஒரு பங்கு வாய்ப்பினும் நாம் உய்வு பெறுவது உறுதி. இறைவனுக்கு கண்களை அகழ்ந்து அளிக்க நம்மால் ஆகுமா ? 'ஊக்கமது கைவிடேல்' என்னும் ஆத்திச்சூடி வாசகத்திற்கு 'ஊக்கத்தை தரும் மதுவை கைவிடேல்' என்றா பொருள் கொள்வது?

அடியவரை ஆட்கொள்ள எண்ணற்ற எளிய முறைகள் இருக்க, இக்கடுமையான முறையை சிவப்பரம்பொருள் தேர்ந்தெடுக்க 'வேடர் மரபின் காரணமாக அகிம்சையை பின்பற்ற முடியாத கண்ணப்பரின் சூழலும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்' என்பதும் சிந்திக்க வேண்டிய மற்றொரு கோணம்.

இந்து தர்மத்தின் ஞானிகள் - அருளாளர்கள் - ஆச்சாரியர்கள் அனைவரும் ஏக மனதாக, ஒருமித்தக் கருத்துடன் புலால் உணவை அறவே தவிர்க்குமாறு அறிவுறுத்தி வந்துள்ளனர். விதிவிலக்குகள் விதிகள் ஆகிவிடாது. தர்மமாகிய விதிகளை பின்பற்றுவோம். விதி விலக்கான நிகழ்வுகளை முறையாகப் புரிந்து கொள்வோம்!!

கருத்துகள் இல்லை: