வியாழன், 24 ஏப்ரல், 2014


அருணகிரிநாதருக்கு அருளிய பொய்யா கணபதி {வயலூர் முருகன் திருக்கோயில்}
 திருச்சிராப்பள்ளிக்கு மிக அருகில் அமைந்துள்ளது வயலூர் என்னும் சிறப்புப் பொருந்திய தலம். முருகப் பெருமான் இத்தலத்தில் 'சுப்ரமண்ய சுவாமி' என்னும் திருநாமம் கொண்டு ஸ்ரீவள்ளி - தெய்வயானையோடு எழுந்தருளி உள்ளார். திருமுருக வாரியார் சுவாமிகளால் எண்ணற்ற திருப்பணிகள் நடந்தேறிய தலம்.
*
மூலவர் ஸ்ரீசுப்ரமண்யர் தன் திருக்கரங்களில் ஏந்தியுள்ள ஞான வேலால் உருவாக்கி அருளியது இத்தல தீர்த்தமான 'சக்தி தீர்த்தம்'. இந்து சனாதன தர்மத்தின் ஒரு பிரிவான 'கௌமாரம்' என்னும் முருக வழிபாட்டு சமயத்துக்கு தனிப்பெரும் குருநாதராக விளங்குபவர் அருணகிரிநாதர். இவர் முதன் முதலில் திருப்புகழ் பாடல்களை பாடத் துவங்கிய தலம் வயலூர்.
*
இத்தலத்தில் 'பொய்யா கணபதி' என்னும் திருநாமத்துடன் விநாயகப் பெருமான் எழுந்தருளி உள்ளார். அருணகிரிநாதர், பொய்யா கணபதியைப் போற்றிப் பாடி, ஆசி பெற்ற பின்னரே, முருகக் கடவுளைப் பாடத் துவங்குகிறார். 'கைத்தல நிறை கனி' என்ற இத்திருப்புகழ் பாடல் மிகவும் பிரசித்தம்.
****
கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர்
கற்பகம் என வினை கடிதேகும்
*
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
*
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம்
அச்சது பொடிசெய்த அதி தீரா
*
அத்துயர் அதுகொடு சுப்பிரமணி படும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குறமகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே!!!!
****
எண்ணற்ற சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ள வயலூர் தலம் சென்று ஸ்ரீபொய்யா கணபதியையும், இரு தேவியரோடு அருள் புரியும் ஸ்ரீசுப்ரமண்யரையும், முருகக் கடவுள் பூஜித்த சிவலிங்கத் திருமேனியான ஆதிநாதரையும், ஆதிநாயகி அம்பிகையையும் தரிசித்துப் பிறவிப் பயன் பெறுவோம்.

கருத்துகள் இல்லை: