வியாழன், 24 ஏப்ரல், 2014

திருநாரையூர் - பொல்லா பிள்ளையார் (நம்பி ஆண்டார் நம்பி வணங்கிய ஸ்ரீவிநாயகர்)

திருநாரையூர் என்னும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலம் சிதம்பரம் அருகில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் விநாயகப் பெருமான் 'பொல்லாப் பிள்ளையார்' என்னும் திருநாமம் கொண்டு எழுந்தருளி உள்ளார். 'பொல்லா' என்னும் பதம் 'உளியால் செதுக்கப் படாத' தன்மையைக் குறிக்கும். சுயம்பு மூர்த்தி இப்பெருமான்.

இத்தலத்தில் 'நம்பி ஆண்டார் நம்பி' என்பார் வாழ்ந்து வந்தார். பன்னிரு சைவத் திருமுறைகளில், முதல் பதினோரு திருமுறைகள் வரைத் தொகுத்த அருளாளர். பதினோராம் திருமுறையின் சில தொகுப்புகளுக்கு இவர் ஆசிரியரும் கூட. திருநாரையூரில் உறையும் 'பொல்லாப் பிள்ளையார்' இவரின் குருவாக அமைந்தது ஒரு சுவையான வரலாறு.

நம்பிக்கு அப்பொழுது பள்ளிப் பருவம். நம்பியின் தந்தை அர்ச்சகராகத் தொண்டு புரிந்து வந்தார். ஒரு முறை, தந்தைக்கு உடல் நலம் குன்றிய காரணத்தால், நம்பி திருக்கோயிலுக்கு நிவேதன உணவை எடுத்துச் சென்றார். 'பொல்லாப் பிள்ளையார்' சந்நிதி முன்பு வைத்தார். பெருமான் உண்மையில் நிவேதன உணவை உட்கொள்வார் என்று அவரின் பிஞ்சு உள்ளம் நம்பியது.

ஆனால் நம்பியின் எண்ணமோ ஈடேறவில்லை. பெருமான் நிவேதன உணவை ஏற்காதது கண்டு நம்பி பதறித் துடித்தார். பெரும் தவறு இழைத்து விட்டதாக எண்ணினார். தந்தையின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமே என்றும் அஞ்சினார். தன் இன்னுயிரை போக்கும் எண்ணத்தில், பெருமானின் திருவடியில் தலையை மோதிக் கொள்ளத் துவங்கினார்.

உண்மை அன்புக்கும் பக்திக்கும் மட்டுமே அகப்படும் பரம்பொருளான ஸ்ரீவிநாயகப் பெருமான், தன் விக்கிரக நிலையில் இருந்து நீங்கி, ஸ்தூல வடிவில் திருக்காட்சி அளித்து, நம்பியை தடுத்து ஆட்கொண்டார். நம்பி நேரில் காண, நிவேதன உணவை உண்டு அருளினார். நம்பியும் பெருமகிழ்வு கொண்டு வீடு திரும்பினார். நம்பியின் தந்தையோ 'பிள்ளையின் கூற்றை' அறவே நம்ப மறுத்தார்.

மறுநாள், பக்தனான நம்பியின் கூற்றை மெய்ப்பிக்க, பெருமான் நம்பியின் தந்தையும் காணும் படி, நிவேதன உணவை உட்கொண்டு அருளினார். மேலும் நம்பியின் வேண்டுகோளுக்கு இணங்க, நம்பியை சீடனாகவும் ஏற்று அருளினார். இம்மூர்த்தியே பின்னாளில் 'தேவாரப் பதிகங்கள் அனைத்தும் சிதம்பரம் திருக்கோயிலில், திருக்காப்பிட்ட ஒரு அறையில் உள்ளது' என்று நம்பி ஆண்டார் நம்பிக்கு உணர்த்தி அருளியவர்.

திருநாரையூர் தலம் சென்று 'பொல்லாப் பிள்ளையாரை' தரிசித்து உய்வு பெறுவோம்.

கருத்துகள் இல்லை: