வியாழன், 24 ஏப்ரல், 2014

முருகப் பெருமானுக்கு காவடி வழிபாடு தோன்றிய சுவையான வரலாறு

குமர வேளுக்கும், சூரனுக்கும் நடந்த பெரும் யுத்தத்தில் தப்பிப் பிழைத்த மிகச் சில அசுரர்களில் இடும்பனும் ஒருவர். யுத்தத்துக்குப் பின், தவறு உணர்ந்து நல்வழி செல்ல விரும்பிய இடும்பனை, அகத்திய முனிவர் சீடனாக ஏற்றார். சிவகிரி - சக்திகிரி என்னும் இரு மலைகளை, தென் பகுதியில் அமைந்துள்ள தனது இடத்திற்கு எடுத்து வருமாறு இடும்பனை பணித்தார் கும்ப முனியான அகத்தியர்.

காவடி போன்ற அமைப்பில், இருபுறமும் இரு மலைகளை வைத்து சுமந்த படி, ஆகாய மார்கமாக பயணித்தார் இடும்பன். செல்லும் வழியில் சிறிது ஓய்வு பெரும் பொருட்டு, 'பழனி' அருகில் காவடியை நிலத்தில் வைத்தார். ஓய்விற்குப் பின், பெரிதும் முயன்றும் இடும்பனால் காவடியை அசைக்க முடியவில்லை. அச்சமயம் மலை மேல் ஒரு பாலகன் நின்றிருப்பது இடும்பனின் கண்களுக்கு புலப்பட்டது.

கோபமுற்ற இடும்பன் மலையை விட்டு வெளியேறும் படி பாலகனிடம் கூற, பாலகனோ தன் நிலையில் இருந்து சிறிதும் அசையவில்லை. படைத்தல் - காத்தல் - அழித்தல் - மறைத்தல் - அருளல் என்று ஐந்து தொழில்களையும் ஒருங்கே புரியும் பரம்பொருளே குமாரக் கடவுளாக, பால உருவம் தரித்து நிற்பதை இடும்பன் உணரவில்லை.

பழனி ஆண்டவனுடன் போரிட முனைந்த இடும்பனை பெருமான் சம்ஹரித்து அருளினார். பெருமான் இடும்பனையா அழித்தார் ? - கோடிப் பிறவிகளில் தொடர்ந்து வரும் இடும்பனின் சஞ்சித வினையை அன்றோ அழித்தார்!! பின்னர் பழனி இறைவனின் அருளால் மீண்டு எழுந்த இடும்பன், பெருமானின் திருவடிகளை கண்ணீருடன் தொழுது மன்னிப்பு வேண்டினார்.

பழனியில் காவல் பணி புரிதலையும், காவடி சுமந்து பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறுதலையும் - இரு வரங்களாக வேண்டி நின்றார் இடும்பன். கருணைக் கடலான பழனி இறைவனும் இடும்பனுக்கு அருள் புரிந்து, சிவ ஜோதியாய் பழனியில் வீற்றிருந்தார்.

பின்னாளில் 'போகர்' நவ பாஷாணத்தால் பழனி இறைவனின் திரு உருவத்தை செய்வித்து, அதில் பால தண்டாயுதபாணிப் பெருமானை எழுந்தருளச் செய்தார். பழனியில் தொடங்கிய காவடி வழிபாடு, இன்று கந்தவேளின் ஆலயங்கள் யாவற்றிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. மலை அடிவாரத்தில் இடும்பனின் ஆலயத்தை தரிசித்துப் பின் பழனி ஆண்டவனை தரிசிப்பது முழுப் பலனையும் நல்கும்.

கருத்துகள் இல்லை: