வியாழன், 24 ஏப்ரல், 2014

இமயமலை திருக்கோயில்கள்:- மானா கிராமம் (மகாபாரதம் எழுதப்பட்ட தலம்)

மானா என்னும் தலம் பத்ரிநாத் திருக்கோயிலில் இருந்து 2 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இந்திய எல்லையின் கடைசி கிராமமாகவும் இத்தலம் அறியப்பட்டு வருகிறது.

பிரமன் வியாசரை மகாபாரதம் இயற்றுமாறு பணித்தார். இத்திருப்பணி இனிது நிறைவேற விநாயகப் பெருமானின் உதவியைக் கோருமாறும் வியாசருக்கு அறிவுறுத்தினார் நான்முகன். வேத வியாசர் முழுமுதற் கடவுளை நோக்கி தவம் புரியவும், கோடி சூர்ய பிரகாசமாய் ஆனைமுகக் கடவுள் தோன்றி அருளினார்.

வியாசர் விநாயகரைப் போற்றிப் பணிந்து, தாம் இயற்றும் மகாபாரத இதிகாசத்தை எழுதித் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். விநாயகப் பெருமான் 'தான் எழுதும் வேகத்திற்கு ஈடு கொடுத்து வியாசர் பாடல்களை பாட வேண்டும்' என்னும் நிபந்தனையோடு இசைந்து அருளினார்.

நடுநடுவே சிறிது அவகாசம் பெறும் பொருட்டு 'பாடல்களின் பொருளை உணர்ந்த பின்னரே எழுதி அருள வேண்டும்' என்று கணபதியிடம் வேண்டினார் வியாசர். பெருமானும் புன்சிரிப்புடன் உடன் பட்டு அருளினார். ஒவ்வொரு 5000 பாடல்களின் முடிவிலும் இரு அர்த்தம் தோன்றுமாறு ஒரு பாடலை பாடுவார் வியாசர்.

கருணைக் கடலான ஆனைமுக இறைவனும் வியாசருக்கு சிறிது அவகாசம் தந்தருளும் பொருட்டு சில நொடிகள் சிந்திப்பதைப் போல் பாவனை புரிந்துப் பின் எழுதி அருளுவார். அந்த சில கணங்களில் வியாசர் அடுத்த 5000 பாடல்களை மனதில் முறைப் படுத்திக் கொள்வார்.

இப்படியாக கணேசப் பெருமான் எழுதி அருளியது 60 லட்சம் பாடல்கள். அவற்றுள் பூவுலகில் தங்கியது 1 லட்சம் பாடல்களே. 'மானா' தலத்தில் வேத வியாசர் தங்கி இருந்த குகையையும், ஐந்தாம் வேதமாக போற்றப் படும் மகாபாரத இதிகாசத்தை விநாயகப் பெருமான் எழுதி அருளிய குகையையும் தரிசித்து மகிழலாம்.


 
 
 

கருத்துகள் இல்லை: