வியாழன், 24 ஏப்ரல், 2014


அகிம்சையை முன்னிருத்தும் இந்து தர்மம்:- அகிம்சை குறித்த சில நுட்பமான கருத்துக்கள்!!!

ஒரு குழந்தையை வதைத்துப் பின் அதன் தாயிடமே சென்று அன்பு பாராட்டி, உதவியையும் கோரும் செயலை யாரும் செய்வரோ? தன் குழந்தை வதைக்கப் படுவதை பதைப்பதைப்புடன் கண்னுற்ற எந்த ஒரு தாயின் மனமாவது சீற்றம் கொள்ளாமல் இருக்குமா? இப்புவியில் வாழ்ந்து வரும் கோடான கோடி ஜீவராசிகளுக்கும் தாய் - தந்தையாய் விளங்கி வருபவன் இறைவன்.

கருணையே வடிவான இறைவன் தன்னுடைய குழந்தைகளான உயிரினங்களை வதைத்கும் செயலை ஒரு பொழுதும் அங்கீகரிப்பது இல்லை - பொறுப்பதும் இல்லை. 'வதைக்கும் செயல் புரிந்தால் சர்வ நிச்சயமாய் வதைபட வேண்டி வரும்' என்பது இந்து தர்ம சாத்திரங்கள் அறுதியிட்டுக் கூறும் படைப்பின் நியதி.

ஆன்மாக்கள் கர்ம பலனைப் பொறுத்து வெவ்வேறு வடிவங்கள் எடுத்துக் கொள்கின்றன என்பது இந்து தர்மத்தின் முக்கியக் கோட்பாடு. ஒவ்வொரு உயிரினத்திலும் ஒரு ஜீவாத்மா உறைந்துள்ளது. இறைவன் ஒருவனே பரமாத்மா. ஒரு ஜீவாத்மா மனித உடலில் உறையும் பொழுது அது வதைப்பட்டால் அதற்குப் பெயர் கொலை - வன்முறை - தீவிரவாதம்.

அதே ஆத்மா வேறு ஒரு உயிரினத்தில் உறையும் பொழுது வதைபட்டால் அதை உணவு என்று கருதுவது ஏற்புடையது அல்ல. இறைவனின் படைப்பு மனித குலத்திற்காக மட்டுமே என்று எண்ணுவது பெரும் பிழை. அனேக கோடி ஜீவராசிகள் வாழும் பொருட்டே இறைவனால் இப்புவியில் படைப்பு நிகழ்த்தப் படுகிறது.

ஒரு தொடர்பு ஏற்படுத்தப் பட வேண்டும் என்றால் இரு முனையிலும் பரிமாற்றம் இருத்தல் அவசியம். இறைவனுடன் நாம் தொடர்பு ஏற்படுத்த விரும்புகிறோம். நாம் பேசுவதை மட்டும் இறைவன் செவி மடுக்க வேண்டும் என்று விழைகிறோம். இறைவனின் வார்த்தைகளான தர்மங்களை செவி மடுக்க மறுக்கிறோம். இதனால் அன்றோ இறைத் தொடர்பு ஏற்படாமலே வாழ்நாள் வீணே கழிகின்றது.

ஒவ்வொரு உணவு வேளையிலும் 'அகிம்சை - தர்மம் - கருணை - நீதி' இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு உணவை தேர்ந்தெடுக்கும் சக்தியும், அதிகாரமும் நம்மிடம் உள்ளது. புலால் உணவை மறுப்போம் - நலம் பெறுவோம்!!!

கருத்துகள் இல்லை: