வியாழன், 24 ஏப்ரல், 2014

சென்னி மலை (சஷ்டிக் கவசம் அரங்கேறிய தலம்)

சென்னி மலை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்புப் பொருந்திய திருத்தலம். இத்தலம் 'சிரகிரி' என்னும் பெயராலும் அறியப் படுகிறது (சென்னி என்பது 'சிரம்' எனவும், மலை என்பது 'கிரி' எனவும் பொருள்படும்). 'சஷ்டிக் கவசம்' என்னும் சக்தி வாய்ந்த பாராயணப் பாடலை 'பாலன் தேவராய சுவாமிகள்' இத்தலத்திலேயே அரங்கேற்றம் செய்து அருளினார்.

மூலவர் 'சிரகிரி வேலவர்' என்னும் திருநாமம் தாங்கி எழுந்தருளி உள்ளார். சஷ்டிக் கவசத்தில் 'சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என்ற பாடல் வரியில் தேவராய சுவாமிகள் குறிப்பது இத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமானையே. அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல இறைவனை போற்றிப் பாடி மகிழந்துள்ளார்.

இம்மலைக் கோயில் 1320 படிகளைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் 'சிரகிரி வேலவர்' பால உருவத்திலும், ஸ்ரீவள்ளி அம்மை - தெய்வயானைத் தாயார் இருவரும் தவக்கோலத்திலும் எழுந்தருளி உள்ளனர். மூலவர் இத்தலத்தில் எழுந்தருளிய நிகழ்வு அற்புதம் நிறைந்தது.

ஆதியில், நிலத்தின் அடியில் இருந்து இப்பெருமான் தன்னை வெளிப்படுத்தி அருளினார். மூல மூர்த்தியின் திருவடிவத்தில், இடைப் பகுதியில் இருந்து திருவடிகள் வரை வேலைப் பாடுகள் இன்றி இருந்தது. உளி கொண்டு செதுக்க முயன்ற பொழுது குருதி பீறிட்டுக் கிளம்பியது.

அதனால், கிடைக்கப் பெற்ற அதே திருவடிவுடன் 'சிரகிரி வேலவரை' திருக்கோயிலில் எழுந்தருளச் செய்தனர். மூலவர் திருவுடலில் இடைப் பகுதியில் இருந்து கவசம் அணியப் பெற்றுள்ளதை இன்றும் கண்டு மகிழலாம். எண்ணற்ற அற்புதங்களை தன்னுள் கொண்டு அமைந்துள்ள சென்னிமலை தலத்தை கட்டாயம் தரிசித்துப் பயன் பெறுவோம்.

கருத்துகள் இல்லை: