வியாழன், 24 ஏப்ரல், 2014


இந்து சனாதன தர்மம்: எது தலையாய அறம் ?.

'அறம் செய்ய விரும்பு' என்றாள் தமிழ் மூதாட்டி. இந்து தர்மம் உணர்த்தும் உன்னதமான அறங்கள் பலப்பல. அறங்களில் தலையாயது எது? பார்ப்போம்!!!

திருவள்ளுவர் 'கொல்லாமை - புலால் மறுத்தல்' என்று இரு அதிகாரங்களில் 'எக்காரணம் கொண்டும் ஒரு உயிரை கொல்லாது இருத்தல் - புலால் உணவை உண்ணாது இருத்தல்' என்ற இவ்விரு செயல்களுமே அறங்களில் எல்லாம் தலைசிறந்த அறம் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

'அன்பே சிவம்' என்று முழங்கிய பரம ஞானி திருமூலர் 'கொல்லாமை - புலால் மறுத்தல்' என்ற பகுதிகளில் அறம் அல்லாத இவ்விரு செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறார். 'கொல்லாமை' என்ற மலரே பூஜைக்கு உகந்த முதன்மையான மலர் என்றும், 'புலால் உணவை உட்கொள்வது' நரகத்துக்கு இணையான பெரும் துன்பத்தைப் பெற்றுத் தருவது உறுதி என்றும் குறிக்கிறார் திருமூலர்.

திருமந்திரம் - கொல்லாமை:-
பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர் மற்றோர்
அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்...

திருமந்திரம் - புலால் மறுத்தல்:-
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன் தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி முறித்து வைப்பாரே.

19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருட்சுடரான வள்ளலார் 'புலால் உணவை உட்கொள்ளும் வரை இறைவனின் அருளைப் பெற முடியாது' என்று அறுதியிட்டுக் கூறுகிறார். இறைவன் கருணை வடிவானவன். கருணை எங்கு இல்லையோ - அங்கு இறைவன் வசிப்பதில்லை.

(இராமலிங்க வள்ளலார்):-
கங்கையில் படிந்திட்டாலும் கடவுளைப் பூசித்தாலும்
சங்கையில்லாத ஞான சாத்திரம் உணர்ந்திட்டாலும்
மங்கு போல் கோடி தானம் வள்ளலாய் -வழங்கிட்டாலும்
பொங்குறு புலால் புசிப்போன் போய் நரகு அடைவன் -அன்றே!!!!

புண்ணிய நதிகளில் நீராடினாலும், இறை வழிபாடுகள் செய்து வந்தாலும், ஞான நூல்களைக் கற்றிருந்தாலும், தான தர்மங்கள் பல புரிந்தாலும், புலால் உணவு உட்கொள்ளும் செயல் அந்த நற்செயல்களின் பலன்கள் அனைத்தையும் செயல் இழக்கச் செய்து, முடிவில் நரகத்துக்கு ஒப்பான துன்பத்தையே தேடித் தரும் என்று எச்சரிக்கிறார் வள்ளலார்.

வேதங்கள் - உபனிடதங்கள் - சாத்திரங்கள் - பக்தி இலக்கியங்கள் - ஞானிகளின் வாக்குகள் - இவை உணர்த்தும் நீதிகள் என்றுமே இப்புவியில் பொய்ப்பதில்லை. அறம் செய விரும்புவோம்!!!!

கருத்துகள் இல்லை: